Thursday, October 10, 2013

சிர‌ம‌த‌றுபட‌வே விதித‌னைத் தூற்றினாள்.



அம்மன் ஆதிபராசக்தி ஆவாள். சதுர்யுகங்களுக்கும் முன்னால் இருந்த சிருஷ்டியின் ஆரம்பமான மணியுகத்திற்கும் முன்னரே சுயம்புவாய்த் தோன்றிய அன்னை, அந்த யுகத்தின் முதல் மூர்த்தியான சிவனின் பிரமஹத்தி தோஷத்தை நீக்கினாள் என்று சொல்லப் படுகிறது.  அதைத் தான் மேற்கண்ட பாடல் வரிகள் தெரிவிக்கின்றன.  சிரம் அறுபட்டது பிரம்மாவுக்கு.  அதன் பின்னர் ஈசனின் கையில் பிரம்மகபாலம் ஒட்டிக் கொண்டு விடாமல் இருக்க, அம்பிகை அளிக்கும் பிக்ஷையில் அந்தக் கபாலம் விலகுகிறது.  அதைக் குறித்துப் பார்ப்போமா?   எனினும் அதற்கு முன்னர் சிறிது அம்மன் புகழ் பாடுவோம். இந்த ஆதிபராசக்தியே அருள் மிகு அங்காளம்மன்  என்னும் பெயரில் அருள் பாலிப்பதாகக் கூறுகின்றனர்.  முப்பெரும் சக்திகளான இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்ற மூன்று சக்திகளையும் தன்னிடம் கொண்டவளாக முப்பெருந்தேவியரின் அம்சமும் கொண்டவளாக, மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா என்ற மும்மூர்த்திகளைத் தோற்றுவித்த மாபெரும் ஆதி பராசக்தியாக முப்பெரும் அண்டங்களிலும் நிறைந்தவளாகவும், காணப்படுகிறாள்.


முதல் ஐந்து உற்பவங்களிலும் தனித்த சக்தியாகவே விளங்கிய இவள் தக்ஷனின் யாகத்தில் விழுந்து உயிரை விட்ட தாக்ஷாயணியாக அவதரித்தபோது ஈசனாகிய சிவனின் சக்தியான சிவசக்தியின் பஞ்சமுகதத்துவமாகிய கோபம், சினம், சீற்றம், ஆங்காரம், ஆவேசம் மிகக் கொண்டு சத்யோஜாதம், வாமதேவம், ஈசானம், தத்புருஷம், அகோரம் என்ற ஐந்து முகங்களாகவும் ஒன்று திரண்டு உருவமற்றுச் சுயம்புவாக உருவானவள் அங்காளம்மன் ஆவாள். இவளே உருவமாக பருவதராஜன் என்ற ஹிமவானுக்கும், மேனைக்கும் புத்திரியாகப் பார்வதி என்ற பெயரில் அவதரித்தாள்.


தாக்ஷாயணி அவதாரத்தில் தக்ஷனின் யாக குண்டத்தில் விழுந்து உயிரை விடத் துணிந்த சக்தியின் உயிரற்ற உடலைத் தூக்கிக்கொண்டு விண்ணுக்கும், மண்ணுக்கும் அலைந்து திரிந்த ஈசனின் துயரத்தைக் கண்டு சகிக்கமாட்டாமல் மஹாவிஷ்ணு தன் சுதர்சன சக்கரத்தால் அவள் உடலைத் துண்டு துண்டுகளாக அறுந்து விழும்படிச் செய்தார். அப்படி அம்மனின் உடல் உறுப்புகள் விழுந்த இடங்கள் அனைத்துமே மகிமை பொருந்தியதோடு அல்லாமல் அம்பிகையில் உடலே பீஜாக்ஷரங்களால் ஆனது என்பதால் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு சக்தி பீடமும் உருவானது. அங்காளியே இப்படிக் கோயில் கொண்டாள் என்றும் இந்த மேல் மலையனூரே ஆதி சக்தி பீடம் என்றும் கூறுகின்றனர். இவள் சண்டி, முண்டி, வீரி, வேதாளி, சாமுண்டி, பைரவி, பத்ரகாளி, எண்டோளி, தாரகாரி, அமைச்சி, அமைச்சாரி, பெரியாயி, ஆயி, மகாமாயி, அங்காயி, மாகாளி, திரிசூலி, காமாட்சி, மீனாக்ஷி, அருளாட்சி, அம்பிகை, விசாலாக்ஷி, அகிலாண்டேசுவரி என்ற பெயரில் எண்ணற்ற சக்திபீட தேவதையாக விளங்குகின்றாள்.

ஒரு சமயம் திருக்கைலையில் ஈசனும், அம்பிகையும் வீற்றிருக்கையில் ஈசனைப் போலவே ஐந்து தலைகள் கொண்ட பிரம்மாவும் அங்கே வந்தார்.  ஒரு க்ஷணம் தன் கணவனைப் போலவே பிரம்மாவுக்கும் ஐந்து தலைகளா என்ற எண்ணத்தோடு உமை பார்க்க, பிரம்மாவோ பார்வதி தேவி தன்னைத் தவறாகப் பார்ப்பதாக எண்ணி கர்வம் கொன்டார்.  அந்த நேரம் அவரின் அகங்காரம் அதிகமாகித் தன்னைப் படைத்த நாராயணனைக் கூட மறந்துவிட்டார். மூலாதார சக்தியான ஈசனையும், சக்தியையும் மறந்தார்.  பஞ்சபூதங்களையும் படைத்தது அவர்களே என்பதையும் மறந்து அகங்காரம் தலை தூக்க, அந்தத் தலையை ஆதிசிவன் வெற்றிலைக்காம்பு கிள்ளுவது போல் கிள்ளி எறிய, அகங்காரம் பிரம்மாவிடமிருந்து மறைந்தது.  ஆனால் பிரம்மனின் மறைந்த தலை ஒரு கபாலத் திருவோடு உருவில் ஈசன் கைகளில் வலக்கையில் ஒட்டிக் கொண்டது. உலக நன்மை கருதியே ஈசன் பிரம்மாவின் தலையைக் கொய்தாலும் தர்மம் தவறியதால் அதற்கான தண்டனை தான் பிரம்ம கபாலம் அவர் கைகளில் ஒட்டிக் கொண்டது.

ஈசன் பிக்ஷாடன மூர்த்தியாகி பிக்ஷை கேட்கப் புறப்பட்டார். ஶ்ரீமந்நாராயணன் இருக்கும் இடமான பத்ரிநாத் சென்றதாகவும், அங்கே தவம் செய்து கொண்டிருந்த ரிஷி, முனிவர்கள் தங்கள் கர்வம்,அகங்காரம் ஆகியவற்றை தானம் செய்ததாகவும் அங்கே சொல்வார்கள்.  அப்போது தான் பிரம்ம கபாலம் ஈசன் கைகளிலிருந்து நழுவி,  அங்கே ஓடிக் கொண்டிருக்கும் அலக்நந்தா நதியின் வெள்ளத்தில் விழுந்ததாக ஐதீகம். பத்ரிநாத்தில் இன்னமும், இன்றும் பிரம்மகபாலம் என்னும் இடம் உள்ளது.  அங்கே சென்று பிக்ஷை செய்வித்து, முன்னோர்களுக்கும் பித்ருகடன் தீர்ப்பது வழக்கம். இந்த பிக்ஷாடன மூர்த்தியின் தத்துவமெ நம் உலகியல் ஆசைகளான காமம், க்ரோதம், கோபம், ஆணவம், பொறமை ஆகியவற்றைத் துறந்து ஞானத்தை  பிக்ஷையாக ஏற்கவேண்டும் என்பதே.

இந்தச் சிரமது அறுத்த கதை வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது.  பிரம்மா சிரம் அறுத்தது என்னமோ ஈசன் தான். கைகளில் கபாலம் ஒட்டிக் கொண்டதும் சரியே.  ஆனால் கபாலம் விலகியது மட்டும் அம்பிகை அருளினால் என்று சக்தி உபாசகர்கள் சொல்கின்றனர்.  சாக்தர்கள் சொல்வது அவள் போட்ட பிக்ஷையால் ஈசன் கைகளிலிருந்து பிரம்ம கபாலம் அகன்றது என்பதே. அதை நாளை பார்ப்போம். 

16 comments:

  1. சிர‌ம‌த‌றுபட‌வே விதித‌னைத் தூற்றிய அம்பிகையைப்பற்றி அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  2. முப்பெரும் அண்டங்களிலும் நிறைந்தவளாம் அவள் அருள் வேண்டி பணிந்து நிற்போம்.

    ReplyDelete
  3. அருமை அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. தலைப்பைப்படித்து முடிப்பதற்குள், தடுமாற்றமாக இருந்தது.

    மீண்டும் ஒரு ஸ்ட்ராங்க் காஃபி சாப்பிட்டுவிட்டுப் படிச்சுட்டேன்.

    நல்ல பதிவு. பாராட்டுக்கள். ;)

    ReplyDelete
  5. வாங்க ராஜராஜேஸ்வரி, வரவுக்கு நன்றி.

    மாதேவி நன்றிங்க.

    டிடி, ரொம்ப நன்றிப்பா.

    ReplyDelete
  6. நாளைக்குக் காத்திருக்கும்
    இன்னம்பூரான்

    ReplyDelete
  7. இந்தக் கதை ஏற்கெனவே தெரியும் என்றாலும் அந்த வரிகளைப் படிக்கும்போது இந்தக் கதை நினைவுக்கு வரவில்லை.

    படிக்க எளிதாக இருந்தது. நன்றி.

    ReplyDelete
  8. வாங்க "இ" சார், ரொம்ப நன்றி.

    ReplyDelete
  9. வைகோ சார், தலைப்பு அப்படி ஒண்ணும் பயமாவோ கஷ்டமாவோ இல்லையே? :)))

    ReplyDelete
  10. வாங்க ஶ்ரீராம், நான் பாடலில் இதைத் தான் முதல்லே கண்டு பிடிச்சேன். அப்புறம் மிச்சமும் கொஞ்சம் புரிஞ்சது. பரந்தாமர் தான் லேசிலே ஞாபகத்துக்கு வரலை. விளக்கம் கிடைச்சதும், அட அசடேனு என்னை நானே திட்டிண்டேன். :))))

    ReplyDelete
  11. சிவபெருமான் தாக்ஷாயணி உடலை எடுத்தலைந்தபோது திருமால் தன் சுதர்சனச் சக்கரத்தால் அந்த உடலைத் துண்டு துண்டுகளாக்கியதும் அவை 53-ஓ 54 ஓ துண்டங்களாகச் சிதறி பாரதத்தின் பல இடங்களில் வீழ்ந்ததாகவும் அந்த இடங்கள் எல்லாம்சக்தி வழிபாட்டுத் தலங்களாக்த் திகழ்கிறது என்றும் ஒரு கதை கேள்விப்பட்டிருக்கிறேன்

    ReplyDelete
  12. வாங்க ஜிஎம்பி சார், ஆமாம், சக்திபீடங்கள் குறித்தும் எழுதணும்னு ஒரு ஆசை இருக்கு. சிலவற்றிற்குத் தான் போயிருக்கேன். தகவல்கள் திரட்டணும். போக முடியாத இடங்களுக்கெல்லாம் போகணும். முடியுமா, தெரியலை! :)))))

    ReplyDelete
  13. சிறப்பான பகிர்வு.

    ReplyDelete
  14. வாங்க ஆதி, வேறே ப்ரொஃபைல் போல இருக்கு! கொஞ்ச நேரம் பேரைப் பார்த்ததும் புரியலை! :))) முழிச்சேன். அப்புறம் தான் மரமண்டையிலே ஏறினது. :)))) வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  15. சிறப்புனு சொல்ல முடியாது. அவசரப் பதிவுகள். :(((

    ReplyDelete
  16. அறியாதன அறிந்தேன்
    அற்புதமான விரிவான
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete