Monday, January 05, 2015

திருப்பாவைக் கோலங்கள்!

பாடல் 22

அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல
செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

      




   
மணி, தீபம் கலந்த கோலமோ அல்லது தாமரைப்பூக்கோலமோ போடலாம். மணி, தீபம், தாமரை மூன்றும் சேர்ந்திருக்கும் கோலமும் போடலாம். கண்ணனிடம் சத்சங்கத்திற்காக இவ்வுலகத்து அரசர்கள் அனைவரும் வந்து கூடி நின்று காத்திருப்பது போல் கோபியரும் அவன் தலைமாட்டில் கண்ணன் தன் செந்தாமரைக் கண்களைத் திறந்து தங்களைப் பார்க்கமாட்டானா எனக் காத்திருக்கின்றனர்.  கண்ணனின் கண்களை இங்கே சூரிய, சந்திரருக்கு ஒப்பிடுகிறாள் ஆண்டாள்.  சூரிய, சந்திரர் கோலமும் போடலாம்.  அத்தகைய பெருமை வாய்ந்த கண்களால் கண்ணன் நம்மைப் பார்த்தான் எனில் ஜன்ம ஜன்மங்களுக்கெல்லாம் தொடர்ந்து வரும் சாபங்கள் அனைத்தும் தீயினில் தூசு போல் மறைந்துவிடும்.

இறைவனின் நாமங்களான நாராயணா, கோவிந்தா என்பவற்றைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாலே அவன் பார்வை நம் மீது பட்டு நமக்கு முக்தி கிட்டும்.

பாடல் 23

மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
   


  


பூவைப்பூ வண்ணன் எனக் கண்ணனை அழைத்திருப்பதால் பல்வேறுவிதமான பூக்களைக் கோலத்தில் வரையலாம்.

மழைக்காலம் முழுதும் குகைக்குள் உறங்கிக் கிடக்கும் சிங்கமானது கண் விழிக்கையில் அதன் பிடரி மயிர் சிலிர்க்குமாறு கர்ஜனை செய்து குகையை விட்டு வெளிக்கிளம்பும்.  அதைப் போலக் கண்ணா!  நீயும் உன் அரண்மனையை விட்டு வீரநடை நடந்து வெளியே வந்து உனக்கான சிம்மாதனத்தில் அமர்ந்து எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக்கொள்வதாய்ச் சொல்கிறாள் ஆண்டாள்.

வந்த காரியம் ஆராய்ந்து அருளுமாறு ஆண்டாள் ஏன் கேட்கிறாள்?  இவ்வுலகத்து இன்பங்களையே துய்க்கும் நம் போன்றவர் ஆண்டவன் சந்நிதியில் கேட்பதும் பொன், பொருள், நம் ஆசைகள் நிறைவேறுமாறு வேண்டுதல், புத்தாடைகள்,  புது வீடு என்றே கேட்கிறோம். அதனால் தான் ஆண்டாள் கோரிக்கைகள் நியாயமாய் இருந்தால் மட்டுமே நிறைவேற்றித் தருமாறு கேட்கிறாள்.  ஆண்டவன் சந்நிதியில் நமக்கென எதுவும் வேண்டாமல் இவ்வுலக சுபிக்ஷத்திற்காக வேண்டுவதே சிறப்பு.





8 comments:

  1. பிறருக்காக செய்வதே பிரார்த்தனை...

    ReplyDelete
    Replies
    1. ஆம், பிரார்த்தனையிலும் ஓர் அர்த்தம் வேணுமே!

      Delete
  2. கோலங்களும் சிறப்பு. ஒரு விஷயம், எந்த வீட்டிலும் கோலத்தில் பூஷணிப்பூ வைத்து நான் பார்க்கவில்லை. அதாவது என் கண்ணில் பட்டவரை! இப்போ எல்லாம் பூ கிடைப்பதில்லை போலும்!

    ReplyDelete
    Replies
    1. கிராமங்களில் இன்னமும் பறங்கிப்பூ வைக்கின்றனர். பூஷணிப்பூ வைக்கிறதில்லை. பறங்கிப் பூ தான் வைப்பார்கள். :) சாணத்தால் பிள்ளையார் பிடித்துப் பறங்கிப் பூவை வைப்பார்கள். பின்னர் அந்தச் சாணப்பிள்ளையாரை எல்லாம் சேகரம் செய்து ஊர்ப் பொதுக்குளத்தில் கரைப்பது உண்டு. அது குறித்துப் பதிவு எழுதிய நினைவும் இருக்கு. :)

      Delete
  3. நீங்கள் எழுதிப் பல நாட்கள் ஆன பதிவு இன்று டேஷ் போர்டில்....! ( published 12 hrs ago.)

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, நீங்க இரண்டு பேரும், (நீங்களும், தளிர் சுரேஷும்) இதுக்குக் கருத்துச் சொல்லாததால் ப்ளாகர் அனுப்பி இருக்கும்! :)))))

      சில சமயம் இப்படி நடப்பது உண்டு. தொழில் நுட்பக் கோளாறு தான் வேறென்ன?

      Delete
  4. பழைய பதிவு இன்றுதான் கண்ணில்படுகிறது டேஷ் போர்டில்! என்ன ஆயிற்று ப்ளாக்கருக்கு? அருமையான கோலம்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுரேஷ், ஜிஎம்பி சாருக்கும் போயிருக்கு. இதுக்குத் தான் பதிவு போட்டதுமே வந்துடணும்! :)))) ஹிஹிஹிஹி!

      Delete