Wednesday, December 24, 2014

திருப்பாவைக் கோலங்கள்

பாடல் 8

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.


கோவிலை நினைவூட்டும் வண்ணம் கோபுரக் கோலம் போடலாம். அல்லது மணைக்கோலம் போட்டு கோபுரம் போல் அழகு செய்யலாம்.

கீழ்வானம் வெளுத்ததோடு அல்லாமல் எருமைகள் கூடக் கறக்கப்பட்டு மேய்ச்சலுக்கும் போய் விட்டன.  ஆனால் இந்தப் பெண்ணரசி இன்னமும் எழுந்திருக்கவில்லை.  இங்கு கூடியுள்ளவர்களோ அவள் வரும்போது வரட்டும் நாம் போய் விட்டு வரலாம்னு அவசரப் படுத்துகிறார்கள்.  அவர்களைச் சமாதானம் செய்து நிறுத்தி வைத்திருக்கிறேன். தேவாதி தேவனாகிய எம்பெருமானைச் சென்று சேவித்தால், ஆஹா, இத்தனை பேரும் வந்திருக்கிறார்களே என எண்ணிக் கொண்டு அவன் நமக்கு அருள் பாலிப்பான் என்கிறாள் ஆண்டாள்.  இங்கே தேவாதி தேவன் என்றும் மாவாய் பிளந்தான் எனவும் மல்லரை மாட்டியவன் என்றும் கூறி இருப்பது குதிரை வடிவில் வந்த கேசியைக் கொன்றதையும், கம்சனின் படைவீரர்களான மல்லர்கள் முஷ்டிகன் ஆகியோரைக் கொன்றதையும் குறிக்கும்.  இவ்வளவு வீரம் நிறைந்த செயல்களைச் செய்ததால் பெருமானை தேவாதி தேவன் என அழைக்கிறாள் ஆண்டாள்.
பாடல் 9

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

மணிமாடம் கோலம் அல்லது மாடக் கோலம் போடலாம்.




இவ்வுலக வாழ்க்கையின் இன்பங்களான பஞ்சு மெத்தை, தூப, தீபங்கள் போன்றவற்றைப் போட்ட வண்ணம் துயிலில் ஆழ்ந்து கிடக்கும் மக்களைக் கண்ணன் கழலடியை நினைக்குமாறு தட்டி எழுப்புகிறாள் ஆண்டாள்.  இவ்வுலகத்து சுகங்கள் எல்லாம் நிலையாதவை.  அவன் கழலடி ஒன்றே நிலையானது  அவன் நாமம் பலவும் நாம் சொல்லிக் கொண்டே இருந்தோமானால் அவனருளால் நமக்கு வைகுண்டம் கிடைக்கும் என்பது உறுதி.

13 comments:

  1. மாடக் கோலம் எளிது என்று நினைக்கிறேன்... விளக்கம் அருமை அம்மா...

    ReplyDelete
    Replies
    1. பழகினவங்களுக்கு எல்லாமே சுலபம் தான் டிடி. :) ஒரு காலத்தில் எனக்கும் எளிதாகவே இருந்தது தான். :(

      Delete
  2. எங்கள் ஊர் ஆண்டாள் அல்லவா.. கோலம் அருமை. மணிமாடம் கோலம் நல்லாயிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க விச்சு, நீங்க ஶ்ரீவில்லிபுத்தூரா? ஓகே! :)

      Delete
  3. வணக்கம்
    அம்மா
    ஒவ்வொரு கோலங்களும் மிக அழகாக உள்ளது விளக்கம் நன்று
    எனதுபக்கம்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: அன்பை புரிந்து வெளியேவா:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரூபன், பாராட்டுக்கு ரொம்ப நன்றி. உங்கள் பக்கத்துக்கும் வருகிறேன்.

      Delete
  4. கீதாமா கோலங்கள் மிக அழகு. நாமெல்லாம் ஏமப் பெருந்துயிலிருந்து எப்போது எழுவது என்று யோசிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, எங்கே ஒரே பெருந்துயிலாகவல்லவா இருக்கு! :(

      Delete
  5. முதல் கோலம் ரொம்ப ஈஸி.

    மூன்றாவது கோலம் அழகு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், நீங்க புகுந்துக்காத துறையே இல்லைனு நினைக்கிறேன். :)

      Delete
  6. படிக் கோலத்தைத்தான் மணைக் கோலம் என்கிறீர்களா? நமது கற்பனையில் எப்படி வேண்டுமானாலும் போடலாம், இல்லையா?
    திருப்பாவை விளக்கம் ரொம்ப பிடித்திருந்தது.

    ReplyDelete
  7. வாங்க ரஞ்சனி, படிக்கோலம்னு சொல்வீங்களா? இருக்கலாம். நாங்க மணைக்கோலம்னு சொல்லுவோம். மணையில் உட்காரும்போது இம்மாதிரிப் பெரிய கோலங்கள் போடுவாங்க. :) அதோட எங்க பக்கம் ஒரே கோலம் போட மாட்டோம். இரண்டு மணைக்கோலங்கள்! கல்யாணம், காதுகுத்துனு எல்லா சுப காரியங்களுக்கும் இரட்டை மணை தான். :))))

    ReplyDelete
  8. எனக்கு ஒரு கோலம் மட்டும் தான் தெரிகிறது.
    பாடல் விளக்கம் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete