எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, November 30, 2014

ஒரு வழியா வந்துட்டேன்! :)

ஒரு வழியா வீட்டை மாத்தியாச்சு.  மரவேலை என்னமோ முடியலை. :( இன்னும் ஒரு வாரம், பத்து நாட்கள் இழுப்பாங்க போலிருக்கு. ஆனால் முக்கியமான வேலைகளை முடிச்சுட்டாங்க.  ஆகவே திங்கட்கிழமையிலிருந்து சாமான்களை எடுக்க ஆரம்பித்து (எம்புட்டு சாமான்கள் னு இரண்டு பேருமே அதிசயித்தோம்!!!!!!!!!!!!!!!!!) வியாழக்கிழமை வரை எடுத்திருக்கோம். :P :P  அன்னிக்கே சமைக்கவும் ஆரம்பிச்சாச்சு.

சென்னையிலிருந்து வந்தப்போக் கூட இவ்வளவு சிரமமாக இல்லை.  குடியிருப்பு வளாகத்தின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கம் மாறுவதற்கு இவ்வளவு சிரமமாக ஆகி விட்டது. 27- ஆம் தேதியிலிருந்து இணைய இணைப்பைத் துண்டிக்கச் சொல்லி எழுதிக் கொடுத்திருந்தோம்.  அதை 24 ஆம் தேதியே பி எஸ் என் எல் அலுவலகத்தில் கொடுக்க, அவங்க விட்டது தொல்லைனு 25 ஆம் தேதியே சொல்லாமல் கொள்ளாமல் முன் கூட்டிய அறிவிப்பெல்லாம் இல்லாமல் துண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்டிச்சுட்டாங்க. :(  நமக்கும் வேலை சரியாக இருந்ததா, போகட்டும் விடுனு மனதைத் தேத்திண்டாச்சு. 

இப்போவும் இன்னும் பிஎஸ் என் எல் இணைய இணைப்புக் கிடைக்கலை.  இங்கே தொலைபேசி இணைப்பே நேத்துத் தான் வந்தது.  அதிலும் தொலைபேசி அழைப்பு வந்தால் நாங்க பேசறது எதிர்த்தரப்புக் காரங்களுக்குக் கேட்குது.  எங்களுக்கு அவங்க பேசறது கேட்காது. அவ்வளவு அழகா இருக்கு. இணைய இணைப்புக் கொடுப்பதற்கான ஜங்க்‌ஷனை பிஎஸ் என் எல்காரரால் கண்டு பிடிக்க முடியலை.  வீடு கட்டும்போது இதுக்காக யார் வேலை செய்தாங்களோ அவங்க தான் வந்து கண்டு பிடிக்கணும்.  ஶ்ரீரங்கம் வந்தப்போவும் அவர் தான் வந்து கண்டு பிடிச்சுக் கொடுத்தார்.  இப்போ அவர் வெளியூரில் இருக்கார். வரப் பத்து நாளாகும். அதோட பிஎஸ் என்எல் இணைப்பு வரவும் புதன்கிழமை ஆகுமாம்.  ஆனால் பிஎஸ் என்எல் அலுவலகத்தில் ஷிஃப்டிங்கெல்லாம் நாட்கள் ஆகாது. உடனே இணைப்பு வந்துடும்னு சொல்றாங்க. :)  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்


ஆகவே தனியாரிடம் இணைப்பு வாங்கியுள்ளேன்.  இதிலே ஒரு வசதி என்னன்னா, பாட்டரி பேக் அப் கொடுத்திருப்பதால் மின்சாரம் இல்லைனா கூட உங்களை எல்லாம் துன்புறுத்தலாம் என்று உறுதிமொழி கொடுத்திருக்காங்க. பார்ப்போம். முதல்லே தனியார் வேண்டாம்னு நினைச்சேன். ஆனால் இப்போ ரொம்ப நாட்கள் இணையம் இல்லாமல் இருக்க முடியாது.  ஒரு சில வேலைகளை, ஒரு சில கடிதங்களை இணையம் மூலமாகவே அனுப்ப வேண்டி ஆகிவிட்டது.   அதோடு எனக்குமே முக்கியமான சில வேலைகளைச் செய்து முடிக்கணும். நல்லவேளையாகப் பணப் பரிவர்த்தனையெல்லாம் இணையம் வழியாகச் செய்வது இல்லை. :))))

காணோமேனு தேடி மடல் போட்டவங்களுக்கு நன்றி.  புதுப் பெயின்ட், வார்னிஷ் வாசனை ஒத்துக்காமல் உடம்பு சரியில்லை. ஆனாலும் நேத்திக்கு இருந்ததுக்கு இன்னிக்குப் பரவாயில்லை. ஆகவே நம்ம அலம்பல் தொடரும். 

Monday, November 17, 2014

உங்கள் குழந்தை படிக்க வேண்டிய மொழி என்ன? ஒரு கலந்துரையாடல்!

மின் தமிழ்க் குழுமத்தில் சமீபத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மூன்றாம் மொழியான ஜெர்மனுக்கு பதிலாக சம்ஸ்கிருதம் படிக்கச் சொன்னது குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது.  அதில் ஒருவர் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளே மூடப்பட வேண்டும் என்று சொல்ல, நானும் இன்னொருவரும் அது மத்திய அரசில் ராணுவம் மற்றும் ராணுவம் சம்பந்தப்பட்ட துறைகள், அடிக்கடி மாற்றலாகும் அலுவலர்கள் போன்றோரின் குழந்தைகளுக்கென ஏற்படுத்தப்பட்டது.  அதை மாற்றினால் ஊர் ஊராய் மாற்றலாகிச் செல்லும் குழந்தைகளின் படிப்பில் ஏற்படும் சிரமங்களை எடுத்துச் சொன்னோம்.  இன்னொருத்தர் ஏன் மற்றக் குழந்தைகளையும் சேர்த்துக் கொள்கிறார்கள் என்று கேட்டார்.

எனக்குத் தெரிந்து முன்னால் எல்லாம் மற்றக் குழந்தைகளைச் சேர்த்துக் கொண்டது இல்லை.  இப்போது கொஞ்சம் தென்னாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயாக்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று இன்னொருவர் சுட்டிக் காட்டினார்.  ஆனாலும் நான் எனக்குத் தெரிந்தவரை அவற்றை விளக்கினேன்.  அது கீழே!


//1.  அப்படியானால் மற்ற குழந்தைகளை ஏன் சேர்த்துக்கொள்கிறார்கள்?//


மற்றக் குழந்தைகள் மத்திய அரசுப்பாடத்திட்டத்தை ஏற்று நடத்தும் தனியார் பள்ளிகளில் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.  கேந்திரிய வித்யாலயாவில் முதலில் ராணுவம், பின்னர் ராணுவக் கணக்குத் துறை போன்ற இரு துறைகளுக்கும் தான் முதலிடம் கொடுக்கப்படுகின்றது.  அதன் பின்னர் மற்ற மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள்.  அவர்களுக்கும் பெற்றோர் இருவரில் ஒருவருக்கு அல்லது தந்தைக்குச் சேரும் வருஷத்தில் இருந்து அதற்கு முந்தைய ஏழு வருடங்களில் மூன்று மாற்றல்கள் ஆகி இருக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகள் இல்லாமல் சேர்க்கப்படுபவர்கள் முதலில் ராணுவத்தினரின் குழந்தைகளும், அதன் பின்னர் ராணுவக் கணக்குத் துறையினரின் குழந்தைகளுமே ஆவார்கள்.  ஒரு வகுப்புக்குக் குறைந்த பக்ஷம் மூன்று பிரிவுகள் உண்டு.  மூன்றிலும் சேர்ந்து தொண்ணூறு குழந்தைகளுக்கு மேல் இருக்கக் கூடாது.  முன்னெல்லாம் 25 குழந்தைகளுக்கு மேல் இருந்தாலே தனியாகப் பிரிவு ஏற்படுத்தப்பட்டிருந்தது.  இப்போது ஜனத்தொகையை உத்தேசித்து 30 குழந்தைகள். ஆகத் தொண்ணூறு குழந்தைகள் மேற்கண்ட பிரிவுகளில் நிரப்பப்பட்டிருந்தால் மற்றக் குழந்தைகள் இடம் பெறுவது கடினம்.

எனக்குத் தெரிந்து ஆவடியில் உள்ள மூன்று கேந்திரிய வித்யாலயாவிலும், சென்னை அண்ணாநகர் கில் நகர் போன்றவற்றில் உள்ள கேந்திரிய வித்யாலயாக்களிலும் ஒரு வகுப்பில் ஒன்றிரண்டு பேர் மற்றக் குழந்தைகளாக இருக்கலாம்.  அடையார் ஐஐடியிலும் அதற்கு வெளியிலும் உள்ள கேந்திரிய வித்யாலயாக்களில் ஐஐடிக்காரர்களின் குழந்தைகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.  பின்னர் மற்ற மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள் இடம் பெறுவார்கள். மத்திய தொழிலாளர் நல வாரியத்தில் வேலை செய்த என் நாத்தனார் கணவரின் குழந்தைகள் ஐஐடி கேந்திரிய வித்யாலயாவிலேயே படித்தனர்.  எங்கள் குழந்தைகள் ராஜஸ்தான், செகந்திராபாத், ஆவடி ஏர்ஃபோர்ஸ் கேவி,  மீண்டும் ராஜஸ்தான், குஜராத் ஆகிய இடங்களில் படித்தனர்.  ஆக இவர்கள் தமிழை வீட்டில் வேண்டுமானால் கற்கலாமே தவிர பள்ளியில் கற்றால் மற்ற ஊர்களின் கேந்திரிய வித்யாலயாக்களில் இருக்கும் மாநில மொழி வேறாக இருக்கும்.  இந்தப் பிரச்னைக்காகத் தான் அவர்கள் இருவருமே சம்ஸ்கிருதமே படித்தனர். அதுவும் எட்டாம் வகுப்பு வரை தான். இதனால் ஒன்றும் குறைந்து போகவில்லை.

நம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் ஒருவரான அன்புமணி ராமதாஸின் பெண்கள் இருவரும் டில்லியில் மத்திய அரசுப் பாடத்திட்டத்தை ஏற்று நடத்தும் தனியார் பள்ளிகளிலேயே படித்தவர்கள்.  தமிழை வீட்டில் தான் கற்றனர். இது போன்ற உதாரணங்கள் நிறையச் சொல்லலாம். :))))


//2.  தமிழ்நாட்டில் இருக்கும், தமிழைப் பயின்ற மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள் தமிழை விட்டுவிட வேண்டியதுதானா?//

இந்தக் கேள்வியே புரியவில்லை.  தமிழ்நாட்டில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள் வேறு ஊருக்கு மாற்றலாகிச் சென்றால் தான் தமிழை விட வேண்டி இருக்கும்.  ஆனால் பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளை விடுதியில் அல்லது தாத்தா, பாட்டியிடம் விட்டுச் செல்கின்றனர்.  அல்லது மனைவி மட்டும் குழந்தைகளை வைத்துக் கொண்டு குடும்பம் நடத்துகின்றனர்.  மொத்த மத்திய அரசு ஊழியரில் பத்து சதவீதத்துக்கும் குறைவானவர்களின் குழந்தைகளே கேந்திரிய வித்யாலயாவில் படிப்பார்கள்.  எல்லோரும் படிப்பதில்லை.  ஏனெனில் மேல்படிப்பு என வரும்போது மாநில அரசு பாடத்திட்டத்தில் அதிக மதிப்பெண்கள் பெறும் குழந்தைகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. எங்கள் பையர்   மாநில மொழிப் பாடத்திட்டத்தில் சேரச் சம்மதிக்கவில்லை.   நாங்கள் +1, +2 ஆகிய வகுப்பிலாவது மாநில மொழிப் பாடத்திட்டத்துக்கு மாறச் சொன்னோம்.  அப்படியும் அக்கா, தம்பி இருவருமே +2 வரை மாற மாட்டேன் என்று சொல்லிவிட்டனர்.


//3.  தமிழ்நாட்டில் இருக்கும், தமிழைப் பயின்ற மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள் தமிழ்நாட்டிலிருந்து  மற்ற மாநிலங்களுக்குச் சென்றால?.....//

கட்டாயமாய்க் குழந்தைகள் கஷ்டப்படத் தான் செய்யும்.  ஆனால் ஏற்கெனவே கேந்திரிய வித்யாலயாவில் படித்து வந்தால் அந்த வருடம் எந்த மாதம், எந்தத் தேதியானாலும் மாற்றலான ஊர் போய்ச் சேர்ந்த உடனேயே குழந்தையைப் பள்ளியில் சேர்த்துவிடலாம். அப்படி இல்லாமல் கான்வென்ட் போன்ற படிப்பெனில் அதற்கேற்ற பள்ளிகளில் சேர்க்கலாம்.  ஆனால் ஆங்கிலம் தவிர்த்து மற்ற இரண்டாம் மொழிப்பாடத்தில் கட்டாயமாய்ப் பிரச்னை வரும்.


4.  ஜெர்மன், பிரெஞ்சு மொழிகள் எந்த விதத்தில் இந்தியாவுக்கு நெருங்கிய மொழிகள்?  அவைகளை ஏன் இந்தியக் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும்?

ஜெர்மன் மொழி சம்ஸ்கிருதத்துடன் கொஞ்சம் தொடர்புடையதாய்க் கூறுகின்றனர்.  மேலும் ஐரோப்பிய மொழி ஒன்றைக் கற்றால் வெளிநாட்டுப் படிப்புக்கு வசதி என்னும் நினைப்பாக இருக்கலாம்.

5.  இதனால், தமிழ் நாட்டில் இருக்கும் மற்ற குழந்தைகளும் தமிழைப் புறக்கணிப்பதுதான் மிச்சமாகிறது.

குழந்தைகள் புறக்கணிக்கின்றனரோ இல்லையோ, மற்றவர்கள் புறக்கணிக்கின்றனர்.  எந்தப் பத்திரிகை இப்போதெல்லாம் தூய தமிழில் வருகிறது?  கல்கிப் பத்திரிகையிலும், மங்கையர் மலர் பத்திரிகையிலும் கூட இப்போது பிரபலமாக இருக்கும் தங்கிலீஷ் மொழியில் தான் எல்லாமும் வருகின்றன.  வருடம் முழுவதும் வீ வில் மீட்! என்று போடுகின்றார்கள்.  இதை யார் கண்டிக்கின்றனர்?  தொலைக்காட்சித் தமிழை எவர் திருத்துகிறார்கள்.  தொலைக்காட்சிச் செய்திகளில் வரும் எழுத்துப் பிழைகள், பொருட்குற்றங்கள் கணக்கிலடங்காதவை.  அவற்றை எவரும் குறிப்பிடுவது கூட இல்லை.  உண்மையைச் சொல்லப் போனால் இப்போதைய பெற்றோர், ஆசிரியர் போன்றவர்களில் பலருக்கும் நல்ல தமிழ் எழுதவோ, படிக்கவோ தெரியவில்லை என்பது சுடும் உண்மை.

6.  மத்திய அரசு ஆங்கிலத்தில்தான் எல்லாக் கடிதங்களையும் எழுதுகிறது.  எனவே, இந்தி எதற்காகத் தேவை?

ஹிந்தி கற்றுக் கொள்வது எளிது. ஹிந்தி தெரிந்தால் இந்தியாவின் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் பிழைப்பு ஓடி விடும்.  இவ்வளவு ஹிந்தியை வெறுக்கும் நாம் இங்கே உள்ள கட்டுமானத் தொழில்களில் இருந்து மற்ற எல்லாத் தொழில்களிலும் ஊடுருவி இருக்கும் வட மாநிலத்தவரை நினைத்துப் பார்க்கிறோமா?  அவர்கள் இங்கே வந்து கட்டுமானத் தொழிலில் பெரும்பான்மையினராக இருந்து வருகின்றனர்.  இன்றைய தினம் அலுவலகங்களில் கூட பெயரோடு சேர்த்து "ஜி" போட்டு அழைக்கும் வழக்கம் பெருகி வருகிறது.  வட மாநில உணவு வகைகள் தான் ஹோட்டல்களில் கூட அனைவரும் விரும்பிச் சாப்பிடுகின்றனர். பலருக்கும் ஹிந்தியில் ஒரு சில வார்த்தைகள் தெரியத்தான் செய்கிறது.

ஒரு சிலர் ஹிந்தி தெரிந்தால் வடமாநிலங்களில் வேலை கிடைப்பது சுலபம் என்றால் அங்கிருந்து இங்கே ஏன் வந்து பானிபூரி விற்கின்றனர் என்று கேட்கின்றனர்.  பானிபூரி விற்கத்தான் வருகின்றனரே தவிர, பெரிய அலுவலகங்களில் வேலை பார்க்க வருவது இல்லை என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.  அங்கே அடிமட்ட நிலையில் இருப்பவர்கள் இங்கே பிழைக்க வந்து தங்களுக்குத் தெரிந்த பானிபூரி விற்பனையையும், சமோசா விற்பனையையும், பொம்மைகள் விற்பதையும் செய்கின்றனர்.  இது எதுவும் தெரியாதவர்கள் கட்டுமானத் தொழிலுக்குச் செல்கின்றனர்.  கடந்த பத்து வருடங்களில் இது அதிகரித்துள்ளது.  கட்டுமானத் தொழிலுக்குத் தமிழ்நாட்டு மேஸ்திரிகள், கொத்தனார்கள் இப்போது அதிகம் காண முடியவில்லை.


7.  மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள் என்பதானால் இந்தி ஏன் கற்றுக்கொள்ளவேண்டும்?  ஆங்கிலத்தில் அறிவு பெறுகிறார்களே, அது போதாதா?//

இரு மொழிப் பாடத்திட்டம் என்பதால் வேறு ஏதானும் மொழியைக் கொண்டு வருவதற்குப் பதிலாக ஹிந்தியை வைத்திருக்கலாம். கற்கவும் எளிது. மேலும் ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு மொழி என்பதால் எதை வைப்பது என்னும் குழப்பமும் இருக்காது.  ஆங்கிலம் எப்படி அனைவரையும் இணைக்கிறதோ அப்படி ஹிந்தி மூலமும் இணைய முடியும் என்பதும் ஒரு காரணம்.  ஆனால் தனியார்களால் நடத்தப்படும் மத்திய அரசுப் பாடத்திட்டத்தின்படி நடைபெறும் பள்ளிகள் அனைத்தும் தமிழ்நாட்டில் தமிழையே கற்பித்து வருகின்றன.  மூன்றாம் மொழியாக சம்ஸ்கிருதம், ஹிந்தி தவிர வேறு ஏதேனும் அந்நியமொழியைப் படிக்கலாம்.  இது எல்லாம் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கும் பொருந்தும்.


இவ்வளவு எதிர்ப்புத் தமிழ்நாட்டில் தான். மற்ற மலையாளம், தெலுங்கு, கன்னடம், மஹாராஷ்ட்ரா, குஜராத் ஆகிய திராவிட நாடுகளில் இல்லை என்பதையும் கவனிக்கலாம். எது எப்படியானாலும் தேர்ந்தெடுக்க வேண்டியவர்கள் முதலில் குழந்தைகளே.  தங்களுக்கு எது வசதி, எந்த மொழியில் படித்தால் பாடம் புரிகிறது என்பதை அவர்களே தேர்ந்தெடுக்க வேண்டும்.  இரண்டு மூன்று மொழிகளை கற்பிப்பது சிறப்பு.  ஏனெனில் அதிலிருந்து குழந்தைகள் தேர்ந்தெடுக்கலாம்.  இளமையில் மொழிகளைக் கற்பதும் எளிது. 

Sunday, November 16, 2014

கடைமுகம்




இன்று துலா மாதக் கடைசி நாள்.  ஆகவே நாளையில் இருந்து ஆண்டாள் இங்கே வரமாட்டாள். இன்னிக்கு அதனால் மீண்டும் ஆண்டாளைப் பார்க்கப் போனேன். ஒரே கூட்டம். இரு பக்கமும் வண்டிகள்.  குளிக்கச் செல்லும் மக்கள் கூட்டம் எனப்படம் எடுக்க முடியுமானு சந்தேகம்.  போலீஸ் வந்து வழியை ஒழுங்கு செய்தது. ஏதோ ஒப்பேத்தி இருக்கேன். 


 

கண்ணாடி வேறே இல்லை.  நாளைக்குத் தான் வரும்.  ஆகவே கைவிரல்களின் உணர்வை வைத்துத் தட்டச்சி இருக்கேன்.  தப்பு நிறைய இருக்கலாம். நாளை தான் திருத்தணும். :)






கிட்டக்க வந்துட்டாங்க ஆண்டாளம்மா.






போகும் ஆண்டாளை முழுவதும் படம் எடுப்பதற்குள் அருகில் இருந்தவர் கை தட்டி விடப் படம் சரியாக் வரவில்லை. கொஞ்சம் முன்னால் போய் நிற்கலாம் என்றால் அங்கே நிற்க விடவில்லை. :(  இந்த வருடம் அவ்வளவு தான்.  பிழைத்துக் கிடந்தால் பார்த்துக்கலாம். :)


கருத்துச் சொல்லுவோருக்கு பதில் எல்லாம் நாளைக்குத் தான். ஆகவே இன்று எஞ்சாய்!!

Friday, November 14, 2014

குழந்தைங்கல்லாம் வந்து சமத்தா பதில் சொல்லுங்க! :)

//1. சின்ன வயதில் கண்ட Fantasy கனவு?//

சின்னவயசில் கண்ட கனவெல்லாம் நினைப்பில் இல்லை. ஆனால் கணக்கு டீச்சரோடு எனக்கு ஏழாம் பொருத்தம். அவங்க என்னைப் பாராட்டறாப்போல் ஒருமுறை கனவு கண்டிருக்கேன். கண் விழித்ததும், ஙே! என்னைப் பொறுத்தவரைக்கும் அதான் சிறந்த கற்பனை!


2. பள்ளிக்கு செல்லும் வழியில் அனுபவித்த மறக்க முடியாத விஷயம்?


வைகை கீழ்ப்பாலம், (கல்பாலம் என்பார்கள்) வழியாத் தான் நடந்து போனால் போவது. பேருந்தில் போனால் சிம்மக்கல், யானைக்கல் கடந்து மேல்பாலம் வழியாப் போவது. அப்போ ஒரு முறை வைகையில் வெள்ளம் வந்து பார்த்தது தான். அன்னிக்கு ஸ்கூல் முதல் இரு வகுப்புகளோடு விடுமுறை கொடுத்துட்டாங்க. வெள்ளையாய், நுரையாய்ப் பெருகி வந்த வெள்ளத்தை அப்போது தான் முதன்முதலில் பார்த்தேன்.


3. மறக்க முடியாத புத்தகம்? ஏன்?


குழந்தைகள் பத்திரிகையான கண்ணனில் வந்த அனைத்துக் கதைகளுமே பிடித்தது. என்றாலும் குழந்தைகளுக்காக எழுதாவிட்டாலும் குழந்தைகளும் விரும்பிப் படிக்கும் துப்பறியும் சாம்பு தான் மறக்க முடியாத புத்தகம். சாம்புவை ரசிக்காதோர் உண்டா! நாவல் என்றால் கல்கியின் அமரதாரா தான்.


4. மறக்க முடியாத மழை நினைவு?


நிறைய மழையில் நனைஞ்சிருந்தாலும் தீபாவளிக்கு அப்புறம் பள்ளி திறந்து வகுப்புக்குப் போறச்சே எல்லோரும் புது உடை உடுத்திக் கொண்டு செல்வோம். பதினோராம் வகுப்புப் படிக்கையில் அன்று மழை வரும் என்ற எச்சரிக்கை இருந்தும் புதுசு போட்டுக் கொண்டு போய் சொட்டச் சொட்ட நனைந்து அப்பாவிடம் திட்டு வாங்கிக் கொண்டேன்.


5. எந்த விளையாட்டில் கெத்தாக விளங்கினீர்கள்?


ஓடியாடி விளையாடும் விளையாட்டென்றால் பாண்டி ஆட்டம். கல்லா, மண்ணா! உட்கார்ந்து விளையாடுவதில் ட்ரேட், சீட்டு ஆட்டத்தில் செட் சேர்ப்பது.


6. பால்யத்திற்கு திரும்பினால் எதை மாற்ற விரும்புவீர்கள்?


குறிப்பா எதுவும் இல்லைனாலும் எனக்குக் கணக்கு மட்டும் நல்லாப் போடத் தெரிஞ்சிருக்கணும்னு வேண்டிப்பேன். கணக்கிலே 75 மார்க் தான் என் அதிகபட்ச மார்க். அதுவும் பொதுக்கணக்குத் தான். அல்ஜீப்ராவோ, ஜியோமிதியோ படிச்சதில்லை. செக்ரடேரியல் கோர்ஸ் படிச்சதாலே கணக்கிலே அல்ஜீப்ரா, ஜியோமிதியும், தமிழிலே இலக்கணமும் கிடையாது. இது இரண்டையும் படிக்க முடியாமல் போனதைப் பெரிய இழப்பாகக் கருதுவதால் இவற்றைக் கற்கும் வாய்ப்பை வேண்டுகிறேன்.


உமாநாத் செல்வன்

நம்ம நீண்ட கால நண்பர், குழந்தை எழுத்தாளர், அதன் மூலம் தன்னையும் குழந்தையாய் நினைப்பவர், நம்மையும் குழந்தையாய் நினைப்பவர் கேட்டிருந்த கேள்விகளுக்கு நான் கொடுத்த பதில்.  இது ஒரு தொடர் பதிவு.  யார் வேண்டுமானாலும் தொடரலாம். அவரவர் விருப்பம். 

Thursday, November 13, 2014

சோதனைப் பதிவு!

சோதனைப் பதிவு வெளியீடு!

எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்!

இப்போதெல்லாம், தமிழ், தமிழர் என்னும் பிரிவினை (?) உணர்வு கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது.  ஏற்கெனவே நாம் தேசிய நீரோட்டத்தில் கலந்தவர்கள் அல்ல.  தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வோம். இப்போது சில நாட்களாக அல்லது வருடங்களாக இது அதிகரித்து வருகிறது.  இது நன்மைக்கா, தீமைக்கா எனத் தெரியவில்லை.  என்றாலும் இதன் மூலம் நாம் தனிமைப் படுத்தப் படுவோம்.  இது தேவையா?  ஏற்கெனவே அண்டை மாநிலங்களோடு தமிழ்நாட்டுக்கு சுமுகமான நட்புறவு இல்லை.  யாரும், யாரையும் சாராமல் வாழ்வது முடியாது.  நாம் தண்ணீருக்காக அவர்களிடம் கையேந்தினால் அவர்கள் நம்மிடம் வேளாண் விளைபொருட்களுக்காகக் கையேந்தும் நிலை.  என்றாலும் ஆதாரமான நீர் கொடுக்கும் அதிகாரம் அவர்களிடமே உள்ள போது நாம் கொஞ்சம் விட்டுக் கொடுத்துத் தான் போக வேண்டும்.


அதிலும் இப்போது எங்கே பார்த்தாலும் இந்தச் சண்டை அதிகமாகவே காணப்படுகிறது.  எல்லோருக்குமே நேரம் சரியில்லை போலும்.  எப்போதும் அமைதியாகவும் சாந்தமாகவும் காணப்படும் நண்பர்கள் கூட இது காரணமாகக் கடுமையாகப் பேசும் நிர்பந்தங்கள் ஏற்படுவதைக் கண்டால் ஒரு பக்கம் ஆச்சரியமாக இருக்கிறது.
*********************************************


வாரா வாரம் திங்கட்கிழமை வந்தால் உடனே வைகோ சாரிடமிருந்து நினைவூட்டு மடல் வந்துவிடும்.  இப்போ இரு வாரங்களாக இல்லை.  ஏதோ வெறிச்சுனு ஆயிட்டாப்போல் ஓர் எண்ணம்.  மனதிலும் ஓர் வெறுமை. அந்த அளவுக்கு இந்த விமரிசனப் போட்டி அனைவரையும் ஈர்த்து விட்டது.  ஆரம்பத்தில் நான் ஒரு பார்வையாளராக மட்டுமே இருக்க எண்ணினேன்.  ஆனால் வைகோ சாரின் விடாத தூண்டுதலினால் அவ்வப்போது ஏதோ எழுதி ஒப்பேற்றினேன்.  ஆகையால் என்னைப் பொறுத்தவரை இந்த அளவுக்குப்பரிசு  கிடைத்ததே ஆச்சரியம் தான்.


எழுதுபவரின் மனோநிலையோடு ஒன்றிப் போகவேண்டும் என்று நடுவர் குறிப்பிட்டிருக்கிறார்.  என்னைப் பொறுத்தவரை அப்படி ஒன்றிப் போவது என்பது விமரிசனம் எழுதச் சரியாய் வராது என நினைக்கிறேன்.  எழுத்தாளர் கதையை எந்தத் திக்கில் கொண்டு போகப் போகிறார் என்பதை ஓரளவு நாம் யூகித்தாலும், நாம் யூகம் செய்தது தவறாகவும் போகலாம். அவர் பார்க்கும் பார்வையிலேயே நாமும் பார்ப்பது என்பது சரியானதொரு விமரிசனத்தைக் கொடுக்க முடியாது என்பது என் தனிப்பட்ட கருத்து.

வைகோவைப் பொறுத்த வரை ஒரு சின்ன சிட்டம் நூலைக் கொண்டு ஒரு ஒன்பது கஜம் புடையையே பின்னி விடுகிறார்.  அதற்கு நடுவில் அதிக சம்பாஷணைகளை அமைக்காமல் தேவையானவற்றை மட்டும் அமைத்து வர்ணனைகள், சூழ்நிலைகள், மனோநிலைகள் எனக் காட்டுகிறார். என்னதான் கதைப் போக்கோடு அவை எலல்லாம் ஒட்டி அமைந்தாலும்  கதையில் சொல்லப்படும் கருத்தை ஒட்டியே நம் விமரிச்னம் அமைய வேண்டும் அல்லவா?  பல சமயங்களிலும் என்னால் அப்படி விமரிசனம் செய்ய முடியாமல் போயிருக்கிறது.  தாயுமானவள் கதையில் அப்படித் தான் நேர்ந்தது.  பிறகு தோன்றும்.  ஆனால் கதையை எழுதுபவரின் மனோநிலையோடு நாம் ஒன்றிப் போனோம் எனில் விமரிசனம் செய்ய வாய்ப்பே இல்லாமல் போய்விடுமே!  

சாதாரணமாக நாம் ஒரு பதிவுக்கு யதார்த்தமாகக் கொடுக்கப்படும் கருத்துகளே வேறு கோணத்தில் பார்க்கப்பட்டு அதற்குக் கண், மூக்கெல்லாம் வைத்துச் சொல்லப்படுகிறது.  இதில் ஒருத்தரின் கதைக்கு மட்டும் நாம் எப்படி கதாசிரியரின் கருத்தோடு ஒன்ற முடியும்? அப்புறம் விமரிசனம் எதற்கு? :)))))

கதாசிரியரின் மனோநிலையில் இருந்து விலகிப்  பார்த்தோமானால் தான் கதைக் கருவின் மூலம், அதன் விரிவாக்கம், விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கும் முறை, சம்பாஷணைகளின் சிறப்பு, கதாநாயக, நாயகியரின் குணநலன்கள் ஆகிய அனைத்தும் புலப்படும். முக்கியமாக கதை எதற்காக, எதைச் சொல்ல எழுதப் படுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும். பல சமயங்களிலும் நம்மால்(அதாவது என்னால்) இதை உணர முடிந்தது இல்லை.
********************************************

இப்போ பலருக்கும் நேரம் சரியில்லை போல!  பலரின் வாழ்விலும் பிரச்னைகள். இணைய நண்பர்கள் பலருக்கும் பல்வேறு விதமான குடும்பப் பிரச்னைகள், உடல் நலக்கேடு என்று இருக்கிறது.  எங்களுக்கும் இப்போது இந்த வீடு மாறுதல் கொஞ்சம் பிரச்னையாகவே இருக்கிறது.  இந்த மாதத்துக்குள்ளாக வீட்டை மாற்ற முடியுமா என்னும் கவலையில் இருக்கிறோம். முன்னெல்லாம் திட்டமிட்டால் ஓரளவு சின்னச் சின்ன மாற்றங்கள் இருந்தாலும் குறித்த நேரத்துக்குள் முடியும்.  இப்போதெல்லாம் எதையும் திட்டமிடவே முடியாமல் போகிறது. இதனால் அநாவசியமான கோப, தாபங்கள், பேச்சு, வார்த்தைகள் என்பவையே மிச்சம்.


எங்களோட நிலையைப் பொறியில் மாட்டிய எலியின் நிலை என்று சொல்லலாமா அல்லது சர்க்கஸில் சிங்கத்தின் வாய்க்குள் தலையைக் கொடுக்கும் கோமாளியின் நிலை என்று சொல்லலாமா என்று புரியவில்லை. இது எல்லாம் போச்சுன்னா இப்போ முகநூலில் ஜெயமோகனுக்காகச் சண்டை வேறு நடக்கிறது.  அவர் மஹாபாரதத்தை "வெண் முரசு" என்னும் பெயரில் எழுத ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார்.  அவரோட ரசிகர்களின் அன்புத் தொல்லை தாங்க முடியலை.  வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சித்தப்பாவை ஹரன் பிரசன்னா நார் நாராகக் கிழித்து விட்டார். :))))  இப்போதைக்கு முகநூலில் இதான் தலையாய பிரச்னை.  நல்லவேளையாக முகநூலுக்கு எப்போதாவது தான் போகிறேன். அதை ஒரு வழக்கமாக வைத்துக் கொள்ளவில்லை. :)))))

இப்போதைக்கு இவையே என் எண்ணங்கள்.  அனைவரும் நலம் பெற்று வாழவேண்டும்.  எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.  அனைவர் மனதிலும் சாந்தி நிலவ வேண்டும். 

Monday, November 10, 2014

என்னவோ போங்க! ஒண்ணுமே சொல்ல முடியலை! :(

இன்று கல்கத்தாவில் ஒரு பள்ளியில் ஐந்து வயதுப் பெண் குழந்தை பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டிருக்கிறது.  இது எங்கே போய் முடியும் என்றே தெரியவில்லை என்பது ஒரு புறம் இருக்க இதற்கான காரணங்களில் பெற்றோருக்கும் சம பங்கு உண்டு என்பதை அவர்களால் மறுக்க முடியுமா?  சூப்பர் சிங்கர், சூப்பர் டான்சர் என்றெல்லாம் போட்டிகள்.  அதிலே ஜூனியர், சீனியர் என்றும் போட்டி.  வயது வித்தியாசமே இல்லாமல்  தான் பாடுவதன் உண்மையான பொருள் புரியாமல் குழந்தைகள் பாடுகின்றன.  போட்டிக்குத் தான் என்றாலும் பாட்டின் பொருளைப் புரிந்து கொள்கின்றனரா?  அதற்கேற்ற அபிநயங்கள் வேறு.


சில நாட்கள் முன்னர் ஒரு சின்னஞ்சிறு பெண் குழந்தை, "பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு" பாடலை அவளைவிட ஐந்து மடங்கு பெரிய ஒரு ஆணோடு சேர்ந்து பாடினாள்  அங்கு கூடி இருந்த கூட்டமே அந்தப் பெண்ணின் அங்க அசைவுகளையும், கண்ணின் சுழற்றல்களையும் கண்டு குதூகலித்து ஆர்ப்பரிக்கிறது.  ஆனால் எனக்கோ?? அந்தக் குழந்தையின் எதிர்காலத்தை நினைத்து மனம் வேதனை கொண்டது.  அந்தப் பாடலை வேறு யாரேனும் இளம்பெண்களை வைத்துப் பாட வைத்திருக்கலாமோ என்றும் தோன்றியது.  ஒரு கோணத்தில் அதுவும் தப்பு என்றாலும் குறைந்த பக்ஷமாக அந்தப் பெண்ணிற்குப் பாடலின் அர்த்தம் புரிந்திருக்கும்.  ஆகவே கவனமாக இருக்கலாமே என்றும் தோன்றியது.


சின்னக் குழந்தைகள் கூட இப்படி வெளிப்படையாக நடக்க ஆரம்பிப்பது அல்லது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நடந்து கொள்ள வைப்பது என்று சொல்லலாமோ?  இவைதான்  இம்மாதிரியான குற்றங்களுக்கு மூல காரணம் என்று தோன்றுகிறது.  இன்னொன்று இதை ஒரு குற்றமாகக் கூட இப்போதெல்லாம் சொல்ல முடியவில்லை.  சிலநாட்கள் முன்னர் சொன்னபோது பெரியவர்கள் கூட அதற்கு வக்காலத்து வாங்கினார்கள் என்பது வருத்தத்துக்கு உரிய ஒன்று. ஆண்டாள் சொல்லாததா? ஆண்டாள் எழுதாததா என்றெல்லாம் சொல்கின்றனர்.  ஆண்டாளின் பக்தியைப் போன்றதா இப்போதைய பாடல்களைப் பாடும் குழந்தைகளின் நிலை?  குழந்தைகள் பக்தியுடன் திருப்பாவையையா பாடுகின்றனர்?  இல்லையே!  அவர்கள் பாடுவது திரைப்படப் பாடல்.  உருகி உருகிப் பாடுகின்றனர்!  கடவுளை நினைத்தா உருகுகின்றனர்? பெரியவர் கேட்டதும், நான் அளித்த பதிலும் கீழுள்ள சுட்டிகளில்.

 இங்கே

பதில்


இந்தச் சுட்டிகள் இடம் மாறி வெகு கீழே போயிருக்கின்றன.  இன்று தான் கவனித்தேன்.  இப்போது திருத்தி விட்டேன்.


இதே பெரியவர்கள் ஒரு காலத்தில் நான் ஒரு கதையைப் பாராட்டி எழுதியதற்குக் கொடுத்த கருத்தும், அதற்கு நான் பதிவாகக் கொடுத்த பதிலும் கீழ்க்கண்ட சுட்டிகளில் காணலாம். :)))) அதே பெரியவர்கள் இந்த மூன்று வருடத்தில் எவ்வளவு மாறி விட்டார்கள்.  ஐந்து வயதுக் குழந்தை சிருங்காரப் பாடல்களைப் பாடி அபிநயிப்பதில் என்ன தவறு எனக்கேட்கும் அளவுக்கு மாற்றம். ஆண்டாள் சொன்னதை விடவா என்றெல்லாம் சொல்கின்றனர்.  பக்தி முத்தின நிலையில் ஆண்டாள் சொன்னதுக்கும், இங்கே விளம்பரத்துக்காகவும், பணத்துக்காகவும் பாடுவதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கு என்பது நான் சொல்லித் தெரிய வேண்டாம்.  ஆனால் இன்னமும்  நான் தான் மாறவில்லை! :)))) மாறுவேனா?  சந்தேகமே!  மாறுவதைக்  குறித்து எனக்கும் தம்பிக்கும்

தம்பி

அடிக்கடி பேச்சு வார்த்தை நடக்கும்.  தம்பி எவ்வளவோ மாறிவிட்டார்.  நீங்க இன்னமும் மாற மாட்டீங்கறீங்களேனு கேட்பார்.  அதே போல் நான் பக்தி நிலையில் கீழ்ப்படியில் இருப்பது குறித்தும் அவருக்கு விசாரம்.  எனக்கு அந்த நிலையே ஜாஸ்தி! நான் அதே நிலையில்! :))) ஆனால் என்னைப் பொறுத்த வரை நான் இருக்கும் இந்நிலையே எனக்கு  சொர்க்கம்! :))))



 இன்னொரு விஷயம் பல நாட்களாக மனதில் இருந்தது.  இதுவும் அனைவரும் அறிந்த ஒன்றே!  சில நாட்கள் முன்னர் திரு யேசுதாஸ் அவர்கள் பெண்களின் உடை குறித்த கருத்தைப் பகிர, அவரைத் திட்டாத பெண்ணே இல்லை.  பெண் சுதந்திரம் உடையில் தான் இருக்கிறது எனச் சொன்னவர் யார்?  நம் நாட்டுக் க்லாசாரத்துக்கு சற்றும் ஏற்காத உடை எனச் சொல்லி இருந்ததும் பலருக்குப் பிடிக்கவில்லை.  கலாசாரத்தை விடுங்கள். சீதோஷ்ண நிலையைப் பாருங்கள்.  இத்தகைய உடை இந்த சீதோஷ்ணத்துக்குச் சரி வருமா?


இதை எல்லாம் சொல்லப் போனால் நீட்டி, முழக்கிக் கொண்டு பெண் சுதந்திரம் என ஆரம்பிக்கின்றனர்.  உண்மையான பெண் சுதந்திரம் இப்படியான உடைகளிலோ, அதற்காகப் போராடுவதிலோ இல்லை;  படிப்புக்காகப் போராடுங்கள்.  வேலைகளில் போட்டியிடுங்கள்.  சிறப்பான பணியில் போட்டியிடுங்கள்.  குடும்ப நிர்வாகத்தில் போட்டியிடுங்கள்.  குடும்ப நிர்வாகம் பெண்களின் கைகளில் இருந்தால் தான் சமூகப் பொருளாதாரம் மேம்படும்.  இது சத்தியம். அதே போல் குழந்தை வளர்ப்பும்.  பெண் தான் வளர்க்க வேண்டுமா?  ஆண்களுக்குப் பங்கில்லையா என்று இன்று கேட்கின்றனர்.  ஆண்களுக்கும் பங்கு உண்டு தான். ஆனால் பெண்ணின் மேற்பார்வைக்கும், ஆணின் மேற்பார்வைக்கும் வேறுபாடு நிச்சயம் உண்டு.

அன்பையும் கண்டிப்பையும் ஒரு சேரக் காட்ட தாய்மார்களால் தான் இயலும்.  ஆண்களால் ஒன்று அதிகக் கண்டிப்பு, அல்லது அதிகமான அன்பு இவை இரண்டு தான் முடியும்.  ஒரு சிலர் மாறுபட்டிருக்கலாம்.  என்றாலும் நம்மை நம் தாய்   அன்பைக் கொட்டி  வளர்த்தாற்போல் நாமும் நம் குழந்தைகளை அதே அன்போடும், கண்டிப்போடும், சமூகச் சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல் வளர்க்க வேண்டாமா?  இங்கேயும் இப்போதெல்லாம் பெண் சுதந்திரம் குறுக்கிடுகிறது. சுதந்திரம் என்னும் பெயரில் கட்டுப்பாடற்ற ஓர் நிலைக்குப் பெண்கள் செல்கின்றனரோ என்னும் அச்சமும் ஏற்படுகிறது.


இன்னொரு விஷயம்.  இப்போதெல்லாம் திருமணத்திற்குப் பெண்களே கிடைப்பதில்லை.  பெரும்பாலான பெண்கள் அவர்களாகவே திருமணத்தைத் தள்ளிப் போடுகின்றனர் என்பது ஒரு காரணம்.  இன்னொரு காரணம் பெண்ணின் பெற்றோர் போடும் நிபந்தனைகள். "ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால், பூநெய்க்கு இன்னொரு காலம் வராமலா போகும்!" வந்தே விட்டது.  ஆனாலும் இந்த ஆண்கள் அப்படியும் திருந்தின பாடில்லை.  திருமணத்திற்காகப் பெண்கள் கேட்டு விண்ணப்பிக்கும் பெரும்பாலான ஆண்கள் பெண் அழகாயும், சிவப்பாகவும் இருக்கவே விரும்புகின்றனர்.  எல்லாப் பெண்களுமே அழகாயும் சிவப்பாகவுமா இருக்க முடியும்?  அப்போக் கறுப்பான பெண்கள் என்ன செய்வார்களாம்?   பெண்ணின் அழகைப் பார்க்காமல், குணத்தைப் பாருங்கள்.


தொடரலாமா?  தெரியலை.  நேரம், சூழ்நிலை ஆகியவற்றைப் பொறுத்துத் தான் தொடருவதைக் குறித்துச் சொல்ல முடியும்.



Saturday, November 08, 2014

மதுரைக்குப் போயிட்டு வந்தேன்!

நேற்றுத் திடீரென மதுரை போக வேண்டி வந்தது. என் உறவினர் குடும்பம் மதுரை சமயநல்லூர் அருகே சாலை விபத்தில் கண்டமேனிக்கு அடிபட்டுப் படுத்து, எழுந்து அறுவை சிகிச்சைகள் முடிந்து வந்து ஒரு மாதமே ஆகிறது.  அவங்களைப் போய்ப் பார்க்கவே முடியலை.  இன்னமும் சரிவர நடக்க முடியாமல், கையில் எடுத்துச் சாப்பிட முடியாமல், கழிவறை செல்ல முடியாமல் தவிக்கும் என் அண்ணாவும், மன்னியும் பார்த்ததுமே அழுதுவிட்டார்கள்.  அவங்க இருவரும் மாப்பிள்ளை, பெண், பேரனோடு, மன்னியின் வயதான அம்மாவை சமயநல்லூரில் பார்க்கப் போகும்போது முன்னே சென்ற வண்டியை முந்திச் செல்ல இவர்கள் சென்ற வண்டி முயன்றிருக்கிறது.  எதிரே பேருந்து வருவதை முந்துவதற்காகக் கொஞ்ச தூரம் வந்ததுமே  புரிந்து கொண்ட வண்டி ஓட்டுநர் உடனேயே வரப்போகும் விளைவைத் தெரிந்து கொண்டு தலையைக் குனிந்து கொண்டு கதவைத் திறந்து வெளியே குதித்து விட்டாராம்.  அருகே அமர்ந்திருந்த அண்ணாவுக்கும், பின்னால் அமர்ந்திருந்த என் மன்னிக்கும் எக்கச்சக்கமாக அடி!  அதிலும் வலப்பக்கமாகவே பட்டிருக்கிறது.  நடுவே அம்ர்ந்திருந்த அவ்ர்கள் பெண்ணுக்குக் கை முறிவு.  அதுவும் வலக்கை.  ஓரத்தில் குழந்தையோடு அமர்ந்திருந்த மாப்பிள்ளை வண்டி ஓட்டுநர் குதிப்பதைப் பார்த்துத் தன்னையும் அறியாமல் அவரும் குழந்தையோடு வண்டியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

அதிர்ச்சிக் காயங்களைத் தவிரக் குழந்தைக்கும் அவருக்கும் வேறு ஒன்றும் இல்லை.  வழியோடு போன மற்றப் பேருந்துக்காரர்கள் உதவியுடன் இவர்களை அவசர உதவிப் பேருந்தை வரவழைத்து அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்.  அடிபடாவிட்டாலும் அதிர்ச்சியில் மாப்பிள்ளைக்குப் பேச்சே வராமல் போகக் குழந்தை விடாமல் அழுதிருக்கிறான்.  குழந்தையையும் தாயையும் சேர்த்து வைத்து மருத்துவம் பார்த்திருக்கின்றனர்.  அனைவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் பத்துநாட்களுக்கும் மேல் இருந்திருக்கின்றனர்.  என் மன்னிக்கு மூக்கே பிய்ந்து வந்திருக்கிறது.  நெற்றி, புருவம், கண்ணுக்கு அருகே, முகத்தில் எல்லாம் எப்படினே தெரியாமல் கண்ணாடி குத்திக் கிழித்திருக்கிறது. அண்ணாவுக்கு வலக்கை மணிக்கட்டில் நரம்பு கிழிபட்டு ரத்தம் சேதம்.  ஆக மொத்தம் பிழைத்ததே புனர் ஜனமம் தான்.

நான் கூட முதலில் தற்சமயம் மதுரை வரை இணைக்கப்பட்டிருக்கும் புதிய பைபாஸ் சாலையில் தான் விபத்து நேரிட்டிருக்குமோ என நினைத்தேன்.  ஆனால் நேற்றையப் பேருந்துப் பயணத்தில் அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.  பின்னர் நேரில் பார்த்து விசாரித்ததில் தான் புரிந்தது.  இப்போதெல்லாம் எங்கேயும், எதற்கும் போட்டி தான்.  முந்திச் செல்லவேண்டும் என நினைப்பவர்கள் பெரும்பாலும் இம்மாதிரி வாடகைக்கார் ஓட்டிகளாகவும், இரு சக்கர ஓட்டிகளாகவுமே இருக்கின்றனர்.  அதிலும் சென்னைக் கடற்கரைச் சாலையை அதிர வைக்கும் இரு சக்கர ஓட்டுநர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். வண்டியில் பறக்கின்றனர். இதனால் சமீபத்தில் ஓர் இளைஞன் சுவற்றில் மோதி மரணம் அடைந்தான் அவன் பிறந்த நாளிலேயே.  அதற்காகப் பெற்றோர் கொடுத்த பரிசான அந்த வண்டியே அவன் உயிரையும் குடித்துவிட்டது.

ஓரிரு நிமிடங்கள் தாமதித்தால் என்ன குடிமுழுகிடும்?  ஏன் தாமதிக்க மறுக்கிறோம்?  முதலில் சென்று சாதிக்கப் போவது என்ன?  வண்டியிலிருந்து குதித்த ஓட்டுநரும் இவர்களோடு அதே மருத்துவமனையில் 3 நாட்கள் இருந்துவிட்டுப் பின்னர் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். கஷ்டப்படுவது வயதான என் அண்ணா, மன்னி, கைக்குழந்தையுடன் என் அண்ணா பெண் ஆகியோர் தான்.  அண்ணா பெண்ணுக்கு இப்போது ஓரளவு குணம் என்றாலும் இன்னமும் கையை நீட்ட, மடக்க முடியவில்லை.  காலை உதவிக்கு ஒரு செவிலியர் பெண், மாலை உதவிக்கு இருவர் என வருகின்றனர்.  அன்றாடக் காரியங்களைக் கூட இவர்கள் உதவியோடு தான் முடித்துக் கொள்ள வேண்டும். இதைத் தவிரக் கைகால்களுக்குப் பயிற்சி கொடுக்கத் தனியாக வருகின்றனர். எப்படியும்  அவர்கள் உடல்நிலை முன்னேற்றம் அடைய இன்னும் ஓரிரு மாதம் ஆகலாம். அப்போதும் பொருத்தப்பட்டிருக்கும் செயற்கையான உபகரணங்களின் உதவியுடனேயே இனி வாழ்நாளைக் கழிக்க வேண்டும்.  ஒரு கண அலக்ஷியத்தின் விளைவு இது!

மதுரையில் வேறெங்கும் செல்லவில்லை;  செல்லும் மனமும், நேரமும் இல்லை.  ஆனால் மதுரை தன் கிராமிய முகத்தில் மஞ்சளுக்குப் பதிலாக ஃபவுன்டேஷனும், உடையில் புடைவை, பாவாடை, தாவணிக்குப் பதிலாக லெக்கீஸ், ஜீன்ஸ், டீஷர்ட், குர்த்தியுடனும், ஆனால் அதே சமயம் ஒற்றைப் பின்னலுடனும், தலையில் வைத்த பூவுடனும், நெற்றிப் பொட்டுடனும், காதில் தொங்கட்டானுடனும் காட்சி அளிக்கிறாள். இந்த இரண்டுங்கெட்டான் நிலையையே புதுமை எனவும் எண்ணிக் கொள்கிறாள். :(

Monday, November 03, 2014

வைகோவின் விமரிசனப் போட்டியின் நிறைவில் கிடைத்த பரிசு!

மூன்றாம் பரிசு


மேலுள்ள சுட்டியில் இந்த விமரிசனத்துக்கு மூன்றாம்பரிசு கிடைத்திருப்பது தெரிய வரும்.

இந்தக் கதையைக் கொஞ்சம் புதுமாதிரியாக எழுதி உள்ளார் ஆசிரியர். கதாநாயகன் காணும் கனவுகளே கதையின் அடித்தளம். கதாநாயகன் ஒரு மனநல மருத்துவர். அப்படி இருந்தும் அவருக்கும் கனவுகள், அதன் தொடர்பான நிகழ்வுகள் என வருகின்றன.  இது என்ன தான் படித்தாலும், அறிவு வேலை செய்தாலும் சில உணர்வு பூர்வமான விஷயங்களில் அதிலும் காதல் விஷயத்தில் மனிதன் மாறுவதே இல்லை என்பதைக் காட்டுகிறது. இதற்கெனக் காரண, காரியங்களை விளக்குவதும் கடினம்.   கதையை நான்கு பாகங்களாகக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர். நான்குமே வெவ்வேறு நிகழ்வுகளைச் சுட்டுகிறது.

முதல் பகுதியில் படித்தால் உண்மையான கணவன், மனைவியின் உரையாடலாகவே காட்சி தருகிறது.  நிறைமாத கர்ப்பிணியான தன் மனைவியிடமும், தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையிடமும் அளவற்ற பாசம் வைத்திருக்கும் கணவனாகக் காட்சி தருகிறான் கதாநாயகன் மனோ.  சில இடங்களில் அவன் நடத்தை மிகையாகவே தோன்றினாலும் இப்படியும் சிலர் இருப்பார்கள்; அல்லது இருக்கின்றனர் என மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டும்.  ஆனாலும் என்னைப் பொறுத்தவரை இதெல்லாம் பித்துக்குளித் தனமாகவே தெரிகிறது. ஏதடா, மனைவிக்குப் பிரசவத்திற்கான நாட்கள் நெருங்குகிறதே, அவளுக்குத் தொந்திரவு கொடுக்காமல் இருப்போம்னு இல்லாமல், கொஞ்சுகிறேன் பேர்வழினு  ரொம்பவே வழிகிறாரோனு தோணுது.  அந்த அனுவும் கண்டிச்சுப் பார்த்துட்டு ஒண்ணும் முடியலைனு விட்டுடறாங்க போல! அல்லது அவங்களுக்கும் இதெல்லாம் ரசனையாக இருந்திருக்கலாம்.  இந்தக் காலத்தில் பல்வேறு தொலைககாட்சித் தொடர்கள், திரைப்படங்கள்னு பார்த்துட்டு எல்லோருமே அதிலே வரும் நாயக, நாயகியர் மாதிரி தான் வாழ்க்கையும் என்ற கனவில் இருக்கிறார்களோ என்னமோ!  யதார்த்தம் வேறே என்னும் உண்மை புரியலை என்றே நினைக்கிறேன். இப்படி எல்லாம் மனைவியைத் தொந்திரவு செய்யும் கணவன் அவளுக்குப் பிரசவ வலி என்றதும் பதறுகிறான்.

ஆனால்!!!!!!!!  இந்த ஆனாலில் தான் கோபு சார் கதையில் முடிச்சுப் போடுவதில் வல்லவர்னு நிரூபிக்கிறார். சரியாக இந்த நேரத்தில் விழிப்பு வருகிறது மனோவுக்கு.  ஆம்! மேலே சொன்ன அத்தனையும் கதாநாயகன் மனோ கண்ட கனவாம்! கனவில் இப்படி எல்லாம் வருமா என்றால் வருமே என்கிறான் இந்தக் கதாநாயகன்.  இளைஞனான மனோ மனநல மருத்துவமனையின் இளம் பயிற்சியாளராகச் சேர்ந்திருக்கும் மருத்துவர் என்றும் கதாநாயகி அனுவின் வீட்டு மாடியில் குடி இருப்பவன் என்றும் தெரிய வருகிறது.  அதோடு கதாநாயகன் இந்த அனு என்னும் இளம்பெண் தினம் தினம் வாசலில் கோலம் போடுவதை மாடியில் இருந்து பார்த்து ரசிக்கும் பழக்கம் உள்ளவன் என்பதும், அவளை நன்றாக நெருக்கத்தில் பார்த்து ரசிப்பதற்காக ஒரு பைனாகுலர் வேறு வாங்கி வைத்திருக்கிறான் என்பதும் தெரிய வருகிறது. உள்ளூர அனுவின் கோலத் திறமையையும் கண்டு ரசிப்பதோடு வியப்பாகவும் இருக்கிறது அவனுக்கு.  இவளுக்குக் கோலப் பைத்தியமோ என அவன் நினைக்கும் அளவுக்கு அவள் கோலத்தில் ஈடுபாடு காட்டுகிறாள்.

ஒரு பெண்ணை அவளுக்குத் தெரியாமல் பார்ப்பது, ரசிப்பது குற்றம் என்றே சொல்ல வேண்டும்.  அதிலும் பைனாகுலர் வைத்துக் கொண்டு அணு அணுவாகப் பார்த்து ரசிப்பது என்பது சரியாகத் தெரியவில்லை.  ஆண்களின் சுபாவமே இது தான் என்று ஆகிவிடாதோ! அதிலும் இது அந்தப் பெண்ணுக்குத் தெரிய வந்தால் அவள் மனம் புண்படுமே!  துடித்துப் போய்விடுவாள். என்னதான் காதல் என்றாலும் இவ்வளவு படித்து மனோதத்துவ மருத்துவராகப் பல்வேறு மனநல நோயாளிகளை தினம் தினம் சந்திக்கும் மனோவுக்கு ஒரு இளம் பெண்ணின் மனோநிலையும் புரிந்திருக்கணும். அவளை ரகசியமாய்ப் பார்த்து ரசிப்பது சரியல்ல என்றும் தோன்றி இருக்கணும். ஆனால் நாம் தான் பல திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும்  நிறையப் படித்தவர்களே மிக மோசமாக நடந்து கொள்வதைப் பார்க்கிறோம்.  இங்கே விபரீதமாக ஒன்றும் நடக்கவில்லை எனத் திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியது தான். என்றாலும் ஒரு பெண்ணின் கண்ணோட்டத்தில் இது எனக்குச் சரியாகத் தெரியவில்லை. இது போகட்டும்!  மனோவோ தன்னையும் அறியாமல் அனுவைக் காதலிக்க ஆரம்பிக்கிறான். அதே போல் அவளும் தன்னைக் காதலிக்கிறாள் என்றே அவள் நடவடிக்கைகள் மூலம் மனோவுக்குத் தோன்றுகிறது.

இங்கே தான் ஆசிரியர் அடுத்த முடிச்சை வைத்திருக்கிறார். இத்தனை அழகும், திறமையும் வாய்ந்த அனுவுக்கு வாய் பேச முடியாது என்பதை அவள் தாயின் மூலம் அறிந்து கொள்ளும் மனோவுக்கு இந்தக் குறையின் காரணமாக அவள் மேல் அதிக ஈடுபாடே தோன்றுகிறது. இதற்காகவெல்லாம் தன் மனதை மாற்றிக்கொள்ள முடியாது என்பதையும் அவன் உணர்கிறான். அப்போது தான் அனுவின் தாய் அங்கே வந்து அனுவுக்குச் செய்திருக்கும் கல்யாண ஏற்பாடுகளையும், மறுநாள் பிள்ளைவீட்டார் வரும்போது மனோ வந்து உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து மனோவின் ஆசையின் மேல் குண்டைத் தூக்கிப் போட்டு விடுகிறாள்.  என்றாலும் தன் காதலி அனு வாழ்க்கைப்பட்டுப் போகும் இடம் நல்ல இடம் தானா என அவள் தாய் விசாரித்தாளா என அந்த நிலையிலும் அவனுக்குக் கவலை.  அதை விசாரித்துத் தெரிந்து கொள்கிறான். நல்ல இடம் தான் என அவள் தாய் சொன்னாலும் இரவில் அவனுக்கு மனநிம்மதி இல்லாமல் தூக்கம் வராமல் தவித்து வெகுநேரம் கழித்துத் தூங்குபவன் காலை எழுந்தவன் தன் தினசரி வழக்கப்படிக் கோலம் போடும் அனுவைப் பார்க்கிறான்.

இன்னொருத்தன் சொத்தாகப் போகும் அனுவைக் கோலம் போடும்போது வருத்தத்துடனேயே பார்த்து ரசிக்கும் மனோவுக்குச் சற்று தூரத்தில் இருந்த புதரில் இருந்து வந்த ஒரு கருநாகம் அனுவின் முதுகின் பின்னால் படமெடுத்து ஆடிக் கொண்டு கொத்தத் தயாராக இருப்பது தெரியவர  மின்னல் வேகத்தில் செயல்பட்டுக் கீழிறங்கிப் போய் அனுவைத் தூக்கி நகர்த்துகிறான். திடீரென மாடியில் குடி இருக்கும் வாலிபன் தன்னைத் தொட்டுத் தூக்கியதோடு இல்லாமல் தன்னெதிரே அவனால் சுட்டிக்காட்டப்பட்டக்  கருநாகத்தையும் கண்ட அனு அதிர்ச்சியில் வாய் திறந்து "அம்மா" என்று கத்த மனோவுக்கு அவள் பேச ஆரம்பித்ததைக் கண்டு ஆச்சரியம் ஏற்பட அவனும் கத்தி விடுகிறான். இருவரின் சத்தத்தில் ஊர் கூட, நடந்தது அறியாத ஊர் மக்கள் அனுவை மனோ தொட்டுத் தூக்கியதைத் தப்பு எனப் பஞ்சாயத்தைக் கூட்டுகிறார்களாம். இந்த இடம் தான் புரியலை எனக்கு!  அவர்களுக்கு அனுவோ, மனோவோ சொல்லாமல் அனுவை அவன் தொட்டுத் தூக்கியது எப்படித் தெரிய வந்தது?  அது தான் போகட்டும் என்றால் இக்கட்டான நிலையில் தூக்கியதைத் தப்பு என எப்படிச் சொல்ல முடியும்?


ஒன்று மனோவாவது வாய்விட்டு இந்த மாதிரி நிலைமை எனச் சொல்லி இருக்கணும்;  அல்லது அனுவாவது தன்னைக் கருநாகம் கொத்த வந்ததையும் மனோ காப்பாற்றியதையும் அந்த அதிர்ச்சியில் தனக்குப் பேச்சு வந்ததையும் தெளிவாக அவள் தாயிடமாவது சொல்லி இருக்கணும்.  அனுவால் பேசமுடியாத சூழ்நிலை எனக் கதாசிரியர் சொல்லி இருந்தாலும் என்னால் அதை ஏற்க முடியவில்லை. என்ன காரணம்னு தெரியாமல் அவளும் வாய் மூடி மௌனியாக இருக்க, மனோவும் மௌனம் காக்க, பஞ்சாயத்தில் மனோவுக்கு அடி, உதை எனத் தீர்ப்பு வர மனோ மனம் நொந்து போகிறான்.  ஆனால்

ஹிஹிஹி, இங்கே தான் அடுத்த கடைசி முடிச்சு.  அதுவும் உடனடியாக அவிழ்க்கப்படுகிறது. பாம்பு அனுவைக் கொத்தத் தயாராக இருந்த காட்சியை மனோ தன் கனவில் கண்டானாம். அது மட்டுமா? மனோ காணும் கனவுகள் எல்லாம் அப்படியே பலிக்குமாம்.  முதலில் மனோவுக்கு மனோதத்துவ மருத்துவம் பார்க்கணுமோனு தோணுது! :)  ஆனால் மனோவின் தாய். தந்தையர் மரணம், அவன் நெருங்கிய நண்பனின் படிப்பு போன்ற விஷயங்களில் மனோவின் கனவு பலித்திருக்கவே இதுவும் பலிக்குமோ என்னும் எண்ணத்தில் தீர்மானமாக இருந்த மனோ அனுவைப் பெண் பார்க்க வருபவர்களைப் பார்த்துப் பேசவும், அனுவின் தாய்க்கு உதவிக்குச் செல்லவும் தன்னைத் தயார் செய்து கொள்கிறான். சற்று நேரத்தில் பிள்ளை வீட்டார் அனுவைப் பார்க்க வருகிறார்கள்.

வந்தவனோ ஏற்கெனவே மனோவுக்கு அறிமுகம் ஆன சமூக விரோதி ஒருவன். சென்னையைச் சேர்ந்த நாகப்பா என்னும் பெயருள்ள அவன் ஏற்கெனவே இரு முறை திருமணம் ஆனவன் என்பதும் மனோ அறிந்திருந்தான். உடனடியாக அனுவின் அம்மாவைத் தனியாகக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்லிக் கல்யாணத்தை நிறுத்திவிடுகிறான்.  வந்தவர்கள் ஏமாற்றத்தோடு திரும்ப, இந்த நாகப்பா வரப் போவதைத் தான் சூசகமாகத் தன் கனவில் கருநாகமாகத் தான் கண்டிருப்பதாகவும், நல்ல சமயத்தில் அனுவை இந்தப் பொல்லாத திருமண பந்தத்தில் இருந்து காப்பாற்றிய தான் முயற்சி செய்தால் அனுவைக் கூடிய சீக்கிரம் பேச வைக்கலாம் என்றும் இனி அவளைத் தான் மணக்கத் தடை ஏதும் இராது எனவும் எண்ணிய மனோ மனது மகிழ்ச்சியில் தீபாவளி மத்தாப்புப் போல் ஒளிவீசிப் பிரகாசிக்கிறது.  மேலும் அனுவைக் குறித்துத் தான் கண்ட கனவுகள் அனைத்தும் பலிக்கப் போகிறது என்றும் புரிந்து கொண்டான். அதாவது அனுவைக் கல்யாணம் செய்து கொண்டு பிள்ளைத்தாச்சியான அவளுடன் தான் கழித்த இனிமையான நினைவுகளைக் கொண்ட கனவு உட்பட உண்மையாகப்  போவதை எண்ணி சந்தோஷம் அடைகிறான்.  அதற்கேற்றாற்போல் மறுநாள் அனு இதயவடிவக் கோலம் போட்டு அவனுக்கு நன்றியும் தீபாவளி வாழ்த்தும் சொல்லி இருந்தாள். அனுவின் மனம் அந்தக் கோலத்தின் வழியே தனக்குத் தெரிந்துவிட்டதை எண்ணிக் குதூகலிக்கிறான் மனோ.

இனி என்ன?  டும் டும் டும் தான்.  மேளம் கொட்டி, நாதஸ்வரம் ஊதத் தாலி கட்ட வேண்டியது தான். பொதுவாகப் பார்த்தால் வெகு சாதாரணக் கதையாக இருக்கிறது.  ஆனால் மனோவை ஒரு மனநல வைத்தியராகக் காட்டியதன் மூலம் மன நல மருத்தவரானாலும் அவருக்கும் மனம் சொந்தக் கட்டுப்பாட்டில் இயங்காது; அவருடைய உணர்வுகளுக்கும், சாமானியர்களின் உணர்வுகளுக்கும் வித்தியாசம் இல்லை என நிரூபிக்கிறாரோ? காதல் என்பது பொதுவான ஒன்று!  ஆகவே மனோ காதல் கொண்டதில் தப்பில்லை;  காதல் பலிக்கும் என்று  உறுதி கொண்டதிலும் தப்பில்லை.  ஆனால் தான் கண்ட கனவுகள் பலிக்கின்றன என்று சொல்வது மட்டும் கொஞ்சம் உறுத்துகிறது. கனவுகளைக் குறித்து மனநல மருத்துவர்கள் ஆய்வுகள் பல செய்திருக்கின்றனர். ஆகவே  மனநல மருத்துவன் ஆன மனோ தன் உள் மனதின் ஆழத்தை இன்னொரு அனுபவசாலியான மனநல மருத்துவர் உதவியுடன் கண்டறிந்திருக்க வேண்டுமோ?   ஒரு மனநல மருத்துவருக்கே உரிய நிதானமும், விவேகமும் மனோவிடம் காண முடியவில்லை என்றே தோன்றுகிறது.

கதையின் முடிவை நம் யூகத்திற்கே ஆசிரியர் விட்டிருக்கிறார்.  ஆனாலும் ஏதோ ஒரு குறை அல்லது நெருடல் தென்படுகிறது. என்ன என்று தான் புரியவில்லை.  சம்பவச் சேர்க்கைகள் கொஞ்சம் செயற்கையாக இருப்பது போலும் தெரிகிறது.  இயல்பாகக் கண்ணெதிரே பார்க்கும் சம்பவங்களைக் கோர்த்துக் கதை பின்னுபவர் இந்தக் கதையைக் கற்பனை உலகில் சஞ்சரித்த வண்ணம் எழுதி இருக்க வேண்டும்.  ஆனால் கனவுகளையும் உண்மையையும் வேறுபடுத்திக் காட்டி இருப்பதும் கதாசிரியரின் திறமை என்றே சொல்லவேண்டும். 

Sunday, November 02, 2014

ஆண்டாளம்மா அரங்கனுக்குக் கொண்டு செல்லும் காவிரி நீர்!


ஐப்பசி மாதக் காவிரி ஸ்நானம் மனிதர்களுக்கான நமக்கு மட்டுமல்ல, அரங்கத்து நம்பெருமாளுக்கும் விசேஷமானது;  பிடித்தமானது. தினசரிக் குளியலுக்குக் கொள்ளிடத்து நீரைப் பயன்படுத்தும் நம்பெருமாள் இந்த ஐப்பசி மாதம் மட்டும் காவிரி நீரைப் பயன்படுத்துவார்.  அதுவும் ரங்கராஜனின் பட்டத்து யானையான ஆண்டாளம்மா மேல் பட்டாசாரியார் உட்கார்ந்து கொண்டு தங்கக் குடத்தில் அந்த நீரைக் கொண்டு போவார்.  இது இந்த மாசம் முழுதும் தினசரி நடக்கும் காட்சி.  ஐந்து மணிக்கே ஆண்டாள் காவிரிக்குப் போய் விடுவாள்.  அதன் பின்னர் ஐந்தே முக்கால் போல் பட்டாசாரியார்கள் செல்வார்கள். நடந்து வருவதாலும், ஆண்டாளின் வேகத்தோடு ஈடு கொடுக்க முடியாததாலும் அவர்கள் வருகை மெதுவாகவே நடைபெறும்.  திரும்பறச்சே பார்க்கணுமே.  ஆண்டாளின் வேகத்துக்கு ஈடு கொடுத்து ஓடுவார்கள். :)


முந்தாநாள் தற்செயலாக வீட்டுக்கு வந்த உறவினர்கள் திரும்ப ஊருக்குச் செல்லும்போது கீழே வந்தப்போ ஆண்டாளைப் பார்க்க நேர்ந்தது.  அப்போக் கையில் அலைபேசியும் இல்லை. காமிராவும் இல்லை.  ஆகவே படம் எடுக்கலை.   நேத்திக்குப் போக நினைச்சு முடியலை.  இன்னிக்கு முன் கூட்டியே காத்திருந்து போய்ப் பார்த்து எடுத்து வந்த படங்கள் இவை.




வெள்ளிக்குடத்தில் தாயாருக்கு நீர் போகிறதுனு நினைக்கிறேன்.




அதோ ஆண்டாளம்மா.  அவங்க மேலே தங்கக்குடம் காவிரி நீருடன்




இன்னும் கொஞ்சம் அருகே ஆண்டாளம்மா வந்துட்டாங்க.





அந்த அவசரத்திலும் ஆண்டாளம்மா கடைக்கண்களால் நம்ம பக்கம் பார்த்து ஒரு புன்னகை ஒண்ணு கொடுக்கிறாங்க.







கோயிலை நோக்கி வேக நடை போடும் ஆண்டாளம்மா. முன்னர் பழகிய பாகன் ஶ்ரீதரன் இல்லாமல் அடிக்கடி அவங்களுக்கு ஏக்கத்தில் உடம்பு படுத்தினாலும் ரங்கனின் சேவையை நிறுத்துவதில்லை. அதோடு புதுப் பாகனிடமும் மிகவும் கீழ்ப்படிதலுடன் நடந்துக்கிறாங்க என்பது கூடுதல் விசேஷம்,









Saturday, November 01, 2014

இதுக்குத் தான் இரண்டாம் பரிசு!

இரண்டாம் பரிசு


மேற்கண்ட சுட்டியில் எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்திருக்கும் செய்தியைக் காணலாம்.  விமரிசனம் கீழே!  இந்தக் கதையைக் குறித்து நிறையப் பேச வேண்டியது இருக்கிறது. இந்தக் கணினி யுகத்தில் இப்படி ஒரு கணவன், மனைவியா என்ற ஆச்சரியம் இன்னும் எனக்கு விலகவில்லை. ஆனால் விமரிசனத்தில் இதைக் குறிப்பிடவில்லை. என்னதான் மனைவி தனக்கு மட்டும் சொந்தம் என நினைத்தாலும், வெளியே போகக் கூடக் கணவன் உத்தரவோடு அவன் தாய் துணையோடுதான் போகணும்னு நிபந்தனைகள் இருந்தால் அதை அந்தப் பெண், பிறந்த வீட்டில் சுதந்திரமான போக்குடனும், சிந்தனைகளுடனும், தைரியத்துடனும் இருந்தவள் எப்படி இங்கே பெட்டிப்பாம்பாக அடங்கி நடந்தாள்?  அதுவும் கணவனை எதிர்த்து ஒரு வார்த்தைகூடப் பேசாமல் எப்படி இருந்தாள்?  நினைக்க நினைக்க ஆச்சரியம் தான்.

மனைவிக்குப் பொன்விலங்கு பூட்டி வீட்டில் அடைத்து வைக்கும் கணவனைக் குறித்த கதை இது.  சகலகலாவல்லியான கல்பனா திருமனத்துக்குப் பின்னர் இருக்கும் இடமே தெரியாமல் இருக்க வேண்டி வருகிறது.  அவளுக்கு இதுதான் பிடிக்கும் என்று அவள் கணவன் தானாக முடிவெடுத்து அவளைக் கிட்டத்தட்ட வீட்டுச் சிறையில் வைக்கிறான். வீட்டில் அடைபட்ட கிளியான அவளுக்குத் துணையாகவும் சில பச்சைக்கிளிகள் கூட்டில் அடைக்கப்பட்டு வளர்கின்றன. சுதந்திரமாகப் பறக்கும் பறவைகளைக் கூட்டில் அடைப்பதே எனக்குப் பிடிப்பதில்லை. கல்பனா கோயிலுக்குப் போனால் கூடத் துணைக்குத் தன் தாயை அவள் கணவன் அனுப்புகிறான். இத்தனைக்கும் கல்பனா திருமணத்துக்கு முன்னர் வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவளே!  வங்கியில் வேலை செய்த கல்பனா, வங்கிக்கும் நீண்ட விடுமுறை போட்டுவிட்டுக் கணவன் விருப்பப்படி வீட்டுச் சிறையில் வாயே திறக்காமல் இருக்கிறாளாம். கோபமாக வருகிறது! :( அதோடு அவள் வங்கி வேலையில் இருந்தவள் என்பது தெரியாமல் அவள் கணவன் கல்யாணம் செய்து கொண்டிருக்கவும் முடியாது.  இப்படி இருக்கையில் எவ்விதம் அவன் அவளை அவ்வாறு நடத்தினான் என்பது வியப்பே!


கணவன் வரையில் மனைவியை மிகவும் சந்தோஷமாக ராணி போல் வைத்திருப்பதாக எண்ணம். எல்லா வீட்டு வேலைகளுக்கும் ஆட்கள்.  மனைவி எந்த வேலையும் செய்யாமல் வீட்டில் சுகமாகப் புத்தகங்கள் படித்துக்கொண்டும், தொலைக்காட்சி பார்த்துக்கொண்டும், கிளிகளுக்கு உணவிட்டுக் கொண்டும் இருந்தாலே போதும் என்பது அவன் எண்ணமாக இருக்கலாம்.  ஆனால் இதுவா உண்மையான சுகம்? என்னதான் வீட்டில் வேலைகள் செய்யாமல் இருந்தாலும் அக்கம்பக்கத்தினருடன் பேசிப் பழகவோ, தன் வீட்டுக்கு வேண்டிய பொருட்களைத் தானே தேர்ந்தெடுத்து வாங்கவோ, சுதந்திரமாகக் கடை, கண்ணிகளுக்கும் கோயிலுக்கும் போவதற்கோ, பிறந்த வீட்டுக்குப் போவதற்கோ கூடக் கணவனின் அனுமதியை எதிர்பார்ப்பது என்றால் கொடுமையாக இல்லையோ?  பிறந்த வீட்டிற்கு நினைத்த நேரம் போக முடியாது;  போகவும் கூடாது.  ஆனால் முன் கூட்டித் திட்டமிட்டுக் கணவனிடம் சொல்லிவிட்டுப் போய் வரலாமே!  அதுவும் இல்லை.  ஆனால் இதற்குக் காரணமே ஒரு வகையில் கல்பனாவே தான்.


கணவன், மனைவிக்குள் ஒளிவு, மறைவு இல்லாமல் இருந்தால் நல்லது. தன்னைக் குறித்த அனைத்தையும் மனைவியிடம் தெரிவிக்கும் கணவன் அதே போல் மனைவியிடமும் அவள் ஆசைகள், தேவைகள், திறமைகள் போன்றவற்றைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். திருமணம் ஆனதுமே முதல் ஒரு வாரத்திற்குள்ளாக இது எல்லாம் நடந்து முடிந்து விட வேண்டும். இப்போதெல்லாம் நிச்சயம் ஆனதிலிருந்தே  ஆணும், பெண்ணும் சேர்ந்தே தான் சுற்றுகிறார்கள்.  இதுவும் அவள் கணவனுக்குப் பிடிக்காது போலும்;  அப்படிப் போயிருந்தால் ஓரளவுக்குக் கல்பனாவின் விருப்பு, வெறுப்புகள் பிடிபட்டிருக்குமே! மனைவியின் ஆசைகளை, விருப்பங்களை மதிக்க வேண்டும்.  அவளை கொலு பொம்மை போல் கருதக் கூடாது.  அலங்கரித்து வீட்டில் அமர்ந்து கொண்டு அழகு பார்க்க மட்டும் மனைவி அல்ல.  கணவனின் முதல் நண்பனாக மனைவியும், மனைவியின் முதல் நண்பனாகக் கணவனும் இருத்தல் வேண்டும். சொல்லப் போனால் ஒவ்வொரு விஷயத்திலும் ஒருவருக்கு ஒருவர் கலந்து ஆலோசித்து இருவரின் விருப்பமும் தெரிந்து கொண்டு பின்னரே சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கலாம்.  கணவன் கேட்காவிட்டாலும் கல்பனாவே தன்னைக் குறித்துக் கணவனிடம் சொல்லி இருக்கலாம். அதைச் செய்யவில்லை அவள்.  என்ன படித்து என்ன? கல்லூரியில் தைரியமான பெண்ணாகப் பெயர் வாங்கினதெல்லாம் இங்கே கணவனுக்கு அடிமையாக இருப்பதற்கா? தன்னுடைய கோழைத்தனத்தை நினைத்தல்லவோ கல்பனா வெட்கப்பட வேண்டும்?  கணவனைக் குற்றம் சொல்வது எவ்வகையில் நியாயம்?  தன் மனைவியை மிகவும் நேசிக்கும் சிவராமன் அவள் தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்கவேண்டும் என எண்ணுகிறான்.


ஒரு சமயம் சிவராமனுக்கு அலுவலக வேலையாக வடமாநிலத்தில் உள்ள ஹரித்வார் செல்ல நேர்கிறது.  அப்போது தில்லியில் ரயில் மாறும் முன்னர் பெட்டி, படுக்கைகள், அடையாள அட்டை உட்பட அனைத்தையும் பறிகொடுத்துவிட்டு மொழியும் புரியாமல் நிற்கும் சிவராமன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுக் கொண்டு போகப்படும்போது  தில்லியில் வக்கீல் தொழில் புரியும் கல்பனாவின்   சிநேகிதி நந்தினி அவனைப் பார்க்கிறாள்.  நந்தினியின் வண்டியும் போலீஸ் வண்டியும் சிக்னலில் நிற்கும்போது பார்க்க நேரிடுகிறது.  கல்யாணத்தின் போதே நந்தினி கவனித்த சிவராமன் கன்னத்தில் உள்ள மச்சத்தை வைத்து அடையாளமும் கண்டுகொள்ளுகிறாள்.  ஆனாலும் சந்தேகம்.  நிவர்த்தி செய்து கொள்ளக் கல்பனாவுடன் பேச வேண்டும்.  ஆனால் அவள் கைபேசி எண் இல்லை; அங்கங்கே விசாரித்து அவளுடைய வீட்டு எண்ணை வாங்கித் தொடர்பு கொண்டு நாசூக்காக விசாரிக்கிறாள் நந்தினி.  ஒரு மாதிரியாக நந்தினிக்குக் கல்பனாவின் நிராதரவான நிலைமை புரிய மன வருத்தம் கொள்கிறாள்.

கல்பனாவைத் தன் ஆதர்சமாகக் கொண்டிருந்த நந்தினிக்குக் கல்பனாவின் தற்போதைய நிலையை எப்படியானும் மாற்றவேண்டும் என்னும் துடிப்பு ஏற்பட்டதில் வியப்பில்லை. பெண் சுதந்திரம் என்று இங்கே பேசப்பட்டாலும் அதற்காக அத்துமீறி நடக்கும்படியும் சொல்லவில்லை. கணவனோடு இணையாகவே அவள் கருதப்பட வேண்டும்.  நந்தினியின் எண்ணம் அதுவே! கல்பனாவின் கணவன் நிலை குறித்து அவளிடம் சொல்லி அவளைப் பதட்டப்பட வைக்காமல் நந்தினியே தன் வருங்காலத் துணைவன் துணையோடு சிவராமனை மீட்கிறாள்.  சிவராமனுக்கோ இரண்டு நாட்கள் சிறைவாசம் நிறைய மாற்றத்தைத் தந்திருக்கத் தன் தவற்றை உணர்கிறான்.  அதற்கேற்ப நந்தினி அவனைக் கல்பனாவிடம் பேச வைத்து அவனுக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்து உதவி செய்வதோடு, கல்பனாவின் திறமைகளையும் பட்டியலிடுகிறாள்.  தனக்கே தெரியாமல் தன் மனைவிக்குள் இத்தனை திறமைகளா என வியந்த சிவராமன் தன் மனைவியை வீட்டுப் புறாவாகத் தான் நடத்தியது குறித்தும் வருந்துகிறான்.

நந்தினியின் உதவியால் தன் அலுவலக வேலையை முடிக்க ஹரித்வாருக்கும் சிவராமனால் செல்ல முடிந்தது.  அதோடு தன் மனைவி கல்பனாவுக்கு ஹிந்தி நன்றாகத் தெரியும் என்ற செய்தியையும் நந்தினியின் மூலம் அறிந்து கொள்கிறான்.  தான் எதுவுமே மனைவியைக் குறித்துத் தெரிந்து கொள்ளாமல் மூன்றாம் மனிதர் மூலமாய்த் தெரிந்து கொள்வதில் அவனுக்கு உள்ளூர அவமானமும், வெட்கமும் நேரிடுகிறது.  அதனால் தான் ஹரித்வாரிலிருந்து திரும்புகையில் கல்பனாவுக்குப் பிடித்த பாலில் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை வாங்கியதோடு அல்லாமல், தனக்கு உதவி செய்தவள் "நந்தினி" என்பதையும் அந்த இனிப்பின் பெயர் நந்தினி என்றிருந்ததைச் சுட்டிக்காட்டித் தெரியப்படுத்துகிறான். எல்லாவற்றையும் விட இனிப்பான செய்தியாகக் கல்பனாவுக்கு இனி பிறக்க விருக்கும் குழந்தையும் பெண்ணாக இருந்தால் நந்தினி என்னும் பெயரை வைக்க விரும்புவதாக நன்றியுடன் கூறும் சிவராமன் கூண்டுக்கிளிகளையும் பறக்க விடச் சொல்கிறான்.  கல்பனா இனி வேலைக்குச் செல்லலாம் என்றும் தான் அவளைக் குறித்து அறியாமல் இருந்தது குறித்தும் வருந்துகிறான். இரண்டு நாட்கள் சிறைவாசம் தன் கணவனைப் பெருமளவு மாற்றி இருப்பதிலும் தன்னால் சொல்ல முடியாத தன் அருமை, பெருமைகளை எடுத்துச் சொன்ன தன் சிநேகிதி நந்தினிக்கும் கல்பனா மனதுக்குள் பாராட்டுத் தெரிவித்திருக்க வேண்டும்.  தெரிவித்திருப்பாள் என நம்புவோம்.  இப்போதாவது கல்பனா தானும் தன்னைக் குறித்துத் தன் கணவனிடம் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்க வேண்டும் என நினைக்கவும் இல்லை; சொல்லவும் இல்லை. அது கொஞ்சம் குறையாகவே இருக்கிறது.

எல்லாவற்றையும் மனதுக்குள் பூட்டி வைத்து விட்டுக் கணவன் தன்னை மதிக்கவில்லை; தனக்குச் சுதந்திரம் கொடுக்கவில்லை என்றெல்லாம் சொல்வது மிகக் கொடுமை.  சுதந்திரம் பிறர் கொடுத்துப் பெறும் ஒன்றல்ல.  நாம் நாமாக இயல்பாக இருப்பதே உண்மையான சுதந்திரம். மாற்றங்கள் தேவை தான்.  ஆனால் அவை இரு மனதிலும் தோன்றி ஓர் ஒத்திசைவோடு நடைபெற வேண்டும்.  அதற்கு இருவரும் மனம் விட்டுப் பேச வேண்டும். ஆரம்பத்திலேயே கணவன் தனனை நடத்தும் விதம் சரியில்லை என்பதைக் கல்பனா இதமாகச் சுட்டிக் காட்டி இருந்தால் சிவராமனுக்கும் புரிந்து இருக்கும் அல்லவா?  ஏனெனில் மனைவியை நேசிக்கும் கணவன் தானே!  நேசம் அதீதமாகப்போய்விட்டது.  அது தன் மனைவிக்கு வசதிகள் செய்து கொடுக்கிறோம் என்னும் பெயரில் அவளைச் சிறைப் பறவையாக ஆக்கிவிட்டது.


குறிஞ்சி மலர் பனிரண்டு வருடங்களுக்கு ஒரு முறைதான் பூக்கும்.  அவை பூக்கையில் தான் அவற்றைப் பார்க்க முடியும்.  ஆனால் அன்பு அப்படி அல்ல. ஊற்றுப் போல் சுரந்து கொண்டே இருக்கும்.  வற்றாத ஊற்று.  பெரு வெள்ளத்தின்போது அடித்துக் கொண்டு வரும்  மணலால் அந்த ஊற்றுக்கண் அடைபடாமல் பார்த்துக் கொண்டாலே போதும்.  இரு வேறு மாறுபட்ட குணாதிசயங்களைக் கொண்ட பெண்களை வைத்துக் கதை பின்னி இருக்கும் ஆசிரியர் கல்பனாவின் மேல் நமக்கெல்லாம் இரக்கம் தோன்ற வேண்டும் என நினைத்திருந்தால் ம்ஹூம், எனக்கு இரக்கம் தோன்றவே இல்லை.  ஏனெனில் அவள் குணாதிசயங்கள் அப்படி இல்லையே!  கல்பனா தன் வாயைத் திறக்காமல் இருந்துவிட்டுக் கணவன் தன்னை ஒழுங்காக நடத்தவில்லை என எதிர்பார்ப்பதில் நியாயம் என்பதே இல்லை. கணவன் புரிந்துகொள்ளும்படி கல்பனா நடந்து கொள்ளவில்லை என்பதும் உண்மை. :)

ஆனாலும் இந்தக் கதையின் மூலம் இன்றைய இளைஞர்கள், இளம்பெண்கள் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி விருப்பு, வெறுப்புகளை அலசிக் கொண்டு பின்னர் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்க வேண்டும் என நினைக்க ஆரம்பித்தால் அதுவே கதைக்கு மாபெரும் வெற்றி!  இன்றைய காலகட்டத்துக்கு ஏற்பக் கதையை ஆசிரியர் புனைந்திருந்தாலும் வழக்கமான ஆணாதிக்க மனப்பான்மையையே இங்கேயும் சுட்டிக் காட்டி இருக்கிறார்.  ஒரு விதத்தில் சிவராமன் ஆணாதிக்கம் கொண்டவனாக இருந்தாலும் மனைவி மேல் அளவு கடந்த பாசம் கொண்டிருப்பதால் எளிதில் மனைவியால் அவனை மாற்றி சகஜ நிலைக்குக் கொண்டு வந்திருக்கலாம் என்பதும் தவிர்க்க முடியா உண்மை. கல்பனாவின் மேல் உள்ளூர அனுதாபத்தைத் தோற்றுவிக்கும் விதமாக எழுதியுள்ள ஆசிரியரின் கதை சொல்லும் திறமையைப் பாராட்டியே ஆகவேண்டும்.
 .