Wednesday, February 18, 2015

பயணங்கள் முடிவதில்லை! 10

இங்கே

மேலே உள்ள சுட்டியில் கடைசியாப் படிச்சோம். இராமநாதபுரத்திலும் தங்கும் அறைகள் கிடைக்கவே இல்லை.  அப்போது தான் எங்கள் வண்டியின் ஓட்டுநர் ஒரு யோசனையைச் சொன்னார்.  இதற்கு முன்னர் அவர் வேறொரு குடும்பத்தோடு திருப்புல்லாணி போயிருக்கையிலே அங்கேயே தங்கினார்கள் என்றும் சாப்பாடு முதற்கொண்டு அங்கேயே கொடுத்தனர் என்றும் சொன்னார். ஆகவே அங்கே விசாரிக்கச் சொன்னார்.  மணி ஏழு ஆகவில்லை என்பதால் உடனேயே திருப்புல்லாணிக்குத் தொலைபேசிக் கேட்டதற்கு அங்கே இருந்த அறநிலையத் துறை அலுவலர் ஒருவர் எல்லா விபரங்களையும் தெளிவாகச் சொன்னதோடு உத்திராதி மடத்தின் காப்பாளரின் தொலைபேசி எண்ணையும் கொடுத்தார்.  அங்கிருந்தே அவரைத் தொடர்பு கொண்டதில் அறை கொடுப்பதாகவும், நேரே திருப்புல்லாணி வந்துவிடுமாறும் காப்பாளர் கூறவே நாங்கள் அங்கேயே இருந்த ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டதாகப் பெயர் பண்ணிவிட்டுக் கிளம்பித் திருப்புல்லாணியை நோக்கிச் சென்றோம்.


சுமார் எட்டரை மணி அளவில் திருப்புல்லாணிக்கு வந்துவிட்டோம்.  உத்திராதி மடத்தைத் தேடிக் கொண்டு செல்கையில் வழியில் மாலோல மடம் என்றொரு பெயரில் இன்னொரு மடம் இருந்ததையும் பார்த்தேன்.  அதைத் தவிரவும் அஹோபில மடமும் இருந்தது. யோசனையுடன் இருந்தேன்.  அதற்குள்ளாக உத்திராதி மடம் போய்ச் சேர்ந்தோம். சமுத்திரக் கரைக்கு அருகே இருப்பதால் உயரமான படிகள் வைத்துக் கட்டிய கட்டிடம்.  பத்துப் பதினைந்து படிகள் ஏறித்தான் மேலே போகணும்.  மடத்தின் காப்பாளர் குடும்பம் மொத்தமும் எங்களுக்காகச் சாப்பிடாமல் காத்திருந்தார்கள்.  நாங்கள் சாப்பிட்டுவிட்டதை முதலில் சொன்னோம்.  அறையைக் காட்டச் சொல்லிக் கேட்டோம். இது அவர்கள் எதிர்பார்க்கவில்லை என எண்ணுகிறேன்.  இரவு நேரம், ஏதோ தங்க இடம் கொடுத்தால் மடத்தையே பிடுங்கிடுவாங்க போலனு நினைச்சிருப்பாங்களோ?

அறையைத் திறந்து காட்டினார்கள்.  அறையில் ஒரு பக்கம் நெல் மூட்டைகள் அடுக்கி இருக்க, அதன் அருகே வேண்டுதலுக்குச் செய்த (?) அல்லது வேறெதற்கோ செய்த மரக்குதிரைகள் நின்றிருந்தன.  குதிரைகள் அனைத்தும் எப்போ வேணாப் பாயும் நிலையில் வடிவமைக்கப்பட்டிருந்தன.  ராத்திரி தூங்கறச்சே நம்மளை எல்லாம் மேலே ஏத்திண்டு போக ஆரம்பிச்சுடுமோனு ஒரு சந்தேகம் எனக்கு வந்தது. உடனே  கைலை யாத்திரையில் பரிக்ரமாவுக்குக் குதிரை ஏறினதும், குதிரை கீழே தள்ளி என்னோட நல்லவேளையாக் குழி பறிக்காமல் இருந்ததும், இன்று வரை  இடுப்பில் அடிபட்ட அந்த இடத்தில் இருக்கும் தீராத வலியும் நினைவில் வந்தது. உடனேயே  அதே இடத்தில் இப்போவும் வலிக்கிறாப்போல் ஒரு எண்ணமும் வந்தது.


குதிரை பொம்மைகள் க்கான பட முடிவு   குதிரை பொம்மைகள் க்கான பட முடிவு



குதிரைகளுக்கு  அருகே ஒரு சின்ன பெஞ்ச் போட்டிருந்தது.  மருத்துவமனைகளில் நோயாளியைப் பரிசோதனை செய்யப் போட்டிருப்பாங்களே அதைவிடவும் அகலம் கம்மி.  அதில் படுத்தால் பாதி உடம்பு வெளியே தான் இருக்கும். அப்படியும் நான் "ஒரு பெஞ்ச் தானே இருக்கு, நாம நாலு பேர் இருக்கோமே!"னு பேசிக் கொண்டதைக் கேட்ட காப்பாளர் குடும்பத்து நபர் ஒருத்தர் இன்னொரு கட்டில் இருக்கு, கொண்டு வரேன்னு சொன்னார்.  கட்டில்னதும் ஆஹானு நினைச்சார் நம்ம ரங்க்ஸ்.  எனக்கு அப்போவும் சந்தேகம்.  தென் மாவட்டங்களில் பெஞ்சைத் தான் கட்டில் எனச்  சொல்வது வழக்கம்.  நான் நினைச்ச மாதிரி இன்னொரு அரை பெஞ்சைக் கொண்டு வந்தார். பையரும், மருமகளும் அவங்க ரெண்டு பேரும் கீழே படுத்துக்கிறோம்னு சொன்னாங்க.  என்றாலும் அரை மனதோடு நான் விடாமல், "கழிவறை, மேல்நாட்டு முறைப்படியானது இருக்கா?" என்று கேட்டேன்.

அதற்கு அவங்க  கழிவறை இந்திய முறைப்படியானது என்றும் அதுவும்   தள்ளி இருப்பதாகவும் சொன்னார். கட்டிடத்துக்கு வெளியில் சுற்றிலும் இருந்த சுற்றுச் சுவரை ஒட்டிய சிறிய நடைபாதையைக் காட்டி அந்த வழியாகப் போக வேண்டும் என்றும், தண்ணீர் வழியில் உள்ள குழாயில் பிடித்துக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னார்.  மழை தூறிக் கொண்டிருந்தது.  அந்த வழியோ முழுதும் திறந்த வெளி.  ஒரு முறை கழிவறை போயிட்டு வரதுக்குள்ளாகக் கட்டாயமாய் நனைஞ்சுடுவோம். நாமோ பலமுறை போறவங்களாச்சே! அப்புறமா எங்கேருந்து தூங்கறது? எனக்கு என்னமோ சரிப்பட்டு வரும்னு தோணலை.  ரங்க்ஸிடம் வேண்டாம்னு மறுக்க, அவரோ கோபத்தோடு இந்த அர்த்த ராத்திரியில் என்னை வேறே எங்கே போய்த் தேடச் சொல்றே? னு சத்தம் போட ஒரு குருக்ஷேத்திரம் ஆரம்பம் ஆக இருந்தது.

படங்கள்: கூகிளார் கொடுத்தவை.

19 comments:

  1. வசதிகள் நிறைந்த இந்நாளிலும் நல்ல ஒரு இடம் பிடிக்க இவ்வளவு கஷ்டமா? கொடுமை. அப்புறம் என்னதான் ஆச்சு?

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், கும்பகோணத்திலேயே கஷ்டப்பட்டது உண்டு. அதுவும் 2007 ஆம் ஆண்டில்! :)

      Delete
  2. அடக் கடவுளே. அஹோபில மடம் நன்றாகக் கட்டி இருப்பதாகச் சொன்னார்கள். உங்களுக்கு நல்ல இடம் கிடைத்திருக்கணுமென்னு இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், வல்லி. ஆனால் அதைப் பத்திப் பின்னர் தான் தெரிந்து கொண்டோம். :)

      Delete
  3. அஹோபில மடம், ஆண்டவன் ஆஸ்ரமம் எல்லாம் இருக்கு. ஆனா எதுவும் சரியான பரமரிப்பில் இருப்பதாக தெரியவில்லை.
    அப்பறம் என்ன ஆச்சு? எங்க தங்கினீங்க?

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராம்வி, ஆண்டவர் ஆஸ்ரமம் சேர்ந்த மடத்தைப் பார்க்கலை. :)

      Delete
  4. உங்கள் இந்தப் பதிவு அலஹாபாதில் மடத்தின் வாயிலாக நாங்கள் தங்கிய டஞ்சன் அறையை நினைவு படுத்தியது. இரவில் தோழமைக்கு எலிகள் வேறு. அப்பாடா ஒரு இரவுதான் என்றாலும் மறக்க முடியாதது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி சார், நாங்க அலஹாபாதில் தங்கலை, பிழைச்சோம்! :)

      Delete
  5. நம்ம ரகுதயாள் திருப்புல்லாணிதானே? போன் பண்ணி இருக்கலாமே?

    ReplyDelete
    Replies
    1. வாங்க வா.தி. ரகுதயாள் பெயரைக் குழுமத்தில் பார்த்திருக்கேன். பழக்கமே இல்லை; அவருக்கும் என்னைத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. அதனால் தொலைபேசி எண்ணெல்லாம் என்னிடம் இல்லை. அவர் திருப்புல்லாணி என்பதும் இப்போ நீங்க சொல்லித் தான் தெரியும். :)))))

      Delete
  6. நல்லவேளை குருக்ஷேத்திரம் இல்லை...

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, டிடி. நல்லவேளையா அங்கே இருந்தவங்களும் பயப்படாம எல்லாம் சுமுகமா முடிஞ்சது! :)

      Delete
  7. தங்களுக்கு இப்படி ஒரு சோதனையா? என் முதல் வருகை இது. வாருங்களேன் பாலமகிபக்கங்கள் களுக்கு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மஹேஸ்வரி, முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்கள் பக்கங்களுக்கும் வருகிறேன். சோதனை என்பது அனைவருக்கும் ஏற்படக் கூடியதே! இதெல்லாம் ஒண்ணுமே இல்லை! :))))

      Delete
    2. மஹேஸ்வரி, சோதனை என்பது அனைவருக்கும் ஏற்படக் கூடியதேனு சொல்லி இருப்பது பயணத்தின்போது ஏற்பட்டதைத் தான் குறிக்கும். அடுத்தடுத்து வாக்கியங்கள் அமைந்ததில் வா.தி. இது தான் சாக்குனு கலாய்க்கிறார். :))))))

      Delete
  8. உங்கள் பக்கங்களுக்கும் வருகிறேன். சோதனை என்பது அனைவருக்கும் ஏற்படக் கூடியதே! //
    ஹாஹாஹாஹ்ஹா!

    ReplyDelete
    Replies
    1. வா.தி. அவங்க ரொம்பப் புதுசு! அதுக்குள்ளே இப்படியா பயமுறுத்தறது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))))))))

      Delete
  9. ரொம்பவும் கஷ்டம்தான்!

    ReplyDelete
  10. தங்குமிடங்கள் சரியில்லை எனில் கஷ்டம் தான்.....

    பயணத்தின் போது உணவு, தங்குமிடம் ஆகிய இரண்டுமே பிரச்சனை தரும் விஷயங்கள்!

    ReplyDelete