எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, June 25, 2025

போனது போனது தானே!

 மாமாவுக்கும் எனக்கும் சுமார் ஏழரை வயது வித்தியாசம். இந்தக்காலத்துப் பெண்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் எங்க பெண்ணைக் கூட நாங்க எட்டு வயது வித்தியாசத்தில் தான் கொடுத்திருக்கோம். அது போகட்டும்  பெண் அம்பேரிக்கா போக வேண்டிய தினம் பார்த்து மிசல்(Missile) அட்டாக் இரு பக்கமும். வான்வெளியை மூடிவிட்டார்கள் எனச் செய்திகள். எப்படிப் போகப் போறா என அன்றிரவு முழுக்க பதட்டம். போறாத குறைக்கு தோஹாவில் போட்ட மிசைல் பையர் இருக்கும் இடத்துக்கு அருகே சுமார் 50 கிலோ மீட்டருக்குள்ளாக .போட்டிருக்காங்க. போட்டிருக்காங்க. அவங்களுக்கு வீட்டில் சாப்பிடும்போது சப்தம் பலமாகக் கேட்டிருக்கு.. நல்ல வேளையாகச் சேதம் எதுவும் இல்லை. என்றாலும் கவலை, பதட்டம், செய்வது தெரியாமல் முழிச்சது என முந்தாநாள் இரவு எங்களுக்கெல்லாம் கழிந்தது. இன்று காலை ஆறு மணி அளவில் பெண் ஹூஸ்டன் போய்ச் சேர்ந்து தகவல் கொடுத்ததும் தான் கொஞ்சம் நிம்மதி.

எதுவோ சொல்ல வந்துட்டு எங்கேயோ போயிட்டேன். இந்த ஐம்பத்தி ஐந்து வருட இல்வாழ்க்கையில் நாங்கள் பிரிஞ்சிருந்தது என்றால் என்னுடைய இரு பிரசவத்தின் போது மட்டுமே. அதிகம் நான் அவரைத் தனியாச் சமைத்துச் சாப்பிடும்படி விட்டதில்லை. அவரும் அந்த அளவுக்கு என்னை அனுமதித்ததில்லை. கல்யாணங்களுக்குப் போனால் கூட அவருடனே போயிட்டு அவருடனேயே திரும்பிடுவேன். இதுக்காகப் பெண், பிள்ளை படிக்கும் நாட்களில் இருவரும் சேர்ந்து போக முடியாதவற்றுக்கு மாமனார், மாமியார் போவாங்க. அல்லது நான் மட்டும் தனியாகவோ, அவர் மட்டும் தனியாகவோ போவோம். 

எங்களுக்குள் சண்டைனு வந்தால் அது அவர் காய்கறி மார்க்கெட் போயிட்டு வந்தால் தான். கருகப்பிலை மட்டும் இரண்டு மூன்று கட்டு, கொத்துமல்லிக்கட்டு  தினுசு தினுசாகனு வாங்குவார். பாத்திரக்கடைனு போனால் நான் ஒரு ஓரமாக நாற்காலியில் உட்கார்ந்துடுவேன். அவர் தான் ஆசை ஆசையாக எல்லாமும் பார்த்து வாங்குவார். அதிகமாக வாங்கினால் டிஷும் டிஷும் தான். ஆனாலும் கண்டுக்க மாட்டார். அக்கம்பக்கம் எல்லாம் நான் சத்தம் போடுவதைப் பார்த்துட்டு முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் பின்னாடி அவர் குணம் புரிந்து நான் கடிவாளாம் போடுவதைப் புரிஞ்சுண்டாங்க. இதுக்காக அவர் கை ஓங்கியது என்றோ என்னோட கை ஓங்கியது என்றோ பொருள் இல்லை. நவராத்திரிக்குக் கொடுக்கும் பரிசுப் பொருள் மட்டும் எப்போவுமே என்னோட தேர்வாக இருக்கும்.

இப்போ உடல்நிலை சரியில்லாது போனாதில் இருந்து அவருக்குள் ஒரு ஏக்கம். வீட்டில் தான் தன்னுடைய அதிகாரத்தோடு பழைய மாதிரி இருக்க முடியலை என்னும் ஏக்கம். ஒவ்வொரு பொருளும் நான் வாங்குகையில் முகத்தில் குற்ற உணர்வு இருக்கும். நீ வீட்டையும் பார்த்துண்டு வெளி வேலைகளும் பார்க்க வேண்டி இருக்கே என்பார். நீ படுத்துட்டா நான் என்ன செய்வேன்? உன் உடம்பையும் பார்த்துக்கோ. எனக்கு முன்னாடி போயிட்டியானா நான் தான் கஷ்டப்படுவேன். என்னை யார் கவனிச்சாலும் எனக்குச் சரியா வராது. நீ மட்டும் என்னை விட்டுட்டுப் போயிடாதே என்பார். இதான் அவர் கடைசியாக என்னிடம் சொன்னதும். என்னோட இரண்டு கைகளையும் பிடிச்சு அவர் கைகளுக்குள் வைத்துக் கொண்டு, நீ எங்கேயும் போயிடாதே. என்னை ஏமாத்திடாதே! என்றே திங்கட்கிழமை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். நான் தான் பைத்தியம் பனிரண்டு மணிக்கு மேல் தூஙிட்டாரேனு வந்து படுத்துக் கொண்டது தப்பாகி விட்டது. நான் இல்லைனு தெரிஞ்சதும் அந்த ப்யத்திலேயே போயிட்டாரோனு குற்ற உணர்ச்சி என்னைக் கொன்று கொண்டு இருக்கிறது. என்ன செய்ய முடியும்?


இதோடு புலம்பலை நிறுத்திக்கப் பார்க்கிறேன்f. எல்லோருக்கும் அலுப்புத் தட்டிடும் இல்லையா?  _/|_

Tuesday, June 24, 2025

இன்ஸ்டா மார்ட்டின் பித்தலாட்டம்!

 இவ்வளவு நாட்களாகச் சாப்பாடு வந்து கொண்டிருந்ததால் காய்கறி ஏதும் வாங்கவே இல்லை. இப்போப் பொண்ணும் அம்பேரிக்கா கிளம்பிப் போய்க் கொண்டிருக்கிறாள் என்பதால் எனக்கு மட்டும் அவ்வளவு சாப்பாடு தேவை இல்லை என்பதால் இன்ஸ்டா மார்ட் மூலம் காய்கள் வாங்கினேன். வாசலிலேயே காய்க்கார அம்மா வருகிறார். அதைத் தவிர்த்தும் வேலை செய்யும் அம்மாவிடம் சொன்னாலும் காய்கள் கிடைக்கும். ஆனால் பெண், பையர் எல்லாம் வசதி, வாய்ப்பு இருந்தும் ஆன்லைன் வியாபாரம் செய்வதில்லை எனப் புகார் சொன்னதால்/ சொல்லிக்கொண்டே இருப்பதால் வாங்கலாம்னு முடிவு எடுத்தேன். ஞாயிறன்று காய்கள் வாங்கினதில் 174 ரூ ஆச்சு. அதில் 164 ரூபாய்கள் காய்க்காகவும் பத்து ரூபாய் டிப்ஸாகவும் வந்தது. காய்கள் பட்டியலோடு விலைப்பட்டியலும் ஒத்து வந்தது. ஆகவே கேள்வி கேட்காமல் பணம் கொடுத்துவிட்டு வாங்கினேன். இன்னிக்குக் கருகப்பிலை, இஞ்சி, வெண்டைக்காய், பாகல்காய் தேவை என்பதால் வாங்கினேன். கருகப்பிலை 11 ரூ, இஞ்சி, 15 ரூ, வெண்டைக்காய் 23 ரூ, பாகல்காய் 25 ரூ மொத்தம் 74 ரூபாய்கள் மட்டுமே.




நூறு ரூபாய்க்கு மேலே தான் இலவசமாக டெலிவரினு சொல்லி இருந்ததால் டிப்ஸ் பத்து ரூபாய், டெலிவரி சார்ஜஸ் 20 ரூ இருக்கும்னு நினைச்சேன். எப்படியும் நூறு, நூற்றுப் பத்துக்குள் தான் எதிர்பார்த்தேன். ஆனால் அப்போவே பில் தொகை 143 எனக் காட்டியது. காஷ் ஆன் டெலிவரி தான் என்பதால் கான்சல் பண்ணவும் நினைச்சேன். ஆனால் பாகல்காய் கட்டாயம் தேவை என்பதால் இருக்கட்டும், பார்த்துக்கலாம்னு விட்டேன். டெலிவரி ஆள் கொண்டு வந்து 143 ரூபாய் கேட்கவும் எப்படி அவ்வளவு ஆச்சு எனக் கேட்டால் அவர் திருதிரு    டெலிவரி சார்ஜஸாக இருக்கலாம் என்றார். ஆனாலும் 69 ரூபாயா டெலிவரி சார்ஜஸ்?அப்போவுமே இடிக்குதே, 74 ரூபாய்ப்  பொருளுக்கு 90 சதவீதமா? நான் அவ்வளவு பணம் எனில் எனக்குக் காய்களே வேண்டாம் எடுத்துச் செல்லுங்கள்னு சொல்லவே அவர் தயக்கத்துடன் தன் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டார். அவங்க என்னிடம் பேசணும்னு சொல்ல, எனக்கு அழைப்பு வந்தது. தேன் போன்ற இனிமையான குரலில் கொஞ்சினாள் ஓர் இளம்பெண்/ அவளிடம் காரணம் கேட்டால், உங்கள் "ஆப்"பைச் சரியாக நிறுவுங்கள்னு பதில் வந்தது. மற்றபடி எதனால் இவ்வளவு சார்ஜஸ்னு விபரங்கள் கொடுக்கலை. நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அவளிடம் பதில் இல்லை.நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அவளிடம் பதில் இல்லை.

காலை வேளை, சத்தமாக இருப்பதைப் பார்த்துட்டு யாரும் ஏதும் நினைச்சால்.! நம்ம குரலோ பெரிய குரல். ஆகவே   . பில் விபரங்களைப் பார்ப்போம் என்று மறுபடி அவற்றைத் தோண்டிப் பார்த்தால் ஹான்ட்லிங்க் சார்ஜஸ் மட்டுமே கிட்டத்தட்டப் பத்து ரூபாய்  டெலிவரி பார்ட்னருக்கு மட்டும் 30 ரூபாய், இதைத் தவிர்த்து டிப்ஸ் 10 ரூபாய்  காய்களைக் கொண்டு வரும் சின்னக் கார்ட்டிற்கு வாடகை மட்டும் 15/20 ரூபாய். இதில் ஜிஎஸ்டி மட்டுமே 4 ரூ 80 பைசா, மற்றவை எல்லாம் குறைந்த பக்ஷமாகப் பத்து ரூபாய்கள். இந்த அழகில் இலவசமாக டெலிவரி என்றும் காய்களை விலை மலிவாய்க் கொடுக்கிறோம் எனவும் கூவுகின்றனர். நான் வழக்கமாக வாங்கும் பழமுதிர்ச்சோலையில் காய்களைமலிவாகக் கொடுப்பதோடு அல்லாமல் இலவசமாகக் கருகப்பிலை, கொ.மல்லி, புதினாக்கட்டுகள் கொடுப்பாங்க. செர்வீஸ் சார்ஜ் எல்லாம் இல்லை. அதை விடவும் வாசலில் தூக்கிக் கொண்டு வந்து விற்கும் அம்மாவிடம் இந்தப் பணத்தைக் கொடுத்தால் இரு வேளை சாப்பாடுக்கு ஆகும். இனிமேல் இந்த ஆன்லைன் வியாபாரம் காய்கள் விஷயத்தில் வேண்டாம்னு முடிவு கட்டிட்டேன்.. இந்த அழகில் இலவசமாக டெலிவரி என்றும் காய்களை விலை மலிவாய்க் கொடுக்கிறோம் எனவும் கூவுகின்றனர். 

 எப்போவுமே காய்கள் 100 ரூபாய்க்கு மேல் வாங்கவா முடியும்? நூறு ரூபாய்க்கு மேல் வாங்கினால் தான்  சலுகை எனில் வாசலிலேயே வாங்கிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். எனக்குத் தேவை 100 அல்லது 200 கிராமுக்குள் தான், அதை ஏன் இவங்க கிட்ட வாங்கிட்டு இரட்டிப்புப் பணம் கொடுக்கணும். பொதுவாக ஸ்விகியே கொஞ்சம் அப்படி, இப்படித் தான். சாப்பாடு வாங்கினாலும் நாம் கேட்டது வராது. வேறே ஒண்ணைக் கொடுப்பாங்க. எங்க பொண்ணு அவங்க கிட்டே சண்டை போட்டு சுமார் 110ரூ பணம் அவங்களைக் கொடுக்கும்படி செய்தாள். அவங்கல்லாம் அம்பேரிகாவில் இத்தகையயே ஏமாற்றும் குணம் இல்லை எனச் சொல்கின்றனர். என்னதான் அரசு எல்லாவற்றையும் டிஜிடல்ல் மயமாக ஆக்கி இருந்தாலும் அதிலும் தகிடுதத்தம் பண்ணுவார்கள் நம்மவர்கள். திருந்துவது என்பது வேப்பங்காய் சாப்பிடுகிறாப்போல். ஆகவே நாம் தான் பார்த்து உஷாராக நடந்துக்கணும்.

Thursday, June 19, 2025

திருமணம் ஆக வேண்டி பிரமசாரிகள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

 இந்த இழையில் இட்டு வரும் ஸ்லோகங்கள் ப்ரஹ்ம ஸ்ரீ ஸோம தேவ ஸ2ர்மாவுடைய

புத்தகம் ஸ்ரீ ஸ்தோத்ர சிந்தாமணி இலிருந்து எடுக்கப்பட்டவை.

----

விரைவில் திருமணம் நடக்க ஸ்வயம்வர கலா மந்திரம்:


இதற்கு த்யானம் நியாஸம் எல்லாம் உண்டு. குரு மூலமாகவே உபதேசம் ஆகி ஜபம் செய்ய வேண்டும்.

அதனால் இங்கே இரண்டாம் பட்ச த்யான ஸ்லோகம் மட்டுமே தரப்படுகிறது.

தேவையானவர்கள் குரு முகமாக உபதேசம் பெறுக.


த்யானம்:


சம்பு4ம் ஜக3ந் மோஹன ரூப பூர்ணம்


விலோக்ய லஜ்ஜாகுலிதாம் ஸ்மிதாட்4யாம்


மதூ4கமாலாம் ஸ்வஸகீ2 கராப்4யாம்


ஸம்பிப்ரதீ4ம் அத்3ரி ஸுதாம்ப4 ஹேஜம்



மூல மந்த்ரம்:


 குரு முகமாக உபதேசம் பெற்றே ஜபிக்க வேன்டும். அப்படி உபதேசம் கிடைக்காவிடில் கீழ் காணும் த்யான மந்திரத்தை ஜபிக்கவும்.


ஸ்மர மதன வரணலோலா மந்மத ஹேலா விலாஸ மணிசாலா |


கனகருசி சௌர்ய சீலா த்வமம்பக பா3லா கராப்3ஜ த்ருத4 மாலா ||


மன்மதனை சிக்ஷித்த சிவனை வரிக்க ஆசை உள்ளவளும் மன்மத லீலைக்கு மணிமயமான சாலையாக இருப்பவளும் ஸ்வர்ண வர்ணமானவளும் கையில் ஸ்வயம்வர மாலையுடையவளுமாக இருக்கிறாய். ஓ அன்னையே! எனக்கும் விரைவில் விவாஹமாகும்படிச்செய்.


[நித்யம் காலை 108 முறை ஜபிக்கவும்]

Tuesday, June 17, 2025

என்னவோ எண்ணங்கள்!

 விதியை வெல்ல யாராலும் முடியாது தான். ஆனாலும் வென்று கொண்டிருக்கோம்னு நினைச்சேன். திடீரென வந்த சர்க்கரை அளவு எல்லாவற்றையும் தூக்கி அடித்து விட்டது. என்ன காரணம்? விடாமல் பிசியோதெரபி செய்து கொண்டிருந்திருக்கலாமோ? நடைப்பயிற்சிக்குக் கூப்பிட்டால் வரலைனுடுவார். ஹீமோக்ளோபின் குறைவால் நடக்க முடியலைனு நினைச்சேன். அது தப்போ? மருத்துவமனைக்குச் செல்லும் முன்னர் தானாகவே கரைத்த ரசம் சாதம், மோர் சாதம் பாத்திரத்தில் இருந்து தம்பளரில் விட்டுக் கொண்டு சாப்பிட்டதைப் பார்த்தால் நம்பிக்கை அதிகமாய்த் தான் இருந்தது. ஆனால் இம்முறை மருத்துவமனையில் வற்புறுத்திச் செய்யப்பட்ட என்.ஜி ட்யூப் மூக்குத்துவாரத்து வழியாக வயிற்றுக்குள் செலுத்தியதில் பேச முடியாமல், சாப்பிடமுடியாமல் போனது என்னமோ நிஜம், இத்தனைக்கும் காஸ்ட்ரோ என்ட்ராலஜிஸ்ட் வந்து அதை எடுக்கச் சொல்லியும் மேலும் ஆறு மணி நேரம் நீட்டித்து வைத்து 30 மில்லி திரவ ஆகாரத்தோடூ பசியும் பட்டினியுமாய்ப் போட்டதில் வந்ததா? எது?  ட்யூபை எடுத்ததும் ஆகாரம் கொடுத்தால் முழுங்க முடியலை. என்றாலும் நினைவு தெளிவாக இருந்தது. ஆனால் அவருக்கு இருக்க வேண்டும், அதுக்காகப் போராடணும் என்னும் ஆர்வம் இல்லாமல் போய் விட்டது. ஏதோ ஒரு காரணம். போக வேண்டிய வேளையை விதி நிர்ணயித்து விட்டது. 

ஆனால் ஒரு விதத்தில் நான் முன்னால் போயிருந்தால் அவர் தடுமாறிப் போயிருப்பார். யாருக்கும் தொலைபேசியில் அழைப்பதுன்னாக் கூட நான் தான் நம்பர் போட்டுத் தரணும். கத்துக்கோங்க, கத்துக்கோங்கனு எத்தனை முறை சொன்னாலும் அலட்சியமாகப் போடி என்பார். நான் விளையாட்டாச் சொல்லுவேன். திடீர்னு ஒரு நாள் நான் மண்டையைப் போட்டால் நீங்க யாரையும் கூப்பிட முடியாமல் திகைச்சுப் போய் நிப்பீங்க என்பேன். நீ எங்கே பார்த்துண்டா இருக்கப் போறே என்று வம்பிழுப்பார். ஆனால் நல்லவேளையாக அவர் அந்தக் கஷ்டம் எல்லாம் படவில்லை. கடவுள் என்னை நீ இருந்து எல்லாவற்றையும் அனுபவினு சொல்லிட்டு அவரை மட்டும் கூட்டிக் கொண்டு போய் விட்டார். கடைசியில் ராகவேந்திரர் பிரசாதம் மானசிகமாகக் கிடைச்சிருக்கு. அந்தத் திருப்தியோடு போயிட்டார். கொடுத்து வைத்த ஆன்மா.  கடவுளைச் சிந்தித்த வண்ணமே போயிருக்கு. எனக்கும் உடனே உயிர் போயிடாதானு தான் இருந்தது. ஆவால் பாவப்பட்ட ஜன்மமான எனக்கு அதெல்லாம் எப்படிக் கிடைக்கும்?   

யாரும் படிச்சுட்டு மனசு வருந்த வேண்டாம். தனிமரமாக நிக்கணும்னு எனக்கு விதி. ஒவ்வொரு கணமும் ஒவ்வொன்றையும் அவரிடம் மானசிகமாகச் சொல்லிட்டுத் தான் செய்யறேன். ஆனால் உயிரும், ரத்தமும், சதையுமாக இருப்பது போல் வருமா என்ன? ராத்திரியெல்லாம் தூக்கமே வருவதில்லை.