எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, February 29, 2016

தக்ஷிணேஸ்வரத்துக்குப் போகலாமா?

dakshineswar க்கான பட முடிவு

கங்கையின் கிளை நதியான ஹூக்ளி நதியின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள தக்ஷிணேஸ்வரத்தில் தான் காளி கோயில் உள்ளது. இந்தியாவின் கிழக்குப் பகுதி முழுவதுமே கலாசார ஒற்றுமை ஓரளவு இருக்கிறது. ஆகவே இங்கும் கோயில்கள் மதியம் பனிரண்டு, பனிரண்டரைக்கு மூடிப் பின்னர் மாலை நாலு, நாலரைக்குத் தான் திறக்கிறார்கள். ஆகவே அதற்குள்ளாகக் கோயிலுக்குப் போய்ப் பார்க்க வேண்டும்! தக்ஷிணேஸ்வரம் என்பது நாங்கள் தங்கி இருந்த கல்கத்தா பழைய நகரத்திலிருந்து சுமார் ஒரு மணி நேரப் பயணத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் பயண நேரம் ஆங்காங்கே காத்திருத்தலையும் சேர்த்துச் சுமார் இரண்டு, இரண்டரை மணி ஆகிவிடுகிறது. அதிலும் எங்கள் ஓட்டுநர் எப்போதுமே கோபமாக இருந்து கொண்டிருப்பதால் தெரியாத விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும் இயலவில்லை.  எங்கே முன்னால் போனால் சௌகரியமாக இருக்கும் என்பதை அவரால் சொல்ல முடியவில்லை. ஓட்டலில் கோயில்கள் செல்வதைப் பனிரண்டு மணிக்கு முன்னர் வைத்துக் கொள்ளச் சொல்லி இருந்தார்கள்.

தக்ஷிணேஸ்வரத்திலிருந்து சிறிது தூரத்தில் சின்னமஸ்தா தேவியின் ஆலயமும் இருந்ததை நான் ஏற்கெனவே கேள்விப் பட்டிருந்தபடியால் அங்கேயும் போக விரும்பினேன். ஆனால் இப்போதோ, தக்ஷிணேஸ்வரமே குறிப்பிட்ட நேரத்துக்குள் போக முடியுமானு சந்தேகம். முதலில் தக்ஷிணேஸ்வரம் கோயிலின் பின்னணி குறித்துப் பார்த்துடுவோம்.

ராணி ரசோமணி என்பவரால் கட்டப்பட்டது இந்தக் கோயில். வங்காளியில் ரஷ்மோனி என்கிறார்கள். இவர் ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டு பல சேவைகள், திருப்பணிகள் செய்திருப்பதாகச் சொல்கின்றனர். 1847 ஆம் ஆண்டில் ராணி ரசோமணி காசிக்குச் செல்லத் தீர்மானித்தார்.  அங்கே அன்னபூரணிக்கும், காசி விசாலாட்சிக்கும் சேவை செய்யத் தீர்மானித்தார்.  அந்தக் கால கட்டத்தில் சாலைப்போக்குவரத்தை விடவும் நீர் வழிப் போக்குவரத்தே பிரதானமாகவும் பிரபலமாகவும் இருந்து வந்தது. ஆகவே ராணி காசி யாத்திரை செய்ய வேண்டி சுமார் 24 படகுகள் தயார் செய்யப்பட்டன. அவருடன் கூடப் பயணம் செய்பவர்களாக உறவினர்களில் சிலர், வேலை ஆட்கள், சமையல்காரர்கள், சமையல் பண்டங்கள், பாத்திரங்கள் போன்ற அனைத்தும் தயார் செய்யப்பட்டன. ஆயிற்று! நாளை ராணி கிளம்ப வேண்டும். முதல்நாள் இரவு படுத்தார் ராணி. திடீர் என அவர் முன்னே ஓர் பேரொளி தோன்றியது! அந்த ஒளியில் ஆஹா! இது என்ன! அன்னை பராசக்தி! காளி ரூபமாகக் காட்சி அளிக்கிறாள்! இது கனவா! இல்லை நனவா? ராணி ஆச்சரியத்தில் மூழ்கினார்.

dakshineswar க்கான பட முடிவு

அதோடு மட்டுமா? அன்னை ஏதோ சொல்கிறாளே! அது என்ன? கவனித்துக் கேட்டார் ரசோமணி!

"ரசோமணி! நீ காசிக்கெல்லாம் செல்லவேண்டாம்! இந்த கங்கைக்கரையிலேயே என்னைப் போன்றதொரு விக்ரஹத்தை ஸ்தாபிதம் செய்து கோயில் கட்டி வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்!  நான் என்னை அங்கே வெளிப்படுத்திக் கொண்டு குடி இருந்து வருவேன். அங்கு நீ ஏற்பாடு செய்யும் வழிபாடுகளையும் ஏற்றுக் கொள்வேன்!"

இதைக் கேட்ட ரசோமணிக்கு ஆச்சரியம் அதிகம் ஆனது!  தான் கண்ட கனவை நனவாக்க முயன்ற ராணி தக்ஷிணேஸ்வரம் கிராமத்தில்  ஹூக்ளி நதிக்கரையில் 20 ஏக்கர் நிலத்தை வாங்கினாள்.  கோயில் கட்ட ஆரம்பித்தாள். 1847 இல் ஆரம்பித்த வேலைகள் 1855 ஆம் ஆண்டில் முடிவடைந்தது.  அந்த இடம் ஒரு ஆங்கிலேயரிடம் இருந்தது. அதற்கு முன்னால் அதன் ஒரு பகுதி முஸ்லிம்களின் இடுகாடாக இருந்து வந்திருக்கிறது. அதன் அமைப்பு ஒரு ஆமையைப் போல் காணப்படவே இது சக்தி வழிபாடு செய்ய ஏற்ற இடம் என முடிவு செய்யப்பட்டது.  எட்டு வருடங்களும் 90,000 ரூபாய்களும் செலவிடப்பட்டன. முடிவில் 1855 ஆம் வருடம் மே மாதம் 31 ஆம் தேதியன்று காளியின் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அம்பிகையின் திருநாமம் ஜகதீச்வரி மஹாகாளி எனச் சூட்டப்பட்டது.  ராம்குமார் சட்டோபாத்யாயா என்பவர் இதன் தலைமைப் பூசாரியாகப் பொறுப்பேற்றார். இவருடைய இளைய சகோதரரே  கதாதரர் என அழைக்கப்பட்டுப் பின்னாட்களில் பரமஹம்சர் எனப் பெயர் பெற்ற பகவான் ஶ்ரீ ராமகிருஷ்ணர் ஆவார்.

மஹாப் பிரதிஷ்டை செய்த நாளில் இந்தியா முழுவதும் இருந்து ஒரு லக்ஷத்துக்கும் மேல் அந்தணர்கள் அழைக்கப்பட்டுக் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மறு வருடமே ராம்குமார் சட்டோபாத்யாயா இறந்து போக கதாதரர் பொறுப்பேற்றார். அவர் மனைவி சாரதையும் கோயிலின் தென்பாகத்தில் உள்ள சங்கீத அறையில் தங்கிச் சேவைகள் செய்தார். அங்கே இப்போது சாரதைக்கு எனத் தனி சந்நிதி உருவாக்கப்பட்டுள்ளது.  அப்போதில் இருந்து சுமார் 30 வருடங்கள் கதாதரர் என்னும் ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் இந்தக் கோயிலின் காளிக்கு வழிபாடுகள் செய்து வந்ததோடு கோயிலையும் பிரபலம் அடையச் செய்தார்.  1861 ஆம் ஆண்டில் மிகவும் மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட ராணி ரசோமணி தினாஜ்புத் என்னும் ஊரில் தான் வாங்கிய சொத்துக்கள் எல்லாவற்றையும் இந்தக் கோயிலின் நிர்வாகத்திற்கென ஓர் அறக்கட்டளை ஏற்படுத்தி வைத்தாள். தன்னுடைய இந்த வேலைகளை முடிக்க அவளுக்கு ஃபெப்ரவரி மாதம் 18 தேதி ஆனது. இதற்கெனக் காத்திருந்தாற்போல் மறுநாளே ராணி மரணம் அடைந்தாள். தினாஜ்புத் என்னும் ஊர் தற்சமயம் வங்காள தேசத்தில் உள்ளது.

படங்களுக்கு நன்றி கூகிளார்--விக்கிபீடியா!

Friday, February 26, 2016

கடினமான கல்கத்தா வாழ்க்கை!

அங்கிருந்த வரவேற்பாளரிடம் தங்க அறை தேவை என்றதும், எல்லா விபரங்களையும் கேட்டுக் கொண்டு இப்போ எங்கே தங்கி இருக்கீங்க என்றார்கள். நாங்கள் விபரம் சொன்னதும் சரினு அறை குறித்த தகவல்களை எல்லாம் சொல்லிட்டு, காலை ஆகாரம் அறை வாடகையோடு சேர்ந்தது என்றும் சொல்லிட்டு எத்தனை நாட்கள் வேண்டும் என்றனர். நாங்கள் ஞாயிறு மதியம் 12 மணிக்குக் கிளம்பிடுவோம் என்றதும் ஒத்துக் கொண்டு நல்லவேளையாகக் கீழேயே அறை காலி இருந்ததால் அதை எங்களுக்கு ஒதுக்கினார்கள். மேலே அறை கொடுத்திருந்தால் லிஃப்ட் இல்லை; படிகளில் ஏறணும்! :( பின்னர் முன்பணம் கட்டியதும் அறைச்சாவியைக் கொடுத்ததும், அறையைத் திறந்து பார்த்துவிட்டுச் சாமான்களை எடுத்துக் கொண்டு வருகிறோம் எனச் சொல்லிச் சாவியை மீண்டும் அவர்களிடமே கொடுத்தோம். வெளியே வந்தால் சற்றுத் தொலைவில் ஒரு ஆட்டோ நின்று கொண்டிருந்தது. அங்கே போய் நாங்கள் தங்கி இருந்த இடத்திலிருந்து சாமான்களை எடுத்துக் கொண்டு மீண்டும் இங்கே கொண்டு வந்து விட வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். முதலில் 200 ரூபாய் கேட்ட அவர் பின்னர் பேரம் பேசியதில் 150 ரூக்கு ஒத்துக் கொண்டார். அதுவும் அதிகம் தான். ஏனெனில் இங்கே வரும்போது 30 ரூபாய் கொடுத்துத் தான் வந்திருக்கோம். 30+30 அறுபது ரூபாய் எனில் கூடப் பதினைந்து ரூபாய் வைத்துக் கொண்டாலும் 75 ரூக்குள் தான் ஆகும். ஆனால் அவங்க ஒத்துக்கலை. 100 ரூ வரை கூடக் கேட்டுட்டோம்.

பின்னர் வேறு வழியின்றி அந்த ஆட்டோவிலே பயணித்தோம். செல்லும் வழியை நாங்கள் தான் சொல்ல வேண்டி இருந்தது. அங்கே போய் மேலே நாங்கள் தங்கி இருந்த அறையிலிருந்து சாமான்களை எடுத்துக் கொண்டோம். விடுதிக்காப்பாளரைத் தேடினோம். கிடைக்கவில்லை. கீழே உள்ள காவலாளிகளைக் கேட்டோம். அவங்களுக்கும் தெரியலை. பின்னர் நாங்கள் கொஞ்சம் உரத்த குரலில் அந்தக் கிழவரை, "பாபா! பாபா!" என்று அழைத்தோம். அவர் வந்து சேர்ந்தார். நாங்கள் இரவு உணவுக்காகக் கூப்பிட்டோம் என்று நினைத்திருக்கிறார். ஏற்கெனவே அவர் கொடுத்த சகிக்க முடியாத ஆறிப்போன காஃபியில் மனம் நொந்து போயிருந்தோம். அதைக் கொடுத்த ஜாடியும் சரி, குடிக்கக் கொடுத்த பீங்கான் கப்புகளும் சரி! கழுவி எத்தனை நாட்கள் ஆயிருந்ததோ! அந்த மனிதரிடம் நாங்கள் அறையைக் காலி செய்யப் போவதைச் சொன்னதும் அவருக்குக் கோபம் வந்தது. ஒரு நாள் வாடகை ஆயிரம் ரூபாயும்  காஃபிக்கு 75 ரூபாயும் கொடுத்துட்டுத் தான் போகணும் என்று பிடிவாதம் பிடித்தார்.  3 மணிக்கு அந்த அறைக்குள் நுழைந்திருக்கோம். இப்போ மணி ஐந்தரை! மூன்றரைக்கு வெளியே போய் மாற்று அறை பார்க்கக் கிளம்பிட்டோம். மொத்தம் அங்கே இருந்ததே அரை மணியிலிருந்து முக்கால் மணிக்குள் தான்! இதுக்கு ஆயிரம் ரூபாயா என்றால் அந்த ஆள் மசியவில்லை.

பலத்த வாக்குவாதங்களுக்குப் பின்னர் ஆயிரத்து 75 ரூ தண்டம் அழுதுட்டுக் கீழே வந்து ஆட்டோவில் ஏறி தாரா மஹல் வந்து சேர்ந்தோம். வரவேற்பில் சாவியைப் பெற்றுக் கொண்டு அறைக்குப் போய்க் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டோம். கல்கத்தா நகரம் இன்னும் என்னவெல்லாம் அனுபவங்களைத் தரப் போகிறதோ என்னும் எண்ணம் மனதில் மேலோங்கியது. அறையிலேயே உணவு கொண்டு வந்து கொடுப்பார்கள் என்றும் நம் தேவையைச் சொன்னால் போதும் என்றும் ஏற்கெனவே சொல்லி இருந்தார்கள். அன்று இருந்த மனோநிலைக்கு எங்கும் செல்ல மனம் இல்லை. ஆகவே ஏழு மணி போல் நாலு இட்லி தேவை என்று சொல்லிவிட்டு அறையிலேயே தங்கி விட்டோம். பின்னர் வரவேற்புக்குச் சென்று மறுநாள் சுற்றிப் பார்க்க வண்டி ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டோம். அவங்களும் ஒரு வண்டியை ஏற்பாடு செய்தாங்க. காலை எட்டு மணிக்கெல்லாம் வரச் சொல்லிக் கேட்டுக் கொண்டோம். எங்கள் எதிரிலேயே ஹோட்டல் ஊழியர்களும் காலை எட்டுக்கு வரும்படி கேட்டுக் கொண்டார்கள்.

அன்றிரவு நல்லபடியாகக் கழிந்ததும் மறுநாள் காலை ஐந்தரைக்கெல்லாம் எழுந்து கீசர் போட்டுட்டாங்களா என்று சோதித்துவிட்டுக் காஃபி வேணும்னு வரவேற்பில் சொல்லிட்டுக் குளித்து முடித்துத் தயார் ஆனோம். ஏழரைக்கெல்லாம் காலை உணவு தயாராகிடும்னு சொன்னதால் உண்ணும் இடம் எங்கே என்று கேட்டுக் கொண்டு சென்றோம். ப்ரெட் சான்ட்விச், ஜூஸ், ப்ரெட் டோஸ்ட், பட்டர், ஜாம், கெச்சப், இட்லி, பூரி, பொங்கல், சாம்பார், சட்னி, சனா மசாலா போன்றவை இருந்தன. நல்லவேளையாக அசைவம் எதுவும் இல்லை. நான் ஒரு சான்ட்விச்சும் ஒரு இட்லியும், கொஞ்சம் போல் பொங்கலும் எடுத்துக் கொண்டேன். ரங்க்ஸும் பூரி, இட்லி சாப்பிட்டார். காஃபியும் கொடுத்தாங்க. குடித்து முடித்து அறைக்கு வந்து வண்டிக்காகக் காத்திருந்தோம். எட்டரை மணி ஆச்சு வண்டியே வரவில்லை. வரவேற்பில் போய்ச் சொன்னால் அவங்க தொலைபேசிக் கேட்டால் மறுபக்கம் சரியான மறுமொழி இல்லை போலும்! ஏதோ சொல்லிச் சமாளிச்சாங்க. அப்படியே ஒன்பதரை வரை போய்விட்டது. வண்டியே வரவில்லை.

மீண்டும் மீண்டும் தொலைபேசிக் கேட்டதும் ஒருவழியாகப் பத்து மணிக்கு வண்டி வந்தது. வரும்போதே அந்த ஓட்டுநர் தன்னை அடிக்கடி தொலைபேசி அழைத்ததுக்கு ஓட்டல்காரர்களிடம் கோபமாகப் பேசினார். சரிதான்! இன்னிக்குப் பொழுது இப்படியா என நினைத்துக் கொண்டோம். வாய் பேசாமல் வண்டியில் ஏறிக் கொண்டோம். தக்ஷிணேஸ்வர் காளி கோயிலுக்கு முதலில் விடச் சொன்னோம். கோபமாக வண்டியைக் கிளப்பினார் ஓட்டுநர்.

தக்ஷிணேஸ்வரம் க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி விக்கிபீடியா!

Tuesday, February 23, 2016

ஓ, கல்கத்தா, ஓ, கல்கத்தா, ஓ, கல்கத்தா!

அன்று வெளியே எங்கும் செல்லவில்லை. மறுநாள் அங்குலிலேயே இருக்கும் ஜகந்நாதர் கோயிலுக்கு அழைத்துச் சென்றார் நாத்தனார் பையர். குடும்ப சமேதராகக் கிளம்பினோம். அங்குல் ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டுப் பின்னர் கோயிலுக்குச் சென்றோம். நாங்கள் சென்ற சமயம் மாலை ஆரத்தி எடுக்கும் நேரமாக இருந்தது. கோயிலில் கர்ப்பகிரஹம் செல்லப் பல படிகள் மேலே ஏறணும்.

Jagannath Temple, Angul

படத்துக்கு நன்றி விக்கிபீடியா!

கிட்டத்தட்ட புரி ஜகந்நாதர் போலவே இங்கும் பலராமர், சுபத்ராவோடு இருக்கார் ஜகந்நாதர். அதே மரத்தாலான பிரதிமைகள்/விக்ரஹங்கள். ஜகந்நாதர் குடியிருக்கும் கோயில்களில் புரிக்கு அடுத்தபடியாக இதுதான் பெரியது என்று சொல்கின்றனர். ஆனால் புரி அளவுக்குக் கூட்டமெல்லாம் இல்லை. நின்று, நிதானமாக ஆரத்தி பார்த்தோம். பக்கத்திலேயே மா புதி தாகுரானி கோயில் என்னும் கோயில் இருக்கிறது. ஆனால் நாங்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டோம். மறுநாள் இந்த ஜின்டால் டவுன்ஷிப்பில் இருந்து சாலை வழியாக ஒரு மணி நேரப் பயணத்தில் இருக்கும் பூஷணம் ஸ்டீல்ஸ் டவுன்ஷிப்பில் இருக்கும் நாத்தனார் பெண்ணைப்  பார்க்கச் சென்றோம். அன்றிரவு அங்கே தங்கி மறுநாள் காலை எழுந்து கல்கத்தா பயணம். ஒடிஷா வரை சென்றதால் கல்கத்தாவையும் பார்த்துடலாம்னு ரங்க்ஸ் திட்டம் போட்டிருந்தார்.

மறுநாள் வெள்ளிக்கிழமை காலை நாத்தனார் பெண் வீட்டில் இருந்து ஒரு மணி நேரம் பயணித்து புவனேஸ்வர் விமான நிலையம் வந்தோம். அங்கிருந்து காலை ஒன்பதரைக்குக் கல்கத்தாவுக்கு விமானம். பாதுகாப்புச் சோதனைகள் முடிந்து விமானத்தில் ஏறிக் கல்கத்தாவுக்குப் பதினோரு மணிக்குப் போய்ச் சேர்ந்தாச்சு. கல்கத்தாவில் மழை பெய்திருந்தது.   நண்பர் ஒருவர் எங்களை வரவேற்க வெளியே காத்திருப்பதாகவும் முன் பதிவு செய்திருக்கும் விடுதிக்கு அவர் அழைத்துச் செல்வார் என்றும் செய்தி வந்திருந்தது. வெளியே வந்து பெட்டிகளை எடுத்துக் கொண்டு முன்பின் பார்த்திராத நண்பரையும் கண்டு பிடித்தோம். நண்பர் எங்களை ஒரு இடத்தில் உட்கார வைத்துவிட்டு முன் பணம் செலுத்திப் பயணம் செய்யும் டாக்சி பதிவுக்குச் சென்றார். மிக நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட வரிசையில் காத்திருந்து ஒருவழியாகப் பனிரண்டரை மணிக்கு டாக்சிக்குப் பணம் கட்டி ரசீது பெற்று வந்து எங்களை அழைத்துக் கொண்டு டாக்சியைக் கண்டு பிடித்து அதில் ஏற்றி அவரும் கூட வந்தார்.

வழியெங்கும் ஒரே குப்பை! அழுக்கு! அசுத்தம்! நடைமேடைகள் எல்லாம் குடிசைகள் கட்டி ஏழைமக்கள் ஆக்கிரமிப்பு! அப்போது இருந்த மனோநிலையிலும் காமிரா சூட்கேஸுக்குள் இருந்த காரணத்தாலும் படம் எடுக்கலை! அசுத்தம் என்றால் அவ்வளவு அசுத்தம்! கிழிந்த சுவரொட்டிகள்! ப்ளாஸ்டிக் தோரணங்கள்! எங்கு பார்த்தாலும் தீதியின் ஃப்ளெக்ஸ் பானர்கள்! ஒடிஷாவிலோ, குஜராத்திலோ, மற்ற மாநிலங்களிலோ முதல் அமைச்சரின் படங்களோ கட்சிக் கொடிகளோ கண்டதில்லை. உத்தரப்ரதேசத்தில் மாயாவதி நிர்மாணித்த யானைகள் உள்ளன! ஆனால் இங்கோ எங்கெங்கும் தீதிமயம்! :) இவ்வளவு மோசமான நகரத்தைப் பார்க்கவே முடியாது என எண்ணிக் கொண்டேன்.

பனிரண்டரை மணிக்கு ஆரம்பித்த பயணம் போய்க்கொண்டே இருந்தது. பத்து நிமிடம் பயணம் என்றால் அடுத்த பத்து நிமிடம் சிக்னலில் காத்திருப்பு! இப்படியே பயணித்து நாங்கள் போய்ச் சேர வேண்டிய இடத்துக்குக் கிட்டத்தட்ட மூன்று மணிக்குச் சென்றோம்.  துரதிர்ஷ்டவசமாக அந்த விடுதி அறை சில, பல காரணங்களால் எங்கள் இருவருக்குமே பிடிக்கவில்லை என்பதால் காப்பாளரிடம் ஒன்றும் சொல்லாமல் சாமான்களை அப்போதைக்கு அங்கே வைத்துவிட்டு வெளியே கிளம்பினோம். தெருவுக்கு வந்துச் சற்றுத் தூரம் நடந்து ஆட்டோ ஒன்று பிடித்தோம். கல்கத்தாவில் ஆட்டோக்கள் குறிப்பிட்ட எல்லைகளுக்குள் தான் பயணிக்க வேண்டும். மும்பையிலும் அப்படித் தான். தாதர் தாண்டினால் ஆட்டோக்களில் பயணம் செய்ய முடியாது. நாங்கள் சென்ற ஆட்டோ ஓட்டி மிக நல்லவராக இருந்தார். நாங்கள் செல்ல வேண்டிய கோமள விலாஸுக்குச் சரியாக வண்டியை ஓட்டிக் கொண்டு சென்று நிறுத்திவிட்டு 30 ரூபாய் பெற்றுக் கொண்டு நேரம் ஆகாதென்றால் தானே திரும்பவும் இருந்து கூட்டிச் செல்வதாகச் சொன்னார். ஆனால் நாங்கள் போகச் சொல்லிவிட்டோம்.

பாலிகஞ்ச் பகுதியில் ராஷ்பிஹாரி அவென்யூவில் கோமள விலாஸ் ஓட்டல் இருக்கிறது. ராஷ்பிஹாரி அவென்யூவில் தெருவின் இருபக்க நடைமேடைகளும் கடைகள், கடைகள், கடைகள்! யானை வேணுமானாலும் வரவழைத்துத் தருவாங்க போல! இந்தக் கடைகள் இருபக்கங்களிலும் அடைத்துக் கொண்டதில் கோமளவிலாசின் நுழைவாயிலே மறைந்துவிட்டது! இப்படித் தான் மற்றக் கட்டிடங்களுக்கும் காணப்பட்டது. அவங்கல்லாம் பொறுமை ஜாஸ்தி போலனு நினைத்துக் கொண்டேன். கல்கத்தா போகிறதா முடிவானதுமே கோமள விலாஸைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அறை முன்பதிவு செய்ய முயற்சித்தும் அவங்க ஒத்துக்கலை. கடிதம் மூலம் தொடர்பு வேண்டும். எழுத்து மூலம் இருந்தால் தான் ஒத்துப்போம்னு சொல்லிட்டாங்க. கடிதங்கள் சரியாகப் போய்ச் சேருவதில்லை. :( ஆகவே முன்பதிவு செய்ய முடியவில்லை. என்றாலும் ஓர் அசட்டு தைரியத்துடன் அங்கே போய் அறை இருக்கானு கேட்டோம். அங்கிருந்தவர் கிண்டலாக இருக்கு, ஆனால் அடுத்த மாதம் வரை காத்திருக்கணும்னு கேலி செய்தார். பல்லைக் கடித்துக் கொண்டு வேறு வழி தெரியாமல் எதிரேயே உள்ள கோமள விலாஸின் ஓட்டலுக்குச் சென்று ஏதேனும் சாப்பிட முடிவு செய்தோம்.

அங்கே சென்று இட்லியும், தோசையும் வரவழைத்துச் சாப்பிட்டோம். உணவு தரமாகவே இருந்தது. காஃபி சாப்பிட்டதும் எங்களுக்கு உணவு பரிமாறிய ஊழியரிடம் அக்கம்பக்கம் ஏதேனும் ஓட்டல் இருக்கா, தங்குமிடம் கிடைக்குமா என்று கேட்டோம். ஓட்டலை ஒட்டிய பக்கத்துத் தெருவில் போய்ப்பார்க்கும்படி அவர் சொன்னார். சாப்பிட்டு முடித்ததும் உலாக் கிளம்பினோம். பக்கத்துத் தெருவில் சென்று விசாரித்தோம். ஒருவர் அங்கிருந்து வலப்பக்கம் திரும்பும் தெருவில் தாரா மஹல் என்னும் ஓட்டல்/தங்குமிடம் இருப்பதாகவும் அங்கு சென்று விசாரிக்கும்படியும் சொன்னார். அதே போல் அங்கே சென்றோம். தெருவில் திரும்பியதுமே எதிர்சாரியில் 2.3 வீடுகள் தாண்டித் தாரா மஹல் தென்பட்டது. அங்கே சென்று வரவேற்பறையில் இருந்தவரிடம் அறை இருக்கா என்று கேட்டோம். எங்களைப் பார்த்தவர் எந்த ஊரிலிருந்து வரீங்கனு கேட்டார். நாங்க திருச்சி, ஶ்ரீரங்கம் என்று சொன்னோம். உடனே தமிழில் பேச ஆரம்பிச்சுட்டாங்க! 

Sunday, February 21, 2016

இந்தப் பச்சைக்கிளிக்கு ஒரு தென்னை ஓலை ஊஞ்சல்!

கிளி தெரிகிறதா. ஒரு கிளி ஓலையில் அமர்ந்த வண்ணம் பேச இன்னொன்று பன்னாடையில் அமர்ந்துள்ளது. கொஞ்சம் தொலைவில் இருக்கு மரம். முடிந்தவரை ஜூம் செய்தேன். என்றாலும் இவ்வளவு தான் வந்தது. 

எங்க குடியிருப்பு வளாகத்தை ஒட்டி இருக்கும் தோப்பு எங்கள் குடியிருப்புப் பகுதியின் ஜன்னல் வழியாகப் பார்க்க முடியும். அங்கே தினம் காலையும் மாலையும் கிளிகள் கொஞ்சும், மைனாக்கள் பேசும், குருவிகள் கீச்சிடும், செம்போத்துக்கள் பாடும்! காக்கைக் கரைசலை அதிகம் கேட்க முடியலை. இன்னொரு படுக்கை அறையின் அருகே இருக்கும் பால்கனியின் வெளியே ஒரு துத்தநாகத் தகடைப் பலகை போல் போட்டு அதில் தண்ணீரும், சாப்பாடும் வைக்கிறோம். இப்போத் தண்ணீர் வைப்பது இரண்டு முறை ஆகி விட்டது. எல்லாம் உட்கார்ந்து தண்ணீர் குடித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கும். சத்தம் போடாமல் எட்டிப் பார்க்கணும். இல்லைனா ஒரே ஓட்டம் தான். பறந்துடும்! 


மடிக்கணினியில் ஆன்டி வைரஸ் போடணும். ப்ராடக்ட் கீ கிடைக்காததால் தாமதம் ஆகிறது. ஆகையால் எல்லோருடைய பதிவுகளுக்கும் வர முடியலை. கணினியின் மூலம் வரலாம்னா அதிலே வைஃபைக்காகப் போட்ட சாஃப்ட்வேர் சரியா வேலை செய்யலை. சிக்னல் கிடைக்கலை. வேகம் 24 எம்பிக்கு மேல் போகலை. ஆகவே கணினியில் வேலை செய்ய முடியாமல் பொழுதைக் கழிக்கிறேன். :) கணினி மருத்துவர் அதிகம் மற்றத் தளங்களுக்க்குப் போகாதீங்கனு எச்சரிக்கை விடுத்திருக்கார். ஏற்கெனவே வைரஸ் தாக்கிப் படாத பாடு பட்டாச்சு! ஆகவே கொஞ்சம் கட்டுப்பாடுடன் இருக்கணுமே! 

Friday, February 19, 2016

தாத்தாவுக்கு நமஸ்காரங்கள்!

உ.வே.சா. க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி தினமணி தினசரி கூகிளார் வாயிலாக!

கீழே உள்ளவை உ.வே.சா.அவர்களின் நினைவு மஞ்சரியில் "மல்லரை வென்ற மாங்குடியார்" என்னும் கட்டுரையின் சில பகுதிகள்.  இன்று தமிழ்த்தாத்தாவின் பிறந்த நாள்.


அந்தப் பிராமணர் தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள ஐயம்பேட்டைக்கருகில் இருக்கும் மாங்குடியென்னும் ஊரினர். ஸ்மார்த்த பிராமணர்களுள் மழநாட்டுப் பிருகசரண வகுப்பைச் சார்ந்தவர். கைலாசையரென்பது அவர் பெயர். தஞ்சாவூரில் இருந்த ராஜபந்துக்களாகிய மகாராஷ்டிரர்கள் பக்கத்துக்கிராமங்களிலுள்ள தங்கள் நிலங்களைக் குத்தகைக்கு விட்டுவிடுவார்கள். அந்தக் குத்தகைதாரர்கள் வருஷந்தோறும் நெல்லைக் கொணர்ந்து அவர்களிடம் கொடுத்துவிடுவார்கள். சிலர் தாமே சுமந்து வந்து போட்டுவிட்டுச் செல்வார்கள். கைலாசையர் அத்தகைய குத்தகைதாரர்களுள் ஒருவர்.

அவர் இரண்டு கலம் நெல்லை ஒரு கோணியில் மூட்டையாகக் கட்டித் தம் தலையிற் சுமந்து கொண்டு வந்தவர்; அந்த வழியே செல்லுகையில் பெருங்கூட்டமொன்று இருப்பதைக் கண்டு அங்கே வந்தார். வளைவுக்குள்ளே மல்விளையாட்டு நடப்பது தெரிந்து வேடிக்கை பார்க்கும்பொருட்டு நின்றார்.

மிக்க பலமும் கட்டுமுடைய ஆஜானுபாகுவான அவருடைய உடம்பு இரும்பைப் போன்றிருந்தது. நெற்றியில் இருந்த திருநீறும் கழுத்திலிருந்த ருத்திராட்சமும் அவருடைய சிவபக்தியைப் புலப்படுத்தின. அவரும் அவருடைய வகுப்பினரும் சிறந்த சிவபக்தர்கள்; மூன்று காலத்தும் ஏகலிங்கார்ச்சனை செய்பவர்கள். கைலாசையருடைய வன்மை பொருந்திய உடலும் சிவசின்னங்களின் தோற்றமும் பார்ப்பவர்களுக்குப் பீமசேனனின் ஞாபகத்தை உண்டாக்கின. சிவபக்தியும் தேகபலமும் பொருந்தியவர்களிற் சிறந்தவனல்லவா அவன்??

கைலாசையர் தம் தலையிலிருந்த சுமையை ஒரு பொருளாக மதிக்கவே இல்லை. ஆதலால் அதை இறக்கிவைக்காமல் நின்றபடியே மற்போர் விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் தோளில் ஒரு பை தொங்கியது. அதில் ஐந்தாறு கவுளி வெற்றிலையும் கொட்டைப்பாக்கும் ஒரு பெரிய பாக்கு வெட்டியும் தேங்காயளவுக்குச் சுண்ணாம்புக் கரண்டகமும் வைத்திருந்தார். அந்த மல் விளையாட்டைப் பார்த்துக்கொண்டு நின்றபடியே அவர் தாம்பூலம் தரிக்கத் தொடங்கினார்.

அவர் நின்றபடியே பையிலிருந்து பாக்குவெட்டியை எடுத்துப் பாக்கைச் சீவிச் சீவி வாயில் போட்டுக்கொண்டார். பிறகு வெற்றிலையை எடுத்தார். சுண்ணாம்புக் கரண்டகத்தின் சங்கிலியிலுள்ள வளையத்தைச் சுண்டு விரலில் மாட்டிக் கொண்டார். அதிலிருந்து சுண்ணாம்பை எடுத்து வெற்றிலையில் தடவி ஒரே தடவையில் நான்கைந்து வெற்றிலைகளின் நரம்பைக் கிழித்து அப்படியே சுருட்டி வாயிலிட்டு மெல்லத் தொடங்கினார். தலையில் ஒரு சுமை இருப்பதை உணராதவரைப் போல அநாயாசமாக அவர் நின்று கொண்டிருந்தார். அருகில் இருந்தவர்கள் மல்யுத்தத்தைப் பார்ப்பதோடு இடையிடையே அவரையும் பார்த்து வியந்தனர்.

அரசரிடத்திலிருந்து வந்த சேவகன் அவரை அணுகினான்; “மகாராஜா உங்களை அழைக்கிறார்; பார்க்கவேண்டுமாம்.” என்றான்.

“மகாராஜாவா? என்னை ஏன் அழைக்கிறார்? ராஜ சமூகத்திற்கு வெறுங்கையோடு போகலாகாதே; நான் ஒன்றும் கொண்டுவரவில்லையே?” என்றார் அந்தப்பிராமணர்.

“நீங்கள் வாருங்கள். அதெல்லாம் வேண்டாம்.” என்று சேவகன் சொன்னான்.

“அப்படியானால் வருகிறேன்; இந்த மூட்டையை ஓரிடத்தில் இறக்கிவிட்டு வருகிறேன்.” என்று கூட்டத்தை விட்டு ஓரிடத்திற்குச் சென்றார். அரண்மனை வேலைக்காரர்கள் அவர் தலையிலிருந்த மூட்டையை இறக்க முயன்றார்கள். ஒருவராலும் முடியவில்லை. அவ்வந்தணர் சிரித்துக்கொண்டே அவர்களை நகரச் சொல்லிவிட்டுச் சிறிதே தலையை அசைத்தார். அந்த மூட்டை வில்லிலிருந்து வீசிய உண்டையைப் போலத் தரையில் பொத்தென்று விழுந்தது.

“சரி, வாருங்கள்; போகலாம்.” என்று கைலாசையர் அரசரிடம் சென்றார்.

அரசர்: நீர் எந்த ஊர்? எதற்காக இங்கே சுமையைச் சுமந்து கொண்டு நிற்கிறீர்?”

கைலாசையர்: நான் இருப்பது மாங்குடி. இந்த நெல்லை இந்த ஊரில் ஒரு கனவானிடம் கொடுப்பதற்காகச் சுமந்து வந்தேன். இங்கே ஏதோ மல் விளையாட்டு நடக்கிறதென்று சொன்னார்கள். கொஞ்சம் பார்த்து விட்டுப் போகலாமென்று நிற்கிறேன்.”

அரசர்: இந்த விளையாட்டில் உமக்கு அவ்வளவு சிரத்தை என்ன?

அந்தணர்: எங்களுக்கும் மல் விளையாட்டுத் தெரியும். யாரோ வடநாட்டான் வந்திருக்கிறானென்று சொன்னார்கள். அவன் எப்படி விளையாடுகிறானென்று பார்க்கலாமென்றுதான் நின்றேன்.

அரசர்: எப்படி இருக்கிறது விளையாட்டு?

அந்தணர்; என்னவோ நடக்கிறது! இந்த மனுஷ்யனை இவ்வளவு பேர்கள் கூடிக்கொண்டு பிரமாதப்படுத்துகிறார்களேயென்று எனக்கு ஒரு பக்கம் சிரிப்பு வருகிறது.

அரசர்: அந்த வீரன் பல தேசங்களுக்குச் சென்று பலபேரை ஜெயித்தவனென்பது உமக்குத் தெரியாதோ?

அந்தணர்: இவனா! எங்கள் ஊரிலுள்ள ஒரு பொடிப்பையனுக்கு இவன் ஈடு கொடுக்க மாட்டான். என்னவோ அதிர்ஷ்டம் அடித்திருக்கும்; சில இடங்களில் பலஹீனர்கள் அகப்பட்டிருப்பார்கள்; ஜயித்திருக்கலாம்.

அரசர்: அப்படியானால் இவனை ஜயிப்பது சுலபமென்றா எண்ணுகிறீர்?

அந்தணர்: ஜயிப்பதா? ஒரு நிமிஷத்தில் இவனைக் கியாகியாவென்று கத்தும்படி பண்ணிவிடலாமே.
அரசர்: நீர் மல்யுத்தம் செய்வீரா?

அந்தணர்: பேஷாகச் செய்வேன்.

அரசர்: இவனோடு இப்போது செய்ய முடியுமா?

அந்தணர்: மகாராஜா உத்தரவிட்டால் செய்யத் தயார்.

அரசர்: அதற்கு வேண்டிய உடுப்பு ஒன்றும் இல்லையே; சட்டை, சல்லடம், வஜ்ர முஷ்டி முதலியவை வேண்டாமா?

கைலாசையர் சிரித்தார்; “அவைகளெல்லாம் அநாவசியம். வேஷ்டியை வரிந்து கட்டிக்கொண்டு இவனுக்கு முன்னே நின்றால் அடுத்த நிமிஷமே இவன் மண்ணைக் கவ்விக்கொள்வதில் சந்தேகமில்லை.” என்றார்.

அரசர் அவ்வந்தணரோடு பேசிக்கொண்டிருந்தபோதே அவருடைய மனத்துள் ஒரு போராட்டம் நிகழ்ந்தது. வடநாட்டு வீரரை ஜயிப்பவரில்லையே என்று வருந்தியிருந்த அரசருக்குக் கைலாசையருடைய தோற்றமும் பேச்சும் ஒரு புதிய நம்பிக்கையை உண்டாக்கின. தாம் மல்யுத்தம் செய்வதாக அவர் கூறவே அரசருக்கு அந்நம்பிக்கை உறுதி பெற்றது. ஆயினும், ‘இவர் உண்மையில் ஜயிப்பாரா?’ என்ற சந்தேகமும், ‘தோல்வியுற்று ஏதேனும் துன்பத்தை அடைந்தால் சாதுவான ஒரு பிராமணரைக் கஷ்டப் படுத்தின அபவாதமும் வந்தால் என்ன செய்வது!’ என்ற அச்சமும் இடையிடையே அரசருக்கு எழுந்தன.

அரசர்: அவன் நல்ல மாமிச போஜனம் செய்பவன்; பலசாலி; பல நாள் பழக்கமுள்ளவன். அவனை ஜயிப்பதாக நீர் கூறுகின்றீரே; உம்மிடம் என்ன பலம் இருக்கிறது?”

அந்தணர்: நான் சுத்தமான உணவுகளை உட்கொள்ளுபவன். எனக்கும் மல்வித்தையில் அப்பியாசம் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலான பலம் ஒன்று என்னிடம் இருக்கிறது.

“என்ன அது?” என்று அரசர் மிகவும் ஆவலோடு கேட்டார்.

“நாங்களெல்லாம் ஈசுவர ஆராதனம் செய்பவர்கள்; ஈசுவரனுக்கு நிவேதனம் செய்த அன்னத்தையே சாப்பிடுகிறவர்கள். எங்களுடைய உடம்புக்கு அந்தப்பிரசாதம் பலத்தை உண்டாக்குகின்றது. பரமேசுவரனது கிருபையாகிய பலம் எங்களுக்கு உண்டு. அதைக் காட்டிலும் வேறு பலம் என்ன வேண்டும்?”

அரசருக்குக் கண்களில் நீர் துளித்தது. மகாராஷ்டிர அரசர்கள் மிக்க பலசாலிகள்; மிகவும் சிறந்த சிவ பக்தர்கள். ஆதலின் பலசாலிகளிடத்திலும் சிவபக்தர்களிடத்திலும் அவர்களுக்கு அபிமானம் இருந்து வந்தது. இருவகை இயல்பும் ஒருங்கே காணப்படுமானால் அவர்களுடைய அன்பு அங்கே பதிவதற்கும் ஐயமுண்டோ?

“வாஸ்தவம். நீங்கள் அந்தப் பலத்தை உடையவர்களானால் ஜயிப்பீர்கள். அடுத்தபடியாக நீங்கள் அவனோடு போர் புரிந்து இந்த ஸமஸ்தானத்தின் புகழை நிலைநாட்டுங்கள்.” என்று அரசர் சொன்னார். அவ்வந்தணர் பால் அவருக்கு அதிக மதிப்பு உண்டாகிவிட்டது.

கைலாசையருக்கும் வடநாட்டு மல்லருக்கும் போராட்டம் நடைபெறுவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் உடனே செய்யப்பட்டன. கைலாசையர் விளையாட்டு வாடி(வளைவு)க்குள் சென்றார். மல்லரோ பலரை வென்றோமென்ற இறுமாப்பினாலும், வருபவர் ஒரு பிராமணரென்ற அசட்டையினாலும் துள்ளிக் குதித்தார். உடுப்போ, ஆயுதமோ ஒன்றும் இல்லாமல் அவர் வருவதைப் பார்த்தபோது மல்லருக்கு அவரிடம் அலக்ஷிய புத்திதான் ஏற்பட்டது. தம் மீசையை முறுக்கிக் கொண்டார்; தோளைத் தட்டினார்; துடையையும் தட்டினார்.

கைலாசையர் அங்கே சென்று தம் வஸ்திரத்தின் முன் பகுதியை அப்படியே எடுத்து முழங்காலுக்கு மேல் நிற்கும்படி பின்பக்கத்தில் இறுகச் செருகிக் கொண்டார். மேல் வஸ்திரம் கையைத் தடுக்காதவாறு மார்பின் இரண்டுபக்கமும் குறுக்கே செல்லும்படி போர்த்து முதுகில் முடிந்து கொண்டார். இந்தக் கோலத்தில் வடநாட்டு வீரர் முன்பாக அமைதியோடு நின்றார்.

மல்லர் ஆரவாரம் செய்து கொண்டு வேகமாக ஓடி வந்து வஜ்ரமுஷ்டியணிந்த தம் வலைக்கையை அவருடைய இடப்பக்கத்தில் குத்தினார். அந்தக் குத்துத் தம்மேல் படுவதற்கு முன் அக்கையை அப்படியே தம் இடக்கையால் கைலாசையர் பற்றிக்கொண்டார். மல்லர் வலப்பக்க விலாவில் இடக்கையைக் கொடுத்து அவரைத் தள்ள முயன்று கையை நீட்டினார். அந்தக் கையைக் கைலாசையர் தம் கட்கத்தில் இறுகச் சிக்க வைத்துக்கொண்டார். இரண்டு கைகளையும் அவர் பற்றிக்கொள்ளவே மல்லர் தம் வலக்கையை இழுத்து மீட்டும் குத்த எண்ணினார். கை வந்தால் தானே மேலே போராடலாம்?
கைகளை அவரால் இழுக்க முடியவில்லை. கைலாசயர் வரவர அதிகமாக இறுக்கலானார். கைகள் நசுக்குண்டன. மல்லருக்கோ கையை எடுக்க முடியாததோடு வரவர வேதனையும் அதிகமாகிவிட்டது; வலி பொறுக்க முடியவில்லை. தம்மால் ஆனவரையும் திமிறிப் பார்த்தார். ஒன்றும் பலிக்கவில்லை.

“இன்றோடு நம்முடைய அகம்பாவம் ஒழிந்து போம்” என்ற தீர்மானத்துக்கு வந்துவிட்டார்.

அழாக்குறையாக அந்தணருடைய முகத்தைப் பார்த்தார்.

“ஏன், சும்மா நிற்கிறீர்? விளையாடுகிறதுதானே?” என்று கைலாசையர் கேட்டார்.

மல்லர் என்ன சொல்வார்! தாழ்ந்த குரலில், “என்னை விட்டுவிடுங்கள்.” என்றார்.

“ஏன்? விளையாடவில்லையோ?” என்று கைலாசையர் கேட்டார்.

மல்லர்: உங்கள் பெருமை தெரியாமல் அகப்பட்டுக்கொண்டேன். என்னை விட்டுவிடுங்கள்.

அந்தணர்: நீர் தோல்வியுற்றதாக ஒப்புக்கொள்வீரா?

மல்லர்: அதற்கென்ன தடை? அப்படியே ஒப்புக்கொள்வேன்; ஒப்புக்கொண்டு விட்டேன்.; என்னை இப்போது விட்டுவிட்டால் போதும்

அந்தணர்: இப்போது கையை விட்டுவிடுகிறேன். மறுபடியும் விளையாடலாமா?

மல்லர்: முடியவே முடியாது. உங்களோடு விளையாடுவதாக இனிமேல் கனவிலும் நினைக்க மாட்டேன்.

அந்தணர்: மகாராஜாவிடம் உம்முடைய தோல்வியை ஒப்புக்கொள்வீரா?

மல்லர்: அப்படியே ஒப்புக் கொள்ளுகிறேன்.

அவ்வளவு நாட்களாகப் பலரை வென்ற மல்லர் அந்தப் பிராமணரோடு போராடமலே தோற்றுப் போனதைப் பார்த்தபோது ஜனங்கள் பிரமித்து நின்றனர். “என்ன ஆச்சரியம்! இந்தப் பிராமணர் கையை அசைக்கக்கூடவில்லை. அவன் சரணாகதி அடைந்துவிட்டானே!” என்று யாவரும் வியந்தனர்.
அரசருக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவு ஏது? இருவரும் அரசரால் அழைக்கப்பட்டனர். அவரிடம் சென்ற மல்லர் தலை கவிழ்ந்து கொண்டே, “உங்கள் ஸமஸ்தானத்திலேதான் நாந்தோலியுற்றேன்.” என்று கூறினார்.

அவருடைய நெஞ்சத்துள் உண்டான துக்கத்தை அரசர் ஒருவாறு உணர்ந்து, “ தோல்வியும் வெற்றியும் மாறி மாறியே வருகின்றன; எல்லாவற்றிற்கும் மேலே ஈசுவர கடாட்சமொன்று இருக்கிறது. அதுதான் இன்று ஜயித்தது. எங்கள் நாட்டின் பெருமை உமது மூலமாக வெளிப்பட்டது.” என்று ஒருவாறு சமாதானம் கூறி அவருக்கு நல்ல சம்மானங்கள் செய்தார்.

தம்முடைய ஸமஸ்தானத்தின் கெளரவத்தைக் காப்பாற்றிய கைலாசையரை வாயாரப் பாராட்டி, “எல்லாம் பரமேசுவரன் செயலென்பதை இன்று உங்களால் நன்றாக அறிந்து கொண்டேன். நீங்கள் இந்த ராஜாங்கத்திற்கு மிகவும் அவசியமானவர்கள். இன்று முதல் ராஜாங்கத்தைச் சேர்ந்தவர்களாகிவிட்டீர்கள்.” என்று மனமுவந்து சொல்லி அரசர் பலவகையான ப்ரிசுகளை வழங்கினர்.

Tuesday, February 16, 2016

அங்குலில் நாங்கள்!

ஊருக்குப் போயிட்டு வந்து சொன்னபடி எழுத முடியவில்லை. இப்போதெல்லாம் நிகழ்வுகளின் போக்கில் தான் நான் போய்க் கொண்டு இருக்கிறேன். சொன்னால் சொன்னபடி பதிவுகளைப் போட முடிவதில்லை. :( 

புவனேஸ்வரில் தங்கி இருந்த முதல்நாள் அனுபவத்தால் அன்றிரவு படுக்கச் செல்லும் முன்னர் இரண்டு வாளி நிறைய நீர் பிடித்து வைத்து விட்டேன். மறுநாள் காலை பயன்படுத்திக்கலாமே! மறுநாள் காலை எழுந்ததும் விடுதிக்காப்பாளரிடம் சொல்லித் தேநீர் போட்டுத் தரச் சொன்னோம். தேநீரும் வந்தது. நாங்கள் அங்குல் செல்ல வண்டியை எட்டு மணியிலிருந்து எட்டரைக்குள் வரச் சொல்லி இருந்தோம்.  தயாரானதும் கீழே போய்விடலாம் என்று நான் சொல்ல விடுதிக்காப்பாளரும், நம்ம ரங்க்ஸும் வண்டி ஓட்டுநர் தொலைபேசியதும் போய்க்கலாம் என்று விட்டார்கள்.  நாங்கள் சொன்னபடிக்கு அவரும் அதே போல் வந்திருக்கிறார். கீழே காத்திருந்திருக்கிறார். அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றால் அந்த நேரம் அவர் எங்களைத் தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார் போல! தொடர்பே கிடைக்கவில்லை. விடுதியில் இருந்த பிஎஸ் என் எல் இணைப்பிலிருந்து காப்பாளரும் தொலைபேசியில் அழைப்புக் கொடுக்க அந்த அழைப்பும் போகவில்லை. 

பின்னர் காப்பாளர் தாம் கீழே போய்ப் பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லிக் கீழே இறங்க, நாமும் போகலாம் என நான் பிடிவாதம் பிடிக்க ரங்க்ஸ் மறுக்க என் அலைபேசியில் புதியதொரு எண்ணில் இருந்து அழைப்பு வர நான் எடுத்துப் பேசினேன். அதிலே வண்டி ஓட்டுநர் தான் கிட்டத்தட்ட 20 நிமிஷத்துக்கு மேலாகக் காத்திருப்பதாய்ச் சொல்ல, அவர் எங்கே இருக்கார், நாங்களும் தொலைபேசியில் அழைத்தோம்; அழைப்பே போகலை என நான் சொல்ல என்னிடமிருந்து அலைபேசியை வாங்கிப் பேசிய ரங்க்ஸ் கீழே அவர் வந்து விட்டார் என்பதைப் புரிந்து கொண்டு உடனே கிளம்பலாம் வா என்று கிளம்பினார். லிஃப்ட் என்ன செய்யுமோ என்று பயந்து கொண்டே சென்றோம். நல்ல வேளையாக லிஃப்ட் வேலை செய்தது. கீழே போனால் எங்கள் காப்பாளரைக் காணோம். எங்கே போனாரோ! பின்னர் அங்கிருந்த பாதுகாவலரிடம் தகவல் கொடுத்துவிட்டு நாங்கள் அங்குல் செல்லக் கிளம்பினோம். அதற்குள்ளாக எங்களைப் பார்த்த ஓட்டுநர் தான் எட்டு மணியிலிருந்து இங்கே இருப்பதாய்ச் சொல்ல மாடிக்கு வந்திருக்கலாம், அல்லது மாடியில் விடுதியில் தொலைபேசிக்கு அழைப்புக் கொடுத்திருக்கலாம் என நாங்கள் சொல்ல அவர் திரு திரு!

பின்னர் நாங்கள் காலை ஆகாரம் சாப்பிடவில்லை என்பதால் முதல்நாள் சென்ற ஹோட்டல் வீனஸின் அடையாளங்களை ஒரு மாதிரியாக இந்த ஓட்டுநரிடம் சொல்லி அங்கே அழைத்துச் செல்லச் சொன்னோம். அதற்கு வழி தெரியவில்லை எனில் வேறு எதேனும் மதராஸி ஓட்டல் இருந்தால் அழைத்துப்போகும்படி கூறினோம். ஆனால் என்ன ஆச்சரியம், நாங்க சொன்ன அடையாளங்களை வைத்துச் சரியாக அதே ஓட்டலுக்கு அழைத்துச் சென்று விட்டார் ஓட்டுநர். அவரையும் சாப்பிட அழைத்தால் அவர் வரலை என்று சொல்லிவிட்டார். பின்னர் நாங்கள் போய்ச் சாப்பிட்டு வந்து வண்டியில் ஏறிக் கொண்டோம். வண்டியும் கிளம்பியது. புவனேஸ்வர் தாண்டியதும் முழுக்க முழுக்க காட்டுப் பாதை! இரு பக்கமும் அடர்ந்த காடுகள். காடுகள் நன்றாகப் பராமரிக்கப்படுகின்றன. ஆங்காங்கே நம்ம யானையார் வரவு இருக்கும் என்பதற்கான எச்சரிக்கைப் பலகை. யானையார் கண்ணில் பட்டால் வண்டியை அப்படியே நிறுத்திட்டு அசையாமல் உட்காரச் சொல்லி அறிவிப்புகள். நானும் ஒரு யானையாவது வருமா என்று ஆவலுடன் காத்திருந்தேன். ஏமாற்றம் தான் மிஞ்சியது. 

மகாநதி உண்மையிலேயே மகாநதி தான். சுத்தமாகவும் காணப்படுகிறது. அதிகம் பேசப்படாத நதி!  செல்லும் வழியில் காணப்பட்ட ஒரு காடு!





கிராமங்களில் பசுமாடுகள் மேய்ச்சலுக்குச் செல்கின்றன. 


எருமை மாடுகளைப் பார்க்க முடியலை. எல்லாம் நாட்டுப் பசுக்கள். ஒழுங்காகப் பராமரிக்கின்றனர். என்றாலும் இப்போதெல்லாம் இந்த ஜெர்சி பசுக்களோடு சேர்த்துக் கலப்பினம் உருவாகின்றபடியால் கொஞ்சம் கவலையாகவே உள்ளது. ஏனெனில் நம்ம நாட்டு நாட்டுப் பசுக்களின் பாலில் மருத்துவ குணம் நிறைய உண்டு. கலப்பினங்கள் அதிகரித்தால் அந்த மருத்துவ குணங்கள் இல்லாமல் போய்விடும். பிடி கத்திரிக்காயைப் போல்! அதே போல் இப்போதெல்லாம் பசுமாட்டுக்கு ஊசி மூலம் கருத்தரிக்க வைப்பதிலும் ஆபத்து இருக்கிறது.  காளைகளே இல்லாமல் போகலாம். அல்லது பிறக்கும் காளைகள் ஆண்மையின்றிப் போய்விடலாம். செயற்கை முறை கருத்தரித்தலை ஆதரிக்காமல் இருத்தலே நல்லது. ஆனாலும் இதை எல்லாம் யார் கேட்கிறார்கள்?

இந்தப் பசுக்களைப் பார்க்கையில் மனதில் மகிழ்ச்சி பொங்கியது. அதோடு இல்லாமல் எல்லாக் கிராமங்களும் மகாநதிக்கரையோரம் என்பதால் செழிப்பாகவும் காணப்பட்டது. சீதோஷ்ணம் வேறு மிதமான குளிர். சூரியனார் முழு விடுமுறை எடுத்துக் கொண்டு விட்டார். நாங்க ஒரிசாவில் இருந்த நான்கைந்து நாட்களும் சூரியனாரைப் பார்க்கவே முடியலை! பயணம் முழுவதும் வழியெங்கும் கிராமங்களில் புத்தம்புதிய காய்கறிகள், பழங்கள்! நாங்க அப்போது மறுநாளே திருச்சி திரும்புவதாக இருந்திருந்தால் நம்ம ரங்க்ஸ் ஒரு காய்கறிப் பழக்கடையையே வாங்கி இருப்பார். ஆனால் எங்கள் பயணம் இன்னும் நாலைந்து நாட்களுக்கு இருந்தது.  ஆகவே அதைப் பார்த்து வாங்க முடியலையே என வருந்திக் கொண்டிருந்தார்.புவனேஸ்வரில் இருந்து கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பயணம் செய்து என் நாத்தனார் இருக்கும் ஜின்டால் டவுன்ஷிப்பை அடைந்தோம். அங்கே நுழைவாயிலில் பாதுகாப்புச் சோதனைகள் முடிந்து வீட்டுக்குத் தொலைபேசி விருந்தினர் உங்களுக்குத் தானா எனக் கேட்டு உறுதி செய்து கொண்டு மேலே செல்ல அனுமதித்தனர்.  கிட்டத்தட்ட மதியம் ஒருமணிக்கு நாத்தனார் வீடு போய்ச் சேர்ந்தோம். 


வீடுகள் எல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் தாம் என்றாலும் மிகப் பெரிதாகவே இருந்தன. எல்லா வசதிகளுடனும் இருந்தது. டவுன்ஷிப்புக்குள்ளேயே மருத்துவமனை,  தபால் அலுவலகம், பள்ளி போன்ற முக்கியமானவை இருந்தன. என்னதான் தபால் அலுவலகம் இருந்தாலும் தபால்கள் வருவது கொஞ்சம் பிரச்னையாகத் தான் இருக்கிறது. வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுக்க தபால்காரர் இல்லை. வரும் தபால்களை எல்லாம் அங்கே மொத்தமாக ஓர் இடத்தில் செக்டார் வாரியாகப்  போட்டு வைத்துவிடுவார்கள். அதிலிருந்து நாம் நம்முடையதைத் தேடி எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை எல்லாம் கேள்விப்பட்டதும் நாம் எப்படிப் பட்ட சொர்க்கத்தில் இருக்கோம்னு புரிஞ்சது! பின்னர்  சொந்தக்கதைகள் எல்லாம் பேசிவிட்டுச் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு அன்று முழுதும் ஓய்வு எடுத்துக் கொண்டோம். நாத்தனாரின் பேத்தி இருந்ததால் அவளுடன் விளையாடிக் கொண்டு  நல்ல பொழுதுபோக்காக இருந்தது.


Friday, February 12, 2016

சோள இட்லி மாவில் செய்த சோள தோசை!


நேற்றைய சோள இட்லி மாவில் இன்று வார்க்கப்பட்ட சோள தோசை! தொட்டுக்கத் தேங்காய்ச் சட்னி கீழே!


Thursday, February 11, 2016

சோள இட்லியும், குடமிளகாய் கொத்சுவும்!


அரைத்த மாவு

நாங்க சிறு தானியம் சாப்பிட ஆரம்பிச்சு ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகிறது. எல்லாத்தையும் மசிக்க முடிஞ்ச எனக்கு சோளத்தை வேக வைப்பது ஒரு சோதனையாகவே இருந்தது. ஒரு மாதிரியா வேக வைச்சுடறேன். சில நாட்களுக்கு முன்னர் ஏதோ ஒரு சானலில் எல்லா சிறு தானியங்களிலும் இட்லி செய்வதைப் பற்றிச் சொன்னார்கள். நாம தான் ஏற்கெனவே வரகு, கம்பு போன்றவற்றில் இட்லி செய்து பார்த்துட்டோமே. இப்போ சோளத்தில் செய்யலாம் என நினைத்து நேற்று அதற்கான பொருட்களைத் தயார் செய்தேன்.

சோளம் உடைச்சது 250 கிராம் அல்லது ஒரு ஆழாக்கு அல்லது 2 கிண்ணம்

உளுந்து கால் கிண்ணம்

வெந்தயம் ஒரு டேபிள் ஸ்பூன்.

இன்று காலை உணவுக்குச் செய்யப் போவதால் ஏற்கெனவே ஊற வைச்சு அரைச்சிருக்கணும். ஆனால் நேற்று மாலை தான் இந்த யோசனை உதித்ததால் மாலை ஆறு மணி அளவில் சோள ரவையைக் களைந்து தனியாக ஊற வைத்தேன். பின்னர் உளுந்து, வெந்தயம் இரண்டையும் ஒன்றாகக் கலந்து ஊற வைத்தேன்.  இரண்டு மணி நேரம் ஊறப் போதும் என்பதால் இரவே அரைத்து வைத்து உப்புப் போட்டுக் கலந்து விடலாம். மாவு நன்கு பொங்கி வருகிறது.

                             
                                       சோள இட்லி தயார், சாப்பிட வாங்க!

இன்று காலை அதை இட்லிகளாக வார்த்து எடுத்தேன். தொட்டுக் கொள்ளக் குடமிளகாய்க் கொத்சு!

செய்முறை

புளி ஒரு சின்ன நெல்லிக்காய் அளவுக்கு நீரில் ஊற வைத்துக் கரைத்து எடுத்தது இரண்டு கிண்ணம்

பயத்தம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் குழைய வேக வைக்கவும். அதிலேயே புளி ஜலத்தைச் சேர்க்கவும்.

ஒரு நடுத்தர அளவுக் குடைமிளகாய்,

நடுத்தர அளவுத் தக்காளி

பெரிய வெங்காயம் பெரிதாக ஒன்று அல்லது நடுத்தரமாக இரண்டு பொடிப்பொடியாக நறுக்கவும்.

சாம்பார்ப் பொடி இரண்டு டீஸ்பூன்

மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்

தாளிக்க எண்ணெய் ஒரு மேஜைக்கரண்டி, கடுகு, க.பருப்பு, உபருப்பு, கருகப்பிலை, பெருங்காயம்

மேலே தூவ பச்சைக் கொத்துமல்லி பொடிப்பொடியாக நறுக்கியது.

உப்பு தேவையான அளவு


                                          குடமிளகாய்க் கொத்சு கொதிக்குது! :)

அடி கனமான வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டுக் கடுகு, உபருப்பு, கபருப்பு தாளித்து, பெருங்காயமும், கருகப்பிலையும் சேர்க்கவும்.  மஞ்சள் பொடியைச் சேர்க்கவும். பின்னர் முதலில் வெங்காயத்தை நறுக்கிச் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் குடைமிளகாயைச் சேர்க்கவும். குடைமிளகாய் அரைப்பதம் வேகும்போது தக்காளியைச் சேர்க்கவும். தக்காளி சேர்ந்து வரும்போது பருப்புக்கலவையுடன் சேர்ந்த புளிக்கரைசலைச் சேர்க்கவும். உப்புச் சேர்த்துக் கொதிக்க விடவும். ரொம்ப நீர்க்கவும் இல்லாமல் சேறு போல் கெட்டியாகவும் இல்லாமல் இருக்க வேண்டும். பொதுவாக சாம்பார், கொத்சு போன்றவை சேறு போல் கெட்டியாக இருந்தால் அவ்வளவாக ருசிக்காது. கூடியவரை பால் போன்ற பதத்தில் வைத்துக் கொண்டால் நல்லது.

Wednesday, February 10, 2016

புவனேஸ்வரில் இட்லி, தோசையுடன் இரவு உணவு!

சோம வம்சத்து மன்னன் ஜஜாதி கேசரி என்பவனால் பதினோராம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இந்தக் கோயிலின் சில பகுதிகள் அதற்கு முன்னரே இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆறாவது நூற்றாண்டில் இந்தக் கோயிலின் சில பகுதிகள் காணக் கிடைத்தன என்று ஏழாம் நூற்றாண்டின் சம்ஸ்கிருத புத்தகங்கள் சிலவற்றில் குறிப்பிட்டிருப்பதாகத் தெரியவருகிறது. மேற்சொன்ன கேசரி அரசன் தன் தலைநகரை ஜெய்ப்பூரில் இருந்து புவனேஸ்வரத்துக்கு மாற்றியதாகவும் சொல்கின்றனர். இந்த வம்சத்து அரசி ஒருத்தியால் ஒரு கிராமம் இந்தக் கோயிலுக்கு தானமாக அளிக்கப்பட்டதாகக் கல்வெட்டு ஒன்று சொல்கிறது. மேலும் ராஜராஜ சோழன் அளித்த தானங்கள், நிவந்தங்கள் போன்றவற்றைச் சொல்லும் கல்வெட்டும் ஒன்று இருப்பதாகச் சொல்கின்றனர்.

லிங்கராஜர் கோயில் புவனேஸ்வர் க்கான பட முடிவு

செந்நிறக் களிமண்ணால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் இந்தக் கோயிலின் சுற்றுச்சுவர் எனப்படும் மதில் சுவர் மிகப் பிரம்மாண்டமானது. இதன் கனம்  மட்டுமே  ஏழரை அடி கனம் கொண்டது. சுமார் 520/465 அடி நீள, அகலம் கொண்ட இந்தக் கோயிலின் சுற்றுச் சுவர் வெளியிலிருந்து பார்க்கப் பிரம்மாண்டமாய்த் தெரிகிறது.  கோயில் கிழக்குப் பார்த்த சந்நிதியைக் கொண்டது.  மணற்கற்களாலும், செந்நிறக் களிமண்ணாலும் கட்டப்பட்ட இந்தக் கோயிலுக்கெனத் தனித் தல வரலாறு இருப்பதாகத் தெரியவில்லை. கோயிலின் மூலஸ்தானத்திற்குச் சென்று தரிசித்தால் ஒரு வகை ஏமாற்றமே ஏற்படும். ஏனெனில் அங்கே பெரிய அளவில் லிங்கம் எதையும் பார்க்க முடியாது. லிங்கராஜாவாச்சே என நினைத்துச் சென்றால் நாம் காண்பது சுமார் எட்டு அங்குலத்திற்கு ஒரு லிங்கமே! சத்ய யுகத்திலும் திரேதா யுகத்திலும் இங்கே லிங்கமே இல்லை என்றும் துவாபர யுகத்திலும் தற்போதைய கலி யுகத்திலுமே லிங்கமாக உருவெடுத்திருப்பதாகவும் கூறுகின்றனர். கலிங்க மன்னர்களும் இந்தக் கோயிலைப் பராமரித்திருப்பதால் ஒரு சில கலிங்கச் சிற்ப வேலைகளையும் காணலாம்.

ஈசன் காசியை விட புவனேஸ்வரமே தனக்குப் பிடித்த இடம் என்று உமை அம்மையிடம் சொன்னாராம். இதைக் கேட்டதும் பார்வதி தேவி மாடு மேய்க்கும் பெண்ணாக இங்கே வந்ததாகவும், தன்னை மணம் புரிந்து கொள்ள ஆசைப்பட்ட பூதங்கள்/அரக்கர்கள்(?) கீர்த்தி, வாசா ஆகியோரிடமிருந்து தப்பிக்கத் தவம் செய்ததாகவும், அதற்கெனக் கோயிலின் உள்ளேயே ஈசன் பிந்து சாகர் குளத்தை உருவாக்கியதாகவும் சொல்கின்றனர்.  இந்தக் கோயிலின் சுற்றுப் பிரகாரம் மட்டும், 2,50,000 சதுர அடியாகும். எட்டு அங்குலத்திற்கு இருக்கும் லிங்கம் அமர்ந்திருக்கும் பீடம் சக்தி பீடம் எனப்படுகிறது. மேலும் அதன் சுற்றளவு சுமார் எட்டு அடியாகும். அம்பிகை தனிக் கோயில் கொண்டிருக்கிறாள். அதைத் தவிர இந்தக் கோயில் வளாகத்தினுள் சுமார் 150 சிறு சிறு சந்நிதிகள் இருக்கின்றன.

நாங்கள் சென்ற சமயம் மாலை நேரத்து ஆரத்தி நடந்து கொண்டிருந்தது. புரி கோயிலின் வழிபாட்டு முறைகளே இங்கும் பின்பற்றப் படுவதால் இங்கேயும் அடிக்கடி நடை சார்த்தி விடுகின்றனர். இங்கும் தேர்த்திருவிழா மிகவும் பெரிய அளவில் நடைபெறும் என்கின்றனர்.  ரத யாத்திரையில் லிங்கராஜா தன் சகோதரி ருக்மிணியுடன் வீதி வலம் வருகிறார். அருகிலுள்ள ராமேஸ்வர் தியூலா கோயிலுக்கு லிங்கராஜாவும் ருக்மிணியும் செல்வார்கள்.  இந்தக் கோயில் லிங்கராஜா கோயிலில் இருந்து இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.  இந்தக் கோயிலில் லிங்கம் ஶ்ரீராமரால் சீதை வழிபாடு செய்வதற்காகப் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக ஐதீகம். ராவண வதம் முடிந்து அயோத்தி திரும்புகையில் சீதை இங்கே சிவபூஜை செய்ய வேண்டி ஶ்ரீராமரால் இந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் ராமேஸ்வர் தியூலா என்னும் பெயரில் இந்தக் கோயில் விளங்குகிறது.  இங்கே நான்கு நாட்கள் லிங்கராஜா தங்கியதும் ஐந்தாம் நாள் இங்கிருந்து திரும்புகிறார். சிவராத்திரி அன்று முழுதும் விழித்திருந்து இங்கே உள்ள லிங்கராஜாவைத் தரிசிக்கும் அன்பர்கள் விடிந்ததும் கோயிலின் வளாகத்தின் உள்ளேயே இருக்கும் பிந்து சாகர் குளத்தில் நீராடி விரதம் முடித்து மீண்டும் லிங்கராஜாவைத் தரிசித்துத் தங்கள் சிவராத்திரி தரிசனத்தை முடித்துக் கொள்கின்றனர்.

லிங்கராஜா கோயிலுக்கு மட்டும் போயிட்டு நாங்கள் திரும்ப விடுதிக்குச் செல்லும் முன்னர் கடைத்தெருவைப் பார்க்க விரும்பினோம். கடைத்தெரு பிரம்மாண்டமாக உள்ளது. ஆனால் எல்லாம் ஓர் ஒழுங்கில்! அங்கே ஓர் இடத்தில் வண்டியை ஓட்டுநர் நிறுத்திவிட்டு நாங்கள் செல்ல விரும்பிய வயோனிகா ஷோரூமுக்கு எங்களுக்கு வழிகாட்டிக் கொடுத்தார். வயோனிகா/பயோனிகா ஷோரூம் நம்ம ஊர் கோ ஆப்டெக்ஸ் மாதிரி. ஒரிசாவின் கைத்தறிப் படைப்புக்களை அங்கே வாங்கலாம்/காணலாம். சரினு அங்கே உள்ள நடைபாதைக் கடைகளை எல்லாம் வேடிக்கை பார்த்த வண்ணம் சென்றோம். உள்ளே வயோனிகா ஷோ ரூம் பெரிதாக இருந்ததோடு அல்லாமல் மிகவும் நவீனமாக அமைக்கப்பட்டிருந்தது. நம்ம ஊர் கோ ஆப்டெக்ஸோடு ஒப்பிடுகையில் இதன் நவீனம் மனதைக் கவர்ந்தது. கோ ஆப்டெக்ஸையும் இப்படி மாற்றி அமைக்கலாமே என நினைத்தோம். உள்ளே போனால் குறைந்த பட்ச விலையே மயக்கம் போட வைத்தது.

கடையின் வெளியே நடைமேடையில் மக்கள் அமர பெஞ்ச் போட்டிருந்தனர். ஆங்காங்கே கடைகளில் விற்கும் சாட், சமோசா போன்றவற்றையும் ஐஸ்க்ரீம் போன்றவற்றையும் வாங்கிக் கொண்டு ஆற, அமர அமர்ந்த வண்ணம் அனைவரும் ருசித்தும் ரசித்தும் கொண்டிருந்தனர். இதே போல் குஜராத்தின் பரோடா, ஜாம்நகர், அகமதாபாதில் பார்க்கலாம். பின்னர் அங்கிருந்து கிளம்பி விடுதிக்குச் செல்லும் முன்னர் இரவு உணவை முடித்துக் கொள்ள விரும்பி ஓட்டுநரிடம்  நல்ல தென்னிந்திய உணவு விடுதிக்குச் செல்லும்படி சொன்னோம். உண்மையிலேயே நல்ல உணவு விடுதி என்பதோடு விலையும் அதிகம் இல்லை.  இட்லி, தோசை போன்ற உணவுகளும், ஊத்தப்பமும் அருமையாக இருந்தது.

இட்லி, தோசை க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார்

அங்கே உணவை முடித்தவுடன் விடுதிக்கு வந்தோம். மணி ஏழரை ஆகிவிட்டது. விடுதிக் காப்பாளர் முதல்நாள் நிகழ்ச்சி முடிந்து விடுதிக்குத் திரும்பி விட்டார். லிஃப்டும் வேலை செய்தது. மேலே ஐந்தாம் மாடிக்கு வந்ததும் காப்பாளரிடம் குடிக்க வெந்நீர் மட்டும் கேட்டுக் கொண்டு அதை வாங்கிக் குடித்துவிட்டுப் படுத்தோம். மறுநாள் அங்கேயே அங்குல் என்னும் ஊருக்கு அருகே இருக்கும் என் நாத்தனாரையும் அவர் மகள் குடும்பத்தையும் பார்க்கச் செல்லவேண்டும். காலையே வண்டி வரும் என நாத்தனாரின் பையர் கூறி இருந்ததோடு ஓட்டுநர் பெயர், வண்டி எண் எல்லாவற்றையும் அனுப்பி இருந்தார். ஆகவே படுத்து ஓய்வெடுத்தோம்.