Tuesday, July 29, 2008

600-வது பதிவு! கதை, கதையாம் காரணமாம் ராமாயணம் - பகுதி 79

600-வது பதிவு

தற்செயலாக நேற்றுத் தான் கவனித்தேன், 599 பதிவு ஆகி இருந்ததை! இது 600-வது பதிவு. அப்படி ஒண்ணும் முக்கியமா எழுதலைனாலும், எழுதினவரைக்கும் முழு திருப்தியோட இருப்பது இந்த ராமாயணம் பதிவு மட்டுமே. அதிகப் பின்னூட்டம் வரலைனாலும், சிலவற்றில் பின்னூட்டமே இல்லை எனினும், தனி மடல்களில் வரும் பாராட்டுக்களே ஊக்கம் ஊட்டுபவையாக இருக்கின்றன. அப்படி மடலே வரலைனாலும் எழுதறதை நிறுத்தி இருக்கவும் மாட்டேன், எனினும், என்னோட சிறு முயற்சிக்குப்பலன் இருக்கின்றது என்ற வகையில் மகிழ்ச்சியே! பின்னூட்டம் கொடுத்தவர்கள், கொடுக்காதவர்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இனி, சீதை என்ன ஆனாள் எனப் பார்ப்போமா??
*************************************************************************************

பொழுது விடிந்தது, மற்றவர்கள் அனைவருக்கும், ஆனால் சீதைக்கு இல்லை. எனினும் பேதையான சீதை இதை அறியமாட்டாள். அவள் எப்போதும்போல் மனமகிழ்வுடனேயே இருந்தாள். லட்சுமணன் ஆறாத்துயரத்துடன் சுமந்திரரிடம் சென்று, ரதம் தயார் செய்யும்படிக் கூறிவிட்டு, சீதையின் அந்தப்புரத்திற்குச் சென்று அவளை நமஸ்கரித்தான். பின்னர் அவளிடம், ராமர் அவளைக் கங்கைக் கரைக்கு அழைத்துச் செல்லுமாறு கட்டளை இட்டதாயும், தயார் ஆகி வருமாறும், ரதம் தயார் நிலையில் இருப்பதையும் தெரிவிக்கின்றான். சீதை மிக்க மகிழ்வோடு, ஒவ்வொரு ரிஷி பத்தினிகளுக்கும் அளிக்கும் வகையில் பல்வேறு விதமான பரிசுப் பொருட்களை எடுத்து வைத்துக் கொள்கின்றாள். மனதிற்குள், ஒரு இரவிலேயே தன் கணவன் தன்னுடைய ஆசையை நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்தது பற்றிய பெருமிதத்துடனும், அநேகவிதமான பரிசுப் பொருட்களுடனும், சீதை ரதத்தில் ஏறி அமர்ந்தாள். அவள் நிலையைக் கண்ட லட்சுமணன் மிக்க வேதனை அடைந்தான். ரதம் கிளம்பியது. ராமர் மனதில் சூன்யம் சூழ்ந்தது.ரதம் செல்லும்போதே சீதை லட்சுமணனிடம் தனக்கு ஏனோ மனதில் மிக்க வேதனை தோன்றுவதாயும், அபசகுனங்கள் தோன்றுவதாயும், வலது கண்ணும், வலது தோளும் துடிப்பதாயும் கூறுகின்றாள். மனதில் ஏதோ இனம் தெரியாத வெறுமை சூழ்வதாயும் சொல்லும் அவள், "லட்சுமணா, உன்னுடைய அண்ணனுக்கு ஏதும் நேராமல் நலமாய் இருக்கவேண்டும், என் மாமியார்கள், நலமாய் இருக்கவேண்டும், மற்ற இரு மைத்துனர்களும், உங்கள் மூவரின் மனைவிமாரும், என் சகோதரிகளும் நலமாய் இருக்க வேண்டும், இதற்காக ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன்." என்று கூறினாள். லட்சுமணன் அவளுடைய பரிசுத்தமான உள்ளத்தை மனதில் போற்றிய வண்ணம், சற்று நேரத்தில் தனக்கு நேரப் போகும் துக்கத்தை உணராமல் மற்றவர்கள் கஷ்டப் படுவார்களோ என எண்ணித் தவிக்கும் அவளைத் தேற்றினான். ரதம் கங்கைக் கரையை அடைந்தது. கீழே இறங்கி ஓய்வெடுத்துக் கொண்ட போது, துயரத்தை அடக்க முடியாமல் லட்சுமணன் "ஓ"வென வாய்விட்டுக் கதறி அழுதான். பேதையும், மனதில் கூடத் தனக்கு நேரிடப் போகும் அளவிட முடியாத இழப்பை நினைக்காதவளும் ஆன சீதை, ஒருவேளை ராமரை விட்டுச் சற்று நேரம் அதிகம் பிரிந்து இருப்பதாலேயே லட்சுமணன் துன்பப் படுகின்றான் என எண்ணி, அவனைத் தேற்றுகின்றாள். "நாம் அக்கரை சென்று அனைவரையும் பார்த்துவிட்டுப் பரிசுப் பொருட்களைக் கொடுத்துவிட்டுத் திரும்பி விடுவோமே? ஏன் கலங்குகின்றாய்? எனக்கும் ராமரைப் பிரிந்து அதிக நேரம் இருக்க முடியாது தான், லட்சுமணா, வெட்கத்தை விட்டுச் சொல்கின்றேன். நீ உன்னைத் தேற்றிக் கொள்வாய்!" என்று சொல்லவும், லட்சுமணன் படகு தயாராகிவிட்டதால் அக்கரைக்குச் செல்லலாம் எனக் கூறுகின்றான்.

அக்கரையைப் படகு அடைகின்றது. இருவரும் கீழே இறங்கியதும், லட்சுமணன் தன் இரு கைகளையும் கூப்பிய வண்ணம் சீதையை வலம் வந்தான். "தாய்க்கு நிகரானவளே! அனைவரும் ஏசப் போகும் ஒரு காரியத்தை என்னைச் செய்யும்படி என் அண்ணன் ஆணை! நீ எவ்வளவு பரிசுத்தமானவள் என்பதும், என் அண்ணனைத் தவிர மற்றொருவரை நினையாதவள் என்பதும் நான் அறிவேன். தயவு செய்து, தேவி, இந்தக் காரியத்தை நான் என் முழு மனதோடு செய்வதாய் நினைத்து விடாதீர்கள். காலம், காலத்துக்கும் எனக்கு நேரிடப் போகும் பழிச் சொல்லுக்கு நான் காரணம் இல்லை!" என்று வேண்டுகின்றான் சீதையிடம். சீதைக்கு இப்போது தான் சற்று மனக் கலக்கம் வருகின்றது. ஏதோ தனக்குச் சற்றும் உடன்பாடு இல்லாத ஒரு விஷயத்தை லட்சுமணன் இப்போது செய்யப் போகின்றான் என்பதை உணர்ந்தாள்.

"ஏதோ பெரும் சுமையை உள்ளத்தில் சுமந்திருக்கின்றாய் லட்சுமணா, அது என்ன? சொல்லிவிடு! மன்னரும், என் கணவரும் ஆன ஸ்ரீராமர் உன்னிடம் ஏதோ விரும்பத் தகாத காரியத்தைச் செய்யச் சொல்லி இருக்கின்றாரா?? சற்றும் மறைக்காமல் உள்ளது உள்ளபடிச் சொல்லிவிடு லட்சுமணா!" என்று சீதை கேட்க, லட்சுமணன், பத்ரனிடம் ராமர் கேட்டு அறிந்த செய்தியைக் கூறுகின்றான். மற்றவர்களும் அந்தச் செய்தியை உறுதி செய்ததையும், நாட்டு மக்கள் பேசுகின்ற அவதூறு காரணமாய், தேவர்களாலும், அக்னியாலும், போற்றப்பட்டு, வாழ்த்தப் பட்ட உங்களைக் காட்டில் விட்டுவிட்டு, ஆசிரமங்களுக்கு அருகில் அநாதை போல் விட்டுவிட்டு வருமாறு ராமர் என்னிடம் கூறி உள்ளார். ஆனால் தேவி, இதைச் சொல்ல அவர் எவ்வளவு வேதனைப் பட்டார் என்பதும், அவர் மனம் முற்றிலும் உடைந்துவிட்டது என்பதும் நான் அறிவேன். மனம் தளரவேண்டாம், தேவி, ரிஷி, முனிவர்கள் உங்களைக் கைவிட மாட்டார்கள். அதிலும் இங்கே ரிஷிகளில் மிக உயர்ந்தவரும்,எங்கள் தந்தையான தசரதரின் நண்பரும், ஆன வால்மீகியின் ஆசிரமம் உள்ளது. தாங்கள் விரும்பினால் அங்கேயே தங்கிக் கொள்ளலாம். ராமரை மனதில் நினைத்தவண்ணம் அந்த ஆசிரமத்தில் வாழுமாறு தங்களை மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொள்கின்ரேன். உங்கள் சிறப்பு இன்னும் ஓங்கி ஒளி விட்டுப் பிரகாசிக்கவே இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கின்றது என நம்புகின்றேன்." என்றான் லட்சுமணன்.சீதை அளவிடமுடியாத துயரத்துடன் கீழே வீழ்ந்தாள். கதறி அழுதாள். பின்னர் லட்சுமணனிடம் சொல்கின்றாள்.

"லட்சுமணா, ஒரு கணத்துக்கேனும், மனதாலும், உடலாலும், நன்னடத்தையில் இருந்து தவறாத எனக்கு இப்படிப் பட்ட துன்பங்கள் நேருமளவுக்கு நான் என்ன பாவம் செய்தேனோ??? என்னை பிரம்மதேவன் துன்பங்கள் அனுபவிப்பதற்கெனவே சிருஷ்டித்தானோ?? என் பதியைப் பிரிந்து ஆசிரமத்தில் தனிமையில் நான் வாழவும் வேண்டுமோ?? ஐயகோ! தற்கொலை செய்து கொள்வோமெனில் ராமரின் குலவாரிசு என் வயிற்றில் வளருகின்றதே! அதற்கும் முடியாதே!! ரிஷிகளிடம் நான் என்ன காரணத்தைச் சொல்லிக் கொண்டு ஆசிரமத்தில் தங்குவேன்? ஒன்றும் புரியவில்லையே! சரி, லட்சுமணா, நீ என்ன செய்ய முடியும்? மன்னரின் ஆணை அதுவானால் நீ திரும்பிச் செல்வாய்! ஆனால் மன்னருக்கு நான் தெரிவிக்க வேண்டிய செய்திகளைச் சொல்கின்றேன். அவற்றை மன்னரிடம் நான் கூறியதாய்க் கூறுவாய்!" என்று சொல்கின்றாள் சீதை.

12 comments:

  1. //அப்படி மடலே வரலைனாலும் எழுதறதை நிறுத்தி இருக்கவும் மாட்டேன்//

    அதானே! நாம யாரு, அஞ்சா நெஞ்சம் படைத்தவங்களாச்சே! :p

    நம்பர்ல என்ன இருக்கு? எத்தனை பேர் மனசுல நாம இருக்கோம் என்பது தான் முக்யம். :))

    அந்த வகையில தினமும் ஒரு தடவையாவது நானும் என் தம்பியும் உங்களை சிலாகித்து, சில சமயம் உங்க பதிவுகளை துவைத்து காய போடுவோம்.

    ReplyDelete
  2. சீக்ரம் ராமாயணத்தை முடிச்சு சுண்டல் குடுங்க. சீதை புலம்பறதை எல்லாம் வாசிக்க முடியாது. :))

    ReplyDelete
  3. 600வது பதிவுக்கு வாழ்த்துக்கள் தலைவி ;))

    ReplyDelete
  4. அறுநூறு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. 600ஆம் பதிவுக்கு வாழ்த்துக்கள் கீதாம்மா!
    IPL Match-இல் நீங்க மட்டும் சென்னை சார்பா ஆடியிருந்தீங்கன்னா...
    இந்நேரம் கப் நமக்குத் தான் கிடைச்சிருக்கும்! :)

    ReplyDelete
  6. அறுநூறு கண்ட அம்பத்தூர் தலைவி-ன்னு போஸ்டர் கீஸ்டர்-ல்லாம் ஒட்டலையா? :)
    வாட் இஸ் தி தொண்டர் படை டூயிங்?

    ReplyDelete
  7. 600 பதிவுகள்.
    கற்பனை என்றாலும் அற்புதம் என்றாலும் கந்தனே உனை மறவேன்" என்பது போல் எங்களால் கற்பனையிலும், அற்புதம் நடந்தாலும் இவ்வளவு சாதிக்க முடியாது.

    உங்கள் எண்ணங்கள் எங்களை எண்ண வைக்கட்டும்.

    அடியவன் இராகவன்

    ReplyDelete
  8. //வலது கண்ணும், வலது தோளும் துடிப்பதாயும் கூறுகின்றாள்//

    ஆணுக்கு இடக்கண் துடித்தால் இடுக்கண்!
    பெண்ணுக்கு வலக்கண்ணா, கீதாம்மா?

    ReplyDelete
  9. // நாட்டு மக்கள் பேசுகின்ற அவதூறு காரணமாய், தேவர்களாலும், அக்னியாலும், போற்றப்பட்டு, வாழ்த்தப் பட்ட உங்களைக் காட்டில் விட்டுவிட்டு, ஆசிரமங்களுக்கு அருகில் அநாதை போல் விட்டுவிட்டு வருமாறு//

    :((((


    //இதைச் சொல்ல அவர் எவ்வளவு வேதனைப் பட்டார் என்பதும், அவர் மனம் முற்றிலும் உடைந்துவிட்டது என்பதும் நான் அறிவேன்//

    உம்...
    ஆயிரம் சொன்னாலும்...
    இராமா....
    உன் மீது இஅந்த அம்பு வீசப்பட்டுக் கொண்டே தான் இருக்கும்!

    //ஐயகோ! தற்கொலை செய்து கொள்வோமெனில் ராமரின் குலவாரிசு என் வயிற்றில் வளருகின்றதே!//

    :)
    :(

    //ரிஷிகளிடம் நான் என்ன காரணத்தைச் சொல்லிக் கொண்டு ஆசிரமத்தில் தங்குவேன்//

    :(

    ReplyDelete
  10. மற்ற தம்பிமார்களை, அமைச்சர்களை அனுப்பாமல், இலக்குவனோடு அனுப்பி வைத்ததற்கு ஏதாச்சும் காரணம் இருக்கா கீதாம்மா?

    ReplyDelete
  11. போட்டபதிவு பூரணமா நிலைச்சு நிக்கனும்னா கீதா அம்மா கையிலே கொடுத்துப் பாரு சின்ன அம்பி. அவுங்க அதை ஆறாநூறா ஆக்குவாங்க கணேசா.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. 600வது பதிவுக்கு நெஞ்சம் நிறை வாழ்த்துக்கள்.

    கோவை விஜய்
    http://pugaippezhai.blogspot.com/

    ReplyDelete