தில்லைக்கும் மூத்த தலமாகத் திருவாரூரைக் குறிப்பிடுவதுண்டு. ஆகையால் கோயில் என அழைக்கப்படும் சிதம்பரத்தில் சொல்லும் “திருச்சிற்றம்பலம்” என்னும் வாழ்த்தை இங்கே “ஆருரா! தியாகேசா!” என்று சொல்கிறார்கள். இதைப் பெரிய கோயில் என்றும் சொல்லுவார்கள். ஏழு கோபுரங்கள் நம் உடலின் ஏழு ஆதாரங்களையும் குறிப்பிடுவதாய்ச் சொல்லுவார்கள். நாம் முன்னர் பார்த்த தேவாசிரிய மண்டபத்தின் தூண்கள் அனைத்துமே அடியார்கள் என்பதையும் கண்டோம். இந்த தேவாசிரிய மண்டபத்தை ராஜதானி மண்டபம் என்றும் அழைப்பதாகத் தெரியவருகிறது. வடகிழக்கில் ஆன்ம சக்தி கூடுவதை யோகசக்தி என்பார்கள். ஆகவே அதை விளக்கும் வண்ணம் இங்கே வடகிழக்குப் பகுதியில் அமைந்த மேடையுடன் காணப்படுவதாயும் சொல்கின்றனர்.
திருவாரூர்த் தேரான ஆழித்தேரில் எழுந்தருளும் தியாகேசரை விழா முடிந்ததும் இந்த மண்டபத்தில் எழுந்தருளப் பண்ணி மஹாபிஷேஹம் செய்வித்து செங்கோலும் அளிப்பார்களாம். நம்மை எல்லாம் ஆளும் அரசன் அல்லவோ? பக்தர்களுக்காகக் கொடிய விஷத்தை உண்டும், பிரதோஷ காலத்தில் அந்த விஷத்தின் கொடுமை தன்னை மட்டுமில்லாமல் உலகவாசிகளையும் பாதிக்கா வண்ணம் ஆடிய ஆட்டம் தான் என்ன?? ஆகவே இங்கே தினமும் நித்யப் பிரதோஷம், மாலையில் நடைபெறும். அப்போது தேவாதிதேவர்கள் எல்லாம் வந்து ஈசனை வணங்கிச் செல்வதாகவும் ஐதீகம். மணிவாசகப் பெருமானின் திருவாசகத்தில் ஈசனின் தச அங்கங்கள் குறிப்பிடப் பட்டிருக்கும். இங்கே தியாகேசனுக்கோ தனியாக தச அங்கங்கள் உண்டு.
அவையாவன
1. பெயர் ஆரூரன் 2. நாடு அகளங்க நாடு 3. ஊர் ஆரூர் 4. ஆறு ஆனந்தம் 5. மலை அருள்மலை 6. படை வீரகட்கம் 7. பறை பஞ்சமுக முரசு 8. மாலை செங்கழுநீர் 9. கொடி தியாகக் கொடி 10. குதிரை வேதம் ஆகியன தியாகேசருக்கு என உள்ள தனியான தச அங்கங்கள் ஆகும்.
இதைத் தவிர அங்கப் பொருட்கள் பதினாறு விதமாகும். அவையாவன. மணித்தண்டு, தியாகக்கொடி ரத்தின சிம்மாசனம் செங்கழுநீர் மாலை வீரகண்டயம் அஜபா நடனம் ஐராவணம் அரதன சிருங்கம் பஞ்சமுக வாத்தியம் பாரி நாகஸ்வரம் சுத்த மத்தளம் குதிரை வேதம் சோழ நாடு ஆரூர் காவிரி, பதினெண்வகைப் பண்கள் ஆகியவை பதினாறு விதமான அங்கப் பொருட்கள்.
தியாகேசரின் சந்நிதியில் திருச்சாலகம் என்னும் தென்றல் தவழும் சாளரம் உள்ளது. மாலை நேர வழிபாட்டின் போது பதினெட்டு வகை இசைக்கருவிகள் இசைக்கப்பட்டு வந்திருக்கின்றன.
படத்துக்கு நன்றி கூகிளார்
மீண்டும் தேவாசிரிய மண்டபத்தில் உள்ள ஓவியங்களைப் பார்க்கலாமா? இவை நாயக்கர் காலத்து ஓவியங்கள் எனப்படுகிறது. ஆரூரின் தலவரலாறு சித்திரிக்கப் பட்டுள்ளது. ஆனால் சரியாகப் பார்க்கமுடியவில்லை. கோயிலின் மத்தியான வழிபாடு முடிந்து கோயில் நடை மூடும் நேரம். ஆகவே ஒரே அவசரம். இங்கே ஓவியனின் கையெழுத்து இருப்பதாகவும் சொல்லப் படுகிறது. இன்னொரு முறை போனால் நிதானமாய்ப் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தோடு மேலே சென்றோம்.
மேலே சொல்லி இருப்பவை எல்லாம் 2010 ஆம் ஆண்டில் சென்றபோது நடந்தவை. இப்போது இங்கெல்லாம் போகவே இல்லை. ஆனால் காலையில் சென்றபோது நவகிரஹங்களையும் தரிசனம் செய்து கொண்டோம். பின்னர் ரங்க்ஸ் போனப்போ நவகிரஹங்களுக்கும் அபிஷேஹ ஆராதனைகளும் குருக்கள் செய்து கொடுத்திருந்தார் ரங்க்ஸ் அபிஷேஹம் முடிந்து ஓட்டலில் போய்த் தயிர்சாதம் பாக்கெட் வாங்கிக் கொண்டு நாங்க தங்கி இருந்த அறைக்கு வந்ததும் சிறிது நேரத்தில் குருக்களும் வந்தார். அதற்குள்ளாக நான் ரங்க்ஸிடம் எனக்குச் சாப்பாடு வேண்டாம் எனவும் வயிறு தொந்திரவையும் சொல்லிவிட்டு மருந்துக்கடை ஏதேனும் ஒன்றில் மாத்திரை வாங்கிக் கொண்டு அதைச் சாப்பிட்டுவிட்டுத் தான் போகணும் என்றும் சொன்னேன். அவருக்கும் சாப்பாடு வேண்டாம் எனவும் நவகிரஹ சந்நிதியில் குருக்கள் எள், சாதம், எலுமிச்சைச் சாதம் இன்னும் என்னவோ எல்லாம் கொடுத்துவிட்டார் என்பதால் பசி இல்லை என்றார்.
குருக்கள் வந்ததும் நாங்க கேட்டிருந்த படி புளியோதரை, தயிர்சாதம் (இது மட்டும் கொஞ்சம் நிறைய) சர்க்கரைப் பொங்கல் நாங்க கொண்டு போயிருந்த பாத்திரங்களில் போட்டு எடுத்து வந்தார். அபிஷேஹப் பிரசாதங்களான தீர்த்தம், மாலை, மற்றும் விபூதி, குங்குமப் பிரசாதம் ஆகியவற்றைக் கொடுத்துவிட்டு அடுத்த மாதத்திற்கான கட்டளையை எப்படிச் செய்வது என்பது பற்றியும் பேசி முடிவு செய்து கொண்டோம். ஒவ்வொரு மாதமும் எங்களால் வாமுடியாது என்பதால் இணையம் மூலம் அபிஷேஹ ஆராதனைகளுக்குப் பணம் அனுப்புவது என முடிவு செய்து கொண்டோம். பின்னர் அங்கிருந்து கிளம்பினோம். எதிரேயே ஒரு மருந்துக்கடை இருந்தும் அது மூடி விட்டார்கள் என்பதால் சற்று தூரம் போய் இன்னொரு மருந்துக்கடையில் போய் ஆவோமின் மாத்திரை வாங்கி வரச் சொன்னேன். வண்டி ஓட்டுநர் இறங்கிப் போய்க் கேட்டுவிட்டு ஆவோமின் இல்லை என்பதால் இன்னொன்று அதன் திறனே கொண்டது என்று கொண்டு காட்டினார். அதை வாங்கிப் பார்த்துவிட்டுச் சரி என நான்கு மாத்திரைகள் வாங்கி வரும்படி சொன்னேன். வந்ததும் அரை டம்பளர் தண்ணீரில் (அதிகம் சாப்பிடப் பயம்) அந்த மாத்திரையைச் சாப்பிட்டேன். சுமார் அரைமணி நேரத்தில் வயிற்றின் அரட்டல், உருட்டல், புரட்டல் கொஞ்சம் கொஞ்சமாகச் சரியாக ஆரம்பித்தது.
சுமார் ஒரு மணிக்குத் திருவாரூரில் இருந்து கிளம்பினோம். வழியில் எங்கும் நிற்காமல் பயணித்துச் சுமார் நாலரைக்கு வீடு வந்து சேர்ந்தோம். வீட்டுக்கு வந்ததும் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டுவிட்டுப் பிரசாதங்களை அக்கம்பக்கம் விநியோகித்துவிட்டுக் கீழே பாதுகாப்புப் பணியாளர்களுக்கும் கொடுத்தோம். இருந்த தயிர் சாதத்தை இருவருமாக இரவில் பங்கிட்டுக் கொண்டு சாப்பிட்டோம். இரண்டு நாளானது வயிறு ஓய்ந்து அமைதி பெறுவதற்கு. அதுக்கப்புறமா திடீர்ப் பயணமாகச் சென்னைக்கும் இந்த ஜூன் மாதம் 2 ஆம் தேதி கிளம்பிப் போய்ட்டு 3 ஆம் தேதி திரும்பினோம்.