Sunday, January 04, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், பகுதி 20.

கம்சன் சமீபத்தில் பிறந்த அனைத்துக் குழந்தைகளையும் கொன்றுவிடவே எண்ணினான். ஆனால் அவன் நெருங்கிய சிநேகிதர்களில் சிலருக்குக் குழந்தைகள் பிறந்திருந்தன. இன்னும் சொல்லப் போனால் அவன் மனைவியர் இருவருக்குமே ஆண்குழந்தைகள் பிறந்திருந்தன. அவன் மற்றக் குழந்தைகளைக் கொல்லுவதை மீண்டும் ஆரம்பித்தால் அதன் மூலம் மிகப் பெரிய இடையூறு நேரிடும். தன் குழந்தைகளையும் தானே கொல்லும் அபவாதம் நேரிடுமோ என அஞ்சினான் கம்சன். ஆகவே மீண்டும் பூதனையை அழைத்தான். நந்தன் கப்பம் கட்ட வந்திருந்ததையும், அவனுக்கு பல வருடங்கள் கழித்து மகன் பிறந்திருக்கின்றான் என்ற செய்தி உறுதிப் படுத்தப் பட்டிருப்பதையும் அவளிடம் சொன்னான் கம்சன்.

நந்தனின் குழந்தையைக் கொல்லுவது என்பது அவ்வளவு எளிதான வேலை இல்லை. நந்தன் மிக மிகப் பணிவைக் காட்டியதோடு அல்லாமல், கப்பத்தையும் ஒழுங்காய்ச் செலுத்தி வந்தான். ஷூரர்களால் மிகவும் விரும்பப் பட்டவன். வசுதேவருக்கும், தேவகிக்கும் மிகவும் நெருங்கியவன். கோகுலத்தில் இருந்த ஷூர இனத்தவர்கள் அனைவருமே பலம் பொருந்தியவர்கள் மட்டுமில்லாமல், பணமும் படைத்தவர்கள். அவர்களின் தலைவன் ஆன வசுதேவனின் ஒரு சகோதரியோ, அஸ்தினாபுரத்தில் வாழ்க்கைப் பட்டிருக்கின்றாள். அஸ்தினாபுரத்து இளவரசனாய் இருந்து தற்சமயம் பட்டத்தில் இருக்கும் பாண்டுவின் மனைவி. அஸ்தினாபுரத்துக் காரர்களைப் பகைத்துக் கொள்ளுவது என்பது நடக்காத காரியம். என்னதான் மகத நாட்டு அரசன் நமக்கு மாமனார் ஆனாலும் குரு வம்சத்தினரைப் பகைத்துக் கொள்ளுவது அவ்வளவு புத்திசாலித் தனம் இல்லை. இத்தனையும் யோசித்தான் கம்சன். பூதனையை கோகுலம் சென்று அந்தக் குழந்தையைக் கண்டு பிடித்து அதற்கு விஷப் பால் ஊட்டும்படிக் கேட்டுக் கொண்டான்.

பூதனையோ மறுக்கின்றாள். என்னால் முடியாது என்று சொல்கின்றாள். ஏற்கெனவே அனைவரும் அவளைக் கண்டாலே ஓடி ஒளிவதையும், அவளின் உடன்பிறந்தவர்களே அவளைக் கண்டால் வராதே என்று சொல்லுவதையும் தன்னுடைய முகத்தைப் பார்ப்பதே பாவம் என அவர்கள் நினைப்பதையும், அவ்வாறே நடந்து கொள்ளுவதையும் சொல்கின்றாள் பூதனை. கம்சன் அவளுக்குப் பலவிதமாய் ஆசை காட்டுகின்றான். பரிசுகள் பல தருவதாய்ச் சொல்கின்றான். தன்னுடைய சொந்தக் குழந்தையே தன்னைக் கண்டு பயப்படுவதாய்ப் பூதனை சொல்லிக் கண்களில் இருந்து கண்ணீர் வர அழுகின்றாள். அவள் வாழ்விலே முதல் கண்ணீர் அது. ஆனால் கம்சனுக்குக் கோபம் வருகின்றது. "பூதனை, நீ, உன் கணவன் ப்ரத்யோதா, பகா, அகா, அனைவரும் எனக்குக் கட்டுப் பட்டுள்ளீர்கள் என்பதை மறவாதே. உன்னுடைய இன்றைய இந்த நிலைக்குக் காரணம் யாரென நினைத்தாய்? நான் கொடுத்தது உனக்குச் செல்வம், உன்னுடைய தற்போதைய அதிகாரம், ஏன், உன்னுடைய உயிர் கூட என் கையில் தான், நினைவு வைத்துக் கொள்!" என்று கோபம் கொப்பளிக்கச் சொல்கின்றான் கம்சன்.

பூதனை மெளனமாய் இருந்தாள். "பூதனை, நான் ஒரு வார்த்தை சொன்னால் போதும், மகத வீரர்கள் உன்னையும், ப்ரத்யோதாவையும், வெறும் கைகளால் கொன்று விடுவார்கள். வாழ்வோ, சாவோ, என்னை மீறி நீயோ, ப்ரத்யோதாவோ ஒன்றும் செய்ய முடியாது. செய்யவும் கூடாது. என் கட்டளையை மீறி உங்கள் வாழ்வில் எதுவும் இல்லை." என்றான் கம்சன். பூதனை வாயே திறக்கவில்லை. "இங்கே நிற்காதே, போ உடனே, பதினைந்து நாட்கள் உனக்குக் கெடு வைத்திருக்கின்றேன். அதற்குள் நீ நான் சொன்னதைச் செய்வாயாக." என்று ஆணை இட்டான் கம்சன். பூதனை எதுவுமே பேசாமல் வெளியே வந்தாள். அரண்மனைப் பணிப்பெண்கள் கூடத் தன்னைக் கண்டதும் வெகு வேகமாய் ஓடி மறைவதைக் கண்டாள் பூதனை. மனம் வேதனையில் ஆழ நடந்தாள் பூதனை.

கோகுலத்தில் அந்த மாதம் பெளர்ணமி தினத்தன்று அவர்களின் குலதெய்வம் ஆன கோபநாத் மஹாதேவருக்குத் திருவிழா வந்தது. கோகுலமே விழாக் கோலம் பூண்டிருந்தது. அனைவரும் தினம் காலையில் யமுனைக்கரைக்குச் சென்று யமுனையில் குளிப்பதும், வில்வங்களால் கோபநாதரை அர்ச்சிப்பதுமாய் விழாவுக்கெனத் தங்களைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். பெளர்ணமி இரவு முழுநிலவில் யமுனைக்கரைக்குச் சென்று பாலில் வறுத்த அரிசியைக் கலந்து செய்யப் பட்ட பிரசாதங்களும், வழிபாடுகளும் செய்து அனைவரும் கலந்து ஆடிப் பாடிக் களித்து வழிபடுவது வழக்கம். அன்று மதுராவில் ஏதோ அவசர வேலை இருப்பதால் நந்தன், தன்னுடைய உறவினர்களுடன் மதுரா சென்று விட்டு நடு இரவுக்குள் வந்து விழாவில் கலந்து கொள்ளுவதாய்த் திட்டம் போட்டுவிட்டுச் சென்றுவிட்டான். யசோதைக்குச்செய்தி வந்தது, மதுராவிலே யாரோ பெரிய அந்தணக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி, கோகுலத்தின் கோபநாத் மஹாதேவருக்கு முக்கியப் பிரார்த்தனையை நிறைவேற்ற வந்து கொண்டிருக்கின்றாள் என.

செய்தி வந்த போது யமுனைக்கரைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த யசோதை, உடனேயே இரு இளைஞர்களை அனுப்பி வரும் விருந்தாளியை வீட்டுக்கு அழைத்துப் போய், உபசரித்துவிட்டுப் பின்னர் யமுனைக்கரைக்கு அழைத்து வரும்படி அனுப்பி வைத்தாள் அவர்களும் சென்றார்கள். பூதனை மனம் பதறினாள். யமுனையில் குளித்துவிட்டு கோபநாதரைத் தரிசனம் செய்யும்போதெல்லாம் தான் செய்யப் போகும் வேலையை நினைத்து, நினைத்து ஆயாசம் அடைந்தாள். "கடவுளே, கடவுளே, எல்லாரும் மன நிம்மதியுடனும், சந்தோஷத்துடனும் இருக்கும்போது எனக்கு மட்டும் ஏன் இந்தக் கிலேசம்? யமனுக்குத் துணை போகும்படி என்னை ஏன் படைத்தாய்? மகிழ்ச்சி என்பது எனக்கு ஏன் மறுக்கப் பட்டது? யமன் கூடச் செய்ய அஞ்சும் ஒரு காரியத்தை, ஏதுமறியாக் குழந்தைகளின் உயிரைப் பறிக்கும் காரியத்தை நான் செய்யும்படி ஆனது ஏன்?" என்று மனதுக்குள்ளேயே கதறினாள். யசோதை இருக்கும் இடம் போய்ச் சேர்ந்தாள் கூட வந்தவர்களுடனேயே.

யசோதையும்,ரோகிணியும் அருகருகே அமர்ந்திருக்க மற்ற அனைத்து கோபஸ்த்ரீகளும் அவரவர் குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் அமர்ந்திருந்தனர். பூதனையை வரவேற்று அமர வைத்தாள் யசோதை! பூதனையின் கண்கள் தேட ஆரம்பித்தன.

7 comments:

  1. சூப்பராக கதை சொல்லிறிங்க தலைவி...ம்ம்ம்...அடுத்து ;)

    ReplyDelete
  2. migavum arumai... thodarattum ungal sirandha payanam...

    Expecting more such gems from you

    ReplyDelete
  3. Good job...

    keep it up.. wishing you to write more such gems...

    ReplyDelete
  4. போச்சுடா! பூதனை மேலே அனுதாபமே வந்துடும் போல இருக்கே!

    ReplyDelete
  5. வாங்க கோபி, ரொம்ப நன்றி.

    மெளலி, வரவுக்கு நன்றி.

    சரவணன், வாங்க, முதல்வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    @திவா, என்ன தப்பு?? பூதனையைக் கூட எதுக்குத் தப்பாய்ச் சொல்லணும்?? அனுதாபம் வரட்டும்! :P

    ReplyDelete
  6. பூதனையின் உணர்வுகளெல்லாம் பத்தி இது வரை படிச்சதில்லை. நல்ல வேலை பண்றீங்க. நன்றி அம்மா.

    ReplyDelete