எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, January 14, 2026

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 30

  திருப்பாவைப் படங்கள் 30க்கான பட முடிவுகள்  திருப்பாவைப் படங்கள் 30க்கான பட முடிவுகள்

 
திருப்பாவைப் படங்கள் 30க்கான பட முடிவுகள்

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப்பறை கொண்டவாற்றை யணி புதுவைப்
பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதுந் தப்பாமே
இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டுமால் வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்றின்புறுவர் எம்பாவாய்!


 படிக்கோலங்கள்க்கான பட முடிவுகள்  படிக்கோலங்கள்க்கான பட முடிவுகள்

 

படிக்கோலங்கள்க்கான பட முடிவுகள்   படிக்கோலங்கள்க்கான பட முடிவுகள்
 
படிக்கோலங்கள்க்கான பட முடிவுகள்

இன்று கடைசி நாள்.  போகிப் பண்டிகை.  ஆகவே படிக்கோலம் என்று சொல்லப்படும் மணைக் கோலம் போடலாம். விதவிதமாக அழகு செய்யப் பெண்களுக்குச் சொல்லியா தர வேண்டும்?

படங்களுக்கு நன்றி கூகிளார்!

வங்கம் என்றாலே கடலையே குறிக்கும் சொல்.  இங்கே அது பாற்கடலைக் கடைந்ததைக் குறிக்கும். கேசி என்னும் அரக்கனைக் கொன்றதால் கேசவன் எனப் பெயர் பெற்றான் கண்ணன்.  "மாதவன்" என்னும் பெயருக்குப் பல அர்த்தங்கள் கூறப்பட்டிருக்கின்றன.  "மா"என அழைக்கப்படும் ஶ்ரீ ஆகிய தாயாரின் கணவன் என்னும் பொருளிலும்,  மது வித்தை மூலம் உணரப்படும் பரம்பொருள் மாதவனாக ஆதி சங்கரராலும்,  மௌனம், தியானம், யோகம் ஆகியவற்றால் உணரப்பட்டு சித்தம் போன போக்கில் போகாமல் நிலைநிறுத்த உணரப்படுபவனாகப் பராசர பட்டராலும், "மா" எனப்படும் பரமாத்ம ஞானத்தை அளிப்பவனாக ஹரி வம்சத்திலும் அறியப்படுகிறது.

இத்தகைய மாதவனை, கேசவனை அழகிய திருமுகத்தை உடைய கோபியர்கள் ஆகிய தாங்கள் அனைவரும் அவன் திருவடிகளைச் சரணம் என்று சென்று அவனை தரிசித்து இறைஞ்சி பாவை நோன்பின் விரத பலன்களைப் பெற்று வந்த விபரங்களை ஶ்ரீவில்லிபுத்தூரில் வசித்து வந்த பட்டர் பிரான் ஆன பெரியாழ்வாரின் செல்வத் திருமகள் ஆன கோதையாகிய நான் சொன்ன இந்த இனிய தமிழ்ப்பாடல்கள் முப்பதையும் தவறாமல் இந்த தனுர் மாதத்தில் பாவை நோன்பு நூற்றுச் சொல்லுபவர்கள் யாராயினும் அவர்கள் அனைவரும் அழகிய உயர்ந்த அகன்ற தோள்களை உடைய செந்தாமரை போன்ற விரிந்த கண்களை உடைய திருமாலின் அருள் பெற்று அனைத்துச் செல்வங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள்.





மார்கழி மாதம் முடிந்துவிட்டது. நோன்பும் முடிந்து விட்டது. கண்ணனும் வந்துவிட்டான். அவனிடம் வேண்டியதைக் கேட்கவும் கேட்டாயிற்று. இனி பொங்கல் கொண்டாடவேண்டியதுதான். ஆகவே இத்தனை நாட்களும் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொன்றாய்ப் பாடிய பாடலைத் தான் பாடியதையும், அதை தினம் தினம் பாடலாம் என்றும், குறைவில்லாச் செல்வம் பெறலாம் என்றும் கூடப் பாடியோர், பாடலைக்கேட்டோர், இனி பாட இருப்போர் என அனைவரையும் வாழ்த்துகிறாள் ஆண்டாள். இதை பலஸ்ருதி என்று சொல்லலாம்.

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி= அமுதம் எடுக்க வேண்டிக் கடைந்த கடல் பாற்கடல். அதுதான் இங்கே வங்கக் கடல் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. வங்கம் என்பது இங்கே கப்பல்களையும் குறிக்கும். நம் மனதைக் கடலாகக் கொண்டால் அதில் மிதக்கும் அனைத்து எண்ணங்களும் கப்பல்கள் எனலாம். அத்தகைய மனதை இறைஅருள் என்னும் மத்தால் கடைந்து பகவானின் கடாக்ஷம் என்னும் அமுதத்தைப் பெறலாம். இன்னொரு பொருளில் பாற்கடலைக் கடைந்த போது அதில் இருந்து மா என்னும் மஹாலக்ஷ்மி தோன்றினாள். அவளை அடைந்தவன் ஸ்ரீமந்நாராயணன். மாவை அடைந்தவன் மாதவன் என்ற பொருளிலும் இங்கே வங்கக் கடல் கடைந்த மாதவனை என்று கூறுகிறாள் ஆண்டாள். அடுத்து கேசி என்னும் அரக்கனை அழித்தான் குழந்தை கண்ணன். ஆகவே கேசவன் என்ற பெயரும் பெற்றான். அந்த மாதவனை, கேசவனை இந்த ஆயர்பாடியின் கோபிகைகளான நாம், நிலவைப் போன்ற திருமுகம் கொண்ட அழகான பெண்கள் என்று கூறுகிறாள் ஆண்டாள். அந்த அழகான சேயிழையார் அனைவரும் சேர்ந்து கண்ணன் இருக்கும் இடத்துக்கே சென்று,


அங்கப்பறை கொண்டவாற்றை யணி புதுவைப்
பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன= அவனிடம் வேண்டிப் பெற்றது இந்தப் பரமபக்தியாகிய அமுத ஊற்று. அதன் மூலம் கண்ணன் மனதை அவர்கள் வென்றார்கள். அவனிடமிருந்தே தங்களுக்கு வேண்டியவற்றையும் கேட்டுப் பெற்றார்கள். இவற்றை எல்லாம் தன் அளப்பரிய பக்தியால் உணர்ந்து பாடியது யார் தெரியுமா?? இப்பூவுலகுக்கே ஒரு அழகான அணி போல் விளங்கும் புதுவை என்னும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒருத்தர் இருக்கிறார். அவர் குளிர்ச்சியான மலர்மாலைகளைக் கண்ணனுக்குப் படைப்பார் தினமும், அந்த மாலைகளைப் பின்னர் கண்ணனின் பிரசாதமாகத் தானும் அணிந்து கொள்வார். ஆனால் அவர் மகளான கோதையோ தான் சூடிக் களைந்த பின்னரே கண்ணனுக்கு அணிவிப்பாள். கண்ணனுக்கும் அதுவே உவக்கும். அந்தப் பெரியவர் பெயர் பட்டர்பிரான் என அனைவரும் அழைக்கும் பெரியாழ்வார் ஆகும். அவருடைய திருமகள் தான் கோதை, என்னும் ஆண்டாள்.

சங்கத்தமிழ்மாலை முப்பதுந் தப்பாமே
இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டுமால் வரைத்தோள்= அந்தக் கோதை சொன்ன தமிழ் மாலைகள் தாம் இந்தப்பாடல்கள். முப்பது பாடல்கள், இவை அனைத்தும் கோதை என்னும் ஆண்டாள் அடுத்து வருவோருக்கு அளித்த அருமையான பரிசு ஆகும். இந்தப் பரிசைத் தினம் தினம் தப்பாமல் சொல்லுபவர்களுக்குத் தன் நான்கு புஜங்களாலும்

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்றின்புறுவர் எம்பாவாய்!= சிவந்த வரியோடிய செந்தாமரைக் கண்களோடு கூடிய அழகிய இன்முகத்தை உடைய லக்ஷ்மிதேவியை மார்பில் சூடிய திருமால் எடுத்து அணைத்துத் தன் நெஞ்சோடு அவர்களைச் சேர்த்துத் தன் இன்னருளைத் தருவான். தன் அடியார்கள் தன் திருவருளைப் பெற்று இன்புறும் வண்ணம் அவர்களுக்குத் தன் இன்னருளைப் பொழிவான். இத்துடன் திருப்பாவை முடிகிறது. இதைத் தினமும் சொல்லலாம். மார்கழி மாசம் எல்லாருமே திருப்பாவை பொருள் எழுதுவார்கள் அல்லது அதை ஒட்டி ஏதேனும் எழுதுவார்கள். அது வேண்டாம்னு இத்தனை வருஷமா எழுதாமல் வைத்திருந்தேன். இப்போ நாராயணீயம் தினம் அரை மணி படிக்கிறதாலே அதைலிருந்தும் சில பாடல்களைச் சொல்லலாம் என்று நினைத்தபோது இந்தத் திருப்பாவையையும் போட முடிவு செய்து எழுதினேன்.


நாராயணீயத்தில் பட்டத்திரி வேண்டுவதாவது
"அஜ்ஞாத்வா தே மஹத்த்வம் யதிஹ நிகதிதம் விஸ்வநாத க்ஷமேதா:
ஸ்தோத்ரஞ் சைதத் ஸஹஸ்ரோத்தர மதிகதரம் த்வத்ப்ரஸாதாய பூயாத்
த்வேதா நாராயணீயம் ஸ்ருதிஷூ ச ஜநுஷா ஸ்துத்யதா வர்ணநேந
ஸ்ப்பீதம் லீலாவதாரை ரிதமிஹ குருதா மாயுராரோக்ய ஸெளக்க்யம்

ஏ பரமாத்மா, விஸ்வத்துக்கெல்லாம் அதிபதியே! உனது சரித்திரத்தையோ பிரபாவங்களையோ முழுதும் நான் அறிந்தேன் இல்லை. ஆகவே இங்கு நான் சொன்னதில் தவறு இருந்தால் பொறுத்து அருளவும். என் வர்ணிப்பு சரியாய் இல்லை எனில் மன்னித்து அருளவும். ஆயிரம் ஸ்லோகங்களுக்கும் மேல் உள்ள இந்த ஸ்தோத்திரத்துக்கு உமது அனுகிரஹம் உதவட்டும். வேதப்ரமாணமான லீலா அவதாரங்களின் ஸ்துதிகளே இந்த ஸ்தோத்ரத்தை வளர்த்து வந்தது. நாராயணனைப் பற்றியதாலும், நாராயணனாகிய நான் எழுதியதாலும் இது நாராயணீயம் என்றே அழைக்கப்படும். இதைப் படிக்கும் உன் பக்தர்களுக்கும், இந்த அகில உலகில் உள்ள பக்தர்களுக்கும் நீண்ட ஆயுளையும், திடகாத்திரமான ஆரோக்யத்துடன் கூடிய தேகத்தையும், மற்றும் எல்லாவிதமான ஐஸ்வரியங்களையும் தந்து அருளட்டும்.


நாராயணீயம் ஸ்லோகம் சம்ஸ்கிருதத்தில் போட நினைச்சுப் போட முடியவில்லை. சரியான ஃபாண்ட் கிடைக்கவில்லை. திடீர்னு ஆரம்பிச்சதாலே சில தளங்களில் சென்று தரவிறக்க முடியவில்லை. நான் எழுதி இருப்பதில் சில தவறுகள் இருக்கலாம். அவை என்னாலேயே ஏற்பட்டவை. மேலும் சொல்லி இருக்கும் பொருளும் பொதுவான பொருளையே எடுத்துக்கொண்டேன். மூலப் பொருளைச் சிதைக்காமல் கூற முயன்றிருக்கிறேன். அவ்வளவே.

திருப்பாவை உரைக்குத் துணை செய்தவர்கள்

உபய வேதாந்தி வேளுக்குடி திரு கிருஷ்ணன் அவர்கள், பொதிகைத் தொலைக்காட்சி உரைகள்.
உபய வேதாந்தி திரு அநந்தபத்மநாபாச்சாரியார் அவர்கள், ஜெயா தொலைக்காட்சி உரைகள்.

Tuesday, January 13, 2026

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 29

 



   திருப்பாவைப் படங்கள் 29க்கான பட முடிவுகள்  திருப்பாவைப் படங்கள் 29க்கான பட முடிவுகள்

திருப்பாவைப் படங்கள் 29க்கான பட முடிவுகள்
சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது.
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோம்
மற்றை நம்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!


               இருதய கமலம்க்கான பட முடிவுகள்  இருதய கமலம்க்கான பட முடிவுகள்


                                                                                                                                       
இருதய கமலம்க்கான பட முடிவுகள்தாமரைக் கோலம்,க்கான பட முடிவுகள்



 தாமரைக் கோலம்,க்கான பட முடிவுகள்  தாமரைக் கோலம்,க்கான பட முடிவுகள்

கண்ணனோடு ஐக்கியம் அடைவதை இங்கே சொல்வதால் நம் இருதயவாசியான கண்ணனைச் சுட்டும் விதமாக இருதய கமலம் கோலம் போடலாம்.  எனினும் வாசலில் அனைவரும் மிதிக்கும் இடத்தில் பலரும் போடத் தயங்குவார்கள் என்பதால் வீட்டில் பூஜையறையில் போடலாம்.

 படங்களுக்கு நன்றி கூகிளார்!

தாமரைப்பூக்கள் கொடியோடு வரைந்து வண்ணம் தீட்டலாம்.

இந்தப் பாடலின் பொருளாவது:  கண்ணனின் பொற்பாதங்களை வணங்க வந்திருக்கும் காரணம் என்னவெனில் மாடுகளை மேய்க்கும் குலத்தில் வளர்ந்த நீ, நாங்கள் செய்யும் சிறு விரதத்தை ஏற்றுக் கொள்வாய்!  உன்னை ஆராதித்து நாங்கள் செய்து வந்த இந்தச் சின்ன விரதத்தைக் கண்டு கொள்ளாமல் போய்விடாதே! உன்னுடைய பரிசுகளான பாடகம், சூடகம் போன்ற பொருட்களுக்காக மட்டும் நாங்கள் விரதம் மேற்கொள்ளவில்லை.  இந்தப் பிறவி மட்டுமின்றி இனி வரப் போகும் பிறவிகளிலும் நாங்கள் உன்னை மறக்காமல் உனக்கு உறவினர்களாகவே பிறக்க வேண்டும்.  உனக்கே நாங்கள் எங்கள் தொண்டுகளைச் செய்து வருவோம். கண்ணா!  எங்களை உன் உறவினர்களாக ஏற்றுக் கொண்டு உன்னோடு எங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டு எங்களிடம் இருக்கும் மற்ற உலக ஆசைகளை அடியோடு அழித்து ஒழித்துவிடுவாய்!

பெருமானின் திருவடிகளையே அடைக்கலம் எனச் சரணாகதி அடைந்தோர்க்கு முக்தி நிச்சயம் என்பதே இந்தப் பாடலின் உட்பொருள்!

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்= கண்ணனும் வந்துவிட்டான். நோன்பும் முடிந்தாகிவிட்டது. கண்ணனைக் கண்ணார, மனமாரக் கண்டு களித்துக்கொண்டிருக்கிறோம். மேலும் கண்ணனிடம் கேட்பதற்கு வெறும் அணிகலன்களும், ஆடைகளும் மட்டுமா?? இல்லை, இல்லை அவை எல்லாம் வெறும் வெளிப்பார்வைக்கு வேண்டுமானால் ஆடம்பரமாக, அத்தியாவசியமாய் இருக்கலாம், நமக்கு வேண்டியது அதுவல்லவே/

அதிகாலையிலேயே கருக்கலிலேயே எழுந்து, தோழிகளையும் அழைத்துக்கொண்டு நீராடி நோன்பு வழிபட்டு, இப்போது நோன்பையும் முடித்துவிட்டு உன்னையும் கண்டு சேவித்துக்கொண்டோம் கண்ணா, உன் பொற்றாமரை அடியே எங்களுக்குக் கதி. வேறெதுவும் இல்லை அப்பா. அந்தப் பொற்றாமரை அடியைப் போற்றும் காரணம் என்ன தெரியுமா கேள் கண்ணா!

பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது.= அப்பா, எங்களைக் கடைத்தேற்றவே இந்த ஆயர் குலத்தில் நீ பிறந்தாய். பசுக்களை நாம் ரக்ஷிக்கிறோமா, அவை நம்மை ரக்ஷிக்கிறதா? ஆயர்கள் எவருமே பசுக்களை மேய விட்டு அவற்றின் வயிறு நிரம்பாமல் உணவு உண்ண மாட்டார்கள். பசுக்களை அப்படி ரக்ஷிப்பார்கள். அத்தகைய குலத்தில் பிறந்து நீ எங்களை ரக்ஷித்து ஆட்கொள்ளாமல் இருப்பாயா? எங்களை உன்னுடன் ஐக்கியம் செய்து கொள்ளாமல் இருப்பாயா? அதுதான் நடக்கும் அப்பா, வேறு எதுவும் நடவாது.

இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு= கோவிந்தா, கோபாலா, நாங்கள் வந்தது வெறும் பறை என்னும் வாத்தியத்துக்காக மட்டும் அல்ல, எங்களுக்குத் தேவை மோக்ஷம், முக்தி. அதுவும் எப்படிப்பட்ட முக்தி?? ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும், என்றைக்கும், எப்போதும், எந்தப் பிறவியிலும் உன்னோடு நாங்கள்


உற்றோமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோம்
மற்றை நங்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!= உறவினர்களாகவே இருப்போம். நீ வந்து எங்கள் குலத்தைத் தேடிப் பிறந்துவிடு அல்லது எங்களை உன் குலத்தில் பிறக்கச் செய். உன்னைத் தவிர வேறொருவருக்கு நாங்கள் எந்தவிதத் தொண்டும் செய்ய மாட்டோம். உனக்கே நாங்கள் அடிமையாக இருப்போம். ஆகவே எங்களிடம் இருக்கும் மற்ற ஆசைகளை எங்களிடமிருந்து விட்டொழிக்க வேண்டி, எங்கள் மண்ணாசை, பொன்னாசை போன்ற எந்தவிதமான இவ்வுலக ஆசைகளும் எங்களிடம் ஒட்டாதபடிக்கு எங்களை மாற்றி அருள் புரிவாய் கண்ணா. எங்களுக்கு வேறு எதுவுமே வேண்டாம், நின்னருளே வேண்டும். உனக்கே நாங்கள் என்றென்றும் அடிமை.

இதை பட்டத்திரி எப்படிச் சொல்கிறார் என்று பார்த்தால்,பகவானின் சொரூபமே தியானிக்கத் தக்கது என்கிறார். பகவானின் செளந்தர்யமே நம்மை மகிழ்ச்சி பொங்க வைக்கும் என்கிறார். மேலும் அவர் பகவானின் செளந்தர்யத்தை எவ்விதம் வர்ணிக்கிறார் என்றால்

ஸூர்யஸ்பர்த்திகிரீடம் ஊர்த்த்வதிலக ப்ரோத்பாஸி பாலாந்தரம்
காருண்யாகுலநேத்ரம் ஆர்த்ர ஹஸிதோல்லாஸம் ஸுநாஸாபுடம்
கண்டோத்யந் மகராப குண்டலயுகம் கண்டோஜ்ஜ்வலத் கெளஸ்துபம்
த்வத்ரூபம் வநமால்ய ஹாரபடல ஸ்ரீவத்ஸ தீப்ரம் பஜே

பகவானின் திவ்ய மங்கள சொரூபத்தைத் தியானிப்போம். அதில் அடங்கி இருக்கும் இனிமையான செளந்தர்யத்தை வர்ணிக்க வார்த்தைகளால் இயலாது. சூரியனைப் போல் பிரகாசிக்கும் கிரீடமும், நீண்ட கஸ்தூரித் திலகமும், அழகான அகன்ற நெற்றியும், அருள் பொழியும் செந்தாமரையை நிகர்த்த கண்களும், அன்பான புன்னகையும், நீண்ட நாசியும், காதில் போட்டிருக்கும் மகரகுண்டலங்களின் ஒளியானது கன்னங்களில் பட்டுப் பிரகாசிக்கும் அழகும், கழுத்தில் கெளஸ்துபமணியும், வனமாலையும், ஸ்ரீவத்ஸம் என்னும் மறு உள்ள மார்பும் அணிந்த பகவானின் திருவடிகளைத் தியானிப்போம். அது ஒன்றே நம்மைக் கடைத்தேற்றும்.