எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, March 30, 2022

உம்மாச்சி பார்க்க வாங்க எல்லோரும்!

 


இது பூசாரியிடம் சொல்லி எடுக்கச் சொன்ன படம். உள்ளே கருவறைக்குப் போய் எடுத்து வந்து கொடுத்தார்.


இந்த வாரம் திங்கள் அன்று எதிர்பாராவிதமாகக் குலதெய்வம் கோயிலுக்குப் போக நேர்ந்தது. ஒரு பிரார்த்தனை ஒன்று இருந்தது. அதற்காக அம்பிகைக்குச் சூலம் வாங்கிச் சார்த்தி அபிஷேஹம் செய்ய வேண்டி இருந்தது. சூலம் கைக்குக் கிடைத்ததும் உடனே அவசரம் அவசரமாகப் பூசாரி, கோயில் ட்ரஸ்டி ஆகியோருடன் பேசித் திங்களன்று வருவதற்கு ஏற்பாடு செய்து கொண்டோம். அதன் படி திங்கள் காலை ஐந்தரை மணிக்குக் கிளம்பி! (எங்கே வண்டி லேட்) கும்பகோணம் போய் அங்கே கும்பேஸ்வரர் கோயில் தெருவில்  மங்களாம்பிகாவில் சகிக்க முடியாத ஒரு டிஃபனைச் சாப்பிட்டு அதை விட மோசமான சிகரி காஃபி (கவனிக்கவும் டிகிரி காஃபி இல்லை! சிகரி காஃபி) குடித்துவிட்டு ஊர் நோக்கிச் சென்றோம். போன முறைகள் எல்லாம் போனப்போ நேரே குலதெய்வம் கோயிலுக்கு மட்டும் போயிட்டுத் திரும்பிட்டோம்.


இது நான் வெளியே இருந்து எடுத்தது. 

ஆகவே இம்முறை கருவிலி கோயில்கள், அங்கே காத்தாயி அம்மனுக்கு இப்போ 2,3 வருஷமாகக் கோயிலை விஸ்தரித்துக் கட்டி நன்றாக வழிபாடுகள் நடந்து வருகின்றன. அங்கேயும் போகணும்னு நினைச்சால் நம்மவருக்கு ஏனோ தெரியலை, நேரம் ஆயிடும்னு சொல்லிட்டார். கருவிலி சற்குணேஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் வழி தான் காத்தாயி அம்மன் கோயில். ஆனால் இறங்கலை. நான் மட்டும் தனியா இறங்கி என்ன செய்யறது? நேரே கருவிலி கோயிலுக்குப் போயிட்டோம். அங்கே குருக்கள் அம்மன் சந்நிதியில் அபிஷேஹ ஆராதனைகள் செய்து முடித்து அலங்காரம் செய்து கொண்டிருந்தார். சரியான நேரத்துக்குப் போயிட்டோம். முதலில் ஒரு தரம் சற்குணேஸ்வரரைப் பார்த்தோம். குருக்கள் இல்லை என்பதால் அம்மன் சந்நிதிக்குப் போய் அங்கே தரிசனம் முடித்துக்கொண்டு மறுபடி ஸ்வாமி சந்நிதி வந்து மறுபடி தீபாராதனைகள் பார்த்துட்டுக் கிளம்பினோம். செல்லைக் காரிலேயே சௌகரியமாய் வைச்சுட்டதாலே படங்கள் எடுக்கலை. இஃகி,இஃகி,இஃகி!



பெருமாளைப் படம் எடுத்து/ பார்த்தே மாதங்கள் ஆகிவிட்டன.

பின்னர் பரவாக்கரை நோக்கிப் பயணித்தோம். அங்கே பெருமாள் கோயிலுக்கு வரச் சொல்லி பட்டாசாரியாரிடம் ஏற்கெனவே சொல்லி இருந்தோம். அவரும் வந்து இருந்தார். கோயில் முழுக்க ஒரே குப்பைகள்! முன்னே இருந்த குடும்ப பட்டாசாரியார் சம்பத் அவர்கள் இந்தக் கோயிலின் பொறுப்பை வேறொருவரிடம் ஒப்படைத்து விட்டார். அவருடைய பராமரிப்பு ரொம்பச் சுமார் தான். 2,3 முறை சொல்லியும் பார்த்துட்டோம். கண்ணில் நீர் வடியப் பெருமாளையும் வேணுகோபாலன், அனுமனையும் தரிசனம் செய்து கொண்டோம். அர்ச்சனை முடிந்து ஆரத்தி காட்டினார். ஏதோ இந்தவரையாவது செய்கிறாரேனு நினைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி மாரியம்மன் கோயிலுக்கு வந்தோம்.



பெருமாள் இன்னொருகோணத்தில். இவருக்கும் கருடசேவை செய்து வைக்கணும்னு ஆவல். உற்சவரைத் திருடிக் கொண்டு போனப்போப் பெருமாளின் வலக்கை சுதர்சனச் சக்கரம் உடைந்து விட்டது. அதைச் சரி செய்வது எனில் திருவாரூர் கோர்ட் உத்தரவில் அறநிலையத் துறை அதிகாரிகள் முன்னிலையில் தான் செய்யணுமாம். இங்கே நாங்க தயார். ஆனால் அறநிலையத் துறை அதிகாரி  வந்து உதவ மறுத்து வருகிறார். கிட்டத்தட்ட நான்கைந்து வருஷங்களாக இதே கதை தான். என்னிக்கு விடியுமோ? கருடனுக்கு எப்போப் பெருமாளைச் சுமக்க நேரம் வருமோ?

அந்தத் தெருவில் திரும்பினால் ஒரே அதிர்ச்சி. பெரிய பெரிய ஜல்லிக்கற்கள் பரப்பித் தண்ணீர் வீட்டு ரோடு போடும் லாரி வந்து அதைச் சீர் செய்து கொண்டிருந்தது. கார் எப்படி உள்ளே போகும்னு கவலை! பின்னர் எப்படியோ ஓரமாகப் பார்த்து டிரைவர் ஓட்டிச்  சென்றார். கோயிலுக்குப் போனதும் அங்கே சமீபத்தில் தான் பாலாலயம் கட்டி இருக்காங்கனு கேள்விப் பட்டோம். எங்களுக்கும் அழைப்பு வந்தது. ஆனால் போகலை. அநேகமாக ஆவணி மாதம் கும்பாபிஷேஹம் இருக்கலாம்னு சொன்னாங்க.  அங்கே போய் உடனே பூசாரியை அம்மனுக்கு அபிஷேஹம் செய்து சூலத்தைச் சார்த்தச் சொன்னோம். அபிஷேஹ ஆராதனைகள் முடிந்து அம்மனுக்குப் புடைவையையும் கட்டிச் சூலத்தையும் சார்த்தினார். ட்ரஸ்டி முன்னிலை வகித்து எல்லாவற்றையும் நடத்திக் கொடுத்தார்.  பின்னர் தீபாராதனை முடிந்து பிரசாதங்கள் பெற்றுக்கொண்டு ஊருக்குத் திரும்பினோம். திரும்பும்போது கும்பகோணத்தில் ராயாஸ் ரைஸ் அன்ட் ஸ்பைஸசில் சாப்பிட்டோம். சகிக்காத சாப்பாடு அவர் சாப்பிட்டார். அங்கே தயிர்சாதம் என்பது நீர் ஊற்றின பழையதில் ஒரு கரண்டி மோர் விட்டாப்போல் இருக்கும். வேண்டாம்னு சொன்னால் கேட்கலை.

நாங்க அந்த ஓட்டலுக்குச் சாப்பிடப் போன காரணமே கழிவறை அங்கே தான் சுத்தமாக இருக்கும் என்பது தான். ராயாஸ் லாட்ஜிற்குப் பின்னால் இருக்கும் சத்தார் ரெஸ்டாரன்ட் போகலாம்னு ரங்க்ஸ் சொன்னார். ஆனால் அங்கே ஆர்டர் பண்ணிச் சாப்பிடணும். நேரம் ஆயிடும் என்பதால் மாமாங்கக்குளக்கரையில் இருக்கும் இதற்குப் போனோம். ஓட்டுநர் சாப்பாடு சாப்பிட, அவர் தயிர்சாதம் வாங்கிக் கொண்டு அப்படியே வைக்க, நான் ரொம்ப யோசனையுடன் ஸ்வீட் லஸ்ஸி மட்டும் கேட்டேன். அந்த ஓட்டல் ஊழியர் சனா பூரி சாப்பிடுங்க. ஃபில்லிங்காக இருக்கும்னு சொன்னார். சரினு அரை மனதாக அதை ஆர்டர் பண்னினேன். வந்தது. சுடச்சுடச்சுடச்சுட/ பெரிய பூரி. அந்த மாவில் 2 அல்லது 3 பண்ணி இருக்கலாம். சனாவும் முழுக்க முழுக்கத் தமிழ்நாட்டு ஓட்டல்களில் கொடுக்கும்படி ஒரே க்ரேவியாக இல்லாமல் நிறையக்கொண்டைக்கடலைகள், பெரிய கிண்ணம் என்ன ஒன்று. வெங்காயம் சாலட், எலுமிச்சம்பழம் எல்லாம் கொடுக்கலை. தயிர்ப்பச்சடியும் கொடுக்கலை. வடக்கே இதெல்லாம் கொடுப்பதோடு கூடுதலாக வெஜிடபுள் ஊறுகாயும் கொடுப்பாங்க. அந்தப் பூரியைச் சாப்பிட்டுவிட்டு டிப்ஸோடு சேர்த்து பில்லைக் கொடுத்துட்டுக் கிளம்பினோம்.

வரும் வழியில் தஞ்சை வந்து ஊரை விட்டுக் கிளம்பிச் செல்லப் போகும் ஒண்ணு விட்ட நாத்தனாரை எல் ஐசி காலனியில் பார்த்துவிட்டு வீட்டுக்கு வரும்போது ஐந்தரை மணி ஆகிவிட்டது. 

Sunday, March 27, 2022

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே!

 முகநூலில் "மத்யமர்" குழுமத்தில் வாரா வாரம் ஒரு தலைப்புக் கொடுத்து எழுதச் சொல்றாங்க. எழுதிய பதிவுகளில் வெளியிட்டவற்றில்  சிறந்த பதிவைத் தேர்ந்தெடுத்து அதற்கு இந்த வாரத்துச் சிறப்புப் பதிவு என்னும் சான்றிதழ் கொடுக்கறாங்க. மத்யமரில் அநேகமாக அனைவருமே ஐம்பதுக்கு மேற்பட்டவர்களாகத் தான் இருக்காங்க. ஐம்பதுக்குக் கீழேயும் இருந்தாலும் அது ஏதோ பத்து, இருபது சதவீதமாக இருக்கலாமோ என்னமோ. இந்தச் சான்றிதழையும் அந்தப் பதிவு இந்த வாரத்துச் சிறப்புப் பதிவாக ஆகவும் எல்லோரும் போடும் போட்டியும், என்னோடது தேர்ந்தெடுக்கலைனு சிலரும், திரும்பத் திரும்ப சிலரே தேர்ந்தெடுக்கப்படுவதாக மற்றவர்களும் சேர்ந்து கொண்டு குழந்தை மாதிரி வருந்துவதும் , ஒருவருக்கொருவர் சண்டை/விவாதங்கள் பண்ணிக் கொள்வதும் ரொம்பவே ஆச்சரியமா இருக்கு.

நான் மத்யமர் ஆரம்பித்த நாளில் இருந்து அதில் இருந்தாலும் ரொம்பவே அதில் என்னை ஈடுபடுத்திக் கொள்வதில்லை. எனக்கேற்றாற்போல்  பயன்படுத்திக் கொள்ளவெல்லாம் இல்லை. என்னோட டைம்லைனுக்கு வரும் பதிவுகளைப் படிப்பேன். பிடிச்சிருந்தா கருத்து/இல்லைனா கடந்துடுவேன். அவ்வளவே. மற்றபடி இந்தப் போட்டியில் எல்லாம் கலந்துக்கறதில்லை. ஆனால் ஒவ்வொருவரும் அவரவருக்கு உள்ள வலியைப் பற்றி (உடல் வலி அல்ல, மனோ வலி) எழுதி இருந்ததைப் பார்த்தால்/படித்தால்! மனிதரில் இத்தனை கொடூரமானவங்களும் உண்டா என்றே ஆச்சரியமும்/கவலையும்/அச்சமும் ஏற்படுகிறது. உறவுகள் ஒருவருக்கொருவர் போட்டுக் கொள்ளும் சண்டைகள் கூடப் பகிரப்படுகிறது. சம்பந்தப்பட்டவங்க இதை எல்லாம் படிச்சால் ஏற்படும் அல்லது ஏற்படப் போகும் பின் விளைவுகள்! யோசனையா இருக்கு! முகநூலே கொஞ்ச நேரம் பொழுதுபோக்காய் வந்துட்டுப் போகலாம்/ அவ்வளவு தான். முத்தெல்லாம் அபூர்வமாகவே கிட்டும். அதிலும் சிலர் இரவெல்லாம் கண் விழித்து மத்யமரைப் பார்த்து/படித்துக் கருத்துப் போட்டு! எல்லோருக்குமே வேலை இருக்குமே! தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு மொபைல் பார்ப்பதால் காலையில் எழுந்திருப்பதிலிருந்து ஆரம்பித்து வரிசையாக எல்லாமும் நேரம் ஆயிடாதோ? !!!!!!!!!!!!!!!!!!!!!!!

போகட்டும். இப்போது எங்கே பார்த்தாலும் 83 திரைப்படம். ஆர் ஆர் ஆர் திரைப்படம், காஷ்மீரி ஃபைல்ஸ் திரைப்படம் ஆகியவை பற்றியே பேச்சு. 83 திரைப்படம் 1983 ஆம் ஆண்டில் நாம் நாட்டுக் கிரிக்கெட் அணி வாங்கிய உலகக்கோப்பை பற்றிய படமாம். தமிழிலும் வந்துவிட்டதாம். நமக்கெல்லாம் அதை மூலையில் ஒதுக்கும்போது பார்க்கக் கிடைச்சாலே பெரிய விஷயம். ஆர் ஆர் ஆர் ராஜமௌலி படம் போல! பிரம்மாண்டமாய் இருப்பதாய்ச் சொல்றாங்க. க்தை என்னனு எல்லாம் தெரியலை. ஏதோ பொழுதுபோக்குப் படமாக இருக்கலாமோ என்னமோ! இது அநேகமாக எல்லா மொழிகளிலும் டப்பிங் எடுத்திருப்பாங்க போல! சிலர் மட்டும் மிகவும் ஈடுபாட்டுடன் எந்தப் படம் வந்தாலும் பார்த்துவிட்டு விமரிசனங்கள் எழுதிடறாங்க. ஆச்சரியமா இருக்கு. காஷ்மீரி ஃபைல்ஸ் படம் ஆங்கில சப் டைட்டில்களுடன் கூடிய இந்திப்படம். ஆனால் இப்போது தமிழில் டப்பிங் செய்யப் போவதாய்ச் செய்திகள் பார்த்தேன். யார் செய்யப் போறாங்களோ தெரியலை! படத்தின் ஜீவன் கெட்டுப் போகாமல் இருந்தால் சரிதான்!

கொஞ்ச நாட்களாக நேரம் ஏதோ உருப்படியாய்ப் போய்க் கொண்டு இருக்கிறது. எத்தனை நாளைக்கோ தெரியலை. ஆனால் பதிவு எழுதத் தான் மனசே வரலை. எதை எழுதினாலும் ஈடுபாட்டுடன் எழுதணும்.  எங்கே! பாதியில் ஓர் அலுப்பு வருகிறது. என்னத்தை எழுதி என்ன பலன்? எதுவும் மாறப்போவதில்லை என்று ஆற்றாமை வருகிறது. அதிலும் கோயில்கள் விஷயத்தில் மாநில அரசின் நடவடிக்கை மனதை வருத்துகிறது. கோயில்களின் வருமானத்தை வைத்துக் கொண்டு பக்தர்களுக்கு எவ்வளவோ சௌகரியங்கள் பண்ணித் தரலாம். இதிலே ஒரு வேளை கூட விளக்கேற்றி நிவேதனம் பண்ண முடியாத கோயில்கள் பல இருக்கின்றன. அவற்றுக்குச் செலவு செய்யலாம்.  எல்லோரும் அர்ச்சகர்கள் ஆகணும் என்பதில் காட்டும் முனைப்பைக் கோயில்களின் வருவாயை நல்லபடியாச் செலவு செய்வதைலும் காட்டலாம். சம்ஸ்கிருதம் வேண்டாம் என்கின்றனர்.  கிரந்தம் வேண்டாம் என்கின்றனர். இவை இரண்டும் இல்லாமல் தமிழகச் சரித்திரத்தைப் புரிந்து கொள்வது எப்படி? அதோடு இல்லாமல் இதைச் சொல்கிறவர்களின் குழந்தைகள்/பேரக்குழந்தைகள் படிப்பது மும்மொழிகளில் தான். பொது மக்களைத் தான் படிக்க வேண்டாம் என்கின்றனர். 

அந்தக் காலத்தில் மணிப்ரவாளம் என ஒரு நடையே உண்டு. அதைப் புரிந்து கொள்ள முடியலைனால் கல்வெட்டுக்களில் உள்ள கிரந்த எழுத்துக்களைப் புரிந்து கொள்ள முடியலைனால் எப்படிச் சரித்திரத்தைப் புரிந்து கொள்ளவோ தெரிந்து கொள்ளவோ முடியும்? மொழி விஷயத்தில் மக்கள் விருப்பத்துக்கு விட வேண்டும். இங்கே யாரும் இன்னொரு மொழியைக் கற்றுத் தான் ஆகணும்னு கட்டாயப்படுத்தலை. விருப்பமுள்ளவர்கள் கற்றுக்கொள்ளலாம் என்றே சொல்லப்படுகிறது. ஏற்கெனவே தமிழ்நாட்டு மாணவர்கள் நிலை மிக மோசம். தமிழும் தெரியவில்லை. ஆங்கிலமும் புரியவில்லை. டேஞ்சர் என்னும் ஆங்கிலச் சொல்லை ஒரு ஆங்கில ஆசிரியப் பெண் "டங்கர்" எனச் சொல்லிக் கொடுக்கிறதாக ஒரு வீடியோ சில ஆண்டுகள் முன்னர் சுற்றியது. அது எத்தனை தூரம் நிஜமோ தெரியலை. சைகாலஜியை  (Psychology) பிசைகாலஜி என உச்சரிப்பவர்கள் இன்னமும் இருக்காங்க என்பதே நிஜம்.

இப்போது தமிழ் படிப்பவர்கள் எவரும் கம்பராமாயணமோ, சிலப்பதிகாரமோ, நாலடியாரோ, ஏலாதி, திரிகடுகம் போன்றவையோ படிப்பதில்லை. தற்காலத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளே பாடமாக இருக்கும் போல! அதனாலும் மாணவர்களின் தமிழறிவு முற்றிலும் மோசமாக ஆவதோடு பொது அறிவும் வளர்வதில்லை.  ஒரு சில கால் சென்டர்களில் வேலை செய்யும் பெண்களுக்கோ/ஆண்களுக்கோச் சின்னச் சின்ன ஆங்கில வார்த்தைக்குக் கூட அர்த்தம் புரிவதில்லை. நம் பெயரைக் கூடத் தப்பில்லாமல் ஆங்கிலத்திலோ/தமிழிலோ அவர்களால் எழுத முடிவதில்லை.  அதோடு அவங்களுக்குப் பழைய சரித்திரமோ, மன்னர்களோ, அவர்கள் தமிழுக்குச் செய்த தொண்டுகளோ, தமிழ் படிப்பவர்கள்/படித்தவர்கள்  எழுபதுகள் வரை தமிழ்நாட்டில் சிறப்பாக இருந்ததோ தெரிய நியாயமில்லை. உ.வே.சா. என்றாலோ தமிழ்த்தாத்தா என்றாலோ புரிஞ்சுக்கறவங்க யாரும் இல்லை. யாரது? யாரோட தாத்தா என்பார்கள்! 

இங்கே அவற்றை எல்லாம் பாடமாக வைக்காமல் அந்தத் தமிழறிஞர்களின் பெயரில் உள்ள அடையாளங்களை நீக்குவதில் தான் முன்னே நிற்கின்றனர். அந்தக்காலத்தில் அடையாளங்கள் இல்லாமல் யாரும் இருந்ததில்லை. அதை ஓர் பெருமையாகவே கருதினார்கள். ஆனால் இப்போது இம்மாதிரி விஷயங்களில் முனைந்து செயல்படுத்துவதைத் தமிழறிஞர்களுடைய புத்தகங்களைப் பாடமாக வைப்பதில் இல்லை. முதல்லே இந்தக் காலத்துத் தமிழாசிரியர்களுக்கே தமிழ் நன்றாகத் தெரியுமா என்பதே சந்தேகம்.  கொஞ்ச காலம் முன்னால் ஆயுத எழுத்து என்றால் என்ன எனக் கேட்டதற்கு ஒரு மாணவன் "அது ஒரு திரைப்படம்" என பதில் சொன்னதும், பின்னர் தூண்டித் தூண்டிக் கேட்டதில் ஒரு வழியாகத் தமிழில் உள்ள எழுத்து அது என்பதையே அப்போது தான் புரிந்து கொண்டனர். கேவலம்!  இந்த அழகில் தமிழ் படித்து இவங்கல்லாம் நாளைய பிரஜைகளாக வந்து தமிழைக் காப்பாற்றப் போகிறார்கள்.  பெரிய பீத்தல் தான் இருக்கு. தமிழ் மிகத் தொன்மையான மொழி/ எங்கள் மொழி தான் மிகவும் மூத்தது, தமிழர்கள் எனில் அவங்க தனியானவர்கள். என்றெல்லாம் சொல்லிக் கொள்வதில் காட்டும் வீரம் தமிழைக் காப்பாற்றுவதில் இல்லை.  உண்மையிலேயே இதிலும் நாம் தனியானவர்களே. நம் மாநிலத்தில் தான் எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு! தமிழரை வஞ்சிப்பதாகச் சொல்லுகின்றனர். ஆனால் மற்ற மாநிலங்களில் ஹிந்தி கற்கத் தடை இல்லை. கேரளாவில் ஹிந்தி கற்றே ஆகவேண்டும் எனத் திருவனந்தபுரத்தில் இருக்கும் திரு ஜெயக்குமார் சந்திரசேகரன் அவர்கள் சொல்கிறார். ஆனால் தமிழ்நாட்டில்? அண்டை மாநிலங்களுடைய படிப்பின் தரத்தோடு நம் படிப்பின் தரத்தை யாராவது ஒப்பிட்டுப் பார்த்திருப்பார்களா? சந்தேகமே!

Tuesday, March 15, 2022

பொழுதை எப்படிப் போக்கிக் கொண்டிருக்கேன்?

பார்க்கணும்னு நினைச்சுட்டிருக்கும் திரைப்படங்களின் பட்டியல் பெரிதாகிக் கொண்டே இருக்கு. எதையும் பார்க்க உட்கார மனசு வரலை. ஆனால் இப்போதைய படங்களில் சில படங்களின் விமரிசனங்கள் பார்க்கும் ஆவலைத் தூண்டுகின்றன. அவற்றில் காஷ்மீரி ஃபைல்ஸ் முதலிடத்திலும் Thursday படம் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. எப்படியாவது பார்த்தாகணும் என்னும் பட்டியலில் இவை.  அதைத் தவிரவும் ஒரு சில மலையாளப்படங்கள் நன்றாக இருப்பதாக விமரிசனங்களில் படிச்சேன். தமிழ்ப்பட விமரிசனங்கள் அதிகம் காண முடியலை என்பதோடு வந்திருக்கும் ஒரு சிலவும் வழக்கமான அண்ணன்/தங்கை/பாசம்/இத்யாதி, இத்யாதி தான்!  தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்த "கர்மா" தொடரே இன்னமும் முழுதாகப் பார்க்கலை. அது என்னமோ இப்போல்லாம் கணினியில் உட்கார முடியாத ஒரு போக்கு! உட்கார்ந்தால் சில நேரங்களில் உடனே மனம் சலிக்க ஆரம்பிக்கிறது. கட்டுப்படுத்திக் கொண்டு தொடருவேன். ஆனால் செய்ய நினைத்த வேலையைச் செய்யாமல் வேறே ஏதோ ஏதோ படிப்பது இல்லைனா புத்தகங்கள் படிப்பதுனு புத்தி மாறிவிடுகிறது.

அப்படி சமீபத்தில் நான் படித்த சில புத்தகங்கள் :இன்னொரு பெண் மனம்" சுஜாதா? நினைவில் இல்லை. ராஜம் கிருஷ்ணனின் "மலர்கள்" எத்தனாவது தரம்? சுமார் இருபது முறை படிச்சிருப்பேனோ?  இது ராஜ் தொலைக்காட்சியிலோ என்னமோ சுஜிதாவைக் கதாநாயகியாகப் போட்டுத் தொடராக வந்து கொண்டிருந்தது. ஆவலுடன் பார்க்க உட்கார்ந்தால் முதல் காட்சியே கொலை! கதைப்படி பதினைந்து வயதுப் பெண்ணான சித்ரா கள்ளம்/கபடு அற்றவள். அம்மா இல்லாமல் அப்பா இரண்டாம் கல்யாணம் பண்ணிக் கொண்டு இந்தப் பெண்ணைப் பற்றி நினைக்காமல் இருக்க (அவ்வப்போது விசாரித்தாலும்) மாமன் வீட்டில் வளருகிறாள். மாமிக்கோ அகம்பாவம், கர்வம், அகங்காரம். சின்னப் பெண் என்னும் நினைவே இல்லாமல் கடுமையாக நடத்துகிறாள். அன்பில்லாமல் மனம் குன்றிப்போன சித்ரா படும் கஷ்டங்கள் தான் முக்கியக் கரு. எவ்வாறு அவள் மாமியால் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறாள்/ அவள் வாழ்க்கையில் அதிலும் பள்ளி வாழ்க்கையில் ஓர் சம்பவம் நேரிட்டிருந்ததால் அவள் மனதில் ஏற்பட்ட பாதிப்பு. அதனால் தடைப்பட்ட திருமணம். பின்னர் அவள் எப்படி இதிலிருந்து மீண்டு வெளியே வருகிறாள், அதுவும் யாரால் என்பதுமே கதை!

இதிலே சித்ராவின் மாமா பிள்ளையாக வரும் மாது என்னும் கதாபாத்திரத்துக்கும் சித்ராவுக்கும் அண்ணன்/தங்கை உறவு தான் கதைப்படி. ஆனால் தொலைக்காட்சித் தொடரில் சித்ரா மாமா பிள்ளையைத் தான் திருமணம் செய்து கொண்டு மாமா வீட்டில் கோலோச்சுவதற்காகத் திட்டம் தீட்டுவதாகவும் அதற்காக ஒவ்வொரு காயாக நகர்த்துவதாகவும் காட்டி அப்பாவிப் பெண்ணான சித்ராவை சூழ்ச்சி நிறைந்த கதாநாயகியாகக் காட்டி! 2,3 நாட்கள் பார்த்துட்டு அப்புறம் ராஜ் தொலைக்காட்சிக்கே கும்பிடு போட்டுவிட்டேன். அப்போது திருமதி ராஜம் கிருஷ்ணன் உயிருடன் இருந்தாலும் உடல்/மனம் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் இதைப் பற்றி அவருக்குத் தெரியலை என நினைக்கிறேன். உளவியல் ரீதியான ஒரு கதையை சூழ்ச்சி செய்யும் பெண்ணின் கதையாக மாற்றி விட்டார்கள். என்ன இருந்தாலும் இதிலே நம் அண்டை மாநிலமான கன்னடக்காரங்க, வடக்கே பாலிவுட்காரங்க இவங்க எடுக்கும்போது வரும்  (originality) சுயத்தை இழக்காமல் உள்ளதை உள்ளபடி எடுக்கும் திறமை தமிழ்ப்படங்களிலே வருவது கஷ்டம். இதற்கு உதாரணம் "சூரரைப் போற்று!" மற்றும்  "ஜெய்பீம்!" கதாநாயகருக்காக மாற்றப்பட்டவை அவை. 

இதைத் தவிரவும் வேறு சில புத்தகங்களும் படிச்சேன். நடுவில் ஆர்க்கி/ஆர்ச்சி காமிக்ஸையும் ஒரு ரிவிஷன் கொடுத்துக் கொண்டேன். தெய்வத்தின் குரல், உ.வே.சா.வின் நினைவு மஞ்சரி ஆகியவையும் அதில் உண்டு. அது போக மிச்சப் பொழுதில் நம்ம ரங்க்ஸ் ஒவ்வொரு யூ ட்யூபாக ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்துச் சொல்லும் உணவுகள். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்1 :) என்ன செய்யறது! எதுவோ சொல்வாங்களே! அது போல ஆச்சு நம்ம நிலைமை! பே.வா.பு.ஏ. என்பது தான்! இஃகி,இஃகி,இஃகி! இதை எழுதும் போது கமலா ஹரிஹரன் நினைவு வருது. அவங்களைத் தான் இன்னமும் காணவே இல்லை. நான் இப்படிச் சுருக்கெழுத்தில் எழுதுவதை அவங்க ரொம்ப ரசிப்பாங்க.  இப்போக் காணவே இல்லை. :( விரைவில் திரும்பி வந்து கருத்துரை கொடுக்கவும், பதிவுகள் கொடுக்கவும் பிரார்த்திக்கிறேன்.  சரி, சரி, விஷயத்துக்கு வரேன்.

அப்படி ஒரு யூ ட்யூப் சானலைப் பார்த்து நான் போன வாரம் வெள்ளியன்று பண்ணிய ஓர் உணவு சீராளம். சேச்சே, "சீராளன்" எல்லாம் இல்லைங்க. சிறுத்தொண்டரின் மகன் அவன்.  சிவபெருமான் வந்து பிள்ளைக்கறி கேட்டதும் சிறுத்தொண்டர் தன் மகனை வெட்டிச் சமைத்துப் போட்டார் இல்லையா? அது இல்லை இது! நல்லவேளையாகக் கடைசியில் "ன்" என முடியாமல் "ம்" என முடிஞ்சது. பிழைச்சோம்.  இது சீராளம். அதாவது இதில் எல்லாச் சாமான்களும் சம அளவில் சீராகச் சேர்க்கப்படுவதாக அந்த யூ ட்யூபில் வந்த பாட்டி சொல்கிறார். ஐயங்கார்ப் பாட்டி. கனகமோ என்னமோ பெயர். நம்மவர் எங்கே இருந்து இதை எல்லாம் தேடிக் கண்டு பிடிக்கிறாரோ தெரியலை. நான் எப்போவானும் பார்ப்பது ராகேஷ் ரகுநாதன் அல்லது வெங்கடேஷ் பட். தப்பினால் ஹெப்பார்"ஸ் கிச்சன். எல்லாமே என்னிக்கோ நினைச்சுண்டு  பார்ப்பேன்.   சரி, சரி, சீராளக்கதைக்கு வருவோமா!

இந்த சீராளத்துக்குத் தேவையான பொருட்கள் அரிசி, துபருப்பு, கபருப்பு, பாசிப்பருப்பு ஆகியவை மட்டும். உபருப்பு வேண்டாமாம். ஆனால் எனக்குப் பண்ணினதும் உபருப்புப் போட்டிருக்கணுமோ எனத் தோன்றியது. அதை அப்புறமாச் சொல்றேன்.

எல்லாம் சம அளவு எடுத்துக் கொண்டு களைந்து சுமார் 2,3 மணி நேரத்துக்குக் குறையாமல் ஊற வைக்கணும். பின்ன்னர் அதில் தேவையான மிளகாய் வற்றல், உப்புச் சேர்த்துக் கொர, கொரவென அரைக்கணும். என்னவோ தெரியலை, பெருங்காயம் தேவையானால் சேர்க்கவும் என்றார்.  கொரகொரனு அரைச்சதும் (இதுவும் சரியா வரலை. கொஞ்சம் கூடத்தான் அரைக்க வேண்டி இருக்கு. அதுக்காக ரொம்பவே நைசா எல்லாம் இல்லை.) அரைச்சு மாவைப் புளிக்க வைக்கலாம். அல்லது கொஞ்சம் போல் புளித்த தயிர் சேர்க்கலாம். தயிரிலேயே ஊற வைத்தாலும் நல்லது என்றார் அந்தப் பாட்டி.  இப்போ அரைத்த விழுதை ஒரு வாயகன்ற பேசின்/தட்டு அல்லது குக்கரில் சாதம் வைக்கும்/பருப்பு வைக்கும் வாயகன்ற கிண்ணம் ஏதேனும் ஒன்றில்  பாத்திரத்தில் அடியில் எண்ணெய் தடவி விட்டு மாவைப் பரத்தலாகக் கொட்ட வேண்டும். பின்னர் இட்லித் தட்டில் அல்லது அலுமினியம் கடாயில் நீர் ஊற்றிக் கொண்டு கொதிக்க வைத்து அடியில் ஓர் ஸ்டான்டைப் போட்டுவிட்டு மாவு பரத்திய தட்டை அதன் மேல் வைச்சுட்டு ஓர் மூடியைப் போட்டு நன்கு மூடவும்.

சிறிது நேரத்தில் ஊறிவிடும். எல்லாம் உளுந்துக் கொழுக்கட்டைக்கு உளுந்துப் பூரணம் செய்யறதில்லையா? அதே மாதிரித் தான். வெந்ததை வெளியே எடுத்து ஆற வைக்கவும். அதைத் துண்டங்கள் போடவும். பின்னர் ஓர் கடாயில் நல்லெண்ணெய் அல்லது தே.எண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, உபருப்பு, பெருங்காயம் (நான் சேர்த்தேன். அரைக்கும்போதும்) கருகப்பிலை தாளித்துக் கொண்டு துண்டங்களாக நறுகிய சீராளத்தைப் போடவும். கொஞ்சம் வறுத்துக் கொண்டு மேலே இன்னும் நல்லெண்ணெய் ஊற்றித் தோசை மிளகாய்ப் பொடியை நன்கு பரவலாகத் தூவவும். (தும்மல் வந்தால் நகர்ந்து வந்து வாயை மூடிக் கொண்டு தும்மிக் கொள்ளவும்.) மிளகாய்ப் பொடி போட்டதும் நன்கு கிளறிஎல்லாம் சேரும் வரை வதக்கிக் கொண்டு இப்போது அதன் மேல் தேங்காய்த் துருவல், பச்சைக் கொத்துமல்லி சேர்க்கவும். தேவையானால் எலுமிச்சம்பழம் பிழியலாம். எல்லாம் நம்ம டோக்ளாவுக்கு அண்ணன் தான் இது. டோக்ளாவும் ஒரு காலத்தில் அரைத்துத் தான் பண்ணியதாகச் சொல்வார்கள். 

இதை வேக விட்டு எடுத்துத் துண்டம் போடும்போது கொஞ்சம் தூள் வருகிறது. அதே போல் எண்ணெயில் வறுக்கும்போதும் தூள் வருகிறது. உளுந்து சேர்க்காததால் மாவு சேர்ந்துக்கலையோனு எனக்கு எண்ணம் . இன்னொரு முறை உளுந்தும் சேர்த்துப் பண்ணிப் பார்க்கணும். ஆனால் உளுந்தும் சமமாகப் போட்டால் சரியாக வராது. யோசிக்கணும் என்ன திப்பிசம் பண்ணலாம்னு. இது கொரகொரனு அரைப்பதால் துண்டங்கள் உதிர்கின்றனவோ என எனக்கு எண்ணம். படங்கள் எடுக்க முடியலை அன்னிக்கு.  கு.கு. ரன்னிங் ரேஸுக்குப் போன வீடியோ வந்ததாலே அதைப் பார்ப்பதும் உள்ளே வருவதுமாக இருந்ததில் படம் எடுக்கலை. ஏன்னா அந்த மொபைலில் தானே படங்கள் வந்திருந்தன.  அப்புறமாக் கு.கு.வைப் பார்க்க முடியாதே!



படத்துக்கு நன்றி கூகிளார் வாயிலாக மாலை மலர்

கடைசியிலே பார்த்தா (ஆரம்பத்திலே இருந்து தான்.) எப்போவானும் திங்கறதுக்கு வேணும்னு கேட்டால் அம்மா வீட்டில் இட்லி மாவு இருந்தால் இட்லியாக வார்த்துக் கொண்டு அந்த  இட்லியை இப்படித் துண்டங்கள் போட்டு நல்லெண்ணெய் விட்டு தோசை மிளகாய்ப் பொடி போட்டு அம்மா வறுத்துச் சாயந்திரவேளைகளிலே தருவார். அது மாதிரித் தான் இதுவும்.  தாமதமாகத் தானே நமக்கெல்லாம் மூளையில் ஏறும்.


Wednesday, March 09, 2022

போர் நிறுத்தம் அறிவிப்பு!

 உக்ரைனுடனான ரஷியப் போர் நிற்க வேண்டும் என்பதும் அமைதி நிலவ வேண்டும் என்பதுமே அனைவரின் பிரார்த்தனையும்.  கர்நாடகா வாழ் மருத்துவ இளைஞரின் இறப்புக்கு அஞ்சலிகள். பெற்றோருக்கு ஆறுதல்கள். சும்மா இப்படிச் சொல்லிக்கலாமே தவிர்த்துப் பெற்றோரின் நிலைமையை நினைக்க நினைக்க வேதனை அதிகம் ஆகிறது. காயம் பட்டிருக்கும் இன்னொருஇளைஞர் முற்றிலும் குணமாகித் தன் உற்றாரை/பெற்றோரைச் சேர்ந்திடவும் பிரார்த்தனைகள். 

போருக்கு முன்னாலேயே ரஷியா உக்ரேனைச் சுற்றிப் படைகளைக் குவிக்கத்   தொடங்கும்போதே மத்திய அரசு பல முறை அறிவுறுத்தியும் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியே வராமல் இருந்த மாணவர்கள்! என்ன நினைத்து அங்கேயே தங்கினார்களோ தெரியவில்லை. குடிநீர், ஒருவேளை உணவுக்குக் கூடத்தட்டுப்பாடு. மீதம் இருக்கும் இந்திய மாணவ/மாணவிகளாவது விரைவில் தங்கள் பெற்றோரை அடையப் பிரார்த்தனைகள். என்ன பிரச்னைன்னா இப்போ மேற்குப் பகுதி தவிர்த்து மற்றப் பக்கம் எல்லாம் மூடிவிட்டார்கள். :( இறைவன் தான் காப்பாற்ற வேண்டும். அதில் சிலர் மிகவும் உள்ளடங்கி இருக்கும் ஒரு நகரில் மாட்டிக் கொண்டு வெளியேற வழி தெரியாமல் தவிக்கின்றனர். ஏவுகணைத் தாக்குதலில் உணவு வாங்கச் சென்ற கர்நாடகாவைச் சேர்ந்த 3 இளைஞர்கள் அவர்களில் ஒருவர் கொல்லப்பட்டார். ஒருவர் பலத்த காயம். இன்னொருவர் தப்பி விட்டார். :( பிரதமர் மற்றவர்களைக் காப்பாற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி முக்கியமான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தினார்/நடத்திக் கொண்டிருக்கிறார். இந்திய தூதரகம் மாணவர்களை/இந்தியர்களை இருப்பிடத்தை விட்டு வெளியே வராதீர்கள் என எச்சரித்துக் கொண்டே இருக்கிறது.

இதுவே தமிழ்நாட்டு மாணவர் எனில் இத்தனை நேரம் அல்லோலகல்லோலப் பட்டிருக்கும். மோதி தான் திட்டம் போட்டு உக்ரேனியர்களிடமும்/ரஷியர்களிடமும் சொல்லி அந்த மாணவனைக் கொன்றதாக எல்லா சானல்களிலும் வாத/விவாதங்கள் ஆரம்பித்திருக்கும். தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கின்றது எனப் பல்லைக் கடித்துக் கொண்டு அரசியல்வாதிகள் முழக்கம் இடுவார்கள். இறந்த மாணவன் குடும்பத்திற்குக் குறைந்த பட்சமாக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டுப் போராட்டங்கள் நடைபெற்றிருக்கும். இப்போதும் தமிழக அரசு சார்பில் தமிழ் மாணவர்கள் மீட்புக்குழு என ஒன்றை நியமித்து அவர்களை உக்ரேன் சென்று தமிழ் மாணவர்களைக் கண்டு பிடித்துக் காப்பாற்றிப் பாதுகாத்துத் தமிழகம் சேர்க்கச் சொல்லி தமிழக அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. அதோடு இல்லாமல் பிரதமருக்குக் கடிதங்களுக்கு மேல் கடிதங்கள். ட்விட்டரில் செய்திகள். தில்லியில் போய்த் தங்கி இருக்கும் குழுவினரோ நாங்க இங்கே வந்ததால் தான் மத்திய அரசு தமிழ் மாணவர்களை மீட்கத் தொடங்கி இருக்கிறது என்று சொல்கின்றனர். தினசரிகளிலேயே இது வந்திருக்கிறது. பிரதமரும் மத்திய அரசும் உக்ரேனில் படிக்கும் தமிழ் மாணவர்களை மட்டும் கண்டறிந்து அவர்களை மீட்க எந்த ஏற்பாடும் செய்யவில்லை என்பது போல் ஒரு தோற்றம் உண்டாக்கப்படுகிறது. அத்தனை ஆயிரம் மாணவர்களில் தமிழ் மாணவர்களை மத்திய அரசு எப்படிக் கண்டு பிடிக்கும்? அல்லது போயிருக்கும் குழுவினருக்குத்  தான் தெரியுமா? அனைவரையும் பார்த்திருக்காங்களா?

சரி இவங்க போய் அங்கே என்ன செய்வார்கள்? சுமார் நான்கு நாடுகள் எல்லை நாடுகள். அந்த அந்த நாட்டு வெளியுறவுத் துறையுடன் பேசி அவங்களை வழிக்குக் கொண்டு வர வேண்டும்.  போரில் ஈடுபட்டிருக்கும் உக்ரேன், ரஷியா. இவர்கள் அனைவரின் நாட்டு வெளியுறவு அமைச்சர்களோடு பேசியாக வேண்டும். உக்ரேனில் இருந்து எல்லைப் பகுதிகளுக்கு வரும் மாணவ/மாணவிகளுக்குப் பாதுகாப்புடன் மட்டும் இன்றி உணவு, குடிநீர் போன்ற நிவாரணப் பொருட்களும் வழங்கி அருகே இருக்கும் எல்லை நாட்டின் மூலம் பாதுகாப்பாக தில்லிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும். இத்தனை இருக்கு இதிலே இந்த அழகிலே நம் தமிழகக் குழுவினர் தமிழக மாணவர்களை மட்டும் கண்டுபிடித்து அவங்களை இவங்க காப்பாற்றிக் கூட்டி வரவேண்டும்.  இவங்களுக்கு என்ன திட்டம்/எப்படி அணுகுவது/என்ன செய்வத/யாரிடம் பேசுவது/என்ன மொழியில் பேசணும்/எப்படி எல்லை தாண்டி மாணவர்களைக் கொண்டு வருவது என்பதற்கான திட்டம் ஏதானும் இருக்கா?  சரி, அப்படியே தமிழக மாணவர்களைக் காப்பாற்றி விடுகிறார்கள் என்றாலும் மற்ற மாணவர்கள்? அவங்க எப்படி வேணாலும் போகட்டுமா? அவங்களுக்கு மட்டும் மத்திய அரசு ஏற்பாடு செய்து கூட்டி வரணும். தமிழக மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து இவங்க கூட்டி வருவாங்களா?  அதிலும் எல்லை நாடுகளுக்கு அவங்க இருக்கும் இடங்களில் இருந்து காப்பாற்றி அழைத்து வர வேண்டும். உள்ளூர்ப் பயணத்திற்கு என்ன ஏற்பாடு செய்வார்கள்? அது பற்றி யாரிடம் பேசுவார்கள்?  அதன் பிறகும் இந்தியா வந்தடைய என்ன ஏற்பாட்டுடன் சென்றிருக்கின்றனர்? எதிலே அழைத்து வருவார்கள்? மத்திய அரசின் விமான சேவை மூலம் தானே? அல்லது உக்ரேனில் இருந்து தமிழக மாணவர்களைக் கூட்டி வர என இவங்க ஏதானும் தனியார் விமானங்களை ஏற்பாடு செய்திருக்காங்களா? அந்த விமானங்கள் உக்ரேனுக்கோ அதன் எல்லை நாடுகளுக்கோ வர முடியுமா? வான் வழி அடைக்கப்பட்டிருக்கிறது. 

திடீரென வான் வழி அடைக்கப்பட்டதாலேயே முதலில் சென்ற விமானம் தரை இறங்க முடியாமல் திரும்பியது என்பதாவது இவங்க யாருக்கேனும் தெரியுமா? வெளிநாட்டுத் தூதரக அலுவலகம் மூலம் பேச்சு வார்த்தை நடத்துவது மத்திய அரசு. மத்திய அரசின் விமான சேவையின் மூலமே மாணவர்கள் வந்தாக வேண்டும். இவங்களுக்கு எல்லாம் போர் நடக்கும் பிராந்தியத்திற்குச் செல்ல அனுமதி வழங்க வேண்டியதும் மத்திய அரசே! போர்ப் பிராந்தியத்திற்கு இவர்களை எந்த அரசாவது துணிந்து அனுப்பி வைக்க அனுமதி கொடுக்குமா? அப்புறமா இவங்களுக்கு ஏதானும் நேர்ந்தால் அதுக்குப் பொறுப்பை யார் ஏற்பது? மத்திய அரசு தானே? மற்ற மாநிலங்களில் எந்த அரசாவது   கொஞ்சமும் யோசனையில்லாமல் இப்படி எல்லாம்  செய்திருக்கிறதா? அல்லது இனியாவது செய்யுமா? ஏற்கெனவே மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. பல மாணவர்கள் திரும்பியும் வந்திருக்கிறார்கள். இன்னமும் யாரேனும் இருந்தால் அவர்களையும் கொண்டு வரப் பல்வேறு முயற்சிகளை வெளியுறவு அமைச்சகமும் மத்திய அரசும் செய்து தான் வருகிறது.  இதிலே "நீட்" தேர்வு எழுதித் தேர்ச்சி பெற முடியாமலேயே அவங்க வெளிநாட்டுக்கு மருத்துவம் படிக்கப் போனாங்க என்றும் அதற்கும் மத்திய அரசே காரணம் என்றும் இந்த நேரத்தில் ஒன்றை ஒன்று தொடர்பு படுத்திப் பேசுகின்றனர். சூழ்நிலையின் முக்கியத்துவமோ ஒவ்வொரு மாணவனின் உயிரும் அருமை என்பதோ யாருக்கும் புரியவில்லை.

தமிழக மாணவர்களை மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்தியர்கள் அங்கே இருப்பவர்கள் அனைவரையும் கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பை மத்திய அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கையில் இவங்க என்னமோ இவங்க போனதால் தான் மாணவர்கள் மீட்கப் படுவதாக ஒரு செய்தியைப் பரப்பி வருகிறார்கள். இவங்க தான் போனாங்கன்னா இங்கே தலைமைச் செயலாளராக இருப்பவராவது அரசுக்கு ஆலோசனை கூறி இருக்கணும். கூடச் சென்ற நான்கு ஐஏ.எஸ் அதிகாரிகளாவது நிலைமையைப் புரிய வைச்சிருக்கணும். இதெல்லாம் இவங்க உக்ரேன் போய்ச் செய்ய முடியற வேலைகள் அல்ல என அதிகாரிகள் நிலைமையை எடுத்துச் சொல்லி இருக்கணும்.   அண்டை மாநிலங்களுடனான தண்ணீர்ப் பிரச்னைகளையே நம்மால் தனித்துத் தீர்த்துக் கொள்ள முடியலை. இன்னும் எத்தனையோ பிரச்னைகள் நம்மால் தனித்துத் தீர்க்க முடியாதவை உள்ளன. மத்திய அரசின் தலையீடு இல்லாமல் தீர்க்க முடியாதவை அவை எல்லாம்.

 உக்ரேனின் உள்நாட்டில் சிமி என்னும் ஊரில் தங்கி இருந்த இந்தியர்களை ரஷியாவின் உதவியுடன் பதினாறு பேருந்துகளில் மீட்டு வந்திருக்கின்றனர். இந்தியாவின் வேண்டுகோளுக்கிணங்க ரஷியா போர் நிறுத்தம் செய்ததால் இது சாத்தியமாயிற்று.  நிலைமையைப் புரிந்து கொண்டு இந்த நேரம் மத்திய அரசின் எல்லா முயற்சிகளுக்கும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். இன்று உக்ரேன் அதிபர்/பிரதமர் தான் சமரசம் செய்து கொள்ள விரும்புவதாக அறிவித்திருக்கிறார். இனி போகப் போகப் பார்க்கலாம். எப்படியோ மக்களுக்கு நன்மை விளைந்தால் சரி. போர் நின்று மக்கள் அமைதியாக வாழ வேண்டும்.

இதிலே மீண்டு வந்த சிலருக்குப் பயணம் சுகமாக இல்லை, வானிலே பறக்கும்போது ஒரே சப்தம், குலுக்கல் , பொழுதுபோக்குக்குத் திரைப்படங்கள் எதுவும் காட்டவே இல்லை   குடிக்கவும்/சாப்பிடவும் எதுவும் தரலை என்னும் குறை!  வந்ததும் ஒரு ரோஜாப்பூவைக் கொடுக்கின்றனர். இதை வைத்து என்ன செய்வது? எங்க சொந்த ஊருக்கு நாங்க எப்படிப் போவது என்றெல்லாம் குறை.  அட மாணவர்களே! நீங்கள் வந்தது நம் ராணுவப்படை விமானங்கள். சௌகரியக்குறைவு, சத்தம் போடுகிறது என்றும் ஆட்டமாய் ஆடுகிறது என்றும் நீங்கள் சொல்லும் இந்த விமானங்களில் தாம் நம் ராணுவ வீரர்கள் உயிரைப் பணயம் வைத்துப் போர் புரிகின்றனர். உங்களை மீட்கவும் இப்போது தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போர்ச் சூழலில் மீட்க வந்திருக்கின்றனர். அதற்கான நன்றியுணர்வு இல்லை எனினும் குறை/குற்றம் சொல்லாமலாவது இருக்கலாமே!  அதெல்லாம் இருக்க மாட்டாங்க. எப்படிக் குறைகள்/குற்றங்கள் கண்டு பிடிக்கலாம்னு அதே யோசனையில் இருக்கிறவங்க மாறுவதாவது! 

எப்படி வேணாலும் போகட்டும். உக்ரேன் - ரஷியாப் போர் முற்றிலும் நின்று எங்கும் அமைதி நிலவிடப் பிரார்த்தனைகள். இதனால் விலைவாசி மட்டுமில்லாமல் எல்லாமே எகிறி விட்டது. :(

Thursday, March 03, 2022

ஊறுகாய், ஊறுகாய், மஞ்சளில் ஊறுகாய்!




















 மஞ்சள்+எலுமிச்சை+இஞ்சி+மாங்காய் இஞ்சி(விரும்பினால்)+மாங்காய்+வேர்க்கடலை+ பச்சைப் பட்டாணி+பச்சை மிளகாய் சுமார் ஒரு பத்து. சிறிதாக இருந்தால் அடியில் குறுக்கே நறுக்கிச் சேர்க்கலாம். பெரிதாக இருந்தால் இரண்டாகக் கீறிப் போடலாம்.

உப்பு தேவையான அளவு

பெருங்காயத் தூள்  அரை டீஸ்பூன்

நல்லெண்ணெய்  அரைக்கிண்ணம்

மிளகாய்த் தூள்  3 டீஸ்பூன்

சர்க்கரை  ஒரு டீஸ்பூன்

கடுகு, வெந்தயப் பொடி  ஒரு டேபிள் ஸ்பூன்





எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொண்டு ஒன்று சேர்த்து மேற்சொன்ன சாமான்களையும் சேர்த்துக் கலக்கவும். எலுமிச்சைச் சாறும் தேவையானால் 2 அல்லது 3 பெரிய பழங்களின் சாறைச் சேர்த்து அதன் தோலையும் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். எப்படி ஆனாலும் எலுமிச்சம்பழமும் போட்டால் நல்லது. ருசி நன்றாக இருக்கும். நல்லெண்ணெய்/கடுகு எண்ணெய் இரண்டுமே ஊறுகாய்க்கு ஏற்றது என்றாலும் நமக்கெல்லாம் நல்லெண்ணெய் தான் பிடிக்கும். இந்தப் படங்களிலே ஊறிய வேர்க்கடலையும் பச்சைப் பட்டாணியும் நன்றாகத் தெரியும். கொஞ்சம் சிவந்த நிறத்தில் தெரிவது தான் தோல் சீவிய பச்சை மஞ்சள். மாங்காய், எலுமிச்சைத் துண்டுகள், பச்சை மிளகாய், இஞ்சி எல்லாமும் தெரியும். 

இந்தப் பதிவைப் படங்கள் இணைத்து வெளியீடு செய்ய மத்தியானத்தில் இருந்து முயன்று மின்சாரத் தடை ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. ஆகவே முன்னர் எழுதின சில விபரங்கள் சேமிப்பில் இல்லை. என்றாலும் எழுதினவரை கோர்வையாய் இருக்கும் என நம்புகிறேன்.

இந்தப் படத்தை ஶ்ரீராமுக்குத் திங்கக்கிழமைக்குப் பதிவு அனுப்பினப்போ கொடுக்க மறந்துட்டேன். பின்னர் தரேன்னு சொல்லிட்டு அதுவும் மறந்துட்டேன். இப்போ அந்தப் பதிவில் மனோ சாமிநாதன் ஊறுகாய்ப் படம் எங்கேனு கேட்டு அவங்களிடம் உடனே அனுப்பறேன்னு சொல்லிட்டு என்னோட வயிறே பிரதானம்னு 2 நாட்கள் படுத்துட்டேன். நேற்றுத் தான் மறுபடி நினைவு வந்தது. இப்போப் படம் எடுத்துப் போட்டிருக்கேன். அந்தப் பதிவோடு இணைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். 

Tuesday, March 01, 2022

சிவாய நம ஓம்!





இன்று சிவராத்திரி. முதலில் சிவராத்திரி என்றால் என்ன? சிவபெருமான் லிங்க வடிவாகத் தோன்றிய காலம் தான் லிங்கோற்பவ காலம் என்று சொல்லப் படுகிறது. அந்த லிங்கோற்பவம் நடந்த நேரம் இரவு 11-30 மணிக்கு மேல் 1-00 மணி வரையாகும். லிங்கோற்பவம் நடந்த தலம் திருஅண்ணாமலை ஆகும். சிவலிங்கம் பற்றிய விளக்கங்கள் எல்லா ஞான நூல்களிலும், முக்கியமாகத் திருமூலர் திருமந்திரத்திலும் சொல்லி இருக்கிறார்கள். சம்ஸ்கிருதத்தில் ஸ்காந்த புராணம் என்னும் கந்த புராணத்திலும் சொல்லப் பட்டிருக்கிறது. அது என்ன என்றால் வழிபாடு மூன்று வகைப்படுத்தப் பட்டிருக்கிறது. அவை உருவ வழிபாடு. இப்போது நாம் செய்து வருவது உருவ வழிபாடு ஆகும். இன்னொன்று அருவுருவ வழிபாடு. மற்றது அருவ வழிபாடு ஆகும். அருவ வழிபாடு என்பது உருவமற்ற பரம்பொருளைக் குறிக்கிறது என்று நம் எல்லாருக்கும் நன்கு தெரியும். "பார்க்கும் பொருளெல்லாம் பரம்பொருளாகப் பார்ப்பது" என்பதும் அருவ வழிபாட்டைச் சேர்ந்தது ஆகும். எல்லாமே இறைவன் என்ற நிலையை ஞானிகளும், மஹான்களும் தான் அடைய முடியும் என்பதால் நம்மைப் போன்ற சாமானிய மனிதருக்காக ஏற்பட்டது உருவ வழிபாடு. இரண்டுக்கும் இடைப்பட்டது அருவுருவ வழிபாடு. இதில் உருவம் இருக்கும். ஆனால் அவயங்கள் இருக்காது. அருவமாக இருக்கும். இந்த அருவுருவ வழிபாட்டைக் குறிப்பது தான் சிவலிங்கத்தை நாம் வழிபடுவது ஆகும்.

இதை எப்படிச் சொல்வது என்றால் இவ்வுலகாகிய பூமியைப் பெண்ணாக எடுத்துக் கொண்டால் ஆகாயம் என்பது அதனுடன் இணைந்த ஆணாகும். அது போல் லிங்கம் இருக்கும் பீடம் ஆவுடையாள் எனப்படும் அம்பிகை என்றால் லிங்கமாகிய பாணம் சர்வேஸ்வரன் ஆகிறான். ஆகாயத்தை நாம் தினமும் பார்க்கிறோம். அதன் வடிவம் என்ன? நம்மால் சொல்ல முடியாது. வடிவம் புலப்படுவதும் இல்லை. ஆனால் கவிழ்த்து வைக்கப் பட்ட மரக்காலைப் போல் இருக்கும் இந்த ஆகாயத்துக்கு இது தான் உருவம் என நாம் நினைத்துக் கொள்கிறோம். இவ்வுலகம் பூராவும், அனைத்துமே இந்த ஆகாயம் என்னும் கூரையின் கீழ் தான் இருக்கின்றன, நாம் உட்பட. இந்த அண்ட லிங்கமாகிய ஆகாயத்துக்கு அபிஷேஹம் செய்ய ஏற்பட்டவை தான் கடல் கள். ஆகாய லிங்கம் எவ்வளவு பெரிதோ அத்தனைக்கும் தேவைப்படும் அளவு நீர் நிறைந்த சமுத்திரங்கள் இருக்கின்றன. அபிஷேஹம் முடிந்த ஆகாய லிங்கத்திற்கு நட்சத்திரங்களே பூக்களாகவும், மாலைகளாகவும் ஆகின்றன. ஆடையோ எனில் எட்டுத் திக்குகளாம். இதைத் தான் திருமூலர் தன் திருமந்திரத்தில் சொல்லி இருக்கிறார். (எனக்குத் திருமந்திரம் பூராவும் தெரியாது. சிவராத்திரி மஹிமையில் படித்தது பற்றித் தான் எழுதுகிறேன்.)

 சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறை எனப்படும் திரு மந்திரத்தில் திருமூலர் சொல்கிறார். "தரை உற்ற சக்தி, தனி லிங்கம் விண்ணாம் திரை பொரு நீரது மஞ்சன சாலை வரை தவழ் மஞ்சு வான் உடுமாலை கரை அற்ற நந்திக்குக் கலை திக்குமாமே." என்று லிங்கத்தின் அருவுருவத்தை வர்ணிக்கிறார். திருமூலர் சிவனை நேரில் கண்டவர் எனக் கூறுவார்கள். 63 நாயன்மாரிலும் ஒருத்தராகப் போற்றப் படுகிறவர். இவரது காலத்தைப் பற்றிய தகவல்கள் சற்று முரணாக இருக்கின்றது. திருமூலரின் வாக்குப்படி நாம் அனைவரும் இருப்பது ஒரே கூரையின் கீழ். பிரம்மாவும், விஷ்ணுவும் சிவனின் அடிமுடியைத் தேடியதும், பிரளய காலம் முடிந்து இரவு நேரத்தில் 4 ஜாமமும் அம்பிகை இறைவனைப்பூசித்ததும் சிவராத்திரி எனச் சொல்லப் படும் மாசி மாதத் தேய்பிறைச் சதுர்த்தசி அன்று தான். பொதுவான நியதிப்படி பகல் பொழுது ஈசனுக்கும், இரவுப் பொழுது அம்பிகைக்கும் உரியது. சிவராத்திரி அன்று மட்டும் அம்பிகை தனக்கு உரிய இரவை ஈசனுக்கு அளித்து அவர் பெயரால் வழங்கச் செய்கிறாள். சிவம் வேறு அறிவு வேறு அல்ல என்பார்கள். அறிவே சிவம். நம்முடைய அறிவால் அறிந்து கொண்ட சிவனைப் போற்றித் துதிப்போம்.

 "தென்னாடுடைய சிவனே போற்றி, போற்றி!!எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி, போற்றி!!"


2008 ஆம் ஆண்டில் எழுதிய பதிவின் மீள் பதிவு.