எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, November 29, 2010

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் 25

இப்போ தேவி ஆறுசக்கரங்களிலும் விளங்குவது எப்படி என்று ஒரு எளிமையான சின்ன விளக்கம். நம் உடல் பஞ்சபூதங்களால் ஆனது. நம் உடலிலேயே பஞ்சபூதங்களும் அடங்கி உள்ளன என்பதைக் குறிக்கவே மூலாதாரம், ஸ்வாதிஷ்டாநம் , மணி பூரகம், அநாஹதம், விசுத்தி, போன்ற சக்கரங்களும் பஞ்சபூத தத்துவங்களைக் குறிப்பிடுகின்றன. கடைசியான ஆக்ஞா சக்கரம் நம் புருவ மத்தியைக் குறிக்கும் இடம். ஜீவாத்மாவிடம் ஈசனின் ஆக்ஞாயானது அங்கே பிரகாசிக்கின்றது. அதனாலேயே ஆக்ஞாசக்கரம் என்பார்கள். லலிதாசமேத காமேசுவர மகாலிங்கமானது அங்கே நிர்குண, ஸகுண சக்தியால் அலங்கரிக்கப்படும். இங்கே நிர்குண, ஸகுண சக்தியாக அம்பிகையே குறிக்கப் படுகிறாள். இப்படி குறிக்கப்படும் அம்பிகை ஈரிதழ்த் தாமரையில் ஆறு முகங்களோடு பிரகாசிக்கும் வெண்ணிறத்தோடு ஹாகினி என்னும் பெயரோடு எழுந்தருளி இருக்கிறாள்.

ஆக்ஞா-சக்ராப்ஜ-நிலயா-சுக்லவர்ணா-ஷடானனா!!”

“ஹரித்ரான்னைக-ரஸிகா ஹாகினீ-ரூப-தாரிணீ”

என்று ஸ்ரீலலிதையின் சஹஸ்ரநாமம் இவளைப் போற்றும்.

அடுத்து நம் நாட்டில் இப்படி ஆக்ஞா சக்கரஸ்தானமாய்க் கருதப்படும் இடம் காசி க்ஷேத்திரம் ஆகும். அம்பிகை இங்கே துர்க்கையாகவும் காசி விசாலாக்ஷியாகவும் இருவிதப் பிரதான சக்திகளாய்த் தோன்றுகிறாள். இந்த ஆக்ஞா சக்கரம் ஆத்மத்வம் என்றும் கூறுவார்கள். இங்கே ஸ்வயம்பிரகாசமான சக்தியைப் பின்பற்றியே அனைத்தும் பிரகாசிக்குமே தவிர அதற்காக சுயமான ஒளி இல்லை. சூரிய, சந்திரரும், மின்னல்களும், அக்னியுமே அந்தப் பிரகாசத்தில் தெரியாதெனில் மற்றவை எம்மட்டு?? இதைக் கடந்தே ஸஹஸ்ராரத்தில் பிரவேசிக்கவேண்டும். இப்படி ஆத்மாவை எதுவும் ஒட்டாது என்பதை இங்கே பார்த்தோம் அல்லவா??? (இனிமே ஆத்மா சாந்தி அடையட்டும்னு பிரார்த்திக்கும் முன்னே கொஞ்சம் யோசிங்க)

நாம தான் கீழே தானே போவோம்?? ஆகவே கீழேயே போய்ப் பார்ப்போமே! ஆத்மாவிலிருந்து கீழே வந்தால் மனசு தோன்றுகிறது. அதே போல் நம் புருவ மத்தியிலிருந்து கீழிறங்கினோமானால் நெஞ்சுக்குழி வருகிறது. இதுவே விசுத்தி சக்கரம். ஆகாயதத்துவம்.

“விசுத்தி –சக்ர- நிலயா-ரக்தவர்ணா த்ரிலோசனா
கட்வாங்காதி-ப்ரஹரணா வதனைக-ஸமன்விதா

அம்ருதாதி-மஹாசக்தி-ஸம்வ்ருதா டாகினீச்வரீ”

சிவந்த ரத்த நிறத்துடனும், மூன்று முகங்களுடனும் காட்சி அளிக்கும் அம்பிகை இங்கு பதினாறு தள கமலத்தில் டாகினீ என்னும் பெயரில் விளங்குகிறாள். இங்கு அம்பிகையும், ஈசனும், சூரியனையும், சந்திரனையும் போல் தண்மையும், வெம்மையும் கலந்து பூவோடு சேர்ந்த மணம் போலவும், கரும்பில் கலந்திருக்கும் இனிமை போலவும், தீபத்திலிருந்து பிரிக்கமுடியாத ஒளி போலவும் காட்சி அளிக்கின்றனர். சகல ஜீவர்களுக்கும் ஜீவாதாரமாய்ப் பிரகாசிப்பதே இவர்கள் இருவரின் ஆநந்தமயமான ஜோதிப் பிரகாசமே. நம் புண்ணிய பாரதத்தில் இப்படி ஆகாய க்ஷேத்திரமாய் விளங்கிப் பிரகாசிப்பது சிதம்பரம் க்ஷேத்திரமே. இங்கு ஆகாய தத்துவ உபாசனை. தஹராகாசம் செய்யப் படுகிறது. “தஹராகாச-ரூபிணீ” என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறும். இங்கு அம்பிகையும், ஈசனும் வ்யோமேஸ்வரனும், வ்யோமேஸ்வரியாகவுமோ அல்லது அர்த்தநாரீஸ்வரராகவோ வழிபடப் படுகின்றனர். பட்டர் இதை,

பரிபுறச் சீறடி பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துரமேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக்குனி பொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்திருந்தவளே!” என்கிறார்.

அடுத்து ஆகாய தத்துவத்திலிருந்து இன்னும் கீழே வரணும். ஆகாயத்திலிருந்து தோன்றியது வாயு.
“அநாஹதாப்ஜ-நிலயா ச்யாமாபா வதனத்வயா
தம்ஷ்ட்ரோஜ்வலாக்ஷமாலாதி-தரா ருதிர –ஸம்ஸ்திதா

காலராத்ர்யாதி-ச்க்த்யெளக-வ்ருதா ஸ்நிக்தெளதன-ப்ரியா
மஹாவீரேந்த்ர-வரதா ராகிண்யம்பா-ஸ்வரூபிணீ”

இங்கு பனிரண்டு தளக் கமலத்தில் வீற்றிருக்கும் அம்பிகை ச்யாமளையாக ராகினீ என்னும் பெயருடன் வீற்றிருக்கிறாள். இவளே கல்விக்கு அதிபதி. இவள் நம் இதயத்தில் ஞானத் தாமரையை மலர வைக்கும் ஹம்ஸங்களாக ஈசனோடு உலவுகிறாள். நம் மனத் தடாகத்தில், இதுவே மானசரோவர் எனப்படும். இந்த மானசரோவரில் பக்தர்களின் ஞாநத்தையே அநுபவித்து அதைப் பற்றியே தங்களுக்குள் இனிமையாகப் பேசிக்கொள்ளும் ஹம்சங்களான ஈசனும், அம்பிகையும் ஹம்சேஸ்வரனாகவும், ஹம்சேஸ்வரியாகவும் இருக்கின்றனர். இவர்களின் அருளாலேயே நமக்கு சகல வித்தைகளும் கிடைக்கப் பெறுகிறோம். இந்த ஹம்ஸங்களின் சம்பாஷணையே அனைத்து வித்தைகளும். உள்முகத் தியானத்தாலேயே இது கைகூடும். இதற்காக ஜபிக்கப் படும் மந்திரமும் அஜபா மந்திரமாகவே சொல்லப் படும். தக்க குரு மூலம் தீக்ஷை பெற்று மந்திர ஜபம் உபாசிக்க வழிமுறைகளை ஏற்று முறையாக ஜபிப்பவர்களுக்கு பிரத்யக்ஷமாகத் தரிசனம் கிட்டும். ச்யாமளையின் அருளும் கிடைக்கும்.

“கண்களிக்கும்படி கண்டுகொண்டேன் கடம்பாடவியல்
பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே!”

என்று இவளை வியந்து கூறுகிறார் பட்டர் பெருமான். கடம்பவனத்தில் பண்களால் களிக்கும் குரலோடு இசைந்த அழகான வீணையும் ஏந்திய வண்ணம் பச்சை நிறப் பேரழகியாகக் காட்சி அளிக்கிறாளாம் அம்பிகை. நம் நாட்டில் அநாஹதத்தில் உள்ள ஹம்ஸ்த்வந்த்வ உபாசனை முறைக்கு ஏற்பட்ட தலம் ஆவுடையார் கோவில் ஆகும். இனி ஸ்ரீலலிதையின் சோபனப் பாடல்களில் ஸ்ரீவித்தை ஜபத்தின் மஹிமை கூறுதல்.

மந்திரங்களுக்கெல்லாம் பெரிதான ஸ்ரீவித்தை
மஹாகுருவினிடத்தில் வேண்டிக்கொண்டு
மந்திரத்திற்குச் சொன்ன ஜபஹோமங்கள் செய்து
மஹிமை தேவாளுக்குப் போஜனமளித்த்துப்
பின்னர் தேவியை பரமாத்மாவாய்த் தியானித்து
பிறகு நிஷ்காம்ய ஜபம் செய்தபேர்க்கு
எண்ணின காரியம் கைகூடும் ஜகத்திலே
இவர்கள் எங்கும் பூஜ்யர்-சோபனம் சோபனம்

அசுத்தத்துடன் சோபனத்தைச் சொன்னபேர்க்கும்
அசங்கித்த பேர்க்கும் பிணிகளுண்டு
அசுத்தமில்லாமலும் அசங்கையில்லாமலும்
அம்மன் சோபனமென்றும் பக்தியுடன்
விச்வாஸமாய்ச் சொன்னபேர்க்கும் கேட்டவர்க்கும்
வியாதியில்லை சத்ரு பாதையில்லை
நிஜமாய் ஜ்வரம் வியாதி ரோகாதிகளில்லை
நித்ய ஸம்பத்துண்டு- சோபனம் சோபனம்

இந்தச் சோபனம் பாடும் வாழ்வரசிகள் எல்லாம்
தேவிகளென்று மனதிலெண்ணி
சந்தனத் தாம்பூலம் குங்குமம் பழம் புஷ்பம்
ஸந்தோஷமாய் எல்லார்க்குங் கொடுத்து
எந்தெந்தக் கிருஹங்களில் சொல்ல வைத்துக் கேட்பாரோ
அந்தந்தக் கிருஹங்களில் அரிஷ்டம் நீங்கும்
ஸுந்தரி கிருபையாலே ஸந்ததி விருத்திக்கும்
தீர்க்காயுஸுமுண்டு –சோபனம் சோபனம்

இனி அம்பிகையை வழிபடவேண்டிய முக்கியமான காலங்கள் நாளை பார்ப்போம். அதோடு மங்களம் பாடி முடியும். அதன் பின்னர் சகோதரி சுப்புலக்ஷ்மி பற்றிய குறிப்புகள்.

Thursday, November 25, 2010

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 24

தோள்களை கட்கதாரிணியும், புஜங்களை வஜ்ரதாரிணியும், கைகளை தண்டினியும், விரல்களை அம்பிகையும் காக்கவேண்டும். நகங்களை சூலேச்வரி ரக்ஷிக்க, கஷ்கங்களை அனலேஸ்வரி ரக்ஷிக்க, ஸ்தனங்களை மஹாதேவி ரக்ஷிக்க, மனதைச் சோகவிநாசினி ரக்ஷிக்கவேண்டும். இருதயத்தை ஸ்ரீலலிதையும், வயிற்றை சூலதாரிணியும், நாபியைக் காமினீ தேவியும், ரஹஸ்யஸ்தானத்தை குஹ்யேஸ்வரியும் காக்கவேண்டும். பூதநாதா லிங்கத்தையும் மஹிஷவாஹினி அபானத் துவாரத்தையும், இடுப்பில் பகவதியும், முழங்கால்களை விந்திய வாஸினியும் காக்கவேண்டும். தொடைகளை மஹாபலாதேவியும் முழங்கால் நடுவில் விநாயகீதேவியும், கணுக்கால்களில் நாரஸிம்ஹிதேவியும், பின்னங்கால்களில் மிதெளஜஸியும் ரக்ஷிக்கட்டும். கால்விரல்களை ஸ்ரீதரியும், பாதத்தின் கீழ் தலவாஸினியும், நகங்களை தம்ஷ்ட்ராகராலியும், கேசங்களை ஊர்த்வகேசினியும், மயிர்க்கால்களை கெளபேரியும், தோலை வாகீச்வரியும், இரத்தம், வீரியம், கொழுப்பு, மாம்ஸம், எலும்பு,மூளை இவற்றைப் பார்வதியும் காக்கவேண்டும். குடல்களைக் காலராத்திரியும், பித்ததாதுவை முகுடேஸ்வரியும், ஆதாரக் கமலங்களில் பத்மாவதியும், சுபதாதுவில் சூடாமணியும் ரக்ஷிக்கட்டும். நகங்களுக்குப் பிரகாசத்தை ஜ்வாலாமுகியும், எல்லா சந்திகளிலும் அபேத்யா தேவியும் பிரம்மாணி சுக்லத்தையும், நிழலை சத்ரேஸ்வரியும் ரக்ஷிக்கட்டும்.

தர்மசாரிணி நமது அஹங்காரத்தையும், மனதையும், புத்தியையும் காக்கவேண்டும், பிராணன், அபானன், வியானன், ஸமாநன், உதானன் போன்றவற்றையும் அவளே காப்பாள். புகழ், கீர்த்தி, அழகு இவற்றை சக்ரீணியும், இந்திராணி கோத்திரத்தையும், சண்டிகை பசுக்களையும் காக்கவேண்டும். மஹாலக்ஷ்மி தன் குழந்தைகளான நம்மை காக்கவேண்டும். பைரவி மனைவியையும், க்ஷேமங்கரீ வழியையும், விஜயா அனைத்துப் புறங்களிலும் காக்கவேண்டும். இங்ஙனம் தேவியின் ஸ்மரணமே நம்மைக் காக்கும் கவசமாக நினைத்து ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கவேண்டும் என்று தேவி மஹாத்மியம் கூறுகிறது.

இதைத் தவிரவும் தேவியின் இருப்பிடங்களாகவும், அவற்றில் குடிகொண்டிருக்கும் நாமாவளிகளும் விவரிக்கப் பட்டிருக்கிறது. அவையாவன:

லக்ஷ்மி தேவிக்குக் கோலாபுரம் மஹாஸ்தானமாகவும்,

ரேணுகாதேவிக்கு மாத்ருபுரமும்,

துர்க்கைக்கு சப்தஸ்ருங்கம், துளஜாபுரம், இங்குலை, ஆகிய இடங்களும்,

ஜ்வாலாமுகி, சாகம்பரி, பிராமரி, ஸ்ரீரக்த தந்த்ரிகா, அன்னபூரணி ஆகியோரின் இருப்பிடமாக சர்வ சக்தி வாய்ந்ததும், மூலாதார க்ஷேத்திரங்களின் முதன்மையானதும் ஆன காஞ்சிபுரமும்,

அங்கேயே பராசக்தியே மணலால் சிவலிங்கம் பிடித்து வழிபட்ட ஏகாம்பரமும்,

யோகேஸ்வரி பிரதிஷ்டை செய்த தேஜோஸ்தானம்,

பீமாதேவி விந்த்யாசலத்திலும்,

விமலாதேவி, நீலாம்பிகை போன்றோர் திருவானைக்காவல், ஸ்ரீநகரம்

நேபாளத்தில் குஹ்யகாளியாகவும்,

எல்லாவற்றுக்கும் மேல் தஹராகாச க்ஷேத்திரமான சிதம்பரத்தில் சிவகாமியாகவும்,

வேதாரண்யத்திலும் சீனத்திலும் நீல சரஸ்வதியாகவும்,

வைத்தியநாதத்தில் வகலாவாகவும்,

மணித்வீபத்தில் புவனேஸ்வரியாகவும்

காமாக்யாவில் திரிபுர பைரவியாகவும்

புஷ்கரில் காயத்ரி தேவியாகவும்,

அமரேசத்தில் சண்டிகையாகவும்,

பிரபாச க்ஷேத்திரத்தில் புஷ்கரேக்ஷணியாகவும்,

நைமிசாரண்யத்தில் லிங்கதாரிணியாகவும்,

புருஹூதையில் புஷ்கராக்ஷியாகவும்,

ஆஷாடத்தில் ரதி தேவியாகவும்,

மைசூரில் சண்டமுண்டிகாவாகவும்,

பராபூதி, பூதியில் பரமேஸ்வரியின் தண்டினியாகவும்,

நகுலத்தில் நகுலேஸ்வரியாகவும்,

அரிச்சந்திராவில் சந்திரிகாவாகவும்,

ஸ்ரீபர்வதத்தில் சங்கரியாகவும்

திருவையாறில் திரிசூலியாகவும்,

ஆம்தாத்கேச்வரத்தில் குக்ஷுமாவாகவும்,

மகாகாளேச்வரத்தில் சங்கரியாகவும்

மத்திமத்தில் சர்வாணியாகவும்,

கேதாரத்தில் மார்க்கதாயினியாகவும்,

பைரவத்தில் பைரவியாகவும்,

கயையில் மங்களாவாகவும்,

குருக்ஷேத்திரத்தில் ஸ்தாணுப்ரியாவாகவும்,

நகுலத்தில் ஸ்வாயம்பவியாகவும்

கனகலத்தில் உக்ராதேவியாகவும்,

விமலேஸ்வரத்தில் விஸ்வேஸ்வரியாகவும்,

மஹாநந்தாவில் மஹாந்தகையாகவும்,

பீமக்ஷேத்திரத்தில் பீமேஸ்வரியாகவும்,

பவானியில் சங்கரியாகவும்.

அர்த்தகோடியில் ருத்ராணியாகவும்

காசியில் தன் விசால நயனங்களால் அருளாட்சி புரியும் விசாலாக்ஷியாகவும்,

மகாலயத்தில் மஹாபாகாவாயும்,

கோகர்ணத்தில் பத்ரகாளியாகவும்,

பத்ரகர்ணிகையில் பத்ரியாகவும்

உத்பலாக்ஷியில் ஸ்வர்ணாக்ஷியாகவும்,

ஸ்தாண்வீயில் ஸ்தாணுவாகவும்,

திருவாரூர் என்னும் மற்றொரு மூலாதார க்ஷேத்திரத்தில் கமலாம்பிகையாகவும்

சகலண்டகத்தில் பிரசண்டையாகவும்

குருண்டலையில் த்ரிசந்தியாதேவிகளாகவும்

மாகோடத்தில் மகுடேஸ்வரியாகவும்

மண்டலேசத்தில் கண்டகியாகவும்,

காலஞ்சரத்தில் காளிகாவாயும்,

சங்குகர்ணத்தில் த்வனீஸ்வரியாகவும்

ஸ்தூலகேஸ்வரத்தில் ஸ்தூலகேஸ்வரீயாகவும்,

அனைத்துக்கும் மேல் பக்தர்களின் இதயத்திலும், ஞாநிகளின் இதயத்திலும் நித்யவாசம் செய்யும் ஹ்ருல்லேகா என்னும் மந்திர தேவியாகவும் இருக்கின்றாள்.

தேவியின் இந்த நாமாவளிகளை முடிந்தவர்கள் தினமும் காலை, மாலை இருவேளைகளுமோ அல்லது ஒருவேளையோ சொல்லலாம். இவை தேவியின் சக்திபீடங்கள் எனச் சொல்லப் படுகின்றன. இவற்றில் சில இருக்குமிடம் தெரியவில்லை. சிலவற்றின் இன்றைய பெயர்கள் மாறியுள்ளன. விரைவில் ஒரு சின்ன அட்டவணையுடன் தர முயல்கிறேன்.

"இடது துடைமேல் சுவாமி வைத்துக்கொண்டம்மனை
வலது கன்னத்தை முத்தமிட்டுக்கொண்டு
விடைமேல் அழகரும் வளமுடன் தேவிக்கு
விபூதியிட்டு திருஷ்டி கழித்து
அஞ்சாதீர் எனப் பக்தர்க்கபயப் பிரதானஞ்செய்து
அம்பிகையுடன் தாம்பூலந்தரித்து
இந்தபடி ஈசன் சிந்தாமணிக்கிருஹத்தில்
இருந்தார் தேவியுடன் -சோபனம் சோபனம்

தேவிக்கு உயர நாற்பது முழத்திற்கு மேல்
தேசத்தில் ஒப்பில்லா மேல்கட்டிலில்
யமுனாகைஹாரமாகச் சுற்றியிருக்கின்றாள்
இச் ஜகத்தை மோஹிப்பிக்கும் மாயை!
தேவியுடைய ஸெளபாக்கியத்திற் கொப்பில்லை
தேவிதானறிய வேணுமகஸ்தியா
நாவாலும் மனதாலும் எண்ண முடியாது
ராஜேச்வரி மஹிமை-சோபனம், சோபனம்

யமுனாகைஹாரம் என்பது மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தி. குண்டலினி சக்தியை தேவி என்றும் உடலைப் பாம்புபோல் மூன்றரைச் சுற்றாய் வளைத்துக்கொண்டு அங்கே வீற்றிருப்பதாயும் கூறுவார்கள். இந்தச் சக்கர விபரங்களையும், ஸ்ரீவித்யா ஜபத்தின் மஹிமை பற்றியும் வரும் நாட்களில் காணலாம்.

Tuesday, November 23, 2010

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் 23


சிந்தாமணி கிருஹத்தில் வீற்றிருக்கும் அம்பிகையின் ஸ்ரீபுர வர்ணனை தொடர்கிறது.

“மாணிக்க மண்டபத்தில் விஷ்ணுவும் இருக்கின்றார்
மண்டபத்தினிடையில் சிவலோகம்
பிரம்ம தேவருடைய சத்தியலோகமும்
பிரபலமான விஷ்ணுவின் உலகம்
மாயக்கோட்டை அனந்தம் வர்ணமுள்ள கோட்டை
அதற்கிடையில் சூரியனின் விமானம்
பகவான் மார்த்தாண்ட பைரவர் இருப்பு
பக்தரே கேளின்னுஞ் –சோபனம், சோபனம்.

சந்திரபிம்பத்தில் சிங்காரமாகவே
சரியாக இருபத்தஞ்சு கோட்டையும்
சுந்தரமான கோபுரங்களும் தானுண்டு
தொகையொரு கோட்டைக்கு நான்கு வீதம்
அப்புரத் தாமரைப் புஷ்பங்களின் வனம்
ஆறு யோஜனைக்கு நிறைந்திருக்கும்
விப்ரனே அதற்குக் கிழக்காகவே யெங்கும்
சுற்றிக் கதம்பவனம் –சோபனம் சோபனம்

அதற்குக்கிழக்கிலே மும்மூர்த்திகளுக்கும்
அகங்கள் மூன்று பத்ம அடவியிலே
இதற்கு நடுவில் சிந்தாமணி ரத்தினத்தால்
ஈச்வரி லலிதா தேவியின் கிருஹம்
நாலுபுறம் வாசல் உண்டதற்குச்சியில்
ஞானரத்னத்தாலே மகுடம்
வலப்புறத்திலே மந்திரிணியின் கிருஹம்
வாராஹிக்கிடப்புறம் –சோபனம் சோபனம்

அக்கினி முடுக்கிலே அக்கினிக்குண்டம்
அதற்கு மேலே நிற்கும் ஸ்ரீசக்கரத்தேர்
நிர்கின்றது வாயுமுடுக்கில் மந்திரிணிதேர்
நேரே ஈசான்யத்தில் வாராஹிதேர்
இந்த நடுவிலே சக்திகளின் கிருஹம்
சிந்தாமணி கிருஹத்தைச் சுற்றிலும்
சிந்தாமணிக்கிருஹம் சிந்தாமணிச்சுவர்
சுற்றிலும் தீபங்கள் –சோபனம் சோபனம்

சிந்தாமணிக்கிருஹத்தின் நடுமத்தியிலே
சிந்தாமணியாலே ஸ்ரீபீடம்
அஷ்டகோண வடிவாகி விளங்கிய
சக்ரராஜா வென்ற பீடத்தின்மேல்
ஐம்மூன்று தட்டத்த ஸ்ரீபீடத்திற்கு
ஆயிரத்தறுநூறு முழம் வீதி
கைமுழத்திற்கிருபது முழ உயரம் தட்டு
கடலைக்குடித்தவகஸ்தியர் –சோபனம் சோபனம்

தட்டு தோறும் இதுபோல் உயரம் வீதி
தட்டுதோறும் சக்திகள் இருக்காள்
திட்டமாய் ஸ்ரீபீடத்திற்கப்புறத்திலே
சிங்காரப்படி முப்பத்தாறு ஸ்தம்பம்
வட்டமான இந்தபீடத்தில் ஈசர் பிரம்மா
மாலவர் ருத்திரர் கட்டிலின் கால்
கட்டிற்பலகை சிவன் ஸதாசிவன் பாய்
ஈசானன் தலையணை –சோபனம் சோபனம்.

“ஸர்வாருணா நவத்யாங்கீ ஸர்வாபரண-பூஷிதா
சிவ-காமேஸ்வராங்கஸ்தா சிவா ஸ்வாதீன-வல்லபா

ஸுமேரு-மத்ய – ஸ்ருங்கஸ்தா ஸ்ரீமந்நகர-நாயிகா
சிந்தாமணி-க்ருஹாந்தஸ்தா பஞ்ச –ப்ரஹ்மாஸன –ஸ்திதா!”

என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறுவதற்கேற்ப, இங்கே அம்பிகை வீற்றிருக்கும் திருக்கோலத்தைக் காணலாம்.

மஞ்சத்தின் மேல் ஹம்ஸதூளிகா மெத்தையும்
வட்ட இருபுறத்தலையணையும்
மஞ்சத்தின் மேலே கிழக்கைப் பார்த்திருக்கின்றார்
மன்மத கோடி போல் காமேசரும்
நாதர் காமேசர் மடிமேல் கிழக்கைப் பார்த்து
தாய் லலிதா தேவியும் இருக்காள்
பாலா லலிதா தேவிக்கு நித்தியம்
பதினாறு வயதென்றும் –சோபனம், சோபனம்

சர்வ சக்தி வாய்ந்த அம்பிகை கிழக்கில் இந்திராணி சக்தியாகவும், அக்னி மூலையில் அக்னி தேவதையாகவும் தெற்கில் வாராஹியாகவும், நிருருதி மூலையில் கட்கதாரிணியாகவும் காக்கிறாள். மேற்கில் வாருணீயாகவும், வாயுமூலையில் மிருகவாஹினியாக வாயுசக்தியும், வடக்கில் கெளமாரியும், ஈசான்யமூலையில் சூலதாரிணியாகவும் காத்து வருகிறாள். பிரஹ்மாணி மேலேயும், விஷ்ணு சக்தி கீழேயும் ஆக மொத்தம் பத்துத் திசைகளையும் தன் சக்தியால் சாமுண்டா தேவி காத்தருள்கிறாள். தேவியைப் பிரார்த்திக்கையில், ஜய சக்தி நம் முன்னால் இருக்கவேண்டும் என்றும், விஜய சக்தி பின்னாலும், அஜிதா இடப்பக்கமும், அபராஜிதா வலப்பக்கத்தில் இருக்கவேண்டும் எனவும் பிரார்த்திக்கவேண்டும். மேலும் நம் சிகையை உத்யோதினீ தேவியும், சிரசில் உறையும் உமா சிரசையும், லலாடத்தை மாலாதாரிணியான சக்தியும், புருவத்தை யஷஸ்வினியும் காக்கவேண்டும். புருவ மத்தியை த்ரிநேத்ரதாரியான அம்பிகையும், நாசியை யமகண்டாதேவியும், கண்களின் நடுவே சங்கினீ சக்தியும், காதுகளில் துவாரவாஸினீ சக்தியும் ரக்ஷிக்கவேண்டும்.

கன்னத்தில் காளிகா தேவியும், கர்ணமூலத்தில் சங்கரியும், நாசிகைகளில் ஸுகந்தா தேவியும், மேலுதட்டில் சர்ச்சிகா தேவியும், கீழுதட்டில் அம்ருதகலாதேவியும், நாக்கில் ஸரஸ்வதியும் இருந்து காக்கவேண்டும். பற்களில் கெளமாரியும், கழுத்தின் நடுவில் சண்டிகையும் காக்கவேண்டும். உள்நாக்கைச் சித்ரகண்டா தேவியும், தாடையை மஹாமாயையும், மோவாய்க்கட்டையைக் காமாக்ஷியும், வாக்கை ஸர்வமங்களா தேவியும் காக்கவேண்டும். கழுத்தில் பத்ரகாளியும், முதுகெலும்பில் தருத்தரீ தேவியும் கழுத்தின் வெளியில் நீலக்ரீவாதேவியும், கழுத்தெலும்பை நளகூபரீ தேவியும் காக்கவேண்டும்.

Saturday, November 20, 2010

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 22

அமிர்தக் கடலின் மத்தியில் கற்பகவிருஷங்கள் நிறைந்த தோப்பில் உள்ள ரத்னத் தீவில் கடம்பமரங்கள் நிறைந்த உத்தியானவனம் (நந்தவனம்) உள்ள சிந்தாமணி க்ருஹத்தில் பரம மங்கள வடிவில் அமைந்த சிம்மாஸனத்தில் அம்பிகை காமேசருடன் கூடி வீற்றிருக்கிறாள். இது தேவியின் வாசஸ்தலம் என்பார்கள். சிந்தாமணி கிருஹம் என்பார்கள் இதை. இந்தச் சிந்தாமணி கிருஹத்தைத் தான் விஸ்வகர்மா அமைத்துக் கொடுத்தார். அண்டங்களுக்கும், பிரம்மாண்டங்களுக்கும் அப்பால் அமிருத ஸாகரத்தின் மத்தியில் உள்ள ரத்தினத் தீவில் உள்ளது. இருபத்தைந்து வெளிப் பிராகாரங்கள். முதலில் இரும்பு எஃகு, செம்பு, வெள்ளீயம், பித்தளை, பஞ்சலோகம், வெள்ளி, தங்கம், புஷ்பராகம், பத்மராகம்,கோமேதகம், வஜ்ரம், வைடூரியம், இந்திரநீலம், முத்து, மரகதம், பவளம், நவரத்தினம், நானா ரத்தினம் இவற்றால் அமைந்தவை. இது தவிர மனம், புத்தி, அஹங்காரம் ஆகிய மூன்று தத்துவங்களாலும், சூரிய, சந்திர, மன்மதன் ஆகியோரின் தேஜஸ்ஸாலும் அமைந்தவை. இந்த 25 பிராகாரங்களில் எட்டாவது பிராகாரத்தில் கதம்பவனம். அந்தக் கதம்பவனம் மந்திரிணியான சியாமளையின் வாசஸ்தலம்.

பதினைந்தாவது பிராகாரங்களில் அஷ்ட்திக்பாலகர்களும், பதினாறாம் பிராஹாரத்தில் சேநாநாயகியான தண்டினியான வாராஹியும்,வசிப்பார்கள். இவளோடு சேர்ந்து சியாமளைக்கும் இங்கே ஒரு கிருஹம் உண்டு. “மஹா சதுஷ்ஷ்ஷ்டி கோடி-யோகினீ-கண ஸேவிதா”பதினேழாவதில் யோகினிகளும், பதினெட்டில் மஹாவிஷ்ணுவும், பத்தொன்பதில் ஈசானனும், இருபதில் சம்சார சாகரத்தில் இருந்து கரையேற்றும் தாரா தேவியும், இருபத்தொன்றில் வாருணியும், இருபத்திரண்டில் அஹங்காரக் கோட்டையில் குருகுல்லாதேவியும், “குருகுல்லா குலேஸ்வரீ” இருபத்துமூன்றில் சூரியப் பிராகாரத்தில் மார்த்தாண்ட பைரவரும், “மார்த்தாண்ட- பைரவாத்யா மந்த்ரிணீ-ந்யஸ்த-ராஜ்யதா”இருபத்து நான்கில் சந்திரனும், இருபத்தைந்தாவது சிருங்கார வனத்ஹ்டில் மன்மதனும் இருக்கின்றனர். இதற்குள்ளேயே மகாபத்ம வனமும் கற்பக விருக்ஷங்களால் ஆன தோப்பும் உள்ளன. அதன் நடுவில் சிந்தாமணிக் கிருஹம். அக்கினி மூலையில் அம்பாள் தோன்றிய சிதக்கினிக் குண்டமும், கிழக்குத் துவாரத்தின் இருபக்கமும் மந்த்ரிணியும், தண்டினியும் இருக்கும் கிருஹங்களும் உள்ளன. நான்கு துவாரங்களிலும் சதுராம்னாய தேவதைகள் காவல் இருக்க, நவாவரணங்களுடன் கூடிய ஸ்ரீ சக்கரம் காக்ஷி கொடுக்கிறது. ஸ்ரீசக்கரத்தின் நடுவில் சர்வாநந்தமயமான பிந்து பீடத்தில் பஞ்சப் பிரம்மாஸனத்தில் ஸதாசிவனுடைய மடியில் மஹாதிரிபுரஸுந்தரியான லலிதா காமேஸ்வரி வீற்றிருக்கிறாள். "பஞ்ச பேரேதாஸனாஸீனா பஞ்சப்ரஹ்மஸ்வரூபிணீ "

இந்தப் பஞ்சப் பிரம்மாஸனம் என்பது பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன் ஆகியவர்களைக் கால்களாகவும், ஸதாசிவனுடைய மடியைப் பலகையாயும் கொண்ட கட்டில் ஆகும். இதுவே அ+உ+ம= ஓம் என்பதைக் குறிக்கும் அர்த்த, மாத்திரை, பிந்து வடிவான ஓங்கார மஞ்சம். “மஹா காமேச-மஹிஷீ மஹாத்ரிபுரஸுந்தரி” என்கிறது லலிதா சஹஸ்ரநாமம். அபிராமி பட்டர் அம்பிகையின் இந்தக் கோலத்தை வர்ணிக்கையில்

“பரிபுரச் சீறடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்தூர மேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக்குனி பொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்திருந்தவளே! “

என்கிறார். இத்தகைய அம்பிகையை,

நாயகி, நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி, சாமளை சாதி நச்சு
வாய் அகி மாலினி வாராஹி, சூலினி மாதங்கி என்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!”

இது நாம் ஏற்கெனவே பார்த்தோம் அல்லவா? அதே போல் இன்னொரு அந்தாதியிலும் கூறுவார்:

பயிரவி பஞ்சமி, பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி, வாராஹி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திரு நாமங்கள் செப்புவரே!
என்றும் கூறுகிறார்.

சிலம்பணிந்த சிறிய திருவடிகளை உடைய அம்பிகை தன் கைகளில் பாசமும், அங்குசமும் கொண்டு ஐந்து மலர்ப்பாணங்களையும் கையில் ஏந்தி, சிந்தூரம் போன்ற சிவந்த மேனியோடு திரிபுரசுந்தரியாக வீற்றிருக்கிறாள். அவளே பராசக்தியின் ஐந்தாவது சக்தியான அநுகிரஹ சக்தியான பஞ்சமியாகவும், “பஞ்சமீ பஞ்சபூதேசீ” கருநிறக் காளியாகவும், கோபம் கொண்ட சண்டிகாவாகவும்,” மஹேஸ்வரீ, மஹாகாலி மஹாக்ராஸா மஹாசனா!அபர்ணா சண்டிகா சண்டமுண்டாசுர நிஷூதநீ” சூரிய, சந்திர மண்டலங்களில் வீற்றிருக்கும் மண்டலியாகவும் காட்சி அளிக்கிறாள். “பாநு மண்டல மத்யஸ்தா” என லலிதா சஹஸ்ரநாமாவளி கூறும். இனி லலிதாம்பாளின் ஸ்ரீசக்ர வர்ணனையின் சோபனப்பாடலைக் காண்போம். இந்த வர்ணனை மட்டும் நடுவிலிருந்து போடாமல் பாடல் எண் 166ல் இருந்து பாடல் எண் 188 வரையும் முழுவதும் கொடுக்கப் படும்.

தரணியில் ஒன்பதும் சமுத்திரத்தில் ஏழும்
தேவிக்குப் பதிநாறு ஸ்ரீபுரங்கள்
மேருகிரியிலொரு ஸ்ரீபுரமுண்டதை
முன்னாலே உமக்கு நான் சொல்லுகிறேன்
மூவராலும் ஆதிசேஷராலும் சொல்லி
முடியாது அம்மன்புர மஹியை
சாவதானமாகக் கேட்கவேண்டுமிதை
தன்யனே சொல்லுவேன் – சோபனம் சோபனம்

ஒன்றாவது கோட்டை இரும்பாக்குமதற்கு
உயரம் நாநூறு யோஜனைகள் உண்டு
நன்றாக நூறு யோஜனை அகலங்காண்
நான்குபுறத்திலும் வாசலுண்டு
வாசல்கள் தோறும் கோபுரமுண்டு அதற்கு
வரியாக தட்டுக்கள் இருபத்தஞ்சு
யோஜனைக்கு ஒரு தட்டு வீதங்கணக்கு
உச்சி மகுடம் மூன்று – சோபனம் சோபனம்

இந்த வாசல் போலே நாலு வாசலுக்கும்
இது போலே கோபுரத் தட்டுமுண்டு
இந்தக் கோட்டை வாசல் கதவு கோபுரமுதல்
எல்லாம் இரும்புப் பணி இதைப்போல
எந்தக் கோட்டைகளினி சொல்லப் போகின்றோமோ
அந்தக் கோட்டை இதுபோலகஸ்தியா
இந்தக் கோட்டை கழிந்தபுறமுள்ளது
ஏழுயோஜனையுண்டு சோபனம் சோபனம்

ஏழு யோஜனையுள்ள நடு இடைவெளிதன்னில்
எல்லா மரங்கலும் நிறைந்திருக்கும்
தோழர்களே ஏழு யோஜனையின் விஸ்தாரம்
சொல்லப்போகிறோம் கோட்டை இடைநடுவில்
காளியுங்காளரும் சக்தியுடனே
கால சக்ராசனத்தில் இருந்து
லலிதையுடைய நாமஞ்ஜபித்து ஒன்றாங் கோட்டை
ரக்ஷிக்கிறாள் என்றும் சோபனம் சோபனம்

வெண்கலக் கோட்டையில் வஸந்தருது காவல்
வேலியும்கற்பக விருக்ஷமாகும்
தங்கச் செம்புக் கோட்டையில் வேலி ஹரிசந்தனம்
சுசியான கிரீஷ்மருது காவல்
ஈயக் கோட்டையின் வேலி சந்தன விருக்ஷங்கள்
எங்குஞ் சுற்றிக் காவல் வர்ஷருது
முன்னாலிரும்புக்கோட்டையின் வேலி மந்தாரை
வெளுத்த சரத்ருது காவல் –சோபனம் சோபனம்

பஞ்சலோகக் கோட்டைக்குப் பாரிஜாதம் வேலி
ஹேமந்தருது காவல் காத தூரம்
பஞ்சப்பொன்கோட்டைக்கும் மந்திரிணி முதலான
சக்திகள் கிருஹம் சிசரருது காவல்
பிக்ஷூரகத்து சித்தர்களும் முத்திப்
பெண்குகளுங்கூடி இருக்கின்றார்கள்
பிக்ஷூரம் கழிந்தப்புரஞ்சாரணர்
பத்மராகக் கிருஹம் சோபனம் சோபனம்

அழகிய கந்தர்வாள் வைரக் கிரஹந்தன்னில்
அதற்குப்பின் யோகிகள் வஜ்ஜிரக்கிருஹம்
புதுநாகரத்னமும் வைடூர்யத்தாலும்
பின்னிந்திரக் கல்லாலுமுள்ள கிருஹம்
முத்துக்கள் சூழும்மரகதத்தால் கிருஹம்
மின்போல் வராகிக்கும் நாலு கிருஹம்
சுத்தமான கிருஹம் பிரம்மாவுடையது
செம்பவழத்தாலே – சோபனம் சோபனம்

Tuesday, November 16, 2010

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் 21!

"பாஷா-ரூபா ப்ருஹத்ஸேநா பாவாபாவ-விவர்ஜிதா
ஸுகாராத்யா சுபகரீ சோனபா-ஸுலபாகதி:

என்று கூறும் லலிதா சஹஸ்ரநாமம். மொழி ஸ்வரூபமாய் இருப்பவள் அம்பிகை. 51 மாத்ருகா அக்ஷரங்களே அம்பிகையின் வடிவு என்பார்கள். ஸ்ரீசக்தி பீடங்களும் அந்த அந்த அக்ஷரங்களுக்கு ஏற்ப 51 இருக்கின்றன. சொல்லையும் பொருளையும் போல் பிரிக்கமுடியாமல் சிவசக்தி ஐக்கியம் இருப்பதை ஏற்கெனவே பார்த்தோம். பட்டரோ, மன்மதனின் தவத்தைக் கலைத்த அம்பிகையை மொழிக்கும் நினைவுக்கும் எட்டாதவள் என்கின்றார்.

“மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி என்றன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் விழியால் மதனை
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
பழிக்கும்படி ஒரு பாகம் கொண்டாளும் பராபரையே!”

அதாவது சொல்லுக்கும், எண்ணத்துக்கும் எட்டாத அம்பிகையின் திருவுருவானது இங்கே பக்தர்களின் தீவிர வழிபாட்டால் அவர்களுடைய கண்களுக்கும் வழிபாடுகளுக்கும் வெளிப்பட்டு நிற்கின்றது.

“சிவப்ரியா சிவபார சிஷ்டேஷ்டா சிஷ்ட-பூஜிதா
அப்ரமேயா ஸ்வப்ரகாசா மனோவாசாமகோசரா”

என்னும் சஹஸ்ரநாமத்தின் துதியின் படி மனதினாலேயே அம்பிகையைத் துதித்து வழிபடுவர்களுக்கு அவள் அருள் புரிவாள். நம் பேரின்பவாழ்வுக்குப் பற்றுக் கோடு அம்பிகை. அவளைக் குறித்த எண்ணங்களை மனதில் விரும்பித் தியானிக்கும்படியோ, வாயினால் இவ்வாறு இருக்கும் என்றோ உரைக்க முடியாது. “பாநுமண்டல-மத்யஸ்தா பைரவீ பகமாலினீ” என சஹஸ்ரநாமத்தில் கூறுவதற்கேற்ப சூரியமண்டலத்தில் நட்டநடுவே கோடி சூரியப் பிரகாசத்தோடு இருக்கிறாள் அம்பிகை.

வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம்
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கற் பருமணி ஆகமும் பாகமும் பொற்
செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே!”

யோகியான ஈசன் மனதில் இடம் பிடித்த அம்பிகை அதன் மூலம் ஒரு குழந்தையையும் பெற்றதையும் பட்டர் இவ்வாறு கூறுகிறார்.

ககனமும் வானும் புவனமும் காணவிற்காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும்
செம்முகனும் முந்நான்கிருமூன்றெனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயதன்றோ வல்லி நீ செய்த வல்லபமே!”

என்கிறார் பட்டர். வல்லபம் என்பது இங்கே வலிமை பொருந்திய, அறிவாற்றல் பொருந்திய என்ற பொருளில் வரும். ஞாநமே குழந்தையாகப் பிறந்த ஷண்முகனை இங்கே வல்லபம் என்கிறார் பட்டர்.

சிவசக்தியின் ஐக்கியத்திலே பிறந்த இந்தக் குழந்தை மகா ஒளி பொருந்திய குழந்தை, வல்லமை பொருந்திய குமாரன். எவராலும் வெற்றி கொள்ளமுடியாத அதிசூரன். இவன் வெறும் சக்தி மட்டும் அல்ல, அறிவுச் சக்தி, ஞாந சக்தி, அருள் சக்தி. தகப்பனுக்கே உபதேசம் பண்ணிய தகப்பன் சாமி. குருநாதன். வஸ்துவாகிய ஈசனுக்குள்ளேயும், அதன் சக்தியாகிய அம்பிகைக்குள்ளேயும் ஒன்றாக இருந்த அன்பானது இருவராகப் பிரிந்து மீண்டும் ஒன்றாய்க்கலந்து அதிலிருந்து தோன்றிய அற்புத குமாரன் ஷண்முகன். ஈசனால் தாரகனையும், சூரனையும் வதைக்க முடியாதா என்ன?? என்றாலும் அவர் தன்னைவிடத் தன் குமாரன் அதிபுத்திசாலி, மஹாவீரன் என்று காட்டாமல் காட்டினார். மனித இயல்பும் அதுதானே?? சத் எனப்படும் ஈசனும், சித் எனப்படும் அம்பிகையும் காட்டி உணர்த்திய ஆநந்தம், சச்சிதாநந்தப் பரம்பொருள் ஷண்முகன். இவரையே நடுவில் வைத்து ஒரு பக்கம் ஈசனும், மற்றொரு பக்கம் அம்பிகையும் இருக்கும் கோலத்தில் நாம் எல்லாச் சிவாலயங்களிலும் உற்சவ மூர்த்திகளாய்ப் பிரதிஷ்டை செய்திருக்கிறோம். இவரை சோமாஸ்கந்தர் என அழைக்கிறோம். ஸஹ+உமா+ஸ்கந்தர் என்பதே சோமாஸ்கந்தர் என்று ஆகிவிட்டது. லலிதா சஹஸ்ரநாமம், அம்பிகையை, “குமார கணநாதாம்பா” எனப் போற்றும். அந்தக் குமாரன் பிறந்து என்ன நடக்கிறது?? அனைவருக்கும் நிம்மதி பிறக்கிறது. தேவசேநாபதியான அவன் சூரனை வதைக்கிறான். வதைக்கிறான் என்று சொல்வதை விடவும், அவனை மன்னித்து ஆட்கொள்ளுகிறான்.

குமாரனின் ராஜ்யத்தில் பழிக்குப் பழி, ரத்தத்துக்கு ரத்தம் என்றெல்லாம் இல்லை. மன்னிப்பு மட்டுமே. குமரனை வணங்குபவர்களுக்கு அழியாத ஆநந்தத்தைத் தருவான் என்பதை நிரூபிக்கும் வண்ணம் மயிலாகவும், கோழியாகவும் மாற்றிவிடுகிறான் சூரனை. ஞானகங்கையாம் சரவணப்பொய்கையில் மூழ்கிய சூரன் அதில் தானும் கலந்து பிரணவத்தை நாதமாகவும், விந்து வடிவில் தோகை விரித்து ஆடிப் பிரணவ ஸ்வரூபத்தைக் காட்டியும் முக்தியைப் பெறுகிறான். இந்த ஓங்கார நாதமும், விந்துவும் சேர்ந்து வரும் கலையே சக்திவேல். கொக்கு அறுத்த கோ என்றும் கூவுகிறான் சூரன். கோழி கொக்கரக்கோ எனக் கூவும் அல்லவா?? கொக்கு என்னும் மாயையாகிய மாமரமாய் வந்த சூரனை அறுத்த கோமகன் ஷண்முகன். அதையே கொக்கரக்கோ எனக்கூவிக் கோழி தன் மகிழ்ச்சியைத் தெரியப் படுத்துகிறது. மயிலோ எனில் பிரணவ ஸ்வரூபத்திலேயே தோகையை விரித்துக்கொண்டு ஆநந்தம் பொங்க ஆடுகிறது. மழைக்காலத்து மயிலின் ஆட்டம் இருளை நினைவு படுத்துகிறது எனில் விடிகாலை கூவும் கோழியின் குரல் உதயத்தை நினைவூட்டும். இருளிலிருந்து நம்மை வெளிச்சத்துக்கு இட்டுச் செல்லும் குரு ஷண்முகன். இனி ஸ்ரீலலிதையின் சோபனத்தில் ஷண்முகன் பிறப்பையும் அசுரர்கள் வதம் பற்றியும் பார்க்கலாமா??

அம்மன் அனுக்ஞையால் மதனன் பூச்சரத்தாலே
அடித்தான் பார்வதி தேவி பரமேசரை
வந்து விவாஹஞ் செய்து ரமித்தார் பரமசிவன்
குமாரரும் உண்டானார் அஸுராளை வதைத்த
கோலவேலருக்குச் சோபனம் சோபனம்
தேவசேனாபதி தெய்வயானை மணந்து
ஸ்ரீபுரந்தன்னில் வந்தார்- சோபனம் சோபனம்.

ஸ்ரீபுரமென்றதைக் கேட்டது மகஸ்தியர்
தவமுனி ஹயக்ரீவரைப் பார்த்து
ஸ்ரீபுரமென்பதை விஸ்தாரமாகவே
சொல்லவேண்டும் தயவாக வென்றார்
அன்புடன் வார்த்தையைக் கேட்டு ஹயக்ரீவர்
அகஸ்திய முனிவரைப் பார்த்துரைப்பார்
இன்பங்களுண்டாக தேவியின் நகரத்தை
இனிச் சொல்வோம் கேளென்றார்- சோபனம் சோபனம்

பண்டாஸுரனை வதைத்த ஸந்தோஷத்தால்
பரமேச்வரிக்கும் காமேசருக்கும்
தேவசேநாபதியும் தேவர்களும் கூடி
ஸ்ரீ லலிதாம்பாள் கொலுவிருக்க
ஈச்வரியாளுக்குச் சிந்தாமணிக் கிருஹம்
விச்வகர்மாவை அமைக்கச் சொன்னார்
மகிழ்ந்து விச்வகர்மா இவர்கள் சொன்னபடிக்குப்
புகழ் பெறவே செய்தார் –சோபனம் சோபனம்.

Monday, November 15, 2010

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் 20!


“ஹர –நேத்ராக்னி-ஸந்தக்த-காம-ஸஞ்ஜீவநெளஷதி” என்று கூறுகிறது லலிதா சஹஸ்ரநாமம். ஹரனாகிய ஈசனின் நெற்றிக்கண்ணிலிருந்து எழுந்த அக்னியால் எரிக்கப் பட்ட காமனைப் பிழைக்க வைத்த சஞ்ஜீவனி மருந்தைப் போன்றவள் அம்பிகை எனப் பொருளில் வரும் இந்த வரிகளில் அம்பிகையானவள் காமனுக்கு மட்டுமன்றி நமக்கும் ஒளஷதமாய்ச் செயல்படுவதை அறிந்து கொள்கிறோம். பராசக்தியானவள் ஈசனின் உடலில் பாதி சரீரம் எடுத்துக்கொண்டிருந்தாலும் உலகனைத்திற்கும் மருந்தாய் விளங்குகிறாள். விஷத்தை உண்டும் அவள் அருளால் ஈசன் பிழைத்து நீலகண்டனாக ஆகிய விந்தையையும் அறிவோம் அல்லவா?? “நஞ்சு அமுதாக்கிய அம்பிகை” என்கிறார் பட்டர் இந்தத் திருவிளையாடலை.

“பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மநோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே!”

இங்கே முப்புரை என்பதற்குப் பல பொருட்களை அறிந்து கொள்கிறோம். புரை என்றால் மூத்தவள் என்ற பொருளுக்கிணங்க, மும்மூர்த்திகளுக்கும் மூத்தவள், மூன்று நாடிகளான பிங்கலை, இடைகலை, சுழுமுனை மூன்றிலும் இருப்பவள், மனம், புத்தி, சித்தம் ஆகியவற்றில் உறைபவள். “மஹாபுத்திர்-மஹாஸித்திர்-மஹாயோகீஸ்வரேஸ்வரீ” என்று கூறும் லலிதா சஹஸ்ரநாமம். ஆகவே அதனாலும் இவள் முப்புரை அல்லது திரிபுரை. மேலும் மூன்று தேவர்கள், மூன்று மறைகள், மூன்று அக்னி, மூன்று சக்தி, மூன்று ஸ்வரங்கள், மூன்று உலகங்கள், மூன்று நகரங்கள் என அனைத்திலும் மூன்று பிரிவுகளைக் கொண்டவளாய் இருப்பதையும் முன்னரே பார்த்தோம். அதேபோல் சந்திரகண்டம், சூர்யகண்டம், அக்னிகண்டம் என்னும் மூன்று பிரிவையுடைய சக்கரத்துக்கும் தலைவியாக இருக்கிறாள். நம் மனத்தை ஞாந நிலைக்கு எழுப்பும் மநோன்மணியாக இருக்கிறாள்.

அத்தகைய சக்தி வாய்ந்த அம்பிகை இப்போது உலகு உய்யும் பொருட்டு காமனைப் பிழைக்க வைக்கிறாள். எதற்கு?? யோகத்தில் ஆழ்ந்திருக்கிறான் ஈசன். காமனை எரித்துவிட்டு காமதகனராய்ச் சர்வ சக்தியும் ஒடுங்கிய வண்ணம் காட்சி அளிக்கிறான். அவன் கண்களை விழித்து அம்பிகையை நோக்கினால் அன்றோ, குமாரன் பிறப்பான்?? குமாரன் பிறந்தால் அன்றோ மிச்சம் இருக்கும் அசுரக் குலமும் அழியும்?? குமாரன் என்றால் கந்தன் ஒருவனே. அவனை மட்டுமே குறிக்கும். வேறு யாரையும் குறிக்காது. அத்தகைய கந்தனைப் பிறப்பிக்கும் பொருட்டு அம்பிகை மன்மதனை எழுப்புகிறாள். வியப்பைத் தரும் திருவுருவை உடைய அம்பிகை மன்மதனை எழுப்பி அதன் மூலம் சிவனது புத்தியை வெற்றி கொண்டதை இவ்வாறு கூறுகிறார்.

“அதிசயமான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி
பதிசயமான தபசயமாக முன் பார்த்தவர் தம்
மதிசயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே!”

தாமரை மலர்களால் துதிக்கப் பெறும் திவ்ய செளந்தரியமான அழகை உடைய அம்பிகை மன்மதன் மற்றவர்களைத் தன் மலர்க்கணைகளுக்கு ஆளாக்கி அதன் மூலம் பெற்ற வெற்றியை எல்லாம் தோல்வி அடையும்படி தன் நெற்றிக்கண்ணால் அவனை எரித்த ஈசனின் மனமும் மாறும்படியாக அவன் மனமும் குழையும்படியாக மீண்டும் மன்மதனை உயிர்ப்பித்ததோடு அல்லாமல், ஈசனின் மனத்தையும், புத்தியையும் ஆட்கொண்டு, உடலிலும் இடம் பெறுகிறாள். மன்மதனை எழுப்பச் சொல்லி ஸ்ரீலலிதையிடம் தேவர்கள் விண்ணப்பிக்கின்றனர்.

“இந்த ரதியுடைய கணவன் மன்மதனை
எழுப்பித் தந்து எங்கள் மனங்குளிர
எவ்விதமாவது தயவு செய்து ஈசரும்
ஈச்வரியைக் கூடி சுப்ரமண்யர்
பிறந்து தாருகன் முதல் அஸுரர்களை வதைத்ததால்
பிறகு சங்கடமில்லை எங்களுக்கு
கூடியே தேவர்கள் எல்லோருங்கைகளைக்
கும்பிட்டு நின்றார்கள் –சோபனம், சோபனம்.”

கண்டவுடனே ரதிதேவியை அம்மன்
காமேசர் முகத்தை ஆதரவாய்ப் பார்த்தாள்
உண்டாய்விட்டான் மதன் வஜ்ஜிரதேஹத்துடன்
உடனே தாயாரை நமஸ்கரித்தான்
அனுகிரஹித்தாள் தேவி மன்மதனுக்கு
ஆருமினியவனை ஜயிக்காமல்
வானவரும் இனி ஜயிக்கமாட்டாரென்று
வரமுங்கொடுத்துச் சொல்லுவாள்- சோபனம் சோபனம்

குழந்தாய் உனக்குப் பயமில்லை இனிமேல்
கூட்டிவை பார்வதியுடன் ஈசரை
தழுதழுத்துன்னுட பாணத்தால் சங்கரர்
தானே விவாஹஞ்செய்வார் பார்வதியை
ஒருவர் கண்ணுக்கும் இனி அகப்பட மாட்டாய்
உன்னைத் தூஷித்தபேர் அண்ணா கள்ளர்
சற்றும் பயமில்லை நாமிருக்கின்றோமென்று
சங்கரி யனுப்பினாள் –சோபனம் சோபனம்.

மன்மதனுக்கு வரம் கொடுத்து அவனை அனுப்பி வைக்கிறாள் அம்பிகை. ஈசனும், ஈச்வரியும் கூடி ஸ்கந்தன் அவதாரம் ஏற்படுகிறது.

ஷண்முக நாயகன் தோன்றிடுவான் – சிவ
சத்குரு நாதன் தோன்றிடுவான்
கண்களால் கண்டு போற்றிடுவோம் –கொடும்
காலத்தைக் காலால் வென்றிடுவோம்

"நாதபிந்து கலாதீ நமோ நம!" என்று கூறுவார் அருணகிரிநாதர். நாதமும் பிந்துவும் சேர்ந்ததால் தோன்றிய கலையே ஷண்முகன். சிவசக்தி ஐக்கியத்தின் ஸ்வரூபமே ஷண்முகன். ஷண்முகனின் மந்திரமாகிய "சரவணபவ" என்னும் ஆறெழுத்தும் நம் உடலின் ஆறு சக்கரங்களையும் குறிக்கும். உயிர்களுக்குப்பற்றுக்கோடாக விளங்குபவன் கந்தன். அனைத்துக்கடவுளரின் ஆற்றலும், சக்தியும் திரண்டு வந்ததால் கந்தன் என்ற பெயர் பெற்றான் என்றாலும் நம் ஆன்மாவைக் கட்டிவைக்கும் சக்தியான கந்துவும் அவனிடமே இருப்பதாலும் கந்தன் என்று கூறலாம்.

Saturday, November 13, 2010

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் 19


பக்திமார்க்கத்தில் இருந்து கொஞ்சம் உயர்ந்தது யோக மார்க்கம் இல்லையா?? அந்த யோக மார்க்கத்தில் தான் இந்த ஸ்ரீவித்யா வழிபாடுகள் வருகின்றன. நம்முடைய பிராணனின் மூலம் எதுவெனக் கண்டு பிடித்து அந்த மூலத்தோடு நாம் ஒன்று சேர்கிற வழியே நம்முடைய பிறப்பின் தாத்பரியம். எனினும் இது நமக்குப் புரியப் பல ஜன்மங்கள் ஆகின்றன. நம் பூர்வ ஜன்மக் கர்ம வினையைப் பொறுத்து இந்த ஜன்மத்தில் ஆன்மீகத்தில் நாம் முன்னேறுவது நடக்கும். நாம் நம்முடைய உறங்கும் பிராணசக்தியை மூலாதாரத்தில் இருப்பதைத் தட்டி எழுப்பவேண்டும். அதை மேலே மேலே கொண்டு வந்து சஹஸ்ராரத்தை அடையவேண்டும். சச்சிதாநந்தத்தில் மூழ்கவேண்டும். அதற்கான யோக சாதனைகளில் இந்த வித்யா வழிபாட்டு முறையும் ஒன்றாக இருந்து வருகிறது. சஹஸ்ராரத்தை அடைந்துவிட்டால் யோகத்தின் நிறைவு. யோகத்தின் நிறைவில் எந்தவிதமான அசைவுகளும் இல்லாமல் நம்மை மறந்த நிலையில் இருப்போம். நம்மிடம் இருக்கும் ஆணவம், கன்மம், மாயை போன்றவை நீங்க வேண்டும். ஆநந்தம் பிறக்கவேண்டும்.

பரப்பிரும்ம தத்துவத்தை ராதாகிருஷ்ணனாய்ப் பார்த்தால் அதுவும் ஆநந்தம், ஆநந்தம், ஆநந்தமே தான். ஆநந்தம் வந்தால் சிரிப்போம். ராதையின் செளந்தரியமும், கிருஷ்ணனின் ப்ரேமையும் ஆநந்தம். அதற்கு உயிரும், உணர்வும் வேண்டுமல்லவா?? அந்த உயிரும், உணர்வும், அறிவுமாக இருப்பவளே அம்பிகை. லலிதா சஹஸ்ரநாமம் அம்பிகையை, “ சித்கலாநந்த-கலிகா ப்ரேமரூபா ப்ரியங்கரீ” என்று கூறும். கல்பகோடி காலமாய், இடைவிடாமல் தன் தொழிலை நடத்திக்கொண்டிருக்கிறாள் அம்பிகை. அவளை வழிபடுபவர்களுக்கு இனிப் பிறவி இல்லை. இதை பட்டர் எப்படிச் சொல்கிறார் என்றால்,

உடைத்தனை வஞ்சப் பிறவியை உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை நெஞ்சத்தழுக்கை எல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே!”

என்கிறார். நம் கர்மத்தால் பிறவி எடுக்கிறோம். அந்தப் பிறவியில் நாம் நம் முற்பிறவிக் கர்மமும், பாவமும் போகும்படியாக அம்பிகையை வணங்கினால், அவள் தாமரைத் திருவடிகளில் சரண் அடைந்தால், அவள் கருணை வெள்ளம் பொங்கி வந்து நம் ஆணவமாகிய அழுக்கை நீக்கும். மாயையிலிருந்து விடுபடுவோம். அவளே முக்திரூபிணீ. என்றாலும் அம்பிகை தன் பர்த்தாவிற்கே முதல் பெருமையை அளிக்கிறாள். காமேசரை வேண்டியே அஸ்திரம் பெறுகிறாள். இங்கே அவள் சக்தியாக இருந்தாலும் தன்னை வெளிப்படுத்தாமல் ஈசனிடம் ஒன்றிப் போகிறாள். உள்ளே இருந்து இயக்குவது அவளாகவே இருந்தாலும், தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல் இருக்கிறாள். இதுவே சிவசக்தி ஐக்கியம்.

நிலவிலிருந்து ஒளியையும், பூவிலிருந்து சுகந்தத்தையும், தீபத்திலிருந்து பிரகாசத்தையும் எப்படிப் பிரிக்கவே முடியாதோ, அப்படி இவர்களையும் பிரிக்கவே முடியாது. சொல்லும், பொருளும் இவர்களே. இதையே அபிராமி பட்டர்,

“சொல்லும்பொருளும் என நடமாடும் துனைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் வர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே!”

என்கிறார். சொல்லில் இருந்து பொருளை எவ்வாறு தனியாய்ப் பிரிக்கவே முடியாதோ அவ்வாறே அம்மையப்பனையும் பிரிக்கவே முடியாது. “பாஷா-ரூபா ப்ருஹத்ஸேநா பாவாபாவ-விவர்ஜிதா” என்று லலிதா சஹஸ்ரநாமம் இதைக் கூறுகிறது. காமேசரிடம் அஸ்திரம் பெற்ற அம்பிகை பண்டாஸுரனை வதைக்கிறாள்.

“கண்டகன் பண்டாஸுரனை வதைக்கவென்றே
காமேசர் அஸ்திரங்கொடுத்தார்
வாங்கிக்கொண்டு அம்மன் காமேசர் அஸ்திரத்தை
மண்டலாகாரமாய் வில் வளைத்துக்
கோடி சூரியன் போன்ற காமேசர் பாணத்தைக்
கோதண்டத்தில் வைத்து மந்திரித்து
வேடிக்கையாகவே காது பரியந்தம்
விசையாய் இழுத்துவிட்டாள்-சோபனம், சோபனம்.

தேவி பிரயோகித்த அஸ்திரந்தானப்போ
தேவேந்திரன் வஜ்ஜிராயுதம் தடிபோல
தாவிப் பண்டாஸுரன் மார்பிலே பாய்ந்தது
தரணியிலே விழுந்து உயிரைவிட்டான்
அஸ்திரமுடையாளின் அக்கினி ஜ்வாலையாலே
அவனுடபுரங்களும் வெண்ணீராச்சு
அஸ்தமனத்தில் பண்டாஸுரனை வதைத்து
அம்மன் ஜயங்கொண்டாள்-சோபனம் சோபனம்

புஷ்பம் பன்னீர்களைச் சொரியவே தேவர்கள்
புகழ்ந்துஸகிகள் வெண்சாமரம் வீச
அப்பொழுது தேவி சக்திசேனையுடன்
ஆலயத்தை அம்மன் வந்தடைந்தாள்
ஆயுதங்களால் அடிபட்ட சக்திகள்
காயத்தை அம்ருதக் கண்ணால் போக்கினாள்
நோய்கள் போனதுபோல ஸுகம் பெற்றார் பூமியும்
புனிதமாய் செழித்தது –சோபனம் சோபனம்

ஆயிற்று. தேவியின் அவதாரக் காரியம் நிறைவேறியாச்சு . அடுத்துத் தேவர்கள் கேட்டது மன்மதனை எழுப்பவேண்டுமென்று. ஆம், அவன் சாம்பலின் மூலமே பண்டாஸுரன் வந்தானல்லவா? எரிந்த மன்மதனை நினைத்து நினைத்து அழுது வேதனைப்படும் ரதியின் மனச் சமாதானத்துக்கு மட்டுமா?? இல்லை, இல்லை, மன்மதன் இல்லை எனில் உலகில் சிருஷ்டி காரியம் எப்படி நடக்கும்?? என்றால் ஏன் ஈசன் எரித்தார்?? யோகத்தில் இருந்த ஈசன் மீண்டும் சிருஷ்டி புதிதாய்த் தொடங்க வேண்டியே அழித்தார். இப்போது அம்பிகை அருளால் மீண்டும் அனைத்தும் ஆரம்பிக்கவேண்டும் அல்லவா? மன்மதனை எழுப்பித் தரச்சொல்லிக் கேட்டார்கள் மும்மூர்த்திகள் முதல் முப்பத்து முக்கோடி தேவர்கள் அனைவரும். மேலும் சூரனையும் அழிக்கவேண்டுமே.

கந்த சஷ்டிக்கு எழுத நினைச்ச பதிவு. பல பிரச்னைகளால் தாமதமாய் வருது என்றாலும் மன்மதன் உயிர்பெற்று எழுந்ததையும் ஷண்முகன் பிறப்பையும், அதன் தத்துவத்தையும் நாளை பார்ப்போமா???

Friday, November 12, 2010

சோதனை பண்ண வந்தாச்சு!

பஜாஜ் சிஎப் எல் பல்ப் விளம்பரம் பார்த்தீங்களா?? அந்த விளக்கு வெளிச்சத்தில் ஒரு பையர் படிச்சிட்டு இருப்பார். ஜன்னல் வழியே வெளிச்சம் வந்துட்டு இருக்கும். தூரத்தில் எங்கேயோ இருக்கும் சமுத்திரத்தில் கப்பல் ஒண்ணு திசைதெரியாம வந்துட்டு இருக்கும். அது இந்த விளக்கு வெளிச்சத்தைப் பார்த்துட்டு, கரையைக் கண்டு பிடிக்குதாம்! ஆஹா, என்ன வளமான கற்பனை???

அடுத்து சன்ஃபீஸ்ட் பிஸ்கட் விளம்பரம். உறவுகளைப் பத்திச் சொல்லாமல் சொல்லும் விளம்பரம். உண்மையிலேயே மனசைக் கவர்ந்தது. விளக்கம் அப்புறமா. இது சோதனைப்பதிவு!

ஹிஹிஹி சோதனை எனக்குத் தான், உங்களுக்கு இல்லை.

Tuesday, November 09, 2010

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் 18!


இச்சாசக்தி-க்ஞாநசக்தி-க்ரியாசக்தி-ஸ்வரூபிணி
ஸர்வாதாரா ஸுப்ரதிஷ்டா ஸதஸத்-ரூப-தாரிணி என்று சொல்கிறது லலிதா சஹஸ்ரநாமம். அம்பிகை அனைத்து சக்திகளுமாய் இருக்கிறாள். அனைத்துக்க்ம் காரணியாய் இருக்கிறாள். அவ்வளவு ஏன் நமக்குப் பாலூட்டித் தாலாட்டிப் பாடி, சோறும் ஊட்டுவது அவளே. இதையே செளந்தர்ய லஹரியில் அம்பிகையை வர்ணிக்கும் ஆசாரியர் அவள் சூரியனையும், சந்திரனையும் தன்னிரண்டு ஸ்தனங்களாய்க் கொண்டு இவ்வுலகத்து மாந்தர்களான நமக்கும், மற்றும் சகல ஜீவராசிகளுக்கும் அமுது ஊட்டுவதாய்க் கூறுவார். பால் ஊட்டும் தாயாக அம்பிகையைக் கூறுகிறார். என்ன இது?? சூரியனும், சந்திரனும், அம்பாளின் இரண்டு மார்பகங்களா? ஒரே பேத்தல்! அது வழியாப் பாலூட்டறதாமே என்பவர்கள், நன்கு கூர்ந்து கவனிக்கவும். அம்பிகைதான் நமக்கு அன்னை. ஒரு குழந்தைக்குத் தாய் எவ்வாறு மனம் கனிந்து உவகையுடன் பாலூட்டுவாளோ அவ்வாறே அன்னபூரணியாம் அம்பிகையின் அருளாலேயே நாம் உண்கிறோம். தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதை வங்கத்து மேதை ஜகதீஸ் சந்திரபோஸ் சொல்லி இருக்கார் இல்லையா?? நம் வேதமோ இதை அவருக்கும் முன்னரே கூறி உள்ளது.

சூரிய சந்திரர்களின் கிரணங்களால் தான் தாவரங்கள் உயிர் பெறுகின்றன அல்லவோ?? சூரிய வெளிச்சம் படவில்லை என்றால் ஒரு விதை முளைக்குமா? தாவரங்கள் தமக்கு வேண்டிய உணவை சூரியனிடமிருந்து நேரே பெறுகின்றன அல்லவா?? அதுதான் தாவரங்களின் சத்தாய் மாறி நாம் உண்ணும்போது நம் உடலில் கலந்து நமக்கு சக்தியைக் கொடுக்கிறது. இவ்வுலகிலே சூர்ய சக்தி இல்லை எனில் எதுவுமே நமக்குக் கிடைக்காதே? சூரிய சக்தியை நாமும் நேரே சூரியனிடமிருந்து பெறுவதற்காகவே அதிகாலையில் சூரிய நமஸ்காரமும், அதனோடு சேர்ந்த அனுஷ்டானங்களும் வைத்திருக்கிறார்கள். அது போல் நிலவொளியிலேயே மூலிகைகள் வளரும். மூலிகைகளின் மகத்துவம் நாம் அனைவரும் அறிவோம். மருத்துவ சக்தி உள்ள இந்த ஒளஷதங்கள் சந்திர கிரணங்களின் சக்தியைப் பெற்றே வளர்கின்றன. மேலும் சந்திரனின் பூரண வளர்ச்சியைப் பொறுத்தே சமுத்திரம் பொங்குவதும் அடங்குவதுமாய் உள்ளது. சந்திரனின் இழுப்பின் சக்தியாலேயே பருவக்காற்று, பருவ மழை அனைத்தும் ஏற்படுகின்றன. சூரிய கிரணங்களால் ஆவியாகும் சமுத்திரத்து நீரானது, சமுத்திரத்து நீரை ஆவியாக்கும் அலைகளில் சந்திரன் உண்டாக்கும் மாற்றங்களாலேயே மழையாக மாறுகின்றன. ஆகவே இவ்வுலகத்து இயக்கத்துக்கே அம்பிகை காரணமாகிறாள். நம்முடைய புத்தி ஒளிவிட்டுப் பிரகாசிப்பதற்குச் சூரியன் உதவினால் மனத்தின் எண்ணங்களுக்குக் காரணியாகச் சந்திரன் விளங்குகிறான்.
இந்த அன்னபூரணி அன்ன பிக்ஷை வயிற்றுக்கு மட்டும் போடுவதில்லை. நம் மனதுக்கும் ஞாந பிக்ஷை போடுகிறாள். இவள் நம் இச்சைகளை மட்டுமல்லாமல், நம் உடலின் சக்தியாகவும், ஞாநத்தைத் தரும் சக்தியாகவும் செயல்படுகிறாள்.

இவ்விதம் அம்பிகை அனைத்துமாய் இருப்பதை பட்டர் குறிக்கையில்,
“நகையே இஃதிந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு
முகையே முகிழ்முலை மானே முதுகண் முடிவில் அந்த
வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது நாம்
மிகையே இவள் தன் தகைமையை நாடி விரும்புவதே.” என்கிறார். இவ்வுலகங்கள் அனைத்துமே அம்பிகை ஈன்றெடுத்தாள் என்கிறார் பட்டர். மேலும் ஆதியும் அந்தமும் இல்லா, முதலும் முடிவும் இல்லா, பிறப்பும் இறப்பும் இல்லா இவளைப் போய் மலைமகள் என்று கூறுவது வம்பு என்கிறார். அம்பிகையின் சரித்திரத்தை ஆராயப் புகுந்தால் முன்னும், முடிவும், பின்னும், என்றும் எப்போதும் எதுவும் புலனாகாது. நம் அளவுக்கு மிஞ்சிய செயலாகும் அது. லலிதா சஹஸ்ரநாமத்தில்,
அநகா அத்புத சாரித்ரா” என எண்ணற்றக் கோடிக்கணக்கான அற்புதமான சரித்திரங்களை உடையவள் எனப் போற்றுகிறது. இத்தனை அற்புதச் சரித்திரம் படைத்த அம்பிகை தன் கைவிரல்களில் இருந்து கண்ணனைத் தோற்றுவிப்பது பெரிய விஷயமா?? அதைப் பார்ப்போமா?
“சிசுபாலன் கம்ஸன் சகடன் பூதன் தன்னை
துஷ்டன் பண்டாஸுரன் அனுப்பி வைத்தான்
விச்வேச்வரியும் இடக்கைப் பவித்திர
விரலை அசைத்தாள் அதிலிருந்து
சங்கர்ஷணன் ப்ரத்யும்னன் அநிருத்தனாகவே
ஸ்வாமி வந்தவர்களை ஸம்ஹரித்தார்
சங்கர்ஷணன் ஸ்ரீகிருஷ்ணன், அநிருத்தன் ப்ரத்யும்னன்
ஸ்வாமி நாலுபேருக்கும்-சோபனம் சோபனம்.

அடுத்துக் கல்கி அவதாரம்.
கலியுகாஸ்திரத்திலே கக்கும் மிலேச்சரைக்
கண்டகன் பண்டன் அனுப்பி வைத்தான்
கல்யாணியும் இடக்கைச் சுண்டு விரலைக்
காட்டி அசைத்தாள் அதிலிருந்து
அட்டஹாஸத்துடன் கல்கி அவதாரமாய்
அச்சுதரும் வந்தார் அந்தக்ஷணம்
முரட்டுத் தனமுள்ள மிலேச்சரை வதை செய்த
முரஹரி கல்கிக்குச்-சோபனம் சோபனம்

பின்னும் அநேகம் மோஹனாஸ்திரந்தன்னைப்
பூட்டிவிட்டான் சக்தி சேனையின் மேல்
அந்நேரம் அம்மனும் சாம்பவர் அஸ்திரத்தில்
அதையும் விமோசனம் செய்துவிட்டாள்
அக்ஷெளஹிணி சேனையை நாராயணாஸ்திரத்தால்
பஸ்மமயமாக ஆக்கிவிட்டாள்
துஷ்டன் குடிலாக்ஷன் முதற்சேநாதிபதிகளைச்
சிதைத்தாள் பாசுபதத்தால்-சோபனம் சோபனம்

பின்னும் அநேகம் அஸ்திரத்தாலவன்
அக்ஷெளஹிணி சேனை போன பின்பு
என்ன பலம் லலிதா தேவிக்கு என்று
ஏங்கி விழிக்கின்றான் பண்டாஸுரன்
அம்மனும் தம்முடைய நாதர் காமேசரை
அந்தரங்கத்திலே தான் நினைத்துக்
காமேசர் அஸ்திரத்தால் ஜயம் வரட்டுமென்று
கணவரை வேண்டினாள்-சோபனம், சோபனம்.

நாளை பண்டாஸுரன் வதம்

Friday, November 05, 2010

சோபனம், சோபனம்,ஸ்ரீலலிதைக்கு சோபனம் 17

சிச்சக்திச் -சேதனா-ரூபா ஜடசக்திர் ஜடாத்மிகா" என்கிறது லலிதா சஹஸ்ரநாமம். மேலும் அம்பிகையின் கண்களை "வாமநயனா" என்றும் கூறும். இன்னொரு இடத்தில் "வாமகேசீ" என்றும் கூறும். வாமம் என்றால் இடப்பக்கம் என்ற பொருள் மட்டுமல்லாமல் அழகானது, வடிவானது என்ற பொருளிலும் வரும். வலப்பக்கம் இடப்பக்கத்தை விடவும் அதிக பலத்தோடும் திறமையோடும் இருப்பதால், (கவனிச்சுப் பார்த்தவங்க புரிஞ்சுக்கலாம், வலக்க்யைவிடவும் இடக்கைச் சுற்றளவு கொஞ்சம் குறைஞ்சே இருக்கும்) வலப்பக்கம் தக்ஷிண பாகம் என்று சொல்லப் படும். அந்த வாமபாகத்தில் இருக்கும் அம்பிகைதான் ஜடப்பொருட்களையும் உயிருள்ளதாய் சக்தி உள்ளதாய் மாற்றுகிறாள். இன்னும் சொல்லப் போனால் சிவனுக்கே சக்தியை அளிக்கிறாள். அம்பிகை தான் சைதன்ய குஸுமம் எனவும் அழைக்கப் படுகிறாள். லலிதா சஹஸ்ரநாமம், "சைதன்யார்க்கய-ஸமாராத்தயா சைதன்ய-குஸுமப்ரியா" என்று கூறும். அழகான தமிழில், ஞாநப்பூங்கோதையான அம்பாள் என்று கூறலாம்.

பெண்ணுக்கு உரிமை இல்லை என்பவர்கள் கவனிக்கணும். ஈசன் பதி, அம்பாள் பத்னி என்பதிலும் அம்பாளின் சக்தியால்தான் ஈசன் அசைவே ஏற்படுகிறது. அதாவது அம்பிகையானவள் ஆட்டி வைக்கிறாள். ஈசன் ஆடுகிறார். இதைத் தான் பெண்டாட்டி பேச்சுக்கு ஆடறான் பாருனு சொல்லி இருக்கலாமோ?? நம் உடலின் இடப்பாகத்தில் இருக்கும் இதயம் தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் சக்தியைத் தருகிறது. ஈசனின் அந்த வாமபாகத்தில் இருப்பவள் சக்திதானே? ஆனால் ஒரு விஷயம் யோசித்தோமானால் வலக்கையின் வசதியும், செளகரியமும், வலக்காலின் வசதியும், செளகரியமும் இடக்கை, காலுக்கு வருவதில்லை அல்லவா?? இங்கே தான் அம்பிகை தன்னை அடக்கிக் கொண்டு தான் ஈசனுக்கு அடங்கியவள் என்பதை நிரூபிக்கிறாள். சக்தி என்னவோ தருவது அவள் தான். ஆனாலும் ஈசனையே தன்னைவிடவும் அதிக சக்தி உள்ளவராய் வெளியே காட்டுகிறாள். மேலும் இங்கே அடக்குவது, அடங்குவது என்ற அதிகாரங்கள் பிரயோகிக்கப்படாமல் இயல்பாகவே எவரும் கேட்காமலும், சொல்லாமலும் இதுதான் நியதி என்று ஏற்பட்டிருக்கிறது. என்றாலும் இதயமான அந்த சக்தி இல்லை எனில் நம் உடல் எப்படி சரிவர இயங்காதோ அது போலவே அம்பிகையான சக்தி இல்லாமல் சிவத்தால் இயங்க முடியாது. இருதயம் எப்படி வெளிக்காட்டிக்கொள்ளாமல் இயங்குகிறதோ அப்படியே அம்பாளும் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஈசனிடம் சரணடைந்து அவனையும் இயக்கி அதன் மூலம் நம்மையும் இயக்குகிறாள்.

இதையே அபிராமி பட்டர்,

“உமையும் உமையொருபாகனும் ஏக உருவில் வந்திங்
கெமையும் தமக்கன்பு செய்யவைத்தார் இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே!”

நம்மைப் போன்ற பரிபக்குவமே துளிக்கூட இல்லாத பக்தர்களுக்கும் சக்தியானவள் தன் மகிமையால் தன் திருவடிகளுக்கு அன்பு செய்யும் அன்பர்களை ரக்ஷித்து அனுகிரஹம் செய்கிறாள். மேலும் அர்த்தநாரீசுவரத் தியானம் என்பது ஆணும், பெண்ணும் சமம் என்ற உணர்வை மேம்படுத்திப் பெண்களின் மேல் மரியாதையும், மதிப்பும் உண்டாகச் செய்வதோடு பெண்ணாசையையும் ஒழிக்கும் வல்லமை பெற்றது. இதையே பட்டர் தன் அடுத்த பாடலில் இவ்விதம் கூறுகிறார்.

“ஆசைக்கடலில் அகப்பட்டருள் அற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின் பாதமெனும்
வாசக்கமலம் தலைமேல் வலியவைத் தாண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன் ஈசர் பாகத்து நேரிழையே!”

தேவியின் வழிபாட்டால் மண், பெண், பொன் என்னும் புறவுலகுச் சிந்தனைகளும் அது குறித்த ஆசைகளும் இல்லாமல் போகும். இதற்கு அபிராமி பட்டரே ஒரு வாழும் சாக்ஷியாகவும் இருந்திருக்கிறார் அல்லவா? ஆசைக்கடலில் அகப்பட்டு அருள் அற்ற அந்தகன் என்பது இங்கே கூற்றுவனைக் குறிக்கும். கூற்றுவன் கை பாசம் என்னும் ஆயுதத்தால் துன்புறும்படி இருக்கும் அடியார்களைக் கரைசேர்ப்பவள் அன்னையே. இப்போ லலிதாம்பாள் சோபனத்தின் அடுத்த அவதாரத்தைப் பார்க்கலாம்.

ஸ்ரீராமாவதாரம். ஒரு சொல், ஒரு மனைவி, ஒரு பாணம் எனத் தனித்தன்மை பெற்று விளங்கிய புருஷோத்தமன் ஸ்ரீராமன். நம் நாட்டில் மட்டுமல்லாது உலகின் பல இடங்களிலும் பல்வேறு வடிவங்களில் ஸ்ரீமத்ராமாயணம் விளங்குகிறது என்பதே அதன் பெருமையைக் கூறும். தன்னுடைய குடிமக்களுக்குத் தான்கொடுக்க வேண்டிய நல்லாட்சிக்காகத் தான் அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்பதால் தன் அருமை மனைவியையே துறந்தவன் ஸ்ரீராமன். பலர் கண்களுக்கும் அவன் மனைவியைத் துறந்தது தவறு எனப் பட்டாலும், அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்னும் வழக்குச் சொல்லையும் அதன் உள்ளார்ந்த பொருளையும் கூர்ந்து கவனிப்பவர்கள் ஸ்ரீராமன் செய்தது சரியே எனப் புரிந்து கொள்வார்கள். எப்போது குடிமக்களில் சிலர் தன் மனைவியைத் தவறாய்ப் பேசுகின்றனரோ அப்போது அந்த மனைவியின் மேல் எத்தனை பாசம் இருந்தாலும் அவளைத் துறப்பதே சிறந்த முடிவு, குடிமக்களுக்கும் ஓர் எடுத்துக்காட்டு என்ற முடிவெடுத்து ஆண்டான் ஸ்ரீராமன். அதே போல் தன் அருமை இளவல் லக்ஷ்மணனையும் அவன் துறக்கவேண்டி வந்தபோது அவனையும் துறந்தான். கொடுத்த வாக்கிற்காக இளவலைத் துறந்தான். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் மனிதன் எவ்வாறு மனம், வாக்கு, காயம் அனைத்தாலும் உண்மையாக இருக்கவேண்டும் என்பதை எடுத்துக்காட்டிய ஸ்ரீராமனுக்கு மங்களம்.


“இராவணனைக் கும்பகர்ணனிந்திரஜித்தனை
இராட்சதாளை யவன் அனுப்பி வைத்தான்
தேவியும் இடக்கை ஆள்காட்டி விரலைச்
செப்பிடுவித்தை போல் உதறினாளே
ஸ்ரீராமலக்ஷ்மணர் ரதத்திலிருந்து கொண்டு
ராவணன் முதலோரை வதைகள் செய்தார்
தாமஸியாமல் ராக்ஷதாளை வதைத்த
ஸ்ரீ ராமலக்ஷ்மணருக்குச் –சோபனம், சோபனம்.

அடுத்து வருகிறார் நம்ம பலராமர். மூத்தவர். கண்ணனுக்கு அண்ணன். ராமாயணத்தில் இவர் இளவலாய்ப் பிறந்து அண்ணனுக்குச் சேவை செய்ததால் இங்கே மூத்தவராய்ப் பிறந்து உலக்கையையும், கலப்பையையும் வைத்துக்கொண்டு எல்லாரையும் நாசம் செய்கிறார்.

“வானரங்களையும் வருத்திவிட்டான் பண்டன்
மலைமலையாகவே தேவிமேலே
விஜய அம்பாள் தன் இடக்கை நடுவிரலை
மின்னல் மின்னினாற்போல் உதறினாளே
பலபத்திரரும் வந்தார் கைலாச மலைபோலப்
பெரிய உலக்கைக் கலப்பை கொண்டு
உலக்கைக் கலப்பையால் குரங்குகளைக் கொன்ற
உக்கிரபாலருக்குச் –சோபனம், சோபனம்

தீபாவளி வாழ்த்துகள்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

Thursday, November 04, 2010

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் 16

இவ்வுலகின் அக்ஞான இருளைப் போக்கும் ஒளியான அம்பிகையோடு சேர்ந்து ஐக்கியமான சிவனும் சேர்ந்த சச்சிதாநந்த ஸ்வரூபத்தைத் தியானிப்பவர்களுக்கு உலகின் மற்றப் புற இன்பங்களின் ஆநந்தங்கள் மங்கியே தெரியும். சிவதம்பதிகளின் ஜீவாதார ஒளியைத் தரிசித்தவர்களுக்கு வேறு பேறு வேண்டியதில்லை. பக்தர்களின் மனமாகிய சாகரத்தில் மலரும் ஆநந்தமயமான ஞாநத்தாமரையின் மகரந்த வாசனைகளை அனுபவிக்கும் இரு அழகான ஹம்ஸங்களாக ஈசனும், அம்பிகையும் குறிப்பிடப் படுகின்றனர். ஹம் என்பது சிவனையும், “ஸ” என்பது சக்தியையும் குறிக்கும். இவர்களின் சம்பாஷணைகளாகப் பதினெட்டு வித்தைகளும் குறிப்பிடப் படுகின்றன. அவை வேதங்கள் நான்கு, சிக்ஷை, கல்பம், வியாகரணம், நிருக்தம், சந்தஸ், ஜோதிடம் போன்றவை ஆறு, மீமாம்ஸம், நியாயம், புராணங்கள், தர்மசாஸ்திரங்கள் என நான்கு, மருத்துவ வேதமான ஆயுர்வேதம், ஆயுதப் பயிற்சிகளைக் குறிக்கும் தனுர்வேதம், சங்கீதம் போன்ற கலைகளுக்குச் சொந்தமான காந்தர்வ வேதம், மற்றும் பொதுவான நீதிகளைக்குறிக்கும் நீதி சாஸ்திரம் போன்றவை ஆகும். நம் மனதுக்குள் இவ்வாறு ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் அம்பிகையின் ரூபத்தைத் தியானிப்பவர்களுக்கு சகல பாவங்களும் புண்ணியமாக மாறிவிடும்.

இதையே அபிராமி பட்டர்,

தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.”

என்கிறார். அபிராமியின் கடைக்கண்களின் கடாக்ஷத்தால் அவளை வழிபடும் அன்பர்களுக்கு எல்லாவகையான ஐஸ்வரியங்களும் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் மேல் தளராத மனம், தெய்வீக அழகு, வஞ்சம் இல்லாமனம் என அனைத்தையும் கொடுக்கும். லலிதா சஹஸ்ரநாமமோ, அம்பிகையை அனைத்துக்கலைகளுக்கும் தலைவி என அழைக்கிறது. “சதுஷ்ஷஷ்டி கலாமயீ” எனவும், “கலாவதீ” எனவும் கூறுகிறது. கலா என்பது மயிலின் கலாபத்துக்கும் ஒரு பெயராகும். ஆகவே அப்படிப் பார்த்தாலும் சகலகலாமயிலான அம்பிகைக்குப் பொருந்தும் வண்ணம் அமைந்துள்ளது. மேலும் அம்பிகையின் கடைக்கண்களின் மூன்று விதமான ரேகைகள் திரிவேணி சங்கமத்தை நினைவூட்டுவதாய்க் கூறுவார்கள்.

சூரிய புத்திரியும் கறுப்பு வண்ணத்தவளும் ஆன யமுனை, வெளுப்பான கங்கை, சிவந்த நிறமுள்ள சோனை போன்ற மூன்று நதிகளின் சங்கமத்தை நினைவூட்டும் விதமாய் அம்பிகையின் கண்களின் ரேகைகள் காட்சி அளிக்கின்றன். மேலும் இவை மும்மூர்த்திகளையும் நினைவூட்டுகிறது. ரஜோ குணமுள்ள சிருஷ்டிகர்த்தா பிரம்மாவையும், ஸத்வ குணம் நிறைந்த ஸ்திதிகர்த்தா விஷ்ணுவையும், தமோ குணம் நிறைந்த ஸம்ஹார கர்த்தா ருத்திரரையும் நினைவூட்டுகிறது. இப்போ பண்டாஸுரன் என்னவானான் என்று பார்ப்போம்.

அடுத்த அவதாரம் நரசிம்ஹ அவதாரம்.

“இரணியகசிபு முதாலானஸுராளை யெல்லாம்
இந்தப் பண்டாஸுரன் வருத்திவிட்டான்
பரமேச்வரியும் வலக்கைப் பவித்திர
விலையசைத்தாள் அதிலிருந்து
அதிபராக்கிரம நரஸிம்மரும் வந்து
அஸுர ஹிரண்யனை ஸம்ஹரித்தார்
நாகசயனர் பக்தர் பிரஹலாதர லக்ஷ்மி
நரஸிம்ம மூர்த்திக்குச் சோபனம் சோபனம்

நரஸிம்மர் வந்து ஹிரண்யனை வதம் செய்துவிட்டார். லக்ஷ்மியைத் திருமணம் செய்துகொண்டு லக்ஷ்மி நரசிம்மராய்க் காட்சி தருகிறார். அடுத்து வாமன அவதாரம். முதல் இரண்டும் இரண்டு வகை நீர் வாழ் ஜந்துக்கள். மீன், கூர்மம்(ஆமை), அடுத்து வராஹம் நிலத்தில் வாழும். அதுக்குப் பின்னர் பாதி மனிதன், பாதி மிருகமான நரசிம்மம். படிப்படியான பரிணாம வளர்ச்சி. இப்போ முதல் மனிதன். முதலில் குட்டையாய்த் தானே இருந்திருக்கணும். ஆகவே வாமனன்.

மஹாபலி முதலான அஸுரசேனைகளை
வருத்திப் போகச் சொன்னான் பண்டாஸுரன்
மஹாமாயையும் வலக்கைச் சுண்டுவிரலைச்
சுழட்டியே உதறினாள் அதிலிருந்து
வந்தார் மஹாவிஷ்ணு வாமன மூர்த்தியாய்
மஹாபலி அஸுரனையும் ஜயித்து
மஹாபலியை பாதாளத்தில் தள்ளின
வாமன மூர்த்திக்குச் சோபனம் சோபனம்

வாமனன் மஹாபலியைப் பாதாளத்தில் அழுத்தி நித்ய சிரஞ்சீவிகளில் ஒருவராய்ச் செய்தாயிற்று. அடுத்து மனிதன் தான். ஆனால் பயங்கர கோபக் கார மனுஷன். ரிஷி புத்திரன். பல அரசர்களுக்கும், மன்னர்களுக்கும் இளவரசர்களுக்கும் ஆசாரியர். மஹாபாரத காலத்துக் கர்ணனுக்கும் ஆசாரியன். ஆனால் இவர் கார்த்த வீர்யார்ச்சுனன் இவரின் தந்தையைக் கொல்லவும், க்ஷத்திரியர்களிடம் கொண்ட பகைமையால் அவர்களை அழித்துவந்தார். இருபத்தொரு தலைமுறைக்கு க்ஷத்திரியர்களை அழித்த இவரை நிறுத்த வேண்டி காச்யபர் இவரிடம் பூமியை தானமாகப் பெற்றார். காச்யபருக்கு தானம் கொடுத்த பின்னர் அந்த பூமியில் இருப்பது முறையல்ல என்பதால் அவர் கடலரசனை வேண்டித் தமக்கென ஒரு நிலத்தை ஏற்படுத்திக்கொண்டார். மேற்குக் கடலோரமுள்ள அந்த நிலம் பரசுராமரால் ஆட்சி செய்யப் படுவதாய் இப்போதும் சிலரால் நம்பப் படுகிறது.

கார்த்த வீர்யார்ச்சுனனைச் சேனைகளுடன்
கண்டகன் பண்டன் அனுப்பி வைத்தான்
ஆர்த்திகளைப் போக்கும் லலிதேச்வரியும்
அசைத்தாள் இடக்கைக் கட்டைவிரலை
பரசுராமர் கையிற்கோடாலி கொண்டு
புறப்பட்டார் வெள்ளிவலையைப் போல
பலமுள்ள கார்த்த வீர்யாச்சுனனை வதைத்தப்
பரசுராமருக்குச் சோபனம், சோபனம்.

மனிதரில் பல பரிணாமங்கள், பலவிதமான மனிதர்கள். முதலில் வந்ததோ குட்டையான மனிதன். அடுத்து வந்ததோ தன் கோபத்தை அடக்க முடியாத மனிதன். இப்போ வரப் போவதோ பூரணமான ஒரு மனிதன். மனிதருள் மாணிக்கம். மர்யாதா புருஷோத்தம் என அன்போடு அழைக்கப் படுபவன். நாளை பார்ப்போமா??

Wednesday, November 03, 2010

அம்பி, ரொம்ப அவசரமாய் ஒரு மடல்!


சே, உடம்பும் சரியில்லாமல், அதைப் பார்த்து நொந்து போன இணையமும் தன்னோட உயிரை மயக்க நிலைக்குக் கொண்டு போக ஒரு மாசமா ஒரே படுத்தல். இந்த அழகில் தீபாவளி வேறே நெருங்கிட்டது. திவா வேறே ஏற்கெனவே நவராத்திரிக்கு முன்னாலேயே தீபாவளி பர்ச்சேஸுக்கு டிப்ஸ் கொடுத்திருந்தார். அதை அம்பிக்குச் சொல்றதுக்குள்ளே இப்படி ஒரு பிடுங்கல்! அன்னிக்கே திவாவின் டிப்ஸை ஜி3 பண்ணி இருக்கணும். அட?? ஜி3க்கு இந்த வருஷம் அஜீத்(தல) தீபாவளி இல்லை?? வாழ்த்துகள் ஜி3!

இப்போ நம்ம விஷயத்துக்கு வருவோம். அவசரமா பர்ச்சேஸ் பண்ணறதாலே, நல்லிக்கு திநகர் எல்லாம் போக முடியாது. ஆகவே அம்பி இந்த வருஷம் ராசி சில்க்ஸின் ஸ்வப்னா கலெக்ஷன்ஸோட திருப்தி அடைஞ்சுக்கலாம்னு வச்சுட்டேன். வாங்கிட்டு பில்லை உங்களுக்கு அனுப்பச் சொல்லிடறேன். செட்டில் பண்ணிடுங்க. அதிகமில்லை ஜெண்டில்மேன், ரெண்டே ரெண்டு தான்! அண்ணா நகரிலேயே கடை இருக்கா??? சீக்கிரமாப் போய் வாங்க செளகரியமா இருக்கும். தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அம்பி! சீக்கிரமா செட்டில் பண்ணிடுங்க.

Tuesday, November 02, 2010

காணாமல் போனது பற்றிய அறிவிப்பு!

ஒரு வாரமாய்க் காணாமல் போனதுக்கு மன்னிக்கவும். 26 தேதி வரைக்கும் அப்போ அப்போ லேசாத் தலையைக் காட்டினாலும் பதிவு போடமுடியலை. எல்லாம் வழக்கமான பிரச்னை தான். ஆனால் ஆறு மாசமாப் படுத்தல் தாங்கலை. இந்த அக்டோபரில் ஒரு வழி பண்ணிட்டாங்க. இணையச் சேவையை(சீச்சீ, தேங்காய்ச் சேவை எல்லாம் இல்லை) மாத்தறதா ஏக மனதாய்த் தீர்மானம் போட்டு அதுக்கு உண்டான எல்லா ஏற்பாடுகளும் செய்து முடிச்சாச்சு. பார்க்கலாம், இனி எப்படினு! நான் ஊருக்குப் போனால் தவிர மற்ற நேரங்களில் இப்படித் தாமதம் ஆனது இல்லை. இம்முறை எதிர்பார்க்கவே இல்லை. சனிக்கிழமைக்குள் சரியாயிடும்னு நினைச்சால், மெகா சீரியல் மாதிரி ஆகிவிட்டது. :((((((((

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் 15!


அம்ருதேஸ்வரியான அம்பிகை தன் பார்வை ஒன்றாலேயே அனைத்து விஷங்களையும் நம்மிடமிருந்து போக்குகிறாள்.
“ஸுமேரு –மத்யஸ்ருங்கஸ்தா ஸ்ரீமந்நகர-நாயிகா சிந்தாமணி-க்ருஹாந்தஸ்தா பஞ்ச-ப்ரஹ்மாஸனஸ்திதா!
ஸ்ரீசக்ர நாயகியான அம்பிகையின் சிந்தாமணி க்ருஹத்தைச் சுற்றி இருக்கும் அம்ருத வாவியிலே மணிமயமான படகிலே இருந்துகொண்டு அம்ருதேஸ்வரி பக்தர்களைக் கரை சேர்க்கிறாள். பக்தர்களைக் கரை சேர்ப்பதாலேயே இவளைத் தாரா என்றும் அழைப்பார்கள். மின்னல் கொடி போலவே சூக்ஷ்மமான ஒளிமயமான ரூபம் உடைய அம்பிகை, சூரியன், சந்திரன், அக்னி இவர்கள் வடிவங்களில் ஒளிமயமாய்ப் பிரகாசிக்கிறாள். நம் மூலாதாரத்தில் இருந்து படிப்படியாய் மேலேறி வரும் சக்தியானவள் சஹஸ்ராரச் சக்கரத்தில் நிலைபெறுகிறாள். ஸஹஸ்ரதளத்தில் தாமரைக்காட்டில் நிலை பெறும் இவள் ஒருத்தியே அனைத்துமாவாள் என்பதை லலிதா சஹஸ்ரநாமம் கீழ்க்கண்டவாறு கூறும்.
“ஸஹஸ்ரதள-பத்மஸ்தா ஸர்வ-வர்ணோப-சோபிதா ஸர்வாயுத-தரா சுக்ல-ஸம்ஸ்திதா ஸர்வதோமுகீ!!

சஹஸ்ரதளங்களுள்ள தாமரையில் அனைத்து வர்ணங்களோடுகூடிய சக்திகளுடன், சகலவிதமான ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு அநேக முகங்களோடும் யாகினீ என்ற பெயரோடு காட்சி அளிக்கிறாள். இதை பட்டர்,
“அணங்கே அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால் வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோ டிணங்கேன் எனதுன தென்றிருப்பார்சிலர் யாவரோடும் பிணங்கேன் அறிவொன்றிலேன் என் கண் நீ வைத்த பேரளியே!”

என்று தேவிக்கு தேவ மாதர்கள் பரிவார சக்திகளாக இருத்தலைக் குறிப்பிடுகிறார். அழகுத் தெய்வமான அம்பிகையின் காந்தி பொருந்திய முகத்தின் ஒளியானது நம் உள்ளத்து இருட்டைப் போக்கும் வல்லமை உடையது. அவளுடைய கரிய கேசத்தின் கருமை அவளைத் தியானிக்கு அடியவர்களின் மன இருளைப் போக்கி உள்ளொளியை வளர்க்கும். அவள் கூந்தலின் இயல்பான மணத்தை லலிதா சஹஸ்ரநாமம், “சம்பகாசோக-புந்நாக-செளகந்திக-லஸத்கசா!” என்கிறது. சம்பக மலர்கள், அசோக மலர்கள், புந்நாகம்(புன்னை) மலர்களின் வாசத்தைக் காட்டிலும் மணம் அதிகமாய் உள்ள கரிய கேசத்தை உடையவள் என்பது பொருள்படும். அந்தக் கேசத்தை இரண்டாய்ப் பிரிக்கும் வகிட்டை “ஸீமந்தம்” என்று சொல்வார்கள். இதையே லலிதா சஹஸ்ரநாமம், “ஸ்ருதி-ஸீமந்த –ஸிந்தூரீ” எனக் கூறும். நெற்றியில் இருந்து வகிடு ஆரம்பிக்கும் இடத்தை ஸீமந்தம் என்று சொல்வதோடு, சுமங்கலிகள் அங்கே குங்குமம் இட்டுக்கொள்வதும் வழக்கம். நெற்றியில் நடுவே பொட்டில்லாவிடிலும், இந்த ஸீமந்தம் எனப்படும் வகிட்டின் உச்சியில் சிந்தூரம், அல்லது குங்குமம் வைத்துக்கொள்வது கட்டாயமாய் அநுசரிக்கப் படும். இந்த உச்சித் திலகத்தை வைத்தே பட்டர் அந்தாதியை ஆரம்பித்திருக்கிறார்.
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்குமத் தோயம் என
விதிக்கின்ற மேனி அபிராமி யென்றன் விழித்துணையே!”
என்கிறார். உதிக்கின்ற செங்கதிரைப் போன்று உச்சித் திலகத்தின் சிவந்த நிறம் காணப்படுகிறது என்று கூறுகிறார். சூரியன் உதித்துச் சிறிது நேரம் ஆகிவிட்டால் சூரியனை வெறும் கண்ணால் காணமுடியாது. அதே சமயம் உதய சூரியனைக் கண்ணால் நன்றாய்ப் பார்க்க முடியும். ஆகையால் உதிக்கின்ற சூரியன் என்பது இங்கே அதையும் சுட்டும். அம்பிகையை மனமாரத் தியானித்தால் அவளைக் கண்ணாரக் காண முடியும். உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் என்பது மெய்ஞ்ஞானம் பெற்ற ஞாநிகள் மதிக்கின்ற மாணிக்கம் போன்றவளே என்று வரும். மாதுளம்போது என்பது, அம்பிகையின் மாதுளை நிறத்தைக் குறிக்கும். “தாடிமீ குஸுமப்ரபா” என்று லலிதா சஹஸ்ரநாமம் இதைக் கூறும். “மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி” என்பது இங்கே தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளும் துதிக்கின்ற மின்னற்கொடியான அம்பிகை என்று பொருள்படும். இத்தனை பெருமை வாய்ந்த லலிதாம்பிகையுடன் பண்டாஸுரன் போருக்கு வந்திருக்கிறான்.

பண்டாஸுரன் வது சக்தியின் சேனைகளோடு தன் சேனைகளையும் மோத விட்டான். சக்திகள் கோபத்துடன் அக்னிக்கோட்டைக்கு வெளியில் வந்து சண்டை போட்டனர். ராஜராஜேஸ்வரியான லலிதாம்பிகை பண்டாஸுரனைக் கண்டு இவனை அழிக்கவேண்டியது நாமே என உறுதி பூண்டாள்.
“அக்கினிக்கோட்டைக்கு வெளியில் வந்தாள்-ஸ்ரீ
சக்கரத்தில் அபசகுனங்கண்டாள்
ஒப்பற்ற அஸுராள் தம்பட்ட முரசுகள்
உக்கிரமாய்க் கொம்புகள் ஊதிக்கொண்டு
சக்திதேவிகளை அஸுரர்கள் எல்லோரும்
சண்டை பிடித்தடிக்கத் துவங்கினார்கள்
சக்தி தேவியர்கள் அப்போ அஸுர சேனைகளை
ஸம்ஹரிக்கின்றார்கள்-சோபனம் சோபனம்

அஸுர சேனைகளை சக்திதேவிகள் சுற்றிப் பிடித்திழுத்துக் கத்தியாலே குத்தியும், ஈட்டியாலே குத்தியும், கொன்றழிக்கின்றனர். ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த ஆற்றின் இருபக்கமும் சாய்ந்து கிடக்கும் அசுரர்களின் தலைகளும், தேகங்களும் விருட்சங்களைப் போல் காட்சி அளித்தனவாம்.

யுத்தபூமிதனில் ரத்தப் பிரவாஹம்
ஓடுவதைக் கண்டு தேவரெல்லாம்
சக்திசேனையினால் அத்தனை அஸுராளும்
ஸம்ஹரிக்கப்பட்டுக் கிடப்பதையும்
அத்தனை யானை குதிரை சேனைகளெல்லாம்
ஆமை போல் மிதக்க ரத்த நதியில்
சித்தம் மகிழ்ந்து பாரிஜாதப் புஷ்பங்கள்
தேவிக்கு சொரிந்திட்டார்- சோபனம் சோபனம்

தேவர்களுஞ் சொர்ண புஷ்பமாரி சொரிந்து
திவ்விய சகுனங்களைக் காட்டினார்கள்
கோபத்துடனே பண்டாஸுரன் விழிசிவக்கவே
கொடூரமாய் உருட்டி விழித்துக்கொண்டு
தன்சேனை அஸுராளுக் கபஜயத்தைக் கண்டு
தாய் லலிதா தேவியை எதிர்த்தான்
அஞ்சாமல் தேவியும் பண்டாஸுரனைப் பார்த்து
அதிகக் கோபங் கொண்டாள்-சோபனம் சோபனம்
பண்டாஸுரன் தன் மாயையைக் காட்டி அம்பிகையை பயமுறுத்தப் பார்க்கிறான். மாயா சக்திகள் அனைத்துக்கும் தலைவியான அவளை எந்த மாயை பயமுறுத்தும். மாயையினால் அவன் இருட்டைக் கொண்டுவர, அம்பிகை சூர்யாஸ்திரத்தின் மூலம் அந்தக் காரிருட்டைப் போக்கினாள். குருடாஸ்திரம் விட்டு அம்பிகையைக் குருடாக்க நினைக்க, நேத்ராஸ்திரத்தால் அதை வென்றாள் அம்பிகை. வாயு அஸ்திரத்தைப் பண்டாஸுரன் போட, அம்பிகையோ வருணாஸ்திரத்தால் அதை முறியடித்தாள். நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, லக்ஷக்கணக்கான, கோடிக்கணக்கான வியாதிக்கிருமிகளை அனுப்ப, அவற்றைத் தன்வந்திரியான அச்சுதாநந்த கோவிந்த நாமத்ரய அஸ்திரத்தால் வென்றாள் பகவதி. அந்தகாஸ்திரத்தை அனுப்ப, ம்ருத்யுஞ்சயனால் அது வெல்லப் பட்டது. பார்த்தான் பண்டாஸுரன்.

மந்திரத்தால் சும்ப நிசும்பன் சண்டமுண்டன்
மஹிஷாஸுரனையவன் அனுப்பி வைத்தான்
அனுப்பி வைத்தான் அதைக்கண்டு மஹேச்வரி
அட்டஹாஸம் செய்தாளதிலிருந்து
அம்மனட்டஹாஸத்தால் துர்க்காதேவி யுண்டாகி
அஸுராளை ஸம்ஹரித்தாள் –சோபனம் சோபனம்

முன்னே வேதங்களைத் திருடின சோமுகன்
முதலான அஸுராளை அனுப்பி வைத்தான்
தன்னையடுத்த பேர்க்கு அபயங்கொடுத்துத்
தற்காக்கும் வலக்கைக் கட்டைவிரலை
உதறிவிட்டாளம்மன் அதிலேயிருந்து
உண்டாகிவந்து மச்சமூர்த்தியும்
வதைத்தந்த அஸுராளெல்லாரையும்
ஜயித்த மச்சாவதாரர்க்குச் சோபனம் சோபனம்.

சமுத்திரத்தை வருத்திவிட்டான் பண்டன்
சக்திசேனைகளை முழுகடிக்க
நிமிஷத்தில் அம்மன் உதறினாளப்போது
நீட்டி ஆள்காட்டி வரல்தனையும்
குதித்தாருடனே யதிலே யிருந்து
கூர்மாவதார மஹாவிஷ்ணுவும்
கொந்தளிக்கும் சமுத்ரங்களெல்லாங்குடித்த
கூர்மாவதாரர்க்குச் சோபனம் சோபனம்

இரணியாக்ஷனை அதிகோபத்துடனே
இந்தப் பண்டாஸுரன் அனுப்பி வைத்தான்
வராஹ மூர்த்தியும் உண்டானாரப்போ
வலக்கை நடுவிரலில் இருந்து
பொல்லாத ஹிரண்யாக்ஷ அஸுரர்களை யெல்லாம்
சற்றுப்போதைக்குள்ளே ஸம்ஹரித்தார்
வெல்ல முடியாத ரூபந்தரித்த லக்ஷ்மி
வராஹ மூர்த்திக்குச் சோபனம், சோபனம்