எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, March 06, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்

சங்கே முழங்கு!


ஹூக்கு இருந்த இடத்தை விட்டு நகரவே இல்லை. பாஞ்சஜனா ஹூக்கு எனக் கோபமாய் ஒரு அதட்டல் போட்டான். கப்பலின் மாலுமிகள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்க, வெட்கத்துடனும், கோழை போலவும் ஹூக்கு தயங்கிக் கொண்டிருந்தான். அதற்குள்ளாக பிக்ரு வந்து பாஞ்சஜனாவின் காலில் விழுந்து கெஞ்ச ஆரம்பித்தான். கண்ணனுக்குத் தண்டனை கொடுக்கக் கூடாது என வேண்டுகோள் விடுத்தான். சத்தம்போட்டு அழவும் ஆரம்பித்தான். “முட்டாளே, சும்மா இரு!” என அவனை அதட்டிய பாஞ்சஜனா தானே அவனை அடிக்கவும் முனைந்தான். பின்னர் திடீரென மனதை மாற்றிக்கொண்டு மீண்டும் ஹூக்குவைப் பார்த்து சைகை செய்தான் கண்ணனை அடிக்கச் சொல்லி. கண்ணனோ இவை எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. இந்தச் சம்பவங்களுக்கும், தனக்கும் எந்தவித சம்பந்தமுமே இல்லை என்பது போல் எந்தப் பாதிப்பும் இல்லாமல் எப்போதும்போலவே இருந்தான். சற்று நேரம் கடந்தால் ஹூக்குவிற்கே அடி விழுமோ எனப் பயந்த ஹூக்கு தன் கைகள் நடுங்க, கால்கள் எழும்பி நடக்கக் கஷ்டப்பட மெல்ல மெல்ல கண்ணனை நோக்கித் தயங்கித் தயங்கி அடி எடுத்து வைத்தான். அதைப் பார்த்த பாஞ்சஜனாவின் கோபத் தீ கொழுந்து விட்டு எரியச் சாட்டையை அவன் ஹூக்குவின் கைகளில் இருந்து பிடுங்கிக் கொண்டான்.

சாட்டை மாடுகளை மேய்ப்பவர் வைத்திருப்பது போன்ற நீண்ட பிடி உள்ளது, பாஞ்சஜனா அதை வாங்கிக் கண்ணனின் முதுகின் மேல் ஓங்கி ஓர் அடி வைத்தான். அவ்வளவு தான். பிறந்தது முதல் மாடுகளுடன் வளர்ந்த கண்ணன் அந்தச் சாட்டையின் அடிப்பாகத்தைப் பிடித்து ஒரு சொடுக்குச் சொடுக்கி இழுத்தான். அந்த அடிக்கே கண்ணன் முதுகு அருணோதயச் சூரியன் போல் சிவந்திருந்தது. கண்ணன் மென்னகை புரிந்துகொண்டே தன் கைகளில் பிடித்த சாட்டையால் தன் முழுபலத்தையும் பிரயோகித்துப் பாஞ்சஜனாவை அடிக்க ஆரம்பித்தான். மாலுமிகள் பயத்தில் அலற ஆரம்பித்தனர். ஹூல்லு தன் முதலாளியைக் காக்கவென விரைந்தான். ஆனால் நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களினால் பிரமிப்பு அடைந்திருந்த ஹூக்கு அவனைத் தடுத்தான். பாஞ்சஜனா தொடர்ந்து அடிவாங்கினான். அனைவரையும் அடிக்கப் பயன்பட்ட அதே சாட்டையினால் இன்று அவன் அடிவாங்க ஆரம்பித்தான். தனக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டே பாஞ்சஜனா வலி பொறுக்க மாட்டாமல் கத்த ஆரம்பித்தான். ரத்தம் வழிய ஆரம்பித்தது. எவருமே இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. முதலில் ஓடி வந்த ஹூல்லுவும் இப்போது இதை ரசிக்கிறாப்போல் பாவனையுடன் நின்று கொண்டிருந்தான். நம்மை எந்த நேரம் வேண்டுமானாலும் நடுக்கடலில் தள்ளிக் கொல்லப் போகிறான் என நினைத்த முதலாளி இன்று ஒரு பதினாறு வயதுச் சிறுவனால் தண்டிக்கப் படுகிறான். அந்தக் கப்பலின் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் பாஞ்சஜனா தங்களுக்கு இழைத்த கொடுமைகள் வரிசையிட்டுக்கொண்டு கண்ணெதிரே வந்தன. பாஞ்சஜனாவின் உறவின் முறை இளைஞர்கள் ஓடிப் போய் ஒளிய, பாஞ்சஜனா கீழே விழுந்தான். ஹூக்குவிடம் சாட்டையைக் கொடுத்தான் கண்ணன். அவனைத் தட்டிக் கொடுத்தான். சொர்க்கத்துக்கே போய் விட்டது போன்ற உணர்வு ஹுக்குவிற்கு.

கண்ணனைப் புதிய மரியாதையுடன் பார்த்தனர் இரு ராக்ஷசர்களும். இத்தனை நாட்கள் பாஞ்சஜனாவின் கட்டளைகளுக்குப் பயந்து கொண்டும், தங்களுக்கே கொடுக்கப் போகும் தண்டனைக்கு அஞ்சியும் தாங்கள் செய்து வந்த கொடூரமான செயல் இன்றைக்கு தங்கள் தலைவனே அநுபவிக்க நேர்ந்துவிட்டது பற்றிய ஆச்சரியம் அகலவில்லை. இந்தப் பையன் கைகளிலும், கண்களிலும் ஏதோ அதிசய சக்தி இருக்கத் தான் செய்கிறது. கண்ணன் திரும்பி உத்தவனைப் பார்த்து பாஞ்சஜனாவைத் தூக்கிக்கொண்டு அவன் அறைக்குச் செல்லும்படிக் கட்டளையிட்டான். தான் பின் தொடருவதாயும் கூறினான். ஹூக்கு உதவியுடன் உத்தவன் பாஞ்சஜனாவைத் தூக்கிச் சென்றான். பிக்ருவைப் பார்த்து கண்ணன் கப்பலை வைவஸ்வதபுரிக்குத் திருப்பச் சொன்னான். அங்கே கட்டாயம் தாங்கள் சென்றே ஆகவேண்டும் என்றும் கூறினான். கீழே பாஞ்சஜனாவின் சங்கு, செந்தாமரைப்பூப் போன்ற வெளிர் சிவப்பு நிறமுள்ள சங்கு கிடந்தது. அதைப் பார்க்கும்போதே தூய்மையான எண்ணங்களே தோன்றின. கண்ணன் அந்தச் சங்கை எடுத்துத் தன் வாயில் வைத்துக்கொண்டு, “பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்”என ஊதினான். சங்கின் நாதம் கப்பலில் நிரம்பியது. அனைவர் மனதையும் மயக்கியது. சங்கின் நாதம் தொடரும்.

கண்ணன் பின்பு பாஞ்சஜனாவின் அறைக்குச் சென்று அவன் காயங்களைக் கழுவி, அவற்றுக்கு மருந்திட்டான். அரை மயக்க நிலையில் இருந்த பாஞ்சஜனா கண்ணைத் திறந்து பார்த்தான். கண்ணனைக் கண்டதும், அவனைச் சரமாரியாகத் திட்ட ஆரம்பித்தான். கண்ணன் எதற்கும் பதிலே சொல்லவில்லை. அவனுக்குத் தெரிந்த அனைத்துமொழிகளிலும் கண்ணனைத் திட்டினான். பாஞ்சஜனாவின் உறவின் முறை இளைஞர்களிடம் அவனை ஒப்படைத்துவிட்டு உத்தவனும், கண்ணனும், அந்த அறையை விட்டு வெளியே வந்தனர். கப்பலின் கீழ்த்தளத்துக்குச் சென்று மாலுமிகளிடம் உதவி வேண்டுமா எனக் கேட்டு கண்ணனும், உத்தவனும் வேண்டிய உதவிகளைச் செய்தனர். அன்றிரவு கண்ணனுக்கும், உத்தவனுக்கும் ஒரு பெரிய விருந்தைப் படைத்து வெற்றியைக் கொண்டாடினார்கள் கப்பலின் சமையல்காரர்கள். இரவும் வந்தது. அனைவரும் தூங்கச் சென்றனர். கண்ணனும் முதலில் தூங்கிவிட்டான். திடீரென அவனுக்கு விழிப்பு வந்தது. ஏதோ ஆபத்து! என்ன அது? சுற்றும் முற்றும் பார்த்தான். அந்த அரை இருட்டில் மிக மிக மெதுவாக யாரோ நகருவதும், மூச்சுக்காற்றும் கேட்டது கண்ணனுக்கு. சில விநாடிகளில் கண்ணனின் தலைக்கு நேரே ஒரு நீண்ட வாள் வீசப்பட்டது.

7 comments:

  1. suspense vaikaama kathaya sollitu ooruku ponga

    ReplyDelete
  2. என்ன கோபி, கஷ்டப்பட்டு ம்ம்ம்ம்ம்??? :))))))))

    ReplyDelete
  3. எல்கே, மாட்டேனே! ஒரு பெரிய சஸ்பென்ஸ் வச்சுட்டுத் தான் ஊருக்குப் போகப் போறேன்! :P

    ReplyDelete
  4. //பெரிய சஸ்பென்ஸ் வச்சுட்டுத் தான் ஊருக்குப் போகப் போறேன்// எந்த ஊருக்கு????:)

    ReplyDelete
  5. தக்குடு, சொல்ல மாட்டேனே!:P

    ReplyDelete
  6. ஆகா கண்ணாடி மாறுன்னதும் சன்பென்ஸ் கதை எல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டிங்க. நான் என் பதிவுகளில் கொஞ்சம் பிசியாக இருந்ததுனால வரமுடியவில்லை. இன்னிக்கு படிச்சுட்டேன். கொஞ்சம் நம்ம பிளாக் பக்கம் வந்து சிரித்து விட்டுப் போங்கள். நன்றி.

    ReplyDelete
  7. வாங்க பித்தனின் வாக்கு, மத்தியானமா கண்டிப்பா வந்து படிக்கிறேன். நன்றிங்க.

    ReplyDelete