Thursday, August 21, 2008

ராமாயணத் தொடரில் மேலாண்மைத் திறன்!

ராமாயணம் கம்பர் எழுதியதே பல நூற்றாண்டுகள் முன்பு. வால்மீகி எப்போது எழுதினார் என்பது உறுதிபடத் தெரியாவிட்டாலும் கம்பர் எழுதியது, அதற்குப் பல நூற்றாண்டுகள் பின்னரே. வால்மீகி ராமரின் காலத்திலேயே வாழ்ந்ததாய்ச் சொல்லப் படுகின்றது. ராமரின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக, முக்கியமாய் லவ, குசர்களின் வளர்ப்புக்கு ஒரு காரணமாய், அவர்களுக்குக் குருவாய் இருந்திருக்கின்றார் வால்மீகி. பல சம்பவங்களைக் கண்ணால் கண்டறிந்ததோடு அல்லாமல், பல சம்பவங்களைக் காணும் பேறும் பெற்றிருந்திருக்கின்றார். வால்மீகியின் இந்த ராமாயணத்தில் ராமனின் குணங்களாய்ச் சொல்லப் படுபவை மனிதனாய் வாழும் அனைவருக்கும் தேவைப் படும் முக்கியமான கல்யாண குணங்கள் என்று சொல்லப் படுகின்றது.
இந்த இதிகாசம் குறிப்பிட்ட ஒரு சாராருக்கே உரியது என்றும் சொல்ல முடியாது. குறிப்பிட்ட ஒரு காலத்துக்கு மட்டுமே என்றும் சொல்ல முடியாது. அதே நேரம் ஒரு வாழ்க்கைச் சரிதம் என்ற அளவிலேயே இதை நாம் பார்க்கவும் வேண்டும். எந்தவிதமான உபதேச நூலும் இல்லை. ஆனால் ஒரு அரசன் எப்படி இருக்கவேண்டும்., அரச நீதி எவ்வாறு காக்கப் படவேண்டும், மந்திரிகள் அரசனுக்கு எவ்வகையில் உதவியாய் இருக்கவேண்டும், வரிகள் விதிப்பது எப்படி? குடிமக்களின் நல்வாழ்வைப் பேணுவது எவ்வாறு என அனைத்தும் இதில் வரும் அரசர்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளுவது இன்றைய நாட்களுக்குக் கூடப் பொருத்தமாய் இருப்பதைக் காண முடிகின்றது.

ராமாயணம் இன்றைய நாட்களுக்குக் கூடப் பொருந்தும் வண்ணம் ஒரு மிகச் சிறந்த மேலாண்மை இயலுக்கும் பொருந்தும் வண்ணம் உள்ளது என்றும் ஒரு ஆய்வு செய்யப் பட்டு உள்ளது.. இந்தியன் வங்கியின் சேர்மன் ஆக இருந்து ஓய்வு பெற்ற திரு டி.எஸ்.ராகவன் அவர்கள் அத்தகையதொரு ஆய்வைச் செய்திருக்கின்றார். அதில் ஒரு தலைவனாக ராமனை அவர் போற்றுவது ராமன் காலத்தை மதிப்பதும், திறமையைப் போற்றுவதும் ஆகும். அனுமனைத் திறமை வாய்ந்த தொண்டனாக ராமன் ஏற்றுக் கொண்ட போதிலும், ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்யும்போது அனுமன் லிங்கம் கொண்டுவரத் தாமதம் ஆகவே, நேரந்தவறாமல் பூஜை செய்யவேண்டி ராமன் அனுமனுக்குக் காத்திருக்காமல் அந்த நேரத்திற்குள் தன் வழிபாட்டை முடிக்கின்றான்.
வால்மீகியில் இந்தச் செய்தி இல்லை எனினும் இது பெரும்பாலோரால் ஏற்கப் பட்டுள்ளது. அனுமன் எத்தகைய திறமை வாய்ந்தவனாக இருந்த போதிலும், காத்திருத்தல் என்பது கூடாது. ஒரு தனி மனிதனுக்காகக் காலமோ, நேரமோ காத்திருக்க முடியாது. இது அனுமனுக்கு நேர்ந்த புறக்கணிப்பு என்றும் சொல்லலாம். அதே போல் முதன் முதல் ஸ்டிரைக் செய்ததும் அனுமனே. தான் கொண்டு வந்த லிங்கத்தை வழிபடவில்லையே என வருந்துகின்றான். என்றாலும் ராமன் , சீதையால் ஸ்தாபிக்கப் பட்ட மணல் லிங்கத்துக்கே முக்கியத்துவம் கொடுத்துப் பூஜையை முடிக்கின்றான். அதே சமயம் அனுமன் தவறு செய்துவிட்டான் என்று அவனை வெறுத்தும் ஒதுக்கவில்லை. தான் அயோத்தி திரும்புவதற்குள் பரதன் தீக்குளித்துவிடுவானோ என எண்ணி அனுமனையே தூதும் அனுப்புகின்றான் மீண்டும். அவனின் திறமையை எந்த இடத்தில், எப்படிப் பயன்படுத்தினால் அது வெற்றி பெறும் என்பதைப் புரிந்து கொண்ட தலைவனாய் இங்கே ராமன் செயல்படுகின்றான் என்று சொல்லலாம். ஏனெனில் ஒரு முறை காலத்தில் கடமையைச் செய்யவில்லை என்பதாலும், இப்போது காலத்தில் செய்யாவிட்டால் ஒரு உயிர் போய்விடும் என்பதையும் அனுமன் நன்கு உணர்ந்திருப்பான். ஆகவே குறிப்பிட்ட காலத்தில் வேலை நடக்கும் அல்லவா? இதன் மூலம் ராமன் குறிப்பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட வேலையைச் செய்து முடிக்கும் நேர மேலாண்மை, தவறு செய்தாலும் அதைத் திருத்திக் கொள்ளத் தொண்டர்களுக்குக் கொடுக்கும் சந்தர்ப்பம், அரவணைத்துச் செல்ல வேண்டிய இடத்தில் அரவணைத்தும், கண்டிப்பாய் நடக்கும் நேரத்தில் கண்டிப்பாயும் இருந்து தலைவன் என்பதை நிரூபிக்கும் தலைமைப் பண்பு, தன் பிரச்னைகளைக் கலந்து ஆலோசித்தல் என அனைத்துமே ராமனிடம் இருந்தது. ஆகவே ஒரு தலைவனாகவும் ராமன் இங்கே சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றான்.

Wednesday, August 20, 2008

திரெளபதி பதிவிரதையா?? ஒரு மீள் பதிவு தொடர்ச்சி!

திரெளபதியைப் பத்தி எழுதும்போதே இது ரொம்பவே நெருடலான விஷயம் என்றும் இது ஒரு விவாதத்துக்கு வழி வகுக்கும் எனவும் தெரியும். இருந்தாலும் ரொம்ப நாளாகத் தெரிந்து கொண்ட விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளும் நினைப்புடன் தான் எழுதினேன். ஈஸ்வர் அவர்கள் திரெளபதி 5 பேரை மணந்து கொண்டதை வியாசர் எப்படி நியாயப் படுத்தினார் என்று சொல்லும்படி கேட்டிருந்தார். அன்று சாயங்காலம் "நடைப் பயிற்சி"யின் போது நானும், என் கணவரும் இதைப் பத்தி விவாதித்துக் கொண்டே போனோம். அப்போது சில தெளிவுகள் பிறந்தன. இருந்தாலும் இதுவும் எல்லாராலும் ஏற்றுக் கொள்ள முடியுமா தெரியாது. எனெனில் இறை உணர்வு என்பதோடு சம்மந்தப் பட்ட இந்த விஷயத்தை அப்படியே உணர்வு பூர்வமாக அணுகுபவர்களுக்கு மட்டுமே ஏற்புடையதாய் இருக்கும். என்னைப் பொறுத்த வரையில் பகுத்தறிவு வாதிகளும் சரி, நாத்தீகம் என்பவர்களும் சரி, இறைவனை நினைக்காத நாட்களே இல்லை. உண்மையாகப் பக்தி கொண்டிருப்பவர்களை விட அவர்களே எப்போதும் இறைவனை நினைக்கிறார்கள். ஆராய்ச்சியும் செய்கிறார்கள். அந்த ஆராய்ச்சியின் விளைவும் அதன் எல்லையும் கட்டாயம் மெய்ஞ்ஞானமாய்த் தான் இருக்கும். இதை அவங்க ஒத்துக்காமல் போனாலும் உண்மை அது தான். அளவற்ற விஞ்ஞானத்தின் எல்லை மெய்ஞ்ஞானமே ஆகும். மிகப் பிரசித்தி பெற்ற விஞ்ஞானிகள் எல்லாருமே ஆன்மீகவாதிகளாய்த் தான் இருக்கிறார்கள். மிகச் சிறந்த உதாரணம் நம் குடியரசுத் தலைவர் திரு அப்துல் கலாம் அவர்கள் ஆவார்கள். இது இங்கே நிற்கட்டும்.

இவ்வுலகில் ஐம்பூதங்கள் மட்டுமில்லாமல் மனிதனுக்கும் ஐம்புலன்கள் இருக்கின்றன. நம்மையெல்லாம் படைக்கும் இறைவனுக்கும் ஐந்தொழில்கள் இருக்கின்றன. அவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவை ஆகும். படைப்பன எல்லாவற்றையும் காப்பதோடு அல்லாமல் உரிய நேரம் வரும்போது அதை அழித்து, அதாவது வேறு இடத்திற்கு மாற்றி,அதை மாறுவதை மறைத்துப் பின் உரிய நேரம் வரும்போது முக்தி என்னும் அருள் செய்து, இத்தனையும் செய்யும் இறைவனின் லீலையை என்னென்பது? அவனுக்கு ஐந்து முகம். ஐந்து வித குணங்களால் ஆனவன். ;உண்மையில் பார்க்கப் போனால் இந்த சிவம் என்பது "சிவமாக" இருக்கும்போது நிர்க்குணப் பரப்பிரும்மமாக இருக்கிறது. இதற்கு உருவம் இல்லை. அதுவே "சிவனாக" அல்லது ஜீவனாக மாறும்போது அதனுள் "சக்தி" பாய்ந்து ஆட்டுவிக்கிறது. சிவம் வேறு. சிவன் வேறு. சிவா வேறு. சிவம் நிர்க்குணப் பிரம்மம் என்றால் சிவன் சக்தியுடன் சேர்ந்த பரம்பொருள். சிவா என்றால் அந்தச் சக்தி. சிவனை ஆட்டுவிப்பவள். இப்படி எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று ஐக்கியம்.ஒருத்தரைச் சும்மா இரு என்கிறதற்குச் "சிவனே"ன்னு இருன்னு சொல்றோம். சக்தி இல்லாத சிவன் என்று அர்த்தம். அதே நாம் கடவுளைக் குறிக்கும்போதோ "சிவ சிவா"ன்னு கூப்பிடறோம். சக்தியுடன் சேர்ந்த சிவன் இது. ஒன்றையொன்று பிரிக்க முடியாதது. பிரித்தால் வெறும் சிவன் தான். ஜீவன் இல்லை. சக்தி சேர்ந்தால் தான் எல்லாமே. புரியுதா என்று தெரியவில்லை. ஏதோ எனக்குத் தெரிந்த வரை புரிந்த வரை சொல்கிறேன்.

இந்த ஐந்து தொழில்களைச் செய்யக் கூடிய இறைவனின் ஐந்து முகங்களும், ஐந்து குணங்களும் தான் சேர்ந்து பஞ்ச பாண்டவரின் அம்சமாக உருவெடுத்ததாக ஐதீகம். பஞ்ச பாண்டவர் சிவாம்சம் என்றால் அவர்களை இயங்கச் செய்யும் சக்திதான் திரெளபதி. சக்தியின் அம்சமே அவள். அதனால் தான் ஐவரையும் மணக்கும்படி நேர்ந்தது. மானிட உறவையும், இதையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது கட்டாயம் மனதில் நெருடல் வரும். ஆனால் இதில் உள்ள தாத்பர்யத்தைப் புரிந்து கொண்டோமானால் ஒன்றுக்கொன்று சம்மந்தம் இருப்பதையும், எந்தக் காரியமும் காரணம் இல்லாம் ஏற்படவில்லை என்றும் தெரிந்து கொள்ளலாம். மஹாபாரதத்தைக் கதை என்று நினைத்தாலும், தெய்வீகக் கதைகளின் தாத்பர்யம் இதுன்னு புரிந்து கொள்ள வேண்டும். வெறும் கதைன்னு நினைக்கிறவங்களுக்கு ரொம்பவே கஷ்டம் புரிந்து கொள்ளுதல். கண்ணகியுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாயும் நினைக்கவில்லை. வடநாடு, தென்னாடு என்ற வித்தியாசமும் பார்க்கத் தேவை இல்லை. திரெளபதியின் காலம் வேறே. கண்ணகியின் காலம் வேறே. நம்மைப் பொறுத்த வரை இருவரையும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் இருந்த திரெளபதியின் துணிச்சல் கண்ணகிக்கு இருந்ததா என்றால் இல்லைனு தான் சொல்லவேண்டும். மஹாபாரதம் கதை என்றால் சிலப்பதிகாரமும் கதை தான். நமக்கு அதைப் பற்றி இளங்கோவடிகள் மூலம் தான் தெரியும். நடந்ததா என நாம் யாரும் அறிய மாட்டோம். ஆனால் "அனல் கொண்ட மதுரை"யும், "கடல் கொண்ட புகாரும்", "மணல் கொண்ட வஞ்சி"யும் இருந்ததை சான்றுகள் மூலம் அறிகிறோம். அது போல் மஹாபாரதம் நடந்தது என்பதற்கும் சான்றுகள் இருக்கின்றன.

பத்ரிநாத் போகிறவர்கள் அங்கிருந்து சில கிலோ மீட்டர் தூரமே மேலே உள்ள "மானா" என்ற ஊருக்குப் போனால் சில சான்றுகள் கிடைக்கும். பத்ரியில் இருந்து ஒரு 4,5 கிலோ மீட்டர் காரில் போய் விட்டுப் பின் அங்கிருந்து ஒரு 3,4 கிலோ மீட்டர் தூரம் மலையில் ஏறிப் போனோமானால் மானா" என்ற சிறு ஊர் வருகிறது. தற்சமயம் திபெத்திய அகதிகள் அதிகம் இருக்கிறார்கள்.. அங்கே இருந்து சற்று மேலே ஏறினால் மஹாபாரதம் எழுதிய "வேத வியாசர்" இருந்த குகை வரும். அதற்குச் சற்று முன்னால் ஒரு குகை போன்ற இடத்தில் ஒரு விநாயகர் ஆலயம் இருக்கிறது. அங்கே தான் வியாசர் சொல்லச் சொல்ல தன் தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கிப் பிள்ளையார் மஹா பாரதத்தை எழுதியதாகச் சொல்கிறார்கள். இன்னும் சற்று மேலே போனால் பஞ்ச பாண்டவரில் 2-வதான பீமன் திரெளபதி மேலுலகம் செல்லக் கட்டிய பாலம், "பீமன் பாலம்" என்ற பெயரில் உள்ளது. எல்லாரும் சரஸ்வதி நதியை அந்த இடத்தில் கடந்து போனதாகவும், திரெளபதிக்காக பீமன் பாலம் கட்டியதாயும், சரஸ்வதி நதியின் உற்பத்தி ஸ்தானம் அதுதான் என்றும் சொல்கிறார்கள். அதை நாங்கள் நேரில் போய்ப் பார்த்து விட்டு வந்தோம். அங்கே உற்பத்தி ஆகும் சரஸ்வதி அதற்கு அப்புறம் "அந்தர்யாமி" ஆகி "அலக்நந்தா"வுடன் சேர்ந்து கண்ணுக்குத் தெரியாமல் போய் அரபிக்கடலில் கலக்கிறாள். சமீப காலத்தில் 5 வருஷத்துக்கு முன்னால் "ஸ்ரீஹரிதாஸ்கிரி ஸ்வாமிகள்" அங்கே தான் ஜலசமாதி அடைந்ததாகவும் கூறுகிறார்கள். அதற்கு மேல் 2 கி.மீட்டரில் சீன எல்லை ஆரம்பம்.
Posted by கீதா சாம்பசிவம் at 1/16/2007 04:21:00 PM

திரெளபதி பதிவிரதையா?? ஒரு மீள் பதிவு!

உலகின் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்: ஸ்ரீகிருஷ்ணன்.

உலகின் முதல் தொலைக்காட்சித் தொடர்: குருக்ஷேத்திர யுத்தம்.

உலகின் முதல் தொலைக்காட்சிப் பார்வையாளர்: சஞ்சயன்

உலகின் முதல் தொலைக்காட்சி நேர்முக வர்ணனையாளர்: சஞ்சயன்

உலகின் முதல் உடல் உறுப்பு தானம் செய்தவர்: ததீசி முனிவர். இந்திரனின் வஜ்ராயுதத்துக்குத் தன் முதுகெலும்பைத் தானம் செய்தவர்.

உலகின் முதல் கண் தானம் செய்தவர்: கண்ணப்ப நாயனார்.

உலகின் முதல் டெஸ்ட் ட்யூப் குழந்தை: அகஸ்திய மஹரிஷி. குடத்துக்குள் இடப்பட்டு வளர்ந்தவர்.

முதல் முதல் ஆராய்ச்சி செய்யும் எல்லாமே சற்றுக் கோணலாகவோ, அல்லது வளர்ச்சியின்மை இல்லாமலோ குறைபாட்டுடன் தான் பிறக்கும். அதனால் தானோ என்னவோ அகஸ்தியர் உருவம் சற்றுக் குட்டையாக இருந்திருக்குமோ என

எண்ணுகிறேன். இது மாதிரி நிறைய முதல் விஷயங்கள் நம்முடைய இதிகாசத்திலும்,

புராணங்களிலும் கொட்டிக் கிடக்கிறது.
************************************************

திரெளபதி மஹாபாரதத்தின் கதா நாயகி. 5 மஹா பதிவிரதைகளுள் ஒருத்தியாகப் போற்றப் படுபவள். அவளுடைய பதிவிரதைத் தன்மை குறித்துக் கேள்விகள் எல்லாருக்கும் உண்டு. இது புராணத்திலும், இதிகாசத்திலும் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கும் இருக்கிறது. 5 கணவன்மார்களுடன் வாழ்ந்த ஒருத்தி எப்படிப் பத்தினியருள் ஒருவராக ஆனாள்?அதற்கான விளக்கம் எனக்குத் தெரிந்த வரையில், நான் கேட்டுத் தெரிந்து கொண்டதைத் தருகிறேன்.


5 கணவன்மாருடன் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டு ஒண்ணும் திரெளபதி அர்ச்சுனனுக்கு மாலையிடவில்லை. என்றாலும் இதிலும் ஒரு அர்த்தமும், தாத்பரியமும் இருக்கிறது என்பதாலேயே இம்மாதிரியான ஒரு நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது. 5 கணவன்மாருடன் வாழ்ந்த திரெளபதி முறையே ஒருத்தருடன் ஒரு வருஷம்
என்ற கணக்கில் வாழ்ந்தாள். ஒரு வருஷம் முடிந்ததும் "அக்னிப் பிரவேசம்" செய்து
தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டுதான் அடுத்த கணவனுடன் வாழ்ந்தாள்.

இன்றைக்கும் கணவனைப் பிரிந்த மனைவியரும் சரி, இல்வாழ்க்கை நன்கு அமைய வேண்டுபவரும் சரி. திரெளபதி அம்மன் கோவிலில் "தீ மிதி" என்னும் பூக்குழியில் இறங்கித் தங்களைப் புனிதப் படுத்திக் கொள்வதைப் பார்க்க முடியும்.
************************************************
ஒருமுறை பஞ்ச பாண்டவரின் வனவாசத்தின் போது கிருஷ்ணர் அவர்களைச் சந்திக்க வந்தார். அன்று திரெளபதி பீமனுடன் சேர்ந்து வாழத் துவங்கும் நாளாக அமைந்தது. பீமனுக்கு ஏற்கெனவே சந்தேகம். இந்தப் பெண்மணி எப்படி எல்லாரையும் கணவனாக ஏற்றுக் கொண்டு குற்ற உணர்ச்சி இல்லாமல் இருக்கிறாள்.என்று. அதுவும் இப்போது கிருஷ்ணர் வேறு வந்திருக்கிறார். திரெளபதிக்கு அண்ணன் முறை. அவர் முன்னால். பீமன் முகம் சுருங்கிக் கிடந்தது. கிருஷ்ணர் ஒருவாறு ஊகித்துக் கொண்டார். திரெளபதியைக் கண்களால் பார்த்துச் சிரித்தார். திரெளபதியும் கிருஷ்ணரைப் பார்த்துச் சிரித்தாள்.

பீமனுக்குக் கோபம் வந்தது. என்றாலும் தனிமைக்காகப் பொறுமையுடன் இருந்து, தனிமையில் கிருஷ்ணரைச் சந்தித்து,. "கிருஷ்ணா, உனக்கே இது நியாயமா? இவ்வளவு நாள் எனக்கு அண்ணியாக இருந்தவள், எனக்குத் தாய் ஸ்தானத்தில் இருந்தவள் இன்று முதல் ஒரு வருஷத்திற்கு மனைவி, என்றால் என்னால் எப்படி ஏற்க முடியும்? நீயானால் சிரிக்கிறாய்! திரெளபதியும் சிரிக்கிறாளே!" என்று கேட்டான். கிருஷ்ணர் சொன்னார்:"பீமா, நடப்பவை எல்லாம் உன்னைக் கேட்டு நடக்கவில்லை. ஏற்கெனவே இது இவ்வாறு நடக்கும் என்று சொல்லி இருப்பது தான் நடக்கிறது. இதில் நீ வருந்த ஒரு காரணமும் இல்லை. இருந்தாலும் உன் ஆறுதலுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன், கேள்! இன்றிரவு திரெளபதி நள்ளிரவில் தனியாக வெளியில் செல்வாள் அல்லவா?" என்று கேட்டார். "ஆம், பார்த்திருக்கிறேன். ஒரு வருஷம் முடிந்ததும் ஒவ்வொரு நள்ளிரவிலும் வெளியே சென்று விட்டுப் பின் உதயத்தில் திரும்பி வருவாள்." என பீமன் சொல்ல, "அப்போது திரெளபதி எப்படி இருப்பாள்?" என்று கிருஷ்ணர் கேட்க, பீமனோ,"புடம் போடப் பட்ட புதுப் பொன்னைப் போல் ஜொலிப்பாள். அவள் முகத்தின் தேஜஸ் சுடர் விட்டுப் பிரகாசிக்கும்." என்று சொல்கிறான். "பீமா, இன்றிரவு அம்மாதிரித் திரெளபதி வெளியே போகும்போது நீயும் உடன் போய்ப் பார்." என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

அன்றிரவில் நள்ளிரவில் திரெளபதி வெளியே போக பீமனும், கிருஷ்ணனும் அவளுக்குத் தெரியாமல் தொடர்ந்து போகிறார்கள். அவர்கள் இருவரும் மறைந்து இருந்து பார்க்கும் வேளையில் தீ மூட்டிய திரெளபதி, தானும் அந்தத் தீயில் விழுகிறாள். மனம் பதைத்த பீமன் அவளைக் காப்பாற்ற ஓட முயற்சிக்கத் தடுக்கிறார், பரந்தாமன். "அங்கே பார்!" என்கிறார். என்ன ஆச்சரியம்! தீக்குள் திரெளபதியா தெரிந்தாள்? சாட்சாத் அந்த அகிலாண்டேஸ்வரி, சர்வ உலகத்தையும் காத்து அருளும் மஹா சக்தி, அன்னை தன் சுய உருவில் காட்சி அளிக்கிறாள். அவளைத் தீயும் சுடுமோ? அவளே தீ, அவளே, நீர், அவளே வாயு, அவளே ஆகாயம், அவளே நிலம். சகலமும் அவளே அல்லவா? திகைத்துப் போன பீமனை அழைத்து வந்து புரியவைக்கிறார் அந்த வாசுதேவன்.

"பீமா, நீங்கள் ஐவரும் பஞ்ச பூதங்கள் என்றால் உங்களை ஆளும் மஹாசக்தி திரெளபதி ஆவாள். அவளுக்குள் நீங்கள் அடக்கமே அன்றி அவள் உங்களுக்குள் அடக்கம் இல்லை. எப்படி இந்தப் பிரபஞ்சமானது பஞ்சபூதத்தையும் வெளிக்காட்டி ஆளுமை செய்கிறதோ,
அதை ஆளுமை செய்யும் சக்தி இவளே! நீங்கள் ஐவரும் ஐம்புலன்கள் என்றால் உங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா இந்தத் திரெளபதி ஆவாள். இந்த ஜீவாத்மா எப்படிப் பரமாத்மாவிடம் ஐக்கியம் ஆகிறதோ அப்படி நீங்கள் அனைவரும் அவளுள் ஒடுங்குவீர்கள். உனக்கு இந்த உண்மை புரியவேண்டும் என்பதற்காக இந்தக் காட்சியைக் காட்டினேன். இந்த உண்மை உனக்குள் உறைந்து போகட்டும். இவளை விடக் கன்னியோ, அல்லது பத்தினியோ இவ்வுலகில் இல்லை. அனைத்தும் இவளே! இந்த உண்மைதான் உங்கள் ஐவரையும் திரெளபதி மணம் புரிந்ததாகக் காட்டப் படும் காட்சி. இதன் உள்ளே உள்ள இந்தத் தத்துவத்தை உணர்ந்தவர்கள் என்னையே உணர்ந்தவர்கள் ஆவார்கள். நீ கவலை இல்லாமல் உன் கடமையைச் செய்." என்கிறார்.

மேற்குறிப்பிட்ட தத்துவம் நான் சின்ன வயசிலே கதை கேட்ட போது கேட்டது. இப்போ சமீப காலத்தில் ஒரு திரைப்படம் கூட சம்ஸ்கிருதத்தில் வந்தது,. அதிலும் இந்தத் தத்துவம் குறிப்பிடப் பட்டிருக்கிறது. "நீனா குப்தா" திரெளபதி என்று நினைக்கிறேன். படம் பார்க்கவில்லை. மற்றும் சிலத் தொலக்காட்சித் தொடர்களிலும் வந்தது. எத்தனை பேர் பார்த்தார்கள் தெரியவில்லை. இப்போது இதை எழுதக் காரணம் குருக்ஷேத்திரப் போர் நடந்தது ஒரு மார்கழி மாசம் தான். 2 நாள் முன்னாலே ஒரு புத்தகம் படிக்கும்போது இது நினைவு வந்தது. இன்றைய தலைமுறையினருக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக எழுதி இருக்கிறேன்.


"தேவர்கள் பூச்சொரிந்தார்-ஓம்
ஜெய ஜெய பாரத சக்தி என்றே"

ஓமென்றுரைத்தனர் தேவர்,
ஓமென்று சொல்லி உறுமிற்று வானம்
பூமியதிர்ச்சி உண்டாச்சு-விண்ணை
பூழிப் படுத்தியதாம் சுழல் காற்று
சாமி தருமன் புவிக்கே-என்று
சாட்சியுரைத்தன பஞ்ச பூதங்கள் ஐந்தும்,
நாமும் கதையை முடித்தோம்- இந்த
நானில முற்றும் நல்லின்பத்தில் வாழ்க!"

மஹா கவி சுப்பிரமணிய பாரதியின் "பாஞ்சாலி சபதம்" கவிதையில் இருந்து கடைசியில் வரும் சில வரிகள்.

மதுரையம்பதி திரெளபதி முதலான பஞ்ச கன்னிகைகள் பற்றித் தனியாக எழுதுவீர்களா என்று கேட்டதால் ஏற்கெனவே எழுதியதை ஒரு மீள் பதிவு போட்டிருக்கின்றேன். இதன் அடுத்த பகுதி நாளைக்கு வரும்.



இது 2007 ஜனவரியில் எழுதியது.

Tuesday, August 19, 2008

ராமாயணத் தொடரை ஒட்டிய சில எண்ணங்கள் - காதல்!

அடுத்து இளைஞர்களின் மனதைக் கவரும் காதல். ராமருக்கும், சீதைக்கும் காதல் என்பது கம்பராமாயணத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் ஒரு காட்சி. வால்மீகி எந்த இடத்திலும் இருவரும் காதல் கொண்டதாய்ச் சொல்லவே இல்லை. எனினும் திருமணத்திற்குப் பின்னர் இருவரும் அன்புடனும், ஆனந்தத்துடனும் வாழ்ந்து வந்ததாகவே சொல்கின்றார். ஆனால் கம்பரோ இருவரும் ராமன் மிதிலைக்குள் நுழைந்ததுமே சீதையைப் பார்ப்பதாகவும், கன்னிமாடத்தில் இருக்கும் சீதையும், ராமரைக் காண்பதாகவும், மிக அழகாய் காதலர்களின் நோக்கை இவ்வாறு வர்ணிக்கின்றார்.

“எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்று வழி
கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலை பெறாது உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்: அவளும் நோக்கினாள்.”

என்று இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டபோது இருவரின் கண்கள் மட்டுமில்லாமல், உணர்வும் ஒன்றுபட்டது என்று சொல்லுகின்றார். காதலின் சிறப்பை இதை விடச் சிறப்பாகச் சொல்லவும் முடியுமோ??? வால்மீகியை முழுதும் உள்வாங்கிக் கொண்டே கம்பர் இந்தக் காவியத்தை வடித்திருந்தாலும், அவரின் சொல்லாற்றலால் வால்மீகியைவிடச் சிறந்து விளங்குகின்றார் என்றே சொல்லலாம் அல்லவா??

காதல் இங்கோடு நிற்கவில்லை, ராமாயணத்தில். முதலில் வருவது சூர்ப்பநகை ராமர் பால் கொண்ட காதல். இதைக் காதல் என்று சொல்ல முடியாது. ஏற்கெனவே திருமணம் ஆனவளே சூர்ப்பநகை. ஒரு மகனும் இருக்கின்றான். ஆனால் அவனைத் தற்செயலாக லட்சுமணன் தர்ப்பைப் புல் அறுக்கும்போது கொல்ல நேருகின்றது. இது தெரிந்தோ, அல்லது தெரியாமலேயோ வருகின்றாள் சூர்ப்பநகை. வந்ததுமே ராமரின் வடிவைக் கண்டு அதிசயித்துப் போவதோடு, சீதையைக் கண்டும் பொறாமை கொள்கின்றாள். ராமரை எவ்வாறேனும் அடைந்தே தீருவது என்றும் எண்ணுகின்றாள். சகோதரர் இருவரும், சூர்ப்பநகையின் இந்த நடவடிக்கையைக் கண்டு முதலில் பரிகாசமாய்ச் சிரித்தாலும், பின்னர் சீதையை அவள் கொல்ல முயல்வது கண்டு சூர்ப்பநகை தண்டிக்கப் படுகின்றாள். உடனேயே சூர்ப்பநகையின் காதல், அல்லது காமவெறி பழிவாங்குதலில் முடிகின்றது. ராவணனின் கவனத்தைச் சீதை பால் திருப்புவதில் இவளுக்குப் பெரும்பங்கு இருக்கின்றது. இதில் முக்கோணக் காதல் என்று சொல்லமுடியாவிட்டாலும் ராவணன் சீதைபால் கொண்ட காதலை ஒருதலைக்காதல் என்றே சொல்லலாம். சீதையை அவன் மிகவும் விரும்புகின்றான். எனினும் சீதை அவனை விரும்பவில்லை. ராவணனுக்கு அது தெரிந்தே இருக்கின்றது. என்றாலும் கடைசிவரையில் சீதையை வற்புறுத்தித் துன்புறுத்தாமல், அவளாக இணங்கி வரவேண்டும் என்றே எதிர்பார்க்கின்றான். சீதை மனம் மாறித் தன்பால் திரும்புவாள் என்று காத்திருக்கின்றான். சீதையோடு கூடி சந்தோஷமாய் வாழவேண்டும் என்றும் நினைக்கின்றான். இது ராவணனின் காதலின் மேன்மையை ஒரு பக்கம் காட்டினாலும், பிறன் மனைவியை விரும்பியது என்ற பெருந்தவற்றின் காரணமாய் அவன் இறுதியில் தண்டிக்கப் படுகின்றான்.

“அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின் இருந்து வாழ்வார் பலர்.”

என்பதற்கொப்ப, பிரிந்து இருக்க நேரிட்டாலும் சீதையோ, ராமரோ ஒருவரை ஒருவர் நினைந்து ஏங்கிப் பிரிவாற்றாமையால் துடித்துக் கொண்டிருந்தனர் என்பது இங்கே தெளிவாய்ச் சொல்லப் படுகின்றது. இல்வாழ்க்கையில் கணவனும், மனைவியும் சேர்ந்து உண்மையான மெய்யன்பும், மெய்யறத்தோடும் வாழுவதையும், அவ்வாறு வாழ்ந்தவர்களே ராமனும், சீதையும் என்பதும் இங்கே சொல்லப் படுகின்றது. அன்பிற்கும், பாசத்துக்கும், காதலுக்கும் ஒரு இலக்கணமாய் வாழ்ந்த ஆதர்ச தம்பதிகள் என்று ராமரையும், சீதையையும் சொல்லலாம் அல்லவா??ஆகக் காதல் என்பதன் அர்த்தம் இங்கு தெளிவாய்ச் சொல்லப் படுகின்றது. வெறும் உடல் கவர்ச்சி மட்டும் காதல் இல்லை என்பதும், காதல் என்பது எத்தகைய தியாகத்துக்கும், பரஸ்பரம் புரிதலுக்கும், விட்டுக் கொடுத்தலுக்கும் தயாராக இருக்கவேண்டும் என்பதையும் சுட்டுகின்றது. இதற்கு சீதை அக்னிப்ரவேசம் செய்வதையே உதாரணம் காட்டலாம். ராமருக்கு நன்கு தெரியும் சீதை தன்பால் அன்பு கொண்டிருக்கின்றாள் என்பதும், தன்னைத் தவிர பிறரை விரும்பமாட்டாள் என்பதும். சீதையும் நன்கு அறிவாள் தான் இல்லாமல் தன் பதி துன்புற்றிருப்பார் என்பதும். நாமே பார்த்தோம் சீதையைப் பிரிந்த ராமர் எவ்வாறு புலம்பி அழுதார் என்றும், நிராசையுடனும், அவநம்பிக்கையுடனும் பேசினார் என்பதும். மனைவியை மீட்கவே ராமர் பாலத்தைக் கட்டிக் கடல் கடந்து வந்து இலங்கேஸ்வரனை வென்று சீதையை மீட்கின்றார். அத்தகைய அன்பு வைத்த சீதையை மறுதலிக்க முக்கிய காரணமே எந்தவிதமான ஆட்சேபங்களோ, சந்தேகங்களோ இல்லாமல் தான் அவளை மீண்டும் அடையவேண்டும் என்ற எண்ணமே தான். எங்கே தான் உடனே ஏற்றுக் கொண்டால் பெரியவர்களால் வீண்பழிச்சொல் ஏற்பட்டுப் பின்னர் வேறு வழியில்லாமல் சீதையை இழக்க நேரிடுமோ என்ற முன் ஜாக்கிரதையே ராமரை அவ்வாறு சீதையை அக்னிப்ரவேசம் செய்யச் சொல்கின்றது. சீதையும் தன்மேல் பழி இல்லை என்பதாலேயே, கணவரின் கருத்துப் புரிந்து கொண்டதாலேயே அக்னிப்ரவேசத்துக்குத் தயார் ஆகிவிடுகின்றாள். எந்தவிதப் பழியும் இல்லாமல் கணவனோடு சுகமாய் வாழ எதையும் தியாகம் செய்யத் தயார் என்று நிரூபிக்கின்றாள் சீதை.

இன்றைய நாட்களில் சிறு விஷயத்துக்கும் விட்டுக் கொடுக்காமல், தன்னுடைய சுய கெளரவம் இதனால் பறி போகின்றது என்றும், சுதந்திரம் போய் விட்டது என்றும் எண்ணும் பெண்கள் நடுவில் சீதையின் இத்தகைய மாபெரும் தியாகத்தைப் புரிந்து கொள்ளும் உணர்வு இருப்பது கொஞ்சம் கஷ்டமே. என்றாலும் தீர ஆலோசித்தால் சீதை செய்ததில் உள்ள நியாயம் புரியும். தன் கணவனின் ராஜ்யத்திற்காகவும், அவன் ஒரு அரசன் என்பதால் அவன் நிறைவேற்ற வேண்டிய முக்கிய கடமைகளில் குடிமக்களைப் பேணுவதும், அவர்கள் விருப்பத்தின்படி நடப்பதும் முக்கியம் என்பதாலுமே அவன் தன்னை வேறு வழி இல்லாமலேயே நிராகரிக்க வேண்டி வந்தது என்றும் புரிகின்றது சீதைக்கு. அதைத் தன் வாயாலேயே சொல்லவும் செய்கின்றாள். அன்பு என்பது கொடுப்பதில் தான் உள்ளது என்றும், ஒரு மடங்கு கொடுத்தால் பல மடங்காய்த் திரும்பி வரும் என்றும், கொடுக்கக் கொடுக்க நிரம்பி வழிவதும் அன்பு ஒன்றே என்பதும் புரிய வரும். காதல் என்பது வெறும் சுக,போகங்களில் பங்கு பெறுவது மட்டுமல்ல என்பதும், தன் துணைக்கு எந்நாளும், எந்தக் காரியத்திலும் கைவிடாமல் துணையாக நின்று பெருமை சேர்ப்பதே காதல் என்றும் புரிய வைக்கின்றார்கள். ஆனால் ராவணனோ எனில் பிறன் மனைவியை விரும்புவதால் அவன் அடைவது தோல்வியே.


“பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.”

என்னும் குறளுக்கு ஏற்ப ராமன் ஏக பத்தினி விரதனாகக் கடைசிவரை இருந்ததே, பெரும்பாலான இளைஞர்களுக்குச் சொல்லப் பட்டிருக்கும் கருத்து. இந்தப் பிறன்மனை நோக்காத பேராண்மை எக்காலத்துக்கும் பொருந்தும். ராவணன் மனைவியான மண்டோதரி, சீதைக்கு நிகரான பெருமை வாய்ந்தவளாகவும், நிரம்ப சிவபக்தி கொண்டவளாயும் இருக்கின்றாள். எனினும் அவன் அவளோடு திருப்தி அடையவில்லை. மற்றவர் மனைவியை அடைவதில் தான் இன்பம் என்றும் பெருமை என்றும் எண்ணுகின்றான்.

அஹல்யா, த்ரெளபதி, சீதா, தாரா, மண்டோதரீ ததா
பஞ்ச கன்யா ஸ்மரேந்நித்த்யம் மஹா பாதக நாஸநம்"

என்று தினமும் காலையில் வணங்கிப் போற்றும் ஐந்து கன்னிகைகளில் ஒருத்தியாக மண்டோதரி இருந்தும் ராவணன், பிறன் மனை விழைதல் என்னும் மாபெரும் தவற்றைச் செய்துவிட்டு அதன் காரணமாகவே அனைத்தையும் இழக்கின்றான். (இதில் வரும் "தாரா" தேவகுருவின் மனைவி தாரா ஆவாள். பலரும் நினைக்கும்படியாக வாலியின் மனைவி "தாரை" இல்லை. வாலியின் மனைவி தாரை ஒரு வானரப் பெண்மணி, இவள் தாரா!)

Saturday, August 16, 2008

விருந்தாளிகளின் தொல்லை தாங்கலை!!!!

நம்ம வீட்டு விருந்தாளிகள் பத்தி எழுதி ரொம்ப நாள் ஆச்சே?? ஒரு 4 நாள் முந்தி இரவில் கணினி முன்னால் உட்கார்ந்திருந்தேன் பெண்ணோடு சாட்டுவதற்குத் தயாராக. அவங்க வரதுக்கு நேரம் ஆச்சு. நான் உட்கார்ந்திருந்தது இரவு நேரம் ஆனாலும் விளக்குப் போட்டுக்கலை. விளக்குப் போட்டுட்டு உட்கார முடியாது. ம.பா.வோ சீரியல் சோகத்தில் ஆழ்ந்து போயிருந்தார். பொண்ணும் வரலை, சரினு மெயிலாவது பார்க்கலாம்னு ஜிமெயிலில் உட்கார்ந்திருந்தேன். ஒரு விவாத இழையில் ஆழ்ந்து போயிருந்த சமயம். காலில் ஏதோ குறு, குறு. வலக்கால் கட்டை விரலில். நமக்கு அது அடிக்கடி தொல்லை கொடுக்கும். அதுமாதிரிதான் ஏதோனு நினைச்சேன் முதல்லே. திரும்பவும் குறு, குறு, கொஞ்சம் அழுத்தமாய், வலியும் வந்தது. சாதாரணமாய் ஒரு பென்சில் விழுந்தாலே வலிக்கும் நமக்கு, அதனால் அப்படி ஏதோனு நினைச்சால், மீண்டும் அழுத்தமாய் ஒரு குறு, குறு. அவ்வளவு தான்.நாம அலறிய அலறலில் அக்கம்பக்கம் தூங்கப் போனவங்க எல்லாம் எழுந்து உட்கார, என்னோட ம.பா.வோ எனக்கு கணினி வழி ஷாக் அடிச்சுடுத்துப் போலிருக்குனு மெயினை ஆப் செய்யப் போக, நான் எழுந்து கத்திய கத்தலில், காலடியில் இருந்த ஒரு மூஞ்சுறு ரொம்பப் பயத்தோட ஓடிப் போச்சு.

அவ்வளவு தான். மொத்தமாய் நிலைமை அப்படியே மாறிப் போச்சு. அதுவரைக்கும் பயத்தோட இருந்த ம.பா.வுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ஒரு மூஞ்சுறுக்கா இப்படிக் கத்தினே?? அது ஒண்ணும் கடிக்காது. உனக்குத் தான் சும்மாவே வலிக்கும். நீ அதை மிதிச்சதிலே அது உயிரோட இருக்கிறதே பெரியவிஷயம், இப்போ அதைப் பயமுறுத்தி வேறே வச்சிருக்கே. எங்கே போச்சோ?? தேடணுமேனு ஒரே கவலை. தேடறது எதுக்குனு கேட்காதீங்க. எங்க வீட்டிலே துணி வைக்கும் அலமாரியிலே இருந்து, எல்லா இடத்திலும் தாராளமாய் வந்து போகும் ஜீவன் அது. துணி எல்லாம் அதன் கழிவுகளால் ஒரே நாசம். எப்படி என் புடவைகளைக் காப்பாத்தறதுனு ஒரே மண்டைக் குடைச்சல். அதை உள்ளே வர விடாதேனு இவர் ஆர்டர். என்னமோ நான் அதை வெத்திலை, பாக்கு வாங்கிக்க வானு கூப்பிட்ட மாதிரி. என்னத்தைச் சொல்றது?? உள்ளே வந்த அதை வெளியே விடாமல் கத்தி, ஆர்ப்பாட்டம் பண்ணி, அதை வீட்டுக்குள்ளேயே ஒளிஞ்சுக்க விட்டுட்டேனு இவருக்குக் கோபம். அது என்ன கையில் பிடிக்கவா முடியும்?? எப்படியோ ஓடி, ஒளிஞ்சுக்கறது.

நேத்திக்கும் அப்படித் தான் ராத்திரி உட்கார்ந்திருந்தேன் கணினிக்கு முன்னால். அப்போ பாருங்க, பக்கத்திலேயே இருக்கும் வார்ட்ரோபில் இருந்து ஏதோ தட்டற சப்தம். விட்டு, விட்டுக் கேட்டது. இவ்வளவு உள்ளே வந்து ஒளிஞ்சுக்கக் கூடிய ஒரே நபர் மூஞ்சுறைத் தவிர வேறே எதுவாய் இருக்கும்?? உடனேயே ம.பா.வைக் கூப்பிட, அவரும் ஓடோடி வந்தார், நேத்திக்கு சீரியல் எதுவும் இல்லை! அதனால் தான்! :P வந்து கதவைத் திறந்து பார்த்தால் ஒரு குஞ்சு தெரிஞ்சது. சரிதான், பிரசவத்தை இங்கே வச்சிருக்குனு நினைச்சு, இன்னிக்குக் காலம்பர வரை வேறு வழியில்லாமல் பொறுத்துக் கொண்டு, பின்னே?/ அதில் இருக்கும் சாமான்களை எடுத்துட்டுத் திரும்ப வைக்க ஒரு அரை நாள் பிடிக்கும். அத்தனை வேண்டாத சாமான்கள் இருக்கு அதிலே. காலம்பர அவர் வார்ட்ரோபைத் திறந்து கொண்டு, வாளி, முறம், ப்ரஷ் (குட்டியாச்சே, துடைப்பத்தால் எடுத்தால் வலிக்கும் இல்லையா??) சகிதம் உட்கார, நான் கையில் கம்புடன், ஹாலில் நட்ட நடுவாக, ஒரு நாற்காலியில் அமர்ந்தேன், அம்மா வந்தால் வெளியே விரட்ட.

மெதுவாய்த் திறந்து பார்த்தால், ஒரு மூஞ்சுறு அசையாமல் கிடக்கு. என்னனு புரியலை, மனசுக்கு ரொம்பக் கஷ்டமாப் போச்சு. அப்புறமா எல்லாத்தையும் எடுத்துட்டுப் பார்த்தால் மேலும் 2 குஞ்சுகள். அதுங்க இரண்டும் துள்ளலோ துள்ளல். மெதுவா அதை எடுத்து வாளிக்குள் போட்டுவிட்டு, அதுக்குள்ளே அம்மா வராமல் இருக்கணுமேனு பிள்ளையாருக்கு லஞ்சம் கொடுக்கிறேன்னு சொல்லி, அசையாமல் இருக்கிறதை முதலில் வெளியே கொண்டுவிட்டு, காக்காய் வேறே கொத்தாமல் இருக்கணும், அது கண்ணுக்குப் படாமல் மறைவாய் விட்டு, மத்தது இரண்டையும் அப்படியே விட்டுட்டு வந்து, திரும்ப வார்ட்ரோபை சுத்தம் செய்து, அறையையும் சுத்தம் செய்துவிட்டுக் குளித்துச் சாப்பிடும்போது மணி 1-00 க்கு மேல் ஆயிடுச்சு.

கொல்லையில் காக்காய்க்குச் சாதம் வைத்தால் கொஞ்ச நாளாக் காணாமல் போயிருந்த அம்மாப் பூனை வருது, மெதுவாய் ஏதோ விஷயம் சொல்லிக் கொண்டே. என்னனு பார்த்தால் அதோட வயிறு பெரிசா இருக்கு. மீண்டும் குட்டி போடப் போகுதோ?? அதுக்குத் தான் தாஜா பண்ணுதோ??

கடவுளே!!!!

Friday, August 15, 2008

காந்தியவாதி கல்யாணராமன் கேள்வி!! ஆட்சியாளர்கள் என்றால் யார்?


ஜெயா + சானலில் இன்று 12-30 மணி அளவில் காந்தியின் கடைசிக் காரியதரிசியாக இருந்த திரு கல்யாணராமனின் பேட்டி ஒளிபரப்பாகியது. இன்றைய நாட்களில் அரசும், நிர்வாகமும் பெருமளவில் ஊழலின் ஊற்றாக மாறி இருப்பது குறித்து வருந்திய அவர், காந்தி இருந்திருந்தால் 50 களிலேயே இந்த ஊழல் ஆரம்பித்ததை ஒட்டிப் புதிய கட்சி ஆரம்பித்து, மீண்டும் சுதந்திரம் கிடைக்கப் போராடி இருந்திருப்பார் என்றும் கூறுகின்றார்.

சேவை புரிவது ஒன்றே நோக்கமாய்க் கொண்டிருந்த காந்தியும், அவரின் தொண்டர்களும் இத்தகைய புரட்சியைக் கட்டாயம் செய்திருப்பார்கள் என்றே சொல்கின்றார். நாட்டு மக்களிடையே அத்தகையதொரு விழிப்புணர்ச்சி வரவேண்டும் என்றும் சொல்கின்றார். காந்தியின் தொண்டர்களாய் இருந்த, ராஜாஜி, ஆசார்ய கிருபளானி, ஜெயப்ரகாஷ் நாராயண், ஆச்சார்ய வினோபாபாவே போன்றோர் அரசியலை விட்டும், கட்சியை விட்டும் விலகி மக்கள் சேவையில் இறங்கியதையும் உதாரணம் காட்டிய அவர், அவர்கள் கூட இப்போதைய நிலையில் புரட்சிக்கே ஆதரவு தெரிவித்து, இரண்டாவது சுதந்திரத்துக்குப் போராடுவார்கள் என்றே தாம் நினைப்பதாய்த் தெரிவித்தார்.

பிரதமர், குடியரசுத் தலைவர் போன்றோர் அரசிடம் இருந்து பலவிதமான சலுகைகளைப் பெற்றுக் கொண்டும், மேன்மேலும் சம்பளம் என்றும் வாங்குவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தார். எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் போன்றோர்