Saturday, November 28, 2009

வலையில் அகப்பட்டுக்கொண்ட புலி!





வாழ்த்துகள் புலி! வாழ்க்கையில் எல்லா நலன்களும் பெற்றுச் சீரோடும் சிறப்போடும் வாழ்வாங்கு வாழ மனமார வாழ்த்துகிறோம்.

கீதா&சாம்பசிவம்





வாழ்த்துகள் புலி: திருமண நாள் 29-11-09 ஞாயிறு.

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - கண்ணனுக்கு ஆபத்து!

நம்பிக்கையோடு எழுந்தான் கம்சன். அவனுடைய நம்பிக்கைக்கு உகந்த யானைப்படைத் தலைவன் ஆன அங்காரகன் இன்று காலை சூரியோதயம் ஆன சில நிமிடங்களில் கம்சன் சொன்னதைச் செய்து முடிப்பான். குவலயாபீடம், அந்தக் கோபக்கார யானையின் கால்களின் கீழே அந்தக் கண்ணன், மாயக்காரன், கடவுளாம் கடவுள் அவன் அந்த யானையின் காலடிகளில் மிதிபட்டு எலும்பு நொறுங்கிச் சாகப் போகின்றான். கம்சனின் காதுகளில் கண்ணனின் எலும்புகள் நொறுங்கும் சப்தம் கேட்டதோ என்னும் அளவுக்கு அவன் அதை உறுதியாக எதிர்பார்த்தான். தன்னுடைய பரமவைரியானவன் ஒரேயடியாக அழிந்து போவதை, அதுவும் யாருக்கும் எந்தவிதச் சந்தேகமும் இல்லாமல் மடிவதைக் கம்சன் எதிர்பார்த்துக் காத்திருந்தான். அவனுடைய நம்பிக்கைக்கு உரிய பணியாளர்கள் வந்ததும் தன் காலைக்கடன்களை முடித்துக்கொண்டான். எந்நேரமும் தன் யானைப்படைத் தலைவன் கொண்டுவரப் போகும் இனிய செய்திக்காகக் காத்திருந்தான். அதைக் கேட்டதும் மல்யுத்தம் நடக்கும் இடத்திற்குச் சென்று பார்வையிட அவன் அரண்மனை உப்பரிகைக்குச் செல்லவேண்டும். யாதவத் தலைவர்கள் அனைவரும் கண்ணன் இறந்து போனதை நினைத்துச் செய்வதறியாது தவிப்பதை அங்கிருந்து பார்த்து மகிழவேண்டும். அவர்களின் ஒப்பற்ற கடவுள் யானையின் காலடியில் நாசமானதை எண்ணியும், நாரதரின் தீர்க்கதரிசனம் பொய்த்துப்போனதை எண்ணியும் அவர்கள் வருந்துவதைக் கண்டு மகிழவேண்டும்.

அப்போது அவன் கனவுகளை அழிக்கும்விதமாக ஒன்று நடந்தது. திரிவக்கரை வந்தாள் தன் வழக்கமான நேரத்தில், வழக்கமான வாசனைத்திரவியங்களோடு. நேற்று அவளுக்கு நேர்ந்ததைப் பற்றிக் கம்சன் கேள்விப்பட்டானே தவிர அவளை நேரிடையாகப் பார்க்கவில்லை. இது யார்? யாரிந்த அழகி? ஆஹா, நம் அரண்மனையில் நமக்கும் தெரியாமல் இப்படி ஓர் பெண்ணரசி இருந்திருக்கிறாளா? இது என்ன ஆச்சரியம்? கம்சனுக்கு வாசனைத் திரவியங்களை நீட்டிய திரிவக்கரை, வழக்கம்போல் அவனை வாழ்த்தினாள். அவள் குரலைக் கேட்டு அசந்து போன கம்சன், “திரிவக்கரை, நீயா? இது நீயா? என்னால் நம்பமுடியவில்லையே? என்ன ஆயிற்று உனக்கு?” என்று கேட்டான். “ஆம், இளவரசே, நானே தான். எனக்கு உடல் நேராகிவிட்டது. அனைவரையும் போல் நன்றாக ஆகிவிட்டேன்.” தன்னைத் தானே பெருமையுடன் நோக்கியவள், கம்சனுக்கு வாசனைத் திரவியங்களை அளித்தாள். கம்சன் பேசாமல் யோசித்த வண்ணம் அவள் நீட்டிய வாசனைத் திரவியங்களை எடுத்துக் கொண்டான்.

அவனுக்கு உடனேயே யானைக்கொட்டாரத்திற்குச் சென்று குவலயாபீடம் கொட்டாரத்தில் இருந்து விளையாட்டுகள் நடக்கும் மைதானத்தில் நுழையும்போது அதன் காலடிகளில் கண்ணன் நசுங்கிச் சாவதைக் கண்டு மகிழும் ஆசை தோன்றியது. ஆனால் நேரே அவன் அந்த இடத்திற்குச் செல்வது அவ்வளவு உசிதம் இல்லை என்பதையும் அவன் உணர்ந்திருந்தான். ஆகவே அனைத்துப் பணியாளர்களையும் வெளியே போகச் சொல்லிவிட்டுச் சற்று யோசித்தான். அறைக்கதவை நன்கு சார்த்தித் தாளிட்டுவிட்டு, தன் தலைக்கிரீடத்தையும், உடைவாளையும் எடுத்து அணிந்துகொண்டான். அறையின் ஒரு பக்கச் சாளரத்தில் இருந்து பார்த்தால் குவலயாபீடம் அந்தப் பெரியமஹாசபைக்கெனப் போட்டிருக்கும் பந்தலினுள் நுழையும் காட்சி நன்கு தெரியும். அந்தச் சாளரத்திற்குப் போய் நின்றுகொண்டான். மக்கள் கொஞ்சம் கொஞ்சமாய்க் கூட ஆரம்பித்திருந்தனர். கம்சனுக்கு நெஞ்சம் திக் திக்கென அடித்துக் கொண்டாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. ஒவ்வொரு நிமிஷமும் நகருவது பிரம்மப் பிரயத்தனமாக இருந்தது. பொறுமையை வரவழைத்துக்கொண்டு வெளியே பார்த்தவண்ணமிருந்தான். மக்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே வந்தது. அனைத்துத் தரப்பினரும் வந்து அவரவருக்குரிய இருக்கைகளில் அமர்ந்துகொண்டனர். சாமானிய மக்கள் தங்களுக்கென ஒதுக்கப் பட்டிருந்த பார்வையாளர் இடத்திற்குச் சென்று அவரவர் விருப்பம் போல் வசதியான இடம் பிடித்துக் கொண்டனர். பெண்களுக்கென ஒதுக்கப் பட்டிருந்த இடமும் நெருக்கடி தாளாமல் பிதுங்கிக் கொண்டிருந்தது. விதம் விதமாய்த் தங்களை அலங்கரித்துக்கொண்டு பெண்கள் வந்திருந்தனர். யாதவத் தலைவர்கள் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றிலும் மகதநாட்டு வீரர்கள் முற்றுகையிட்டது போல் சூழ்ந்திருந்ததையும் கம்சன் கவனித்துக் கொண்டான். வ்ருதிர்கனன் தன் வாக்கை அருமையாக நிறைவேற்றுகிறான் என்பதில் மனம் மகிழ்ச்சி கொண்டான்.

சங்கங்கள் முழங்கின. பேரிகைகள் ஆர்ப்பரித்தன. மக்கள் கூட்டம் அமைதியாக அமர்ந்தது. அப்போது கம்சனின் அரண்மனையைச் சேர்ந்த மல்யுத்த வீரர்களும் தங்கள் கைகளைத் தட்டிக் கொண்டும், தொடையில் தட்டி மற்றவர்களை அழைத்துக் கொண்டும் தங்கள் வீரத்தைத் தங்களுள் ஒருவரோடொருவர் விளையாட்டாய் மல்யுத்தம் செய்து காட்டியும் அரங்கைச் சுற்றி வந்தனர். கம்சனுக்கு உள்ளூரப் பெருமையும், கர்வமும் மிகுந்தது. அவனுடைய மல்யுத்த வீரர்களில் முக்கியமானவர்கள் ஆன சாணுரனையும், முஷ்திகனையும் தோற்கடிக்கக் கூடிய மல்லன் இனிமேல்தான் பிறக்கவேண்டும். சாணுரன் பார்க்க ஒரு மாமிசமலைபோல் இருந்தாலும் அவன் மல்யுத்த நிபுணன். முஷ்திகனோ உயரமும், பருமனும் அளவோடு அமையப் பார்க்க ஒல்லியாகக்காணப்பட்டானே தவிர அவனுடைய ஒரு மல்யுத்தக் குத்தை எவராலும் தாங்கமுடியாது. சிந்தனையில் ஆழ்ந்திருந்த கம்சனுக்கு ஆரவாரசப்தங்கள் காதில் விழ, அட, என்ன ஆயிற்று?? இதோ! குவலயாபீடம் உள்ளே நுழையப் போகிறது. அங்காரகன் தான் அதன் மேல் அமர்ந்து வருகிறான். சொன்னால் சொன்னபடி செய்கிறானே. பட்டத்து யானையான இந்தக் குவலயாபீடம் இம்மாதிரி முக்கியமான நிகழ்ச்சிகளிலேயே அனைவரின் பார்வைக்காக அழைத்துவரப்படும். யானைகளே பெரியவை என்றாலும் இந்தக் குவலயாபீடம் மிக மிகப் பெரியது. அதன் தந்தங்களோ மூன்றடிக்கும் மேல் நீண்டு காணப்பட்டன. துதிக்கை மட்டுமே ஆறடிக்கு நீண்டிருக்கும்போல் இருந்தது. மிக அழகாக இந்த நிகழ்ச்சிக்கென அலங்கரிக்கப் பட்டு உள்ளே வந்து எப்போது வழக்கம்போல் அது நிற்கும் இடத்திற்கு வந்து, தன் துதிக்கையை உயர்த்தி சத்தமாகப் பிளிறியது. அங்கிருந்த அனைவருக்கும் அது வணக்கம் சொல்வதைப் போல் அமைந்தது அது.

ஆனால்…….ஆனால்…….ஆனால்……. என்ன இது? குவலயாபீடத்தின் கோபம் எங்கே போயிற்று? யாரைப் பார்த்தாலும் கோபம், எவரையும் அருகே நெருங்கவிடாது. அதைப் பழக்கும் அங்காரகனே சமயத்தில் மிகவும் கஷ்டப் படுவானே? இன்று என்ன அனைவரையும் பார்த்து துதிக்கையை ஆட்டி விளையாடி அழைக்கிறதே? இதற்கு முன் எப்போதும் காணாவகையில் அனைவரிடமும் நட்பாய்ப் பழகுகிறதே? இது என்ன அதிசயம்? அல்லது இது என் கற்பனையோ? கம்சன் தன் கண்களைத் துடைத்துவிட்டுக் கொண்டு மீண்டும் கவனித்தான். இல்லை இல்லை. இது உண்மையே தான். குவலயாபீடம் தான் அப்படி எல்லாம் அன்பாய் நடந்து கொள்கிறது. குவலயாபீடம் இப்போது அந்தப் பந்தலின் தலைவாயிலில் போய் நின்றுகொண்டு நாட்டியம் ஆடுவதைப்போல் ஒரு காலை முன் வைத்து மற்றக் கால்களைப் பின் வைத்துக்கொண்டு எதற்கோ தயாராய் இருப்பதைப்போல் நிற்கின்றதே? கம்சன் கூட்டத்தைக் கவனித்தான். கூட்டம் மேலும் மேலும் வந்துகொண்டிருக்கக் கூட்டத்தின் ஒரு பக்கம் கடல் அலை போல் மக்கள் போய் மோதுவதும், பின்னர் திரும்பி வருவதுமாய் இருந்தனர். என்னவெனக் கூர்ந்து கவனித்தால், அங்கே இரு இளைஞர்கள் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. கூட்டத்தினர் அவர்களில் கால்களில் விழுவதற்குச் செல்வதும், விழுந்தவர் அவர்கள் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்வதையும், மேலும் சிலர் கிட்டே போய்த் தொட முயல்வதையும், பெண்கள் அருகே நெருங்க முடியாமல் அவர்கள் நடந்து சென்ற இடத்தின் மண்ணை எடுத்துத் தலையில் போட்டுக் கொள்வதையும் கண்டான்.

ஆஹா, இவர்கள் யாரெனச் சொல்லாமலே புரிந்துவிட்டதே! தேவகியின் மைந்தர்களன்றோ? ஒருவன் நீலநிறத்துக்கண்ணன், மஞ்சள் நிற ஆடை தரித்துத் தலையில் மயில் பீலியை வைத்துக் கொண்டு அலங்கரித்துக் கொண்டுள்ளான்.மற்றொருவன் சிவந்த நிறத்தில் பார்க்க மல்லன் போல் காண்கின்றான். நீல நிற ஆடை தரித்துள்ளான். ஆஹா, இவர்களுக்கென இந்த ஆடைகள் பொருத்தமாய் அமைந்துவிட்டிருக்கிறதே. மக்கள் மயங்கிப் போவதில் என்ன ஆச்சரியம்? எதுவுமில்லை, முட்டாள் மக்கள். கண்ணன் நடந்து முன்னேறி வர வர, கம்சனின் கோபமும் மேலோங்கிக் கொண்டு வந்தது. அவன் ரத்தம் கொதித்தது. கடைசியில் அவன் எதிரி, பரம வைரி வந்தேவிட்டான். அவனைக் கொல்லவெனப்பிறந்திருப்பதாய் நாரத முனியில் இருந்து வியாசரிஷி வரை அனைவரும் சொல்லிக்கொண்டிருப்பவன் இவனே. ஹா, ஹாஹா, அவன் என்னை அழிக்கும் முன் இதோ இந்தக் குவலயாபீடம் அவனை அழிக்கப் போகிறதே! கம்சன் காத்திருந்தான். அந்த நிகழ்ச்சியைக் காணவேண்டி மிக ஆவலோடு காத்திருந்தான். கண்ணனும், பலராமனும் குவலயாபீடம் இருக்குமிடம் நெருங்கிவிட்டனர். இன்னும் சில நொடிகள் தான். இதோ குவலயாபீடம் இருவரையும் தன் கால்களில் போட்டு மிதிக்கப் போகிறது. மூச்சை அடக்கிக் கொண்டு கம்சன் பார்த்துக் கொண்டு இருந்தான்.

Friday, November 27, 2009

கண்ணன் வருவான்,கதை சொல்லுவான் - கம்சனின் நம்பிக்கை!

மதுரா நகருக்கு யாதவத் தலைவர்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். ஏற்கெனவே அங்கேயே இருந்த தலைவர்களும் இவர்களோடு சேர்ந்துகொண்டனர். அனைவருக்கும் அது இளைஞன் ஆகட்டும், அல்லது வயது முதிர்ந்த யாதவகுலத் தலைவனாகட்டும், எல்லார் பேச்சுக்களும் கடந்த இரு நாட்கள் நடந்த நிகழ்வுகள் பற்றியே ஆகும். அதுவும் அனைவரிலும் மிகவும் வயது முதிர்ந்த, அனைவராலும் மிக மிக மதிக்கப் பட்ட அந்தகர்களின் அரசன் எனப்பட்ட பஹூகாவும், அவன் மகனும் திடீரென மறைந்தவிதத்தை எவராலும் ஜீரணிக்கமுடியவில்லை. மகத நாட்டில் இருந்து கம்சன் வரவழைத்துத் தன்னுடைய அரண்மனைப் பாதுகாவலுக்கு என ஏற்பாடு செய்து இருக்கும் மகதநாட்டு இளவரசனின் கண்காணிப்பில் அவர்கள் இருவரும் ஒருவேளை வீட்டுச் சிறை வைக்கப் பட்டிருக்கலாமோ எனப் பேச்சாய் இருந்தது. சிலர் அதை திட்டவட்டமாய் மறுத்தனர். தேவகியின் இரு பிள்ளைகளும் மதுராவிற்கு வந்திருப்பதையும், அந்தக் கண்ணன் என்பவனால் திரிவக்கரையின் கூன் அதிசயமான முறையில் நீங்கியதையும், தநுர்யாகத்துக்கென வைக்கப் பட்டிருந்த வில் முறிக்கப் பட்டதையும், ருக்மியைத் தூக்கி எறிந்ததையும் மதுரா மக்கள் மட்டுமின்றி யாதவகுலத் தலைவர்கள் மத்தியிலும் ஒரே பேச்சாக இருந்தது. தேவகியின் மக்களுக்குக் கம்சன் அளிக்கப்போகும் தண்டனையை எண்ணி அவர்கள் மிகவும் கவலையும், பயமும் அடைந்தார்கள். அது விலகாமலே அன்றிரவு, அவர்கள் அனைவரும் வசுதேவரை அவர் மாளிகையில் சென்று சந்தித்தனர்.

ஒரே சலசலப்பு. மெல்லிய குரல்களில் கேள்விகள், பதில்கள், முடிவுதெரியாத வினாக்களை எழுப்பியவர்கள், அவர்களைச் சமாதானம் செய்தவர்கள், தயக்கத்துடன் இருந்தவர்கள், கம்சனிடம் பயம் நீங்காதவர்கள். பலதரப்பட்டவர்களும் அங்கே கூடிக் கலந்தாலோசித்தனர். சிலர் அங்கிருந்து வெளியேறுவதே உத்தமம் எனச் சொல்ல, வேறு சிலர் கம்சனுக்குப் பயப்படுவதா? நேருக்கு நேர் போர் அறிவித்துப் போராடி ஜெயிப்போம், இல்லை எனில் மரணத்தைத் தழுவுவோம், வெற்றி அல்லது வீர மரணம் எனக் கோஷித்தனர். அக்ரூரரும் அங்கே இருந்தாலும் அவருக்கு இறைவன் மேலும், தாங்கள் அன்றாடம் வணங்கும் பசுபதிநாதர் மேலும், நாரதர் சொல்லிச் சென்ற தீர்க்க தரிசனத்தின் மேலும் நம்பிக்கை வைத்துக் கண்ணன் வருவான், கம்சனைத்தீர்ப்பான் எனச் சொன்னாரே தவிர அவரிடம் வேறு ஒன்றும் பெரிய அளவில் திட்டங்கள் இல்லை. அந்த அளவிற்கு அவரால் யோசிக்கவும் முடியவில்லை. “காத்திருங்கள், கண்ணன் காப்பான்.” இது ஒன்றே அவருடைய பதிலாக இருந்தது.

கூட்டத்தில் ஒருவர் சற்றே கிண்டலாய், “அக்ரூரரே, நாரதர் சொன்னதை நீர் இன்னமும் நம்புகிறீரா?” என்று கேட்க, தான் நம்புவதாகவே அக்ரூரர் சொன்னார். தேவகியின் பிள்ளையைத் தாம் பார்த்துப் பழகி இருப்பதாகவும், அவனால் கட்டாயம் தாம் அனைவரும் நினைக்கும் எண்ணம் ஈடேறும் எனவும் உறுதியாகச் சொன்னார் அக்ரூரர். அப்படி நடக்காவிட்டால் என ஒருவர் எழுப்பிய கேள்விக்குத் தங்கள் கோழைத்தனத்துக்குக் கடவுள் அளிக்கும் தண்டனையாக அது இருக்கும் என்ற அக்ரூரர் ஆனால் தாம் உறுதியாகக் கண்ணனால் காப்பாற்றப் படுவோம் என நம்புவதாய்த் தெரிவித்தார். அவநம்பிக்கையோடு அவரைப் பார்த்தனர் பெரும்பாலான யாதவத் தலைவர்கள்.

“வேறு என்ன செய்யவேண்டும் என்கிறீர்கள் அவனை? அவன் வந்துவிட்டான். நம் ரக்ஷகன் அவன். வந்ததுமே அவன் செய்த முதல் வேலை திரிவக்கரையின் கூனை நிமிர்த்தியது தான். அது ஒன்றே போதாதா அவன் திறமையை நிரூபிக்க. திரிவக்கரையை இப்போது நேரில் பார்த்தால் அசந்து போவீர்கள். அதோடு மட்டுமா? ருக்மியைத் தூக்கி எறிந்திருக்கிறான் அநாயாசமாய். தநுர்யாகத்துக்கென வைத்திருந்த வில்லை உடைத்திருக்கிறான். இன்னும் என்ன வேண்டும்?” என்று கேட்டார் அக்ரூரர். அக்ரூரர் பேசிக்கொண்டிருக்கும்போதே அங்கே இருவர் நுழைந்தனர். அனைவரும் பேச்சில் கவனமாய் இருந்ததால் யார் எனக் கவனிக்கவில்லை. அப்போது கர்காசாரியாரின் குரல் அனைவர் குரல்களுக்கும் மேலே கேட்டது. “ இளவரசர் தேவகனின் அருமைப் பெண்ணான தேவகி இங்கே உங்களிடம் பேச விரும்புகிறாள். அவள் முடிவு ஒன்றைத் தெரிவிக்க விரும்புகிறாள்” என்று சொன்னார் கர்கர். அனைவரும் தூக்கிவாரிப் போட்டுத் திரும்பினார்கள். தேவகியின் மெலிந்த உருவம் கண்ணில் பட்டது. உலகத்துத் துயரங்களையெல்லாம் தாங்கித் தாங்கி அவள் உருவம் மெலிந்ததோ என்னும்படிக்கு அவள் சோகம் அவளின் ஒரு அசைவிலேயே தெரியவந்தது. வெளுத்த, இளைத்த முகத்தில் தெரிந்த கண்கள் மட்டும் பெரியதாய் இருந்தன. அந்தப் பெரிய கண்களால் அனைவரையும் அவள் பார்த்தபோது அந்தக் கண்களின் ஆழத்தில் தெரிந்த இனம்புரியாத சோகக் கடல் அவர்கள் அனைவரையும் அதில் முழுக அடித்துவிட்டது என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர்.

இரு முறை பேச முயற்சி செய்துவிட்டு முடியாமல் பின்னர் ஒருவழியாக சமாளித்துக் கொண்டு கிணற்றின் ஆழத்திலிருந்து வருவது போன்ற மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தாள் தேவகி. “வணக்கத்துக்கு உரிய தலைவர்கள் அனைவருக்கும் என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இப்போது இங்கே இந்த சபையில் உங்கள் மத்தியில் பேச நேர்ந்ததுக்கு என்னை ,மன்னிக்க வேண்டுகிறேன். நான் ஒரு முடிவு எடுத்துவிட்டேன். அது….அது…..அது…… அப்படி ஒருவேளை என் பிள்ளைகளைக் கம்சன் கொன்றுவிட்டானென்றால், நான் அக்னிப்ரவேசம் செய்துவிடுவேன். இதுவே என் முடிவு.” என்றாள் தேவகி.

அறையில் மெளனம் சூழ்ந்தது சில விநாடிகளுக்கு. முதலில் சமாளித்துக் கொண்டவர் அக்ரூரர் தான். “தேவகி, நீ இறப்பதா? அதுவரை நாங்கள் அனைவரும் எங்கள் உயிரை வைத்துக் கொண்டிருப்போமா? உன் குமாரர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் முதலில் உயிரை விடுவது நாங்களாய்த் தான் இருக்கும். நான் உனக்கு வாக்கு அளிக்கிறேன்.” என்றார் அக்ரூரர். தேவகி அவ்வளவில் அறையை விட்டு வெளியே செல்ல அனைவரும் அக்ரூரர் கூறிய வண்ணமே உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கூட்டம் கலைந்தது. அனைவர் மனமும் கனத்துப் போயிருந்தது. அங்கே கம்சனோ? அவன் குதூகலத்தில் ஆழ்ந்திருந்தானா? மனம் அமைதில் இருந்ததா? சந்தோஷமாகத் தன் அரச வாழ்க்கையை அநுபவித்துக் கொண்டிருந்தானா? இல்லை! அதோ கம்சன்! அவன் அந்தரங்க அறையில். அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. மனம் தத்தளிக்கிறது. அவன் நிலைமை அவனுக்கு ஒருவாறு புரிந்தே இருந்தது. யாதவத் தலைவர்கள் யாருக்குமே அவன் நன்மை செய்யவில்லை. அனைவரையும் பகைத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு என உதவ யாருமே இல்லை. இப்போது அதிகாரத்தில் இருப்பதால் பயந்துகொண்டு செய்கின்றனர். ஆனால் அவன் யாரை நம்புவது?

அவன் அஸ்வமேத யாகக்குதிரையோடு செல்லும் முன்னே அனைவரையும் ஒருவழியாக அழித்திருக்கவேண்டுமோ? அந்தச் சிறுவர்களையும் வந்ததுமே அழித்திருக்கவேண்டும், அல்லது அக்ரூரருக்குப் பதிலாக அவன் நம்பிக்கைக்கு உகந்த படைத் தலைவர்கள் யாரையேனும் அனுப்பி இருந்தால் அந்தப்பிள்ளைகளை ஒழித்திருப்பார்களோ? தப்புச் செய்துவிட்டோமோ? இல்லை, இல்லை, இப்போவும் ஒன்றும் மோசம் போய்விடவில்லை. இன்னும் நேரம் இருக்கிறது,இன்று இரவு மட்டும் அனைத்து யாதவத் தலைவர்களையும் ஒரே சமயத்தில் அழிக்க முடிந்தால்???? ம்ஹும்,சாத்தியமில்லை, மற்ற நாட்டுத் தலைவர்களும், அரசர்களும் தநுர்யாகத்திலும், அதை ஒட்டிய வீரப்போட்டிகளிலும் பங்கெடுக்க வந்திருக்கின்றனரே. அந்த நந்தனின் மகன்கள்??அவர்களையாவது ஒழிக்க முடியுமா என்றால்?? அதுவும் நடக்காது போல் இருக்கிறது. அவர்கள் தங்கி இருப்பது கிராமத்து மக்கள் தங்கி இருக்கும் கூடாரங்களில், மக்கள் கூட்டத்திற்கு நடுவில். அதுவும் அனைத்து மக்களும் அந்தக் கிருஷ்ணனை ஏதோ கடவுள் தான் பூமிக்கு வந்துவிட்டார் எனச் சொல்லிக் கொண்டு தரிசனம் செய்யப் போவதும், வருவதுமாய் இருக்கின்றனராமே! அவனை இப்போது இந்த இரவில் கொல்லமுயன்றால் பழி நேரிடையாக நம்மீது வரும். ம்ம்ம்ம்ம்ம் அங்காரகனிடம் சொல்லி இருப்பது ஒன்றுதான் ஒரே வழி. பார்க்கலாம். பொழுது விடியட்டும்.

பொழுதும் விடிந்தது. யாருக்கு????

Sunday, November 22, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - திரிவக்கரையின் கணவன்!

ஆஹா, குவலயாபீடம் மனிதன் இல்லை. ஒரு யானை. அதுவும் மிகவும் சக்தி வாய்ந்த பெரிய முரட்டு யானை என்றே சொல்லலாம். அதுவும் அதன் பாகனோ , ம்ம்ம்ம்ம்ம், வேறே யாரு? திரிவக்கரையைத் திருமணம் செய்து கொண்டு, அவள் உடலின் மூன்று கோணல்களைப் பார்த்ததும், அவள் முதுகின் கூனைக் கண்டதும், அவளை விட்டு விலகிச் சென்றானே அந்த அங்காரகனே தான். அங்காரகன், அவள் கணவன், அவன் பொறுப்பில் அன்றோ குவலயாபீடம் என்னும் இந்த முரட்டு யானை உள்ளது? ஆஹா, கம்சன் அங்காரகனை அழைத்துவரச் சொன்னதாய்க் கேள்விப் பட்டோமே? அப்போ இதிலே ஏதோ விஷயம் இருக்கிறது. குவலயாபீடம் எவ்வகையில் எவ்வாறு கண்ணனைக் கொல்லப் போகிறது? புரியவில்லையே. ஆனாலும் இதை இப்படியே விடமுடியாது. ருக்மிணி குவலயாபீடம் ஒரு மனிதன் எனத் தவறாய்ப் புரிந்து கொண்டாலும், விஷயம் என்னமோ தீவிரமான ஒன்றே. யோசித்துக் கொண்டே நடந்தாள் திரிவக்கரை. இதற்கு வழி என்ன???

யோசித்த அவளுக்கு ஒரு வழி புலப்பட்டது. ஆனால், ஆனால், அது சரியா? கொஞ்சம் தயங்கினாள் திரிவக்கரை. அவள் கணவன் அவளை முற்றிலும் மறந்து, அவளைப் புறக்கணித்து அவள் அருகே கூட வராமல் அவளை விட்டுவிட்டு வேறொருத்தியுடன் அவள் கண்ணெதிரே இதே ஊரில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அதோடயா இன்னும் ஒரு மனைவி கூட இப்போது மூன்றாவதாய் வந்திருக்கிறாளாமே. அவனிடமா செல்லுவது இப்போது? அவள் சுயகெளரவம் தடுத்தது திரிவக்கரையை. ஆனால், ஆனால் இதன் பலாபலன்கள் எதுவோ அது திரிவக்கரையைச் சேர்ந்ததில்லையே. அவளை இத்தனை அழகாய் மாற்றிய அவளுடைய “கடவுள்” ஆன கண்ணனுக்காகவன்றோ அவள் தன்னை விரட்டிய கணவன் காலடியில் போய்க் கெஞ்சவேண்டும்? தன்னையும் ஒரு மனுஷியாக மதித்து அன்பு செலுத்தும் அந்தக் கண்ணனுக்காக எதுதான் செய்யக் கூடாது? அவனுக்காக எதுவேண்டுமானாலும் செய்யலாமே. ஆம், அங்காரகனிடம் போய்க் கேட்கவேண்டியது தான் ஒரே வழி. திரிவக்கரை முடிவுக்கு வந்துவிட்டாள்.

அங்காரகன், கம்சனின் யானைப்படையின் தளபதியும், யானைகளைப் பழக்குவதில் கை தேர்ந்தவனும் ஆவான். அவனிடம் பழகிய யானைகள் அனைத்தும் அவன் சொன்னால் சொன்னபடி கேட்கும். மிகத் திறமையான வீரனும் கூட. கம்சனின் யானைகளைப் பழக்குவதில் அவனுக்கு மன மகிழ்ச்சியே. ஆனால் அன்றோ? அன்று இரவு நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. அங்காரகன் இன்னும் தூங்கச் செல்லவில்லை. படுத்தாலும் தூக்கமே வராது போல் இருந்தது. அங்காரகனுக்கு இடப்பட்டிருந்த வேலை அப்படி. அவன் தன்னையே வெறுத்துக் கொண்டான். அவன் மனைவிகளில் ஒருத்தி அவன் பாதத்தைப் பிடித்துவிட்டுக் கொண்டிருக்க, இன்னொருத்தி அவனுக்கு விசிறிக் கொண்டிருந்தாள். கூடவே ஏதோ தொணதொணவெனப் பேச்சு வேறே. அவனுக்கு இருந்த மனநிலையில் எதையும் கேட்கும் நிலையிலே அவன் இல்லை. அவர்கள் பேச்சை நிறுத்த மாட்டார்களா என இருந்தது அவனுக்கு. அவர்களை அடிக்கலாமா என்று கூடத் தோன்றியது. ஆனால் மனைவியரைத் துன்புறுத்தியவன் என்ற பெயர் வாங்க விரும்பவில்லை அவன். அப்போது வாசல் கதவு தட்டப் பட்டது.

இரு மனைவியரில் மூத்தவள் அங்காரகன் முகத்தைப் பார்த்தே கதவைத் திறக்கலாம் எனப் புரிந்து கொண்டுபோய்த் திறந்தாள். அங்காரகனுக்கு உள்ளூர பயம் தான். ஒருவேளை கம்சன் மீண்டும் ஆளனுப்பிக் கூப்பிட்டிருப்பானோ? போதும்,போதும், அவனுடைய படைத் தளபதியாய் இருந்தது. மீண்டும் தன்னையே வெறுத்துக் கொண்டான் அங்காரகன். கதவைத் திறந்தாள் அவன் மனைவி. உள்ளே நுழைந்தது யார்? ஆஹா, இது என்ன அதிசயம்? ஓர் அழகான பெண்மணி அல்லவோ நுழைகிறாள்? யாரிவள்? இத்தனை அழகாய்?? ஒரு காலத்தில் அழகு என அவன் விரும்பித் திருமணம் புரிந்த அவனுடைய இரு மனைவியரும் குழந்தைகளைப் பெற்றுப் போட்டு நாளாவட்டத்தில் பெருத்துப் போய்விட்டார்கள்.ஆனால் இந்தப் பெண்மணியோ கொடிபோன்ற இடையும், நளினமான உடல்வாகும் கொண்டு ஆஹா, அவள் நடையே ஓர் நடனம் போல் இருக்கிறதே. வந்தது யாரெனப் புரிந்து கொண்ட அவனிரு மனைவியரும் பயத்தில் க்ரீச்செனக் கத்தினார்கள்.

“யார் நீ?” எனக் கேட்டான் அங்காரகன். அவள் யாரென அவனுக்கும் புரிந்தே விட்டது. என்றாலும் தன் கண்களையே அவனால் நம்பமுடியவில்லை. அவளா இவள்?? இமை கொட்டாமல் வெறித்தான் அங்காரகன்.

“ஆர்யபுத்ரா, என்னைத் தெரியவில்லையா உங்களுக்கு?” என்று கேட்டாள் திரிவக்கரை. கேலியோடு சிரித்தாள், அவள் சிரிப்பின் இனிமையும்,சிரிக்கும்போது வந்த மணிகளைக் குலுக்கினாற்போன்ற ஓசையும் அறையையே நிறைத்தது. . “என்னை மறந்தே விட்டீர்களா?” என்றாள் திரிவக்கரை. அதற்குள் அவன் மனைவியரில் ஒருத்தி,’அக்கா, அக்கா உன்னுடைய கூன் சரியாகிவிட்டதே?” என ஆச்சரியம் அடைந்தாள்.அவள் கண்களில் தெரிந்த பொறாமையை அவளால் மறைக்கமுடியவில்லை. திரிவக்கரை இப்போது உயரமும், பருமனும் அளவோடு பொருந்தி, உடல் நளினமும், கை, கால்களில் ஒய்யாரமும் மிகுந்து ஏற்கெனவே அழகு மீதூர்ந்திருந்த முக மண்டலம் இப்போது சந்தோஷத்தால் இன்னும் ஒளி கூடிப்பிரகாசிக்கக்காட்சி அளித்தாள். அங்கங்கள் தேவையான இடங்களில் தேவையான அளவுக்கு மேல் காணப்படவில்லை.

“என் கடவுள் நான் ஆசைப்பட்டபடியே என்னை மாற்றிக் கொடுத்திருக்கிறார்.” என்று சொன்ன திரிவக்கரை மேலும் தன் கணவனைப் பார்த்து, “நான் உங்களிடம் பேசவே வந்தேன், ஆர்யபுத்ரா, நாம் ஒருவரை ஒருவர் முகம் கொடுத்துப் பேசியேப் பல வருடங்கள் ஆனாலும் விஷயத்தின் முக்கியத்துவம் கருதிப் பேசவந்தேன்.” என்றாள். “உனக்கு என்ன ஆயிற்று திரிவக்கரை, இதோ இங்கே அமர்ந்து எல்லாவற்றையும் விபரமாய்ச் சொல்." இருபது வருடங்களுக்கும் மேலாகத் தான் திரும்பிக் கூடப் பார்க்காத ஒரு பெண் இத்தனை அதிரூபசுந்தரியாய் மாறியதை அவனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. திரிவக்கரை அங்கே அமர்ந்தாள். “மக்கள் பேசிக் கொண்டனர், நந்தனின் மகனைப் பற்றியும், அவன் நடத்திய அற்புதங்கள் பற்றியும். ஆனாலும் எனக்கு இவ்வளவு நன்றாய்த் தெரியாது. நீ விபரமாய்ச் சொல் திரிவக்கரை.” என்றான் அங்காரகன். அவன் பிரிய மனைவியரில் மூத்தவள், “நந்தன் மகன் எப்படி இருப்பான்?” என வினவினாள், தன் கணவன் அத்தனை நாள் ஒதுக்கி வைத்திருந்த மூத்த மனைவியை வைத்த கண் வாங்காமல் பார்த்து ரசிப்பதையும் அவளால் தாங்க முடியவில்லை. இளையவளோ, திரிவக்கரைக்கு நீர் கொண்டுவரும் சாக்கில் உள்ளே சென்றுவிட்டாள். திரிவக்கரை தன் கணவனைப் பார்த்து, “நந்தனின் மகன்?? அவன் நந்தனின் மகனே அல்ல ஆர்யபுத்ரா, நான் உங்களிடம் ஒரு ரகசியம் சொல்லவும், மற்றொன்றைப் பற்றிக் கேட்கவுமே வந்தேன். ஆனால் உங்களிடம் மட்டும் தனியாய்.” அர்த்தபுஷ்டியுடன் அவனின் மற்ற இரு மனைவியரைப் பார்த்தாள் திரிவக்கரை. அவள் கருத்தைப்புரிந்து கொண்ட அங்காரகன் தன்னிரு மனைவியரையும் அவர்கள் அறைக்குப் போகச் சொல்லிக் கட்டளையிட்டான்.

இருவருக்கும் உள்ளூரக் கோபம் வந்தது. ஆனாலும் கணவனின் கட்டளையைத் தட்டமுடியாமல் உள்ளே சென்றனர். இருவரும் திரிவக்கரையைப் பார்வையாலேயே பொசுக்கிவிடுவது போல் பார்த்துக் கொண்டே சென்றனர். "சொல், என் தேவதையே! அந்த நந்தனின் மகனைப் பற்றி நானும் கேள்விப் பட்டேன். ஆஹா, நீ இப்போது எப்படி இருக்கிறாய் தெரியுமா?" என்றான் அங்காரகன்.

"அவன் நந்தனின் மகனே அல்ல ஆர்யபுத்ரா, அவன் நம் இளவரசி தேவகியின் எட்டாவது பிள்ளை. அவன் நம்மை உன்னுடைய அந்த மோசமான எஜ்மானிடமிருந்து காக்கவே பிறந்தவன். இப்போது மதுராவுக்கும் அதன் பொருட்டே வந்துள்ளான்." என்றாள் திரிவக்கரை மிகவும் மெல்லிய ரகசியம் பேசும் குரலில் பேசினாள் அவள். அங்காரகனும் திகைத்தவனாய்ச் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டான். சுவர்களுக்கும் காதுகள் உண்டோ? விஷயம் வெளியே சென்றுவிடுமோ? அவன் பார்வையைக் கண்ட திரிவக்கரை, "ஆர்யபுத்ரா, ஏன் பயம்? போதும், போதும் இத்தனை நாட்கள் அந்தக் கொடூரனிடம் வேலை செய்தது போதும். இப்போது நமக்கென ஒருவன் வந்து நம்மை விடுவிக்கப் போகிறான். அதோ! தூரத்தில் விடிவெள்ளி தெரிகிறது. இன்னும் என்ன பயம்? உங்களுக்கும் அலுப்பாயில்லை, கம்சனிடம் வேலை செய்வதில்?" என்று கேட்டாள். "ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்! சும்மா இரு பெண்ணே! மெதுவாய்ப் பேசு. யாரானும் கேட்டுவிடப் போகின்றார்கள்." பயந்தவண்ணம் பதிலளித்தான் அங்காரகன்.

"ஹா,ஹா, எவ்வளவு அவமானம் அடைந்திருக்கிறீர்கள் நீங்கள்? ஆர்யபுத்ரா, எனக்குத் தெரியாதென எண்ணாதீர்கள். நாரதரின் தீர்க்கதரிசனம் உண்மையாகப் போகிறது. நமக்கு விடியப்போகிறது. அவன் வந்துவிட்டான்." என்றாள் திரிவக்கரை.

"நீ சொல்வது உண்மையா?" என்றான் அங்காரகன்.

"இதோ நான் இருக்கிறேனே சாட்சி! அவன் ஒரு கடவுள். இல்லை எனில் இந்தக் கூனியின் கூனை நிமிர்த்த முடியுமா? அதோடு மட்டுமல்ல, புனிதமான தநுர்யாகத்துக்கு வைக்கப் பட்டு பூஜிக்கப் பட்டிருந்த வில்லையும் அநாயாசமாய் எடுத்து உடைத்துவிட்டான். நாளை பாருங்கள், இன்னும் என்ன நடக்கப் போகிறதென." என்றாள் திரிவக்கரை. "ஆஹா, பெண்ணே, என்னைப் போன்ற துரதிர்ஷ்டசாலியை நீ பார்த்திருக்க மாட்டாய்" என்றான் அங்காரகன்.

"என்ன நடந்தது? என்னிடம் சொல்லுங்கள். தேவகியின் மைந்தன் எனக்கு மிக நல்ல நண்பன். உம்மை எப்படிப்பட்ட இக்கட்டிலிருந்தும் எனக்காக விடுவித்துவிடுவான். அவன் என்னிடம் மிகவும் அன்பும் கருணையும் கொண்டுள்ளான்." என்றாள் திரிவக்கரை. "ம்ஹும், ஒருகாலும் நடக்காது. எவராலும் என்னைக் காக்க முடியாது. அவ்வளவுதான், நான் முடிந்து போனேன். நாளைக்கு நான் உயிரோடு இருந்தால் அதிசயமே." என்றான் அங்காரகன்.

"ம்ம்ம்ம்??? என்ன விஷயம்? நானும் உங்களுக்கு ஒரு மனைவியே, சொல்லப் போனால் நான் தான் முதல் மனைவி. உங்களுக்கு மனைவியின் உரிமையோடு நான் என்ன சேவை செய்யவேண்டும்? சொல்லுங்கள் செய்கிறேன். ஒரு வேளை, ஒருவேளை அது அந்த தேவகியின் மகனையும், குவலயாபீடத்தையும் சம்பந்தப் படுத்திய விஷயம் ஏதாவதாய் இருக்குமா?" திரிவக்கரை கேட்டாள்.

"ஆஹா, நீ எப்படி அறிந்தாய் பெண்ணே?" ஆச்சரியத்தில் கண்கள் விரியக் கேட்டான் அங்காரகன். "எவராலும் தேவகியின் பிள்ளையைக் கொல்லமுடியாது!' என்று பதிலளித்தாள் திரிவக்கரை. "ஆனால் எனக்கு இடப்பட்ட கட்டளை அதுதான் பெண்ணே!" அங்காரகன் குரல் தன்னிரக்கத்திலோ அல்லது வருத்தத்திலோ தழுதழுத்தது.

"ஒரு மூர்க்கனின் கட்டளை அது! அதற்குக் கீழ்ப்படியவேண்டாம்!"திட்டவட்டமாய்ச் சொன்னாள் திரிவக்கரை.
"எப்படி? எப்படி?" பரபரத்தான் அங்காரகன். "தேவகியின் பிள்ளையை நினைந்து பிரார்த்தித்துக்கொண்டு நான் சொல்வதைக் கேளுங்கள்." என்றாள் திரிவக்கரை. திருமணக் ஆகி இருபது வருடங்களுக்கு மேலாகியும் மனைவியைத் திரும்பிக்கூடப் பார்க்காத அங்காரகன் அவள் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் தலைமேல் தாங்கும் எண்ணத்துடனும், அவளிடம் ஏற்பட்ட அளவுகடந்த நன்றியுடனும் அவள் சொல்வதைக் கூர்ந்து கேட்டான். சிறிது நேரம் பேசிய திரிவக்கரை பின்னர் தன் மாளிகைக்குச் சென்று திரும்பி வந்தபோது அவள் கையில் சில மூலிகைகள் இருந்தன. அவளும், அங்காரகனும் அன்றிரவு முழுதும் சேர்ந்து கழித்தனர். எப்படி? யானைக் கொட்டாரத்தில் இருந்த முரட்டு யானையான குவலயாபீடத்துக்கு அன்று இரவில் தேவையான உணவை இருவரும் அவர்கள் இருவர் கையாலேயே அளித்து அன்றிரவு முழுதும் குவலயாபீடத்தைக் கவனிப்பதிலேயே பொழுதைக் கழித்தனர். மறுநாள் விடிந்தது.

Saturday, November 21, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - ருக்மிணிக்குக் காதல்பிறந்துவிட்டது!

வந்தவனைப் பார்த்துக் கம்சன், “திரிவக்கரை அரண்மனைக்குத் திரும்பிவிட்டாளா?” என விசாரித்தான். திரும்பிவிட்டதாகவும், அந்தப்புரத்தில் கம்சனின் மனைவியர், அவர்களோடு இருக்கும் மற்ற நாட்டு இளவரசிகள் போன்றோரிடம் பேசிக் கொண்டிருப்பதாகவும் சொன்னான் அந்தப் பணியாள். “சரி, நீ சென்று இளவரசன் வ்ருதிர்கனனை இங்கே அனுப்பு!” என்றான். ஏற்கெனவே கம்சனைச் சந்திக்கவேண்டும் என்ற ஆவலோடு இருந்த வ்ருதிர்கனனோ சிறிதும் தாமதிக்காமல் கம்சனை வந்து சந்தித்தான். “வ்ருதிர்கனா, ப்ரத்யோதா விழாவின் மாற்றங்களை உன்னிடம் தெரிவித்தானா? மக்கள் பொதுவாக என்ன நினைக்கிறார்கள்? அவர்கள் இதனால் மகிழ்வோடு இருக்கின்றனரா?” என விசாரித்தான்.

“சொல்லிக்கிறாப்போல் ஒண்ணும் இல்லை இளவரசே! மக்கள் விழாவின் குதூகலத்தைவிடவும் அதிகம் பரபரப்புடனும், ஆவலுடனும் இருப்பது நந்தனின் இரு மகன்களையும் கண்டுதான். இருவரும் மக்கள் மனதில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டனர்.” சோகமாய் ஒலித்தது வ்ருதிர்கனன் குரல்.

“ம்ம்ம்ம், சரி, அதை நான் கவனிக்கிறேன். இனிமேல் என்னால் பொறுக்கமுடியாது. உன் ஆட்களைத் தயாராக வைத்திரு. எந்தவிதமான தயக்கமும் வேண்டாம். நிறைய யாதவத் தலைவர்கள் வருவார்கள் தநுர்யாகம் முடியும் போது. சரியான சமயம் வரும்போது நான் உனக்கு சமிக்ஞை கொடுப்பேன். காரியத்தைக் கச்சிதமாய் முடித்துவிடு. அங்காரகன் எங்கே? அவனுக்குச் சொல்லி அனுப்பு.” என்றான்.

“தங்கள் உத்தரவுப்படியே, பிரபுவே, “ என்ற வண்ணம் சென்றான் வ்ருதிர்கனன். அங்கே அந்தப்புரத்தில் திரிவக்கரை ஆனந்தத்தில் குதித்து ஆடிப் பாடிக் கொண்டிருந்தாள் என்றால் மிகையில்லை. தனக்குத் தெரிந்த நகைச்சுவைகளைப் பரிமாறிக் கொண்டும், அனைவரையும் உரிமையுடனே கேலி செய்துகொண்டும், நடுநடுவே, அந்தக் கருநிற அழகன் ஆன கண்ணன் செய்த அற்புதங்களை மிக்க மன மகிழ்ச்சியோடு விவரித்துக் கொண்டும் இருந்தாள். கண்ணனைப் பற்றி அவள் பேசப் பேச உள்ளூர வந்திருந்த அனைவர் மனதிலும் அவனைப் பார்க்கும் ஆவல் மேலிட்டது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வகை உணர்ச்சிகள் என்றாலும் கம்சனின் இரு மனைவியருக்கும் மனதில் இனம் தெரியாத பயமே ஏற்பட்டது. மற்றவர்களில் அனைவருக்கும் திரிவக்கரை கண்ணனைப் பற்றிச் சொல்லுவதைக் கேட்க ஆசைதான். ஆனாலும் கம்சனின் இஷ்டத்துக்கு மாறாகக் கண்ணனைப் பற்றிப் பேச முடியாதாகையால் கொஞ்சம் தங்களை வெளியே காட்டிக் கொள்ளாமலே கேட்டுக் கொண்டனர். ஆனாலும் அவர்களில் இருவருக்கு மட்டும் கண்ணனைப் பற்றிய பேச்சுக்களில் சற்றே மாறுபட்ட உணர்வுகள் தோன்றின.

அவர்கள் வேறு யாருமில்லை. ஒருத்தி ருக்மியின் மனைவியும் விதர்ப்ப நாட்டு அரசன் பீஷ்மகனின் மறுமகளும் ஆவாள். அத்தனை பேர் முன்னிலையில் தன் கணவனுக்கு நேர்ந்த அவமானத்தை அவளால் மறக்க முடியவில்லை. ஒரு மாட்டிடையன் அவள் கணவனை, விதர்ப்ப நாட்டு பட்டத்து இளவரசனைத் தூக்கி எறிந்துவிட்டான். தூக்கி எறிந்தான் என்றால் உண்மையாகவே அன்றோ அது நடந்துவிட்டது? அனைவரும் சும்மா பார்த்துக் கொண்டிருந்தனர். யாரும் எதுவும் சொல்லவும் இல்லை. அந்த இடைச்சிறுவனுக்கு எந்தவிதத் தண்டனையும் கிடைக்கவும் இல்லை. இதுவே நம் விதர்ப்பாவாக இருந்தால் பட்டத்து இளவரசனைத் தொட்ட கையை மட்டுமில்லாமல், அந்தக் கைகள் இருக்கும் உடலும் இரு துண்டாக அன்றோ வெட்டப் பட்டிருக்கும். இங்கு கேட்பாரற்றுப் போய்விட்டதே! இன்னொருத்தியின் நிலைமையே வேறே. அவள் தான் ருக்மிணி. ருக்மியின் தங்கையும் பீஷ்மகனின் அன்புக்குரிய மகளும் ஆன பதினாறு வயதுச் சிறுமியான ருக்மிணி தான்., அவள் முக காந்தியிலும், தேக காந்தியிலும் இளமை பொங்கித் ததும்பிக் கொண்டிருந்தது. கண்களைக் கூச வைக்கும் பேரழகோடு இந்த வயதிலேயே இருக்கிறாளே, இன்னும் சில வருடங்கள் சென்று இவள் ஓர் அழகான இளம்பெண்ணாக ஆனால் எத்தனை பேரின் தூக்கத்தைக் கெடுப்பாளோ?

சிற்பிகள் செதுக்கும் சிலைபோல பிரம்மா இவளையும் பார்த்துப் பார்த்துச் செதுக்கி அனுப்பி இருக்கிறானோ என எண்ணும்படியான அவள் அழகு அனைவரையும் கிறங்கடித்தது. ஆனால் அவளோ?? ஏற்கெனவே அண்ணனின் முரட்டுத் தனமும், அவன் செய்கைகளும் பிடிக்காமல் இருந்த ருக்மிணிக்கு அண்ணனைக் கண்ணன் தூக்கி எறிந்ததை ஓர் அவமானமாகவே நினைக்கவில்லை. இது வேண்டும் ருக்மிக்கு என்றே எண்ணினாள். இதுக்கு அப்புறமாவது ருக்மிக்கு நல்ல புத்தி வரவேண்டுமே என்றும் நினைத்துக் கொண்டாள். ஆனால் கூடவே இது என்ன?? சேச்சே, அந்தக் கண்ணன் அவன் நினைவல்லவா திரும்பத் திரும்ப வருது? அவனும், அவன் கருநிறமும்! ஆஹா, எத்தனை அழகான கருநிறம்? கறுப்புனு சொல்ல முடியாதே! நீலம்?? ம்ஹும், கருநீலமோ? ஒளி வீசுகிறதே! எத்தனை மென்மையான மேனி! ஆனால் எவ்வளவு வலு உடலில்? இந்த மென்மையான கரங்களா ருக்மியை அலட்சியமாய்த் தூக்கி ரதத்தில் வீசின? ஆச்சரியமாய் இருக்கே! சிரிப்பில் தான் எத்தனை நிச்சயம்? வரிசையான பற்கள்! தலையில் தலைப்பாகை, மஞ்சள் நிற ஆடை! தலைப்பாகையில் அது என்ன மயிலிறகைச் சூடிக் கொண்டிருக்கிறான்? ஆனாலும் அது அவனுக்குப் பொருத்தமாய்த் தான் இருக்கிறது. அந்தக் காதளவு நீண்ட கண்கள்? அவற்றில் தான் எவ்வளவு ஒளி?? அந்தக் கண்களின் மொழி??? அது ஏதோ ரகசியத்தை ஒவ்வொருவரிடமும் தனித்தனியாய்ச் சொல்லுகிறதே! அந்தக் கண்கள் என்னைத் துரத்துகின்றனவே! அவன் பார்வையின் வீச்சில் என்னை முழுகடிக்கிறதே! சட்டெனத் தன்னைச் சமாளித்துக் கொண்டாள் ருக்மிணி! ஒரு முடிவுக்கும் வந்தாள்.

திரிவக்கரை அனைத்துப் பெண்மணிகளிடமும் கண்ணனின் மதுரா விஜயம் பற்றிய செய்திகளைத் தனக்குத் தெரிந்த வரையில் சொல்லிவிட்டு, மனம் நிறைய மகிழ்வோடு திரும்பித் தன் இருப்பிடத்துக்குச் சென்று கொண்டிருந்தாள். இது என்ன? யாரோ ஓடி வரும் சப்தம்?? அவளை நோக்கிவருவதாய்த் தெரிகிறது! கூர்ந்து கேட்டாள் திரிவக்கரை. யாரோ ஓடி வருகிறார்கள் அவளைப் பிடிக்கவோ? சட்டென அந்த நீண்ட தாழ்வாரத்தின் கோடியில் இருந்த ஒரு தூணின் மறைவுக்குச் சென்றாள் திரிவக்கரை. அட, வந்தவள் ஒரு பெண்?? யாரிவள்? விதர்ப்பதேசத்து இளவரசி என்றார்களே? ஓடி வந்த பெண் தூண் மறைவில் இருந்த திரிவக்கரையைப் பார்த்துவிட்டாள். ஓடிப் போய் அவள் கையைப் பிடித்துக் கொண்டாள் ருக்மிணி. மூச்சு வாங்க, “திரிவக்கரை, அந்தப் பையன், அந்த கருநீல நிற அழகன், அந்த இடைப்பையன் என்கிறார்களே அனைவரும் அவனுக்கு, அவனுக்கு ஆபத்து! “ பயத்தில் முகம் வெளிறிவிட்டது ருக்மிணிக்கு. “அவனை எப்படியாவது காப்பாற்றவேண்டும். அவனைக் கொல்லத் திட்டம் போட்டிருக்கின்றனர்.” என்றாள். கலகலவெனச் சிரித்தாள் திரிவக்கரை.

“அவனை எவராலும் கொல்லமுடியாது இளவரசி, என் அருமை இளவரசி, அவன் கடவுள். அவனை யாராலும் அசைக்க முடியாது. ஆஹா, இப்போது புரிந்துகொண்டேன். இளவரசி, நீ அவனிடம் மிகவும் பைத்தியமாக இருக்கிறாய் போல் தெரிகிறதே? உன் கண்களே உன்னைக் காட்டிக் கொடுக்கின்றன. “மீண்டும் சிரித்தாள் திரிவக்கரை. தலையில் அடித்துக் கொண்டாள் ருக்மிணி. “பேசாதே, பெண்ணே, கேள், இதை, இங்கே குவலயாபீடன் என்ற பெயரில் யாரோ ஒரு துஷ்டன் இருக்கிறான் போலிருக்கிறதே, தெரியுமா உனக்கு? அவன் தான் நாளை அந்தப் பையனைக் கொல்லப் போகிறான். உன்னுடைய அருமை இளவரசி, அதான் கம்சனின் ஒரு மனைவி இதைப் பற்றிச் சொல்லிச் சிரித்து, ரசித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறாள்.” ருக்மிணியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட திரிவக்கரையின் அடிவயிறு கலங்கியது. முதுகுத் தண்டு சில்லிட்டது.

“அவர்கள் பேசியதை முழுதும் சொல் இளவரசி ருக்மிணி!” என்று ருக்மிணியிடம் விவரத்தைக் கேட்டாள். “நான் போகணும். என் அண்ணா பார்த்தானானால் சும்மா விடமாட்டான் என்னை. அவனுக்கு உன்னிடம் நான் இதைச் சொன்னது தெரிந்தாலும் அவ்வளவுதான்.” ஓட்டமாய் ஓடிவிட்டாள் ருக்மிணி. திரிவக்கரை யோசித்துக் கொண்டு அங்கேயே நின்றாள். யார் இந்தக் குவலயா பீடன்??? நாளை பார்ப்போமா?


படம் உதவி நன்றி: கண்ணன் சாங்க்ஸ்

Friday, November 20, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - கம்சன் பயந்தானா?

கம்சனோ?? அவனும் குதித்துக் கொண்டிருந்தான். ஆனால் வேறு காரணங்களுக்காக. வேறு வகையில். காலை எழுந்தது முதலே அவன் கேட்டவை எவையும் நல்ல செய்திகள் அல்ல. அந்த இரு இடைச்சிறுவர்களும் வந்துவிட்டார்கள் என்பதோடு அல்லாமல், தன் அரண்மனைத் துணிகளுக்குச் சாயம் போடும் தொழிலாளியின் விற்பனை நிலையம் பட்ட பாடும், அதன் பின்னர் திரிவக்கரைக்கு நேர்ந்ததும் கம்சனுக்குத் தெரிந்தே இருந்தது. திரிவக்கரையின் பல வருஷக் கூனை நிமிர்த்திவிட்டானாமே? அதோடு முடிந்ததா? ருக்மி, விதர்ப்ப தேசத்து பட்டத்து இளவரசன், அரசன் பீஷ்மகனின் பிரதிநிதியாக தநுர்யாகத்தில் கலந்து கொள்ளக் குடும்ப சமேதராக வந்தவன், கம்சனான தன்னுடைய முக்கிய விருந்தாளி, அவனைப் போய் அவமானப் படுத்தி இருக்கிறானே? என்ன அநியாயம் இது? ஒரு சாக்கு மூட்டையைப் போல் தூக்கி எறிந்துவிட்டானாமே ருக்மியை?? சரி, அதான் போச்சு என்றால் இப்போ அது எல்லாத்தையுமே தூக்கி அடிக்கும்படியான கெட்ட செய்தி , நாசத்தை விளைவித்துவிடுமோ என அஞ்ச வைக்கும் செய்தி வந்துள்ளதே! இதை எப்படிச் சமாளிப்பது? ப்ரத்யோதாவின் முகத்தைக் கூர்ந்து கவனித்தான் கம்சன்.

ஆம், ப்ரத்யோதாதான் செய்தியைக் கொண்டு வந்தது. உள்ளுர மகிழ்ந்து கொண்டிருந்தாலும் ப்ரத்யோதா தன் பல வருஷத் திறமையால் தன் உணர்வுகளை மறைக்க நன்றாகவே கற்றுக் கொண்டிருந்தான். அவன் முகம் எந்தவிதமான உணர்ச்சிகளையும் காட்டாமல் கல் போன்றிருந்தது. வில்லை, நந்தனின் குமாரன் உடைத்துவிட்டான் எனக் கேள்விப் பட்ட கம்சன் அதிர்ச்சி அடைந்தான் என்றால் ப்ரத்யோதாவோ அதைக் கண்டு மகிழ்ந்தான். ஒரு இடைச்சிறுவன் எவராலும் தூக்கக் கூட முடியாத வில்லை எடுத்துத் தூக்கியதோடு அல்லாமல் அதை உடைக்கவும் செய்தானா? எப்படி நடந்தது இது? உண்மையாகவே கம்சனின் மரணம் அந்தச் சிறுவன் கைகளால் நிகழப் போகிறதா? அதன் அறிகுறியா இது? கம்சன் குழப்பம் அடைந்தான். ப்ரத்யோதாவைப் பார்த்து இது எப்படி நடந்தது? எனக் கூறும்படி கேட்டான். அவ்வளவு வலுவும், உறுதியும் படைத்த வில்லை எப்படி உடைத்தான் என விளக்கும்படி சொன்னான்.

“அனைத்து வில்லாளிகளும் வில் சரியாகவே அமைந்துள்ளது என்றும், அவ்வளவு சுலபத்தில் எவராலும் இதை எடுத்துக் கையாள முடியாது என்றும் சொன்னார்கள். ஆனாலு அதை இந்தச் சிறுவன் எடுத்து உடைத்ததையும் அனைவரும் கண்டார்கள். அதுவும் இயல்பாகவே நிகழ்ந்தது இளவரசே! நீங்கள் நேரில் கண்டிருந்தால் ஒத்துக் கொள்வீர்கள். வேறு வழியே இல்லை!” ப்ரத்யோதா சொன்னான்.

“ஏன் அவர்களைக் கையாள விட்டாய்? தடுப்பதற்கு என்ன?” கம்சன் கோபத்தோடு கர்ஜித்தான்.

பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு, “நான் என்ன செய்யட்டும் இளவரசே! தநுர்யாகத்தின் கடைசிநாளில் வில்வித்தையில் கலந்து கொள்ளப் போகின்றவர்கள் வில்லை எடுத்துப் பரீட்சித்துப் பார்ப்பது விதிமுறைகளில் ஒன்றாயிற்றே. அதை எவ்வாறு நான் தடுக்க முடியும்?” இரு கைகளையும் கூப்பியவண்ணமே ப்ரத்யோதா சொன்னான்.

“ஆஹா, தநுர்யாகத்திற்கு வில்லிற்கும், வில் வித்தைக்கு வில்லிற்கும் எங்கே போவது இப்போது? வில்லே இல்லாமல் ஒரு தநுர்யாகமா செய்வது?” கம்சன் குழம்பினான்.

“இது ரொம்ப துரதிருஷ்டத்திற்குரியது இளவரசே! ஆனால் என்ன செய்வது என்றுதான் புரியவில்லை. நான் உடனேயே அங்கே இருந்த வேத பிராமணர்களைக் கலந்து ஆலோசித்துவிட்டேன். உடனடியாக இன்னொரு வில்லைத் தயார் செய்து அதையும் புனிதப் படுத்தி வழிபாட்டில் வைக்கவேண்டும். என்கின்றனர். “ ப்ரத்யோதா மறுமொழி கூறினான்.

“உடனே அதைச் செய் ப்ரத்யோதா!. நாளை இல்லை என்றாலும் நாளன்றைக்கு விழா முடிவதற்குள்ளாக இந்த தநுர்யாகம் முடியவேண்டும். வேதகோஷங்களோடும், வேத பாராயணங்களோடும் சிறப்பாக நடக்கவேண்டும். நாளைக்கு வேண்டாம். நாளை மல்யுத்தப் போட்டி இருக்கிறது அல்லவா?” திடீரெனக் கம்சன் ஏதோ நினைவு வந்தவனாய் ப்ரத்யோதாவைப் பார்த்து, “நந்தனின் குமாரர்கள் பார்க்க எப்படி இருக்கின்றனர்?” என்று கேட்டான்.

“பெரியவன் பார்க்க ஒரு பெரிய இளைஞனைப் போல மிக்க பலத்தோடும், வலுவோடும் காணப் படுகிறான். வெகு அலட்சியமாக ருக்மியின் சக்தி வாய்ந்த குதிரையைச் சற்றும் பிரயாசையின்றி தள்ளிவிட்டானெனில் பாருங்களேன் அவன் சக்தியை!” ப்ரத்யோதாவுக்கு அவனையும் மீறி உவகை எட்டிப் பார்த்தது. “அந்தக் கண்ணனோ எனில் பார்க்க மிகவும் மென்மையானவனாயும், நளினமாகவும் காணப்பட்டானே என்று எண்ணினால், அவன் உடல் வலுவை என்னவென்று சொல்லுவேன்? அவ்வளவு வலுவாக அந்த மென்மையான உடல் இருக்கிறது என்பது ஆச்சரியம்தான்!” என்றான் ப்ரத்யோதா.

“இப்போ அவர்கள் இருவரும் எங்கே இருக்கின்றனர்?” என்று கேட்டான் கம்சன்.

“நந்தனோடு தான், நகருக்கு வெளியே கூடாரங்கள் அமைத்துத் தங்கி உள்ளனர்.” என்றான் ப்ரத்யோதா.

கம்சன் சற்று நேரம் எதுவும் பேசவில்லை. தன் மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டும், தடவிக் கொண்டும் தரையில் நிலைகுத்தின விழிகளோடு சற்று நேரம் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான். பின்னர் ப்ரத்யோதாவை நிமிர்ந்து பார்த்தான். அவனையே கூர்ந்து பார்த்தவண்ணம், “ப்ரத்யோதா, நான் உன்னை நம்பலாமா?” என்று கேட்டான். ப்ரத்யோதா, “பிரபுவே, இந்த இருபது வருடங்களில் உங்கள் நன்மையையும், உங்கள் சுகத்தையும் தவிர மற்றவை எதையுமே நான் நினைத்துப் பார்க்கவில்லை என்பதை நீங்களே அறிவீர்கள். கடுகத்தனை சந்தேகமாவது உங்களுக்கு வந்திருக்கிறதெனில், இக்கணமே என்னைப் பதவியிலிருந்து விடுவித்து விடுங்கள். மதுராவை விட்டே நான் போய்விடுகிறேன்.” என்றான்.

கம்சன் சற்று நேரம் எதுவும் பேசவில்லை. ப்ரத்யோதா துரோகம் செய்கிறானா என்பது புரியவில்லை. ஆனாலும் இப்போது இந்தச் சமயம் அவனை விடுவிப்பது சரியாய் இருக்காது என்று நினைத்த கம்சன், அவனைப் பார்த்து, “ப்ரத்யோதா, நீ எனக்குச் செய்த உதவிகளை நான் மறப்பேனா? நீ என் பக்கம் நின்று எத்தனை உதவிகள் செய்துள்ளாய்? சரி, நீ இப்போது சென்றுவா.” என்று முடித்துக் கொண்டான்.

சற்று ஆச்சரியம் அடைந்த ப்ரத்யோதா கிளம்பும் முன்னரே அவனை நோக்கி, “என்னுடைய உத்தரவை ஒரு போதும் மறக்காதே. அந்த இரு இளைஞர்களையும் என் எதிரே அழைத்து வராதே. அவர்களாக வர நினைத்தாலும் வரவிடாதே.” என்றான்.

“ஆஹா, இளவரசே, ப்ரபு, நாளை மல்யுத்தப் போட்டி. நாலா திசைகளிலிருந்தும் மல்லர்களும், வீராதிவீரர்களும் போட்டியைக் காண வருவார்கள். நந்தனும், அவன் ஆட்களும் அதில் இருப்பார்களே? அவர்களை இந்தக் கூட்டத்தின் நடுவே எவ்வாறு தடுப்பேன்?” என்றான் ப்ரத்யோதா.

திடீரெனக் கம்சனின் தொனி மாறியது. நட்புக் குரலில் தொனிக்க, “ஆம், ஆம், ப்ரத்யோதா, முடியாதுதான். நீ இப்போது உடனே வெளியே சென்று மக்களுக்கு நாளை மறுநாள் தநுர்யாகம் முடிவடைவதாகவும், நாளை மல்யுத்தப் போட்டி நடைபெறும் என்றும் அறிவித்துவிடு.” என்றான். ப்ரத்யோதா வேறு வழியில்லாமல் அறையை விட்டு வெளியேறினான். அவன் சென்ற அடுத்த கணம் கம்சன் கைகளைத் தட்ட ஒரு அந்தரங்கப் பணியாள் வந்து நின்றான்.

Wednesday, November 18, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - வில் ஒடிந்தது!

யமுனை நதியின் கரையில் மதுரா நகரின் கோட்டையின் உள்பக்கமாய் கம்சனின் மாளிகைக்கு அருகே இருந்த ஒரு பெரிய மைதானத்தில் வெகு நேர்த்தியாகப் பந்தல் போடப்பட்டு அங்கே நட்ட நடுவாக ஒரு மண்டபமும் எழுப்பப் பட்டிருந்தது. அந்த மண்டபத்தின் நடுவே மற்றொரு சிறிய அலங்கார மண்டபம் எழுப்பி அதன் மேல் சர்வ அலங்காரங்களுடன் கூடிய வில் ஒன்றும் அதன் அம்புகளும் வைக்கப் பட்டிருந்தன. தநுர்யாகத்திற்கு அழைக்கப் பட்டிருந்த அங்க, வங்க, கலிங்க, திராவிட தேசத்து அரசர்களும், அவர்களுக்கான பிரதிநிதிகளும் அந்த வில்லைப் பார்க்கவென வந்த வண்ணமிருந்தனர். மூன்று பக்கங்களிலும் அந்தணர்கள் அமர்ந்து வேதங்கள் ஓதி மந்திரபூர்வமான வழிபாடுகளையும், யாகங்களையும் செய்த வண்ணமிருந்தனர். தநுர்யாகம் முடிந்ததும் அந்த வில்லை எடுத்து அதில் நாணேற்றி அம்புகளை எய்ய முடியுமா என்றுசிலரும், நம்மால் முடியாது என்று சிலரும் அந்த வில் வைக்கப் பட்டிருந்த மண்டபத்தைச் சுற்றிச் சுற்றி வந்து வில்லையும், அம்புகளையும், வில்லின் வலுவையும் கவனித்துக் கொண்டு போய்க்கொண்டும், வந்து கொண்டும் இருந்தனர்.

அந்த வில்லில் எப்படியானும் நாணேற்றவேண்டுமென நினைத்த சிலர் அதன் வலிமையை எங்கனம் சோதிப்பது என நினைத்துக் கவலைப்பட்டனர். தநுர்யாகம் முடிந்ததும் கடைசிநாளன்று வில்லில் நாணேற்றி அம்பைக் குறிப்பிட்ட தூரம் எய்து பார்க்கவெனத் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொண்டனர் சிலர். அவ்விதம் பதிவு செய்து கொண்டு வில்லில் நாணேற்றி அம்பை எய்யும் வீரனே இந்த விழாவின் மாபெரும் வீரனாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு ஆன்றோரும், சான்றோரும் நிறைந்த அவையில் மிகப் பிரமாதமாகக் கெளரவப் படுத்தப் படுவான். ஒவ்வொருவரும் அந்த கெளரவம் தங்களையே சேரவேண்டும் என நினைத்தார்கள். அந்த இடத்துக்குத் தான் இப்போது ப்ரத்யோதா கிருஷ்ணனையும், பலராமனையும் அழைத்து வந்தான். அங்கே வரும்போதே திரிவக்கரையைத் தன் அருகே அழைத்து அவள் காதுகளில் மிக ரகசியமாக ஏதோ சொன்னான் ப்ரத்யோதா. உடனேயே திரிவக்கரை கிருஷ்ணனை அர்த்தம் பொதிந்த ஒரு பார்வையால் பார்த்தாள். அந்தப் பார்வையின் காரணமும், அதன் உள்ளர்த்தமும் கண்ணனுக்கோ உடனே விளங்கிவிட்டது. அனைவரையும் தன் படைபலத்தாலும், அதீதமான கொடுமையாலும் ஆட்டிப் படைத்துவந்தான் கம்சன். ஆனால் தன் வீரத்தாலேயே அனைவரும் தனக்குக் கட்டுப் படுவதாகவும் நினைத்திருந்தான். அவன் மக்களை எந்தப் படைபலத்தாலும் எதை வீரம் எனக் கம்சன் நினைத்து வந்தானோ அதையும் வேரோடு அறுக்கவேண்டும். தான் யார் என்பதை கம்சனுக்குக் காட்டவேண்டும். அதுவே ப்ரத்யோதா திரிவக்கரை மூலம் தனக்கு விடுத்த செய்தி எனக் கண்ணன் புரிந்து கொண்டான். இந்த தநுர்யாகம் நடத்துவதன் மூலம், தான் மாபெரும் சக்கரவர்த்தி என்னும் மாயையையும் தோற்றுவிக்கப் பார்க்கும் கம்சனின் அந்த மாயவலையும் அறுபடவேண்டும். அதற்குத் தான் என்ன செய்யவேண்டும் என்பதும் கண்ணனுக்குப் புரிந்துவிட்டது.

அடுத்தநாளுக்கும் அடுத்தநாள் யாகம் முடியும் கடைசிநாளாக அமைந்திருந்தது. எவனோ ஒரு வீரன் இந்த வில்லில் இருந்து அம்பை எய்கிறானோ இல்லையோ, அவனால் முடியுமோ முடியாதோ அது வேறு விஷயம். ஆனால் இந்த வில்லானது இப்போது கம்சனின் அதிகாரத்தைச் சொல்லப் போனால் சர்வாதிகாரத்தை எடுத்துக் கூறும் ஒரு அடையாளமாகவன்றோ உள்ளது? ஆகவே இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும். அந்த வில்லையே கூர்ந்து பார்த்தான் கண்ணன். இனம் புரியாததொரு உணர்ச்சி அவன் நாடி, நரம்புகளில் ஓடியது. அவன் உடல் சிலிர்த்தது. அப்போது திரிவக்கரை கண்ணனைப் பார்த்து, “என் பிரபுவே, நீங்கள் ஏன் அந்த வில்லை இப்போதே எடுத்து நாணேற்ற முயலக் கூடாது? இதோ அருகிலிருக்கும் நம் மாமாவான ப்ரத்யோதா அவர்கள் செய்த அற்புதம் இது.” என்றாள். திரிவக்கரை சொன்னதற்கு ஏதேனும் முக்கியத்துவம் இருக்கிறதா எனக் கண்ணன் தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். அது இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இந்த வில்லை இப்போது அழிப்பது ஒன்றே நாளை நாம் கம்சனை அழிக்கவேண்டும் என்ற நோக்கம் ஈடேற உதவும். கண்ணனுக்கு அது தான் சரி எனத் தோன்றியது. தன் மனதை இந்த வில்லை அழிக்கவென ஒருமுகப் படுத்திக் கொண்டான். தன்னைத் தானே தயார் செய்து கொண்டான். ப்ரத்யோதாவைப் பார்த்துக் கைகளைக் கூப்பியவண்ணம் கண்ணன் கூறுவான்:” ஐயா, நான் அப்படி ஒன்றும் சிறந்த வில்லாளி அல்ல. நான் ஒரு இடையனாகவே இருந்தேன், இருக்கிறேன். ஆனால் நான் தநுர்யாகத்தின் கடைசிநாளில் இந்த வில்லை நாணேற்றி இதிலிருந்து ஒரு அம்பாவது செலுத்த எண்ணுகிறேன். இப்போது இதைத் தூக்கிப் பார்க்க அநுமதித்தீர்களானால் இதன் எடை எவ்வளவு என்றும் தூக்கி எவ்வாறு நாணேற்றமுடியும் என்றும் புரிந்துகொள்வேன்.” என்று வேண்டினான். “அப்படியே ஆகட்டும், நந்தகுமாரனே!” ப்ரத்யோதா திரிவக்கரையைப் பார்த்து சங்கேதமாய்ச் சிரித்தவண்ணம் மேலும் கூறினான். “ஆனால், இளைஞனே, உன்னால் முடியாதென நினைக்கிறேன். பல வில்லாளிகளும் முயன்று பார்த்துத் தோல்வி அடைந்திருக்கின்றனர்.” என்றான். ப்ரத்யோதாவின் மனதில் கூடவே ஒரு கேள்வியும் உள்ளூர ஓடிக் கொண்டிருந்தது. இவன் நிஜமாகவே கம்சனை அழித்து நம்மைக் காக்கப் போகும் ரக்ஷகனா? அல்லது நம்மை எல்லாம் ஏமாற்றி விடுவானா? எப்படி இருந்தாலும் இதோ இப்போது தெரிந்துவிடும். ப்ரத்யோதா கண்ணனைப் பார்த்து, “ம்ம்ம்ம், உன் முயற்சியைச் செய், இளைஞனே!” என்றான்.

கண்ணன் சற்று நேரம் அந்த வில்லையும் அதன் அமைப்பையும் கூர்ந்து கவனித்தான். தன் மனதிற்குள்ளாக அதன் எடையையும் யோசித்துக் கொண்டிருந்தான். அதை எப்படித் தூக்கினால் சுலபமாக இருக்கும் என்றும் கவனித்துக் கொண்டிருந்தான். அவனைச் சுற்றி நின்றவர்கள் பலரும் கண்ணன் மேலும் சந்தேகம் கொண்டவர்களாகவே அவனைப் பார்த்தார்கள். அனைவர் கண்களிலும் அவநம்பிக்கை தெரிந்தது. இன்னும் சிலர் பதினாறு வயதுச் சிறுவனுக்கு இவ்வளவு தன்னம்பிக்கையா என்ற ஏளனத்துடன் பார்த்தனர். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கண்ணன் சட்டெனக் குனிந்தான். ஒரு சிறிய சப்தத்துடன் அந்த வில்லை லாவகமாய்த் தூக்கிவிட்டான். சுற்றி நின்று பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் பேச்சு, மூச்சின்றிப் பிரமித்து நின்றனர்.
கடைசிநாளன்று இதோ இந்த அம்பைத் தானே இந்த நாணில் ஏற்றி எய்யவேண்டும்??” கண்ணன் ப்ரத்யோதாவைப் பார்த்துக் கேட்டான். “ஆம்” என்றான் ப்ரத்யோதா. கண்ணன் பால் தன் கண்களில் தெரியும் புதிய மரியாதையும் சந்தோஷத்தையும் சற்றும் மறைக்கவில்லை அவன். “ இந்த வில் என்ன கையாளச் சிரமம் கொடுக்குமா?” சற்றே வெகுளித்தனமாய்க்க் கண்ணன் கேட்டபோதிலும் அவன் கண்கள் அந்த வில்லை அளவெடுத்துக் கொண்டிருந்தன. அது எப்படித் தயாரிக்கப் பட்டிருக்கிறது என்றும், அதன் தனிச்சிறப்பு என்ன என்றும் கூர்ந்து கவனித்து அலசிக் கொண்டிருந்த கண்ணனின் கண்களுக்கு அதன் ஒரு பக்க இணைப்புகள் கண்களில் தெரிந்தன. ஆஹா, இதானா விஷயம்? நாம் எதற்கு வந்தோமோ அது பூர்த்தியாகப் போகிறது.

அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே கண்ணன் அனைவரும் திகைத்துப் போகும் வண்ணம் ஒரு காரியத்தைச் செய்தான். வில்லின் அடிப்பாகத்தைக் கீழே வைத்து அதனிடத்தில் திரும்ப வைப்பதற்குப் பதிலாய்க் கண்ணன் அந்த வில்லின் ஒரு பக்கம் தன் பாதத்தை வைத்து மற்றொரு பக்கத்தைத் தன் கைகளால் வளைத்தான். தன்னால் முடிந்த மட்டும் தன் பலம் உள்ளமட்டும் அந்த வில்லை இரு கைகளாலும் வளைத்தான் கண்ணன். வில் இரண்டாக ஒடிந்தது. இரு துண்டுகளான வில்லைத் தூக்கி எறிந்த கண்ணன் சுற்றி இருந்தோரைப் பார்த்துச் சிரித்தான். அனைவருக்கும் பயமும், ஆச்சரியமும் கலந்து செய்வது அறியாமல் சிலையாக நின்றனர். கம்சனுக்குப் பெரும் இழிவன்றோ இது. அவனுக்குச் செய்யப் பட்ட மிகப் பெரிய அவமரியாதை இது. இப்போது அடுத்து என்ன நடக்கப் போகிறதோ? சொல்வதற்கும், செய்வதற்கும் எதுவும் இல்லாமல் சுற்றி இருந்தவர்கள் திகைத்துத் தடுமாறி நிற்கையிலேயே சகோதரர்கள் இருவரும் திரும்பி நடந்தனர். ப்ரத்யோதாவின் உள் மனதோ இனம் புரியாத உவகையில் கும்மாளமிட்டுக் குதித்தது. இந்தச் செய்தியைக் கம்சனிடன் உடனே சொல்லப் பரபரத்தான். கம்சனின் மாளிகைக்கு விரைந்தான் ப்ரத்யோதா.