Sunday, June 03, 2012

ஆனந்தத்துக்கு ஒரு மிஸ்ட் கால்! முடிவு!

ரெண்டு நாளா மின்சாரம் படுத்தின பாட்டிலே எதுவுமே முடியலை:  ஒரு காலத்தில் பால்ய விவாகங்களை ஏற்படுத்தி இருந்ததன் காரணமே பெண்ணோ, ஆணோ மனதில் தோன்றும் விகார உணர்ச்சிகளை மட்டுப்படுத்த வேண்டித் தான்.  இள வயதில் திருமணம் முடிந்து விட்டால், பின்னர் மனம் அலை பாயாது;  அதோடு ஓரளவுக்குத் தெரிந்த குடும்பமாகவோ அல்லது சொந்தமாகவோ இருக்கும்.  ஏனெனில் குடும்பம் மட்டுமில்லாமல் பெண்ணும், பையரும் கூடப் பழகினவங்களா இருந்திருப்பாங்க.  இப்போதும் நாம் பால்ய விவாகங்களை ஆதரிக்கிறோம் தான்.  வேறு விதத்தில்.  பள்ளி மாணவ, மாணவியர் ஒருவருக்கொருவர் பள்ளிப் பருவத்திலேயே காதலித்துத் திருமணம் செய்து கொள்வதை ஆதரிக்கிறோம். அதைத் திரைப்படமாய் எடுக்கிறோம்.  அந்தக் காதல் தெய்வீகக் காதல் என்று சொல்கிறோம்.  ஆனால் ஒரு காலத்தில் உளவியல் ரீதியாக நம் முன்னோர்கள் செய்த பிள்ளைப் பருவத் திருமணங்களைச் சட்டம் போட்டுத் தடுத்திருக்கிறோம். அதனால் எதுவும் பலன் இருந்திருக்கிறதா?  முதிர்கன்னிகள் போய் இப்போது முதிர் கன்னர்கள் நிறைய ஆகி இருப்பதைத் தவிர. ஆனால் நவீன மருத்துவம் அதைச் சரியில்லைனு சொல்லி நிறுத்தச் சொல்ல அநேகமா நிறுத்திட்டாங்க.  இப்போதையப் பெண்பார்த்தல்/பிள்ளை பார்த்தல் என்பது பழகிப் புரிந்து கொண்டு செய்து கொள்வதாய்ச் சொல்ல முடியவில்லை.  பெரும்பாலான காதல் திருமணங்களும் காதலில் இருக்கையில் பலவீனங்கள் மறைக்கப்பட்டே நடந்தேறுகின்றன.

திருமணங்களின் மூலம் இரு குடும்பங்கள் இணைகின்றன என்பதையும் உணரவேண்டும்.  இதிலே யார் விட்டுக் கொடுக்கிறது என்ற பேச்சே இல்லை.  இருபக்கமும் விட்டுக் கொடுத்தே ஆகவேண்டும். ஆனால் மாயா அதைப்புரிந்து கொள்கையில் அவளுடைய முதல் திருமண வாழ்க்கை முறிந்து விட்டது.  இன்னொரு திருமணம் செய்து கொள்ளச் சொல்லி சிநேகிதிகள் கூறினாலும் மாயாவுக்கு இருக்கிறபடியே இருக்கலாம்; பிரச்னைகள் வராது என்று யோசனை; தயக்கம்.  ஆனால் குருஜி தைரியமான முடிவை எடுக்கச் சொல்கிறார். கம்பெனியில் ஆட்குறைப்புச் சமயம் பயந்து கொண்டு இருக்கிறவர்களை விட பயப்படாமல் நடப்பது நடக்கட்டும் என இருப்பவர்கள் எப்படியேனும் பிழைத்துக் கொள்வார்கள்.  அது போல எதிர்காலத்தை நினைத்து ஒவ்வொரு நொடியும் பயப்படாமல் இந்த நிமிஷத்தின் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழச் சொல்கிறார்.  இது மாயாவை மீண்டும் குழப்புகிறது.

ஏற்கெனவே மாயாவின் அம்மா ஒரு மாப்பிள்ளை பார்த்து வைத்திருக்கிறார்.  கல்யாண விஷயம் என்பதே சூதாட்டம் மாதிரியோ? ஒரு முறை சூடுபட்ட மாயாவுக்கு மறுமுறையும் என்ன ஆகுமோ என்ற கலக்கம்.  அதுவும் முதல் மனைவியை இழந்தவன்.  ஒரு குழந்தையும் இருக்கிறது.  கட்டாயமாய் வேலையை விட வேண்டி இருக்கும்.  இதிலே தனக்கு சந்தோஷம் கிட்டுமா என மாயா யோசிக்கையில் அவளுடைய கல்லூரியில் உடன் வேலை பார்க்கும் ராகவன் வந்து அவளிடம் பேசுகிறார். அவளுடைய முன் வாழ்க்கை குறித்து அறிந்திருந்ததால், அதிலும் ராகவனின் விஞ்ஞானியான அக்கா திருமணத்திற்குப் பின்னர் தன்னுடைய ஆய்வுகளை மூட்டை கட்டி வைத்து விட்டதிலும் ஏமாற்றமடைந்திருந்த ராகவனுக்கு மாயாவின் கவலைகள் புரிகின்றன. கணவனோ, மனைவியோ பரஸ்பரம் அவரவர் ஆர்வங்களை மதிக்கவும், தூண்டி விட்டு ஊக்கம் கொடுக்கவும் வேண்டும் எனவும் அது தன் அக்கா கணவரிடம் இல்லாததால் அக்காவால் தன் வேலையைத் தொடர முடியவில்லை என்றும் தனக்கு மனைவி வந்தால் அவளுடைய ஆர்வங்களைத் தான் தடை போடப் போவதில்லை என்றும் சொல்கிறார்.

அது அவளுக்குச் சமையல் கலையாகவோ, சங்கீதமாகவோ அல்லது புத்தகம் படிப்பதோ எதுவானாலும்.  மாயாவுக்கு ராகவனின் உள்மனமும், அவர் சொல்வதில் போலித்தனம் இல்லாததும் பிடித்திருந்தது. உள்ளூர சந்தோஷப் பட்டாள் என்பதை அவள் சிநேகிதி ஜோதி அவளுடைய மாற்றங்களைக் கவனித்துச் சொல்கையில் அவளுக்கே புரிய வந்தது.  என்றாலும் தயக்கம்.......குருஜி சொல்கிறார்.  மற்றவர்களுக்கு ஆதரவு காட்டும் பெண்களே கடைசியில் ஆதரவைக் கோர ஆரம்பிக்கும் நிலை ஏற்படுகிறது.  பிரச்னைகள் ஏற்படுவது இயற்கைப் பேரழிவுக்குச் சமம் என்னும் குருஜி, இயற்கைப் பேரழிவை எப்படித் தடுக்க முடியாதோ அவ்வாறே ஒருவரது வாழ்க்கையில் பிரச்னைகள் ஏற்படுவதும்.  ஆகவே கடந்த காலம் என்பதை உங்களால் மறக்க முடியவில்லையா! அது அப்படியே இருக்கட்டுமே!  உங்கள் எதிர்காலத்துக்கான பாடத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.  தெளிவோடும், நம்பிக்கையோடும் முடிவு எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார். ராகவனைக் கல்யாணம் செய்து கொள்ள மாயா விரும்பினாலும் மாயா அந்த முடிவு குருஜியின் வாய் மூலமே வரவேண்டும் என்ற சார்பு எண்ணத்தில் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

தனக்கென ஒரு முடிவு எடுக்கும் தைரியத்தை மாயா பெறவில்லை என்பதை குருஜி ஓர் அரசன் வளர்க்கும் இரு குயில்கள் மூலம் தெளிவாக்குகிறார்.  ஒன்று இயல்பாகவே சுதந்திரச் சிந்தனை உள்ளது.  இறக்கைகள் வளர்ந்ததும் மெல்ல மெல்லப் பறக்க ஆரம்பிக்க, இன்னொன்றோ ஒவ்வொன்றுக்கும் அரசனையே எதிர்பார்க்கிறது.  இந்தப் பறவை பறக்கவில்லையே என்ற கவலையோடு மன்னன் அதைப் பறக்க வைக்க முயல, எந்தப் பறவைப் பயிற்சி நிபுணர்களாலும் முடியவில்லை. அப்போது ஒரு மரம் வெட்டுகிறவன் வந்து கூடு இருந்த கிளையைக் கோடாலியால் வெட்டப் போகக் கூட்டில் இருந்த பறவை விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென வேறொரு மரத்தை நாடிப் பறக்க ஆரம்பித்தது.  அது போல் நாமும் சுதந்திரமாய்ப் பறப்போமாக.

மாயா தான் தேர்ந்தெடுத்த ராகவனைக் கல்யாணம் செய்து கொள்கிறாள் குருஜியின் வாழ்த்துச் செய்தியுடன்.  அதன் பின்னர் குருஜியை அவள் சந்திக்கவே இல்லை.  குருஜியின் வாழ்த்துச் செய்தி:

நீ பறந்து போய் உட்கார்ந்த ராகவன் என்கிற மரம் வாழ்க்கை பூரா உனக்கு ஆதரவாகவும் துணையாகவும் இருக்கும்."


அன்புடன் மரம் வெட்டி.


ஆனந்தத்துக்கு நாம் மிஸ்ட் கால் கூடக் கொடுக்க வேண்டாம்.  நம்முள்ளேயே ஊற்றாய்ப் பொங்கிய வண்ணம் இருக்கிறது.  அதைப் புரிந்து கொண்டால் போதும்.



புத்தகத்தின் பெயர்:


ஆனந்தத்துக்கு ஒரு மிஸ்ட் கால்


எழுதியவர் சுரேஷ் பத்மநாபன் (On Cloud 9) Orijinal Book


ஷான் சவான்


தமிழாக்கம்:  கே. ஜி. ஜவர்லால்


கிடைக்குமிடம்:  கிழக்குப்பதிப்பகம்


விலை:  ரூ. 150/-









9 comments:

  1. புத்தகம் படித்த நிறைவு.

    இந்த பால்ய விவாகம் பத்தி... இதெல்லாம் நீங்க சொல்றதா இல்லை புஸ்தகத்துல இருந்தா?
    புஸ்தகம்னா அதை நான் படிக்கப் போறதில்லே. நீங்க சொல்றதா இருந்தா ஸ்ரீரங்கம் வரப்போ பேசிக்கலாம்.

    ReplyDelete
  2. வாங்க அப்பாதுரை, வலைச்சர வாரம் வெற்றியாய் முடிந்ததுக்கு வாழ்த்துகள்.

    பால்ய விவாகம் பற்றிப் புத்தகத்தின் எந்தப் பக்கத்திலும் இல்லை. நான் தான் சொல்றேன். இது குறித்த என் கருத்தை ஏற்கெனவே பல பதிவுகளில் எழுதியுள்ளேன். ஶ்ரீரங்கம் வாங்க, பேசிக்கலாம். ஒரு கை பார்த்துடலாம். :))))))))அதனாலே நீங்க புஸ்தகம் படிக்கலாம்.

    ReplyDelete
  3. அலசி, துவைச்சி, காயப் போட்டுட்டீங்க.... !

    ReplyDelete
  4. ஆனந்தத்துக்கு நாம் மிஸ்ட் கால் கூடக் கொடுக்க வேண்டாம். நம்முள்ளேயே ஊற்றாய்ப் பொங்கிய வண்ணம் இருக்கிறது. அதைப் புரிந்து கொண்டால் போதும்.

    பசுமரத்தாணியாக பதிந்து ஆனந்தம் அளித்த கதைக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  5. வாங்க ஸ்ரீராம், அடிச்சுத் துவைச்சுக் காயப் போட்டேனோ இல்லையோ, தெரியலை. ஒரு சிலருக்கு முக்கியமாய்ச் சில பெண்குலத்துக்குப் பிடிக்கலை என்பதைப் புரிந்து கொள்ள நேர்ந்தது. :)))))))))

    ReplyDelete
  6. வாங்க இராஜராஜேஸ்வரி, நீங்க ரசித்ததுக்கும் பாராட்டுக்கும் ரொம்பவே நன்றிங்க.

    ReplyDelete
  7. முழுமையான, சிறப்பான நூல் மதிப்புரை. ரசனையான இடங்களைக் குறிப்பிட்டு எழுதியிருப்பது உபரிச் சிறப்பு.

    நன்றி.

    கே.ஜி.ஜவர்லால்
    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  8. முழுமையான, சிறப்பான நூல் மதிப்புரை. ரசனையான இடங்களைக் குறிப்பிட்டு எழுதியிருப்பது உபரிச் சிறப்பு.

    நன்றி.

    கே.ஜி.ஜவர்லால்
    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  9. வாங்க ஜவர்/ஜவஹர்/லால், ரொம்பவே விரைவில் :P :P வந்து பின்னூட்டம் கொடுத்தமைக்கு நன்றி. :))))))) ஹிஹிஹி, தப்பா எடுத்துக்காதீங்க. :)))))

    உங்க பெயர் ஜவர்லாலா? ஜவஹர்லாலா? ரொம்ப நாட்களா/மாதங்களாக் குழப்பம்! :)))))))

    ReplyDelete