எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, November 28, 2023

கார்த்திகை நல்லபடியா முடிஞ்சது! இறைவனுக்கு நன்றி!


 



 


  


கார்த்திகை தீபத்திருநாள் படங்கள். இம்முறை கார்த்திகை மன நிறைவுடனும், மகிழ்வுடனும் கொண்டாடினேன் எனில் அது குட்டிக் குஞ்சுலுவால் தான். கார்த்திகைக்கு முன்னாலும் தீபாவளிக்குக் கேட்டுக் கொண்டாற்போல் அது என்னிடம் எல்லாமும் கேட்டு வைத்துக் கொண்டது. அதே போல் ஞாயிறன்று கார்த்திகை தீபம் அங்கே நைஜீரியாவிலும் ஏற்றிக் கொண்டாடினார்கள். பட்டுப்பாவாடை, ப்ளவுஸ் போட்டுக் கொண்டு என்னிடம் காட்டியது. ஒரே ஆட்டம் தான். கொண்டாட்டம் தான். அது மட்டும் இங்கேயே இருந்திருந்தால் என்னும் எண்ணமும் வரத்தான் செய்தது. என்றாலும் இத்தனை ஈடுபாட்டுடன் நம் பாரம்பரியப் பண்டிகைகளைக் கொண்டாடுவதில் அதுக்கு இருந்த சந்தோஷம் அளவிட முடியாத ஒன்று.  குஞ்சுலு என்னிடம் பாட்டி, நீ எத்தனை விளக்கு ஏத்தினே? எனக் கேட்டது. சுமார் 20/25 இருக்கும் என்றேன். அதுங்கிட்டே பத்து விளக்குகள் தானாம். ரொம்ப சோகமாச் சொன்னது. அடுத்த வருஷம் நிறைய ஏத்தலாம்னு சொல்லிட்டு இருந்த விளக்குகளை அவ அம்மா ஏத்தினாள். இது கூடவே நின்னுண்டு பார்த்துட்டு இருந்தது. நிலைப்படியில் எல்லாம் நான் வைச்சிருக்கிறதைப் படத்தில் பார்த்துட்டு அதே போல் அங்கேயும் வைக்கச் சொன்னது. ஒரே ஆட்டம், பாட்டம், குதியாட்டம் தான். கோடி துக்கம் போகும் குழந்தை முகத்திலே என்பார்கள். அதை ஞாயிறன்று அனுபவித்தேன்.

கார்த்திகைக்கு முன்னாலிருந்தே ரங்க்ஸின் உடம்பு சரியில்லாமல் இருந்தது. சரியாக சனிக்கிழமை அன்று காலை ஒரே தலை சுற்றல், நிற்க முடியவில்லை. என்னை இறுக்கப் பிடித்துக் கொண்டிருந்தவர் கீழே விழுந்து விடுவார் போல் இருந்ததால் நல்லவேளையாகப் பக்கத்தில் இருந்த நாற்காலியை மெதுவாக நகர்த்தி அதில் உட்கார வைத்தேன். பின்னர் மருத்துவரிடம் அவர் தானாகவே தான் சென்றார். மருத்துவரோ ஜூரம் மிக அதிகமாக இருப்பதாகச் சொல்லித் தனியே வந்ததுக்குத் திட்டி விட்டுப் பின்னர் மருந்தை ஐவி மூலம் ஏற்றித் தக்கத்துணையோடு வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அன்று படுத்தவர் நேற்றுக் கொஞ்சம் பரவாயில்லை என்னும்படி இருந்தார். நான் ஏதோ முடிந்ததைச் சமைத்துப் பொரிப் பாகு செலுத்திக் கார்த்திகை தீபத்தை நிறைவேற்றினேன். குழந்தையின் வரவும் அதன் சந்தோஷமும் தான் மனதுக்கு ஆறுதலைக் கொடுத்தது. இன்று காலை வரை சரியாக இருந்தவருக்கு மத்தியானத்தில் இருந்து தலையில் மீண்டும் வலி. அவரை நேரில் பார்த்தவர்களுக்கு அவருக்குக் கழுத்துப் பிரச்னை இருப்பது தெரிந்திருக்கும். அதனால் ஏற்பட்ட வலி தலை முழுவதும் வியாபித்துப் பொறுக்க முடியாமல் இருக்கு. 
நாளை நியூரோ மருத்துவரிடம் போக நேரம் கேட்டு வாங்கி இருக்கேன். நாளைக்காலை போகணும். திடீரென ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்தினால் வீட்டில் யாருக்குமே ஒண்ணுமே ஓடலை. பார்க்கலாம் இறைவன் நினைப்பு என்னனு. 

Monday, November 13, 2023

உல்லாசம் பொங்கும் இந்த தீபாவளி!

 

குளிக்கப் போகும் முன்னர் எல்லாம் எடுத்து வைச்சிருந்த படம்.  சம்புடங்களில் பக்ஷணங்கள். ரிப்பன் பகோடா, மிக்சர், பாதுஷா, லட்டு ஆகியவை மட்டும். வீட்டில் நான் செய்த பாதம் பர்ஃபி   அல்வா,  என்னும் பெயரில். மருந்துப் பொடி கடையில் வாங்கியது இந்த வருஷம் அதைக் கிளறினால் கமர்கட் மாதிரி வந்திருக்கு. என்னோட தீபாவளி மருந்துக்கு ரசிகர்கள் நிறைய உண்டு ஒரு காலத்தில் பாராட்டினவங்க   எல்லோரும்  இதைப் பார்த்தால்   நீயா செய்தது எனக் கேட்டு வியப்பார்கள். :( வயசாச்சு/அதான் உனக்கு  முடியலைனு எல்லோரும் சொன்னாலும் அது நொண்டிச்சாக்கு என எனக்குத் தோணும்.



நெல்லை பார்த்தால் இந்த ரிஃப்லெக்ஷன் இல்லாமல் எடுக்கத் தெரியலைனு கேலி செய்வார். வெங்கட் நவராத்திரிம் போது வந்து ஓர் ஆய்வே நடத்திட்டார். ரிஃப்லெக்ஷன் இருக்கத்தான் இருக்கும் என்கிறார். நெல்லை என்னமோ ஒத்துக்கப் போறதில்லை. என்றாலும் ஸ்ரீராமர் ஒத்துப்பார்.


இதோ! பிரிச்சு வைச்சிருக்கேன் பாருங்க. மேலே உள்ள பிங்க் நிறப் புடைவை தான் நேத்திக்குக் கட்டிண்டேன். எங்க ஊர்ப்பக்கம் (மதுரை) ஒற்றைப் புடைவையாக வைக்கக் கூடாது என்பார்கள். இரண்டு தான் வைக்கணும் என்பார்கள். அப்பாவும் எனக்குப் பாவாடை என்றாலும் 2, புடைவை கட்ட ஆரம்பிச்சதும் 2 புடைவை என்றே எடுத்திருக்கார். ஒரு புடைவை க்ரான்டாக இருக்கும். க்ரான்டாக இருப்பதை தீபாவளிக்குக் கட்டிப்பேன். இப்போவும் அப்படித்தான். குஞ்சுலு செலெக்ஷன் க்ரான்டாக இருந்தது. அதைத் தான் கட்டிண்டேன். 

எல்லோரும் தீபாவளி கொண்டாடி இருப்பீங்க. இங்கேயும் தீபாவளிக் கொண்டாட்டங்கள் முடிஞ்சது. ஒரு வாரமாகவே வெடிச் சப்தம் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் பயங்கரமான வெடிச் சப்தம். நேற்று மத்தியானமெல்லாம் படுக்கவே முடியலை. சாயந்திரமாக் குஞ்சுலு வந்தப்போப் பேசவே முடியலை. அதுக்கும் வெடிச் சப்தம் கேட்கணும்னு இருந்ததாலே கேட்டுட்டு இருந்தது. இரண்டு, மூன்று நாட்களாகவே தீபாவளி பற்றிய சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தது குஞ்சுலு.  என்னிடம் பாட்டி, தீபாவளி கொண்டாடியதும் எனக்குப் படம் எடுத்து அனுப்பு என்றது.

நான் இந்த வருஷம் எந்த பக்ஷணமும் பண்ணவில்லை. போன வருஷம் தேன்குழல் மட்டும் பண்ணிட்டு லாடு ஏதோ பிடித்தேன். இந்த வருஷம் பாதம் பர்ஃபி பண்ணலாம்னு பண்ணினால் அது பாதாம் அல்வாவாக வந்திருக்கு. சரினு பெயரை மாத்திட்டு அதையே எல்லோருக்கும் கொடுத்தாச்சு. நம்ம ரங்க்ஸ் நீ தேன்குழலெல்லாம் பண்ணாதேனு திட்டவட்டமாகச் சொல்லிட்டார். அதை மீறிட்டு என்ன செய்ய முடியும்? காடரர் கிட்டே ஆர்டர் செய்த பக்ஷணங்களையே எல்லோருக்கும் கொடுத்தாச்சு.

குட்டிப் பட்டுக் குஞ்சுலு நாங்கல்லாம் சொன்னதைக் கேட்டுக் கொண்டு நேத்திக்கு அதுவாகவே சீக்கிரமாய் எழுந்து கொண்டு அவ அம்மாவிடம் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டச் சொல்லிக் குளித்துப் புது ட்ரஸ் எல்லாம் போட்டுக் கொண்டு எங்களிடம் காட்டியது.  பாட்டி, நீ சொன்ன மாதிரி நானும் தீபாவளி கொண்டாடினேன் என்று சொன்னது. பட்டாஸுகள் வெடிப்பதைக் கேட்க வேண்டும்/பார்க்க வேண்டும் என்று ஆசை. நமக்கோ அந்தப் புகையே ஒத்துக்காது. என்ன செய்யலாம்னு யோசிச்சப்போ நம்ம வளாகத்தின் வெளியே மேற்குப் பக்கமாக வெடி வெடிக்க அனுமதி கொடுத்திருந்தாங்க. உள்ளே வெடிச்சால் கார் பார்க் நிரம்பி வழிஞ்சது. ஆகவே பாதுகாப்பைக் கருதி வெளியே வெடிச்சாங்க. அதை அசோசியேஷன் தலைவர் வீடியோ எடுத்துப் பகிர்ந்திருந்தார். சரினு குஞ்சுலுவுக்கு அதை அனுப்பிட்டேன். அதுவும் பார்த்து ரசிச்சது.

சென்னையை விட்டு வந்தப்புறமாச் சுண்டல் கலெக்ஷன் குறைஞ்ச மாதிரி தீபாவளி கலெக்ஷனும் குறைஞ்சு போச்சு. எதிர் வீடுங்க இரண்டு மட்டும் தான் கொடுக்கல்/வாங்கல். ஆகவே பக்ஷணங்களை என்ன செய்யலாம்னு மண்டைக்குடைச்சலும் இல்லை. காடரர் கொடுத்திருக்கும் பக்ஷணங்களை விநியோகம் போக மீதம் சாப்பிட்டாலே போதுமானதுனு ஆயிடுச்சு. இப்படியாக இந்த வருஷ தீபாவளியைக் கொண்டாடி முடிச்சாச்சு. எல்லோருக்கும் தாமதமான இனிய தீபாவளி வாழ்த்துகள்..

நேத்திக்குக் காலம்பர 3 மணிக்கே எழுந்து கொண்டு வாசல் பெருக்கிக் கோலம் போட்டேன். பாரத்தவங்க எல்லாம் இத்தனை பெரிய கோலத்தை உங்களால் குனிஞ்சு போட முடிஞ்சுதானு ஆச்சரியப்பட்டாங்க. அந்த நேரம் பகவான் கொடுத்த தெம்பில் முடிஞ்சது. பின்னர் வீடு பெருக்கித்துடைச்சு, (வேலை செய்யும் பெண் தீபாவளிக்கு லீவு) இன்னிக்குத் தான் வந்திருக்காங்க. உம்மாச்சிக்கு எல்லாம் எடுத்து வைச்சு, எண்ணெய் காய்ச்சி, சீயக்காய் கரைச்சு  மஞ்சள் பொடியோடு எடுத்து வைச்சுப் புடைவை வேஷ்டி எல்லாமும் எடுத்து வைச்சேன். இந்த வருஷ தீபாவளிப் புடைவைங்க எல்லாம் ஓ.சி. புடைவை தான். பையர் மைசூர் போனப்போ குஞ்சுலு செலக்ஷனில் ஒரு புடைவை வாங்கி வந்திருந்தார். அதைத் தான் கட்டிக் கொண்டேன். குஞ்சுலு பிங்க் கலரில் எடுத்திருக்கு. அதுவுமே நேத்திக்குப் பிங்க் கலர் ட்ரஸ் தான் போட்டுக் கொண்டிருந்தது. மும்பையிலிருந்து வந்த என் ஒண்ணு விட்ட ஓர்ப்படி ஒரு புடைவை கொடுத்தாங்க. அதை நவராத்திரிக்கே கட்டிண்டாச்சு. செப்டெம்பரில் நடந்த உறவினர் திருமணத்தில் ஒரு புடைவை, நவராத்திரியில் நாத்தனார் பெண் ஒரு புடைவையும் கொடுத்திருந்தாங்க. நான் பையர் வாங்கின புடைவையையே சிறிது நேரம் கட்டிக் கொண்டேன்.  நான் தீபாவளி ஜவுளி மட்டுமல்ல, பொதுவாகக் கடைகளுக்குப் போயே 3 வருஷங்கள் ஆகின்றன. எல்லாக் கடைகளிலும் சுமார் 15/20 படிகள் ஏறணும். பிடிச்சுக் கொள்ளப் பிடிமானமும் இல்லை. ரங்க்ஸ் முதலில் மேலே ஏறிக் கொண்டு பின்னர் என்னை மேலே ஏத்தணும். சுற்றிலும் உள்ளவங்க என்னையே பார்ப்பாங்க. சில கோபக்கார மாமிகள் அவரே முடியாமல் இருக்கார், நீ அவரைப் போய் ஏன் தொந்திரவு பண்ணறே? ஏன் வெளியே வாசல்லே வரேனு கேட்டுச் சத்தமும் போட்டிருக்காங்க. ஆகவே நான் மருத்துவரைப் பார்க்க வேண்டியது தவிர்த்த மற்ற இடங்களுக்கு இப்போதெல்லாம் போவதில்லை.

Tuesday, October 24, 2023

நவராத்திரி முடிஞ்சாச்சா?


நவராத்திரிப் பத்து நாட்களூம் பதிவு போட முடியலை. முக்கியமாய் இந்தக் கணீனி ஒரு காரணம். எழுதுவது சிரமமாக ஆகி விட்டது. காப்பி, பேஸ்ட் பண்ணீப் பழைய பதிவுகள் போடலாம் எனில் அதுவும் சிரமமாக இருந்தது. ஆகவே சும்மாவே இருந்துட்டேன். இப்போ நேத்திக்கு சரஸ்வதி பூஜைப் படங்கள் குஞ்சுலுவுக்காக எடுத்தது போட்டிருக்கேன். இதிலே தீபாராதனைப் படங்கள் எல்லாம் வரலை. பார்க்கணூம் பார்த்துக் கிடைச்சதும் அதைச் சேர்க்கிறேன். இப்போதைக்குப் பூஜை நடக்கும் படங்கள் மட்டும். நிவேதனம் சாதம், பருப்பு, பாயசம், வடை, அதிரசம் மட்டும். கொண்டைக்கடலைச் சுண்டல் சாயந்திரம் பண்ணீனேன். நேத்திக்குக் கொஞ்சம் பேர் வரவும் வந்தனர். ஒரு வழியாய் நவராத்திரி முடிஞ்சாச்சு. 



 









புடைவை தெரியுதே, நான் உட்கார்ந்திருக்கேன். 

 


 







Sunday, October 08, 2023

மதுரைக்கு வந்த சோதனை!

 பதிவு எழுதணும்னு தான் ஆசை. ஆனால் நேரம் என்னமோ இறக்கை கட்டிப் பறக்கிறது. அடுத்தடுத்து உறவினர் வருகை, வீட்டு வேலைகள்னு கணினி பக்கமே வர முடியலை. முன்னெல்லாம் காலை ஒரு மணி நேரமாவது கரெக்டா உட்கார்ந்துடுவேன். இப்போல்லாம் முடியலை. அதிலும் வீட்டு வேலை செய்யும் பெண் வருவாளா/மாட்டாளா என பூவா/தலையா போட்டுப்பார்த்துட்டு வேலை செய்ய வேண்டி இருக்கே. அதோட இப்போல்லாம் வேகமா வேலை செய்ய முடியறதில்லை. சுணக்கம். பிள்ளையாருக்கு முன்னாடி நடந்த கிருஷ்ண ஜயந்திப் படங்களையே இன்னமும் போட முடியலை. அதோடு இந்தக் கணினி பிரச்னை வேறே. பழைய டெல் கணினியில் இ கலப்பையினால் எழுதினால் எழுத்துப் பிழைகள் நிறையவே வருகின்றன. சுரதா மூலம் தட்டச்சிப் போட்டுக் கொண்டிருந்தேன். இப்போ சுரதா வேலையே செய்வதில்லை.

இந்தப் புதுக்கணினியில் வேலை செய்தாலும் இதில் வேறே சில பிரச்னைகள். இதில் அடிக்கடி உட்கார்ந்து வேலை செய்ய முடியலை. நடுவில் பிரின்டர் வேறே வேலை செய்யாமல் படுத்தல். இதுக்கு நடுவிலே செய்ய வேண்டிய ஆன்லைன் ட்ரான்சாக்ஷன் எல்லாம் செய்ய வேண்டி இருக்கு. வீட்டு வரி, தண்ணீர் வரி, மின் கட்டணம்னு எல்லாமும் செய்வதால் அதுக்கெல்லாம் உட்கார்ந்தால் ஒரு அரை மணியாவது ஒவ்வொண்ணுக்கும் ஆகிடும். அதுக்கப்புறமாப் பதிவுகள் பக்கம் வரவோ, ஏதேனும் எழுதவோ தோன்றுவதில்லை. 

வெளியே எங்கேயும் போகாமல் வீட்டிலேயே இருப்பதால் கோயில்கள் பற்றியோ சென்ற இடங்கள் பற்றியோ எழுத முடியலை. வேறே சில விஷயங்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் எழுத யோசனை. இப்படியே நாட்கள் போய்க் கொண்டிருக்கின்றன. இதுக்கு நடுவிலே எஸ் எம் எஸ் கொடுத்து மிரட்டும் சைபர் திருடர்கள்! என்னத்தைச் சொல்ல! எத்தனை கவனமாக இருந்தாலும் வந்து மிரட்டுகிறார்கள். நேத்திக்கு அக்கவுன்டே ப்ளாக் ஆகிடுத்துனு தகவல். போனாப் போகட்டும்னு அந்த எஸ் எம் எஸ்ஸை டெலீட் செய்துட்டேன். :)))))) அடுத்து உங்க வீட்டில் மின்சாரம் கட் ஆகும்னு செய்தி வரும். இதுக்கு நடுவில் தொ(ல்)லை பேசித் தொந்திரவு கொடுக்கும் நண்பர்கள். பெல் அடிக்குதேனு ஃபோனை எடுக்கப் போனால் கிட்டப் போகிறவரை அடிச்சுட்டுக் கிட்டப் போனதும் நின்னுடும். :P

எடுத்துக் கேட்டாலோ ஷேர் மார்க்கெட், சீட்டுக் கட்டுவது, ஃபைனான்ஸ் தரேன், வாங்கிக்கோனு ஏகப்பட்ட ஆஃபர்கள். இதுக்கு நடுவிலே ஷாப்பிங் வேறே தொ(ல்)லைபேசி மூலம்! அப்பாடா! எத்தனை பேரைச் சமாளிக்க வேண்டி இருக்கு. இந்தக் கணினிப் பயன்பாடு வந்தாலும் வந்தது எல்லோரும் ரொம்பவே கெட்டிக்காரங்களாவும் புத்திசாலிகளாவும் எப்படி எல்லாம் திருடலாம்னு பத்துப் பேருக்கு யோசனை சொல்லக் கூடியவங்களாவும் ஆயிட்டாங்க. எல்லாம்     தலைவர்களால் தான். அவங்க வழியிலேயே மக்களும் ரொம்பக் கெட்டிக்காரங்களா ஆயிட்டாங்க போல!  ஒவ்வொருத்தரின் சொத்துக்கள் பற்றியும் கேட்டால் ஆகா! தமிழகம் இவ்வளவு பணம் படைத்த மாநிலமாகவா இருந்திருக்கு என ஆச்சரியப்பட வேண்டி இருக்கு.

இப்போ என்னோட தலையாய கவலையே இன்னும் வீட்டு வேலை செய்யும் பெண் வரலை! வருவாங்களா? மாட்டாங்களா? என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை!

Monday, September 18, 2023

வந்தார், வந்தார், வந்தாரே விநாயகர்!


 இது ஆடி வெள்ளீக்குப் போட்ட மாவிளக்கு



கணபதியார் குளீச்சுப் புத்தாடை அணீந்து அலங்காரத்தில்


நெய் தீபம் காட்டும்போது



நம்ம ராமர் மேலே இருந்து எல்லாத்தையும் பார்த்துட்டு இருக்கார்.


நிவேதனங்கள். வெற்றீலை, பாக்கு, பழங்கள், சாதம், இட்லி, வடை, அப்பம், உப்பு, வெல்லக் கொழுக்கட்டைகள், பருப்புப் பாயசம்


பூப் போட்டுக் கொன்டிருக்கார்


கற்பூர தீபாராதனை
.
ஆங்காங்கே இருக்கும் தட்டச்சுத் தவறூகள் மனதை நோகடிக்கிறது. மன்னிக்கவும்.

Sunday, September 17, 2023

எங்கே தப்பு?

 குஞ்சுலு ஊருக்குப் போனதில் இருந்து ஒரே நெருக்கடி. -ஹி-ஹி, அதால் இல்லை. உறவினர் வருகை/திரும்புதல் என. உட்கார நேரம் இல்லை. சென்ற வாரம் ஒரு கல்யாணம். பையருக்கு 26 வயது/பெண்ணூக்கும் கிட்டத்தட்ட 2,3 வயதே கம்மி. பார்க்கவே அழகாக இருந்தது. இங்கே ஶ்ரீரங்கத்திலேயே பெரிய திருமண அரங்கான அரங்கன் அரங்கத்தில் கல்யாணம். உண்மையிலேயே பெரிய திருமண மண்டபம். மாமியார் வழி சொந்தங்கள் அனைவரும் வந்திருந்தனர். ஆகவே நம்ம வீடு கல்யாண வீடு மாதிரி ஆகி விட்டது. எல்லோரும் வருவதும் போவதுமாக இருந்தது. உட்கார நேரமில்லை. பின்னர் அவசரமான  ஒரு சின்னப் பயணமாகச் சென்னைக்குப் போயிட்டு புதன்கிழமை திரும்பிட்டோம். மறூநாள் அமாவாசை வேறே! மூச்சு விட முடியலை.

செப்டெம்பர் 11 ஆம் தேதி குட்டிக் குஞ்சுலுவின் பிறந்த நாள். அன்னிக்குக் குஞ்சுலுவைப் பார்த்து ஆசிகள் சொன்னோம். குதித்துக் கொண்டு இருந்தது. அதோட அன்னிக்குத் தான்  பாரதியின் நினைவு நாள். கணீனியைத் திறக்கவே முடியலை. விடாமல் பதிவு போட்டிருக்கேன். ஆனால் இந்த வருஷம் முடியலை!அன்னிக்குப் பூரா மனசில் பாரதியின் நினைவுப் பதிவு போடாதது முள்ளாகக் குத்தியது. என்ன செய்ய? மறூநாள் அதிகாலை சென்னை கிளம்பணூமே! உறவினரையும் கவனித்துக் கொண்டே கிளம்பவும் ஏற்பாடுகள். முன்னெல்லாம் தினம் இரு பதிவுகள் கூடப் போட்டிருக்கேன். வெளீயே எங்காவது போனால் நம்பிக்கையான நட்பிடம் கடவுச் சொல்லைக் கொடுத்துப் பதிவுகள் போடச் சொன்னதும் உண்டு. பின்னர் ஷெட்யூல் செய்து வைக்க ஆரம்பித்தேன். ஆனால் இப்போ 2016 ஆம் ஆண்டில் இருந்தே சுணக்கம். இப்போ 2021க்குப் பின்னர் ரொம்பவே மோசம். பதிவு போட்டாலே பெரிய விஷயம் என இருக்கு. இந்த வருஷம் அதை விடவே மோசம். இதுவும் ஒரு நேரம். கடந்து போகும் என நினைக்கிறேன்.

பல வேலைகள் முடிக்காமல் கிடக்கின்றன. வயதோ ஆகிறது. எதை எடுத்துச் செய்வது? எல்லாமே முக்கியமானவை தான். இனியாவது உட்கார முடியுமா? உட்கார்ந்தாலும் வேலைகள் முடிக்க முடியுமா? தெரியலை. என்னமோ நாட்கள் பறக்கின்றன. ஆனால் வெட்டியாக! மனது ஒரு பக்கம் குத்தினாலும் நேரம் வாய்ப்பது கஷ்டமாக இருக்கே!  ஏன் இப்படி? எங்கே தப்பு? உட்கார்ந்து யோசிச்சாலும் புரியலை. கடவுள் தான் சரி பண்ணணூம்.


Thursday, August 31, 2023

குஞ்சுலு ஊருக்குப் போயாச்சு!

 வீடு அமைதியாக இருக்கிறது. சாமான்கள் வைச்ச இடத்தில் இருக்கின்றன. அதிலும் முக்கியமாகத் தம்பளர்கள்! சமையலறையில் இரண்டு, பாத்திரம் தேய்க்கும் சிங்கில் இரண்டு, சாப்பாடு மேஜையில் 2 என அங்கும் இங்குமாகக் கிடக்கும் தம்பளர்கள் இன்னிக்கு எடுக்க ஆள் இல்லாமல் வைத்த இடத்திலேயே மௌனம் காக்கின்றன. குஞ்சுலுவின் ஐபாடில் இருந்து வரும் கார்ட்டூன்  குழந்தைகளின் சிரிப்புச் சப்தத்துடன் குஞ்சுலு சிரிக்கும் சப்தம், நடுநடுவில் ஐ பாட் பார்த்தது போதும்னு அவ அப்பா/அம்மா சொல்லும்போது நோ என உரத்த குரலெடுத்துக் கத்தும் குஞ்சுலுவின் கோபக்குரல்! எதுவும் இல்லை.

குளிக்க/சாப்பிட/பால் குடிக்க எனப் படுத்தும் குஞ்சுலு! அதைச் சமாதானம் செய்து அதற்குப் பொழுது போவதற்காகப் பையர் யாத்ரி நிவாஸ் அருகே இருக்கும் பார்க், வண்ணாத்திப் பூச்சிப் பூங்கா என அழைத்துச் சென்றது தவிர அதுக்கு பைக்கில் போவது பிடிச்சிருக்கு என்பதால் தினம் ராத்திரி அதைக் கூட்டிக் கொண்டு பைக்கில் ஓரிரு கிலோ மீட்டர்கள் போயிட்டும் வருவார். ராத்திரி வாசல் கதவைப் பூட்ட வேண்டி ரங்க்ஸ் உட்கார்ந்திருப்பார். 

தொலைக்காட்சிப் பெட்டியைப் போடவும்/அணைக்கவும் என ரங்க்ஸ் வைத்திருந்த நீளக் கம்பில் தேசியக்கொடியை ஒட்டி வைச்சிருக்கு குஞ்சுலு. அதை எடுக்கக் கூடாது எனவும் ஆர்டர் போட்டிருக்கு. அதை வைத்துக் கொண்டு இன்னொரு குச்சியையும் வைத்துக் கொண்டு காலண்டர், வால் க்ளாக், பஞ்சாங்கம் போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு எடுத்த பாடங்கள். என்னை ஓல்ட் லேடி எனவும் அவரை ஓல்ட் மேன் எனவும் கூப்பிட்டுக் கொண்டிருந்ததுக்கு திடீர்னு வெட்கம். அதைச் சொல்லி நாங்க கேட்டாலே வெட்கம் வந்துடுது. அவ அம்மா கணக்கு டேபிள்ஸ் சொல்லிக் கொடுத்தால் அதில் மனம் பதியாமல் விளையாட்டுக் காட்டும். அங்கங்கே இரைந்து கிடைக்கும் ஹேர் பான்ட்கள் விதம் விதமாக. தினம் ஒன்றை எடுத்துத் தலையில் வைச்சுக்கணும். கொம்பு முளைச்சாப்போல் இருக்குமா? நான் முயல்குட்டி எனக் கூப்பிடுவேன். அதுக்குக் கோபம் வரும். 

நாங்க வாங்கிக் கொடுக்கும் புதுப் பட்டுப்பாவாடையையோ, அல்லது நகையையோ போட்டுக் கொண்டால் உடனே எங்களிடம் வந்து காட்டாது. கண்ணில் குறும்பு மேலிடத் துணியால் அல்லது போர்வையால் தன்னை மூடிக் கொள்ளும். காதுத் தோடு, ஜிமிக்கி போட்டுக் கொண்டால் காதுகளை மூடிக்கும். நாம கவனிக்காதபோது கையை எடுக்கும். அப்போப் பார்த்துட்டேனே என்று சொன்னால் சிரிக்கும். இன்னமும் கோர்வையாக எழுத வரலை. கணக்கு ஓரளவு போடுகிறது.வரைவதிலும் கைவேலைகள் செய்வதிலும் உள்ள ஆர்வம் வியக்கத்தக்கதாய் இருக்கு. அதைப் பார்க்கையில் படிப்பில் ஆர்வம் கம்மி தான். விரைவில் நன்றாய்ப் படிக்கவும் செய்யணும். மேலும் இங்கே நைஜீரியாவில் ஆங்கிலேய வழிக்கல்வி என்பதால் பாடங்களை மெதுவாய்த் தான் சொல்லித் தராங்க. 

இது எல்லாவற்றையும் நினைத்துக் கொண்டு ஒருத்தருக்கொருத்தர் பேசிக் கொண்டு தாத்தாவும்/பாட்டியும் உட்கார்ந்திருக்கப் போறோம்.குஞ்சுலு ஊருக்குப் போயாச்சு!