Saturday, January 12, 2013

உங்க வீட்டிலே பொங்கல் வந்தாச்சா? 2


பொங்கலுக்கு முதல் நாளே வீடு சுத்தம் செய்யப் பட்டுப் பொங்கல் பானை வைக்கும் இடம் நல்ல பசுஞ்சாணத்தினால் சுத்தம் செய்யப்படும்.  சாணத்தினால் மெழுகுவார்கள். அவரவர் வழக்கப்படி அரிசி மாவினால் கோலம் போடுவார்கள்.  ஒரு சிலர், அடுப்பு வைக்கும் இடத்திலேயே சூரியன், சந்திரன் போலக் கோலம் போடுவார்கள்.  சில வீடுகளில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் இடத்தில் சூரியன், சந்திரன் போல் கோலம் போடுவார்கள்.  இது அவரவர் வீட்டு வழக்கத்தை ஒட்டியே வரும். மனித மனத்தின் முக்கிய மூன்று கரணங்கள் ஆன மனம், வாக்கு, காயம்  ஆகியவற்றை நினைவு கூரும் விதமாக மூன்று கற்கள் முக்கோணமாய் வைக்கப்பட்டதாய்த் தெரிய வருகிறது..முக்கரணங்களின் உதவியால் தெய்வீகமான பாலைப் பொங்க விட்டு, ஆத்ம ஞானமென்னும் பொங்கலைப் பெறலாம் என்பதைச் சுட்டிக்காட்டுவதே இதன் முக்கிய தத்துவமாகவும் அறிகிறோம்.

பொங்கல் வைக்கப் போகும் பானை ஒரு சிலர் புத்தம்புதியதாக வாங்குவார்கள்.  மண் பானை இல்லாமல் வெண்கலமாய் இருந்தாலும் சில வீடுகளில் புதிய பானை வாங்குவது வழக்கம்.  மற்றபடி சென்ற வருடங்களில் உபயோகித்த வெண்கலப் பானையையே நன்கு சுத்தம் செய்து, மஞ்சள், சந்தனம், குங்குமம் தடவி, மஞ்சள் கொத்துக் கட்டிப் பாலும் நெய்யும் சேர்த்து வீட்டில் இறைவனை வழிபடும் பூஜை இடத்தினருகே வைத்து வழிபட்டுப் பின்னர் அடுப்பில் நல்ல நேரம் பார்த்து ஏற்றுவார்கள். சூரியன் மகர ராசியில் நகர ஆரம்பிப்பதால் மகர சங்கிராந்தி எனவும் அழைக்கப்படும் இந்தப் பொங்கல் பண்டிகையில் பொங்கல் வைப்பதை சங்கராந்தி காலம் ஆரம்பிக்கும் தை மாசம் பிறக்கும் நேரத்தில் செய்வதைச் சில வீடுகளில் வழக்கமாய்க் கொண்டிருக்கிறார்கள்.  அதன்படி பார்த்தால் இந்த வருடம் காலை ஒன்பது மணிக்கு மேல் பத்தரைக்குள் பொங்கல் வைக்க நல்ல நேரம் எனச் சொல்கின்றனர்.

சூரியன் தெற்குத் திசையிலிருந்து வடக்கு நோக்கி நகர்வதையே மகர சங்க்ரமணம் அல்லது உத்தராயண புண்யகாலம் என்கிறோம். பொங்கல் பொங்கி விட்டு அன்றைய தினம் விளையும் எல்லாக் காய்களையும் போட்டுக் குழம்பு வைப்பது பல வீடுகளில் வழக்கம்.  பொதுவாக இதற்கு நாட்டுக்காய்களான, கத்திரி, வாழை, சேனை, பூஷணி, பறங்கி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, அவரை, மொச்சை, கொத்தவரை, சிறு கிழங்கு, பெருகிழங்கு  போன்றவையே பயன்படுத்துவார்கள்.  காலப் போக்கில் இன்றைய பழக்கத்திற்கு ஏற்ப ஒரு சிலர் உருளைக்கிழங்கு, காரட், பீன்ஸ், செளசெள போன்றவையும் தக்காளியும் சேர்க்கின்றனர். இனிப்பான பொங்கலை உண்பதற்குக் காரமான குழம்பு தான் தொட்டுக்கொள்ள உதவும் என்று மட்டுமில்லாமல், இறைவனுக்கு நிவேதனமாகவும் படைப்பதால் பூமியில் விளையும் அனைத்தும் அவன் அருளால் கிடைத்தது என்று நன்றி கூறும் விதமாகவும் இதைச் செய்கின்றனர்.  மண்ணின் அடியில் விளையும் கிழங்குகள், மண்ணின் மடியில் படரும் கொடிகளின் காய்கள், செடிகளின் காய்கள், மரங்களின் காய்கள் என அனைத்து வகைக்காய்களும் இந்தக் குழம்பில் இடம் பெறும். பின்னர் அந்தக் குழம்பை தினம் தினம் சுண்ட வைத்துக் கொஞ்ச நாட்களுக்குச் சாப்பிடுவதுண்டு.

பொங்கல் நிவேதனத்தில் பயன்படும் மஞ்சள் கொத்து மங்கலத்தையும், தோகையுடைய கரும்பு இனிப்பையும், இஞ்சிக் கொத்து காரத்தையும், வெற்றிலை, பாக்கு துவர்ப்பையும் கொடுக்கின்றன என்பதால் இந்தச் சுவைகள் அனைத்தும் வாழ்வில் இடம் பெறும் என்பதையும் கூறாமல் கூறுகிறது. தமிழ் நாட்டில் உழவர் திருநாள், தமிழர் திருநாள் என்றெல்லாம் அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை, மற்றச் சில மாநிலங்களில் மகர சங்கிராந்தி எனவும், லோகிரி எனவும், மஹாபிகு எனவும் அழைக்கப்படுகிறது. விவசாயிகள் அவர்கள் விவசாயத்துக்குப் பயன்படும் அனைத்துப் பொருட்களையும் சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் பூசி வழிபடுவார்கள்.  ஏர்க்கலப்பை, கருக்கரிவாள், மரக்கால், உழக்கு, கூடை முறங்கள், களைக்கொட்டு,மண்வெட்டி, கடப்பாரை போன்ற பொருட்கள் இதில் அடங்கும். ஆந்திராவில் பொங்கல் சமயத்தில் பொம்மைக்கொலு வைப்பார்கள் என்றும் தெரிய வருகிறது. குஜராத், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மஹாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் அன்று பட்டம் விடும் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்.  மேலும் எள், வேர்க்கடலை ஆகியவற்றில் வெல்லம் சேர்த்து உருண்டைகளாகவோ, வில்லைகளாகவோ செய்து ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வார்கள்.  இதன் மூலம் ஒருவருக்கொருவர் அன்பு வலுப்படும் என்பது அவர்கள் நம்பிக்கை.

நிலைப்படிகளை நன்கு கழுவிக் கோலம் போட்டு மாவிலைக்கொத்துகளாலும் வேப்பிலைகள், பூளைப்பூ போன்றவற்றால் தோரணங்கள் கட்டித் தொங்க விடுவார்கள்.  வாசலில் சூரியனுக்கு வழிபாடு நடப்பதால் பெரிய தேர்க்கோலம் ஒற்றைச் சக்கரத்தோடு போடுவார்கள்.  ஒரு சிலர் வாசலிலேயே வடக்கே சூரியனின் உருவத்தையும், தெற்கே சந்திரனின் உருவத்தையும் வரைவார்கள். தீஞ்ச தீபாவளி,(வெடிகள் வெடிப்பதால் தீய்கிறது அல்லவா) காஞ்ச கார்த்திகை(கார்த்திகைக்கு அப்புறம் மழை நின்றுவிடும்.  மண் காய்ந்து கொண்டு வரும்) இவை எல்லாம் போய் நல்ல விளைச்சல் கண்டு அறுவடை செய்யும் நாளை மஹாராசன் பொங்கல் என உழவர்கள் சொல்வார்களாம்.


ஶ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளின் மார்கழி உற்சவம் பொங்கல் அன்றே நிறைவு பெறும். அன்று தண்டியல் எனப்படும் வாகனத்தில் ஆய்ச்சியரைப் போல் கொண்டை போட்ட வண்ணம் எழுந்தருளும் ஆண்டாளுக்கு பக்தர்கள், கரும்பு, மஞ்சள் எனப் பல பொருட்களைக் காணிக்கையாகக் கொடுப்பார்கள். அவற்றைப் பெற்றுக் கொண்டு ஆண்டாள் திருவீதிகளில் உலாவரும் காட்சி சிறப்பாக இருக்கும்  என்று தெரிய வருகிறது. 

18 comments:

  1. முக்கரணங்களின் உதவியால் தெய்வீகமான பாலைப் பொங்க விட்டு, ஆத்ம ஞானமென்னும் பொங்கலைப் பெறலாம் என்பதைச் சுட்டிக்காட்டுவதே இதன் முக்கிய தத்துவமாகவும் அறிகிறோம்./

    சிறப்பான பகிர்வுகள் .பாராட்டுக்கள்..
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. பொங்கல் விளக்கம் படிச்சாச்சு. இனி பொங்கல் சாப்பிட வேண்டியதுதான் பாக்கி! :))

    ReplyDelete
  3. பொங்கலுக்கு எப்படி தயாராகவேண்டும் என்பதிலிருந்து விளக்கமாக சொல்லி இருக்கீங்க, நன்றிங்க

    ReplyDelete
  4. உங்க பக்கம் எப்படி ஃபாலோவரா இணைக்கணும்?

    ReplyDelete
  5. சிறப்பான பகிர்வு.

    ReplyDelete
  6. வாங்க ராஜராஜேஸ்வரி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  7. வாங்க ஸ்ரீராம், நாளன்னிக்குக் கிடைக்கும். அது சரி TF னா என்னனு மண்டையிலே ஏறலையே?

    ReplyDelete
  8. வாங்க பூந்தளிர், முதல் வரவுக்கு நன்றி. என் பதிவோட லிங்கை உங்க டாஷ்போர்டிலே Reading Listக்குக் கீழே இருக்கும் ADD Button Click செய்து காப்பி, பேஸ்ட் செய்யவும். பின்னர் அது மறைந்திருந்து தொடரப் போறியா, எல்லாருக்கும் தெரியறாப்போலயானு கேட்கும். அதுக்கு பதில் சொல்லிட்டு ADD Click செய்துட்டால் என்னோட பதிவுப் பக்கம் உங்க ஃபாலோ அப்பிலே காண முடியும். புதுப் பதிவுகள் வரச்சே பத்து நிமிஷத்துக்குள் காட்டும்.

    ReplyDelete
  9. வாங்க கோவை2தில்லி, பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. TF = to follow
    இதை கவனியுங்கள்: (தினமலர் செய்தி)
    "ஸ்ரீரங்கம்: கொள்ளிடம் அருகே தங்கும் விடுதி கட்டுவதற்காக குழி தோண்டிய போது பழங்காலத்தை சேர்ந்த 42 சிலைகள் பூமிக்கடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. சிலைகளின் புராதன தன்மை குறித்து ‌தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். கண்டெடுக்கப்பட்ட சிலைகளில் பெருமாள் ,ஆஞ்சநேயர் சிலைகள் விலை மதிப்பற்‌றவை என மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ தெரிவித்தார்...."
    போய்ப் பார்த்து படம் எடுத்து பதிவிடுங்கள்.

    ReplyDelete
  11. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் கீத்தாம்மா..

    ReplyDelete
  12. ஓஹோ, அது தோணலை ஸ்ரீராம். THF தான் நினைவில் வந்தது. :)))) அதான் ஒரு H விட்டுட்டுப் போட்டிருக்கீங்க போலனு நினைச்சுட்டேன். :D

    ReplyDelete
  13. சரியாப் போச்சு கெளதம் சார், இங்கே இருக்கிற உச்சிப் பிள்ளையாரையே இன்னும் போய்ப் பார்க்க முடியலை! :((( என்னத்தைச் சொல்றது? அதோட அதெல்லாம் பார்க்கக் கலெக்டர் ஆப்பீச்ச்ச்சிலே உள்ளே விடணும். நாம இணையத்திலே தான் பாப்புலர். மக்களுக்குத் தெரியாதில்ல! :P:P:P :)))))))

    ReplyDelete
  14. வாங்க அமைதி, அமைதியான வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் எங்கள் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் கீதா!

    ReplyDelete
  16. சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்.

    கிராமத்தில் முற்றத்தில் கோடுகள் போட்டு சூரியன், சந்திரன் வரைந்து கோலம் போட்டு பொங்குவோம். மாலை கடற்கரையில் பட்டம் விடுவார்கள்.

    இப்பொழுது நகரத்தில் காஸ் அடுபபு பொங்கல்தான்.

    ReplyDelete