Monday, April 22, 2013

எப்படியோ கல்யாணம் நடந்தால் சரிதானா? :(

பிள்ளையின் தாய், தந்தை மருமகளைக் கொடுமை செய்வதையும், பெண்ணின் தாய், தந்தையர் போடும் நிபந்தனைகளையும் சென்ற பதிவில் பார்த்தோம்.  இந்தக் காலத்தில் நடப்பதைச் சொல்லிவிட்டு முன் காலத்தில் இதே திருமணங்கள் நடந்த விதத்தை எடுத்துக் காட்டுவதே என் முக்கிய நோக்கம்.  எப்படி ஒரு புனிதமாகவும், வாழ்க்கையின் முக்கிய நோக்கமாகவும் கருதப்பட்ட திருமண பந்தம் இன்று எப்படி மாறி இருக்கிறது என்பதைச் சொல்லவே இந்தப் பதிவுகள். அடுத்து இப்போ சொல்லப் போவது குறித்து மிகுந்த மனக்கஷ்டத்துடனேயே சொல்லப் போகிறேன்.  இந்தக் கல்யாணத்திற்கு நாங்கள் இருவரும் சென்றிருந்தோம்.  அப்படிச் சென்ற சமயத்தில் தான் பெண்ணின் பெற்றோர் எங்களுக்கு முன் கூட்டியே பதினைந்து வருடங்கள் முன்னர் அறிமுகம் ஆனவர்கள் என்பது தெரிய வந்தது.  என்றாலும் இப்படி ஒரு கொடுமையை நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

வடமாநிலத்திலேயே தொழில் புரிந்து அங்கேயே வசிக்கும் தொழிலதிபரின்   மனைவிக்கு ஒரு சிறு பெண் குழந்தை நாங்க பார்த்தப்போ இரண்டு அல்லது மூன்று வயதுக்குள்ளாக இருக்கும்.  அதன் பின்னர் நாங்க அந்த ஊரை விட்டே வந்துவிட்டோம். மறந்தும் போயிட்டோம்.  ஆனால் மிகவும் பணக்காரர்களான அந்தப் பெண்ணின் பெற்றோர் பெண்ணுக்குத் திருமணம் செய்ய நினைத்தது சகஜமே. பெண்ணும் நன்றாகப் படித்திருந்தாள்.  கார் ஓட்டுவாள்.  உயர்குலத்தினரின் நாகரிகப் பழக்க, வழக்கங்கள் அனைத்தும் உண்டு.  பெண்ணின் தாய் தென் மாநிலத்தில் குறிப்பாகச் சென்னையில் வசிக்கும் பையராகப் பார்த்துத் தேர்ந்தெடுத்தார்.  இதற்கு உதவி செய்தது பெண்ணின் அம்மாவைப் பெற்றவர்.  அவருக்கு எவ்வளவு தூரம் உண்மை தெரியும் என்பது எங்களுக்கு இப்போது யோசித்தாலும் விளங்கவே இல்லை. இந்தத் திருமணத்திற்குச் சென்றிருந்த போது தான் பெண்ணின் தாய் எங்களிடம் வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டு நாங்க ஒரே ஊரில் சில வருடங்கள் வசித்ததையும் எங்க வீட்டு நவராத்திரிக்கு வந்ததையும் குறிப்பிட்டுக் கூறினார்.

கல்யாணம் மிக விமரிசையாக நடக்கப் பிள்ளையின் பெற்றோருக்குத் தலைகால், புரியவில்லை. பெரிய இடத்திலிருந்து மருமகள், ஏற்கெனவே மூத்த மருமகள் இருந்தாலும் இந்த மருமகள் தான் அவங்களுக்கு அருமையாகத் தெரிந்தாள்.  திருமணம் ஆகிப் புக்ககமும் வந்தாச்சு.  பெண்ணின் நடவடிக்கைகள் கொஞ்சம் புதிராக இருந்தாலும் புதிய இடம், புதிய ஊர், முற்றிலும் புதிய வாழ்க்கை என நினைத்தனர்.  திருமணம் ஆகி ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது.  அந்தப் பெண் வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டாள்.  அதுவும் மூன்று ஷிஃப்ட் உள்ள கால் சென்டர் வேலையைத் தேர்ந்தெடுத்தாள். இரவு ஷிஃப்டையே அதிகம் விரும்பினாள்.  கணவன் மதியம் வீட்டில் இருக்கமாட்டான்.  இவள் இரவில் இருக்கமாட்டாள். மதியம் வந்து நன்றாய்த் தூங்கிவிடுவாள்.  ஆரம்பத்தில் தப்பாய்த் தெரியவில்லை என்றாலும் பிள்ளையின் பெற்றோருக்கு ஏதோ உறுத்த ஆறு மாதத்துக்கும் மேல் ஆகிவிட்டதே, இன்னும் கருத்தரிக்கவில்லையே, ப்ளான் பண்ணிட்டு இருக்கீங்களானு கேட்க, சில நாட்களில் பெண்ணின் அம்மா வருகை.

அவள் புக்ககம் அருகேயே வீடு ஒன்று எடுத்துத் தங்கிய அந்த அம்மா கொஞ்ச நாட்களில் பெண்ணைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று ஒரு வாரத்தில் அபார்ஷன் ஆகிவிட்டதாய்த் தகவல் தெரிவிக்க, பிள்ளையின் அப்பா, அம்மா வருந்த, பிள்ளைக்கோ சந்தேகம்.  அப்பா, அம்மாவிடம் தாங்கள் இருவரும், கணவன், மனைவியாக ஒரு நாள் கூட வாழவில்லை;  இரவில் தனித்திருந்தாலே ரொம்ப வெட்கப் பட்டுக்கொண்டு விளக்கை அணைக்க மாட்டாள்.  ஒதுங்கியே படுப்பாள் என்று சொல்லப் பிள்ளையின் தாய், தந்தைக்குக்குழப்பம்.  பெண்ணின் நடத்தையில் சந்தேகம் வர சண்டை போட்டிருக்கின்றனர்.  பெண் வீட்டினருக்குக் கோபம்.  அப்போது அந்தப் பையர் சாமர்த்தியமாகப் பெண்ணைப் பார்க்கச் சென்று அவளை ஏதேதோ சொல்லிச் சமாதானமாகத் தனியே அழைத்துச் சென்று பெண் மருத்துவரிடம் காட்டக் கூட்டிச் செல்லப் பெண் பிடிவாதம் பிடிக்க வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று காட்டினார்.  பெண், பெண்ணே இல்லை என்று தகவல்.  மருத்துவர் நல்லவேளையாக அரசாங்க மருத்துவர்.  சான்றிதழே கொடுத்துவிட்டார்.  அதன் பின்னரும் இரு மருத்துவர்களிடம் காட்டிச் சான்றிதழ் பெற்றாகி விட்டது.  அவள் தந்தையும் வந்துவிட்டார்.  எப்படியோ விவாகரத்து என நீதிமன்றம் போகவேண்டாம் எனக் கெஞ்சுகின்றனர்.  விவாகரத்துச் செய்யாமல் வேறொரு கல்யாணம் செய்துக்க முடியாது.  அதற்கு இந்தச் சான்றிதழ் முக்கியம்.  இரு பக்கமும் வாத, விவாதங்கள் சூடு பறக்கிறது.  என்ன நடக்கப்போகிறது எனப் புரியவில்லை.  ஒரே குழப்பம். :((((((

16 comments:

  1. இப்படிக் கூட நடக்குமா? எத்தனை நாள் ஏமாற்றலாம் என்று இப்படிச் செய்கிறார்கள்?

    ReplyDelete
  2. காலத்தின் கொடுமை... வேறென்ன சொல்வது...?

    ReplyDelete
  3. கொடுமை.
    இப்படி நடந்தால் வாழ்வில் ஏது நிம்மதி?

    ReplyDelete
  4. வாங்க ஸ்ரீராம், இப்படியும் நடக்கிறது. ஏற்கெனவே நடந்திருப்பதாகக்குழுமத்தில் என் சிநேகிதி ஒருத்தரும் கூறியுள்ளார். இதே கருவை வைத்து எழுத்தாளர் வாசந்தி ஒரு நாவலும் எழுதிப் படிச்சிருக்கேன். ஆனால் அதில் அந்தப் பெண்(??)ணிற்கு ஆதரவாகக் கருத்துக்களைப் பதிந்திருப்பார். கதையின் பெயர் நினைவில் இல்லை.

    இந்த இளைஞன் மிகவும் நெருங்கிய நண்பரின் பிள்ளை. பிரபலமான கோயிலின் திருமண மண்டபத்தில் திருமணம். இதுவும் அவனுக்கு ஏற்பட்டாக வேண்டியதொரு சூழ்நிலை என்பதும் புரிந்தாலும் அந்தக் கடவுளுக்குக் கூடக் கண்ணில்லையா என்றும் கேட்கத் தோன்றுகிறது. சீக்கிரம் நல்ல வழி பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  5. இல்லை டிடி. இது அந்தத் தாய் திட்டமிட்டுச் செய்தது என்கின்றனர். :(((((

    ReplyDelete
  6. அப்பாதுரை, மனிதர்கள் மனதில் ஈவு, இரக்கம் என்பதே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. :(

    ReplyDelete
  7. கடைசிபெஞ்ச், சீக்கிரமாய் அந்த இளைஞன் நிம்மதியாய் வாழப் பிரார்த்திக்கலாம்.

    ReplyDelete
  8. என்ன கொடுமை இது......

    ReplyDelete
  9. //இந்தக் காலத்தில் நடப்பதைச் சொல்லிவிட்டு முன் காலத்தில் இதே திருமணங்கள் நடந்த விதத்தை எடுத்துக் காட்டுவதே என் முக்கிய நோக்கம்.//

    இப்படியே போனால் எதிர்காலத்தையும் சேர்த்துக் கொள்ளவதில் தவறில்லை என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  10. வாங்க வெங்கட், கொடுமை தான். :(((((

    ReplyDelete
  11. வாங்க ஜீவி சார், எதிர்காலத்தைப் பற்றி நான் எப்படி கணிக்க முடியும்? அதோடு நானே இன்னும் எத்தனை நாட்களோ! :))))) எதிர்காலத்துத் திருமணங்களைப் பார்க்கிறேனோ இல்லையோ, தெரியாது. இதைப் படிச்சுட்டு எதிர்காலத்தில் யாரேனும் பகிர்ந்து கொள்ளலாம், முன்னால் இப்படி நடந்ததாம், இப்போ இப்படி நடக்குதுனு! :)))))))))

    ReplyDelete
  12. இப்படியுமா நடக்கின்றது....

    ReplyDelete
  13. வாங்க மாதேவி, தொலைக்காட்சித் தொடர்களில் வருவதெல்லாம் ஒண்ணுமே இல்லைங்கற அளவுக்கு நிஜத்தில் நடக்கின்றன. :(

    ReplyDelete
  14. ஒருவரின் வாழ்க்கையை கெடுக்க எப்படி மனது வரும்?
    எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே பாட்டு தான் நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  15. Anonymous08 May, 2013

    Oops,Save them god

    ReplyDelete