எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, September 30, 2006

129. குதிரையை அடக்கிய தலைவி.

ஹி,ஹி,ஹி,ஹி,ஹி,. இது இம்முறை என்னோட சிரிப்பு இல்லை. நான் ஏறிச் சவாரி செய்த குதிரையின் சிரிப்பு.
ம.சா. இவங்க இந்த மாதிரிச் சிரித்துச் சிரித்து இப்போ இவங்க வாய் திறந்தது மூட முடியவில்லை.
ஆரம்பத்திலேயே வந்துட்டியா? வாயை மூடு. இது நான்.
ம.சா. "எங்கே மூட முடியுது? அதான் திறந்தது திறந்த படியே இருக்கே! இப்படி எல்லாரையும் பார்த்துப் பல் இளிச்சா இந்த மாதிரித் தான்.
நான்:நறநற நறநற. உன்னைத் துரத்த முடியாமல் நான் படற கஷ்டம் இருக்கு பாரு, அதைச் சொல்லணும். கொஞ்ச நேரம் வாயை மூடு.
ம.சா: நான் வாயை மூடினா அப்புறம் உண்மை தெரிஞ்சிடும்னு பயமா?
நான்: இப்போ நீஈஈஈஈஈஈ போக மாட்டேஏஏஏஏஏஏஏஏஎ? மனசாட்சி ஓரமாகப் பதுங்கிக் கொள்கிறது. "இருக்கட்டும், சரியான சமயத்தில் வைக்கிறேன் உனக்கு ஆப்பு," என்று முனக என் காதிலே அது விழவே இல்லை.

இப்போ கைலை யாத்திரை போனேனா? அங்கே அப்போ கைலை மலையைச் சுற்றி வரப் "பரிக்ரமா" என்று ஒரு ஏற்பாடு உண்டு. அதுக்கு 3 நாள் ஆகும். சில இடங்களில் நடந்தும், சில இடங்களில் குதிரை மேலும் போகணும். அதுக்காகக் குதிரை ஏற்பாடு செய்தார்கள்.அப்போ நடந்ததைத் தான் இப்போ எழுதறேன்.

குதிரைன்னா குதிரை. நம்ம தேசிங்கு ராஜன் குதிரை மாதிரி இருந்தது. ஒரே ஜ்ம்ப். தலைவி அதில் தாவி ஏறி விட்டார். வெகு நாட்கள் குதிரைப் பயணம் செய்து பழக்கப்பட்ட மாதிரித் தலைவி ஏறியதைப் பார்த்த அந்தக் குழுவே அதிர்ந்தது. உடனேயே ஜெய கோஷம் எழும்பியது தலைவிக்கு ஆதரவாக. "வெற்றி வேல், வீர வேல்" என்று கோஷம் எழுப்பி விட்டுத் தலைவி வீர நடையுடன் (குதிரை போட்ட நடைதான்) குதிரைப் பயணத்தைத் தொடர்ந்தார். செல்லும் வழியெங்கும் தோரணங்கள், கொடிகள், மாலைகள், மரியாதைகள், வணக்கங்கள், பதில் வணக்கங்கள். கூட்டத்தைப் பார்த்து மகிழ்வுற்ற தலைவி பின் கூட்டம் பெருகவே அதில் இருந்து ரகசியமாகத் தப்பிக்க எண்ணினார். என்ன செய்வது என்று யோசித்த போது "பொன்னியின் செல்வனில்" அருள்மொழிவர்மர் 5-ம்பாகத்தில் யானை மேல் இருந்து கூட்டத்தில் தப்பியது நினைவு வரவே குதிரையின் முகக் கயிற்றைத் தலைவி தன்னை அறியாமல் அழுத்திப் பிடிக்கக் குதிரை 4,5,6,7,8 கால் பாய்ச்சலில் கிளம்பியது. குதிரையை மிகச் சிரமப்பட்டு அடக்கிய தலைவி, "குதிரையை வென்ற நல்லாள்" என்ற சிறப்புப் பெயரால் கெளரவிக்கப் பட்டார். இதைப் பார்த்த மஹாஜனங்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர். இவ்விதம் தலைவியின் புகழ் சீன தேசத்திலும் பரவியது. தலைவியால் நம் கொடியும், சங்கக் கொடியும் வானளாவப் பறக்கிறது. தற்சமயம் அது பறக்கிறபடியே இருக்கட்டும் என்று விட்டு விட்டுத் தலைவி வந்திருக்கிறார். ஓங்குக அவர் தம் புகழ்!

Wednesday, September 27, 2006

128. என்னைப்பற்றிய 5 குறிப்புக்கள்.

வேதா(ள்) இழுத்து விட்டாலும் தப்பிக்கலாம்னுதான் இருந்தேன். இருந்தாலும் இது ஒரு சுய அலசல் என்பதால் பார்க்கலாம்னு எழுதறேன்.

1.வெளிப்படையாகப் பேசுதல்:
இது நல்ல குணமா? கெட்ட குணமா தெரியவில்லை. ஆனால் சின்ன வயசில் இருந்தே இருக்கிறது. இதனால் பல சமயம் கெட்ட பேர் கிடைத்திருக்கிறது, நல்ல பேர் நிறையவே கிடைத்திருக்கிறது. முக்கியமாகப் பின்னால் பேசமாட்டாள் என்று என் எதிரிகள் கூடச் சொல்லுவார்கள். "உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர் உறவு" நிறைய இருக்கிறது என்றாலும் நான் இன்னும் திருந்தவில்லை. என் கணவர் சொல்வது, "நீ இன்னும் குழந்தையாவே இருக்கிறாய். வயசுக்குத் தகுந்த மனமுதிர்ச்சி இல்லை." என்பதுதான். (அம்பி, வேதா(ள்), பொற்கொடி, இப்போ புரியுதா? நான் இன்னும் சின்னப் பொண்ணுதான்னு. நற நற நற இனிமேல் என்னைப் பாட்டின்னு சொன்னா தெரியும், ஆப்பு இருக்கு.)

2.ஞாபக சக்தி:
உண்மையிலே பார்த்தால் நான் ஒரு "ஏக சந்தாக்ரஹி"னு சொல்லணும். பள்ளி நாட்களிலே கூட வீட்டில் வந்து படிப்பது குமுதம், கல்கி, ஆனந்த விகடன், கல்கண்டு, கலைமகள், மஞ்சரி போன்ற புத்தகங்கள் தான். என்னோட அப்பாவோட பயங்கர கட்டுப்பாட்டில் நான் இப்படி வளர்ந்து வருவது பொறுக்காமல் அவர் பள்ளி ஆசிரியர்களிடம் கூடச் சொல்லிப் பார்த்தார். ஆனால் என்ன செய்வது? முதல் ரேங்க் வாங்காவிட்டாலும் 2,3-க்குக் கீழே இறங்கியது இல்லை. அதனால் அவரால் எதுவும் செய்ய முடியாது போய் விட்டது. இப்போ கூட பழைய நினைவுகள் வருவதுண்டு. சிலசமயம் பூர்வ ஜென்ம நினைவுகள் கூட. (ஹி,ஹி,ஹி,). எந்த ஒரு நம்பரோ, அட்ரஸோ அல்லது வேறு ஏதாவது பேப்பரில் படித்த விஷயமோ டக்கென நினைவு சரியான சமயத்துக்கு வரும். அதே என் கணவருக்கு என் பேர் இத்தனை வருஷமா நினைவில் இருப்பதே பெரிய விஷயம். எல்லாப் பேரையும் மாத்துவார் அவர் இஷ்டத்துக்கு. இது வரை என்னோட பேரை நினைவு வச்சிருக்கார். அதே மாதிரி காலை இத்தனை மணிக்கு எழுந்துக்க வேண்டும்னு சொல்லிட்டாப் போதும். அலாரம் எல்லாம் வேண்டாம். எங்க வீட்டிலே நாந்தான் அலாரம். அதுவும் ராத்திரி எப்போப் படுத்தாலும் சாதாரணமாகவே காலை 4-30-க்கு முழிப்பு வந்துடும். முக்கியமான தினம்னால் கேட்கவே வேண்டாம். எங்க வீட்டில் காவலே வேண்டாம்னு என் கணவரோட நினைப்பு. நான் தான் இருக்கேனே! (அம்பி, ச்யாம் எரியுமே). இரண்டு பேருக்கும் வயசு ஆயிடுச்சு இல்ல.

3.கணக்கு:
எனக்குப் பிடிக்காத விஷயம். நான் ஒண்ணும் MGR மாதிரிக் கணக்கெல்லாம் கேட்கலை. சாதாரணக் கணக்குப் பாடம்தான் சொல்றேன். அதுவும் ஹைஸ்கூல் வந்ததும் அந்தக் கணக்கு டீச்சருக்கு என்னோட என் முன் ஜென்மத்துப் பகைனு தெரியலை. நான் மத்தப் பாடங்களில் புலி என்றால் நம்பவே மாட்டாங்க. தோழிகள் சத்தியம் பண்ணிச் சொல்வாங்க. அதுவரை ஏதோ 60 லிருந்து 70 வரை வாங்கிய கணக்கு மதிப்பெண்கள் 40, 50-க்குப் போனது. இதுக்காகவே நான் சிறப்புக் கணக்குப் பாடம் எடுத்தால் இந்த அல்ஜீப்ரா, (ஏதோ ஸ்வீட்டுனு நினைப்பேன்), ஜியோமெட்ரி எல்லாம் வரும்னு அக்கவுண்ட்ஸ் எடுத்துப் படிச்சேன். ஒரு சி.ஏ. ஆகி நம்ம தி.ரா.ச.வுக்குப் போட்டியா வந்திருக்கணும். இந்தக் கம்பெனி அக்கவுண்ட்ஸ் இரண்டு தரம் காலை வாரிவிட்டது. பாதியிலே கல்யாணமும் ஆகவே தி.ரா.ச. பிழைத்தார். நானும் நம்ம தான் பாரதி வம்சமாச்சேனு மொழிப்பாடம்(கல்யாணத்துக்கு அப்புறம்) படிச்சேன்.

4.புத்தகம் படித்தல்:
யார் யாரோ என்ன என்னமோ செய்து பார்த்துட்டாங்க. என்னால் இன்னும் இதில் இருந்து விடுபட முடியலை. முதலில் ராஜஸ்தான் மாத்திப் போனபோது அங்கே தமிழ் புத்தகம் கிடைக்காது என்று தான் கவலைப்பட்டேனே தவிர, ஊர் விட்டுப் போகிறோமேனு இல்லை. அப்புறம் என் கணவர் என்னோட ஆர்வத்தைத் தணிக்காமல் சில புத்தகங்களுக்கு வருஷச் சந்தாவும், சிவற்றுக்கு 6 மாதச் சந்தாவும் கட்டி வரவழைத்துக் கொடுத்தார். இன்னும் சிலபேருடன் புத்தக மாற்றும் செய்து கொண்டேன். அப்போது இருந்த நிலையில் முன்பணம் போட்டுச் சந்தாக் கட்டுவதே பெரிய விஷயம். இப்போவும் அநேகமாக முக்கியமான புத்தகங்கள் படிக்கிறேன். சில சமயம் குறிப்பு எடுக்கிறதுக்காகத் தேடிப் பிடிச்சு கூகிளில் பார்க்கிறேன். புத்தகம் படிக்கலைன்னா உலகமே அஸ்தமிச்சுப் போயிட்ட மாதிரி இருக்கு.

5. போராட்ட குணம்:
நிறையவே இருக்கு. யாராவது உன்னால் முடியாது என்று சொல்லிட்டால் அதை அவமானமாக உணர்வேன். உடனே அதை முடிச்சுக் காட்டுவேன். எடுத்துக்காட்டா எவ்வளவோ இருக்கு. கொஞ்சம் பெருமையாத் தோணிச்சுன்னா என்ன செய்யறது? இது குறைகளை மட்டும் பட்டியல் இடும் பதிவு. இதுவும் தப்பா அல்லது சரியா தெரியலை. தவிர, "ரெள்த்ரம் பழகு"னு பாரதி சொன்னது எனக்காவேங்கிற மாதிரி ஏதாவது தப்பா நடந்தாலோ, யாராவது தப்பு செய்தாலோ கோபம் வரும். அதுவும் எங்கள் தெருவில் சில பையன்கள் வீட்டு வாசலில் இருக்கும் தென்னை மரங்களில் தேங்காய், மாமரங்களில் மாங்காய், பூச்செடிகளில் இருந்து பூக்கள் பறிக்கிறதுனு வீட்டுக்காரர்களைக் கேட்காமல் அவங்க சொந்த மரம் போல் எடுப்பாங்க. அப்போ தெருவிலேயே நான் ஒருத்தி தான் கத்திச் சண்டை போடுவேன். இப்போ இப்போ எங்க வீட்டு புத்தரும் (என் கணவர்) கொஞ்சம் சொல்ல ஆரம்பிச்சிருக்கார். எங்க வீட்டு வாசலில் ஊரில் இருக்கும் வண்டி எல்லாம் கொண்டு வந்து நிறுத்துவாங்க. வேப்ப மரம் வச்சிருக்கோம். அதன் நிழலுக்காக. நாங்க வெளியிலேயும் வர முடியாது. வெளியே இருந்தா உள்ளே போக முடியாது. அதுக்கும் எங்க புத்தர் பேசாமல் தான் இருப்பார். நான் தான் வரிந்து கட்டிக் கொண்டு போவேன். அவங்க அங்கே இருந்து போகும் வரை விடமாட்டேன். இப்போ எல்லாம் புத்தரே சொல்ல ஆரம்பிச்சுட்டார். கொஞ்சம் பரவாயில்லை.
அப்புறம் பிடிச்சது, பிடிக்காததுனு இப்போவெல்லாம் வச்சுக்கலை. ஒருத்தர் கிட்டே அவ்வளவு சுலபமாப் பழக ஆரம்பிக்க மாட்டேன். பள்ளியிலே கூட எல்லாரும் ரொம்ப ரிசர்வ்னு முதலில் நினைப்பாங்க. பேச ஆரம்பிச்சா நான் வாங்கற வாங்கலில் ஒரே அமர்க்களமாப் போயிடும். பழக ஆரம்பிச்சுட்டா விடவே மாட்டேன். ஒரு முடிவு எடுக்கிற வரை யோசிப்பேன்.முடிவு எடுத்துட்டா என்ன ஆனாலும் பின் வாங்க மாட்டேன். (ஊசி தான் வாங்குவேன்.) இப்போதைக்கு இது போதும்னு நினைக்கிறேன். குறைகள் நிறைந்தவள்தான் நான். ஆகவே குறைகளையே நிறைகளாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

Tuesday, September 26, 2006

127. இதையும் படியுங்கள், ப்ளீஸ்!

தமிழ்மணம் நண்பர்களே
என்னோட பதிவுகளில் நான் எழுதி வரும் ஆன்மீகப் பயணம் பற்றிய
பதிவுகள் கடந்த ஒருமாதத்துக்குமேலாகத் தனியாகப்
பிரிக்கப்பட்டுத் தமிழ்மணத்தில் சேர்க்கப் பட்டுள்ளது. ஆனால்
இன்னும் முகப்பில் வர முடியவில்லை. முயற்சி செய்து
கொண்டு இருக்கிறேன். இன்னும் சரியாகவில்லை. ஆகவே அதற்கு
வாசகர்களே இல்லாமல் போய் விடுகிறது. எல்லாரும் எண்ணங்கள்
பதிவை மட்டும் பார்த்துவிட்டுப் போகிறார்கள். தயவுசெய்து
"ஆன்மீகப் பயணம்" பதிவிற்கும் விஜயம் செய்து உங்கள்
கருத்துக்களைத் தெரிவிக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.
பின்னூட்டத்திற்கு மட்டும் இல்லாமல் நாங்கள் "கைலாஷ் யாத்திரை" இம்மாதிரிப் போனது சரியா தவறா என்ற கருத்துக்களையும் தடை இல்லாமல் கூறும்படிக் கேட்டுக் கொள்கிறேன். இம்மாதிரி சொல்வதற்குக் காரணம் நான் எழுதும்போதே தெரிந்து விடும்.
முத்தமிழ்க் குழுமத்திலும் வெளியிடுவதால் அங்கே உடனே
விமரிசனம் வந்து விடும். ஆனால் தமிழ்மணத்தில் தான் இன்னும்
யாரும் பார்க்கவில்லை. ஆகவே தான் இந்த அறிவிப்பு. மிக்க
நன்றி.

Monday, September 25, 2006

126. மன்னர் ஞானேந்திராவுடன் ஒரு சந்திப்பு.

சங்கத்தின் நன்மைக்காக விடாது பாடுபட்டு வரும் தலைவி தன் வடமாநிலச் சுற்றுப் பயணத்தின் போது திடீரென வந்த அழைப்பின் பேரில் நேபாளம், திபெத் ஆகிய நாடுகளுக்கும் விஜயம் செய்தார். அப்போது அவர் நேபாளத்தில் மன்னர் ஞானேந்திராவுடன் சில பேச்சு வார்த்தைகள் நடத்தினார். அதன் விவரம் வருமாறு:

**********************

தலைவி: வணக்கம், மன்னர் ஞானேந்திரா அவர்களே!

மன்னர்: நீங்க யார் தெரியலியே? பார்த்தா ரொம்ப புத்திசாலியாத் தெரியறீங்க?ரொம்பச் சின்னப்பொண்ணா வேறே இருக்கீங்க!

தலைவி: (மனதுக்குள்) (உங்களுக்குத் தெரியுது, இந்த அம்பிக்கும் அவங்க கூட்டாளிகளுக்கும் புரியலை.) வெளிப்படையாக: ஹி,ஹி,ஹி, கற்றாரைக் கற்றாரே காமுறுவர்.

மன்னர்: அப்படின்னா என்ன அர்த்தம்?

தலைவி:(மனதுள் தலையில் அடித்துக் கொள்கிறார்.) ஹி ஹி ஹி, நான் வந்து வ.வா.சங்கத்தின் நிரந்தரத் தலைவலி(வி), அந்தச் சங்கத்தின் சார்பா வந்திருக்கேன். களப்பணி ஆற்றுவதற்கு.

மன்னர்: (பயத்துடன்) சங்கமா? சங் பரிவார் எல்லாம் இங்கே வரக்கூடாதே? இது மதச் சார்பற்ற நாடாச்சே? முதல்லே இங்கே இருந்து போயிடுங்க! பிரதமர் கொய்ராலாவுக்குத் தெரிஞ்சா என் கதி அதோ கதி தான்.

தலைவி: (பல்லைக் கடிக்கிறார்.) மளுக். என்று சத்தம் கேட்கிறது.

மன்னர்: என்ன சத்தம் அது? பயமா இருக்கே?

தலைவி: என்னோட பல் விழுந்தது தான் சத்தம் கேட்டது. இப்போ வந்து களப்பணி ஆற்றுவது என்றால்...

மன்னர்: அதானே பார்த்தேன். (கொஞ்சம் நிம்மதியுடன்) அதென்ன களப்பணி ஆற்றுவது? காப்பி, டீ ஆற்றுவது மாதிரி இருக்குமா? ரொம்பச் சூடாக இருக்குமோ? குடிக்கலாமா? அப்படியே சாப்பிடலாமா?

தலைவி: தெரியாத் தனமா உங்களைக் கற்றார்னு சொல்லித் தொலைச்சுட்டேன். இது கூடத் தெரியாம நீங்க என்ன மன்னர்னு புரியலை? சரி, போகட்டும், நான் நாளை திபெத் போகிறேன். அங்கே இந்த மாவு இருக்கே அது எப்படி எடுத்துட்டுப் போகிறதுனு புரியலை!

மன்னர்: மாவோவா? கடவுளே, ஈஸ்வர், அல்லா, ஜீஸஸ், மஹாவீர், புத்தர், குருநானக் இன்னும் எல்லா மஹான்களுக்கும் வணக்கம். இவங்க சொல்றதுக்கும் எனக்கும் சம்மந்தம் கிடையாது. மாவோ பத்தி எனக்குச் சத்தியமா ஒண்ணும் தெரியாது.

தலைவி: அந்த மாவோ இல்லை. இது மாவு, சொல்லுங்க, மாவு, மாஆஆஆஅவூஊஊஊஊஊஊ.

திடீரென மன்னர் ஓட்டம் பிடிக்கிறார். தலைவி திகைத்துப் போய்ப் பார்க்கத் தூரத்தில் பிரதமர் கொய்ராலாவுடன் மாவோயிஸ்ட் தலைவர்கள் வருகிறார்கள்.தலைவியும் ஓஓஓஓஓட்ட்ட்ட்ட்ட்டம் பிடித்து ஹோட்டல் ரூமில் தான் வந்து நிற்கிறார்.ஹோட்டல் அறையில் பத்திரிகையாளர் சந்திப்பு. ஒரே கூட்டம். தலைவியுடன் நேர் காணல்.

தலைவி பெருமையுடன் சொல்கிறார்: மன்னருடனான சந்திப்பு வெற்றிகரமாக முடிந்தது.

பத்திரிகைக் காரர்கள்: சந்திப்பின் நோக்கம்? மற்றும் விவரம் தேவை.

தலைவி: மன்னிக்கவும். அரசாங்க ரகசியம் சொல்ல முடியாது.(ஹி ஹி ஹி ஹி ஹி ஹி, கெக்கலி கொட்டிச் சிரிக்கும் சப்தம் கேட்கிறது.)

தலைவி கோபத்துடன் பத்திரிகைக்காரர்களைப் பார்க்கிறார். "யார் சிரித்தது?"

பத்திரிகைக்காரர்கள்: நாங்கள் இல்லையே?

மறுபடி சிரிப்புச் சத்தம் கேட்க தலைவி உன்னிப்பாகக் கேட்கிறார். சிரித்தது தலைவியின் மனசாட்சி.

தலைவி:" வந்துட்டியா? இங்கேயும்? பேசாமல் போய்த் தொலை அல்லது வாயை மூடு."

மனசாட்சி:" கெக்கே கெக்கே கெக்கே," என்று சிரிக்கிறது.

"எனக்குச் சத்துரு யாரும் வேண்டாம் நீயே போதும் "என்று தலைவி தலையில் அடித்துக் கொள்கிறார்.

Sunday, September 24, 2006

125. தலைவி பெருமிதம். பயணம் வெற்றி

வ.வா.சங்கத்தின் நிரந்தரத் தலைவலி(வி)யும், அம்பியின் நிரந்தர ஆப்பு வைப்பவருமான திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் தன்னுடைய வடமாநிலச் சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, அத்துடன் நேபாள், சைனா போன்ற வெளி நாடுகளுக்கும் தூது சென்று வெற்றிக் கொடி நாட்டி விட்டுத் திரும்பினார்.
தலைவி கீதா அவர்கள் வடமாநிலச் சுற்றுப் பயணம் சென்றது அனைவரும் அறிந்ததே. முன்னதாக ஆப்பு அம்பி, தலை கைப்புள்ள(வாழ்த்துக் கவிதை), வேதா(ள்) வேதா, பாசமலர் ச்யாம், புதுவரவு பொற்கொடி, புளியோதரை புகழ் நாகை சிவா, விவசாயி இளா, திடீரென்று வந்து குதித்த மனசு ஆகியோர் தலைவியின் பிரிவுபசார விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்ததும் அனைவரும் அறிந்ததே! (தி.ரா.ச. வந்தாரோ, தெரியலை, போய்ப் பார்க்கணும்) வந்திருப்பார், இதிலே நாகை சிவா தலைவியை அழைத்த தலைவர்கள் வயதைப் பற்றி வேண்டாத குறிப்புக் கொடுத்துத் தலைவியைப் புண்படுத்த நினைத்ததும், தலைவியின் பெருந்தன்மையால் அதை யாரும் கண்டு கொள்ளவில்லை என்பதும் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் வடமாநிலம் சென்ற தலைவி அங்கே முக்கியத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை (!!!!!!!) முடிந்ததும், நேபாளத்தின் புதிய பிரதமரின் அழைப்பின் பேரில் அங்கே சென்றார். அங்கிருந்து அவர் சீனத்தின் திபெத் பகுதியில் சுற்றுப் பயணம் செய்து அதன் நிறை, குறைகளைக் கண்டறிந்தார். தலைவியின் கொடி அங்கே வானளாவப் பறக்கிறது. பின் டெல்லி திரும்பிய தலைவி அங்கிருந்து ரெயில் மூலம் சென்னை வந்தடைந்தார். தலைவிக்கு வெற்றி விழா மற்றும் பாராட்டு விழா கூடிய சீக்கிரம் நடைபெறுகிறது. அதிலே தலைவிக்கு, "இமயம் கண்டாள்", என்ற பட்டப் பெயரும் சூட்டுவதாக முடிவு செய்து மற்றுமொரு பெயர் சூட்டுவதற்கும் ஆலோசனை நடந்து வருவதாகவும் தெரிகிறது.
சங்கத்துச் சிங்கங்களே, வீறு கொண்டு எழுந்து வாருங்கள், வெற்றி விழாவைச் சிறப்பிக்க, யார் எத்தனை வண்டி கொண்டு வரவேண்டும், ஆட்கள் எத்தனை பேர் சேர்க்க வேண்டும் என்ற தகவல் அவரவர் குழுத்தலைவருக்கு ரகசியமாக(!!!!) அனுப்பப் படும். மின்சாரம் எங்கே திருடினால் வசதியோ அங்கே விழா மேடை போடப்படும். அனைவரும் வருக. அனுமதி இலவசம்.

124. நான் வந்துட்டேன்.

ஹி,ஹி,ஹி, நான் வந்துட்டேன். இன்னிக்குத் தான் வந்தேன். வந்து பார்த்தா இணைய இணைப்பு இல்லவே இல்லை..இன்னும் வரலை. அப்பாடா, இது எழுத ஆரம்பிக்கும் போதே இணைப்பு வந்து விட்டது. உடனே விட்டேன் அம்பி, வேதா, ச்யாம், கார்த்திக், சிவா ஆகியோரின் பதிவுக்கு. சிவாவின் பதிவு மட்டும் இன்னும் வரலை. மறுபடி முயற்சி செய்யணும்.
இத்தனை நாளா எங்கே போயிருந்தேன்னு யாருக்கும் தெரியாது. நான் யார் கிட்டேயும் சொல்லவே இல்லை. சொல்லப் போனால் எங்களோட பெண், பையன் இரண்டு பேரைத்தவிர யாருக்கும் சொல்லவில்லை. நாங்க இரண்டு பேரும் ஒரு குழுவோட சேர்ந்து கைலாஷ், மானசரோவர் யாத்திரை போயிருந்தோம். பிரயாண அனுபவங்கள் வரும் நாட்களில். ஆனால் முக்கியமா ஒண்ணு சொல்லணும், உங்க எல்லாரையும் மறுபடி பார்ப்பேனா என்று ரொம்ப ஏங்கினேன். இது தான் நிஜம். எங்கே போனாலும் இந்த மாதிரி தோணியது இல்லை. வந்து அம்பியை இப்படி வாரலாம், வேதாவை எப்படிக் கிண்டல் செய்யலாம், சிவாவை எப்படிக் கேலி செய்யலாம், ச்யாமை என்ன சொல்லி ஆப்பு வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டே போவேன். வந்து ஓரளவு அதே மாதிரி எழுதிடுவேன். ஆனால் இப்போ அந்த மாதிரியான எண்ணங்கள் வந்தாலும், திரும்பி வருவோமா என்ற நிச்சயம் இல்லாமல் இருந்தது. காரணமே இல்லாமல் ராத்திரியில் பங்கஜ் உதாஸின், "சிட்டி ஆயி ஹை, வதன் கி சிட்டி ஆயி ஹை," பாட்டு நினைவு வந்து அழுகை வரும். இப்போ வந்ததும் தான் ஒரு பாதுகாப்புத் தெரிகிறது. இனி என்னோட அனுபவங்கள் தொடரும், இரண்டு வலைப்பக்கத்திலும். அப்போதான் உங்க எல்லாருக்கும் என்னோட கலக்கத்தின் காரணம் புரியும். யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டீங்க, என்னோட வரவை. எல்லாருக்கும் என்னோட நன்றி, மற்றும் எல்லாருக்கும் அந்தக் கைலாச நாதனின் அருள் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.