Friday, March 27, 2026

ராமஜயம், ஸ்ரீராமஜயம், நம்பின பேருக்கு ஏது பயம்?

 


Posted by Picasa


Posted by Picasaஸ்ரீராமவமி


ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வராநனே

ஸ்ரீராம நவமி இன்னிக்கு. தினமும் ராமரை நினைச்சுண்டாலும் இன்னிக்கு ராமநவமி என்பதால் இரண்டு , மூன்று நாட்களாய் அவர் தான் நினைவில். கல்யாணம் ஆகிப்புக்ககத்தில் அழைத்த முதல் நாளில் முதல் நமஸ்காரம் இவருக்குத் தான் பண்ணினோம். இம்மாதிரியானத் தஞ்சாவூர் ஓவியப்படங்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தாலும் ஏதோ ஒன்றிரண்டு ஏதேனும் தீபாவளி மலர் மூலமாகப் பார்த்திருப்பேன். அப்போ ரொம்பச் சின்ன வயசு தானே. அதனால் அதிகம் இதெல்லாம் தெரிஞ்சிருக்கலை. அவரைப் பார்த்ததுமே மனதில் ஓர் நம்பிக்கை. இஅவர் நம்மை வழி நடத்துவார்னு நினைச்சுண்டேன். அப்போல்லாம் இந்தப்படம் எங்களிடம் வரும்னு தெரியவும் தெரியாது. முதலில் கருவிலியில் இருந்தே கிளம்புவாங்களானு தெரியாத நேரம். ஆகவே பெரிசாய் எதிர்பார்ப்பெல்லாம் இல்லை. ஆனால் 1982 -- 83 ஆம் வருஷங்களில் கருவிலியில் எல்லாவற்றையும் விற்று மாமனார் செட்டில் செய்து நிரந்தரமாக எங்களுடன் வந்திருக்க முடிவு செய்து கருவிலி வீட்டைக் காலி செய்தப்போ ராமரும் எங்களுடன் கும்பகோணத்தில் இருந்து எங்களுடன் சென்னைக்குப் பயணம் ஆனார். அதன் பின்னர் எங்களுடனேயே இருந்தார். எங்க வீட்டு கிரஹப்ரவேசம் நடந்தப்போ 83 ஆம் ஆண்டில் இவருக்காகவே ஸ்வாமி அலமாரியில் அளவு எடுத்துப் படம் வைப்பதற்காக இடம் ஏற்படுத்திக் கட்டினோம். அப்போவும் இவர் எங்களுடன் இருப்பார்னு நினைக்கலை. ஏனெனில் மாமனாருக்குத் தன் இரண்டாவது பையருக்குத் தான் இதைக் கொடுக்கணும் எனத் தீர்மானமாக ஒரு கருத்து இருந்தது.. நாங்க வேறே ராஜஸ்தான், குஜராத்னு எல்லாம் போயிண்டு இருந்தோம். என்றாலும் வேறே சில தனிப்பட்ட காரணங்களுக்காக மைத்துனரிடம் தான் கொடுக்கணும்னு இருந்தார். 


ஆனால் அவரோ தன்னால் இதைப் பராமரிக்க முடியாதுனு சொல்லிட்டார். அவர் மனைவிக்கும் பெரிய அளவில் இது குறித்த ஆவல் எல்லாம் இல்லை என்பதால் இயல்பாக இது எங்களிடமே இருந்தது. கடைசி மைத்துனர் தனக்கு வேண்டாம் என முன்னரே சொல்லிட்டார். இப்படித் தான் இவர் எங்களுடன் வந்து இருக்க ஆரம்பித்தார். நாங்க 88 ஆம் ஆண்டில் மறுபடியும் ராஜஸ்தான், குஜராத் வந்தப்போ மாமனார் இருந்ததால் படம் வீட்டிலேயே ஸ்வாமி அலமாரியில் இருந்தது. பெரியவங்க காலத்தில் இவரை ஸ்வாமி அலமாரியின் மேல் தட்டிலும் கீழே உள்ள அலமாரியில் பஞ்சாயதன பூஜைக்கான விக்ரஹங்களும் சாளக்ராமமும் வைச்சுப்பூஜைகள் செய்திருக்காங்க. சொத்துப் பிரிவினையின் போது என் மாமனாருக்குப் படமும் அவர் அண்ணாவுக்கு விக்ரஹங்களும்னு கொடுத்திருக்காங்க. மாமனாரின் அண்ணாவுக்கு ஆண் வாரிசு இல்லை. பெண் வீட்டுக்கு விக்ரஹங்களைக் கொடுத்தப்போ பெண்ணின் மாமனார் மறுத்திருக்கார். அதே போல் அவங்களுக்கு ஏதோ பிரச்னை வர இந்த விக்ரஹங்கள் என் பெரிய மாமியாரிடமே இருந்தன. 

அவற்றை அவர் வைத்து பூஜிக்க முடியாமல் ஓர் பெட்டியில் வைத்திருந்தார். பின்னர் அவர் முதியோர் இல்லம் சென்றதால் இவற்றை எங்களிடம் கொடுத்துவிட்டார். இப்படியாகத் தானே அவை 2010 ஆம் ஆண்டில் எங்க வீட்டு ஸ்வாமி அலமாரியில் மேலே படமும், கீழே விக்ரஹங்களும் என வைத்து இருந்தோம். பின்னர் 2012 ஆம் ஆண்டில் ஸ்ரீரங்கம் வந்தப்போ ராமரும் ரொம்ப குஷியாக ரங்கநாதர் என் குலதெய்வம் எனச் சொல்லிக் கொண்டு எங்களோடு பயணம் செய்து இங்கே வந்து சேர்ந்தார். ஸ்ரீரங்கம் வரதுக்கு முன்னால் நாங்க என் நாத்தனாரின் மைத்துனர் வீட்டில் இருந்தோம். அங்கே உள்ள ஸ்வாமி அலமாரியில் இருந்த ராமரைத் தான் இங்கே பார்க்கிறீர்கள்.

 . போன வருஷம் மாமா இருந்தார். ஸ்ரீராமநவமிக்குச் சாப்பாடு மட்டும் வெளியே வாங்கிக் கொண்டு பிரசாதங்கள் எல்லாம் வீட்டில் பண்ணினேன். மாமாவையே ராமருக்கு மாலை சாத்தச் சொன்னேன். முடியலை தான். ஆனாலும் நடமாடிக் கொண்டு இருந்ததால் ஆர்வமுடன் செய்தார். பூஜை எல்லாம் பண்ண முடியலை. சும்மாப் பிரசாதங்களை வைச்சு நிவேதனம் பண்ணினோம். கற்பூர ஆரத்தி காட்டினோம். இந்த வருஷம் அந்த நினைவுகளில் ஆழ்ந்திருக்கேன்.

இப்போவும் தோஹா கிளம்பும் முன்னால் மைத்துனரிடம் படத்தையும் விக்ரஹங்களையும் வைச்சுக்கறீங்களானு கேட்டதுக்குத் தன்னால் முடியாது. வீட்டில் ஸ்வாமி அலமாரி ரொம்பச் சின்னது. மேலும் இந்தப் படங்களையும் விக்ரஹங்களையும் வைத்துக் கொண்டு அவற்றுக்கான முறைகளில் ஆசாரங்களைக் கடைப்பிடிப்பதும் கஷ்டம் எனச் சொல்லிட்டார். தினசரி நிவேதனமே கஷ்டம் என்றா  ர். ஆகவே ராமர் ஸ்ரீரங்கத்தில் தனியாகத் தான் இருக்கார். விக்ரஹங்கள் எல்லாம் உள்ளே பெட்டியில். :(


விக்ரஹங்கள் அனைத்தும் ராமருடனேயே இடம் பெற்றிருக்கின்றனர். ஸ்ரீரங்கத்தில் எடுக்கும் படங்களில் ஒளியின் பிரதிபலிப்பால் படம் சரியாக வந்திருக்காது. நெல்லை கேலி செய்துண்டே இருப்பார்.

Friday, March 06, 2026

நல்லதே நடக்கட்டும்!

 என்ன நடந்தாலும் யார் என்ன செய்ய முடியும்? நேற்றிரவு, (இன்றைய அதிகாலை 1.30 இல் இருந்து 2.00 மணிக்குள்ளாக மறுபடி செக்யூரிடி எச்சரிக்கை மணி. பின்னர் விடிகாலை 3.30 / 4.00 மணி அளவில் எல்லாம் சரியாகி விட்டது எனச் செய்தி வந்தது. இப்போ இது வரை ஒண்ணும் இல்லை. ஆனாலும் ஒரு பக்கம் பேச்சு வார்த்தை எனச் செய்திகள், இன்னொரு பக்கம் விட்டேனா பார் என்னும் செய்திகள், மொத்தத்தில் குழப்பமாகவும் கவலையாகவும், பயமாகவும் இருக்கு. பயணம் செய்வதும் குறிப்பா விமானப் பயணம் செய்வதும் இப்போதைய நிலையில் ஆபத்தானதே. என்னவோ பார்ப்போம், என்ன நடக்கும் எனப் புரியவில்லை. என்னோட கவலை எல்லாம் முக்கியமாக இது நீட்டித்துக் கொண்டே இருக்கும் எனவும் செப்டெம்பர் தாண்டும் எனவும் சொல்கிறார்கள். ஜூன் மாதம் மாமாவின் ஆப்தீகம் வருது. அதுக்கு இந்தியா வர முடியுமா என்ற கவலை. பையர் போயிடலாம், அதுக்குள்ளே முடிஞ்சுடும் என்கிறார். பார்க்கலாம். எல்லாம் கடவுள் விட்ட வழி.  நேற்றுச் சாயங்காலம் ஆறரை மணி அளவில் பையர் முக்கியமான பொருட்கள் வாங்கச் சென்றிருந்தார். அப்போது பல ட்ரோன்கள் வருவதும் போவதுமாக இருந்தன என்றார். கடைகளில் கூட்டம் அதிகமில்லை என்றாலும்  ஓரளவு மக்கள் காணப்பட்டனர் என்றும் சொன்னார்.

Sunday, March 01, 2026

அமைதி நிலவட்டும்! ஜெய் ஸ்ரீராம்.

 அடுத்து என்ன என்பது புரியலை. ஏற்கெனவே முன்னர்  நான் கத்தார், தோஹா வந்த ஓரிரு மாதங்களிலேயே எங்க குடியிருப்புக்கு அருகேயே ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. . இப்போவோ வேறே மாதிரி நிலைமை. நேற்றுக் காலை எழுந்ததுமே மொபைலில் புதுசாக ஏதேனும் செய்தி வந்திருக்கானு பார்த்தப்போத் தான் யுத்தம் ஆரம்பித்திருப்பது தெரிய வந்தது. பின்னர் காலையிலிருந்து அடுத்தடுத்து அவசர எச்சரிக்கைச் செய்திகள் வந்து கொண்டே இருந்தன. நேற்று சனிக்கிழமை வாரக் கடைசி விடுமுறை நாள் என்பதால் எல்லோருமே வீட்டில் தான். என்றாலும் கவலையும் பயமும் உலுக்கத் தான் செய்தது. இதற்கு முன்னால் இந்தியாவில் ஜாம்நகரில் கணவர் வேலை மாற்றத்தில் சென்றப்போ நாங்களும் அங்கே இருந்தோம். சில/பல கலவரங்கள், ஏர்பேஸ் தாக்குதல் என அப்போவும் கொஞ்சம் அசாதாரணமான சூழ்நிலை நிலவியது. நேற்று அடுத்தடுத்து நடந்த ஏவுகணைத் தாக்குதல் இரவு பத்துமணி வரை நீடித்தது. பின்னர் அமைதி. மௌனம் . காலை எழுந்து பார்த்தால் நிலைமை கொஞ்சம் மாறி இருப்பதாகச் செய்தி. என்றாலும் இன்னமும் கவலையோ பயமோ எச்சரிக்கை நிலைமையோ மாறவில்லை எனத் தோன்றுகிறது. இறைவனைப் பிரார்த்திப்பதை விட வேறே வழி இல்லை. அனைவரும் பயம் இன்றி அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்ளுவோம்.