Wednesday, April 10, 2013

மணிஜியின் சோகம் வேறு எவருக்கும் வர வேண்டாம்!

ஜி+இல் நான்கைந்து நாட்களாக மணிஜி (பதிவர்) என்பவரின் மனைவிக்காகப் பிரார்த்தனை செய்யச் சொல்லி இருந்தாங்க.  அனைவரின் பிரார்த்தனையும் மீறி அந்தப்பெண்மணியை இறைவன் அழைத்துக் கொண்டான். யார் இந்த மணிஜி என்றெல்லாம் தெரியாது.  பெயரை அவ்வளவாய்க் கேள்விப் பட்டதில்லை.  ஆனால் கடந்த ஒருவாரமாக ஜி+இல் இவருக்காக இவர் மனைவி உடல்நலம் குணமடையப் பிரார்த்தனைகள்.  ஆனால் இன்று சோகச் செய்தி! :(  அந்தப் பெண்மணி இறந்துவிட்டாராம். மனதைப் பிழிகிறது. சிறு தீ விபத்து அந்தப் பெண்ணிற்குப் பெரிய யமனாக வந்துவிட்டது.  பெண்கள் சமைக்கையில் கூடியவரையில் பருத்தி ஆடைகளையே அணிதல் நன்மை தரும்.  எரிவாயு அடுப்பில் சமைக்கும் பாத்திரத்தை வைத்துச் சாமான்களைப் போட்டுச் சமைக்க ஆரம்பித்தால் வேறு எங்கும் நகரக் கூடாது.

ஒரு சிலர் காஃபி போட்டுக்கொண்டோ, சமைத்துக் கொண்டோ கணினியில் அமர்ந்து வேலை செய்வது, தொலைக்காட்சித் தொடர்கள் பார்ப்பது, திரைப்படம் பார்ப்பது எனச் செய்கின்றனர்.  மிக மிக ஆபத்தான வேலை அது.  உங்கள் சமையலுக்கு மிஞ்சிப் போனால் ஒரு மணி நேரம் ஆகும்.  அந்த ஒரு மணி நேரத்தை முழு மனதோடு சமையலுக்காக மட்டுமே செலவிடுங்கள்.  வீட்டில் வேறு யாரும் இல்லாமல் தொலைபேசி அழைப்போ, அல்லது வேறு யாரும் வீட்டுக்கு வந்து அழைப்பு மணியை அழுத்தினாலோ அடுப்பைத் தணித்துவிட்டுச் செல்லுங்கள்.  முக்கியமான விஷயம் எனத் தெரிய வந்தால் உடனடியாக அடுப்பை அணையுங்கள். பதட்டப்படாமல் நிதானமாக யோசியுங்கள்.  சமைத்துக் கொண்டே குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தருவது, சின்னக் குழந்தையைக் குளிப்பாட்டுவது போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள்.

ஜன்னல் கதவுகள் திறந்திருக்கட்டும். வீட்டில் வேறு யாரும் இல்லை எனில் வாசல் கதவையும் எளிதில் திறக்கிறாப்போல்  வையுங்கள்.  சாதம் சமைக்கையில் கஞ்சி வடிக்கும் வழக்கம் உண்டென்றால் கூடுதல் கவனம் தேவை.  அதுவும் இப்போதெல்லாம் பெண்கள் தலையை விரித்துப் போட்டுக்கொள்வது தான் நாகரிகமாய்க் கருதப் படுகிறது.  அநேகமாய்ச் சமைக்கையில் எந்தப் பெண்ணும் தலையை விரித்துப் போட்டிருக்க மாட்டாள் என நம்புகிறேன்.  என்றாலும் அதிலும் கூடுதல்கவனம் தேவை.  முன்பக்கம் விழும் மயிரில் நெருப்புப் பிடிக்க வாய்ப்பு உண்டு.  குனிந்து நிமிர்ந்து வேலை செய்கையில் கவனம் தேவை.  சமையலை ஒரு கலையாக எண்ணி அதை முழுவதும் முடித்துவிட்டே அடுத்த வேலை என்று வைத்துக் கொள்ளுங்கள்.  இங்கொரு கண்ணும், அங்கொரு கண்ணுமாக இருக்க வேண்டாம்.  ஆபத்தானது.  இந்த வாரத் தொடக்கத்திலிருந்தே துயரச் செய்திகள் தான்.

இனி வரும் நாட்கள் நல்லவையாக இருக்கட்டும்.  மணிஜி அவர்கள் இந்த மீளாத்துயரத்திலிருந்து மீண்டு வாழ்க்கையைப் புதிதாக வாழ இறைவன் அருள் புரிவானாக. 

8 comments:

  1. அவரது மனைவியின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்...

    ReplyDelete
  2. மணிஜியின் சோகம் யாருக்கும் வரவேண்டாம் உண்மைதான்.
    வாழ்க்கை துணை இழப்பு பெரிய சோகம்.

    மணிஜி அவர்களுக்கு இறைவன் ஆறுதலை தரவேண்டும்.
    சமையல் செய்ய ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகாது தான்.
    கொஞ்சம் கவனம் தேவைதான்.
    இவர் மனைவிக்கு எதனால் தீ விபத்து ஏற்பட்டது என்று தெரியவில்லையே!

    ReplyDelete
  3. மணிஜி அவர்களின் மனைவியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  4. மணிஜிக்கும் அவர் குடும்பத்தாருக்கும் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை இறைவன் கொடுக்கட்டும்.

    ReplyDelete
  5. வருத்தம் தந்த செய்தி....

    ReplyDelete
  6. வாங்க டிடி, நன்றி.

    கோமதி, விஷயம் எனக்குப் போனவாரம் தான் தெரியும். அதுவரை இப்படி ஒரு பதிவர் இருந்ததே தெரியாது.

    அப்பாதுரை, ரொம்பவே வருத்தமாய் இருக்கு.

    கோவை2தில்லி நன்றிம்மா

    ஸ்ரீராம் நன்றிங்க.

    வெங்கட் நன்றிப்பா.

    ReplyDelete
  7. துயரம் தரும் செய்தி.
    மணிஜிஅவர்களும் குடும்பத்தாரும் துயர் நீங்கிமீள பிரார்த்தனைகள்.

    ReplyDelete