Saturday, November 28, 2020
காணும் இடமெல்லாம் வேலன்! கந்த சஷ்டிப் பதிவுகள்! 11
கோமதி அரசு அவர்களின் இழப்பில் இருந்து இன்னமும் மனம் வெளிவரவில்லை. நமக்கே இப்படின்னா அவங்களுக்கு எப்படி இருக்கும் என்று நினைக்கையில் ஒண்ணும் புரியவில்லை. அந்த வேலவன் தான் அவர்கள் மனது தேறி வர அருள் புரிய வேண்டும். ஆரம்பித்த கந்த சஷ்டிப் பதிவுகளை முடிச்சுடலாம்னு இன்னிக்கு வள்ளி திருமணத்தின் அடுத்த பதிவைப் பகிர்ந்திருக்கேன். கொஞ்சமானும் மனம் ஆறுதல் அடையலாமே!
***********************************************************************************************************************************************************************************
“என்ன, யானையா? தாத்தா, இருங்க, இருங்க, போயிடாதீங்க! எனக்கு யானையைக் கண்டால் பயம்!” என்று வள்ளி நடுக்கத்துடன் ஓடி வந்து கிழவரைக் கட்டிக் கொள்கின்றாள். மனதில் சந்தேகம் பூக்கின்றது வள்ளிக்கு. கிழவர் மாதிரி இல்லையே கையும், காலும், என்று நினைத்துக் கொள்கின்றாள். ஆனாலும் யானை பயம் மனதில் முந்துகின்றது. கிழவருக்கு சந்தோஷம், “ வள்ளி, ஏமாந்தாயா? ஏச்சுப்புட்டேனே, வள்ளி, ஏச்சுப் புட்டேனே!” என்று பாடி, ஆட, இவர் கிழவர் இல்லை என வள்ளியின் மனதில் உறுதிப் படுகின்றது. “சரி, தண்ணீர் தானே, தாத்தா, வாங்க , தண்ணீர் தருகின்றேன்”என்று அருகே இருந்த சுனைக்கு அழைத்துப் போய்க் கிழவரைச் சுனையில் தள்ளி விடுகின்றாள். பின் கை கொட்டிச் சிரிக்கின்றாள் வள்ளி. “ஏச்சுப்புட்டேனே, தாத்தா, ஏச்சுப்புட்டேனே!” என்று பாடி ஆடுகின்றாள் வள்ளி. “அப்படியா, வள்ளி, அதோ பார்!’ என்கின்றார் கிழவர். அங்கே வந்தது ஒரு யானை பிளிறிக் கொண்டு. வள்ளிக்கு நடுக்கம் அதிகம் ஆகி அவளும் சுனைக்குள் இறங்கிக் கிழவரைக் கட்டிக் கொண்டாள். யானை போகவே இல்லை. அங்கேயே பிடிவாதமாய் நிற்கின்றது.
“ஆனையும் குதிக்குதல்லோ
அசட்டாளம் பண்ணுதல்லோ
சண்டாளப் பண்டாரா- என்னை
சதி மோசம் செய்தீரே
ஆனையை விலக்கி விடும் – நீர்
ஆளையேக் கலக்குதல்லோ!”
என்று கிழவரிடம் யானையைக் கூப்பிடும்படியும், விரட்டும்படியும் வள்ளி கெஞ்சுகின்றாள். கிழவர் கெஞ்சினால் மிஞ்சுகின்றார், மிஞ்சினால் கெஞ்சுகின்றார். இப்போது கிழவரின் முறையாச்சே. வள்ளி சரியாக மாட்டிக் கொண்டாள். “வள்ளி, என் அருமை வள்ளி, ஆசை வள்ளி, நான் உனக்கு என்ன வேண்டும், அதைச் சொல்லு, என்னைக் கல்யாணம் செய்துக்குவியா? சரினு சொல்லு! ஆனை போகும்!” என்று சொல்கின்றார் கிழவர். வள்ளி மறுக்கின்றாள். “நீர் எனக்கு மாமன், நான் உமது மருமகள்” என்று வள்ளி சொல்ல, கிழவர் மறுக்கின்றார். யானை போக மறுக்கின்றது. யானையை எப்படியாவது துரத்தினால் போதும் என நினைத்த வள்ளியோ,
“ஆகட்டும், ஆகட்டும் தம்புரானே
ஆனய விலக்கிவிடு
நீரெனக்குப் பாட்டாவாம்
நானுனக்குப் பேத்தியாம்”
என்று சொல்கின்றாள் இம்முறை. ஆனால் கிழவர் இதற்கும் மசியவில்லையே. ம்ஹூம், அழுத்தமாய் “வள்ளி, நீ என்னைக் கல்யாணம் செய்துக்கறேன் என்று சொல்லு, ஆனை போயிடும்” என்று சொல்கின்றார் கிழவர். அரை மனதோடு வள்ளி சம்மதிக்கின்றாள். அப்போது நம்பிராஜனுக்குத் தினைப்புலத்தில் ஒரு கிழவர் வந்து வள்ளியைத் துன்புறுத்துகின்றான் எனத் தகவல் கிட்ட, அவன் வள்ளியைப் பார்க்க விரைந்து வந்தான் தன் மகன்கள் அனைவருடனும்.
அவனும், அவன் கூட்டத்தாரும் வருவதைக் கண்டதும் “ஆஹா, பிழைத்தோம் “ என நினைத்த வள்ளி, கிழவர் இருந்த பக்கம் திரும்ப அங்கே கிழவரைக் காணவில்லை. புதியதாய் ஒரு வேங்கை மரம் நிற்கின்றது. வள்ளிக்கு அப்போது தான் இதிலே ஏதோ விஷயம் இருக்கிறது எனப் புரிய, என்ன செய்யலாம் என யோசிக்கின்றாள். நம்பிராஜன் வந்து பார்த்துவிட்டு, “என்ன இது? புதுசாய் ஒரு வேங்கை மரம்? வெட்டுங்கள் இதை! “ என்று சொல்ல, அதை வெட்ட ஆரம்பிக்க, வள்ளியோ, வேண்டாம், வேண்டாம் என அலறிக் கொண்டே அந்த வேங்கை மரத்தைக் கட்டிக் கொள்கின்றாள். ஆறுமுகன் தன் ஆறுமுகங்களோடும் தோன்றி வள்ளியை ஆட்கொள்கின்றான். நம்பிராஜன் திகைத்துப் போய் நிற்கின்றான்.
எத்தனையோ தெய்வத் திருமணங்கள் இருந்தாலும் இந்த வள்ளி திருமணக் கதை அனைவரையும் கவர்ந்தாப் போல் வேறு ஒன்று கவராது. அனைவருக்கும் பிடித்த கதையாகும் இது. நான் பள்ளியில் படிக்கும்போது மார்கழி மாதப் பஜனை வகுப்பில் திருமதி ராஜம்மாள் சுந்தரராஜனின் மேற்பார்வையில் நடக்கும் பக்தி கலா நிகழ்ச்சியில் வள்ளி கல்யாணம் கட்டாயம் இடம் பெறும் ஒன்றாகும். பல முறைகள், பல வருடங்கள் தொடர்ந்து பார்த்திருக்கின்றேன். என்றாலும் அலுக்காத ஒன்று. பஜனை வகுப்பில் படிக்கும் மாணவிகளே பாத்திரங்களை ஏற்று ஆடிப் பாடி நடிப்பார்கள். ஒரு மாதத்துக்கும் மேலே ஒத்திகை நடக்கும். சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தான் நிகழ்ச்சிகள் நடக்கும். அரையாண்டுத் தேர்வுக்கும் படித்துக் கொண்டு, இம்மாதிரியான நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டு, காலையில் சீக்கிரமாய் எழுந்து பஜனைக்கும் போய்க் கொண்டு, அம்மாதிரியான ஒரு வாழ்க்கை இப்போ நினைச்சாலும் கிடைக்குமா சந்தேகம் தான். காலையிலே 4 மணிக்கெல்லாம் மதனகோபால ஸ்வாமி கோயிலில் ஆரம்பிக்கும் பஜனை, 4 மாசி வீதிகளையும் சுற்றி ஆரம்பித்த இடத்துக்கே வந்து சேரும். அதுக்கப்புறமாய்ப் பள்ளிக்குப் போவோம். அதிலும் ஆண்டாளின் வாரணமாயிரம் பாடலுக்கும், இந்த வள்ளி திருமணம் நடக்கும் தினத்திலும் கூட்டம் அதிகமாய் வரும். முன்னாலேயே போய் இடம் பிடிப்போம். இப்போ பொதிகையின் தயவில் சில நிகழ்ச்சிகள் பார்க்க முடியுது உட்கார்ந்த இடத்திலேயே! (((
வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்லக் கலங்குமே!...
ReplyDeleteமுருகா சரணம்...
வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா!
Deleteபதிவு அருமைதான்.
ReplyDeleteஇன்னும் பழைய கால எண்ணங்களா? போன காலங்கள் போயின காலங்கள்தான்.
நான் 2ம் வகுப்பு படித்தபோது திருப்பாவை சொல்லி ஒரு நோட்டு பரிசு கொடுத்தாங்க. வீதியில் மார்கழி பஜனை பார்த்ததில்லை (அது எனக்கு முந்திய காலமாக இருக்கும்).
இப்போ அத்தி பூத்தார்ப்போல்தான் இருக்கும்னு நினைக்கிறேன். மக்கள் வாழ்க்கை முறையே மாறிவிட்டது.
சென்னை மயிலாப்பூரில் நான்கு மாட வீதிகளிலும் சென்ற வருடம் வரை மார்கழி மாதக் காலை வேளையில் பஜனை கோஷ்டி போய்க் கொண்டிருந்தது. இந்த வருஷம் அனுமதிக்கிறாங்களானு தெரியலை.
Deleteகதை சுவாரஸ்யம்.
ReplyDeleteநன்றி ஶ்ரீராம்.
DeleteMaami, enjoyed reading your blog after so many years. Thank you.
ReplyDeleteஅட? எஸ்கே எம், வாங்க, வாங்க, பழைய நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்ள வாங்க!
DeleteMaami, Enjoyed reading in your blog after so many years_SKM
ReplyDeleteஹாஹாஹா, அதான் 2 தரம் வந்திருக்குப் போல!
Deleteஅன்பு கீதாமா,
ReplyDeleteமிக மிக ரசிக்க வைத்த பதிவு.
ஆமாம் , கோமதியின் இழப்பு நம்மை எல்லாம் கலக்கிக் கொண்டிருக்கிறது.
அவரிடமும் நம்மைப் பற்றி சொன்னேன். எல்லோருக்கும் நன்றி சொன்னார்.
என்ன செய்ய முடியும் நம்மால்.
எப்படியோ இறைவன் ஆட்டுவிக்கின்றான்.
நாமும் அசைகிறோம்.
எல்லாம் கர்ம வினை.
நன்றி ரேவதி. இன்னிக்கு கோமதியோடு பேசலாமானு நினைச்சேன். அப்புறமாப் பண்டிகை பற்றிய நினைவுகளில் மேலும் அழுவார்கள். கொஞ்ச நாள் போகட்டும்னு இருந்துட்டேன். மனம் தேறி வரணும்.
Deleteமார்கழி மாத மதுரையை நினைத்தால் அந்த நாளும் வந்திடாதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
ReplyDeleteஅதுவும் அத்தம்மா ராஜம்மாளின் ஆளுமை
மிகப் பெரிது.
அவரோடு என் பாட்டி எப்படி சம்பந்தப் பட்டார்
என்பது இன்னும் வியப்பு.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கட்டுப்பெட்டியான குடும்பம். இந்த மாதிரி
கலைக் குடும்பத்தில் சம்பந்தம் கொள்வது
வேடிக்கை. எனக்கென்னவோ அங்கே போவது மிகப்
பிடித்திருந்தது.
நான் 2016 இல் மதுரை போனப்போக் கூட விசாலி அக்கா வடக்காவணி மூலவீதியில் ஒரு வீட்டில் அறிவிப்புப்பலகை போட்டிருந்தார். பழைய நினைவுகள் வந்தன. பங்கஜி அக்காவும் அவங்க குழந்தையும் நினைவில் வந்தார்கள்.
Deleteவள்ளி திருமணம் கேட்கக் கேட்க அலுக்காத
ReplyDeleteநிகழ்வு.
சிறப்பாகச் சொல்லி இருக்கிறீர்கள்.எல்லோர் மனமும் சாந்தி அடைய முயற்சிப்போம்.
ஆமாம், எல்லோர் மனதிலும் சாந்தி நிலவட்டும்.
Deleteவள்ளித் திருமணம் - சிறப்பாகச் சொல்லி இருக்கிறீர்கள். தற்போது மார்கழி மாத பஜனைகள் கூட நடப்பது அரிதாகிவிட்டது.
ReplyDeleteதொடரட்டும் பதிவுகள்.
எங்கானும் ஓரிரண்டு இடங்களில் நடப்பதாகத் தெரிகிறது வெங்கட்.
Deleteகோமதி அரசு அவர்கள் துயரத்திலிருந்து விடுபட வேலவன் துணை புரியட்டும்.
ReplyDeleteஆமாம், கில்லர்ஜி, வடிவேலன் துணையுடன் மீண்டு வர வேண்டும்.
Deleteவள்ளித் திருமணக் கதை எப்போதுமே சுவாரசியமான கதை.
ReplyDeleteஎல்லோருக்கும் நல்லது நடக்கட்டும்.
கீதா
நன்றி தி/கீதா.
Delete