நட்சத்திரங்கள் விண்ணில் மின்னுகின்றன. நிரந்தரமாகவும் இருக்கின்றன. பகலில் சூரிய ஒளி காரணமாய்த் தெரியறதில்லை. என்றாலும் நக்ஷத்திரங்கள் விண்ணில் நிரந்தரமாய் இருக்கின்றன. நமக்குத் தெரியறதில்லை. ஆனால் தமிழ்மணம் நட்சத்திரம் ஒரு வாரத்துக்கு மட்டுமே மின்னும். தமிழ்மணம் நக்ஷத்திர அழைப்பு வந்ததுமே கொஞ்சம் யோசனைதான். நம்மளாலே முடியுமா? தினம் ஒரு பதிவு கட்டாயமாய்ப் போடணும், அதுவும் தமிழ்மணம் விதிமுறைகளைச் சார்ந்து இருக்கணும். யோசனையாத் தான் இருந்தது. ஆனால் இம்முறை துணிஞ்சு இறங்கிட்டேன். அழைப்பு வந்ததுமே மறுபேச்சுப் பேசாமல் சரினு சொல்லியாச்சு. இத்தனை நாளா நம்ம பதிவுக்கு வராதவங்க இப்போத் தான் வரப் போறாங்களானும் தோணிச்சு. அதோட நம்ம கதைதான் ஊரறிந்த செய்தியாச்சே?? அழைப்பை ஏற்கும் முன்னர் என்னால முடியுமானே யோசனை. ஒரு வாரம் ஒரு நியதிக்குக் கட்டுப்பட்டு எழுதணுமே! (ஹிஹிஹி, பெரிய எழுத்தாளி ஆயிட்டேன் இல்லை) ஆனால் என்னை விட அதிகம் கஷ்டப் படப் போறது படிக்கிறவங்க தானே. அதனாலே துணிஞ்சு இறங்கிட்டேன். இலக்கியம் படைக்கவானு என்னோட தோழி ஒருத்தியின் அழைப்பும் வந்தது. ஹிஹிஹி, நல்ல ஆளைப் பார்த்துக் கூப்பிடறாங்கனு மனசிலே நினைச்சேன். நாம எழுதறது, பேசறது, நினைக்கிறதுனு எல்லாமே இலக்கியம்தானே இன்னும் கொஞ்ச வருஷம் போனா! என்ன சொல்றீங்க????
உண்மையாகவே இலக்கியத் தரம் வாய்ந்த பல பதிவுகளுக்கு நான் போய்ப் படிச்சுட்டுப் பிரமிச்சுப் போயிடுவேன். திடீர்னு எல்லாம் ஒரு இரவிலே இந்த பக்திக்கதைகளிலே பற்று ஏற்படவில்லை. சின்ன வயசிலே இருந்தே ஊறிப் போனதே இவை எல்லாம். இது ஆன்மீகமும் இல்லை. உண்மையா ஆன்மீகம் எழுதறவங்க நிறையப் பேர் இருக்காங்க. நான் அதிலே சேர்த்தி இல்லை. நான் ஒரு கதை சொல்லி மட்டுமே! அதுவும் ஏற்கெனவேயே சொல்லப் பட்ட கதைகளே! புதுசா எதுவும் இல்லை. சிலர் ஆன்மீகம் பத்தி எழுதறதைப் பார்த்தாலும் அதே வியப்பு ஏற்படும். அந்த அளவுக்கெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. நான் நன்கு அறியவில்லை என்றாலும் ஓரளவுக்காவது தெரிஞ்சு வச்சிருக்கிறது புராண, இதிஹாசங்கள் பத்தித் தான். சின்ன வயசிலே இருந்து கேட்டும், படிச்சும் ஓரளவுக்குப் புரியும். அதனாலே துணிந்து இதை ஆரம்பிச்சேன் என்றாலும் இந்தக் கால இளைஞர்களின் தவறான புரிதலும் ஒரு காரணம் ஆகும். எல்லாரும் சொல்லுவதைப் போல பெரியவங்க எல்லாம் முன்னாலே சொல்லி வச்சுட்டுப் போனதைத் தான் நான் திருப்பிச் சொல்லிட்டு இருக்கேன். புதுசா எதுவும் சொல்லவே இல்லை. சொல்லும் அளவுக்குத் தகுதியை வளர்த்துக்கவும் இல்லை. சில எழுத்துக்களைப் படிக்கும்போது என்ன இதுனு பிரமிப்பு ஏற்படும். அவங்க யாருமே இன்னும் நக்ஷத்திரம் ஆகாமல் இருக்காங்க. நக்ஷத்திரம் ஆனவங்கள்ளேயும் ஜாம்பவான்கள், ஜாம்பவதிகள் நிறைய உண்டு. அவங்க அளவுக்கெல்லாம் எழுதப் போகிறதில்லை. ஆகவே ரொம்ப எதிர்பார்ப்பு வேண்டாம். சில பதிவுகள் அர்த்தமுள்ள பதிவுகளாகவும் இருக்கும். நான் அந்த ரகமும் இல்லை. சிலதை வேண்டாம்னே தவிர்க்கிறேன்.
எங்க பகுதியிலே எப்போ மின்சாரம் வரும், எப்போப் போகும்? எப்போ உயர் அழுத்த மின்சாரம், எப்போ குறைந்த அழுத்த மின்சாரம்னு தெரியாது. இந்த அழகிலே இணையம் வேறே திடீர் திடீர்னு போயிடும். அதனால் இம்முறை அழைப்பு வந்ததுமே எந்த விஷயங்களைப் பற்றி முக்கியமான பதிவுகள் போடணும்னு நினைச்சதை வலை ஏத்தி வச்சுட்டேன். அது அது அந்த அந்தத் தேதிக்குத் தானா வந்துடும். நேரம் மட்டும் கொஞ்சம் சரி செய்யணும். பின்னூட்டங்கள் இப்போ அதிகமாய் வரதில்லை. அதனால் பிரச்னை இல்லை. மொக்கைகளுக்கே ஆதரவுனு சிஷ்யகேடிங்க முடிவு எடுத்திருப்பதால் நீங்க எழுதற ஆன்மீக/பக்தி விஷயங்களுக்கு யார் பின்னூட்டம் போடுவாங்கனு எல்லாரும் கேலி செய்யறாங்க. யார் படிக்கிறாங்கனு இதை எல்லாம் எழுதறேனு சிலர் கேட்கிறாங்க. ராமாயணம் எழுதும்போது இதைக் கேட்டே ஒருத்தர் பின்னூட்டம் போட்டிருந்தார். எங்கோ யாரோ ஒருத்தர் இரண்டு பேர் நான் எழுதறதில் உள்ளதைப் புரிந்து கொண்டால் போதும். முதல்லே எல்லாம் பின்னூட்டங்கள் வரலைனா கஷ்டமாத் தான் இருந்தது. ஆனால் போகப் போக பின்னூட்டங்களை எதிர்பார்க்கும் மனசும் இப்போ இல்லை. இதுதான் நீ செய்யவேண்டியதுனு யாரோ கட்டளை போட்டிருக்கிறாப்போல் ஒரு நினைப்பு. அதனால் எதையும் எதிர்பார்க்காமலேயே எழுதிட்டு இருக்கேன். வந்து பின்னூட்டம் போடறது மிகச் சிலரே. அந்த மிகச் சில பின்னூட்டங்களுக்கும் உடனடியாக பதில் எழுதலைனா தப்பா நினைக்க வேண்டாம். மின் தடை, அல்லது இணையத் தடை தான் காரணமா இருக்கும். மத்தவங்க ஆன்மீகம்னு நினைச்சுட்டு வரதில்லை. இது ஆன்மீகமே இல்லை. பக்திக் கதைகளே. இன்றைய இளைய தலைமுறைக்குப் பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளோ, அல்லது குடிமைப் பயிற்சியோ பாடத்திட்டத்தில் இல்லை. முக்கியமான இவைகள் சொல்லிக் கொடுக்காமல் ஒரு பாடத் திட்டம். இதிலே சமச்சீர் பாடத் திட்டம் கொண்டு வரணும்னு வேறே சொல்லிட்டு இருக்காங்க.
நான் பள்ளியில் படிக்கையிலே வாரம் இரு முறை நீதி போதனை வகுப்புகளும், வாரம் இருமுறை குடிமைப் பயிற்சி வகுப்புகளும் இருந்தன. நீதி போதனையில் மற்றக் கிறித்துவ மாணவிகளுக்கு அவங்க வேதாகமத்தில் இருந்து பாடம் என்றால் எங்களைப் போன்றவர்களுக்குப் பொதுவான நீதிக்கதைகள், பாடங்கள் என்று போதிக்கப் படும். குடிமைப் பயிற்சி அனைவருக்கும் பொது. அனைத்துக் கைவேலைகள், சாலை விதிகள், விருந்து சாப்பிடும்போது கடைப்பிடிக்கும் விதிகள், குழந்தைகள் பெரியவர்களிடம் நடந்து கொள்ளவேண்டிய முறைகள், சமூக நீதிகள் என அனைத்தும் போதிக்கப் பட்டு இவைகளுக்குத் தேர்வும் இருந்தது. ஆனால் இன்றைய பள்ளிகளில் கடவுள் வாழ்த்தே தடை செய்யப் பட்டுள்ளது. :((((((( இறைவனுக்குப் படைத்துவிட்டு உணவு உண்ணுவதையும் கேலி செய்கின்றனர். நிவேதனம் என்றால் கடவுள் வந்து உணவருந்துவார் என்று எண்ணக் கூடாது. அறிவிப்பு மட்டுமே அது. இன்றைய இந்த நேர உணவை நீ கொடுத்ததுக்கு உனக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்ற அறிவிப்பு.
பலருக்கும் புராணங்கள் பற்றிய தவறான கண்ணோட்டமே இருக்கிறது. ஒரே மனுஷியான நான் என்னோட அப்பா, அம்மாவுக்குப் பெண்ணாகவும், கணவருக்கு மனைவியாகவும், தோழிக்கு சிநேகிதியாகவும், குழந்தைகளுக்குத் தாயாகவும், மாமியார், மாமனாருக்கு மறுமகளாகவும் இப்படிப் பல்வேறு ரூபங்கள் எடுக்கவில்லையா? அதுபோலவே இருக்கும் ஒரே பிரம்மமே வேறு வேறு வடிவம் எடுக்கின்றது. ஒவ்வொருவருக்கும் பிடிச்ச வகையில். வீரம் பிடிச்சவங்களுக்கு வீரத்தில் சிறந்த முருகனும், காளியும் கடவுளாயும் எடுத்துக்கறாங்க. சிலருக்குக்கிருஷ்ணரைப் பிடிக்கும், அதிலும் பால கிருஷ்ணனைப் பிடிக்கும். இப்படி ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்று பிடிக்கும் என்பதால் இருக்கும் ஒரே பிரம்மமே பல்வேறு உருவங்களில் அவரவருக்குத் தகுந்தாற்போல் தோன்றுகிறார்.
பொதுவாய் நான் எழுதுவதில் எந்தவிதமான சமூக, ஆன்மீக, பெண்கள் பிரச்னைகளைத் தொடுவதில்லை. இந்தப் பிரச்னைகள் பற்றிய என்னோட கருத்துகள் கொஞ்சம் மாறுபடுவதால் விவாதங்களைத் தவிர்க்க எண்ணியே அவற்றைப் பற்றி ஏதும் எழுதுவது இல்லை. இதிஹாசங்கள், புராணங்களை அடிப்படையாக வைத்தே தகவல்களைக் கொடுத்து வருகின்றேன். ஏனெனில் பலரும் புராணங்களைப் புரிந்து கொள்வதில் செய்யும் தவறே காரணம். மற்றவை என்னோட பயணங்கள் பற்றி மட்டுமே. இப்போவும் அப்படித் தான் எழுதப் போறேன்னு நினைக்கவேண்டாம். ஒரு சில முக்கியமான பிரச்னைகளை ஓரளவு ரொம்ப ரொம்ப லேசாக எடுத்துச் சொல்ல முயன்றிருக்கிறேன். ரொம்ப ஆழமா எல்லாம் போகலை. முழுக்க ஆன்மீகமும் இல்லை, கவலைப் படாதீங்க.
ஆன்மீகம்னு நான் எழுதும் புராணக் கதைகளைச் சொல்ல முடியாது. உண்மையான ஆன்மீகமே வேறே. அதன் முதல் படியில் கூட நான் இல்லை. ஆனால் ஒன்று, இந்த பக்தியெல்லாம் திடீர்னு வந்தது இல்லை. அது மட்டும் நிச்சயம். சின்ன வயசிலே இருந்தே வந்த ஒன்று. ஆழமாய்ப் பதிந்து விட்டது. இன்றைய தலைமுறையினர் பல விஷயங்களில் ஒரே அவசரம், வேகம். எல்லாருக்கும் புராணக் கதைகள் பலவும் தெரிந்திருந்தாலும், புராணங்கள் பெரும்பாலும் தவறாய்ப் புரிந்து கொள்ளப் பட்டிருக்கின்றன என்பதற்கு என் இளைய சிநேகிதி லாவண்யா எனக்கு அனுப்பிய ஒரு மடலில் இருந்து காணலாம். கடவுள் இருக்கின்றான் என்று சொல்லும் ஆத்திகவாதிகளை நெளிய வைக்கும் அளவுக்குக் குறைகள், குற்றங்கள். இது புரிதலில் உள்ள கோளாறே காரணம். ஆத்திகவாதிகள் பலரும் கடவுளை நம்பினாலும் இந்த முரண்பாட்டை ஏற்றுக் கொள்ளுவதில்லை தான். ஆனால் இதில் ஆழமாய்ப் பார்த்துப் புரிஞ்சுக்கணும். அதற்கான அவகாசம் யாருக்கும் இல்லைனு நினைக்கிறேன். விவாதம் செய்யணும்னு பார்த்தால் புராணங்களைப் புரிந்து கொள்வது கஷ்டம் தான். நட்சத்திர வாரத்தின் முதல் பதிவே கடவுளில் தான் ஆரம்பம் ஆகிறது.
நாத்திகம் பேசுபவர்களுக்கு வெறும் வாயை மெல்ல அவல் கிடைச்சாப்போல் இந்த விஷயங்கள் மாட்டிக் கொண்டு தவிக்கின்றன. நம்மை மாதிரிக் கடவுளையும் நாம ஒரு மனுஷனா நினைப்பதிலே தான் இந்தக் கோளாறெல்லாம். கடவுள் இல்லைனு சொல்றவங்க, எங்கே கடவுள் காட்டுனு கேட்கிறாங்க. கடல் நீர் நிறைய உப்புத் தான் நிறைஞ்சு இருக்கு. வாயில் விட்டால் உப்புக் கரிக்கின்றது. ஒரு இடத்தில் உப்பு ஜாஸ்தி, மற்ற இடத்தில் உப்புக் கம்மினு சொல்ல முடியுமா? எல்லா இடத்திலும் ஒரே சீராக இருக்கின்றது. ஏன் அந்தக் கடல் நீரையே உப்புக்குப் பதிலாய்ப் பயன்படுத்திச் சமைக்கக் கூடாது? முடியாதுனு புரியுது இல்லையா? உப்பைப் பிரித்து எடுத்துப் பயன்படுத்தறோம் அல்லவா? அப்போத் தான் உப்பு இருக்குனு நாம புரிஞ்சுக்கறோமா? அது இல்லை அல்லவா? உப்பு என்னமோ ஏற்கெனவே இருக்கிறது தான்.
அது போலத் தான் கடவுளும். எல்லா இடத்திலும் நிறைந்தே இருக்கின்றார். ஒரு இடத்தில் இல்லை, மற்ற இடத்தில் இருக்கார்னு குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால் கடல் நீரைப் பாத்தி கட்டித் தேக்கி வைத்து உப்பை அதில் இருந்து பிரிச்சு எப்படி எடுக்கிறோம்? அதற்கு எவ்வளவு உழைப்புத் தேவை? அதே போல் நம் இறை உணர்வு என்னும் கடல் நீரைப் பாத்தி கட்டித் தேக்கி வைத்து, நம் வழிபாடுகளாலும், செயலாலும், சொல்லாலும், நடத்தையாலும் இறை அருளைப் பெற வேண்டியது தவிர வேறு ஒன்றும் நினைக்காமல் இருந்தோமானால், நமக்கு கடவுள் என்னும் உப்புக் காக்ஷி கொடுக்கும். கடவுள் கிட்டே நாம் போய்ப் பரிபூரண சரணாகதி அடைய வேண்டும். இறைவன் ஒருவனே நாம்
"அழும்போது அணைக்கும் அன்னை
அறிவிலாது ஓடி ஆடி விழும்போது
எடுக்கும் அப்பன்"
ஆக இருக்கின்றான். கடவுளுக்கு நாம் ஒரு குழந்தையைப் போல என நண்பர் காழியூரர் கூறுவார். குழந்தை எவ்வாறு அம்மாவைத் தேடி எந்தத் தயக்கமும் இல்லாமல் ஓடிப் போய்க் கட்டிக் கொள்கின்றதோ அவ்வாறே நாம் கடவுளை நம் தாயாக நினைத்து நம் துயரங்களில் இருந்து காக்கவேண்டும் என அவனைத் தேடி ஓட வேண்டும். உண்மையான பக்தி உணர்வோடு ஒரு சொட்டுக் கண்ணீர் அல்லது மனசார ஒரு பிரார்த்தனை செய்து கொண்டாலே போதும். நம்மை நம் அனைத்துத் துன்பங்களிலிருந்தும் தடுத்து ஆட்கொள்ளுவான். இப்போது அடுத்து நீங்கள் படிக்கப் போவது லாவண்யா என்னைக் கேட்ட கேள்விகள். அதற்குப் பதிலாக நான் எழுதிய பதிவு ஒன்று. இது ஏற்கெனவே ஒரு குழுமத்தில் வந்தது. ஆகவே அங்கே படிச்சவங்க கொஞ்சம் பொறுத்துக்கணும். மத்தவங்க படிப்பதற்காக இது ஒரு மீள் பதிவு.
Monday, July 13, 2009
Saturday, July 11, 2009
நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே!

நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே!
உனக்கு நச்சுப் பையை வைத்தது யார் சொல்லு பாம்பே!
ஆடு பாம்பே! விளையாடு பாம்பே!
நின்றாடு பாம்பே! குதித்தாடு பாம்பே!
எழுந்தாடு பாம்பே!
நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே!
குற்றமற்ற சிவனுக்குக் குண்டலமானாய்
கூறு திருமாலுக்குக் குடையுமானாய்
கற்றை குழல் பார்வதிக்குக் கங்கணமானாய்
கரவாமல் உள்ளங்களித்தாடு பாம்பே!
ஆடு பாம்பே! நின்றாடு பாம்பே! விளையாடு பாம்பே!
குதித்தாடு பாம்பே! எழுந்தாடு பாம்பே!
சின்ன வயசிலே கிட்டத்தட்ட பதினாறு, பதினேழு வயசு வரைக்கும் பாம்பைப் பாம்பாட்டிகிட்டே பார்த்தது தான். மதுரையில் அப்படி ஒண்ணும் வீடுகளுக்குள் எல்லாம் பாம்பு வந்தது இல்லை. ஆனால் அண்ணா முதலில் வேலைக்குச் சேர்ந்த ஹோசூருக்குப் போனபோது, அங்கே பாம்பு சர்வ சகஜமாய் நடமாடிக் கொண்டிருந்தது ஒரு அதிசயமா இருந்தது. கொல்லையில்(வீட்டில் இருந்து கிட்டத்தட்ட அரை பர்லாங்காவது இருக்கும்) இருந்த கழிப்பறையில், குளியலறையில் பாம்பும் பக்கத்திலேயே வந்து உட்காரும். அந்த அளவுக்கு நண்பர்களாக இருந்தது. அதனால் திருமணம் ஆகி வந்து மாமனார் வீட்டுத் தோட்டத்தில் உள்ள கிணற்றில் பெரீஈஈஈஈஈஈஈஈஈஈஈய நல்ல பாம்பை வெகு சாதாரணமாகவே பார்த்தேன். அதுக்கப்புறமும் நாங்க இருந்த ராஜஸ்தான், குஜராத்தில் இருந்த அலுவலகக் குடியிருப்புகளில் எங்களோடு பாம்புகளும் குடி இருந்தன.
அடிக்கடி வீட்டுக்குள் வரதும், நாங்க விரட்டறதுமாவே இருக்கும். ஒரு தரம், ராணுவ வீரர் ஒருவரை விரட்டக் கூப்பிட்டதில் அவர் பாம்பை அடிச்சுக் கொன்னுட்டார். அதுக்கப்புறமா நாங்க யாரையுமே கூப்பிடாமல் நாங்களே விரட்டிடுவோம். குஜராத் ஜாம்நகரிலோ கேட்கவே வேண்டாம். தினம் காலை நிலையில் மொத்த நீளத்துக்கும் ஆக்கிரமித்துக் கொண்டு படுத்துக்கும். ராணுவக் குடியிருப்பு நிலைக்கதவுகள் எல்லாம் ஏழடிக்கும் மேல் உயரமும், நாலடிக்கும் மேல் அகலமும் உள்ள நிலைகள். எல்லாம் ஆங்கிலேயர் காலத்துக் கட்டிடம். தினமும் அந்தப் பாம்பை விரட்டினப்புறம் தான் வாசலே தெளிக்க முடியும். படுக்கையில் பக்கத்தில் ஒரு நீளக் கம்பை வச்சுண்டு தான் படுத்துப்பேன். எழுந்ததும் அந்தக் கம்பைத் தட்டி ஓசைப் படுத்தினால், பாம்பு வேக வேகமாய் குளிர்சாதனப் பெட்டியைப் பாக்கிங் செய்யும் க்ரேட்டில் போய் ஒளிஞ்சுக்கும். அதுக்குள்ளே நிறைய பாக்கிங் சாமான்கள் இருந்ததால் கண்டு பிடிக்கிறது கஷ்டம். விட்டுடுவோம். ஆனால் எந்த நேரம் வெளியே வருமோனு கொஞ்சம் திக் திக் தான்.
குழந்தைகள் இருவரும் படுக்கும் அறையில் ஜன்னல் கம்பி எல்லாம் போயிருந்தது. அதுவழியாவும் சில சமயம் வரப் பார்க்கும். இங்கே அம்பத்தூரிலே நாங்க வீடு கட்டி இருக்கும் இடத்திலே கேட்கவே வேண்டாம். எங்க வீட்டுக் கிணற்றடிக்குச் சில அடிகள் தள்ளி ஒரு பெரிய புற்றே இருந்தது. பின்னாலே வீடு கட்டினவங்க அந்தப் புற்றை இடிச்சுட்டுக் கட்டி இருக்காங்க போல. இப்போ பாம்புக்குக் குடி இருக்க இடமே இல்லை. அலைஞ்சுட்டு இருக்குதுங்க. அநேகமாய்த் தினம் ஒரு முறையாவது தோட்டத்தில் கட்டுவிரியனோ, சாரையோ, வழலையோ தரிசனம் கொடுக்கும். ஒருமுறை கொம்பேறி மூக்கன் வந்து அதைக் கொல்லத் தான் கொல்லணும்னு சொல்லிட்டுக் கொன்னுட்டாங்க. கொல்லாமல் விட்டால் திரும்பவும் வந்து பழிவாங்குமாம். பச்சைப் பாம்புகளோ கேட்கவே வேண்டாம். வாழை இலை பறிக்கப் போறச்சே சில சமயம் தலைகீழாத் தொங்கினால் வாழை இலைனே நினைப்போம். கண்ணு தெரிஞ்சா பிழைச்சோம். இல்லாட்டி நம்ம கண்ணு அவ்வளவு தான்!
இத்தனையும் எதுக்குச் சொல்றேன்னா, கொஞ்ச நாட்களாகவே உள்ளே வருவேன்னு அடம் பிடிச்சுட்டு இருந்த ஒரு கட்டுவிரியன் இன்னிக்கு உள்ளே வந்திருக்கு. குளியலறை வாசலில் வாஷிங் மெஷின் போட்டு பொண்ணு துணிகளைப் போட்டிருந்தா. நான் உள்ளே கிரண்டரில் மாவு அரைக்கிறதும், சமையலையும் ஒரே சமயத்தில் பண்ணிட்டிருந்தேன். ஏதோ வேலையாகக் கொல்லைப்பக்கம் வேலை செய்யற பொண்ணு வரதுக்காகக் கட்டி இருந்த செர்வீஸ் ஏரியாவுக்குப் போனேன். போகும்போது பாம்பைத் தாண்டிட்டுப் போயிருக்கேன். எனக்கே தெரியலை. திரும்ப உள்ளே வரதுக்காக வந்தால் கொல்லை நிலைக்கு முன்னால் உள்ளே பாத்ரூமுக்கு எதிரே நெளிஞ்சுட்டு உள்ளே போக முயற்சி செய்துட்டு இருந்ததும், பாம்பு, பாம்புனு ஒரே கத்துக் கத்தினேன். என்னோட ம.பா. உள்ளே ஜபம் செய்துட்டு இருந்தார் போல. காதிலேயே விழலை அவருக்கு. அப்புறம் பொண்ணை விட்டுக் கூப்பிடச் சொன்னா, அவ பாம்பா, கயிறானு கேட்டுட்டு சாவகாசமா இருக்கா!
அதுக்குள்ளே பாம்பு நான் கத்தின கத்தல்லே பயந்து போய் பாத்ரூமுக்குள்ளே போயிடுச்சு. அங்கே போய்க் குழாயின் மேல் சுத்திக் கொண்டு விட்டது. அதுக்குள்ளே என் கணவரும் கம்பை எடுத்துக் கொண்டு வந்தார். என் பங்குக்கு நானும் ஒரு கம்பை எடுத்து வச்சுக் கொண்டேன். குழந்தைகளை அழைத்துக் கொண்டு படுக்கை அறையில் பொண்ணை இருக்கச் சொன்னால் அவளுக்கு வேடிக்கை பார்க்கும் ஆர்வம்! அதுக்குள்ளே ஒரு தொலைபேசி அழைப்பு. யார்னே தெரியலை. லூசிலே விட்டாச்சு. வாசல்லே அப்போதான் வேலை செய்யற பொண்ணோட அம்மா! அவசரமாப் பார்க்கணும்னு கூப்பிட்டுட்டு இருந்தா. மூன்று நாட்களா அம்மாவும், பொண்ணும் மட்டம் போட்டுட்டு வராமல் இன்னிக்கு நல்ல நேரம் பார்த்திருக்காங்க, பாம்பையும் கூட்டிட்டுனு நினைச்சு, பாம்பு வந்திருக்கிறதாலே அதை எண்டர்டெயின் பண்ணிட்டுத் தான் வருவேன்னு சொல்லி அனுப்பிச்சாச்சு. பொண்ணையும் வலுக்கட்டாயமாய் உள்ளே தள்ளிட்டோம். அதுக்குள்ளே இந்தக் கலவரத்தாலே இன்னும் பயந்த பாம்பு பாத்ரூம் கதவிடுக்கில் போய் ஒளிஞ்சுட்டு சுத்தி வளையமாப் படுத்துக் கொண்டு விட்டது.
நான் பாத்ரூமுக்குள்ளே போய் அதை உசுப்பிவிடறேன்னு சொன்னால் என் கணவர் அந்தப் பாம்பு நல்லாக் குதிக்கிறதாவும், உள்ளே போகும்போது மேலே குதிச்சுட்டா என்ன ஆறதுனும் சொல்லிட்டு வேண்டாம் நான், வெளியே போய் ஜன்னல் கண்ணாடியை எடுத்துட்டும் கம்பாலே தட்டி அதை வெளியே அனுப்பறேன். நீ இங்கேயே கம்போட நின்னு உள்ளே விடாம வெளியே விரட்டுனு சொன்னார். அதுக்குள்ளே கந்த சஷ்டி கவசத்தை உரக்கச் சொல்லிக் கொண்டே இரண்டு பேரும் ஆயத்தமானோம். அவர் வெளியே போய்க்கண்ணாடியை எடுக்க முயன்றால், பல மாதங்கள் கண்ணாடியை எடுக்கவே இல்லை. இப்போத் திடீர்னு எப்படி வரும்? அது எடுக்க முடியலை. திரும்ப உள்ளேயே வந்தார். அதுக்குள்ளே நான் கம்பால் பாத்ரூம் கதவைத் தட்டினேன். அவர் யோசிச்சுட்டு ஒரு கம்பியை எடுத்து வந்தார். பொண்ணு மறுபடியும் வந்து பாம்பாட்டியைக் கூப்பிடலாம்னு யோசனை சொன்னா. பாம்பாட்டி இந்த மாதிரி சமயங்களில் வீட்டை வித்துப் பணம் தரச் சொல்வார்ங்கறதாலே வேண்டாம், அந்தப் பணத்தை நாங்களே பயன்படுத்திக்கலாம்னு சொல்லி அவளை மறுபடியும் உள்ளே தள்ளிட்டுக் கம்பியால் குத்தினார். அங்கே வச்சிருந்த துடைப்பம் பாம்பின் மேல் விழ, பாம்பு அசைந்தது. இப்போ தண்ணீர் போகும் குழாய் அருகே போய்ப் படுத்துக் கொண்டது.
இவருக்கு என்ன பண்ணறதுனு புரியலை. நான் போய் கிரண்டரை முதலில் அணைச்சுட்டு, பருப்புப் போட்டிருந்த கற்சட்டியையும் அணைச்சேன். இப்போத் தான் மூளை வேலை செய்யும்போல் இருந்தது. அதுவரைக்கும் பாதி மனசு சமையலிலேயும், பாதி மனசு பாம்பிடமும் இருந்தது. இப்போ அவரை ஒரு பெரிய கம்பை எடுத்து வரச் சொன்னேன். அவர் அடிச்சுடவானு கேட்டார். எனக்கு அரை மனசுதான். அவருக்கும் கொஞ்சம் யோசனைதான் அடிக்க. அப்புறமாத் தேங்காய் பறிக்க வச்சிருக்கும் துரட்டியை எடுத்துட்டு வந்தார். துரட்டியாலே குத்திடப் போறாரோனு கொஞ்சம் கவலையா இருந்தது. பாம்போ மீண்டும் குளியலறைச் சுவற்றில் ஏறி ஜன்னல் வழியா வெளியே போக முயன்றது. ஆனால் சுவற்றிலும், தரையில் டைல்ஸ் போட்டிருந்தது அதனால் ஏறமுடியவில்லை. டைல்ஸ் போட்டது எவ்வளவு தப்புனு புரிஞ்சது! :( பாம்புக்கு முன்னால் துரட்டியை நீட்டி ஒரு தட்டுத் தட்டக் கீழே இருந்த அது மெல்லத் தலையைத் தூக்கப் பார்த்தது. அதுக்குள்ளே கம்பைத் திருப்பிக் கொண்டு அதன் உடல் நடுவே ஒரு அடி அடித்தார். உடனே பாம்பு நகர ஆரம்பித்தது. அப்பா என்ன வேகம்!! என்ன வேகம்! வெளியே ஒருவழியா வந்துடுச்சு. வீட்டுக்குள்ளே வராமல் இரண்டு பேரும் வழியை மறிச்சு நின்னு அதை வெளியே சத்தம் கொடுத்தும், கம்பால் தட்டியும் விரட்டினோம். ஒரு வழியா வெளியே போய், அங்கே இருந்த சந்தனமுல்லைச் செடிப்புதருக்குள்ளே மறைந்தது.
நானோ, அல்லது என் பெண்ணோ அவள் குழந்தைகளோ, எல்லாருமே அந்தச் சமயம் அங்கே சர்வ சகஜமாய்ப் போய் வந்து கொண்டிருந்திருக்கிறோம். ஒரு நிமிஷம் போதும் அது எங்களைக் கடித்திருக்கலாம், நான் இப்படித் தட்டச்சிக் கொண்டிருந்திருக்க மாட்டேன். கடவுள் காப்பாற்றினார். பாம்பைத் தாண்டிக் கொண்டே நான் போயிருக்கிறேன். ஆனால் திரும்பி உள்ளே வரும்போது தான் பார்த்திருக்கேன். போகும்போது ஏதாவது நடந்திருந்தால்???????
இறைவன் இருக்கின்றான். நமக்குத் தேவையானபோது விழிப்புணர்வையும் தருகின்றான். நாம தான் புரிஞ்சுக்கறதில்லை.ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதவரோ???
Friday, July 10, 2009
அறுபதுக்கு அறுபதா?? மார்க் இல்லைங்க வயசு!! 2
பலருக்கும் இந்தத் தகவல்கள் பயனுள்ளதாக அமைந்ததுக்கு முதலில் கோபிக்கு நன்றி கூறுகின்றேன். இப்போக் கோயிலின் தலவரலாற்றைப் பார்ப்போமா???மிருகண்டு முனிவரும் அவர் மனைவியும் குழந்தை இல்லாமல் இறைவனை நோக்கித் தவம் இருந்தனர். ஈசன் அவர்கள் பக்தியால் மனம் மகிழ்ந்து பல்லாண்டுகள் வாழும்படிக்கு வாழ்நாள் நிறைந்த, ஆனால் குணங்கள் துர்க்குணங்கள், இவற்றால் நிரம்பிய ஓர் மகன் வேண்டுமா?? அல்லது பதினாறே ஆண்டுகள் வாழும் மிகச் சிறந்ததொரு மகன் வேண்டுமா எனக் கேட்க தம்பதியினர் சற்றும் தயங்காமல் பதினாறு வயது மகனே வேண்டும் என வரம் கேட்க, அவ்வாறு இறை அருளால் பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்ற பெயர் வைத்து வளர்த்து வந்தனர்.
குழந்தை சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கியதோடு உரிய காலத்தில் உபநயனமும் செய்து வைக்கப் பட்டான். மிகச் சிறந்த சிவபக்தனாகவும் இருந்தான். அவனுக்குப் பதினாறு வயதும் நெருங்கியது. பெற்றோர் அவனை மனத்தளவில் தயார்ப் படுத்தி வைத்ததோடு அல்லாமல் தாங்களும் மகனின் மரணத்திற்கு வேறு வழியில்லாமல் தயாரானார்கள். தனக்கு இறைவனால் விதிக்கப் பட்ட ஆயுள் பதினாறு தான் என்பதைத் தெரிந்து கொண்ட மார்க்கண்டேயன்., ஒவ்வொரு ஸ்தலமாகச் சென்று இறைவனைத் தரிசித்து வந்தான்.
திருக்கடையூருக்கும் வந்து சேர்ந்தான் மார்க்கண்டேயன். இப்போது பதினாறு வயது முடிந்து மார்க்கண்டேயனின் ஆயுள் முடியும் நாள் நெருங்கிவிட்டது. எமன் தன் பணியை உரிய நேரத்தில் முடிக்கும்பொருட்டு சிவனுக்குப் பூஜை செய்து கொண்டிருக்கும் மார்க்கண்டேயன் மீது தன் பாசக் கயிற்றை வீசினான். தாம் செய்த தவத்தாலும், ஈசனின் அருளாலும் எமனைக் கண்ணாரக் காண முடிந்த மார்க்கண்டேயன் அச்சத்தோடு தான் வழிபட்டுக் கொண்டிருந்த லிங்கத்தையே ஆரத் தழுவிக் கொண்டார். எமனும் பாசக்கயிற்றை அந்த லிங்கத்தையும் சேர்த்துக் கட்டி இழுத்து வருமாறு வீசினான்.
கயிற்றை வேகமாய் இழுத்து, லிங்கத்தையும் அதை இறுக்கக் கட்டிக் கொண்டிருந்த மார்க்கண்டேயனையும் சேர்த்துத் தன் பக்கம் கொண்டு வர யமன் முயற்சிக்கும்போது பளீரென ஓர் ஒளி வீசியது. இடி இடித்தாற்போன்ற ஓர் சப்தம். அதன் பின்னர் மழை பொழிவது போல் கருணை மழை பொழியத் தயாராக ஈசன் அந்த லிங்கத்தினின்று வெளிப்பட்டார். அவர் கையில் திரிசூலம். அந்த சூலாயுதத்தால் காலனைக் குத்திக் கொண்டே இடது காலால் அவனை உதைத்தும் தள்ளினார். மார்க்கண்டேயன் காப்பாற்றப் பட்டான். அவனுக்கு என்றும் பதினாறு வயதாகத் தன்னருகிலேயே இருக்கும்படி பணித்தார் ஈசன்.பின்னர் உலக நன்மைக்காகவேண்டி யமனையும் உயிர்ப்பித்துத் தன் பணியைச் செவ்வனே செய்து வரும்படி அருளினார் என்பது வரலாறு. இது ஈசனின் எட்டு வீரச் செயல்களுள் காலனைக் காலால் உதைத்துக் கொன்ற செயல் நடந்த இடம் என்பதால் அட்ட வீரட்டானத் தலங்களுள் ஒன்றாக உள்ளது. யமன் ஈசன் மேல் பாசக்கயிற்றை வீசியதால் ஏற்பட்ட அடையாளத் தழும்புகளைக் கார்த்திகை சோமவார நாட்களில் மூலவர் சந்நிதிக்கு எதிரில் உள்ள சங்கு மண்டபத்தில் வலம்புரிச் சங்கை வைத்து 1008 சங்காபிஷேஹம் நடக்கும்போது மட்டுமே காணமுடியும் என்று சொல்கின்றனர்.
லிங்கத்திருமேனியின் உச்சியில் பிளவும், திருமேனியில் ஏற்பட்டிருக்கும் அடையாளத் தழும்புகளையும் அப்போது மட்டுமே காணலாம் என்கின்றனர். சந்நிதிக்கு முன் மண்டபத்தில் உள்ள காலசம்ஹாரமூர்த்தியின் செப்புச் சிலை வடிவமும், அங்கே லிங்கம் பிளந்து காலசம்ஹாரர் கையில் திரிசூலத்துடன் வெளிப்படும் காட்சியும் மிகத் தத்ரூபமாய் அமைக்கப் பட்டுள்ளது. இந்தச் சந்நிதி எப்போதும் திறப்பதில்லை. திறந்து காட்டிவிட்டு தீப ஆராதனை காட்டி உடனே மூடிவிடுவார்கள். ஒரு நிமிஷ காலமே தரிசிக்க முடியும். இந்தக் காலசம்ஹார மூர்த்திக்கு வருஷத்தில் பதினொரு முறை கள் மட்டுமே அபிஷேஹம் செய்யப் படுகின்றது. அப்போது காணமுடியும் என்கின்றனர். இந்தத் தலத்து அம்மன் மிகவும் அழகும், சக்தியும் வாய்ந்தவள். அபிராமி என அழைக்கப் படும் இவளின் அழகில் மெய்ம்மறந்த இந்தக் கோயிலின் அத்தியானபட்டர் ஆன ஒருவரிடம் கோயிலில் வழிபாடு செய்ய வந்த சரபோஜி ராஜா அம்மனைத் தரிசிக்கும்போது இவரிடம் அன்றைய திதி என்ன எனக் கேட்டான்.
அம்மனின் பூரணசந்திரன் போன்ற ஒளிமயமான அழகில் தன்னை மறந்திருந்த பட்டரோ அன்று பெளர்ணமி என்று சொல்லிவிடுகின்றார். மன்னனுக்குத் தன்னை அவர் மதிக்கவில்லையா என்று எண்ணிக் கோபம் வருகிறது. சுற்றிலும் தீயை மூட்டி அதில் ஓர் உறியைக் கட்டித் தொங்கவிட்டு அந்த உறியை நூறு சங்கிலிகளால் பிணைத்து பட்டரை அதில் அமரச் சொல்லி ஆணை இடுகின்றான். பட்டர் சொன்ன மாதிரி அன்று பெளர்ணமி நிலவு இரவு உதயமாகவேண்டும் எனவும், இல்லை எனில் பட்டர் ஒவ்வொரு சங்கிலியாக அறுத்துக் கொண்டு அந்தத் தீயில் விழுந்து உயிர் விடவேண்டும் எனவும் அரசாணை பிறக்கிறது.
Wednesday, July 08, 2009
அறுபதுக்கு அறுபதா?? மார்க் இல்லைங்க, வயசு!

கோபி பல விஷயங்கள் பற்றிய சந்தேகத்தைக் கேட்டிருக்கார். அதிலே பாண்டுவிற்கு இரு மனைவியர் என்பது அவர் அறியாத ஒன்று என்றும் இது பற்றிக்கொஞ்சம் விளக்கவேண்டும் என்றும் கேட்டிருந்தார். அது கண்ணன் வருவான் தொடரிலேயே இடம் பெறும் வகையில் எழுதிவிடுகிறேன். அதுக்குக் கொஞ்சம் நாட்கள் ஆகும். அதுக்கு முன்னால் அறுபதாம் கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி பற்றிக் கேட்டிருந்தார் கோபி. அது நடத்தச் சிறந்த கோயில் எது என்பதையும் கேட்டிருந்தார்.
நம்முடைய ஆண்டுக்கணக்கில் அறுபது ஆண்டுகள் கணக்கில் உள்ளன என்பதை அறிவோம். ஒருவர் பிறந்த ஆண்டு சுழற்சி முறையில் மீண்டும் வருவதற்கு அறுபது ஆண்டுகள் பிடிக்கின்றது. அறுபது ஆண்டுகளுக்கு முன்பு எந்த நக்ஷத்திரத்தில், எந்த திதியில் பிறந்தாரோ அந்தத் திதி, நக்ஷத்திரம் வரும் அறுபது ஆண்டுகளுக்குப் பின்னும். இந்த அறுபதாம் ஆண்டைக் கணவன், மனைவி இருவருக்கும் சேர்த்து ஒரு பெரும் விழாவாக அவர்கள் பெற்ற குழந்தைகள் சேர்ந்து எடுப்பது வழக்கமாய் இருந்து வருகிறது. இது சமூகத்தில் எந்தப் பிரிவினராய் இருந்தாலும் பொருந்தும். சிலர் வீடுகளிலேயும், சிலர் சத்திரங்கள் வாடகைக்கு எடுத்துப் பெரிய அளவிலேயும் செய்து கொள்கின்றனர். ஆனால் பெரும்பாலும் அனைவரும் சென்று அறுபதாம் கல்யாணம் நடத்திக்கொள்ளும் இடம் பழைய தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறையில் இருந்து 23 கிமீ தூரத்தில் உள்ள திருக்கடையூர் என்னும் ஸ்தலம் தான். வேறு இடங்களில் நடத்த நேர்ந்தாலும் இந்த ஊர் ஸ்வாமியையும், அம்மனையும் நினைத்தே செய்யவேண்டும் என்பதும் மரபு.
இது அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்று. அட்ட வீரட்டானம் என்பது சிவனின் எட்டு வீரத் திருவிளையாடல்களைக் குறிக்கும் இடங்கள் கோயில்களாக அமைந்தவையைக் குறிக்கும். அது பற்றிப் பின்னர் பார்க்கலாம். இந்தத் திருக்கடையூர் மட்டுமில்லாது, தஞ்சை மாவட்டத்திலேயே திருவீழிமிழலை, திருவையாறு, திருவெண்காடு, திருவைகாவூர் போன்ற தலங்களும் எம பயத்தை நீக்க வல்ல தலங்கள் ஆகும். என்றாலும் திருக்கடையூர் சிறப்புப் பெற்றது மார்க்கண்டேயனால். இந்த ஊரின் தல வரலாறும், புராண வரலாறும் பின் வருமாறு கூறப் படுகின்றது.
பிரம்மா ஞானோபதேசம் பெற விருப்பம் கொண்டு சிவனை வழிபட, சிவனால் அளிக்கப் பட்ட வில்வ விதையைப் பெற்றுக் கொள்கின்றார். அந்த வில்வ விதையை நடப்பட்ட ஒரு முஹூர்த்த காலத்திற்குள் முளைவிடவேண்டும் எனவும் சிவன் சொல்ல, முளைவிட்ட இடத்தில் தன்னை வழிபடவேண்டும் என்றும் ஆணை இடுகின்றார். பிரம்மாவும் ஒவ்வொரு இடமாய்ச் சோதித்துப் பார்த்துத் திருக்கடையூரில் முளைவிடக் கண்டார். இந்த ஊரில் வில்வமரங்கள் நிறைந்திருந்ததாகவும், அதனால் இது வில்வவனம் என்ற பெயர் பெற்றதாகவும் கூறப் படுகின்றது.
மூலஸ்தானத்தில் குடி இருக்கும் லிங்க ஸ்வரூப மூர்த்திக்கு அமிர்த கடேஸ்வரர் எனப் பெயர். இந்தப் பெயர் வந்ததின் பின்னால் சொல்லப்படும் புராணக் கதை என்னவெனில், பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்துக் கொண்டு சென்ற தேவர்கள் அதை அசுரர்களிடமிருந்து ஒளித்து வைக்க எண்ணியும், நீராட வேண்டி இருந்ததாலும், இந்தத் தலத்தில் இறக்கி வைக்கின்றனர். திரும்பி வந்து குடத்தை எடுக்க முயன்றபோது எடுக்கவராமல் குடம் லிங்கமாய் மாறி நிலைத்து நிற்க லிங்கேஸ்வரர் அன்று முதல் அமிர்தகடேஸ்வரர் எனப் பெயர் பெறுகின்றார். இந்த ஊர் அன்னையின் பெயர் அபிராமி. அபிராமி அந்தாதி இவள் பெயரிலேயே அபிராமி பட்டர் பாடினார். இவர் வீடு இருந்த இடம் இன்னமும் பாதுகாக்கப் படுகின்றது. இதைத் தவிரவும் இந்த ஊருக்குப் பல சிறப்புக்கள் உண்டு. காலனைக் காலால் உதைத்த இடம் இது தான். ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.
Tuesday, July 07, 2009
குருவின் பாதாரவிந்தங்களுக்குச் சரணம் சொல்லுவோம்!
த்யானமூலம் குரோர் மூர்த்தி= தியானத்திற்கு உகந்தது குருவின் திருவுருவம்பூஜா மூலம் குரோர் பதம் = வழிபாட்டுக்கு உகந்தது குருவின் பாதாரவிந்தங்கள்
மந்த்ரார் மூலம் குரோர் வாக்யம்=ஜபிப்பதற்கு உகந்தது குருவின் வாக்கின் மூலம் கிடைத்த போதனைகள்
மோக்ஷமூலம் குரோர் க்ருபா!!= குருவின் அருளைப் பெற்றாலோ மோக்ஷமே கிடைத்துவிடுகிறது.
இந்தப் புண்ணிய பூமி கர்ம பூமி, எனவும், ஞானபூமி எனவும் சொல்லப் படுகின்றது. இந்த பாரதத் திருநாட்டை நோக்கி ஞானகுருவான தட்சிணாமூர்த்தி ஸ்வரூபமாகத் திருக்கைலையில் ஈசன் அமர்ந்திருக்கும் கோலத்தில் கைலை தரிசனம் காணலாம். அதனாலேயே ஞானபூமி என்று சொன்னார்களோ என்னவோ? ஆனாலும் ஆதிகுரு தட்சிணாமூர்த்தி என்றாலும், அவர் உபதேசித்தது மெளனத்தின் மூலமே. மெளன குருவான அவர் பேசாத குருவாக இருப்பதால், நம்மிடம் பேசி உபதேசம் பண்ணிய ஒரே குரு, முக்கியமாய் அத்வைத வேதாந்திகளுக்கு ஸ்ரீமந்நாராயணனே ஆசார்யன் ஆவான். அவர்களின் கர்மாக்களின் மந்திரங்களின் முக்கிய இடைவெளியில், "கிருஷ்ண, கிருஷ்ண," என்றோ, "கோவிந்தா, கோவிந்தா" என்றோ அல்லது "நாராயணா, நாராயணா" என்றோ சொல்லி, செய்வதை அனைத்தையும் அவனுக்கே அர்ப்பணிப்பார்கள்.
நாராயணம், பத்மபுவம், வஸிஷ்டம்சக்திம் ச, தத்புத்ர பராசரம் ச,
வ்யாஸம், சுகம், கெளடபதம் மஹாந்தம்
கோவிந்த யோகீந்தரம்,அதாஸ்ய சிஷ்யம்!
ஸ்ரீசங்கராசார்யம், அதாஸ்ய பதம்-
பாதம் ச, ஹஸ்தாமலகம் ச சிஷ்யம்
தம் தோடகம், வார்த்திககாரம், அந்யாந்
அஸ்மத் குருந் ஸந்ததம் ஆநதோஸ்மி!
இந்த ஸ்ரீமந்நாராயணனின் பிள்ளையான பிரம்மா, பிரம்மாவின் பிள்ளை வசிஷ்டர்,
வசிஷ்டரின் மகன் சக்தி, அவர் மகனும் விஷ்ணு புராணம் எழுதியவரும் ஆன பராசரர், பராசரரின் பிள்ளை வியாசர், வியாசரின் மகன், சுகர், சுகர் பிரம்மச்சாரி. பிறந்ததில் இருந்தே பரப்பிரம்மம். இவருக்குக் கிளி மூக்கும், முகமும் வந்த கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த சுகர் திருமணம் செய்து கொள்ளாததால், இவருக்குச் சீடர் மட்டுமே உண்டு. அவர் தான் கெளடபாதர். கெளடபாதரோ, சந்யாஸி. ஆகவே இவருக்கும் சிஷ்ய பரம்பரையே வருகின்றது. இந்த சிஷ்ய பரம்பரையில் வந்தவரே கெளடபாதரின் சிஷ்யர் ஆன கோவிந்த பகவத்பாதர். கோவிந்த பகவத்பாதரின் சிஷ்யரே ஆதிசங்கரர். சங்கரருடைய நான்கு சிஷ்யர்கள் ஆன, பத்மபாதர், தோடகர், ஹஸ்தாமலகர், ஸுரேஸ்வரர் போன்றவர்கள் பற்றியும், அவர்கள் சார்ந்த மடங்கள் பற்றியும் ஓரளவு அறிவோம். இப்படிப் பார்த்தால் நம் ஆசாரியர் என்பவர் ஆதிகுருவான விஷ்ணுவின் சாட்சாத் அவதாரம் ஆன வியாசரே ஆவார். "முநீநா மப்யஹம் வ்யாஸ:" என்று கீதையில் கீதாசார்யனே சொல்லி இருக்கின்றான். மேலும் விஷ்ணு சஹஸ்ரநாமாவளியில் "வ்யாஸாய விஷ்ணு ரூபாய" "வ்யாஸ ரூபாய விஷ்ணவே" என்றும் வருகின்றது. இந்த வேத வியாஸர் அவதாரம் காரணத்துடனேயே ஏற்பட்டது. பராசர முனிவர், குறிப்பிட்ட நேரத்தில் மச்சகந்தியுடன் கூடியதன் விளைவாக ஒரு த்வீபத்தில் தோன்றியவர் வேத வியாஸர். தீவில் பிறந்ததால் அவருடைய பெயர் "த்வைபாயனர்" என்றும், கறுப்பாக இருந்தமையால், "கிருஷ்ணர்" என்றும், இரண்டையும் சேர்த்தே வேத வியாஸரை "கிருஷ்ண த்வைபாயனர்" என்றும் சொல்லுவதுண்டு. கலி தோன்றப் போகின்றது என்பதாலேயே, வேதங்களைக் காத்து அவற்றைத் தொகுத்து மக்களைச் சென்றடையவேண்டியே பகவான் எடுத்த ஒரு அவதாரமே, விஷ்ணுவின் அம்சமே வியாஸர் என்றும் சொல்லுவார்கள்.
இந்த வியாஸர் வேதங்களைத் தொகுத்தமையால், "வேத வியாஸர்" என்ற பெயர் பெற்றார். மும்மூர்த்திகளின் சொரூபமாயும் வேத வியாஸரைச் சொல்லுவதுண்டு. வியாஸரே "குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ மஹேஸ்வர:" என்றும் திரிமூர்த்திகளும் சேர்ந்தவர் என்றும் சொல்லுவது உண்டு.அதுவரையிலும் கங்குகரை இல்லாமல் இருந்த வேதங்கள் நான்காய்ப் பிரிக்கப் பட்டது வியாஸராலேயே. தம் சிஷ்யர்களில் பைலரிடம் ரிக்வேதத்தையும், வைசம்பாயனரிடம் யஜுர்வேதத்தையும், ஜைமினியிடம் சாமவேதத்தையும், ஸுமந்துவிடம் அதர்வண வேதத்தையும் உபதேசித்து, இவை பரவ வழி வகுத்துக் கொடுத்தார். இதே வியாசர் தான் புராணங்களையும் பதினெட்டாய்த் தொகுத்து அவற்றையும், மஹாபாரதத்தையும் ஸூத முனிவருக்கு உபதேசித்து அவர் மூலம் இவை பரவ வழி வகுத்தார். இந்த ஸூத முனிவர் வழியாய் வந்தவையே நம் பதினெண் புராணங்கள். இந்த ஸுத முனிவர் பிறப்பால் பிராமணர் இல்லை, தேரோட்டி மகன் என்பதும் குறிப்பிடத் தகுந்தது. பிரம்மதத்துவத்தைச் சொல்லும் பிரம்ம ஸூத்திரத்தையும் வேத வியாஸர் ஏற்படுத்தி, சுகப்பிரம்ம ரிஷிக்கு அவற்றை உபதேசித்தார்.
இந்த பிரம்ம ஸூத்திரத்துக்குப் பாஷ்யம் எழுதியவர்களிலேயே நாம் இன்றைக்கும் பின்பற்றும் ஆசாரிய பரம்பரைக்கு வழி வகுத்த சங்கரர், (அத்வைதம்)ராமானுஜர்,(விசிஷ்டாத்வைதம்) மத்வர், (த்வைதம்), ஸ்ரீகண்டாசாரியார்(சைவ சித்தாந்தம்), வல்லபாசாரியார்(கிருஷ்ண பக்தி மார்க்கம்) போன்றவற்றைத் தம் தம் நோக்கில் எழுதி இருக்கின்றார்கள். ஆகவே மூலம் என்பது ஒன்றே. இதில் நமக்கு எதைப் பிடிக்கிறதோ, அல்லது குடும்ப வழி என்று சிலருக்கு வருகின்றதோ, அல்லது இஷ்டம் என்று சிலருக்குத் தோன்றுகின்றதோ அதை எடுத்துக் கொண்டு அதன்படி பயிற்சி செய்து வருகின்றோம். ஆனால் அனைத்துக்கும் மூல காரணம் வேத வியாஸரே.அதனாலேயே குரு பூர்ணிமா என்று ஏற்பட்டு வேத வியாஸருக்கு என்று தனியாகப் பூஜை, வழிபாடுகள் செய்து வருகின்றோம். இன்னும் குடும்ப வாழ்வில் ஈடுபட்டவர்களும், திருமணம் ஆகாத பிரம்மசாரிகளும் ஒருபடி மேலே போய் ஆவணி அவிட்டத்தின்போது, பூணூல் போட்டுக் கொள்ளும் முன்னர், வேத வியாஸரைக் கும்பத்தில் ஆவாஹனம் செய்து வழிபட்டு, நைவேத்தியங்கள் செய்து, அந்தப் பிரசாதத்தை வீட்டில் உள்ள அனைவருக்கும் நினைவாய் எடுத்து வந்து கொடுத்து வியாஸரை நினைவு கூருகின்றார்கள். அதோடு அன்றைய தினம் தர்ப்பணம், ஹோமம், போன்றவையும் செய்து ஆராதிக்கின்றனர். இது முன்னர் அனைத்து வர்ணத்தினராலும் செய்யப் பட்டு வந்திருக்கின்றது, என்றாலும் இன்றும் ஒரு சில வேறு வர்ணத்தினரும் விடாமல் செய்து வருகின்றார்கள். ஆனால் சந்யாஸிகள் பூணூல் தரிப்பது இல்லை ஒரு சிலரைத் தவிர. ஆகவே அவர்கள் வியாஸரை நினைவு கூருவதற்காகவே சாதுர்மாஸ ஆரம்பத்தின்போது வியாஸ பூஜை செய்து வழிபடுகின்றார்கள்.
எப்பொழுதுமே எல்லா கர்மாக்களையும் செய்து முடித்த பின்னரும் ஒவ்வொரு முறையும் செய்த அனைத்தையுமே ஸ்ரீமந்நாராயணனுக்கே சமர்ப்பிக்கின்றோம் இவ்வாறு சொல்லி.
//காயேந வாசா, மனஸேந்த்ரியைர்வா
புத்யாத்மநாவா ப்ரக்ருதேஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம்பரஸ்மை
நாராயாணாயேதி ஸமர்ப்பயாமி//
இந்தப் பதிவும் அப்படியே, ஸ்ரீமந்நாராயணனுக்கே சமர்ப்பணம்.
டிஸ்கி: கோபி சில நேயர் விருப்பங்களைத் தெரிவித்திருக்கிறார். அவற்றில் ஒன்று இன்னும் இரண்டு நாட்களில் வரும். கோபி, இப்போ சரியா???:D
Sunday, June 28, 2009
கண்ணன் வருவான், கதை சொல்லுவான்! ராதையின் நெஞ்சமே!
ராதையுடன் உடன் வந்த லலிதாவும், விஷாகாவும் அவளை ஆஸ்வாசப் படுத்தினார்கள். அவள் மயக்கத்தைத் தெளிவித்தனர். கண் திறந்து பார்த்தாள் ராதை. கண்ணன் அந்தப் பாம்பை அடக்கிக் கொண்டிருப்பதைக் கண்டதும் "கானா, என் கானா! ஏன் இப்படி உன் உயிரை நீயே போக்கிக் கொள்கின்றாய்? உன் உயிர் எனதன்றோ? அதை நீ அறிய மாட்டாயா?" எனக் கேட்டுவிட்டு மீண்டும் மூர்ச்சையானாள் ராதை. யசோதைக்கும், நந்தனுக்கும் ராதையின் இந்தக் கோலம் சற்றும் சகிக்க முடியாத ஒன்றாய் இருந்தது. ஒரு இளம்பெண் அதுவும் வேறு ஒருவனுக்கென நிச்சயிக்கப் பட்டவள் தங்கள் பையனோடு சிநேகமாய் இருப்பதோடு, இவ்வாறு பொது இடத்தில் தன்னை மறந்து நடக்கின்றாளே? அதிலும் இவள் திருமணம் நிச்சயிக்கப் பட்டும் இன்னும் அவனுடன் திருமணம் நடக்காமல் இருப்பதையும் அவர்களால் சகிக்க முடியவில்லை. அனைவரிலும் ராதையின் சிற்றன்னையான கபிலாவிற்கு இன்னமும் ராதையின் மேல் கோபம் இருந்து வந்தது. இப்போது ராதையின் இந்த வெளிப்படையான நடத்தையால் அவள் பக்கம் இன்னும் நியாயம் கூடிவிட்டதாய் உணர்ந்தாள். ஏற்கெனவே இந்தப் பெண் ராதை பெற்றெடுத்த தாய் இல்லை எனத் தந்தையாலும், தாய்வழிப்பாட்டியாலும் மிகவும் செல்லம் கொடுத்துக் கெடுக்கப் பட்டிருக்கிறாள். இவளோட இந்த நடத்தை நம் குடும்பத்திற்கே அவமானம். இன்றைக்கு இரண்டில் ஒன்று பார்த்துடணும். இதுதான் கபிலாவின் எண்ணம்.
ஏற்கெனவேயே இந்தப் பெண் நந்தனின் மகன் கண்ணனோடு சேர்ந்து "ராஸ்"விளையாடுவதாய்க் கூறிக் கொண்டு கண்ட நேரத்திலும் ஆடுவதும், பாடுவதுமாய் இருப்பதோடு அல்லாமல், இந்த நந்தனின் பிள்ளையை என்னமோ கண்காணாத தெய்வம் போலப் பூஜிக்கின்றாளே? இது அடுக்குமா?? இப்போ நல்ல சமயம் வாய்ச்சிருக்கு. கம்சன் திரும்பிவிட்டதாயும், அவனோடு ஐயனும் வேலையில் ஒருபடி முன்னேறிக் கம்சனின் மெய்க்காப்பாளனாக ஆகி வந்திருப்பதாகவும் மதுராவில் இருந்து செய்தி வந்திருக்கிறது. இந்தப் பெண்ணை ஐயனிடம் எவ்வாறேனும் ஒப்படைத்துவிடவேண்டும். ராதையின் சகோதரர்கள் அரை மயக்க நிலையில் இன்னும் கண் திறந்து பார்க்காத ராதையைத் தூக்கிச் சென்றார்கள். அவர்கலும் உள்ளூரக் கோபத்துடனேயே இருந்ததாய் அவர்கள் முகத்தில் இருந்து தெரிந்தது. ராதையின் சிற்றன்னையோ, ராதையை வீட்டில் கொண்டு சேர்த்ததுமே, அவள் உடல்நிலையைக் கூடக் கவனிக்காமல், அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். எழுந்திருக்கக் கூடச் சக்தியற்ற நிலையில் இருந்த ராதை, கண்களில் கண்ணீரோடு அரைக்கண் திறந்து சிற்றன்னையைப் பார்த்துவிட்டு ஏதும் செய்யமுடியாத நிலையில் மீண்டும் மயக்கம் அடைந்தாள்.
இன்று இத்தனை நாள் இல்லாமல் ராதையின் தந்தை விருஷபானுவிற்கும் கோபம் தலைக்கு மேல் ஏறி இருந்தது. அனைவர் கண் முன்னாலும் இப்படி அவமானப் பட வைத்துவிட்டாளே இந்த ராதை? இனி இந்தக் கோபர்கள் முன்பாகத் தலை நிமிர்ந்து நடக்கக் கூட முடியாதே? ஐயன் வந்துவிட்டான். ஆனால் இப்போது உடனே திருமணம் நடத்தமுடியாது. அதற்கான நேரம் இப்போது இல்லை. இப்போ கடவுளரின் இரவு முடியும் மாதங்களில் இருக்கின்றோமே?? கல்யாணங்கள் செய்யமுடியாதே? இருக்கட்டும், ம்ம்ம்ம்ம்?? இன்னும் எத்தனை நாட்கள் உத்தராயணத்திற்கு??? உத்தராயணம் வந்ததும், முதல் முஹூர்த்த நாளிலேயே ஐயனிடம் இவளை ஒப்படைக்கவேண்டும். ஐயன் இன்னும் சில நாட்களில் விருந்தாவனம் வருவதாய்ச் சொல்லி இருக்கின்றான். அதுவரையிலும் இந்தப் பெண்ணைப் பாதுகாக்கவேண்டும். யாரங்கே, இனி இந்தப் பெண் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது. அதோ, அந்த அறையில் இவளை உள்ளே விட்டுப் பூட்டுங்கள். வெளியே, யாராவது ஒருவர் மாற்றி ஒருவர் காவல் இருங்கள். என்ன?? கையை எல்லாம் கட்டவேண்டாம். பூட்டினாலே போதும், இவளால் என்னை மீறி வெளியே வரமுடியாது. கானாவாம், கானா! இந்தப் பெண்ணிற்கு இருபது வயது ஆரம்பிக்கப் போகின்றது. இன்னமும் சிறுபெண் போல தன்னைவிடச் சிறுமிகளோடும், சிறுவர்களோடும் விளையாடுகின்றாள். ஆடுகிறாள். பாடுகிறாள்.இனி இவள் கானாவைப் பார்க்கவே கூடாது. ஆயிற்று, அவனுக்கும் பதினைந்து முடிந்துவிட்டதே? அதோடு அல்லாமல் அவன் நம் தலைவன் நந்தனின் ஒரே மகன். அவர்களைப் போல் பணக்காரர்களின் ஒரே மகன் நம் பெண்ணைப் போல் சாதாரண நிலையில் உள்ள பெண்ணை மறுமகளாய் ஏற்பார்களா?? இவளை உள்ளேயே பூட்டி வையுங்கள். வெளியே விடவே கூடாது. ராதை அறையில் அடைக்கப் பட்டாள். கண் திறந்து தன் நிலையைக் கவனித்த ராதைக்குக் கண்ணீர் பொங்கிப் பிரவாஹமாய் ஓடியது. தன் முழங்காலில் முகத்தைப் புதைத்துக் கொண்டு பெருங்குரலெடுத்து அழுதாள். விருஷபானுவும், கபிலாவும் அவளைப் பார்த்து, "குடும்ப கெளரவத்திற்கே உலை வைத்த உன்னை வெளியே விடமுடியாது. உனக்குச் சாப்பாடும் கொடுக்கப் போவதில்லை. இந்த அறையிலேயே அடைந்து கிட?" என்று சொல்லிவிட்டுக் கோபமாய் வெளியே சென்று அறையை நன்கு அழுந்தப் பூட்டினார்கள். வெளியே காவலும் போடப் பட்டது.
ராதையின் நெஞ்சமோ கண்ணனிடம் சென்றுவிட்டது. அவனை முதன்முதல் பார்த்தது, உரலோடு சேர்த்துக் கட்டப் பட்டிருந்தது, இரு மரங்களை அவன் வீழ்த்தியது, தன்னிடம் விருந்தாவனம் வந்து சேருவேன் எனச் சத்தியம் செய்தது. அதே போல் விருந்தாவனம் வந்தது. விருந்தாவனத்தில் அவனோடு சுற்றியது. காட்டில் கானாவோடு அலைந்தது, கானா தன்னிடம் பேசிய பேச்சுக்கள், விளையாடிய விளையாட்டுக்கள், ஹஸ்தின் முதுகில் தன்னையும் ஏற்றிக் கொண்டு கானாவும், தானும் மட்டும் காட்டை நோக்கிச் சென்றது. ஆஹா, ஹஸ்தினுக்கு மட்டும் இரு இறக்கைகள் இருந்திருந்தால்?? எவ்வளவு ஆனந்தமாய் இருக்கும்? தானும், கானாவும் ஹஸ்தின் முதுகின் மேலேயே பறந்து கொண்டே அலைந்து திரிந்து இந்தப் பூவுலகின் அனைத்து இடங்களையும் பார்த்து யாரும் வர முடியாத ஓர் இடத்தைக் கண்டு பிடித்து அங்கு கானாவும், தானும் மட்டும் சந்தோஷமாய் இருந்திருக்கலாமே?? யார் இந்த ஐயன்?? யார் வரச் சொன்னது இவனை? ஏன் நிச்சயம் செய்தனர் இவனோடு நம் திருமணத்தை? இந்த ஐயனை இன்னும் பார்த்தது கூட இல்லையே?
மனம் என்னமோ அவன் மனைவி தான் என்பதை ஒத்துக் கொள்ள மறுக்கின்றதே. இல்லை, இல்லை, நான் ஐயனுக்காகப் பிறக்கவில்லை. என் உயிர் கானா, என் ஜீவன், கானா, என் பார்வை கானா, என் மூச்சு கானா. அவன் கோபர்களின் தலைவனின் ஒரே மகனாய் இருந்தால் எனக்கு என்ன? என்னுள்ளே உறைந்து என் ஜீவசக்தியாய் இருக்கும், என் உடலில் ஓடும் ஒவ்வொரு நரம்பிலும் அவனுடைய சக்தியே பொங்கிப் பிரவாஹமாய் ஓடுவதை யார் அறிவார்கள். இல்லை, இல்லை, கானா அறிவான், அவனுக்குத் தெரியும், அவனே நான், நானே அவன், நானில்லாமல் அவனில்லை. அவனில்லாமல் நானில்லை. கானா பெரும் பணக்காரர்களான ஷூரர்களுக்குத் தலைவனாகிவிட்டால்?? யசோதா அம்மா என்னைத் தன் மறுமகளாய் ஏற்பாளா?? மாட்டாள், மாட்டாள், நான் கானாவை மணக்கவே முடியாது. ஆனால் கானா இல்லாமல் வேறொருவனை என் கணவனாய் நினைக்கக் கூட முடியவில்லையே? கானா, கானா, ராதைக்கு அன்றிரவு பூராத் தூக்கமே வரவில்லை. அன்று உணவும் கொடுக்கப் படவில்லை அவளுக்கு.
மறுநாள், பெளர்ணமி. ஒவ்வொரு பெளர்ணமிக்கும் யமுனை நதிக்கரையில் "ராஸ்" நடக்கும். அனைத்துக் கோபஸ்த்ரீகளும், கோபர்களும், சிறுவர், சிறுமிகளோடு கட்டுச்சாதம் கட்டிக் கொண்டு வந்து ராஸில் கலந்து கொள்ளுவார்கள். கண்ணன் இனிய புல்லாங்குழல் இசைப்பான். அந்த அமுதகீதம் என் காதிலும் விழுமா?? பூட்டிய இந்தக் கதவைத் தாண்டி வந்து விழுமா?? இந்த வீட்டு மனிதர்களின் பூட்டிய இதயம் திறக்குமா??? அன்று ராதைக்கு மிகக் கொஞ்சமாய் உணவு அளிக்கப் பட்டது. ஏதோ நினைவு பளிச்சிட ராதை அந்த உணவை மறுக்காமல் உண்டாள். இரவும் வந்தது. யமுனை நதிக்கரை வெண்ணிலவின் ஒளியில் ஜாஜ்வல்யமாய்ப் பிரகாசித்தது. இயற்கையாகவெண்மணல் பரப்பிய கரையில் வித, விதமாக உடை அணிந்த பெண்களும், ஆண்களும் அன்றிரவு கொண்டாட்டத்திற்குத் தங்களைத் தயார் செய்து கொண்டிருந்தனர். ராதை தவித்துக் கொண்டிருந்தாள்.
"கண்ணனிடம் எடுத்துச் சொல்லடி, சகியே,
கன்னி நான் அவன் மேல் கொண்ட காதலை" என்று மனம் தவிக்க ராதை எதையோ எதிர்பார்த்துக் காத்திருந்தாள். அப்போது கண்ணனின் புல்லாங்குழலின் இனிய கீதம் ஆரம்பித்தது. மெல்ல, மெல்ல யமுனைக் கரையைத் தாண்டி, விருந்தாவனத் தெருக்களுக்குள் நுழைந்து, ராதையின் வீட்டிற்கும் வந்து, அனைவரையும் தாண்டி, காவல் இருப்பவர்களை எல்லாம் தூங்க வைத்து ராதை பூட்டி இருக்கும் அறைக்குள்ளாக நுழைந்தது. ராதையின் இதயமோ திக், திக் என அடித்துக் கொண்டது. ஏதோ நடக்கப் போகிறது. இது என்ன கண்ணனின் புல்லாங்குழல் இசை இவ்வளவு அருகில்?? இசை அந்தப் பிராந்தியத்தையே நிரப்பியது. அனைவரும் மயங்கினர். ராதைக்கு எதிரே அந்த அறை, அவள் படுத்திருந்த கட்டில், மற்றும் அந்த வீடு எல்லாம் சுழல்வது போல் இருந்தது. அந்த இசையைக் கேட்ட அவள் மனம் பித்துப் பிடித்தது போல் அலைந்தது. சுவற்றில் தலையை முட்டிக் கொண்டு அழலாம் போலத் தவித்தாள் ராதை. "கானா, என் கானா, உன்னை நான் மீண்டும் காண்பேனா?? உன் அருகில் இருக்கும் பேறு பெறுவேனா? உன் இனிய கானத்தைக் கேட்பேனா?" என வாய்விட்டுப் புலம்பினாள்.
உடனேயே புல்லாங்குழல் இசை நின்றது. ஒரே மெளனம் சூழ்ந்தது. ராதைக்கு அந்தப் பிராந்தியமே இருட்டாகிவிட்டாற்போன்ற உணர்வு.
Wednesday, June 24, 2009
உன்னை ஒன்று கேட்பேன்! உண்மை சொல்ல வேண்டும்!
புலி வருது, புலி வருது கதையாக் கடைசியிலே புலி வந்தே விட்டது. குமரன் இந்தச் சங்கிலித் தொடருக்கு அழைத்து விட்டார். இன்னும் சிலரும் கூப்பிட்டிருக்கிறதா மெளலி சொல்றார். இப்போ வல்லி சிம்ஹன் வேறே அழைப்பு விட்டாச்சு. இதுக்கு முன்னாலே கூப்பிட்டவங்க யாருனு தெரியலை. மன்னிச்சுக்குங்க. ஏப்ரலில் இருந்தே சரியாகப் பதிவுகள் போடவோ, பதிவுகளைப் பார்க்கவோ முடியலை. அதனால் யார் கூப்பிட்டதுனு தெரியாது. பதில் கொடுக்கலைனு நினைக்காதீங்க. இந்தக் குமரன் அட, நம்மையும் மதிச்சுக் கூப்பிட்டிருக்காரேனு பார்த்தால் இல்லாததை எல்லாம் சொல்லி இருக்கார். எனக்குத் தெரியாத விஷயம் தான் அதிகம். எழுதறது எல்லாம் தெரிஞ்ச விஷயங்களே! தெரியாத விஷயங்களைத் தொடறதே இல்லை. குமரன் அதைக் கவனிக்கணும்! வல்லியோ அதுக்கும் மேலே ஒருபடி போய் ரொம்பப் புகழ்ந்திருக்காங்க. அதுக்குத் தகுதியான மாதிரியா நடந்துக்கணும். இப்போ முடிஞ்சவரைக்கும் பதில்கள்:-
1உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்கள் பெயர் பிடிக்குமா?
உண்மையான பெயர் சீதாலக்ஷ்மி தான். அப்பாவோட அம்மா பெயர்.
வீட்டில் பிறந்த அனைத்துப் பேத்திகளுக்கும் இதே பெயர் என்பதால் ஒவ்வொருத்தரையும் கூப்பிடுவது மாற்றப்பட்டது. கீதானு ஏன் கூப்பிட ஆரம்பிச்சாங்க? தெரியலை! பிடிக்குமா? என்றால் அதுவும் சொல்லத் தெரியலை. ஆனால் அப்பாவழி, அம்மாவழித்தாத்தாக்கள் சீதா என்றே கூப்பிட்டிருக்காங்க. அவங்களுக்கப்புறம் எனக்கே அந்தப் பேர் மறந்து போச்சு! :D
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
ம்ம்ம்ம்ம், அது வேண்டாமே! நேரிலே பார்த்தால் தவிர பெரும்பாலும் என்னோட சோகத்தை அதிகமாய் வெளிக்காட்டிக்காமலேயே இருந்துடுவேன். நான் எழுதறதை வச்சும், பேசறதை வச்சும் அநேகமாய் எல்லாரும் என்னோட வாழ்க்கையிலே சோகங்கள் இல்லைனு நினைக்கிறாங்க. அது அப்படியே இருக்கட்டும்.
3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
ம்ம்ம்ம் ஒரு காலத்தில் பலராலும் பாராட்டப் பட்டது. முன் மாதிரியாகக் காட்டப் பட்டது. இப்போ அப்படி இல்லை. அந்த வருத்தம் உண்டு.
4. பிடித்த மதிய உணவு என்ன?
ரசம் சாதம், சுட்ட அப்பளம், அப்பளம் சுட்டு அதிலே நெய் ஊற்றித் தொட்டுக் கொண்டு சாப்பிட வேண்டும்.
5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
பழகுவதில் தயக்கம் ஏதும் இருக்காது. நெருக்கம் என்று கேட்டால் உடனே நெருக்கம் வராது.
6. கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
கடலில் குளிச்சாலும் திரும்ப ஒரு முறை நல்ல நீரில் குளிக்கணும். ராமேஸ்வரம் கடலில் குளிச்சிருக்கேன். அருவிகளைப் பார்த்திருக்கேன். குளிச்சது இல்லை. அருவியின் மேலிருந்து நீர் விழும் வேகத்தில் குளிச்சால் மூச்சுத் திணறல் அதிகமாகும் என்பதால். :(
77. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
பொதுவாய் எல்லாரையுமே நேருக்கு நேர் கவனிச்சே பழக்கம்.
8. உங்ககிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடிச்ச விஷயம்: ஒவ்வொரு வேலைக்கும் ஒரு நேரம் வச்சுச் செய்யறது. அந்த நேரம் வேறே வேலை தவிர்க்க முடியாமல் இருந்தாலொழியச் செய்யறதில்லைனு வச்சிருக்கேன். எதையும் குறிப்பிட்ட நேரத்துக்குள் திட்டமிட்டுச் செய்வது. 11 மணிக்குச் சாப்பாடு தயாராகணும் என்றால் 10-45-க்கு முடிச்சுட்டு உட்காருவேன். வெளியே சென்றாலும் அப்படித் தான். இத்தனை மணிக்குள் திரும்புவேன் என்று சொல்லிட்டுப் போனால் சரியா அந்த நேரத்துக்குள்ளே வந்துடுவேன். அன்னிக்கு ஊர்வலம், பந்த், ஸ்டிரைக்னு எதுவும் இல்லாமல் இருக்கணும்! :(((((( ஆனால் இப்போ இணையம் அடிக்கடி கிடைக்காமலும், மற்ற வேலைகளின் தாக்கத்தாலும் இணையத்தில் இருக்கும் நேரம் கொஞ்சம் மாறிப் போயிருக்கு, சில நாட்கள் தான் இதுவும். வெளியே கிளம்பணும்னாலும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே தயாராகி உட்கார்ந்துடுவேன்.
பிடிக்காதது: ம்ம்ம்ம்ம்ம்???? அது மத்தவங்க சொன்னால் தான் சரியா இருக்கும், எனக்குத் தெரிஞ்சவரை அனைவரையும் திருப்தி செய்ய நினைப்பேன். அது முடியாதுனு தெரிஞ்சும்.
9. உங்க சரிபாதிகிட்ட உங்களுக்குப் பிடித்த பிடிக்காத விஷயம் எது?
என்னை இன்னும் ஒரு குழந்தையாகவே நடத்துவது. ஒண்ணும் தெரியலைனு சொல்லுவார். இதையும் பிடிக்காத விஷயம்னு சொல்ல முடியாது. தலைமுறை இடைவெளியால் இப்படிச் சொல்றார்னு சொல்லலாம்.
பிடிச்சதுனால் எதைச் சொல்றது? பிடிக்காமல் கல்யாணமே நடந்திருக்காதே?? அநேகமாய் இரண்டு பேரும் ஒரே அலைவரிசையில் நினைப்போம். நான் சொல்ல வாய் திறந்தால் அவர் அதையே சொல்லுவார். அல்லது அவர் சொல்ல நினைக்கிறதை நான் சொல்லிடுவேன். மற்றபடி சாதாரணக் கணவன், மனைவிக்குள்ள சண்டை, சச்சரவு எங்களுக்குள்ளும் உண்டு. என்னதான் நாலு தென்னை மரங்கள் இருந்தாலும் அதைச் சுத்தி எப்போவுமே டூயட் பாட முடியாதே?? :))))))))))
10. யார் பக்கத்துல இல்லாம இருக்கிறதுக்கு வருந்துகிறீர்கள்?
பையரும், பெண்ணும் தான். யு.எஸ்.ஸில் போய் உட்கார்ந்திருக்காங்க. அக்கம்பக்கம் எல்லார் வீட்டிலேயும் பெண்ணும், பையரும் வந்தால் இன்னும் அதிகமாய் வருத்தம் வரும்! அவங்க அவங்க வாழ்க்கை, வாழவேண்டிய இஷ்டப் படி தானே வாழணும். வாழட்டும், வாழவேண்டும் இனிமையாக. வாழ்க! வளர்க!
11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
என்ன பெரிசா?? என் கிட்டே இருக்கிறதே பச்சை, மெரூன், மஞ்சள் தான். பச்சைக்கலரு ஜிங்குசா, அரக்கு கலரு ஜிங்குசா, மஞ்சள் கலரு ஜிங்குசா னு பாடலாம். இன்னிக்கு பச்சையும் மெரூனும் கலந்த புடைவை, ரவிக்கை.
12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்கீங்க?
ஒண்ணும் பார்க்கலை. கணினியைப் பார்த்துட்டு தட்டச்சறேன், இந்தக் கேள்வி, பதிலுக்கு. காதிலே தொலைக்காட்சியிலே போட்டிருக்கிற ஹிந்தி சினிமா வசனம் விழுது.
13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வண்ணமாக உங்களுக்கு ஆசை?
பேனாவா மாறிட்டப்புறம் ஆசை எப்படி வரும்???(இது இல்லை பதில்??? யாருக்காவது தோணிச்சா?) ம்ம்ம்ம்ம்ம்??? இளநீலம். ஆகாயக் கலர்.
14. பிடித்த மணம்?
மல்லிகை மணமும், எங்க வீட்டுப் பாக்கு மரம் பூத்திருக்கும்போது வரும் பாக்குப் பூ மணமும். இளங்காலைப் பொழுதிலே மாமரத்தில் இருந்து குயில் கூவி அழைக்க, வேறே இடத்திலிருந்து அதுக்குப் பதில் வர, கொல்லைக் கிணற்றடிக்கதவைத் திறக்கும்போதே கம்மென்று வரும் பாக்குப் பூவின் மணம்!!! அம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆ!!!!!
15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
அநேகமா எல்லாரையும், எல்லாரும் கூப்பிட்டாச்சு. அதனால் நான் யாரையும் கூப்பிடலை, பாவம் எல்லாரும் என்ன வேலையிலே இருக்காங்களோ?? எதுக்குத் தொந்திரவு செய்யணும்???
6. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
குமரனும், வல்லியும் அனுப்பி இருக்காங்க. குமரனோட புல்லாகிப் பூண்டாகி ரொம்பப் பிடிச்சது. வல்லி அவங்க திருமணம் ஆன கதையை எழுதி இருந்தாங்க. அதை அடிக்கடி நினைச்சு, நினைச்சு எனக்குள்ளே சிரிச்சுப்பேன். மத்தவங்க யாருனு தெரியாததால் குறிப்பிடலை. மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்.
17. பிடித்த விளையாட்டு:
விளையாட எல்லாம் அனுமதி கிட்டியதில்லை. அதனால் அதிகம் விளையாடியது இல்லை. வீட்டில் விளையாடும் விளையாட்டுகள் அம்மாவழித் தாத்தா வீட்டில் கற்றுக் கொண்டது, செஸ், காரம்போர்டு, ட்ரேட், போன்றவை. செஸ் விளையாட்டில் கொஞ்சம் ஆசை இருந்தது. அப்புறம் அதில் முன்னேறவில்லை.
18. கண்ணாடி அணிபவரா?
கண்ணாடி பதினைந்து வருஷமாய்ப் படிக்கும்போது மட்டும் அணிகின்றேன். பவர் அதிகம் இருக்கு, ஆனாலும் சில காரணங்களால் தொடர்ந்து அணிய முடியவில்லை.
9. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
ஹிஹி, தியேட்டரில்??? அது ஆச்சு வருஷக் கணக்காய்! மத்தபடி தொலைக்காட்சியில் என்றால்,Black Wednesday?? படம் பேர் சரியா நினைவில் இல்லை, நஸ்ருதீன் ஷா நடிச்சது. தீவிரவாதம் பற்றிய ஒரு படம். அருமையான படம். அந்த முஸ்லீம் போலீஸ் அதிகாரியாய் நடிச்சது யாரு?? அற்புதமான நடிப்பு. வாழ்ந்திருக்கார். அப்புறமாய் ஒரு இத்தாலியன் படம் தற்செயலாய்க் காண நேர்ந்தது. முசோலினி காலத்தில் ஒரு யூதப் பெண்ணை மணந்து ஒரு குழந்தையும் பெற்றுக் கொண்ட ஒரு கிறிஸ்துவர் எவ்வாறு அந்தப் பெண்ணையும் விடாமல், குழந்தையையும் விடாமல் இத்தாலியில் இருந்து தப்பிக்க முயல்கின்றார் என்பது பற்றி. கண்ணில் ரத்தமே வந்துவிட்டது. அப்புறமா ஜெயா தொலைக்காட்சியில் போட்ட "குட்டி" படம். அந்தப் பெண் குட்டியாகவே வாழ்ந்திருந்தாள். எம்.என்.ராஜமும் கொடுமைக்காரப் பாட்டியாக நன்றாய் நடித்திருந்தார். மற்றபடி காமெடிப் படங்கள் மட்டுமே பிடிக்கும். சில சமயம் கதைக் களம் நன்றாக இருந்தால் இம்மாதிரிப் படங்கள் பார்ப்பதுண்டு.
20. கடைசியாகப் பார்த்த படம்?
இப்போப் பார்க்கிறது ஜங்கிள் புக், மிஸ்டர் பீன், பவன்புத்ரா ஹனுமான், ராமாயணா, டாம் அண்ட் ஜெரி தான்! நம்மளை மாதிரிக் குழந்தைங்க வேறே என்ன பார்ப்பாங்க?? சொல்லுங்க! போகோ தவிர வேறே சானலே பார்க்கிறதில்லை, போடறதே இல்லை வீட்டில்! :))))))))))))))
21. பிடித்த பருவகாலம் எது?
குளிர்காலம் தான், அதுவும் மிதமான குளிர்காலம்.
22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
துக்ளக், கல்கி, தவிர, மத்தப் புத்தகங்கள் அவ்வப்போது பதிவுகளில் எழுதத் தேடுதலுக்காகப் படிக்கிறேன். ஆழ்ந்து படிச்சுக் கொஞ்ச நாட்கள் ஆகுது. நேரம் கிடைக்கிறதில்லை. :( இன்னும் சில நாட்கள் ஆகும். நண்பர் ஒருத்தர் பரிசாய் அளித்த திருவாசகம் அவ்வப்போது பார்ப்பேன். ஆழ்ந்து படிக்க ஆரம்பிக்கலை இன்னும்.
23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அப்படி எல்லாம் மாத்தறதில்லை. ஒரே படம் தான்! பொண்ணோ, பையரோ வந்திருக்கும்போது அவங்க இஷ்டத்துக்கு மாத்திடுவாங்க! அப்போவும் அதுவே நீடிக்கும்.
24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடிச்ச சத்தம், இனிமையான சங்கீதம். சங்கீதம் கேட்டுக் கொண்டே வேலைகள் செய்யறது தான் ரொம்பப் பிடிக்கும். நான் வீட்டில் இருந்தாலே இசை கேட்டுக் கொண்டிருக்கும். ஆனால் இப்போ பக்கத்திலே வந்திருக்கும் அடுக்கு மாடிக் குடி இருப்பில் உள்ள சில வீடுகளில் மாரியம்மன் கோயில் போல பாடல்களைச் சத்தமாய் ஒலிக்க விடுவதால், என்னோட இசை கேட்கும் இன்பமே போயிடுச்சு. இது தான் பிடிக்காததும் கூட! சொல்லவும் முடியலை! என்ன செய்யறது???
25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
யு.எஸ். தான். அதிக பட்ச உயரம் என்றால் கைலை சென்றது தான்.
26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
திறமையே இல்லை, தனித் திறமைக்கு எங்கே போறது??? ஆனால் ஒரு காலத்தில் தையல் மிஷினில் எம்ப்ராய்டரி செய்வதில் தேர்ச்சி பெற்றிருந்தேன். 2003--ம் வருஷம் இனிமேல் கால்களால் மிஷினை ஓட்டித் தைக்க முடியாது என்பதால் தவிர்க்க முடியாமல் தையல் மிஷினை விற்று விட்டோம். இன்னமும் அந்த வருத்தம் உண்டு. ம்ம்ம்ம்ம்??? பையர் திடீர்னு அமெரிக்கா போய்ப் படிக்கப் போறேன்னு அறிவிப்புக் கொடுத்ததும், அவருக்காக இங்கே சென்னையில் சரத் கன்சல்டண்ட்ஸ் என்பவர்களின் ஆலோசனையில் வங்கிக் கடன் உள்பட அனைத்து வேலைகளையும் தனியே திறம்பட முடிச்சிருக்கேன். பையர் அப்போ பரோடாவிலே, கணவர் ஊட்டியிலே, பொண்ணு பாஸ்டனிலே, நான் மட்டும் இங்கே இருந்து மூன்று மாதங்கள் அலைந்து, திரிந்து எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொடுத்தேன். அனைத்துப் பேப்பர்களையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தயார் செய்து அனுப்பி வைத்ததால் பையரால் மும்பையில் விசா பேட்டிக்குச் செல்ல வசதியாக இருந்தது. முதல் பேட்டியிலேயே விசாவும் கிடைச்சது.
27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
சென்னைத் தெருக்களும், அதில் குவிந்து கிடக்கும் குப்பை மலைகளும், ஏன் இதை ஒருவருமே கண்டுக்க மாட்டேங்கறாங்கனு புரியலை. அதுவும் எங்க பக்கத்துக் குடியிருப்புக்காரங்க எங்க வீட்டுப் பக்கம் தான் குப்பை கொட்டுவோம்னு பிடிவாதம். அதை மாத்தறதுக்குள்ளே ரொம்பப் பாடுபட்டோம். ஆனால் அவங்க பக்கம் குப்பைத் தொட்டியை வழிய விடுவதால் குப்பைகள் பறந்து தெருப்பூராவும். சுத்தம் ஏன் மறுக்கப் படுகின்றது? இது தான் புரியாத விஷயம் ஆக இருக்கின்றது, சுத்தமும், சுகாதாரமும் மறுக்கப் படுவது ஏற்க முடியாத விஷயமுமாக உள்ளது. மோசமான சாலைகள். அதுவும் எங்க அம்பத்தூர் பகுதியில் ஆசியாவிலேயே அதிக வருமானம் கிட்டும் முனிசிபாலிட்டி அம்பத்தூர் முனிசிபாலிட்டி தான். ஆனால் சாலைகளும், தெருக்களுமோ???? கைலையின் மேடு, பள்ளங்கள் கூட இதன் அருகே வரமுடியாதோனு தோணுது. எப்போச் சரியாகும்??? இந்த மாதிரி அடிப்படை வசதிகள், அதுவும் அரசு முனைந்து தானாகச் செய்யவேண்டியவைக்கே கெஞ்சும் நிலைமை ஏற்பட்டிருப்பதை முற்றிலும் ஏற்கமுடியலை. நகராட்சி உறுப்பினர்களிடம் சாலை வசதிக்கும், குடிநீர் வசதிக்கும், சுகாதார வசதிக்கும் போராடிப் பார்த்தாச்சு. முடியலை!
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
நல்லதா கெட்டதா தெரியாது, வெளிப்படையாகப் பேசும் வழக்கம். இதனால் நிறையப் பிரச்னை வந்திருக்கு. என் கணவரும் இதைத் தான் என்னிடம் உள்ள குறையாச் சொல்லுவார். ஆனால் இப்போ குறைச்சிருக்கேன். என்றாலும் பொய்யும் சொல்லாமல், உண்மையும் சொல்லாமல் சமாளிக்கும்போது சில சமயம் கஷ்டமாயே இருக்கு. அநேகமாய்ச் சிரிச்சுச் சமாளிச்சுடறேன்.
29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலா தலம்?
மலையும், மலை சார்ந்த காடுகளும். குறிப்பாய் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் எல்லாப் பகுதிகளும். ஊட்டி. அரவங்காட்டிலே நாங்க இருந்த அலுவலகக் குடி இருப்பின் முற்றத்தில் மேகங்கள் தவழ்ந்து விளையாடும். சமைக்கும்போது முற்றத்தில் இறங்கின மேகங்கள் சமையலறைக்கு வந்து, "என்ன சமையல்?"னு கேட்டுட்டுப் போகும்.
30. எப்படி இருக்கணும்ன்னு ஆசை?
இப்போ இருக்கிறதே போதுமே. எத்தனை பிறவி எடுத்தாலும் இப்போ இருக்கிறாப்போல் இருந்தாலே போதுமே! More than enough!
31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?
கணவர் இல்லாமல்?? சான்ஸே இல்லை! அநேகமாய்ப் பதிவுகள் எழுதறதும், பின்னூட்டங்கள் வரது, நான் கொடுக்கும் பதில்னு எல்லாமே அவருக்குத் தெரியும். நண்பர் வட்டம் கூட அனைவரையும் அவருக்கும் நல்லாவே தெரியும். அப்படி எதுவும் செய்ய விரும்பலை. நான் இல்லாமல் எந்த முக்கியக் காரியமும் அவரும் செய்ய மாட்டார்!
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க.
இப்போ நான் வாழ்கிற வாழ்க்கையே நல்லா இருக்கு. இப்படியே இருந்தாலே போதும். எனக்கு என்ன கிடைக்கணுமோ அது கூடவும் இல்லாமல் குறையவும் இல்லாமல் தடையும் இல்லாமல் கிடைச்சுட்டு இருக்கு. இதுவே அதிகம். மற்றபடி உலகில் துன்புறும் அனைவருக்குமாய்ப் பிரார்த்திக்கிறேன். உலகில் அனைவருக்கும் நல்வாழ்க்கை கிட்டவும், அமைதியாகவும், மன நிம்மதியுடனும் வாழப் பிரார்த்திக்கிறேன். வாழ்க! வளர்க! முக்கியமாய் அனைவரும் குப்பைகள் இல்லாத, மேடு, பள்ளங்கள்(வாழ்க்கையில் ஏற்பட்டால் அது வேறே) இல்லாத நல்ல சாலைகளில், தெருக்களில் அனைத்து அடிப்படை வசதிகளோடும், முக்கியமாய்க் குடிநீர் வசதியோடும் குடி இருக்கப் பிரார்த்திக்கிறேன்.
1உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்கள் பெயர் பிடிக்குமா?
உண்மையான பெயர் சீதாலக்ஷ்மி தான். அப்பாவோட அம்மா பெயர்.
வீட்டில் பிறந்த அனைத்துப் பேத்திகளுக்கும் இதே பெயர் என்பதால் ஒவ்வொருத்தரையும் கூப்பிடுவது மாற்றப்பட்டது. கீதானு ஏன் கூப்பிட ஆரம்பிச்சாங்க? தெரியலை! பிடிக்குமா? என்றால் அதுவும் சொல்லத் தெரியலை. ஆனால் அப்பாவழி, அம்மாவழித்தாத்தாக்கள் சீதா என்றே கூப்பிட்டிருக்காங்க. அவங்களுக்கப்புறம் எனக்கே அந்தப் பேர் மறந்து போச்சு! :D
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
ம்ம்ம்ம்ம், அது வேண்டாமே! நேரிலே பார்த்தால் தவிர பெரும்பாலும் என்னோட சோகத்தை அதிகமாய் வெளிக்காட்டிக்காமலேயே இருந்துடுவேன். நான் எழுதறதை வச்சும், பேசறதை வச்சும் அநேகமாய் எல்லாரும் என்னோட வாழ்க்கையிலே சோகங்கள் இல்லைனு நினைக்கிறாங்க. அது அப்படியே இருக்கட்டும்.
3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
ம்ம்ம்ம் ஒரு காலத்தில் பலராலும் பாராட்டப் பட்டது. முன் மாதிரியாகக் காட்டப் பட்டது. இப்போ அப்படி இல்லை. அந்த வருத்தம் உண்டு.
4. பிடித்த மதிய உணவு என்ன?
ரசம் சாதம், சுட்ட அப்பளம், அப்பளம் சுட்டு அதிலே நெய் ஊற்றித் தொட்டுக் கொண்டு சாப்பிட வேண்டும்.
5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
பழகுவதில் தயக்கம் ஏதும் இருக்காது. நெருக்கம் என்று கேட்டால் உடனே நெருக்கம் வராது.
6. கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
கடலில் குளிச்சாலும் திரும்ப ஒரு முறை நல்ல நீரில் குளிக்கணும். ராமேஸ்வரம் கடலில் குளிச்சிருக்கேன். அருவிகளைப் பார்த்திருக்கேன். குளிச்சது இல்லை. அருவியின் மேலிருந்து நீர் விழும் வேகத்தில் குளிச்சால் மூச்சுத் திணறல் அதிகமாகும் என்பதால். :(
77. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
பொதுவாய் எல்லாரையுமே நேருக்கு நேர் கவனிச்சே பழக்கம்.
8. உங்ககிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடிச்ச விஷயம்: ஒவ்வொரு வேலைக்கும் ஒரு நேரம் வச்சுச் செய்யறது. அந்த நேரம் வேறே வேலை தவிர்க்க முடியாமல் இருந்தாலொழியச் செய்யறதில்லைனு வச்சிருக்கேன். எதையும் குறிப்பிட்ட நேரத்துக்குள் திட்டமிட்டுச் செய்வது. 11 மணிக்குச் சாப்பாடு தயாராகணும் என்றால் 10-45-க்கு முடிச்சுட்டு உட்காருவேன். வெளியே சென்றாலும் அப்படித் தான். இத்தனை மணிக்குள் திரும்புவேன் என்று சொல்லிட்டுப் போனால் சரியா அந்த நேரத்துக்குள்ளே வந்துடுவேன். அன்னிக்கு ஊர்வலம், பந்த், ஸ்டிரைக்னு எதுவும் இல்லாமல் இருக்கணும்! :(((((( ஆனால் இப்போ இணையம் அடிக்கடி கிடைக்காமலும், மற்ற வேலைகளின் தாக்கத்தாலும் இணையத்தில் இருக்கும் நேரம் கொஞ்சம் மாறிப் போயிருக்கு, சில நாட்கள் தான் இதுவும். வெளியே கிளம்பணும்னாலும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே தயாராகி உட்கார்ந்துடுவேன்.
பிடிக்காதது: ம்ம்ம்ம்ம்ம்???? அது மத்தவங்க சொன்னால் தான் சரியா இருக்கும், எனக்குத் தெரிஞ்சவரை அனைவரையும் திருப்தி செய்ய நினைப்பேன். அது முடியாதுனு தெரிஞ்சும்.
9. உங்க சரிபாதிகிட்ட உங்களுக்குப் பிடித்த பிடிக்காத விஷயம் எது?
என்னை இன்னும் ஒரு குழந்தையாகவே நடத்துவது. ஒண்ணும் தெரியலைனு சொல்லுவார். இதையும் பிடிக்காத விஷயம்னு சொல்ல முடியாது. தலைமுறை இடைவெளியால் இப்படிச் சொல்றார்னு சொல்லலாம்.
பிடிச்சதுனால் எதைச் சொல்றது? பிடிக்காமல் கல்யாணமே நடந்திருக்காதே?? அநேகமாய் இரண்டு பேரும் ஒரே அலைவரிசையில் நினைப்போம். நான் சொல்ல வாய் திறந்தால் அவர் அதையே சொல்லுவார். அல்லது அவர் சொல்ல நினைக்கிறதை நான் சொல்லிடுவேன். மற்றபடி சாதாரணக் கணவன், மனைவிக்குள்ள சண்டை, சச்சரவு எங்களுக்குள்ளும் உண்டு. என்னதான் நாலு தென்னை மரங்கள் இருந்தாலும் அதைச் சுத்தி எப்போவுமே டூயட் பாட முடியாதே?? :))))))))))
10. யார் பக்கத்துல இல்லாம இருக்கிறதுக்கு வருந்துகிறீர்கள்?
பையரும், பெண்ணும் தான். யு.எஸ்.ஸில் போய் உட்கார்ந்திருக்காங்க. அக்கம்பக்கம் எல்லார் வீட்டிலேயும் பெண்ணும், பையரும் வந்தால் இன்னும் அதிகமாய் வருத்தம் வரும்! அவங்க அவங்க வாழ்க்கை, வாழவேண்டிய இஷ்டப் படி தானே வாழணும். வாழட்டும், வாழவேண்டும் இனிமையாக. வாழ்க! வளர்க!
11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
என்ன பெரிசா?? என் கிட்டே இருக்கிறதே பச்சை, மெரூன், மஞ்சள் தான். பச்சைக்கலரு ஜிங்குசா, அரக்கு கலரு ஜிங்குசா, மஞ்சள் கலரு ஜிங்குசா னு பாடலாம். இன்னிக்கு பச்சையும் மெரூனும் கலந்த புடைவை, ரவிக்கை.
12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்கீங்க?
ஒண்ணும் பார்க்கலை. கணினியைப் பார்த்துட்டு தட்டச்சறேன், இந்தக் கேள்வி, பதிலுக்கு. காதிலே தொலைக்காட்சியிலே போட்டிருக்கிற ஹிந்தி சினிமா வசனம் விழுது.
13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வண்ணமாக உங்களுக்கு ஆசை?
பேனாவா மாறிட்டப்புறம் ஆசை எப்படி வரும்???(இது இல்லை பதில்??? யாருக்காவது தோணிச்சா?) ம்ம்ம்ம்ம்ம்??? இளநீலம். ஆகாயக் கலர்.
14. பிடித்த மணம்?
மல்லிகை மணமும், எங்க வீட்டுப் பாக்கு மரம் பூத்திருக்கும்போது வரும் பாக்குப் பூ மணமும். இளங்காலைப் பொழுதிலே மாமரத்தில் இருந்து குயில் கூவி அழைக்க, வேறே இடத்திலிருந்து அதுக்குப் பதில் வர, கொல்லைக் கிணற்றடிக்கதவைத் திறக்கும்போதே கம்மென்று வரும் பாக்குப் பூவின் மணம்!!! அம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆ!!!!!
15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
அநேகமா எல்லாரையும், எல்லாரும் கூப்பிட்டாச்சு. அதனால் நான் யாரையும் கூப்பிடலை, பாவம் எல்லாரும் என்ன வேலையிலே இருக்காங்களோ?? எதுக்குத் தொந்திரவு செய்யணும்???
6. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
குமரனும், வல்லியும் அனுப்பி இருக்காங்க. குமரனோட புல்லாகிப் பூண்டாகி ரொம்பப் பிடிச்சது. வல்லி அவங்க திருமணம் ஆன கதையை எழுதி இருந்தாங்க. அதை அடிக்கடி நினைச்சு, நினைச்சு எனக்குள்ளே சிரிச்சுப்பேன். மத்தவங்க யாருனு தெரியாததால் குறிப்பிடலை. மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்.
17. பிடித்த விளையாட்டு:
விளையாட எல்லாம் அனுமதி கிட்டியதில்லை. அதனால் அதிகம் விளையாடியது இல்லை. வீட்டில் விளையாடும் விளையாட்டுகள் அம்மாவழித் தாத்தா வீட்டில் கற்றுக் கொண்டது, செஸ், காரம்போர்டு, ட்ரேட், போன்றவை. செஸ் விளையாட்டில் கொஞ்சம் ஆசை இருந்தது. அப்புறம் அதில் முன்னேறவில்லை.
18. கண்ணாடி அணிபவரா?
கண்ணாடி பதினைந்து வருஷமாய்ப் படிக்கும்போது மட்டும் அணிகின்றேன். பவர் அதிகம் இருக்கு, ஆனாலும் சில காரணங்களால் தொடர்ந்து அணிய முடியவில்லை.
9. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
ஹிஹி, தியேட்டரில்??? அது ஆச்சு வருஷக் கணக்காய்! மத்தபடி தொலைக்காட்சியில் என்றால்,Black Wednesday?? படம் பேர் சரியா நினைவில் இல்லை, நஸ்ருதீன் ஷா நடிச்சது. தீவிரவாதம் பற்றிய ஒரு படம். அருமையான படம். அந்த முஸ்லீம் போலீஸ் அதிகாரியாய் நடிச்சது யாரு?? அற்புதமான நடிப்பு. வாழ்ந்திருக்கார். அப்புறமாய் ஒரு இத்தாலியன் படம் தற்செயலாய்க் காண நேர்ந்தது. முசோலினி காலத்தில் ஒரு யூதப் பெண்ணை மணந்து ஒரு குழந்தையும் பெற்றுக் கொண்ட ஒரு கிறிஸ்துவர் எவ்வாறு அந்தப் பெண்ணையும் விடாமல், குழந்தையையும் விடாமல் இத்தாலியில் இருந்து தப்பிக்க முயல்கின்றார் என்பது பற்றி. கண்ணில் ரத்தமே வந்துவிட்டது. அப்புறமா ஜெயா தொலைக்காட்சியில் போட்ட "குட்டி" படம். அந்தப் பெண் குட்டியாகவே வாழ்ந்திருந்தாள். எம்.என்.ராஜமும் கொடுமைக்காரப் பாட்டியாக நன்றாய் நடித்திருந்தார். மற்றபடி காமெடிப் படங்கள் மட்டுமே பிடிக்கும். சில சமயம் கதைக் களம் நன்றாக இருந்தால் இம்மாதிரிப் படங்கள் பார்ப்பதுண்டு.
20. கடைசியாகப் பார்த்த படம்?
இப்போப் பார்க்கிறது ஜங்கிள் புக், மிஸ்டர் பீன், பவன்புத்ரா ஹனுமான், ராமாயணா, டாம் அண்ட் ஜெரி தான்! நம்மளை மாதிரிக் குழந்தைங்க வேறே என்ன பார்ப்பாங்க?? சொல்லுங்க! போகோ தவிர வேறே சானலே பார்க்கிறதில்லை, போடறதே இல்லை வீட்டில்! :))))))))))))))
21. பிடித்த பருவகாலம் எது?
குளிர்காலம் தான், அதுவும் மிதமான குளிர்காலம்.
22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
துக்ளக், கல்கி, தவிர, மத்தப் புத்தகங்கள் அவ்வப்போது பதிவுகளில் எழுதத் தேடுதலுக்காகப் படிக்கிறேன். ஆழ்ந்து படிச்சுக் கொஞ்ச நாட்கள் ஆகுது. நேரம் கிடைக்கிறதில்லை. :( இன்னும் சில நாட்கள் ஆகும். நண்பர் ஒருத்தர் பரிசாய் அளித்த திருவாசகம் அவ்வப்போது பார்ப்பேன். ஆழ்ந்து படிக்க ஆரம்பிக்கலை இன்னும்.
23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அப்படி எல்லாம் மாத்தறதில்லை. ஒரே படம் தான்! பொண்ணோ, பையரோ வந்திருக்கும்போது அவங்க இஷ்டத்துக்கு மாத்திடுவாங்க! அப்போவும் அதுவே நீடிக்கும்.
24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடிச்ச சத்தம், இனிமையான சங்கீதம். சங்கீதம் கேட்டுக் கொண்டே வேலைகள் செய்யறது தான் ரொம்பப் பிடிக்கும். நான் வீட்டில் இருந்தாலே இசை கேட்டுக் கொண்டிருக்கும். ஆனால் இப்போ பக்கத்திலே வந்திருக்கும் அடுக்கு மாடிக் குடி இருப்பில் உள்ள சில வீடுகளில் மாரியம்மன் கோயில் போல பாடல்களைச் சத்தமாய் ஒலிக்க விடுவதால், என்னோட இசை கேட்கும் இன்பமே போயிடுச்சு. இது தான் பிடிக்காததும் கூட! சொல்லவும் முடியலை! என்ன செய்யறது???
25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
யு.எஸ். தான். அதிக பட்ச உயரம் என்றால் கைலை சென்றது தான்.
26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
திறமையே இல்லை, தனித் திறமைக்கு எங்கே போறது??? ஆனால் ஒரு காலத்தில் தையல் மிஷினில் எம்ப்ராய்டரி செய்வதில் தேர்ச்சி பெற்றிருந்தேன். 2003--ம் வருஷம் இனிமேல் கால்களால் மிஷினை ஓட்டித் தைக்க முடியாது என்பதால் தவிர்க்க முடியாமல் தையல் மிஷினை விற்று விட்டோம். இன்னமும் அந்த வருத்தம் உண்டு. ம்ம்ம்ம்ம்??? பையர் திடீர்னு அமெரிக்கா போய்ப் படிக்கப் போறேன்னு அறிவிப்புக் கொடுத்ததும், அவருக்காக இங்கே சென்னையில் சரத் கன்சல்டண்ட்ஸ் என்பவர்களின் ஆலோசனையில் வங்கிக் கடன் உள்பட அனைத்து வேலைகளையும் தனியே திறம்பட முடிச்சிருக்கேன். பையர் அப்போ பரோடாவிலே, கணவர் ஊட்டியிலே, பொண்ணு பாஸ்டனிலே, நான் மட்டும் இங்கே இருந்து மூன்று மாதங்கள் அலைந்து, திரிந்து எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொடுத்தேன். அனைத்துப் பேப்பர்களையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தயார் செய்து அனுப்பி வைத்ததால் பையரால் மும்பையில் விசா பேட்டிக்குச் செல்ல வசதியாக இருந்தது. முதல் பேட்டியிலேயே விசாவும் கிடைச்சது.
27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
சென்னைத் தெருக்களும், அதில் குவிந்து கிடக்கும் குப்பை மலைகளும், ஏன் இதை ஒருவருமே கண்டுக்க மாட்டேங்கறாங்கனு புரியலை. அதுவும் எங்க பக்கத்துக் குடியிருப்புக்காரங்க எங்க வீட்டுப் பக்கம் தான் குப்பை கொட்டுவோம்னு பிடிவாதம். அதை மாத்தறதுக்குள்ளே ரொம்பப் பாடுபட்டோம். ஆனால் அவங்க பக்கம் குப்பைத் தொட்டியை வழிய விடுவதால் குப்பைகள் பறந்து தெருப்பூராவும். சுத்தம் ஏன் மறுக்கப் படுகின்றது? இது தான் புரியாத விஷயம் ஆக இருக்கின்றது, சுத்தமும், சுகாதாரமும் மறுக்கப் படுவது ஏற்க முடியாத விஷயமுமாக உள்ளது. மோசமான சாலைகள். அதுவும் எங்க அம்பத்தூர் பகுதியில் ஆசியாவிலேயே அதிக வருமானம் கிட்டும் முனிசிபாலிட்டி அம்பத்தூர் முனிசிபாலிட்டி தான். ஆனால் சாலைகளும், தெருக்களுமோ???? கைலையின் மேடு, பள்ளங்கள் கூட இதன் அருகே வரமுடியாதோனு தோணுது. எப்போச் சரியாகும்??? இந்த மாதிரி அடிப்படை வசதிகள், அதுவும் அரசு முனைந்து தானாகச் செய்யவேண்டியவைக்கே கெஞ்சும் நிலைமை ஏற்பட்டிருப்பதை முற்றிலும் ஏற்கமுடியலை. நகராட்சி உறுப்பினர்களிடம் சாலை வசதிக்கும், குடிநீர் வசதிக்கும், சுகாதார வசதிக்கும் போராடிப் பார்த்தாச்சு. முடியலை!
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
நல்லதா கெட்டதா தெரியாது, வெளிப்படையாகப் பேசும் வழக்கம். இதனால் நிறையப் பிரச்னை வந்திருக்கு. என் கணவரும் இதைத் தான் என்னிடம் உள்ள குறையாச் சொல்லுவார். ஆனால் இப்போ குறைச்சிருக்கேன். என்றாலும் பொய்யும் சொல்லாமல், உண்மையும் சொல்லாமல் சமாளிக்கும்போது சில சமயம் கஷ்டமாயே இருக்கு. அநேகமாய்ச் சிரிச்சுச் சமாளிச்சுடறேன்.
29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலா தலம்?
மலையும், மலை சார்ந்த காடுகளும். குறிப்பாய் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் எல்லாப் பகுதிகளும். ஊட்டி. அரவங்காட்டிலே நாங்க இருந்த அலுவலகக் குடி இருப்பின் முற்றத்தில் மேகங்கள் தவழ்ந்து விளையாடும். சமைக்கும்போது முற்றத்தில் இறங்கின மேகங்கள் சமையலறைக்கு வந்து, "என்ன சமையல்?"னு கேட்டுட்டுப் போகும்.
30. எப்படி இருக்கணும்ன்னு ஆசை?
இப்போ இருக்கிறதே போதுமே. எத்தனை பிறவி எடுத்தாலும் இப்போ இருக்கிறாப்போல் இருந்தாலே போதுமே! More than enough!
31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?
கணவர் இல்லாமல்?? சான்ஸே இல்லை! அநேகமாய்ப் பதிவுகள் எழுதறதும், பின்னூட்டங்கள் வரது, நான் கொடுக்கும் பதில்னு எல்லாமே அவருக்குத் தெரியும். நண்பர் வட்டம் கூட அனைவரையும் அவருக்கும் நல்லாவே தெரியும். அப்படி எதுவும் செய்ய விரும்பலை. நான் இல்லாமல் எந்த முக்கியக் காரியமும் அவரும் செய்ய மாட்டார்!
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க.
இப்போ நான் வாழ்கிற வாழ்க்கையே நல்லா இருக்கு. இப்படியே இருந்தாலே போதும். எனக்கு என்ன கிடைக்கணுமோ அது கூடவும் இல்லாமல் குறையவும் இல்லாமல் தடையும் இல்லாமல் கிடைச்சுட்டு இருக்கு. இதுவே அதிகம். மற்றபடி உலகில் துன்புறும் அனைவருக்குமாய்ப் பிரார்த்திக்கிறேன். உலகில் அனைவருக்கும் நல்வாழ்க்கை கிட்டவும், அமைதியாகவும், மன நிம்மதியுடனும் வாழப் பிரார்த்திக்கிறேன். வாழ்க! வளர்க! முக்கியமாய் அனைவரும் குப்பைகள் இல்லாத, மேடு, பள்ளங்கள்(வாழ்க்கையில் ஏற்பட்டால் அது வேறே) இல்லாத நல்ல சாலைகளில், தெருக்களில் அனைத்து அடிப்படை வசதிகளோடும், முக்கியமாய்க் குடிநீர் வசதியோடும் குடி இருக்கப் பிரார்த்திக்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)


