Tuesday, September 22, 2009

நவராத்திரியில் நவ துர்கைகள் - காத்யாயனி ஐந்தாம் நாள்


காத்யாயினி: உலகாளும் அன்னை தன் மகளாய்ப் பிறக்கவேண்டும் எனவேண்டினார் காத்யாயன மாமுனிவர். அவர் எண்ணம் ஈடேற அவர் மகளாய்ப் பூவுலகில் அவதரித்தாள் அன்னை. காத்யாயன மாமுனியின் மகள் என்பதால் காத்யாயினி என வழங்கப் படுகின்றாள். கோகுலத்து கோபியர்கள் கண்ணனை அடைய இவளையே தெய்வமாய் வழிபட்டு விரதம் இருந்தனர் என்பார்கள். கன்னியர் மனம் மகிழும்படிய்க் கணவனை அளித்துக் கல்யாணப் பேறு அளிப்பாள் இவள் என்று கூறுவார்கள். இவளுக்கான தோத்திரம்
“காத்யாயினி மஹாமாயே மகாயோகிந் யதீஸ்வரி
நந்தகோப ஸுதம் தேவி பதிம்மே குருதே நமஹ” என்பதாகும். இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் பண்ணும் கன்னியர்க்கு மனதுக்கிசைந்த மணாளன் கிடைப்பான் என்பது உறுதி. இவளை வழிபட வேண்டிய நாள் புதன்கிழமை ஆகும். நவராத்திரியில் புதன்கிழமை இவளை வழிபட்டால், புத்தியும், ஞானமும் அளிக்கும் புதன் கல்வி, கலைகளில் சிறந்து விளங்க வைப்பதோடு, கல்யாணப் பேறும் அளிப்பார். பதஞ்சலி மிருதங்கம் வாசிக்க, ஈசன் ஆடிய ஆட்டம் முனி தாண்டவம். அப்போது ஈசனின் நெற்றிக்கண்ணில் தோன்றியவளே காத்யாயனி ஆவாள்.

ஐந்தாம் நாள் கோலம் பாவைகள். இன்றைய அலங்காரமாக "காளிகா தேவி"யையோ, அல்லது சுகாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் சும்பாசுரனின் தூதுவன் அனுப்பிய தகவலைச் செவி மடுக்கும் கோலத்தில் அமர்ந்த துர்கையாகவோ அலங்கரிக்கலாம். ஆறு வயதுள்ள பெண் குழந்தையைக் "காளிகா" வாகப் பாவித்து வழிபடுதல் நல்லது. பகை நீங்கவும், இடையறாது தொல்லைகள் கொடுத்துவந்த எதிரிகள் அடங்கவும் இவளை வணங்குதல் நல்லது. இன்றும் சிவந்த நிறமுள்ள மலர்களே. முக்கியமாய்ச் செவ்வரளிப் பூ விசேஷமானது. இன்றைய நிவேதனம் பால் சாதம், குழைய வடித்த சாதத்தில் சுண்டக் காய்ச்சிய பசும்பாலையும் சர்க்கரையையும் சேர்த்து, ஏலம், முந்திரிகளால் அலங்கரித்துக் கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.

இன்றைய சுண்டல் கடலைப்பருப்புச் சுண்டல்.

துர்காஷ்டகம்:
துன்பமற்றவள் துர்கா துரிய வாழ்பவள்
துறையுமானவள் இன்ப தோணியானவள்
அன்பு உற்றவள் துர்கா அபயவீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே


லலிதா நவரத்ன மாலையின் இன்றைய ரத்தினம் மாணிக்கம்

காணக்கிடையா கதியானவளே கருதக் கிடையாக் கலையானவளே
பூணக்கிடையாப் பொலிவானவளே புனையக் கிடையாப்புதுமைத்தவளே
நாணித் திருநாமமும் நின் துதியும் நவிலாதவரை நாடாதவளே
மாணிக்க ஒளிக்கதிரே வருவாய் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

3 comments:

  1. உட்ப் பகை,வெளிப்பகை,நீக்கி,
    உலகமெங்கும் அமைதியையும், ஆன்ந்ததையும் காத்யாயனி தேவி
    அருளட்டும்.

    நவராத்திரி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. பெண்களுக்கு நல்ல கணவன் அமைய வேண்டிக்கிற மாதிரி ஆண்களுக்கும் ஒரு ப்ரேயர் தயவு செய்து எழுதணும் கீதாஜீ.மனைவி அமைவதும் இறைவன் வரம். ஆண்களுக்கும் அவ அம்மா தானே

    ReplyDelete
  3. வாழ்த்துகள் கோமதி அரசு,

    ஜெயஸ்ரீ, நீங்க சொல்றது ரொம்ப சரி, ஆண்கள் பலரும் நல்ல மனைவி இல்லாமல் சிரமப் படுவதைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கோம்.

    ReplyDelete