எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, September 21, 2017

நவராத்திரி இரண்டாம் நாளுக்கான குறிப்புகள்!

   ராஜராஜேஸ்வரி க்கான பட முடிவு
அன்னை ராஜராஜேஸ்வரி படத்துக்கு நன்றி கூகிளார் வாயிலாக மணிராஜ் தளம்
நவராத்திரி இரண்டாம் நாளன்று அம்பிகையை  திரிபுரா வாக வழிபட வேண்டும். சிலர் கௌமாரியாகவும் வழிபடுவார்கள்.
 கௌமாரி க்கான பட முடிவு
படத்துக்கு நன்றி கூகிளார் வாயிலாக மணிராஜ் தளம்:

 பெயர்கள் தான் வேறு, அம்பிகையின் ஸ்வரூபம் ஒன்றே. இன்றைய தினம் அம்பிகையை  ராஜ ராஜேஸ்வரியாக அலங்கரிக்க வேண்டும்.  மூன்று வயதுப் பெண் குழந்தையை திரிபுராவாகப் பாவித்து வழிபட வேண்டும். இன்றும் மஞ்சள், சிவப்பு மலர்கள் அம்பிகைக்கு ஏற்றது. கொன்றைப்பூக்கள் கிடைத்தால் விசேஷம். இன்று வழிபடவேண்டிய தேவி ப்ரஹ்மசாரிணி ஆவாள்,
 ப்ரஹ்மசாரிணி க்கான பட முடிவு
ப்ரஹ்மசாரிணி படத்துக்கு நன்றி கூகிளார்

ஆகையால் துளசி பத்ரம் கிடைத்தாலும் நன்று, மஞ்சள் வஸ்திரத்தைக் குழந்தைக்கு அணியத் தரலாம்.

அரிசி மாவு அல்லது கோதுமை மாவினால் கட்டங்கள் அல்லது பூக்கள் நிரம்பிய கோலம் போடலாம். மஞ்சள் நிறமுள்ள சாமந்திப் பூக்களும் மஞ்சள் நிறமுள்ள முல்லைப் பூக்களும் அர்ச்சனைக்கு உகந்தவை. இன்றைய நிவேதனம் காலையில் புளியோதரை. மாலையில் பயறுச் சுண்டல்.

புளியை எலுமிச்சை அளவு எடுத்து ஊற வைத்துக் கொண்டு சாறு எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு (நல்லெண்ணெய்) மி.வத்தல், கொத்துமல்லி விதை, பெருங்காயம் வறுக்கவும். இன்னொரு வாணலியில் எண்ணெய் விடாமல் எள், கடுகு, வெந்தயம் வறுக்கவும். இவற்றை வறுத்த மி.வத்தல், தனியாவோடு சேர்த்துப் பொடித்து வைக்கவும். கல்சட்டி அல்லது உருளி அல்லது கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு முதலில் தேவையான மி.வத்தலைப் போட்டுக் கறுப்பாக ஆகும்வரை வறுக்கவும். இம்முறையில் மி.வத்தலில் காரம் அதிகம் புளிக்காய்ச்சலில் இறங்காது. மிளகாய் கறுப்பானதும் கடுகு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, கொண்டைக்கடலை என அவரவர் விருப்பம் போல் தாளிக்கவும். கருகப்பிலை, பெருங்காயம் சேர்க்கவும். மஞ்சள் பொடி தேவையான அளவு சேர்க்கவும். ஒரு டீஸ்பூன் தேவைப்படும். கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றிக் கொண்டு உப்புச் சேர்க்கவும். நன்கு கொதித்துச் சேர்ந்து வரும்போது வறுத்துப் பொடித்த பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் சேர்க்கவும். புளிக்காய்ச்சலுக்கு வெல்லம் சேர்ப்பவர்கள் சேர்க்கலாம். கொதித்துச் சேர்ந்ததும் கீழே இறக்கி வைக்கவும்.

சாதத்தை உதிராக வடித்துக் கொண்டு நல்லெண்ணெய் ஊற்றிக் கிளறி வைக்கவும். ஆறியதும் ஒரு டேபிள் ஸ்பூன் புளிக்காய்ச்சலைப் போட்டு நன்கு கலக்கவும். தேவையானால் இன்னும் கொஞ்சம் சாதம் அல்லது புளிக்காய்ச்சல் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

பயறுச் சுண்டல்: முதல் நாள் இரவே பயறை ஊற வைக்கவும். மறுநாள் காலை இரண்டு மூன்று தரம் களைந்து வைக்கவும். பின்னர் சுண்டல் செய்யும் நேரத்தில் ஒரு குக்கரில் தேவையான அளவு ஜலம் வைத்துப் பயறை மீண்டும் நன்கு களைந்து உப்புச் சேர்த்து வேக வைக்கவும். நான்கு விசில் கொடுத்தால் போதுமானது. பின்பு குக்கரைத் திறந்து ஜலத்தை வடிகட்டி விட்டுச் சுண்டலுக்குத் தாளிக்க வேண்டும்.

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு, பெருங்காயம், மிவத்தல், கருகப்பிலை தாளிக்கவும். வெந்த பயறை அதில் கொட்டவும். தேவையானால் ஒரு ஸ்பூன் சாம்பார்ப் பொடி சேர்க்கலாம். சற்று நேரம் சுண்டலை வதக்கிக் கொண்டு தேங்காய்த் துருவலைச் சேர்க்கவும். நன்கு கிளறவும். நிவேதனம் செய்த பின்னர் பரிமாறவும்.  

நமஸ்கார ஸ்லோகங்கள்: இதைத் தினமும் காலை, மாலை இருவேளையும் கூடச் சொல்லலாம். நவராத்திரிக்கு என்று வைத்துக் கொள்ள வேண்டாம்.
1. யாதேவி ஸர்வபூதேஷு விஷ்ணு மாயேதி ஷப்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைத்து உயிர்களிடத்தும் விஷ்ணு மாயை உருவில் உறைந்திருக்கின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள். இந்த யோக மாயா என்பவளே காலி, காளி எனப்படுவாள். மாரி என்றும் சொல்லப் படுவாள். கருமாரி என்பவளும் இவளே. கருவிலே அந்த ஆதிநாராயணன் குழந்தையாக தேவகியின் வயிற்றில் இருந்து வெளியே வந்தவன், மாறி, அல்லது மாற்றப்பட்டு அந்த இடத்துக்கு விஷ்ணுமாயா வந்து சேருகின்றாள். ஆகவே கருமாறி வந்ததால் கருமாரி என்று சொல்லலாமோ??? இவள் கம்சனின் பிடிக்கும் அகப்படாமல் தப்பித்துச் செல்கின்றாள். பெண் குழந்தையாகிய இவளைக் கொல்ல இரு கால்களையும் பிடித்துக் கொண்டு கம்சன் வாளை உருவுகின்றான். என்ன ஆச்சரியம்?? அதோ! தேவி! பூர்ண அலங்கார பூஷிதையாக கம்சனின் தோளுக்கு மேலே, மேலே, மேலே, மேலே தோன்றுகின்றாள் அன்றோ!! கம்சனின் வாழ்வு முடியப் போகின்றது என எச்சரிக்கையும் கொடுத்து, அவன் திருந்த ஒரு சந்தர்ப்பமும் கொடுக்கின்றாள் அல்லவா?? அந்தக் கருணைத் தேவிக்கு நமஸ்காரங்கள்.

2. யா தேவி ஸர்வபூதேஷு சேதனேத்பிதீயதே
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிலும், தாவரங்களிலும், மரம் செடி, கொடிகளிலும், பறப்பன, ஊர்வன, மிதப்பன, காட்டு மிருகங்கள், மனிதர்கள் என அனைத்து ஜீவராசிகளிலும் உறைந்திருக்கும் உயிர்ச்சத்தாக, ஜீவசக்தியாக, ஆன்மாவாக இருக்கின்றாளோ அந்தத் தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள். இந்த உலகம் இயங்க சக்தி தேவைப்படுகின்றது. விளக்கு எரியவும், மழை பொழியவும், காற்று வீசவும், வெயில் அடிக்கவும், நிழல் தோன்றவும் என அனைத்திற்கும் சக்தி தேவைப்படுகின்றது. இப்படி அனைத்துச் சக்திகளிலும் உறைந்திருப்பவள் அந்த ஆதிபராசக்தியானவளே. அவளுக்கு நமஸ்காரங்கள்.

3. யாதேவி ஸர்வ பூதேஷு புத்திரூபிணே ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும் புத்தியாக, ஞானமாக இருக்கின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள். இங்கே புத்தி எனப்படுவது வெறுமே கற்றறியும் திறமையை மட்டுமே சுட்டுவது அல்ல. பார்க்க, கேட்க, நினைக்க, தெளிய, அறிய, சிந்திக்க, ஆலோசிக்க, பகுத்தறிந்து புரிந்து கொள்ள என அனைத்துக்கும் தேவைப்படுவது புத்தி என்று கொள்ள வேண்டும். இது சரியாக இல்லை எனில் ஏதாவது ஒரு குறை கட்டாயமாய் வாழ்க்கையில் ஏற்படுகின்றது. ஆகவே நம் தேவைகள் சகலத்துக்கும் சரியான புத்தியைக் கொடுப்பவள் அந்த அம்பிகையே!அந்த புத்தி உருவில் உறைபவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

4. யா தேவி ஸர்வபூதேஷு நித்ரா ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

எந்த தேவியானவள் அனைவரிடத்திலும், எல்லா உயிர்களிடத்திலும் நித்திரை வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.
இங்கே தூங்குவதைக் குறித்துக் கூடத் தேவியா என எண்ணினால் ஆம், தேவியே தான். அநேகமாய் நித்திராதேவி ஆக்கிரமித்துக் கொண்டாள் என பல எழுத்தாளர்களும் தூங்குவதைக் குறிப்பிட்டு எழுதுவதைக் கண்டிருக்கின்றோம் அல்லவா?? அந்த நித்திரையும் சாமானியமாய் மனிதருக்கு வந்து விடுகின்றதா என்ன??? எல்லாருமேவா நன்றாய்த் தூங்கி விழிக்கின்றார்கள்?? இல்லையே! பலருக்குத் தூக்கமே வருவதில்லை அல்லவா?? அப்படி நல்ல தூக்கத்தைக் கொடுக்கக் கூடிய சக்தியாக உறையும் தேவியை தினமும் இரவில் நினைத்து நமஸ்கரித்து அனைத்தையும் அவள் பாதாரவிந்தங்களில் அர்ப்பணித்துப் படுத்தால் தேவி தூக்க வடிவில் நம்மை ஆக்கிரமிப்பாள். அந்த தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

5. யா தேவி ஸர்வபூதேஷு க்ஷுதாரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம!

எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிடத்திலும் பசி வடிவில் உறைகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள். மனிதர் மட்டுமின்றித் தாவரங்களுக்கும், மிருகங்களுக்கும், பட்சிகளுக்கும், ஊர்வன என அனைத்து உயிர்களுக்கும் உணவு தேவைப்படுகின்றது. தேவையான சமயத்தில் உணவு கிடைத்தால் மட்டும் போதுமா?? அந்த உணவை உண்ணும் அளவுக்குப் பசியும் இருக்க வேண்டும் அல்லவா? பஞ்ச பட்ச பரமான்னமாகவே இருந்தாலும் பசி இல்லை எனில் சாப்பிட மாட்டோம். இந்த உலகில் எதுவும் போதும் என்றே நாம் சொல்ல மாட்டோம். உடையா, இன்னும் வேண்டும். ஒரு நேரத்துக்கு நாம் உடுத்துவது என்னமோ ஒரு உடைதான். நகையா இன்னும் வேண்டும், வீடா, இன்னும் பெரியதாய், பணம், காசா, எத்தனை இருந்தாலும் போதலை. ஆனால் ஒருவரைக் கூப்பிட்டு சாப்பாடு மட்டும் போட்டுவிட்டால் அவர் இன்னும் வேண்டும் என்று சொல்ல மாட்டார். வயிறு நிறைந்துவிட்டது போதும் என்றே சொல்லுவார். ஆகவே போதும் என மனிதரைச் சொல்ல வைக்கும் அந்த உணவை உட்கொள்ளத் தேவையான பசி இருத்தலே நல்லது. அந்தப் பசி வடிவான தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

6. யா தேவி ஸர்வ பூதேஷூ ச்சாயா ரூபேண ஸம்ஸ்திதா,
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிடத்திலும் நிழல் வடிவில் பிரதிபிம்பமாய் உறைகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள். வெயிலிலும், நிலவிலும் உயிர்வாழ் ஜீவராசிகள் அனைத்திற்கும் பிரதிபிம்பங்கள் தோன்றுவதுண்டு. அந்தப் பிரதிபிம்பமாய் உறையும் தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.


                                                                                                                                                                     

8 comments:

  1. இரண்டாம் நாளுக்கான குறிப்புகள் அறிந்தோம்!!

    கீதா: இப்பத்தான் அடையார் பத்மநாபர் கோயிலில் அம்மனின் அலங்காரம் மற்றும் அதன் அருகில் இருக்கும் தாய்மூகாம்பிகை சிறிய கோயிலில் அலங்காரம் கண்டு தரிசனம் செய்துவிட்டு வந்தேன். தாய்மூகாம்பிகை கோயிலில் செய்யப்படும் அலங்காரம் அத்தனை அழகாக இருக்கும் மிக மிகச் சிறிய கோயில்...ஆனால் அழகோ அழகு. ரோட்டில் வாயிலில் நின்றே தரிசிக்கலாம்...அருகில்...அத்தனை சிறிய கோயில்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசிதரன், நன்றி.

      கீதா, வாங்க வாங்க, நவராத்திரிப் பதிவுகளுக்கு உடனே வந்துடறீங்க! ஆனால் சுண்டல் இல்லை! :(

      Delete
  2. இரண்டாம் நாள் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. கீதா ரங்கன் - இந்தக் கோவிலைப் (தாய் மூகாம்பிகை) பார்த்த ஞாபகம் இல்லையே. சாலையின் நடுவில் இருப்பதா (எல்.ஜி ரோடு போகும் வழி). அடுத்தமுறை ஞாபகமாகப் பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நெ.த. எல்.ஜி. ரோடு? எல்.பி. ரோடைச் சொல்றீங்களோ? லாடிஸ் பிரிட்ஜ் ரோடு! அந்தப் பக்கமெல்லாம் போயே பல வருடங்கள் ஆகின்றன! :)

      Delete
  4. யாதேவி சர்வ பூதேஷு அன்பு (சம்ஸ்கிருதம் தெரியவில்லை ) ரூபேண சமஸ்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோநம

    ReplyDelete
    Replies
    1. யாதேவி சர்வ பூதேஷு ப்யார் ரூபேண சம்ஸ்திதா, நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம!

      மேலே சொல்லப்பட்ட குணங்கள் யாவற்றுக்கும் அடிப்படையே அன்பு மட்டும் தான்! அன்பு இல்லை எனில் அவை எதுவும் வராது! :)

      Delete
    2. இங்கே உங்களுடைய அந்தப் பின்னூட்டமும் அதுக்கு நான் அன்றே சொன்ன கருத்தும் வெளியாகி இருக்கிறது. சரி பார்த்துக் கொள்ளவும். வேறே பின்னூட்டம் எதுவும் இல்லை! :)

      Delete