Sunday, July 13, 2014

பேய், பிசாசுகளை எல்லாம் பார்த்தேனே!

Darr @ The Mall படம் மத்தியானமாய்ப் பார்த்தேன்.  படம் நல்லாவே இருந்தாலும் முதலில் கொஞ்சம் குழப்பமாகவே இருந்தது.  மும்பை --புனே வழியில் ஒரு இடிந்த கட்டிடம் முன்னால் பிரபலமான ஹோட்டலாக இருந்ததாகவும், அது பின்னர் ஏதோ சில அறியாத காரணங்களால் மூடப்பட்டுப் பாழடைந்து போய்விட்டதாகவும், அந்த ஹோட்டலில் இறந்த பெண்ணின் ஆவி அங்கே உலாவுவதாகவும் சில வருடங்கள் முன்னர் தொலைக்காட்சியில் செய்தி ஒன்றில் பார்க்க நேர்ந்தது.  அந்த இடத்தை ஒரு தொழிலதிபர் வாங்கி மீண்டும் ஹோட்டல் திறக்கப் போவதாயும் சொல்லிக் கொண்டு இருந்தனர்.

அது என்ன ஆச்சுனு அப்புறமாத் தெரியாது.  ஆனால் கிட்டத்தட்ட அந்தக் கரு தான் இங்கேயும். ஆசியாவின் மிகப் பெரிய மால்  திறக்கப் படப் போகிறது. அதைக் கட்டும்போதே பல்வேறு பேச்சுக்கள்.  அந்த இடமே ஆவிகள் உலாவும் இடம் என்றும் வெள்ளைப் புடைவை கட்டிக்கொண்டு வெண்மையான தலைமயிருடன் ஒரு பெண்ணின் ஆவியைப் பார்த்ததாகவும் சொல்லிக்கொண்டிருந்தனர்.  ஆனால் கட்டடம் கட்டுபவர்கள் யாரும் பார்த்ததாகத் தெரியவில்லை என்றாலும் அமாநுஷ்யமான சம்பவங்களால் இது உண்மையாக இருக்குமோ என்னும் எண்ணம் அனைவருக்கும்.  அதைத் திறக்கப் போவதற்கு முதல்நாள் மாலையில் அதன் சொந்தக்காரர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து தானும், தன்னுடைய குழு நண்பர்களும் அங்கே இரவைக் கழிக்கப் போவதாய்ச் சொல்கிறார்.

ஆனால் அவர் மட்டும் அங்கே தங்கவில்லை.  சொந்தக்காரரின் பெண் அஹானாவும், அவளுடைய சில பணக்கார நண்பர்களும் கூட உள்ளே நுழைகின்றனர். இன்னொரு பக்கம் மாலின் காவலுக்கு அமர்த்தப்பட்டிருக்கும் காவலாளிகளின் தலைவன் ஆன விஷ்ணுவும் உள்ளே தான் இருக்கிறான். அஹானாவின் சிநேகிதி ஐஸ் ஸ்கேட்டிங்கில் திடீரெனக் கொல்லப்படுவது திகிலூட்டும் சம்பவம்னா, அடுத்து அவர்களின் ஒரு சிநேகிதனும் கொல்லப்பட்டுக் கை மட்டும் தனியே வெளியே தொங்கும்.

இந்த மூன்று குழுவுக்கும் ஏற்படும் அனுபவங்கள் தான் கதையே. திகிலூட்டும் சம்பவங்கள். காரணம் தெரியாத இறப்புகள். திடீர்னு எதிரே வந்து நிற்கும் ஆவிகள்னு கதை சுவாரசியமாப் போச்சு. முடிவில் தான் உண்மை தெரிகிறது.  வழக்கமான பழிவாங்கல் கதை தான்.  ஆவிகள் எல்லாம் சேர்ந்து ஒரு கூட்டமாக வந்து பழிவாங்குகின்றன.விஷ்ணுவுக்கு அந்த ஆவிகளுடனான தொடர்பும் புரிகிறது.  ஏனெனில் அந்த ஆவிகள் விஷ்ணுவை ஒண்ணும் செய்யலை.  விஷ்ணு கேட்டுக் கொண்டதன் பேரில் அஹானாவையும் ஆவிகள் விடுவிக்கின்றன. :))))

முடிவில் செக்யூரிடி விஷ்ணுவும், அஹானாவும் ஒன்று சேர்கின்றனர்.  இதான் கொஞ்சம் இடிக்குது.  கதாநாயகன் என்றாலே பணக்காரப் பெண்ணைத் தான் கல்யாணம் செய்துக்கணுமோ? பிரியலையே! 

19 comments:

  1. //கதாநாயகன் என்றாலே பணக்காரப் பெண்ணைத் தான் கல்யாணம் செய்துக்கணுமோ? //

    சோஷலிசம்!

    அப்புறம் எங்காவது சான்ஸ் கிடைச்சா பார்க்கிறேன்!

    ReplyDelete
  2. நீங்க வேறே! இதே சோனி மாக்ஸிலே திரும்பத் திரும்ப ஒரு ஆறு மாசத்துக்காவது போட்டுக் கழுத்தறுப்பாங்க. :)

    ReplyDelete
  3. அப்படிக் கதை இருந்தால் தானே சினிமா ஓடும்.

    ReplyDelete
  4. புல்லரிக்குது போங்க..

    ReplyDelete
  5. அதானே பார்த்தேன். பிசாசுப் படத்தை யாரும் நிஜமா எடுத்ததாகக் கதையே இல்லை. இந்த வெள்ளைப் புடவை மல்லிப் பூ க்கும் பிசாசுக்கும் என்ன சம்பந்தம். நல்ல விமரிசனம் கீதாமா. கைதேவலையா.

    ReplyDelete
  6. ஸ்ரீராம், நேத்தே ராத்திரி இந்தப் படம் திரும்பவும் அதே சானல்லே வந்துட்டு இருந்தது. :)

    ReplyDelete
  7. வாங்க ராஜலக்ஷ்மி, நன்றிங்க.

    ReplyDelete
  8. ஹாஹா அப்பாதுரை, சொறிஞ்சுக்குங்க, இல்லைனா அவில் (யு.எஸ்ஸில் கிடைக்குமா) சாப்பிடுங்க. :P :P :P :P

    ReplyDelete
  9. வாங்க வல்லி, கை கொஞ்சம் பரவாயில்லை தான் என்றாலும் இன்னும் சமையல் வேலை எல்லாம் பண்ண முடியலை. :)))) சமையலில் இருந்து இப்போதைக்கு ஓய்வு! மற்றபடி இடக்கையால் செய்ய முடிஞ்ச சின்னச் சின்ன வேலைகளைச் செய்யறேன்.:)

    ReplyDelete
  10. எங்கேயோ போயிட்டீங்க...!

    ReplyDelete

  11. இப்போதெல்லாம் அதிக சினிமாக்கள் பார்க்கிறீர்கள் போல இருக்கே.படம் எந்த மொழியில் என்று சொல்லவில்லையே பெயர்களிப் பார்த்தால் தமிழில்லையோ என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  12. எனக்கு பல வழிகளில் உதவி செய்வதால் இந்த பேய், பிசாசுங்க மேல் ரொம்ப நம்பிக்கை உண்டு (அடேய் பசங்களா அந்தப்பக்கம் போகாதீங்க பேய் இருக்கு.......ஒழுங்கா சாப்பிடுடா கண்ணா.. இல்லன்னா பூச்சாண்டிகிட்ட சொல்லிடுவேன்......)

    ReplyDelete
  13. பிரியலையே!

    அல்லது புரியலையா?

    நான் நிஜமா பிசாசு பார்த்தவன்.

    ReplyDelete
  14. வாங்க டிடி, எங்கேயும் போகலைப்பா, இங்கே தான் இருக்கேன். :)

    ReplyDelete
  15. ஜிஎம்பி சார், அநேகமா சனி,ஞாயிறுகளில் கொஞ்சமானும் பார்க்கும்படியான படங்கள் வரும். அப்போப்பார்க்கிறது தான். இப்போ வீட்டிலே சமையல் வேலை இல்லையே! அதான் கிடைக்கும் நேரத்தை சினிமா பார்த்துக் கழிச்சேன். :)

    தமிழ்ப்படம் இல்லை; ஹிந்திப்படம்; அதுவும் இந்தப்படம் இந்த வருஷம் பெப்ரவரியில் தான் ரிலீஸே ஆயிருக்கு! :)

    ReplyDelete
  16. மாடிப்படி மாது, முதல் வரவு? வரவுக்கு நன்னி. ஹிஹிஹி, நானும் பயப்படறதில்லை. இனம் இனத்தையே பார்த்துப் பயப்படுமா என்ன :))))

    ReplyDelete
  17. "இ" சார், அது பிரியலை தான், சென்னைக் கொச்சைத் தமிழில் எழுதினேன். சென்னைத் தமிழில் "இன்னாமா ஒண்ணுமே பிரியலையாங்காட்டியும்" னு சொல்லிக் கேட்டிருக்கேன். அதான்! :))))

    ReplyDelete
  18. பிசாசு ஹா...ஹா... சூப்பர்.

    ReplyDelete