Wednesday, November 28, 2012

சென்னையில் ஒரு வாரம்! :))))

சென்னையிலே தான் அண்ணா பையருக்குக் கல்யாணம்.  தீபாவளி கழிச்சு அந்த சனியன்று பல்லவனில் சென்னை கிளம்பினோம். ஞாயிறன்று சுமங்கலிப் பிரார்த்தனை, திங்கள் சமாராதனை.  செவ்வாயன்று எங்களுக்கு எங்க மருத்துவர் கிட்டே மாதாந்திர சோதனை(பல மாதங்கள் கழிச்சு).  அவர் கிட்டே சாதாரணமாவே ஒரு நாள் ஆயிடும்.  அன்னிக்கும் அது போல் ஆச்சு.  புதனன்று கல்யாணத்துக்குச் செல்ல வேண்டிய முன்னேற்பாடுகள், கோலம் போடுதல், சாமான்களைச் சரி பார்த்தல் இத்யாதி, இத்யாதி.  வியாழனன்று காலை நாலு மணிக்குப் போன மின்சாரம் ஆறு மணிக்குத் தான் வந்தது.  அதுவரை இருட்டிலே குருட்டடிச்சுட்டு இருக்க வேண்டியதாப் போச்சு.  :(அண்ணா வீட்டில் இன்வெர்டர் இல்லை. :(  ஏழரைக்கு அப்புறம் கிளம்பிச் சத்திரத்துக்குப் போறதுக்குள்ளே மயக்கமே வந்துடுச்சு. மூன்று நாட்கள் கல்யாணத்தில் கழிந்தது. வெள்ளியன்று  கல்யாண முஹூர்த்தம் முடிஞ்சதும் குரோம்பேட்டில் திரு நடராஜன் கல்பட்டு சாரைப் பார்க்க வருவதாய்ச் சொல்லி இருந்தேன்.  கிளம்பறச்சே 2 மணி ஆயிடுச்சு.

அவசரம் அவசரமா ஆட்டோவைத் திரும்பி வரவும் சேர்த்துப் பேசிக் கொண்டு போயிட்டு அவர் அளித்த புத்தகங்களைப் பெற்றுக் கொண்டு வந்தோம். இன்னும் படிக்க ஆரம்பிக்கலை.  தொட்டாலே தூள் தூளாகிடும் போல் இருக்கு. சரியா நூறு வருடங்கள் முன்னே பதிப்பித்த ராமாயணப் புத்தகம்.  சனியன்று வல்லி தொலைபேசியில் அழைச்சாங்க.  எங்கே போறது!  பேசிட்டு இருக்கிறச்சேயே அழைப்பு வேறே வந்தாச்சு. அன்னிக்கு அங்கே கட்டுச் சாதக்கூடை விசேஷம் முடிஞ்சு மத்தியான வண்டியிலே மாயவரம் போகணும்.  திங்களன்று அங்கே எங்க முக்கியமான நண்பர் மற்றும் உறவினர் பொண்ணுக்குக் கல்யாணம்.  பொண்ணு எங்க சொந்தப்பொண்ணு மாதிரி.  எங்களைப் பெரியப்பா, பெரியம்மானே கூப்பிடுவா.   அங்கே போயிட்டோம்.  ஞாயிறன்று மாலை ஆறு மணிக்கு மேல் தான் நிச்சயதார்த்தம்னு சொன்னதாலே அங்கிருந்து சித்தர் காடும், திருமணஞ்சேரியும் போயிட்டு வந்தோம்.  எனக்குப் பூம்புகார் போகணும்னு ஆசை.  ஆனால் அங்கே புராதனச் சின்னங்கள் ஏதும் இல்லை;  பார்க்கறாப்போல் ஒண்ணும் கிடையாதுனு சொல்லிட்டாங்க.  கொஞ்சம் ஏமாற்றம் தான்.

சென்னை வந்துட்டு யார் கிட்டேயும் சொல்லலைனு கோவிக்க வேண்டாம்.  சூழ்நிலை அப்படி.  ரொம்ப டைட்டான நிகழ்ச்சி நிரல். :( அதனால் தான் எங்கே போறேன்னு சொல்லாமலேயே போனேன்.  முகமூடி போட்டுக் கொண்டு கிளம்பிப் போயிட்டு முகமூடி போட்டுக் கொண்டே வந்தாச்சு.  மாயவரத்திலும் அபி அப்பாவுக்கு அங்கே வரப் போறதைச் சொல்லலை.  கல்யாணத்திலே பார்த்தாலும் பார்க்கலாம்னு நினைச்சேன்.  ஆனால் வேறு சில நிகழ்வுகளால் சில மாற்றங்கள்.   அபி அப்பாவுக்கும் காலம்பரத்தான் மாயவரம் வந்துட்டுப் போனதைச் சொல்லி இருக்கேன். நம்ம வலை உலக நண்பர்களைப் பார்க்கவென்றே சென்னைக்கு வரணும்.  சென்னையிலே இருந்தப்போ பிரச்னையே கிடையாது.  எல்லாரையும் எங்க வீட்டுக்கு வரச் சொல்லிடுவேன். இப்போ ஸ்ரீரங்கம் வாங்க எல்லாரும்.  எல்லாருக்கும் கொஞ்சம் கோபம் தணியறதுக்காக இரண்டு படங்கள் இப்போ.


இது எங்க அம்மா, அப்பா படம்.  கல்யாண மேடையில் வைச்சிருந்தாங்க. 



ஸ்வீட்டிலேயே புடைவை.  பாதாம் பருப்புப் புடைவை. :))))

 முந்திரிப்பருப்பு வேஷ்டி


பாதாம் ரவிக்கைத்துணி, முந்திரிப்பருப்பு அங்க வஸ்திரம்.   மற்ற சில படங்களும், சித்தர் காடு படங்களும் ஒவ்வொன்றாகப் பகிர்ந்து கொள்கிறேன்.

27 comments:

  1. ...................
    (உங்க பேச்சு கா)

    ReplyDelete
  2. பாதாம் பருப்புப் புடவை...!!!...?

    முந்திரிப்பருப்பு வேஷ்டி...!!!...?

    ReplyDelete
  3. ஹிஹி கெளதமன் சார், நான் பழம்! :)))))

    ReplyDelete
  4. டிடி, அது பாதாம் அல்வாவில் புடைவை மாதிரியான அலங்காரமும், காஜூ கத்லியில் வேஷ்டி மாதிரியான அலங்காரமும் செய்திருந்தார்கள். :))))))

    ReplyDelete
  5. கல்யாணம் நன்னா நடந்ததா. சென்னை போறதா தெரிஞ்சிருந்தா கார்த்திகை விளக்கு ஒன்னு வாங்கி வைக்க சொல்லியிருப்பேனேப்பா! எவ்வளவு தினுசு!!.நான் வரும்போது காக்கா ஒஷ் ஆயிடறது:(( இந்த வருஷம் அடுக்கு விளக்கு ,rattan swing மாதிரியெல்லாம் விளக்கு!

    நானே நினச்சேன் ஒருவாரம்னு சொல்லி 10 நாளுக்கு மேல ஆனாப்புல இருக்கேன்னு:)

    பாதாம் புடவை பெரிய போட்டோ PLEASE

    ReplyDelete
  6. அட நீங்களும் சனிக்கிழமை பல்லவனில் தான் வந்தீங்களா? தெரியாமப் போச்சே....

    இப்போது இந்த மாதிரி இனிப்புகளில் புடவை வேட்டி செய்து வைத்து விடுகிறார்கள். நான் கூட ஒரு கல்யாணத்தில் பார்த்தேன்.

    ReplyDelete
  7. அரசியல் வாதியைவிட பிசி ஷெட்யூல்:)
    அத்தைன்னால் சும்மாவா. ஓட வேண்டியதுதான். ஆனாலும் உங்கவீட்டுக் கல்யாணா சந்தோஷம் என்னையும் தொற்றிக் கொண்டதுப்பா.
    அம்மா அப்பா எவ்வளவு அழகா இருக்காங்க. ரொம்ப நன்றாஆக இருக்கு பாதாம் புடவையும் முந்திரிப் பருப்பு வேஷ்டியும்.
    மாயவரம் பத்தி இன்னோரு பதிவு போடணும். சொல்லிட்டேன்.

    ReplyDelete
  8. அந்த ஸ்வீட் வேட்டி, புடவைல்லாம் சீருக்கு வச்சிருக்காளா. அப்புரம் அட்டாக்க்தானே ஆளாளுக்கு பிச்சி தின்ன வேண்டியதுதானே?

    ReplyDelete
  9. அப்போ சாய்பாபா கோவிலுக்கு எதிரே சத்திரம்னு சொன்னது இந்தக் கல்யாணம்தானா? அட!

    கல்யாண கலாட்டா சுவாரஸ்யங்க்ளே தனிதான்!

    ReplyDelete
  10. பயங்கர பிசியோ மாமி....:)

    பாதாம் புடவையும், முந்திரி வேஷ்டியும் ஜோர்...:)

    ReplyDelete
  11. டிடினே பேர் வச்சாச்சா? ரைட்டு.


    ReplyDelete
  12. ஸ்வீட் புடவை வேட்டியெல்லாம் இப்பத்தான் பார்க்கிறேன். கேக் மாதிரி வெட்டி சாப்பிடறதா எப்படி? இதுல கஜம் கணக்கு உண்டா? பார்டர் ஜரிகைனு அதுலயும் சர்சார்ஜ் ஏத்துவாங்களா?

    ReplyDelete
  13. வாங்க ஜெயஸ்ரீ, இங்கேயும் கார்த்திகை விளக்குக் கிடைக்குது. எப்படி வேணும்னு சொல்லுங்க வாங்கி வைக்கிறேன். டிசம்பரில் வரச்சே வாங்கிக்கலாம். பாதாம் புடைவை பெரிய போட்டோ அனுப்பி வைக்கிறேன்.

    ReplyDelete
  14. அட, வெங்கட், நீங்களும் பல்லவனா? அன்னிக்குக் கேட்டு வைச்சுக்கலை. ஆமாம், ஆனால் முந்திரிப்பருப்புக் கேக், பாதாம் கேக்கில் தான் காஸ்ட்லி புடைவை, வேஷ்டி. :))))

    ReplyDelete
  15. ஹிஹி வல்லி, நாமளும் தான் தலைவி ஆச்சே. பின்னே? பிசி இல்லாமல் என்ன! மாயவரம் பதிவு வரும் கட்டாயமா.

    ReplyDelete
  16. வாங்க லக்ஷ்மி, அதெல்லாம் பிச்சுத் திங்க முடியலை. அது ஒரு சோகக் கதை. இப்போ எடுக்க முடியாதுனு சொல்லிட்டாங்க. :)))))

    ReplyDelete
  17. ஹிஹிஹி, ஸ்ரீராம், சாய்பாபா கோயில் எதிரே உள்ள சத்திரத்தில் 2005-இல் கல்யாணம். அந்தக் கல்யாணத்தில் நான் மாமியாக இருந்தேன். இந்தக் கல்யாணத்தில் அத்தை. பல்லாவரம் ஜிஎஸ்டி ரோடில் கல்யாணச் சத்திரம். :)))))

    ReplyDelete
  18. வாங்க கோவை2தில்லி, இப்போவும் பிசி தான். நாளைக்குப் பொண்ணு மாப்பிள்ளை, அண்ணா, மன்னி, தம்பி, தம்பி மனைவி, சம்மந்திப் பேர் எல்லாரும் வராங்க. இரண்டு நாட்கள் கொஞ்சம் பிசி தான். :)))))

    ReplyDelete
  19. அப்பாதுரை, டிடி நல்லா இருக்கு, சுலபமாயும் இருக்கு. இல்லையா? அதான். :))))

    ReplyDelete
  20. கேக்கே தான் அப்பாதுரை. பார்டருக்கு ஸ்வீட்டிலே வைக்கும் சில்வர் பேப்பரில் கலர் போட்டு வைக்கிறாங்க. அம்புடுதேன். கஜம், மீட்டர் கணக்கெல்லாம் கிடையாது. ஒரு சில கேட்டரிங் கான்ட்ராக்டர்கள் இதை ஒரு காம்ப்ளிமென்டாக இரு தரப்பினருக்கும் கொடுக்கிறாங்க. எல்லாக் கல்யாணங்களிலும் பார்க்க முடியறதில்லை.

    ReplyDelete
  21. எங்கம்மா கூட ஸ்விட் புடவை செய்வாங்க. பொட்டுக்கடலையை பொடிசெஞ்சு, சர்க்கரை நெய் கலந்து இதே மாதிரி புடவை டப்பாவில் வைத்து ஜரியெல்லாம் வைப்பாங்க. சின்ன சின்ன ஜீரக மிட்டாய்க்களை கொண்டு புடவையில் டிசைன் செய்வாங்க. :)

    இப்ப கிருஷ்ணா ஸ்வீட்ஸுன்னு நினைக்கிறேன் புடவை,ரவிக்கை, வேஷ்டி எல்லாம் ஸ்வீட்டிலேயே செஞ்சு விக்கறாங்க.

    ReplyDelete
  22. வாங்க புதுகை, ஸ்வீட் வாசனை உங்களையும் இழுத்துட்டு வந்துடுச்சா? :))) ஜெம்ஸ் மிட்டாய்களில் கூட டிசைன்கள் போடுவாங்க. பார்த்திருக்கேன். கிருஷ்ணா ஸ்வீட்ஸில் இப்படிச் செய்து விற்கிறது தெரியாது. வெளியே வாங்கறது ரொம்பவே குறைவு. அநேகமா எல்லாமும் நானே வீட்டில் செய்துடுவேன். :))))))

    ReplyDelete
  23. கிர்ர்ரர்ர்ர்

    ReplyDelete
  24. complimentஆ கொடுக்கிறாங்களா? பரவாயில்லையே?

    ReplyDelete
  25. வாங்க எல்கே, பார்க்கவேண்டிய லிஸ்ட் ரொம்பப் பெரிசா இருந்ததாலே பதிவர் மாநாடு தான் நடத்தி இருக்கணும். அதான் ஒருத்தர் கிட்டேயும் சொல்லலை. :))))))

    ReplyDelete
  26. அப்பாதுரை, இந்தக் காம்ப்ளிமென்டெல்லாம் காட்டரிங் காரங்களுக்கு ஜூஜூபி! அவங்க அவங்க ஒரு சாப்பாட்டுக்கு வாங்கற பணத்திலே என்னவெல்லாமோ கொடுக்கலாம். :)))) இது இப்போத் தமிழ்நாட்டிலே நல்லதொரு தொழிலாக மாறிவிட்டது.

    கல்யாணத்தில் டிபன் மட்டுமே ஒரு இலைக்கு 200ரூ, குறைந்த பட்ச விலையாக நிர்ணயித்திருக்கிறார்கள். இந்த 200 ரூபாய்க்குள் வீட்டில் செய்தால் நான்கு பேர் தாராளமாக நன்றாகச் சாப்பிடலாம். ஆகவே லாபத்தைக் கணக்குப் பண்ணுங்க. :)))))

    ReplyDelete
  27. ஆகா!பாதாம் புடவையும், முந்திரி வேஷ்டியும் அள்ளிக்கொண்டே போகிறது.

    ReplyDelete