எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, September 30, 2014

அம்பி கிட்டே சொல்லாதீங்க யாரும்! :P

நேற்று என்ன பண்ணறதுனு ம்ண்டையை எல்லாம் உடைச்சுக்கலை.  ஏனெனில் வெளியே போக வேண்டிய வேலை இருந்தது.  இந்த நாள் இனிய நாள், சே, இப்படித் தான் இருக்கும்னு முன்னாலேயே தெரியும் என்பதால் சுண்டலுக்காக எதையும் முன் கூட்டி நனைக்கவில்லை.  வெளியே போயிட்டு  மணிக்கு வந்தாச்சு. இதுக்கு மேலே பாசிப்பருப்புச் சுண்டல்னாக் கூட ஊற ஒரு மணி நேரமாவது தேவை.  ஆகையால் இனிய நாளாகவே இருக்கட்டுமே எனக் கேசரி செய்தேன்.  அதான் நேத்து நிவேதனம்.  ஆனால் நோ போணி! :(  மாடியிலே கம்யூனிடி ஹாலிலே யார் வீட்டிலோ ஏதோ விசேஷம்.  எல்லோரும் அங்கே போயிட்டாங்க.  நம்ம கேசரி இன்னைக்கும் இருக்கு.  இன்னைக்கு வரவங்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக் கொடுத்துடலாம்.  அதுக்காக இன்னைக்குச் சுண்டல் பண்ணாமல் முடியுமா?  பண்ணிட்டோமுல்ல!

முதலில் கேசரி.  படத்தைப் பார்த்துட்டு எல்லோரும் எடுத்துக்கலாம்.  கேசரி இன்னைக்கும் நல்லாவே இருக்கும். ஆனால் யாரும் அம்பி கிட்டே மட்டும் போய்ச் சொல்ல வேண்டாம்.  அம்பிக்கு நோ கேசரி! :P :P :P :P :P :P :P

 

கேசரியைச் சுடச் சுட நிவேதனம் பண்ணியாச்சு. முந்திரிப்பருப்புத் தான் இல்லை.  தீர்ந்து போச்சு.  பரவாயில்லைனு திராக்ஷைப்பழத்தை நிறையப் போட்டுட்டேன்.  பல் திடம் இல்லாதவங்களுக்கு சௌகரியமா இருக்குமே!  ப்ளீஸ், ப்ளீஸ், அம்பி கிட்டே போய்ச் சொல்லாதீங்க.









சும்மா கொலுவை மறுபடி ஒரு படம் எடுத்தேன்.






இன்றைய சுண்டல் வேர்க்கடலைச் சுண்டல்.  அது கீழே. அநேகமா போணி இருக்கும். :)))





இப்போல்லாம் பண்ணும்போதே நினைவாப் படம் எடுத்துடறோமுல்ல!





வேர்க்கடலைச் சுண்டல்.  இன்னும் நிவேதனம் பண்ணலை.  நாலரைக்குப் பண்ணணும்.   அதனால் கொஞ்சம் பொறுத்து எடுத்துக்குங்க. :)

Monday, September 29, 2014

தேங்காய், மாங்காய், பட்டாணிச் சுண்டலேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!




நேற்றைய சுண்டல் இது.  பார்க்க மட்டும்.  சுண்டலுக்கு நிறைய போணி இருந்ததாலும், வேறு வேலைகள் இருந்ததாலும் நேற்றே போட முடியலை.  இன்னிக்கு என்ன சுண்டல்னு எனக்கே தெரியாது!



Sunday, September 28, 2014

இது தான் விஜிகே 35 இல் இரண்டாம் பரிசு பெற்ற விமரிசனம்.

விஜிகே 35

கதைக்கான சுட்டி இங்கே!

கதைனு பார்த்தால் எதுவுமே இல்லை. இரண்டே வரிக்கதை.  ஒரு துப்புரவுத் தொழிலாளி அந்த மாநில அமைச்சரின் பாலிய நண்பன். இதைக் குசேலர், கிருஷ்ணனுடைய நட்புக்கு ஒப்பிடலாம்.  ஏனெனில் துரோணரும், துருபதனும் மாதிரி இருவரும் சண்டை இட்டுக்கொள்ளவில்லை.  சொல்லப் போனால் குசேலரைப் போல் உதவி தேடியும் இந்தக் கதையின் பூபாலன் செல்லவில்லை. துரோணரைப் போல் பாதி ராஜ்யமும் கேட்கவில்லை.  ஏன், எதுவுமே எதிர்பார்க்கவில்லை.  அவன் பாட்டுக்குத் தன் கடமையைச் செய்கிறான்.  தன் நண்பனாக இருந்து கூட விளையாடியவன் இப்போது  ஒரு மந்திரியாக ஆகி இங்கே வந்து சிறப்பான வரவேற்புப் பெறத் தான் ஒரு காரணமாக அமைய வேண்டும் என்றும் நினைக்கவில்லை. தன்னுடைய கடமையைச் சிறப்பாகச் செய்வது ஒன்றே தனக்கு இறைவனால் அளிக்கப்பட்ட வரம் என்றே நினைக்கிறானோ! அதிலேயே மன நிறைவும் காண்கிறான். இது எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய ஒன்றல்ல.

அந்த நண்பன் விழா முடிந்து திரும்பிச் சென்ற பின்னரும் நண்பன் தன்னை அடையாளம் கண்டு கொண்டு கௌரவித்ததை நினைத்து நினைத்து மெய்ம்மறந்து போய்த் தன் கடமையை மறக்கவில்லை.  அப்போதும் சரி, இப்போதும் சரி ஒரே மாதிரியான மனோநிலையுடன் தன் கடமையே அதாவது கருமமே கண்ணாக இருப்பவன் தான் பூபாலன் என்னும் துப்புரவுத் தொழிலாளி.

இவனுக்கு யாரும் இதை ஒரு உபதேசமாக போதித்திருக்கப் போவதில்லை. இதன் உள்ளார்ந்த பொருளும் புரிந்து நடந்து கொள்பவனும் இல்லை. இவன் இயல்பே இது தான். சொல்லப் போனால் ஸ்திதப் பிரக்ஞன் என்னும் வார்த்தைக்குச் சரியான உதாரணம்.  நடப்பவை நடக்கட்டும்;  அவை எதுவும் என்னை பாதிக்காது;  என் வேலை இது;  என் கடமை இது எனத் தன் கடமை ஒன்றையே எண்ணுபவன் இந்த பூபாலன் என்னும் யோகி. இல்லை;  இல்லை;  கர்ம யோகி.

அருமையான பெயர் பூபாலன் என்பது.  இந்தக் கதையில் கதாநாயகனுக்கு ஒரு பெயர் இருக்கிறது. துப்புரவுத் தொழில் சாமானியமானதல்ல.  நாம் போடும் குப்பைகளையும், கழிவுகளையும் தினம் தினம் நம்மைப் போன்றதொரு மனிதன் சுத்தம் செய்வதென்றால் சும்மாவா?  அதிலும் மனிதக் கழிவுகளை அகற்றுபவர்கள் பாடு மிகச் சிரமம்.  அதே போல் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி அதன் கெட்ட வாயு காரணமாக உயிர் விட்ட பூபாலன்கள் எத்தனையோ பேர்!  எல்லாவற்றுக்கும் இயந்திரம் கண்டு பிடித்தவர்கள் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் இயந்திரத்தை மட்டும் ஏனோ கண்டு பிடிக்கவில்லை! :(

பூபாலன் அந்தக் கிராமத்தின் துப்புரவுத் தொழிலாளிகளில் ஒருவன்.  கடுமையான வேலை நான்கு நாட்களாக.  ஏனெனில் அரசியல்வாதியும், மந்திரியுமான ஒருவர் அந்த ஊருக்கு விஜயம் செய்கிறாராம். அவர் வேறு யாரும் இல்லை.  பூபாலனின் பாலிய நண்பரே தான்.  அதே ஊர்க்காரர் தான்.  விதி வசத்தால் அவர் மந்திரியாகவும், பூபாலன் அதே ஊரில் துப்புரவுத் தொழிலைப் பார்ப்ப்பவனாகவும் ஆகிவிட்டனர். ஒரு காலத்தில் மந்திரியின் நண்பன் என்பதால் பூபாலனுக்கு சலுகையா கிட்டும்!  இங்கே ஆசிரியர் மந்திரியைப் பட்டமாகவும், பட்டம் பறக்கவிடப்படும் நூல்கண்டாக பூபாலனையும் குறிப்பிட்டிருக்கிறார். பூபாலனைப் போன்றவர்களால் தான்   இந்த மாதிரி அரசியல்வாதிகளின் பதவியே பெருமை பெறுகிறது என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டார். நூல்கண்டில் பட்டத்துடன் கட்டப்பட்ட கயிறு அறுந்துவிட்டால்?? பட்டம் அந்தரத்தில் பறக்கும். எங்காவது உயரமான மரங்களிலோ, வீட்டுக்கூரையிலோ  சிக்கிக் கிழிபடும்.  ஆனால் நூல் கண்டோ! இருந்த இடத்திலேயே இருக்கும். எவ்வித மாற்றமும் இருக்காது.

மந்திரி வருகைக்குச் செய்யப்படும் ஆடம்பரங்கள் இங்கேயும் குறையவே இல்லை. ஆயிரம் வாலாப் பட்டாசிலிருந்து எல்லாவற்றையும் கதாசிரியர் விடாமல் குறிப்பிடுகிறார். எல்லா ஆடம்பரங்களும் முடிந்து வரவேற்பு நிகழ்ச்சியும் முடிந்த பின்னர் மந்திரி தன் பேச்சில் தான் வரும் வழி சுத்தமாக இருந்ததை நினைவு கூர்ந்து துப்புரவுத்தொழிலாளிகளைப் பாராட்டவும் செய்கிறார்.  நமக்கு இது முதல் ஆச்சரியம் என்றால் அடுத்த ஆச்சரியம் மந்திரி பூபாலனைப் பார்த்ததுமே அடையாளம் தெரிந்து கொண்டதோடு இல்லாமல், தங்கமோதிரமும் பரிசளிக்கிறார்.  மேலும் அனைத்துத் துப்பரவுத் தொழிலாளிகளுக்கும் பரிசளித்துப் பாராட்டியதோடு பூபாலனைச் சிறப்பாகப் பாராட்டுகிறார்.

இது அவர் உளமார்ந்த பாராட்டாகச் செய்ததா, அல்லது பத்திரிகைக்காகச் செய்ததா என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது.  ஏனெனில் பூபாலனைக் கட்டிப் பிடித்த வண்ணம் பத்திரிகைக்காரர்களுக்குப் படம் எடுக்க அனுமதி கொடுக்கிறார். அந்தப் படம் பத்திரிகைகளில் பிரசுரமும் ஆகிறது. படங்களைத் தன்னிடம் காட்டும் ஊர்க்காரர்களிடம் ஒரு சிரிப்போடு அதை ஆமோதிப்பதோடு, அந்தப் பத்திரிகைகளும் ஒரு நாள் குப்பையாக வரப்போவதை முன் கூட்டியே அறிந்தவன் போல் பூபாலன் திரும்பவும் தன் கடமையில் கண்ணாகிறான்.

இது தான் மனிதருக்கு முக்கியமாக வேண்டிய குணம். உயர்வு கிடைக்கும்போதும் சரி, பின்னர் தாழ்வு கிடைக்கும்போதும் சரி ஒரே மாதிரியாக ஏற்கும் மனம் வேண்டும். அதோடு, பாரதி சொன்னாற்போல்

"சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்."
மேலோர் என்பதற்கு எடுத்துக்காட்டு பூபாலன்.

பூபாலன் துப்புரவுத் தொழிலாளியாக இருந்தால் என்ன? தன்னுடைய உயர்ந்த மதியாலும் அன்பினாலும் மேலோரை விட உயர்ந்த மேல் ஜாதிக்காரனாகி விட்டான்.  பூபாலனின் பாத்திரப் படைப்பின் மூலம் துப்புரவுத் தொழிலாளிகளின் முக்கியத்துவமும், அவர்களை நாம் எப்படி ஓரம் கட்டுகிறோம் என்பதையும் ஆசிரியர் சொல்வதோடு, அவர்களுக்கு உரிய மதிப்புக் கொடுக்க வேண்டும் என்றும் சுட்டிக் காட்டுகிறார். 

Saturday, September 27, 2014

மூன்றாம் நாளான இன்றைய சுண்டல்!


சுண்டல் கொஞ்சம் கொஞ்சமாய்த் தயார் ஆகிறது.  வாணலியில் கடுகு, கருகப்பிலை , மி.வத்தல் தாளித்துக் கொண்டு மொச்சையை வேக வைத்துச் சேர்த்தாச்சு.  அடுத்த நிலையில்



கொஞ்சம் போல் சாம்பார்ப் பொடியும் சேர்த்தாச்சு.  நன்கு கிளறணும். ஆகையால் கரண்டி  இருக்கு  "தளிர்  சுரேஷ்! "  கரண்டியை எடுக்கலை!  ஹிஹிஹிஹி, சும்மா ஜாலிக்கு!





தேங்காய் சேர்த்த சுண்டல் இப்போது விநியோகிக்கத் தயார் நிலையில்! 


தேங்காய் தினம் வாங்க முடியலைங்கறவங்க முதல் நாள் உடைத்த தேங்காய் மூடியையே துருவிக் கொண்டு. நிவேதனம் செய்யத் தேங்காய் இல்லாமல் கொஞ்சம் போல் தனிக்கிண்ணத்தில் எடுத்துக்கணும்.  அதை நிவேதனம் செய்துட்டுப் பின்னர் தேங்காய் சேர்த்த சுண்டலோடு சேர்த்துக்கலாம்.  தேங்காய் வாங்க முடிஞ்சவங்களோ, வீட்டில் தேங்காய் காய்த்தாலோ தினம் ஒரு தேங்காய் உடைச்சுக்கலாம். :)))))))) ஆனால் அம்பத்தூரிலேயே நான் தினம் ஒரு தேங்காய் உடைச்சதில்லை. :))))  ஒரு நாள் விட்டு ஒரு நாள் தேங்காய் உடைப்பேன். 


நேற்றைய சுண்டல், சும்மாப் பார்க்க மட்டும்! :)




பண்ணும்போதே படம் எடுக்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன் . அடுத்தடுத்து யார், யாரோ வந்ததால் அடுப்பிலும், வாசலிலுமாக கவனம்! மறந்தே போச்சு.  அப்புறமா நிவேதனம் பண்ணிட்டு எடுத்து வைக்கிறச்சே தான் நினைவு வந்தது.  சுண்டல் கலெக்‌ஷனுக்குப் போற அவசரம் வேறே.  ஆகவே நினைவாகக் கரண்டியை எடுத்துட்டு, (தளிர் சுரேஷ், கவனிக்க) படம் எடுத்தேன்.  வந்து போடலாம்னா கூப்பிட்டிருந்தவங்க வந்துட்டாங்க. எட்டு மணி வரைக்கும் ஆட்கள் வந்ததால் கணினியில் உட்கார முடியவில்லை.  அப்புறமாப் போட்டிருக்கலாம்.  அலுப்பு, சோம்பல்! :))) முடிஞ்சா இன்னிக்குச் சுண்டலை உடனே போடப் பார்க்கிறேன். நிவேதனம் பண்ணறச்சே கூடப் படம் எடுக்கிற நினைப்பே இல்லை.  சுண்டல் நல்லா இருந்ததுனு ரங்க்ஸ் சர்டிஃபிகேட் கொடுத்துட்டார்.  அதான் யாருக்கும் கிடைக்கலை. நேரில் வாங்க ஒரு தரம்.  பண்ணித் தரேன். :)))))







  கடலைப்பருப்புச் சுண்டல். சொல்லாமலேயே தெரிஞ்சிருக்குமே!  :)

Thursday, September 25, 2014

கொலு பார்த்துட்டுச் சுண்டல் சாப்பிடுங்க!


நம்ம வீட்டுக் குட்டிக் கொலு.  மேல் தட்டில் மூணு வரிசையில் தசாவதார செட், அறுபது வருஷப் பழமையான பொம்மைகளும், அதன் பின்னர் காயத்ரி அம்மன், சிவன், அஷ்டலக்ஷ்மி, வெண்ணைத்தாழிக் கிருஷ்ணன், தவழ்ந்த கிருஷ்ணன், டெரகோட்டாப் பிள்ளையார் கச்சேரி பண்ணிட்டு இருக்கார்.

கீழே காதியில் விற்கும் மாக்கல்லில் ஆன தசாவதார செட். பரிசாக வந்தது. அதிலே ஒரு புலி பொம்மை மட்டும் வாத்திய செட்டில் இருந்ததில் என்னிடம் தங்கி இருக்கு.  மிச்சம் கரடி, யானை, சிங்கம், மான், எல்லாம் யார் கிட்டே இருக்கோ தெரியலை.  மரப்பாச்சியை நிற்க வைச்சா நிற்கலை. சரினு படுக்க வைச்சேன்.  இனிமேல் அவங்களை நிற்க வைக்க வழி பார்க்கணும். :)))) செட்டியார் பழத்தட்டுப் போதும், கடை பரப்பாதேனு சொல்லிட்டார். வெண்கலச் சொப்பு செட், மரச் சொப்பு செட், மாக்கல் சொப்பு செட் எல்லாமும் இருக்கு.  வைக்கலை. வைக்கலாமா, வேண்டாமானு யோசனை. :)









இன்றைய நிவேதனம் வெற்றிலை, பாக்கு, பழத்தோடு, பயறுச் சுண்டல். கொஞ்சம் தான் பண்ணினேன்.  போணி ஆகணுமே.  நான் இன்னும் சுண்டல் கலெக்‌ஷனுக்குப் போக ஆரம்பிக்கலை.  இங்கே ஜாஸ்தி கலெக்‌ஷனும் ஆகிறதில்லை. :P :P :P :P


நவராத்திரிக்கு ஏதும் எழுதப் போவதில்லை.  போன வருஷமும் அப்படித் தான் நினைச்சேன்.  அப்புறமா நீலீ பத்தித் தேடிப் பிடிச்சு எழுதறாப்போல் ஆச்சு. இந்த வருஷம் கணினிக்கு வந்தாலும் மத்தவங்க எழுதறதை மட்டும் படிக்கிறதாக உத்தேசம். :))  அநேகமா இன்னிக்கு நிறையக் கூட்டம் வரும்.  ஹிஹிஹி, சுண்டலுக்கு இல்லைங்க, இந்தப் பதிவுக்கு.  நாளைச் சுண்டல் படம் சுடச் சுட அடுப்பிலிருந்தே!




Tuesday, September 23, 2014

பறவைகளுக்கு மனச்சோர்வு உண்டா?

மனிதருக்கு மட்டும் தான் மனச்சோர்வு வரும் போல.  நமக்கெல்லாம் இனம்தெரியாச் சோர்வா இருக்கிறச்சே இந்தப் பறவைகள் மட்டும் எப்படி தினம் தினம் ஒரே மாதிரி உற்சாகத்துடன் சரியான நேரத்தில் குரல் கொடுக்கின்றனவோ, தெரியலை. அதுங்களுக்கு நம்மைப் போல் பல் தேய்க்கவேண்டாம்.  இயற்கை உபாதைகளைக் கழிக்க இடம் தேடி அலைய வேண்டாம். சாப்பாடு சமைக்க வேண்டாம்.  முக்கியமாக் காலை, மாலை, காஃபி, டீ வேண்டாம்.

அதுங்க பாட்டுக்குப் பறந்து எங்கே என்ன கிடைக்குதோ அதைச் சாப்பிட்டு, எந்த இடமா இருந்தாலும் கழிவுகளை வெளியே தள்ளி, கூடு கட்டி, முட்டையிட்டுப் பொரித்துக் குஞ்சுகள் வெளியே வந்ததுமே அவற்றைப் பறக்கவிட்டுட்டு, ஹூம், நாமெல்லாம் அப்படியா இருக்கோம்! குழந்தைகளையும் பாதுகாக்கறோம். குழந்தைங்க நம்மளைப் பாதுகாக்கணும்னும் எதிர்பார்க்கிறோம்.   பறவைங்களுக்கு அதெல்லாம் இல்லை. இஷ்டத்துக்கு இருக்கே!  பெரும்பாலான பறவைகள் ஒரு தரம் கட்டின கூட்டில் இரண்டாம் முறை முட்டை இடறதில்லைனு நினைக்கிறேன்.

கொஞ்சம் பொறாமையாக் கூட இருக்கு.  பறவையாய்ப் பிறந்தால் நல்லா இருந்திருக்கும் தான்.  ஆனால்  மனுஷங்களான நாம்  அதோட வாழ்விடங்களையும் அழிச்சுட்டு வரோமே.  ஆனாலும் பறவைங்க அதுக்காகவும் கவலைப்பட்டுக்கலை. இன்னிப்பாடு இன்னிக்கு;  நாளைப்பாடு நாளைக்குனு இருக்குதுங்க. இன்னிக்கு என்ன டிஃபன், என்ன சமையல்னு தலை சுத்தல் எல்லாம் கிடையாது. ஜாலியா இருக்கும் போலிருக்கே!


பி.கு: இன்னிக்குக்  காலம்பர   வெளியே பக்ஷிகள் எல்லாம் கோலாகலமாக ஒரே கூவல்.  என்னோட மனச்சோர்வுக்கும் , இதுக்கும் நேர் எதிராக இருக்கவே, அப்போ யோசிச்சதன் விளைவு இது. உடனே எண்ணங்களைப் பகிர முடியாமல் மின்சாரம் ஒரு மணி நேரம் தான் இருந்தது.  காலம்பர பத்து மணிக்குப் போயிட்டு இப்போ இரண்டு மணிக்குத் தான் வந்திருக்கு.

இதிலேயும் பாருங்க பறவைங்களுக்கு மின்சாரம் இருந்தாலும் ஒண்ணுதான்;  இல்லாட்டியும் ஒண்ணு தான்.  நமக்கு அப்படி இல்லையே!



படம் வழக்கம் போல கூகிளார் தயவு!

Friday, September 19, 2014

பெருமாள் கூப்பிட்டார்!



அவசரமாய் திடீர்னு பெரிய பெருமாள் கூப்பிட்டுட்டார்.  என்னனு பார்த்தால் நாளைக்குப் புரட்டாசி மாசம்  முதல் சனிக்கிழமை ஆரம்பம்.  அப்புறமா நவராத்திரியும் வந்துடும்.  அந்தக் கூட்டத்தில் உங்களாலே வர முடியாது, அதனால் இப்போவே வந்துட்டுப் போயிடுங்கனு ரங்க்ஸ் கிட்டே சொல்லி இருக்கார். திடீர்னு இன்னிக்கு மத்தியானம் மூன்றரை மணிக்கு ரங்க்ஸ் வா பெருமாளைப் பார்க்கலாம்னு கூப்பிட தலைவிரிகோலமாக இருந்த எனக்குத் தூக்கி வாரிப் போட( ஹிஹி, தலைக்குக் குளித்ததால் தலைவிரிகோலம், தலை வாரிக் கொண்டிருந்தேன்.) முடியுமானு யோசிக்க, முடியணும்னு ரங்க்ஸ் கிளம்ப ஒருவழியா நானும் நாலரைக்குக் கிளம்பிட்டேன். 

நாலில் இருந்து ஐந்து வரை மூத்த குடிமகன்கள் செல்லும் நேரமாம்.  ஆகவே ஐம்பது ரூபாய்ச் சீட்டு வாங்கற இடத்திலே கூடக் கூட்டம் இருந்தது. ஆனாலும் இருபது நிமிடத்தில் பெருமாளைப் பார்த்துட்டோம்.  பெருமாள் பவித்ரோத்சவம் முடிந்து எண்ணெய்க்காப்பில் மார்பிலிருந்து கால் வரை போர்த்துக் கொண்டு படுத்திருந்தார்.  ஏற்கெனவே வயசாச்சு.  நாளுக்கு நாள் கூட்டம் வேறே. எனக்கு ஓய்வே இல்லை.  மதியம் ஒரு மணிநேரம் நடை சாத்தறாங்க.  நிவேதனம் முடிச்சு நான் கொஞ்சம் ஓய்வு கூட எடுத்துக்க முடியாமல் எல்லோரும் பார்க்க வந்துடறாங்க.  எனக்குத் தூக்கம்ங்கறதே இல்லாமல் போயிடுச்சு.  

படுத்துத் தூங்கறதுக்காக படுக்கை எல்லாம் போட்டுக் கொண்டு படுத்தால் தூங்க விட மாட்டேங்கறாங்களே! னு அலுத்துக் கொண்டார்.  உள்ளே நுழையறச்சேயே நம்பெருமாளைப் பார்த்தேன்.  வழக்கமான குறும்புச் சிரிப்போடு இருந்தாலும் பெரிய பெருமாள் பேசிக் கொண்டிருந்ததில் நம்பெருமாளைக் கொஞ்சம் கவனிக்கலை.  மூஞ்சியைத் திருப்பிக் கொண்டார். அதுக்குள்ளே கூட்டம் வந்து மறைக்க நம்பெருமாளின் "கலகல"வென்ற சிரிப்பு மட்டும் கேட்க மனசுக்குள்ளே , அப்புறமா வந்து உன்னைஒரு கை பார்த்துக்கறேன்னு சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.  

என்னதான் நல்ல தரிசனம் என்றாலும் நம்பெருமாளை வழக்கம் போல் பார்த்துக் குசலம் விசாரிக்க முடியாதது வருத்தம் தான்.  ஆண்டாளம்மாவைப் பார்க்கலாம்னா அங்கே திருப்பணி வேலை நடந்துட்டு இருந்தது.  தாயாரைக் கூடக் கொஞ்சம் கஷ்டப்பட்டே பார்க்க வேண்டி இருந்தது.  அங்கேயும் கூட்டம்.  ஐந்தரைக்கு மறுபடி நடை சார்த்திடுவாங்களா. அதுக்கான முன்னேற்பாடுகளில் இருந்தாங்க கோயில் ஊழியர்கள்.  அதனால் அவசரம் தான் அங்கேயும்.  என்றாலும் நன்றாகப் பார்த்தோம். அப்புறமா சக்கரத்தாழ்வார் கிட்டேப் போய்ப் பார்த்துப் பேசிட்டு, அங்கிருந்து நடந்தே ஒரு சில வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வர ஏழேகால் மணி ஆச்சு.

Thursday, September 18, 2014

கௌதமன் கேட்ட "தால் " செய்முறை!

இணையம் ஒரு பக்கம் படுத்தல்; மின்சாரம் எப்போப் போகும்னு சொல்ல முடியலை. அதோடு வீட்டில் வேலைகளும் ஜாஸ்தி.  எனவே என்னோட தொல்லை கொஞ்சம் இல்லை நிறையவே குறைஞ்சிருக்கு. :))) ஆனாலும் விட மாட்டோமுல்ல!  அது என்னமோ தெரியலை.  நான் இந்த மாதிரி மொக்கை போஸ்டெல்லாம் நேரடியாகத் தான் தட்டச்சுகிறேன். அப்போப் பார்த்து எரர் மெசேஜ் வரும்.  இதைப் பிரசுரிப்பதில் பிரச்னை இருக்குனு சொல்லிட்டே இருக்கு. அதையும் மீறித் தான் பிரசுரிக்க வேண்டி இருக்கு.  பல சமயங்களில் எழுதி வெளியிடும் சமயம் மொத்தமாய்க் காக்கா உஷ் ஆகிறது. :)))) சேமிச்சு வைச்சுக்கணும். இல்லைனா மறுபடி எழுதறச்சே முதல் தரம் எழுதின நடை மாறி வேறே மாதிரி வருது. ஒரு எழுத்தாளி ஆகறதுக்கு எவ்வளவெல்லாம் கஷ்டப்பட வேண்டி இருக்கு பாருங்க! :)


இப்போச் சப்பாத்திப் பதிவின் தொடர்ச்சியாக முதலில் கௌதமன் சார் கேட்ட தால் செய்முறை.  அவர் இப்போப் பண்ணும் தாலைக் குறித்துக் கேட்டிருக்க மாட்டார். அந்தக்கால பிரபலமான தாலைத் தான் கேட்டிருப்பார்னு நினைக்கிறேன். எங்க மாமியார் வீட்டில் தேங்காய்ச் சட்டினி, நெய், சர்க்கரை, வெல்லம்னு கூடத் தொட்டுப்பாங்க. நமக்கு நாக்குக்கு அதெல்லாம் இறங்கவே இறங்காது.  அங்கே தாலை முதல் முறையாக அறிமுகம் செய்தது நாம தான். 


என் அம்மா பண்ணும் தால் செய்முறை நான்கு பேர்களுக்கு:


பாசிப்பருப்பு குறைந்தது 200 கிராம்

பச்சை மிளகாய்                   2 அல்லது 3 (காரம் வேணும்னா கூட்டிக்கலாம்)

வெங்காயம் (அப்போல்லாம் சின்ன வெங்காயம் தான் அங்கே கிடைச்சது. அதான் ஒரு கைப்பிடி எடுத்துப்போம்.  சென்னை வந்ததும் தான் பெரிய வெங்காயமே பழக்கம்.)

சின்ன வெங்காயம் என்றால் ஒரு கைப்பிடி

பெரிய வெங்காயம் என்றால் 2  (தோல் உரித்துப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.)

இஞ்சி (தேவையானால், எங்க வீட்டில் அம்மா சேர்த்தது இல்லை)

தக்காளி        நல்ல நாட்டுத் தக்காளி என்றால் 4 பெங்களூர் தக்காளி என்றால் அளவைப் பொறுத்து 4 அல்லது 5, பொடிப் பொடியாக நறுக்கவும்.

மஞ்சள் பொடி

கடுகு, உ.பருப்பு, கருகப்பிலை, கொத்துமல்லி, (சீரகம் எல்லாம் பின்னாட்களில் சேர்க்க ஆரம்பித்தேன். இது அந்தக்காலத்து தால்)


தேவையான உப்பு, தாளிக்க எண்ணெய் இரண்டு டீஸ்பூன்

பெருங்காயம் தேவையானால்

எலுமிச்சம்பழ மூடி ஒரு பாதி


பருப்பை நன்றாகக் குழைய வேக வைத்து உப்பு, மஞ்சள் பொடி சேர்க்கவும்,  இன்னொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உ.பருப்புப் போட்டுத் தாளித்துப் பச்சைமிளகாய், இஞ்சி, கருகப்பிலை சேர்க்கவும்.  வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கினதும் தக்காளியைச் சேர்க்கவும்.  தக்காளியும் வதங்கியதும் வதக்கலை அப்படியே வெந்து கொண்டிருக்கும் தாலில் கொட்டிக் கிளறவும்.  பின்னர் கீழே இறக்கி எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொத்துமல்லி போட்டுக் கிளறவும்.  இது ரொம்பக் கெட்டியாக இல்லாமலும், அதே சமயம் நீர்க்கத் தண்ணீர் போல் இல்லாமலும் கரண்டியால் எடுத்து ஊற்றினால் நிற்கும் பதத்துக்கு இருக்க வேண்டும்.  ரொம்ப நீர்க்க இருந்தால் இன்னும் கொஞ்ச நேரம் கொதித்ததும் கீழே இறக்கி எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். ரொம்ப கெட்டியாக இருந்தால் தேவையான நீர் சேர்க்கவும். மாவு எல்லாம் இதற்கு விடக் கூடாது. 


இது தான் அப்போதெல்லாம் அதாவது அறுபதுகளில், எழுபதுகளில் நான் ராஜஸ்தான் போகும் வரையிலும் செய்து வந்த முறை.  இப்போது இதே பாசிப்பருப்பை வேறு முறையில் செய்கிறேன்.  அது பின்னர்.   இப்போ தாலை விதம் விதமாக பல்வேறு மாறுபட்ட ருசிகளில் மாறுபட்ட மசாலா சேர்த்துச் செய்ய முடிகிறது. 

Tuesday, September 16, 2014

சப்பாத்தி, சப்பாத்தி தான், ரொட்டி, ரொட்டி தான்!

சப்பாத்தி


"திங்க" கிழமை வந்தாலே எங்கள் ப்ளாகிலே "திங்க" என்ன போட்டிருப்பாங்கனு பார்க்கத் தோணும்.  சில/பல வாரங்கள் நான் பார்க்கிறச்சே எதுவும் வராது.  சரினு கணினியை அணைச்சுட்டு ஒரு மணி, இரண்டு மணி கழிச்சுத் திறந்து பார்த்தாப் பதிவு வந்திருக்கும்.  யாரேனும் கருத்தும் சொல்லி இருப்பாங்க. எ.கொ.இ.ச.னு நொந்துக்கிட்டு சாப்பிட என்ன இருக்குனு பார்ப்பேன்.  நேத்திக்குக் கணினி பக்கமே வரமுடியலை! இன்னிக்குக் காலம்பரயும் உடனே பார்க்க முடியலை.  கொஞ்ச நேரம் முன்னாடி பார்த்தாச் சப்பாத்திப் புராணம், அதிலே நமக்கு அழைப்பும் கூட.



சின்ன வயசிலே சப்பாத்தி சாப்பிட ஆரம்பிச்சது எப்போனு நினைவில் சரியா இல்லாட்டியும் கூட, தால், சப்பாத்தி சாப்பிட்டோம்னு அரைகுறை நினைவா இருக்கு. அப்போல்லாம் ரேஷனிலே கோதுமை கொடுப்பாங்க.  மொட்டை கோதுமைனு அதைச் சொல்லுவாங்க.  கோதுமைக்கு மொட்டை எல்லாம் அடிப்பாங்களா என்ன?  இன்னும் சிலர் வடக்கே இதை எல்லாம் குதிரைக்குப் போடுவாங்கனு சொல்லிப்பாங்க.  அதைத் தானா நாம சாப்பிடறோம்னு எல்லாம் புரியாத, தெரியாத வயசிலேயே அதை மாவா அரைச்சு அம்மா சப்பாத்தி பண்ணுவா.


அம்மாவுக்கும் விதம் விதமாகச் சமைத்துப் போடப்பிடிக்கும். அப்போதெல்லாம் கோதுமை மாவைப் பிசைந்து அப்பளம் போல் இட்டு அதைத் தோசைக்கல்லில் போட்டு நெய்யோ, எண்ணெயோ ஊத்தி இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு எடுப்பாங்க.  அது கொஞ்சம் மொறுமொறுனே இருக்கும்.  சப்பாத்தின்னா அப்படித் தான் இருக்கும்னு நினைச்சுப்போம். ஆனாலும் தால் மட்டுமில்லாமல், தக்காளிக்காய்க் கூட்டு, தக்காளிக் கூட்டு, வெங்காயம், தக்காளி வதக்கல்னு அம்மா பண்ணுவா. அபூர்வமாக் கிடைக்கும் காலிஃப்ளவரில் கூட வெங்காயம் சேர்த்துக் கறி பண்ணுவா. அப்பா அதைத் தொடவே மாட்டார்.  ஆனால் பெரிய வெங்காயமோ, குடைமிளகாயோ பார்த்ததே இல்லை.



என்னோட அம்மாவின் ஒன்று விட்ட அண்ணாவின் மாட்டுப் பெண் புனாவில் பிறந்து வளர்ந்து படித்துவிட்டு மதுரைக்குக் கல்யாணமாகி மேலாவணி மூலவீதிக்கு வந்து சேர்ந்தாள்.  அவங்க மூலமா அப்போத் தான் அம்மாவுக்குச் சப்பாத்தியை மடிச்சு மடிச்சுப் போட்டு இடும் பரோட்டா அறிமுகம் ஆனது.  அதோடு இல்லாமல் உ.கி.யையே விதம் விதமாச் சமைக்கவும் தெரிய வந்த்து. அம்மா உ.கி.வெங்காயம் போட்டுச் செய்யும் கறி மிக நன்றாகச் சாப்பாடுடனும் சரி, சப்பாத்தியுடனும் சரி சுவையாக இருக்கும்.   நானும் அப்படித் தான் சப்பாத்தி பண்ணிட்டு இருந்தேன்.  ஆனால் பண்ணின உடனே மூடி வைத்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும் என்பதை என் சுய சமையலில் கண்டு பிடித்தேன்.   அதோடு அப்போவெல்லாம் சப்பாத்தியை இட்ட உடனே அடுப்பில் போட்டுப் பண்ணி எடுக்கணும்னும் தெரியாது.  நிறைய இட்டு ஒரு பேப்பரில்  போட்டுக் கொண்டு அதை ஒவ்வொண்ணாக எடுத்து தோசைக்கல்லில் போட்டு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி வேக வைப்போம்.


நாங்க தோசை மாதிரிச் சுட்டு எடுப்பது உண்மையில் சப்பாத்தியே இல்லை என்பதை நான் முதல் முதல் ராஜஸ்தான் வந்ததும் புரிந்து கொண்டேன். நான் பண்ணும் சப்பாத்தியைப் பார்த்து அவங்க சிரிப்பாங்க.  அவங்க இட்லியையும், தோசையையும் பார்த்து பதிலுக்கு நான் சிரிப்பேன். மாவை உருட்டிப் பிசைவதில் இருந்து இடும்போது திரும்பத் திரும்ப மாவைப் பிசைந்து உருட்டினால் தான் சப்பாத்தி நன்கு இட வரும் என்பதோடு மெலிதாக இருந்தாலும் முறுகாமல் பூப்போல் வரும் என்றும் அதுவே இரட்டை மடிப்பாக வரும் என்றும் புரிந்து கொண்டேன்.  மெலிதாக மடித்துப் போட்டு இட்டு தோசைக்கல்லில்  போட்டு இருபக்கமும் நெய் தடவினால் அது சப்பாத்தி என்றும், மெலிதாக இட்டு விட்டுத் தோசைக்கல்லில் இரண்டு பக்கமும் லேசாகச்  சூடு செய்து விட்டு அனலில் வாட்டி எடுப்பது ஃபுல்கா ரொட்டி என்றும், உள்ளே வெண்ணெய் தடவி மடித்து  மடித்துப் போட்டு இட்டு கொஞ்சம் இல்லை நிறையவே கனமாகப் பண்ணினால் அது தான் பரோட்டா அல்லது பஞ்சாபி மொழியில் தவா பூரி அல்லது பராந்தா என்றும் புரிந்து கொண்டேன். ரொட்டியை இட்டதும் தோசைக்கல்லிலேயே போட்டு வாட்டி ஒரு வெள்ளைத் துணியால் ஒத்தி ஒத்தி எடுத்துச் சப்பாத்தியைச் சுற்றிச் சுற்றித் திருப்பிப் போட்டு தோசைக்கல்லிலேயே உப்ப வைத்து எடுத்தால் அது தவா ரொட்டி என்றும் புரிந்தது.



அதைத் தவிரவும் ருமாலி ரொட்டி, கஸ்டர்ட் ஸ்டஃப் செய்து பண்ணும் பரோட்டா, நான், தந்தூர் ரொட்டி ஆகியவையும் பழக்கம் ஆகியது.


இன்னும் உ.கி. வேக வைத்து மசாலா சாமான்கள் சேர்த்துக் கறி போல் செய்து உள்ளே ஸ்டஃப் பண்ணும் ஆலு பரோட்டா,





ஆலு பரோட்டா


வெந்தயக்கீரையைப் பொடிப் பொடியாக நறுக்கி உப்பு,மஞ்சள் பொடி சேர்த்துச் சற்று நேரம் வைத்த பின்னர் கோதுமை மாவில் சேர்த்து விட்டுக் காரம் , மசாலா சேர்த்துச் செய்யும் மேதி பரோட்டா,




மேதி பரோட்டா


தேப்லா, இரண்டு, மூன்று மாவுகள் சேர்த்துச் செய்யும் மிஸ்ஸி ரொட்டி, முள்ளங்கிக்கறியை உள்ளே ஸ்டஃப் செய்யும் மூலி ரொட்டி, சோள மாவு சேர்த்துச் செய்யும் ரொட்டி, கம்பு ரொட்டி என விதவிதமான ரொட்டி வகைகள் இருப்பதும், தால் பாட்டி என்னும் ராஜஸ்தானின் முக்கிய உணவையும் குறித்து அறிய நேர்ந்தது.





தால் பாட்டி

தால் பாட்டிக்கு பாட்டியைச் சுட்டும் செய்யலாம்; நெய்யிலோ, எண்ணெயிலோ பொரித்தும் செய்யலாம். அதை உதிர்த்துக் கொண்டு கட்டாயமாய் அதன் தலையில் நெய்யை ஊற்றிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் காரமான தாலை அதன் மேல் ஊற்றிக் கொண்டு சாப்பிட வேண்டும்.




சூர்மா லட்டு

இதற்குப் பின்னர் சாப்பிடும் சூர்மா எனப்படும் இனிப்பு இனிப்போ இனிப்பு.  கோதுமை மாவு அல்லது ரவையை வறுத்துப்பொடித்த மாவில் வெல்லம் சேர்த்துப் பெரும்பாலும் பண்ணுவார்கள்.  இப்போதெல்லாம் சர்க்கரையும் சேர்க்கின்றனர். இதிலேயும் நெய் நிறைய இருக்கும்.  இதன் பின்னர் மீட்டா லஸ்ஸி குடிக்கவேண்டும்.  இது ஒரு முழுச் சிறப்பு  விருந்து உணவாக ராஜஸ்தானின் தென் பகுதியில் விருந்தினருக்குச் சமைப்பார்கள்.



ஒருவேளை தொடருமோ? :)


நான் எடுத்த சில படங்கள், பரோட்டா பண்ணுகையில், தால் பண்ணுகையில் எடுத்தவை நாளை வெளிவரும்.

இதில் உள்ள படங்கள் கூகிள் உபயம்.  கூகிளாருக்கு நன்றி.

இதை எழுதிப் போட்டுட்டுக் காணாமல் போய்த் தேடிக் கண்டு பிடித்துப் போட வைத்தவருக்கு என் நன்றி. :)