Wednesday, August 28, 2024

குட்டிக் குட்டிக் கிச்சாப்பயல் வந்துட்டுப் போனான்!

 வீட்டில் சார்ட் பேப்பர்களின் துண்டுகள் இல்லை. ஆங்காங்கே வண்ண, வண்ணக் கறைகள் இல்லை. கிண்ணங்களில் தண்ணீருடன் பிரஷ் எதுவும் இல்லை. கை கழுவும் வாஷ்பேசினில் வண்ணக் கறைகளோ தண்ணீர் தேங்கியோ இல்லை. எல்லாம் சுத்தமாக இருக்கு. சாப்பாடு மேஜையில் எதுவும் இல்லாமல் இடம் நிறைய இருக்கு. மணிக்கணக்காக உட்கார்ந்து சாப்பிடும் நபரைக் காணோம். அவரின் அழுகையும், சாப்பிட மாட்டேன் என்னும் பிடிவாதமும் இல்லை. மொத்தத்தில் வீட்டில் சப்தமே இல்லை. நிசப்தம். எங்கோ ஓர் குழந்தை அழுதால் குஞ்சுலுவோனு நினைக்கும் மனம். பின்னர் அவள் தான் ஊருக்குப் போயிட்டாளே என்பது நினைவில் வரும். காலையில் திரும்பத் திரும்ப வந்து கட்டிக் கொண்டது இன்னமும் உணர்வில் தோய்ந்திருக்கு. படிக்க அடம் பிடிக்கும்/சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தை. கவலைப்படும் பெற்றோர்கள். ஊருக்குப் போய்விட்டது. 

இந்த வருஷமும் லிட்டில் கிருஷ்ணாவின் பிறந்த நாளைக் கொண்டாடுவியா பாட்டி? எனக் கேட்டுக் கொண்டது. வாசலில் கோலம் போட்டுக் காலடிகள் வைச்சாச்சு என அவ அப்பா சொன்னதும் ஓடி வந்து பார்த்துக் கொண்டது. அக்கம்பக்கம் வீடுகளிலும் போடுவதைப் பார்த்தது. பூத் தொடுத்துக் கொண்டிருக்கையில் மாலையைத் தூக்கிப் பார்த்தது. பின்னர் சாயங்காலம் வாங்கிய பக்ஷணங்களோடு வீட்டில் பண்ணின பால் பாயசத்தையும், வடையையும் கூடவே தயிர், வெண்ணெய், பால், புதுசாய்க் காய்ச்சிய நெய், அவல், வெல்லம், தேங்காய், பழங்கள் எல்லாம் வைச்சு நிவேதனம் பண்ணி தீபாராதனை காட்டினேன். என்னவோ தெரியலை. அதனிடம் வழக்கமான உற்சாகம் தெரியலை. ஸ்ரீராம் சொன்னாப் போல் குழந்தை பெரிய பெண்ணாக ஆகிக் கொண்டு வருகிறாளோ? குழந்தைத் தனம் இன்னமும் இருக்கு. ஆனால் சந்தேகங்கள் கேட்கும். கிருஷ்ணரைப் பற்றிக் கேட்கும். நானாகச் சொன்னேன். ஜெயிலில் பிறந்தான் குட்டிக் கிருஷ்ணன் என. அவன் சகோதரி யோகமாயா பற்றிச் சொல்லிவிட்டு, நீ தான் யோக மாயா என்றேன்.  சிரித்துக் கொண்டாள், புரியலைனு நினைக்கிறேன். மொத்தத்தில் இந்த வருஷக் கிருஷ்ண ஜயந்தியை ஒப்பேத்தியாச்சு. கீழே படங்கள். இனி செப்டெம்பர் ஐந்தாம் தேதி எங்க ஆவணி அவிட்டமும், ஏழாம் தேதி நம்ம நண்பரின் விழாவும் வருது. எப்படிச் செய்ய்ப் போகிறேன்னு தான் புரியலை.







8 comments:

  1. கிச்சாப்பயலுக்கு எல்லாம் சூப்பரா பண்ணி வைச்சிருக்கீங்க கீதாக்கா!

    ஓ குட்டிக் குஞ்சுலு வந்திருந்ததா!?

    ஆமாம் குழந்தையும் வளரத்தானே செய்வாள்! ஒவ்வொரு பருவமும் ஒவ்வொரு வித ரசனைதான்.

    ஆவணி அவிட்டமும் நல்லபடியாக நடக்கும் கீதாக்கா.

    கீதா

    ReplyDelete
  2. கண்ணன் அருளால் நல்லபடியாக அவன் பிறந்த நாளை கொண்டாடி விட்டீர்கள்.
    படங்கள் நன்றாக இருக்கிறது. துர்கா கண்ணன் பிறந்த நாள் சமயம் இருந்தது மகிழ்ச்சி.
    பண்டிகை சமயம் மகன், மருமகள், பேத்தி இருந்தது மனதுக்கும், உடலுக்கும் தெம்பு அளித்து இருக்கும்.

    இனி வரும் பண்டிகைகளையும் நல்ல படியாக செய்வீர்கள். வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  3. கிருஷ்ண ஜெயந்தி சிறப்பாக கொண்டாடியது மகிழ்ச்சி.  நீங்கள் சொல்லி இருக்கும் விஷயங்களோடு எங்கள் வீட்டில் சுக்கு சர்க்கரை வெண்ணெயில் குழைத்து செய்வார் பாஸ்.  மருமகள் அழகாக குட்டி கிருஷ்ணன் கால்கள் போட்டார். 

    வெள்ளைச்சீடை சரியாய் வரவில்லை.  கடக்குடா என்றிருந்தது.  வெல்லச்சீடை அருமையாய் வந்திருந்தது. 

    வீட்டில் குட்டிக் கால் பதித்து நடக்க ஒரு குட்டி கிருஷ்ணனுக்காக நாங்களும் காத்திருக்கிறோம்.  அன்றைய தினம் அண்ணன் பேரன் கிருஷ்ணன் கெம்மப்பில்  கொள்ளை கொண்டான்.

    ReplyDelete
  4. குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கக் கூடாதா என்று சில சமயம் மனம் ஏங்கும்.  சாத்தியமும் இல்லை, நியாயமும் இல்லையே...   வயது ஏற, ஏற அவர்கள் கவனம் பல்வேறு திசைகளில் திரும்பிப் படர்கிறது.  அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா என்கிற குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்து விரிவடைகிறது.

    ReplyDelete
  5. படங்கள் அருமை.  எங்கள் வீட்டில் தவிர்க்க முடியாத காரணங்களால் செப்டம்பர் ஆறாம் தேதிதான் வரலக்ஷ்மி விரதம் செய்கிறோம்.  ஏழாம் தேதி விநாயகர் சதுர்த்தி.  அன்றே கிளம்பி குலதெய்வம் கோவில்- அண்ணன் பேரனுக்கு முடி இறக்க...  

    இந்த வருடம் சாம வேதமும் கூட மற்ற வேதங்களுடன் சேர்ந்தே ஆவணி அவிட்டம் செய்ய வருகிறது என்கிற ஒரு சிறு வதந்தி அந்நேரத்தில் சுற்றி வந்தது!

    ReplyDelete
  6. சிறப்பு. எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. அழகான படங்கள். பச்சைக்கலர் ஸ்ரீராமரை தரிசித்துக் கொண்டேன். கிருஷ்ண ஜெயந்தி விஷேட த்தை சிறப்பாக கொண்டாடியமைக்கு வாழ்த்துகள். பட்சணங்கள் படங்கள் நன்றாக உள்ளது.

    இப்போது குழந்தை இல்லாமல் தங்களுக்கு வீடு வெறிசோடி இருக்கும். அவள் நினைவாகவே இருந்திருக்கும் மனதை தேற்றிக் கொள்ளுங்கள். . கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கு உங்களுடன் பேத்தி சேர்ந்திருந்தாளா ? பட்சணங்களை விரும்பி சாப்பிட்டாளா ? அதன் பின்தான் ஊருக்கு கிளம்பி போயிருக்கிறார்களா? இனி வரும் விஷேடங்களும் சிறப்பாக நடக்கும். கவலை வேண்டாம் தைரியமாக இருங்கள். நம் விநாயகர் அனைத்தையும் நல்லபடியாக நடத்தி தருவார். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  8. will answer soon, sorry for the delay,

    ReplyDelete