எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, January 31, 2017

ஹூஸ்டனில் கொண்டாடிய இந்தியக் குடியரசு தினம்! முடிவுப் பகுதி!

நிகழ்ச்சி ஆரம்பம் ஆகப் போகிறது என்பதைச் சொல்ல பள்ளித் தலைமை ஆசிரியை மேடை நோக்கிச் செல்கிறார். இந்த மாபெரும் அறை பள்ளியின்  ஜிம்னாசியம் என்னும் உடற் பயிற்சிக் கூடம். அங்கே இருந்த சின்ன மேடையில் தான் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அமருவதற்கு நாற்காலிகள் போடப்படவில்லை. எல்லோரும் கூட்டமாக நின்று கொண்டு தான் பார்க்க வேண்டி இருந்தது. அப்புறமா எங்க மாப்பிள்ளை எங்கிருந்தோ இரண்டு நாற்காலிகளைக் கொண்டு வந்து எங்களுக்கு அமரக் கொடுத்தார். ஆனாலும் முன்னால் எல்லாரும் அமர்ந்திருந்ததோடு குறுக்கும் நெடுக்குமாகப் போய்க் கொண்டிருந்தார்கள்! படம் எடுக்கையில் கையைத் தட்டி விட்டுக் கொண்டு செல்வார்கள். :) இல்லைனா நமக்கு நேரே நின்று கொண்டு மறைப்பார்கள். :)


இது சீனக்குழந்தைகள் அவர்கள் மொழியில் உள்ள தேசியப் பாட்டுக்குப் பிடித்த அபிநயம். எல்லாக் குழந்தைகளும் நன்றாகச் செய்தார்கள்.


கீழே காண்பது டேக் வான்டோ என்னும் ஜப்பானிய/கொரிய கராத்தே (?) பயிற்சி முறை. அதில் கையில் வேல் போன்ற ஆயுதத்தை வைத்துக் கொண்டிருக்கும் நபர் தான் பயிற்சியாளர் என்பதோடு கடைசியில் ஒரு ஆட்டம் ஆடிக் காட்டினார் பாருங்க! அதைப் படம் எடுக்கும் முயற்சியில் அங்கேயும் இங்கேயும் போனது தான் மிச்சம்! :( 


சிறுவர்கள் நன்றாக டேக் வான்டோ பயிற்சிகளைச் செய்து காட்டினார்கள். நம்ம அப்புவும் கொஞ்ச நாட்கள் போய்க் கொண்டிருந்தாள். பின்னர் அவளால் முடியலை என்பதால் நிறுத்தி விட்டாள். 


இது யு.எஸ். அமெரிக்கக் குழந்தைகள் என நினைக்கிறேன். அல்லது ஸ்விட்சர்லாந்தாக இருக்கலாம்.  அறிவிப்புச் செய்தது சரியாகக் காதில் விழவில்லை. :(


இது மெக்சிகோ!


இந்தியக் குழந்தைகள் "ஜய ஹோ!" பாடலுக்கு ஆடினார்கள். மூவர்ணக் கொடியை நினைவூட்டும் வண்ணம் உடை அணிந்திருந்தார்கள். முதலில் ஆரஞ்சு, பின்னர் வெண்மை, பின்னர் பச்சை. நடுவில் நீல நிறச் சக்கரத்துக்கு ஒரு பையர். இந்தப் பாடலுக்கு ஆடிப்பாடச் சொல்லிக் கொடுத்தது ஶ்ரீரங்கத்தைச் சேர்ந்த லாவண்யா என்னும் ஒரு பெண்மணி ஆவார். அவரை இன்னும் சந்திக்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவருக்குப் பல்வேறு கலைகள் தெரிந்திருப்பதால் அவற்றில் வேலை மும்முரமாக இருக்கிறார்.  இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக எங்க பொண்ணு வேலை செய்தாள். பலரும் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு அவரவர் வீட்டிலிருந்து முடிந்த பொருட்களை எடுத்து வந்து அழகு செய்து பெரிய கோலம் போட்டு, வந்தவர்களில் விருப்பப் பட்டவர்களுக்கு மெஹந்தி கையில் இட்டுவிட்டு என்று எல்லாமும் செய்தார்கள்.  எல்லோருமே அமெரிக்காவில் பல ஆண்டுகளாக இருப்பவர்கள்! என்றாலும் பிறந்த மண்ணை மறக்காமல் குழந்தைகளுக்கும் கலாசாரத்தைக் கற்றுக் கொடுத்து வருகின்றனர்.  இந்தியக்குழந்தைகள் ஆடியதோடு நிகழ்ச்சி முடிவடைந்தது. கடைசியில் ஒரு ஊர்வலமாக எல்லா நாட்டுக் குழந்தைகளும் அவரவர் கொடியை ஏந்தி வந்தார்கள். 

இந்தியா என்பதற்குப் பொருளை ஆங்கிலத்தில் வாட்சப் குழுவில் பார்த்தேன்.
INDIA  Independent Nation Declared in August  என்று பொருளாம். Independent Nation Divided in August  என்றும் சொல்லலாமே எனத் தோன்றியது!





எல்லாக் குழந்தைகளும் ஒன்றாக மேடையில்

 மற்ற எல்லா நாடுகளும் அந்த அந்தக் கண்டத்தின் பெயரால் அழைக்கப்பட இந்தியா மட்டும் பரத கண்டம் என்னும் பழைய பெயரிலிருந்து இந்தப் புதிய பெயருக்கு மாறி இருப்பதாகவும் சொன்னார்கள். பாரதம் என்றாலோ பரத கண்டம் என்றாலோ  இப்போது யாரும் புரிந்து கொள்வதும் இல்லை.  என்னதான் அமெரிக்க வாழ்க்கை எளிதாக இருந்தாலும் எங்கள் மனதுக்கு இந்தியா தான் இதமாக இருக்கிறது.

காயோ, கனியோ, சமையலோ, சாப்பாடோ இந்தியாவில் செய்யும் ருசியில் இங்கு அமைவதில்லை என்றே சொல்ல வேண்டும். பொருட்கள் எல்லாம் நன்றாகவே இருக்கிறது. எல்லாமும் கிடைக்கிறது. என்றாலும் நம் நாட்டு மண்ணின் ருசி இதில் இல்லை தான்!

வந்தேமாதரம்! 

Sunday, January 29, 2017

ஹூஸ்டனில் கொண்டாடிய இந்தியக் குடியரசு தினம்! படப்பதிவு!


ஜப்பான் பெவிலியனில் காகிதத்தில் கைவேலைப்பாடு செய்யும் கலையைக் கற்றுக் கொடுத்துக்கொண்டிருந்தனர். இதுக்கு ஒரு பெயர் உண்டு. சட்டுனு மறந்துட்டேன். :) நினைவிருக்கிறவங்க சொல்லுங்க. :) சாப்பாடே போட்டுட்டு இருக்கேன்னு போன பதிவிலே சொன்னதுக்காக இந்தப் பதிவில் இதைக் காட்டி இருக்கேன். ஹிஹிஹி!
நினைவு வந்துடுச்சு. ஒரிகாமி என்னும் பெயர் இந்தக் கலைக்குனு நினைக்கிறேன். கூகிளாரைக் கேட்கணும். :)
நைஜீரியாவின் கைவேலைகளான மணிமாலைகள் செய்தல்!



ரஷிய பெவிலியனில் இரு குழந்தைகள் ராஜ உடை தரித்திருந்தனர். 



பெரு நாட்டுப் பெவிலியன் என நினைக்கிறேன்.



இங்கேயும் கூட்டம் அதிகம். இங்கே இவங்க தயாரிப்பாக சாக்லேட் குக்கீஸ் கொடுத்திருக்காங்க. கூட்டம் அதிகம் இருந்ததால் அருகே போக முடியலை! :)

இனி நாளை நிகழ்ச்சிகளைக் குறித்தும்  அதற்கான படங்களையும் பார்ப்போம். 

Saturday, January 28, 2017

ஹூஸ்டனில் கொண்டாடிய இந்தியக் குடியரசு தினம்!

 ஒரு வாரம் முன்னர் ஷுகர்லான்ட் பையர் வீட்டிலிருந்து இங்கே கேடிKT என்னும் இடத்தில் இருக்கும் பொண்ணு வீட்டுக்கு வந்திருக்கோம். அப்பு படிக்கும் பள்ளியில் இந்தியக் குடியரசு தினத்தன்று இன்டர்நேஷனல் இரவு கொண்டாட உத்தேசித்திருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடப்பதாகவும் ஏற்கெனவே எங்க பொண்ணு சொல்லி இருந்தாள். அப்புவும் எங்கள் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். பொண்ணு விழாவுக்கான முன்னேற்பாடுகளைச் செய்ய இந்தியத் தரப்பின் ஒருங்கிணைப்பாளர் என்பதால் அவள் முன்னாடியே சென்று விட்டாள். "ஜய ஹோ!" பாடலுக்கு இந்தியக்குழந்தைகள் நடனம் ஆடத் தயார் செய்யப் பட்டிருந்தனர். நடனம் ஆடுவோரில் அப்புவும் ஒன்று. ஆகவே மிகவும் ஆவலுடன் இந்நிகழ்ச்சியை எதிர்பார்த்திருந்தோம். இங்கே உள்ள சில கடைக்காரர்கள் நிகழ்ச்சிக்கென தங்கள் கடையின் பொருட்கள் சிலவற்றை நன்கொடையாகக் கொடுத்தனர். அப்படி ஒரு கடைக்காரர் Currywalah என்னும் குஜராத்தி உணவுப்பொருட்கள் விற்கும் கடைக்காரர் 150 சமோசாக்களையும் அதற்கான துணை உணவுகளையும் கொடுத்திருந்தார். 

இந்தியப்பெவிலியனில் சமோசாக்களும்  பால் கேக்கும் உண்ணத் தயாராக வைத்திருக்கும் காட்சி! இந்தியப்பெவிலியனின் மற்றும் சில காட்சிகள்.

இந்தியப் புரத உணவுகள் மற்றும் அஞ்சறைப்பெட்டியில் மசாலாக்கள். இந்திய தேசியப் பறவையான மயில் மற்றும் தாஜ்மஹல்.


இந்தியப்பாரம்பரிய உடைகளும் வைக்கப்பட்டிருந்தன. சமோசாவுக்குக் கூடிய கூட்டத்தால் அவற்றைச் சரியாகப் படம் பிடிக்க முடியவில்லை.


இது சீன/தென் கொரியப்பெவிலியன் என நினைக்கிறேன்.  எந்த நாடு என்பதைக்குறிப்பிட்டிருந்தாலும் அது கண்ணுக்குத் தெரியும்படியாக வைக்கவில்லை. பங்கு பெற்ற நாடுகள், சீனா, ஜப்பான், தென் கொரியா,பொலிவியா, கனடா, நைஜீரியா, க்வாட்டமாலா, வெனிசுலா,இந்தியா, யு.எஸ்,கானா, கொலம்பியா, ஸ்விட்சர்லாந்து, ரஷியா, மெக்சிகோ போன்றவை ஆகும். 
கானா/க்வாட்டமாலா போன்ற நாடுகள் நம் தமிழ்நாட்டுப்புளியோதரை போன்ற ஓர் உணவை வைத்திருந்தார்கள். ஸ்விட்சர்லாந்து சாக்லேட் நன்றாகவே இருந்தது. யு.எஸ்ஸில் சாக்லேட் குக்கீஸ்! கொலம்பியாவில் காஃபி சாப்பிடச் சொன்னார்கள். வேண்டாம்னு சொல்லிட்டோம். நுழையும் இடத்திலேயே இருவர் நின்று கொண்டு குழந்தைகள் பெயரைக் கேட்டுக் கொண்டு அவங்களோட வரும் விருந்தினரையும்  உள்ளே விடுகின்றனர். உள்ளே நுழைந்ததுமே பள்ளி சார்பில் பாஸ்போர்ட் கொடுக்கின்றனர்.  எனக்கு அது தெரியலை என்பதால் நான் வாங்கிக்கலை. :( நம்ம ரங்க்ஸ் வாங்கிக் கொண்டு ஒவ்வொரு பெவிலியனிலும் முத்திரை பதித்துக் கொண்டார். :)








படங்களும் பதிவும் தொடரும்! :) 


பி.கு: படங்களைக் கைபேசியில் தான் எடுத்தேன். காமிரா கொண்டு போகலை. ஆகவே குற்றம், குறைகள் இருக்கலாம். கைபேசியிலிருந்து வாட்சப் மூலமா ஶ்ரீராமுக்கு அனுப்பி அவரை எனக்கு மெயில் பண்ணச் சொல்லுவேன். ஆனால் இப்போவோ நிறையப்படங்கள். என்ன செய்யலாம்னு யோசிச்சேன். கைபேசியிலிருந்து நேரடியாக் கணினியில் பிகாசாவைத் தரவிறக்கிட்டு அதிலே இணைக்க முடிவு செய்தேன். ஆனால் கணினியில் கைபேசியை இணைத்துப் பிகாசாவைத் தரவிறக்கினால் இங்கே இந்தப் புதுக்கணினியின் நார்ட்டன் செக்யூரிடி இது பாதுகாப்பானது அல்லனு தானே அதை எடுத்துடுச்சு. திரும்பத் திரும்பக் கொடுத்தாலும் அதே தான்! :( ஆகவே கணினியின் ஃபோட்டோ ஃபோல்டரில்  சேர்த்துட்டு சி ட்ரைவின் படங்கள் பகுதியில் மாத்தலாம்னா அது என்னமோ கணினி நகராமல் அடம் பிடித்தது. அப்புறமா ஒருவழியா எல்லாத்தையும் மறுபடிஎடுத்துட்டு மீண்டும் போட்டுனு இரண்டு மூன்று முறை முயன்றதும் அப்பாடா! எல்லாப் படங்களும் பிக்சர் ஃபோல்டருக்கு வந்தாச்சு! கிட்டத்தட்ட 352 படங்கள்! ஶ்ரீராம் தாங்குவாரா! :)))))) பிழைச்சேன்!

வலது கைக்கட்டை விரலிலே நேத்திக்குச் சின்னதா ஒரு விபத்து. தோல் சீவும் கருவி வெட்டி விட்டுடுத்து. ஆழமாக வெட்டி இருப்பதால் கொஞ்சம் தட்டச்சுப் பிரச்னை. இருந்தாலும் பருப்பு உணர்ச்சி சீச்சீ, பொறுப்பு உணர்ச்சியோடு கடமை ஆத்திட்டிருக்கேன். :) அம்பி ஒரு எ.பி. சுட்டிக்காட்டும்படி ஆயிடுச்சு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Thursday, January 26, 2017

வந்தேமாதரம்!

தேசியக் கொடி க்கான பட முடிவு

எல்லோரும் ஜல்லிக்கட்டுப்போராட்டங்கள் முடிந்து சாவகாசமா இருப்பீங்க. இன்று அதாவது இந்தியாவில் ஜனவரி 26 ஆம் தேதி வந்திருக்கும். குடியரசு தினம். அனைவரும் வேற்றுமைகளை மறந்து ஒன்றாகக் கூடி இந்த தினத்தை நல்லமுறையில் கொண்டாட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். ஆயிரம் இருந்தாலும் நாடு என்பது தனி! அரசு என்பது தனி. ஆகவே அரசின் மீது உங்களுக்கு இருக்கும் கோபத்தை நாட்டின் மீது காட்ட வேண்டாம்.  இது வெறும் குடும்பச் சண்டை. எப்போவுமே இளவட்டங்களுக்குப் பெரியவர்கள் மேல் ஒரு விதக் கோபம் வருவதுண்டு. அப்படி வந்த கோபம் தான் இது. கோபத்தில் குழந்தை கையில் இருப்பதைக் கீழே போட்டு உடைப்பதில்லையா? அது மாதிரி தான் இப்போவும் நடந்திருக்கிறது. அதற்காகக் குடியரசு தினத்தைக் கொண்டாடாமல் எப்படி? நம் தாய்க்குப் பிறந்த நாள் என்றால் நாம் கொண்டாட மாட்டோமா என்ன? பாரத் தாயின் பிறந்தநாள் இது!

காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை எத்தனை எத்தனை மக்கள் போராடிப் பெற்ற சுதந்திரம் இது! இந்த ஜல்லிக்கட்டுப்போராட்டத்திலும் ஒரு சிலர் நம் நேதாஜியை மறக்கவே இல்லை. அவர் என்ன தன் மாநிலமான வங்காளத்துக்காகவா போராடினார்? ஒட்டுமொத்தமாக இந்திய விடுதலைக்குத் தானே போராடினார்!  அதே போல் தமிழ்நாட்டுப் போராளிகளும் தனித் தமிழ்நாட்டுக்கா போராடினார்கள்? இல்லையே! ஒட்டுமொத்தமான இந்திய விடுதலைக்குத் தானே போராட்டம்? ஆகவே நாம் நம் மனதில் இருக்கும் சிறு சிறு வேற்றுமைகளைக் களைந்து நம் நாட்டிற்காக குடியரசு தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடுவோம்.

வந்தேமாதரம்!

Wednesday, January 25, 2017

பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில்! கொடைக்கானல்!

மறுநாள் காலை விரைவில் எழுந்து குளித்துத் தயார் ஆனாலும் காலை உணவு ஏழரைமணி ஆகும்னு சொல்லிட்டாங்க. ஆகவே காத்திருந்தோம். இரண்டு இட்லியாவது சாப்பிடலாமே! அதே போல் காத்திருந்த பின்னர் இட்லி, தோசை கிடைத்தன. சுமாராக இருந்தது. சாப்பிட்டுவிட்டுக் குழந்தை வேலப்பர் கோயிலுக்குப் பயணித்தோம். போகும் வழியில் இப்போது புதிதாகக் கட்டி இருக்கும் மஹாலக்ஷ்மி கோயிலையும் பார்த்துக் கொண்டு போகும்படி கோமதி அரசு சொல்லி இருந்தார். ஆகவே போகும் வழியிலேயே மஹாலக்ஷ்மி கோயிலைப் பார்த்ததும் கீழே இறங்கினோம்.


இந்தப் படம் ஏற்கெனவே போட்டிருக்கேன். மஹாலக்ஷ்மி கோயிலுக்குப் போகும் வழி இது. கொஞ்சம் உயரமான இடத்தில் அமர்ந்திருக்கிறாள் மஹாலக்ஷ்மி. நாங்க போனப்போ இளம் பட்டாசாரியார் அபிஷேஹ, ஆராதனைகள் செய்து கொண்டிருந்தார். படம் எடுக்க வேண்டிக் காமிராவை எடுத்தேன் பாருங்க, ஒரு முறை முறைச்சார். காமிராவை உள்ளேயே வைச்சுட்டேன். :))) ஆனால் அங்கே குளிச்சு முடிச்சு ஜம்ம்னு உட்கார்ந்திருந்தார் நம்ம நண்பர். அவரை அந்த பட்டாசாரியாருக்குத் தெரியாமல் ஒரு படம் எடுத்துட்டேன். அது கீழே!



பொறுப்புத் துறப்பு! :--
கீழேயும் மஹாலக்ஷ்மி கோயில் படம் தான். அது வண்ணம் பளிச்சிட்டால் பொறுப்பு என்னுடையது அல்ல! படம் நம்ம நெல்லைத் தமிழருடையது! :)



இதுவும் அவருடையதே! இது மஹாலக்ஷ்மி சந்நிதி!



மஹாலக்ஷ்மியைப் பார்த்துட்டுப் பூம்பாறை நோக்கிப் பயணித்தோம். அங்கே போகரால் செய்யப்பட்ட நவபாஷாணச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதாக அறிந்தோம். போகர் மூன்று சிலைகள் செய்தாராம். அவற்றில் முதலில் இங்கே வைக்கப்பட்டிருக்கும் சிலை என்றும் அடுத்து ஒரு சிலை இதே மலையில் யார் வீட்டிலோ வைத்து வணங்கப்படுவதாயும் சொல்கின்றனர். மூன்றாவது சிலையைத் தான் போகர் பழநிமலையில் வைத்தாராம். கிட்டத்தட்டப் பழநி மலை பாலதண்டாயுதபாணியைப் போலவே இங்கேயும் முருகன் சிலை. ஆனால் ரொம்பக் குழந்தை என்பதாக எனக்குத் தோன்றியது. முருகன் பெயரே குழந்தை வேலப்பன். இங்குள்ள கிராம மக்கள் அனைவருக்கும் அவனே குழந்தையாக இருக்கின்றான்.  பூம்பாறை போகும் வழியில் அடுக்கடுக்காகப் பாசன வயல்கள்.

படங்களுக்குப் பொறுப்பு, நெல்லைத் தமிழர்! என்னோட படங்களெல்லாம் பத்திரமாக இருக்கின்றன! :)







கொடைக்கானலில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் பெரிய மலையில் உள்ளது பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில். இது முருகன் குழந்தையாகக் காட்சி அளிக்கும் கோலத்துடன் போகரால் வடிக்கப்பட்ட நவபாஷாண விக்ரஹம். பழனி முருகன் பழத்துக்காகக் கோவிச்சுண்டு போனப்போ, (ஹிஹிஹி, அது சரி இல்லைனு பலரும் சொல்வாங்க என்றாலும் இதானே வெகுஜன வாக்கு!) முதல்லே இங்கே தான் வந்து உட்கார்ந்துண்டாராம். கிட்டத்தட்டப் பழனியில் மேல் மலையில் காட்சி அளிப்பதைப் போலவே இங்கேயும் காட்சி அளிக்கிறார். ஆனால் எந்தவிதமான இடையூறுகளும் இல்லாமல் நன்றாக தரிசனம் செய்யலாம் யாரும் போ, போனு விரட்டுவதில்லை. சிறப்புத் தரிசனம் கிடையாது. நாங்க போனப்போ யாரோ அபிஷேஹம் செய்து பிரசாத விநியோகங்கள் நடந்து கொண்டிருந்தது.

அதோடு இன்னும் யாரோ முக்கியமான அரசியல்வாதிகள் வருகை தர இருந்தனர். ஆகவே கோயில் பரபரப்புடன் காணப்பட்டது. என்றாலும் நாங்கள் தரிசிப்பதில் எவ்விதமான தடையும் இல்லை. பஞ்சாமிர்தப் பிரசாதம், அபிஷேஹ விபூதிப் பிரசாதம், தேனும், தினைமாவும் என்று கிடைத்த பிரசாதங்களை எல்லாம் வாங்கிச் சாப்பிட்டோம். கோயில் அமைதியான சூழ்நிலையில் சுத்தமான சுகாதாரமான பராமரிப்பில் இருக்கிறது.

குழந்தை வேலப்பர் கோயிலில் படம் எடுக்கத் தடா! :( கோமதி அரசு போனப்போப் படங்கள் நிறைய எடுத்துப் போட்டிருந்தாங்க. ஆனால் எங்களை எடுக்கக் கூடாதுனு சொல்லிட்டாங்க. ஆகவே எடுக்க முடியலை. இந்தக் கோயில் பழனி மலைக் கோயில் தேவஸ்தானத்தின் கீழ் வருகிறது. அன்னிக்கு முக்கியமான மனிதர்கள் வருகையினால் படம் எடுக்கத் தடானு நினைக்கிறேன். மதுரையிலே காமிராவை வெளியேயே செருப்பு வைக்கும் ஸ்டாண்டில் வைக்கச் சொல்லிட்டாங்க. இங்கே அது மாதிரி சொல்லலை! ஆனாலும் காமிராவை வெளியே எடுத்தால் சத்தம் போட்டாங்க!  அங்கே ஒரு பெண்மணி தேனும், தினைமாவும் கலந்து முருகனுக்கு நிவேதனம் செய்ததை விநியோகம் செய்து கொண்டிருந்தார். நான் பஞ்சாமிர்தம் வாங்கிக் கொண்டிருந்ததால் அதைச் சாப்பிட்டுவிட்டுத் தினைமாவுக்கு வர இருந்தேன்.

ஆனால் நம்ம ரங்க்ஸ் போய்த் தினைமாவு வாங்கிட்டார். ஆகவே எனக்கும் சேர்த்து வாங்கி இருப்பார்னு நினைச்சுக் கையை நீட்டினால், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அவரே சாப்பிட்டுட்டார். கோபத்துடன் மீண்டும் அந்த அம்மாவிடம் போனால் தீர்ந்து போச்சுனு சொல்லிட்டாங்க. முருகனையே கோவிச்சுண்டு திட்டிட்டுப் பிரகாரத்தைச் சுத்திட்டுக்கையைக் கழுவிக்கொண்டு விபூதிப் பிரசாதம் பெற்றுக்கொண்டு வெளியே வந்தோம். என்னிடம் தினைமாவு தீர்ந்து போச்சுனு சொன்ன அம்மா அங்கே மீண்டும் விநியோகிக்க, ஆஹானு ஓடியே போனேன். என்னைக் கண்ட அந்த அம்மா வீட்டுக்கு எடுத்துப் போக நினைச்சேன். ஏனோ தெரியலை, வேண்டாம்னு தோணவே இங்கேயே விநியோகிக்கிறேன்னு சொல்லிட்டு எனக்கும் ஒரு உருண்டை கொடுத்தாங்க. அப்பாடா! கோயிலுக்கு வந்த நோக்கமே நிறைவேறினாப்போல் ஓர் திருப்தி! ரங்க்ஸுக்கு ஆச்சரியம்!

"உனக்குக் கிடக்கணும்னு இருக்கு பாரு! இல்லைனா தீர்ந்து போச்சுனு அந்த அம்மா சொல்லிட்டுப் பாத்திரத்தையும் கழுவினாங்க! இப்போ திடீர்னு என்னவோ தோணிக் கொடுத்திருக்காங்க!" அப்படினு சொன்னார். இப்படித் தான் எனக்குக் கிடைக்கவே கிடைக்காது என நினைத்தக் கயிலை யாத்திரையும் எனக்குக் கிடைத்தது என் நினைவில் வரவே அப்பாவும், பிள்ளையுமாகச் சேர்ந்து எனக்குப் புரிந்த அருளில் கண்ணீரே வந்தது.  திருக்கயிலைக்கு ரங்க்ஸ் மட்டும் தான் போகறதா இருந்தார். என்னை அழைத்துச் செல்ல அவருக்கு இஷ்டமே இல்லை. ஆனால் அந்தப் பிரயாணத்தை ஏற்பாடு செய்தவர்கள் விடாப்பிடியாக என்னுடைய பாஸ்போர்ட்டையும் வாங்கிப் போய் எனக்கும் சேர்த்து விசாவாங்கி எனக்கும் சேர்த்துப் பயணச்சீட்டுப் போட்டு உறுதி செய்து கொண்டு வந்து விட்டார்கள். ஆகவே எனக்குக் கயிலை நாதனின் அருளால் அந்தப் பிரயாணம் கிடைத்தது. அதே போல் இப்போத் தினைமாவும் முருகன் அருளால் கிடைத்தது.


Saturday, January 21, 2017

தினம் தினம் ராமாயணம்!

ராமாயணம் புதியதொரு நோக்கில்! இது ஏற்கெனவே தமிழில் படித்திருக்கிறேன். எனினும் வாட்சப் மூலம் இது ஆங்கிலத்தில் பரவி வருகிறது. முதலில் ராமா என்னும் பெயருக்கான பொருளைக் காண்போம்.

"ரா" என்றால் வெளிச்சம், ஒளி என்னும் பொருளிலும் "மா" என்றால் எனக்குள்ளே, என்னுள்ளே என்னும் பொருளிலும்  வரும். அதாவது என் இதயத்தினுள்ளே என்ற பொருளில் வரும். உள்ளே ஒளியாகப் பிரகாசிக்கிறது "ராமா" என்னும் இரண்டெழுத்து.
பிராணாயாமம் க்கான பட முடிவு
ராமனைப் பெற்றவர் தசரதர்-- இதற்குப் பத்து ரதங்களை ஒரே நேரத்தில் செலுத்தும் திறமைசாலி என்னும் பொருள் ஏற்கெனவே காணக் கிடைக்கிறது. ஆனால் அந்தப் பத்தும் என்ன என்பதைத் தான் நாம் கீழே காணப் போகிறோம்.

ஐம்பொறிகள்  மற்றும் அவை சார்ந்த ஐம்புலன்களைக் குறிக்கும். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் இவற்றை அடக்கி ஆள வேண்டும் அல்லவா! அதை அடக்கி ஆளச் செய்யும் திறனே ராமனின் தாய் கௌசல்யா தேவி ஆவாள். திறமை வாய்ந்த ரதசாரதியால் அடக்கி ஆளப்பட்ட இந்தப் பத்து ரதங்கள் என்னப்படும் இந்திரிய சாதனைகளிலிருந்து உள்ளொளி பிறக்கிறது. ஶ்ரீராமனின் பிறப்பும் இதைத் தான் குறிக்கும்.

அதோடு இல்லை. ராமன் பிறந்தது அயோத்தியில். அயோத்தி என்பது யுத்தமே நடக்காத ஓர் இடம் என்பார்கள்.  அங்கே எந்த யுத்தமும் நடந்தது இல்லை. அதே போல் தான் நம் மனமும் ஓர் அயோத்தியாக இருக்க வேண்டும். மன்ப்போராட்டங்களே இருக்கக் கூடாது. நம் மனதில் எவ்விதமான போராட்டமும் இல்லாமல் அமைதியாக இருந்தால் அங்கே நம் புலன்கள் அடங்கி விட்டன என்றும் அதனால் நம் உள்ளத்தில் உள்ளொளி என்னும் ஶ்ரீராமன் பிறந்து விட்டான் என்றும் பொருள்.  உண்மையில் ராமாயணம் எப்போதோ நடந்த ஓர் இதிஹாசக் கதை என்று நினைக்காமல் தத்துவ ரீதியாகப் பார்த்தோமானால் அதன் உள்ளர்த்தம் நன்கு விளங்கும்.

நம்முடைய உடலிலேயே தினம் தினம் ஓர் ராமாயண நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது என்பதும் விளங்கும்.

ஏனெனில் நம் உயிர் அல்லது ஆன்மா தான் ஶ்ரீராமன்.  இங்கே உயிரும் ஆன்மாவும் ஒன்றா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஒரு புரிதலுக்காக இரண்டையும் ஒன்றாகச் சொல்லி இருந்தாலும் உயிர் எல்லா உயிர்களுக்கும் உள்ளது. ஆனால் ஆன்மா மனித இனத்துக்கு மட்டுமே உள்ளது என்று சைவ சித்தாந்தம் சொல்கிறது.  மேலும் உயிர் இருப்பதால் தான் ஐந்தறிவு செயல்படுகிறது என்றாலும் ஆறாவது அறிவான பகுத்தறிவு ஆன்மாவின் மூலமே உணரப்படுவதாகச் சொல்கின்றனர்.  உயிரின் காரணமாக அறிவு ஏற்பட்டாலும் ஆன்மாவே ஞானத்தை உணர வல்லது என்கிறார்கள். அறிவினால் புற ஒளியை மட்டுமே உணர முடியும். ஆனால் ஆன்மாவே அக ஒளியை அறிந்து கொள்ளும். ஆகவே இங்கே ஆன்மா தான் ஶ்ரீராமன் என்று கொள்வதே சரி என நினைக்கிறேன்.

அவன் மனைவி சீதை தான் மனம் என்று கொள்ளவேண்டும். இந்த உடல் மூச்சு விடக் காரணமாக இருப்பது வாயு என்னும் காற்று. அத்தகைய காற்றைத் தான் இங்கே ஹனுமானாகச் சொல்லி இருக்கிறது. நம் உடலில் இருக்கும் உயிருக்கு மனம் சீதை எனில் நாம் விடும் மூச்சுக்காற்றாக ஹனுமன் செயல்படுகிறான். பிராணன் எனப்படும் வாயுவாக அனுமன் இருக்கிறான்.  ஆன்மாவும் உயிரும் சேர்ந்தால் ஏற்படுவது விழிப்புணர்வு. அந்த விழிப்புணர்வு தான் அண்ணனையும், அண்ணியையும் காத்து வந்த லக்ஷ்மணன் ஆவான். ஆனால் நம்மிடம் தோன்றும், "நான்" என்னும் உணர்வு அதாவது ஈகோவே ராவணன் ஆவான்.

இந்த "நான்" என்னும் ஈகோ நம்மிடம் தலை தூக்கினால் நடப்பது தான் ராமாயண யுத்தம். நான் என்னும் உணர்வு தலை தூக்கினால் மனமாகிய சீதை அந்த உணர்வால் தூக்கப்பட்டு விடுகிறாள். நான் என்னும் உணர்வு மனதில் நல்லெண்ணத்தை அடியோடு அழித்து விடும்.  நல்லெண்ணங்களே இல்லாத மனம், உயிர், ஆன்மாவுக்கு நிம்மதி எங்கிருந்து கிடைக்கும்? அது தவிக்கும்! நிம்மதியை நாடி அலையும். ராமன் இப்படித் தான் தன் மனதைத் தேடிக் காட்டில் அலைந்தான்.  அவனால் தானாகத் தன் மனதைத் தேடிக் கண்டு பிடிக்க முடியவில்லை. அத்தனைக்கு "நான்" என்னும் உணர்வு தலை தூக்கி இருந்தது. ஆகவே விழிப்புணர்வுடன், பிராணனின் உதவியை நாட,  இது இங்கே பிராணாயாமத்தின் மூலம் மூச்சை அடக்கி மனதை ஒருமைப்படுத்துவதைக் குறிக்கும். பிராணன் உதவியுடன் மனம் அடக்கி ஆளப்படும்.
பிராணாயாமம் க்கான பட முடிவு
பிராணனும், அதனுடன் கூடவே விழிப்புணர்வும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மனமானது ஆன்மாவுடன் ஒன்றி விடும்.  மனதில் தலை தூக்கிய "நான்" என்னும் உணர்வு அழிந்து படும்.  இப்படி ஓர் நித்திய நிகழ்வாக நம் உடலில் ராமாயணம் தினம் தினம் நடந்து கொண்டே இருக்கிறது.  இதே போல் மஹாபாரதத்துக்கும் சொல்லலாம். அது பின்னர்!

படங்களுக்கு நன்றி கூகிளார். 

Friday, January 20, 2017

பயணங்கள் முடிவதில்லை. கொடைக்கானல்! 2

குறிஞ்சி ஆண்டவர் கோயில் கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டருக்குள். நாங்கள் தங்கி இருந்த இடத்திலிருந்தும் அது மிகக் கிட்டே இருந்ததால் முதலில் அங்கே சென்றோம். இந்தக் கோயில் ரொம்பப் பழமையான கோயில் எல்லாம் இல்லை. இது இலங்கையிலிருந்து வந்த ஒரு பெண்மணியால் கட்டப்பட்டதாகச் சொல்கின்றனர். விக்கி, விக்கிப் பார்த்தப்போ அங்கேயும் அதே தகவல் தான் கிடைத்தது. ஐரோப்பியரான லீலாவதி, லில்லி(?) தெரியலை, ஆனால் இவர் இலங்கையில் இருந்ததாகவும் பொன்னம்பல ராமநாதன் என்பவரை மணந்ததாகவும் சொல்கின்றனர். இவர் தான் கொடைக்கானலுக்கு வந்தபோது குறிஞ்சி மலர்கள் நிறைந்த பகுதியில் இந்தக் கோயிலை 1936 ஆம் ஆண்டில் கட்டி இருக்கிறார். பின்னாட்களில் இவர் மகள் லேடி ராமநாதன் அவர்களின் வளர்ப்புப் பெண்ணான பத்மினி பாஸ்கரன் என்பவரும் அவர் கணவர் பாஸ்கரனும் இந்தக் கோயிலைப் பழனி மலை அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்திற்குக் கொடுத்திருக்கிறார்கள்.

குறிஞ்சி ஆண்டவர் கோயில் க்கான பட முடிவு


குறிஞ்சி ஆண்டவர் கோயில் க்கான பட முடிவு

ஒரே ஒரு சந்நிதி மட்டுமே! அங்கிருந்து ஓர் குறிப்பிட்ட இடத்தில் நின்று பார்த்தால் பழநி மலை தெரியும் என்றார்கள். நாங்களும் சிறிது நேரம் நின்று பார்த்தோம். ஒரே மேகக் கூட்டங்கள்! அரை மணி நேரம் ஆகியும் கலையவில்லை. காலை ஆறரை மணிக்குத் திறக்கும் கோயில் மாலை ஏழு வரை திறந்தே இருக்கிறது. அங்கே தரிசனம் முடித்துக் கொண்டு அங்கேயே ஒரு தேநீர்க்கடையில் தேநீரும் அருந்திவிட்டு அடுத்த இடத்துக்குக் கிளம்பினோம்.  அங்கிருந்து நாங்கள் சென்ற இடம் பில்லர் ராக்ஸ் என்னும் தூண் பாறைகள் ஆகும்.

இங்கே செங்குத்தாய்க் காணப்படும் மூன்று பெரிய பாறைகள் தூணைப் போல் காட்சி அளிப்பதால் இந்தப் பெயரில் அழைக்கப்படுகிறது. நாங்கள் போன சமயத்தில் மேகங்கள் இருந்தன. சற்று நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தோம். சூடான வேக வைத்த வேர்க்கடலை வாங்கிக் கொறித்த வண்ணம் பில்லர் ராக்ஸைப் பார்த்துப் படமும் எடுத்துக் கொண்டேன். ஹிஹிஹி, படமெல்லாம் ஶ்ரீரங்கத்தில் பழைய மடிக்கணினியில் பத்திரமா இருக்கு! இப்போ இதை எழுத ஆரம்பிப்பேன்னு நினைக்கலையா! அதான் போட முடியலை! வழக்கம் போல் படமில்லாப் பதிவுகள்! :)

pillar rocks க்கான பட முடிவு    pillar rocks க்கான பட முடிவு

பின்னே பதிவு ஏன் போட்டேன்னு கேட்கறீங்களா? ஹிஹிஹி, நாட்டில் சூடான விஷயங்கள் ஓடிட்டு இருக்கிறச்சே கொஞ்சமானும் குளிர்ச்சியா இருக்கட்டுமேனு தான். பென் டிரைவில் சிலது காப்பி பண்ணி இருக்கேன். அதை இன்னும் இந்தக் கணினிக்குக் கொண்டு வரலை. அதிலே இருக்கானு பார்க்கணும். :)

பில்லர் ராக்ஸ் பார்த்துட்டு அங்கிருந்து பிரயன்ட் பார்க் வந்தோம்.  ஒரே கூட்டம். டிக்கெட் வாங்கவே எக்கச்சக்கமாக் கூட்டம். ஒரு மாதிரியாப் பார்த்துட்டுப் பின்னர் கொடைக்கானல் ஏரியைக் காரிலேயே சுற்றி வந்தோம். ரொம்பவே நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈளமான ஏரி. அதுக்குள்ளே இருட்டி விட்டது. அங்கே இருந்த கடைகளில் காஃபி பவுடர், தேயிலை, சாக்லேட், ஏலக்காய் போன்றவை விற்றுக் கொண்டிருந்தனர். ஒரு கடையில் பேரம் பேசிக் காஃபி பவுடர், தேயிலைத் தூள், சாக்லேட் கொஞ்சம் போல், ஏலக்காய் போன்றவை வாங்கினோம். ஏலக்காய் விலை கொள்ளை! கிட்டத்தட்ட 2,000 ரூபாய் கிலோ விற்றார்கள்.  மற்றப் பொருட்களிலும் கொள்ளை அடித்திருப்பது மறுநாள் தான் தெரிந்தது.

அன்றைய ஊர் சுற்றலை முடித்துக் கொண்டு ஓட்டல் திரும்பினோம். இரவு உணவு அறைக்கே வரவழைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து ஆனியன் ஊத்தப்பம் இரண்டு கொண்டு வரச் சொன்னோம். வந்தது ஆனியன் கருகலப்பம். கையெல்லாம் கறுப்பு ஒட்டிக் கொண்டது. சாம்பாரில் வெறும் மிளகாய்த் தூள் மட்டுமே போட்டிருந்தார்கள். சட்னியில் தேங்காய் என்பதே தேட வேண்டி இருந்தது. சாப்பாடு கொண்டு வந்து கொடுத்த அறை ஊழியர் இந்த வயசான காலத்திலே ஏன் சார் இந்தச் சாப்பாட்டைச் சாப்பிடப் போறீங்களானு ரங்க்ஸிடம் அனுதாபப் பட்டார். கடைசியில் சாப்பிடவே இல்லை.  அப்படியே குப்பைக்கூடைக்குள் போட்டு விட்டுப் படுத்து விட்டோம். மறுநாள் காலை கோமதி அரசு சொன்ன குழந்தை வேலப்பரைப் போய்ப் பார்க்க வேண்டும். அதுக்குக் காலையிலேயே புறப்படணும். ஆகவே படுத்துட்டோம்.