எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, February 21, 2012

உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டம்!

ஃபெப்ரவரி 21-ம் தேதியை யுனெஸ்கோ தாய்மொழி தினமாக அறிவித்து அதை ஐநா 2008-ஆம் வருடம் பிரகடனப் படுத்தியதன் தொடர்பாக மின் தமிழில் இன்னம்புரார் எழுதி இருந்த கட்டுரையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். தாய்மொழியின் முக்கியத்துவம் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளின் சிறப்பையும் அவற்றையும் மதிக்க வேண்டியதன் அவசியத்தையும் கூறியுள்ளார். தற்காலச் சூழ்நிலைக்குத் தேவையான பதிவு. அதோடு இந்தியாவிலேயே முதல் முதலாகத் தாய்மொழியை அரசு மொழியாக அறிவித்த ஒரே மாநிலம் குஜராத் தான். அந்த மாநில மக்கள் ஆங்கிலமும் பேசுவார்கள்; ஹிந்தியும் தெரியும்; இங்கே போல் அங்கேயும் தக்ஷிண் பாரத் ஹிந்தி ப்ரசார் சபா தான் ஹிந்தி தனித்தேர்வுகளை நடத்துகிறது. ஆனால் அம்மக்கள் தங்களுக்குள்ளாக குஜராத்தியில் தான் பேசிக்கொள்வார்கள். அது எவ்வளவு படித்தவர்களானாலும் குஜராத்தியில் பேச மறப்பதில்லை. இன்று இந்தியாவிலேயே தன்னிறைவு பெற்றதோடு மட்டுமல்லாமல் வளர்ச்சியிலும் முன்னணியில் இருக்கும் ஒரே மாநிலமும் குஜராத் தான். இனி இன்னம்புராரின் கருத்துகள். வழக்கத்தை விடப் பெரிய பதிவு.
******************************************************************************************



அன்றொருநாள்: ஃபெப்ரவரி 21

தாய்மொழி

தமிழ் என்னுடைய தாய்மொழி. இன்றைய தினம் தாய்மொழி தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. தமிழ் என்னை வரித்துக்கொண்டது ஒரு பெரும் பேறு. தமிழர்கள் யாவரும் தமிழ் விழா எடுக்க வேண்டும். இன்றைய தினத்தில் மட்டுமல்ல; தினந்தோறும், தமிழுக்காக கொஞ்சநேரம் செலவழிக்க வேண்டும். சிறிதளவாவது, தமிழ் இலக்கியங்களை படிப்பதில் செலவிடவேண்டும். சிறிதளவாவது இலக்கணம் அறியவேண்டும். நான் தமிழார்வத்தினால் உந்தப்பட்டு, சில வருடங்கள் முன்னால் சென்னை வந்த போது, வாரம்தோறும், ஆர்வலர்களை தருவித்து ஒரு தமிழ் வட்ட மேஜை இயக்க திட்டமிட்டேன். நடக்கவில்லை. பேட்டைக்கு ஒரு சங்கம் தமிழார்வத்தை பரப்ப வேண்டும். இது தலைவாசல்.

காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு. உவமை சற்றே மாறி அமைந்திருந்தாலும், உவகையை உணர்த்துகிறது என்று கருதுகிறேன். அவரவருக்கு அவரவருடைய அன்னை தெய்வம். ஆகவே, அவரவரின் தாய்மொழி பற்றை போற்றுவோமாக;மதிப்போமாக; ஊக்குவிப்போமாக. இது முதல் படி.

நமது தாய்மொழியின் தொன்மை, பெருமை, இலக்கிய மேன்மை, சுவை, கலையுடன் தொடர்பு, இறை தொண்டு, மொழி நுட்பங்கள், விமர்சனம், ஒப்புமை ஆகியவை பற்றியும், தொடர்ந்து வரும் பல கருத்துக்களையும் புரிந்துகொண்டு, மற்றவர்க்கு அறிவிப்பது நற்பயனை பயக்கும். அன்றாட அளவளாவுதல்,வட்டமேஜை, நூல்கள், சொற்பொழிவுகள், விழா எடுப்பது, இணைய தளம் எல்லாம் உதவும். அது இரண்டாவது படி.

அந்த கடமையை செவ்வனே செய்ய, நாம் நமது தாய்மொழியில் வல்லுனர் ஆகவேண்டும். அம்மை மடியில் அமர்ந்து பேசிய மழலையும், பள்ளிப்பாடங்களும், தேர்வில் பெற்ற மதிப்பீடுகளும், அன்றாட வாழ்க்கையில் கூடி வரும் பாமரகீர்த்திகளும், கிளை மொழிகளுக்கும், பேசும் மொழிக்கும், நாட்டுப்புற வரவுகளுக்கும் ஆதரவும், ஊக்கமும் அளிப்பதும், நாள் தவறாமல் தமிழிலும், மற்ற மொழிகளிலும் புதியவற்றை தேடி அறிந்து கொள்வதும்,இலக்கியம், இலக்கிய சுவை, இலக்கிய விமர்சனம், கருத்து பரிமாற்றம் ஆகியவை திறனைக்கூட்டும். மொழி ஒரு கருவி. ஓசையை அசைத்து, சொல் அமைத்து, அதன் பொருளை தெரிவிப்பது மட்டுமே மொழிக்கு இட்ட பணி என்றால், இலக்கியம் பிறக்காது; கற்பனை தோன்றாது. அது வெம்பிய பிஞ்சு. சார்லஸ் பெகு என்ற கவிஞர், ‘சொல்லின் தன்மை வேறுபடும். சில படைப்பாளிகள், தன் அடிவயிற்றில் இருந்து அதை எடுப்பார்கள்; சிலர் ஜோல்னா பையிலிருந்து...’ என்றார். இதை புரிந்துகொண்டால், தமிழன்னை நம்மை உவகை பொங்க வரவேற்பாள். இது மூன்றாவது படி.

சித்திரமும் கை பழக்கம். செந்தமிழும் நா பழக்கம். நமக்குள் தமிழ் பேசிக்கொள்வதற்கு தடை யாது? ஏன் சரமாரியாக, ஓட்டைக்கப்பலில் வந்து இறங்கி வந்தவன் போல, ஆங்கிலத்தில் பிளந்து கட்டுகிறோம்? தமிழ் வீடுகளில் தமிழில் பேசிக்கொள்வது தான் பண்பு, சிறார்களுக்கு முன்னுதாரணம். சில சமயம் ஆங்கிலத்தில் பேசுவது இங்கிதம். ஒரு மாநிலத்தில் ஐம்பது வருடங்களுக்கு முன்னாலேயே தாய்மொழியில் அரசு அருமையாக நடத்தப்பட்டு வந்தது. ஒரு சமயம் முதல்வர் என்னை குறிப்பிட்டு, ‘இவருக்கு நாம் பேசுவது, நுட்பங்கள் உள்பட, புரிந்தால் நமக்கு தான் நன்மை; ஆங்கிலத்தில் பேசுங்கள்’ என்றார். அந்த பெருந்தன்மை நமக்கும் வேண்டும். மற்றபடி தமிழுக்கு முதன்மை. திரு.வி.க. அவர்கள் மார்க்கபந்து. இது நான்காவது படி.

வடமொழி என்று முத்திரையிட்டு தமிழார்வலர்களில் பலரால் நிந்திக்கப்படும் சம்ஸ்க்ருதம், இந்தியாவின் நன்கொடை மனித இனத்திற்கே. ‘சம்ஸ்க்ருதம்’ என்ற சொல் ‘சிறப்பான அமைப்பு என்ற பொருள்படும் காரணப்பெயர். அம்மொழியை பழிப்பது ஒரு தாழ்வு மனப்பான்மை. தேவையே இல்லை. தமிழ் எந்த வகையிலும் வடமொழிக்குக் தாழ்ந்தது அன்று. அத்தகைய பாகுபாடு, மொழிகளுக்கு ஏற்புடையது இல்லை. இரு மொழிகளும் ஆயிரக்கணக்கான வருடங்களாக, நம் சமுதாயத்தின் இரு கண்களாயின. தமிழறிஞர்களில் பெரும்பாலோர் வடமொழியில் விற்பன்னர்களாக இருந்திருக்கின்றனர். வடமொழியை வரவேற்கும் மனநிலை நன்மை பயக்கும். கிரந்தம் பற்றி சர்ச்சை செய்த வண்ணம் இருக்கிறோம். கிரந்தம் பரவுவதற்கு நாம் எல்லாரும் உழைக்கவேண்டும். இது ஐந்தாம் படி.

ஆங்கிலம் உலகளாவிய பொது மொழி என்பதை யாவரும் அறிவர். ஆங்கிலம் கற்றுக்கொள்வதால் ஆதாயமே ஒழிய தீமை யாதும் இல்லை. ஆங்கில மோகம் வேண்டாம். ஆங்கில புலமை வேண்டும். இன்று உலகம் குறுகி விட்டது. ஆங்கிலம் தெரியாதவர்களால், திரைகடலோடியும் திரவியம் தேட இயலாது. திக்கு, திசை தெரியாமல் திண்டாடவேண்டும். மேலும், பலமொழிகளில் இருக்கும் இலக்கியம்,வரலாறு, எண்ணில் அடங்கா அறிவியல் தளங்களுக்கு ஆங்கிலம் திறவு கோல்.இந்தியாவில் ஹிந்தியை மதிப்பது நலம். ஆனால் தேசிய மொழி என்பதால் எழும் வெறியை முற்றும் தணிக்கவேண்டும். இந்த விவேகம் ஆறாவது படி.

அண்டை மாநில மொழிகளை நிந்திப்பது அறிவீனம். கேரள கதக்களியும் வேண்டும்; சுந்தரத்தெலுங்கும் வேண்டும்; மஸ்தி வெங்கடேச ஐயங்காரின் இலக்கியமும் வேண்டும். இயன்றவரை அண்டை மாநிலமொழிகளையும் ஓரளவு கற்றுக்கொள்வோம். இந்த மனித நேயம் நமது உறவுகளை உறுதிப்படுத்தும். ஏழு படி ஏறி விட்டோம்.

இன்றைய உலகில் ஐரோப்பிய மொழிகளுக்கு மவுசு ஜாஸ்தி. விஞ்ஞானம் படிக்க ஜெர்மானிய மொழி, கலையார்வத்திற்கு ஃபெரன்ச் என்பார்கள். எல்லா மொழிகளிலும் எல்லாம் இருக்கின்றன. எல்லாமும் இல்லை. தற்காலம் ஸ்பானிஷ் மொழி பரவிய வண்ணம் இருக்கிறது. தென் அமெரிக்கக்கண்டத்தில் அதற்குள்ள ஆளுமை தான் காரணம். இன்று தமிழ்நாட்டில் பலமொழிகளை கற்க வசதிகள் பெருகி உள்ளன. ஒரு காலத்தில் ஸ்பானிஷ் கற்றுக்கொள்ள வசதியே இல்லை. ஜெர்மானியத்துக்கு ஒரு இடம். ஃபெரன்ச் மொழிக்கு ஒரு இடம். அவ்வளவு தான். இருக்கும் வசதிகளை, தேவைக்கேற்ப, பயன் படுத்திக்கொள்வது சிலாக்கியம். எட்டாவது படியில் நாம்.

எட்டாவது படியிலிருந்து குனிந்து எட்டிப்பார்த்தால்...

யுனெஸ்கோ ஸ்தாபனம் ஃபெப்ரவரி 21ம் தேதியை தாய்மொழி விழா தினமாக,1999 ல் அறிவித்து, அதை ஐ.நா. 2008ல் பிரகடனப்படுத்தியதின் பின்னணி தெரியும்.

‘தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்...’ என்று நாம் பாடினால், ‘ஸோனார் பங்களா’ (‘பொன் விளைந்த களத்தூர்’) என்று தமது தேசாபிமானத்தை வெளிப்படுத்தும் பங்களா தேஷ் நாட்டில் 1952 லிருந்து இந்த விழா எடுக்கப்படுகிறது. பெங்காலி மொழியை ஒழிக்கும் அளவுக்கு பாகிஸ்தான் 1948லேயே தீவிரம் காட்ட, டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் கிளர்ச்சி செய்தனர்; சுட்டுக்கொல்லப்பட்டனர். டாக்கா பல்கலைக்கழகத்தில் இவர்களுக்கு ஒரு நினைவு மண்டபம் இருப்பது சின்னம். நாடு இரண்டாகப்பிரிந்தது விளைவு. அந்த நினைவு மண்டபத்தில் இந்த தினத்தில் பத்து லக்ஷம் மக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். 23 கோடி மக்கள் அந்த மொழி பேசுவதாக, ஒரு புள்ளி விவரம். வரலாற்று நோக்கில் பார்த்தால், பிரச்னை தோன்றியது,1905ம் வருடத்தில் கர்ஸான் பிரபு வங்காளத்தைத் துண்டித்தபோது. கொதித்தெழுந்தனர் மக்கள். துண்டுகள் இணைக்கப்பட்டன, 1911ல். தழும்பு நீங்கவில்லை. அது மறுபடியும், வேறு காரணங்களால் வெடித்துக்கொண்டது, 1947ல். எனினும் பாஷாபிமானம் வங்காளம் முழுதும் ஒன்றே.

மூன்று மாதங்கள் முன், நாவன்னா. காவன்னா, '...தமிழ் இலக்கியம் அறிந்தோர் அறிவியல் என்று வரும்
போது கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும்.அறிவியல் அறிந்தோர் தமிழில் அறிவியல் இல்லை என்று கருதும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்...' என்று சொன்னது சாலத்தகும். இந்த ஆலோசனை எல்லாத்துறைகளுக்கும் ஏற்புடையது. ஓஹோ! ஒன்பதாவது படி ஏறி, அதே எட்டில் பத்தாவது படி அடைந்தோம்.

அங்கிருந்து எட்டிப்பார்த்தால்...

இன்றைய செய்தி: லாட்வியா என்ற நாட்டில், மக்கள் ரெஃபெரண்டம் முறையில், ரஷ்ய மொழியை இரண்டாவது மொழியாக வைத்துக்கொள்ள திட்டவட்டமாக மறுத்து விட்டார்கள். இது பூதாகாரமான பிரச்னைகளுக்கு வித்திட்டிருக்கிறது. ஏனெனில், மூன்றில் ஒரு பங்கு மக்கள் ரஷ்ய இனம். ரஷ்யா முரட்டு அண்ணாச்சி வேறே. ஆனால், அன்றொரு நாள், வலுக்கட்டாயமாக ரஷ்யர்களை எக்கச்சக்கமாக குடியேற்றம் செய்ததை லாட்வியர்கள் மறக்கவில்லை. தேசாபிமானம், மொழிப்பற்று, கலாச்சார வேர்கள், இறை வணக்கம் போன்றவற்றை, பண்புடன் கையாண்டால் தான், தாய்மொழி வளரும். நாமும் எட்டு படிகள் ஏறி எட்டிப்பார்க்கலாம். அத்துடன் மொழிகள் நசித்துப்போவதைத் தடுக்கலாம். ஆறாயிரம்/ஏழாயிரம் மொழிகள் அழியும் தருவாயில் உள்ளன. அந்தமான் தீவுகளில் ஒரு மொழி அண்மையில் நசித்தது. நாம் யாவரும், அவரவது வட்டாரமொழிகளை காப்பாற்ற வேண்டும். பழங்காலம் போல் இல்லாமல், ஒலியும், ஒளியும், இணைய தளத்தில் சக்கைப்போடு போடுகின்றன. வேறு என்ன வேண்டும், பராபரமே!

இன்னம்பூரான்

21 02 2012

http://www.newsonweb.com/newsimages/July2009/8613a8ac-d791-4e48-bdb4-d74f984c5d1a1.jpg




படத்தில் இருப்பவர் எங்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஸ்தாபகர்களில் ஒருவர் ஆன சுபாஷிணி ட்ரெம்மல்.


பி.கு: ‘தமிழ்’ என்று கேட்டதும் வந்த படம் மேலே. ‘இன்னாது இது! பாமர கீர்த்தி ‘ஃபில்மா காட்றே! இன்னா நினச்சுக்குணே’ ந்னு யாராவது கேட்றுவாகளோ என்று நடுநடுங்கி, எடுத்த சித்திரம் கீழே. ஆளை விடு சாமி!

http://www.shakthimaan.com/ta/downloads/computer/tamil-keyboard-unicode.png


12 comments:

  1. அருமையாக உள்ளது கட்டுரை. எல்லா மொழியும் கற்றுணர்ந்தல் ஒன்றும் தவறில்லை. தமிழ் மொழியில் அப்போதுதான் பிறமொழிகளிலிருந்து நல்ல நூல்களை மொழிபெயர்ப்பு செய்யமுடியும்.இங்குள்ள நூலகளை பிறமொழிக்கு கொண்டு செல்ல வேண்டும்.இதனைச் செய்தாலே தமிழ் கண்டிப்பாக செழித்தோங்கும்.

    ReplyDelete
  2. தாய் மொழியின் முக்கியவத்தை உணர்த்தும் விதமான ஒரு அருமையான கட்டுரை. நன்றி பகிர்வுக்கும்.

    ReplyDelete
  3. நல்ல பயனுள்ள கட்டுரை. பலமொழிகள் தெரிந்து கொள்வதால் நமக்குதான் பலவித்ததிலும் நல்லது.அறிவு விசாலமாகும்.பலமொழிகளிலும் இருக்கும் பயனுள்ளபுத்தகங்கள் படித்து அறிந்து கொள்ள முடியும்

    ReplyDelete
  4. ஓ... இன்று தாய் மொழி தினமா..(கோபிக்க வேண்டாம்...உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்!) படிப் படியாக விளக்கியிருப்பது மேலும் கீழுமாக சிரக்கம்பம் செய்ய வைக்கிறது.

    இன்று பாண்டிச்சேரி அன்னையின் பிறந்த தினமும் கூட என்று இன்னொரு தளத்தில் படித்து அறிந்து கொண்டேன்.

    ReplyDelete
  5. வாங்க விச்சு, நீங்க கூறி இருக்கும் கருத்து எனக்கும் ஏற்புடையதே; இதைப் பலரிடமும் சொல்லிட்டு வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கேன். :)))))

    ReplyDelete
  6. நன்றி ராம்வி.

    ReplyDelete
  7. வாங்க லக்ஷ்மி, நீங்க சொல்றது சரியே.

    ReplyDelete
  8. வாங்க ஶ்ரீராம், படிப்படியாக விளக்கி இருப்பது மட்டுமா? இன்னும் எண்ணற்ற விஷயங்களில் அவருடைய ஞானம் பிரமிக்க வைக்கும்.

    அந்தக் காலத்து எஸ்.வி.வி. போல் ஹாஸ்யமாகவும் எழுதுவார். லா.ச.ரா. போல் உருக்கமாகவும் ஜீவன் ததும்பவும் எழுதுவார்.

    இவர்கள் சந்தித்தால் அப்படினு அந்தக் கால விகடனில் படிச்சிருக்கீங்களா? அந்தப் பாணியில் இவர் பலரையும் அறிமுகம் செய்துள்ளார்.

    அதோடு சில குறிப்பிட்ட காரக்டர்களைப் பற்றியும் விகடனில் கோபுலு படங்களோடு சாவியின் எழுத்தில் வந்து கொண்டிருந்தது. நினைவில் இருக்கிறதா?
    காரக்டர் ஸ்டடி பண்ணி அப்படியும் எழுதுவார்.

    ReplyDelete
  9. இன்னம்பூரான் பற்றியும் ,அவர் கூறிய பத்து படிகளையும்

    தெரிந்து கொண்டோம் .,பதிவுக்கு நன்றி கீதாமா

    ReplyDelete
  10. வாங்க ப்ரியா. வரவுக்கு நன்றிம்மா.

    ReplyDelete
  11. பத்து படி ஏறச்சொன்னால், பத்து பேர் பின்னாலே. எல்லாம் கீதா சாம்பசிவம் உபயம். நன்றி யாவருக்கும். நீங்கள் சொல்வதெல்லாம் எனக்கு ஊக்கு. அதாவது ஹூக் போட்டு ஊக்குவிக்கிறது.

    ReplyDelete
  12. இட்லாண்டி ஒக ரோஜ் உந்தனி நேட்டி வரக்கு தெலுஸ்கோலேக்க பொய்யானு... மஞ்சிதண்டி...:)

    நோ டென்ஷன் மாமி, தாய் மொழி தினம்னு சொன்னதால கொஞ்சம் பீலிங்க்ஸ் ஆப் தெலுகு ஆய்ட்டேன்...;)Nice post

    ReplyDelete