எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, August 31, 2019

பானுமதி வெங்கடேஸ்வரனுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்! :(

பானுமதி வெங்கடேஸ்வரன் க்கான பட முடிவு

மனதில் மிகுந்த பாரத்துடன் இந்தச் செய்தியைப் பகிர்கிறேன். நம் அருமைத் தோழியும் என் உடன் பிறவாத் தங்கையும் ஆன பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் கணவர் திரு வெங்கடேஸ்வரன் மிகுந்த போராட்டத்துக்குப் பின்னர் இன்று மதியம் காலம் ஆனார் என்னும் செய்தி சற்றுமுன் கிடைக்கப் பெற்றேன். பானுமதி அவர் கணவரிடம் எவ்வளவு நெருக்கம் என்பதை நான் பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன். பொருத்தமான தம்பதிகள்! பானுமதி விரைவில் தன் இந்த இழப்பில் இருந்து மீண்டு வெளி வர எங்கள் பிரார்த்தனைகளும். பானுமதியின் இந்தச் சிரித்த முகமே கண் முன்னே நிற்கிறது. இனி இம்மாதிரி நிறைந்த சிரிப்புடன் காண முடியுமா? சந்தேகமே! தன் துணையை இழந்து தவிக்கும் பானுமதி இந்தச் சோகத்தில் இருந்து மீண்டு வரப் பிரார்த்தனைகள்.

Monday, August 26, 2019

மின் தூக்கியில் செல்லும்போது கவனிக்க வேண்டிய விஷயம்!

நேற்று வந்த விருந்தினருக்காக உளுந்து வடை மாவு தனியாகக்  கொஞ்சம்  அரைத்து வெங்காயம் போட்டுக் கலந்து வைத்தேன். வரவிருந்தது சென்னையில் எங்க வீட்டை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கும் பில்டர்/தமிழில் என்ன? கட்டிடம் கட்டுபவர் என்னும் பொதுவான விளக்கமே வருது. அவர் மனைவியுடன் வரப்போவதாகச் சொன்னதால் இனிப்பு என்ன செய்வது என யோசித்துவிட்டுப் பின்னர் கிச்சாப்பயலுக்காகப் பண்ணின திரட்டுப் பாலே போதும் என முடிவு செய்தோம். கடைசியில் அவங்க சனிக்கிழமை கோயிலுக்குப் போய்க் கிருஷ்ண ஜயந்திக் கொண்டாட்டங்களில் மாட்டிக் கொண்டதில் வரவில்லை. ஆகவே நேற்று வருவதாகச் சொல்லி இருந்தார்கள். அவங்க ஓர் கல்யாணத்துக்காக வருவது தெரியும். மண்டபமும் எதிரே தான்! என்றாலும் நாங்களும் முறையாக உபசரிக்கணும்னு தயாராக இருந்தோம்.

பதினோரு மணிக்கு மேல் அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது வந்து கொண்டிருப்பதாக! சரினு காத்திருந்தோம். சில நிமிடங்களில் அவரிடமிருந்து அழைப்பு. லிஃப்டில் மாட்டிக் கொண்டிருப்பதாக! கடவுளே! கலங்கிப் போனோம் முதலில் நினைத்தது மின்சாரம் இல்லையோ என. உடனே பாதுகாவலரைக் கூப்பிட்டு ஜெனரேட்டர் போடச் சொன்னதில் அப்போதும் லிஃப்ட் எடுக்கவில்லை.  சாவியைப் போட்டு லிஃப்டைத் திறக்கச் சொல்லிச் சொன்னால் அவர் மொட்டை மாடியில் லிஃப்ட் ரூமிற்குப் போகிறார். அவரைப் பார்த்து நான் மொட்டை மாடிக்குப் போகவேண்டாம். கீழே போய்த் திறங்க என்று சொல்லிவிட்டு நானும் கீழே இறங்க ஆரம்பித்தேன்.. கீழே இறங்கும் முன்னர் பிள்ளையாரிடம் ஒரு ரூபாய் வைத்துவிட்டுக் காப்பாத்திக்கோ, இது உன் பிரச்னை எனச் சொல்லிட்டுக் கீழே இறங்கினேன். அதற்குள்ளாக அங்கே கூட்டம் கூடி விட்டிருக்கிறது. நம்மவர் முன்னாடியே போய்விட்டார்.

ஒவ்வொரு தளத்திலும் கீழே போகாமல் இருந்தவர்கள் அனைவருமே இப்போது என்னைக் கீழே இறங்காதீங்க என்று சொல்லிக் கொண்டிருக்க எனக்கோ கவலை பிடுங்கித் தின்றது. அதற்குள்ளாகக் குடி இருப்புவாசி ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் விஷயம் தெரிந்து உடனே கீழே வந்து லிஃப்டின் சாவியைக் கேட்டு வாங்கிக் கதவை திறந்து அவர்களை வெளியே விட்டார். சுமார் ஆறு நபர்கள். அனைவருமே பெரியவர்கள். நாங்க நினைச்சது பில்டரும் அவர் மனைவியும் மட்டும் என. நபர்கள் அதிகம் ஆகவே லிஃப்ட் அதிக கனம் தாங்காமல் இயங்க மறுத்திருக்கிறது. நம்ம நண்பர் ஓர் பில்டர். அவருக்குக் கூடத் தெரியலையேனு நினைத்தால் அவர் சொன்னார், இப்போதெல்லாம் லோட் ஜாஸ்தி ஆனால் லிஃப்ட் தானாக இயங்கிக் கதவைத் திறந்து ஆட்கள் வெளியே போகும்வரை இயங்காது! ஆகவே இதுவும் அப்படித் தான் என நினைத்தேன் என்றார். எப்படியோ தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு! மூன்று பெண்கள்.மூன்று ஆண்கள். குடி இருப்பு வளாகமே ஆடிப் போய்விட்டது.  இனி லிஃப்டுக்கு வெளியே நான்கு பேருக்கு மேல் உள்ளே செல்லவேண்டாம் என எச்சரிக்கை அறிவிப்பு வைக்கலாம் என யோசனை! அனைவரும் ஒரு மனதாக ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் சமயங்களில் குழந்தைகள் விளையாடும்போது போய் மாட்டிக் கொள்கின்றனர்.

ஒரு வழியாக வந்தவர்களை உபசரித்து அனுப்பினோம், ஆனால் அவங்க வடை எல்லாம் சாப்பிடவில்லை. காஃபி கூட வேண்டாம்னு சொல்லிட்டாங்க.
வடை மாவை என்ன செய்யறது?  சாயங்காலமா அந்த மாவை வடை தட்டினேன். நேத்திக்குனு பார்த்து  வீட்டு வேலை செய்யும் பெண்மணி வேறே விடுமுறை.  பாத்திரங்கள் தேய்த்து, வீடு பெருக்கித் துடைத்து வடை தட்டினு வேலை சரியாப் போச்சு! சரி அவங்க தான் சாப்பிடலையே, இனிமே நாம தானேனு கிச்சாப்பயல் பிறந்த நாளுக்குச் செய்த வடை மாவும் கொஞ்சம் போல் மிச்சம் இருந்ததையும் இதில் சேர்த்துக் கொண்டேன். வடைகளாகத் தட்டித் தேநீருடன் சாப்பிட்டாச்சு. மிச்சம் 3 அல்லது 4 இருந்தது. காலையில் மைக்ரோவேவில் சூடாக்கி வேலை செய்யும் பெண்ணிடம் கொடுத்துட்டேன். நம்ம நெல்லைத் தமிழரை வெறுப்பேத்தணும்னு திடீர்னு தோணவே வடை தட்டும்போதும் மாவையும் படம் எடுத்து எங்கள் ப்ளாக் வாட்சப் குழுமத்தில் பகிர்ந்தேன். ஜன்மம் சாபல்யம் ஆச்சு. முதலில் இந்த எண்ணம் இல்லாததால் உளுந்தை ஊற வைச்சதில் இருந்து எடுக்கலை. வடை மாவில் வெங்காயம் போட்டு வைத்திருப்பது தான் கீழே பார்ப்பது. 


வெந்து கொண்டிருக்கும் வடைகள். பெரிதாகத் தட்டியதால் இரண்டு இரண்டாகப் போட்டிருக்கிறேன்.


ஆக நாமும் "திங்க"க்கிழமை "திங்க"ற பதிவு போட்டாச்சு! இப்போவும் ஜன்மம் சாபல்யம் ஆயிடும். 

Saturday, August 24, 2019

கிச்சாப்பயலின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள்!


உம்மாச்சி அலமாரி கிட்டே இருந்து கோலம் போட ஆரம்பிச்சேன். காலை மட்டும் உள்ளே வரமாதிரி போட்டுக்கொண்டே பின்னால் போனேன். இது உம்மாச்சி அலமாரிக்கிட்டே போட்டிருப்பது. முன்னெல்லாம் கையை முஷ்டி மடக்கிக் கொண்டு கோலமாவில் தோய்த்துப் போட்டால் சின்னக் காலாக விழும். கீழே உட்கார்ந்து போடுவேன். இப்போவெல்லாம் கீழே எங்கே உட்காருகிறது! ஆகவே கையாலேயே குட்டிக்காலாகப் போட்டேன் முடிந்தவரை!
இது முன் கூடத்தில் வெளி வாசலுக்குச் செல்லும் வழி


இதுவும் அதைத் தொடர்ந்தது தான்



இது நிலைப்படியிலிருந்து வெளியே உள்ள சின்னத் தாழ்வாரத்தில் போட்டிருப்பது


இது நம்ம வீட்டுக் கோலம். ஹிஹிஹி, அங்கே தெரிவது என் கால் தான். காமிராவில் கவனிக்கவில்லை. அதனால் எல்லா இடங்களிலும் புடைவை மட்டும் தெரிகிறது! இஃகி,இஃகி,இஃகி!


அதோ தெரிவது எதிர்வீட்டுக் கோலம். எங்க வீடு இருக்கும் பகுதியில் எங்க வீடு மட்டும் தான். எதிர்வீட்டுக்குப் பக்கம் இன்னொரு எதிர் வீடு உண்டு. அவங்க போட்ட கோலம் கீழே!



இனிமே நம்ம வீட்டுக் கொண்டாட்டம். எப்போவும் பண்டிகைக்கு 2 நாட்கள் முன்னரே பக்ஷணம் செய்ய ஆரம்பிப்பேன். புழுங்கலரிசி முறுக்கும், தட்டையும் தின்பதற்காகவே கொஞ்சம் நிறையச் செய்து வைத்து விடுவேன். அப்புறமாப் பண்டிகை அன்று பச்சரிசியை மிஷினிலோ அல்லது மிக்சியிலோ மாவாக ஆக்கிக் கொண்டு நிவேதனத்துக்கு எனத் தனியாகச் செய்வேன். இந்த வருஷம் கிச்சாப் பயலுக்கு எதுவும் பண்ணலை. மருத்துவர் போட்டிருக்கும் கெடுபிடியாலும்  செப்டெம்பரில் அம்பேரிக்கா போகணும் என்பதாலும் அதிகப்படி வேலையை இழுத்துவிட்டுக்காதே எனக் கடுமையான எச்சரிக்கை! ஆகவே நேற்றுக் கிச்சாப்பயலுக்குப் பருப்புப் பாயசமும், வடையும் மட்டும் தான். கொஞ்சம் போல் பால் வாங்கித் திரட்டுப் பால் செய்தேன். எப்போவும் கிச்சாப் பயலின் பிறந்த நாளைக்குத் திரட்டுப் பால் உண்டு என்றாலும் சில வருஷங்களாகச் செய்யவில்லை. இந்த வருஷம் அதை மட்டும் பண்ணினேன். அதிக வேலை இல்லையே! ஆனால் கோலம் போட்டு நிமிர்வதற்குள் போதும் போதும்னு ஆகி விட்டது. உடம்பு சொகுசுக்கு இடம் கொடுத்துவிட்டது போலும்! :( 

பின்னர் சாயந்திரமாப் பாயசம் வைத்து வடையும் தட்டினேன். எதுவும் பண்ணவில்லை என்பது தெரிந்து எதிர்வீட்டு மாமி அவங்க பண்ணி இருந்த கைமுறுக்கு, தேன்குழல், உப்பு, வெல்லச் சீடைகளைக் கொடுத்தாங்க நிவேதனம் செய்யவென்று. கொஞ்சம் மனசுக்கு சாந்தி வந்தது. பண்டிகைக்கு எதையும் குறைக்காமல் முறுக்கு சீடைகளும் வந்து விட்டனவே. அவங்க வீட்டிலே தட்டை செய்ய மாட்டாங்க போல! அதனால் பரவாயில்லை! தேன்குழல் வந்ததே! பின்னர் நாங்க வாங்கிய பழங்களும், வெற்றிலை, பாக்கு, தேங்காய் ஆகியவற்றோடு அவல், வெல்லம், பால், தயிர், வெண்ணெய் பாயசம், திரட்டுப் பால், வடை ஆகியவற்றையும் வைத்துக் கிச்சாப்பயலுக்குக் காட்டியாச்சு. பல் முளைக்காததால் அவன் பாயசமும்,வடையும் போதும்னு சொல்லிட்டான்! :)))


ராமர் இல்லாமலா? ஒரு விளக்குக்கு 2 விளக்குப் போடவும் வெளிச்சம் அதிகம் ஆகி விட்டது. அது வராமல் எப்படி எடுப்பது என்று தெரியவும் இல்லை.



இதிலே வடை வைக்கவில்லை. பேசனில் ப்ளாஸ்டிக் கவரில் மாமி கொடுத்த பக்ஷணங்கள். பக்கத்தில் வெண்ணெய், பக்ஷணத்துக்கு வலப்பக்கம், பால், தயிர், முன்னால் பாயசம், அதன் பக்கம் அவல், வெல்லம், பின்னால் வெற்றிலை, பாக்கு, பழங்கள்


வடை சூடாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது.


வடையும் தயார். தேங்காயும் உடைத்து வைத்தாயிற்று. எல்லாமாகக் கிச்சாப்பயலுக்குக் கொடுத்தாச்சு. பலகையில் உட்கார்ந்திருக்கான் கிச்சாப்பயல். பூக்கள் அவன் முகத்தை மறைக்குது! 



Thursday, August 22, 2019

வாராது வந்த பணம்!

இங்கே
இங்கே
முதலில் நல்ல செய்தி! சில நாட்களுக்கு முன்னர் மேற்கண்ட சுட்டியில் கணினி மருத்துவர் பற்றி வருந்தி இருந்தேன். கிட்டத்தட்ட மேமாதம் 23 ஆம் தேதி நடந்த விஷயம். அதன் பின்னர் அவரிடம் கேட்கவே வேண்டாம்னு விட்டுட்டோம். இரண்டு நாட்களாகப் பழைய மடிக்கணினியில் பிரச்னை. ஜாவ ஸ்க்ரிப்ட் எரர்னு செய்தி வருது. என்ன செய்யறதுனு புரியாமல் நடப்பது நடக்கட்டும்னு அவரையே கூப்பிட்டேன்.முதல் இரு அழைப்புக்களுக்கு எடுக்கவே இல்லை. விடாமல் மூன்றாம் முறை கூப்பிடவும் எடுத்தார். அவரிடம் முதலில் எடுத்த எடுப்பிலேயே பணம் கேட்கக் கூப்பிடலைனு சொல்லிட்டுப் பிரச்னையைச் சொன்னேன். மத்தியானம் வரேன் என்று சொன்னார். எங்கே வரப் போகிறார்னு நம்ம ரங்க்ஸ் சொல்லிட்டுப் படுக்கப் போயிட்டார். ஆனால் இன்னிக்கு நம்ம உள்ளுணர்வு வருவார் எனச் சொல்லியது.  இருந்தாலும் அதற்கான தயார் நிலையில் எல்லாம் இல்லை. மத்தியானத்தில் சற்றுக் கால்களை நீட்டிப் படுத்த பின்னர் எழுந்து கணினியைப் போட்டால் அதே பிரச்னை தலை தூக்கியது. என்னடா செய்யலாம்னு யோசிக்கையில் வாசலில் அழைப்பு! அவரே தான்! உள்ளூர ஆச்சரியம் அடைந்தாலும் வரவேற்றுக் கணினியைக் காட்டினேன்.கணினியைப் பார்க்கையில் என்ன நினைத்தாரோ தெரியலை, சட்டைப்பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்துவிட்டுத் தாமதமானதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். கணினியில் பிரச்னையைப் பார்த்து சரி பண்ணிவிட்டதாகவும் சொன்னார்.

ஆனால் அவர் இருக்கையில் சரியாக வந்த கணினி அவர் போனதும் இப்போ மறுபடி ஜாவா ஸ்க்ரிப்ட் எரர் காட்டுகிறது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். போகட்டும். வராது என நினைத்திருந்த பணம் 3 மாதம் கழித்து வந்திருக்கிறது. அதுவே பெரிய விஷயம் இல்லையா? முதலில் ஏன் அப்படிப் பண்ணினார் என்று புரியவில்லை. இப்போ எப்படி மனம் மாறியது என்றும் புரியவில்லை.

இங்கே மெயிலில் தினம் தினம் 30 லட்சம் தனிப்பட்ட கடன் கொடுப்பதாக அழைப்பு. தொலைபேசித் தொல்லைகள் தனி! பென்ஷன் மட்டும் மாசம் பத்து லக்ஷம் கொடுப்பதாக ஒருத்தர் சொல்கிறார். இது எதற்கும் கவராத மனம் நம்ம பணம் வந்ததும் தான் அமைதி பெறுகிறது. லட்சமும், கோடியும் யாருக்கு வேண்டும்? நமக்கு உள்ளதே போதும். அதுவே அதிகம்!

Monday, August 19, 2019

வேலையில் சேர்ந்தேன்

வேலையில் சேர்ந்தேன் 1
பஸ்ஸுக்குள் கடுமையான வாக்குவாதம். எல்லாம் என்னை எங்கே இறக்கி விடுவது என்றுதான். பஸ்ஸில் இருந்த எல்லாரும் ஆட்சேபித்தார்கள், நான் காலரா ஆஸ்பத்திரியில் இறங்குவதற்கு. அந்தப் பொண்ணு ஊருக்குப் புதுசு போல இருக்கு. எங்கேயோ போய் எப்படி வழி தேடும்? என்று பேசிக் கொண்டார்கள். எனக்கு பயம் அதிகரித்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. அப்போது ஒரு பெண்மணி பஸ்ஸில் ஏறினார். அவர் ஏதோ இடம் சொல்லி டிக்கெட் வாங்கிக் கொண்டு உட்கார்ந்த சமயம் பஸ்ஸில் எல்லாரும் பேசிக் கொள்வதைப் பார்த்து விட்டு என்ன விஷயம்? என்று கேட்டார். .உடனே ஆளாளுக்குப் பேச ஆரம்பித்தார்கள் என்னைத் தவிர. அந்தப் பெண்மணி விவரம் புரியாமல் பேசாமல் உட்கார்ந்திருந்த என்னிடமே விவரம் கேட்க நான் அரை மனதுடன் என்னைப் பற்றிச் சொன்னேன். உடனேயே அந்தப் பெண்மணி, "அட, கரண்ட் ஆஃபீஸா? நாங்க அங்கே தான் பணம் கட்டுறோம். எங்க வீடு இருக்கும் தெருவுக்குப் பின்னாலே சந்திலே இருந்து மெயின் ரோடுக்குப் போகலாம். அந்தச் சந்து முனையிலேதான் இருக்கு ஆஃபீஸ். மெயின் ரோடிலே போனால் பணம் கட்டுமிடமும், சந்து முனையிலே ஆஃபீஸும் இருக்கு. ஆஃபீஸரைப் பார்க்கறதுனா அப்படித்தான் போகணும்."என்றாள். எனக்கு உயிர் வந்தது. "கொஞ்சம் நான் இறங்க வேண்டிய ஸ்டாப் சொன்னீங்கன்னா" நான் இழுத்தேன். அதுக்குள் அந்தப் பெண்மணி, "அது என்ன அப்படிச் சொல்லிட்டே? உன்னைத் தனியாப் போக விடுவேனா? நான் இறங்கும் போது கூட இறங்கு. நான் உன்னைக் கொண்டு விடறேன்." என்றாள்.

அரசுப் பேருந்து க்கான பட முடிவு

பஸ் கண்டக்டரில் இருந்து எல்லாருக்கும் நிம்மதி. நான் அந்தப் பெண்மணியுடன் இறங்கினேன். திருவொத்தியூர் ஹை ரோடுக்கு இணையாக அதன் பின்னால் உள்ள ஒரு ரோடில் இறங்கினோம். அங்கிருந்து ஒரு 10 நிமிஷ நடை. உடனே ஆஃபீஸ் வந்து விட்டது. அந்தப் பெண்மணி சொன்ன மாதிரி சந்து முனையில் ஆஃபீஸ் நுழையும் இடம். மெயின் ரோடில் பணம் கட்டும் கவுண்ட்டர் முதலியன இருந்தன. என்னை விட்டு விட்டு அந்தப் பெண்மணி போய் விட்டார். ஆஃபீஸில் நுழைந்ததும் உடனேயே முதலில் ஆஃபீஸர் அறை வந்ததால் நேரே அங்கே போய் என் கடிதத்தைக் காட்டியதும் அவர் பார்த்து விட்டு,"அப்போவே மெயின் ஆஃபீஸில் இருந்து நீங்கள் வரப் போகும் செய்தி வந்தது. ஏன் இத்தனை நாழி? திரும்ப அம்பத்தூர் போயிட்டு வரீங்களா?" என்றார். "இடம் தெரியவில்லை. அலைந்தேன்." என்று சொன்னதும், உடனே அவர்,"மெயின் ஆஃபீஸை விட்டு வெளியே வந்தால் உடனே அங்கேயே பஸ் நிற்குமே?" என்றார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. "பக்கத்தில் ஆர்ட்ஸ் காலேஜ் ஸ்டாப் தான் இருக்கிறது." என்றேன். "அங்கே இருந்துதான். திருவொத்தியூர் போகும் பஸ்ஸில் அங்கே ஏறினால் தண்டையார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் வாசலில் இறங்கினால் நேரே ஆஃபீஸ்." என்றார்.

என் அசட்டுத்தனத்தை நினைத்து நொந்து போனேன். அங்கே நான் பார்க்கும் சமயம் பஸ் எதுவும் இல்லை. அதனாலும் அங்கே இருந்து பஸ் கிளம்பும் என்பது தெரியாத காரணத்தாலும் அங்கே கேட்கவே எனக்குத் தோன்றவில்லை. சரி, என்று என் கணவருக்கு போன் செய்யப் போனேன். அதற்குள் joining report டைப் செய்து வரவே அதில் கையெழுத்துப் போட்டேன். "கீதா சாம்பசிவம்" என்று. இந்த மாதிரிக் கையெழுத்து முதல் முதலாக அன்று தான் அவர் பெயரையும் சேர்த்துப் போட்டேன். ஆனால் நான் கொடுத்த joining report மறுநாளே திரும்பி விட்டது. ஙேஏஏ! என்னவென்று விசாரித்தால் ஒரு மெமோ (வேலையில் சேர்ந்த மறுநாளே மெமோ வாங்கிய ஒரே ஊழியர் நானாகத் தான் இருக்கும்.) வந்தது. கையெழுத்து வாங்கிக் கொண்டு கொடுத்தார்கள். அதைப் பிரித்துப் பார்த்தால் நாங்க தேர்ந்தெடுத்தது என்.ஆர்.கீதாவை. ஆனால் இங்கே கையெழுத்தில் கீதா சாம்பசிவம்னு போட்டு வந்திருப்பதால் இந்த ஜாயினிங் ரிபோர்ட் செல்லாது. என்.ஆர். கீதா கையெழுத்துடன் வந்தால் தான் செல்லும் என்று சொல்லிவிட்டார்கள்.


அது வரைக்கும் எல்லோரும் சொன்னது கல்யாணம் ஆனால் தானாகப் பெண்களின் பெயரோடு கணவன் பெயர் இணைந்துவிடும் என்று தான். சரினு நானும் அப்படித் தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் என்னோட அசலான சான்றிதழில் என்.ஆர்.கீதா என்று கொடுத்திருப்பதாலும் நானும் அந்தப் பெயரில் தான் தேர்வு எழுதி பேட்டிகள் எல்லாம் கொடுத்து வேலைக்கான உத்தரவும் அந்தப் பெயருக்குத் தான் வந்திருந்தது. ஆகவே என்னுடைய மேலதிகாரி அந்தப் பெயரில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கும்படி சொல்லிவிட்டு கணவர் பெயரைச் சேர்த்துக் கையெழுத்துப் போடவேண்டுமெனில் முதலில் அரசுக்கு விண்ணப்பம் செய்து அவங்க முறைப்படி விண்ணப்பப் படிவம் அனுப்பினதும் அதில் கேட்டிருக்கும் தகவல்களைக் கொடுத்து என் பெயரை மாற்ற வேண்டும் என்று விண்ணப்பித்தால் ஆறு மாதத்துக்குள் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அரசாங்க கெஜட்டில் வரும் என்றும் நமக்குத் தேவையானால் தினசரிகளிலும் கொடுத்துக் கொள்ளலாம் என்றும் சொன்னார்.  அப்பாடி. பெருமூச்சு விட்டு விட்டு இந்தப் பெயரிலேயே இப்போதைக்குத் தொடரலாம் என முடிவு செய்தேன். நம்ம ரங்க்ஸ் இதைச் சொன்னப்போக் கேட்டுக் கொண்டார். மற்றபடி ஏதும் சொல்லவில்லை. ஆனால்  இந்த விஷயம் ஏதோ நான் தான் தானாக முடிவு எடுத்தேன் எனப் புக்ககத்தில் அனைவரும் நினைக்கும்படி ஆயிற்று.பல வருடங்களுக்கு யாரும் நம்பவில்லை. அவங்களுக்கே ஒரு முறை இப்படி வந்ததும் தான் நம்பினார்கள். எப்படியோ பல தடங்கல்களுக்கு இடையில் வேலையில் சேர்ந்தாச்சு.மாலை 4-30க்கு வேலையில் சேர்ந்த முதல் ஆள் நானாகத்தான் இருக்கும். 5 மணிக்கு ஆஃபீஸ் முடிகிறது. இவருக்கு ஆஃபீஸ் 3-30க்கே முடிந்து விடும். ஆகையால் எங்கே போன் செய்வது என்றும் புரியவில்லை. அதற்குள் மேலே என்னுடைய இடத்திற்கு அழைத்துப் போனார்கள். நான் மாடி ஏறும்போது வெளியில் இருந்து வந்தது யார் என்கிறீர்கள்? என் கணவர்தான். எப்படி வந்தார்? எனக்கும் ஆச்சரியம்தான்.

 வேலையில் சேர்ந்தேன் 2

என் கணவரைத் திடீரென்று அங்கே பார்த்ததில் எனக்கு ஆச்சரியம். எப்படி வந்தார்? நான் எதுவும் கேட்கவில்லை. அவர் என்னிடம் "joining report" கொடுத்தாச்சா? "என்று கேட்டார். நான், "ம்ம்ம்" என்று சொல்ல "சரி, மணி 5 ஆகி விட்டது. வீட்டுக்குப் போகலாம்." என்று சொல்ல நானும் கிளம்பினேன். அங்கிருந்து செண்ட்ரல் போய்ப் பின் செண்ட்ரலில் இருந்து ரெயிலில் போனோம். வீட்டுக்கு வந்ததும் தான் என் நாத்தனார் என்னிடம், "ஆஃபீஸ் போனதும் அண்ணாவுக்கு ஃபோன் செய்யவில்லையா?" என்று கேட்டாள். நான் பதில் சொல்வதற்குள் அவளே "உங்களிடமிருந்து தகவல் இல்லாததால் அண்ணா சீக்கிரம் வீட்டுக்கு வந்து என்னைக் கேட்டு விட்டுப் பின் ஆஃபீஸ் போய்ப்பார்ப்பதாகச் சொன்னார்." என்று சொன்னாள். பிறகுதான் தெரிந்தது, அவர் மெயின் ஆஃபீஸுக்குப் ஃபோன் செய்து விசாரித்து விட்டு நான் தண்டையார்பேட்டை ஆஃபீஸில் ஜாயின் பண்ணும் விவரம் தெரிந்து கொண்டு தண்டையார்பேட்டை வந்த விவரம். மறுநாளில் இருந்து எப்படிப் போவது என்று புரியவில்லை. என் கணவர் அவர் அலுவலகத்தில் விசாரிப்பதாகவும் அதுவரை செண்ட்ரலில் இருந்து போய் வருமாறும் சொன்னார். அங்கே என் அலுவலகத்தில் இருந்த எல்லாரும் மிண்ட், தண்டையார்பேட்டை, ராயபுரம், மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்தவர்கள். யாரும் இவ்வளவு தூரத்தில் இருந்து வரவில்லை. மறுநாள் செண்ட்ரல் போயே போ என்று என் கணவர் சொன்னதால் அப்படியே போனேன். சிலர் வீடு மாற்று என்றார்கள்.

ரயில் க்கான பட முடிவு

அப்போதெல்லாம் அம்பத்தூருக்குக் கரி இஞ்சின் தான்! உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் உஸ்ஸ்ஸ் எனப் பெருமூச்சு விட்டுக் கொண்டு வரும். அதில் சென்ட்ரல் வரை போய்ப் பின்னர் அங்கிருந்து வால்டாக்ஸ் ரோடில் பேருந்தைப் பிடித்துப் போக வேண்டும்.  அப்போது பனிரண்டு அல்லது பதின்மூன்றாம் நடைமேடையில் தான் இந்த வண்டிகள் எல்லாம் நிற்கும். அங்கிருந்து வால்டாக்ஸ் ரோடு ஒரு மைலாவது இருக்கும். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்  அது வரை நடக்கணுமே! ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி யோசனை கொடுத்தார்கள். வால்டாக்ஸ் ரோடில் பஸ்ஸில் இருந்து இறங்கிப் பின் லோக்கல் வண்டியைப் பிடிக்க வெகு தூரம் தினமும் நடக்க வேண்டும். அதிலேயே ஒரு வண்டி போய் விடும்.இந்த மாதிரிக் கொஞ்ச நாள் போனதும் என் சிநேகிதி ஒருத்தித் தினமும் பெரம்பூரில் இருந்து வருவாள். அவள், "பெரம்பூர் வழியாகத் தானே இந்தப் பேருந்து வருகிறது. நீ பெரம்பூரில் இறங்கு. நாம் இருவரும் சேர்ந்து போகலாம். நீ ரெயிலில் வரும் நேரம் வரை நான் காத்திருப்பேன்." என்று சொல்ல மறு நாளில் இருந்து நான் பெரம்பூரில் இறங்கிப் போக ஆரம்பித்தேன். ஒரு நாள் வீட்டில் ஏதோ வேலை. கொஞ்சம் நேரம் ஆகிவிட்டது. 9-15 வண்டியை விட்டு விட்டேன். அடுத்த வண்டியில் தான் போனேன். சேர்ந்த புதிது. நேரம் கழித்துப் போனால் என்ன சொல்வார்களோ என்ற பயம் வேறு. கவலையுடன் உட்கார்ந்திருந்தேன். கூட இருந்தவர்கள் எல்லாம் பயப்படாதே என்று சொன்னாலும் மனம் கேட்கவில்லை. பெரம்பூரும் வந்தது. ரெயில் வேகம் குறைய ஆரம்பித்தது. நான் இறங்கத் தயார் ஆனேன். அப்போது ஒரு வினாடி ரெயில் நின்றதும், நான் ஒரு காலைக் கீழே வைத்து இறங்க முயன்றேன். வண்டி outer-ல் இருந்திருக்கிறது. அதைக் கவனிக்கவில்லை. வண்டி சட்டென்று ஒரு குலுக்கலுடன் முன்னே போக நான் வண்டியில் இருந்து கீழே விழுந்து நடைமேடையில் உருண்டேன்.

Friday, August 16, 2019

நான் வேலைக்குப் போனேன்

நான் வேலைக்குப் போனேன்

கோமதி அரசு கேட்டதன் பேரில் ஆரம்ப காலத்தில் எழுதிய இந்தப் பதிவை இங்கே மீள்பதிவாகப் போடுகிறேன்.

நான் மின்வாரியத்தில் வேலைக்குப் போனது பற்றி ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன். அது கல்யாணத்துக்கு முன்னேயே பரிக்ஷை எழுதி நேர்முகத்தேர்வும் முடிந்து தேர்ச்சி பெற்றுவிட்டு பணியில் சேரும் தேதிக்காகக் காத்திருந்த நேரம் திடீரென்று 15 நாளில் கல்யாணம் ஆகி அதன் பின் ஒரு மாதத்தில் எல்லாம் சென்னை வந்து, அம்பத்தூரில் குடித்தனமும் தொடங்கியாச்சு. அதற்கு அப்புறம்தான் பரமக்குடிக்குப் போய் வேலையில் சேரச்சொல்லி உத்தரவு வந்தது. மதுரைன்னாலும் பரவாயில்லை. பரமக்குடினா என்ன செய்யறது? பாட்டியோட பிறந்த ஊர். ஆனால் யாரும் தெரிஞ்சவங்க கிடையது. அப்பா அந்த உத்தரவை அப்படியே எங்களுக்குத் திருப்பி இருந்தார். அதை எடுத்துப் போய் மின்வாரியச் சேர்மனைப் போய்ப்பார்த்து விவரம் சொல்லிச் சென்னைக்கு மாற்றல் கேட்டு அதுவும் வந்து விட்டது. ஆனால் எங்கே போய்ச் சேருவது என்று எந்த விவரமும் அதில் குறிப்பிடவில்லை. மவுண்ட் ரோடு ஆஃபீஸில் இருந்து வந்திருந்தது. மேலும் அங்கே தான் போய்ச் சேர்மனைப் பார்த்து பேட்டி கொடுக்கவும் போனோம். ஆகையால் அங்கேயே போய்க் கேள் என்று சொல்லி விட்டு என் கணவர் அவர் ஆஃபீஸ் கிளம்பினார். அப்போதுதான் ஊரில் இருந்து வந்திருந்தோம். அன்றுதான் அவர் மறுபடி வேலையில் விடுமுறை முடிந்து சேருவதால் மறுபடி விடுமுறை போட முடியாது. ஆதலால் "நீ தான் உன் சித்தி வீட்டில் இருந்திருக்கிறாயே! சென்னை ஒன்றும் புதிது இல்லை. போய்ப் பார்த்துவிட்டு எனக்கு ஒரு போன் செய்." என்று கூறினார். நானும் பெரிசாகத் தலை ஆட்டி விட்டேன். என் கடைசி நாத்தனார் வேறே அப்போ எங்களுடன் இருப்பதற்கு வந்திருந்தாள். அவளுக்கு முன்னால் எனக்குத் தெரியாது என்று எப்படிக்கூறுவது? பேசாமல் இரண்டு பேரும் கிளம்பினோம். அம்பத்தூரில் ரெயில்வே ஸ்டேஷனில் சென்னை ரிட்டர்ன் டிக்கெட் எடுத்து என்னிடம் கொடுத்துவிட்டு, "ஜாக்கிரதை! போனதும் போன் பண்ணு." என்றார். அவர் ஆவடிப்பக்கம் போக நான் எதிர்திசை வண்டிக்குக் காத்து நின்றேன்.

***********

சித்தி வீட்டில் இருந்தேனே ஒழிய எங்காவது போக வேண்டும் என்றால் முப்பாத்தம்மன் கோவில், அல்லது தி.நகர் போஸ்ட் ஆஃபீஸ். இதோடு சரி. என் தம்பிகளை பள்ளியில் இருந்து அழைத்துவர எப்போவாவது சித்தி அனுப்புவார். அதுவும் ராமகிருஷ்ணா பள்ளியைச் சேர்ந்த சாரதா வித்யாலயா. அப்போது இருபாலாரும் படிக்கும் பள்ளியாக இருந்தது. அது கூடச் சில சமயம் சித்தியும் வருவார். திருவல்லிக்கேணியில் என் பெரியப்பா இருந்தார். அவர் திருமணம் ஆகாதவர் என்பதாலும், அவர் தங்கி இருந்தது மான்ஷன் என்று அழைக்கப்படும் அறை மாதிரி என்பதாலும் அவருடன் தங்காமல் சித்தியிடம் தங்கினேன். பெரியப்பா இருந்த வீட்டில் 10 பேர் அது மாதிரி தங்கி இருந்தார்கள். அங்கே போவது என்றால் முன்கூட்டியே பெரியப்பா சொல்வார்,. இந்தத் தேதிக்கு வா என்று. அப்போது போவேன். நேரே 13-ல் ஏறினால், "ரத்னா கஃபே' எதிரே உள்ள ஸ்டாப்பில் இறங்கினால், ரத்னா கஃபே பக்கத்துதெரு சாமிப்பிள்ளை தெருவில் பெரியப்பா இருந்தார். இப்போ ரத்னா கஃபே இருக்கா தெரியாது. அங்கே போனால் பெரிய தெரு பிள்ளையாரைப் பார்த்து ஒரு "ஹாய்" சொல்லிவிட்டுப் பார்த்தசாரதியிடம் செளக்கியம் விசாரித்துவிட்டு, பாரதி இருந்த தெரு வழி வந்தால் பெரியப்பா சாப்பிடும் மாமி மெஸ். சில சமயம் அங்கே, சில சமயம் ரத்னா கஃபே, சிலசமயம் ராயர் மெஸ் என்று ஏதாவது சாப்பிட வாங்கிக் கொடுப்பார். அவர் தண்ணீர் கூடக் குடிக்க மாட்டார்.திருவல்லிக்கேணியில் இருந்து திரும்ப கோஷா ஆஸ்பத்திரி வாசலில் ஏற்றி விட்டால் தி.நகர். சிலசமயம் பெரியப்பாவும் கூட வருவார். இந்த மாதிரி போய்விட்டு நான் என்ன சென்னையைப் புரிந்து கொள்வது? உண்மையில் ஒன்றும் புரியவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருந்தது.

**********

செண்ட்ரலில் இறங்கி வெளியே வந்து, மவுண்ட் ரோடுக்கு எந்த பஸ் போகும் என்றால் எல்லாரும் விசித்திரமாய்ப் பார்த்தார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. "என்ன, எதுவும் போகாதா?" என்று அப்பாவியாய்க் கேட்டேன். உடனே ஒருத்தர் வந்து "என்னம்மா, ஊருக்குப் புதுசா?" என்றார். கதைகளில் படித்த ஏமாற்று வேலைகள் நினைவுக்கு வரவே நான் பதிலே பேசவில்லை. எல்லா பஸ்ஸும் மவுண்ட் ரோடு வழியாத்தான் போகும்னு அப்புறம் தான் தெரிஞ்சது. கையில் ஒரு முறை அட்ரஸைப் பார்த்துக் கொண்டேன். வரும் வண்டியில் ஏறலாம் எனத் தீர்மானித்து ஏதோ ஒரு வண்டியில் ஏறினேன். கடவுளே, அது பாதியில் திரும்புமாம், வேறு வழியில் போய் விடும். மின்வாரியம் வரை போகாதாம். மவுண்ட் ரோடு போஸ்ட் ஆஃபீஸில் இறக்கி விட்டார்கள். அங்கே இருந்து மறுபடி பஸ் பிடித்து இம்முறை கண்டக்டரிடம் முன் கூட்டிச் சொல்லி வைத்து விட்டதால் ஸ்டாப் வந்ததும் இறங்கினேன். உள்ளே போனால் ஒரே சமுத்திரம். ஆட்கள் வருவதும், போவதுமாக இருக்கிறது. யாரை என்ன கேட்பது என்று ஒன்றும் புரியவில்லை. திகைப்புடன் ஒரு ஊழியரிடம் போய் எனக்கு வந்த கடிதத்தைக் காட்டினேன். அவர் யாரிடமோ சொல்ல அவர் வேறு யாரையோ கூப்பிட ஒரு வழியாக நான் போக வேண்டிய செக்க்ஷனுக்குள் போனேன். அங்கே உள்ள அதிகாரியிடம் என் கடிதத்தைக் காட்டினேன். அவர் என்னிடம் "முதல் நாள் தனியாவே வந்திருக்கியே? சென்னை பழக்கமா? உன் ஊர் மதுரைனு போட்டிருக்கே?" என்று கேட்க நான் அவரிடம் எல்லா விவரமும் சொன்னேன். "நீ அம்பத்தூரில் இருந்து வரியா? அப்போ DCA/Chennai office அல்லது DCA/Royapuram இரண்டில் ஒன்று சரியாக இருக்கும். எது உனக்குச் சரியாக இருக்கும்?" என்றார். எனக்கு இரண்டுமே எங்கு இருக்கிறது என்று தெரியாது. ஆகவே சும்மா இருந்தேன். அதற்குள் அவரே "DCA/Royapuram messenger இப்போ தான் வந்தார். அங்கே ஆள் இல்லாமல் ரொம்பக் கஷ்டமா இருக்காம். நீ அவர் கூடவே போயிடு." என்றார். நானும் "சரி" என்றேன். உடனே ஒரு லெட்டெர் டைப் செய்து கொடுத்தார். "அந்த மெசெஞ்சர் வெளியிலே இருப்பார் பாரு", என்றார். அதற்குள் ஒருத்தர் "அவர் அப்போவே போயிட்டார் சார்". என்றார். "சரி, நீ எப்படிப் போவே?" என்றார் என்னிடம். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டு வெளியில் வந்தேன்.பைத்தியக்காரத் தனமாக ஆஃபீஸ் இருக்குமிடம் கேட்கவில்லை. மறுபடி உள்ளே போனேன். கேட்டதற்கு ராயபுரம் ஸ்டேஷனில் இருந்து நடக்க முடிந்தால் நடக்கலாம் என்றார்கள். அவர்கள் நினைத்தது அம்பத்தூரில் இருந்து தினமும் போக நான் கேட்பதாக. ஒருத்தர் பேசின் பிரிட்ஜ் சிபாரிசு செய்தார். இன்னொருத்தர் செண்ட்ரல் தான் நல்லது என்றார். ஆகவே ஒவ்வொருத்தர் ஒவ்வொன்று சொல்லவே குழம்பிப்போய் வெளியில் வந்த நான் பீச் செல்லும் வண்டியில் ஏறி உட்கார்ந்தேன். கண்டக்டரிடம் ராயபுரத்துக்கு டிக்கெட் கேட்க அவர் "இது போகாது." என்று சொன்னார். "எங்கே போகிறது?" நான்.

"செகண்ட் லைன் பீச்." கண்டக்டர்.

"சரி, அங்கேயே கொடுங்கள்." நான்.

பஸ் போய்க் கொண்டிருந்தது. மணி ஏற்கெனவே மத்தியானம் 12க்கு மேல் ஆகி விட்டது.

Thursday, August 15, 2019

அனைவருக்கும் இனிய சுதந்திர தின, ரக்ஷாபந்தன் தின வாழ்த்துகள்!

தேசிய கொடி க்கான பட முடிவு

அனைவருக்கும் இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள். சுதந்திர தினத்தன்று பிரதமர்  தில்லி செங்கோட்டையில் கொடி ஏற்றுவார். சுதந்திரம் வந்த பின்னரும் அரசியல் சாசனம் முறைப்படுத்தப் படாத காரணத்தினால் அப்போது பிரதமர் தான் நாட்டின் முதல் குடிமகனாக அறியப்பட்டார். என்ன தான் குடியரசுத் தலைவர் என்ற பெயரில் சில நாட்கள் மவுன்ட்பேட்டன் பிரபு இருந்தாலும் சுதந்திரக் கொடியைப் பிரதமர் தான் ஏற்றுவார். அதன் பின்னர் அரசியல் சாசனம் வடிவமைக்கப்பட்ட பின்னர் குடியரசாக இந்தியா அறிவிக்கப்பட்டதும் ஜனவரி 26 ஆம்  நாள் குடியரசு தினமாகவும் அறிவிக்கப்பட்டதும் குடியரசுத் தலைவர் தில்லி ராஜபாட்டையில் உள்ள மைதானத்தில் கொடி ஏற்ற ஆரம்பித்தார்.

சுதந்திர தினக்கொடியைக் கீழிருந்து மேலே ஏற்றிக் கொடியை அவிழ்த்துப் பறக்க விடுவார்கள். இது தான் அன்றைய தினத்துக்கான கொடி ஏற்றும் முறை. குடியரசு தினத்தன்று கம்பத்தின் உச்சியில் கட்டப்பட்டிருக்கும் கொடியை அவிழ்த்துப் பறக்கவிடுவார் குடியரசுத் தலைவர். அன்றைய தினம் அப்படி தான் கொடியைப் பறக்கவிடவேண்டும். இது தான் சுதந்திர தினத்துக்கும், குடியரசு தினத்துக்கும் உள்ள வேற்றுமை.

நேற்று வங்கிக்குச் சென்றிருந்த போது அங்கேயும் இன்றைய நாளுக்கான அலங்காரம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. இன்னமும் 2,3 கடைகளுக்குச் சென்றபோதும் சுதந்திர தின அலங்காரங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தது மனதில் மகிழ்ச்சியை ஊட்டியது..

இன்றைய தினம் வடமாநிலங்களில் ரக்ஷாபந்தன் என்னும் சகோதரன், சகோதரிகள் கொண்டாடும் பண்டிகை. சகோதரனுக்கு சகோதரி ரக்ஷாபந்தன் கயிறு வலக்கையில் கட்டி விடுவாள். சகோதரி சிறியவளானால் ஆசிகளோடு வெகுமதியும், பெரியவளானால் நமஸ்காரங்களோடு வெகுமதியும் சகோதரர்களால் கொடுக்கப்படும். இன்றைய நாள் மிக முக்கியமான நாள் அவர்களுக்கு.  இந்த ரக்ஷாபந்தன் குறித்த புராண/இதிகாசக் கதை என்னவெனில் ஒருமுறை யாதவர்களின் எதிரிகளுடன்  நடந்த போரில் கிருஷ்ணரின் ஆள்காட்டி விரலில் காயம்பட்டு ரத்தம் வழிந்தது. அந்தக் காயத்தோடு வந்த அவருக்கு திரௌபதி தன் சேலை முந்தானையில் ஒரு பக்கத்தைக் கிழித்து மருந்திட்டுக் கட்டினாள். அதைக் கிருஷ்ணர் மறக்கவே இல்லை. அதன் காரணமாகவே திரௌபதி கௌரவர் சபையில் மானபங்கப்படுத்தப்பட்டபோது அவளுக்குத் துணியை மேன்மேலும் அனுப்பிக் கிருஷ்ணர் காப்பாற்றினார் என்பது ஐதிகம். இந்த நிகழ்வே வடக்கே ரக்ஷாபந்தனாகக் கொண்டாடப்படுகிறது. திரௌபதியைத் தன் சகோதரியாகக் கிருஷ்ணர் ஏற்றுக் கொண்டிருந்தார். அந்த சகோதர பாசத்தை வெளிப்படுத்தவே அதன் பின்னர் ஒவ்வொரு ஆவணி மாதப் பௌர்ணமி தினமும் ரக்ஷாபந்தனாகக் கொண்டாடப்பட்டு வருவதாகச் செவி வழிக்கதைகள் சொல்கின்றன.

அதன் பின்னர் முகலாய சாம்ராஜ்யத்தின்போது ராணி கர்ணாவதி ராஜஸ்தான் மாநிலத்தின் சித்தூரின் ராணியாக இருக்கையில் குஜராத்தின் சுல்தான் ராஜஸ்தானின் சித்தூரின் மேல் படை எடுத்ததாகவும், தன்னைக் காப்பாற்ற வேண்டி அப்போது தில்லி சுல்தானாக இருந்த ஹுமாயூனுக்கு ராணி கர்ணாவதி ரக்ஷாபந்தன் கயிறை அனுப்பி உதவி கேட்டதாகவும் ரக்ஷாபந்தன் கயிறைப் பார்த்த ஹுமாயுன் ராணியைக் காக்க வேண்டி வந்ததாகவும் அதற்குள்ளாக குஜராத்தை ஆண்ட பகதூர்ஷா ரத்னாவதியை வெற்றி கொண்டுவிட்டதாகவும் கர்ணபரம்பரைக் கதைகள் சொல்கின்றன.  இந்தப் பண்டிகை வடநாட்டுக்கு மட்டுமே உரியது அல்ல! எல்லோரும் கொண்டாடும் பண்டிகையே.

தமிழ்நாட்டுப் பெண்கள் எப்போவோ வட மாநிலத்து உடையான சல்வார், கமீஸ் மற்றும் சுரிதார், மேலே அணியும் உடையை ஏற்றுக் கொண்டு விட்டனர். எண்பதுகளில் ஆங்காங்கே இங்கே ஒன்றும் அங்கே ஒன்றுமாகப் பார்க்க முடிந்த இந்த உடை இப்போது சர்வ தேச உடையாக மாறிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதோடு நம் கல்யாணங்களில் நடக்கும் வரவேற்பு நிகழ்வில் மணப்பெண் குஜராத்தி முறையில் சேலை கட்டிக் கொண்டோ, ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் முறையில் காக்ரா, சோளியுடனோ தான் வருகின்றனர். அதைத் தவிரவும் "சங்கீத்" என்னும் வட இந்திய நாட்டிய நடன நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மாப்பிள்ளை அழைப்பில் வட இந்தியக் கல்யாணங்களில் நடைபெறும் "பராத்" நிகழ்வு போலவே இங்கேயும் நடத்துகின்றனர். உணவு வகைகளில் கேட்கவே வேண்டாம். முன்னெல்லாம் மாப்பிள்ளை அழைப்பில் கொடுக்கும் உணவுகளான வெங்காய சாம்பார், எலுமிச்சை ரசம், சேமியா பாயசம், ஆமவடை, போளி எல்லாம் போய் இப்போது ஆங்காங்கே ஸ்டால்கள் நிறுவி வட இந்திய உணவு வகைகளான சாட் மசாலாக்கள், பஞ்சு மிட்டாய் வகைகள், பெண்களுக்கு அங்காங்கே "மெஹந்தி இடுதல்" என்னும் வட இந்திய முறையில் மருதாணி வைத்தல், வளையல் ஸ்டால், ஜூஸ் வகைகள், காஃபி, டீ வகைகள் என ஒவ்வொன்றுக்கும் ஸ்டால்.

அதைத் தவிர்த்தும் உணவுகளில் கேட்கவே வேண்டாம். அநேகமாகக் கலந்த சாத வகைகள் இருந்தாலும் அவற்றில் சாம்பார் சாதம் மட்டுமே நம் தென்னிந்திய உணவு. மற்றவை புலவு, ஜீரா ரைஸ், வெஜிடபுள் பிரியாணி, சனா மசாலா, பூரி அல்லது பட்டுரா, பராத்தா அல்லது சப்பாத்தி, வெங்காயப் பச்சடி, சின்னப் பேப்பரில் சுற்றப்பட்ட பாதாம் அல்வா அல்லது பாசுந்தி அல்லது ரஸ்மலாய் போன்ற வட இந்திய உணவு வகைகளும் இனிப்பு வகைகளுமே! இப்போது இளைஞர்கள் ஹிந்தியைத் திணிக்கிறதாச் சொல்லிக் கொண்டிருந்தாலும் ஒருத்தருக்கொருத்தர் அழைத்துக் கொள்வது "ஜி" போட்டே! ஆகவே நாம் ரக்ஷாபந்தன் பண்டிகையைக் கொண்டாடாவிட்டாலும் கொண்டாடுபவர்களுக்கு நம் வாழ்த்துகளைச் சொல்லலாமே! தப்பில்லை அல்லவா?




Tuesday, August 13, 2019

காவிரிக்குச் சீர் கொடுக்கும் அரங்கன்!


இந்த அலங்காரத்தில் தான் அரங்கன் இன்று பல்லக்கில் எழுந்தருளியிருந்தான்.


கோனார் சத்திரத்தின் உள்ளே அரங்கன்! 

இம்முறை ஆடி பதினெட்டில் அரங்கன் காவிரிக்கரைக்கு வரவில்லை. ஆகவே ஆடி 28 வருவான் என நிச்சயமாய்த் தெரிந்தது. நேற்றே மண்டகப்படிக்காரர்கள் அவரவர் மண்டபங்களைச் சுத்தம் செய்து பந்தலெல்லாம் போட்டு அரங்கன் வருகைக்கு ஆயத்தங்களைச் செய்திருந்தார்கள். இன்று காலை அரங்கன் வரப்போகிறான் எனத் தெரிந்ததும் வழக்கமாய் வரும் பத்து அல்லது பதினோரு மணிக்குள் வருவான் என நினைத்தேன். ஆனால் பக்கத்துத் தெருவில் யாரோ இறந்து போனதால் அவரை இந்தத் தெருவழியாகத் தான் அழைத்துச் செல்லவேண்டும் என்பதால் அரங்கன் வருமை தாமதம் என்று சொன்னார்கள்.  சரினு சாதம் வடித்துக் கொண்டு காடரிங் சமையல் வந்ததும் சாப்பாடும் சாப்பிட்டுவிட்டோம். அதற்குள்ளாக வாட்சப்பில் அரங்கனின் இன்றைய அலங்காரம் படம் யாரோ எடுத்ததை எனக்கு எவரோ அனுப்பி வைக்க அதை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டேன். அரங்கன் திறந்த பல்லக்கில் வந்தால் நன்றாய்ப் பார்க்கலாம். எப்படி வரப் போகிறானோ!

சுமார் பதினொன்றரை மணி அளவில் கீழே சென்றேன். அரங்கன் இன்னமும் அங்குள்ள ஓர் கல்யாண மண்டபம் தாண்டவில்லை என்றார்கள். சற்று நேரத்தில் அருகே வந்து கொண்டிருப்பதாகத் தகவல் வரவே ரங்க்ஸை அலைபேசி மூலம் கீழே அழைத்தேன். குடியிருப்பு வாசிகளில் பலர் வந்து உட்கார்ந்து காத்துக் கொண்டிருந்தனர். ரங்க்ஸ் வந்ததும் அரங்கனை எதிர்கொண்டு போய்ப் பார்க்கலாம் என்று சொன்னார். சரினு அவரோடு கிளம்பி எங்க தெருவிலேயே எங்க குடியிருப்பு வரிசையிலேயே இருந்த ஓர் மண்டகப்படி (கோனார் சத்திரம் என்கின்றனர்)யில் அரங்கன் இருக்க அங்கே போனோம். பெரிய பல்லக்கு! தூக்குவதற்கே 20,30 பேர் இருக்கும். அரங்கனுக்கு வெயில் அதிகமானால் மறைக்கப் போர்வைகளுடன் 2,3 பேர்கள். குடையுடன் நாலு பேர்! அதைத் தவிர இந்த வருடம் தலைமை பட்டரே வந்திருந்தார், பட்டாசாரியார்கள் ஏழு, எட்டுப் பேர். அரங்கன் பரிவாரங்களே சுமார் 50 பேர். அதைத் தவிர்த்தும் தெருவில் உள்ள மக்கள் கூட்டம். அக்கம்பக்கம் தெருக்களில் இருந்தெல்லாம் பார்க்க வந்த கூட்டம் எனக் கூட்டம் அலை மோதியது.

என்றாலும் விடாமல் உள்ளே போய் அரங்கனைப் பார்த்தேன். திருப்தியாக இல்லை. அரங்கன் கூடவே நடந்து அடுத்த மண்டகப்படிக்கும் போய்ப் பார்த்தேன். பின்னர் இன்னமும் அரங்கனுடன் நடந்து எங்க பக்கத்து வீட்டு மண்டகப்படிக்கு வருவதையும் பார்த்தேன். படமா? ம்ஹூம், வாய்ப்பே இல்லை! உள்ளே நுழையக் கூட முடியாது! அதோடு வெயில் அதிகமாக இருந்ததால் அரங்கனைச் சுற்றித் திரையிட்டு நடுவே அரங்கனை எழுந்தருளப் பண்ணி இருந்தார்கள். போதாததுக்கு மேலே ஓர் பெரிய திரை. அதன் மேல் பல்லக்குத் திரை! அதுக்கும் மேலே ஓர் திரை போட்டு அரங்கனுக்கு ஒரு பக்கம் மட்டும் தெரியும்படிப் பண்ணி விட்டார்கள். பலரும் ஆக்ஷேபம் தெரிவிக்கவே அதை மட்டும் எடுத்தார்கள். குழந்தையை வெயில் படாமல் எப்படிப் போர்த்தி முகம் மட்டும் தெரியும் வண்ணம் எடுத்துப் போவோமோ அப்படி எடுத்துச் செல்கின்றனர். ஶ்ரீபாதம் தாங்கிகளுக்கு அந்தப் பல்லக்கைத் தூக்கிய வண்ணம் நிற்கவே உடலில் தெம்பு வேண்டும். எங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டு மண்டகப்படியில் பல்லக்கைக் கொஞ்சம் கீழே இறக்கி வைத்தனர். ஆனாலும் உள்ளே நுழைய முடியவில்லை. நட்ட நடுவில் சாக்கடை வேறே! அதனால் வெளியேயே நின்றுவிட்டேன். படமெல்லாம் எடுக்க முடியவில்லை. மேலே பல்லக்கில் மங்கலாகக் காணப்படும் அரங்கன் கோனார் சத்திரத்தில் கிடைத்த இடைவெளியில் எடுத்தது. அரங்கன் என்னைப் பார்த்திருப்பான் என நம்புகிறேன். அரங்கன் வந்த செய்தியோடு மேட்டூர் அணை திறக்கப்பட்ட செய்தியும் கிடைத்தது. இன்னமும் 2,3 நாட்களில் இங்கே தண்ணீர் வந்ததும் படங்கள் பகிர்கிறேன்.

Monday, August 12, 2019

மோர்க்கூழ் சாப்பிடறீங்களா?

எல்லோருக்கும் தெரிஞ்சது தான். ஆனாலும் இப்போல்லாம் யாரும் பண்ணிச் சாப்பிடுவதாத் தெரியலை! எல்லாரும் ஸ்விகி, ஜொமோட்டோ என ஆர்டர் பண்ணி பிட்சா, பர்கர், ஃபிங்கர் சிப்ஸ் என வாங்கிச் சாப்பிடும்போது இதைச் சீண்டுவது யாரு? யாரும் இல்லை. ஆனால் நாங்க இருக்கோமே! திடீர் திடீர்னு நம்ம ரங்க்ஸுக்கு மசக்கை வரும்! இப்படி ஏதேனும் பண்ணச் சொல்லுவார். புளி உப்புமா உங்க வீட்டிலே பண்ணுறாப்போல் பண்ணு என்பார். இங்கே மாமியார் வீட்டிலே அது அதிகம் பண்ண மாட்டாங்க! நாங்க வெங்காயம் எல்லாம் போட்டுப் பண்ணுவோம். அரைச்சும் பண்ணுவோம். அரைக்காமல் அரிசிமாவில் புளி ஜலம் விட்டும் பண்ணுவோம். அதை அப்புறமாப் பார்த்துக்கலாம். அதோ பானுமதிக்குக் கோபம் வருது பாருங்க! விஷயத்தை விட்டுட்டுக் கதை சொல்றாங்களேனு சொல்றாங்க! ஹிஹிஹி! அ.வ.சி. பானுமதி!

திடீர்னு இன்னிக்குக் காலம்பர டிஃபனுக்கு மோர்க்கூழ் பண்ணலாம்னு தோணிச்சு! இம்முறை எனக்கு! என்னடா கஞ்சி இல்லையானு பார்க்கிறீங்களா! இல்லை! மருத்துவர் காலம்பர கஞ்சி குடிக்கக் கூடாது! டிஃபன் தான் சாப்பிடணும்! வேணும்னா கேழ்வரகிலே மோர் விட்டுக் கூழ் செய்து சாப்பிடுங்க! இல்லைனா கம்பு மாவிலே, தினை மாவிலேனு சொல்லிட்டாங்க! சிறு தானியத்தை இப்படித் தான் சேர்க்கலாமாம். ஆகவே இப்போப் பழைய குருடி கதவைத் திறடி கதையாக காலையிலே டிஃப்ப்ப்ப்பன்!  நம்மவருக்கு இது ஒத்து வரலைங்கறதாலே மறுபடி கஞ்சிக்கு மாறியாச்சு! :)))) ஒரு வாரமாக் கஞ்சி தான்.


அரிசி மாவு இரண்டு கரண்டி

 இன்னிக்கு என்னனு யோசிச்சதிலே தோன்றியது தான் இந்த மோர்க்கூழ் பண்ணும் எண்ணம். உடனடியாக மோரை எடுத்து வைத்துவிட்டு சம்புடத்தில் இருந்து இரண்டு கரண்டி (போதும் இரண்டு பேருக்கு! மோர் விட்டுக் கரைத்தால் நிறைய ஆயிடும். இதிலேயே கொஞ்சம் எடுத்து வைச்சுட்டேன்!) அரிசிமாவு எடுத்துக் கொண்டு அதில் உப்புச் சேர்த்து மோரை விட்டு நன்றாகத் தளரப் பிசைந்தேன். ஓடும்படி கூட இருக்கலாம். தப்பில்லை.

                                   
                                        இதுக்குக் கொஞ்சம் புளிச்ச மோர் தான் நல்லா இருக்கும். மோர் அந்தப் பாத்திரத்திலே இருக்கு!

கொஞ்ச நேரம் பிசைந்த மாவை ஊற வைக்கவும். பின்னர் கடாய் அல்லது உருளி அல்லது கல்சட்டியை எடுத்துக்கொள்ளவும். நான் இன்னிக்குக் கல்சட்டியைப் பயன்படுத்தலை! அதுக்கு வேறே வேலை இருந்தது.  ஆகவே அலுமினியம் சட்டியை எடுத்துக் கொண்டேன். அதில் நல்லெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உபருப்பு, கபருப்பு, பச்சை மிளகாய், மோர்மிளகாய், கருகப்பிலை, பெருங்காயம், இஞ்சி எல்லாம் போட்டுக் கொண்டேன். மோர் மிளகாயை முதலில் காய்ந்த எண்ணெயில் போட்டு வறுத்துக்கலாம். இங்கே நம்ம ரங்க்ஸுக்கு மோர் மிளகாயெல்லாம் கறுப்பாக வறுத்தால் தீய்ந்து விட்டதுனு சொல்லிடுவார். ஆகவே கறுப்பாகும் வரை வறுக்கலை. எண்ணெய் கொஞ்சம் அதிகம் இருந்தால் நல்லது.

மாவில் உப்புச் சேர்த்துக் கொண்டு மோரை விட்டுக் கலந்து தளரப் பிசைந்து கொள்ள வேண்டும்.




தாளிக்கும் பொருட்கள்: கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தவிர்த்துப் பச்சை மிளகாய், இஞ்சி, கருகப்பிலை, மோர்மிளகாய். அந்த மிளகாய் உண்மையில் மோரில் போட்டு ஊற வைத்துக் காய வைச்சதில்லை. புளி ஜலத்தில் போட்டுக் காய வைச்சது. இதுவும் நல்லா இருக்கும்/இருந்தது.


கடாயில் எண்ணெய் காய்கிறது.



தாளிதம் செய்தது


மாவுக்கரைசலை ஊற்றிய போது 

அதன் பின் கரைத்து வைத்திருக்கும் மாவுக்கரைசலை எண்ணெயில் உள்ள தாளிதத்தில் விடவும். விட்டதும் மாவைச் சுற்றி எண்ணெய் தெரிய வேண்டும் படத்தில் உள்ளது போல்! வேண்டுமெனில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றிக்கொள்ளலாம். பின்னர் கைவிடாமல் கிளறவும். கிளறியதும் பாத்திரத்தை விட்டுச் சுருண்டு கொண்டு அல்வா மாதிரி வரும்.



கடைசியில் மாவு சுருண்டு வரும்போது எடுக்கணும். அதிகப்படி எண்ணெய் இருந்தால் அதுவும் கசிய ஆரம்பிக்கும். அப்போது அடுப்பை அணைக்கவும். பார்க்க, கடைசிப் படம்! கையால் எடுத்தால் உருட்டும் பதம் இருக்கணும். இதான் மோர்க்கூழ்! இன்னும் கொஞ்சம் தளர வேண்டுமானாலும் எடுக்கலாம். சிலர் நல்ல ஓட ஓட மாவைக் கரைத்துக் கொண்டு கூழையும் தளர எடுத்துக் கொண்டு விரலால் எடுத்துச் சாப்பிடும்படி வைத்துக் கொள்வார்கள். நம்ம வீட்டில் அல்வா பதம் தான் பிடிக்கும்.

ஆகவே இப்படியே எடுத்தாச்சு. இது காலை வேளையில் சாப்பிடவே லாயக்கானது. மாலை வேளையில் அல்லது இரவில் ஜீரணம் ஆவது கடினம். எண்ணெய் அதிகம் என்பதால் காலை ஆகாரத்தில் வைத்துக் கொள்வதே சிறந்தது.  பிடிச்சவங்க செய்து பார்க்கலாம். இப்போதைய காலத்தில் பெரும்பாலோர் எண்ணெய் அதிகம், அதோடு புளித்த மோர் என்றெல்லாம் யோசிப்பார்கள். ரொம்பப் புளிப்பான மோரும் பயன்படுத்தக் கூடாது!

 இதைத் "திங்கற" கிழமைக்குப் போட ஶ்ரீராமுக்குத் தான் அனுப்பி வைச்சேன். அதுக்குள்ளே நெ.த.வோட மோர்க்கூழ் வெளிவந்து விட்டது. அப்புறமா இது போணியாகாதுனு தோணவே ஶ்ரீராமை இதைப் போடவேண்டாம்னு சொல்லிட்டேன். ஆனாலும் மெனக்கெட்டுப் படங்கள் எல்லாம் எடுத்தது! மனசு கேட்கலை! என்னோட வலைப்பக்கத்தில் வெளியிட்டு விட்டேன். நாளைக்கு/இன்னிக்கு எ.பி.யில் என்ன வருதுனு பார்த்துட்டு இதை வெளியிடணும். :))))))

Saturday, August 10, 2019

படக்காட்சி பார்க்க வாருங்கள்!



நம்ம அம்பத்தூர் வீடு! வாசலில் வேப்பமரம்! இப்போ வெட்டிட்டாங்க! :( சொல்லச் சொல்லக் கேட்கலை!













Photobucket - Video and Image Hosting

திருக்கயிலை தரிசனம் அஷ்டபத் என்னும் இடத்தில் இருந்து!



மானசரோவர் இரு கோணங்களில்


Photobucket - Video and Image Hosting

பூடா நீல்கண்ட்(Bhuda Neelkant) சிலர் விஷ்ணுவின் தோற்றம் என்றும் சொல்கின்றனர். எங்களுக்கு ஈசன் ஆலஹால விஷத்தை உண்டதும் இங்கே வந்து மயக்கமாய்ப் படுத்ததாகச் சொன்னார்கள். மேலே பசுபதிநாதர் கோயில்

Photobucket - Video and Image Hosting

மேலே காட்மாண்டு நகரம் விமானத்திலிருந்து.

கீழே அதே பூடா நீல்கண்ட் வேறே கோணத்தில்.

இப்போ எதுக்கு இவை எல்லாம்னு கேட்கறீங்களா? சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா! பார்க்காத்வங்க பார்க்கலாமே! இந்தப் படங்களை எடுத்தவர் நம்ம ரங்க்ஸ். டிஜிடல் காமிராவெல்லாம் அப்போ வாங்கலை. கானன் ஃபில்ம் மாற்றும் காமிரா தான்! 38 ஃபில்மோ அல்லது 36 ஃபில்மோ தான்! அதிகப்படி ஃபில்ம் சுருளை வாங்கிட்டுப் போகாததால் கயிலை பரிக்ரமா காட்சிகள் எல்லாம் எடுக்க முடியலை!  ஃபில்ம் இருந்தவரைக்கும் எடுத்தோம். எல்லோரும் டிஜிடல் காமிராவில் வீடியோ படமாக்கிக் கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். :(

திடீர்னு பழைய பதிவுகளில் ஒரு தேடல் நடந்தப்போக் கிடைச்சது இவை எல்லாம். வீட்டின் படமே வாசலில் முல்லை, மல்லிகைக் கொடிகளோடு ஒரு படம் போட்டிருந்தேன். அதைத் தேடி எடுக்க முடியலை! இது சமீபத்தில் எடுத்த படம்! ஹிஹிஹி, 2006 ஆம் வருடமோ? அப்போக் காமிரா இல்லையே? யார் எடுத்த படம்? நினைவில் இல்லை! 

Thursday, August 08, 2019

திடீர் விருந்தாளிகள் அதிகாலையில் வரவு!

இஃகி, இஃகி, இஃகி, இன்னிக்குக் காலம்பர ஐந்து மணிக்கு எழுந்துக்கும்போதே லேசாகத் தூறல். வானம் என்னமோ பெரிசாக் கொட்டும் போல பாவ்லா காட்டிக் கொண்டிருந்தது. நான் வாசல் தெளிக்கும் வேலையெல்லாம் முடித்துக் கொண்டு காஃபி டிகாக்‌ஷன் போட்டுக் கஞ்சியும் தயார் செய்துட்டு நம்ம ரங்க்ஸ் வரவரைக்கும் காத்துண்டு இருக்கணுமேனு மறுபடி படுக்கையில் போய்ப் படுத்துட்டேன். அவர் கோபுர தரிசனம் முடிக்கப் பத்து நிமிஷத்துக்கு மேலாகும். ஆகவே படுத்துட்டு இருந்தப்போ திடீர்னு கத்தினார் பாருங்க! தூக்கி வாரிப் போட்டது. என்னனு கேட்டால் இங்கே வந்து பார்னு ரகசியமாக் கூப்பிட்டார். சத்தம் போட்டால் ஓடிடுங்க! என்னவோ ஏதோனு எழுந்து வந்து பார்த்தால் கம்ப்யூட்டர் அறையின் தெற்குப் பார்த்த ஜன்னலில் ஒடுங்கிக் கொண்டு நம்மாளுங்க நாலு பேர் உட்கார்ந்திருக்காங்க. ஜன்னலுக்கு உள்ளே இருந்த எங்களையே பார்த்தாங்க. அதிலும் அம்மாவுக்கு ஒரே முறைப்பு.  நாங்க என்னடா? என்ன விஷயம்னு கேட்டதும் முகத்தை நீட்டிக் கொண்டு உன்னிப்பாகப் பார்த்தனர் நால்வரும்.  ஏற்கெனவே நேற்றே சொல்லி இருந்தார்.  ஜன்னலுக்கு மேலிருக்கும் சன்ஷேடில் உட்கார்ந்துக்கறாங்க. வால் நீளமாகக் கீழே தொங்குது என்று சொன்னார். நான் போய்ப் பார்க்கறதுக்குள்ளே அது போயிடுத்து! இன்னிக்கு விடிந்தும் விடியாத அதிகாலை கருக்கிருட்டில் இவை குடும்பத்துடன் தேடி வந்து உட்கார்ந்து கொண்டிருந்தன.

வெளிச்சம் இல்லாததால் விளக்குப் போடறேன் என்றார். வேண்டாம், ஓடிப் போயிடுங்க என்று சொல்லிவிட்டு மெதுவாக செல்லை எடுத்துக் கொண்டு வந்தேன். அட? காமிரா அங்கேயே தானே கம்ப்யூட்டர் டேபிளில் இருந்தது! அது நினைவில் இல்லை. முதலில் கொஞ்சம் பயத்துடனேயே இரண்டு படங்கள் எடுத்தேன். திருப்தியாக இல்லை. அதுக்குத் தான் விளக்குப் போடறேன் என்று மறுபடி ரங்க்ஸ் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டுக் கொஞ்சம் கிட்டப் போய்ப் படம் எடுத்துக் கொண்டேன். திருப்தி இல்லை தான்! ஆனால் விளக்கைப் போட்டால் அதுங்க அங்கேயே உட்கார்ந்திருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லையே! வந்தவரை போதும்! என்ன சொன்னால் நெ.த. தான் சொல்லுவார்! அவருக்கு அதே வழக்கம். சொல்லிக் கொண்டு இருக்கட்டும்னு விட்டுட்டேன்.  அம்மாவுக்கு அப்பாவோ அது? பேன் பார்த்துக் கொண்டிருந்தது. அதுக்குள்ளே ஒரு சின்னக் குட்டியார் இடப்பக்கம் கடைசியில் இருப்பவர் வலைக்கதவின் ஒரு பக்கத்துக் கொண்டி கழன்றிருந்ததால் அதை எடுத்துட்டு உள்ளே வரலாமா என ஆராய்ந்து கொண்டிருந்தார். கதவும் கொஞ்சம் போல் திறந்தும் விட்டது. இடுக்கு வழியாகக் கையை உள்ளே நுழைக்கப் பார்த்தார். உடனே நம்மவர் கம்பை எடுத்துக்கொண்டோ/எடுக்காமலோ அவற்றை விரட்டினார். எல்லாம் போயிடுத்துங்க! அதுக்கப்புறம் அந்த வலைக்கதவுப் பக்கம் இருக்கும் கண்ணாடிக்கதவை நன்கு அழுத்தி மூடி விட்டு வந்தார்.

காலை இருட்டில் அதுங்க இருப்பது சரியாத் தெரியலை! என்றாலும் பெண்ணுக்கும், பையருக்கும் அனுப்பி வைச்சேன். அவங்க பார்த்து ரசிச்சாங்க!

இரண்டு, மூன்று நாட்களாகக் காற்று வேகம் அதிகம்! வண்டி ஓட்டமுடியவில்லை. நேற்றுப் பெரிய ரங்குவைப் போய்ப் பார்த்து சுமார் ஆறு மாதங்களாவது ஆகி இருக்கும்னு போயிட்டு வந்தோம். காலம்பரவே கோயிலில் கூட்டம் அதிகம் இல்லைனு புரிஞ்சது. அதோடு பெரிய ரங்குவுக்கு இப்போ ஜ்யேஷ்டாபிஷேஹம் முடிஞ்சு தைலக்காப்புச் சார்த்தி இருப்பதால் முக தரிசனம் மட்டும் தான். முழுசாவும் பார்க்க முடியாது.  திருவடி தரிசனம் இல்லை.  அதனாலும் கூட்டம் குறைவு! நாங்க போகலாம், வேண்டாம்னு எப்போவும்போல் இழுத்துப் பறித்துக் கொண்டு இருந்தோம். கடைசியில் 3 மணிக்குப் போகலாம் வானு கூப்பிட்டார். உடனே கிளம்பினோம். வழக்கமான முறையில் முதலில் தாயாரைப் பார்த்தோம். அங்கேயும் கூட்டம் அதிகம் இல்லை என்றாலும் உள்ளே சந்நிதிக்கு நேரே மக்கள் நின்று கொண்டு நகராமல் பார்க்கவிடாமல் செய்து கொண்டிருந்தனர். நல்லவேளையா நாங்க வந்தப்போ அவ்வளவு கூட்டம் இல்லை. தாயாரைப் பார்த்து சடாரி சாதித்துக் கொண்டு மஞ்சள், மரிக்கொழுந்து பிரசாதம் வாங்கிக் கொண்டு வைகுண்ட வாசல் அருகே தன்வந்திரி சந்நிதிக்குப் பக்கம் நின்றோம். சிறிது நேரத்தில் பாட்டரி கார் வந்தது.

நம்பெருமாள் க்கான பட முடிவு

அதில் போய் ஆர்யபடாள் வாசலில் இறங்கிக் கொண்டு உள்ளே போனால் ஐம்பது ரூபாய்ச் சீட்டு வாங்கும் இடத்தையே மாத்தி இருக்காங்க! என்னடா இது சோதனைனு நினைச்சுட்டுப் போனால் அங்கே உள்ளே இருந்தவர் கூட்டமே இல்லை. சும்மாப் போய்ப் பாருங்கனு சொல்லிட்டாராம். சரினு போனால் வழியில் இருந்த பாவைகளும் நேற்று எதுவும் கேட்கவில்லை. நாங்க உள்ளே போகிற வழியில் செல்வதைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தனர். உள்ளே போனால் அங்கே தான் சந்தனு மண்டபத்தில் ஜெய, விஜயர்களுக்கு எதிரே சுமார் பத்துப் பதினைந்து நிமிஷங்கள் காத்திருக்க வேண்டி வந்தது. பின்னர் உள்ளே போகும்போதே ரங்குவைப் பார்த்துக் கொண்டே போனேன். நம்பெருமாளும் உட்கார்ந்திருந்தார். எட்டிப் பார்த்ததில் பக்கத்தில் யாகபேரர் இருப்பதும் தெரிந்தது. சரினு மறுபடி ரங்குவைப் பார்த்தேன். மார்பு வரை ஆடை மூடி இருக்க முகம் எந்த அலங்காரங்களும் இல்லாமல் எண்ணெய்க்காப்புடன் காட்சி அளித்தார் ரங்கு! நன்கு தரிசனம் செய்து கொண்டோம். நம்பெருமாள் வழக்கம் போல் நமட்டுச் சிரிப்புடன் காட்சி தந்தார். ஆடி 28 ஆம் தேதி வருவீங்க இல்லையா, அப்போப் பார்க்கலாம் என மனதுக்குள் சொல்லிக் கொண்டேன். நேற்று பட்டாசாரியார்களும் கடுகடுவென விரட்டாமல், மெதுவாகவே பார்த்தாச்சுன்னா போங்க மாமி! என்று சொன்னார்கள். அப்படியும் ஒரு நிமிஷம் நின்று ரங்குவைப் பார்த்துட்டுத் திரும்பி வந்தேன்.

3 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பி 4-10க்குள் ரங்கு, தாயார் இருவரையும் பார்த்துவிட்டு வீட்டுக்கும் கிளம்பியாச்சு!