எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, April 29, 2015

புதுவிதமான பட்டுராவும் ஓட்டம் பிடித்த ரங்க்ஸும்! :P

ஹாஹாஹா, இது என்ன வில்லி சிரிப்புனு பார்க்கிறீங்களா? கொஞ்ச நாட்களாகப் புதுசு புதுசா ஏதேனும் சமைக்கும் எண்ணம் வந்திருக்கா! நம்ம ரங்ஸுக்குத் தான் கஷ்டமா இருக்கு. பின்னே? சோதனை எலியே அவர் தானே! பயந்து நடுங்கிட்டு இருக்கார்னா பாருங்களேன்!   அந்த பயம் இருக்கணுமில்ல! :)))))


இன்னிக்குப் பாருங்க, அன்னிக்கு ஊற வைச்சேனே அந்தக் கொ.கடலையை எப்படியேனும் செலவழிக்கும் எண்ணத்தோடு நேத்து ராத்திரி  ஒரு கிண்ணம் ஊறி முளைகட்டிய கடலையை எடுத்துக் கழுவி மறுபடி நல்ல நீரில் ஊற வைத்தேன். அப்படியே ஒரு கரண்டி தயிர், அரை டீஸ்பூன் உப்பில் ஒரு கரண்டி மைதா மாவைக் கலந்து நன்கு ஸ்பூனால் அடித்துத் தனியாக வைத்தேன். இது சமீபத்தில் கண்டு பிடித்த ஒரு முறை.

                         
                              தயிர், உப்புக்கலந்து கலக்கிய மைதாமாவுக்கலவை

(சாதாரணமாக பட்டுராவை மைதாவிலேயே தான் பண்ணுவோம். இங்கே பாருங்க.  நான் முன்னர் செய்த பட்டூரா  வோட குறிப்பு. ஆனால் இணையத்திலே ஒரு நாள் தற்செயலாக இந்தத் தகவல் கிடைத்தது. ஆகவே பாராட்டறவங்க யாரானாலும் அவங்களைத் தான் பாராட்டணும்.  என்னைப் பாராட்ட வேண்டாம்.)

 இன்று காலை ஊறிய கொ.கடலையை குக்கரில் வேக வைத்து விட்டு கோதுமை மாவு இரண்டு கிண்ணம் எடுத்துக் கொண்டு தேவையான உப்புச் சேர்த்து வெண்ணெய் இரண்டு டீஸ்பூன் போட்டு ஐந்து நிமிடம் போலக்  கலந்து கொண்டேன்.
         
                           கோதுமை மாவில் மைதாக் கலவையைச் சேர்த்திருக்கேன்.

பின்னர் அந்தக் கலந்த மாவில் முதல் நாள் கலந்து வைத்த மைதாமாவுக் கலவையைச் சேர்த்தேன். அது நேற்றே கலந்து விட்டதால் இன்று நன்கு பொங்கிக் கொண்டு மேலே குமிழியிட்டிருந்தது.  அதை கோதுமை மாவில் போட்டுக் கலந்து கொண்டு தேவையான நீர் மட்டுமே விட்டுக் கொஞ்சம் கெட்டியாகவே பிசைந்து கொண்டேன்.


                               பிசைந்து வைத்திருக்கும் மாவு.

சனாவைத் தயார் செய்தேன். சனா செய்முறையும் மேலுள்ள சுட்டியில் காணலாம். பின்னர் எண்ணெயைக் காய வைத்துக் கொண்டு பூரிகளைப் போட்டு எடுத்தேன் பூரி நன்கு உப்பிக் கொண்டும் மிருதுவாகவும் அதே சமயம் மொறமொறப்புக் குறையாமலும் வந்தது. ஆனால் அந்தச் சனா தான் ரங்க்ஸுக்குப் பிடிக்காது. அவருக்குப் பூரி என்றால் உ.கி. தான் பண்ணணும். ஆகவே சோகமாகவே சாப்பிட்டார்.  நீங்கல்லாமும் முயற்சி பண்ணுங்க. உங்க வீடுகளில் கலவரம் ஏற்பட்டால் நான் பொறுப்பில்லை. :))))) பூரி நல்லாவே வந்தது.



எண்ணெயில் பொரியும் பூரி






பொரித்து வைத்திருக்கும் பூரிகள்

Tuesday, April 28, 2015

தமிழ்த்தாத்தாவை நினைவு கூர்வோம்!

உ வே சா பொன்மொழிகள் க்கான பட முடிவு


செண்டலங்காரர்



சற்றேறக்குறைய நாற்பது வருஷங்களுக்கு முன், வழக்கமாக நான் செய்துவரும் தமிழ் யாத்திரையில் ஒரு முறை பொறையாறு முதலிய இடங்களுக்குப் போக நேர்ந்தது. என்னோடு இருந்து தமிழ்ப்பணிக்கு உதவிபுரிந்து வந்த திருமானூர்க் கிருஷ்ணையரென்பவருடன் அம்முறை புறப்பட்டேன். மாயூரத்தைக் கடந்து ஆறுமைல் தூரத்திலுள்ள ஆறுபாதி என்னும் ஊருக்கருகில் சென்று கொண்டிருந்தோம். அங்கே வழியில் கீழ்மேல் அக்கிரகாரத்துக்குப் பின்பக்கமாக வடபுறமுள்ள குளத்தின் கீழ்கரையில் ஒரு பெருமாள் கோயில் இருந்தது. அக்கோயிலின் வாசலில் அதனுடைய தர்ம கர்த்தாவும் வேறு சிலரும் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் இருந்த நிலையப் பார்த்தபோது யாரோ பெரிய உத்தியோகஸ்தர் ஒருவருடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டு நிற்பதாகத் தோற்றியது. எங்களைக் கண்டவுடன் தர்மகர்த்தா என்னை அவ்வுத்தியோகஸ்தராக எண்ணிக்கொண்டா ரென்று ஊகித்தேன். அந்தக் கலத்தில் உத்தியோகஸ்தராக இருந்தாலும் கோவிலுக்குப் போகும் போது வைதிகக் கோலத்தோடுதான் போவது வழக்கம். ஆதலின் நான் மிகவும் சாதாரண உடை யணிந்து செல்வதைக் கண்டும் அவர் என்னையே உத்தியோகஸ்தராக எண்ணிவிட்டார், "வாருங்கள், வாருங்கள்" என்று உபசரித்து வரவேற்றார்.

யாரோ ஓர் உத்தியோகஸ்தர் அவ்வாலயத்தைப் பார்க்க வருவதாகச் சொல்லியிருந்தாராம். அதற்காகப் பெருமாளுக்கு அலங்காரம் செவ்வையாகச் செய்திருந்தார்கள். தர்மகர்த்தாவும் நல்ல உடைகளை உடுத்து அலங்காரம் செய்து கொண்டு நின்றனர். பிரஸாதங்களும் பெருமாளுக்கு நிவேதனம் செய்த வியாஜமாக உத்தியோகஸ்தரின் பொருட்டு ஸித்தமாக வைத்திருந்தனர். அவர்கள் நெடுநேரம் காத்திருந்தார்கள். உத்தியோகஸ்தர் வரவில்லை. அந்த நிலையிலே என்னைக் கண்டவுடன் அவரென்றோ அவரால் அனுப்பப்பட்டவரென்றோ தான் தீர்மானித்திருக்க வேண்டும். தர்மகர்த்தா எங்களை உள்ளே அழைத்துசு சென்றார். பெருமாளைத் தரிசனம் செய்து வைத்தார். அவர் எதிர்பார்த்தவர் நான் அல்லவென்று உடனிருந்தவரால் அறிந்து ஏமாந்து போனார்.

ஆனாலும் அவர் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. கும்பகோணத்தில் நான் வேலையில் உள்ளவனென்று தெரிந்தவுடன் தம்முடைய பெருமை அங்கே பரவட்டுமென்று எண்ணியிருந்தாலும் இருக்கலாம். எப்படியாயினும் எங்களுக்கு எதிர் பாராதபடி திவ்ய தரிசனமும் வயிறார இனிய பிரஸாதங்களும் கிடைத்தன.

தரிசனம் செய்தபோது பெருமாள் திருநாமம் ராஜகோபாலப் பெருமாளென்று அறிந்தேன். அவர் திருக்கரத்தில் பிரம்பைப்போல ஒன்று காணப்பட்டது. அதன் தலைப்பில் இரண்டு வளைவுகள் இருந்தன. நான் அதுகாறும் பெருமாள் திருக்கரத்தில் அத்தகைய ஒன்றைக் கண்டதில்லை; ஆதலால் தர்மகர்த்தாவை நோக்கி, "இது புதிதா யிருக்கிறதே; என்ன?" என்று கேட்டேன். "அது தான் செண்டு" என்று அவர் கூறினார். "செண்டா!" என்று சொல்லி அப்படியே சின்றுவிட்டேன். "எங்கே, அதை நன்றாகக் காட்டச் சொல்லுங்கள்" என்று வேண்டினேன்.

கோயில் அர்ச்சகர் கற்பூர தீபத்தால் அந்தச் செண்டை நான் நன்றாகப் பார்க்கும்படி காட்டினார். நான் அதைக் கவனித்துப் பார்த்தேன். என் மனக்கண்முன் அப்போது திரௌபதியின் உருவம் வந்து நின்றது; துச்சாதனன் தலைப்பு வளைந்த பிரம்புபோன்ற ஒரு கருவியால் அவள் கூந்தலைப் பற்றி யிழுக்கும் காட்சி வந்தது. அடுத்தபடியாக உக்கிர குமாரர் மேருமலையை அந்தக் கருவியால் எறிந்து திரித்த தோற்றம் தோற்றியது. அவர் மறைந்தார். கரிகாலன் கையில் செண்டாயுதத் தோடு நின்றான். ஐயனாரும் நின்றார். அவர்கள் கைக ளில் எல்லாம் தலைப்பு வளைந்த பிரம்புபோன்ற கருவியைக் கண்டேன். சில நிமிஷங்கள் வரையில் இந்த அகக் காட்சிகளால் புறவுலகத்தை மறந்திருந்தேன்.

அந்த அர்ச்சகர் காட்டிய கற்பூர தீபம் பெருமாள் திருக்கரத்திலிருந்த ஆயுதத்தை எனக்குத் தெளிவாகக் காட்டியது. அதனோடு நெடுங்காலமாக என் மனத்திலிருந்த சந்தேக இருளை அகற்றித் துச்சாதனன், உக்கிரகுமார், கரிகாலன், ஐயனாரென்பவர்கள் கையில் உள்ள கருவி இன்னது தானென்று அறியும்படியும் செய்தது.

" ஐயா, நீங்கள் எனக்குப் பெரிய உபகாரம் செய்தீர்கள். பெருமாளின் தரிசனத்தால் எனக்கு ஒரு பெரிய லாபம் கிடைத்தது; என் மனம் சந்தோஷம் அடைந்தது. இதுவரையிலும் இந்தச் செண்டைப் பார்த்ததில்லை. உங்கள் தயையால் இதைப் பார்த்தேன்" என்று தர்மகர்த்தாவை நோக்கிக் கூறினேன்.

" இந்தப் பெருமாளும் மன்னார்குடியில் எழுந்தருளியிரு்க்கும் பெருமாளும் ஒரே அச்சு. அங்கும் பெருமாளின் திருக்கையில் செண்டு உண்டு. செண்டலங்காரப் பெருமாள் என்றும் அவரது திருநாமம் வழங்கும்" என்று அவர் கூறினார்.

" சந்தோஷம். தங்களுக்கு மிகவும் வந்தனம்" என்று கூறி விடை பெற்றுக்கொணடேன்.

அன்றுமுதல் என் சந்தேகம் பறந்துபோய் விட்டது. பிறகு ஆராய்ச்சி செய்யத் தமிழ் இலக்கியத்தில் பல செண்டுகள் கிடைத்தன. அவற்றை நான் மிகவும் தெளிவாக அறிந்துகொண்டேன். மன்னார்குடிப் பெருமாளுக்குச் செண்டலங்காரப் பெருமாளென்னும் திருநாமம் உண்யென்று தர்ம கர்த்தா கூறியதை இலக்கிய வாயிலாகவும் நான் உறுதி செய்து கொண்டேன். ' செண்டலங்காரப் பெருமாள் வண்ணம்' என்ற பிரபந்த மொன்றை நான் படித்தபோது அந்த நினைவு எனக்கு வந்தது. சுந்தரமூர்த்தி நாயனார் திருக்கரத்தில் உள்ள செண் டும் ஓர் ஆயுதமென்று தெரிந்து கொண்டேன். பெருமாள் தரிசனத்தின் பயன் கைமேல் கிடைத்தது.

**************************************************************************************

இது உ.வே.சாமிநாத ஐயரவர்களின் நினைவு மஞ்சரியிலிருந்து எடுத்தது. செண்டலங்காரர் என்னும் தலைப்பிலே எழுதி இருக்கிறார். இன்று உ.வே.சா. நினைவு தினம். தமிழ்த் தாத்தாவை நினைவு கூர்வோம்.

Saturday, April 25, 2015

சூடான கொண்டைக்கடலை வடை! சாப்பிட வாங்க! :)


ஊற வைத்த கொண்டைக்கடலை


ஹூஸ்டனில் பையர் எங்கேயோ கொண்டைக்கடலையில் வடை சாப்பிட்டிருக்கார். அதிலிருந்து அதைப் பத்தியே சொல்லிட்டு இருப்பார். எனக்கு அவ்வளவு ஆர்வம் இல்லைனாலும் ஒரு தரமாவது பண்ணிப் பார்க்கணும்னு நினைச்சுப்பேன். அதுக்கு இன்னிக்கு வேளை வந்தது. போன மாதம் வாங்கிய கொண்டைக்கடலையில் வண்டு வர ஆரம்பிக்க, சரிதான், இனியும் இதைக் காபந்து பண்ண  வேண்டாம், மத்த சாமான்களுக்கும் வண்டு வர ஆரம்பிச்சுடும்னு கொண்டைக்கடலையை நன்கு புடைத்து சுத்தம் செய்து விட்டு நிறைய நீர் விட்டு அலசினேன். பத்து நிமிஷத்துக்கும் மேல் அலசி அதிலே தூசி, தும்பு, வண்டு இருக்க வாய்ப்பில்லைன்னதும் அதிலே தேவையான நீரை விட்டு ஊற வைச்சேன். நேத்திக்கே ஊற வைச்சுட்டேன். ஊற வைக்கையில் வடை பண்ணும் எண்ணமே இல்லை. முளைக்கட்டி எடுத்துக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சப்பாத்திக்குக் கூட்டு அல்லது சுண்டல் என்று பண்ணிக்கலாம்னு தான் எண்ணம்.

இன்னிக்குக் காலம்பர மீண்டும் கழுவி நீரை வடிக்கையில் வடை செய்தால் என்னனு ஒரு எண்ணம்!  அதோடு நேத்திலிருந்து மழை பெய்துட்டு இருக்கா! சூடாகச் சாப்பிட நல்லா இருக்குமேனு ஒரு ஆசை! உடனே ரங்க்ஸிடம் கேட்டேன். அவருக்கு உள்ளுக்குள்ளே தான் சோதனை எலியாகி விட்டது குறித்து பயம் வந்ததோ என்னமோ! தெரியலை! இரண்டே இரண்டு வடை தான் எடுத்துப்பேன், சம்மதம்னா பண்ணு, இல்லைனா வேண்டாம்னு சொல்லிட்டார். எனக்கா வடை பண்ணியே தீரணும்னு. தூக்கமே வராது போல இருந்தது.  ஆகவே கொஞ்சமாகக் கொண்டைக்கடலையை எடுத்து வடைக்குனு தனியா வைச்சேன். மிச்சத்தை முளைக்கட்ட விட்டுட்டேன்.  இப்போக் கொஞ்ச நேரம் முன்னால் அதிலே உப்பு, காரம் சேர்த்து அரைத்து, பச்சை மிளகாய், இஞ்சி நறுக்கிப் போட்டுக் கருகப்பிலை, கொ.மல்லி சேர்த்து வெங்காயம் நறுக்கிப் போட்டு வடையாகத் தட்டி விட்டேன்.

செய்முறை:

ஊறிய கொண்டைக்கடலை ஒரு கிண்ணம்

மி.வத்தல், ப.மிளகாய் வகைக்கு இரண்டு

ஒரு சின்னத் துண்டு இஞ்சி

பெருங்காயம், உப்பு தேவைக்கு.

வெங்காயம் பெரிது ஒன்று

இவற்றைச் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். உதிர் உதிராகத் தான் வருது. கொஞ்சம் உளுந்து சேர்த்திருக்கலாமோனு நினைச்சேன். அப்போத் தான் சேர்ந்து வரும். இப்போ ஒண்ணும் பண்ண முடியாது என்பதால் ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவு சேர்த்துக் கொண்டேன்.

சின்னதாய் ஒரு பச்சை மிளகாயை இரண்டாகக் கீறி உள்ளே உள்ள விதையை எடுத்துவிட்டுப் பொடிப்பொடியாக நறுக்கிப் போட்டேன். இஞ்சியும் ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிச் சேர்த்தேன். அப்போது தான் வாசனையாக இருக்கும். வெங்காயம் பொடியாக நறுக்கிச் சேர்த்து, கருகப்பிலை, கொத்துமல்லி போட்டுக் கலந்து கொண்டு வடையாகத் தட்டினேன். எல்லோரும் வேணும்ங்கற வடைகளை எடுத்துக்குங்க!



                                     வடைக்கு அரைத்த மாவு.

இதில் எல்லாமும் கலந்திருக்கேன்.




எண்ணெயில் வேகும் வடைகள்




சுடச் சுட வடைகள் சாப்பிட ரெடி!





இன்னிக்கு வடைனு முடிவு பண்ணினதுமே படம் எடுக்கணும்னு நினைவா எடுத்துட்டோமாக்கும்!  அதுவும் சுடச் சுட!  என்னங்கறீங்க நம்மளை! :))))

Friday, April 24, 2015

பயணங்கள் முடிவதில்லை! விருத்தாசலம் கொளஞ்சியப்பர்!

ராமேஸ்வரம் யாத்திரை முடிந்து வந்ததும் இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்டோம். ஏற்கெனவே திட்டமிட்டபடி டிசம்பர் 31(2014) அன்று விருத்தாசலம், ஶ்ரீமுஷ்ணம், சிதம்பரம், திருவெண்காடு சென்று அன்றிரவு கும்பகோணத்தில் தங்கிக் கொண்டு மறுநாள் எங்கள் பூர்விக ஊரான பரவாக்கரையும், கருவிலியும் பார்த்துக் கொண்டு நாச்சியார் கோயில், திருக்கருகாவூர் ஆகிய ஊர்களுக்குச் சென்றுவிட்டு அன்று மாலை ஶ்ரீரங்கம் திரும்புவதாக உத்தேசம். அதன்படி டிசம்பர் 31 ஆம் தேதி அதிகாலையே வண்டி ஏற்பாடு செய்து கொண்டு கிளம்பினோம். ஏழரை மணிக்கெல்லாம் விருத்தாசலம் வந்து கொளஞ்சியப்பர் கோயிலையும் அடைந்தோம்.


"அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்;
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்." இந்தப் பாடல் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. முருகன் என்றாலே அழகு. அழகு என்றால் முருகன்.   எட்டுக்குடி, சிக்கல் போன்ற ஊர்களின் முருகன் விக்ரஹங்களின் அழகுக்கு உவமை இல்லை. அப்படி நாம் எப்போதுமே முருகனை அழகனாகவே பார்த்து வருகிறோம் இல்லையா? ஆனால் அந்த முருகன் உருவமும் இல்லாமல் அருவமாகவும் இல்லாமல் அருவுருவாகக் கோயில் கொண்டிருக்கும் ஆலயம் ஒன்று இருக்கிறது தெரியுமா? அது தான் விருத்தாசலத்திற்கு அருகே மணவாளநல்லூர் என்னும் ஊரிலிருந்து சில மைல்கள் தள்ளி அமைந்திருக்கும் கொளஞ்சியப்பர் கோயில். இங்கே குளஞ்சி மரங்கள் சூழ்ந்து இருந்ததால் கொளஞ்சி மரங்கள் சூழ்ந்த பகுதியில் கோயில் கொண்ட முருகனைக் கொளஞ்சியப்பர் என்றே அழைக்கின்றனர்.




திருமுதுகுன்றம் என்னும் விருத்தாசலத்திற்கு மேற்கே இது அமைந்துள்ளது. மிகப் பழமை வாய்ந்த கோயிலாகவும் கருதப்படுகிறது. சுந்தரர் திருமுதுகுன்றம் வந்தபோது கோயிலில் சுவாமியும் வயதானவராக இருந்தார். அம்பிகையும் வயதானவளாக இருந்தாள். பழமையான கோயில் என்பதாலும் வயதானவர் என்பதாலும் சுவாமி பழமலைநாதர் என்றே அழைக்கப்பட்டார். வாலிப வயதினரான சுந்தரருக்கு இவர்களைக் குறித்துப் பாடுவதில் சஞ்சலம் தோன்ற பாடல் ஏதும் பாடாமல் வந்து விட்டார். ஆனால் இறைவனின் திருவிளையாடல் என்பது தனி அல்லவா? இறைவனுக்கு சுந்தரர் தன்னைக் குறித்துப் பாட வைக்க வேண்டும் என்னும் எண்ணம் தோன்ற தன் மகனை அழைத்து சுந்தரரைப் பற்றிக் கூறுகிறார்.

முருகன் வேடுவ வடிவம் எடுத்து சுந்தரரின் பொன்னையும், பொருளையும் கொள்ளை அடிக்கிறான். மனம் வருந்திய சுந்தரர் இந்தப் பொன்னும், பொருளும் கோயில் திருப்பணீக்காக வைத்திருந்தது; ஆகையால் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கேட்க, முருகனோ திருமுதுகுன்றம் வந்து அங்கே பெற்றுக் கொள் எனச் சொல்லி உடனே மறைகிறார். அப்போது தான் சுந்தரருக்கு இது ஈசனின் திருவிளையாடல் என்பது புரிய வருகிறது. திருமுதுகுன்றம் சென்று விருத்தாம்பிகை என்னும் அம்பிகைக்குப் பதிலாக புதிதாக பாலாம்பிகையைப் பிரதிஷ்டை செய்யச் சொல்லிப் பாடலும் பாடுகிறார். பொன்னும், பொருளும் கிடைக்கிறது. இறைவனிடமும் மன்னிப்புக் கேட்கிறார்.





சுந்தரரை வேடுவனாக வழி மறித்த முருகனோ அந்த இடத்திலேயே சுயம்புவாகக் குடி கொண்டான். வேண்டியவர்க்கு வேண்டியதை அருளும் முருகனை நம்பினோர் கெடுவதில்லை. அவன் அருகேயே அவன் அண்ணனான விநாயகன் துணை இருக்கக் கொளஞ்சியப்பர் என்னும் திருநாமத்தோடு அங்கே கோயில் கொண்டருளினான் முருகன். பொன்னோ, பொருளோ தொலைந்து போனாலும் சரி, குழந்தைப் பிறப்பு என்று போனாலும் சரி, பிறர் வஞ்சித்து விட்டாலும் சரி, நோயால் அவதியுற்றால், மகன், மகள் திருமணம் தடைப்பட்டால், குடும்பப் பிரச்சினைகள், வறுமை, வேலை கிடைக்காமல் தவித்தல் ஆகிய அனைத்துப் பிரார்த்தனைகளும் இங்கே வந்து வேண்டிக் கொண்டு "பிராது' கொடுத்தால் நிறைவேறும்.

அது என்ன பிராது? பார்ப்போம்!








Tuesday, April 21, 2015

இணையத் திருட்டு குறித்துச் சில எண்ணங்கள்!

பொதுவாக மதுரைப் பயணத்தில் மக்களிடம் அன்பும், கருணையும் இன்னமும் மிச்சம் இருப்பதைப் பல சமயம் புரிந்து கொள்ள முடிந்தது. மற்ற விஷயங்களில் , மதுரை மாறி இருந்தாலும் இந்த அடிப்படைக் குணம் மக்களிடம் இன்னமும் மிச்சம் இருக்கிறது. யாரைக் கேட்டாலும் வழி சொல்லுவது, கூடவே வந்து காட்டுவது, சாமான்களைத் தூக்கிக் கொண்டு வந்து கொடுப்பதுனு எல்லோரும் தங்கள் அன்பை தாராளமாகவே காட்டினாங்க. பொதுவாகக் கோபம் என்பதே இல்லை எனிலும் சின்னச் சின்ன விஷயங்களுக்கு உணர்ச்சி வசப்படும் தன்மை மாறவும் இல்லை. சாப்பாடு மட்டும் சரியாகக் கிடைச்சால், தங்குமிடமும் வசதியாக இருந்தால் மதுரை சொர்க்கம் தான் இன்னமும்!
**************************************************************************************

இப்போது சில விஷயங்களைச் சொல்லணும்னு ஆசை!  இணையத்தில் திருட்டு என்பது நடைமுறை ஆகி விட்டது. பலரும் மற்றவர்கள் எண்ணங்களை, சிந்தனைகளைத் தங்களுடையது போல் காட்டிக் கொள்கின்றனர். அப்படிச் செய்யாதீர்கள் என்றாலும் அலட்சியம் காட்டுகிறார்கள். மற்றவர் துணிகளை வேண்டுமானால் நம்முடையது என்று சொல்லலாம். சமையலைத் தன்னுடையது எனப் பெருமை அடித்துக் கொள்ளலாம். தப்பில்லை என்றாலும் இதிலும்  உண்மையைக் கண்டு பிடித்தால் நமக்குத் தான் அவமானம். அப்படி இருக்கையில் மற்றவர்கள் எழுதினதைத் தன்னுடையது என்று போட்டுக் கொள்வது எவ்வகையில் நியாயம்?

இது வலைப்பக்கம் எழுதும் பதிவர்களின்  பதிவுகளுக்கு மட்டும் இல்லை. முகநூலிலும் பார்க்கிறேன். மற்றவர்களுடைய பதிவுகளை, அவர்கள் எழுதின விஷயங்களை, கவிதைகளை, கட்டுரைகளைத் தங்கள் பெயரில் போட்டுக் கொள்கிறார்கள். எங்கிருந்து எடுத்தது என்னும் விஷயத்தைக் கூடப் பகிர்ந்து கொள்ளும் மனம் இல்லாமல் இருக்கின்றனர். ஒரு படம் எடுத்தாலே கூகிள் மூலம் எடுத்தது எனக் குறிப்பிட வேண்டும்.  மற்றவர்கள் பதிவிலிருந்து எடுத்தாலும் இன்னார் பதிவிலிருந்து எடுத்தது என்பதைச் சொல்ல வேண்டும். அப்படி இருக்கையில் மற்றவரின் சிந்தனைகளை நம்முடையதாக எப்படி ஆக்கிக் கொள்ளலாம்!

இணையத்திலும் காப்பிரைட் உள்ள பதிவுகள், படங்கள், செய்திகள் உள்ளன.  நாம் பாட்டுக்கு நம்முடையது எனப் போட்டுக் கொண்டால் காப்பிரைட் பிரச்னை வரும். ஆகவே நாம் எங்கிருந்து எடுத்தாலும் அதைக் குறிப்பிட்டு இந்த இடத்திலிருந்து எடுத்தது; அதைப் பகிர்கிறேன் என்று சொல்வதே சரியான முறை. பின்னால் பிரச்னை வராமல் இருக்கும். என்னுடைய பிள்ளையார் பதிவுகளும்(இதிலாவது பெயர் குறிப்பிடப் பட்டிருந்தது) சிதம்பர ரகசியம் பதிவுகளும், இன்னும் சில புராண நாயகர்கள் குறித்த பதிவுகளும், சுமங்கலிப்  பிரார்த்தனை குறித்த பதிவும் மற்றவர்கள் வெட்டி, ஒட்டி இருந்ததைப் பார்க்கும்போது எனக்கு மனம் வேதனைப் பட்டது. அப்படித் தானே மற்றவர்களுக்கும் அவர்கள் பதிவுகள், படங்கள், கவிதைகள் வெட்டி, ஒட்டப்படுவதைப் பார்க்கையில் தோன்றும்!

புராண, இதிகாசங்கள், தல புராணங்கள், கோயில் பற்றிய செய்திகள், ஆழ்வார்கள் நாயன்மார்கள் குறித்த தகவல்கள், சரித்திர வரலாற்றுச் செய்திகள் (இவை கூட இப்போது மாற்றம் காண ஆரம்பித்திருக்கின்றன.) பகவத் கீதை மற்றும் ஆன்மிகப் பெரியோரின் கருத்துகள் ஆகியவை வேண்டுமானல் பிறர் சொன்னதை நாமும் சொல்லும்படி ஆகலாம். அவற்றில் தவறில்லை. அதே போல் தமிழிலும் உள்ள பழைய இலக்கியங்களையும் சுட்டிக் காட்டலாம்.  அவை மாறாதவை. ஆனால் தனிப்பட்ட ஒருவர் எழுதின தனிப்பட்ட உணர்வு குறித்த பதிவையோ, கவிதையையோ, கட்டுரையையோ பகிரும்போது சம்பந்தப்பட்டவர்களின் பெயரைச் சொல்வது தான் சரியானது. நம்முடைய உணர்வுகளுக்கும் அது பொருந்தி வரலாம்.   நம் நிலைமைக்கும் பொருந்தி இருக்கலாம். என்றாலும் அப்போது அதைப் பகிரும்போது எனக்கும் இந்த உணர்வு பொருந்துவதால் இதைப் பகிர்கிறேன்; இன்னாரிடமிருந்து எடுத்தது என்று சொல்லிவிட்டுச் செய்தால் நல்லது.  புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று எண்ணுகிறேன். இது குறிப்பிட்டு யாரையும் சொல்வதில்லை.

கடந்த ஒரு மாதமாக இப்படியான பல பதிவுகளைப் பார்க்க நேர்ந்ததால் சொல்லும்படி ஆயிற்று. 

Monday, April 20, 2015

பயணங்கள் முடிவதில்லை! 15

இங்கே



ராமேஸ்வரப் பயணம் குறித்துக் கடைசியா மேலுள்ள சுட்டியில் படிக்கலாம். ஆதி ஜகந்நாதரை தரிசித்துப் பாயசம் உண்ட பின்னர் அறைக்குத் திரும்பி வந்தோம். சற்று ஓய்வு எடுத்ததும் பதினோரு மணி அளவில் சாப்பாடு ஏற்பாடு பண்ணி இருந்த வீட்டிற்கு அனைவரும் வண்டியிலேயே போனோம். எல்லோருமே அங்கே சாப்பிட்டுவிட்டு அங்கிருந்தே கிளம்புவதாக ஏற்பாடு.  சாப்பிடப் போன வீடு கிட்டத்தட்ட ஒரு குடிசை. பழைய காலத்து வீடு. மிகவும் ஏழைகள் போல. காரட் கறி, சௌசௌ கூட்டு, சாம்பார், ரசம், மோர், சாதம், ஊறுகாய் இதுக்குத் தொண்ணூறு ரூபாய் வாங்கிட்டாங்க. அவங்க நிலைமையைப் பார்த்துட்டு நாங்களும் பேரம் பேசலை.  திருப்புல்லாணிக்காரரே ஒருத்தர் குழுமத்தில் இருக்கார்னு தமிழ்த் தேனீ அண்ணாவும், வா.தி.யும் சொன்னார்கள். எனக்கு நினைவிலும் இல்லை; அவரைப் பழக்கமும் இல்லை என்பதால் தொடர்பே கொள்ளவில்லை.

சாப்பிடப் போன வீட்டில்  சாப்பிட ரேழியில் தான் அமர வைத்தார்கள். சாப்பாடு போட்டது ஶ்ரீவைணவர்கள் என்பதாலோ என்னமோ தெரியலை. கூடத்துக்கு அழைத்து அங்கே வைத்துச் சாப்பாடு போடவில்லை.  சுவரில் சிலந்திக் கூடுகள் பெரிது, பெரிதாகக் காணப்பட்டன.  எப்போது அவை மேலே விழுமோனு பயத்திலேயே சாப்பிட்டு முடித்தேன். எனக்கு மட்டும் ஸ்டூல், ப்ளாஸ்டிக் நாற்காலி போட்டாங்க. எங்க மாட்டுப் பொண்ணுக்கு அருகே ஒரு பல்லி வந்துவிட அவளுக்குச் சாப்பிடவே பயம். பல்லியைப் பார்த்துக்கொண்டே கொரித்தாள். எப்போவும்  சப்பாத்தியாகச் சாப்பிடும் பையருக்கு இந்தச் சாப்பாடு ருசிக்கவில்லை. சாப்பாடு முடிந்ததும் அங்கிருந்து கிளம்பி நேரே மதுரை நோக்கிப் போனோம்.

பையருக்கு மீனாக்ஷியைப் பார்த்தே ஆகணும்னு ஆசை. ஆகையால் மதுரை வழியாகச் சென்றோம்.  இல்லைனா ராமேஸ்வரத்திலிருந்து திருச்சிக்கு மதுரை போகாமலே செல்ல முடியும். மதுரைக்கு இரண்டரை மணிக்கே போயிட்டோம். அங்கே ஒரே கூட்டம். நாலு மணிக்குத் தான் உள்ளே விடுவாங்கனு சொன்னாங்க. அதுக்கு பாதுகாப்பு சோதனைகளுக்கே பெரிய பெரிய வரிசைகளில் மக்கள் நாலு வாசலிலும் நின்று கொண்டிருந்தனர்.  இந்தக் கூட்டத்தில் நின்று கொண்டிருக்க முடியாதுனு நாங்க ரெண்டு பேரும் மட்டும் வண்டிக்கே திரும்பினோம். அங்கே கோபு ஐயங்கார் கடைக்குப் போனதெல்லாம் ஏற்கெனவே எழுதி இருக்கேன்.  படிச்சிருப்பீங்க.  அது இங்கே சீக்கிரமா முடிச்சுட்டேனோ? இ.கொ.வைத் தான் கேட்கணும். :)

அடுத்து விருத்தாசலம், ஶ்ரீமுஷ்ணம், சிதம்பரம், திருவெண்காடு, பரவாக்கரை, கருவிலி, நாச்சியார் கோயில், திருக்கருகாவூர் ஆகிய ஊர்களுக்கு டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய தேதிகளில் சென்றது குறித்து விரைவில் ஆரம்பிக்கிறேன்.

இ.கொ.ரெடியா?

இப்போத் தான் "இஷ்க்" படம் பார்த்துட்டே இதை எழுதி முடிச்சேன். படம் ஏற்கெனவே அரைகுறையாப் பார்த்திருக்கேன். இன்னிக்கும் அரைகுறை தான்! படம் ஆரம்பிக்கிறச்சே பார்க்கலை. :) ஆனால் தமிழிலே கூட இதே மாதிரிப் படம் ஒண்ணு வந்திருக்கு. என்னனு மண்டையைப் போட்டு உடைச்சுக்கறேன். நினைவில் வரலை.  பார்வதி மன்னி ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ, ஶ்ரீராம், உதவிக்கு வாங்க ரெண்டு பேரும். சின்ன க்ளூ, இந்தப் படம் 2012 ஆம் வருஷம் வந்த இஷ்க் இல்லை.  1997 ஆம் வருஷம் வந்தது. தமிழில் இதே மாதிரி வந்த படத்தோட பெயர் என்ன?

Saturday, April 18, 2015

மதுரைக்குப் போகாதேடி! :(

சாப்பிட்டுவிட்டு மாடிக்கு எங்கள் அறைக்கு வந்து சற்று நேரம் தொலைக்காட்சி பார்த்தோம்.  அப்புறமா ஒரு ட்ராவல்ஸ் கம்பெனிக்குத் தொலைபேசி மறுநாள் காலை திருப்பரங்குன்றம், திருவேடகம், அழகர் கோயில் எல்லா இடமும் போக வண்டிக்கு ஏற்பாடு செய்தோம். காலை ஆறரைக்கு வண்டியை வரச் சொல்லி இருந்தோம்.  ஆகவே நான் சீக்கிரம் படுத்துட்டேன். நம்ம ரங்க்ஸ் சாதாரணமா அர்னாப் கோஸ்வாமியும், ராஜ்தீப் சர்தேசாயும், பர்க்கா தத்தும் தூங்கப் போயாச்சானு பார்த்துட்டுத் தான் வந்து படுப்பார். அன்னிக்கு என்னமோ தெரியலை அவரும் படுத்துட்டார். எனக்கு சாதாரணமாவே வெயில்காலத்தில் அகல் விளக்கு ஏற்றினாலே சூடாகத் தெரியும். இங்கே குழல் விளக்குச் சூடு ஒத்துக்கலை. அறையிலே இரவு விளக்கும் இல்லை. ரிசப்ஷனுக்குத் தொலைபேசிச் சொன்னால் பதிலே இல்லை. மீண்டும், மீண்டும் இருமுறை கேட்டும் சரியான பதில் வரவில்லை. அறையிலே விளக்கில்லாமல் ஒரே கும்மிருட்டில் எப்படித் தூங்கறது? ஜன்னல் இருந்தால் அதுவழியா வெளியே இருந்து கொஞ்சமானும் வெளிச்சம் வரும்.  யோசித்து மண்டையைக் குழப்பிக் கொண்டுவிட்டுக் கடைசியில் குளியலறை+கழிவறையின் விளக்கைப் போட்டு விட்டு அதன் கதவை ஒருக்களித்துத் திறந்து வைத்துவிட்டுப் படுத்தோம்.

அந்த வெளிச்சமே என் கண்ணில் படத் தூக்கமே வரவில்லை. அப்படி, இப்படிப் புரண்டு விட்டு ஒரு வழியாக் கண்ணசரலாம்னா திடீர்னு பக்கத்திலே ரங்க்ஸுக்கு ஒரே இருமல். எழுந்து கொண்டு என்ன வேண்டும்னு கேட்டேன். குடிக்கத் தண்ணீர் ஏதானும் எடுத்துத் தரலாமா என்னும் எண்ணத்தோடு. அதுக்கு என்னவோ பதில் சொன்னார். வாயிலிருந்து காற்றுத் தான் வருது! வார்த்தைகளே தெளிவாக இல்லை. ஒரு கணம் பயந்தே போனேன்.  சாதாரணமா இம்மாதிரி மாஜிக் வேலை எல்லாம் என்னைச் சேர்ந்தது. அவருக்கு எதுவும் பண்ணினதில்லை. இப்போப் பார்த்துப் பேச முடியலைனா! ஒரே பயம். மறுபடி பேச்சுக் கொடுத்தேன். சற்று நேரம் வரை பேச்சுக் கிசுகிசுப்பாகவே இருந்தது. அப்புறமும் குரல் சரியாக எழும்பவில்லை. உடனடியாக என்னுடைய வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நாளைக்கு நாம ஊர் திரும்பறோம்னு அறிவிப்புச் செய்துட்டுப் படுத்தேன். வீட்டில் இருந்தால் வெந்நீர் வைத்துக் கொடுக்கலாம். தொண்டைக்கு இதமாக இருக்கும். இங்கே என்ன செய்ய முடியும்?

ஆனால் ஒரு விஷயம். சாதாரணமா நான் கிழக்குனா ரங்க்ஸ் மேற்கு என்பார். இன்னிக்கு என்னுடைய அறிவிப்புக்கு பதிலே இல்லை.  ஆகவே உண்மையாகவே உடல்நலம் சரியாக இல்லைனு எனக்குப் புரிந்தது. அந்த மூடிய அறைக்குள்ளே வெளிக்காற்றே கொஞ்சம் கூட இல்லாமல் தொடர்ந்து அறை விளக்கைப் போட்டுக் கொண்டு மின் விசிறியடியில் இருந்ததாலோ என்னவோ தெரியலை. உடல்நலம் பாதிக்கப்பட்டு விட்டது.  மறுநாள் காலை எழுந்ததும் முதல்வேலையாக ட்ராவல்ஸ் கம்பெனிக்குத் தொலைபேசி எங்கள் பயணத்தை ரத்து செய்தோம். பின்னர்  அன்றாடக் கடன்களைமுடித்துக் கொண்டு வடக்காவணி மூலவீதியின் முனைக்கடைக்குப் போய்க் காஃபி சாப்பிட்டு விட்டு வந்தோம். முதல்நாள் மாலையே ஹோட்டலில் காஃபி கொடுக்க ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆச்சு. இப்போக் கேட்கவே வேண்டாம்.  ஆறரைக்குத் தான் ரெஸ்டாரன்ட் திறப்பாங்களாம். காஃபி கொடுக்கையில் ஏழரை ஆயிடும். நமக்குச் சரிப்படாது. வெளியிலே விற்பதை விட விலையும் ஒரு காஃபிக்கு  5 ரூ அதிகம்.

பின்னர் மீண்டும் அறைக்கு வந்து ரிசப்ஷனில் இருப்பவரிடம் நாங்கள் கிளம்புவதாய்ச் சொல்லி பில்லை ரெடி செய்யச் சொன்னோம். அவர் ஏன்னு கேட்டதுக்கு எங்கள் குறைகளைச் சொல்லிவிட்டோம். அவர் வாயே திறக்கலை. இரவு விளக்குக் கூடக் கேட்டும் கொடுக்காமல் இருக்கிறச்சே மறுநாளும் அங்கே எப்படித் தொடர்வது? இன்னொரு ஹோட்டலுக்குப் போகலாம்தான். ஆனால் திடீர்னு இப்படித் தொண்டை கட்டிக் குரல் வெளியே வராமல் இருக்கே! போகும் இடத்தில் குடிக்கும் தண்ணீரால் நிலைமை இன்னமும் மோசமானால் என்ன பண்ணுவது! அறைக்கு வந்து குளித்து விட்டு கோபு ஐயங்கார் கடைக்குப் போய்க் காலை ஆகாரம் சாப்பிடச் சென்றோம். இப்போவும் நம்ம ரங்க்ஸ் அந்தக் கணக்காளரிடம் மாவடு எங்கே கிடைக்கும்னு கேட்க, நான், யானைக்கல்லில் கிடைக்கும்; ஹோட்டலில் இருந்து அங்கே போய் மாவடு வாங்கிட்டு வரலாம்னு சொல்ல, அதை லக்ஷியமே செய்யாத ரங்க்ஸ் அந்த மனிதர் வாயையே பார்க்க அவரோ மாவடு என்னும் பெயரையே அன்று தான் கேள்விப் பட்டிருப்பார் போல! ரொம்ப யோசனைக்குப் பின்னர் ஒரு தலையாட்டல். அதுக்குள்ளே நான் படி இறங்கி நடக்க ஆரம்பித்துவிட்டேன்.

சூப்பர் டிஃபன் கோபு ஐயங்கார் கடையிலே. அருமையான சாம்பார், சட்னி வகையறாக்கள்.  காஃபி மட்டும் இப்போப் புதுசா சிகரி போட ஆரம்பிச்சிருக்காங்க போல!போகப் போக மற்றதும் மாறாமல் இருக்கணும்! :) பின்னர் அங்கிருந்து வடக்காவணி மூலவீதி வந்து ஒரு ஆட்டோ பிடித்து யானைக்கல்லுக்கு விடச் சொன்னோம். பள்ளிக்குச் செல்லும் ஆட்டோ. ஆகையால் சீக்கிரம் திரும்பணும்னு ஆட்டோக்காரர் சொல்ல நாங்களும் சீக்கிரமாய்த் திரும்பிடுவோம்னு சொல்லிட்டு ஏறிக் கொண்டோம். யானைக்கல்லில் இரண்டு, மூன்று இடங்களிலேயே மாவடு கிடைத்தது. அதில் ஒரு இடத்தில் மாவடு சுமாராக இருந்தது. கிலோ நூறு ரூபாய் சொல்ல மூன்று கிலோ வாங்கிக் கொண்டோம். ஆட்டோக்காரர் ரொம்ப உதவியாக இருந்தார். பேரம் பேசி விலையை நிர்ணயம் செய்தது அவரே. ஏனெனில் எங்களைப் பார்த்ததும் எல்லோரும் இருநூறு ரூபாய் வரை சொன்னார்கள். ஆகவே எங்களை ஓர் இடத்தில் இருக்க வைத்துவிட்டு அவர் போய் விலை பேசிவிட்டுப் பின்னர் அழைத்துச் சென்றார்.

பின்னர் அதே ஆட்டோவிலேயே மறுபடி ஹோட்டலுக்கு வந்து அறையைக் காலி செய்து கொண்டு கணக்கைத் தீர்த்துவிட்டு மாட்டுத்தாவணிக்கு அங்கேயே ஆட்டோ பிடித்துக் கொண்டு வந்து மதுரை--திருச்சி விரைவு வண்டியில் ஏறித் திருச்சி வந்து அங்கிருந்து ஶ்ரீரங்கம் வந்து சேர்ந்தோம். வீட்டுக்குப் பதினொன்றே கால் மணிக்கு வந்தாச்சு.  வந்து சாதம்,  மிளகு ரசம், கொத்தவரை வற்றல், அப்பளம், கருவடாம் பொரித்துக் கொண்டு மோர், ஊறுகாயோடு சாப்பிட்டுவிட்டு ஓய்வும் எடுத்துக்கொண்டோம். அப்பாடானு ஆயிடுச்சு மதுரைப் பயணம்! ::) சாயந்திரமா மாவடுவையும் உப்புக்காரம்,கடுகுப் பொடி, மஞ்சள் பொடியோடு சேர்த்து ஊறுகாய் போட்டு இப்போச்சாப்பிடவும் ஆரம்பிச்சாச்சு! :) என்ன இருந்தாலும் மதுரை மாவடு அதிலும் அழகர் கோயில் வடுவுக்கு ஈடு, இணை இல்லை தான்! :)

மாவடு க்கான பட முடிவு

நாங்க வாங்கின மாவடு இப்படித் தான் இருந்தது.  படத்துக்கு நன்றி கூகிளார்.

சும்மா ஒரு விளம்பரந்தேன்! இங்கே பார்க்கவும், மாவடு செய்முறை!

மாவடு செய்முறை

Friday, April 17, 2015

பொற்றாமரைக்குளத்தருகே அன்னை மீனாக்ஷி!

கோவிலுக்குப் போகும்போதும் நம்ம ரங்க்ஸ் மறுபடியும் அந்தக் கணக்காளரிடம் இப்போப் போனால் தரிசனம் கிடைக்குமா? குறுக்கு வழியில் போவதுனால் மேல கோபுர வாசல் வழி போனால் சரியானு எல்லாம் கேட்க, மறுபடியும் அவர் ஙே! எனக்கா ஒரே கோபம்.  தரதரனு அவரை இழுத்துட்டுப் போனேன். போகும்போதே எல்லா இடத்தையும் காட்டிட்டு, மேலகோபுரம் வழியாத் தெற்கு கோபுர வாசலுக்குப் போய்க் கீழே இறங்கும் இடத்தருகே இருந்த சீட்டு வாங்கும் இடத்தில் இருநூறு ரூபாய் செலுத்தி இருவருக்கும் டிக்கெட் வாங்கிக் கொண்டோம். அம்மனுக்கு 50 ரூ சுவாமிக்கு 50 ரூ. சீட்டுக் கொடுக்கும்போதே அலுவலகத்தில் இப்போ சிறிது நேரத்துக்கெல்லாம் நடை சாத்திடுவாங்க. சீக்கிரமாய்ப் போங்கனு சொல்லித் தான் சீட்டே கொடுத்தாங்க. ஆகவே வேகமாய் நடையைக் கட்டினோம்.   விபூதிப் பிள்ளையார் பாவமாக உட்கார்ந்திருக்கக் கிளி மண்டபத்தில் கிளி இருப்பதாகவே தெரியலை. ஒரே அமைதி. ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் புதிதாகப் போட்டிருக்காங்க. அவற்றைத் தாண்டிக் கொண்டு போகிற போக்கிலேயே முக்குறுணிப் பிள்ளையாருக்கு ஒரு ஹலோ சொல்லிட்டு அம்மன் சந்நிதிக்குள் நுழைந்தோம்.

முன்னே எல்லாம் மயில் தோகையால் ஒரு தாத்தா விசிறிக் கொண்டு இருப்பார். இப்போ அவரைக் காணோம். அப்போவே வயசு ஆச்சு.  ஆனால் அந்தத் தொண்டை அதன் பின்னர் யாரும் தொடரலை போல. இதெல்லாம் கவனிக்க முடியாமல் அங்கிருந்த கோயில் ஊழியர்கள் சீக்கிரம், சீக்கிரம்னு சொல்ல, பிரகாரத்தில் கொலு மண்டபம் செல்லும் வழியில் இருந்த வாசலை நோக்கி விரைந்தேன். முன்பக்கம் இலவச தரிசனக் காரர்கள். ஆகவே சீட்டு வாங்கினவங்க அந்த வாசல் வழியாகப் போகணும்.  மீனாக்ஷியைப் பார்க்கணும்னு ஒரே நோக்கத்தோடு நடந்தேன். வழக்கமாக விரைவாக நடக்கும் ரங்ஸ் தாமதமாக வர, மெதுவாக நடக்கும் நான் ஓட்டம் பிடித்தேன். அங்கிருந்த ஊழியர் ஒருவர் பார்த்தும்மாக் கீழே விழுந்துடப் போறிங்கனு எச்சரிக்கும் அளவுக்கு வேகமாய்ப் போனேன். பின்னார் ரங்க்ஸும் வந்தார். உள்ளே நுழைந்து கருவறையில் மீனாக்ஷியைப் பார்த்தேனோ இல்லையோ, நெஞ்சம் விம்மியது; கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டது.

இவ்வளவு பிகு பண்ணிக்கிறியே அம்மா, உன்னைப் பார்க்கக் கூட முடியாத அளவுக்கு நீ பெரிய மனுஷியா ஆயிட்டியேனு மனசுக்குள்ளே மீனாளைக் கேட்டுக் கொண்டுக் கண் கொண்ட மட்டும் பார்த்தேன். அதிசயமாக எலுமிச்சை மாலை சார்த்தி இருந்தார்கள். எனக்குத் தெரிஞ்சு மீனாக்ஷிக்கு எலுமிச்சை மாலை சார்த்திப் பார்த்ததில்லை. பச்சைப் பட்டு உடுத்தி இருந்தாள். இடக்கையின் நெளிவும் வலக்கையின் கிளியும் அழகு கொஞ்ச சின்னஞ்சிறு பெண் போலே, சிற்றாடை இடை உடுத்திக் காட்சி தந்தாள் அன்னை மீனாக்ஷி. கொண்டு போன மாலையைக் கொடுத்தோம். அபிஷேஹம் முடிஞ்சு அலங்காரம் பண்ணும்போது தான் சார்த்துவேன்னு சொல்லிட்டு பட்டர் எடுத்துட்டுப் போயிட்டார்.
மதுரை மீனாக்ஷி க்கான பட முடிவு

கண்குளிரப் பார்த்துக் கொண்டே இருக்கணும்னு தான் ஆசை. ஆனால் நடுவில் இந்தத் திரை போடுதல் வந்து விட்டது. திரை போட்டுட்டாங்க. திறக்க முக்கால் மணி ஆகும் என்று சொல்லி விட்டார்கள். ஆகவே சுவாமி சந்நிதி திறந்திருக்குமானு கேட்டுட்டு அங்கே போனோம். அதுவும் குறுக்கே தான். போற வழியில் இருக்கும் ஆஞ்சி நல்லா வளர்ந்துட்டார். தூணில் சின்ன உருவமாகப் பார்த்தவர் இப்போத் தூண் கொள்ளாமல் தூணை விட்டே எழுந்து வந்துடுவார் போல இருந்தார்.  இத்தனை வருடங்களில் நிறைய வெண்ணெயும், வடையும் கிடைச்சிருக்கும் போல! அவரை வணங்கிட்டு சுவாமி சந்நிதிக்குள் நுழைந்து சுவாமியைப் பார்த்துக் கொண்டே இருந்தோம். அதற்குள்ளாக இங்கேயும் திரை போட திறக்க எத்தனை நேரம் ஆகும்னு கேட்டோம். கால் மணி நேரம் தான்னு சொல்லவே அங்கேயே காத்திருந்தோம். மாலையையும் கொடுத்திருந்தோம். பத்து நிமிஷத்தில் திரை திறக்க மறுபடி சிறிது நேரம் சுந்தரேசரைப் பார்த்து மனதில் உள்வாங்கிக் கொண்டோம்.  மாலையைக் கொடுத்தோம். மற்றக் கோயில்களைப் போல் நாம் கொண்டு போகும் பூவையோ, மாலைகளையோ சுவாமிக்குச் சார்த்தாமல் தூக்கி எறிவதில்லை என்பது வரை மனம் சந்தோஷம் அடைந்தது.

பின்னர் வெளியே வந்து தக்ஷிணாமூர்த்தி, துர்கை, சித்தர் எல்லோரையும் பார்த்துவிட்டுக் கோயிலுக்கு வெளியே வர ஆயத்தமானோம். அப்போத் தான் கோயில் ஆனையார் அம்மன் சந்நிதியில் சாயரட்சை ட்யூடியை முடித்துக் கொண்டு ஸ்வாமி சந்நிதிக்கு வரக் கிளம்பிக் கொண்டிருந்தார். முக்குறுணிப் பிள்ளையாருக்கு எதிரே இருக்கும் வாயில் பெரிதுன்னாலும் அந்தப் படிகளில் எப்படி ஆனையார் ஏறுவார்னு குழப்பமா இருந்தது.  எப்படியோ ஏறிட்டார். ஏறி அவரும் குறுக்கே தான் போனார். சுவாமி சந்நிதியில் ட்யூடி முடிந்து அப்படியே கல்யாண மண்டபம் வழியா தன்னோட இடத்துக்குப் போயிடுவார் போல. காமிராவே எடுத்துச் செல்லாததால் படம் ஏதும் எடுக்கலை.  பின்னர் தெற்கு ஆடி வீதி வழியாக மேல ஆடி வீதிக்கு வந்து மேலக்கோபுரம் வழியாக வெளியேறினோம். நாகப்பட்டினம் கடை மறு நாள் உண்டானு கேட்டுக் கொண்டோம். பின்னர் மெல்ல நடந்து வடக்குச் சித்திரை வீதி வழியாக வடக்காவணி மூல வீதி போய் பூக்காரச் சந்தில் நுழைந்து தானப்ப முதலித் தெருவில் தங்கி இருந்த ஹோட்டலுக்குப் போனோம்.

ஹோட்டலிலேயே இரவு உணவை முடிச்சுக்கலாம்னு நினைச்சோம். ஆகவே அவங்க கிட்டே என்ன இருக்குனு கேட்டால் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்றார்கள். சப்பாத்தி பூரிக்குத் தொட்டுக்க சாம்பார், சட்னியாம். விடிஞ்சது போனு நினைச்சுட்டு ஏழரைக்கு எங்களுக்கு இட்லி கொடுக்கும்படி சொல்லிவிட்டுக் காஃபி வேணும்னு கொண்டு வரச் சொல்லிட்டு அறைக்குப் போனோம். அப்போ ஐந்தரை மணி தான் ஆகி இருந்தது. சொல்லி அரை மணி வரை காஃபியே வரலை. ஐந்தேமுக்காலுக்கு ஃபோன் செய்தப்போ இப்போ வந்துடும்னு சொன்னாங்க. ஆறு மணி வரை வரலை.  ஆறு மணிக்கு மறுபடி கூப்பிட்டு ஆர்டரை கான்சல் பண்ணிடுங்கனு சொல்லலாம்னு பார்த்தா இதோ பத்து நிமிஷம்னாங்க. காஃபிக்கொட்டையை வறுத்து அரைத்துப் போடுவதுனால் கூட அதுக்குள்ளே போட்டிருக்கலாம். ஒரு வழியா ஆறரை மணிக்குக் காஃபி வந்தது. அவர் கிட்டே இரவு உணவுக்கும் இப்படித் தான் நேரம் ஆகுமானு கேட்டோம். நேரமே ஆகலைனு அவர் கட்சி. சரி, தொலையட்டும்னு இரவு உணவை அறைக்குக் கொண்டு வர வேண்டாம். ஏழரைக்குக் கீழே வரோம். அங்கேயே கொடுங்கனு சொன்னோம். தயாராவும் வைச்சிருக்கச் சொன்னோம்.

ஆனால் ஏழரைக்குப் போனால் அங்கே சமையல் நடைபெறுவதன் அறிகுறியே இல்லை. போய் நாங்க யாரிடம் சொன்னோமோ அவரைக் கூப்பிட்டு நாங்க வந்துட்டோம்னு தெரிவிச்சோம். இதோனு சொல்லிட்டு உள்ளே போனார். ஆளே வரலை. ரிசப்ஷனில் கேட்டதுக்கு, வருவார்னு மட்டும் பதில் வந்தது. சரி, சூடாப் பண்ணி எடுத்துட்டு வரப் போறார்னு பொறுமையா உட்கார்ந்திருந்தோம். எட்டேகால் மணிக்கு ஒரு வழியா ஐந்து இட்லிகள் கொண்ட இரு உணவுத் தட்டுகள் வந்தன. நாங்க கேட்டது 3 இட்லிகளே. ஆகவே இரண்டு இட்லிகளைச் சாப்பிடும் முன்னரே எடுக்கச் சொல்லிட்டோம். இட்லிகளைத் தொட்டுப் பார்த்தால் சில்லிட்டிருந்தது.  காலையிலேயே செய்தவை போலத் தெரிந்தன. சரி, சாம்பாராவது சூடா இருக்கானு பார்த்தால் அதுவும் இல்லை. சட்னியும் காலம்பர செய்த சட்னியைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து விட்டு எடுத்து வந்திருக்காங்க போல! அத்தனை நேரத்துக்கு மேல் வெளியே போய்ச் சாப்பிட முடியாது; வேறு வழியில்லைனு சாப்பிட்டு வைச்சோம். காஃபி, பால் ஏதானும் வேணுமானு வந்து கேட்க பயத்தோடு அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டோம். அதுவேறே அப்புறமா ராத்திரி ஒன்பது வரைக்கும் உட்கார்ந்திருக்கிறாப்போல் ஆயிடுமே! 

Tuesday, April 14, 2015

தாமதமான புத்தாண்டு வாழ்த்துகள்!






நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். காலையிலிருந்து கணினி பக்கமே வர முடியலை.  மத்தியானமாய் வந்தேன். ஆனால் காலை படம் எடுக்க முடியலை. ஆகவே மத்தியானமாய்ப் படம் எடுத்துட்டுப் போடலாம்னு இருந்தேன். அதுக்குள்ளே வேண்டாத செயல்முறைத் திட்டம் ஒன்று (ப்ரோகிராம்) தானாகவே நிறுவப்பட்டு விட்டது.  என்னோட கணினியின் பாதுகாவலரான நார்ட்டன் எவ்வளவோ முயன்று அதைத் தடுத்தும் முடியலை.  சில நிமிடங்கள் என்னால் இணையத்துக்கே போக முடியலை.  பாதி மடல்கள் பார்க்கையில் கணினி மூடிக் கொண்டது. பின்னர் எச்சரிக்கைச் செய்தியோடு அதை வேறு வழியில்லாமல் நார்ட்டன் அனுமதிக்க நானும் அதை நீக்க மத்தியானத்திலிருந்து முயன்றும் போகலை. கன்ட்ரோல் பானலுக்குப் போய்ப் ப்ரோகிராம் பட்டியலில் போயும் சோதித்துப் பார்த்தாகி விட்டது. அதிலே இல்லை. டெல்டா ஹோம்ஸ் என்னும் தளம் தானாகவே நிறுவப் பட்டுள்ளது. :(

க்ரோம் ப்ரவுசர் பயன்படுத்துவதால்  அதன் மூலம் நீக்கவும் முயன்று விட்டேன். எதுவும் நடக்கலை.  அதிலே செட்டிங்க்ஸில் போய் அவங்க சொன்னபடி எல்லாம் செய்து பார்த்துட்டேன். ஒரு முறைக்குப் பல முறை. இப்போதைக்கு அதைத் திறக்காமல் மூடி வைச்சிருக்கேன். ஹோம் பேஜாக வேறே வருது. அதிலே தேவையில்லா விளம்பரங்கள்! மோசமான விளம்பரங்கள்! என்ன பண்ணறதுனு புரியலை! விடுங்க, நம்ம பிரச்னை இருக்கவே இருக்கு!  இதை நீக்குவதிலேயே மத்தியானம் முழுதும் சரியாப் போச்சு! :(

மத்தியானமா போளி பண்ணும்போது படம் எடுத்தேன். மேலே ராமரும் கூட மத்தியானமா ராகுகால விளக்கு ஏத்தும்போது எடுத்தது தான். வடையும் உண்டு.  ஆனால் வடை அப்புறமா ரொம்ப தாமதமாக ஐந்து மணிக்குத் தட்டினேன். அப்போ தொலைபேசி அழைப்பு வேறே வந்ததில் படம் எடுக்கிறதில் கவனம் இல்லை. ஆமை வடை தான்! அரிசி, தேங்காய் அரைச்சு விட்டுப் பாயசம். மாங்காய்ப் பச்சடி, வெள்ளரிக்காய்ப் பச்சடி, காரட் சாம்பார், ரசம். அவ்வளவே.  எல்லோரும் சூடான போளி எடுத்துக்குங்க. இந்த வருஷம் அனைவருக்கும் இனிமையாக இருக்கட்டும். ஒவ்வொரு வருஷமும் தான். அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சியும் சுபிக்ஷமும் பொங்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Monday, April 13, 2015

மதுரையில் கழித்த ஒரு நாளில்!

இங்கே

கடைசியாய் எழுதினதன் சுட்டி மேலே! திருமோகூரில் இருந்து மதுரை நோக்கி வந்தோம்.  பெரியார் பேருந்து நிலையத்தில் இறங்கியே போயிருக்கலாம்.  ஆனால் சேதுபதி பள்ளியிலிருந்து தானப்பமுதலி அக்ரஹாரம் பக்கத்தில் என்பதால் அங்கே இறங்கினோம். முதலிலேயே ஒரு பெரியவர் அங்கே இறங்க வேண்டாம். அதற்கடுத்த நிறுத்தத்தில் இறங்குங்கனு சொல்லி இருந்தார்.  எனக்குத் தான் ஊர் தெரியுமே என்னும் எண்ணத்தில் இருந்துவிட்டேன். இறங்கினால் ஆட்டோ குட்ஷெட் தெரு, வடக்குமாசி வீதி வழியாகப் போய் தானப்ப முதலித் தெருவுக்குப் போகாதாம். ஒன்வே! :( ஆகவே மேல வெளிவீதி திரும்பி சந்தைப்பேட்டைத் தெரு அல்லது டவுன்ஹால் ரோடு வழியாகத் தான் போகணுமாம். ஆட்டோக்காரர் 80 ரூபாய் கேட்டார்.  ஊரைச்சுத்தணுமே! வேறே வழியில்லாமல் ஒத்துக் கொண்டோம். மேலக்கோபுர வாசலில் தானப்பமுதலித் தெருவுக்குள்ளே நுழைந்தோம். தெரு அப்படியே மாறாமல் இருந்தாலும் பல வீடுகள் இடித்துக்கட்டப்பட்டிருந்தன.

எனக்குத் தெரிந்தவர்கள் வீடெல்லாம் ஹோட்டல்களாக ஆகிவிட்டிருந்தன. வரிசையாகப் பார்த்துக் கொண்டே வந்தேன்.  திருப்பாவை வகுப்பு மற்றும் முக்கியச் சிறப்பு நிகழ்ச்சிகள், கல்யாணங்கள் ஆகியவை நடைபெறும் கண் ஆஸ்பத்திரி என்று அழைக்கப்பட்ட மங்கள நிவாஸ் பழைய கட்டிடம் ஆகி எந்நேரமும் இடிந்து விழுமோ என்னும் நிலையில் காணப்பட்டது. அதற்கு எதிரே தான் நாங்கள் தேடிச் சென்ற கதிர் பாலஸ் ஹோட்டல். சரியாக மிட்லான்ட் ஹோட்டலுக்கு எதிரே இது இருந்தது. மிட்லான்ட் ஹோட்டலில் ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற நக்ஷத்திரங்கள் வந்து தங்குவார்கள். கீழே ஒரு போஸ்ட் ஆஃபீஸ் இருந்தது.  அந்த இடத்தில் இப்போது வேறு ஏதோ ஒரு காரியாலயம். மிட்லண்ட் ஹோட்டலின் அறைகள் எல்லாம் நல்ல தெருவைப் பார்த்து ஜன்னல்கள் வைத்து வெளிச்சமாக இருக்கும். எல்லா அறைகளின் ஜன்னல் கதவுகளும் கண்ணாடி உடைந்து பார்க்கவே பரிதாபமாகக் காட்சி அளித்தது.

அதைப் பார்த்து மன வேதனையுடன் திரும்பிக் கதிர் பாலஸுக்குள் ஏறிப் போக நினைத்துப் படிகளில் கால் வைத்தால் பக்கத்தில் சேதுராம் பஜனை மண்டலி!  ஆஹா! இது என்னுடன் கூடப் படித்த கோமதியின் பிறந்த வீடு அல்லவோ! ஆமாம், ஆமாம், அதே தான்! என்று உறுதிப் படுத்திக் கொண்டு ஹோட்டலுக்குச் சென்று அறை கேட்டோம். இரு அறைகள் காலியாக இருப்பதாகச் சொல்லி முதல் மாடியில் ஒன்றும் இரண்டாம் மாடியில் ஒன்றுமாகக் காட்டினார். இரண்டிலுமே ஜன்னல்களே இல்லை. ஓ.டி.எஸ். எனப்படும் திறந்த காற்றோட்ட அமைப்பினருகே ஒரு ஜன்னல்.  ஆனால் அந்த ஓடிஎஸ்ஸும் இருட்டு. கீழே இருந்து மேலே சென்றதற்கு மேலே திறப்பு இல்லை.  முன் காலத்தில் போல் மேலே திறப்பு இருந்தால் காற்றும், வெளிச்சமும் வரும். அப்படி இல்லை. ஆனால் இதை எல்லாம் அப்போ யோசிக்காமல் இரண்டாம் மாடி அறையை எடுத்துக் கொண்டோம்.

சாப்பாடு பத்திக் கேட்டால் ரூமில் சேவை செய்யும் பையர் இப்போத் தான் காலை ஆகாரமே முடிஞ்சிருக்கு; சாப்பாடுக்கு நாழி ஆகும்னு சொல்றார். மணி அப்போவே பதினொன்றரை. சரி, இத்தனை நாழிக்கு மேலே கோயிலுக்குப் போனால் நடை சாத்தும் நேரமா இருக்கும், சாயங்காலமாப் போயிக்கலாம், சும்மா இப்படிக் காலார நடந்துட்டு வரலாம்னு கிளம்பினோம். நம்ம ரங்க்ஸுக்கு கோபு ஐயங்கார் கடையிலே போய்ச் சாப்பாடு சாப்பிடணும்னு! அங்கே சாப்பாடு இல்லைனு சொன்னால் கேட்டால் தானே!  நீ மதுரைக்கு வந்து தங்கியே பல வருடங்கள் ஆச்சு! உனக்கு எல்லாம் மறந்திருக்கும்னு சொல்லிட்டுக் கீழே வந்து அங்கே கணக்கு எழுதிட்டிருந்த ஒருத்தரிடம் போய் வேலை மெனக்கெட்டு, "கோபு ஐயங்கார் கடையிலே சாப்பாடு உண்டா?" னு கேட்க, அவர் திருதிரு! ஙே! நான் அவசரம் அவசரமாக மறுத்துக் கொண்டே, வாங்க எனக்கு வழியெல்லாம் தெரியும், அங்கேயே போய்க் காட்டறேன்னு சொன்னதையும் லக்ஷியம் செய்யாமல் அவரை வழி கேட்க, அவர் மீண்டும் திருதிரு! ரிசப்ஷனில் இருந்த பையருக்கும் தெரியவில்லை!

கோபு ஐயங்கார் கடைனு ஒண்ணு இருக்கிறதாவே தெரியாதுனு அந்த மனிதர் திருவாய் மலர்ந்தருள ஒருவழியாய் வேறே வழியில்லாமல் என்னுடன் வந்தார் ரங்க்ஸ்.  வழியெல்லாம் பழைய நினைவுகளை மீட்டெடுத்தபடியே பூக்காரச் சந்து வழியாக மேலாவணி மூலவீதி, வடக்காவணி மூலவீதி, வடக்குக் கிருஷ்ணன் கோயில் தெரு சேரும் முனைக்கு வந்து சேர்ந்தோம். மேலாவணி மூல வீதி 1 ஆம் நம்பர் வீடு கோபாலசாமி ஐயர் வீடு; இப்போ அவர் பிள்ளை ஜி.எஸ்.மணி கர்நாடக சங்கீத வித்வான் இருக்கார்.  வீடு முன்னே பார்த்த மாதிரியே அப்படியே இருந்தது.  வாசலில் ஜி.எஸ்.மணி பெயருடன் பெயர்ப்பலகை. மற்ற 2,,3,4,5,6,7 நாங்க இருந்த வீடு, அப்புறம் எட்டு பாரி&கம்பெனி வீடு, அடுத்து ஒன்பது எங்க சொந்தக்காரங்க வீடு, பத்தும் என்னோட ஒண்ணுவிட்ட மாமா வீடு, பதினோராம் நம்பர் வீடு என் அம்மாவின் சித்தி வீடு. எல்லாமும் மாறிவிட்டது.

ஆனால் மேலாவணி மூலவீதிக்குப் போகலை.  முக்கில் இருந்தே பார்த்துட்டு வடக்காவணி மூலவீதியில் நடந்தோம். நான்படிச்ச பொன்னு ஐயங்கார் சந்துப் பள்ளிக்கூடம் இப்போ இல்லை.  சந்தும், கட்டிடமும் இருக்கு.  ஆனால் அங்கே பள்ளிக்குப் பதிலாக ஏதோ கோடவுன் வந்திருக்கு.  சற்றுத் தள்ளி இருந்த மண்டபம் ஸ்கூலும் இல்லை. சந்துப் பள்ளிக்கூடத்துக்கு எதிர்ச் சந்தில் நுழைந்து வலப்பக்கம் திரும்பினால் கொஞ்ச தூரத்தில் கோபு ஐயங்கார் கடை. அதன் அருகே இருந்த காப்பிக்கடைக் கூட்டத்தைப் பார்த்துட்டு ரங்க்ஸ் கடை இருக்குனு சொல்ல, வார விடுமுறைநாள்னு போட்டிருக்குனு நான் சொல்ல, கிட்டேப் போய்ப் பார்த்து உறுதி செய்து கொண்டு காப்பிக் கடையில் விசாரித்தார் ரங்க்ஸ்.  அவங்களும் சாப்பாடு போடுவதில்லை என்பதை உறுதி செய்தார்கள். பின்னர் அவங்க கிட்டேயே சாப்பாடு எங்கே கிடைக்கும்னு விசாரித்துக் கொண்டு, ஒரு காஃபி வாங்கிக் குடித்துவிட்டு வழியில் அவங்க சொன்ன ஹோட்டலில் தயிர் சாதம் பொட்டலம் வாங்கிக் கொண்டு ரூமுக்கு வந்தோம்.

ரூமில் பகல் பனிரண்டு மணிக்கே விளக்குப் போட்டுக்கணும்; வெளிச்சமே இல்லை. காற்று என்பது வாயால் ஊதினால் தான். 24 மணி நேரமும் மின் விசிறி சுத்தணும். அல்லது ஏசியில் இருக்கணும். ஏசியில் அவ்வளவு நேரமெல்லாம் இருந்தால் உடம்புக்கு ஒத்துக்காது என்பதோடு என்னோட கீல்வாயுப் பிரச்னையும் அதிகம் ஆகும். ஆகவே அவற்றோடு சில நேரம் போட்டு, அணைத்து என்று விளையாடினோம். ஏண்டா வந்தோம்னு ஆகிப் போச்சு. குறைந்த பக்ஷமாக வாசல்பக்கம் பார்த்தாவது ஒரு ஜன்னல் வைச்சிருக்கலாம்.  விளக்கு எரிந்தால் அறை சூடாகி விடுகிறது. பல்லைக் கடித்துக் கொண்டு வாங்கிப் போன தயிர்சாதத்தைச் சாப்பிட்டுவிட்டு 3 மணி வரைபொழுதைப் போக்கிவிட்டுக் கோயிலுக்குக் கிளம்பினோம். மேல கோபுரம் வழியாகப் போகலாம்னு சொன்னேன்.  ஆகையால் மேலகோபுர வாசல் வழியாவே போகலாம்னு ரங்க்ஸ் சொன்னார்.  மேல, கீழ அனுமந்தராயன் கோயில் தெருவுக்கு எதிரே தானப்பமுதலி அக்ரஹாரத்தின் தென் பக்கம் வரும்.  அப்படி வந்து மேல கோபுரத்துக்காகத் திரும்பினோம்.  ராஜாபார்லி பிஸ்கட் பேக்கரி இருந்த சந்தையும், அங்கே தான் ஹிந்தி பிரசார சபா இருந்தது என்பதையும் காட்டினேன். ஹனுமந்தராயன் கோயில் தெருவில் தான் எம்.எஸ்.அம்மாவின் வீடு இருந்தது என்பதையும் சொன்னேன்.  அப்படிப் போனால் திண்டுக்கல் ரோடு வரும் என்பதையும், அங்கே ராஜா பார்லி கடை இருப்பதையும் சொல்லவே கிளம்பும் முன்னர் ராஜா பார்லி பிஸ்கட் வாங்கிச் செல்லணும்னு சொன்னார். அங்கே வெண்ணை பிஸ்கட் நல்லா இருக்கும்னு சொல்லி இருக்கேன்.

அப்புறம் டெல்லிவாலாவுக்குப்போய் இரவுச் சாப்பாடு உண்டானு கேட்டோம்.  டெல்லிவாலா மாறி விட்டிருந்தது.  பழைய ஆட்கள் யாருமே இல்லை. இப்போது யாரோ வாங்கி இருக்காங்க போல! கடையே அழுது வடிந்ததோடு இல்லாமல் அடுக்கடுக்காய்க் காணப்படும் இனிப்பு வகையறாவே இல்லை. அங்கேயும் இரவில் சப்பாத்தியும், பூரியும் என்று சொல்லிவிட்டுத் தொட்டுக் கொள்ளக் குருமா தான் என்றார்கள்.  சரினு மேலே நடந்தோம். டாய்லாண்ட் இருந்த இடத்தில் வேறே ஏதோ இருக்கு.  ஃபன்ட் ஆஃபீஸ் கட்டிடம் மாறவே இல்லை.  மணி அடிக்கும் காவலாளி மாறி இருப்பார். :) ஃபன்ட் ஆஃபீஸ் தாண்டியதும் மேலாவணி மூலவீதி, மேலக்கோபுர வாசல் சேரும் இடம்.  அங்கே மேலாவணி மூலவீதி முக்கில் இருக்கும் பிள்ளையாரைப் பார்க்கணும்னு நினைச்சுட்டு மறந்துட்டேன்.  மேலாவணி மூலவீதியின் மறுபக்கம் போகாமல் நேரே மேலக் கோபுரத்துக்காக நடந்தோம்.  வழியில் நாகப்பட்டினம் மிட்டாய்க்கடை அம்பியின் வீடு வர அதைக் காட்டினேன்.  அதன் பக்கத்தில் இருந்த டி.ஏ.எஸ்.ரத்தினம் பட்டணம் பொடிக்கடை இப்போ இல்லை.  அதே போல் சென்ட்ரல் சினிமா பக்கம் அஜீஸ் சந்தனக்கடையும், அதன் எதிரே இருக்கும் வி.சூ.சுவாமிநாதன் புத்தகக் கடையும் கண்ணில் படவில்லை.

மேலக்கோபுர வாசலில் ஒரு ஹோட்டலில் காஃபி மட்டும் சாப்பிட்டுவிட்டு செருப்பு வைக்கும் இடம் அருகே இருந்த செக்யூரிடி செக்கப்பில் ஸ்கானிங், மற்ற சோதனைகளை முடித்துக் கொண்டு கோபுர வாசலுக்காக நடந்தோம். மேலக்கோபுர வாசலில் நுழையும்போதே காற்று தள்ளும். இப்போ அந்தக் காற்றுக்கென்ன வேலி! என்ன தடைனு புரியலை!  காற்றே இல்லை! ஏமாற்றமாக இருந்தது.  மேல ஆடி வீதி, வடக்கு ஆடி வீதி சுற்றிக் கொண்டு கல்யாண மண்டபம் வழியாகவோ, அல்லது பூக்கடைகள், வளையல் கடைகள் வழியாகவோ கிழக்கு சந்நிதிக்குப் போய் அம்மனையும் சுவாமியையும் பார்ப்பது என்றால் நாழியாகும் என்பதால் நான் குறுக்கே போய் தெற்கு கோபுர வாசல் வழியாகச் சீட்டையும் வாங்கிக் கொண்டு போயிடலாம்னு ஏற்கெவே முடிவு பண்ணி இருந்ததால்  அப்படியே போக ஆரம்பித்தோம். 

Saturday, April 11, 2015

அனைவருக்கும் விருப்பமான விருப்பன் திருநாள்!








விருப்பன் திருநாள்  சுட்டி இங்கே!



பனிரண்டு மாதங்களும் திருவிழாக்காணும் ரங்குவுக்கு இந்த விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் திருநாள் மிக முக்கியம்.  அதைக் குறித்த சுட்டி மேலே கொடுத்திருக்கேன்.  ஆன்மிகப் பயணம் பக்கத்தில் போய்ப் பார்க்கவும்.:) இப்போ இங்கே விருப்பன் திருநாள் ஆரம்பிச்சு இன்னிக்கு நம்ம ஊர் சுத்தி நம்பெருமாள் கொடியாலம் சேஷாத்ரி ஐயங்கார் கல்யாண மண்டபத்தில் மண்டகப்படி கண்டருளினார். (இந்தக் கல்யாண மண்டபத்தில் தான் நம்ம "எங்கள்" ஆசிரியர்கள் கல்யாணத்துக்கு வந்திருந்தனர்.) காலையிலே இருந்து போக எண்ணம்.

ஒரு வழியா சாயந்திரமாக் கிளம்பிப் போய்ப் பார்த்துட்டு வந்தோம்.  செல்லில் முடிந்தவரை படங்கள் எடுத்தேன்.  மார்பில் நீலக்கல் ஆபரணம் அணிந்திருக்கிறார்.  தாயார் இருப்பதாக ஐதீகமாம். கிரீடம் சூட்டிக் கொண்டு நின்ற திருக்கோலம். நன்றாக நிதானமாகப் பார்த்தோம்.நிறைய மண்டகப்படி போயிருக்கார் நம்ம ரங்கு.  ஆனாலும் இந்த கிரீடம் காரணமாகவோ என்னமோ தெரியலை, ஒல்லியாய் இளைச்சுப் போய்க் காட்சி அளித்தார். பார்த்தாலே பாவமா இருந்தது.  சாயங்காலம் ஆறுமணிக்கு  கற்பக விருக்ஷம் வாஹனம்னு நினைக்கிறேன். அலங்கரித்த பல்லக்கு வெளியே நிற்கிறது.  நான் நினைத்தபடி கூட்டம் அதிகம் இல்லை. நல்ல சுவாமி தரிசனம் ஆனதோடு துளசி, தீர்த்தம், சடாரிப் பிரசாதங்களும் கிடைத்தன.  அடுத்த சனிக்கிழமை தேர். பார்ப்போம் இந்தத் தேராவது பார்க்க முடியுமானு! தெரியலை! 

திருமோகூர் சக்கரத்தாழ்வாரிடம் பிரார்த்தியுங்கள்

திருமோகூர்

மேற்கண்ட சுட்டியில் கடைசியாக எழுதியது பார்க்கவும்.

இரண்டு பயணக்கட்டுரைகளை ஆரம்பிச்சுட்டுப்பாதியிலே நிறுத்தி இருக்கேன். ஒண்ணு பயணங்கள் முடிவதில்லை! அதிலே முக்கியமான கோயில்கள் பத்தி இன்னும் எழுதலை! ராமேஸ்வரம் போயிட்டுத் திரும்பி வரும் வழியிலே மதுரையிலே மீனாக்ஷியைப் பார்க்க வேண்டி வண்டியை நிறுத்தினோம்.  ஆனால் அப்போது இருந்த எக்கச்சக்கக் கூட்டத்தில் மீனாக்ஷியைப் பார்ப்பது கடினம் எனத் தோன்றியதால் போகவில்லை.  ரொம்பவே வருத்தமாக இருந்தது.  சரி, இப்போக் காளமேகப் பெருமாள் கோயிலுக்கு மறுபடி போவோமா?  ஏனோ தெரியவில்லை! படம் எடுக்கணும்னே தோணலை! காமிரா கொண்டு போயிருந்தும் படங்கள் எடுக்காமல் தான் இருந்தேன். அதற்கேற்றாற்போல் காமிராவை ஆட்டோவிலும் வைத்து விட்டேன். :(

பெருமாள் சந்நிதிக்கு இடப்புறமாய்த் தென் மேற்குப் பகுதியில் தாயார் சந்நிதியும் அதன் பின்னால் சக்கரத்தாழ்வார் சந்நிதியும் காணப்படுகிறது.  தாயார் மோகனவல்லிப் படிதாண்டாப் பத்தினி என்பதை ஏற்கெனவே பார்த்தோம்.  அங்கே தரிசனம் முடித்த பின்னர் பின்னாலுள்ள சக்கரத்தாழ்வார் சந்நிதிக்குச் சென்றோம்.  மஹாவிஷ்ணுவின் ஐந்து படைக்கலன்களில் முதன்மையானது சக்கரமே! சக்கரத்தையும் ஒரு ஆழ்வாராகவே கருதுகின்றனர்.  திருவாழி ஆழ்வான் என அழைக்கப்படும் சுதர்சனம் பெருமாளை விட்டுப் பிரிவதே இல்லை.

திருமோகூர் க்கான பட முடிவு

படம் நன்றி தினமலர்

இந்தச் சக்கரத்தாழ்வார் மிக விசேஷமானவர். மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய 48 அதிதேவதைகள் பொறிக்கப்பட்டுள்ளன்.  உற்சவர் சிலையிலோ ஆறு வட்டங்களுக்குள்ளாக 154 எழுத்துகள் பொறித்திருக்க, 48 தேவதைகள் சுற்றிலும் இருக்க பதினாறு திருக்கரங்களிலும் பதினாறு விதமான படைக்கலன்கள் ஏந்தி முக்கண்ணனாகக் காட்சி தருகிறார்.  திருமுடி அக்னிகிரீடத்துடன் காட்சி அளிக்கிறது. இதோ, ஓடி வந்தேன் என ஓடி வரும் நிலையில் காட்சி தருகிறார். சுதர்சனச் சக்கரம் எழுதினால் பின்னால் நரசிம்மர் வர வேண்டும். அதன்படியே இங்கேயும் பின்னால் யோக நரசிம்மர் நான்கு விதமான சக்ராயுதங்களை ஏந்திய வண்ணம் கால்களை மடக்கி யோக நிலையில் காட்சி அளிக்கிறார்.

இவரை வேண்டினால் எல்லாக் காரியங்களும் பலிதமாகும் என்பது ஐதீகம்.  ஆறு முறைகள் அல்லது பனிரண்டு முறைகள் வலம் வந்தால் மரணபயம், திருமணப் பேறு, குழந்தைப்பேறு, எதிரிகளுக்கு அஞ்சாமை, தொழிலில் வெற்றி ஆகியன ஏற்படும் என்பது மக்கள் நம்பிக்கை.  சக்கரத்தாழ்வாரைப் பிரார்த்தித்ததும் ஆண்டாள் சந்நிதியில் ஆண்டாளையும் வணங்கிப் பின்னர் வெளியே வந்து ஆட்டோவைத் தேடிக் கண்டு பிடித்து மதுரை செல்லும் பேருந்து நிற்குமிடத்திற்கு விடச் சொன்னோம்.  ஆட்டோ ஓட்டுநரும் அப்படியே செய்தார்.  மதுரை செல்லும் பேருந்தும் வந்தது.  ஏறிக் கொண்டு பெரியார் பேருந்து நிலையத்திற்குச் சீட்டு வாங்கினோம்.

ஆனால் நாங்கள் போகவேண்டிய இடம் தானப்ப முதலி அக்ரஹாரத்தில் உள்ள கதிர் பாலஸ் என்னும் ஹோட்டல். அதைத் தான் இணையத்தில் தேடிக் கண்டு பிடித்திருந்தேன். நக்ஷத்திர அந்தஸ்து கொடுத்திருந்தனர்.  ஆனாலும் அறை வாடகை ஆயிரத்திற்குள் (ஏசி இல்லாமல்) இருந்தது.  ஆகவே அதைத் தேர்ந்தெடுத்திருந்தேன். அது எவ்வளவு தப்பு என்பது போனபின்பு தான் புரிந்தது. :(