எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, November 30, 2016

என்ன தான் நடக்கிறது நாட்டிலே!

எங்கு பார்த்தாலும் கூவல், புலம்பல், பணமே இல்லைனு! ஒருத்தர் அரிசி வாங்கப் பணமில்லைங்கறார். அவர் ஆட்டோ ஓட்டுநராம். ஆட்டோவை தினமும் ஓட்டுவதில்லையா? அதுக்குக் கூலி வரதில்லையானு தெரியலை! கையிலே பணமே இல்லைனு சொல்றாங்க! அதிலே சிலர் வியாபாரிகள்! வியாபாரமே ஆகலைனு சொல்றாங்க! வியாபாரம் ஆகலைனு சொன்னாலும் இன்னொரு பக்கம் காய்கறிகள், பழங்கள், நடைபாதைக் கடைகள் என்று இருக்கத் தான் செய்கின்றன. அவற்றில் வியாபாரம் செய்வோர் செய்யத் தான் செய்கின்றனர். எல்லோருமே ஐநூறு, ஆயிரம் என்று தான் வியாபாரம் செய்தார்களானு நினைக்கவும் ஆச்சரியம் தான் வருது! யாருமே நூறு, ஐம்பது, இருபது, பத்து ரூபாய்களைப் பயன்படுத்தியதே இல்லையா? அதிலே வியாபாரம் செய்ய முடியாதா? எல்லோரிடமும் கடன் அட்டை இருப்பது சாத்தியமில்லை தான்! ஆனால் வியாபாரிகளிடம் குறைந்த பட்சத் தொகை கூட இல்லாமல் இருக்குமா? அதைச் சுற்றுக்கு விட்டுத் திரும்பப் பெறலாமே!
ஐநூறு ரூபாய் நோட்டு க்கான பட முடிவு
ஒரு தோழி இன்னொரு தோழியிடம் சமையலுக்கு அரிசி பருப்பு, காய்களுக்கு எல்லாம் என்ன செய்தேனு கேட்கிறாங்க. அவங்க வீட்டில் தினம் அரிசி, பருப்பு வாங்குவாங்களோ! நாங்க மொத்தமா அரிசி வாங்கி வைச்சுப்போம். குறைந்தது பத்துக் கிலோவானும்! அதே போல் பருப்பு வகைகள் மற்றப் பொருட்கள் எல்லாமும் ஒரு மாதத்துக்குத் தேவையானதை வாங்கிப்போம். அதுவே ஒன்றரை மாதம் வந்துடும். காய்கள் ஒரு வாரத்துக்கு வாங்குவது உண்டு. அது பத்து நாட்களுக்கானும் வந்துடும். பாலுக்கு மாதா மாதம் பணம் கொடுப்போம். ஆகவே பணம் கொடுப்பதிலோ வாங்குவதிலோ சிரமங்கள் ஏற்படவில்லை. பெரிய அளவில் செய்யும் வியாபாரங்களுக்கு டெபிட் கார்டில் பணம் கட்டிடலாம்.  அப்படி வாங்குவது இப்போதைக்கு மருந்துகள் மட்டுமே. அங்கே குறைந்த பட்சத் தொகையான 150 ரூபாய்க்குக் கூட ஸ்வைபிங் மெஷின் இருக்கிறதால் பிரச்னை இல்லை. எப்படியும் மருந்து  வகைகள் ஆயிரத்தைத் தாண்டும் என்பதால் செக்கிலோ, டெபிட் கார்டிலோ தான் பணம் கொடுக்கணும். மற்றபடி இங்கே உள்ள ஆண்களுக்கான சலூனில் கூட ஸ்வைபிங் மெஷின் குறைந்த பட்சத் தொகையாக ஐம்பது ரூபாயில் ஆரம்பித்து வைத்திருக்கின்றனர். பெரிய ஹோட்டல்களிலும் 150 ரூபாய் வரை சாப்பிட்டாலோ, பார்சல்கள் வாங்கினாலோ டெபிட் கார்டிலோ, அல்லது க்ரெடிட் கார்டிலோ கொடுக்க முடிகிறது. துணிக்கடைகள் எல்லாம் எப்போதுமே கார்ட் வசதி உள்ளவை தான்.

அதோடு அரசாங்கம் ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுக்களைத் தான் மாற்றச் சொல்லி இருக்கிறது. நூறு, ஐம்பது, இருபது, பத்து மற்றும் ஒரு ரூபாய் நோட்டுக்களை மாற்றச் சொல்லவில்லை. எல்லோரிடமும் ஐநூறும் ஆயிரமும் மட்டுமா இருந்திருக்கும்? நூறு, ஐம்பது, இருபது, பத்து ரூபாய் நோட்டுக்கள் ஒருத்தரிடமுமே இல்லையா? இங்கே கீரைக்காரர்கள், வாழை இலை விற்கும் வியாபாரிகள், பூக்கடைக்காரர்கள், பழக்கடைக்காரர்கள் என அனைவருமே நூறு, ஐம்பது, இருபது, பத்து ரூபாய் நோட்டுக்களைப் புழக்கத்தில் விடுகின்றனர். துணிகளை இஸ்திரி செய்யும் பெண்மணி இஸ்திரிக்குக் கொடுக்க வேண்டிய பணம் முப்பத்திரண்டு ரூபாய்க்கு மிச்சம் பதினெட்டு ரூபாய் ஐம்பது ரூபாய் கொடுத்தால் கொடுக்கிறார். அதே போல் ஆட்டோக்காரரும், இந்த ஆட்டோக்களில் மும்பை, சென்னை, திருச்சி என்று கடந்த இருபது நாட்களாகப் பயணம் செய்து பார்த்து அவர்களிடம் பேசியும் பார்த்தோம். அனைவரும் ஆதரவே தெரிவிக்கின்றனர்.

ஆனால் நேற்றுத் தொலைக்காட்சிகளில் காட்டியபோது ஆட்டோக்காரர்கள் அரிசி வாங்கவே பணம் இல்லைனு சொல்வதாகக் காட்டினார்கள். அப்போ ஆட்டோ ஓட்டி வரும் பணமெல்லாம் என்ன ஆகும்? அதோடு இப்போ யாரும் ஐநூறு, ஆயிரம்னு கொடுக்கவும் போறதில்லை. ஐநூறு, ஆயிரம் மாற்றுபவர்களும் இப்போது குறைந்திருக்கின்றனர். இன்னும் சிலர் பத்து நாட்களுக்கும் மேலாகப் பணத்தையோ, அட்டையைத் தேய்க்கவோ இல்லைனால் உடனே ஓசிச் சாப்பாடானு கேட்கிறாங்க. இவங்க கிட்டேயே இல்லைனால் ஓசிச் சாப்பாடு போடறவங்க மட்டும் எப்படிப் போடுவாங்க? புரியலை. அதோடு பணம் செலவு செய்யலைனா உடனே ஓசிச் சாப்பாடுனு அர்த்தமாகுமா? வீட்டிலே பொருட்கள் இருக்கு, சமைச்சிருக்காங்கனு எடுத்துக்கலாமே! இதெல்லாம் படித்த அறிவு ஜீவிகள் தான் சொல்றாங்க! படிக்காத ஜனங்கள் இல்லை.

படிக்காத கீரைக்காரியும், ஆட்டோ ஓட்டுநரும், வாழைப்பழ வியாபாரியும், பூக்கடைக்காரரும், காய்கறிக்காரர்களும், துணிகளை இஸ்திரி செய்து பிழைப்போரும் இது குறித்துக் குறை சொல்லவே இல்லை. பணமே இல்லை செலவுக்குனு சொல்லவும் இல்லை. சிறு வியாபாரம் படுத்துவிட்டது என்போர் எத்தனை ஊர்களில் எத்தனை கடைத்தெருவிற்குப் போய்ப் பார்த்திருக்காங்கனு தெரியலை! நான் பார்த்தவரை மாநகரங்களான மும்பை, சென்னை, மற்றும் இங்கே திருச்சியில் பாதிப்பு அதிகம் தெரியவில்லை. முன்கூட்டித் திட்டமிடவில்லை என்போர் முன் கூட்டித் திட்டமிட்டால் கறுப்புப் பணக்காரர்கள் உஷார் ஆகிவிடுவார்கள் என்பதை அறியாமலா இருப்பார்கள்? எதிர்க்க வேண்டும் என்பதே எதிர்ப்போரின் எண்ணம். காரணமே தேவையில்லை! தொலைக்காட்சிச் சானல்களிலும் சாதகமான செய்திகளைச் சொல்லுவதில்லை! பாதகமாகவே சொல்கின்றனர்.

நடைபாதை வியாபாரிகள் பொருட்களை வைத்து வியாபாரம் செய்யத் தான் செய்கின்றனர். தள்ளு வண்டிகளில் காய்கள், பழங்கள், ப்ளாஸ்டிக் சாமான்கள் என்று விற்பனை ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன. சாலையோரக் கடைகள் உணவுப் பண்டங்கள் தயார் செய்து விற்றுக் கொண்டு தான் இருக்கின்றனர். எங்கும் எதிலும் இயக்கம் நிற்கவில்லை.  மக்கள் வாழ்க்கை நடத்திக் கொண்டு தான் இருக்கின்றனர். இதுவும் கடந்து போகும்.

Friday, November 25, 2016

மனிதரில் எத்தனை முகம்!

கடந்த சில மாதங்களாகக் கிடைத்த அனுபவங்களில் இருந்து மனிதரின் முகங்கள் எப்படி எல்லாம் மாறும் என்பதை இப்போது தான் நன்கு புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன் என்று சொல்லலாம். காரியம் ஆகணும்னா காலைப்பிடி என்பது வெறும் சொலவடை மட்டுமல்ல, உண்மையும் அதுதான் என்பது புரிந்தது. அவங்க காரியம் ஆகவேண்டி எங்கள் காலைப் பிடித்தவர்கள் அனைவரும் அந்த வேலை தேவையில்லை என்றானதும் எங்களை நடத்திய முறை வியப்புக்குரியதாக ஆகி விட்டது. நம் அழைப்புகளுக்கு எவ்விதமான பதிலும் இருக்காது! கண்டுகொள்ளவே மாட்டாங்க! அவங்களுக்குத் தேவைனா நம்மைக் கொஞ்சமும் வெட்கப்படாமல் தொடர்பு கொண்டு தேவையைச் சொல்வாங்க! இது தான் கலியுகமோ என்றெல்லாம் தோன்றியது.


ஒரு வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை சீரடைந்து வருகிறது. என்றாலும் இன்னமும் பூரணமாக ஆகவில்லை. முக்கியமான பிரச்னைகள் தீர்க்கப்பட்டு விட்டன.  கடந்த சில மாதங்களாகவே போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கை! அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு! கவலை, விசாரங்கள்! தூக்கமில்லா இரவுகள்! ஆனால் இந்த மோசமான அனுபவங்கள் மூலம் மனிதர்களைப் பற்றிய அறிவு மேம்பட்டிருக்கிறது. கஷ்டமான சமயங்களில் மனிதர்கள் நடந்து கொள்ளும் விதமும், நம்மை நடத்தும் விதமும் புரிய வந்திருக்கிறது.

நாம் எந்தக் காரியத்துக்காக ஒருத்தரைத் தொடர்பு கொள்கிறோமோ அந்த நபர் மனம் இருந்தால் தான் நம் தொடர்புக்கு எதிர்வினையாற்றுவார். இல்லைனா இல்லை தான்! ஒரு நாள் இரண்டு நாள் இல்லை! நாள் கணக்கில், மாசக்கணக்கில்!  அதே நபர் நம்மிடம் அவர் வேலைக்குத் தொடர்பு கொள்வது எனில் கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் முன்னால் நடந்து கொண்டதை மறந்துவிட்டு அதிகாரமாக நம்மிடம் அவர் வேலையை முடித்துக் கொள்கிறார். ஆக மற்றவர் உணர்வுகளோ அவங்களோட அவசரமோ இங்கே யாருக்கும் முக்கியம் இல்லை! அவங்க அவங்களோட நிலைமையை வைச்சு அதற்கேற்றபடி தான் நடந்துக்கறாங்க. 

அதே போல் நம்மிடமிருந்து வாங்கிக்க வேண்டியதை ஒரேயடியாக வாங்கிக் கொள்பவர்கள் திரும்பக் கொடுக்கையில் அப்படித் தருவதில்லை. ஏதோ நாம் தான் அவங்களிடம் அவங்க பொருளைக் கேட்கிறோம் என்பது போல் நடந்து கொண்டு அலைக்கழித்துத் தான் கொடுக்கிறார்கள். அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக! நாம கேட்டாலும் ஏதோ அவங்க கிட்டே அவங்களோட சொந்தப் பொருளைக் கேட்கிறாப்போல் பேச்சு வேறே! இப்போத் தர முடியாதுனா என்ன பண்ணுவீங்க என்று கிண்டல், கேலி! இத்தனைக்கும் நம் பொருளை,  நமக்குச் சொந்தமானதைத் தான் நாம் கேட்கிறோம். அதுக்கே இப்படி!  சுயநலம் என்பது அதிக அளவில் மனிதரைப் பிடித்து ஆட்டுகிறது என்பதும் புரிந்தது. இது மட்டுமா?

 இன்னும் சிலர் வேறே மாதிரி! எப்போவும் அவங்களைச் சுற்றியே நாம் வரணும், அவங்க தான் மையப் பொருளாக இருக்கணும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டு எல்லாவற்றிற்கும் தானாக வலுவில் வந்து நம்மை எதையும் செய்யவிடாமலோ யோசிக்க விடாமலோ தடுப்பார்கள்.  எவரையும் கலந்து ஆலோசிக்காமல்  தன்னுடைய சொந்த நலனுக்காகச் செய்து கொண்ட ஏற்பாடுகளைச் சூழ்நிலை காரணமாகத் தனக்கு ஏற்றபடி மாற்றிக் கொண்டு தன்னை ஒரு தியாகியாகக் காட்டிக் கொள்ளுகிறார்கள், இத்தகைய  மனிதர்களைப் பார்த்தாலும் சிரிப்புத் தான் வருகிறது.  உழைப்பே இல்லாமல் பெயர் வாங்கிக் கொண்டு இருப்பதையும் பார்த்தாகி விட்டது!  நம் உழைப்பு எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது! 

என்றாலும் கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்கும் ஒரு சில சம்பவங்கள், நிகழ்ச்சிகள் மூலம் நம்பிக்கை என்னமோ குறையவே இல்லை! மொத்தத்தில் இதுவும் கடந்து போகும்!  எல்லோரும் நான் என்னுடைய அனுபவங்களையே எழுதுவதாகச் சொல்கிறார்கள், இப்படியும் சிலர்! :) ஆனால் நான் என்னோட அனுபவத்திலிருந்து கற்றவற்றைத் தானே பகிர முடியும்? மற்றவங்க அனுபவம் வேறாக இருக்கும் இல்லையா! அதை அவங்க சொல்லித் தான் நான் தெரிஞ்சுக்க முடியும்! ஒரே விஷயத்தில் அவங்க அனுபவம் வேறே, என்னோட அனுபவம் வேறேனு தான் இருக்கும்.

உதாரணமாக இந்த ரூபாய் நோட்டுக்கள் மாற்றுவதையே எடுத்துக்கோங்க. நாங்க அறிவிப்பு வந்த மூன்றாம் நாள் வியாழனன்று வங்கியில் சேமிப்புக்கணக்கில் சேர்த்துவிட்டோம். சில்லறை நோட்டுக்கள் கைவசம் கொஞ்சம் இருப்பதால் பிரச்னை இல்லை. ஆனாலும் மருந்துகள் வாங்கவோ, காய்கறிகள் வாங்கவோ டெபிட் கார்ட் தான் பயன்படுத்துகிறோம். குறைந்த பட்சமாக 150 ரூபாய் வரைக்கும் நாம் வாங்கும் பொருள் இருக்கணும் என்கிறார்கள். ஆகவே இது வசதியாகவும் இருக்கிறது. ஆனாலும் சிலருக்கு இது கொஞ்சம் பிரச்னையாகவும் கஷ்டமாகவும் இருக்கிறது. பால் வாங்கக் காசு இல்லை என்று சிலர் புலம்பல்! புலம்புபவர்கள் எல்லாம் நல்ல வேவலையில் இருப்பவர்கள். அவங்களால் மாதாமாதம் பாலுக்கு முன் பணம் கட்டி வாங்க முடியும். அல்லது மாதம் முடிந்ததும் பால் பணத்தைக் கொடுத்துத் தீர்க்க முடியும்! அப்படியானவங்க தான் அதிகம் புலம்பல்!

ஆனால் மும்பையிலும் சரி, இங்கே சென்னையிலும் சரி, ஶ்ரீரங்கத்திலும் சரி ஆட்டோ ஓட்டுநர்கள் சில்லறைத் தட்டுப்பாட்டால் சிரமப்படுவதாகத் தெரியவில்லை.  சென்னையிலாவது ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரு சிலர் பிரச்னை என்றனர். மும்பையில் அப்படி இல்லை. சில்லறை கிடைப்பதோடு அங்கே வங்கிகளிலும் பணம் மாற்றுவதற்கான கூட்டம் அதிகம் இல்லை. அதோடு இங்கே ஶ்ரீரங்கத்திற்கு சுற்றுலாப் பயணிகள் கூட்டமும் அதிகம் வருகிறது. நேற்றுத் திருச்சி போயிருந்தப்போ கடைத்தெருவில் எப்போதும் போல் கூட்டம். மக்கள் யாரும் எவ்விதக் கஷ்டமும் படுவதாகத் தெரியவில்லை. எப்போதும் போல் நடைபாதை வியாபாரிகள் கடை வைத்திருக்கின்றனர். வியாபாரமும் நடக்கிறது.

இத்தனைக்கும் அரசு பலவிதமான சலுகைகளைக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது.  இதனால் நாம் கண்ட முக்கியமான ஆதாயம் என்னவெனில் காஷ்மீரில் கல்லெறி குறைந்து சகஜ வாழ்க்கை ஆரம்பித்திருப்பதோடு அல்லாமல் காஷ்மீர் முஸ்லிம் ஒருவர் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதி இருப்பதும் தான். இதற்காகவேனும் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது நன்மையையே தந்திருக்கிறது எனலாம். 

Thursday, November 24, 2016

மற்றவை பின்னர்!

இந்த ஒரு வாரத்தில் எதுவும் தலைகீழாகப் போகலை. யாரும் தேடலை! யாரும் ஏன் பதிவுகள் வரலைனு கேட்கலை. நாம இல்லாமல் எதுவும் நடக்காமல் போகலை. ஆனாலும் திரும்ப வந்ததும் சந்தோஷமாத் தான் இருக்கு! ஆனால் இந்த ப்ளாகர் தான் டாஷ்போர்டையே காட்ட மாட்டேங்குது. என்னனு புரியலை! என்னை வேறு யாரோனு நினைச்சிருக்கானு தெரியலை.  தலைப்புக் கொடுக்கும் கட்டத்துக்கூ அருகே இது கீதா சாம்பசிவம்ங்கற பெயரிலே வெளியிடப்படுகிறதுனு ஒரு முன்னெச்சரிக்கை! என்ன ஆச்சு? எல்லோருக்கும் இப்படி இருக்கா?  ரீடிங் லிஸ்ட்ங்கற பெயரிலே நண்பர்களோட பதிவுகளைக் காட்டுது. டாஷ்போர்டை எடுத்துட்டு இப்படிப் போட்டிருக்காங்க போல! வலப்பக்கம் சைட் பாரிலே நான் தொடரும் பதிவர்களைக் காட்டுது!

போன புதன்கிழமை போகும்போது பல்லவனில் பாடாவதி போகி! ரயில் பெட்டி கட்ட ஆரம்பிச்ச நாட்களில் கட்டிய பெட்டி போல! ரொம்பவே மோசமா இருந்தது! அது தான் அப்படின்னா மும்பைக்குப் போன விமானமும் விமானங்கள் பறக்கத் தொடங்கியப்போ வாங்கினதோ, கட்டியதோ தெரியலை! ஏ.சி.யே வேலை செய்யலை. ஊழியர்களிடம் புகார் கொடுத்ததில் விமானம் கிளம்பியதும் சரியாகும்னு சொல்றாங்க. இது என்ன பேருந்துப் பயணமா? இல்லை ரயில் பயணமா? என்னத்தைச் சொல்ல! எல்லாப் பயணிகளும் அவதிப் பட்டார்கள். ஆனால் யாருமே கேட்டுக்கலை ஒரு சிலரைத் தவிர. அந்த ஒரு சிலரில் நாங்களும் உண்டு. நாம தான் வாயை வைச்சுட்டுச் சும்மா இருக்க மாட்டோமே!

சாப்பாடு திராபை! ஒரு வழியாப் போயிட்டு நேத்திக்குத் திரும்பியாச்சு. போன இடத்தில் படங்கள் எல்லாம் எடுக்கணும்னு காமிராவெல்லாம் கொண்டு போயும் ஒண்ணும் எடுக்க மனம் வரலை! சூழ்நிலை சரியாக அமையவில்லை. நம்ம அதிர்ஷ்டம் அப்படி! :) நேத்திக்குத் திரும்பும்போது விமானமும் புத்தம்புதியது. போன மாசம் தான் வாங்கி இருப்பாங்க போல! :) ஏசியும் வேலை செய்தது. இரவு வந்த மலைக்கோட்டை விரைவு வண்டியும் புத்தம்புதியது! நேரே தொழிற்சாலையிலிருந்து வந்திருக்கு போல! பெயின்ட் வாசனையே போகலை. வடிவமைப்பு அசத்தல்! ஆனால் ஏசியாக இருந்தாலும் முன்னால் மின் விசிறியும் இருந்தது. இப்போது புதிய வண்டிகளில் ஏசி பெட்டிக்கு மின் விசிறி இல்லை! மற்றபடி வண்டி சுத்தமோ சுத்தம்! ராத்திரி தூங்கத் தான் முடியலை. காலையிலே எழுந்துக்கணுமே! சரியான நேரம் ஶ்ரீரங்கத்துக்கு 3-54 அப்படினு போட்டிருந்தாங்க பயணச் சீட்டிலே. ஆனால் வண்டி வந்தது 4-30க்குத் தான். வீட்டுக்கு வந்து சேர்ந்தாச்சு.

மற்றவை பின்னர்! 

Thursday, November 17, 2016

Unexpected Holidays

We are in Mumbai and will be back by next week. Till then no posts. I have tried via Pudhuvai Unicode writer but cannot copy and paste.:( Some problem in the mouse. So enjoy the unexpected holidays.

Tuesday, November 15, 2016

நிலாவும் ஆண்டாளம்மாவும்!


இன்னிக்குக் காலை ஐந்து மணிக்கு எடுத்தது!  இந்த மேற்குப் பக்கம் காவிரி இருப்பதால் குறுக்கே தடைகள் ஒண்ணும் இல்லை. ஆகையால் சந்திரனார் மட்டும் வந்திருக்கார்.

கொஞ்சம் தள்ளி நின்ற வண்ணம் எடுத்தது!

இன்னிக்கு ஐப்பசி (துலா)மாதக் கடைசி நாள் என்பதால் ஆண்டாளம்மா இன்னிக்குத் தான் கடைசியா காவிரித் தண்ணீரை ரங்குவுக்கு எடுத்துட்டுப் போவாங்க! இன்னிக்கு வந்தப்போ எடுத்த படம்.




தங்கக் குடத்தை எடுக்க நினைச்சுக் கடைசியில் ஆண்டாளம்மா வாழைப்பழம் வாங்கக் கிட்டே வந்ததில் அதை மறந்துட்டேன்! ஹிஹிஹிஹி, எல்லாம் ஒரு பயம் தேன்! :)))))))

Monday, November 14, 2016

ஜூப்பர் மூன்!


இன்னிக்கு சூப்பர் சந்திரன் தெரியும்னு சொன்னாங்களா! காலையிலிருந்து காத்துட்டு இருந்தேன். இன்னிக்குனு பார்த்து ஒரே மேக மூட்டம். என்றாலும் ஐந்தே முக்காலுக்கே மாடிக்குப்போய்க் காத்திருந்தேன்.  ஆறு மணிக்கு மெல்ல எட்டிப் பார்த்தார் சந்திரனார். உடனே ஓரிரு க்ளிக்குகள். முடிஞ்சால் நாளைக் காலம்பரயும் போய்ப் பார்க்கிறேன். நாளைக்குத் தான் நம்ம யானையார் கடைசி நாளாக இங்கே காவிரிக்கு வருவார். புதன்கிழமையிலிருந்து கொள்ளிடத்துக்குப் போவார். அதனால் நாளைக்கு ஆண்டாளம்மாவையும் பார்க்கணும். சந்திரனையும் பார்க்கணும். பார்ப்போம்.

மேகங்கள் மறைக்கத் தான் செய்தன! என்ன செய்ய முடியும். மேலேயும் கீழேயும் அழகாக மேகங்கள்!

ஜூம் பண்ணித் தான் எடுத்திருக்கேன் என்றாலும் நிலா மட்டும் தனியாத் தெரியும்படி எடுக்க முடியலை என்பதோடு இன்னும் பெரிதாகக் காட்டும்படியும் எடுக்கத் தெரியலை. அதோடு மரங்களும், டெலிஃபோன், அலைபேசி கோபுரங்களும் நிறைய இருப்பதால் என்ன தான் அவற்றை நீக்க முயன்றாலும் அவை இடம் பெற்றே தீர்கின்றன.  குறைகளைப் பொறுத்துக் கொள்ளவும். நிலா இன்னும் கொஞ்சம் மேலே வந்ததும் எடுத்திருக்கலாம். ஆனால் அப்போது இந்த அளவுப் பெரிசாத் தெரியுமானு சந்தேகம்! 

Sunday, November 13, 2016

ஏடிஎம் மிஷின்கள் இயங்க இன்னும் 3 வாரங்கள் ஆகலாம்!

பிரதமருக்கு இதில் தனிப்பட்ட லாபம் இருப்பதாகப் பலரும் சொல்கின்றனர். அதைக் கேட்டால் சிரிப்பு வருது! இன்னும் சிலர் அவர் டீக்கடையில் வேலை செய்ததைக் கேலி செய்து டீக்கடைக்காரர் எல்லாம் ஆள வந்தால் இப்படித் தான் என்கின்றனர். பொருளாதார அறிவு அவருக்கு இல்லை என்றும் சொல்கின்றனர். ஒரு விஷயம் மட்டும் தெளிவு. சில்லறையாக நூறு, ஐம்பது, இருபது நோட்டுக்களை வங்கிகளுக்கு விநியோகித்திருக்கலாம். ஆனால் பணம் வங்கியில் போட்டுவிட்டுப் போவது தான் மக்களுக்கும் சிரமம் இல்லை, வங்கிப் பணியாளர்களுக்கும் சிரமம் இல்லை. ஏனெனில் ஒருவர் குறைந்த பட்சமாகப் பத்தாயிரம் போடுகிறார் எனில் அந்தப் பத்தாயிரத்தையும் நூறு ரூபாய் நோட்டுக்களாக இந்தக் கூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் எண்ணி எண்ணிக் கொடுப்பது காசாளர்களுக்குக் கஷ்டமான ஒன்று.

அதற்காகத் தான் உங்கள் பணம் பத்திரமாக இருக்கிறது என்பதை உறுதி செய்யும் விதமாக வங்கியில் பணத்தைக் கணக்கில் சேர்க்கச் சொல்கின்றனர். அதையும் மீறித் தேவைப்படுபவரகளுக்கு 2,000 ரூபாய் நோட்டுகள் கொடுக்கின்றனர். சில்லறைத் தட்டுப்பாடு இருக்கிறது. 2,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லும் என்றாலும் அதை வாங்கிக் கொண்டு சில்லறை கொடுக்க யாரும் தயார் இல்லை. 2,000 ரூபாய்க்கும் பொருள் வாங்கச் சொல்கின்றனர். :) யாருமே அவங்களிடம் உள்ள நூறு ரூபாய், ஐம்பது ரூபாய் நோட்டுக்களை எடுப்பதில்லை! அது தான் பிரச்னையே! எல்லோருமே தங்களிடம் உள்ள ஐநூறு, ஆயிரம் நோட்டுக்களை மற்றவர்களிடம் தள்ளிவிட வேண்டும் என்றே நினைக்கின்றனர். ஏன் அவங்களே போய் மாத்திக்கக் கூடாதா?  வங்கிக் கணக்கு இருந்தால் தான் மாத்தலாம் என்றெல்லாம் இல்லையே!


இதிலே வேடிக்கை என்னன்னா ஆட்டோக்காரரும் எங்களுக்குப் பால் ஊற்றும் இளைஞரும் இதைப் பாராட்டி வரவேற்கிறார்கள் என்பதே! கிட்டத்தட்ட ஒரு பேட்டியே எடுத்தோம். அவங்க சொன்ன சிலவற்றைப் பொதுவில் பகிரமுடியாது! ஆனாலும் அவங்க வரை தெளிவாகவே இருந்தாங்க. இது நல்லது என்று சொல்கிறார்கள்.  பொதுவா நாம ஏழை மக்கள் என்றும் ஏழைகள் தான், அவங்க கிட்டே ஐநூறும் ஆயிரமும் எப்படி இருக்கும்னு சொல்வோம். அதே இந்த மாதிரி வந்துட்டா ஏழை மக்கள் ஐநூறையும் ஆயிரத்தையும் எப்படி மாத்துவாங்க, அவங்களுக்குக் கஷ்டம்னு சொல்லுவோம். ஏழை மக்களிடம் பணமே இருக்காது என்று சொல்லிக் கொண்டிருந்த நாம் இப்போ அவங்க ஐநூறையும், ஆயிரத்தையும் எப்படி மாத்துவாங்க என்று கேட்பது முரண்பாடாக இல்லையா?  என்ன, கொஞ்சம் வரிசையில் நின்று தான் மாற்ற வேண்டும்.  நாம் எல்லாவற்றிற்கும் வரிசையில் தான் நிற்கிறோம். இதுக்கும் நிற்பதில் என்ன வந்தது?

நாம ராகுல் காந்தி மாதிரிப் பெட்ரோலுக்குப் பணம் செலவழித்துக் காரில் வந்து மீடியாவுக்கு எதிரே போஸ் கொடுத்துக் கொண்டா பணம் போடுகிறோம்! அவங்கல்லாம் என்னிக்காவது வரிசையில் நின்றிருந்தார்களெனில் தெரிஞ்சிருக்கும். நாம் குழந்தைகளுக்குப் பள்ளியில் சேர்க்க விண்ணப்பம் வாங்கவே முதல் நாள் இரவிலிருந்து வரிசையில் நிற்போம். சினிமா டிக்கெட் வாங்க, அமெரிக்க விசா வாங்க நாள் கணக்காக நின்றவர்களைத் தெரியும், கோயில்களில் சுவாமி தரிசனத்துக்கு! ஆதார் அடையாள அட்டை பெற, வேலை வாய்ப்பு அலுவலகத்தில், சினிமா டிக்கெட் வாங்க, சமையல் எரிவாயு இணைப்புக்கு, மின்சார பில் கட்ட, டெலிஃபோன் பில் கட்ட, வீட்டு வரி கட்ட, வருமான வரி கட்ட! இன்னும் எத்தனை வேணும்? இதெல்லாம் வாரச் சம்பளக்காரங்களுக்கும், தினக்கூலிக்காரங்களுக்கும் பொருந்தாது என்கின்றனர்.   எத்தனை வாரச்சம்பளக்காரங்க சம்பளம் வாங்கியதும் டாஸ்மாக்குக்கும், சினிமாவுக்கும், ஓட்டலுக்கும் போறாங்க என்பதைச் சொல்ல முடியும்! தினக் கூலிக்காரங்க கூடப் போறாங்க! அவங்களோட பொழுது போக்கே இதானே! ஆகவே அவங்க கிட்டேயும் ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருக்கத் தான் செய்யும்.

ஏடிஎம் இயங்கலைனா அதுக்குக் காரணம் இருக்குனு என்பதை யாரும் புரிஞ்சுக்கலை. அவங்களே எதிர்பார்க்காத அளவுக்குப் புதிய நோட்டுக்களை இப்போதுள்ள ஏடிஎம் தொழில் நுட்பம் ஏற்க மறுக்கிறது. ஆகவே குறைந்த பட்ச அளவான நூறு ரூபாய்களை மட்டும் வைக்கிறாங்க. என்ன பிரச்னைன்னா ஏடிஎம்கள் இயங்காது என்பதை முன்கூட்டி அறிந்திருக்கவில்லை. பழைய நோட்டுகளை விட இப்போதைய 2,000 ரூபாய் நோட்டுகள் அளவில் சின்னது என்பதால் அதை ஏடிஎம் மிஷின்கள் ஏற்க மறுக்கின்றன. குறைந்த அளவிலான நூறு ரூபாய் நோட்டுக்கள் விரைவில் தீர்ந்துவிடுகின்றன. அதான் அனைவருக்கும் கிடைப்பதில்லை. மேலும் பணத்தை ஏடிஎம்மில் நிரப்புவது தனியார் ஒப்பந்ததாரர்கள். அவர்கள் ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு முறை வேண்டுமானால் ஒரு ஏடிஎம்மை நிரப்பலாம். குறையக் குறைய கிட்டே இருந்து நிரப்புவது கடினம். ஏனெனில் அதற்குத் தகுந்த ஆட்கள், காவல், பாதுகாப்பு போன்றவை அவர்களுக்குக் கிடைப்பது கடினம். மேலும் அவர்கள் ஏற்கெனவே 24X7 வேலை செய்கின்றனர். நகரில் ஒரு இடத்தில் மட்டுமா ஏடிஎம்? எத்தனை இருக்கின்றன!

உண்மையில் படித்த அறிவு ஜீவிகள் தான் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கிராமத்து ஏழை, எளிய ஜனங்கள் இல்லை! ஏடிஎம்கள் இயங்க இன்னும் மூன்று வார காலம் ஆகலாம் என்று அரசு அறிவிப்புச் செய்து விட்டது. இதையும் கிண்டல் செய்கின்றனர். மூன்று வாரம் கழித்து மூன்று மாதம் என்றும் மூன்று மாதம் கழித்து மூன்று வருடம் என்றும் சொல்வார்களாம்.  எதிலும் நம்பிக்கை வேண்டும். பொதுவாகத் தெரிவது என்னவெனில் இந்த வரிசையில் நிற்கும் மக்கள் அடித்துப் பிடித்துக் கொண்டெல்லாம் செல்லவில்லை. ஒழுங்காகவே செல்கின்றனர். பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தவில்லை. மக்கள் கட்டுப்பாட்டுடனேயே இருக்கின்றனர். ஆனால் எதிர்ப்பவர்களின் கருத்து மக்கள் மனதைப் பாதிக்காமல் இருக்க வேண்டும்.

முக்கியமாக வங்கிப் பணியாளர்களைக் குறித்துச் சொல்லியே ஆகவேண்டும். அனைவரும் இரவு, பகல் பாராமல் ஒத்துழைப்பதோடு மக்களிடம் கடுமையாகவும் நடந்து கொண்டதாக எங்கிருந்தும் புகார் வரவில்லை. ஆங்காங்கே ஓரிருவர் சொல்லி இருக்கலாமோ தெரியவில்லை. பொதுவாக அனைவரும் மக்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றனர். அரசுக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கின்றனர். இதற்கு வங்கிப் பணியாளர்களைப் பாராட்டியே ஆகணும். இதுக்கும் ஒரு சிலர் இப்போத் தானே வேலையே செய்யறாங்க என்று கேலி செய்கின்றனர். அவங்க வேலை செய்யாமல் பணப் பரிவர்த்தனை எப்படி நடந்தது என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. அன்றாட வரவு, செலவுக்கணக்கை ஒழுங்காகக் காட்டாமல் எந்த வங்கிப் பணியாளரும் தன் இடத்திலிருந்து வெளியேற முடியாது. அவங்க சொல்லும் கணக்குகள் பொது மேலாளர் மற்றும் தலைமைக்காசாளர் ஆகியோரின் கணக்குகளோடு ஒத்து இருந்தாக வேண்டும்! பல சமயங்களிலும் இரவு எட்டு, ஒன்பது மணி கூட ஆகும் வீட்டுக்குத் திரும்ப! 

Saturday, November 12, 2016

நோட்டுக்களை மாத்தியாச்சா?

நான்கு நாட்களாக தேசமே அல்லோலகல்லோலப் படுது! எல்லோரும் இதே பேச்சு! முகநூல், ஜி+, பதிவுகள் என எல்லாவற்றிலும் இதைக்குறித்தே ஆலோசனைகள்! கேள்விகள், பதில்கள்! எல்லாம் இந்த ரூபாய் நோட்டு விஷயம் தான் சொல்றேன். ஒரு விஷயம் முக்கியமாச் செய்திருக்கணும். எதுனு கேட்கறீங்களா? இப்போச் சொல்லப் போவது ரூபாய் நோட்டுக்கள் குறித்து தான்! ஆயிரம், ஐநூறு செல்லாது என அறிவிச்சவங்க அதை மாற்றுகையில் மக்களுக்குப் பயன்படும் வகையில் நூறு, ஐம்பது, இருபது, பத்து ரூபாய் நோட்டுக்களை நிறைய இருக்குமாறு வங்கிகளுக்கு வழங்கி இருக்கணும். ஆனால் அதிலே ஒரு சிரமம் இருக்கத் தான் செய்யும். எல்லாருமே குறைந்த பட்சமாகப் பத்தாயிரம் மதிப்புள்ள ஆயிரம், ஐநூறு நோட்டுக்களை மாற்றுகையில் எல்லோருக்கும் அந்தக் கூட்டத்தில் நூறு, ஐம்பது, இருபது ரூபாய்களை அந்த மதிப்பின்படி  எண்ணிக் கொடுப்பது சாத்தியமில்லை. ஆகவே பணத்துக்குப் பணம் என்னும் பேச்சுப்படி கொடுக்கும் பணத்தின் மதிப்பைத் திரும்பக் கொடுக்கின்றனர். ஆனால் அதை மாற்றுவது என்பது கையில் வேறே பணமே இல்லாதவர்களுக்குச் சிரமம் தான்.
ஆயிரம் ரூபாய் நோட்டு க்கான பட முடிவு  ஐநூறு  ரூபாய் நோட்டு க்கான பட முடிவு

பழைய ஐநூறு நோட்டுக்களில் போலி அதிகம் இருப்பதால் புது நோட்டுக்களை இன்னமும் புழக்கத்தில் விடவில்லை. கொஞ்ச நாட்கள் ஆகும் என்கிறார்கள். ஆனால் சாமானிய மக்கள் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை வைத்துக் கொண்டு செய்வதறியாமல் விழிக்கத் தான் வேண்டி இருக்கிறது. இப்போ எங்களிடம் இருந்த குறைந்த பட்சத் தொகையான ஆயிரம், ஐநூறு நோட்டுக்களை டெபாசிட் செய்து விட்டோம். அதற்கு வங்கியில் இருந்து நாலாயிரம் ரூபாயே எடுக்க முடிந்தது. இப்போக் கையில் இருப்பது அந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் இரண்டு தான். மருந்து வாங்கணும், அரிசி மற்றச் சில பொருட்கள் வாங்கணும். இரண்டாயிரத்தைக் கொடுத்தால் அவங்க திருப்பிச் சில்லறை கொடுக்கையில் ஐநூறு ரூபாய் நோட்டுக்களைத் தான் கொடுப்பேன்னு அடம் பிடிக்கிறாங்க. அரிசி வேண்டுமானால் வாங்காமல் சமாளிக்கலாம். மருந்து வாங்க என்ன செய்வது? மருந்துக்கடையிலும் ஐநூறு ரூபாயாகத் தான் சில்லறை தருவேன் என்கிறார்கள்.

யாருமே அவர்களிடம் உள்ள நூறு ரூபாய்த் தாள்களைப் புழக்கத்தில் விடுவதற்கு யோசிக்கின்றனர். இந்த அறிவிப்பால் இந்த ஒரு சிரமம் இருக்கத் தான் செய்கிறது. மற்றபடி இதுவும் தாற்காலிகமானதே! மருந்துக்கடையில் வழக்கமான வாடிக்கையாளர் என்பதால் பணம் பின்னால் தருகிறேன் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் எல்லோருமே தங்களிடம் இருக்கும் பணத்தை வங்கியில் போய் மாற்றாமல் தங்களிடம் பொருட்கள் வாங்குபவர்களிடம் தள்ளி விடலாம் என்று நினைப்பது சரியல்ல. அரசாங்கமோ அனைவருமே வந்து மாற்றிக் கொள்ளலாம் என்று தானே சொல்லி இருக்கிறது. அப்படி இருக்கையில் வாடிக்கையாளர்களுக்குச் சில்லறை கொடுத்தால் என்ன? 

புதிய இரண்டாயிரம்  ரூபாய் நோட்டு க்கான பட முடிவு

இத்தனை வருடங்களாக இடதுசாரியாக இருந்த காந்தி இந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டின் மூலம் வலது சாரியாகி விட்டார்! :)

படங்களுக்கு நன்றி கூகிளாண்டவர்!

மற்றபடி இந்த அறிவிப்பு தேசத்துக்கு நன்மை தரக் கூடிய ஒன்றே என்று அனைவருமே ஒப்புக் கொள்ளுவதோடு எல்லா வங்கிகளும் வங்கிக்கிளைகளும் இந்த விஷயத்தில் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதும் உண்மையிலேயே பிரமிப்பைத் தருகிறது. எல்லோருக்குமே ஓர் உத்வேகம் தோன்றி இருக்கிறது. ஆகவே முழு முனைப்புடன் இதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். இதை எதிர்ப்பவர்களும் உண்டு. முக்கியமாய் எதிர்க்கட்சிகள் மற்றும் ஒரு சில தலைவர்கள். என்றாலும் அவர்கள் குரல் அத்தனை எடுபடவில்லை என்பதே உண்மை.  முகநூலில் ஒருத்தர் இந்த விஷயத்தை ஐஎஸ் ஐஎஸ்ஸினால் பாதிப்புற்ற ஓர் சிறுவனோடு ஒப்பிட்டுக் காட்டி இருக்கிறார்.  அதிலும் பிரதமரை," டீக்கடைக்காரன்" என்று அழைத்து, டீக்கடைக்காரன்  செய்த கொடுமை என்றும் சொல்லி இருக்கிறார்.

எல்லோருமே பிறக்கும்போது வாயில் வெள்ளி ஸ்பூனுடன் பிறக்க முடியாது. ஆகவே 1978 ஆம் ஆண்டில் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த காலத்தில் எச்.எம்.படேல் என்னும் அருமையான நிதி மந்திரியின் காலத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவு இதே போன்றது. அப்போதும் ஆயிரம் ரூபாய், பத்தாயிரம் ரூபாய்கள் செல்லாது என்ற அறிவிப்புச் செய்யப்பட்டது, ஓர் பணக்காரர் இதைக் கேட்டு மாரடைப்பினால் இறந்தார் என்றும் சொல்லுவார்கள்.  அதற்கு முன்னர் 1946 ஆம் ஆண்டிலே இருந்த பிரிட்டிஷ் சர்க்காரினால் இம்மாதிரி ஒரு அறிவிப்புச் செய்யப்பட்டது. அப்போது நூறு ரூபாய்கள் என்று நினைக்கிறேன்.  அதன் பின்னர் இத்தகைய துணிச்சலான முடிவு டீக்கடைக்காரர் என்பதால் மோதியினால் தான் எடுக்க முடிந்திருக்கிறது. இதன் நன்மைகள் அநேகம்! பதிவு நீண்டு விடும். ஆகவே அனைவரும் தேசத்துக்காக நமக்கு ஏற்படும் சின்னச் சின்ன சிரமங்களைப் பொருட்படுத்தாமல் ஒன்று சேர்ந்து ஒத்துழைப்போம். 

இந்தச் சமயத்தில் தான் பலரும் பல விதங்களில் உதவி செய்வதைப் பார்க்கவும் முடிகிறது. சில கடைகளில் வலுவில் அவர்களே ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வாங்கிக் கொண்டு சில்லறை கொடுக்கிறார்கள். திருநெல்வேலியில் ஒரு ஓட்டலில் யாரும் பணமே கொடுக்காமல் இலவசமாகச் சாப்பிடலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். வங்கி அதிகாரிகளும் வங்கி ஊழியர்களும் ரிசர்வ் வங்கியின் தென் மண்டல இயக்குநரும் திரும்பத் திரும்பத் தொலைக்காட்சியில் இது குறித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்கின்றனர். முன்னாடியே சொல்லிட்டு நேரம் கொடுத்துச் செய்திருக்கணும்னு பலருக்கும் எண்ணம். அப்படிச் செய்தால் கறுப்புப் பணம் பதுக்கப் பட்டிருப்பது அவசரம் அவசரமாக நகைகளாக தங்கமாக பொருட்களாக மாற்றப் பட்டிருக்கும் வெளி வராது. எல்லோரும் ஜாக்கிரதைப் படுத்தப்படுவார்களே! அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று தானே இந்த தடாலடி வேலையே! 

இதை மூட்டை மூட்டையாக வைத்திருந்தவர்களுக்குத் தான் அதிர்ச்சியே! நம்போன்ற சாமானியர்களுக்கு இல்லை. ஆகவே யாரும் எதுக்கும் கவலைப்படாமல் இருந்தாலோ போதும். அடுத்த வருடம் மார்ச் 31 ஆம் தேதி வரை இந்த நோட்டுக்களை மாற்ற நேரம் இருக்கு! நிதானமாக் கூட்டம் இல்லாத நேரத்திலே போய் மாத்திக்கலாம்! அப்புறமா இன்னொண்ணும் சொல்ல விட்டுப் போச்சு. ஸ்விஸ் பாங்கிலே இருந்த கறுப்புப் பணத்தை இங்கே கொண்டு வந்து மக்களுக்கெல்லாம் 15 லட்சம் கொடுக்கிறதா மோதி சொல்லி இருந்தாரே, கொடுத்தாரா என்னும் கேள்வி! ஸ்விஸ் பாங்கில் இருக்கும் பணத்தை விநியோகம் செய்தால் இந்திய மக்கள் தொகைக்கு ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் வரும் அளவுக்கு இருக்கிறது என்று தான் சொன்னதே! எல்லோருக்கும் கொடுக்கிறேன்னு எல்லாம் சொல்லலை! அதோடு அங்கே இருந்து பணத்தை மூட்டையாவா கட்டி எடுத்து வர முடியும்? அது எந்த உருவிலே இருக்குனு பார்த்து அதைச் சொந்தக்காரங்க சரியாகச் சொன்னால் அதற்கேற்றபடி வரி விதிப்பாங்க. அதான் நடக்கும்!

தொலைக்காட்சி சானல்களும், மற்றத் தலைவர்களும் இதில் பல குறைகளைக் கண்டாலும் பொதுவில் மக்கள் ஒத்துழைப்பு இருக்கத் தான் செய்கிறது. அதுவும் இங்கே முதியோருக்குத் தனியாகக் கூப்பிட்டு அவங்க பணத்தை மாற்றிக் கொடுக்கிறார்கள். மற்ற இடங்களிலும் அப்படியே செய்வதாகப் பலரும் கூறுகின்றனர். இவ்வளவு பெரிய நாடு, மக்கள் என்னும்போது ஆங்காங்கே ஓரிரு இடங்களில் தவறு நடக்கலாம். அதைச் சரி செய்ய முனைய வேண்டும். பிஜேபி அமைச்சர் மகள் கைகளில் இரண்டாயிரம் ரூபாய்க் கட்டுக்களை வைத்துக் கொண்டு காமிராவுக்கு போஸ் கொடுப்பது போன்றதொரு படம் வாட்ஸப்பிலும் முகநூலிலும் வைரலாகப் பரவி வருகிறது. உண்மையில் அது அந்த அமைச்சரின் மகளே இல்லை. அந்த அமைச்சருக்கு மகளே இல்லையாம். மகன்கள் தானாம். ரிசர்வ் வங்கியிலிருந்து மற்ற வங்கிகளுக்குச் செல்லும் பணம் பண்டில் பண்டிலாகக் காணக் கிடைப்பதை இப்படிப் படம் போட்டு மனதைத் தேற்றிக்க முயல்கின்றனர்.  படத்தைப் பெரிது பண்ணிப் பார்த்தால் இது ரிசர்வ் வங்கியின் செஸ்ட் என்பதும் அங்கிருந்து ஆக்சிஸ் வங்கி மற்றும் பாங்க் ஆஃப் இந்தியாவுக்குச் செல்லும் பண்டில்கள் என்பதும் தெரிய வருகிறது.

தகவலுக்கு நன்றி: திருமூர்த்தி வாசுதேவன்

Thursday, November 10, 2016

கடவுள் இருக்கான் கொமாரு!

எதாக இருந்தாலும் சரி, இறைவன் துணை இருந்தால் சரியாகும் என்பதைக் கடந்த சில மாதங்களாக உணர முடிகிறது. எதிலும் மனம் பதியாமல் தவிப்புடன் இருந்து வந்த காலம் மாறும் என்னும் நம்பிக்கை தோன்றுகிறது. கூப்பிட்ட குரலுக்கு இறைவன் வருவான் என்பது உண்மை என்பதோடு அதைப் பூரணமாக உணர்ந்த நாட்கள்! ஒவ்வொரு நாளும் உணர முடிகிறது.  இந்த 2016 ஆம் வருடம் பிறந்தது கூடச் சரியாக நினவில் இல்லாமல் ஓடி விட்டது. இப்போது வருடம் முடியவும் போகிறது. கழிந்து போன நாட்கள் அனைத்தும் மறக்க முடியாத நாட்கள்! இன்னும் சொல்லப் போனால் என்னால் இணையத்தில் அதிகக் கவனம் செலுத்த முடியாமல் போன நாட்கள்! பதிவுகள் போடுவதைத் தள்ளிப் போட்டு வந்த நாட்கள்! எத்தனையோ பதிவுகள் ட்ராஃப்ட் மோடிலேயே இருக்கின்றன. அவற்றை வெளியிடவும் மனம் இல்லாமல் போய்விட்டது! :)

 இன்னிக்குக் கூடப் பாருங்க! சமைக்கும்போது பிரச்னை!

காலம்பர வழக்கம் போல் சமைக்க ஆரம்பித்துக் குக்கரை அடுப்பில் வைத்தேன். ரங்க்ஸ் கொஞ்சம் வெளியே செல்வதாகச் சொல்லிட்டுச் சென்றார். அவர் கீழே இறங்கி இருப்பார், இங்கே எரிவாயு தீர்ந்து போயாச்சு! ஒரு காலத்தில் சிலிண்டரை நானே தான் மாட்டிக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் என்னை சிலிண்டர் பொருத்த விடாமல் ரங்க்ஸே பொருத்துகிறார். ஆகவே அவர் வரணும். அடுப்பில் ஒரு  பக்கம் குக்கரும், இன்னொரு பக்கம் காய்கள் வேகவும் வைச்சிருந்தேன். இப்போ என்ன செய்யறதுனு ஒரு கணம் யோசனை. ரங்க்ஸ் முக்கியமான வேலையாப் போனதால் கூப்பிடுவது கஷ்டம்! ஆனால் நல்ல வேளையா   மின்சாரம் இருந்தது.  ரைஸ் குக்கர் கீழே இருந்திருந்தா அதிலே சாதத்தை மாற்றிட்டு இன்டக்‌ஷனில் மற்றவற்றைச்  சமைச்சிருக்கலாம். ஆனால் ரைஸ் குக்கர் மேலே இருந்தது. என்னால் ஏறி எடுக்க முடியாது. ஆகவே இன்டக்‌ஷனிலேயே குக்கரையும் வைச்சுடலாம்னு  நினைச்சேன்.

உண்மையிலேயே நல்லவேளைதான். ஏனெனில் பத்து நாட்களாக் காலை சமையல் ஆரம்பிக்கிறச்சே போகும் மின்சாரம் சமையல் முடிச்சும் வராது! சாப்பிடும்போது தான் வரும். குறைந்தது இரண்டு மணி நேரம்! இன்னிக்கு மின்சாரம் இருப்பதே கடவுள் செயல் தான் என நினைத்துக் கொண்டு குக்கரை இன்டக்‌ஷன் ஸ்டவுக்கு மாற்றினேன். இரண்டே நிமிடத்தில் குக்கர் விசில் அடிச்சுக் கூப்பிட்டது. பின்னர் காய்களையும் ஓர் அடி தட்டையான எவர்சில்வர் பாத்திரத்தில் மாற்றினேன். எனக்கு இந்த எவர்சில்வரில் சமைக்கவே பிடிக்காது. பாரம்பரியப் பாத்திரங்கள் தான் பயன்படுத்துவேன். குழம்பு வைக்கக் கல்சட்டி, ரசம் வைக்க ஈயச் சொம்புனு. காய்கள் வேக வைக்கவும்   செப்பு அடியில் பதிக்கப்பட்ட ஒரு பாத்திரம் இருக்கு! அது அடி கனம் என்பதால் அதில் வேக வைப்பேன். அதை இன்டக்‌ஷனில் வைக்க முடியாது. ஆகவே எவர்சில்வர் பாத்திரத்தில் மாற்றிக் காய்களைச் சமைத்தேன்.

ரசம் வைக்கவும் இன்னொரு எவர்சில்வர் பாத்திரம் எடுத்துக் கொண்டு அதில் வைத்தேன். மைசூர் ரசம்! இன்னிக்கு ரசமும், இரண்டு மூன்று காய்கள் மட்டும் சேர்த்து அவியல் மாதிரியும் பண்ணினேன். அவ்வளவு தான்! ஆகவே அதுவும் சீக்கிரம் கொதிக்க ஆரம்பிச்சது. சமையல் எப்போதும் போல் அரை மணி நேரத்துக்குள் முடிந்து விட்டது. இரும்புச் சட்டி, இரும்புக் கரண்டி ஆகியன இன்டக்‌ஷனில்வைக்கலாம். கரண்டி நிற்கவில்லை. ஆகவே சின்ன இரும்புச் சட்டியை வைத்து ரசத்துக்குத் தாளித்தேன். சமையல் முடிஞ்சது. ரங்க்ஸும் வந்தார். சிலிண்டரும் போட்டாச்சு. சமையல் பிரச்னைக்குத் தீர்வும் கிடைச்சது. :) அது மாதிரி ஒவ்வொரு பிரச்னையாகத் தீர்வு கிடைக்கணும்;கிடைக்கும். எல்லாத்தையும் பெரிய ரங்கு பார்த்துட்டுத் தானே இருக்கார்.


இப்போக் கொஞ்சம் பொழுதுபோக்குக்கு! :) ரொம்பவே சீரியஸா இருந்துட்டா நல்லா இருக்காதே! :)


இது தான் நான் ரசம் வைக்கும் ஈயக் கிண்ணம்

இப்போ இன்னிக்கு வைச்ச மைசூர் ரசம் பத்திப் பார்ப்போமா?  இது எங்க வீட்டிலே என் தம்பி மனைவி செய்யும் முறை. என் மாமியார் வீட்டிலே வேறே மாதிரிச் செய்வாங்க.அவங்க வைக்கிற  ரசம் நான் வைக்கிற சாம்பார் மாதிரி நீர்க்கவும் இல்லாமல் கெட்டியாவும் இல்லாமல் நிதானமா அடியிலே சாம்பார், மேலே ரசம்ங்கற பக்குவத்தில் இருக்கும். பருப்பு நிறையப் போடுவாங்க! மைசூர் ரசம்னாக் கேட்கவே வேண்டாம். பருப்பு அடியில் கெட்டியாக நிறைய இருக்கும். ஆனால் என் தம்பி மனைவி பண்ணினாலும், நான் பண்ணினாலும் ரசம் நீர்க்க ரசமாகத் தான் இருக்கும். பருப்புப் போட்டுத் தான் பண்ணுவோம். ஆனாலும் ரசம் அடியிலிருந்து ஒன்று போல் இருக்கும்.  அதற்குக் காரணம் வறுத்து அரைக்கும் பொருள்களில் உள்ள சின்ன மாற்றம். நீங்க துவரம்பருப்பு வறுத்து அரைக்கும் பொருள்களில் சேர்த்தால் ரசம் நீர்க்க வரும். அதே கடலைப் பருப்பு வறுத்து அரைச்சால் ரசம் கெட்டியாக இருக்கும். ரசப்பொடி செய்யும்போதும் அப்படித் தான்! துவரம்பருப்பு மட்டும் சேர்க்கணும். மிவத்தல் நூறு கிராம்னா கால்கிலோ தனியா போட்டுட்டு துபருப்பு 200 மிளகு நூறு னு சேர்த்துட்டு அதையும் வெறும் வாணலியில் வறுத்து மிஷினில் கொடுத்துத் திரிச்சுட்டு வைச்சா  ரசம் ரசமாக வரும். நான் கொத்துமல்லி விதை  இன்னும் கொஞ்சம் கூடச் சேர்ப்பேன். ஆனல் துபருப்புப் போட்டும் மேலே கடலைப்பருப்பும் போட்டால் அது ரசமா, சாம்பாரானு யோசிக்கணும்! அதுவே சாம்பாருக்கு வறுத்து அரைக்கையில் மிவத்தல், தனியா, கடலைப்பருப்பு, வெந்தயம், உபருப்பு வறுத்து அரைத்தால் சாம்பாருக்கு மாவு எல்லாம் கரைச்சு ஊற்றாமலேயே கெட்டியாக வரும்.  இப்போ இன்னிக்குச் செய்த மைசூர் ரசம் செய்முறை!

ரசம் அடுப்பில் கொதிக்கையில் எடுத்த படம்! :)

இரண்டு சின்ன மி.வத்தல்
ஒரு டேபிள் ஸ்பூன் கொத்துமல்லி விதை
 அரை டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பு
மிளகு ஒன்றரை டீஸ்பூன்
ஒரு டீஸ்பூன் ஜீரகம்
பெருங்காயம் ஒரு துண்டு
தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன்
எல்லா சாமான்களையும்  எண்ணெயில் வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்.

புளி ஒரு சின்ன எலுமிச்சை அளவு எடுத்துக் கரைத்துக் கொள்ளவும். புளிச்சாறு ஒரு கிண்ணம் இருக்கலாம்.
தக்காளி (தேவையானால் சின்னதாக ஒன்று)
பச்சை மிளகாய் சின்னதாக ஒன்று
உப்பு தேவையான அளவு

தாளிக்க நெய் இரண்டு டீஸ்பூன், கடுகு, சின்ன மிவத்தல், கருகப்பிலை, கொத்துமல்லி

துவரம்பருப்புக் குழைய வெந்தது ஒரு டேபிள் ஸ்பூன் அல்லது சின்னக் கிண்ணம் ஒன்று

துவரம்பருப்பில் மஞ்சள் பொடி சேர்த்துக் குழைய வேக வைக்கவும். புளிச்சாறில் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கருகப்பிலை, பச்சைமிளகாய், தக்காளி சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு புளி வாசனைபோகக் கொதித்ததும் வெந்த பருப்பை நன்றாக நீர் விட்டுக் கரைத்துத் தேவையான அளவுக்கு விளாவவும். வறுத்து வைத்துள்ள பொடியைச் சேர்க்கவும். ஒரு கொதி விடவும். கீழே இறக்கி வைத்து நெய்யில் கடுகு, மிவத்தல் கருகப்பிலை போட்டுப் பொரித்துத் தாளிதத்தை ரசத்தில் சேர்க்கவும். கொத்துமல்லி தூவிச் சூடான சாதத்துடன் பரிமாறவும்.

 ரசம் கெட்டியாக வேண்டுமானால்

இரண்டு மிவத்தல், தனியா, கடலைப்பருப்பு இரண்டு டீஸ்பூன், மிளகு மட்டும் ஒரு டீஸ்பூன் சேர்த்துப் பெருங்காயம் தேங்காயுடன் வறுத்து அரைத்துக் கொள்ளவும். புளிச் சாறைக் கொதிக்க விடுகையில் வீட்டில் இருக்கும் சாம்பார்ப் பொடி அல்லது ரசப்பொடியில் ஒரு டீஸ்பூன் பொடி போட்டுக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் அரைத்த விழுதைப் போட்டுக் கலந்து கொதிக்கவிட்டுத் துவரம்பருப்பை நீர் சேர்த்துக் கரைத்துக் கொண்டு ரசத்தில் சேர்க்கவும். இது கொஞ்சம் கெட்டியாக இருக்கும். தாளிதம் மேற்சொன்ன மாதிரித் தான்.


ஹிஹிஹி, நீங்க பாட்டுக்குத் திரைப்படம் பத்தித் தான் நான் எழுதி இருக்கேன்னு  நினைச்சுட்டு வந்தா அதுக்கு நானா  பொறுப்பு! நாங்க அப்படி எல்லாம் எழுதிடுவோமா! :))))

Monday, November 07, 2016

பிடிச்சுட்டோமே ஆண்டாளம்மாவை! விடுவோமா! :)

அம்மா மண்டபத்திலிருந்து ஆண்டாளம்மா கிளம்பி இருக்காங்க. கொஞ்சம் தூரத்தில் தெரியும்.  பழக்கப்பட்ட கண்களுக்கு மட்டுமே தெரியும்.



வராங்க, வராங்க!



இதோ கொஞ்சம் கிட்டத்தில் வந்தாச்சு!




நம்ம குடியிருப்பு வாசலுக்கு வந்திருக்காங்க



 கோயிலை நோக்கிச் செல்லும் ஆண்டாளம்மாள்.

இந்தத் துலா மாதம் முழுவதும் ஆண்டாளம்மாள் காவிரி நீரைக் கொண்டு போனதும் தான் கோயிலில் விஸ்வரூப தரிசனமே நடக்குமாம். அடுத்த மாதத்திலிருந்து கொள்ளிடத்து நீர் வருடம் முழுவதும் செல்லும். துலா மாதம் மட்டும் காவிரி நீர்!