Monday, February 16, 2015

நாங்களும் "திங்க"றோமுல்ல!

//செல் விருந்து ஓம்பி, வரு விருந்து பார்த்திருப்பான்
நல் விருந்து, வானத்தவர்க்கு.//

எப்போவோ வள்ளுவர் சொன்னது. ஆனால் நம்ம வீட்டில் நிஜம்மாவே கடந்த ஆறு மாதங்களாக நடக்குது! நேத்திக்குத் தான் மும்பையிலிருந்து வந்திருந்த மாமியார், நாத்தனார், மைத்துனர் குழு மும்பை கிளம்பிச் சென்றனர்.  இன்று என் அண்ணாவின் சம்பந்தி வீட்டினர் வராங்களாம். :))))  வரப் போகும் விருந்தை எதிர்பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கோம்.  வரவங்க முழுக்க முழுக்கத் தமிழ்நாட்டு உணவுக்குப் பழக்கமானவங்க.  அவங்களுக்கேற்ற இரவு உணவுக்கு வட நாட்டுப் பாணி உதவாது. ஆகவே இன்னிக்குக் காலம்பர செய்த ஆகாரத்தில் மாற்றம் செய்யும்படி நேர்ந்தது.  வரவங்க சென்னையை விட்டு வடக்கே திருப்பதிக்கு மட்டும் தான் போயிருப்பாங்க.  சப்பாத்தி, ரொட்டின்னா அவ்வளவு  பழக்கம் கிடையாது.  ஆகவே இட்லி மாவை அவங்களுக்காக ராத்திரிக்கு வைச்சுட்டு இன்னிக்குக் காலம்பர முள்ளங்கி பராத்தா பண்ணினேன்.

மூலி பராத்தா இரு வகையில் செய்யலாம்.  ஒரு விதம் உள்ளே ஸ்டஃப் செய்து பராத்தா பண்ணுவது.  இன்னொரு விதம் முள்ளங்கியையே மாவில் போட்டுப் பிசைந்து பண்ணுவது. ஸ்டஃப் பண்ணினால் ரொம்பவே அதிகமாக ஆயிடுது. சாப்பிட முடியறதில்லை.  ஆகவே முள்ளங்கியைத் துருவிப் போட்டு மாவில் போட்டு பிசைந்தே செய்தேன்.

நான்கு பேருக்குத் தேவையான பொருட்கள்:

கால் கிலோ முள்ளங்கி அல்லது நான்கு முள்ளங்கிகள்

மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை

உப்பு தேவையான அளவு.

முள்ளங்கியைத் துருவிக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து ஒரு பக்கமாக வைக்கவும்/

கோதுமை மாவு இரண்டு கிண்ணம்

உப்பு தேவையான அளவு

பச்சை மிளகாய், இஞ்சி, கொத்துமல்லி அரைத்த விழுது ஒரு டீஸ்பூன்

மிளகாய்த் தூள் அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை

பெருங்காயத் தூள் ஒரு சிட்டிகை

கருகப்பிலை, கொத்துமல்லி பொடிப் பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன்

சோம்பு, ஜீரகம் தலா ஒரு டீஸ்பூன்

நல்லெண்ணெய் மாவில் விட்டுப் பிசைய ஒரு டேபிள் ஸ்பூன்

பராத்தா போட்டு எடுக்கத் தேவையான நெய் அல்லது சமையல் எண்ணெய் அவரவர் விருப்பம் போல்  ஒரு சின்னக் கிண்ணம்

கோதுமை மாவில் உப்பு,மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்த்துக் கலக்கவும். சொம்பு, ஜீரகமும் போட்டுக் கொள்ளவும்.  உப்பு, மஞ்சள் பொடி சேர்த்த துருவிய முள்ளங்கிக் கலவையில் முள்ளங்கியை மட்டும் பிழிந்து மாவில் போடவும்.   நீர் விட்டிருக்கும்.  அதைக் கொட்ட வேண்டாம். கருகப்பிலை, கொத்துமல்லி, பச்சைமிளகாய், இஞ்சி, கொ.ம. அரைத்த விழுதையும் சேர்க்கவும். கைகளால் நன்கு கலக்கவும்.  பின்னர் தேவையான நல்லெண்ணெயை ஊற்றிக் கொண்டு, முள்ளங்கி ஊற வைத்த நீரை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் கலந்து கொண்டு மாவைச் சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும்.  அநேகமாக அந்த நீரே போதுமானதாக இருக்கும். நீர் சேர்த்தால் மாவு தளர்ந்து விடும்.  நன்கு மாவைப் பிசைந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

சப்பாத்தி இடும் கல்லில் ஒரு உருண்டை மாவைப் பரப்பி அதில் நெய் அல்லது வெண்ணெய் அல்லது எண்ணெய் ஊற்றிப் பரவலாகத் தடவவும்.  மடித்துப் போடவும். இம்மாதிரி 2,3 முறைகள் செய்து மடித்துப் போட்டுக் கொண்டு வட்டமாகவோ, முக்கோணமாகவோ வரும்படி சப்பாத்தி இடவும்.  கொஞ்சம் கனமாகவே இருக்கும்.



அடுப்பில் தோசைக்கல்லைக் காய வைக்கவும். (நான் சப்பாத்திக்குத் தனியான தோசைக்கல் வைத்திருக்கேன்.)  தோசைக்கல் காய்ந்ததும் பரவலாக எண்ணெய், நெய் அல்லது நெய் கலந்த எண்ணெயைத் தடவவும்.  இட்ட சப்பாத்தி/பராத்தாவை அதில் போடவும். ஒரு நிமிடம் வேக வைத்த பின்னர் மறுபக்கம் திருப்பவும். பின்னர் மீண்டும் திருப்பிப் போட்டு நெய் அல்லது எண்ணெய் ஊற்றவும். பராத்தா நல்ல உப்பலாக வரும்.  மீண்டும் திருப்பிப் போட்டு மறுபக்கமும் வேகும் வரை எண்ணெய்/நெய் ஊற்றவும். ப்ரவுன் நிறம் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.  இதற்குத் தொட்டுக் கொள்ள வெஜிடபுள் ஊறுகாய் அல்லது மஞ்சள் ஊறுகாய், தயிர்ப் பச்சடி ஆகியவை ஏற்றது.

மாவு பிசைந்தது மற்றும் அடுப்பில் வேகும் படங்கள் ஆட்டம் கண்டு விட்டன! :) திடீர்னு நினைவு வந்து படம் எடுத்தேன். அதுவும் அலைபேசியில் எடுத்தது. பாத்திரத்தில் பிசைந்த மாவை எடுத்த படம் ஒரே இருட்டாக இருக்கு!  அதனால் போடலை.  இன்னொருதரம் பண்ணினால் பார்க்கலாம்! இது சப்பாத்தி இடும் கல்லில் இட்டுக் கொண்டிருக்கையில் எடுத்த படம். :)))))


18 comments:

  1. சுவையோ சுவை! இதே போன்றுதான் நம்ம வீட்டிலும்..... குறித்துக் கொண்டோம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசிதரன். சுவைத்துப் பார்த்துட்டுச் சொல்லுங்க! :)

      Delete
  2. திருச்சிக்கு வருபவர்கள் யாரும் தப்ப முடியாது. கீதாவின் உப்சாரத்திலி ருந்து. வாழ்க விருந்தோம்பல் மூலி பராத்தா நிறைய எண்ணேய் குடிக்கும் போல இருக்கே. பரவாயில்லை. ரொம்ப சுவையாக இருக்கும்னு நினைக்கிறேன். நல்ல விவரணை. சாப்பிட வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நிறைய எண்ணெயெல்லாம் தேவை இல்லை வல்லி, தோசைக்கு எவ்வளவு விடுவோமோ அவ்வளவு போதும். வேண்டாம்னால் குறைச்சுக்கவும் குறைச்சுக்கலாம். :))))

      Delete
  3. இதே முள்ளங்கி பராத்தாவை விருந்தினருக்கும் கொடுத்து அவர்களிடமே அபிப்பிராயம் கேட்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. அவங்க சாப்பிடறதா இருந்தால் சாயந்திரமே பண்ணி இருப்பேனே! அவங்களுக்கு இதெல்லாம் பழக்கமே இல்லை. முள்ளங்கியை சாம்பாராகத் தான் பார்த்திருக்காங்க! :))

      Delete
  4. செய்து பார்த்ததில்லை. பாஸ் காதில் விழறா மாதிரி படிச்சுக் காட்டி இருக்கேன். ஒரே ஒரு ப்ராப்ளம். அவங்களுக்கு முள்ளங்கி வாசனை பிடிக்காது. அவங்களைச் சமாதானப்படுத்தி ஒருதரம் செய்து பார்க்கணும்!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, மூக்கைச் சுத்தி துணியால் மூடிக்கச் சொல்லுங்க. வாசனை போகாது! :)))) ஸ்டஃப் பண்ணியும் செய்யலாம். அது இன்னொரு தரம் எழுதறேன். :)

      Delete
  5. ஹை!.. கட்டாயம் செஞ்சு பார்க்கறேன்... டெய்லி, என்ன டிபன் பண்றதுன்னு முடிவு பண்ணறதுக்குள்ள மண்டை காயுது :)))!!..வேகமா டிபன் ஐட்டம் எப்படி முடிவு பண்றீங்கம்மா!.. நிஜமாவே சூப்பர்!!..

    ReplyDelete
    Replies
    1. பார்வதி, செய்து பார்த்துட்டுச் சொல்லுங்க!

      //வேகமா டிபன் ஐட்டம் எப்படி முடிவு பண்றீங்கம்மா!//

      ஹிஹிஹி, தொலைநோக்குப் பார்வை! :)

      Delete
  6. சுவையான பராத்தா. நானும் இரண்டு முறையிலும் செய்வதுண்டு... தயிரும் ஊறுகாயும் போறுமே...

    ReplyDelete
    Replies
    1. நம்ம வீட்டிலே தயிரும் ஊறுகாயும் தான். வெறும் பராந்தா கூட ஊறுகாயோடு சாப்பிடுவோம். மத்தவங்க ஆச்சரியமாப் பார்ப்பாங்க! :)

      Delete
  7. முள்ளங்கி பராந்தா.... இங்கே குளிர் காலத்தில் செய்யும் செய்யும் பலவகை பராந்தாக்களில் ஒன்று.....

    நல்ல ருசியோடு இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், ஶ்ரீராம் சொல்றாப்போல் சிலருக்கு வாசனை பிடிக்கிறதில்லை. :)

      Delete
  8. அஹா.. படிக்கும்போதே சாப்பிட வேண்டும் போல இருக்கு. இதோ கிளம்பி வரேன் ..

    ReplyDelete
  9. இதற்காகவே வெகு விரைவில் உங்களை சந்திக்கிறேன்... ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி, வாங்க, வாங்க!

      Delete