Thursday, November 05, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - வந்தாள் ருக்மிணி!

திரிவக்கரைக்கு நேர்ந்ததைப் பார்த்த மக்கள் கூட்டம் ஸ்தம்பித்து நின்றது. ஒரு பக்கம் ஆச்சரியம், மறுபக்கம் திகில். அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு, பரபரப்பு. இளைஞர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்து கும்மாளமிட்டார்கள். அப்போது கூட்டத்தின் ஒரு பகுதியில் ஏதோ சலசலப்பு. யாரோ, யாரையோ அதிகாரமாய் விளிக்கும் தொனி! “நகருங்கள், நகருங்கள்,” என்று யாரோ யாரையோ சாட்டையால் அடிக்கும் சப்தம். “அம்மா” மெலிதாக ஒரு ஓலமும் கேட்டது. அனைவரும் சத்தம் வந்த திசையை நோக்கினார்கள். குதிரைகளில் சில வீரர்கள், முன்னணியில் கம்பீரமான இளவரசன் போல் தோற்றமளிக்கும் நடுவயது இளைஞன் ஒருவன். அவன் கையில் தான் சாட்டை. வெகு நீளமாய்க் காட்சி அளிக்கிறது. சாட்டையை அவன் வீசினால் அதன் வீச்சுக்குக் குறைந்த பட்சம் பத்துப்பேராவது அகப்படுவார்கள் போல. ஓங்கிச் சாட்டையை வீசினான். அங்கே நின்றிருந்த மக்களில் சிலர் அச்சத்துடன் திரும்பி ஓட எத்தனிக்க, அடுத்து என்னவோ என்ற எதிர்பார்ப்போடு சிலர் பார்க்க.

ஒரு பெரிய பயில்வான் போல் நின்றிருந்த பலராமன் சுபாவத்தில் மென்மையானவனே. அப்படி ஒண்ணும் கோபக்காரன் என்று சொல்ல முடியாது. நிதானமாகவே எல்லாமும் செய்வான். யோசித்துத் தான் பேசுவான். படபடவென வார்த்தைகளைக் கொட்ட மாட்டான். ஆனால் அதே பலராமனுக்குக் கோபம் வந்துவிட்டால் நடக்கிற கதையே வேறே. அவன் கோபத்தின் முன்னால் யாராலும் நிற்கக் கூட முடியாது. இப்போது அவ்வாறே பலராமனுக்குக் கோபம் வந்திருக்கிறது. ஆனால் நம் புது விருந்தாளி எவ்விதம் அதை அறிவார்? அவர் பாட்டுக்குச் சாட்டையை வீசித் தம் அதிகாரத்தை நிலைநாட்ட முயல்கிறார். இதோ! அவரின் ஓங்கிய சாட்டை பலராமனால் பிடிக்கப் பட்டுவிட்டதே? அதோடா? இதோ, பலராமன் அந்தச் சாட்டையைத் தன் பலம் கொண்ட மட்டும் தன் பக்கமும் இழுக்கிறானே? குதிரை தடுமாறியது. குதிரை வீரன் கீழே விழுந்தான். தடுமாறிய குதிரையால் நிற்க முடியாமல் மற்றக் குதிரைகளின் மேல் மோதிக் கொள்ள எல்லாக் குதிரைகளும் தடுமாறின. ஒரே குழப்பம். கனைப்புச் சப்தம். எல்லாக்குதிரைகளும் முன்னால் போவதா, பின்னால் போவதா எனத் தடுமாற, அதன் எஜமானர்கள் அவற்றைச் சமாதானம் செய்து போக வைப்பதற்குள், பின்னே வந்து கொண்டிருந்த ஒரு மாடுகள் பூட்டப் பட்டிருந்த ரதத்தில் போய் சில குதிரைகள் மோதின. அந்த மாடுகள் தன் பாட்டுக்கு வந்து கொண்டிருந்தன. திடீரென குதிரைகள் மோதியதும் ரதம் பின்னால் சென்றது.

பின்னால் சென்றதோடு நில்லாமல், ஒரு பக்கமாகத் திரும்பிய ரதம் அச்சாணி முறிந்ததைப் போல் தெருவின் ஓரத்திற்குச் சென்று அங்கே உள்ள பள்ளத்தில் முன்பாதியும், தெருவில் பின் பாதியுமாகக் கவிழ்ந்தும் நின்றது. அதில் இருந்த இரு பெண்கள் பயத்தில் கூச்சலிட்டனர். ஒருத்தி இருபத்தைந்து வயது மதிக்கத் தக்கவளாக இருந்தாள். இன்னொருத்தி பதினாறு வயது கூட நிரம்பாத இளம் சிறுமி. மிக மிக அழகாக இருந்தாள். அவளும் கூச்சலிட்டாள். அவள் சகோதரன் போல் தோற்றமளித்தான் கீழே விழுந்த இளைஞன். ரதத்தில் இருந்த பெண்கள் கூச்சலைக் கேட்டதும் எழுந்த அவன், கோபத்தோடு ரதத்தோடு கூடவே வந்து கொண்டிருந்த பாதுகாவலர்களைப் பார்த்து கூச்சலிட ஆரம்பித்தான். அந்த இளவரசனுக்குக் காயங்களும் கொஞ்சம் மோசமாகவே பட்டிருந்தது போலும். அவனால் வலியையும், வேதனையையும் பொறுத்துக் கொண்டே பேசவேண்டி இருந்தது போலும். பல்லைக் கடித்துக் கொண்டு பேசினான். பலராமனை அடிக்கக் கையை ஓங்கினான். ஆனால் கண்ணன் பார்த்துக் கொண்டு சும்மாவா இருப்பான்?
அவன் கழுத்தைத் தன்னிரு கரங்களால் பிடித்தான். அந்த இளவரசன், கண்ணனைப் பார்த்துச் சீறினான். “அடேய், என்னை யாரென நினைத்தாய்? நான் ருக்மி! விதர்ப்ப நாட்டு பட்டத்து இளவரசன். உன்னுடைய எஜமானன் ஆன கம்சனின் முக்கிய விருந்தாளி. என்னை மரியாதையோடு நடத்தவில்லை எனில்…”

“நீ யார் என இப்போது நீ சொன்னதும் தெரிந்து கொண்டேன். ஆனால் நீ மரியாதையாகத் திரும்பிப் போ,. அநாவசியமாக மக்களைத் துன்புறுத்திக் கொண்டு செல்லாதே. அதோ பார், உன்னுடன் வந்த பெண்கள் இருவரும் தவிக்கின்றனர். அவர்களை அழைத்துக் கொண்டு உன் வழியைப் பார்த்துக் கொண்டு செல்.” கண்ணன் மிகவும் மெதுவாக அதே சமயம் உறுதியோடு சொன்னான்.

“என்ன சொன்னாய்? துஷ்டனே!” ருக்மி கோபத்துடன் தன் வாளை எடுத்துக் கொண்டு கிருஷ்ணன் மேல் பாய்ந்தான். ஆனால் அவன் செயல்படுவதற்கு முன்னரே, அவன் செய்யப் போவதை ஊகித்தாற்போல கிருஷ்ணன் அவன் வாளை எடுக்க விடாமல் தடுத்ததோடு, அவனைக் கீழேயும் தள்ளினான். பின்னர் அவனைத் தூக்கி எடுத்து ஒரு நெல் மூட்டையை வீசுவது போல ரதத்தினுள் வீசினான். ருக்மி தன்னை ரதத்தினுள் கிருஷ்ணன் வீசுவதைத் தடுக்கச் செய்த முயற்சிகள் எதுவும் பலனடையவில்லை. ரதத்தில் வீற்றிருந்த பெண்கள் கிருஷ்ணனின் இந்தச் செயலைப் பார்த்துவிட்டுக் கூச்சலிட்டனர். இருவரில் இளையவளாய் இருந்த பெண் கிருஷ்ணனைப் பார்த்து, “ என் சகோதரனை ஒன்றும் செய்யாதே! அவனை விட்டுவிடு, பொல்லாதவனாய் இருக்கின்றாய் நீ!” என்றாள்.

கிருஷ்ணன் தன் வழக்கமான பாணியில் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். “ஓ இவன் உன் சகோதரனா? நீயும் ஓர் இளவரசியா? சரி, அப்போது உன் சகோதரனுக்கு ஒரு இளவரசன் எவ்வாறு மக்களிடம் நடந்துகொள்ளவேண்டும் என்று கற்றுக் கொடு.” என்றான் புன்னகை மாறாமல். “ஆஹா, நீ என்னவோ செய்துவிட்டாயே என் சகோதரனை!” என்றாள் ருக்மிணி. கிருஷ்ணனின் புன்னகை விரிந்தது. அதோடு கண்களிலும் குறும்பு கூத்தாடியது. அது மாறாமலேயே அவன் அவளிடம், “ கவலைப்படாதே இளவரசி! உன் சகோதரன் தற்பெருமையைத் தவிர வேறு எதையும் இழக்கவில்லை. இனிமேல் அவன் ஒழுங்காய் நடந்து கொள்வான், மக்களிடம் மட்டுமில்லை, உன்னிடமும், அவன் மனைவியிடமும் கூட.” சிரித்தான் கிருஷ்ணன். கிருஷ்ணன் பேசியதையும், அவன் நடந்து கொண்ட அருமையான நடத்தையையும் பார்த்த ருக்மிணிக்குத் தன் கண்ணீரையும் மீறிச் சிரிப்பு வந்தது. அவளால் அதை அடக்கமுடியவில்லை. கிருஷ்ணனோ அவளைச் சிறிதும் கவனிக்காமல் கால்கள் மடிந்து கீழே உட்கார்ந்துவிட்ட காளைகளின் அருகே சென்று அவற்றைத் தட்டிக் கொடுத்து எழுப்பி அமர வைக்க முயன்றான். அவனுக்கு மிகவும் பிடித்த, நன்கு தெரிந்த ஒரு விஷயம் இது. காளைகளோ அறுத்துக் கொண்டு கூட்டத்தில் இடம் கிடைத்தால் ஓடிவிடலாம் என நினைத்தன போலும். கிருஷ்ணன் அவற்றைத் தட்டிக் கொடுத்து அவற்றிடம் மெதுவாகவும், ஆறுதலாகவும், அன்பாகவும் பேசினான். ஒரு இனிய நண்பனைப் போல் அவற்றிடம் பேசினான். அவற்றின் திமில்களைத் தடவிக் கொடுத்து சமாதானம் செய்தான். சற்று நேரத்தில் காளைகள் அமைதி அடைந்தன.

காளைகளை மெல்ல எழுப்பி, ரதத்தை நேரே நிற்க வைத்து அவை ரதத்தைச் செலுத்தத் தயாராக்கினான். கடைசியாக அவை தன்னிடமிருந்து பிரிந்து மேலே செல்லுமுன் ஒரு முறை அவற்றைத் தட்டிக் கொடுத்தான். காளைகளோ எனில் கிருஷ்ணன் மேல் உரசிக் கொண்டு, நெடுநாள் நண்பன் போல் அவனைத் தங்கள் நாவால் நக்கிக் கொடுத்துக் கொண்டு நின்றன. கிருஷ்ணன் காளைகளைக் கட்டிய கயிறுகளை வண்டி ஓட்டியிடம் கொடுத்துவிட்டு, “ இவற்றை நன்கு அன்பாய்க் கவனித்துக் கொள். அருமையான காளைகள்.” சிரித்துக் கொண்டே கண்களில் மீண்டும் குறும்பு கூத்தாட ருக்மிணியைப் பார்த்துக் கை அசைத்தான். கிருஷ்ணன் திரும்பினான். வண்டி கிளம்பியது . ருக்மிணி கிருஷ்ணன் மேல் வைத்த கண்ணை எடுக்கவில்லை.

Saturday, October 31, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், - திரிவக்கரையா இவள்???

திரிவக்கரை செல்லும்போதே மக்கள் கூட்டம் கூட்டமாக முக்கியக் கடைத்தெரு இருக்கும் தெருவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை கண்டாள். இளைஞர்கள் அனைவரும் ஏதோ பரபரப்பிலும், அவசரத்திலும் வேகமாய்ச் சென்றனர். சாதாரணமாய் இப்படிக் கூட்டம் இருக்குமிடம் செல்ல நேர்ந்தால் திரிவக்கரையைப் பார்த்து அனைவரும் கேலி பேசிச் சிரிப்பார்கள். இன்று அவளைக் கவனிக்க யாருக்கும் நேரமில்லை. திரிவக்கரைக்கே ஆச்சரியமாய் இருந்தது. என்ன ஆச்சு எல்லாருக்கும்? அவளுக்கும் அந்தக் கடைத்தெருவுக்கே போய்ப் பார்க்கும் ஆவல் மேலிட்டது. கூட்டத்தைத் தொடர்ந்து சென்றாள் திரிவக்கரை. ஒரு பெரிய மக்கள் கூட்டம் அரண்மனையின் துணிகளுக்கு அவ்வப்போது புத்தம்புதியதாய்ச் சாயம் தோய்த்துக் கொடுப்பவனின் கடை ஒன்றுக்கு முன்னால் நின்றிருந்தது. கம்சனுக்கு மட்டுமில்லாமல், அரண்மனைவாசிகள் அனைவரின் துணிகளும் என்றும் புத்தம்புதியதாய் விளங்கச் செய்வதே அவனுக்குத் தொழில். எல்லாரும் இங்கே கூடி நின்று எதை அல்லது யாரைப் பார்க்கின்றனர்? திரிவக்கரையில் ஆவல் கூடியது. கூனிப் போன முதுகை மெல்ல நிமிர்த்தினாள். தினம் தினம் செய்யும் பயிற்சியினால் ஓரளவுக்கே அவளால் முடிந்தது. கூட்டத்தின் முன்னால் என்ன நடக்கிறது என்பதை அறிய முடியவில்லை. முண்டி அடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள். கூட்டத்தினர் அவளைக் கண்டு விட்டு, “ஆஹா, இந்தக் கூனி இங்கே எங்கே வந்தாள்? எல்லாம் கிடக்க இவளுக்கு அவசரத்தைப் பாரேன்!” எனக் கேலி செய்தனர். சிலர் திட்டவும் செய்தனர். எதையும் கண்டு கொள்ளாமல் கூட்டத்தில் முன்னேறினாள் திரிவக்கரை.

கடையை நெருங்கும்போது அவள் காதில் விழுந்த சம்பாஷணைகள்! ஆஹா, இது என்ன? யார் இவங்க? சிறு பையன்களாய் இருக்கின்றனரே? அவங்க பேச்சிலிருந்து புதிய துணிகளை வாங்க வந்திருப்பது புரிகிறது. அது பற்றியே கடைக்காரனிடம் பேசுகின்றனர். அந்த சம்பாஷணைதான் காதில் விழுந்தது. ஆனால் இது என்ன??? இந்தக் கடைக்காரன் ஏன் கொடுக்க மறுக்கின்றான்? மாறாக இந்தப் பையன்களைத் திட்டுகிறானா என்ன? ஆம், அப்படித் தான் தெரியுது. “ பட்டிக்காட்டான்களா, துணி வாங்கவா வந்தீங்க? அதுவும் என் கடையிலே? என் கடை அரண்மனை வாசிகளுக்கு மட்டுமே துணிகள் விற்குமிடம். உங்களை மாதிரி ஒன்றுமில்லாதவங்களுக்குத் துணி எல்லாம் கொடுக்கிறதுக்கில்லை.” வெறும் பேச்சோடு நிறுத்திக் கொள்ளாமல் கையையும் ஓங்கினான் கடைக்காரன். அதுவும், அந்த நீல நிறப் பையன், என்ன நீல நிறப் பையனா? எங்கேயோ சொல்லி இருக்காங்களே இவன் நிறத்தைப் பத்தி? ம்ம்ம்? ஆஹா, அடிக்கப் போகிறானே அந்தப் பையனை. இதோ, பையன் மேல் அடி விழ……… இது என்ன? அந்தப் பையன் சமயத்துக்குச் சட்டுனு நகர்ந்துட்டான். அதோடு இந்தக் கடைக்காரனைத் திரும்ப அடிக்கிறானே? ஆஹா, பையன் கொடுத்த ஒரே அடியில் கடைக்காரன் கீழே விழுந்துட்டான். எழுந்துக்க முடியாமல் முனகிட்டு இருக்கான். கூட்டம் ஆர்ப்பரித்தது. கைதட்டிக் கும்மாளமிட்டனர் மக்கள்.

ஒரு சில இளைஞர்கள் கீழே விழுந்திருந்த கடைக்காரனை மீண்டும் சீண்ட ஆரம்பித்தனர். அவன் எழுந்திருக்க முடியாது என்ற தைரியத்தில் அவர்கள் அவனை உதைத்தனர். திரிவக்கரைக்கும் கோபம் தான். இந்த சின்னப்பையன்களிடம் போய் இவன் சண்டை ஏன் போட்டான்? ஆனால் அந்தப் பையன்கள் சும்மா இருக்கலை. மெதுவாய்க் கடைக்குள் போய்ச் சில துணிகளை அவர்களுக்குப் பொருந்துமாறு தேர்ந்தெடுத்து, அவற்றை அங்கேயே மாற்றிக் கொள்ளவும் செய்தார்கள். கூட்டம் மீண்டும் கைதட்டி ஆர்ப்பரித்தது. “யாரு இவங்க இரண்டு பேரும்?” திரிவக்கரை தன் அருகில் இருந்தவரைப் பார்த்துக் கேட்டாள்.
“அட, உனக்குத் தெரியாது எதுவுமே? இவங்க தான் நந்தனின் பையன்கள், நந்தன், விருந்தாவனத்தின் தலைவன், இடையர்களின் தலைவன், அவனோட பையன்கள் இவங்க. “ திரிவக்கரை சந்தோஷத்தில் மிதந்தாள். “கடைக்காரன் ஏன் சண்டை போட்டான் இவங்க கிட்டே?”
“இவங்களைக் கம்சன் அழைத்திருக்கிறானாமே? ராஜ சபைக்குப் போகக்கூடிய அளவுக்குத் தகுந்த உடைகள் வேண்டும்னு கேட்டாங்க. கொடுக்க மாட்டேன்னு சொல்லிச் சண்டை போட்டான்.”
“ஆஹா, எவ்வளவு அழகும், வனப்பும், இளமையும் மிகுந்த பையன்கள்?”
“ம்ம்ம், இந்தக் கடைக்காரனுக்கு வேண்டும் நல்லா, அவன் என்னமோ தன்னையே கம்சன்னு நினைச்சுட்டு இருந்தான் இத்தனை நாட்களாய்” இது இன்னொருவரின் கூற்று.
“ஆனால் இளவரசர் கம்சனுக்குக் கோபம் வரப் போகிறது.” திரிவக்கரை சொன்னாள். “ஹாஹாஹா, இந்தப்பையன்கள் அதைப் பத்திக் கவலைப் படறதாத் தெரியலை.” இன்னொருவனுக்குச் சிரிப்பை அடக்க முடியலை. அதற்குள்ளாக இரு இளைஞர்களும் உடையை அணிந்து கொண்டு வெளியே வந்தார்கள். மூத்தவனாகவும், பலசாலியாகவும் தெரிந்தவன் நீல நிற உடையிலும், இளைஞனாகவும், காண்பவர் கண்ணைக் கவரும் வகையில் நீல நிறம் படைத்தவனாகவும், இதழ்களில் எப்போதுமே சிரிப்பைத் தாங்கியவண்ணம் இருந்தவனும் ஆன இன்னொருவன் மஞ்சள் நிற ஆடை. உடைக்குப் பொருந்தும் வண்ணம் தலையில் தலைப்பாகைகளும் அம்சமாகப் பொருந்தி இருந்தது. இளைஞர்களில் இளையவன் தன்னுடைய உடை அணிவதில் எப்போதும் அதிகக் கவனம் செலுத்துவான் போல. பழைய ஆடையின் தலைப்பாகையில் இருந்த மயில் இறகுக் கொத்தை எடுத்து இந்த ஆடையின் பொன்னிறத் தலைப்பாகையில் சூடிக் கொண்டிருந்தான். ஆஹா, அது தான் எவ்வளவு பொருந்திக் காட்சி அளிக்கிறது? இந்த உடையும் , இந்தப் பொன்னிறத் தலைப்பாகையும் சேர்ந்து ஓர் அரசன் போலவே காண்கின்றானே இவன்?

அதற்குள்ளாக அருகிலிருந்த பூக்கடைகளில் இருந்து பூமாலைகள், அதுவும் சித்திர விசித்திரமான கட்டுமானத்தோடு கூடிய அபூர்வப் பூக்களால் ஆன மாலைகளைக் கொண்டு வந்து அந்தக் கடைக்காரர்கள் மனமுவந்து கொடுத்தார்கள். அந்தப் பூமாலைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை எனில் அழுதுவிடுவார்களோ என்னும்படியாக அவர்கள் முகத் தோற்றம். இருவரும் பூமாலைகளை ஏற்றுக் கொண்டனர். இளைஞர்களில் இளையவனோ பூக்கடைக்காரனைக் கட்டி அணைத்துக் கொண்டு தட்டியும் கொடுத்துவிட்டான். அதிர்ஷ்டக்காரனப்பா அவன்! ஏற்கெனவே கண்ணனின் வரவுக்குக் காத்திருந்த திரிவக்கரைக்கு இத்தனையையும் நேரில் பார்த்ததும் அதுவும் கண்ணனை நேரில் பார்த்ததும் அவளால் ஆவலை அடக்க முடியவில்லை. அந்தப் பையன் தன் ஒளி வீசும் கண்களினால் கூட்டத்தினர் அனைவரையும் பார்த்தான். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகத் தங்களை மட்டுமே அவன் பார்த்தமாதிரி இருந்தது. அவன் சிரித்தது தங்கள் ஒருவருக்காக மட்டுமே என நினைத்தார்கள். அதிலும் திரிவக்கரைக்கு அவன் தன்னை மட்டுமே பார்த்துச் சிரித்தான் என்றே தோன்றியது. அனைவரையும் தள்ளிக் கொண்டு முன்னால் சென்றாள் அவள். நெஞ்சு படபடவென அடித்துக் கொள்ள, வியர்வை வெள்ளமாய்ப் பெருக, கண்ணனுக்கு முன்னால் எப்படியோ போய்விட்டாள். உடலே துடித்தது ஆவல் மீதூர. கண்ணனைப் பார்த்தாள்.

“நந்தகுமாரா, கிருஷ்ணா, நான் உன்னிடம் வந்துள்ளேன் என் கடவுளே. நான் உனக்காகவே காத்திருந்தேன், இத்தனை நாட்களாக. நீ வரவேண்டும் என்றே காத்திருந்தேன்.”” திரிவக்கரையின் குரல் உணர்ச்சிவசத்தில் தழுதழுத்துத் தடுமாறியது. மக்கள் அவளைத் தள்ளி அந்தப் பக்கமாய்ப் போ என்று சொன்னார்கள். அருவருப்போடு அவளைப் பார்த்தனர். ஆனால் திரிவக்கரையோ கிருஷ்ணனை நமஸ்கரிக்க முயன்றாள். “ஆஹா, நீ எனக்காகக் காத்திருந்தாயா? என்ன ஒரு நல்ல விஷயம்? எப்படி அறிவாய் நீ நாங்கள் வருவதை?”

“எனக்குத் தெரியும் என் ஆண்டவா, நீ வருவாய் என எனக்குத் தெரியும். ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு பகலும், ஒவ்வொரு மணித்துளியும், ஒவ்வொரு வருஷமும் உனக்காக நான் காத்திருந்தேன். இதோ, உனக்காக நான் கொண்டு வந்திருக்கும் அபூர்வ மலர்களால் தயார் செய்யப் பட்ட வாசனைத் திரவியம். இது உனக்கு மட்டுமே கண்ணா!”

சகோதரி, யாரம்மா நீ?” கண்ணன் கேட்டான்.

“நான் திரிவக்கரை. என் பெயரே மறந்துவிட்டது கண்ணா, திரிவக்கரை என்றே அழைக்கப் படுகிறேன். அரண்மனை வாசிகளுக்கு வாசனைத் திரவியங்கள் தயார் செய்து கொடுக்கும் வேலை எனக்கு. ஆனால் இது அந்த மாதிரிச் சாதாரணமான ஒன்றல்ல. இது உனக்காவே நான் தனியாக என் கரங்களாலேயே தயாரித்தேன்”

கண்ணனின் இதழ்களில் புன்னகை! அதைப் பார்த்த திரிவக்கரையோ ஆனந்தத்தின் உச்சிக்கே சென்றாள். கண்ணனின் புன்னகையில் அவளுக்கான அன்பு தனியானது என்ற உறுதியும், நிச்சயமும் அவளால் உணரமுடிந்தது. இந்தப்புன்னகை தனக்காகவே என்ற எண்ணமும் அவளுக்கு மகிழ்வைத்தந்தது. கண்ணனின் கன்னங்களிலும், கைகளிலும் வாசனைத் திரவியங்களையும், சந்தனத்தையும் தடவினாள். அவன் நெற்றியில் தடவினாள். பலராமனுக்கும் பூசிவிட்டாள். பலராமன் ஒரு குழந்தையின் சந்தோஷத்தோடு அதை அனுபவித்தான். திரிவக்கரை மிகுந்த பிரயத்தனத்தோடு கண்ணன் காலடிகளில் வீழ்ந்தாள். அவனை நமஸ்கரித்தாள். கண்ணீர் பொங்க, “ ஆண்டவா, என் ரக்ஷகா, என் கடவுளே, நான் ஒரு குரூபியாய் இருக்கிறேனே.” திரும்பத் திரும்ப இதையே சொல்லிக் கொண்டு இருந்தாள். அவளால் வேறு எதுவும் சொல்லமுடியவில்லை. நெஞ்சே வெடித்துவிடும்போல் அழுகையும், விம்மலும் வந்தன.

“யார் சொன்னார்கள் நீ குரூபி என?? “ கண்ணனின் மிருதுவான குரல் ஒரு தாயின் அன்போடும், கருணையோடும் சர்வ நிச்சயத்துடன் கூறியது. கண்ணன் குனிந்து தன்னிரு கரங்களால் அவளைத் தூக்கி எடுத்தான். “சகோதரி, நீ அழகி இல்லை எனச் சொன்னவர் எவர்? நீ தான் மாபெரும் அழகி!” இதையும் கண்ணன் சர்வ நிச்சயத்தோடு சொன்னான். திரிவக்கரை கீழே இருந்து எழுந்தவளால் நிறாகக் கூட முடியவில்லை. கூன் போட்டு நிற்கும் அவளுக்குத் தன்னுள் ஏதோ மாற்றங்கள் நிகழ்கின்றதோ என்றும் தோன்றியது. மிகவும் பிரயத்தனப் பட்டு நிமிர்ந்து நிற்க முயன்றாள். என்ன ஆச்சரியம்? அவளால் நிமிர்ந்து நிற்க முடிந்ததே? கால்கள்? அவையும் நேராகிவிட்டனவே? இதோ, மெல்ல மெல்ல அவள் நிமிர்ந்து நிற்கின்றாளே? ஆஹா, இதோ நிமிர்ந்துவிட்டாள். தன்னுடைய முழு உயரத்தோடும், நேராகவும், வளையாமல் கூனாமல் நிற்க முடிகிறதே அவளால்? தூக்கிவாரிப் போட்டது திரிவக்கரைக்கு? இது என்ன? அதிசயமா? மீண்டும் அவள் கூனியாகிவிடுவாளோ? கனவா? இல்லை நனவா? நனவே தான். இதோ மக்கள் கூட்டம் ஆச்சரியத்தில் அதிர்ச்சியோடு அவளைப் பார்க்கிறதே? தன் வயதையும் மறந்து சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாள் திரிவக்கரை”. என் கடவுளே, என் கடவுளே, நீ எனக்குப் பெரிய உதவி செய்துவிட்டாயே? என் கூனை நிமிர்த்திவிட்டாயே? ஆறாய்ப் பெருக்கெடுத்த நன்றியுணர்வோடு கண்ணன் காலடிகளில் மீண்டும் வீழ்ந்தாள் திரிவக்கரை.

Thursday, October 29, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - திரிவக்கரையின் ஆசை!

மதுரா நகரெங்கும் பரபரப்பு. மக்களின் ஆவல் கட்டுக்கடங்காமல் இருந்தது. தேவகியின் எட்டாவது பிள்ளை உயிரோடு இருக்கிறானாமே? நாளை வரப் போகிறானாம். அவனுக்கு அண்ணனும் ஒருத்தன் இருக்கிறானாம். பார்க்க ஒரு பயில்வான் போல் இருப்பானாம். இந்தக் கண்ணன், அதான் தேவகியின் எட்டாவது பிள்ளை ஏதேதோ அதிசயங்கள் எல்லாம் செய்கிறானாமே. பாற்கடலில் இருந்து எழுந்து வந்த அந்தப் பரந்தாமனை ஒத்து இருக்கின்றானாமே. ம்ம்ம்ம்? அந்தப் பரந்தாமனே இந்தப் பிள்ளையாக அவதாரம் செய்திருப்பதாய்ச் சொல்கின்றனர். எவ்வளவு தூரம் உண்மைனு தெரியலை. எல்லாம் நாளை தெரிந்துவிடும். காத்திருந்தவர்களுள் ஒருத்தி திரிவக்கரை என்னும் பெண்மணி. கம்சனின் அரண்மனையில் அனைவருக்காகவும் மலர்களையும், மலர்களிலிருந்து தயார் செய்யப் படும் வாசனைத் திரவியங்களையும் ராஜ வம்சத்தினருக்காகச் சிறப்பாகத் தயார் செய்வாள். இதற்கென ஒரு பெரிய குழுவே அவளுக்குக் கீழ் வேலை செய்கிறது. பல்வேறுவிதமான மூலிகைகளும், வாசனை மலர்களும் கொண்ட ஒரு பெரிய அழகான தோட்டத்தைப் பராமரித்து வந்தாள் திரிவக்கரை. திரிவக்கரை என்பது அவளின் உண்மையான பெயர் அல்ல.

பிறக்கும்போது எல்லாரையும் போல் சாதாரணப் பெண்ணாக, கொஞ்சம் அழகாகவே தான் இருந்தாள் திரிவக்கரை. பனிரண்டு வயதில் வந்த காய்ச்சல் ஒன்றில் பல மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்துவிட்டுப் பின், சுகமடைந்தபோது அவள் உடலின் மூட்டுக்கள் அங்கங்கே கோணிக் கொண்டு காட்சி அளித்தன. முதுகு கூனிவிட்டது. கூனை நிமிர்த்த முடியவில்லை. கால் மூட்டும் வளைந்துவிட்டது. அந்தக் கால வழக்கப் படி அவளுக்குப் பனிரண்டு வயதுக்கு முன்பே திருமணம் ஆகி இருந்தது. திருமணத்திற்குப் பின்னரே உடல்நிலை சீர்கெட்டது. உடல்நிலை சரியானதும் மனைவியின் கோணலான உடம்பைப் பார்த்த அவள் கணவன், கம்சனின் யானைப்படையில் பெரும்பதவி வகிப்பவன், அவளை ஏற்றுக் கொள்ள மறுக்கவே மனம் வெறுத்து, மனம் உடைந்து, உலகின் மீதே வெறுப்புற்றிருந்தாள் திரிவக்கரை. அவள் முகம் இன்னமும் அழகை இழக்கவில்லை. ஆனாலும் அவளுக்கு இல்லற வாழ்வையும், சந்தோஷத்தையும் இந்த உலகம் மறுத்துவிட்டது. மனதில் வாங்கிய பலத்த அடியோடு, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே தன் இனிமையான பேச்சால் அனைவருக்கும் வாசனைத் திரவியங்களை அளிக்கும் பணியைச் செய்துவந்தாள். அவள் தாயிடமிருந்து வம்சாவழியாகப் பெற்ற இந்த வேலையே அவள் வயிற்றைக் கழுவவும் உதவி வந்தது. அரண்மனையின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்லக் கூடிய உரிமையையும் பெற்றிருந்தாள். அரச வம்சத்தினரின் அனைத்து நபர்களின் அரண்மனைகளுக்கும், அவர்களின் பிரத்யேக அலங்கார அறைக்குள்ளும் செல்ல அவளால் முடியும். இத்தனை உடல் சீர்கேட்டிலும், உலகம் தன்னை மதிக்கவில்லை என்ற துன்பத்தையும் வெளிக்காட்டாமல் எப்போதும் சிரித்த முகத்துடனேயே ஏதாவது நகைச்சுவையாகப் பேசிக் கொண்டே தன் வாசனைத் திரவியங்களை அரண்மனை வாசிகளுக்கு அளிப்பாள்.

தனது உண்மைப்பெயரான மாலினி என்பதையே கிட்டத் தட்ட அவள் மறந்துவிட்டாளோ என்னும்படி இந்தத் திரிவக்கரை என்னும் பெயராலேயே அவளைச் சிறு குழந்தைகள் கூட அழைத்தனர். அவளை முகத்துக்கு நேரேயே கூனி என்றும், திரிவக்கரை என்றும் அழைப்பவர் பலர் உண்டு. என்றாலும் அவள் வரையில் எதையும் பொருட்படுத்தியதில்லை. அவள் தன்னைத் தானே கேலியும் செய்துகொள்வாள். கம்சனின் அந்தப் புரத்திற்குள் சுதந்திரமாய் நுழையும் உரிமை அவளுக்குண்டு. எந்தக் கேலிக்கும், கிண்டலுக்கும் சிரிக்காத கம்சன் திரிவக்கரை தன்னைத் தானே கேலி செய்து கொள்வதைக் கண்டு மனம் விட்டுச் சிரிப்பான். ஆனாலும் தன்னுடைய அழகான முகத்திலும், தன்னுடைய கால்கள் நேராக இருந்திருந்தாலோ, உடல் கூனாமல் சரியாக இருந்தாலோ, இந்த அரண்மனை ராஜகுமாரிகளை விடவும் தான் அழகாய் இருந்திருப்போம் என்ற உண்மையும் அவள் மனதில் படிந்திருந்தது. ஆனாலும் என்ன செய்ய முடியும்? விதி இப்படி அவளை மாற்றிவிட்டதே? ஆனாலும் அவள் மனம் தளரவில்லை. தனிமையில் இருக்கும்போதெல்லாம் தான் சரியாக, நேராகத் தன் உடல் இருப்பது போல் உணர்ந்தாள். தான் அன்றாடம் வணங்கும் கடவுளான மஹாதேவ சங்கரனின் கிருபையால் தான் உடல் நிமிர்ந்து மிகவும் அழகாய் விளங்குவதாய்க் கற்பனை செய்து கொள்வாள். தன் உடலின் ஒவ்வொரு மூட்டும் அழகாயும், நன்கு வளர்ச்சி பெற்றும், நிமிர்ந்து நேராயும், வனப்போடும் காட்சி கொடுப்பதாயும், அழகான இளம்பெண்ணாகத் தான் தோன்றுகிறாப்போலவும் நினைத்துக் கொள்வாள்.

இப்படி நினைத்து, நினைத்து அவள் மனதில் கடவுளின் கிருபையால் தான் சரியாகிக் கொண்டே இருக்கிறோம் என்ற உணர்வு நன்கு படிந்திருந்தது. நான்கு நாளைக்கு முன்னால் அரண்மனையில் தேவகியின் எட்டாவது பிள்ளை உயிரோடு இருப்பதாகவும், அவன் மதுராவுக்கு வரப் போகிறான் எனவும் பேசிக் கொண்டனர். ஆஹா, அவன் மதுராவுக்கு வரட்டும். ஏதேதோ அற்புதங்களை நிகழ்த்துகிறானாமே? அவன் மட்டும் என்னை மூன்று கோணல் உள்ள பெண் என அழைக்கும் இந்த மனிதர்களுக்கு முன்னால் என்னை ஒரு அழகி என்றும், கோணலே இல்லாத நேராக நிமிர்ந்து இருக்கும் பெண் என்றும் காட்ட மாட்டானா? அப்படிக் காட்டினால்?? அடடா? என்ன ஆநந்தம்? என்ன ஆநந்தம்?? இந்த மனிதர்கள் அனைவரும் உண்மையில் குருடர்கள் என்றே சொல்லணும். இல்லாவிட்டால் இவ்வளவு அழகாயும், உடல்கட்டாயும் இருக்கும் என்னைப் போய்த் திரிவக்கரை என அழைப்பார்களா? கண்களில் கண்ணீர் ததும்ப திரிவக்கரைத் தன்னை அழகி என எல்லாரையும் கண்ணன் சொல்ல வைப்பான் என்ற நம்பிக்கையோடு மீண்டும், மீண்டும் அந்த மஹாதேவனைப் பிரார்த்தித்தாள். ஆனால் அரண்மனையின் இளவரசிகள் கம்சனால் அந்தக் கண்ணன் படப்போகும் பாட்டை நினைத்து மகிழ்ச்சியோடு பேசிக் கொள்கின்றனரே? அப்படியும் நடக்குமோ? மதுராவில் கம்சனுக்கு விசுவாசமாய் இருக்கும் சிலர் மட்டுமே இந்தக் கண்ணன் அழிக்கப் படவேண்டியவன் என நினைக்கலாம். பெருவாரியான யாதவர்கள் தங்களைக் காக்கவே கிருஷ்ணன் வருகிறான் என்ற ஆவலுடனேயே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அரண்மனைவாசிகள் பேசிக் கொள்வதை அங்கே செல்லும்போதெல்லாம் கேட்டுக் கொள்வாள் திரிவக்கரை. தன் கண்ணையும், செவியையும் நன்கு திறந்து வைத்துக் கொண்டு கம்சனின் அரண்மனைவாசிகள் பேசுவதையும் கேட்டுக் கொண்டாள். நந்தனின் பிள்ளையாக வளர்ந்த தேவகியின் எட்டாவது பிள்ளையைப் பற்றிப் பலரும் பலதரப்பட்ட கதைகள் பேசுவதையும் கேட்டாள். கோவர்தன மலையையே தூக்கிவிட்டானாமே? நாரதர் ஏற்கெனவே சொன்ன மாதிரி கம்சனை அவன் தான் கொல்லுவானோ? இவங்க சொல்லுவது எல்லாம் உண்மை என்றால் நந்தனின் மகனாய் வளர்ந்த அந்தக் கண்ணன் ஒரு கடவுள் மட்டுமில்லை, அவனே கம்சனுக்கு எதிரியும் கூட. நாட்கள் நெருங்க, நெருங்கத் திரிவக்கரையால் தூங்கக் கூட முடியவில்லை.


ஆனாலும் அவள் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. முன்னை விட அதிகமாய்ச் சிரித்தாள், சிரிக்க வைத்தாள். ஆனாலும் நிற்கும்போதும், நடக்கும்போதும், பேசும்போதும், சிரிக்கும்போதும் அவளுள் ஏதோ ஒன்று அவளிடம், “உன் ஆண்டவன் வந்துவிட்டான். இனி உன் பிரார்த்தனைகள் செவிசாய்க்கப் படும். உன் எண்ணம் ஈடேறும்” என ஏதோ காதுகளில் வந்து சொன்னாப்போல் அவளுள் ஒரு பூரிப்பு. தன்னிடம் இருந்த மிகச் சிறந்த ஆடைகளை இந்தத் தருணத்தில் அணியவேண்டும் என எடுத்து வைத்துக் கொண்டாள். கண்ணனுக்கு அளிக்கவென வில உயர்ந்த வாசனைத் திரவியங்களையும் தயார் செய்து கொண்டாள். அப்போது ஒருநாள் மாலையில் அவளுக்குச் செய்தி கிடைத்தது கண்ணன் மதுராவிற்கு வந்துவிட்டான் என்றும், அவனும் அவன் அண்ணன் பலராமனும் விருஷ்ணிகுலத் தலைவன் ஆன அக்ரூரரோடு தங்கி இருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்தது. அன்று அரண்மனையில் பல விசித்திரமான நிகழ்வுகளையும் அவள் கண்டாள். அரண்மனைக்குள் பலரும் வந்து போனார்கள். அவர்களில் முக்கியமாய் அக்ரூரர், ப்ரத்யோதா, விருதிர்கனன், ஆகா என்னும் கம்சனின் நம்பிக்கைக்குரிய வீரன். இவர்கள் தனித்தனியாகக் கம்சனைச் சந்தித்ததோடு அல்லாமல் வ்ருதிர்கனனோடும், ஆகாவுடனும் கம்சன் நிறைய நேரம் ஆலோசனைகள் செய்தான். இவர்களில் அக்ரூரரைக் கண்டால் திரிவக்கரைக்குப் பிடிக்காது. அவள் கொடுக்கும் வாசனைத் திரவியத்தை அவர் மறுப்பார். மகத வீரனையும் பிடிக்காது, அவளுடைய வாசனைத் திரவியத்தை அவன் குறை சொல்லுவான். இத்தனைக்கும் ஒரு மலரின் வாசனைத் திரவியத்துக்கும், மற்ற மலரின் வாசனை திரவியத்துக்கும் உள்ள வேறுபாட்டை அவன் அறிய மாட்டான்.

அப்போது, அப்போது தான் அவள் மேலும் கேள்விப்பட்டாள், படை வீரர்கள் அனைவருக்கும் ஆயுதங்களைத் தாராளமாய்க் கம்சன் கொடுக்கச் சொல்லி உத்திரவிட்டிருப்பதாய். கம்சனின் ராணிகளும், ஜராசந்தனின் பெண்களும், மகத இளவரசிகளும் ஆன இரு சகோதரிகளும் கூட இனம் தெரியாத உத்வேகத்துடன் காட்சி அளித்தனர். அவர்கள் பேசியதில் இருந்து கிழவன் பஹூகாவும் அவனுடைய மகனையும் காணவில்லை என்றும், அதனால் யாதவத் தலைவர்கள் அனைவரும் மிகவும் கவலையுடனும், மன அழுத்ததுடனும் இருப்பதாகவும் காதில் விழுந்தது. மாளிகைக்குள் கம்சனைக் காண வந்தவர்கள் திரும்பவில்லையாம். கொல்லப் பட்டிருக்கக் கூடும் என்பதே அனைவரின் எண்ணமும் என்றும் புரிந்தது அவளுக்கு. ஆஹா, நந்தனின் மகன் மதுராவுக்குள் வந்திருப்பதற்கும் இதற்கும் ஏதோ சம்பந்தம் உள்ளது. திரிவக்கரை அன்றைய இரவைப் பரபரப்போடு கழித்தாள்.

மறுநாள் சீக்கிரமாய் எழுந்து குளித்துத் தயாராகித் தன்னை அலங்கரித்துக் கொண்டு கம்சனுக்கும், ராணிகளுக்கும் தேவையான வாசனாதி திரவியங்களை அளித்துவிட்டு மற்றவர்களுக்குத் தனக்குக் கீழ் வேலை செய்பவர்களை விட்டுக் கவனிக்கச் சொன்னாள். அவள் தன்னுடைய வாசனைத் திரவியங்கள் அடங்கிய பெட்டியைத் தூக்கிக் கொண்டு அக்ரூரரின் மாளிகையை நோக்கி நடந்தாள்.

Tuesday, October 27, 2009

கண்ணன் வருவான்,கதை சொல்லுவான், - கம்சனின் கொடூரம்!

ம்ம்ம்ம் யாதவ குலத்திலேயே மூத்த தலைவன், அதிலும் நம் சொந்த யாதவக்கிளையான அந்தகக் குலத்தின் மூத்த தலைவன், வயதில் மூத்தவன், அனைவராலும் நன்கு மதிக்கப் படுபவன், இவனை நான் வரக்கூடாது என்றோ, சந்திக்கமுடியாது என்றோ சொல்வது சரியாய் இருக்காது. வேறு வழியில்லை. தன்னை நிதானித்துக் கொண்ட கம்சன், சிங்காதனத்தில் இருந்து இறங்கிச் சற்று முன்னால் சென்று கிழவரை வரவேற்கத் தயாரானான். இந்த வயதுக்கும் முதுகும், முதுகுத் தண்டும், விறைப்பாக நிமிர்ந்து இருக்க, கிழவன் பஹூகா தன் பிள்ளையின் தோள்களைப் பிடித்த வண்ணம் உள்ளே நுழைந்தான். “ஆஹா, வரவேண்டும், வரவேண்டும், சிறிய பாட்டனாருக்கு என் வணக்கங்கள்! தாங்கள் ஏன் சிரமப் படவேண்டும் பாட்டனாரே! சொல்லி அனுப்பி இருந்தால் நானே வந்திருப்பேனே!”

“யாரு இவங்க எல்லாம்?” கம்சன் சொன்னதுக்குப் பதில் சொல்லாமல் ப்ரத்யோதாவையும் வ்ருதிர்கனனையும் தன் நெற்றியில் கை வைத்த வண்ணம் கூர்ந்து பார்த்த கிழவன், “ஓ, இவர்களா? “ என்று கேட்டுக் கொண்டான். “அமருங்கள் பாட்டனாரே!” என்று ஆசனத்தைக் காட்டினான் கம்சன். “எனக்கு என்ன கட்டளை தங்களிடமிருந்து?” என்று உள்ளூரப் போலிப் பணிவுடன் கிழவனிடம் கேட்கவும் செய்தான். கிழவனின் தைரியமான கண்கள் கம்சனை ஏறிட்டன. “இதோ பார், கம்சா, கடைசியாக என்னுடைய புத்திமதியை நம் குல நன்மையை உத்தேசித்து உனக்குச் சொல்ல வந்துள்ளேன். இப்போது இருக்கும் யாதவகுலத்தலைவர்களிலேயே வயதிலும், அனுபவத்திலும் மூத்தவனாக நான் ஒருவனே இருக்கின்றேன். அதனால் இந்த உரிமையை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன்.” என்றார் பஹூகா. “ஆம்” என்ற ஒற்றைச் சொல்லோடு முடித்துக் கொண்டான் கம்சன்.

“அக்ரூரன் வசுதேவனின் பிள்ளையைக் கூட்டி வரச் சென்றிருப்பதாய் அறிகிறேன். நாளைக் காலைக்குள் அவர்கள் வந்துவிடுவார்களோ?”

“ஆம்” என்றான் கம்சன்.

“நீ பிறந்ததில் இருந்தே உன்னை நான் அறிவேன் கம்சா! நீ அந்தப் பிள்ளைகளை விட்டு வைக்க மாட்டாய், உன் வழியில் இருந்து அகற்றவே முயலுவாய்!”

“நான் ஏன் அந்தப்பிள்ளைகளிடம் விரோதம் பாராட்டவேண்டும்? எனக்கும் அவங்களுக்கும் நடுவே என்ன வந்தது?”

“கம்சா, நடிக்காதே! நாரதரின் தீர்க்க தரிசனத்தையும், அவர் தேவகியின் திருமண நாளன்று சொன்னதையும் நீ மறந்திருக்கவும் மாட்டாய். அதற்காகப்பயப்படவும் செய்கிறாய். அதை மறுக்கவோ, மறைக்கவோ செய்யாதே! என்னை ஏமாற்ற நீ நினைத்தால் உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளுவாய்! நாரதர் சொன்னவை பொய்யாக வேண்டும், நீ அதற்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்ளவேண்டும் என்பதே என் விருப்பம்!”

“ஹா, ஹா, ஹா, அந்த முட்டாள் முனி நாரதன் சொன்னதை அந்த முட்டாள் தனமான வார்த்தைகளை யார் நம்பறாங்க? நான் நம்பலை, அதுசரி, பாட்டனாரே? அது மட்டும் உண்மையாய் இருந்தால் , நான் எப்படி அதைப் பொய்யாக்கமுடியும்னு சொல்றீங்க?”

“குழந்தாய், செய்த, செய்யும், செய்யப்போகின்ற குற்றங்களுக்காக நீ வருந்தி மன்னிப்புக் கேள். வருந்தி மன்னிப்புக் கேட்கும் ஒருவன் இறந்தவனாகவும், அதன்பின்னர் அவன் வாழும் வாழ்க்கையைப் புனர் ஜென்மமாகவும் ஆன்றோர் கருதுவார்கள். இப்போது உனக்குக் கிடைத்திருக்கும் இந்தக் கடைசி சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நீ மனப்பூர்வமாய் மன்னிப்புக் கேட்டுவிடு. நடந்தவைகள் அனைத்துக்குமாய்! உனக்கு மன்னிப்பும் கிடைக்கும், நீ இறந்தவனாகி, மீண்டும் புனர்ஜென்மமும் பெறுவாய்! உனக்கான தண்டனையும் கிடைத்தாற்போலவும், நாரதரின் தீர்க்கதரிசனம் பலித்தாற்போலவும் ஆகிவிடும். மன்னிப்புக் கேள், குழந்தாய், மன்னிப்புக் கேள், அதைவிடச் சிறந்ததொரு பரிகாரமே இல்லை!”

“ஹாஆஆ, நான் எப்படி அதை உண்மை என நம்பமுடியும், என் அருமைப் பாட்டனாரே! மன்னிப்புக் கேட்ட பின்னரும் என்னைக் கொன்றுவிட்டால்?? அதுவும் நடக்கக்கூடியதே!”

இல்லையப்பா, இல்லை, அது எல்லாம் மனப்பூர்வமாய் மன்னிப்புக் கேட்கவில்லை எனில் நடக்கும் ஒன்று. அப்படி ஒருவேளை வசுதேவனின் பிள்ளை கிருஷ்ணன் அந்தப்பரம்பொருளே இல்லை என்றாலும், நீ மட்டும் மன்னிப்புக் கேட்டாயானால் உன் மக்களே உன்னைக் கைவிடமாட்டார்கள். உன்னிடம் அதீத அன்பு செலுத்துவார்கள். அப்படி இல்லாமல் வசுதேவனின் பிள்ளை அனைவரும் சொல்லுவதுபோல, அந்தப் பரந்தாமனே என்றாலும், சரி, நிச்சயம் அவனுடைய அருள் உன்னைக்காக்கும். நீயும் முன்னைவிடப் பலம் பொருந்தியவனாய் ஆகிவிடுவாய்.”

“எவ்வாறு நான் மன்னிப்புக்கேட்கவேண்டும், பாட்டானாரே?” பரிகாசமான தொனியில் கம்சன் கேட்டான்.

“ம்ம்ம்ம் நான் சொல்லுவதில் உனக்கு நம்பிக்கை இல்லை என்பது புரிகிறது. ஆனாலும் நான் இங்கே வந்ததின் காரணமே நல்வழியை, உண்மையான சிறந்த வழியை உனக்குக் காட்டவே. உன்னால் எவ்வளவு முடியுமோ அதைவிட மேலாக வசுதேவனையும், தேவகியையும் நீ துன்புறுத்திவிட்டாய். யாதவகுலத் தலைவர்களை ஒன்றுமில்லாதவர்களாக ஆக்கி கிட்டத் தட்ட அடிமைகளாக்கிவிட்டாய். கம்சா, நேர்மையான வேதம் அறிந்த நல்ல பிராமண ஆசாரியர்களை மதுராவின் பக்கமே நீ வரவிடுவதில்லை. மதுரா இன்று ஒரு நரகம் என்றால் மிகையாகாது.” கிழவன் சற்றே நிறுத்தினான்.

“ம்ம்ம்ம், மேலே!” என்றான் கம்சன் ஏளனம் பொங்க.

கிழவனின் குரல் ஒரு தீர்க்கதரிசியின் நிச்சயத்தோடும், அவன் கண்களில் புதிதாய்த் தோன்றிய ஒரு ஒளியோடும், மேலும் சொல்லுவான். குரலில் ஒரு நிச்சயமும், உண்மைத்தன்மையும் காணப்பட்டது. “இதோ பார் இளவரசனே, எங்களைப் பூட்டி வைத்திருக்கும் இந்த அடிமைத் தளையிலிருந்து அனைவரையும் நீ விடுவிக்குமாறு அனைத்து யாதவர்கள் சார்பிலும், எல்லாருக்கும் பெரியவன் என்ற காரணத்திலும் உனக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். வசுதேவனையும், தேவகியையும், பிழைத்திருக்கும் அவர்களின் இரு பிள்ளைகளையும் சர்வ சுதந்திரத்துடனும், பயமில்லாமலும் வாழவிடு. இங்கிருந்து கோபத்திலும், பயத்திலும் வேறு நாடுகளுக்கும், நகரங்களுக்கும் சென்று வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து யாதவர்களையும் சகல மரியாதையோடு திரும்ப அழை. மீண்டும் வீடுகளில் வேதம் முழங்கட்டும். அதற்கு ஏற்ற பிராம்மணர்களையும் முன்போல் பயமில்லாமல் வாழச் செய். உனக்குப் பாதுகாப்பு என நினைத்து நீ ஏற்பாடு செய்துகொண்டிருக்கும் இந்த வெளிநாட்டானை அவன் நாட்டுக்குத் திருப்பி அனுப்பு. இவனைக் கண்டாலே நம் நாட்டு மக்கள் பயத்தோடு வெறுக்கின்றனர். எல்லாவற்றையும்விட முக்கியமாக உன் தந்தை, இந்த நாட்டின் அரசன் உக்ரசேனரை சிறையிலிருந்து விடுவித்து முன்போல் சுதந்திரமாக நாட்டை ஆளச் செய்வாய். அவருக்கு அடுத்து எப்படி இருந்தாலும் நீ தானே நாட்டை ஆளப் போகின்றாய்? இதை எல்லாம் செய்தால் நீ உன் மக்களைச் சுதந்திரமாக வாழவைத்தவன் ஆவாய்!”

“ம்ம்ம்ம்ம்ம்??? இத்தனையும் நான் செய்தாகவேண்டும், என்னை நல்லவனாகக் காட்டிக் கொள்ள?? இவை எல்லாம் என்னைப் புனிதப் படுத்திவிடுமா??? எனக்கு நானே பேதிமருந்து கொடுத்துக் கொண்டு என்னை நானே சுத்தப் படுத்திக் கொள்ளவேண்டும் என்கிறீர்கள்? அப்புறம் என்ன?? ம்ம்ம்ம்ம்??” கம்சன் மீண்டும் எகத்தாளமாய்க் கேள்வி கேட்டான்.

“அப்புறம் என்ன?? இறைவனின் மன்னிப்பு உனக்குக் கிடைக்கும். மக்கள் உன் மீது அன்பு செலுத்துவார்கள். உன் யாதவகுலமே உனக்குக் கடமைப் பட்டிருக்கும். எல்லாவற்றுக்கும் மேல் கிருஷ்ணன், உண்மையிலேயே அவன் கடவுளே என்றால் அவனின் பரிபூரண அருளுக்கு நீ பாத்திரன் ஆவாய்!”

“பாட்டனாரே, எனக்கு யோசிக்க அவகாசம் கொடுங்கள், நீங்கள் சொன்னதை எல்லாம் புரட்டிப் பார்த்து யோசிக்கிறேன். இப்போவே நான் உங்களுக்கு வாக்குக் கொடுக்கமுடியாது. உங்க யோசனை என்னமோ நன்றாகவே இருக்கிறது. ஆனாலும் எனக்கு யோசிக்கணும்.” என்றான் கம்சன்.

கிழவன் கண்கள் திடீரென ஒளிவீசியது. அவனுக்கு வயது தொண்ணூறு ஆகிவிட்டது என்பதை நம்பமுடியாமல் அவன் திடீரென இளைஞனோ என எண்ணும்படிக் காட்சி அளித்தான். கம்பீரமாய்த் தலையைத் தூக்கிக் கம்சனைப் பார்த்து, “நான் அறிவேன், நீ எந்தப் பேச்சையும் கேட்கமாட்டாய். உனக்குப் புத்திமதி சொல்லுவது வீண் என்பதை நன்கு அறிவேன். ஆனாலும் உனக்கு நான் கடைசி எச்சரிக்கை ஒன்று கொடுக்கிறேன். தொடர்ந்து பல வருடங்களாக யாதவர்களுக்கு நீ ஒரு சாட்டையைப் போல் திகழ்ந்து உன் செய்கைகளாலும், பேச்சாலும் அவர்களைத் துன்புறுத்தி வருகிறாய். ஆனால், கேள், கம்சா, கிருஷ்ண வாசுதேவனை உன்னால் வெல்ல முடியாது. அவனை அழிக்கலாம் என மனப்பால் குடிக்காதே. இந்த உலகின் கடைசி யாதவன் இருக்கும் வரையில் கிருஷ்ணவாசுதேவன் அவனைக் காக்க இருப்பான். இருந்தே தீருவான். யாதவர்களுக்கு அவனே கடைசி நம்பிக்கை, ஏன் உனக்கும் கூட அவனே கடைசி நம்பிக்கை, அவன் உன்னை மன்னித்தால் உண்டு, ஆனால் அதைப் புரிந்து நடந்து கொள்பவனாய் நீ இல்லை, பரிதாபம்தான்!”

“ஆஹா, பாட்டனாரே, என்னைப்பயமுறுத்துகிறாப்போல் இருக்கிறதே! எனக்கு எது நல்லதோ அதை நான் செய்தேன், செய்கிறேன், செய்வேன்.”

"எல்லாம் வல்ல சங்கரனும், தேவாதி தேவர்களுக்கெல்லாம் மஹாதேவனும் ஆன அந்த ஈசனின் கடுங்கோபத்தில் நீ விழாமல் இருக்கவேண்டும், உன்னை நீ மாற்றிக் கொண்டால் ஈசனின் கடுங்கோபத்தில் இருந்து தப்பிக்கலாம்.”

“ஹா...ஹா....ஹா....., எனக்கு எந்தக் கடவுளரிடமும் பயம் என்பதே இல்லை!” கம்சன் உடனடியாகப் பதில் சொன்னான்.

"இத்தனை திமிரோடும்,கடவுளிடம் கூடப்பயமின்றியும் இருக்கும் மனிதனுக்குத் துன்பமே விளையும். அவனால் ஆட்சி செய்யப் படும் மக்களும் துன்பமே அனுபவிப்பார்கள், மக்கள் எத்தனை நல்லவர்களாய் இருந்தாலும். அரசன் நல்லவனாய் இருந்தாலே அவர்களுக்கும் நன்மைகள் கிட்டும் “

“ஓஹோஹோ! இருங்க பாட்டனாரே, இருங்க,” கம்சன் சடாரெனத் திரும்பி வ்ருதிர்கனனைப் பார்த்து ஏதோ சமிக்ஞை செய்தான். அவனும் அதைப் புரிந்து கொண்டாற்போல் கம்சனை வணங்கிவிட்டு அறையை விட்டு அகன்றான். “பாட்டனாரே, நீங்கள் சொல்லுவதே சரி!” இன்னும் பரிகாசம் மாறாக் குரலிலேயே கம்சன் பேசினான். “கிருஷ்ணனை நான் ஒன்றும் செய்யப் போவதில்லை, உங்களுக்கு என் வாக்குறுதியைக் கொடுக்கிறேன். ப்ரத்யோதா, நீயும் பார்ப்பாய்! அதற்கான ஏற்பாடுகளை நீயே செய்!”

“உத்தரவு அரசே!” கம்சனின் இந்தப் பரிகாசச் சிரிப்பின் பின்னால் பல விஷயங்கள் மறைந்திருக்கிறதை ப்ரத்யோதா புரிந்து கொண்டான். “ உன் வார்த்தைகளை நீ காப்பாற்றுவாய் என நினைக்கிறேன் குழந்தாய்,” என்று சொல்லிக் கொண்டே எழுந்தான் தொண்ணூறு வயதான அந்தகத் தலைவன் பஹூகா. ப்ரத்யோதாவும் அவனுடன் செல்லத் திரும்பியபோது கம்சன் ப்ரத்யோதாவை மட்டும் அழைத்தான்.

“ப்ரத்யோதா, கிழவருக்குக் கொடுத்த என்னுடைய வாக்குறுதி நினைவிலிருக்கட்டும். நான் கிருஷ்ணனை எந்தத் தொந்திரவும் செய்யமாட்டேன். ஆனால் அதற்காக அவனை என் கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்திவிடாதே. அந்தத் தவற்றை மட்டும் செய்துவிடாதே. “ ஒரு மாதிரியான பரிகாசம் மீதேறிப் போன குரலில் சிரித்தான் கம்சன். “தங்கள் உத்தரவுப்படியே அரசே!.” மிகவும் பிரயத்தனப்பட்டுக் கோபத்தை அடக்கியதால் ப்ரத்யோதாவின் குரல் கம்மியது. கம்சனை நமஸ்கரித்து வணங்கிவிட்டு அறையை விட்டு வெளியே வந்தான் ப்ரத்யோதா. அவன் காதுகளில் ஆஹா, இது என்ன சப்தம், வாட்கள், வாட்களோடு மோதுகின்றதோ? யாருக்கு என்ன?? ஏதோ ஆபத்து! உடனே போய் உதவணும். ப்ரத்யோதா ஓடினான்.

அறைக்கு வெளியே நடைபாதையில் சென்று கொண்டிருந்த ப்ரத்யோதா வேகமாய்ச் செல்லும்போது அவன் கண்களுக்கு முன்னால் கொஞ்ச தூரத்தில் ஒரு வாள் வீழ்த்தப்பட்டுக் கீழே விழுவதும், ஒரு தலைவனுக்குரியவரின் கிரீடம் ரத்தத்தில் தோய்ந்து தூக்கி வீசப்பட்டதும் தென்பட்டது. முன்னால் நடப்பவர்களின் காலடிச் சப்தங்களைத் தொடர்ந்த ப்ரத்யோதா அங்கே பாதை ஒரு இருட்டான முடுக்கில் திரும்பவே வேகமாய்த் திரும்பினான். ப்ரத்யோதாவின் கண்களில் இரு உடல்களைத் தூக்கிச் செல்லும் மகத வீரர்கள் தென்பட்டனர். ப்ரத்யோதாவுக்கு உலகமே சுழன்றது. தன்னைத் தானே கட்டுப் படுத்திக் கொள்ளமுடியாத ப்ரத்யோதா அருகிலிருந்த ஒரு தூணைப் பிடித்துச் சமாளித்துக் கொண்டான். கிட்டத் தட்ட அரை மணிக்கு மேல் மயக்க நிலையிலேயே இருந்த அவன் கண்விழித்துப்பார்த்து கண்களில் கண்ணீர் பொங்க தன் உதடுகளைத் தானே ரத்தம் வரும் வரையில் கடித்த வண்ணம் தீவிர சிந்தனையில் இருந்தான். மெல்ல மெல்ல அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

Monday, October 26, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், - கம்சனுக்குப் பயம்!

இப்போக் கொஞ்சம் அவசரமாய் நாம கம்சனின் அரண்மனைக்குள்ளே போகணும். ஒரு நடக்கக் கூடாத விபரீதம் நடக்கப் போகிறது, அதுவும் கண்ணன் வரும் முன்னால், அவனுக்கு எச்சரிக்கும் விதமாயோ?? என்னனு தெரியலை, போய்ப் பார்த்துடுவோமே! கண்ணனும், அக்ரூரரும் பலராமனோடு நுழைவதற்கு முன்னாலே நாம போய்ப் பார்த்துத் தெரிஞ்சுக்கலாம். வாங்க, வாங்க சீக்கிரம் அதுக்குள்ளே கண்ணன் வந்துடப் போறான். கம்சனின் அரண்மனையில் எட்டிப் பார்ப்போமா???

இதோ கம்சன், அவன் அரண்மனையில். என்னவோ தீவிர சிந்தனையில் இருக்கிறான். ஆனால் இது என்ன?? ஏதோ தவிப்பில் இருப்பவனாய்க் காணப்படுகிறானோ? ஆமாம், ஆமாம், கம்சனுக்குள்ளே ஏதோ இனம் புரியாத தவிப்பு. சங்கடம். மகதச் சக்கரவர்த்தி ஜராசந்தனின் மாப்பிள்ளையான கம்சனுக்கு, என்ன சங்கடம்?? முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அவன் ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறான். அண்டை நாட்டு அரசர்களெல்லாம் கம்சன் தங்கள் நாட்டின் மீது படை எடுக்காமல் இருக்கணுமே என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். பயந்து நடுங்குகின்றனர். மகதநாட்டுப் படை வீரர்களின் தேர்ந்த திறமைசாலிகளான வீரர்கள் மூவாயிரம் பேருக்கும் மேலே கம்சனின் அரண்மனையைக் காவல் காக்கின்றார்கள். இன்னும் என்ன?? அவன் சார்ந்த அந்தக வம்சத்தின் அனைத்துத் தலைவர்களும், ஒரு சிலரைத் தவிர, ஹும், அவங்க எல்லாம் தேவகிக்கு ஏதோ உறவு முறை, அதான், மற்ற அனைத்துத் தலைவர்களும் கம்சனுக்கு விஸ்வாசமானவர்களாகவே இருக்கின்றனர். ஏன், கொஞ்சம் அசட்டுத் தனமாக நடக்கும் தன் தளபதியான ப்ரத்யோதா கூட இதுவரை விசுவாசமானவனாகவே இருக்கிறான்.

யாதவர்களின் பிரிவுகளை மேலும் பிரித்தாயிற்று. இப்போது அவர்களுக்குள் ஒற்றுமை என்பதே இல்லை. அவர்களுக்கு ஆலோசனைகள் கூறும் பிராமணர்களோ, இப்போது அடங்கி ஒடுங்கிக் கிடக்கின்றனர். அவர்கள் இருக்கும் இடமே தெரியவில்லை. நான் யார் என்பதைக் காட்டும்படியாக வலுவான ஒரு அடி கொடுத்தால் போதும், அனைவரும் நிரந்தரமாய் அடங்கிக் கிடப்பார்கள். என்ன செய்யலாம்???? ம்ஹும், ம்ஹும், என்னதான் இது எல்லாம் எனக்கு ஆறுதலையும், சமாதானத்தையும் கொடுத்தாலும், என்னை உறுத்தும் விஷயம் ஒன்று உள்ளதே. இந்த தேவகியின் எட்டாவது குழந்தை உயிரோடு வளர்ந்து பதினாறு வயது பாலகனாக இருக்கிறானே! ம்ம்ம்ம்ம்??? இங்கேயும் வரப் போகிறான். அவனை அனைவரும் மிகவும் கெட்டிக் காரன் என்றும் சாமர்த்தியசாலி என்றும் எப்படிப் பட்ட மனிதர்களையும் கவர்ந்துவிடுவான் என்றும் சொல்லுகின்றார்கள். ஆனால் என்ன? அவன் ஒரு இடைப்பிள்ளைதானே? ஹாஹாஹா! அவன் ஒரு இடையனால் வளர்க்கப் பட்டவன். ஹாஹா, அவன் ஒரு இடையனே தான்.

கம்சன் தனக்குள்ளே சிரித்துக் கொண்டான். ஒரு இடையன் என்னதான் சாமர்த்தியசாலியாய் இருந்தாலும், அவன் என்னதான் மாயாஜாலங்கள் புரிந்தாலும் அதெல்லாம் அந்த விருந்தாவனத்துக்குள்ளே. அவங்களுக்கு வேண்டுமானால் இதெல்லாம் அதிசயமாய்த் தெரியும். இந்தக் கம்சனுக்கு இல்லை. ஆனால், ஆனால், இந்த வசுதேவரும், தேவகியும், மற்றச் சில யாதவத் தலைவர்களும் அவனை என்னமோ காக்க வந்த தேவன், சாட்சாத் பரந்தாமன் என எண்ணுகின்றனரே? யார் அவன்? அந்தப் பர வாசுதேவனோ??? பரந்தாமன் என அழைக்கப் படும் வாசுதேவனின் அவதாரம் என எண்ணுகின்றனரோ? ஹா, வாசுதேவனாவது? அவதரிப்பதாவது? என்னமோ அந்த நாரதன் பிதற்றினான் என்று இவர்களெல்லாம் கூத்தடிக்கின்றனரோ? ஆனால் அந்த கர்காசாரியான் இதை நம்புகிறான் என்கின்றார்களே? ஹூம், ஹூம், அந்த கர்கன், ஆசாரியனா அவன்? அவனைக் கேட்டால் தனக்கு இது பற்றி எல்லாம் எதுவுமே தெரியாது என்று எண்ணும்படியாக அல்லவோ நடந்து கொள்கின்றான்? அவனுக்குத் தெரியாமலா இருக்கும்? மக்கள் அனைவரும் கர்காசாரியார் அனைத்தும் அறிந்தவர் எனப் பேசிக் கொள்கின்றார்களாமே? யாரை ஏமாற்றுகிறான் அந்தக் கிழப் பிராம்மணன்???

என்ன முயன்றும், அந்தக் கண்ணன் என்னும் கிருஷ்ணன், யாதவகுலத்தைக் காக்கவந்த பரந்தாமன் என்னும் எண்ணத்தை என்னால் மக்களிடமிருந்து போக்க முடியவில்லையே? அனைவரும் அப்படியே அல்லவோ நினைக்கின்றனர்?? ம்ம்ம்ம்ம்?? என்னைச் சுற்றி ஏதேனும் சதிவலை பின்னப் பட்டிருக்கிறதோ? அல்லது இப்போது சதி நடக்கிறதோ? என்னை அறியாமல் நான் அதில் விழுந்துவிட்டேனோ? சேச்சே, அதெல்லாம் இல்லை, என்னை ஒடுக்க யாராலும் முடியாது. அதுசரி, அந்த அக்ரூரன் என்ன சொல்லிக் கண்ணனை மதுராவுக்கு அழைத்து இருப்பான்? இத்தனை நேரம் விருந்தாவனம் போயிருப்பான் அல்லவோ? கண்ணனை நான் அழைத்ததைச் சொல்லி இருப்பானா? என்ன பதில் கிடைத்திருக்கும் அவனுக்கு?ம்ம்ம் எப்படியும் அக்ரூரன் நாளை அவர்களை அழைத்து வந்துவிடுவான். எப்படி இருப்பார்கள் இரு இளைஞர்களும்?? சிறு பையன்கள் தானே! என்ன பயம் அவர்களிடம்??? இரவு முழுதும் தூக்கமின்றிக் கழிந்தது கம்சனுக்கு. அவனால் ஒரு இடத்தில் உட்காரவும் முடியவில்லை, படுக்கவும் முடியவில்லை, நடந்தான், அதுவும் முடியவில்லை. தவித்துக் கொண்டிருந்தான் கம்சன். சற்று யோசித்துவிட்டு தான் மகதத்திலிருந்து திரும்பி வரும்போது கூடவே அழைத்து வந்த நர்த்தகியின் வீட்டுக்குச் சென்று ஆடல், பாடல்களில் மனதைத் திசை திருப்பினான் கம்சன்.

ஆடிக் கொண்டிருந்த அந்த நாட்டியக் காரியும் கம்சனிடம் கேட்ட கேள்வி தான் அவனால் தாங்க முடியவில்லை. அந்த நாட்டியக் காரி கேட்டாள், “ அரசே, தேவகியின் எட்டாவது குழந்தை உயிரோடு இருக்கிறானாமே? நாளை இங்கே வருகிறானாமே? அந்தப் பிள்ளைதான் பரவாசுதேவனின் அம்சமாமே? செயற்கரிய செயல்களை அநாயாசமாய்ச் செய்கின்றானாமே?” இது தான் அவளும் கேட்டாள். கோபம் பொங்கியது கம்சனுக்கு. எந்த நினப்பை மாற்றி வேறு நினைவுகளில் ஆறுதல் தேடி வந்த இடத்திலும் அவன் நினைவா? கோபத்துடன் அந்தப் பெண்ணை அடித்துக் கீழே தள்ளிவிட்டுத் தன் மாளிகையை நோக்கிப் பெருநடை நடந்து சென்றான் கம்சன். ஆஹா, இது தெரிந்த இவளுக்கு அந்தப் பையன் தான் கம்சனைக் கொல்லப் போகிறான் என்ற செய்தியும் அல்லவோ தெரிந்திருக்கும்? என் மாளிகையே அறிந்துள்ளதா இவ்விஷயத்தை? என்ன அவமானம்? என்ன அவமானம்? தன் மாளிகையினுள் நுழைந்த கம்சன் அவசரமாகப் ப்ரத்யோதாவையும் வ்ருதிர்கனனையும் வரச் சொன்னான். இருவரும் வந்தனர். இருவரையும் பார்த்த கம்சன் கோபத்தில் குதித்தான். எப்படித் தெரிந்தது அரண்மனை வாசிகளுக்கு? தேவகியின் எட்டாவது பிள்ளை விருந்தாவனத்தில் இருப்பதும், நாளை வருகிறான் என்பதும் எப்படி அறிந்தனர் அனைவரும்?? ப்ரத்யோதா தயக்கத்துடன் சொன்னான்:”இளவரசே, தாங்களே யாதவகுலத் தலைவர்கள் அனைவருடனும் ஏற்பட்ட சந்திப்பின்போது அனைவர் முன்பும் அக்ரூரரை அங்கே சென்று கண்ணனை அழைத்துவரும்படிப் பணித்தீர்கள். தங்கள் திருவாயாலேயே அனைவரும் கேட்க நேர்ந்தது. தாங்கள் சொன்ன இந்த விஷயம் அரண்மனைக்குள் பரவாமல் எப்படி இருக்கும்?” ப்ரத்யோதா தன்னிரு கைகளையும் கூப்பிய வண்ணமே பதில் தந்தான்.

"சரி, சரி, எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் என்ன ஆனாலும் சரி, அந்தக் கண்ணனை என் அரண்மனைக்குள் நுழையவே விடாதே. அவன் என் எதிரிலேயே வரக்கூடாது. நினைவிருக்கட்டும். அதற்கு முன்னாலேயே அவன் மதுராவினுள் நுழைந்ததுமே அவனை ஒரு வழியா ஒழித்துவிடு. ப்ரத்யோதா, நான் சொல்வது புரிந்ததா? இதனால் என்ன நடந்தாலும் அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. தநுர்யாகம் செய்யப் போகும் வில்லின் அருகே கூட அவன் வரக்கூடாது. வரவிடக் கூடாது. இது நினைவில் இருக்கட்டும். என்ன, நான் சொல்லுகிறேன், நீ ஏதோ நினைத்துக் கொண்டிருக்கிறாயே? ப்ரத்யோதா சிலநாட்களாக நீ நீயாக இல்லை, ஏதோ மாறிவிட்டாய் என நினைக்கிறேன்."

ப்ரத்யோதா நடுங்கினான். "இல்லை அரசே, இல்லை, அப்படி எல்லாம் இல்லை, தாங்கள் சொன்னபடியே நடக்கும்." என்றான் நடுங்கிய குரலில். மேலும் "நான் நன்றாகவே இருக்கிறேன், எப்போதும்போலவே இருக்கிறேன் அரசே. இந்தக் கொண்டாட்டங்களின் விளைவாக ஏற்பட்ட அதிகப் படி வேலைப்பளுவின் காரணத்தினால் கொஞ்சம் அசதி! எனக்கும் வயதாகிவிட்டதல்லவா?" என்றான் ப்ரத்யோதா.


"சரி, சரி, ப்ரத்யோதா, ஒற்றர்களை நியமித்து அனைத்து யாதவத் தலைவர்களையும் கண்காணிக்கச் சொல்லு. ப்ரத்யோதா! உன் சகோதர்கள் நம்பிக்கைக்கு உகந்தவர்கள் தானே? அதையும் உறுதி செய்து கொள். வ்ருதிர்கனா, ஒவ்வொரு யாதவத் தலைவனின் ஒவ்வொரு சிறு அசைவையும் உன் வீரர்களைக் கண்காணிக்கச் சொல். அவங்க யாரையும் நம்பமுடியாது. திடீர்னு மாறிடுவாங்க. எல்லாருக்கும் நான் செத்து ஒழியணும்னு ஒரே ஆசை! ஹாஹாஹாஹாஹா!” கம்சன் பெருங்குரலெடுத்துச் சிரித்தான். “ஆனால் நான் தைரியமாகவும், தெம்பாகவும், பூரண ஆரோக்கியத்துடனும் இருக்கிறேன். நன்றாய் வாழ்ந்து காட்டி அவர்கள் எண்ணத்தை முறியடிக்கிறேன்.” என்றான் கம்சன். அப்போது ஒரு சேவகன் அங்கே வந்து பஹூகா, அந்தகத் தலைவர்களின் மூத்தவன் தொண்ணூறு வயது நிரம்பியவன், ப்ரத்யோதாவின் சிறிய தாத்தா அங்கே வந்திருப்பதாயும், ஏதோ முக்கியவிஷயம் பேசவேண்டும் என்று சொன்னதாகவும் சொன்னான். இந்த வேளையில் இந்தக்கிழவன் இங்கே, எதற்கு வருகிறான்? புருவங்கள் நெரியக் கம்சன் யோசித்தான்.

Sunday, October 25, 2009

அப்பாடா! :D

முந்தாநாள் கூகிளாரா? இல்லை, ப்ளாகரா?? ஒரு ஆட்டு ஆட்டி வச்சுட்டாங்க சிலரை. ஒரு சிலருக்கு எண்ணங்கள் பதிவுக்கு மட்டும் சுட்டி கிடைக்கலை, இன்னும் சிலருக்கு வலைப்பக்கமே திறக்கமுடியலை. சிலருக்கு என்னுடைய எந்தப் பதிவுகளுமே கிடைக்கவில்லை. நானும் கண்ணன் வருவான் பதிவுகளில் வந்த பின்னூட்டங்களை மெயில் மூலம் வெளியிட்டுவிட்டு, பதில் கொடுக்க முயன்றால் திறக்கவே இல்லை. இது அடிக்கடி நடக்கும் ஒன்று என நினைத்து அசட்டையாக குழும மடல்களைப் பார்க்கப்போய்விட்டேன். பின்னர் பதிவுகளை அப்லோட் செய்ய நினைத்து முயன்றால் மீண்டும் வரவில்லை. சைட் விக்கினு ஒண்ணு இருக்கு, புதுசா, அங்கே போய்க் கூட வெளியிடலாம்னு ஒரு செய்தி! திரும்பத் திரும்ப முயன்றதில் இன்னொரு செய்தி, இந்த வலைப்பக்கங்களே இப்போக் கிடையாது, நீ வேண்டுமானால் புதுசா உன்னோட பேரிலே திறந்துக்கோ. sivamgss.blogspot.com பேரிலே இப்போ எதுவுமே இல்லைனு அடிச்சுச் சொல்லுது.

கிட்டத் தட்ட ஒருமணி நேரம் முயன்றும் எதுவும் வரலை. வலைப்பக்க உதவிக்குப் போய்ப் பார்னு எரர் மெசேஜ் சொல்லுது. ஆனால் அங்கேயும் போகமுடியலை. சரினு உதவி கேட்டு ஒரு பதிவு எழுதி குழும மடல்களுக்கும், எண்ணங்கள் பதிவுக்கு ஜிமெயில் மூலமும் அனுப்பினேன். எண்ணங்கள் பதிவிலே வெளியீடு ஆனதா என்னனு பார்க்கமுடியலை. குழுமத்திலும் நிறைய பேருக்கு இதே பிரச்னை இருந்திருக்கிறது அப்புறமாத் தெரிஞ்சது. ஆகையால் உடனே பதிலும் வரலை. மறுபடியும் மெயிலைப் பார்த்தால் கோபி கேட்டிருந்தார் என்ன ஆச்சுனு?? இன்னும் சிலருக்கும் எதுவுமே வரலைனும் தெரிஞ்சது. கணினியை மூடிவிட்டு நிம்மதியா உட்கார்ந்தேன். என்றாலும் கிட்டத் தட்ட எண்ணூறு பதிவுகளுக்கு மேல் எழுதினது. சில பதிவுகள் மொக்கைகள்தானேனு இருந்தாலும், மற்றப் பதிவுகளை அர்த்தமுள்ள பதிவுகள்னு சொல்லிக்கமுடியாது என்றாலும் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தானே? அதுவும் ராமாயணத்துக்கும், இப்போ எழுதற கண்ணன் பதிவுகளுக்கும் பல புத்தகங்கள், கூகிளார் தயவில் பல இடங்களுக்கும் போய்த் தேடிக் குறிப்புகள் எடுத்துனு. அதெல்லாம் போயிடுச்சோனு கொஞ்சம் வருத்தம் தான்.

என்றாலும் பரவாயில்லை, புதுசாவே ஆரம்பிப்போம்னு மனசைத் தேத்திட்டு, மறுபடியும் ஒருமணி நேரம் கழிச்சுக் கணினியைத் திறந்து உடனே வலைப்பக்கம் வராமல், குழும மடல்களைப் பார்த்துட்டு, அங்கே இருந்தே வலைப்பக்கம் முயன்றால் ஆன்மீகப் பயணம் மட்டும் திறந்தது. அங்கே இருந்து உடனே ப்ரொஃபைலுக்கும் போக முடிந்தது. ப்ரொஃபைலே வராமல் இருந்தது. ப்ரொஃபைல் வரவும் அங்கேயே எண்ணங்கள் சுட்டியும் இருந்தது. கோபி பார்த்தப்போ ப்ரொஃபைலிலே எண்ணங்கள் சுட்டியே இல்லைனு வருத்தப்பட்டிருந்தார். அதுவேறே யோசனை. சுட்டி இருந்ததும் க்ளிக்கினால் உடனேயே வந்தது. என்னுடைய உதவி தேவை பதிவு மெயில் மூலம் அனுப்பினதும் வெளியாகி அதுக்கு ரா.ல. பித்தனின் வாக்கு இருவரின் பின்னூட்டங்களும் வந்திருந்தது. மறுநாள் தான் தெரியும் இது மாதிரி பிரச்னை இரண்டு மணி நேரத்துக்கும் மேலே பலருக்கும் இருந்திருக்குனு. செர்வர் பிரச்னை என்று சொன்னார்கள். எப்படியோ எல்லாம் சரியாச்சு இறைவன் அருளாலே. கண்ணன் காத்துட்டு இருக்கான் வரதுக்கு. சீக்கிரமாய் வந்துடுவான். பதில் கொடுத்த அனைவருக்கும், தனி மடலில் விசாரித்தவர்களுக்கும், உதவி கேட்டதுக்கு பதில் சொன்னவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. என்னோட பதிவுகளுக்கும் ரசிகர்கள் இருக்காங்கனும் தெரிய வந்ததில் சந்தோஷமே.

Friday, October 23, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - கண்ணனின் விஸ்வரூபம்!


ஏதோ ஓர் உணர்வு எனக்குள்ளே, என்னைத் தூண்டி விடுவது போல் இருக்கும், எப்போதும். நீ பிறந்ததன் காரணமே வேறே என எதுவோ என் காதுகளில் கூறுவது போல் கேட்கும். எனக்குள்ளே என்னை அறியாமல் சில மாற்றங்களும் ஏற்படத் தொடங்கின. ஒரு சாதாரண மனிதனால் செய்ய முடியாத சில விஷயங்களை நான் அநாயாசமாய்ச் செய்ய முடிந்தது. இது எப்படி என எனக்குப் புரியவில்லை. ஆனால் நான் உண்மையில் வசுதேவனுக்கும், தேவகிக்கும் பிறந்த பிள்ளை என்பதும், கம்சன் என் வாழ்க்கையில், நம் வாழ்க்கையில் விளைவித்து வரும் விளைவுகளையும் கேட்டதுக்கு மறுநாள், நான் வழக்கம்போல் கோவர்த்தன மலை மீது ஏறி அதன் உச்சியில் நின்று கொண்டு யோசித்துக் கொண்டிருந்தேன். சூரியன் தன் பொற்கதிர்களை பூமிக்கு அனுப்ப முயன்று கொண்டிருந்த அந்த வேளையில் என் கண் முன்னே விரிந்ததொரு காக்ஷி. அந்தக் காக்ஷியில் நான் ஒரு பாத்திரமாக இருந்து கொண்டே, அந்தக் காக்ஷியை வேறொரு நபராகவும் பார்த்து அனுபவித்துக் கொண்டிருந்தேன்.

“இந்தப் பூவுலகில் இப்போது மறைந்து கொண்டிருக்கும் தர்மம், சநாதன தர்மம் கொஞ்சம் கொஞ்சமாக நிலை பெறுவதையும், தீமைகள் அழியத் தொடங்குவதையும் கண்ணாரக் கண்டேன். அதே சமயம் மக்கள் யாவரும் தர்மத்தின் பாதையில் செல்லாதவர்களையும் தர்மத்தின் பாதையில் செலுத்த ஆரம்பிப்பதையும் என் கண்களால் கண்டேன். ஆனால், ஆனால், …” தயங்கினான் கண்ணன். “ கண்ணா, மேற்கொண்டு என்ன சொல், உன் வாயால் அவற்றைக் கேட்கவே நான் காத்திருக்கிறேன்.” என்றார் அக்ரூரர். “அந்த தர்மம் விண்ணையும், மண்ணையும் மட்டுமில்லாமல் இந்தப் பிரபஞ்சம் பூராவையும் தன் கரங்களால் அரவணைப்பதைக் கண்டேன் அக்ரூரரே! விண்ணுக்கும், மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுத்து நிற்கக் கண்டேன். இதுக்கெல்லாம் காரணகர்த்தா….. “ மீண்டும் தயங்கினான் கிருஷ்ணன். “அப்புறம்?” என்றார் அக்ரூரர். “அப்புறம் என்ன அந்தக் காக்ஷி சிறிது நேரத்திலேயே மறைந்து போனது.” என்றான் கண்ணன். “அவ்வளவு தானா??”

”ஆம், ஆனால் உண்மையில் அவை காக்ஷிகளாக எனக்குத் தெரியவில்லை. உண்மையான என் வாழ்க்கையை நான் வாழ்வதைப் போலவே இருந்தது. மேலும் அந்தச் சமயம் நான் வெறும் வசுதேவக் கிருஷ்ணனாகவோ, அல்லது கோகுலத்து கோவிந்தனாகவோ, விருந்தாவனத்துக் கண்ணனாகவோ இல்லை.”

“பின்??”

“என்னை நானே அந்தப் பர வாசுதேவனாக உணர்ந்தேன் அக்ரூரரே! இவை அனைத்துமே என்னிலிருந்தே தோன்றியதாகவும், என்னிலே அடங்குவதாகவும் உணர்ந்தேன். தர்மத்தின் பிறப்பிடமும், இருப்பிடமும், அடங்குமிடமும் நானே என உணர்ந்தேன்.” அக்ரூரர் இப்போது தன்னையும் அறியாமல் மரியாதை கலந்த பக்தியோடு, கண்ணனிடம் மிகவும் மெதுவாய்க் கிசுகிசுப்பான குரலில், “ பின்னர்?” என மீண்டும் கேட்டார். ‘நான் திரும்ப விருந்தாவனம் வந்தேன். எல்லாமே மாறுபட்டுத் தெரிந்தது எனக்கு. என் கோகுலத்து உறவுகள் அனைத்துமே என்னுள் அடங்கினவர்களாகவும், அவர்களின் செயலுக்கும், சொல்லுக்கும் நானே காரணகர்த்தா எனவும் தெரிந்து கொண்டேன். அவர்களை சாதாரண உறவு முறையுள்ளவர்களாக என்னால் பார்க்கமுடியவில்லை. அவர்களை விட நான் எவ்வளவோ பெரிய மனிதன் என்ற உணர்வு என்னை அறியாமல் ஏற்பட்டது. நீ இந்த விருந்தாவனத்து மக்களோடு வாழமட்டும் பிறக்கவில்லை என என் காதுகளில் எதுவோ வந்து சொல்லிக் கொண்டே இருந்தது. கர்காசாரியாரும் அதை உறுதி செய்தார். கம்சனின் அழிவு என் மூலம் தான் என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனாலும் இவை அனைத்துமே என்னுடைய பிரமையோ என்ற எண்ணமும் என்னை விட்டுப் போகவில்லை. ஆகவே நான் காத்திருந்தேன்.”

“எதற்காக, மகனே, எதற்குக் காத்திருந்தாய்?” அக்ரூரர் கேட்டார். “நான் எதுவும் செய்யக் கூடியவன் என்பது எனக்கு உறுதி பட்டு விட்டது எனினும் அதற்கு ஒரு அடையாளம், அல்லது குறிப்பிட்ட சைகை எதுவானும் எனக்குத் தெரியவேண்டும். நான் என்னைப் பற்றி நினைப்பது சரிதான் என்பதை உறுதி செய்யும் ஒரு குறியீடு, அது தெரியவேண்டும் எனக்கு. அப்போது தான் நான் என் வேலைகளில் முன்னேற முடியும்.என் நோக்கமும், நான் பிறந்ததின் அர்த்தமும் சரிவர நிறைவேற்றப் படும். அதை உறுதி செய்யும் விதமாகவே நான் இந்திரவிழாவைப் பயன் படுத்திக் கொண்டேன். அந்த விழாவை இந்திரனுக்காக எடுக்க விடாமல் என் மக்களைச் சமாதானம் செய்து, இந்திரனைக் கண்டு பயந்த அவர்களை கோவர்தன மலைக்கு விழா எடுக்க வைத்தேன். அப்போது எனக்குக் கிடைத்தது அந்த நல்ல சகுனக்குறியீடு. என் வேண்டுதலுக்குக் கட்டுப் பட்டு கோவர்தன மலையானது இரண்டு முழங்களுக்கு மேல் உயர்ந்தது. “

பக்தியோடு பயமும் கலந்தவண்ணம் கண்ணனைப் பார்த்தார் அக்ரூரர். அவருக்கு அப்போது கண்ணனைச் சுற்றி இந்த அகில உலகமும் சுழல்வது கண்களில் காண முடிந்தது. சூரிய, சந்திரர், நக்ஷத்திரங்கள், பூமி, ஆகாயம் எல்லாமே அவனோடு சேர்ந்து சுழல்வது போலவும், கண்ணனின் குரலோ, எல்லையில்லாத, முடிவற்ற அந்தப் பரம்பொருளின் குரல் போலவும் ஆழ்ந்து எங்கோ தூரத்தில் இருந்து கேட்பது போலும் கேட்டது. அக்ரூரர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சங்கு, சக்ரங்களோடு, விண்ணுக்கும், மண்ணுக்குமாய் அந்தக் கிருஷ்ணன் விஸ்வரூபம் எடுத்து நிற்பது போல் உணர்ந்தார். அவரை அறியாமல் அவர் கைகள் கூப்பின. “வாசுதேவா, பர வாசுதேவா, எல்லையற்ற பரம்பொருளே!” என்றன அவர் வாய். குனிந்த கண்ணனின் பாதங்களில் விழுந்த நமஸ்கரிக்க எண்ணிக் குனிந்த அவருக்குத் திடீரெனத் தாம் குருடாகிவிட்டோமோ என்ற எண்ணம் தோன்றியது. ஒரு கணம் எதுவுமே தெரியவில்லை, புரியவும் இல்லை. என்ன நடந்தது என நிதானிப்பதற்குள்ளாக, அவர் கண்ணன் தம்மை வணங்க வருவதையும், தம் கைகள் கிருஷ்ணனின்கைகளைத் தடுத்துக் கொண்டிருப்பதையும் கண்டார். அக்ரூரர் காதுகளி, “ வாசுதேவா, பர வாசுதேவா, எல்லையற்ற பரம்பொருளே!” என்னும் வார்த்தைகள் எங்கோ ஆழ் கடலுக்குள்ளிருந்து கேட்பது போலவும், “வாசுதேவன் நானே!” என்னும் பதில் குரலும், எங்கோ தூரத்திலிருந்து கேட்பது போலவும் கேட்டது. திரும்பத் திரும்ப எதிரொலிப்பது போல் கேட்டுச் சற்று நேரத்தில் தேய்ந்து போனது அந்தக் குரல்கள். அக்ரூரருக்கு இப்போது ரதத்தில் தம் எதிரே அமர்ந்திருந்த அந்த இளம் வாலிபனின் சுந்தர முகமும், அந்த முகமும், கண்களும் தம்மைப் பார்த்துச் சிரிப்பதையும், இந்த இளைஞனை எவராலும் வெறுக்கவே முடியாது அப்படிப்பட்ட முகராசி உள்ளவன் இவன் என்பதும், அனைவராலும் இவன் நேசிக்கப் படுவான் என்பதும் புரிந்தது. தம் கண்களைத் தேய்த்துக் கொண்டார். நடந்தவை அனைத்தும் கனவா? இல்லை நனவா? நான் தூங்குகிறேனா? விழித்திருக்கிறேனா??

“வாசுதேவா, அவ்வளவு தான்!’இந்தக் குரலை நான் தூக்கத்தில் கேட்டேனா? விழித்துக் கொண்டே கேட்டேனா??” அக்ரூரருக்கு ஒண்ணுமே புரியலை. “மாமா, அதோ பாருங்கள் ஒரு பெரிய மரமும், அதன் நிழலும். எவ்வளவு பெரிய மரம்?? அதன் நிழல் எப்படிப் படர்ந்திருக்கிறது??யமுனைக்கரையில் இந்த மரமும், அதன் நிழலும் எத்தனை சுகம்?? நாம் இங்கே சற்றே தங்கி இளைப்பாறிச் செல்லலாமா? யமுனையில் குளிக்கவேண்டும்போல் எனக்கு ஆசையாய் உள்ளது.” சிறு குழந்தை போல் குதூகலித்துச் சொன்னான் கிருஷ்ணன். “நீ விரும்பிய வண்ணமே செய்யலாம், குழந்தாய்!” என்றார் அக்ரூரர். பலராமன் தான் ரதத்திலேயே தூங்கப் போவதாகவும், குளிக்க வரவில்லை என்றும் சொல்லிவிட்டு, கம்சனை எதிர்கொள்ளும் அளவுக்கு பலத்தைச் சேகரித்துக் கொள்ளப் போவதாயும் சொன்னான். கண்ணனும் அதை ஆமோதித்தான். அக்ரூரர் யமுனையில் இறங்கிக் குளிக்க ஆரம்பித்தார். என்ன இது?? அவரோடு குளிப்பது அந்த வாசுதேவனோ அல்லவோ?? கண்ணைக் கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தார் அக்ரூரர். மீண்டும் மீண்டும் அவருக்குத் தன்னுடன் குளிப்பது அந்தப் பரவாசுதேவனாகவே தெரிந்தது. அவனோடு சேர்ந்த அனைத்து மனிதர்களும், அவர்களில் கிருஷ்ணனும் தெரிகின்றானே?? கடவுளே என்ன இது? நான் பைத்தியம் ஆகிவிட்டேனா? மீண்டும் தலையை உலுக்கிக் கொண்டு பார்த்தார் அக்ரூரர். கிருஷ்ணன் நீராடிக் கொண்டிருந்தான். அவரைப் பார்த்துச் சிரித்தான். கடவுளே இந்தச் சிரிப்பு??? உன்னுடைய விதியே என் கையில் என்று என்னைப் பார்த்துச் சொல்லுகிறதே!