எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, July 21, 2024

குரு பூர்ணிமாவும் மாவிளக்கும்

 தினம் தினம் ஏதேனும் ஒரு வேலைக்காகக் கணினியை வைத்துக் கொண்டு அமர்கிறேன். முடிஞ்சப்போ சில/பல பதிவுகளையும் படிப்பேன். ஏனோ எழுதணும்னு தோன்றுவதில்லை. ஸ்ரீராம் சொன்னாப்போல் எழுதினால் எனக்குக் கொஞ்சம் மாறுதலாக இருக்கும் தான். ஆனாலும் மனசு என்னமோ பதியவே இல்லை. சென்ற மாதம் நம்ம ரங்க்ஸை மருத்துவரிடம் கூட்டிச் சென்ற பின்னர் 2 மாசம் கழிச்சுத் தான் வரச் சொல்லி இருக்காங்க. இம்முறை இத்தனை மாதங்கள் கழித்து ரத்தப் பரிசோதனை முடிவுகள் கொஞ்சம் சாதகமாக வந்துள்ளது, ஓரளவு எழுந்து உட்கார்ந்து கொள்கிறார்... ஆனால் நடப்பது என்பது கொஞ்சம் சிரமமாகத் தான் இருக்கிறது. இரு பக்கமும் உதவிக்கு ஆள் இருந்தால் கொஞ்சம் நடந்து வருகிறார். இன்னமும் தனியாக நிற்கவோ நடக்கவோ முடியலை.

இதுக்கு நடுவில் ஆரம்ப காலத்தில் பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் திடீரெனப் போய்விட்டார்கள். அவங்களுக்குச் சம்பளம் இன்னும் அதிகம் தருவதாகச் சொல்லி முன்னால் வேலை செய்தவங்க கூப்பிட்டாங்களாம். அங்கே போயிட்டாங்க. வேறே பெண்கள் வருகின்றனர். இவர்களில் பகல் நேரத்துக்கு வரும் பெண் பரவாயில்லை. இரவு தான் சரியான ஆளாகக் கிடைக்கவில்லை இன்னமும். கேட்டிருக்கோம். கிடைக்கணும். இதெல்லாம் எழுதியே சில நாட்கள் ஆகிவிட்டன. இந்த மாதிரி சேவை செய்யும் பெண்களை ஏஜென்சி மூலம் எடுப்பதில் உள்ள சிரமங்களையும், முக்கியமாய் நமக்கும் நோயாளிக்கும் ஏற்படும் இன்னல்களையும் எழுதப் போனால் அடி விழும் எனக்கு. உனக்கு உதவி செய்ய வந்தவங்களைக் குத்தம் சொல்லலாமானு கேட்பாங்க எல்லோரும். மத்யமர் குழுமத்தில் ஒரு பெண்மணி இதை அக்கு வேறு ஆணி வேறாக அலசிப் பிழிந்து காயப் போட்டிருந்தார். சுப்புத் தாத்தாவும் அவர் அனுபவத்தைச் சொல்லி இருந்தார். அதான் நிஜம். :( ஒத்துண்டே ஆகணும். :


இப்போது ஆடி மாதம் பிறந்ததுமே பண்டிகைகள் வரிசை கட்டிக்கொள்ளுமே என்னும் நினைப்புத் தான், ஒரு வழியாக ஆடி வெள்ளிக்கிழமை அன்னிக்கு நெய்க்கொழுக்கட்டை பண்ணி நிவேதனம் செய்து பிள்ளையாரைச் சரிக்கட்டினேன். மாவிளக்குப் போட ஊருக்குப் போக முடியாதே! ஆகவே இன்னிக்குப் பௌர்ணமி என்பதாலும் விசேஷமான குரு பூர்ணிமா என்பதாலும் ரங்க்ஸ் இன்னிக்கே போடச் சொல்லிட்டார். காலை எழுந்து கொண்டு வீட்டு வேலைகளை முடித்துக்கொண்டு இன்றைய சமையல் பொறுப்பையும் வைச்சுண்டு இருந்ததால் அதையும் முடித்துக் கொண்டு ரங்க்ஸுக்குச் சாப்பாடு கொடுத்துட்டு மாவிளக்குக்கு மாவு அரைக்கவே பதினோரு மணி ஆயிடுத்து. அதன் பின்னர் வெல்லம் சேர்த்துக் கலந்து இரு உருண்டைகளாக உருட்டிக் கோலம் போட்ட இடத்தில் நுனி இலையைப் போட்டு எல்லாவற்றையும் வைத்துச் சந்தனம், குங்குமம் இட்டுப் பூ வைத்து வெற்றிலை, பாக்கு, பழம்,மஞ்சள் வைத்துப் பூவால் அலங்கரித்து மாரியம்மன் படத்தையும் வைச்சு மாவிளக்கு ஏற்றி இன்னிக்குச் செய்ய வேண்டியதையும் செய்தாச்சு. தப்போ/தவறோ அம்மன் பொறுப்புத் தான், எனக்கு இல்லை பொறுப்பு.


வழக்கம்போல் விவரணையுடன் குஞ்சுலுவுக்கு அனுப்பி வைச்சேன். அது இங்கே மடிப்பாக்கம் தாத்தா வீட்டில் தான் இருக்கு. அவள் அப்பா மட்டும் இங்கே வந்திருக்கார். உடம்பு சரியில்லை என்பதால் தூங்கிக்கொண்டே இருக்கார். குஞ்சுலு படங்களைப் பார்த்துட்டு நைஸ் பாட்டி என்று மட்டும் சொல்லி இருக்கு.





Thursday, June 06, 2024

தேர்தல் முடிவுகள்

 தேர்தல் முடிவுகள் அனைவரின் கணிப்பையும் பொய்யாக்கி உள்ளது. மோதிக்கு வெற்றியா எனில் தனிப்பட்ட முறையில் வெற்றி தான்,. ஆனால் பொதுவில் பார்த்தால் இம்முறை அவர் பிரசாரம் சரியில்லை, தனிமனிதத் தாக்குதல்கள் இருந்தன. பேச்சில் கொஞ்சம் கர்வம் தலைதூக்கி இருந்ததோ? அதோடு இல்லாமல் அயோத்தியில் பல பழமை வாய்ந்த ஆகம முறைப்படியான கோயில்கள் இடிக்கப்பட்டதில் மக்களுக்கு அதிருப்தி. மேலும் இம்முறை எதிர்க்கட்சிகள் கூட்டணியில் உ.பியின் அகிலேஷும், ராகுலும் நன்றாக உழைத்தனர். போதாததற்கு சோனியாவின் உணர்வு பூர்வமான பேச்சும் சேர்ந்து கொண்டது.

ராஜிவ் காந்தியைப் பற்றியும் இந்திரா காந்தியைப் பற்றியும் பேசியதை மக்கள்   ரசிக்கவில்லை. ஆக இந்த வெற்றியானது கஷ்டப்பட்டுப் பெற்ற வெற்றியே அன்றி மோதிக்காக வந்தது இல்லை. அதோடு இல்லாமல் நிதிஷ்குமாரையோ, சந்திரபாபு நாயுடுவையோ எவ்வளவுக்கு நம்பலாம்? சந்தேகமே! இப்போதே நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக அரசல், புரசலாகச் செய்திகள் வருகின்றன. ஒரே ஆறுதல் நிதிஷ்குமார் பிரதமர் ஆவதற்கு இந்தியா கூட்டணியில் அனைவரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதும் அங்கே பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள சிக்கல்களும் தான்.

 எல்லாவற்றையும் மீறிக் கூட்டணி ஆட்சி அமைத்தால் ஒரு வருடம் ஓடினாலே பெரிய விஷயம். என் டி ஏ கூட்டணியும் கூட இரு வருஷங்கள் தாக்குப் பிடித்தால் பெரிய விஷயம். கூடிய விரைவில் மீண்டும் பாராளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டி இருக்குமோனு தோணுது. இப்போதைய தேர்தலில் பாஜக அதிக அளவில் மாபெரும் வெற்றி பெறாததுக்குக் காரணம் தேர்தல்கள் விட்டு விட்டு நடந்தவையும் ஒரு காரணம். ஒரு வாரத்துக்குள்ளாக அனைத்துப் பகுதிகளுக்கும் தேர்தல் நடந்திருந்தால் கருத்துக் கணிப்புகள் பலித்திருக்கும். இப்போது இடைவெளி நிறைய இருந்ததால் மக்கள் சிந்திக்கத் தலைப்பட்டிருக்கலாம். ஆனாலும் தமிழ்நாட்டைப் பற்றி ஒண்ணும் சொல்வதற்கில்லை. யானைக் கதை தான்.

Tuesday, May 07, 2024

அவ்வப்போது எட்டிப்பார்க்கிறேன்!

 நாட்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஏதோ அதோடு சேர்ந்து நானும் தினம் தினம் தூங்கி, விழித்து, நம்ம ரங்க்ஸைக் கவனித்துக் கொண்டு பொழுது ஓட்டமாய் ஓடுகிறது. இரவு படுக்கையில், அப்பாடா, காலை நீட்டிப் படுக்கலாம் என்று தோன்றும். தூக்கம் வராது. சுமார் பனிரண்டு வரை புரண்டு புரண்டு படுப்பதோடு சரி. ரங்க்ஸுக்குப் பசித்தால் அவர் படுத்திருக்கும் அறையிலிருந்து என்னைக் கூப்பிட ஒரு மணி அமேசான் மூலம் வாங்கி உள்ளது. நான் படுக்கும் எங்கள் படுக்கை அறையில் அதைப் ப்ளகில் சொருகி இருக்கோம். அவர் அறையிலிருந்து பட்டனை அழைத்தால் சங்கீத அழைப்பு வரும். உடனே எழுந்து போய் என்ன எனக் கேட்டுவிட்டு வேண்டியதைச் செய்துவிட்டு வருவேன். இரவு காவல் இருக்கும் பெண் இருந்தாலும் குடிக்க ஏதேனும் வேண்டும் எனில் என்னைத் தானே அழைக்கணும். என்றாலும் நானும் அங்கே படுக்காதது அவருக்குக் கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கு. சில சமயம் என்னை விட்டுட்டு எல்லோரும் எங்கே போனீங்க என்பார். அல்லது நான் மட்டும் தான் இந்த ஆஸ்பத்திரியில் இருக்கேனா? மத்தவங்க இல்லையா என்பார்! ஏன் என்னைப் பார்க்க யாருமே வரலை என்பார். ரொம்பக் கஷ்டமாக இருக்கும். அழுகை வரும். என்றாலும் அவர் எதிரே காட்டிக்காமல் வீட்டில் தான் இருக்கீங்க என்பேன். அரை மனதாக அப்படியா என்பார். உடனேயே சரி, நீ போய்த் தூங்கு என்பார்.


எங்கே போய்த் தூங்கணும் என்றால் கொஞ்சம் யோசிச்சுட்டு, நம்ம ரூமில் தான். நான் இப்போ கெஸ்ட் ரூமில் தானே இருக்கேன் எனச் சரியாகச் சொல்லுவார். நேத்திக்கு என் தம்பி தொலைபேசியப்போ நான் குளித்துக் கொண்டிருந்தேன். அவனிடம் நான் நீங்கல்லாம் வந்தால் தங்குவீங்களே, அந்த ரூமில் படுத்துண்டு இருக்கேன். அக்கா எங்க பாத்ரூமில் குளிக்கிறா எனச் சரியாகச் சொல்லி இருக்கார். சில சமயங்கள் தடுமாற்றம். இதெல்லாம் பரவாயில்லை என்பது போல் இந்த கதீட்டர் பிரச்னை. அடிக்கடி, இன்ஃபெக்ஷன் ஆகிறது. இன்னமும் அவரால் பத்து நிமிஷம் சேர்ந்தாற்போல் உட்கார முடியலை என்பதால் கதீட்டர் இருக்கணும் என மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அடிக்கடி இன்ஃபெக்ஷன் ஆவதைப் பார்த்தால் கழட்டி எறியணும் போல் இருக்கு. :(


காலை நேரம் பார்த்துக்க ஒரு பெண்ணும், இரவு நேரம் பார்த்துக்க ஒரு பெண்ணும் (இருவருமே உறவு) வருகிறார்கள். ஒத்துப் போகிறதா எனில் ஒண்ணும் சொல்ல முடியாது. சில விஷயங்களைப் பொது வெளியில் எழுதவோ சொல்லவோ முடியாது. வாயை மூடிக்கணும். அவ்வளவே. அல்லது; எனக்குச் சகிப்புத் தன்மை குறைச்சல்னு வைச்சுக்கலாம். தினம் தினம் பிசியோதெரபியும் நடக்கிறது, சீக்கிரம் எழுந்து நடமாட மாட்டாரானு இருக்கு. அறுவை சிகிச்சை நிபுணர் பயாப்சி பண்ணிப் பார்க்கணும் என்கிறார். அதுக்கு ஒத்துக்கோங்க என்கிறார். ரங்க்ஸுக்கும் இஷ்டம் இல்லை. எனக்கும் இல்லை. தெரிந்த பல மருத்துவர்களிடமும் அவங்க கருத்தைக் கேட்டாச்சு. வேண்டாம்னே சொல்றாங்க. என்னோட உபிசவான தி.வாவும் அதையே சொல்லுகிறார்.இனி வரும் நாட்கள் எப்படியோ தெரியாது. நல்லபடியாகக் கழியணும்னு எல்லாம் வல்ல ஈசனைப் பிரார்த்திக்கிறேன். 

இந்த அழகில் ஸ்ரீராம் வீட்டுக் கல்யாணத்தையாவது நெல்லை தயவில் வீடியோவில் பார்த்தேன். நெல்லைக்கு நன்றி நினைவாக அனுப்பி வைத்ததுக்கு. ஆனால் தி/கீதாவின் பிள்ளை கல்யாணம், நெல்லையின் பெண் கல்யாணம் நடந்தப்போ நான் மருத்துவமனையில் மருத்துவர்களோடு ஆலோசனைகளில் மூழ்கி இருந்ததால் சுத்தமாய் நினைவில் இல்லை சொல்லவே வெட்கமாக இருந்தாலும் அதான் உண்மை. பின்னால் நினைவு வந்து விசாரித்தேன். இன்னும் கொஞ்ச நாட்கள் போனால் இணையமே மறந்துடுமோ என்னமோ! :(

Thursday, March 14, 2024

பெரிய வணிகக் கடைகளும் வெட்டி ஆராய்ச்சிகளும்!

 தெரியாத்தனமா ஜியோ மார்ட்டில் பழம் வாங்க ஆர்டர் கொடுக்கும்படி ஆச்சு. நம்ம ரங்க்ஸுக்கு மாத்திரைகள் சாப்பிடும்போது தொண்டையில் மாட்டிக்கும். அதை உள்ளே தள்ள வாழைப்பழம் தேவைப்படும் சோதனையாக நான்கு நாட்களாக வாழைப்பழமே கிடைக்காமல் யாரைக் கேட்டாலும் காயாக இருக்குனே சொல்லவே ஜியோவில் ஏலக்கியும் ரொபஸ்டாவும் செவ்வாழையும் ஆர்டர் பண்ணினேன், பணம் 138 ரூபாய்க்குள் தான் வந்தது, ஜிபே பண்ணிடலாம்னு பார்த்தால் உங்க வீடு இந்த உலகில் இருக்கும் லொகேஷனை ஷேர் பண்ணுனு கேட்டது. சரினு சொல்லவே இது இல்லைனு ஒரே மறுப்பு, சரினு போட்டால் அதையும் ஒத்துக்கலை, மறுபடி அடியில் இருந்து ஆரம்பிச்சு வந்தால் ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ பழங்களே ஸ்டாக் இல்லையாம். எல்லாம் வித்துப் போச்சாம். இது என்னடா புதுசா இருக்கேனு மறுபடி போனால் ஜியோ வராமல் ஸ்மார்ட் பஜாரோ பிக்பஜாரோ ஏதோ ஒண்ணு வந்தது. இம்முறையும் 200 ரூபாய்க்குக் கீழே வந்தது. அப்போ பில்லை எடிட் செய்தால் தானாக இரண்டு இளநீரும் அதில் சேர்ந்து 228 காட்டியது, ஆனமட்டும் முயன்று அதை நீக்கப் பார்த்தால் போகவே இல்லை.

பேமென்டுக்கு போயிடுச்சு. தொலையட்டும் இளநீர் தானே ஆளுக்கு ஒண்ணாக் குடிச்சுத் தொலைக்கலாம்னு பேமென்ட் பண்ணிட்டு அன்னிக்குப் பூராப் பார்த்தால் ஒண்ணுமே வரலை. க்ர்ர்ர்ர்ர்னு எனக்கு நானே சொல்லிட்டு அவங்க மெசேஜைப் பார்த்தால் ட்ராக்கிங் லிங்க் இருந்தது. என்னோட மொபைலோ அதை ட்ராக் செய்யாதே ஏதோ புறம்போக்குப் போலத் தெரியுதுனு சொல்லுது. இருந்தாலும் தைரியமாப் போய்ப் பார்த்தால் 12 ஆம் தேதி ஆர்டரை 14 ஆம் தேதி தான் அனுப்புவாங்களாம். சரியாப் போச்சுனு நினைச்சேன். உள்ளூர் அண்ணாச்சி கடையிலேயே பார்த்த உடனே வாங்கிடலாமேனு நினைச்சேன். இனி ஒண்ணும் செய்ய முடியாதுனு காத்திருந்தேன். ரொம்பப் பெருமையா நேத்திச் சாயங்காலம் ஒரு பையர் வந்து ஓடிபி கேட்டுக்கொண்டு பழங்களைக் கொடுத்தார். ஏன் இவ்வளவு தாமதம் எனக் கேட்டதுக்கு பதில் இல்லை. அதில் என்னமோ பத்து ரூபாய் திருப்பிக் கொடுக்கிறாங்களாம். ஏன்னு புரியலை. அக்கவுன்டில் கிரெடிட் ஆகும்னு மெசேஜ் வந்தது. 

இன்னிக்கு மத்தியானம் நோன்பு எல்லாம் ஆகி ரங்க்ஸுக்கும் சாப்பாடு கொடுத்துட்டு ஒன்றரை மணி அளவில் அப்பாடானு படுத்தால் உடனே ஃபோன். ஜியோவிலிருந்து ஒருத்தர் கீதா மேடம்னு கூப்பிடவே, சொல்லுங்கனு சொன்னேன். ஏன் 218 ரூபாய்க்குப் பொருள் வாங்கினீங்க? இது யார் சொல்லி ஆர்டர் கொடுத்தீங்க? நீங்களாக் கொடுத்தீங்களா? யாரானும் சொன்னாங்களானு எல்லாம் ஆராய்ச்சியை ஆரம்பிச்சார். எனக்கு வந்த கடுப்பில் நான் ஆர்டர் செய்தவை எனக்கு நேத்திக்கே வந்தாச்சு. அத்தோடு ஆளை விடுங்கனு சொல்லிட்டுத் தொலைபேசியை அணைச்சுட்டு மறுபடியும் படுத்துட்டேன். சரிதானே? என்னோட தேவை வாழைப்பழங்கள் மட்டும். அவங்க கிட்டே ஆயிரம் பொருட்கள் இருந்தால் எல்லாத்தையுமா வாங்க முடியும்? தேவையான வாழைப்பழங்களை மட்டும் யாரையும் கேட்டுக்காமல் நானாக ஆரடர் செய்தேன். இதுக்குப் போய் எம்புட்டு ஆராய்ச்சி? என்னவோ போங்க. இந்த பிக் பாஸ்கெட், பிக் பஜார், ஜியோ மார்ட், டி மார்ட் இதெல்லாமே ஏனோ எனக்கு அவ்வளவு உகந்ததாய்த் தெரியலை, நேத்திக்குப் பாருங்க காஃபி பவுடர் வேணும்னு எப்போவும் வாங்கற கடையிலே வாட்சப் மூலம் செய்தி கொடுத்ததும் சாயங்காலமே வந்துடுத்து.இதல்லவோ வியாபாரம்!
















குகுவுக்காக எடுத்த படங்கள். அதுக்கு வாய்/ஸ் மெசேஜுடன் படங்கள் போயாச்சு. ஸ்கூலுக்குப் போயிருக்கும். ஆகவே வந்து தான் பார்க்கும், பதிலும் கொடுக்கும்.

ராமருக்குக் கீழே உள்ள முதல் படம் சரடு கட்டிக்கும் முன்னர் எடுத்தது, அடுத்த படம் நிவேதனம் முடிஞ்சு என்னோட இலையிலிருந்து பிரசாதத்தை நம்ம ரங்க்ஸுக்காக எடுத்து ஒரு தட்டில் வைச்சிருக்கேன். இன்னிக்கு இதான் முக்கியம். நாம் நிவேதனம் செய்து ஒரு வாய் போட்டுக்கொண்டு கணவருக்கும் அதே இலையில் இருந்தே கொடுக்கணும் என்பாங்க எங்க ஊர்ப்பக்கம். நானும் வருஷக்கணக்காய் அப்படித் தான் செய்து வரேன்,.


Saturday, March 02, 2024

என்னவோ நேரம்! இன்னும் சரியாகலை! :(

 நானும் அடிக்கடி வரதில்லையா! யாருக்கும் நினைப்பு இருக்காது. நம்மவர் சென்ற மாதம் 10 ஆம் தேதியன்று இரவில் கீழே விழுந்து செக்யூரிடி ஆட்களை வரவழைத்துத் தூக்கிக் கொண்டு போய்ப் படுக்கையில் விட்டோம். பாதம் தரையில் பாவவே இல்லை. கவலையாகவே இருந்தது. இருந்தாலும் காட்டிக்காமல் சமையலறையை ஒழிக்காமல் அப்படியே மூடி வைச்சுட்டு வந்து நானும்படுத்து விட்டேன். சிறிது நேரத்தில் கழிவறை போகணும்னு சொல்லவே எழுப்பி விட்டுக் கையைப் பிடித்து அழைத்துச் சென்றேன். அப்போவே ஏதோ குதிக்கிறாப்போல் தான் நடந்தார். திரும்பி வரும்போது ஒரேயடியாய்த் தள்ளி விட்டது உடம்பை. நல்லவேளையாய்க் கட்டிலில் தான் விழுந்தார். உடனேயே ஏதோ பிரச்னை எனத் தெரியவே சர்க்கரை அளவைப் பார்த்தேன் 176 இருந்தது. சர்க்கரை இல்லை. பின்னே என்ன காரணம்? தாமதம் செய்யாமல் உடனே ஆம்புலன்ஸைக் கூப்பிட்டு விட்டு மருத்துவமனியிலும் எமர்ஜென்சியைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்லவும் வாங்க, ஆனால் உடனே இடம் கிடைப்பது கஷ்டம். ஒரு விபத்து நடந்து அதில் மாட்டிக் கொண்டவர்கள் வந்திருக்காங்க. ஆனாலும் உடனே கவனிப்போம் எனச் சொல்லவே, வந்தது வரட்டும்னு ஆம்புலன்சில் அவரை ஏற்றிவிட்டு நானும் முன்னால் ஏறிக் கொண்டேன்.

மருத்துவமனை போயாச்சு. உடனே ஸ்ட்ரெச்சர் வரலை. கொஞ்சம் தாமதம் ஆனது. அதுக்குள்ளே ஆம்புலன்ஸ் ட்ரைவர் ட்யூடி டாக்டரிடம் போய்ச் சொல்லவே அவர் வந்து பார்த்துவிட்டு உடனே ஸ்ட்ரெச்சர்  வரவழைத்து உள்ளே அழைத்துச் சென்றார்கள். திடீர்னு அவருக்கு நம்பர் ஒன் போகாமல் தொந்திரவு பண்ண ஆரம்பிக்கவே வலியில் புலம்பினார். டாக்டர் ட்யூபெல்லாம் போடக் கூடாது, அவராகப் போகணும்னு சொல்லிட்டார் நம்பர் ஒன் போனப்புறமாத் தான் வந்திருக்கும் காரணத்துக்கான மருத்துவம் ஆரம்பிப்பாங்க போல. எனக்குக் கொஞ்சம் கோபம் வரவே இன்னும் எத்தனை நேரம் கவனிக்காமல் இருப்பீங்க எனக் கேட்கவே அவர் முதலில் நம்பர் ஒன் போகட்டும் என்றார்கள். ரொம்ப சிரமத்திற்குப் பின்னர் நம்பர் ஒன் போகவே உடனே ரத்தப் பரிசோதனை. கடவுளே அவருக்கு ரத்தம் எடுப்பவே கஷ்டம். குத்திக் குத்திப் புண்ணாக்கிடுவாங்க. ஒவ்வொரு இடமாஅப் பார்த்து ஒரு வ்ழியா ரத்தம் எடுத்து சோடிஉம் குறைச்சல்னு சொல்லிட்டு அதற்கான சிகிச்சையை ஆரம்பிச்சுட்டு, இவரைப் பார்க்கும் மருத்துவருக்கும், சிறுநீரக மருத்துவருக்கும் தகவல் அனுப்பி வைச்சாங்க. 

பின்னர் ஒரு வழியாக் காலை நாலு மணி அளவில் உள் நோயாளியாகச் சேர்க்கப்பட்டு அறைக்கு வந்தோம். தூக்கமா? இரண்டு பேருக்கும் தூக்கமே இல்லை. பெண்ணுக்கும், பிள்ளைக்கும் மட்டும் தகவல் சொல்லி இருந்தேன். வேறே யாருக்கும் சொல்லவில்லை. பையர் வரட்டுமா எனக் கேட்க, வேண்டாம், நான் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டேன். பின்னர் காலை விடிஞ்சதும் செவிலியர் வந்து ஏற்கெனவே சாப்பிட்டுக் கொண்டிருக்கும் மருந்துகளைக் கேட்டாங்க. ஆஹா! தப்புப் பண்ணிட்டோமேனு நினைச்சேன். அது தேவை இல்லைனு நினைச்சு வீட்டிலேயே வைச்சிருந்தேன். அதை எடுத்து வரணும்னு சொல்லிட்டாங்க. இவரைப் பார்த்துக்க ஆளே இல்லையே! அவசரம் அவசரமாக அவரிடம் சொல்லிட்டு, ஒரு மணி நேரத்தில் வந்து விடுவதாக வாக்குக் கொடுத்துட்டு செவிலியர், வார்ட் பாய் ஆகியோரிடமும் சொல்லிட்டு வீட்டுக்குக் கிளம்பினேன். எப்போவும் போல் ரெட் டாக்சிக்குக் காத்திருக்காமல் ஆட்டோவிலேயே போயிட்டேன். பைசா ஜாஸ்தி தான். ஆனால் அவசரத்துக்கு என்ன செய்ய? விட்டுக்குப் போனதும் மருந்துகள், மற்றும் தேவையானவற்றைச் சேகரித்துக் கொண்டு பையில் வைச்சுட்டு, குளித்து விட்டு உடனே கிளம்பிட்டேன். செக்யூரிடி மூலம் ஆட்டோ வரவழைத்துக் கொண்டு முக்கால் மணி நேரத்தில் திரும்ப மருத்துவமனை போயிட்டேன். நல்லவேளையாக் காலை ஆகாரம் வரலை. போனதும் காலை ஆகாரத்துக்கு முன் கொடுக்க வேண்டிய மாத்திரைகளை அவங்க அப்போப் புதுசாக் கொடுத்த மாத்திரைகளோடு சேர்த்துக் கொடுத்துவிட்டு அப்பாடானு உட்கார்ந்தேன்.

கொஞ்சம் நிதானப்படுத்திக் கொண்டு மும்பையில் இருக்கும் மைத்துனரை அழைத்து விஷயத்தைச் சொன்னேன். அவர் வரட்டுமானு கேட்டதுக்கு வேண்டாம் தகவலுக்காகத்க் தான் சொன்னேன் என்று சொல்லி விட்டேன். ஆனாலும் அவர் அன்றிரவு விமானத்தில் கிளம்பி வந்தார். அன்று முழுவதும் உட்கார்ந்திருந்ததாலும் முதல் நாள் இரவிலும் உட்கார்ந்திருந்ததாலும் உடம்பு கெஞ்சியது. என்றாலும் சமாளித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். இரவு பனிரண்டு மணி அளவில் மைத்துனர் விமான நிலையத்திலிருந்து வந்து கொண்டிருப்பதாகவும் என்னைக் கீழே வரும்படியும் சொன்னார். அவர் வந்த வண்டியிலேயே என்னைக் கொண்டு விட்டு விட்டுத் திரும்ப அவர் மருத்துவமனை வருவதாகப் பேசிக் கொண்டிருந்தோம். ஆகவே சுமார் பனிரண்டரை மணி அளவில் நான் வீட்டுக்கு வர அவர் மருத்துவமனை போனால். மறுநாள் காலை வீட்டு வேலை செய்யும் பெண்ணை வரச் சொல்லி வீடு சுத்தம் செய்து பாத்திரங்களைக் கழுவி வைச்சுட்டு எட்டரைக்கெல்லாம் மறுபடி மருத்துவமனை போய் இரவு தூங்காமல் இருந்த மைத்துனரை விடுவித்தேன்.  அவர் வீட்டுக்குப் போய் விட்டார். அன்றே சிறுநீரக மருத்துவரும் வந்து பார்த்துட்டு பயப்பட வேண்டாம் சோடியம் லெவல் 130க்கு மேல் வந்தால் டிஸ்சார்ஜ் பண்ணலாம் என்று சொன்னார்.

Monday, February 19, 2024

தமிழ்த்தாத்தாவுக்கு அஞ்சலி

 



உ.வே.சா. சிறுவயதில் விளையாட்டிலும் இசையைக் கற்பதிலும் ஆர்வமுடையவராய் இருந்தார். ஆனாலும், அவர் தந்தையவர்கள் உ.வே.சா. விளையாடுவதை விரும்பியதில்லை. எப்பொழும் படித்துக்கொண்டே இருக்கவேண்டுமென்று விரும்பினார். தமது சிறிய தந்தையாரிடம் இயற்கையாகவே இசையில் ஆர்வமுள்ள உ.வே.சா. இசை பயின்றாா்கள். ஆங்கிலம் கற்றுக் கொள்வது அக்காலத்தில் மிகவும் பெருமைப்படும் செயல். உ.வே.சா.விற்குச் சிறுவயதில் ஆங்கில எழுத்துகள் மட்டும் கற்கும் வாய்ப்பு கிட்டியது. சடகோபஐயங்காரே தமக்குத் தமிழில் ஆர்வம் உண்டாகும் வண்ணம் முதன்முதலில் கற்பித்தாா் என்று உ.வே.சா. தெரிவிக்கின்றார்கள். அரியலூரில் தம் குடும்பம் மிக்க வறுமையில் வாழ்ந்து வந்ததையும் பதிவு செய்கின்றார்.கல்வி, கேள்வி இல்லாதவரும் அக்காலத்தில் கல்வி அறிவுடையவர்களைக் கண்டால் அவர்களுக்கு மதிப்பு கொடுத்து ஆதரிப்பதில் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டுள்ளனர் என்றும் தெரிய வருகிறது.


உ.வே.சா.வின் தந்தை இவருக்கு நல்ல கல்வி கற்பித்துச் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துத் தரவேண்டும் என்பதில் தீவிர ஆர்வமும் கவலையும் கொண்டிருந்தார். பல தமிழ் நூல்களை அவருக்கு முறையாகக் கற்பித்தார். சிதம்பரம்பிள்ளை என்னும் தமது தந்தையின் நண்பரிடம் திருவிளையாடற்புராணம் நூலைக் கற்றார். அக்காலத்தில் கற்பது என்பது தற்போது முறையாகப் பள்ளியிலமர்ந்து பாடம் வாரியாக அல்லாமல் இது போன்று தமிழ் நூல்களை நன்கு கற்பதே போலும். உ.வே.சா. தமது வாழ்நாள் முழுவதும் இது போன்றே தமிழ் நூல்களை ஐயம் தீர்ந்தபடி கற்றுத் தேர்ந்தார்கள். நன்னூல், தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களையும் சமகாலத்தில் இயற்றிய பிள்ளைத்தமிழ், கோவை முதலிய இலக்கியங்களையும் இது போன்றே தமிழறிஞா்களிடம் பாடம் கேட்டும் புலமையடைந்தார். சிறுவயது முதலேயே நன்னூலை நன்கு கற்றிருந்ததால் இவருக்கு இது மிகவும் உதவியாக இருந்துள்ளது. எந்தப் புலவரிடம் பாடம் கேட்கச் சென்றாலும், இவரது நன்னூல் புலமை கைகொடுத்து உதவியது.


உ.வே.சா. கவிதை எழுதும் கலையையும் பயின்று வந்தார். அவர் முதலில் செய்யுள் இயற்றிய போது பிறர் கருத்தை வைத்துச் செய்யுள் இயற்றினார். அவர், தந்தை அவருக்கு இது முறையாகாது என்றும் அவருடைய பாட்டில் அவர் அனுபவம் இருப்பதுதான் உசிதம் என்று கூறியதைப் பின்பு நன்கு உணர்ந்ததாகவும் குறிப்பிடுகின்றார். உ.வே.சா. தமது தந்தையாருடன் சென்று இராமயண விரிவுரையில் உதவி செய்துள்ளார். இதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. இதன் மூலம் இவர் தந்தைக்கு நல்ல வருமானமும் கிடைத்தது.


உ.வே.சாவிற்குத் திருமணம் முடித்துவிட வேண்டுமென்று அவர் தந்தையார் விரும்பினார். இளம்வயதில் மணமுடிப்பது அக்காலப்பழக்கம். பதினாறு வயதில் மணம் முடியாமலிருந்தால் அது பெருங்குறை என்று கருதியது அந்தக்காலம். காலமாற்றத்தின் பலனாக அக்காலத்தில் சிறந்தது என்று நினைத்தது தற்பொழுது நகைப்புக்குரியது ஆகிறது. அது போல் அக்காலத்தில் நகைப்புக்குரியது, தற்பொழுது சிறந்தது ஆகின்றது என்றும் குறிப்பிடுகின்றார். அப்பொழுது கூட உ.வே.சா. தமிழை நிறைவாகக் கற்றுக் கொள்ளவில்லை என்ற மனக்குறைதான் பெரிதாக இருந்ததாகக் குறிப்பிடுகின்றார். உ.வே.சாவிற்குப் பதினான்காம் வயதில் திருமணம் நடந்தது. மணபெண் வயது எட்டு. பொருட்செலவிற்குப் பெரும்பாலும் கிராமத்தினர் உதவி செய்து திருமணத்தை நடத்தினர். திருமணத்திற்கு முன்னும் பின்னும் உ.வே.சாவின் சிந்தனை எல்லாம் “தமிழ்தான் எனக்குச் செல்வம் அதுதான் என் அறிவுப் பசிக்கு உணவு . . .அன்றும்சரி இன்றும்சரி இந்த நிலைமை மாறவே இல்லை” என்னும் அவருடைய சொற்கள் தமிழ் கற்கவேண்டும் என்பதிலும், தமிழ் மீது அவர் கொண்ட பற்றின் வெளிப்பாடும் ஆகும். இறுதிவரை அவர் வாழ்க்கையில் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் தமிழைக் கற்க வேண்டும் என்னும் ஒரே சிந்தனையைத் தவிர, அவர் வேறு எதிலும் நாட்டம் கொண்டதற்கான சாயலே கிடையாது.


தம் தந்தையின் நண்பராகிய கும்பகோணம் வக்கில் வேங்கிடராவ், உ.வே.சா. தமிழ் கற்பதனாலும் இசைப் பயிற்சியினாலும் பெரிய பயனில்லை; ஆங்கிலம் கற்றுக் கொடுங்கள், தாம் உதவி செய்வதாகவும் தமது நண்பர்கள் முலம் உதவி செய்வதாகவும் கூறியபொழுது அவர்பால் உ.வே.சா. அவர்களுக்குக் கோபமுண்டாயிற்று; தாம் மகிழ்ச்சியடையவில்லை என்றும் பதிவு செய்கிறார்.

Sunday, February 18, 2024

என்ன செய்யலாம்? தெரிந்தவர்கள் உதவலாம்!

 முந்தாநாள் மெடிகல் ஃபார்மசியில் மருந்துகள் வாங்கப் பட்டியலைச் சொல்லிக் கொண்டிருந்தேன், முடிந்ததும் அந்தப்பெண் அவ்வளவு தானா மேடம்? வேறே ஏதும் இருக்கானு கேட்டாங்க. ஆமாம், ஒரு டெட்டால் பாட்டிலும் சேர்த்துப் போடுங்க என்றேன். டெட்டாயில் (க்ர்ர்ர்ர்ர்ர்ர்) தானே மேடம்? எத்தனை லிட்டர்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது டெட்டாயில் இல்லை, டெட்டால் என்றேன். அதான் மேடம் நானும் சொல்றேன், டெட்டாயில் அரை லிட்டர் போடவா? 

ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

முந்தாநாளே நடந்த இன்னொரு விஷயம். சிலிண்டர் தீர்ந்து விட்டதால் ரீஃபில் பதிவு செய்தேன், வழக்கம் போல் வாடசப் மூலம் என்னுடைய மொபைல் நம்பரில் தான் செய்தேன், எல்லாம் சரியாக வந்தது. ஆனால் எனக்குச்செய்தி எஸ் எம் எஸ் மூலம் வரவே இல்லை. சரினு மறுபடி செய்தால் ஏற்கெனவே பதிவு செய்தாச்சு, சிலிண்டரும் வந்துடும்னு வாட்சப்பில் வந்தது. இந்த டி.ஏ.சி. நம்பர்னு ஒண்ணு வரணுமே! அது வரவே இல்லை. என்னாச்சுனு தெரியலையேனு குழப்பம், நேத்திக்கு சிலிண்டரும் வந்தது,. வழக்கமாய் வருபவர் தான். சிலிண்டரைப் பொருத்திப் பார்த்துட்டுப் பணம் கொடுக்கையில் டிஏசி நம்பர் கேட்க நான் வரவே இல்லை என்றேன், அவருக்கு திடீர்னு எனக்கு மொபைல் பார்க்கத் தெரியலைனு ஜந்தேகம். மொபைலைக் கொண்டானு சொன்னார். காட்டினேன். பிஎஸ் என் எல் ரீசார்ஜ் மெசேஜ் தான் இருந்தது, (அதுவும் ஒரு தனிக்கதை. பின்னால் பார்ப்போம்.) ஏன் வரலைனு கேட்டேன். உடனே அந்த மனிதர் உங்க காஸ் ஏஜென்சிக்குத் தொலைபேசிக் கேளுங்க. அவங்க தான் அனுப்பணும். அனுப்பாமல் விட்டிருக்காங்க என்றார்.

உடனே தொலைபேசினேன். முதலில் ஒரு பெண் எடுத்தார். அவரிடம் விபரங்கள் சொல்லிக் கேட்டால் நான் புதுசுனு வேறே ஒருத்தரிடம் சொல்ல அந்த ஒருத்தர் எடுத்தார் அவரிடம் விபரங்கள் கன்ஸ்யூமர் நம்பர் எல்லாம் சொல்லவே பெயர், விலாசம் சரியாகச் சொல்லிட்டு உங்க மொபைல் நம்பர்னு ஆரம்பிச்சு 988 நு ஆரம்பிக்கும் ஏதோ நம்பரைச் சொல்லவே இல்லையே இது என்னோட நம்பரே இல்லைனேன். உடனே அவர் மீண்டும் பார்த்துட்டு, நவம்பரில் நீங்க சொல்லும் நம்பரில் இருந்து பதிவு செய்திருக்கீங்க. இப்போ இந்த நம்பரில் பதிவு செய்திருக்கீங்கனு சொல்லவும் கோபத்துடன் இந்த மாதிரி ஒரு நம்பருடன் எங்களிடம் எந்தத் தொலைபேசி/அலைபேசி கிடையாது, இந்த ஒரே நம்பர் தான் எங்க நம்பர்னு சொன்னால் அவ்ர் ஒத்துக்கவே இல்லை. நாங்க கொடுத்த செய்து அந்த 988 இல் இருந்து ஆரம்பிக்கும் நம்பருக்குப் போயிருக்கும் ;என்று முடிக்கப் பார்த்தார். நான் விடலை. இதே நம்பரில் இருந்து தான் வாட்சப்பில் சிலிண்டர் புக் செய்தேன். அந்த வாட்சப் செய்திகளை உங்களுக்கு ஃபார்வார்ட் செய்யறேன் என்று சொல்லவே அவர் ஒரு சவாலாக அனுப்புங்க பார்ப்போம்னு ஒரு அலைபேசி எண்ணைக் கொடுத்தார்.

அது அலுவலக எண்ணாம். நானும் அந்த எண்ணிற்கு எனக்கு வந்த வாட்சப் செய்திகளை ஃபார்வார்ட் செய்து விட்டு மீண்டும் தொலைபேசியில் அழைத்தேன். ரொம்ப நேரம் யாருமே எடுக்கலை. பின்னர் ஒரு பெண் எடுத்து என்ன எனக் கேட்கவும் விபரங்களைச் சொன்னேன். ரொம்பப் பணிவாக, சரி மேடம், நாங்க என்னனு பார்க்கிறோம் மேடம்னு சொல்லிட்டு ஃபோனை வைச்சுட்டார். மறுபடி சிலிண்டர் போடுபவரைக் கூப்பிட்டு விபரங்களைச் சொன்னால் ஏஜென்சிக்காரங்க தான் தப்பான தொலைபேசி எண்ணை இணைச்சிருக்கணும் எனவும் இது அவங்க தப்பு அதனால் அப்படியே விடுங்க, நீங்க பத்து வருஷத்துக்கு மேலாகத் தெரிஞ்சவங்க என்பதால் நானும் சிலிண்டரைக் கொடுத்துட்டேன். பின்னால் பார்த்துக்கலாம் என்று சொன்னார். ர்ங்க்ஸிடம் இதை ஒரு மாதிரி விபரமாகச் சொல்லி என்ன செய்யனு கேட்டால் பேசாமல் இருப்போம் என்றார், இதுக்கு என்ன செய்யலாம்? ஐ.ஓ.சி.யிடம் புகார் கொடுக்கணுமா? ஏஜென்சியில் நம்பரை மாத்தணும்னால் நேரே வரணும் என்றார்கள். எனக்கோ/அவருக்கோ நேரில் போகும் நிலையில் இல்லை. என்னதான் சும்மா இருந்தாலும் மனதில் இது ஓடிக் கொண்டே இருக்கு.