எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, October 31, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், - திரிவக்கரையா இவள்???

திரிவக்கரை செல்லும்போதே மக்கள் கூட்டம் கூட்டமாக முக்கியக் கடைத்தெரு இருக்கும் தெருவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை கண்டாள். இளைஞர்கள் அனைவரும் ஏதோ பரபரப்பிலும், அவசரத்திலும் வேகமாய்ச் சென்றனர். சாதாரணமாய் இப்படிக் கூட்டம் இருக்குமிடம் செல்ல நேர்ந்தால் திரிவக்கரையைப் பார்த்து அனைவரும் கேலி பேசிச் சிரிப்பார்கள். இன்று அவளைக் கவனிக்க யாருக்கும் நேரமில்லை. திரிவக்கரைக்கே ஆச்சரியமாய் இருந்தது. என்ன ஆச்சு எல்லாருக்கும்? அவளுக்கும் அந்தக் கடைத்தெருவுக்கே போய்ப் பார்க்கும் ஆவல் மேலிட்டது. கூட்டத்தைத் தொடர்ந்து சென்றாள் திரிவக்கரை. ஒரு பெரிய மக்கள் கூட்டம் அரண்மனையின் துணிகளுக்கு அவ்வப்போது புத்தம்புதியதாய்ச் சாயம் தோய்த்துக் கொடுப்பவனின் கடை ஒன்றுக்கு முன்னால் நின்றிருந்தது. கம்சனுக்கு மட்டுமில்லாமல், அரண்மனைவாசிகள் அனைவரின் துணிகளும் என்றும் புத்தம்புதியதாய் விளங்கச் செய்வதே அவனுக்குத் தொழில். எல்லாரும் இங்கே கூடி நின்று எதை அல்லது யாரைப் பார்க்கின்றனர்? திரிவக்கரையில் ஆவல் கூடியது. கூனிப் போன முதுகை மெல்ல நிமிர்த்தினாள். தினம் தினம் செய்யும் பயிற்சியினால் ஓரளவுக்கே அவளால் முடிந்தது. கூட்டத்தின் முன்னால் என்ன நடக்கிறது என்பதை அறிய முடியவில்லை. முண்டி அடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள். கூட்டத்தினர் அவளைக் கண்டு விட்டு, “ஆஹா, இந்தக் கூனி இங்கே எங்கே வந்தாள்? எல்லாம் கிடக்க இவளுக்கு அவசரத்தைப் பாரேன்!” எனக் கேலி செய்தனர். சிலர் திட்டவும் செய்தனர். எதையும் கண்டு கொள்ளாமல் கூட்டத்தில் முன்னேறினாள் திரிவக்கரை.

கடையை நெருங்கும்போது அவள் காதில் விழுந்த சம்பாஷணைகள்! ஆஹா, இது என்ன? யார் இவங்க? சிறு பையன்களாய் இருக்கின்றனரே? அவங்க பேச்சிலிருந்து புதிய துணிகளை வாங்க வந்திருப்பது புரிகிறது. அது பற்றியே கடைக்காரனிடம் பேசுகின்றனர். அந்த சம்பாஷணைதான் காதில் விழுந்தது. ஆனால் இது என்ன??? இந்தக் கடைக்காரன் ஏன் கொடுக்க மறுக்கின்றான்? மாறாக இந்தப் பையன்களைத் திட்டுகிறானா என்ன? ஆம், அப்படித் தான் தெரியுது. “ பட்டிக்காட்டான்களா, துணி வாங்கவா வந்தீங்க? அதுவும் என் கடையிலே? என் கடை அரண்மனை வாசிகளுக்கு மட்டுமே துணிகள் விற்குமிடம். உங்களை மாதிரி ஒன்றுமில்லாதவங்களுக்குத் துணி எல்லாம் கொடுக்கிறதுக்கில்லை.” வெறும் பேச்சோடு நிறுத்திக் கொள்ளாமல் கையையும் ஓங்கினான் கடைக்காரன். அதுவும், அந்த நீல நிறப் பையன், என்ன நீல நிறப் பையனா? எங்கேயோ சொல்லி இருக்காங்களே இவன் நிறத்தைப் பத்தி? ம்ம்ம்? ஆஹா, அடிக்கப் போகிறானே அந்தப் பையனை. இதோ, பையன் மேல் அடி விழ……… இது என்ன? அந்தப் பையன் சமயத்துக்குச் சட்டுனு நகர்ந்துட்டான். அதோடு இந்தக் கடைக்காரனைத் திரும்ப அடிக்கிறானே? ஆஹா, பையன் கொடுத்த ஒரே அடியில் கடைக்காரன் கீழே விழுந்துட்டான். எழுந்துக்க முடியாமல் முனகிட்டு இருக்கான். கூட்டம் ஆர்ப்பரித்தது. கைதட்டிக் கும்மாளமிட்டனர் மக்கள்.

ஒரு சில இளைஞர்கள் கீழே விழுந்திருந்த கடைக்காரனை மீண்டும் சீண்ட ஆரம்பித்தனர். அவன் எழுந்திருக்க முடியாது என்ற தைரியத்தில் அவர்கள் அவனை உதைத்தனர். திரிவக்கரைக்கும் கோபம் தான். இந்த சின்னப்பையன்களிடம் போய் இவன் சண்டை ஏன் போட்டான்? ஆனால் அந்தப் பையன்கள் சும்மா இருக்கலை. மெதுவாய்க் கடைக்குள் போய்ச் சில துணிகளை அவர்களுக்குப் பொருந்துமாறு தேர்ந்தெடுத்து, அவற்றை அங்கேயே மாற்றிக் கொள்ளவும் செய்தார்கள். கூட்டம் மீண்டும் கைதட்டி ஆர்ப்பரித்தது. “யாரு இவங்க இரண்டு பேரும்?” திரிவக்கரை தன் அருகில் இருந்தவரைப் பார்த்துக் கேட்டாள்.
“அட, உனக்குத் தெரியாது எதுவுமே? இவங்க தான் நந்தனின் பையன்கள், நந்தன், விருந்தாவனத்தின் தலைவன், இடையர்களின் தலைவன், அவனோட பையன்கள் இவங்க. “ திரிவக்கரை சந்தோஷத்தில் மிதந்தாள். “கடைக்காரன் ஏன் சண்டை போட்டான் இவங்க கிட்டே?”
“இவங்களைக் கம்சன் அழைத்திருக்கிறானாமே? ராஜ சபைக்குப் போகக்கூடிய அளவுக்குத் தகுந்த உடைகள் வேண்டும்னு கேட்டாங்க. கொடுக்க மாட்டேன்னு சொல்லிச் சண்டை போட்டான்.”
“ஆஹா, எவ்வளவு அழகும், வனப்பும், இளமையும் மிகுந்த பையன்கள்?”
“ம்ம்ம், இந்தக் கடைக்காரனுக்கு வேண்டும் நல்லா, அவன் என்னமோ தன்னையே கம்சன்னு நினைச்சுட்டு இருந்தான் இத்தனை நாட்களாய்” இது இன்னொருவரின் கூற்று.
“ஆனால் இளவரசர் கம்சனுக்குக் கோபம் வரப் போகிறது.” திரிவக்கரை சொன்னாள். “ஹாஹாஹா, இந்தப்பையன்கள் அதைப் பத்திக் கவலைப் படறதாத் தெரியலை.” இன்னொருவனுக்குச் சிரிப்பை அடக்க முடியலை. அதற்குள்ளாக இரு இளைஞர்களும் உடையை அணிந்து கொண்டு வெளியே வந்தார்கள். மூத்தவனாகவும், பலசாலியாகவும் தெரிந்தவன் நீல நிற உடையிலும், இளைஞனாகவும், காண்பவர் கண்ணைக் கவரும் வகையில் நீல நிறம் படைத்தவனாகவும், இதழ்களில் எப்போதுமே சிரிப்பைத் தாங்கியவண்ணம் இருந்தவனும் ஆன இன்னொருவன் மஞ்சள் நிற ஆடை. உடைக்குப் பொருந்தும் வண்ணம் தலையில் தலைப்பாகைகளும் அம்சமாகப் பொருந்தி இருந்தது. இளைஞர்களில் இளையவன் தன்னுடைய உடை அணிவதில் எப்போதும் அதிகக் கவனம் செலுத்துவான் போல. பழைய ஆடையின் தலைப்பாகையில் இருந்த மயில் இறகுக் கொத்தை எடுத்து இந்த ஆடையின் பொன்னிறத் தலைப்பாகையில் சூடிக் கொண்டிருந்தான். ஆஹா, அது தான் எவ்வளவு பொருந்திக் காட்சி அளிக்கிறது? இந்த உடையும் , இந்தப் பொன்னிறத் தலைப்பாகையும் சேர்ந்து ஓர் அரசன் போலவே காண்கின்றானே இவன்?

அதற்குள்ளாக அருகிலிருந்த பூக்கடைகளில் இருந்து பூமாலைகள், அதுவும் சித்திர விசித்திரமான கட்டுமானத்தோடு கூடிய அபூர்வப் பூக்களால் ஆன மாலைகளைக் கொண்டு வந்து அந்தக் கடைக்காரர்கள் மனமுவந்து கொடுத்தார்கள். அந்தப் பூமாலைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை எனில் அழுதுவிடுவார்களோ என்னும்படியாக அவர்கள் முகத் தோற்றம். இருவரும் பூமாலைகளை ஏற்றுக் கொண்டனர். இளைஞர்களில் இளையவனோ பூக்கடைக்காரனைக் கட்டி அணைத்துக் கொண்டு தட்டியும் கொடுத்துவிட்டான். அதிர்ஷ்டக்காரனப்பா அவன்! ஏற்கெனவே கண்ணனின் வரவுக்குக் காத்திருந்த திரிவக்கரைக்கு இத்தனையையும் நேரில் பார்த்ததும் அதுவும் கண்ணனை நேரில் பார்த்ததும் அவளால் ஆவலை அடக்க முடியவில்லை. அந்தப் பையன் தன் ஒளி வீசும் கண்களினால் கூட்டத்தினர் அனைவரையும் பார்த்தான். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகத் தங்களை மட்டுமே அவன் பார்த்தமாதிரி இருந்தது. அவன் சிரித்தது தங்கள் ஒருவருக்காக மட்டுமே என நினைத்தார்கள். அதிலும் திரிவக்கரைக்கு அவன் தன்னை மட்டுமே பார்த்துச் சிரித்தான் என்றே தோன்றியது. அனைவரையும் தள்ளிக் கொண்டு முன்னால் சென்றாள் அவள். நெஞ்சு படபடவென அடித்துக் கொள்ள, வியர்வை வெள்ளமாய்ப் பெருக, கண்ணனுக்கு முன்னால் எப்படியோ போய்விட்டாள். உடலே துடித்தது ஆவல் மீதூர. கண்ணனைப் பார்த்தாள்.

“நந்தகுமாரா, கிருஷ்ணா, நான் உன்னிடம் வந்துள்ளேன் என் கடவுளே. நான் உனக்காகவே காத்திருந்தேன், இத்தனை நாட்களாக. நீ வரவேண்டும் என்றே காத்திருந்தேன்.”” திரிவக்கரையின் குரல் உணர்ச்சிவசத்தில் தழுதழுத்துத் தடுமாறியது. மக்கள் அவளைத் தள்ளி அந்தப் பக்கமாய்ப் போ என்று சொன்னார்கள். அருவருப்போடு அவளைப் பார்த்தனர். ஆனால் திரிவக்கரையோ கிருஷ்ணனை நமஸ்கரிக்க முயன்றாள். “ஆஹா, நீ எனக்காகக் காத்திருந்தாயா? என்ன ஒரு நல்ல விஷயம்? எப்படி அறிவாய் நீ நாங்கள் வருவதை?”

“எனக்குத் தெரியும் என் ஆண்டவா, நீ வருவாய் என எனக்குத் தெரியும். ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு பகலும், ஒவ்வொரு மணித்துளியும், ஒவ்வொரு வருஷமும் உனக்காக நான் காத்திருந்தேன். இதோ, உனக்காக நான் கொண்டு வந்திருக்கும் அபூர்வ மலர்களால் தயார் செய்யப் பட்ட வாசனைத் திரவியம். இது உனக்கு மட்டுமே கண்ணா!”

சகோதரி, யாரம்மா நீ?” கண்ணன் கேட்டான்.

“நான் திரிவக்கரை. என் பெயரே மறந்துவிட்டது கண்ணா, திரிவக்கரை என்றே அழைக்கப் படுகிறேன். அரண்மனை வாசிகளுக்கு வாசனைத் திரவியங்கள் தயார் செய்து கொடுக்கும் வேலை எனக்கு. ஆனால் இது அந்த மாதிரிச் சாதாரணமான ஒன்றல்ல. இது உனக்காவே நான் தனியாக என் கரங்களாலேயே தயாரித்தேன்”

கண்ணனின் இதழ்களில் புன்னகை! அதைப் பார்த்த திரிவக்கரையோ ஆனந்தத்தின் உச்சிக்கே சென்றாள். கண்ணனின் புன்னகையில் அவளுக்கான அன்பு தனியானது என்ற உறுதியும், நிச்சயமும் அவளால் உணரமுடிந்தது. இந்தப்புன்னகை தனக்காகவே என்ற எண்ணமும் அவளுக்கு மகிழ்வைத்தந்தது. கண்ணனின் கன்னங்களிலும், கைகளிலும் வாசனைத் திரவியங்களையும், சந்தனத்தையும் தடவினாள். அவன் நெற்றியில் தடவினாள். பலராமனுக்கும் பூசிவிட்டாள். பலராமன் ஒரு குழந்தையின் சந்தோஷத்தோடு அதை அனுபவித்தான். திரிவக்கரை மிகுந்த பிரயத்தனத்தோடு கண்ணன் காலடிகளில் வீழ்ந்தாள். அவனை நமஸ்கரித்தாள். கண்ணீர் பொங்க, “ ஆண்டவா, என் ரக்ஷகா, என் கடவுளே, நான் ஒரு குரூபியாய் இருக்கிறேனே.” திரும்பத் திரும்ப இதையே சொல்லிக் கொண்டு இருந்தாள். அவளால் வேறு எதுவும் சொல்லமுடியவில்லை. நெஞ்சே வெடித்துவிடும்போல் அழுகையும், விம்மலும் வந்தன.

“யார் சொன்னார்கள் நீ குரூபி என?? “ கண்ணனின் மிருதுவான குரல் ஒரு தாயின் அன்போடும், கருணையோடும் சர்வ நிச்சயத்துடன் கூறியது. கண்ணன் குனிந்து தன்னிரு கரங்களால் அவளைத் தூக்கி எடுத்தான். “சகோதரி, நீ அழகி இல்லை எனச் சொன்னவர் எவர்? நீ தான் மாபெரும் அழகி!” இதையும் கண்ணன் சர்வ நிச்சயத்தோடு சொன்னான். திரிவக்கரை கீழே இருந்து எழுந்தவளால் நிறாகக் கூட முடியவில்லை. கூன் போட்டு நிற்கும் அவளுக்குத் தன்னுள் ஏதோ மாற்றங்கள் நிகழ்கின்றதோ என்றும் தோன்றியது. மிகவும் பிரயத்தனப் பட்டு நிமிர்ந்து நிற்க முயன்றாள். என்ன ஆச்சரியம்? அவளால் நிமிர்ந்து நிற்க முடிந்ததே? கால்கள்? அவையும் நேராகிவிட்டனவே? இதோ, மெல்ல மெல்ல அவள் நிமிர்ந்து நிற்கின்றாளே? ஆஹா, இதோ நிமிர்ந்துவிட்டாள். தன்னுடைய முழு உயரத்தோடும், நேராகவும், வளையாமல் கூனாமல் நிற்க முடிகிறதே அவளால்? தூக்கிவாரிப் போட்டது திரிவக்கரைக்கு? இது என்ன? அதிசயமா? மீண்டும் அவள் கூனியாகிவிடுவாளோ? கனவா? இல்லை நனவா? நனவே தான். இதோ மக்கள் கூட்டம் ஆச்சரியத்தில் அதிர்ச்சியோடு அவளைப் பார்க்கிறதே? தன் வயதையும் மறந்து சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாள் திரிவக்கரை”. என் கடவுளே, என் கடவுளே, நீ எனக்குப் பெரிய உதவி செய்துவிட்டாயே? என் கூனை நிமிர்த்திவிட்டாயே? ஆறாய்ப் பெருக்கெடுத்த நன்றியுணர்வோடு கண்ணன் காலடிகளில் மீண்டும் வீழ்ந்தாள் திரிவக்கரை.

Thursday, October 29, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - திரிவக்கரையின் ஆசை!

மதுரா நகரெங்கும் பரபரப்பு. மக்களின் ஆவல் கட்டுக்கடங்காமல் இருந்தது. தேவகியின் எட்டாவது பிள்ளை உயிரோடு இருக்கிறானாமே? நாளை வரப் போகிறானாம். அவனுக்கு அண்ணனும் ஒருத்தன் இருக்கிறானாம். பார்க்க ஒரு பயில்வான் போல் இருப்பானாம். இந்தக் கண்ணன், அதான் தேவகியின் எட்டாவது பிள்ளை ஏதேதோ அதிசயங்கள் எல்லாம் செய்கிறானாமே. பாற்கடலில் இருந்து எழுந்து வந்த அந்தப் பரந்தாமனை ஒத்து இருக்கின்றானாமே. ம்ம்ம்ம்? அந்தப் பரந்தாமனே இந்தப் பிள்ளையாக அவதாரம் செய்திருப்பதாய்ச் சொல்கின்றனர். எவ்வளவு தூரம் உண்மைனு தெரியலை. எல்லாம் நாளை தெரிந்துவிடும். காத்திருந்தவர்களுள் ஒருத்தி திரிவக்கரை என்னும் பெண்மணி. கம்சனின் அரண்மனையில் அனைவருக்காகவும் மலர்களையும், மலர்களிலிருந்து தயார் செய்யப் படும் வாசனைத் திரவியங்களையும் ராஜ வம்சத்தினருக்காகச் சிறப்பாகத் தயார் செய்வாள். இதற்கென ஒரு பெரிய குழுவே அவளுக்குக் கீழ் வேலை செய்கிறது. பல்வேறுவிதமான மூலிகைகளும், வாசனை மலர்களும் கொண்ட ஒரு பெரிய அழகான தோட்டத்தைப் பராமரித்து வந்தாள் திரிவக்கரை. திரிவக்கரை என்பது அவளின் உண்மையான பெயர் அல்ல.

பிறக்கும்போது எல்லாரையும் போல் சாதாரணப் பெண்ணாக, கொஞ்சம் அழகாகவே தான் இருந்தாள் திரிவக்கரை. பனிரண்டு வயதில் வந்த காய்ச்சல் ஒன்றில் பல மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்துவிட்டுப் பின், சுகமடைந்தபோது அவள் உடலின் மூட்டுக்கள் அங்கங்கே கோணிக் கொண்டு காட்சி அளித்தன. முதுகு கூனிவிட்டது. கூனை நிமிர்த்த முடியவில்லை. கால் மூட்டும் வளைந்துவிட்டது. அந்தக் கால வழக்கப் படி அவளுக்குப் பனிரண்டு வயதுக்கு முன்பே திருமணம் ஆகி இருந்தது. திருமணத்திற்குப் பின்னரே உடல்நிலை சீர்கெட்டது. உடல்நிலை சரியானதும் மனைவியின் கோணலான உடம்பைப் பார்த்த அவள் கணவன், கம்சனின் யானைப்படையில் பெரும்பதவி வகிப்பவன், அவளை ஏற்றுக் கொள்ள மறுக்கவே மனம் வெறுத்து, மனம் உடைந்து, உலகின் மீதே வெறுப்புற்றிருந்தாள் திரிவக்கரை. அவள் முகம் இன்னமும் அழகை இழக்கவில்லை. ஆனாலும் அவளுக்கு இல்லற வாழ்வையும், சந்தோஷத்தையும் இந்த உலகம் மறுத்துவிட்டது. மனதில் வாங்கிய பலத்த அடியோடு, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே தன் இனிமையான பேச்சால் அனைவருக்கும் வாசனைத் திரவியங்களை அளிக்கும் பணியைச் செய்துவந்தாள். அவள் தாயிடமிருந்து வம்சாவழியாகப் பெற்ற இந்த வேலையே அவள் வயிற்றைக் கழுவவும் உதவி வந்தது. அரண்மனையின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்லக் கூடிய உரிமையையும் பெற்றிருந்தாள். அரச வம்சத்தினரின் அனைத்து நபர்களின் அரண்மனைகளுக்கும், அவர்களின் பிரத்யேக அலங்கார அறைக்குள்ளும் செல்ல அவளால் முடியும். இத்தனை உடல் சீர்கேட்டிலும், உலகம் தன்னை மதிக்கவில்லை என்ற துன்பத்தையும் வெளிக்காட்டாமல் எப்போதும் சிரித்த முகத்துடனேயே ஏதாவது நகைச்சுவையாகப் பேசிக் கொண்டே தன் வாசனைத் திரவியங்களை அரண்மனை வாசிகளுக்கு அளிப்பாள்.

தனது உண்மைப்பெயரான மாலினி என்பதையே கிட்டத் தட்ட அவள் மறந்துவிட்டாளோ என்னும்படி இந்தத் திரிவக்கரை என்னும் பெயராலேயே அவளைச் சிறு குழந்தைகள் கூட அழைத்தனர். அவளை முகத்துக்கு நேரேயே கூனி என்றும், திரிவக்கரை என்றும் அழைப்பவர் பலர் உண்டு. என்றாலும் அவள் வரையில் எதையும் பொருட்படுத்தியதில்லை. அவள் தன்னைத் தானே கேலியும் செய்துகொள்வாள். கம்சனின் அந்தப் புரத்திற்குள் சுதந்திரமாய் நுழையும் உரிமை அவளுக்குண்டு. எந்தக் கேலிக்கும், கிண்டலுக்கும் சிரிக்காத கம்சன் திரிவக்கரை தன்னைத் தானே கேலி செய்து கொள்வதைக் கண்டு மனம் விட்டுச் சிரிப்பான். ஆனாலும் தன்னுடைய அழகான முகத்திலும், தன்னுடைய கால்கள் நேராக இருந்திருந்தாலோ, உடல் கூனாமல் சரியாக இருந்தாலோ, இந்த அரண்மனை ராஜகுமாரிகளை விடவும் தான் அழகாய் இருந்திருப்போம் என்ற உண்மையும் அவள் மனதில் படிந்திருந்தது. ஆனாலும் என்ன செய்ய முடியும்? விதி இப்படி அவளை மாற்றிவிட்டதே? ஆனாலும் அவள் மனம் தளரவில்லை. தனிமையில் இருக்கும்போதெல்லாம் தான் சரியாக, நேராகத் தன் உடல் இருப்பது போல் உணர்ந்தாள். தான் அன்றாடம் வணங்கும் கடவுளான மஹாதேவ சங்கரனின் கிருபையால் தான் உடல் நிமிர்ந்து மிகவும் அழகாய் விளங்குவதாய்க் கற்பனை செய்து கொள்வாள். தன் உடலின் ஒவ்வொரு மூட்டும் அழகாயும், நன்கு வளர்ச்சி பெற்றும், நிமிர்ந்து நேராயும், வனப்போடும் காட்சி கொடுப்பதாயும், அழகான இளம்பெண்ணாகத் தான் தோன்றுகிறாப்போலவும் நினைத்துக் கொள்வாள்.

இப்படி நினைத்து, நினைத்து அவள் மனதில் கடவுளின் கிருபையால் தான் சரியாகிக் கொண்டே இருக்கிறோம் என்ற உணர்வு நன்கு படிந்திருந்தது. நான்கு நாளைக்கு முன்னால் அரண்மனையில் தேவகியின் எட்டாவது பிள்ளை உயிரோடு இருப்பதாகவும், அவன் மதுராவுக்கு வரப் போகிறான் எனவும் பேசிக் கொண்டனர். ஆஹா, அவன் மதுராவுக்கு வரட்டும். ஏதேதோ அற்புதங்களை நிகழ்த்துகிறானாமே? அவன் மட்டும் என்னை மூன்று கோணல் உள்ள பெண் என அழைக்கும் இந்த மனிதர்களுக்கு முன்னால் என்னை ஒரு அழகி என்றும், கோணலே இல்லாத நேராக நிமிர்ந்து இருக்கும் பெண் என்றும் காட்ட மாட்டானா? அப்படிக் காட்டினால்?? அடடா? என்ன ஆநந்தம்? என்ன ஆநந்தம்?? இந்த மனிதர்கள் அனைவரும் உண்மையில் குருடர்கள் என்றே சொல்லணும். இல்லாவிட்டால் இவ்வளவு அழகாயும், உடல்கட்டாயும் இருக்கும் என்னைப் போய்த் திரிவக்கரை என அழைப்பார்களா? கண்களில் கண்ணீர் ததும்ப திரிவக்கரைத் தன்னை அழகி என எல்லாரையும் கண்ணன் சொல்ல வைப்பான் என்ற நம்பிக்கையோடு மீண்டும், மீண்டும் அந்த மஹாதேவனைப் பிரார்த்தித்தாள். ஆனால் அரண்மனையின் இளவரசிகள் கம்சனால் அந்தக் கண்ணன் படப்போகும் பாட்டை நினைத்து மகிழ்ச்சியோடு பேசிக் கொள்கின்றனரே? அப்படியும் நடக்குமோ? மதுராவில் கம்சனுக்கு விசுவாசமாய் இருக்கும் சிலர் மட்டுமே இந்தக் கண்ணன் அழிக்கப் படவேண்டியவன் என நினைக்கலாம். பெருவாரியான யாதவர்கள் தங்களைக் காக்கவே கிருஷ்ணன் வருகிறான் என்ற ஆவலுடனேயே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அரண்மனைவாசிகள் பேசிக் கொள்வதை அங்கே செல்லும்போதெல்லாம் கேட்டுக் கொள்வாள் திரிவக்கரை. தன் கண்ணையும், செவியையும் நன்கு திறந்து வைத்துக் கொண்டு கம்சனின் அரண்மனைவாசிகள் பேசுவதையும் கேட்டுக் கொண்டாள். நந்தனின் பிள்ளையாக வளர்ந்த தேவகியின் எட்டாவது பிள்ளையைப் பற்றிப் பலரும் பலதரப்பட்ட கதைகள் பேசுவதையும் கேட்டாள். கோவர்தன மலையையே தூக்கிவிட்டானாமே? நாரதர் ஏற்கெனவே சொன்ன மாதிரி கம்சனை அவன் தான் கொல்லுவானோ? இவங்க சொல்லுவது எல்லாம் உண்மை என்றால் நந்தனின் மகனாய் வளர்ந்த அந்தக் கண்ணன் ஒரு கடவுள் மட்டுமில்லை, அவனே கம்சனுக்கு எதிரியும் கூட. நாட்கள் நெருங்க, நெருங்கத் திரிவக்கரையால் தூங்கக் கூட முடியவில்லை.


ஆனாலும் அவள் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. முன்னை விட அதிகமாய்ச் சிரித்தாள், சிரிக்க வைத்தாள். ஆனாலும் நிற்கும்போதும், நடக்கும்போதும், பேசும்போதும், சிரிக்கும்போதும் அவளுள் ஏதோ ஒன்று அவளிடம், “உன் ஆண்டவன் வந்துவிட்டான். இனி உன் பிரார்த்தனைகள் செவிசாய்க்கப் படும். உன் எண்ணம் ஈடேறும்” என ஏதோ காதுகளில் வந்து சொன்னாப்போல் அவளுள் ஒரு பூரிப்பு. தன்னிடம் இருந்த மிகச் சிறந்த ஆடைகளை இந்தத் தருணத்தில் அணியவேண்டும் என எடுத்து வைத்துக் கொண்டாள். கண்ணனுக்கு அளிக்கவென வில உயர்ந்த வாசனைத் திரவியங்களையும் தயார் செய்து கொண்டாள். அப்போது ஒருநாள் மாலையில் அவளுக்குச் செய்தி கிடைத்தது கண்ணன் மதுராவிற்கு வந்துவிட்டான் என்றும், அவனும் அவன் அண்ணன் பலராமனும் விருஷ்ணிகுலத் தலைவன் ஆன அக்ரூரரோடு தங்கி இருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்தது. அன்று அரண்மனையில் பல விசித்திரமான நிகழ்வுகளையும் அவள் கண்டாள். அரண்மனைக்குள் பலரும் வந்து போனார்கள். அவர்களில் முக்கியமாய் அக்ரூரர், ப்ரத்யோதா, விருதிர்கனன், ஆகா என்னும் கம்சனின் நம்பிக்கைக்குரிய வீரன். இவர்கள் தனித்தனியாகக் கம்சனைச் சந்தித்ததோடு அல்லாமல் வ்ருதிர்கனனோடும், ஆகாவுடனும் கம்சன் நிறைய நேரம் ஆலோசனைகள் செய்தான். இவர்களில் அக்ரூரரைக் கண்டால் திரிவக்கரைக்குப் பிடிக்காது. அவள் கொடுக்கும் வாசனைத் திரவியத்தை அவர் மறுப்பார். மகத வீரனையும் பிடிக்காது, அவளுடைய வாசனைத் திரவியத்தை அவன் குறை சொல்லுவான். இத்தனைக்கும் ஒரு மலரின் வாசனைத் திரவியத்துக்கும், மற்ற மலரின் வாசனை திரவியத்துக்கும் உள்ள வேறுபாட்டை அவன் அறிய மாட்டான்.

அப்போது, அப்போது தான் அவள் மேலும் கேள்விப்பட்டாள், படை வீரர்கள் அனைவருக்கும் ஆயுதங்களைத் தாராளமாய்க் கம்சன் கொடுக்கச் சொல்லி உத்திரவிட்டிருப்பதாய். கம்சனின் ராணிகளும், ஜராசந்தனின் பெண்களும், மகத இளவரசிகளும் ஆன இரு சகோதரிகளும் கூட இனம் தெரியாத உத்வேகத்துடன் காட்சி அளித்தனர். அவர்கள் பேசியதில் இருந்து கிழவன் பஹூகாவும் அவனுடைய மகனையும் காணவில்லை என்றும், அதனால் யாதவத் தலைவர்கள் அனைவரும் மிகவும் கவலையுடனும், மன அழுத்ததுடனும் இருப்பதாகவும் காதில் விழுந்தது. மாளிகைக்குள் கம்சனைக் காண வந்தவர்கள் திரும்பவில்லையாம். கொல்லப் பட்டிருக்கக் கூடும் என்பதே அனைவரின் எண்ணமும் என்றும் புரிந்தது அவளுக்கு. ஆஹா, நந்தனின் மகன் மதுராவுக்குள் வந்திருப்பதற்கும் இதற்கும் ஏதோ சம்பந்தம் உள்ளது. திரிவக்கரை அன்றைய இரவைப் பரபரப்போடு கழித்தாள்.

மறுநாள் சீக்கிரமாய் எழுந்து குளித்துத் தயாராகித் தன்னை அலங்கரித்துக் கொண்டு கம்சனுக்கும், ராணிகளுக்கும் தேவையான வாசனாதி திரவியங்களை அளித்துவிட்டு மற்றவர்களுக்குத் தனக்குக் கீழ் வேலை செய்பவர்களை விட்டுக் கவனிக்கச் சொன்னாள். அவள் தன்னுடைய வாசனைத் திரவியங்கள் அடங்கிய பெட்டியைத் தூக்கிக் கொண்டு அக்ரூரரின் மாளிகையை நோக்கி நடந்தாள்.

Tuesday, October 27, 2009

கண்ணன் வருவான்,கதை சொல்லுவான், - கம்சனின் கொடூரம்!

ம்ம்ம்ம் யாதவ குலத்திலேயே மூத்த தலைவன், அதிலும் நம் சொந்த யாதவக்கிளையான அந்தகக் குலத்தின் மூத்த தலைவன், வயதில் மூத்தவன், அனைவராலும் நன்கு மதிக்கப் படுபவன், இவனை நான் வரக்கூடாது என்றோ, சந்திக்கமுடியாது என்றோ சொல்வது சரியாய் இருக்காது. வேறு வழியில்லை. தன்னை நிதானித்துக் கொண்ட கம்சன், சிங்காதனத்தில் இருந்து இறங்கிச் சற்று முன்னால் சென்று கிழவரை வரவேற்கத் தயாரானான். இந்த வயதுக்கும் முதுகும், முதுகுத் தண்டும், விறைப்பாக நிமிர்ந்து இருக்க, கிழவன் பஹூகா தன் பிள்ளையின் தோள்களைப் பிடித்த வண்ணம் உள்ளே நுழைந்தான். “ஆஹா, வரவேண்டும், வரவேண்டும், சிறிய பாட்டனாருக்கு என் வணக்கங்கள்! தாங்கள் ஏன் சிரமப் படவேண்டும் பாட்டனாரே! சொல்லி அனுப்பி இருந்தால் நானே வந்திருப்பேனே!”

“யாரு இவங்க எல்லாம்?” கம்சன் சொன்னதுக்குப் பதில் சொல்லாமல் ப்ரத்யோதாவையும் வ்ருதிர்கனனையும் தன் நெற்றியில் கை வைத்த வண்ணம் கூர்ந்து பார்த்த கிழவன், “ஓ, இவர்களா? “ என்று கேட்டுக் கொண்டான். “அமருங்கள் பாட்டனாரே!” என்று ஆசனத்தைக் காட்டினான் கம்சன். “எனக்கு என்ன கட்டளை தங்களிடமிருந்து?” என்று உள்ளூரப் போலிப் பணிவுடன் கிழவனிடம் கேட்கவும் செய்தான். கிழவனின் தைரியமான கண்கள் கம்சனை ஏறிட்டன. “இதோ பார், கம்சா, கடைசியாக என்னுடைய புத்திமதியை நம் குல நன்மையை உத்தேசித்து உனக்குச் சொல்ல வந்துள்ளேன். இப்போது இருக்கும் யாதவகுலத்தலைவர்களிலேயே வயதிலும், அனுபவத்திலும் மூத்தவனாக நான் ஒருவனே இருக்கின்றேன். அதனால் இந்த உரிமையை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன்.” என்றார் பஹூகா. “ஆம்” என்ற ஒற்றைச் சொல்லோடு முடித்துக் கொண்டான் கம்சன்.

“அக்ரூரன் வசுதேவனின் பிள்ளையைக் கூட்டி வரச் சென்றிருப்பதாய் அறிகிறேன். நாளைக் காலைக்குள் அவர்கள் வந்துவிடுவார்களோ?”

“ஆம்” என்றான் கம்சன்.

“நீ பிறந்ததில் இருந்தே உன்னை நான் அறிவேன் கம்சா! நீ அந்தப் பிள்ளைகளை விட்டு வைக்க மாட்டாய், உன் வழியில் இருந்து அகற்றவே முயலுவாய்!”

“நான் ஏன் அந்தப்பிள்ளைகளிடம் விரோதம் பாராட்டவேண்டும்? எனக்கும் அவங்களுக்கும் நடுவே என்ன வந்தது?”

“கம்சா, நடிக்காதே! நாரதரின் தீர்க்க தரிசனத்தையும், அவர் தேவகியின் திருமண நாளன்று சொன்னதையும் நீ மறந்திருக்கவும் மாட்டாய். அதற்காகப்பயப்படவும் செய்கிறாய். அதை மறுக்கவோ, மறைக்கவோ செய்யாதே! என்னை ஏமாற்ற நீ நினைத்தால் உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளுவாய்! நாரதர் சொன்னவை பொய்யாக வேண்டும், நீ அதற்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்ளவேண்டும் என்பதே என் விருப்பம்!”

“ஹா, ஹா, ஹா, அந்த முட்டாள் முனி நாரதன் சொன்னதை அந்த முட்டாள் தனமான வார்த்தைகளை யார் நம்பறாங்க? நான் நம்பலை, அதுசரி, பாட்டனாரே? அது மட்டும் உண்மையாய் இருந்தால் , நான் எப்படி அதைப் பொய்யாக்கமுடியும்னு சொல்றீங்க?”

“குழந்தாய், செய்த, செய்யும், செய்யப்போகின்ற குற்றங்களுக்காக நீ வருந்தி மன்னிப்புக் கேள். வருந்தி மன்னிப்புக் கேட்கும் ஒருவன் இறந்தவனாகவும், அதன்பின்னர் அவன் வாழும் வாழ்க்கையைப் புனர் ஜென்மமாகவும் ஆன்றோர் கருதுவார்கள். இப்போது உனக்குக் கிடைத்திருக்கும் இந்தக் கடைசி சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நீ மனப்பூர்வமாய் மன்னிப்புக் கேட்டுவிடு. நடந்தவைகள் அனைத்துக்குமாய்! உனக்கு மன்னிப்பும் கிடைக்கும், நீ இறந்தவனாகி, மீண்டும் புனர்ஜென்மமும் பெறுவாய்! உனக்கான தண்டனையும் கிடைத்தாற்போலவும், நாரதரின் தீர்க்கதரிசனம் பலித்தாற்போலவும் ஆகிவிடும். மன்னிப்புக் கேள், குழந்தாய், மன்னிப்புக் கேள், அதைவிடச் சிறந்ததொரு பரிகாரமே இல்லை!”

“ஹாஆஆ, நான் எப்படி அதை உண்மை என நம்பமுடியும், என் அருமைப் பாட்டனாரே! மன்னிப்புக் கேட்ட பின்னரும் என்னைக் கொன்றுவிட்டால்?? அதுவும் நடக்கக்கூடியதே!”

இல்லையப்பா, இல்லை, அது எல்லாம் மனப்பூர்வமாய் மன்னிப்புக் கேட்கவில்லை எனில் நடக்கும் ஒன்று. அப்படி ஒருவேளை வசுதேவனின் பிள்ளை கிருஷ்ணன் அந்தப்பரம்பொருளே இல்லை என்றாலும், நீ மட்டும் மன்னிப்புக் கேட்டாயானால் உன் மக்களே உன்னைக் கைவிடமாட்டார்கள். உன்னிடம் அதீத அன்பு செலுத்துவார்கள். அப்படி இல்லாமல் வசுதேவனின் பிள்ளை அனைவரும் சொல்லுவதுபோல, அந்தப் பரந்தாமனே என்றாலும், சரி, நிச்சயம் அவனுடைய அருள் உன்னைக்காக்கும். நீயும் முன்னைவிடப் பலம் பொருந்தியவனாய் ஆகிவிடுவாய்.”

“எவ்வாறு நான் மன்னிப்புக்கேட்கவேண்டும், பாட்டானாரே?” பரிகாசமான தொனியில் கம்சன் கேட்டான்.

“ம்ம்ம்ம் நான் சொல்லுவதில் உனக்கு நம்பிக்கை இல்லை என்பது புரிகிறது. ஆனாலும் நான் இங்கே வந்ததின் காரணமே நல்வழியை, உண்மையான சிறந்த வழியை உனக்குக் காட்டவே. உன்னால் எவ்வளவு முடியுமோ அதைவிட மேலாக வசுதேவனையும், தேவகியையும் நீ துன்புறுத்திவிட்டாய். யாதவகுலத் தலைவர்களை ஒன்றுமில்லாதவர்களாக ஆக்கி கிட்டத் தட்ட அடிமைகளாக்கிவிட்டாய். கம்சா, நேர்மையான வேதம் அறிந்த நல்ல பிராமண ஆசாரியர்களை மதுராவின் பக்கமே நீ வரவிடுவதில்லை. மதுரா இன்று ஒரு நரகம் என்றால் மிகையாகாது.” கிழவன் சற்றே நிறுத்தினான்.

“ம்ம்ம்ம், மேலே!” என்றான் கம்சன் ஏளனம் பொங்க.

கிழவனின் குரல் ஒரு தீர்க்கதரிசியின் நிச்சயத்தோடும், அவன் கண்களில் புதிதாய்த் தோன்றிய ஒரு ஒளியோடும், மேலும் சொல்லுவான். குரலில் ஒரு நிச்சயமும், உண்மைத்தன்மையும் காணப்பட்டது. “இதோ பார் இளவரசனே, எங்களைப் பூட்டி வைத்திருக்கும் இந்த அடிமைத் தளையிலிருந்து அனைவரையும் நீ விடுவிக்குமாறு அனைத்து யாதவர்கள் சார்பிலும், எல்லாருக்கும் பெரியவன் என்ற காரணத்திலும் உனக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். வசுதேவனையும், தேவகியையும், பிழைத்திருக்கும் அவர்களின் இரு பிள்ளைகளையும் சர்வ சுதந்திரத்துடனும், பயமில்லாமலும் வாழவிடு. இங்கிருந்து கோபத்திலும், பயத்திலும் வேறு நாடுகளுக்கும், நகரங்களுக்கும் சென்று வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து யாதவர்களையும் சகல மரியாதையோடு திரும்ப அழை. மீண்டும் வீடுகளில் வேதம் முழங்கட்டும். அதற்கு ஏற்ற பிராம்மணர்களையும் முன்போல் பயமில்லாமல் வாழச் செய். உனக்குப் பாதுகாப்பு என நினைத்து நீ ஏற்பாடு செய்துகொண்டிருக்கும் இந்த வெளிநாட்டானை அவன் நாட்டுக்குத் திருப்பி அனுப்பு. இவனைக் கண்டாலே நம் நாட்டு மக்கள் பயத்தோடு வெறுக்கின்றனர். எல்லாவற்றையும்விட முக்கியமாக உன் தந்தை, இந்த நாட்டின் அரசன் உக்ரசேனரை சிறையிலிருந்து விடுவித்து முன்போல் சுதந்திரமாக நாட்டை ஆளச் செய்வாய். அவருக்கு அடுத்து எப்படி இருந்தாலும் நீ தானே நாட்டை ஆளப் போகின்றாய்? இதை எல்லாம் செய்தால் நீ உன் மக்களைச் சுதந்திரமாக வாழவைத்தவன் ஆவாய்!”

“ம்ம்ம்ம்ம்ம்??? இத்தனையும் நான் செய்தாகவேண்டும், என்னை நல்லவனாகக் காட்டிக் கொள்ள?? இவை எல்லாம் என்னைப் புனிதப் படுத்திவிடுமா??? எனக்கு நானே பேதிமருந்து கொடுத்துக் கொண்டு என்னை நானே சுத்தப் படுத்திக் கொள்ளவேண்டும் என்கிறீர்கள்? அப்புறம் என்ன?? ம்ம்ம்ம்ம்??” கம்சன் மீண்டும் எகத்தாளமாய்க் கேள்வி கேட்டான்.

“அப்புறம் என்ன?? இறைவனின் மன்னிப்பு உனக்குக் கிடைக்கும். மக்கள் உன் மீது அன்பு செலுத்துவார்கள். உன் யாதவகுலமே உனக்குக் கடமைப் பட்டிருக்கும். எல்லாவற்றுக்கும் மேல் கிருஷ்ணன், உண்மையிலேயே அவன் கடவுளே என்றால் அவனின் பரிபூரண அருளுக்கு நீ பாத்திரன் ஆவாய்!”

“பாட்டனாரே, எனக்கு யோசிக்க அவகாசம் கொடுங்கள், நீங்கள் சொன்னதை எல்லாம் புரட்டிப் பார்த்து யோசிக்கிறேன். இப்போவே நான் உங்களுக்கு வாக்குக் கொடுக்கமுடியாது. உங்க யோசனை என்னமோ நன்றாகவே இருக்கிறது. ஆனாலும் எனக்கு யோசிக்கணும்.” என்றான் கம்சன்.

கிழவன் கண்கள் திடீரென ஒளிவீசியது. அவனுக்கு வயது தொண்ணூறு ஆகிவிட்டது என்பதை நம்பமுடியாமல் அவன் திடீரென இளைஞனோ என எண்ணும்படிக் காட்சி அளித்தான். கம்பீரமாய்த் தலையைத் தூக்கிக் கம்சனைப் பார்த்து, “நான் அறிவேன், நீ எந்தப் பேச்சையும் கேட்கமாட்டாய். உனக்குப் புத்திமதி சொல்லுவது வீண் என்பதை நன்கு அறிவேன். ஆனாலும் உனக்கு நான் கடைசி எச்சரிக்கை ஒன்று கொடுக்கிறேன். தொடர்ந்து பல வருடங்களாக யாதவர்களுக்கு நீ ஒரு சாட்டையைப் போல் திகழ்ந்து உன் செய்கைகளாலும், பேச்சாலும் அவர்களைத் துன்புறுத்தி வருகிறாய். ஆனால், கேள், கம்சா, கிருஷ்ண வாசுதேவனை உன்னால் வெல்ல முடியாது. அவனை அழிக்கலாம் என மனப்பால் குடிக்காதே. இந்த உலகின் கடைசி யாதவன் இருக்கும் வரையில் கிருஷ்ணவாசுதேவன் அவனைக் காக்க இருப்பான். இருந்தே தீருவான். யாதவர்களுக்கு அவனே கடைசி நம்பிக்கை, ஏன் உனக்கும் கூட அவனே கடைசி நம்பிக்கை, அவன் உன்னை மன்னித்தால் உண்டு, ஆனால் அதைப் புரிந்து நடந்து கொள்பவனாய் நீ இல்லை, பரிதாபம்தான்!”

“ஆஹா, பாட்டனாரே, என்னைப்பயமுறுத்துகிறாப்போல் இருக்கிறதே! எனக்கு எது நல்லதோ அதை நான் செய்தேன், செய்கிறேன், செய்வேன்.”

"எல்லாம் வல்ல சங்கரனும், தேவாதி தேவர்களுக்கெல்லாம் மஹாதேவனும் ஆன அந்த ஈசனின் கடுங்கோபத்தில் நீ விழாமல் இருக்கவேண்டும், உன்னை நீ மாற்றிக் கொண்டால் ஈசனின் கடுங்கோபத்தில் இருந்து தப்பிக்கலாம்.”

“ஹா...ஹா....ஹா....., எனக்கு எந்தக் கடவுளரிடமும் பயம் என்பதே இல்லை!” கம்சன் உடனடியாகப் பதில் சொன்னான்.

"இத்தனை திமிரோடும்,கடவுளிடம் கூடப்பயமின்றியும் இருக்கும் மனிதனுக்குத் துன்பமே விளையும். அவனால் ஆட்சி செய்யப் படும் மக்களும் துன்பமே அனுபவிப்பார்கள், மக்கள் எத்தனை நல்லவர்களாய் இருந்தாலும். அரசன் நல்லவனாய் இருந்தாலே அவர்களுக்கும் நன்மைகள் கிட்டும் “

“ஓஹோஹோ! இருங்க பாட்டனாரே, இருங்க,” கம்சன் சடாரெனத் திரும்பி வ்ருதிர்கனனைப் பார்த்து ஏதோ சமிக்ஞை செய்தான். அவனும் அதைப் புரிந்து கொண்டாற்போல் கம்சனை வணங்கிவிட்டு அறையை விட்டு அகன்றான். “பாட்டனாரே, நீங்கள் சொல்லுவதே சரி!” இன்னும் பரிகாசம் மாறாக் குரலிலேயே கம்சன் பேசினான். “கிருஷ்ணனை நான் ஒன்றும் செய்யப் போவதில்லை, உங்களுக்கு என் வாக்குறுதியைக் கொடுக்கிறேன். ப்ரத்யோதா, நீயும் பார்ப்பாய்! அதற்கான ஏற்பாடுகளை நீயே செய்!”

“உத்தரவு அரசே!” கம்சனின் இந்தப் பரிகாசச் சிரிப்பின் பின்னால் பல விஷயங்கள் மறைந்திருக்கிறதை ப்ரத்யோதா புரிந்து கொண்டான். “ உன் வார்த்தைகளை நீ காப்பாற்றுவாய் என நினைக்கிறேன் குழந்தாய்,” என்று சொல்லிக் கொண்டே எழுந்தான் தொண்ணூறு வயதான அந்தகத் தலைவன் பஹூகா. ப்ரத்யோதாவும் அவனுடன் செல்லத் திரும்பியபோது கம்சன் ப்ரத்யோதாவை மட்டும் அழைத்தான்.

“ப்ரத்யோதா, கிழவருக்குக் கொடுத்த என்னுடைய வாக்குறுதி நினைவிலிருக்கட்டும். நான் கிருஷ்ணனை எந்தத் தொந்திரவும் செய்யமாட்டேன். ஆனால் அதற்காக அவனை என் கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்திவிடாதே. அந்தத் தவற்றை மட்டும் செய்துவிடாதே. “ ஒரு மாதிரியான பரிகாசம் மீதேறிப் போன குரலில் சிரித்தான் கம்சன். “தங்கள் உத்தரவுப்படியே அரசே!.” மிகவும் பிரயத்தனப்பட்டுக் கோபத்தை அடக்கியதால் ப்ரத்யோதாவின் குரல் கம்மியது. கம்சனை நமஸ்கரித்து வணங்கிவிட்டு அறையை விட்டு வெளியே வந்தான் ப்ரத்யோதா. அவன் காதுகளில் ஆஹா, இது என்ன சப்தம், வாட்கள், வாட்களோடு மோதுகின்றதோ? யாருக்கு என்ன?? ஏதோ ஆபத்து! உடனே போய் உதவணும். ப்ரத்யோதா ஓடினான்.

அறைக்கு வெளியே நடைபாதையில் சென்று கொண்டிருந்த ப்ரத்யோதா வேகமாய்ச் செல்லும்போது அவன் கண்களுக்கு முன்னால் கொஞ்ச தூரத்தில் ஒரு வாள் வீழ்த்தப்பட்டுக் கீழே விழுவதும், ஒரு தலைவனுக்குரியவரின் கிரீடம் ரத்தத்தில் தோய்ந்து தூக்கி வீசப்பட்டதும் தென்பட்டது. முன்னால் நடப்பவர்களின் காலடிச் சப்தங்களைத் தொடர்ந்த ப்ரத்யோதா அங்கே பாதை ஒரு இருட்டான முடுக்கில் திரும்பவே வேகமாய்த் திரும்பினான். ப்ரத்யோதாவின் கண்களில் இரு உடல்களைத் தூக்கிச் செல்லும் மகத வீரர்கள் தென்பட்டனர். ப்ரத்யோதாவுக்கு உலகமே சுழன்றது. தன்னைத் தானே கட்டுப் படுத்திக் கொள்ளமுடியாத ப்ரத்யோதா அருகிலிருந்த ஒரு தூணைப் பிடித்துச் சமாளித்துக் கொண்டான். கிட்டத் தட்ட அரை மணிக்கு மேல் மயக்க நிலையிலேயே இருந்த அவன் கண்விழித்துப்பார்த்து கண்களில் கண்ணீர் பொங்க தன் உதடுகளைத் தானே ரத்தம் வரும் வரையில் கடித்த வண்ணம் தீவிர சிந்தனையில் இருந்தான். மெல்ல மெல்ல அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

Monday, October 26, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், - கம்சனுக்குப் பயம்!

இப்போக் கொஞ்சம் அவசரமாய் நாம கம்சனின் அரண்மனைக்குள்ளே போகணும். ஒரு நடக்கக் கூடாத விபரீதம் நடக்கப் போகிறது, அதுவும் கண்ணன் வரும் முன்னால், அவனுக்கு எச்சரிக்கும் விதமாயோ?? என்னனு தெரியலை, போய்ப் பார்த்துடுவோமே! கண்ணனும், அக்ரூரரும் பலராமனோடு நுழைவதற்கு முன்னாலே நாம போய்ப் பார்த்துத் தெரிஞ்சுக்கலாம். வாங்க, வாங்க சீக்கிரம் அதுக்குள்ளே கண்ணன் வந்துடப் போறான். கம்சனின் அரண்மனையில் எட்டிப் பார்ப்போமா???

இதோ கம்சன், அவன் அரண்மனையில். என்னவோ தீவிர சிந்தனையில் இருக்கிறான். ஆனால் இது என்ன?? ஏதோ தவிப்பில் இருப்பவனாய்க் காணப்படுகிறானோ? ஆமாம், ஆமாம், கம்சனுக்குள்ளே ஏதோ இனம் புரியாத தவிப்பு. சங்கடம். மகதச் சக்கரவர்த்தி ஜராசந்தனின் மாப்பிள்ளையான கம்சனுக்கு, என்ன சங்கடம்?? முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அவன் ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறான். அண்டை நாட்டு அரசர்களெல்லாம் கம்சன் தங்கள் நாட்டின் மீது படை எடுக்காமல் இருக்கணுமே என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். பயந்து நடுங்குகின்றனர். மகதநாட்டுப் படை வீரர்களின் தேர்ந்த திறமைசாலிகளான வீரர்கள் மூவாயிரம் பேருக்கும் மேலே கம்சனின் அரண்மனையைக் காவல் காக்கின்றார்கள். இன்னும் என்ன?? அவன் சார்ந்த அந்தக வம்சத்தின் அனைத்துத் தலைவர்களும், ஒரு சிலரைத் தவிர, ஹும், அவங்க எல்லாம் தேவகிக்கு ஏதோ உறவு முறை, அதான், மற்ற அனைத்துத் தலைவர்களும் கம்சனுக்கு விஸ்வாசமானவர்களாகவே இருக்கின்றனர். ஏன், கொஞ்சம் அசட்டுத் தனமாக நடக்கும் தன் தளபதியான ப்ரத்யோதா கூட இதுவரை விசுவாசமானவனாகவே இருக்கிறான்.

யாதவர்களின் பிரிவுகளை மேலும் பிரித்தாயிற்று. இப்போது அவர்களுக்குள் ஒற்றுமை என்பதே இல்லை. அவர்களுக்கு ஆலோசனைகள் கூறும் பிராமணர்களோ, இப்போது அடங்கி ஒடுங்கிக் கிடக்கின்றனர். அவர்கள் இருக்கும் இடமே தெரியவில்லை. நான் யார் என்பதைக் காட்டும்படியாக வலுவான ஒரு அடி கொடுத்தால் போதும், அனைவரும் நிரந்தரமாய் அடங்கிக் கிடப்பார்கள். என்ன செய்யலாம்???? ம்ஹும், ம்ஹும், என்னதான் இது எல்லாம் எனக்கு ஆறுதலையும், சமாதானத்தையும் கொடுத்தாலும், என்னை உறுத்தும் விஷயம் ஒன்று உள்ளதே. இந்த தேவகியின் எட்டாவது குழந்தை உயிரோடு வளர்ந்து பதினாறு வயது பாலகனாக இருக்கிறானே! ம்ம்ம்ம்ம்??? இங்கேயும் வரப் போகிறான். அவனை அனைவரும் மிகவும் கெட்டிக் காரன் என்றும் சாமர்த்தியசாலி என்றும் எப்படிப் பட்ட மனிதர்களையும் கவர்ந்துவிடுவான் என்றும் சொல்லுகின்றார்கள். ஆனால் என்ன? அவன் ஒரு இடைப்பிள்ளைதானே? ஹாஹாஹா! அவன் ஒரு இடையனால் வளர்க்கப் பட்டவன். ஹாஹா, அவன் ஒரு இடையனே தான்.

கம்சன் தனக்குள்ளே சிரித்துக் கொண்டான். ஒரு இடையன் என்னதான் சாமர்த்தியசாலியாய் இருந்தாலும், அவன் என்னதான் மாயாஜாலங்கள் புரிந்தாலும் அதெல்லாம் அந்த விருந்தாவனத்துக்குள்ளே. அவங்களுக்கு வேண்டுமானால் இதெல்லாம் அதிசயமாய்த் தெரியும். இந்தக் கம்சனுக்கு இல்லை. ஆனால், ஆனால், இந்த வசுதேவரும், தேவகியும், மற்றச் சில யாதவத் தலைவர்களும் அவனை என்னமோ காக்க வந்த தேவன், சாட்சாத் பரந்தாமன் என எண்ணுகின்றனரே? யார் அவன்? அந்தப் பர வாசுதேவனோ??? பரந்தாமன் என அழைக்கப் படும் வாசுதேவனின் அவதாரம் என எண்ணுகின்றனரோ? ஹா, வாசுதேவனாவது? அவதரிப்பதாவது? என்னமோ அந்த நாரதன் பிதற்றினான் என்று இவர்களெல்லாம் கூத்தடிக்கின்றனரோ? ஆனால் அந்த கர்காசாரியான் இதை நம்புகிறான் என்கின்றார்களே? ஹூம், ஹூம், அந்த கர்கன், ஆசாரியனா அவன்? அவனைக் கேட்டால் தனக்கு இது பற்றி எல்லாம் எதுவுமே தெரியாது என்று எண்ணும்படியாக அல்லவோ நடந்து கொள்கின்றான்? அவனுக்குத் தெரியாமலா இருக்கும்? மக்கள் அனைவரும் கர்காசாரியார் அனைத்தும் அறிந்தவர் எனப் பேசிக் கொள்கின்றார்களாமே? யாரை ஏமாற்றுகிறான் அந்தக் கிழப் பிராம்மணன்???

என்ன முயன்றும், அந்தக் கண்ணன் என்னும் கிருஷ்ணன், யாதவகுலத்தைக் காக்கவந்த பரந்தாமன் என்னும் எண்ணத்தை என்னால் மக்களிடமிருந்து போக்க முடியவில்லையே? அனைவரும் அப்படியே அல்லவோ நினைக்கின்றனர்?? ம்ம்ம்ம்ம்?? என்னைச் சுற்றி ஏதேனும் சதிவலை பின்னப் பட்டிருக்கிறதோ? அல்லது இப்போது சதி நடக்கிறதோ? என்னை அறியாமல் நான் அதில் விழுந்துவிட்டேனோ? சேச்சே, அதெல்லாம் இல்லை, என்னை ஒடுக்க யாராலும் முடியாது. அதுசரி, அந்த அக்ரூரன் என்ன சொல்லிக் கண்ணனை மதுராவுக்கு அழைத்து இருப்பான்? இத்தனை நேரம் விருந்தாவனம் போயிருப்பான் அல்லவோ? கண்ணனை நான் அழைத்ததைச் சொல்லி இருப்பானா? என்ன பதில் கிடைத்திருக்கும் அவனுக்கு?ம்ம்ம் எப்படியும் அக்ரூரன் நாளை அவர்களை அழைத்து வந்துவிடுவான். எப்படி இருப்பார்கள் இரு இளைஞர்களும்?? சிறு பையன்கள் தானே! என்ன பயம் அவர்களிடம்??? இரவு முழுதும் தூக்கமின்றிக் கழிந்தது கம்சனுக்கு. அவனால் ஒரு இடத்தில் உட்காரவும் முடியவில்லை, படுக்கவும் முடியவில்லை, நடந்தான், அதுவும் முடியவில்லை. தவித்துக் கொண்டிருந்தான் கம்சன். சற்று யோசித்துவிட்டு தான் மகதத்திலிருந்து திரும்பி வரும்போது கூடவே அழைத்து வந்த நர்த்தகியின் வீட்டுக்குச் சென்று ஆடல், பாடல்களில் மனதைத் திசை திருப்பினான் கம்சன்.

ஆடிக் கொண்டிருந்த அந்த நாட்டியக் காரியும் கம்சனிடம் கேட்ட கேள்வி தான் அவனால் தாங்க முடியவில்லை. அந்த நாட்டியக் காரி கேட்டாள், “ அரசே, தேவகியின் எட்டாவது குழந்தை உயிரோடு இருக்கிறானாமே? நாளை இங்கே வருகிறானாமே? அந்தப் பிள்ளைதான் பரவாசுதேவனின் அம்சமாமே? செயற்கரிய செயல்களை அநாயாசமாய்ச் செய்கின்றானாமே?” இது தான் அவளும் கேட்டாள். கோபம் பொங்கியது கம்சனுக்கு. எந்த நினப்பை மாற்றி வேறு நினைவுகளில் ஆறுதல் தேடி வந்த இடத்திலும் அவன் நினைவா? கோபத்துடன் அந்தப் பெண்ணை அடித்துக் கீழே தள்ளிவிட்டுத் தன் மாளிகையை நோக்கிப் பெருநடை நடந்து சென்றான் கம்சன். ஆஹா, இது தெரிந்த இவளுக்கு அந்தப் பையன் தான் கம்சனைக் கொல்லப் போகிறான் என்ற செய்தியும் அல்லவோ தெரிந்திருக்கும்? என் மாளிகையே அறிந்துள்ளதா இவ்விஷயத்தை? என்ன அவமானம்? என்ன அவமானம்? தன் மாளிகையினுள் நுழைந்த கம்சன் அவசரமாகப் ப்ரத்யோதாவையும் வ்ருதிர்கனனையும் வரச் சொன்னான். இருவரும் வந்தனர். இருவரையும் பார்த்த கம்சன் கோபத்தில் குதித்தான். எப்படித் தெரிந்தது அரண்மனை வாசிகளுக்கு? தேவகியின் எட்டாவது பிள்ளை விருந்தாவனத்தில் இருப்பதும், நாளை வருகிறான் என்பதும் எப்படி அறிந்தனர் அனைவரும்?? ப்ரத்யோதா தயக்கத்துடன் சொன்னான்:”இளவரசே, தாங்களே யாதவகுலத் தலைவர்கள் அனைவருடனும் ஏற்பட்ட சந்திப்பின்போது அனைவர் முன்பும் அக்ரூரரை அங்கே சென்று கண்ணனை அழைத்துவரும்படிப் பணித்தீர்கள். தங்கள் திருவாயாலேயே அனைவரும் கேட்க நேர்ந்தது. தாங்கள் சொன்ன இந்த விஷயம் அரண்மனைக்குள் பரவாமல் எப்படி இருக்கும்?” ப்ரத்யோதா தன்னிரு கைகளையும் கூப்பிய வண்ணமே பதில் தந்தான்.

"சரி, சரி, எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் என்ன ஆனாலும் சரி, அந்தக் கண்ணனை என் அரண்மனைக்குள் நுழையவே விடாதே. அவன் என் எதிரிலேயே வரக்கூடாது. நினைவிருக்கட்டும். அதற்கு முன்னாலேயே அவன் மதுராவினுள் நுழைந்ததுமே அவனை ஒரு வழியா ஒழித்துவிடு. ப்ரத்யோதா, நான் சொல்வது புரிந்ததா? இதனால் என்ன நடந்தாலும் அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. தநுர்யாகம் செய்யப் போகும் வில்லின் அருகே கூட அவன் வரக்கூடாது. வரவிடக் கூடாது. இது நினைவில் இருக்கட்டும். என்ன, நான் சொல்லுகிறேன், நீ ஏதோ நினைத்துக் கொண்டிருக்கிறாயே? ப்ரத்யோதா சிலநாட்களாக நீ நீயாக இல்லை, ஏதோ மாறிவிட்டாய் என நினைக்கிறேன்."

ப்ரத்யோதா நடுங்கினான். "இல்லை அரசே, இல்லை, அப்படி எல்லாம் இல்லை, தாங்கள் சொன்னபடியே நடக்கும்." என்றான் நடுங்கிய குரலில். மேலும் "நான் நன்றாகவே இருக்கிறேன், எப்போதும்போலவே இருக்கிறேன் அரசே. இந்தக் கொண்டாட்டங்களின் விளைவாக ஏற்பட்ட அதிகப் படி வேலைப்பளுவின் காரணத்தினால் கொஞ்சம் அசதி! எனக்கும் வயதாகிவிட்டதல்லவா?" என்றான் ப்ரத்யோதா.


"சரி, சரி, ப்ரத்யோதா, ஒற்றர்களை நியமித்து அனைத்து யாதவத் தலைவர்களையும் கண்காணிக்கச் சொல்லு. ப்ரத்யோதா! உன் சகோதர்கள் நம்பிக்கைக்கு உகந்தவர்கள் தானே? அதையும் உறுதி செய்து கொள். வ்ருதிர்கனா, ஒவ்வொரு யாதவத் தலைவனின் ஒவ்வொரு சிறு அசைவையும் உன் வீரர்களைக் கண்காணிக்கச் சொல். அவங்க யாரையும் நம்பமுடியாது. திடீர்னு மாறிடுவாங்க. எல்லாருக்கும் நான் செத்து ஒழியணும்னு ஒரே ஆசை! ஹாஹாஹாஹாஹா!” கம்சன் பெருங்குரலெடுத்துச் சிரித்தான். “ஆனால் நான் தைரியமாகவும், தெம்பாகவும், பூரண ஆரோக்கியத்துடனும் இருக்கிறேன். நன்றாய் வாழ்ந்து காட்டி அவர்கள் எண்ணத்தை முறியடிக்கிறேன்.” என்றான் கம்சன். அப்போது ஒரு சேவகன் அங்கே வந்து பஹூகா, அந்தகத் தலைவர்களின் மூத்தவன் தொண்ணூறு வயது நிரம்பியவன், ப்ரத்யோதாவின் சிறிய தாத்தா அங்கே வந்திருப்பதாயும், ஏதோ முக்கியவிஷயம் பேசவேண்டும் என்று சொன்னதாகவும் சொன்னான். இந்த வேளையில் இந்தக்கிழவன் இங்கே, எதற்கு வருகிறான்? புருவங்கள் நெரியக் கம்சன் யோசித்தான்.

Sunday, October 25, 2009

அப்பாடா! :D

முந்தாநாள் கூகிளாரா? இல்லை, ப்ளாகரா?? ஒரு ஆட்டு ஆட்டி வச்சுட்டாங்க சிலரை. ஒரு சிலருக்கு எண்ணங்கள் பதிவுக்கு மட்டும் சுட்டி கிடைக்கலை, இன்னும் சிலருக்கு வலைப்பக்கமே திறக்கமுடியலை. சிலருக்கு என்னுடைய எந்தப் பதிவுகளுமே கிடைக்கவில்லை. நானும் கண்ணன் வருவான் பதிவுகளில் வந்த பின்னூட்டங்களை மெயில் மூலம் வெளியிட்டுவிட்டு, பதில் கொடுக்க முயன்றால் திறக்கவே இல்லை. இது அடிக்கடி நடக்கும் ஒன்று என நினைத்து அசட்டையாக குழும மடல்களைப் பார்க்கப்போய்விட்டேன். பின்னர் பதிவுகளை அப்லோட் செய்ய நினைத்து முயன்றால் மீண்டும் வரவில்லை. சைட் விக்கினு ஒண்ணு இருக்கு, புதுசா, அங்கே போய்க் கூட வெளியிடலாம்னு ஒரு செய்தி! திரும்பத் திரும்ப முயன்றதில் இன்னொரு செய்தி, இந்த வலைப்பக்கங்களே இப்போக் கிடையாது, நீ வேண்டுமானால் புதுசா உன்னோட பேரிலே திறந்துக்கோ. sivamgss.blogspot.com பேரிலே இப்போ எதுவுமே இல்லைனு அடிச்சுச் சொல்லுது.

கிட்டத் தட்ட ஒருமணி நேரம் முயன்றும் எதுவும் வரலை. வலைப்பக்க உதவிக்குப் போய்ப் பார்னு எரர் மெசேஜ் சொல்லுது. ஆனால் அங்கேயும் போகமுடியலை. சரினு உதவி கேட்டு ஒரு பதிவு எழுதி குழும மடல்களுக்கும், எண்ணங்கள் பதிவுக்கு ஜிமெயில் மூலமும் அனுப்பினேன். எண்ணங்கள் பதிவிலே வெளியீடு ஆனதா என்னனு பார்க்கமுடியலை. குழுமத்திலும் நிறைய பேருக்கு இதே பிரச்னை இருந்திருக்கிறது அப்புறமாத் தெரிஞ்சது. ஆகையால் உடனே பதிலும் வரலை. மறுபடியும் மெயிலைப் பார்த்தால் கோபி கேட்டிருந்தார் என்ன ஆச்சுனு?? இன்னும் சிலருக்கும் எதுவுமே வரலைனும் தெரிஞ்சது. கணினியை மூடிவிட்டு நிம்மதியா உட்கார்ந்தேன். என்றாலும் கிட்டத் தட்ட எண்ணூறு பதிவுகளுக்கு மேல் எழுதினது. சில பதிவுகள் மொக்கைகள்தானேனு இருந்தாலும், மற்றப் பதிவுகளை அர்த்தமுள்ள பதிவுகள்னு சொல்லிக்கமுடியாது என்றாலும் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தானே? அதுவும் ராமாயணத்துக்கும், இப்போ எழுதற கண்ணன் பதிவுகளுக்கும் பல புத்தகங்கள், கூகிளார் தயவில் பல இடங்களுக்கும் போய்த் தேடிக் குறிப்புகள் எடுத்துனு. அதெல்லாம் போயிடுச்சோனு கொஞ்சம் வருத்தம் தான்.

என்றாலும் பரவாயில்லை, புதுசாவே ஆரம்பிப்போம்னு மனசைத் தேத்திட்டு, மறுபடியும் ஒருமணி நேரம் கழிச்சுக் கணினியைத் திறந்து உடனே வலைப்பக்கம் வராமல், குழும மடல்களைப் பார்த்துட்டு, அங்கே இருந்தே வலைப்பக்கம் முயன்றால் ஆன்மீகப் பயணம் மட்டும் திறந்தது. அங்கே இருந்து உடனே ப்ரொஃபைலுக்கும் போக முடிந்தது. ப்ரொஃபைலே வராமல் இருந்தது. ப்ரொஃபைல் வரவும் அங்கேயே எண்ணங்கள் சுட்டியும் இருந்தது. கோபி பார்த்தப்போ ப்ரொஃபைலிலே எண்ணங்கள் சுட்டியே இல்லைனு வருத்தப்பட்டிருந்தார். அதுவேறே யோசனை. சுட்டி இருந்ததும் க்ளிக்கினால் உடனேயே வந்தது. என்னுடைய உதவி தேவை பதிவு மெயில் மூலம் அனுப்பினதும் வெளியாகி அதுக்கு ரா.ல. பித்தனின் வாக்கு இருவரின் பின்னூட்டங்களும் வந்திருந்தது. மறுநாள் தான் தெரியும் இது மாதிரி பிரச்னை இரண்டு மணி நேரத்துக்கும் மேலே பலருக்கும் இருந்திருக்குனு. செர்வர் பிரச்னை என்று சொன்னார்கள். எப்படியோ எல்லாம் சரியாச்சு இறைவன் அருளாலே. கண்ணன் காத்துட்டு இருக்கான் வரதுக்கு. சீக்கிரமாய் வந்துடுவான். பதில் கொடுத்த அனைவருக்கும், தனி மடலில் விசாரித்தவர்களுக்கும், உதவி கேட்டதுக்கு பதில் சொன்னவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. என்னோட பதிவுகளுக்கும் ரசிகர்கள் இருக்காங்கனும் தெரிய வந்ததில் சந்தோஷமே.

Friday, October 23, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - கண்ணனின் விஸ்வரூபம்!


ஏதோ ஓர் உணர்வு எனக்குள்ளே, என்னைத் தூண்டி விடுவது போல் இருக்கும், எப்போதும். நீ பிறந்ததன் காரணமே வேறே என எதுவோ என் காதுகளில் கூறுவது போல் கேட்கும். எனக்குள்ளே என்னை அறியாமல் சில மாற்றங்களும் ஏற்படத் தொடங்கின. ஒரு சாதாரண மனிதனால் செய்ய முடியாத சில விஷயங்களை நான் அநாயாசமாய்ச் செய்ய முடிந்தது. இது எப்படி என எனக்குப் புரியவில்லை. ஆனால் நான் உண்மையில் வசுதேவனுக்கும், தேவகிக்கும் பிறந்த பிள்ளை என்பதும், கம்சன் என் வாழ்க்கையில், நம் வாழ்க்கையில் விளைவித்து வரும் விளைவுகளையும் கேட்டதுக்கு மறுநாள், நான் வழக்கம்போல் கோவர்த்தன மலை மீது ஏறி அதன் உச்சியில் நின்று கொண்டு யோசித்துக் கொண்டிருந்தேன். சூரியன் தன் பொற்கதிர்களை பூமிக்கு அனுப்ப முயன்று கொண்டிருந்த அந்த வேளையில் என் கண் முன்னே விரிந்ததொரு காக்ஷி. அந்தக் காக்ஷியில் நான் ஒரு பாத்திரமாக இருந்து கொண்டே, அந்தக் காக்ஷியை வேறொரு நபராகவும் பார்த்து அனுபவித்துக் கொண்டிருந்தேன்.

“இந்தப் பூவுலகில் இப்போது மறைந்து கொண்டிருக்கும் தர்மம், சநாதன தர்மம் கொஞ்சம் கொஞ்சமாக நிலை பெறுவதையும், தீமைகள் அழியத் தொடங்குவதையும் கண்ணாரக் கண்டேன். அதே சமயம் மக்கள் யாவரும் தர்மத்தின் பாதையில் செல்லாதவர்களையும் தர்மத்தின் பாதையில் செலுத்த ஆரம்பிப்பதையும் என் கண்களால் கண்டேன். ஆனால், ஆனால், …” தயங்கினான் கண்ணன். “ கண்ணா, மேற்கொண்டு என்ன சொல், உன் வாயால் அவற்றைக் கேட்கவே நான் காத்திருக்கிறேன்.” என்றார் அக்ரூரர். “அந்த தர்மம் விண்ணையும், மண்ணையும் மட்டுமில்லாமல் இந்தப் பிரபஞ்சம் பூராவையும் தன் கரங்களால் அரவணைப்பதைக் கண்டேன் அக்ரூரரே! விண்ணுக்கும், மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுத்து நிற்கக் கண்டேன். இதுக்கெல்லாம் காரணகர்த்தா….. “ மீண்டும் தயங்கினான் கிருஷ்ணன். “அப்புறம்?” என்றார் அக்ரூரர். “அப்புறம் என்ன அந்தக் காக்ஷி சிறிது நேரத்திலேயே மறைந்து போனது.” என்றான் கண்ணன். “அவ்வளவு தானா??”

”ஆம், ஆனால் உண்மையில் அவை காக்ஷிகளாக எனக்குத் தெரியவில்லை. உண்மையான என் வாழ்க்கையை நான் வாழ்வதைப் போலவே இருந்தது. மேலும் அந்தச் சமயம் நான் வெறும் வசுதேவக் கிருஷ்ணனாகவோ, அல்லது கோகுலத்து கோவிந்தனாகவோ, விருந்தாவனத்துக் கண்ணனாகவோ இல்லை.”

“பின்??”

“என்னை நானே அந்தப் பர வாசுதேவனாக உணர்ந்தேன் அக்ரூரரே! இவை அனைத்துமே என்னிலிருந்தே தோன்றியதாகவும், என்னிலே அடங்குவதாகவும் உணர்ந்தேன். தர்மத்தின் பிறப்பிடமும், இருப்பிடமும், அடங்குமிடமும் நானே என உணர்ந்தேன்.” அக்ரூரர் இப்போது தன்னையும் அறியாமல் மரியாதை கலந்த பக்தியோடு, கண்ணனிடம் மிகவும் மெதுவாய்க் கிசுகிசுப்பான குரலில், “ பின்னர்?” என மீண்டும் கேட்டார். ‘நான் திரும்ப விருந்தாவனம் வந்தேன். எல்லாமே மாறுபட்டுத் தெரிந்தது எனக்கு. என் கோகுலத்து உறவுகள் அனைத்துமே என்னுள் அடங்கினவர்களாகவும், அவர்களின் செயலுக்கும், சொல்லுக்கும் நானே காரணகர்த்தா எனவும் தெரிந்து கொண்டேன். அவர்களை சாதாரண உறவு முறையுள்ளவர்களாக என்னால் பார்க்கமுடியவில்லை. அவர்களை விட நான் எவ்வளவோ பெரிய மனிதன் என்ற உணர்வு என்னை அறியாமல் ஏற்பட்டது. நீ இந்த விருந்தாவனத்து மக்களோடு வாழமட்டும் பிறக்கவில்லை என என் காதுகளில் எதுவோ வந்து சொல்லிக் கொண்டே இருந்தது. கர்காசாரியாரும் அதை உறுதி செய்தார். கம்சனின் அழிவு என் மூலம் தான் என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனாலும் இவை அனைத்துமே என்னுடைய பிரமையோ என்ற எண்ணமும் என்னை விட்டுப் போகவில்லை. ஆகவே நான் காத்திருந்தேன்.”

“எதற்காக, மகனே, எதற்குக் காத்திருந்தாய்?” அக்ரூரர் கேட்டார். “நான் எதுவும் செய்யக் கூடியவன் என்பது எனக்கு உறுதி பட்டு விட்டது எனினும் அதற்கு ஒரு அடையாளம், அல்லது குறிப்பிட்ட சைகை எதுவானும் எனக்குத் தெரியவேண்டும். நான் என்னைப் பற்றி நினைப்பது சரிதான் என்பதை உறுதி செய்யும் ஒரு குறியீடு, அது தெரியவேண்டும் எனக்கு. அப்போது தான் நான் என் வேலைகளில் முன்னேற முடியும்.என் நோக்கமும், நான் பிறந்ததின் அர்த்தமும் சரிவர நிறைவேற்றப் படும். அதை உறுதி செய்யும் விதமாகவே நான் இந்திரவிழாவைப் பயன் படுத்திக் கொண்டேன். அந்த விழாவை இந்திரனுக்காக எடுக்க விடாமல் என் மக்களைச் சமாதானம் செய்து, இந்திரனைக் கண்டு பயந்த அவர்களை கோவர்தன மலைக்கு விழா எடுக்க வைத்தேன். அப்போது எனக்குக் கிடைத்தது அந்த நல்ல சகுனக்குறியீடு. என் வேண்டுதலுக்குக் கட்டுப் பட்டு கோவர்தன மலையானது இரண்டு முழங்களுக்கு மேல் உயர்ந்தது. “

பக்தியோடு பயமும் கலந்தவண்ணம் கண்ணனைப் பார்த்தார் அக்ரூரர். அவருக்கு அப்போது கண்ணனைச் சுற்றி இந்த அகில உலகமும் சுழல்வது கண்களில் காண முடிந்தது. சூரிய, சந்திரர், நக்ஷத்திரங்கள், பூமி, ஆகாயம் எல்லாமே அவனோடு சேர்ந்து சுழல்வது போலவும், கண்ணனின் குரலோ, எல்லையில்லாத, முடிவற்ற அந்தப் பரம்பொருளின் குரல் போலவும் ஆழ்ந்து எங்கோ தூரத்தில் இருந்து கேட்பது போலும் கேட்டது. அக்ரூரர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சங்கு, சக்ரங்களோடு, விண்ணுக்கும், மண்ணுக்குமாய் அந்தக் கிருஷ்ணன் விஸ்வரூபம் எடுத்து நிற்பது போல் உணர்ந்தார். அவரை அறியாமல் அவர் கைகள் கூப்பின. “வாசுதேவா, பர வாசுதேவா, எல்லையற்ற பரம்பொருளே!” என்றன அவர் வாய். குனிந்த கண்ணனின் பாதங்களில் விழுந்த நமஸ்கரிக்க எண்ணிக் குனிந்த அவருக்குத் திடீரெனத் தாம் குருடாகிவிட்டோமோ என்ற எண்ணம் தோன்றியது. ஒரு கணம் எதுவுமே தெரியவில்லை, புரியவும் இல்லை. என்ன நடந்தது என நிதானிப்பதற்குள்ளாக, அவர் கண்ணன் தம்மை வணங்க வருவதையும், தம் கைகள் கிருஷ்ணனின்கைகளைத் தடுத்துக் கொண்டிருப்பதையும் கண்டார். அக்ரூரர் காதுகளி, “ வாசுதேவா, பர வாசுதேவா, எல்லையற்ற பரம்பொருளே!” என்னும் வார்த்தைகள் எங்கோ ஆழ் கடலுக்குள்ளிருந்து கேட்பது போலவும், “வாசுதேவன் நானே!” என்னும் பதில் குரலும், எங்கோ தூரத்திலிருந்து கேட்பது போலவும் கேட்டது. திரும்பத் திரும்ப எதிரொலிப்பது போல் கேட்டுச் சற்று நேரத்தில் தேய்ந்து போனது அந்தக் குரல்கள். அக்ரூரருக்கு இப்போது ரதத்தில் தம் எதிரே அமர்ந்திருந்த அந்த இளம் வாலிபனின் சுந்தர முகமும், அந்த முகமும், கண்களும் தம்மைப் பார்த்துச் சிரிப்பதையும், இந்த இளைஞனை எவராலும் வெறுக்கவே முடியாது அப்படிப்பட்ட முகராசி உள்ளவன் இவன் என்பதும், அனைவராலும் இவன் நேசிக்கப் படுவான் என்பதும் புரிந்தது. தம் கண்களைத் தேய்த்துக் கொண்டார். நடந்தவை அனைத்தும் கனவா? இல்லை நனவா? நான் தூங்குகிறேனா? விழித்திருக்கிறேனா??

“வாசுதேவா, அவ்வளவு தான்!’இந்தக் குரலை நான் தூக்கத்தில் கேட்டேனா? விழித்துக் கொண்டே கேட்டேனா??” அக்ரூரருக்கு ஒண்ணுமே புரியலை. “மாமா, அதோ பாருங்கள் ஒரு பெரிய மரமும், அதன் நிழலும். எவ்வளவு பெரிய மரம்?? அதன் நிழல் எப்படிப் படர்ந்திருக்கிறது??யமுனைக்கரையில் இந்த மரமும், அதன் நிழலும் எத்தனை சுகம்?? நாம் இங்கே சற்றே தங்கி இளைப்பாறிச் செல்லலாமா? யமுனையில் குளிக்கவேண்டும்போல் எனக்கு ஆசையாய் உள்ளது.” சிறு குழந்தை போல் குதூகலித்துச் சொன்னான் கிருஷ்ணன். “நீ விரும்பிய வண்ணமே செய்யலாம், குழந்தாய்!” என்றார் அக்ரூரர். பலராமன் தான் ரதத்திலேயே தூங்கப் போவதாகவும், குளிக்க வரவில்லை என்றும் சொல்லிவிட்டு, கம்சனை எதிர்கொள்ளும் அளவுக்கு பலத்தைச் சேகரித்துக் கொள்ளப் போவதாயும் சொன்னான். கண்ணனும் அதை ஆமோதித்தான். அக்ரூரர் யமுனையில் இறங்கிக் குளிக்க ஆரம்பித்தார். என்ன இது?? அவரோடு குளிப்பது அந்த வாசுதேவனோ அல்லவோ?? கண்ணைக் கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தார் அக்ரூரர். மீண்டும் மீண்டும் அவருக்குத் தன்னுடன் குளிப்பது அந்தப் பரவாசுதேவனாகவே தெரிந்தது. அவனோடு சேர்ந்த அனைத்து மனிதர்களும், அவர்களில் கிருஷ்ணனும் தெரிகின்றானே?? கடவுளே என்ன இது? நான் பைத்தியம் ஆகிவிட்டேனா? மீண்டும் தலையை உலுக்கிக் கொண்டு பார்த்தார் அக்ரூரர். கிருஷ்ணன் நீராடிக் கொண்டிருந்தான். அவரைப் பார்த்துச் சிரித்தான். கடவுளே இந்தச் சிரிப்பு??? உன்னுடைய விதியே என் கையில் என்று என்னைப் பார்த்துச் சொல்லுகிறதே!

உதவி தேவை!

We're sorry, but we were unable to complete your request.

When reporting this error to Blogger Support or on the Blogger Help Group, please:

    * Describe what you were doing when you got this error.
    * Provide the following error code and additional information.

bX-59cppw
Additional information
host: sivamgss.blogspot.com
uri: /2009/10/blog-post_21.html

This information will help us to track down your specific problem and fix it! We apologize for the inconvenience.
Find help

See if anyone else is having the same problem: Search the Blogger Help Group for bX-59cppw
If you don't get any results for that search, you can start a new topic. Please make sure to mention bX-59cppw in your message.

ஹிஹிஹி, காலம்பர வலைப்பக்கம் போக முடிஞ்சது. இப்போ எந்த வலைப்பக்கமும் திறக்கலை. இந்த போஸ்ட் வருதானும் பார்க்க முடியாது. மெயில் மூலம் அனுப்பறேன். என்ன செய்யறதுனு தெரிஞ்சவங்க மெயில் அனுப்புங்க. கமெண்டினாலும் மெயிலுக்கு வரும். இது பொதுப் பிரச்னை மாதிரித் தான் தெரியுது என்றாலும் ஒரு மணி நேரத்துக்குள் எப்போவும் சரியாகிடும். இன்னிக்குத் தொடர்வதால் கொஞ்சம் யோசனை. தனிப்பட்ட பிரச்னை இல்லைனு நினைக்கிறேன். எதுக்கும் அனுப்பி வைக்கிறேன்.

Wednesday, October 21, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், - கண்ணனுக்குப் புரிந்துவிட்டது!

பலராமன் அக்ரூரரிடம், “கம்சன் உங்களுக்கு வலைவிரிக்கும்வரையில் நீங்கள் ஏன் அசட்டையாக இருந்தீர்கள்? “ என்று கேட்டான். “

“நாங்கள் முட்டாள்கள், அதுவும் ஒரு வருடம் இருவருடம் அல்ல, பல வருடங்கள் முட்டாள்களாய்க் கம்சனுக்குக் கீழ்ப்படிந்து இருந்துவிட்டோம். கம்சன் ஒரு வஞ்சகன். பெரும்பாலான அந்தகர்கள் ப்ரலம்பனுக்குக் கீழே ஒன்று சேர்ந்து இருந்துவிட்டனர். அவனுடைய பிரதானத் தளபதியான ப்ரத்யோதாவோ மிகவும் பலமுள்ளவனாகவும், கம்சனிடம் அதீத விஸ்வாசமுள்ளவனாகவும் இருந்துவிட்டான். எங்கள் பக்கம் ஆட்களே இல்லாமல் போயிற்று.” என்றார் அக்ரூரர்.

கண்ணன் அப்போது குறுக்கிட்டு, “இவனைப் போன்ற ஒரு கொடியவனை இவ்வளவு வருடங்கள் வளரவிட்டதே மாபெரும் தவறு. அது போகட்டும், இன்று என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று கேட்டான். “ம்ம்ம்ம்ம்ம்., இன்றோ, நாளையோ, தநுர்யாகத்தின் கடைசி நாளோ, தெரியலை, அவன் ஒரு கடைசி முடிவு எடுப்பான். அந்த முடிவு நமக்கெல்லாம் ஒரு பேரழிவாக இருக்கக் கூடும். நம் அனைவரையும் ஒருசேரக் கொல்லத் தயங்க மாட்டான் கம்சன்.” என்றார் அக்ரூரர்.

“எனில் எங்களை ஏன் இங்கே வரவழைத்தான் கம்சன்? எங்களையும் சாகடிக்கவா?” பலராமன் கேட்டான்.

அக்ரூரரால் பேசமுடியவில்லை. பின்னர் தன் வார்த்தைகளைத் தானே எண்ணிப் பார்த்துக் கொள்ளுவது போல், நிதானமாய்ப் பேச ஆரம்பித்தார். “அவனுக்குக் கிருஷ்ணனைக் கொல்லவேண்டும். கிருஷ்ணன் உயிருடன் இருந்தால் நாரதர் சொன்ன தீர்க்க தரிசனம் பலித்துவிடும், ஆகையால் முதலில் கிருஷ்ணனைக் கொல்லவேண்டும், அதுவே அவன் எண்ணம்.” தனக்குள்ளேயே வார்த்தைகளை அளந்து பேசுவது போல் பேசினார் அக்ரூரர். கிருஷ்ணன் பெரிதாகச் சிரித்தான். சிரிப்பைக் கேட்ட அக்ரூரருக்குச் சில்லிட்டது. இந்தச் சிரிப்பு! சாதாரண மானுடனின் சிரிப்பா? இல்லை, இல்லை, உலகத்து மக்கள் அனைவரின் விதியையும் அறிந்த ஒருவனின் சிரிப்பாக அல்லவோ காணப்படுகிறது. அனைவரின் விதியும் என் கையிலே என்ற அர்த்தம் நன்கு புலப்படுகின்றதே. அக்ரூரர் முதல்முறையாகக் கண்ணனைப் புரிந்து கொண்டார். இவன் சாமானியனே அல்ல. இவனின் தன்னம்பிக்கையும் சாதாரணமானதே அல்ல. இவன் சிரிப்பிலேயே இவ்வளவு அர்த்தம் பொதிந்து கிடக்கிறதே! நம்பிக்கையின் ஊற்றுக் கண்ணனிடமிருந்து அக்ரூரருக்கும் பாய்ந்தது.

“அவனால் என்னைக் கொல்ல முடியாது. நான் தான் அவனைக் கொல்வேன்.” உறுதியான குரலில் கண்ணன் சொன்னான்.

“எப்படி அறிவாய் நீ?” அக்ரூரர் கேட்டார்.

“குரு கர்கரும், குரு சாந்தீபனியும் சொன்னார்கள்.”

“கண்ணா, அவர்கள் எங்களின் பல வருடத் துயரைப் பற்றிச் சொன்னார்களா? நாங்கள் அனுபவித்து வரும் துயரை நீ புரிந்து கொண்டாயா?”

“கம்சனின் அனைத்து துர் நடத்தைகளையும் எனக்குச் சொன்னார்கள்.”

“குழந்தாய், கண்ணா, உனக்குப் புரிந்திராது, நாங்கள் எத்தகையதொரு துக்கத்தையும், கஷ்டங்களையும் அனுபவித்தோம் என்று. இத்தனை கஷ்டங்களுக்கிடையிலேயும், இத்தனை நாள் வாழ்ந்திருக்கிறோம் என்பதே எனக்கு ஆச்சரியமாக உள்ளது. ஆனால் அத்தனையும் எதனால் தெரியுமா? நீ வருவாய், எங்களைக் காப்பாய் என்ற ஒரே நம்பிக்கையில் தான். உன் தாத்தாவும், யாதவகுலத் தலைவரும் ஆன உக்ரசேனரைச் சிறையில் வைத்திருக்கிறான் கம்சன். உன் தாயும், தந்தையுமோ எனில் ஒவ்வொரு நாளும் நரகத்தில் வாழ்வது போல் வாழ்கின்றனர். உன் கூடப் பிறந்த சகோதரர்கள் ஆறு பேர் என் கண்ணெதிரே கம்சனால் பிறந்த உடனேயே கொல்லப் பட்டனர். பலராமனை எப்படிக் கஷ்டப்பட்டு மாற்றினோம் தெரியுமா? அவனாவது பிறக்கும் முன்னரே எடுத்து மாற்றப் பட்டான். ஆனால் நீ? பிறந்துவிட்டாய்! பிறந்த குழந்தையான உன்னை கோகுலத்துக்குக் கொண்டு நந்தனிடம் கொடுத்து, வளர்க்கச் சொல்லி! எல்லாம் எதுக்காக? என்றாவது ஒருநாள் நீ வருவாய்! நாரதர் சொன்னாப்போலவே கம்சனை உன் கைகளால் கொல்வாய். எங்கள் துன்பத்தைப் போக்குவாய்! என்ற நம்பிக்கையில் தான். வேத வியாசரும் இதையே தான் உறுதி செய்தார்.” பேசும்போதே அக்ரூரரின் கண்களில் கண்ணீர் ததும்பியது.

“மாமா, அழாதீர்கள், அழவேண்டாம், நான் தான் வந்துவிட்டேனே!” கண்ணனின் குரலை அழும்பிள்ளையைச் சமாதானம் செய்யும் தகப்பனின் தொனி. “ நான் அறிந்து கொண்டேன் மாமா. கம்சன் எவ்வாறு யாதவ குலத்தை நாசம் செய்து வந்திருக்கிறான் என்பதை அறிந்து கொண்டேன். அவர்கள் நிலம், பலம், சுகம், போகம், செல்வம் என அனைத்தையும் அபகரித்திருக்கிறான். பலம் பொருந்திய சிலரை மதுராவை விட்டு வெளியேயும் தள்ளிவிட்டான். ம்ம்ம்ம்ம்ம் நான் பிறக்கும் முன்பும், பிறந்த பின்பும் யாதவகுலப் பெண்மணிகளில் சின்னஞ்சிறு குழந்தைகள் அவனால் கொல்லப் பட்டன என்பதையும் நான் அறிந்தேன். “ கண்ணன் மெதுவான குரலில் பேசினாலும் அதில் தெரிந்த தீர்மானமும், உறுதியும், குரலின் தொனியும் கேட்பவர் எலும்பைச் சில்லிட வைத்தது.

“ஆம், கண்ணா, தான் யாருக்கும் பதில் சொல்லவேண்டியதில்லை என நினைத்துவிட்டான்.” என்றார் அக்ரூரர்.

“தர்மத்தை விட்டு விலகி விட்டான் வெகுதூரம் !” கண்ணனின் குரலின் அசாதாரணத் தொனியைக் கண்ட அக்ரூரர் உடல் சிலிர்க்க அவர் மனம் இன்னமும் உறுதிபடக் கண்ணனின் மேல் நம்பிக்கை வளர ஆரம்பித்தது. “கண்ணா, உன்னுடைய முக்கியமான வேலை, நீ பிறந்ததின் காரணம் அறிந்தாய் அல்லவா?” அக்ரூரர் கேட்டார், “ஆம்” என்றான் கண்ணன்.

“எப்படி, கண்ணா, எப்படி? எப்போது நீ இவற்றைப் புரிந்து கொண்டாய்?”

“பலநாட்களாகவே என்னுள் ஏதோ மாற்றங்கள். என்னனு புரியாமல் இருந்தது. ஆனால் ஆனால்” கண்ணன் யோசனையுடன் தொலை தூரத்தைப் பார்த்த வண்ணம் பேசினான்.” குரு கர்கரோடு, குரு சாந்தீபனியும் வந்து நான் உண்மையில் யார் என்பதைத் தெரிவித்தார்கள். அன்று எனக்குள் குழப்பம். மறுநாள் நான் கோவர்தன மலையின் உச்சிக்குப் போய் அங்கே இருந்து சுற்றிலும் பார்த்தேன். உதயம் ஆகிக் கொண்டிருந்த சூரியனைப் பார்த்தேன். வேகமாய் ஓடிக் கொண்டிருந்த யமுனையைப் பார்த்தேன். சூரியன் உதயம் ஆகிக் கிரணங்கள் பூமியில் பட்டன. அப்போது!........ கண்ணன் நிறுத்தினான். “ மாமா, நான் சொல்லலாமா உங்களிடம்? நீங்கள் என்னைச் சரியாகப் புரிந்து கொள்வீர்களா? அல்லது நான் கேலிக்கு உள்ளாவேனா?”

"இல்லை, கண்ணா, சொல், நீ என்ன உணர்ந்தாய் என்பதைச் சொல், நான் சரியாகவே புரிந்து கொள்வேன்," என்றார் அக்ரூரர். கண்ணன் தொடர்ந்தான்.

Sunday, October 18, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்! மதுராவை நோக்கி!

அன்று விடிகாலையிலேயே நந்தன் தன் ஆட்களுடனும், கம்சனுக்கான கப்பப் பொருட்களுடனும், தன் வண்டிகளைத் தயார் செய்து மதுராவை நோக்கிய பிரயாணத்தை ஆரம்பித்துவிட்டான். அக்ரூரரும் தான் வந்த ரதத்தின் குதிரைகளைத் தயார் செய்து, அவற்றை ரதத்தில் பூட்டிக் கிளம்பத் தயாராக விருந்தாவனத்தின் வெளிநகரில் கண்ணன் வரவுக்காகக் காத்திருந்தார். விருந்தாவனத்திலோ, கிருஷ்ணனுக்கும், பலராமனுக்கும் விடைபெற்றுக் கொள்ளப்பல நண்பர்கள், பெரியோர்கள், சிறியோர்கள், ஒத்த வயதுடைய இளைஞர்கள், இளம்பெண்கள். ஒருவர் பாக்கி இல்லாமல் அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டிருந்தனர் என்றாலும் விருந்தாவனத்து மக்களுக்கு அவர்களின் கண்ணின் கருமணியான கண்ணன் அங்கிருந்து செல்வதில் அவ்வளவு இஷ்டம் இல்லைதான். என்றாலும் கம்சனின் வார்த்தையை மீற முடியாதே! கண்ணனைப் பார்க்க அனைவரும் கூடிவிட்டனர். அவர்களோடு கூட விருந்தாவனத்து ஆவினங்களும் கூடிவிட்டன, கண்ணன் பிரிவைத் தாங்க முடியாமல். சற்றுத் தொலைவில் இருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அக்ரூரருக்கோ ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம். கிராம மக்கள் புடை சூழ வந்து கொண்டிருந்த அந்தக் கூட்டத்தில் தன் தலையில் சூடி இருந்த மயிலிறகால் கண்ணன் தனித்துத் தெரிந்தான். பலராமனோ எனில் அவனுடைய கட்டுமஸ்தான தேகத்தால் தனித்துக் காணப்பட்டான். இருவரும் அக்ரூரர் நின்று கொண்டிருந்த இடத்தின் அருகே வந்ததும், அக்ரூரரை நமஸ்கரித்துவிட்டுப் பின்னர் அந்தக் கூட்டத்தின் ஆரம்பத்தில் விம்மி விம்மி அழுது கொண்டிருந்த யசோதையை நோக்கினார்கள்.

இத்தனை வருஷங்களாய்த் தான் வளர்த்த தன் அருமை மகன் தன்னுடையவன் அல்ல என்னும் உண்மையையே யசோதையால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதோடு அவனைக் கம்சன் அழைத்திருப்பதையும், அங்கே அவனுக்குக் காத்திருக்கும் நிகழ்வுகளையும் எண்ணும்போது யசோதையின் இதயம் வெடித்துச் சுக்குநூறாகிவிடும்போல் இருந்தது. கண்ணன் தன் தாயின் கால்களில் விழுந்து நமஸ்கரித்தான். இந்த நிமிஷம் வரையிலும் தான் வசுதேவருக்கும், தேவகிக்கும் பிறந்த பிள்ளை என்ற நினைப்பே இல்லாமல் தன்னை ஒரு இடைப்பிள்ளை என்றே எண்ணி இருந்த கண்ணன் அந்த நினைப்பு மாறாமலேயே தன் தாயைத் தேற்றினான். யசோதையோ தன் உயிரே தன்னை விட்டுப் பிரிகிறதே என்ற துக்கத்துடன் கண்ணனை இரு கரங்களாலும் தூக்கி அவனைக் கட்டி அணைத்துவிட்டு பலராமனையும் ஆசீர்வதித்தாள். அதோ! அது யார்? மணப்பெண்ணின் உடையில் இத்தனை அழகோடும் யெளவனத்தோடும்? ஆனால் முகம் மகிழ்வாய்த் தெரியவே இல்லையே. உலகத்து சோகமெல்லாம் அந்த முகத்தில் குடி கொண்டிருக்கிறதே! ஆஹா, இவள் நம் ராதை தான். திருமண உடையில் காட்சி கொடுக்கிறாளே. ஆம், கண்ணன் வாக்களித்திருந்தபடி அவளைத் திருமணம் செய்து கொண்டிருந்தான். உடனேயே மதுரா செல்லவும் தயாராகிவிட்டான். அங்கே பெரியோர் பலரும் இருப்பதால் புது மணப்பெண்ணுக்கே உரிய இயல்பான நாணமும், மரியாதையும் வெளிப்படையாகத் துலங்கத் தன் முகத்தை முந்தானையின் ஒரு பகுதியால் மூடிக் கொண்டிருந்தாள் ராதை. மேகங்கள் சூழ்ந்த வான மண்டலத்தில் அவ்வப்போது வெளிக்கிளம்பும் சூரியனைப் போலவும், அவனின் ஒளிவீசும் கிரணங்களைப் போலவும், துக்க மேகம் சூழ்ந்த அவள் முகத்தின் இரு கண்களில் இருந்து “பளிச், பளிச்” என ஒரு ஒளி,அதிலிருந்து ஒரு தீவிரச் செய்தி கண்ணனுக்குப் போய்க் கொண்டே இருந்தது. வைத்த கண் வாங்காமல் சில சமயம் கண்ணனையே பார்த்தவண்ணமும் இருந்தாள் ராதை. கண்ணன் புரிந்து கொண்டானா? ஆம், புரிந்து கொண்டவனாகவே காணப்பட்டான் கண்ணனும். அவ்வப்போது அவனும் ராதை இருக்குமிடம் நோக்கி ஒரு சிறு புன்னகையாலும், ஒரு சிறு கண் சிமிட்டலாலும், தலை அசைப்பாலும் தன் பதிலை அவளுக்குத் தெரிவித்துக் கொண்டிருந்தான். இந்த உலகிலேயே நீ தான் எனக்கு முக்கியம் வேறு யாருமில்லை எனத் தெளிவாய்ச் சொல்லிற்று ராதையின் கண்களும், முகமும். கண்ணனும் அதைப் புரிந்து கொண்டாற்போலவே பதிலும் கொடுத்தான். அனைவரும் கூடி இருக்கும் இந்த மக்கள் கூட்டத்தில் தாங்கள் இருவர் மட்டும் தனித்து உரையாடுவதோ, அல்லது ராதையிடம் கண்ணன் தனித்துப் பேசி விடைபெறுதலோ சாத்தியமில்லை என்பதையும் இருவரும் உணர்ந்திருந்தனர்.

எதுவும் ஒரு முடிவுக்கு வந்துதானே ஆகவேண்டும். நேரம் ஆகிவிட்டது. அக்ரூரர் அவசரப் படுத்தினார். அனைவர் கண்களும் குளமென நிரம்பி வழிய, கண்ணன் அரை மனதோடு வேகமாய்த் திரும்பி ரதத்தில் ஏறிக் கொண்டிருந்த பலராமனைப் பின் தொடர்ந்து தானும் ஏறிக் கொண்டான். அக்ரூரர் தன் சாட்டையைச் சொடுக்கினார். ராதைக்குத் தன் உயிரை யாரோ சொடுக்குவது போல் பட்டது. குதிரைகள் ஓட ஆரம்பித்தன. தன் உயிரும், உடலும், பார்வையும், நினைவும், உறக்கமும், விழிப்பும், கனவும், நனவும், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் அனைத்தும் தன்னிடமிருந்து விலகி வேறாக நின்று தன்னைப் பார்த்து எள்ளி நகையாடுவது தெரிந்தது ராதைக்கு. ஓடிக் கொண்டிருந்த ரதத்தையே பார்த்துக் கொண்டிருந்த ராதைக்கு நிற்க முடியாமல் தன் அருகில் இருந்த யசோதா அம்மாவின் கரங்களைப் பிடித்துக் கொண்டாள். நடப்பது என்னவென யசோதை நிதானிப்பதற்குள்ளாக, ராதை வாயிலிருந்து, “க்றீச்” என இயலாமையுடன் கூடிய ஒரு நெஞ்சைப் பிளக்கும் சப்தம் வந்தது. அடுத்த கணம் ராதை மயக்கம் அடைந்து கீழே விழுந்தாள்.

அனைத்தையும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த அக்ரூரருக்குக் கண்ணனின் இந்தக் காதலால் கண்ணன் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கை ஆட்டம் கண்டது என்றே சொல்லலாம். இந்தப் பையன் விளையாட்டுப் பிள்ளை, தலையில் மயில் பீலியைச் சூடிக் கொண்டு தலை மயிர் முகமெங்கும் வழிய, இத்தனை அழகோடும், வனப்பான தேகத்தோடும், அனைவரையும் கவரும் வண்ணமான இயல்போடும் கூடிய இந்த இளைஞனுக்காகவா இத்தனை நாட்கள் காத்திருந்தோம்? கிருஷ்ணன் செய்த ஒவ்வொரு அற்புதச் செயல்களையும் பற்றிக் கேள்விப்பட்டபோதெல்லாம் நினைத்த அவருடைய ரக்ஷகன் கிருஷ்ணன் இவன் தானா? அனைவராலும் சொல்லப் பட்ட பெரிதும் பாராட்டப் பட்ட அந்த வீரச் செயல்களை எல்லாம் செய்தது இவனா? அல்லது இதோ பலவானாக நிற்கின்றானே இவன் அண்ணன இவன் செய்ததோ ? இல்லாட்டி விருந்தாவனத்து மக்களின் அதீதக் கற்பனையோ? ம்ம்ம்ம்ம்???இந்தப் பையன் கிருஷ்ணன், இந்த விருந்தாவனத்துப் பெண்களின் கண்மணி என்றும் சொல்கின்றனர். அனைத்துப் பெண்களின் மனதிலும் இடம்பிடித்துள்ளான் இவன் இந்த ச்சிறு வயதிலேயே. ம்ம்ம்ம்ம்??? மேலும் இவன் இந்தப் பெண்களோடு கூடி யமுனைக்கரையில் “ராஸ்” எனப்படும் நாட்டியத்தை ஆடிப் பாடுவானாம். புல்லாங்குழல் இசைப்பானாமே! ஆனால் நேற்று இரவு திடீரென இந்தக் கிராமத்து இடைப்பெண் ஒருத்தியை உடனேயே திருமணம் செய்து கொள்ளவேண்டும் எனப் பிடிவாதம் பிடித்துத் திருமணமும் செய்து கொண்டுவிட்டானே? பெண்களிடம் அதிக மோகம் கொண்டவனோ? இவன் எப்படிக் கம்சனை எதிர்கொள்ளப் போகிறான்? கர்காசாரியார் அவ்வளவு உயர்வாய்ச் சொன்னாரே, இவனைப் பற்றி. அவர் ஒருவேளை தன் மாணாக்கன் என்பதால் மிகைப்படுத்திச் சொல்லி இருப்பாரோ? இவனைப் பார்த்தால் நாரதர் சொன்ன தீர்க்க தரிசனத்தில் உள்ள நம் ரக்ஷகன் அடையாளங்கள் எதுவும் காணப்படவே இல்லை. இவனைப் பார்த்தால் ஒரு அருளாளன் போலவும் தென்படவே இல்லை. ம்ம்ம்ம் என்றாலும் இளைஞன். வசீகரமானவன். அதுதான் சொல்லிக் கொள்ளும்படியான ஒன்று.

கண்ணன் அக்ரூரரைப் பார்த்துச் சிரித்தான். அக்ரூரருக்குத் தூக்கிப் போட்டது. என்ன இவன்? சிரிப்பு இப்படி இருக்கிறது? அவன் உதடுகளால் மட்டும் சிரிக்கவில்லை. கண்களும் சிரிக்கின்றன. இது என்ன ஆச்சரியம் அவன் கன்னங்களும் சிரிப்பால் குழைந்து ஒளிவிடுகின்றன. ஆஹா, அவன் உடலே சிரிப்பால் ஒரு தீபத்தை ஏற்றியது போல் காட்சி அளிக்கிறதே. அக்ரூரரால் திரும்பிச் சிரிக்காமல் இருக்கமுடியவில்லை. அவரும் சிரித்தார். கண்ணன் கேட்டான், “ மாமா, என் தகப்பன் நந்தன் எப்போது மதுரா வந்தடைவார்? நமக்கு முன்னேயே போய்விடுவாரா?”

“அவங்க மதியத்துக்குள் போவார்கள். நாம் சில நாழிகைகளில் சென்றுவிடலாம். அருமையான குதிரைகள் நம்முடையவை. வேகமாய்ச் செல்லும் திறன் கொண்டவை.” என்றார் அக்ரூரர். மிகவும் கஷ்டத்துடன் தன்னுடைய பெரிய உடலை உள்ளே நுழைத்துக் கொண்டு, கால்களை ரதத்தின் வெளியே தொங்கப் போட்டிருந்த பலராமன் குதிரைகள் ஓடும் டிக் டாக் டிக் டாக் சப்தத்தைத் தான் மிகவும் ரசிப்பதாய்ச் சொன்னான். அக்ரூரரை இன்னும் வேகமாய் ரதத்தைச் செலுத்தச் சொன்னான். அக்ரூரர் அண்ணனுக்கும், தம்பிக்கும் உள்ள வித்தியாசங்களை எண்ணி வியந்தார். அண்ணனோ வயதுக்கு மீறி வளர்ந்திருந்தாலும் ஒரு சிறு குழந்தை போல் குதிரைகள் ரதம் ஓட்டுவதையும், அவற்றின் வேகத்தையும் ரசித்துச் சிரிக்கிறான். ஆனால் அவனை விடச் சின்னவனான தம்பியோ தன்னை உணர்ந்தவனாய், தனக்குள் கட்டுப்பாடு விதித்துக் கொண்டவனாய், இந்த அனுபவம் தனக்கு ஒன்றும் புதியதல்ல, என்னும் பாணியில் அமர்ந்திருக்கிறான். “மாமா, தந்தை அங்கே போய்ச் சேரும் முன்னர் நாம் செல்வது சரியாய் இருக்குமா?” கண்ணன் கேட்டான் அக்ரூரரை. “ம்ம்ம்ம்ம்ம் நீங்கள் மிகவும் வேண்டிக் கொண்டதால் உங்களோடு வந்தேன். இல்லை எனில் தந்தையோடு மாட்டு வண்டிகளிலோ அல்லது நடந்தோ செல்வதையே நான் விரும்புவேன்.” என்றான் கண்ணன் மேலும். அக்ரூரருக்கு ஒரே வியப்பு. தன் தகப்பன் நந்தன் இல்லை எனத் தெரிந்தும் இன்னும் நந்தனையே தந்தை எனச் சொந்தம் கொண்டாடும், கண்ணனை நினைத்து வியந்தார். அதுவும் பரிபூரண மனதோடு சொல்லும் வார்த்தைகள் என்பதையும் அக்ரூரரால் உணரமுடிந்தது. கண்ணனைப் பார்த்து, “மதுராபுரி முழுதும் உனக்காகவே காத்திருக்கிறது. உன் வரவை எண்ணியே அனைத்து மக்களும் தவம் கிடக்கிறார்கள். அவர்களுக்குப் பொறுமை போய்விட்டது. வசுதேவரும், தேவகியும் உன்னை எப்போது காண்போம் என ஆவலோடு இருக்கின்றனர்.” என்றார்.
”பதினாறு வருடங்கள் காத்திருந்த என்னைப் பெற்ற என் தாய், தந்தையருக்கு, இந்த சில நாழிகைகள் காத்திருக்க முடியாதா? ஆனால் மாமா, என் தந்தையான நந்தன் மாட்டு வண்டியிலோ அல்லது நடந்தோ மதுராவை நோக்கி வரும் வேளையில் நான் மட்டும் ரதத்தில் மதுராவினுள் நுழைய நான் சிறிதும் விரும்பவில்லை.” தீர்மானமாக இருந்தது கண்ணன் குரல். “குழந்தாய், விருந்தாவனத்தை நினையாதே. மற” என்றார் அக்ரூரர். “ நீ இப்போது ஒரு இளவரசன். வசுதேவனின் மகன் என்பதை மட்டும் நினை.” வெட்கம் மீதூறச் சிரித்த கண்ணன், “இல்லை, மாமா, நான் விருந்தாவனத்து இடைக்குலத் தலைவன் ஆன நந்தனின் மகன் என்பதை ஒருபோதும் மறக்கவே மாட்டேன்.”

அக்ரூரரின் மனதில் மீண்டும் கவலை சூழ்ந்தது. இப்படிப்பட்ட ஒரு பையனுக்காகவா நாம் அனைவரும் காத்திருந்தோம்? யாதவ குலத்து அனைத்து அபிலாஷைகளையும் இவனால் பூர்த்தி செய்யமுடியுமா? அனைவருக்கும் இவன் காவலனாக இருப்பானா? யதுவின் உயர்ந்த வம்சாவளியில் பிறந்தவன் என்பதை இவன் உணர்வானா?

இதை அறியாதவன் போலவே கண்ணன், “நாம் செல்லும் வழியில் அப்பா வருவதற்காகச் சற்றுத் தாமதிப்போம். அவரும் அவருடைய ஆட்களும் வந்ததும், அனைவரும் சேர்ந்தே மதுராவுக்குள் செல்லலாம்.” என்றான். பலராமன் உடனேயே, “ நீ எப்போதுமே இப்படித் தான் கண்ணா! அசட்டுப் பிடிவாதம் பிடிப்பாய்! நாம் உடனே மதுரா செல்வதும், அங்கே உள்ள மக்கள், கடைகள், மாளிகைகள் என அனைத்தையும் தந்தை வருவதற்குள் பார்க்கலாமே!” அனைவருக்கும் முன்னால் மதுரா செல்லவேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், பலராமன் கண்ணன் சொல்வதிலும் ஏதோ நியாயம் இருப்பது போலவும் உணர்ந்தான். அக்ரூரரோ, “ நான் இப்போது சொல்வதைக் கவனியுங்கள். மதுராவுக்கு வேடிக்கை பார்க்க நீங்கள் இருவரும் வரவில்லை. கம்சனால் அழைக்கப் பட்டு வருகிறீர்கள். இங்கே உங்களுக்கு என்ன காத்திருக்கிறது என்பதை நான் அறியேன். கம்சன் ஒரு வலையை உங்களுக்காக விரித்துள்ளான், நான் தெரிந்தோ, தெரியாமலோ அதை நோக்கி உங்களைச் செலுத்துகிறேன்.” என்றார் மனம் நிறைய வருத்தத்துடன்.

Wednesday, October 14, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - ராதையின் துயரம் - 3

பூ மலருவதைக் கண்டிருக்கிறீர்களா? அதுவும் வாசமுள்ள மலர்கள்?? மல்லிகையோ, ரோஜாவோ, முல்லையோ, ஜாதியோ எதுவானாலும் முதலில் காம்பின் அருகே உள்ள ஒரு இதழ் மட்டுமே வெளிவரும். நறுமணத்தை உள்ளே சுமந்து கொண்டு பூக்கள் தவிக்கும் போல் தோன்றும். அந்த நறுமணமும் எப்போ வெளியே வருவோம்னு காத்திருக்குமோ? அதுக்கப்புறம் சிறிது நேரத்தில் எப்போ நடந்ததுனு நம்மால் கண்டு பிடிக்கவே முடியாத ஒரு தருணத்தில் அந்தப் பூவின் நறுமணத்தைத் தன்னுள்ளே தாங்கி இருந்தது முடியாமல் போக அதை வெளிப்படுத்தும் தருணம் வந்துவிட்டதோ என்னும்படியாக வாசத்தை எங்கும் பரப்பிக் கொண்டு அனைத்து இதழ்களும் மலர்ந்து சிரித்துக் கொண்டிருக்கும். எங்கும் நறுமணமும் பரவி இருக்கும்.

அது போல் கண்ணனின் காதலை வேண்டி தன் இதயக் கதவைச் சற்றே திறந்து வைத்திருந்த ராதை கண்ணன் உள்ளே நுழைந்துவிட்டான் என்பது தெரிந்ததும், அந்த அன்பின் ஆழத்தையும், அதன் வேகத்தையும் தாங்க முடியாமல் திணறினாள். ஆனால் இப்போதோ பிரிவின் சமயம் வந்துவிட்டதால் அந்த அன்புக்கு அணை போடவும் விரும்பினாள். முடிந்ததா அவளால்? பொங்கிப் பிரவாகம் எடுத்து ஓடும் அவளோட அன்புக்கு அணை ஏது? அதன் வேகத்தைத் தாங்க முடியாமல் கண்ணன் அல்லவோ திணறினான்? அவள் இதயத்தின் உள்ளே சென்றவன் அங்கேயே நிரந்தரமாக ஆசனம் அமைத்தும் தங்கிவிட்டான் அன்றோ? இப்போது ராதையின் வார்த்தைகள் அனைத்தும் அந்த அன்பு வெள்ளத்தின் வேகமாய் வெளிவந்தன. இதுவரையில் கண்ணன் அறியாத இந்த ராதை, தன் வார்த்தைகளின் பிரயோகத்தால் இப்போது அவனைத் தன் அன்பு வெள்ளத்தில் மூழ்க வைத்துத் திக்குமுக்காட வைத்தாள். ராதையின் அன்பு எங்கும் பரவியது. இந்தச் சமயத்தை விட்டால் இனி ஒரு சமயம் வாய்க்காது என எண்ணினாளோ ராதை???

நிலத்தையே குனிந்து பார்த்துக் கொண்டு ஏதோ தேடுவது போல் இருந்த ராதை, கொஞ்சம் யோசனையுடனேயே கண்ணன் சொல்லுவதை மறுத்தாள். “ இல்லை கானா, நான் ஒரு இடைப்பெண். மிகவும் ஏழை! நான் உனக்குச் சமமாக ஒரு இளவரசியாக இருக்கச் சற்றும் தகுதியில்லாதவள். நீ மதுரா சென்றதும், உன்னை இந்த நாட்டின் பேரழகிகளான இளவரசிகளும், அரசகுமாரிகளும் மணக்கவும், உன்னை என்றும் வணங்கி உன்னுடன் இருக்கவும் போட்டி போடுவார்கள். மணிமகுடங்களை அளிப்பார்கள். அவர்களுக்கு நடுவில் இந்த ஏழையும் அசிங்கம் பிடிச்சவளும் ஆன கிராமத்து இடைப்பெண் எங்கனம் பொருந்தி வருவாள்?”

“ராதை, என் அருமை ராதை! நீ அந்த மணிமகுடத்தின் ரத்தினம் போல் ஜொலிப்பாய்!”

“இல்லை, கானா இல்லை! “ ராதை கொஞ்சம் யோசனையுடனும், கொஞ்சம் ஆவலுடனும், ஏதோ ஒரு காட்சியைப் பார்ப்பது போலவும் நதி ஓடுவதைப் பார்த்துக் கொண்டே பேசினாள்.” நீ அங்கே சென்றதும் கிரீடம் அணிந்து கொண்டு அரச உடை தரித்துக் கொண்டு காட்சி அளிப்பாய். போர்ப் பயிற்சி அளிக்கப் பட்டு ஆயுதங்களும் தரித்துக் கொண்டு யுத்தத்துக்கும் செல்லுவாய் அன்றோ? பெரிய ராஜாக்களோடும், சக்கரவர்த்திகளோடும், நல்லவர்களாய் இருக்கும் அரசர்களோடும், வீராதி வீரர்களோடும் பழகக் கூடியதொரு சந்தர்ப்பம் உனக்குக் காத்திருக்கிறது. யுத்தகளத்தில், அனைவரோடும் கூடி, சண்டை செய்யும் சமயம்………. இல்லை, கானா, இல்லை, நான் உனக்குப் பெரும் சுமையாக ஆகிவிடுவேன். நான் உன் இதயத்துடிப்பின் இனிமையான சங்கீதமாக இல்லாமல் அது வேகமாய்த் துடித்துத் தன் நிராசையை வெளிக்காட்டக் காரணமாக அமைந்துவிடுவேனோ? உன்னுடன் சரிபாதியாக இருக்க மாட்டேன், மாறாக நான் மட்டும் தனித்துத் தெரிவேனோ? உன்னுடன் இங்கே ராஸ் ஆடும் தோழியாக இருக்காமல், நீ போர்க்களம் செல்லும்போது செய்வதறியாமல் திகைப்பேனோ?”

கண்ணன் வாய்மூடி மெளனமாய் இருந்தான். “மன்னித்துக்கொள் கானா, நான் உனக்கு மேன்மேலும் துன்பத்தையும், வலியையுமே தருகிறேனோ?” திடீரென ராதையின் குரலில் ஓர் உறுதியும், அமைதியும், நிச்சயத் தன்மையும் தென்பட்டது. “நான் உன்னுடன் மதுரா வரமுடியாது கானா. நான் அதை நன்கு அறிந்து கொண்டுவிட்டேன். என் கானா, என் கானா, “ ராதையின் குரல் தழுதழுத்தது. “என் கானா, அவன் வாழ்வது என் கண்களில், நான் பார்ப்பது அவன் கண்களாலே, நான் மூச்சு விடுவது அவன் மூச்சே, நான் உண்பது, உடுத்துவது, உறங்குவது அனைத்தும் அவனுக்காகவே. அவன் எப்படி இருப்பான் தெரியுமா? அவன் தலையில் மயில் பீலியைச் சூடிக் கொண்டு, இடுப்பில் ஒரு வஸ்திரத்தை உடுத்திக் கொண்டு, மாடுகளை மேய்க்கும் குச்சியைக் கையில் வைத்த வண்ணம் இடுப்பில் புல்லாங்குழலைச் சொருகிக் கொண்டு, நிரந்தரமான ஒரு புன்னகை முகத்தில் ஒளிவிட, புல்லாங்குழலை எடுத்து இசைத்துக் கொண்டு, என்னை, “ராதே, அடி ராதே!” என அழைத்தவண்ணம் மாடுகளைக் காட்டுக்கு மேய்ச்சலுக்கு அழைத்துப் போவான். எனக்கு அந்தக் கானாவைத் தான் தெரியும் கண்ணா! தலையில் கிரீடம் சூட்டிக் கொண்டு அரச உடை தரித்த கண்ணன் யாரோ? என்னால் அவனை அந்தக் கோலத்தில் பார்க்கவே முடியாதெனத் தோன்றுகிறது. முடியாது கானா, முடியாது, என் கானாவை விட்டு என்னால் பிரிய முடியாது. நீ சொல்லும் மற்றொரு கானாவிடம், அவன் கானாவா? அல்ல! கண்ணனிடம் சொல்லிவிடு! என்னால் மதுராவுக்கு வரமுடியாது.” கண்ணனை அணைத்துக் கொண்ட ராதை சத்தம் போட்டுப் பெருங்குரலில் துடிதுடித்து அழ ஆரம்பித்தாள்.

“கானா, எனக்குத் தெரியும், நீ மீண்டும் விருந்தாவனம் வரவே முடியாது . அப்படியே வந்தாலும், அது என் கானா இல்லை. நான் பார்த்து ஆனந்தித்துக் காதலித்து, இதோ இப்போது சொல்கிறாயே, காந்தர்வ விவாஹம் என. அப்படி என்னை மணந்து கொண்ட கானாவை நான் இனி பார்க்கவே முடியாது. ஒருகாலும் முடியாது. எந்தக் கானாவுக்காக நான் வாழ்ந்தேனோ அவன் இனிமேல் வரமாட்டான். என்னை இங்கேயே இப்படியே இருக்கவிடு கண்ணா!” தூக்கத்தில் பேசுபவள் போலப் பேசினாள் ராதை. வாழ்நாளின் பேச்சுக்களை எல்லாம் அன்று ஒருநாளிலேயே பேசித் தீர்த்துவிட நிச்சயித்துவிட்டாளோ? "கண்ணா!" என அழைத்ததன் மூலம் அவனைத் தூரத்தில் நிறுத்துகிறாளோ?


இன்று முடியாவிட்டால் அப்புறம் சந்தர்ப்பமே வாய்க்காது என்பதைப் புரிந்துகொண்டவள் போல் ராதை மேலும் தொடர்ந்து பேசினாள். “நான் இங்கேயே இருந்து உன் தாய்க்கும், தந்தைக்கும் பணிவிடைகள் செய்வேன்.” அவள் பார்வை எங்கோ தொலைதூரத்தைப் பார்ப்பது போல் காணப்பட்டது. "ஒவ்வொரு நாளும், நான் காட்டில் சுற்றுவேன், உன்னுடன் சுற்றிய இடங்களுக்கு எல்லாம் செல்வேன். யமுனைக்கரையில் பெளர்ணமி நிலவில், இரவு நேரத்தில் உன்னை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். உன்னுடைய புல்லாங்குழலின் இனிய கீதத்தைக் கேட்கும் ஆவலுடன் அமர்ந்திருப்பேன். இதோ, இந்தப்புதர்களின் அடர்ந்த மறைவில் நீ என்னிடம் அன்பு செலுத்தியதையும், நான் என் சகலத்தையும் உனக்கு அர்ப்பணித்ததையும் நினைத்து நினைத்து மகிழ்ந்திருப்பேன். கண்ணா, நீ பேச என்னருகில் இல்லை எனினும், உனக்காக இந்தச் செடி, கொடிகளும், இந்தப்புதரும், இந்த யமுனை நதியும், இந்தக் காடும், நீ மேய்த்த ஆவினங்களும் என்னிடம் பேசும். உன்னைக் காணோமே என என்னிடம் கேட்கும். நான் துயர் அடைந்ததைக் கண்டு அவையும் துயர் அடையும். எனக்கு ஆறுதல் சொல்லும். குயிலானது உன் கீதத்தோடு போட்டி போட்டுத் தோல்வி அடையுமே. அது வேண்டுமானால் ஒருவேளை கண்ணன் இல்லை, போட்டிக்குக் கீதம் இசைக்க என நினைக்குமோ?? இல்லை, இல்லை, என் கானா! என் கானா, உன் இனிய கீதம் போட்டிக்கு இல்லாமல் குயிலும் தன் பாடலை மறந்துவிடுமோ?” கண்களில் இருந்து கண்ணீர் வழிய ராதை தொடர்ந்து பேசினாள். கண்ணனால் அவளை நிறுத்த முடியவில்லை.

“கண்ணா, ஒருவேளை எப்போவாவது நான் மதுரா வந்தேனானால் அங்கே யாரைப் பார்ப்பேன் என்று நீ நினைக்கிறாய்? என் கானாவையா? ம்ஹும் இல்லை கானா இல்லை. என் கானா அங்கே இருக்கமாட்டான். கிருஷ்ணன், கண்ணன் என்னும் பெயரில் ஒரு யாதவ இளவரசன் இருப்பான். அவனில் நான் உன்னைக் காணமுடியாதே! அவன் யாரோ ஒருவன் அன்றோ? அவனிடம் நான் எவ்வாறு என்னை ஒப்புக் கொடுக்க முடியும்? ஆனால் கானா, இங்கேயே விருந்தாவனத்திலேயே இருந்தேனானால், அது உன்னோடு இருக்கும் சுகத்தை, அமைதியை, நிம்மதியை எனக்குக் கொடுக்கும். இதோ, இந்த மரம் உன் இருப்பை எனக்குச் சொல்லும், ஆவினங்கள் சொல்லும் என் கானா என்னோடு இருப்பதை! குயிலானது நீ தான் வந்துவிட்டாயோ எனக் கூவிக் காட்டும். காற்றானது புழுதியை வாரி இறைத்துக் கொண்டு வீசும்போது, என் கானாவிடமிருந்து எனக்குச் செய்தியைக் கொண்டு வரும். என் கானா இங்கே தான் இருக்கிறான். இந்த மண் அவன் காலடி பட்ட மண் என, இந்தக் காற்று அவன் உடலில் பட்ட காற்று என வாயு தேவன் கூறுவான், இந்த நீர் அவன் அருந்திய நீர் என யமுனை கூறுவாள். ஒருவேளை கானா, அவை நீ இருந்தப்போ எப்படிப் பாடுகின்றனவோ அவ்வாறே எனக்காகவும் பாட ஆரம்பிக்குமோ?? ஆம், ஆம், பாடும், பாடும் எனக்காக. இந்த ராதைக்காக. “ ராதை கொஞ்சம் மூச்சுவிட நிறுத்தினாள்.

கண்ணன் தூரத்தில் எங்கோ சூன்யத்தைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான். பின்னர் விண்ணில் தன் எதிர்காலம் தெரிவதைப் போல் சற்று நேரம் விண்ணையே பார்த்த வண்ணம் இருந்தான். அங்கே அவனுக்கு என்ன தெரிந்ததோ, மீண்டும் பேசும்போது அவன் குரல் தெளிவாய்க் காணப்பட்டது. “ஆம், ராதை நீ சொல்லுவது உண்மைதான். நீ எனக்கு வேண்டும் என்பதும், எப்போதும் என் அருகே இருக்கவேண்டும் என நான் விரும்புவதும் உண்மைதான். ஆனால், ஆனால், என் எதிர்காலம், நீ சொல்வதைப் போல் தான் மாறிவிடுமோ? நான் இப்போது இருப்பதைப் போன்ற ஒரு சுதந்திர இடைச் சிறுவனாக இருக்கமாட்டேனே. நான் நினைப்பதை நினைத்த வண்ணம் செய்ய முடியாதே! நீ என் சந்தோஷம், என் ஜீவன், என் கண்ணின் கருமணி, என் பார்வை, நானே நீ. நீயே நான். ஆனால் அங்கே வந்தால் இந்த அழகிய பூப்போன்ற நீ, உன் சுகந்தம் அனைத்தும் மறைந்து, மறந்துவிடுமோ? இங்கே இருப்பது போன்ற சுதந்திரமோ, அல்லது வேறு எதுவுமோ அங்கே உனக்குக் கிட்டாதுதான். ஆம், ராதை, ஆம், நீ இந்தச் சூரியனின் கதிர்களாலும், நிலவொளியாலும் குளிப்பாட்டப் பட்டு, இந்த யமுனையின் கரைகளில் ஆடிப் பாடி சந்தோஷமாய் உன் வாழ்க்கையைக் கழிக்கவேண்டியவள். “

“மேலும் ராதை, நீ என்னுடன் வந்துவிட்டாலும், இந்த விருந்தாவனம் தன் அழகை இழந்துவிடும். இதன் செளந்தரியமே போய்விடும். நீ இங்கே இருப்பதால் இது ஒரு தெய்வீகக் கோயில் போல் உள்ளது. என் மேலுள்ள உன் காதல் இதைச் சிறப்பாக ஆக்கி உள்ளது. நீ இந்த விருந்தாவனத்தின் செளந்தரிய தேவதை ஆவாய். இந்த விருந்தாவனத்தின் காதல் தேவதை ஆவாய். நீ இங்கேயே இருக்கப் போவதாய்ச் செய்த முடிவினால் இந்த விருந்தாவனத்து மக்களுக்கு மட்டுமல்லாமல், எனக்கும் ஒரு புதிய உலகைக் காட்டிவிட்டாய். இந்த உலகம் உள்ளளவும் மக்கள் உன்னையும், உன் காதலையும், அதற்காக நீ செய்த இந்த மகத்தான தியாகத்தையும் மறக்கவே மாட்டார்கள்.” கண்ணன் ராதையைத் தன் இரு கரங்களாலும் எடுத்துத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். தன்னைக் கட்டுப்படுத்த முடியாத ராதை விம்மி, விம்மி அழுதாள். கண்ணன் கண்களிலும் நீர். என்றாலும் அவனால் அழமுடியவில்லை. இப்போதே பொன்னாலாகிய தளை தன்னைக் கட்டிவிட்டதோ என்ற உணர்வு அவனுக்குள்ளே. “கானா, என் கானா, நான் என் அனைத்தையும் உனக்குக் கொடுத்துவிட்டேன். ஆனால் நான் உன்னிடம் எதையும் கேட்கவில்லை. என்றாலும் கானா, ஒரு உதவி எனக்குச் செய்வாயா? சிறு உதவி. நீ மதுரா செல்லும்போது உன்னுடைய அந்தப் புல்லாங்குழலை என்னிடம் கொடுத்துவிட்டுச் செல்வாயா? நீ ஒரு இளவரசன். யாதவ குலத் தலைவர்களில் ஒருவன். நான் ஒரு இடைச்சிறுமி. ஏழை. என்னைப் பார்த்து அனைவரும் எள்ளி நகையாடுவார்களே. அவர்களுக்கு உன்னுடைய இந்தப் புல்லாங்குழலைக் காட்டி, என் கானா என்னுடன் தான் இருக்கிறான் எனச் சொல்லிக் கொள்வேனே!” என்றாள். கண்ணனால் இப்போது தன்னைக் கட்டுப் படுத்த முடியவில்லை. பொங்கும் கண்ணீரோடு ராதையை இறுக அணைத்துக் கொண்டு, “புரிகிறது, ராதை, நாம் இப்போதே குரு சாந்தீபனியிடம் செல்வோம். அவர் முன்னே உன்னை நான் அக்னி சாட்சியாகத் திருமணம் செய்து கொள்கிறேன். இந்தப் புல்லாங்குழலை உன்னிடம் கொடுக்கிறேன். நீயும், இந்தப் புல்லாங்குழலுடன் வாழ்க்கை நடத்தலாம், நான் எப்போதும் உன்னிடமே இருக்கிற மாதிரி இது உன்னோடேயே இருக்கும். இனி இந்தப் புல்லாங்குழல் ராதைக்காக மட்டுமே இசைக்கும். கண்ணன் இனி புல்லாங்குழலை இசைக்கமாட்டான். அதுவே நீ, நீயே அது. நீங்கள் இருவருமே ஒன்றாகிவிட்டீர்கள்.”

கண்ணனின் புல்லாங்குழல் அதற்குப் பின்னர் இனிய கீதம் இசைத்ததா? இல்லை! :(

Tuesday, October 13, 2009

சந்தை(தி) சிரிக்கும் சண்டை!

காலையில் கணினியைத் திறந்ததுமே கூகிளார் வந்து என்னோட டூல்பாரைப் பயன்படுத்தறதுக்கு நன்றினு சொல்லிட்டு, வேறே என்ன உதவி வேண்டுமோ கேளுனும் சொல்லிட்டுப் போனார். சரி, இது ஏதோ இன்னிக்கு வழக்கம் போலனு இருந்தால் கொஞ்ச நேரம் கழிச்சு யாஹூவார் வந்தார். கூகிளார் என்னோட சில தளங்களை ப்ளாக் பண்ணிட்டார். அதனால் நானும் உனக்கு செர்ச் எஞ்சின் சேவையை நிறுத்திட்டேன். உனக்கு அது வேண்டும்னா இங்கே வானு ஒரு இடத்தைச் சுட்டிக் கூப்பிட்டார். காலையிலே வீட்டு வேலையைக் கவனிக்கிறதா? இல்லை இவங்க சண்டையிலே மத்தியஸ்தம் பண்ணறதா? ஒண்ணும் புரியலை.

அதுக்குள்ளே கூகிளார் வேறே ஒரு இடத்தைக் காட்டி அங்கே வாங்கறார். என்ன செய்யறது? ஒண்ணுமே புரியலை உலகத்திலே. என்னை மாதிரி க.கை.நா.க்களுக்கு உதவும் தொழில் நுட்ப நல் உள்ளங்களே, என்ன செய்யணும்னு வரிசையா வந்து சொல்லுங்கப்பா பார்ப்போம்! ம்ம்ம்ம் ரெடி ஷ்டார்ட், ஒன், டூ, த்ரீ, வாங்கப்பா தொழில் நுட்ப ஆலோசர்கர்கள் எல்லாம். இந்தச் சண்டைக்கு ஒரு முடிவே இல்லையானும் தோணுது! :D

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - ராதையின் துயரம்- 2


கண்ணன் தன் கைகளில் கொண்டு வந்திருந்த ஒரு புஷ்பமாலையை ராதையின் கழுத்தில் போட்டான். ராதை கண்ணனிடம், “கானா, நாம் உண்மையாக எப்போது திருமணம் செய்து கொள்வோம்?” என்றாள். “இதோ, நமக்குத் திருமணம் ஆகிவிட்டது. காந்தர்வ விவாஹம்” என்றான் கண்ணன் சிரித்துக் கொண்டே. “ அட, போ கானா, நீ என்ன பெரிய அரசகுமாரனா என்ன, காந்தர்வ விவாஹம் என்று சொல்ல?” கண்ணன் சிரித்துக் கொண்டே அவள் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு, “ஒருவேளை, நான் அரசகுமாரனாய் இருந்திருந்தால்?” என்றான் அவளைப் பார்த்து. பெருமூச்சுவிட்டாள் ராதை. “நீ எப்போவுமே எனக்கு ஒரு அரசன் தான். என் ராஜா நீதான் கண்ணா. நீ எனக்குக் கோவிந்தனும் கூட. பசுக்களை மேய்க்கும் இடையனாக நீ எப்போதும் இங்கேயே என்னருகில் இருந்தால் அது போதும் எனக்கு.” கண்ணனின் புருவங்கள் நெரிந்தன. “ராதை, இதைக் கேள், நான் ஒரு மாடுகள் மேய்க்கும் இடையன் அல்ல. நான் ஒரு அரசகுமாரன். நீ ஒரு அரசகுமாரி. “ கண்ணன் உண்மையாகப் பேசுவது அவன் குரலில் தெரிந்தது. ராதையோ கண்ணனின் முகத்தையும், கண்களையும் தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்தினாள். “””””””ம்ம்ம்ம்ம்ம்?? அப்படிப் பார்க்காதே, ராதை. நாளைக்காலை நான் மதுரா செல்கிறேன் என்பதும், எப்படியும் சில நாட்களுக்காவது என்னால் வரமுடியாது என்பதும் நீ அறிவாய் அல்லவா?” ராதை அவசரம் அவசரமாய் மறுத்தாள். இல்லை, இல்லை, என் கானா வந்துவிடுவான். “கானா, நீ திரும்பி வந்துவிடுவாய், எனக்காக, உன் ராதைக்காக. “

“ராதை, கேள், நான் உன்னை இங்கே தனிமையில் அழைத்துவந்ததன் உண்மையான காரணமே யாருக்குமே தெரியாத ஒரு ரகசியத்தைக் கூறுவதற்குத் தான். எப்படி இருந்தாலும் ஒரு நாள் அனைவருக்கும் தெரியத் தான் போகிறது. யாதவகுலம் அடிமைத் தளையில் மூழ்கிப் பலவருஷங்களுக்கு மேல் ஆகிறது. நாரதமுனிவரின் தீர்க்கதரிசனத்தின்படி, நான் ஒருவன் மட்டுமே அந்தத் தளையை உடைக்கப் போகின்றேன். “ ராதை நடுங்கினாள். கண்ணனை இறுகக் கட்டிக் கொண்டாள். “என்ன சொல்கிறாய் , கானா? நீ சொல்லுவதற்கெல்லாம் என்ன அர்த்தம்?”

“ராதை, நாரத முனிவர் என்ன சொல்லி இருக்கிறார் என்றால் தேவகனின் மகளும், யாதவ இளவரசியும் ஆன தேவகியின் எட்டாவது குழந்தை , அந்தப் பரவாசுதேவனின் அம்சமாய்ப் பிறந்து யாதவகுலத்துக்கே ஒரு பெருமையைக் கொண்டு வந்து அவர்களின் அடிமைத் தளையையும் உடைப்பான். கம்சனை இந்தக் குழந்தையே கொல்லுவான்.”

“ம்ம்ம்ம்., ஏதோ சொல்லுவாங்க, கேட்டிருக்கேன். “ ராதை கொஞ்சம் அலட்சியமாகவே பதில் சொன்னாள்.
“நான் அந்த எட்டாவது குழந்தை!” கண்ணன் அமைதியாகச் சொன்னான்.

ராதைக்கு அதிர்ச்சி. கண்ணனைக் கட்டி அணைத்திருந்த அவள் கைகள் தானாய்த் தளர்ந்தன. “என்ன???” அதிர்ச்சியும், பயமும் அவளை ஆட்டிப் படைக்கக் கண்ணனை விட்டு விலகினாள். “நீ, நீ, இளவரசனா?”

“ஆம் , என்னைப் பெற்ற தந்தை வசுதேவரால் நான் கோகுலத்துக்குக் கொண்டுவரப் பட்டேன். நான் பிறந்த அன்றே நந்தனின் கைகளில் என் தந்தையான வசுதேவரால் ஒப்படைக்கப் பட்டேன். ம்ம்ம்ம் மேலும் கேள். பலராமன், என் சகோதரன், உண்மையில் ரோஹிணியின் பிள்ளையே அல்ல. அவனும் என் தாய் தேவகியின் பிள்ளைதான். ஏழாவது பிள்ளை அவன். வசுதேவருக்கும், தேவகிக்கும் பிறந்த எனக்கு மூத்த சகோதரன் அவன்.”

வசுதேவர்??? நம் மரியாதைக்குகந்த இளவரசர்??””” எனில் நீ??”””

கண்ணன் மெளனமாய்த் தலையை ஆட்டினான். கம்சனின் கைகளில் இருந்து தப்பவேண்டியே இருவரையும் இங்கே வளர்க்க நேர்ந்ததாகவும் சொன்னான். “இப்போது கம்சன் தநுர் யாகம் செய்யப் போவதாயும், அதற்கு வரவேண்டும் எனவும் எங்களை அழைத்துள்ளான். இவ்வாறு அழைத்து எங்களைக் கொல்லவேண்டும் என்பதே அவன் திட்டமாய் இருக்கலாம். “

ராதைக்கு அனைத்தையும் கேட்கக் கேட்க மயக்கமே வந்தது. மேலும் கம்சனின் கொடுமைகளைப் பற்றி நன்கு அறிந்திருந்ததால் கண்ணனுக்கு கம்சனால் ஏற்படப் போகும் தீங்கை நினைத்தும் கவலை கொண்டாள். அதை வெளிப்படையாய்க் கண்ணனிடம் சொல்லவும் சொன்னாள். கண்ணன் அவளுக்கு ஆறுதல் மொழிகள் சொன்னான், என்றாலும் சமாதானம் அடையாத ராதை, “கம்சன் உன்னைக் கொல்ல வந்தால் எப்படித் தப்பிப்பாய் கானா?” என்று கேட்டாள். கண்ணன் உறுதியோடும், தெளிவோடும் சொன்னான்:” கம்சனால் முடியாது. அனைவரும் சொல்லுகின்றனர், நான் தர்மத்தை நிலைநாட்டவே பிறந்திருப்பதாய். மேலும் கேள் ராதை, சில நாட்களாகவே என்னுள்ளும் மாற்றங்கள் என்னை அறியாமலே நிகழ்ந்து வருகின்றன. எனக்கும் நம்மை யாரும் எதுவும் செய்துவிட முடியாது, நாம் செய்யவேண்டிய வேலைகளும், போகவேண்டிய தூரமும் நிறைய இருக்கின்றன என்றும், தர்மத்தை நான் பாதுகாப்பேன் என்றும் யதுகுலத்தின் மேன்மைக்குக் காரணம் ஆவேன் என்றும், கம்சனின் அடிமைத் தளையில் இருந்து யாதவர்களை விடுவிப்பேன் என்றும் நம்பிக்கை பிறந்துள்ளது.”

ராதைக்கு எதுவும் பேசத் தோன்றாமல் வாயை மூடி, மூடித் திறந்தாள். அவளுக்குத் துயரம் கட்டுக்கடங்காமல் போனது. பெரியதொரு விம்மலுடன் கண்ணனை அணைத்தவண்ணமே, “உன்னை அங்கே போகவிடாமல் தடுக்கக் கூடிய சக்தி ஏதேனும் இருக்கிறதா கானா?” என்று கேட்டாள். கிருஷ்ணனுக்கும் மனம் வேதனையாகவே இருந்தது. சற்று நேரம் எதுவும் பேசவில்லை. பின்னர்” இல்லை, ராதை இல்லை. அப்படி எந்த சக்தியும் இல்லை. நான் மதுரா சென்றே ஆகவேண்டும். அங்கே நடக்கப் போகும் நிகழ்வுகளுக்கு என்னை நான் தயார் செய்து கொண்டே ஆகவேண்டும். இது என்னுடைய தர்மம். என்னுள் நானே கேட்டுக் கொள்வதும் உண்டு, நம்மால் முடியுமா என. ஆனால் இப்போது சர்வ நிச்சயமாய்த் தெரிந்துவிட்டது, இது என்னால் மட்டும் தான் முடியக் கூடிய ஒன்றென.”

“ஆனால் கானா, என் நிலைமை?? என்னைப் பற்றி என்ன முடிவு செய்துள்ளாய்?” பெரும் கேவலுடன் கேட்ட ராதை கட்டுக்கு அடங்காமல் அழ ஆரம்பித்தாள். “ நீ இல்லாமல் என் வாழ்க்கை பாலைவனம் ஆகிவிடுமே கானா?? நான் ஊமையாகிவிடுவேனே! என்னால் பார்க்கவும் முடியுமா? கேட்கும் திறன் இருக்குமா என்னிடம்?? போகாதே, கானா, போகாதே, அந்தக் கம்சனால் உனக்குக் கேடு விளைந்துவிடும். ஏதோ நடக்கப் போகிறதோ என என் மனம் அஞ்சுகிறது கானா!”



“ராதா, பயப்படாதே! என்னைப் பற்றியும் கவலை கொள்ளாதே! கம்சன் அழிந்து நம் யாதவ குலம் கொடியவனிடமிருந்து விடுதலை பெற்றுவிடும். நீ தனியாகவெல்லாம் இருக்கமாட்டாய் ராதை. நான் என் கடமை முடிந்ததும், திரும்பி வருவேன், அல்லது உன்னை அழைத்துக் கொள்ள முயல்கிறேன். என் வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சியே நீ தான், நீ இருப்பதுதான், இப்போது போல் எப்போதும் நீ ஒருத்தியே என் வாழ்வின் அனைத்து மகிழ்வுக்கும் காரணம் ஆவாய்!”

சற்று நேரம் பேசாமல் இருந்த ராதை தனக்குத் தானே பேசிக் கொள்வது போல் ஆரம்பித்தாள்:”கானா, நீ மதுரா சென்று கம்சனை வென்றுவிடுவாய், எனக்குத் தெரியும், நீ ஒரு கடவுளுக்கு ஒப்பானவன் என. அங்கே அனைவரும் உன்னைப் பெரிய சக்கரவர்த்தியாகவும் ஆக்குவார்கள். நீ மிக மிகப் பெரிய மனிதனாகிவிடுவாய். இவ்வுலகின் அனைத்து மக்களும் உன் அடி பணியக் காத்திருப்பார்கள் கானா. நீ ஒரு ஒப்பற்ற மாபெரும் சக்கரவர்த்தியாக நம் தேசத்து இளவரசர்களுக்கும், அரசர்களுக்கும் நடுவே காட்சி அளிப்பாய்!”

“ஆம் ராதை, அப்போதும் நீ தான் என் ராணி! என் வாழ்வின் பிரிக்கமுடியாத ,என்னை விட்டு இணை பிரியாத ஒரு தோழியாகவும் நீயே இருப்பாய்!”

Saturday, October 10, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - ராதையின் துயரம்!

செய்தி காட்டுத் தீபோல் பரவியது விருந்தாவனத்தில். ஆண்,பெண், குழந்தைகள், முதியோர் அடங்கலாய் அனைத்து விருந்தாவனவாசிகளும் ஒருவரை பார்த்துக் கொள்ளும்போது கேட்பது இதுவே! “கம்சன் அழைப்பு அனுப்பி இருக்கிறானாமே? நந்தனுக்கு?? அதுவும் கிருஷ்ணனையும், பலராமனையும் அழைத்துவரச் சொல்லி இருக்கிறானாமே?? கப்பம் வேறே கொண்டுவரச் சொல்லி இருக்கிறான். அது சரி, அது நியாயம் தான். கம்சன் போன்றவர்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் போதாது. ஆனால் ஏதுமறியா இந்தப் பாலகர்களை எதுக்கு அழைத்துவரச் சொல்லுகிறான்?? வேண்டுமானால் விருந்தாவன வாசிகள் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொள்ளலாமாம். “

ஆமாம், ஆமாம், அப்படித் தான் சொல்கிறார்கள். ஏதோ தநுர்யாகமாம். கம்சன் பனிரண்டு வருஷம் போர்க்களத்தில் இருந்து வெற்றி கண்டு திரும்பிதற்கு நடத்துகிறானாம். வீரப் போட்டிகளெல்லாம் இருக்காமே. அக்ரூரர் கூட வந்திருக்கிறாராம் அழைக்க.””

“என்ன அக்ரூரர் வந்திருக்கிறாரா? அப்படி எனில் நந்தனிடம் என்ன சொன்னாராம்?”

“தெரியலை, ஆனால் ஏதோ விஷயம் இருக்கு இதிலே. நந்தனோடு மட்டும் பேசலை அக்ரூரர். அவர் பேசும்போது கிருஷ்ணனும், பலராமனும் கூட இருந்திருக்கின்றனர். பேசிட்டு வெளியே வரும்போது நந்தன் முகம் பார்க்கச் சகிக்கவில்லையாமே!”

“அட, அது யசோதை படவேண்டிய கவலை அல்லவோ?” குறும்புக்கார இளைஞன் ஒருவன் சொன்னான்.

பேசினவன் கத்த ஆரம்பித்தான். “உங்களுக்கெல்லாம் எப்போ விளையாடணும்னு தெரியாதா? ஏதோ முக்கிய விஷயமாய்க் கம்சன் நந்தனை வரச் சொல்லி இருக்கான். இன்னிக்குச் செய்தி வந்ததும் நந்தன் தன் ஆட்களை அழைத்துப் பிரயாணத்துக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்யச் சொல்லி இருக்கின்றார். ஆனால் நந்தனுக்குப் பிரயாணத்தில் அவ்வளவு விருப்பம் இல்லை போல் தெரிகிறது. மனதில் சந்தோஷமே இல்லாமல் கப்பம் கட்டுவதற்காக நெல்லையும், பொன், மணி திரவியங்களையும், பசுக்களையும் சேகரிக்கிறார். யசோதை அம்மா அழுத வண்ணமே இருக்கிறாள். “

அனைவர் மனதிலும் வெறுமை சூழ்ந்துகொண்டது. கவலையிலும், குழப்பத்திலும் கனத்திருந்த மனதோடு அனைவரும் தூங்காமல் மேற்கொண்டு என்ன நடக்கும் என்பது பற்றிய பேச்சில் ஆழ்ந்தனர். அன்றைக்கு முழுநிலவு வானில் ஜகஜ்ஜோதியாய்ப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. யமுனை ஆற்றின் வெண்ணிற மணலோடு போட்டி போட்டுக் கொண்டு நிலவின் பிரகாசம் வெள்ளிமயமாய் ஜொலித்தது. நீலக்கடல் தன் நீல நிறத்தைக் கருநீலமாய் மாற்றிக் கொண்டிருந்தது. பூமித்தாயானவள் கருநீலப் பட்டில் வெள்ளி ஜரிகை இழையோட, புடைவையில் அங்கங்கே வெள்ளி நக்ஷத்திரங்கள் பளிச்சிட, பச்சை வண்ண ஜாக்கெட் அணிந்து காட்சி அளித்தாற்போன்ற தோற்றம். யாருக்கும் இந்த அதி அற்புதமான இயற்கையின் தோற்றத்தில் மனம் செல்லவில்லை. நிலவொளி வீணாகிக் கொண்டிருந்ததோ என்னும் எண்ணம் எழுந்தது சிலருக்கு. அப்போது அந்த நிலவொளியை நிரப்புவது போல், அங்கங்கே கிசுகிசுவெனப் பேசிக் கொண்டிருந்த சில குரல்களையும் மீறிக் கொண்டு, ஒரு புல்லாங்குழலின் இனிய கீதம் கேட்டது. நம் கண்ணனைத் தவிர வேறு யார் இப்படிப் புல்லாங்குழல் ஊதமுடியும்? அனைவரும் துள்ளிக் குதித்தனர். உண்மையில் விருந்தாவனமே துள்ளிக் குதித்தது என்னலாம்.

அந்த இனிய இசையில், இளைஞர்களும், இளம்பெண்களும் மட்டுமில்லை, மொத்த கோபர்களும், கோபிகளுமே தங்களை இழந்தனர். அனைவரும் அவரவர் இருந்த கோலத்திலேயே யமுனைக்கரைக்குக் கண்ணன் இருக்குமிடம் நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். “ராஸ்” ஆடுவதற்கான அணிகலன்களைப் பற்றியோ, உடையைப் பற்றியோ கவலைப்படும் நேரம் இதுவல்ல. இப்போது நம் கண்ணன் நம்மைவிட்டுப் போகப் போகிறான். இந்த இரவே கடைசி இரவாகிவிடுமோ?? ஒருவராலும் பதில் சொல்லமுடியாத கேள்வியாக இருந்தது இதுவே. ஆகவே கண்ணனின் ஒவ்வொரு செயலிலும் பங்குபெறத் துடிக்கும் உள்ளத்தோடு அனைவரும் யமுனைக்கரை நோக்கிச் சென்றனர். ராதையும் கேட்டாள். ஏற்கெனவே கண்ணன் மதுரா செல்லப் போகின்றான். கம்சனின் அழைப்பு வந்திருக்கிறது என்று தெரிந்து தன் இதயத்தைத் தானே தின்று கொண்டிருந்தாள் ராதை. ஒவ்வொரு கணமும் செய்வதறியாது துடித்த அவள் காதுகளில் கண்ணனின் இனிய புல்லாங்குழல் கீதம் கேட்டது. ஆஹா, என் கானா, கானா, நாளை விடிவதற்குள்ளாகக் கிளம்பிவிடுவானோ? அடுத்த கணம் ராதை துள்ளி எழுந்தாள். எழுந்த வேகத்தில் அவள் கைவளைகள் நொறுங்கிவிடும்போல் சப்தித்தன. தலை மயிர் பறக்க, மேலாடை காற்றில் வீச ராதை யமுனைக்கரையை நோக்கி ஓடினாள்.

அனைவரும் யமுனைக்கரையில் கூடிவிட்டனர். அனைவருமே ஒற்றுமையாகத் தாளம் போட்டுக் கொண்டு ஆடவும் ஆரம்பித்தனர். கொலுசு அணிந்தவர்கள் காலில் அவை சப்திக்க, சலங்கைகள் பேச ஆரம்பிக்க, ஆண்களில் சிலர் தாளவாத்தியத்தை இசைக்க, அனைவரும் வட்டமாகக் கூடிக் கொண்டு ஆட ஆரம்பித்தனர். நட்ட நடுவில் கண்ணன், அவன் அருகே ராதை! சுற்றிலும் அனைவரும் தா, தை, தா, தை எனத் தாளம் தப்பாமல் ஆடினார்கள். கண்ணனின் முகத்தைவிட்டு ராதையின் கண்கள் அகலவே இல்லை. இனம் புரியாத சந்தோஷத்தை உள்ளுக்குள்ளே அனுபவிப்பவளாக அரைக்கண் மூடிக் கொண்டு ராதை ஆடினாள். அவள் கண்களுக்குள்ளாக விருந்தாவனமும் சுழன்று சுழன்று ஆடியது. யமுனைக்கரை, யமுனை நதி, ஆகாயம், பூமி அனைத்தும் சுழன்று ஆடியது. நிலவு மட்டும் ஆடாமல், அசையாமல் இந்த நடனத்தைப் பார்த்துக் கொண்டு சிரித்து அனுபவிப்பது போலவும், யமுனை நதி தன் மெல்லிய ஓசையால் இனிய இசையை இசைப்பது போலவும் தோன்றியது அவளுக்கு. விண்ணுலகில் இருந்து தேவாதி தேவர்களும், கின்னரர்களும், கந்தர்வர்களும் தங்கள் நடனத்தைப் பார்ப்பதாகவும் நிலவின் தண்மையான ஒளிக்கதிர்களை பூமிக்கு அனுப்பித் தங்களை ஆசீர்வதிப்பதாகவும் தோன்றியது அவளுக்கு. ஆடிய சில கோபியர் களைப்பில் அப்படியே கீழே அமர, மற்றவர்கள் சிலருக்கு மயக்கம் வந்தது. அனைவரும் அங்கேயே அமர்ந்து கொண்டு ஓய்வெடுக்க எண்ணியபோது கண்ணனின் புல்லாங்குழல் இசை தூரத்தில் இருந்து கேட்டது.

சற்றே திரும்பி அனைவரும் பார்க்க, கண்ணன், ராதையை அணைத்தவண்ணம் காட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அனைவர் மனதிலும் துயரம் சூழ்ந்தது. நாளை??? ஆனால் அங்கே தனிமையை நாடிச் சென்ற கண்ணனுக்கோ, ராதைக்கோ இந்தத் துயரம் எழவே இல்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தனர். ராதையின் மனதில் இனம் புரியாத கலவரமும், அதே சமயம் சிலிர்ப்பாகவும் உணர்ந்தாள். “ராதை,” கண்ணன் அழைத்தான் அவளை. “இன்றைய இரவு ஒரு முக்கியமான இரவு.” என்றான் கண்ணன். “ஆம்” ராதையின் குரல் மிகவும் தீனமாய்க் கேட்டது. “நீ அழகாயும், ஓர் அரிய அற்புதமாயும் இருக்கிறாய், ராதை!” கண்ணன் அவளை இறுக அணைத்துக் கொண்டான். ராதை, “கானா, நீ எப்போவுமே என்னிடம் இதே அன்போடு இருப்பாயா?” என்று கேட்டாள். “இருப்பேன், ராதை, இந்த உலகில் சூரிய, சந்திரர் உள்ளவரையில் இதே அன்போடு இருப்பேன்.” என்றான் கண்ணன். “என்னை மறக்கமாட்டாயே?”
“எப்படி முடியும்? நீ இல்லாமல் எனக்கு ஏது சந்தோஷம் என்பது?” இருவரும் ஒருவரில் ஒருவர் கலந்தனர்.

Friday, October 09, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - கம்சனுக்குத் தெரிந்துவிட்டது!

இன்னமும் யாருக்கும் வாய் திறந்து பேசமுடியவில்லை. சும்மாத் தலையை மட்டுமே ஆட்டினார்கள். கம்சன் மேலும் தநுர் யாகத்தில் இடம் பெறப் போகும் வில்லின் சிறப்பை வர்ணித்தான். அந்தவில்லை யாராலும் தனியாய்த் தூக்கமுடியாது எனவும், சில மனிதர்களால் சேர்ந்தே தூக்கமுடியும் எனவும், யாராலும் வளைத்து நாண் ஏற்றி, அம்பைச் செலுத்த முடியாது எனவும் கூறினான். மேலும் மல்யுத்தப் போட்டியில் பிரசித்தி பெற்ற மல்லன் ஆன சாணூரனும், முஸ்திகனும் தயார் செய்யப் பட்டு வருவதாயும், அவர்களை வெல்ல இனிமேல் தான் யாரேனும் பிறக்கவேண்டும் எனவும் பெருமையுடன் கூறினான். அக்ரூரர் மெளனத்தை உடைத்துக் கொண்டு கம்சனைப் பாராட்டும் விதமாய்ப் பேச ஆரம்பித்தார். “யாதவத் தலைவர்கள் எவரும் தங்கள் கடமையில் இருந்தும், தர்மத்தில் இருந்தும் பின்வாங்க மாட்டார்கள்” என்று சொல்ல ஆரம்பித்த அக்ரூரரை இடைமறித்த கம்சன், அது தான் அறிந்ததே என்றான். அக்ரூரர் மேலும் கைகூப்பிக் கம்சனை வணங்கிய வண்ணம் பேசினார்: “ இளவரசே, இந்த அரிய சந்தர்ப்பத்தில் நம் மதிப்புக்குரிய மன்னரான உக்ரசேனரே நேரில் வந்திருந்து அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்திக் கொடுக்கவேண்டும் என அனைத்து யாதவத் தலைவர்கள் சார்பிலும் கேட்டுக் கொள்கின்றேன்.” என்றார்.

மன்னனையும் பார்த்து, “ நான் சொல்வது சரிதானே அரசே, தாங்கள் வருவீர்கள் அல்லவா?” என்று கேட்டார் அக்ரூரர்.

செய்வதறியாது தவித்த உக்ரசேனர் அக்ரூரரின் இந்த வேண்டுகோளினால் தனக்கு ஏற்படப் போகும் விளைவை முன்கூட்டியே அறிந்து கொண்டு தவித்தார். கம்சன் ஏளனமாய்ச் சிரித்துக் கொண்டே, “ஏன் இல்லை, மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய என் தந்தையும் கட்டாயமாய் வருவார். அவர் நம்முடைய தலைவர் அல்லவோ?” கம்சன் குரலில் மரியாதையோ, மதிப்போ காணப்படவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர். அங்கே கனத்த மெளனம் நிலவியது. கம்சன் வாயிலை நோக்க அங்கே இருந்த மகத இளவரசன் உடனே அறையை விட்டு வெளியேறினான். கண் இமைக்கும் நேரத்தில் கம்சனுக்குப் பாதுகாப்பாய் மகத நாட்டு வீரர்கள் அவனைச் சூழ்ந்து நின்று கொள்ள, ப்ரத்யோதாவின் பின்னேயும் சில வீரர்கள் நின்றனர். மகத இளவரசன் கம்சனின் பின்னே நின்றுகொண்டான். கிழவன் பஹூகாவிற்குப் பொறுக்க முடியவில்லை.

"நம்முடைய நாட்டு விஷயங்களைப் பற்றிப் பேசும் இந்த ரகசியக் கூட்டத்திற்கு வேற்று நாட்டு வீரர்களும், இளவரசனும் எதற்கு?” எனக் கடுமையாகக் கம்சனைப் பார்த்துக் கேட்டான்.

கம்சனோ அகந்தையுடன் சிரித்தான். “இந்தத் திறமையான வீரர்களின் துணையாலேயே நான் பல வெற்றிகளைக் கண்டேன். இந்தக் கொண்டாட்டத்தில் பங்கு கொள்ளவே இவர்கள் இங்கே வந்திருக்கின்றனர். அமருங்கள் தயவு செய்து.” என்றான். “அனைவரையும் சந்தியுங்கள், இவன் வ்ருத்ரிக்னன், மிகவும் திறன் வாய்ந்த படைவீரன். பனிரண்டு வருஷங்களாய் என்னுடன் இருக்கிறான்.” என்று மேலும் கூறினான்.

“நாங்கள் என்ன செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?” என்று அக்ரூரர் கம்சனைப் பார்த்துக் கேட்டார்.

“எதுவுமில்லை, இளவரசன் வசுதேவனைப் பற்றிய ஒரு விஷயம் தவிர வேறு எதுவுமில்லை.” கம்சன் மீண்டும் அகந்தைச் சிரிப்புச் சிரித்தான்.

“என்னைப் பற்றியா?” வசுதேவர் பயத்தோடு கேட்டார்.

கடினமான குரலில் கம்சன், “ஆம், உனக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் என்னிடம் கொடுக்கவேண்டும் எனச் சொல்லி இருந்தேனே உனக்கு? நினைவிருக்கிறதா? தருவதாய் நீயும் வாக்களித்தாய்? நினைவில் உள்ளதா? நான் உன்னை நம்பினேன், உன் வாக்குறுதியை நம்பினேன். நீ சொன்ன சொல்லைக் காப்பாற்றுவாய் என நினைத்தேன். ஆனால் நீயோ பொய் சொல்லிவிட்டாய். உனக்குப் பிறந்த எட்டாவது குழந்தையைத் திருட்டுத் தனமாய் கோகுலத்துக்கு மாட்டிடையத் தலைவன் ஆன நந்தனிடம் அனுப்பிவிட்டாய். எனக்குப் புரிந்துவிட்டது வசுதேவா, உன்னுடைய எட்டாவது மகன், அந்த மாட்டிடையன் நந்தனின் மகன் என்ற பெயரில் விருந்தாவனத்தில் வளர்ந்து வருகிறான். இப்படி ஒரு நம்பிக்கைத் துரோகம் நீ எனக்குச் செய்யலாமா? இது தான் நட்பின் இலக்கணமா? ஒரு க்ஷத்திரியனும், சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவனும் ஆனவனுக்கு இதுதான் தர்மமா? “


கம்சனின் அடுக்கடுக்கான கேள்விகளாலும் அவன் கடுமையான தொனியாலும் அந்த சபையில் யாருக்குமே எதுவுமே பேசத் தோன்றவில்லை. ஆனாலும் அவர்களுக்கு இது முற்றிலும் புதிய செய்தியே. உள்ளூரப் பன்னீர் தெளித்தாற்போல மனதுக்குள்ளே மகிழ்ச்சி அனைவருக்கும் வந்தது. ஆஹா, வசுதேவனின் எட்டாவது குழந்தை உயிரோடு இருக்கிறதா? நந்தனிடம் வளர்கின்றானா? அப்பாடி, ஒருவழியாய்க் கம்சனை அழிக்கப் போகின்றவன் உயிருடன் இருக்கின்றான். நாரதமுனிவரின் தீர்க்க தரிசனம் பொய்யாகவில்லை. வசுதேவரோ கோபத்துடன் புருவங்கள் நெரிய ஏதோ பதில் கொடுக்கப் போகும்போது வயதான அந்தகத் தலைவன் ஆன பஹூகா, அவரை அடக்கி, கம்சனைப் பார்த்து, “உக்ரசேனரின் மகன் ஆன நீ க்ஷத்திரிய தர்மத்தைப் பற்றி எங்களுக்குப் போதிக்கிறாய்? உனக்கு என்ன தகுதி அதற்கு?” என்று கேட்டார்.

கம்சனுக்கு ஆச்சரியமாய்ப் போய்விட்டது. பஹூகா இப்படிப் பளிச்சென்று பேசுவான், கேள்விகள் கேட்பான் என அவன் எதிர்பார்க்கவில்லைதான். மேலும் பஹூகா போன்ற பெரியவர்கள் பேசும்போது மற்ற யாதவத் தலைவர்கள் என்னதான் பெரிய பதவிகளில் இருந்தாலும் மரியாதை நிமித்தம் திரும்பப் பேசவும் மாட்டார்கள். ஆனால் கம்சன் அப்படியா? தன்னைத் தானே சக்கரவர்த்தி என அறிவித்துக் கொள்பவன் ஆயிற்றே அவன்? ஆகவே அவன் பஹூகாவை இடைமறித்து, " ஏன் கூடாது?” என்று கேட்டான்.

பஹூகா சொன்னான்:” கேள், உக்ரசேனனின் மகனே, கேள், உன் தந்தை திடகாத்திரமாகவும், தெம்பாகவும் இருக்கும்போது அவரைச் சிறையில் அடைத்துவிட்டு நீ அரியணை ஏறியது க்ஷத்திரிய தர்மத்தைச் சேர்ந்ததா? உன் சித்தப்பன் மகளும், உனக்குத் தங்கை முறை ஆனவளும் ஆன தேவகியையும், வசுதேவனையும் அவர்கள் திருமண நாளன்றே சிறையில் அடைத்தாயே, அது எந்த க்ஷத்திரிய தர்மத்தைச் சேர்ந்தது? ம்ம்ம்ம்… எதற்குச் சிறையில் அடைத்தாய்? உன் தங்கையின் எட்டுக் குழந்தைகளையும் கொல்வதற்கு, அதுவும் பிறந்ததுமே கொல்லவேண்டியே சிறையில் அடைத்தாய்! கேள், கம்சா, நான் என்ன இன்னும் சில வருஷங்கள் உயிருடன் இருந்தால் அதிகம். என்றாலும் நான் சிறுவனாய் இருந்தபோதில் இருந்தே மரணத்துக்குப் பயந்ததில்லை. மரணத்தின் கடவுள் எனச் சொல்லப் படும் யமனைக் கண்டு அஞ்சியதில்லை. ஆனால் நீ???? எத்தனை வருஷங்களாக உன்னிடம் சொல்லக் காத்துக் கொண்டிருந்தேன் இந்த விஷயங்களை என்பதை நீ அறிவாயா? பொறுமையாய் கேட்டுக் கொள்! நீ செய்த இத்தகைய கொடுமைகளை இதுவரையிலும் யாருமே செய்ததில்லை! யாதவ குலத்துக்கே நீ பெரும் கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்துவிட்டாய். “

பஹூகா சற்று மூச்சு வாங்க அவகாசம் எடுத்துக் கொண்டான். பின்னர் மேலும் தொடர்ந்தான். “வசுதேவனின் எட்டாவது குழந்தையைப் பற்றி நீ ஏன் இவ்வளவு ஏன் கவலைப்படுகிறாய்??அவன் எங்கே இருந்தால் அல்லது எப்படி இருந்தால் உனக்கு என்ன? ஏற்கெனவே வசுதேவனுக்கு உன்னால் ஏற்பட்ட தொல்லைகள் போதுமானது. மேன் மேலும் நீ அவனுக்குத் தொல்லை கொடுக்க நான் அநுமதிக்கமாட்டேன்." கோபம் மீதூறிய கிழவன் கண்களில் சிவப்பேறியது.

கம்சன் கோபத்தில் தன்னை இழந்தான். தன்னன மீறி, தன் வார்த்தையை மீறி யாதவகுலத்தில் ஒருவன் பேசுவதா? அதைத் தான் அநுமதிப்பதா? தன்னை அறியாமல் அவன் கைகள் வாளை எடுக்கச் சென்றன, அவன் கண்கள் ப்ரத்யோதாவையும் வ்ருதிக்னனையும் ஒரு நிமிஷம் பார்த்து ஏதோ சைகையில் பேசின. அக்ரூரருக்கு உள்ள நிலைமை நன்கு புரிந்தது. ப்ரத்யோதாவை அவரும் பார்த்துப் புன்னகைத்துவிட்டுத் தன் மென்மையான அதே சமயம் உறுதியான குரலில் பேச ஆரம்பித்தார். “இளவரசே, உன் கோபம் உன் விவேகத்தை வென்றுவிட இடம் கொடுக்காதே. கோபம் பைத்தியக்காரத்தனத்துக்கு ஒப்பானது. உனக்கு என்ன வசுதேவனின் எட்டாம் குழந்தையைப் பற்றித் தெரியவேண்டும், அவ்வளவு தானே?”

ஆம்” கம்சன் மறுமொழி சொன்னான்.


அக்ரூரர் பேச ஆரம்பித்தார். “தேவகியின் எட்டாவது குழந்தை ஒரு ஆண்குழந்தை. அவன் விருந்தாவனத்தில் இருக்கிறானா என்பது உனக்குத் தெரியவேண்டும் அல்லவா? கேள், ஆம் அவன் விருந்தாவனத்தில் தான் வளர்ந்து வருகிறான். உன்னை யாராவது இவ்விஷயத்தில் ஏமாற்றி இருந்தார்கள் என நீ எண்ணினால் அது நான் மட்டுமே. வேறு யாரும் இல்லை. நான் தான் நந்தனின் பெண் குழந்தையையும், தேவகியின் ஆண் குழந்தையையும் இடம் மாற்ற ஏற்பாடுகள் செய்தேன்."

“என்ன, நீங்கள் ஏற்பாடு செய்தீர்களா? ஏன், எதற்கு?” கம்சன் கேட்டான்.

அவன் எவ்வளவு முயன்றும் கோபத்தை அவனால் மறைக்கமுடியவில்லை. அக்ரூரர் சொன்னார், “நீ தேவகியின் அனைத்துக் குழந்தைகளையும் கொன்று கொண்டிருந்தாய், உன்னுடைய இந்த மூர்க்கத் தனமான, மற்றும் பாவகரமான காரியத்தில் இருந்து உன்னைக் காக்கவேண்டியே இவ்விதம் செய்தேன்." சற்றே ஏளனம் கலந்த புன்னகை அக்ரூரரிடம் தென்பட்டது. “உன்னை உன்னிடமிருந்தே காக்கவேண்டியே செய்தேன்.”

கம்சன் கேட்டான், "ஆஹா! அதுவும் அப்படியா?? எனில், நந்தனின் மகன் கிருஷ்ணன் தான் தேவகியின் எட்டாவது குழந்தை என்பதும் உண்மையா?”

“ஆம்”

கம்சனுக்குள்ளே அவனையும் அறியாமல் ஒரு பீதி பரவியது. முதுகுத் தண்டு சில்லிட்டது. கடைசியில் அவனை அழிக்கப் போகின்றவன் பிறந்து வளர்ந்து காத்திருக்கிறான். எந்நேரமும் வந்துவிடுவான். எப்படி, என்று, எந்த ஆயுதத்தால் கொல்லப் போகின்றான்? உண்மையாகவே கொன்றுவிடுவானோ? அல்லது எல்லாரும் மிகைப்படச் சிந்திக்கின்றார்களா? என்ன இருந்தாலும் நமக்கும் ஒரு பகைவன் இருக்கிறான் என்றால் அவனை அழித்தால் ஒழிய நிம்மதி இல்லை. மிகவும் சிரமப் பட்டு தன் கலக்கத்தை மறைத்துக் கொண்டான் கம்சன். அக்ரூரரைப் பார்த்து சிரித்தான். “அக்ரூரா, நான் என்ன அவ்வளவு மோசமானவனா என்ன?? அதெல்லாம் கடந்த காலக் கதையப்பா. நான் அனைத்தையும் இப்போது மறந்தே விட்டேன். நீயும் மறந்துவிடு நண்பா. சரி, அதைவிடு, தேவகியின் பிள்ளை உயிருடன் இருக்கிறான் என்றால் நான் அவனை இங்கே வந்து இருக்கவேண்டும் என்றே விரும்புகிறேன்.”

“ஏன் அவன் இங்கே வரவேண்டும் என விரும்புகிறாய்?” அக்ரூரர் கேட்டார்.

“ அவன் வரட்டும், வந்து இந்த தநுர் யாகத்தில் கலந்து கொள்ளட்டும். அவனுடைய திறமையையும், சாதனைகளையும் பற்றிக் கதை, கதையாய்ச் சொல்லுகின்றனர். நான் அனைத்தையும் கேட்டிருக்கிறேன். என்னுடைய தநுர்யாக வில்லை அவனால் எடுக்கவாவது முடிகிறதா என நான் பார்க்கவேண்டும். மல்யுத்தம் தெரியுமாமே அவனுக்கு? இங்கே மல்யுத்தத்திலும் பங்கு பெறட்டும் அவனும். ம்ம்ம்ம்ம்ம் அனைத்து மக்களும் சொல்லுவது போல் அவன் அவ்வளவு சிறந்தவனாகவும், அதிசயமானவனாயும் இருந்தால் இந்த மல்யுத்தத்தில் ஜெயிப்பதோ, தநுர்யாகத்தின் வில்லைக் கையாளுவதோ அவனுக்குச் சிரமமாய் இருக்காது.”

“இதில் ஏதோ சூது இருக்கிறது என நினைக்கிறேன் இளவரசே!” என்று உடனேயே பஹூகா சொல்ல, “என்ன சூது? எதுவும் இல்லை!” எனக் கம்சன் மறுத்தான். “நான் மிகவும் சந்தோஷமாய் இருக்கிறேன். நீங்கள் தந்தையே?” எனத் தன் தந்தை உக்ரசேனரைப் பார்த்துக் கேட்டான் கம்சன். மற்றத் தலைவர்களுக்குக் கம்சனின் இந்த அசாதாரணமான நன்னடத்தையில் சந்தேகமாகவே இருந்தாலும் அக்ரூரரின் செயல்களிலும் சொற்களிலும், அவர் கம்சனைக் கையாளும் விதத்திலும் நம்பிக்கை வைத்துப் பேசாமல் இருந்தனர். “அந்த சர்வேஸ்வரன் அனைவருக்கும் நன்மையே செய்வான்.” என்று ஒரே வரியில் முடித்துக் கொண்டான் உக்ரசேனன்.

அக்ரூரரைப் பார்த்துக் கம்சன், “ அக்ரூரரே, நீ எனக்கு ஒரு உதவி செய்யவேண்டுமே, அந்தக் கிருஷ்ணனை இங்கே அழைத்துவா, அப்படியே அந்த ரோஹிணிக்கு ஒரு மகன் இருக்கிறானாமே, பலராமன் என்ற பெயரில். அவனும் வரட்டும். அவனும் கிருஷ்ணனும் இணை பிரியாமல் இருப்பார்களாமே? இருவரும் வந்து தநுர்யாகத்தில் பங்கெடுக்கட்டும். அப்படியே நந்தனையும் அவனுடைய வீரர்களையும் வந்து யாகத்தில் பங்கு கொள்ளச் சொல். ஆ, மறந்தே விட்டேனே, இந்த வருஷக் கப்பம் நந்தன் இன்னும் கொடுக்கவில்லை. அதையும் நினைவூட்டு. என்ன வசுதேவா, நான் சொல்வது சரிதானே?”

அக்ரூரர் இடைமறித்து, “இளவரசே, நான் நேரே விருந்தாவனம் சென்று, அவர்கள் இருவரையும் இங்கே அழைத்து வருகிறேன்.” என்றார்.