எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, August 29, 2009

கண்ணன் வருவான் கதை சொல்லுவான் - கோவர்தன மலையில் கண்ணன்!


அம்மைத் தடங்கண் மடவாய்ச் சியரும்
ஆனா யரும்ஆ நிரையும் அலறி
எம்மைச் சரணேன் றுகொள்ளென் றிரப்ப
இலங்கா ழிக்கையெந் தைஎடுத் தமலை
தம்மைச் சரணென் றதம்பா வையரைப்
புனமேய் கின்றமா னினம்காண் மினென்று
கொம்மைப் புயக்குன் றர்சிலை குனிக்கும்
கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே 3



267 கடுவாய்ச் சினவெங் கண்களிற் றினுக்குக்
கவள மெடுத்துக் கொடுப்பா னவன்போல்
அடிவா யுறக்கை யிட்டுஎழப் பறித்திட்டு
அமரர் பெருமான் கொண்டுநின் றமலை
கடல்வாய்ச் சென்றுமே கம்கவிழ்ந் திறங்கிக்
கதுவாய்ப் படநீர் முகந்தே றிஎங்கும்
குடவாய்ப் படநின் றுமழை பொழியும்
கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே
4


கோலாகலமாய்த் தயாராகிக் கொண்டிருந்தது விருந்தாவனம். இந்திரனுக்குத் தான் விழா எடுக்கவேண்டும் என்று சிலரும், இல்லை, இல்லை, கண்ணன் சொல்லுவதே சரி, நம்மைக் காத்து ரக்ஷித்து வரும் பசுக்களுக்கும், கன்றுகளுக்கும், வழிபாடுகள் செய்வதோடு, நமக்கு இறைவன் அளித்த கொடையான இந்த கோவர்தன மலைக்கும் வழிபாடு நடத்துவதே சரி என்று சிலரும். ஆகக் கூடி விருந்தாவனம் இரண்டாகப் பிரிந்தது. கண்ணனைப் பலரும், ஐயனைச் சிலரும் ஆதரித்தனர். ஐயனை ஆதரித்தவர்கள் இந்திரனுக்கு விழா எடுக்கத் தங்கள் அளவில் தயார் செய்து கொண்டிருந்தனர். கோபர்களின் தலைவன் ஆன நந்தனோ தன் அருமை மகன் பக்கம்தான். மற்ற கோபர்களிலும் பெரும்பாலோர் கண்ணன் பக்கமே. குரு கர்காசாரியாரும், குரு சாந்தீபனியும் கண்ணனையே ஆதரித்தனர். அவர்கள் இங்கே ஆசாரியர்களாக இருந்து விழாவை நடத்திக் கொடுக்கும் ஏற்பாடுகளில் மூழ்கி இருக்க ஐயனை ஆதரிப்பவர்கள் ஐயனின் தகப்பன் ஸ்தோககிருஷ்ணன் தலைமையில் கூடி அவர்களுக்கென ஒரு ஆசாரியர் தேவை என்பது பற்றி விவாதித்திக் கடைசியில் மதுராவில் இருந்து ஒரு நன்கு கற்றறிந்த அந்தணரை அழைத்து வந்திருந்தனர்.

பண்டிகை நாளும் வந்தது. மாடுகள், கன்றுகள் குளிப்பாட்டப் பட்டு நன்கு அலங்கரிக்கப் பட்டு ஒரு பெரிய ஊர்வலமாய் கோவர்தன் மலையை நோக்கிச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தது. கோபர்கள் அனைவரும் இந்த ஊர்வலத்தில் தங்கள் மாடு, கன்றுகளோடு தாங்களும் செல்லத் தயாரானார்கள். வழியிலேயே ஒரே ஆட்டமும், பாட்டமும் கொண்டாட்டமுமாக இருந்தது. இளைஞர்கள் காளைகளைத் துரத்திவிட்டு அவை ஓடும்போது ஓடிப் போய்ப் பிடித்து, இளம்பெண்களின் கண்கள் முன்னால் அந்தக் காளைகளின் முதுகில் ஏறி அமர முயன்றனர். சிலர் தோற்றனர். சிலர் ஏறி அமர்ந்தனர். தோற்றவரைப் பார்த்து இளம்பெண்கள் தங்களுக்குள் சுட்டிக் காட்டிக் கொண்டு பேசிக் களுக்கெனச் சிரித்துக் கொண்டனர். வென்றவர் தங்கள் மார்பை நிமிர்த்திக் கொண்டு மிகப் பெருமிதமாய் இளம்பெண்களைக் கண்டு சிரித்த வண்ணம் சென்றனர். காளை மாடுகள் பூட்டிய வண்டிகளில் உணவுப் பொருட்களும், சில வண்டிகளில் சமைக்கப் பட்ட உணவுகளும் சென்றன. பெண்கள் தங்களை எவ்வளவு அழகாய் அலங்கரித்துக் கொள்ள முடியுமோ அத்தனை அழகாய் அலங்கரித்துக் கொண்டிருந்தனர். ராதையும் அந்தப்பெண்களில் ஒருத்தியாய் தன் திருமண நிச்சயதார்த்தம் கண்ணனுடன் நடந்தபோது யசோதை பரிசாய் அளித்த உடையில் ஜொலித்துக் கொண்டிருந்தாள். கிருஷ்ணனும், பலராமனும் ஊர்வலத்தை முன்னின்று நடத்தினார்கள்.

நன்கு வளர்ந்திருந்த பலராமனுக்கு இப்போதெல்லாம் ஏர்க்கலப்பைதான் ஆயுதமாய்த் தெரிந்தது. அதற்குக் குறைந்த வேறெதுவும் ஆயுதமாய்த் தெரியவில்லை. மற்றவர்களைவிட ஒரு பிடி உயரமாகவே இருந்த பலராமன் பொன்னிறத்துடன் இருந்தான். அவன் அணிந்திருந்த நீலநிற உடை அதை நன்கு எடுத்துக்காட்ட, நீலமேக சியாமளன் ஆன நம் கண்ணனோ, மஞ்சள் பீதாம்பரத்தில் ஜொலித்தான். மேலும் இப்போதெல்லாம் கண்ணனின் எடுத்துக் கட்டிய சிகையில் மயில் பீலி ஒன்றை வைத்துக் கொண்டு அலங்கரித்துக் கொள்ளுவதை வழக்கமாய்க் கொண்டிருந்தான். கழுத்தையும், கைகளையும் மலர்களால் செய்யப் பட்ட ஆபரணங்கள் அலங்கரிக்கத் தன் இடையில் தன்னைவிட்டு ஒரு கணமும் பிரியாத புல்லாங்குழலைச் சொருகிக் கொண்டிருந்தான். கண்ணன் தொடரும் கூட்டத்தின் அனைத்து மக்களையும் தனித்தனியாய்ப் பெயர் சொல்லி அழைத்துப் பேசுவதையும், இளம்பெண்களோடு சகஜமாகவும், அதே சமயம் மரியாதை தவறாமலும் பேசுவதையும் சாந்தீபனியும், கர்காசாரியாரும் கவனித்தனர். என்னதான் கண்ணன் சொன்னான் என்று கோவர்தனுக்கு விழா எடுக்கக் கூடிவிட்டாலும், என்ன நடக்கப் போகிறதோ என்ற உணர்ச்சிவசத்தில் அவர்கள் ஒரு எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

மதியம் போல் கோவர்தன மலையை அடைந்த அனைவரும் கொண்டு சென்றிருந்த உணவைப் பங்கிட்டுக் கொண்டும், பகிர்ந்து கொண்டும் உண்டனர். பின்னர் கிடைத்த ஓய்வு நேரத்தில் ஆடிப் பாடினர். ஒருவர் மற்றவரைக் கேலி செய்து மகிழ்ந்தனர். காட்டு மிருகங்களின் சப்தங்களைப் போல் குரலெடுத்துக் கேலி செய்து களித்தனர். இரவு நன்கு தூங்கிக் காலை எழுந்து வழிபாடுகளுக்குத் தங்களைத் தயார் செய்து கொண்டனர். கொண்டு போன பசுக்கள் அனைத்தும் கறக்கப் பட்டு பால் சேகரம் செய்யப் பட்டது. அனைவரும் குரு கர்காசாரியார் முன் செல்ல கோவர்தன மலை உச்சியை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். அங்கே சென்றதும் குரு கோவர்தன மலைக்குத் தன் வழிபாட்டைத் தொடங்கினார். அனைவருக்கும் மனதில் கோவர்தனம் மலைகளுக்கெல்லாம் மட்டும் அரசன் இல்லை, தங்களுக்கும் கோவர்தன மலையே கடவுள் என்ற எண்ணம் முன்னின்றது. வழிபாடு முடிந்து கற்பூர ஆரத்தி தொடங்க ஆயத்தம் செய்தார் கர்காசாரியார். அப்போது கண்ணன், கோவர்தன மலையின் மறுபக்கத்தில் இருந்து ஐயனும், அவன் நண்பர்களில் சிலரும் மலை ஏறி வந்து கொண்டிருந்ததைக் கண்டான். அதுவும் பெண்கள் இருக்கும் பகுதியில், இளம்பெண்களோடு சேர்ந்து ராதையும் நின்று கொண்டு வழிபாடுகளில் ஆழ்ந்து போயிருந்த பகுதியை நோக்கி ஐயனும், அவன் நண்பர்களும் முன்னேறிக் கொண்டிருந்ததைக் கண்டான். கண்ணன் இதழ்களில் புன்முறுவல் தோன்றியது.

கோபர்களில் சிலரும் ஐயனும் அவன் நண்பர்களும் வருவதைக் கண்டனர். அவர்களுக்கு அவன் வழிபாடுகளில் ஏதேனும் இடையூறு செய்யப் போகின்றானே என்ற அச்சம் ஏற்பட்டது. அதற்குள் ஏதோ முடிவுக்கு வந்த கண்ணன், “ஸ்ரீதாமா, ஐயனும், அவன் நண்பர்களும் வழிபாட்டில் கலந்து கொள்ள வருகின்றனர் போலும். அவர்களை இங்கே அழைத்துவா! ஐயன், உங்கள் நண்பர்களை அழைத்துக் கொண்டு இங்கே வந்துவிடுங்கள். வழிபாட்டை நன்கு காணமுடியும். “ கண்ணனே அழைத்துவிட்டான் ஐயனையும், அவன் நண்பர்களையும். ஆனால் இது என்ன?? ஐயன் வெகுவேகமாய்த் திரும்புகின்றானே??? வந்ததை விட வேகமாய்க் கீழே இறங்குகின்றானே? வழிபாட்டில் ஆரத்தி காட்டப் பட்டது கண்ணனுக்கும் சேர்த்து. அன்றிரவு!!!!

Monday, August 24, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - ஐயனா? கண்ணனா?

ஐயன் திரும்பிவிட்டான் விருந்தாவனத்திற்கு. கிட்டத் தட்டப் பத்து வருஷங்கள் கழிச்சுத் திரும்பி இருக்கிறான். கெட்டிக் காரனும், திறமைசாலியும் ஆன ஐயன் கம்சன் அஸ்வமேத யாகக் குதிரையுடன் சென்றபோது அவனுடன் சென்றிருந்தான். கம்ஸனின் மாமனார் ஆன மகத நாட்டுச் சக்கரவர்த்தி ஜராசந்தன் அஸ்வமேத யாகம் செய்து முடித்திருந்தான். இதன் மூலம் உலகையே ஆளும் சக்கரவர்த்தியாகத் தான் ஆகமுடியும் என்றும் ஜராசந்தன் நம்பி இருந்தான். ஜராசந்தனின் மகதத்தில் ராஜகிருஹத்தில் இருந்தபோது கம்சனுக்கு அவன் அனைத்து உரிமைகளையும் வழங்கி இருந்தான். மகத நாட்டுப் படைகளை நடத்திச் செல்லும் உரிமையைத் தன் மருமகனுக்குக் கொடுத்திருந்தான்.கம்சனின் பொறுக்கி எடுத்த வீரர்களில் ஒருவனாய்க் கூடச் சென்றிருந்த ஐயன் அனைத்தையும் பார்த்துக் கம்சனுக்கு அங்கே கிடைத்த மரியாதைகளிலும், அவன் வீரத்திலும், தன்னைப் பறி கொடுத்தான். விவேகம் அவனிடம் இல்லை என்பதை ஐயன் புரிந்து கொள்ளவில்லை. கம்சனின் அலட்சியமும், மனிதரைக் கேட்காமல், விசாரிக்காமல் கொல்லுவதையும் பார்த்து வியந்ததோடு அல்லாமல் அதை ஓர் வீரமாய் நினைத்தான். ஆயிற்று. அஸ்வமேத யக்ஞம் முடிந்து கம்ஸனும் மதுராவிற்குத் திரும்பி விட்டான். அவனுடைய வீரர்களோடு இப்போது கம்சனின் மாமனார் அனுப்பிய மகதப் படைகளும் சேர்ந்து மதுராவில் ஒரே கோலாகலம் தான். எங்கே நோக்கினாலும் ராணுவ வீரர்கள். படைகள் நடமாட்டம். திரும்பிய வீரர்களில் ஒருவன் ஆன ஐயன் தன் பெற்றோரைச் சந்திக்கவேண்டி அனுமதி பெற்று விருந்தாவனம் வந்திருந்தான்.

மதுராவுக்கு வந்ததுமே அவன் காதுகளுக்கு எட்டிய செய்தியானது ராதையை வேறே யாரோ மணக்கப் போகின்றனர் என்பதே. கோகுலத்து கோபர்களின் தலைவன் நந்தனாம். அவனின் ஒரே மகன் கானையாவாமே? ராதையை விடச் சின்னவனாமே? ம்ம்ம்ம்ம்?? கோகுலத்தில் ஏதோ பிரச்னை என்று சில வருஷங்கள் முன்னால் தான் விருந்தாவனத்திற்கு வந்து குடியேறினார்களாம். அவனுடைய மகன் என்பதால் நான் சும்மா விடுவேனா என்ன??? இந்தக் காமப் பித்துக் கொண்ட கண்ணனின் ஆசைக்கு ராதை எப்படி இணங்கினாள்? அவள் என்னுடையவள். எனக்கு நிச்சயிக்கப் பட்டவள் அல்லவோ? என்னுடைய வீரத்திற்கும், குடிப்பெருமைக்கும் இழுக்கு நேரும் இத்தகைய ஒரு காரியத்தை நான் எவ்விதம் அநுமதிப்பது? நிச்சயிக்கப் பட்ட இந்தப் பெண்ணை நான் இன்னும் பார்த்ததில்லை தான். எப்படி இருப்பாள் என்பதும் தெரியாது தான்.ம்ம்ம்ம்ம்??? என்னுடைய தகுதிக்கும், வீரத்திற்கும், கம்சன் எனக்கு இப்போது அளித்திருக்கும் கெளரவத்திற்கும் இவளை விட அழகான பெண்கள் என்னை மணக்கவருவார்கள்தான். ஆனால், ஆனால், ஆனால், இந்தக் கண்ணன் சிறுபயல், அவன் என்னை ஜெயிக்கவிடுவதா? ராதை எனக்குக் கிடைக்காவிட்டாலும் போகிறாள். எனக்கு நேர்ந்திருக்கும் இந்தத் தனிப்பட்ட அவமரியாதையைப் பொறுக்க முடியாது. அந்தக் கண்ணனை ஒரு கை பார்க்கவேண்டும். ஒரு கை என்ன இருகையாலும் பார்த்துவிட வேண்டியது தான். மீசையை முறுக்கினான் ஐயன்.

ம்ம்ம்ம்ம்??? கம்சனின் படையில் சேர்ந்து பலநாடுகள் சுற்றி என் போர்த்திறமை வளர்த்துக் கொண்டு இன்று இத்தனை முன்னேற்றத்துடன் வந்திருக்கும் என்னுடன் அந்தக் கண்ணன், அதான், அந்த நந்தன் மகன் எந்த முகத்தை வைத்துக் கொண்டு மோதுவான்? நான் தான் ஜெயிப்பேன். ஜெயித்ததும், ராதையையும் விடக் கூடாது தான். எப்படி விடுவது? மற்ற மனைவியோடு இவளும் இருந்துவிட்டுப் போகட்டுமே! கண்ணா, கண்ணா, இருடா இரு! நான் வந்துவிட்டேன்! வந்த ஐயனுக்கு இன்னொரு செய்தியும் காத்திருந்தது. இந்த வருஷம் இந்திரனுக்கு விழா எடுக்கப் போவதில்லையாமே? அட?? ஒவ்வொரு வருஷமும் இந்திரனுக்கு விருந்தாவனத்தில் விழா எடுக்காமல் இருந்ததே இல்லையே! என்ன காரணம் இந்த வருஷம் மட்டும் இப்படி? அதுவும் இந்த வருஷம் விழாவை முன்னின்று நடத்தப் போவதும் கண்ணனாமே? இது எப்படி நடந்தது? ஐயன் விசாரிக்கிறான்.

முதலில் இந்திரவிழாவுக்கே கோபர்களும், கோபிகளும் தயார் ஆனார்கள். விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டன. விழாவில் நடக்கும் யக்ஞங்களுக்கு யார் யஜமானாக இருப்பது என ஆலோசிக்கப் பட்டது. சென்ற வருஷம் பலராமன் இருந்தான். இந்த வருஷம் கண்ணனை இருக்கச் சொல்லலாமா? ஆம் அது தான் சரி! ஏற்கெனவே கண்ணனின் அருமையான பேச்சு வன்மையால் கவரப் பட்டிருந்த கர்காசாரியாரும், சாந்தீபனியும் கண்ணனிடம் வந்து அவனை யக்ஞ அதிகாரியாய்த் தேர்ந்தெடுத்திருப்பதைச் சொல்கின்றனர். கண்ணனோ கூப்பிய கரங்களோடு பலராமனையோ, ஸ்ரீதாமாவையோ இருக்கும்படி கேட்கச் சொல்ல, கர்கர் கண்ணன் மறுப்பதின் காரணத்தைக் கேட்கின்றார். தான் தகுதி இல்லாதவன் எனக் கண்ணன் சொல்ல கண்ணனைவிடத் தகுதிவாய்ந்தவர் யார் என கர்கர் கேட்க, கண்ணன் சொல்கின்றான்.
“குருதேவா, எனக்கு இந்திரவிழா பிடிக்கவில்லை”

“என்ன?? என்ன??? என்ன??”

“காலம் காலமாய் நடக்கிறதே!”
இந்திரனுக்காக விழா எடுத்து எவ்வளவு பால், தயிர், தேன், வெண்ணெய், அக்னி, தானியங்கள் எனச் செலவு செய்கின்றோம்? இத்தனையும் அவனிடம் உள்ள பயத்தால் அல்லவா குருதேவா? விழா எடுக்கவில்லை என்றால் இந்திரன் கோபம் அடைவான் என்று தானே?” கண்ணன் கேட்டான்.

“ஏன் கண்ணா, ஆனானப் பட்ட ரிஷி, முனிவர்களே இந்திரனுக்கு விழா எடுத்து யாகங்கள் செய்கின்றனர். நாம் செய்தால் என்ன”

“குருதேவா, ச்யவன மஹரிஷி செய்கின்றாரா? அவருக்கு என்ன நன்மைகளே நடக்கவில்லையா? அனைத்திலும் வென்றவராகவே இருக்கின்றார் அல்லவோ? பயத்திலும், கோழைத்தனத்திலும் விழா எடுப்பதில் என்ன உற்சாகம் இருக்கிறது குருதேவா! விழா என்றால் மனதில் சந்தோஷமும், களிப்பும் இருக்கவேண்டாமா?”

தெய்வநிந்தனை செய்யாதே கண்ணா!”

“இல்லை குருதேவா!” கண்ணன் சற்று நேரம் ஒன்றும் பேசவில்லை. “குருதேவா, திருவிழாக்களோ, பண்டிகைகளோ நம்மை உற்சாகப் படுத்தத் தான் அல்லவா? நாம் வணங்கும் கடவுள் இந்தத் திருவிழாவை நாம் எடுக்கவில்லை எனில் நம்மை மிக மோசமாய்த் தண்டிப்பார் என பயந்து எடுத்தால் அதில் என்ன பலன் கிடைக்கும் குருதேவா? நம்மிடம் நம் கடவுளிடம் நம்பிக்கையும், பயம் என்பது இல்லாமலும், அன்பை மட்டுமே கடவுளுக்கு மனமாரக் கொடுத்து, அதைத் திரும்பப் பெறுபவராகவும் இருக்கவேண்டும் அல்லவா? பயத்துடனேயே விமரிசையாக விழா எடுப்பதில் என்ன பயன்? இதோ பாருங்கள், நம் விருந்தாவனத்துப் பசுக்களையும், கன்றுகளையும், காளைகளையும், நமக்கு எவ்வளவு பால் தருகின்றன? நம்மிடம் உள்ள செல்வத்திற்கெல்லாம் காரணமே இந்தப் பசுக்களும், கன்றுகளும் அல்லவோ? மேலும் இவற்றின் சாணத்தைக் கூட நாம் விடுவதில்லை. அடுப்பு எரிக்கப் பயன்படுத்துகிறோம். பாலில் இருந்து தயிர், மோர், வெண்ணெய், நெய் அந்த நெய்யிலிருந்து பலகாரங்கள், பால் சோறு என எத்தனைக்குப் பயன் படுத்துகிறோம் பசுக்களின் பாலை? அந்தப் பசுக்களுக்குத் திரும்ப நாம் என்ன கொடுக்கிறோம்? ஆஹாரம் என்னமோ கொடுக்கிறோம் தான். ஆனால் அதுவும் நம் சுயநலத்திற்குத் தானே? ஆஹாரம் இல்லை எனில் பசுக்கள் பால் கொடுக்கமுடியாது என்பதால் அல்லவோ? “ கண்ணனுக்கு மூச்சு வாங்கியது. ஆனாலும் அவன் பேச்சு நிற்கவில்லை.

“இதோ இந்த மரங்களைப் பாருங்களேன், இதன் பழங்களை நாம் உண்கின்றோம். இதோ இந்தச் செடிகள், இவற்றின் காய்கள் நமக்கு உணவாகின்றன. இந்த கோவர்தன் மலை, இதன் அடர்ந்த காடுகள் நமக்குத் தரும் நிழலும், இதன் புல்வெளிகள் நம் பசுக்களுக்கு அளிக்கும் உணவும், இதிலிருந்து வரும் ஊற்றுக்கள், நதிகளின் தெளிந்த நீர் நமக்குக் கொடுக்கும் சுவையான குடிநீரும்! அப்பப்பா! குருதேவா! சொல்லுங்கள், கோவர்தன மலைக்கு நாம் என்ன செய்திருக்கிறோம் திரும்ப?”

“ஓஹோ, அப்போ நீ உன்னோட இந்தப் புதிய கடவுளருக்கு என்ன செய்யணும்னு சொல்றே கண்ணா?” சாந்தீபனி கேட்டார். கண்ணன் சொல்கின்றான்: “இப்போது நாம் எடுக்கப் போகும் விழா நம் பசுக்கள், கன்றுகள், காளைகளுக்காகவும், இந்த மரம், செடி, கொடிகளை நமக்கு அளித்த கடவுளுக்காகவும், இந்த மலையரசனுக்காகவும், இருக்கட்டும். அவை நம்முடையவை என்ற எண்ணமே நம்மிடம் இருக்கிறது. இல்லை குருதேவா! நாம் தான் அவற்றுக்குச் சொந்தம். அவை இல்லாமல் நாம் எங்கே? நம்மிடம் ஒன்றுமே இருக்காது. நாமே இருக்க மாட்டோம்.”

“அது என்னமோ சரிதான்” விருந்தாவனத்து மூத்த கோபர்களில் ஒருவர் ஆமோதித்தார். “பசுக்களே நம்முடைய செல்வம்” என்று அனைவரும் ஒத்துக் கொண்டனர். “இந்தப் பசுக்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள எத்தனையோ இருக்கிறது. இவற்றின் கம்பீரம், விநயம், பெருந்தன்மை, இனிமை, சாதுவான தன்மை என்று கற்றுக் கொள்ளவேண்டும்.”
கண்ணன் மேலும் சொன்னான்.”அது சரி, நாம் இவற்றுக்கு விழா எடுத்தால் இந்திரனுக்குக் கோபம் வராதா? ஏற்கெனவே இந்திரனின் கோபம் மிகவும் பிரபலம் ஆனது.” இன்னொருவர் கேட்டார். “கடவுள் என்றால் கோபம் கூடாது. அதை எடுத்துக் காட்டவேண்டியது நம்முடைய தர்மம் அல்லவோ?” கண்ணன் கேட்டான். அவ்வளவில் கோபோத்ஸ்வம் கொண்டாட முடிவு செய்யப் பட்டு அனைவரும் ஏகமனதாய் ஒத்துக் கொண்டனர். “என்றால் இந்த விழாவை முன்னின்று நடத்த நான் தயாராய் இருக்கிறேன்.” கண்ணன் முன் வந்தான். அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். விருந்தாவனம் பூராவும் செய்தி பரவியது. பழமையான சம்பிரதாயங்களை விடாமல் பின்பற்றும் சிலருக்கும், வயதில் மிகவும் முதிர்ந்த சிலருக்கும் இது சரியெனப் படவில்லை. அதிர்ச்சியையே அளித்தது. காலம் காலமாய்க் கடைப்பிடிக்கப் பட்ட ஒரு பரம்பரை வழக்கத்தை மாற்றுவதா? இதென்ன நந்தனுக்குத் தான் புத்தி கெட்டுப் போய்விட்டது என்றால் கர்கருக்கும், அவருடன் கூட வந்திருக்கும் புதிய குரு சாந்தீபனிக்குமா??

விழா முன்னால் ஏழு நாட்கள் தொடர்ச்சியாக எடுக்கப் பட்டு வந்தது. இப்போது மூன்று நாட்கள் மட்டுமே கொண்டாடுவதாய் முடிவு செய்யப் பட்டது. அந்த மூன்று நாட்களுமே வெறும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான். இளைஞர்கள் மனதில் புதிய உற்சாகமே பிறந்தது. கண்ணனைத் தங்கள் மானசீகத் தலைவனாகவே ஏற்றுக் கொண்டனர். கட்டுப்பெட்டித் தனமான வழிபாட்டுக்குப் பதிலாக புதிய முறையில் அனைவரும் கூடி மகிழ்வோடு இருக்கும் வண்ணமாகக் கண்ணன் அனைவரையும் சம்மதிக்க வைத்துவிட்டானே? ஐயனுக்கு இத்தனையும் தெரிய வந்தது. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்??? யாரவன் மாயக் காரனாய் இருக்கிறானே? இத்தனை வருஷங்களாய் நடந்து வந்த ஒரு பண்டிகையை இவன் ஒரே நாளில் மாற்றிவிட்டானே? போர்க்களத்தில் இருந்த போது கூட இந்திரனை புயலுக்கும், காற்றுக்கும், மழைக்கும் அதிபதியான இந்திரனை, வீரத்தில் சிறந்த இந்திரனைக் கும்பிட்டு வந்திருக்கிறான் ஐயன். விடமாட்டேன், நிச்சயமாய் விடமாட்டேன். நானா, அந்தக் கண்ணனா? ஒரு கை பார்த்துவிடுவோம். கண்ணா, கண்ணா, தயாராய் இரு! என்ன நடக்கப் போகிறது பார்! இந்திரவிழாவே நடக்கும் இந்த விருந்தாவனத்தில் நீ இருந்தாலும், இல்லாவிட்டாலும்.

Sunday, August 23, 2009

அர்ச்சனாவிற்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அர்ச்சனா. இன்று ஒரு வயது முடிந்து இரண்டாம் வயதில் அடியெடுத்து வைக்கும் நாளில் வெகு விரைவில் உன்னோட அப்பாவை மறக்காமல் "லூசாப்பா நீ" என்று கூப்பிடும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!:))))))))) எங்கள் இருவர் சார்பிலும் ஆசிகளும் வாழ்த்துகளும். பூரண ஆரோக்கியத்துடனும், நிறைந்த தெளிந்த அறிவுடனும் பிரகாசிக்க வாழ்த்துகள்.

Friday, August 21, 2009

அம்பிக்குக் கொடுக்கவேண்டிய மொய்!

அம்பிக்கு இப்போ கொஞ்சம் டயபர் மாத்தறதிலே இருந்து ஓய்வு கிடைச்சிருக்கு போல, நம்ம வலைக்கு வந்துட்டு இருக்கார். அதைக் கொண்டாடும் விதமாய் ஒரு சிறப்பு நகைச்சுவை ஒண்ணு, போடறேன். சுட்டதுதான். கல்கியிலே இருந்துனு நினைக்கிறேன். என்றாலும் படிக்கும்போது விடாக்கண்டன், கொடாக்கண்டன் அம்பி நினைவே வருதே, நான் என்ன செய்ய???? :P :P

"ஒருவர்: அட, உங்க பிள்ளைக்குக்கல்யாணம் ஆயிடுச்சா?? தெரியவே தெரியாதே??

மற்றவர்: அதனால் என்ன?? இப்போவும் மொய் எழுதலாம்."

அம்பி தானே நினைவில் வரார் உங்களுக்கும்? நாம என்ன கொடுத்துடுவோமா அப்படி எல்லாம்? அம்பி பையர் பிறந்த நாள் வரைக்கும் விடாமல் மொய் கேட்டும் நான் கொடுக்கலையே! ஹையா ஜாலி!

தமிழ்மரபு அறக்கட்டளையின் ஆண்டுவிழா!

தமிழ் மரபு அறக்கட்டளை தனது எட்டாம் ஆண்டுவிழாவை வருகிற 30-ம் தேதி சென்னை மயிலாப்பூரில் கற்பகாம்பாள் நகரில் உள்ள சண்முகசுந்தரம் அரங்கில் கொண்டாடுகிறது. அழைப்பிதழை இணைத்துள்ளேன். சென்னையில் உள்ள அன்பர்கள் யாவரும் வந்து நிகழ்ச்சியைச் சிறப்பித்துத் தரும்படி தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாக வேண்டுகோள் விடுக்கிறேன். நன்றி.

ennangal blog

 
http://mail.google.com/mail/?ui=2&ik=812004dc33&view=att&th=12331cfbdbcee447&attid=0.1&disp=thd&zw

Tuesday, August 18, 2009

அருமை நண்பரின் பிறந்த நாள் அறிவிப்பு!

இந்த இடத்தைக் கண்ணன் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதாலும் கண்ணன் திருமணத்திற்குத் தயாராய் இருப்பதாலும் பிள்ளையார் நாளை முதல் என்னோட இன்னொரு பதிவில் தோன்றுவார். சுட்டி கொடுத்திருக்கேன். அனைவரும் வந்து விநாயக சதுர்த்தியை வழக்கம்போல் சிறப்பித்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். அருமை நண்பரின் பிறந்த நாளை ஒட்டிய பதிவுகளை இங்கேஎன் பயணங்களில் காணலாம். சிஷ்ய கோ(கே)டிங்க எல்லாம் வழக்கம்போல் ஆதரவு தருமாறு கேட்டுக்கறேன். :)))))))))புதுமணத் தம்பதிகளைப் பிரிக்கவேண்டாம்னு விநாயகர் வேறே இடம் தேடிட்டார்.

Saturday, August 15, 2009

ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமே!!!

காந்தியவாதி கல்யாணராமன் கேள்வி!! ஆட்சியாளர்கள் என்றால் யார்? சென்ற வருடத்து மீள் பதிவு, இந்த வருஷத்துக்கும் இதுவே பொருந்தும் என்பதால் புதுசா என்ன வேண்டிக்கிடக்கு??

ஜெயா + சானலில் இன்று 12-30 மணி அளவில் காந்தியின் கடைசிக் காரியதரிசியாக இருந்த திரு கல்யாணராமனின் பேட்டி ஒளிபரப்பாகியது. இன்றைய நாட்களில் அரசும், நிர்வாகமும் பெருமளவில் ஊழலின் ஊற்றாக மாறி இருப்பது குறித்து வருந்திய அவர், காந்தி இருந்திருந்தால் 50 களிலேயே இந்த ஊழல் ஆரம்பித்ததை ஒட்டிப் புதிய கட்சி ஆரம்பித்து, மீண்டும் சுதந்திரம் கிடைக்கப் போராடி இருந்திருப்பார் என்றும் கூறுகின்றார்.

சேவை புரிவது ஒன்றே நோக்கமாய்க் கொண்டிருந்த காந்தியும், அவரின் தொண்டர்களும் இத்தகைய புரட்சியைக் கட்டாயம் செய்திருப்பார்கள் என்றே சொல்கின்றார். நாட்டு மக்களிடையே அத்தகையதொரு விழிப்புணர்ச்சி வரவேண்டும் என்றும் சொல்கின்றார். காந்தியின் தொண்டர்களாய் இருந்த, ராஜாஜி, ஆசார்ய கிருபளானி, ஜெயப்ரகாஷ் நாராயண், ஆச்சார்ய வினோபாபாவே போன்றோர் அரசியலை விட்டும், கட்சியை விட்டும் விலகி மக்கள் சேவையில் இறங்கியதையும் உதாரணம் காட்டிய அவர், அவர்கள் கூட இப்போதைய நிலையில் புரட்சிக்கே ஆதரவு தெரிவித்து, இரண்டாவது சுதந்திரத்துக்குப் போராடுவார்கள் என்றே தாம் நினைப்பதாய்த் தெரிவித்தார்.

பிரதமர், குடியரசுத் தலைவர் போன்றோர் அரசிடம் இருந்து பலவிதமான சலுகைகளைப் பெற்றுக் கொண்டும், மேன்மேலும் சம்பளம் என்றும் வாங்குவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தார். எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் போன்றோர் அரசின் செலவில் பெருமளவு தங்கள் சொந்த உபயோகத்திற்கே பயன்படுத்துவதாயும், விமானப் பயணங்களையே விரும்புவதாயும் தெரிவித்த அவர், காந்தி கடைசி வரையில் ரயில் பயணமே மேற்கொண்டதையும், அதிலும் 3-ம் வகுப்பிலேயே, பிரயாணத்தை மேற்கொண்டதையும் சுட்டிக் காட்டினார்.

இன்றைய நாட்களில் அரசு அலுவலகங்களிலும் பெரும்பாலோர் அங்கே உள்ள பார்க், புல்தரை போன்றவற்றில் உலாவிக் கொண்டே இருப்பதாயும், அரசு நிர்வாகம் சீராக இல்லை என்றும் சொல்லும் அவர், அரசு அலுவலர்கள் சரியாக வேலை செய்ய வேண்டும், என்றும், சம்பளம் கிடைப்பதால், மேற்கொண்டு அதிக ஆசை இல்லாமல் அவர்கள் நிர்வாகத்தைச் சீராக நடத்துவதைத் தங்கள் கடமையாய்க் கொள்ளவேண்டும் என்றும் கூறினார். அரசு உங்கள் அரசு என்று கூறும் அரசியல்வாதிகள் தங்கள் அளவில் அப்படியே நினைத்துக் கொள்ளுவதாயும், தங்கள் சுயலாபங்களுக்கே அரசைப் பயன்படுத்துவதாயும் மறைமுகமாய்க் கூறிய அவர், அதே போல், பொதுச் சொத்து, உங்கள் சொத்து என்று கூறுவதையும் அப்படியே எடுத்துக் கொண்டு அனைவருமே பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதையும் அல்லது அரசின் அனுமதி இல்லாமல் முறைகேடாகப் பொதுச் சொத்தை அனுபவிப்பதோ செய்கின்றார்கள் என்றும் வருந்தினார்.

இன்றைய அரசைக் கடவுளால் கூடக் காப்பாற்ற முடியாது என்று உச்ச நீதி மன்றம் வருத்தத்துடன் கூறி இருக்கும் செய்தி வந்த தினசரியை எடுத்துக் காட்டிய அவர், தீவிரவாதம் மலிந்திருக்கும் இந்நாட்களில் போலீசுக்கு அதைத் தடுக்கும் பெரும்பங்கு இருப்பதாயும் கூறினார். போலீஸ் ஸ்டேஷன்களை மூடவேண்டும் என்று கூறிய அவர் அதற்கான உதாரணமாய்த் தன் வாழ்வின் ஆரம்பத்தில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தைக் கூறினார்.

திரு கல்யாண ராமன் 20 வயதுகளில் இருக்கும்போது ஒரு ஆங்கிலேயக் கம்பனியில் வெல்பேர் ஆபிசர் என்ற போஸ்டில் நியமிக்கப் பட்டிருக்கின்றார். நியமிக்கப் பட்டு வேலையில் சேர்ந்து 3 நாட்கள் ஆகியும் அவருக்குத் தனி அறையோ, அல்லது தனி மேஜை, நாற்காலியோ கொடுக்கப் படவில்லை. இளவயது கல்யாணராமனுக்கு இது உறுத்தலாய் இருக்கத் தன் மேலதிகாரியான ஆங்கிலேயரைப் பார்த்து, தனக்குத் தனி அறையும், தனி மேஜை, நாற்காலியும் கேட்டிருக்கின்றார். அவர் முதுகில் ஒரு தட்டுத் தட்டிய அந்த அதிகாரி என்ன கூறினாராம் தெரியுமா??
"தம்பி, மேஜை , நாற்காலி போட்டு உட்காரவா வந்தாய்? போ, போய், தொழிற்சாலை முழுதும் சுற்றி வா, என்ன நடக்கின்றது என்று கவனி. அது தான் உன் வேலை! " தொழிற்சாலையைச் சுற்றி வந்து அங்கு நடக்கும் தவறுகளைக் கண்டு பிடிப்பதும், பின்னர் நன்மைகளைக் கண்டறிவதுமே தன் வேலை என்று உணர்ந்ததாய்க் கூறும் அவர் நாட்டிலும் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களும் மூடப் பட்டு போலீசார் சுற்றிக் கொண்டே இருக்கவேண்டும் என்று கூறுகின்றார். அப்போது தான் புதிதாக யார் வருகின்றார்கள் என்பதோ, அல்லது, எங்கே தவறு நடக்கின்றது என்றோ கண்டறிய முடியும், அதை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடலாம் என்பது அவர் கருத்து.

மேலும் சேவை மனப்பான்மை இன்றைய நாட்களில் குறைந்துவிட்டதாய்ச் சொன்ன அவர், நாட்டை இன்று ஆண்டு கொண்டிருப்போர் அனைவருமே பெருமளவில் கொள்ளைக் காரர்களே என்பதாயும் வருந்துகின்றார். எல்லா விஷயங்களுக்கும் சரியான குறிப்புகளோடும், ஆதாரங்களையும் காட்டியே பேசிய இவர் பேட்டி திரும்பத் திரும்ப ஒளிபரப்பானால் ஒருவேளை மாற்றம் ஏதேனும் ஏற்படுமோ??? அல்லது அதுவும் கனவாகி விடுமோ??????

நாளை நமதே!!!!

நீதி நூறு சொல்லுவாய் காசொன்று
நீட்டினால் வாங்குவாய்

அச்சம் நீங்கினாயோ? அடிமை
ஆண்மை தாங்கினாயோ?

பிச்சை வாங்கிப் பிழைக்கும் ஆசை
பேணுதல் ஒழித்தாயோ

எந்த நாட்டிலும் இந்த அநீதிகள் ஏற்குமோ???
தெய்வம் பார்க்குமோ???

Friday, August 14, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்!- என்ன செய்யப் போகிறான் கண்ணன்????

"இதோ பார் கிருஷ்ணா, நாங்கள் அனைவருமே உன்னைத் தான் நம்பியுள்ளோம். எங்களுக்கான ஒரே ரக்ஷகன் நீ ஒருத்தனே. கிட்டத் தட்ட இருபத்தைந்து வருஷங்களாய் எங்களுடைய பாதுகாப்புக்கு யாருமே இல்லாமல் காக்க வருபவனை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். இதோ, மதுராவுக்குக் கம்சன் திரும்பிவிட்டான். நீ செய்திருக்கும், அற்புதங்கள் பற்றி அவனுக்குத் தெரிய அதிக நாட்கள் ஆகாது. இதோ பார் கண்ணா, நீ நந்தன் மகனே அல்ல. நீ இளவரசன் வசுதேவனுக்கும், தேவகிக்கும் பிறந்த பிள்ளை. தேவகி இளவரசன் தேவகனின் பெண் என்பதை நீ அறிந்திருப்பாய். பலராமனும் ரோகிணிக்குப் பிறந்தவன் இல்லை. அவனும் தேவகியின் மைந்தனே."

"நாங்கள் தான் உன்னையும் அவனையும் கம்சன் கண்ணில் படாமல் நந்தனின் கூரைக்குக் கீழே கொண்டு வந்து வைத்து வளர்த்தோம். குறிப்பிட்ட நாள் வரும்வரையில் நீ இங்கே பாதுகாப்போடு இருக்கவேண்டும் என்பதே எங்கள் எண்ணம். நாரத மஹரிஷி கம்சனின் மரணம் உன் கைகளாலேயே ஏற்படப் போகிறது என்று கணித்துச் சொல்லி இருக்கிறார். அதை வேதவியாசரும் ஆமோதிக்கிறார். கம்சன் பிறப்பால் அரக்கனோ, அசுரனோ அல்ல. உக்ரசேனரின் மகன் தான். ஆனால் தன் துராக்கிருதமான காரியங்களால் அவன் அசுரன் ஆகிவிட்டான். அவனை நீ வதம் செய்யப் போகும் நாளுக்காக நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம். இருபத்தைந்து வருஷங்களாய் நாங்கள் பட்ட கஷ்டம் எல்லாம் முடிவுக்குக் கொண்டுவரப் போவது நீ ஒருவனே. அந்த ஒரு நம்பிக்கையிலேயே உன் தாய் தேவகி, தந்தை வசுதேவன், மற்ற யாதவர்கள், இன்னும் எங்களைப் போன்ற பல அந்தணர்கள் அனைவரும் காத்திருக்கிறோம். உன்னை அதற்குத் தயார் செய்யவேண்டியே சாந்தீபனி இங்கே வந்துள்ளார்.”

கிருஷ்ணன் எங்கேயோ சூன்யத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் சற்று நேரம். புரியாத பல விஷயங்கள் புரிகிறாப்போல் இருந்தது. பின்னர் தன்னிரு கரங்களையும் கூப்பிக் கொண்டு ஆசாரியரைப் பார்த்துச் சற்றும் கபடம் இல்லாமல் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தான். “குருதேவா, என்னை என் வாழ்க்கையை வாழவிடுங்களேன். எனக்கு இங்கே உள்ள ஒவ்வொரு செடியும், கொடியும், மலரும், காயும், கனியும், மரங்களும், மலைகளும், நதியும் நதிக்கரையும் தெரியும். ஒவ்வொருத்தர் வீட்டுப் பசுக்களையும் நான் நன்கறிவேன். இந்த கோபர்களில் ஒருவனாகவே என்னை நான் அறிவேன். நான் ஒரு இடையன் தான் ஆசாரியரே. என் தாயையும், தந்தையையும் நேசிக்கும் ஒரு சாமானிய இடையன். இந்த கோவர்தன் மலையில் நான் சுற்றாத இடமே இல்லை. இதன் ஒவ்வொரு இடத்தையும், ஒவ்வொரு மூலையையும் நான் நன்கறிவேன். நான் தான் உங்கள் ரக்ஷகன் என்று சொல்லி என்னை இந்த இடத்திலிருந்தும், மனிதர்களிடமிருந்தும் பிரிக்காதீர்கள்.” என்றான் கண்ணன்.

நந்தன் கண்கள் நீரை மழையென வர்ஷித்தது. “ மகனே, என்னை நீ எப்போதுமே விரும்புவாயா?? என்னை விட்டு நீ போக நேர்ந்தாலும்?” என்று கேட்டான். “இதென்ன தந்தையே? நான் உங்களை மிகவும் விரும்புகிறேன். நான் என்னவாகவேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகிறேனே. ஆனால் உங்களைவிட மிகச் சிறந்த ஒரு தந்தை எனக்குக் கிடைத்திருக்கவே மாட்டார். நான் எப்போதும் உங்கள் காலடியில் விழுந்து வணங்கும் உங்கள் மகனே தான் தந்தையே!” நந்தன் கால்களில் விழுந்தான் கிருஷ்ணன். அவன் உளமார, மனமாரச் சொன்னான் என்பதைப் புரிந்து கொண்ட நந்தன் கண்கள் மழையெனப் பொழிந்த வண்ணமே இருந்தது. சமாளித்துக் கொண்டு, “ ஆனால் மகனே, இன்னும் சில நாட்களில் உனக்கு மதுராவிலிருந்து அழைப்பு வந்துவிடும், நீ சென்றே ஆகவேண்டும். அதைத் தவிர்க்கவே முடியாது. ” என்று சொன்னான். கர்காசாரியாரும் அதை ஆமோதித்தார். “ஆம், குழந்தாய், கம்சனின் தளைகளில் இருந்து நீ தான் எங்கள் அனைவரையும் விடுவிக்கவேண்டும்.” என்று சொல்லிவிட்டுக் கண்ணனிடம் கம்சனின் கொடுமைகள் எவ்விதம் ஆரம்பித்தன என்பதில் இருந்து சொல்ல ஆரம்பித்தார். பின்னர் கண்ணனின் தாய், தந்தையர் திருமணமும், அதன் பின்னர் நடந்த நிகழ்வுகளையும் வரிசையாகச் சொன்னார். வசுதேவரும், தேவகியும் கண்ணன் வரவை எதிர்பார்த்துக் காத்திருப்பதைச் சொன்னார். தேவகி கண்ணன் என்று ஒரு சிலையை வைத்துப் பூஜிப்பதையும் அலங்கரித்துத் தாலாட்டுவதையும் சொன்னார்.

கண்ணன் அனைத்தையும் கேட்டான். பின்னர் கர்காசாரியாரிடம், “என் தாயிடமும், தந்தையிடமும், அவர்கள் ஆவலையும் எதிர்பார்ப்பையும் நான் பூர்த்தி செய்வேன் என்று சொல்லுங்கள். நான் யாரையும் ஏமாற்ற மாட்டேன்.” குரு சாந்தீபனியிடம் திரும்பி, “உங்கள் ஆசிகள் எனக்கு எப்போதுமே தேவைதான். உங்கள் விருப்பம் போல் எனக்குக் கற்பிக்கலாம். ஆனால் ஒன்று, நீங்கள் இங்கே இருக்கும்வரையிலும், இந்த விருந்தாவனத்து கோபர்களிடமோ, கோபியரிடமோ நான் அவர்களில் ஒருவன் இல்லை என்பதைச் சொல்லிவிடாதீர்கள். அதைவிட அவர்களைத் துன்புறுத்தும் விஷயம் வேறு எதுவும் இருக்காது. அந்த வேதனையை அவர்களால் தாங்க முடியாது.” என்று வேண்டிக் கொண்டான். சாந்தீபனியும் சம்மதித்தார். நந்தன் அப்போது, “ மகனே, இப்போது புரிந்து கொண்டாயல்லவா? ராதையை நீ ஏன் மணக்க முடியாது என்பதற்கான காரணங்களை?” என்று கேட்டான். கண்ணன் யோசனையில் ஆழ்ந்தான்.

பின்னர் ஆசாரியரிடம் திரும்பி, “குருதேவா, நீங்கள் என்னைத் தர்மத்தின் பாதையில் செல்லச் சொல்லுகின்றீர்கள் அல்லவா? யாதவர்களை நான் தர்மத்தின் பாதையில் அழைத்துச் செல்லவேண்டும், ஒரு முன்மாதிரியாக அல்லவா?” என்று கேட்டான். “ ஆம் குழந்தாய்!” என்றார் ஆசாரியர். “என்றால் நான் அந்த தர்மத்தைக் கடைப்பிடிப்பதை இப்போதில் இருந்தே ஆரம்பிக்கலாமா குருதேவா?” கண்ணன் கேட்டான் சிறு சிரிப்போடு. ஆசாரியர்,”நாங்கள் அப்படிச் சொல்லவில்லை, ஆனால் அது உன்னிஷ்டம்.” என்றார்.

“நீங்கள் சொல்லவில்லைதான், ஆனாலும் நீங்கள் இதைக் கேட்டே ஆகவேண்டும் குருவே, நான் எட்டுவயது கூட இருக்காத நிலையில் முதன் முதலில் இந்த விருஷபாநுவின் மகளைப் பார்த்தேன், அதுவும் எப்படி? உரலில் கட்டப் பட்ட நிலையில், காட்டில், எதுவும் செய்யமுடியாத ஒரு நிலையில் இருந்தேன் அப்போது. அப்போது அவள்தான் எனக்கு உதவினாள். அன்றிலிருந்து ஆரம்பித்து இன்று வரையிலும் அவள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும் எனக்காகக் காத்திருக்கிறாள். என்னைப் பற்றி நினைக்காமல் அவள் மனம் ஒரு கணம் கூட இருக்கவில்லை.. அவள் சூடும் மலர்கள் எனக்காகவே. அவள் உண்ணும் உணவு எனக்காகவே. குடிக்கும் நீர் எனக்காக. அவள் கண்கள் நீரை வர்ஷித்தால் அது எனக்காகவே. அவள் சிரித்தால் அது எனக்காகவே. அவள் பேசினால் அது எனக்காக. பாடினால் அது எனக்காக. நடந்தால் அது எனக்காக. பாடும் பாடல்கள் எனக்காக. ஆடும் ஆட்டங்கள் எனக்காக. நான் புல்லாங்குழலை எடுத்து இசைத்தால் அவள் அடையும் பரவசத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அப்போது அவள் என்னுடன் இசைந்து ஆடும்போது நான் வேறு, அவள் வேறு எனத் தோன்றவில்லையே! என்னுடன் பேசும்போது மட்டுமே அவள் சந்தோஷம் அடைகின்றாள். அவள் விடும் ஒவ்வொரு மூச்சுக் காற்றும் எனக்காகவே. என்னைப் பற்றி நினைக்காமல் இந்த எட்டுவருஷங்களாக ஒரு விநாடி கூட அவள் மூச்சு உட்செல்லவோ, வெளிவரவோ இல்லை. “ கிருஷ்ணன் நிறுத்தாமல் பேசிக் கொண்டே போனான்.

கர்காசாரியார் இடைமறித்தார், “கண்ணா நீ சொல்லுவது உனக்கே
கொஞ்சம் அதிகமாய்த் தெரியவில்லையா?”

“நிச்சயமாய் இல்லை குருதேவரே, நான் சொல்லுவது கொஞ்சம் தான், இன்னும் கேளுங்கள். காலியனை அடக்க நான் பாடுபட்டுக் கொண்டிருக்கையில், பலருக்கும் மனவேதனை உண்டாயிற்று. அழுதனர் பலரும். இவளும் அழுததோடு மட்டுமில்லாமல் உணர்வே இன்றிக் கட்டையாகிவிழுந்துவிட்டாள். அன்று மட்டும் காலியன் என்னைக் கொன்றிருந்தால், எல்லாரும் மனம் உடைந்திருப்பார்கள், இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் அதைக் கேட்ட உடனேயே ராதையும் உயிரை விட்டிருப்பாள்.” சாதுரியமான அதே சமயம் உண்மையை சற்றும் ஒளிக்காமல் கிருஷ்ணன் பேசிய பேச்சு ஆசாரியர்களைக் கட்டிப் போட்டது.

கிருஷ்ணன் தொடர்ந்தான், “ஆசாரியர்களே, நீங்கள் என்னை தர்மத்தைக் கடைப்பிடிக்கச் சொல்லுகின்றீர்களே, ஆனால் இங்கே ஒரு இதயம் அதே சமயம் கொல்லப் படும் என்பதை மறந்துவிட்டீர்களே? நான் விருஷபாநுவின் மகளை மறுத்தால் அடுத்த கணமே அவள் இறந்துவிடுவாளே? உங்களை எல்லாம் காக்கவேண்டி என்னை அழைக்கின்றீர்கள், ஆனால் அதே சமயம் ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்புப் போய்விடுமே? என்னுடைய வேலையை நான் ஒரு பெண்ணைக் கொன்றுவிட்டா ஆரம்பிக்கவேண்டும்? இதுவா தர்மம்? அதுவும் நான் கடைப்பிடிக்கவேண்டிய தர்மம்? எனக்காகத் தன்னுடைய அனைத்தையும், இன்னும் சொல்லப் போனால் தன்னையே எனக்காக அர்ப்பணித்திருக்கும் ஒரு இதயத்தைக் கொன்றுவிட்டா நான் தர்மத்தைக் காக்கவேண்டும்? சிந்தியுங்கள், குருதேவா, சிந்தியுங்கள்” கர்காசாரியார் பதினைந்து வயதுப் பையன் இவ்வளவு பேசுகின்றானே என ஆச்சரியத்துடன் பார்க்க, ஏற்கெனவே கண்ணும், கண்ணீருமாய் இருந்த நந்தனால் அழுகையை அடக்கவே முடியவில்லை.

அப்போது சாந்தீபனி கேட்கின்றார்:” வாசுதேவகிருஷ்ணா, கேள்! நீ இங்கிருந்து இன்றில்லாவிட்டாலும் ஒருநாள் செல்லவேண்டியவனே. அப்படிப் போனதும், அதிகாரமும், பதவியும், அரண்மனை வாழ்க்கையும் உன்னை வந்தடையும். அப்போதும் நீ இந்தக் கிராமத்துப் பெண்ணான ராதையிடம் இதே போன்ற அன்போடு இருப்பாயா? இதே மாதிரியே இந்தப் பெண்ணை நடத்துவாயா? உன்னை நீயே ஆராய்ந்து கொள்வாய் வாசுதேவகிருஷ்ணா, உண்மையான, தெளிவான பதிலைச் சொல்லுவாய்!” என்றார்.

கிருஷ்ணன், உடனடியாகப் பதில் சொல்லுகின்றான்.”வேண்டாம் ஆசாரியரே, நான் பதிலை ஆய்வு செய்து தேடவே வேண்டாம். நான் வாழ்வதே என்னிடம் அன்போடும் பாசத்தோடும் இருப்பவர்களுக்காகவே. அது என் தாயாய் இருந்தாலும் சரி, தந்தையானாலும், சரி, என்னுடைய தோழர்களான கோபர்கள், கோபிகள், இந்த விருந்தாவனப் பசுக்கள், காளைகள், ஆஹா, இந்த விருஷபாநுவின் மகள் ஆன ராதை, இவளை என்னால் எப்படி மறக்கமுடியும்? அவளைத் திருமணம் செய்து கொண்டேனானால் அவள் உயிரும், ஜீவனும் என்னிடம். அவள் என்னில் இருக்கிறாள். நான் அவளுள் உறைகிறேன். இதை நான் எப்போதும், எங்கேயும், நான் எங்கே இருந்தாலும் காப்பாற்றி வருவேன். போர்க்களத்தில் நான் இருக்க நேர்ந்தாலும், அவள் நினைவே எனக்குள் சக்தியை ஏற்படுத்தும். அரண்மனையில் நான் வசித்தாலும் என்னுள்ளே உறையும் அவளை எவராலும் தடுக்கமுடியாது. என் இதயத்தினுள் ராதையைத் தவிர வேறு யாருமே குடி கொள்ள முடியாது. நான் புல்லாங்குழல் இசைப்பது அவளுக்காகவே. அவளில்லாமல் என் புல்லாங்குழல் ஊமையாகிவிடும். என் ஆன்மா, என் ஆவி, என் சக்தி, என் சந்தோஷம், என் துக்கம், என் ஜீவன் அனைத்துமே அவள் தான், இதை யாராலும், எப்போதும், எங்கேயும் ஒரு போதும் மாற்றவே முடியாது. இவளே எனக்கு மூச்சுக்காற்றாகவும் இருந்து ஊக்குவித்தாள், ஊக்குவிக்கிறாள், ஊக்குவிப்பாள் . இவள் மட்டுமே என் ஜீவாத்மா!”

இந்த உணர்ச்சிமயமான சொற்பொழிவால் கர்காசாரியார் ஏதோ கனவிலிருந்து விழித்தாற்போன்ற தோன்றத்தோடு காணப்பட்டார். என்ன ஒரு சொல்வன்மை? ஆஹா, இந்தக் குழந்தைகளின் அன்பை நினைத்தால் இவர்களைப் பிரிக்கவேண்டியுள்ளதே என்று கவலையாகவே இருக்கிறது. பாவம் இந்தக் குழந்தைகள். அடுத்த கணமே கர்காசாரியாருக்கு வேதவியாசர் சொல்லி இருந்தது நினைவில் வர, “ வாசுதேவகிருஷ்ணா, நான் இதைப் பற்றிச் சிந்தித்துச் சொல்லுகிறேன். நான் உன் உண்மையான தாய் தேவகி, தந்தை வசுதேவன் ஆகியோரையும் கலந்து கொள்ளவேண்டும். அவர்கள் உனக்காக, உன்னையே நினைத்து இந்தப் பதினைந்து வருஷங்களாய்க் காத்திருக்கிறார்கள். “

“இல்லை குருதேவா, அது மட்டும் வேண்டாம்.” கிருஷ்ணன் தன் கைகளைக் கூப்பியவண்ணமே இருந்தான். நந்தனைக் காட்டி, ‘இதோ என் தந்தை, அதோ உள்ளே தயிர் கடையும் சப்தம் கேட்கிறதா? தயிர் கடைவது என் தாய் யசோதை! குருதேவா, உங்கள் ஆசிகளும் இவர்கள் ஆசிகளுமே எனக்குப் போதும். நான் இப்போது ஒரு இடையனாகவே இருக்கிறேனே, வேறு எதுவுமே வேண்டாமே எனக்கு.”

“ஆனால் அவர்களிடம் நான் என்ன சொல்லுவது?”

“ஆஹா, குருதேவா, அவர்களிடம் சொல்லுங்கள், என்னைப் பெற்றெடுத்து எனக்காகக் காத்திருக்கும் தாயிடமும், தந்தையிடமும் சொல்லுங்கள். “அம்மா, உன்னுடைய மகன் தர்மத்தை நிலை நிறுத்த வேண்டும், தர்மத்திற்காகவே வாழவேண்டும் என்று நீ விரும்புகிறாய் அல்லவா? அப்படி எனில் அவன் அவ்வாறு செய்யவேண்டும் என்றால் நீ அவனை இப்போது இந்த தர்மத்தில் இருந்து பிறழாமல் காக்கவேண்டும். அவனுக்காகக் காத்திருக்கும் ஒரு இடைக்குலப் பெண்ணை , அவனுக்குத் தன்னிடம் இருக்கும் அனைத்தையும் தந்த ஒரு பெண்ணை அவன் காப்பது இப்போது அவன் செய்யக் கூடிய தர்மம். தர்மத்தைக் காக்கப் பிறந்த உன் மகன் அதை ஆரம்பிக்கும்போதே ஒரு பெண்ணுக்கு வாழ்வு கொடுக்காமல் அவளுடைய அழுகையிலும், அவ்ளின் உயிரிலும் ஆரம்பித்தல் தகுமா? அந்தப்பெண்ணைக் காப்பதே அவனுடைய முதல் தர்மம். அந்த தர்மத்தை அவன் காக்க அவனுக்கு உதவி செய்!” குருதேவா, இதைச் சொல்லுங்கள், என்னைப் பெற்ற தாயிடம்.”

அறையில் அமைதி சூழ்ந்தது. யாருமே பேசவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். நந்தனுக்கு மட்டும் தன் மகனின் இந்தக் காரியத்தினால் அவனுடைய மன முதிர்ச்சியை நினைத்தும் ஒரு பக்கம் பெருமையாக இருந்ததோடு அல்லாமல், கட்டுப்படுத்த முடியாமல் அழுகையும் வந்தது. கண்ணன் அப்போது நந்தன் கால்களில் விழுந்து, “தந்தையே, என்னை ஆசீர்வதியுங்கள். என்னை விருஷபாநுவின் மகளை மணக்க அனுமதியுங்கள்.” என்று வேண்டினான். கண்ணனை எடுத்துத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்ட நந்தன், ஆசாரியர்கள் இருப்பதையும் மறந்து,தன்னிலையை மறந்து, தன் வயதையும் மறந்து, சின்னக் குழந்தையைப் போல் அழுதான். கண்ணன் தகப்பனைத் தேற்றினான்.

Thursday, August 13, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவார் - கர்கர் வந்தார்!

நந்தனின் தந்தைக்கு சிராத்தம் நடத்தி வைக்கவேண்டி கர்காசாரியார் மதுராவில் இருந்து வந்திருந்தார். உண்மையான காரணம் இதுவல்ல என்றாலும், வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாதே? தன்னுடன் மூன்று சீடர்களையும், மரியாதைக்கும், பெருமதிப்புக்கும் உரிய மற்றொரு குருவான சாந்தீபனி என்பவரையும் அழைத்து வந்திருந்தார். சாந்தீபனியோடு அவரின் மகன்களும், மற்றும் இரு சீடர்களும் வந்திருந்தனர். நீத்தார் கடன் நல்லபடியாக முடிந்தது. மறுநாள் நந்தன் கர்கரோடும், சாந்தீபனியோடும் பேசிக் கொண்டிருந்துவிட்டு உடனேயே கிருஷ்ணனை அங்கே அழைத்தான். கிருஷ்ணன் ஆசாரியர்களின் பாதம் பணிந்து நமஸ்கரித்துவிட்டுக் கூப்பிய கரங்களோடு அங்கே நின்றான். கர்கர் கிருஷ்ணனை ஆசீர்வதித்துவிட்டுச் சொன்னார்:
“கண்ணா, ஆசாரியர் சாந்தீபனி இவர் தான். இவரை உனக்காகவே இங்கே வரவழைத்தேன். இனி இவர் இங்கேயே தங்கி உனக்கு எழுதப் படிக்கவும், ஆயுதங்களில் தேர்ச்சி பெறவும் சொல்லிக் கொடுப்பார். “

“என் தந்தைக்கு என்ன விருப்பமோ அதே என் விருப்பமும். ஆனால் குருதேவா, நான் என்ன யுத்தம் செய்யப் போகின்றேனா என்ன?? எனக்கு எதற்கு ஆயுதப் பயிற்சி எல்லாம்?” கிருஷ்ணன் கேட்டான்.

நந்தன் கர்காசாரியாரைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்துவிட்டுச் சொன்னான். “யாருக்குத் தெரியும்? ஒரு நாள் நீ அரசனாய்க் கூட ஆகலாம்.”
“இல்லை தந்தையே, நான் உங்களுடனே இருக்கவே ஆசைப்படுகிறேன். உங்களையும் யசோதை அம்மாவையும், இந்த பிருந்தாவனத்தையும், கோபர்கள், கோபிகள், மற்றும் நம்முடைய பசுக்கள், கன்றுகள் இவற்றைத் துறந்து எங்கேயும் செல்ல விருப்பமில்லை எனக்கு.”

கர்கர் கொஞ்சம் யோசனையுடனேயே கண்ணனைப் பார்த்து, “நந்தகுமாரா, மஹரிஷிகளுக்கெல்லாம் தலைவர் ஆனவர், முனிவர்களில் எல்லாம் சிறப்பு வாய்ந்தவர், அவர் உன்னால் தான் தேசத்தில் அமைதியும், தர்மமும் கொண்டுவரப்படவேண்டும் என்றும் நீ இருக்குமிடத்திலேயே அவை இருக்கும் என்றும் சொல்லுகின்றார்.” என்று சொன்னார்.

“யார் அந்த மஹாபெரிய ரிஷி?” கண்ணன் கேட்டான்.
“என்ன? நீ அவரைப் பற்றிக் கேள்விப்படவே இல்லையா? மஹான் வியாசர் தான் அவர். வேதவியாசர் என்றும் சொல்லுவதுண்டே அவரை?’” சாந்தீபனி இப்போது பேசினார்.

“ஓ, அவரா, பல விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன் அவரைப் பற்றி. குரு கர்காசாரியார் சொல்லியுள்ளார். ஒருநாள் குருக்ஷேத்திரம் சென்று அவரை வணங்கவேண்டும்.” கண்ணன் சொல்லுகின்றான்.

அப்போது நந்தன் குறுக்கிட்டு, “ கண்ணா, என் அருமை மகனே, உன் வேண்டுகோளை இப்போது குரு கர்காசாரியாரும் சாந்தீபனியும் இருக்கும்போது சொல்லிவிடு. இனி நீயாச்சு, ஆசாரியர்களாச்சு. உன்னுடைய விசித்திரமான வேண்டுகோளால் என்னால் இனி அவதிப்படமுடியாதப்பா!” என்று பாதி கேலியாகவும், மீதி உண்மையாகவும் சொன்னான் நந்தன். கண்ணன் ஒன்று கேட்டான், நந்தன் அதை மறுத்தான் என்பது இன்று வரை கிடையாது. இனியும் அப்படி நேராமலிருக்குமா???

“என்ன கேட்கின்றான் கிருஷ்ணன்?” கர்கர் கேட்டார்.
“அவன் விருஷபாநுவின் மகள் ராதையை மணக்க விரும்புகிறான். உங்களுக்கு அவனைத் தெரியும். அந்தப் பெண்ணும் கண்ணனைவிட வயதில் மூத்தவள். மேலும் அவள் ஐயனுக்கென நிச்சயம் செய்யப் பட்டாவள். அதோடு கூட ஆசாரியரே, கண்ணன் எப்படி இருந்தாலும் ராதையை மணக்க முடியாது என்பதை நீங்கள் நன்கறிவீர்கள்.” நந்தன் நிறுத்தினான்.

“ஏன் குருதேவா, ஏன்?” கண்ணன் கேட்டான்.

“எனெனில் அது நடக்கமுடியாத ஒன்று” குருதேவர் பதில் சொன்னார்.

“தந்தைதான் அதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறாரே? ஆனால் அவள் என்னை மணக்க விரும்புவதையும், நானும் அவளை மணக்க விரும்புகிறேன் என்பதையும் இங்கே சொல்லுகின்றேன். என்னை மன்னியுங்கள். “

“ம்ம்ம்ம்ம்ம்?? குழந்தாய், திருமணம் என்பது சாதாரணமான ஒரு காரியம் அல்ல. வெறும் விருப்பத்தின் பேரில் அது நடக்கவும் முடியாது. அது மாதிரி நடப்பது என்பது தர்மத்தின் பாதையில் செல்பவர்களால் முற்றிலும் ஏற்கமுடியாத ஒன்று. திருமணத்தில் வெறும் விருப்பத்தை மட்டும் பார்க்கமுடியாது மகனே. குடும்ப கெளரவம், குடிப்பிறப்பு, வயது, மனோபாவம், வளர்ப்பு, எதிர்காலம் என்று எத்தனையோ பார்க்கவேண்டும். இது சும்மா ஒருத்தரோடு ஒருத்தர் சேர்ந்து இருக்கிறது மட்டும் இல்லை. மிகவும் புனிதமான ஒன்று. கணவன், மனைவி இருவரும் சேர்ந்து அறமும், தர்மமும் கடைப்பிடித்து அதன் வழி வாழவேண்டிய முக்கியமான நோக்கம் திருமணத்தில் உள்ளது. இருவரும் ஒரு மனதோடு ஈருடல் ஓருயிராகிக் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்கள் திருமண பந்தத்தின் மூலம் ஏற்படுகிறது.”

“திருமணம் செய்து கொள்ளுபவர்கள் அனைவருமேயா தர்மத்தின் பாதையில் அறவழியில் செல்லுகின்றனர்? நான் விருஷபாநுவின் மகளைத் திருமணம் முடித்தால் தர்மம் எங்கே கெட்டுப் போகும்? இதில் அதர்மம் எங்கே வந்தது? நாங்கள் கோபர்கள் தானே? எங்களுக்கு எதற்கு இதெல்லாம்?””
கர்காசாரியார் சற்றே கவலையுடனும், யோசனையுடனும் நந்தனைப் பார்த்தார். “கிருஷ்ணா, தர்மங்களுக்குள்ளே மிக உயர்ந்த தர்மத்தை உன்னால் தான் காக்க முடியும். உனக்காக அது காத்திருக்கிறது.”

கிருஷ்ணன் வியப்போடு வயது முதிர்ந்த கர்காசாரியாரைப் பார்த்தான். குரு மேலும் சொன்னார்:” குழந்தாய், நீ பிறந்ததில் இருந்தே நான் உன்னை ஒவ்வொரு கணமும் அறிவேன். பார்த்தும் வருகிறேன். முனிவர்களில் சிறந்த வேதவியாசரே கூறியுள்ளார்,” இந்தப் பிள்ளையால்தான் தர்மம் காக்கப்படவேண்டும். இவன் பிறந்திருக்கும் காரணமே அதுதான். இது கடவுளரால் ஆணையிடப் பட்ட ஒன்று. என்று சொல்லியுள்ளார்.” இவ்விதம் சொல்லிவிட்டு கர்காசாரியார் சாந்தீபனியைப் பார்த்தார். சாந்தீபனியும் அதை ஆமோதிக்கும் வண்ணம் தலையை ஆட்டிவிட்டு, அதன் காரணமாகவே தான் இங்கே வந்துள்ளதாகவும் தெரிவிக்கிறார். இவ்வளவு பெரிய மனிதர்களோடு தன்னுடைய விதி பிணைக்கப் பட்டிருப்பதைக் கண்ணன் எதிர்ப்பார்க்கவில்லை. சாந்தீபனியிடம், “நான் என்ன செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?” என்று கேட்டான். “உன்னுடைய லட்சியத்தை அடைய நீ தயாராய் இரு!” என்றார் கர்காசாரியார். கண்ணன் புரியாமல் குழம்ப, நந்தன் மீண்டும் கண்ணசைக்கிறான் குருவிடம். உடனேயே கர்கர் மேலும் சொல்லுகின்றார். கண்ணனுக்கு இப்போது முழு உண்மையும் தெரியவேண்டிய தருணம் வந்துவிட்டது. அவனைத் தயார் செய்யவேண்டும். கர்காசாரியார் முடிவெடுத்துவிட்டார்.

Wednesday, August 12, 2009

ஆடிக் கிருத்திகையின் சிறப்பு!

நேயர் விருப்பம் கொஞ்சம் அதிகமாவே இருக்கு. கோபிக்குத் தான் முன்னுரிமை கொடுக்கணும். என்றாலும் இப்போ கொஞ்சம் அந்த விதியைத் தளர்த்த வேண்டி இருக்கு. இதுவும் அநேகமாய் கோபி அறியாத ஒன்றாகவே இருக்கலாம். ஜெயஸ்ரீ என்பவர் ஆடிக் கிருத்திகை பற்றி என்னோட ஆன்மீகப் பயணம் பதிவுகளில் திருச்செந்தூர் பற்றிய பதிவில் கேட்டிருக்கிறார். இன்னும் மூன்று நாட்களில் ஆடிக்கிருத்திகை. வெள்ளிக்கிழமை அன்று. முருகனுக்கு திதிகளில் சஷ்டியும், கிழமைகளில் வெள்ளிக்கிழமையும், நக்ஷத்திரங்களில் கிருத்திகையும் சிறப்பு. முருகன் பிறந்தது விசாக நக்ஷத்திரம் என்று சொல்லப் பட்டாலும், அவனைப் பாலூட்டி வளர்த்தது கார்த்திகைப் பெண்கள் என்பதால் அவர்களுக்கே முன்னுரிமை. கங்கையாகிய ஆறு தாங்கிய ஆறு அக்னிப் பொறிகள் மூலம் ஆறுமுகங்களோடு பிறந்த முருகன் ஆறு பெண்களால் வளர்க்கப் பட்டான். அவன் குழந்தையாய் வளர்ந்ததும், திருவிளையாடல்கள் புரிந்ததும் ஆறு நாட்களே என்று சொல்லப் படுகிறது. இப்படிச் சகலத்திலும் ஆறு என்னும் எண் முக்கியமாய் அமையப் பெற்ற முருகனுக்கான நாமம் “சரவணபவ” என்னும் ஆறெழுத்தே ஆகும். நம் உடலிலும் ஆறு ஆதாரங்களிலும் நிலை பெற்றிருப்பது இந்த முருகனே என்பதே அருணகிரியார் கூற்று. ஆகவே ஆறாவது நாளான வெள்ளியன்று இந்த வருஷம் வரும் ஆடிக் கிருத்திகை மிகவும் சிறப்பானது என்பதை மறுக்க முடியாது.

கார்த்திகை விரதமே கார்த்திகைப் பெண்களை நினைத்து நன்றி செலுத்தும்விதமாக ஏற்படுத்தப் பட்ட ஒன்று எனக் கூறுவார்கள். சூரனை வதைக்க வேண்டி ஆறுமுகன் தோன்றியதும், அவனைக் கார்த்திகைப் பெண்கள் பாலூட்டிப் போற்றி வளர்த்ததும், குமரன் வளர்ந்ததும், அவனை அணைத்து ஒன்று சேர்க்க உமையுடன் அங்கே எழுந்தருளிய சிவபிரான், கார்த்திகைப் பெண்களைப் போற்றி வாழ்த்தியதோடு, இனி கந்தன் இந்தப் பெண்களின் பெயரால், “கார்த்திகேயன்” எனவும் அழைக்கப் படுவான் என்று சொன்னார். இதைக் கந்த புராணம்,
கந்தன் தனை நீர் போற்றிய கடனால்
இவன் உங்கள் மைந்தன் என்னும் பெயராகுக!”
என்றும் அருளியதோடு மேலும் அவர்களுக்கு நக்ஷத்திரப் பதவியும் அளித்து, இந்தக் கார்த்திகைப் பெண்களின் நக்ஷத்திரம் வரும் சமயம் விரதம் இருப்பவர்களுக்குக் குறைகள் நீங்கி, நல்வாழ்வும், முக்தியும் கிடைக்கும், என்று அருளிச் செய்தார். கார்த்திகை விரதம் இருப்பது பற்றிக் கந்த புராணத்தில்,
நுந்தம் பகலிடை இன்னவன் நோன்றாள் வழிபடுவோர்
தந்தம் குறை முடித்துப் பரந்தனை நல்குவம் என்றான்

எனவும் சொல்லுகின்றது. விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய பொதுவான விரதமுறைகளே இதற்கும் பொருந்தும் என்றாலும் கந்தனுக்குரிய விரதங்களில் உப்பு தவிர்க்கப் படுவதை முக்கியமாய்க் கருதுகின்றனர். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமோ, சஷ்டி விரதமோ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப் படுகிறது. ஆடி மாதக் கார்த்திகை ஏன் விசேஷம் என்றால் மழைக்காலத் தொடக்கமான தக்ஷிணாயனம் பொதுவாக அனைத்து இறை வழிபாடுகளுக்கும் ஏற்றதாகவும், உத்தராயனம் திருமணம், உபநயனம், கிரஹப் பிரவேசம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்றதாகவும் சொல்லப் படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டிச் செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப் படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப் படுகிறது. தைமாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப் படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.

கார்த்திகை விரதம் இருந்தாலும், இருக்கமுடியாவிட்டாலும் கீழ்க்கண்ட இரு திருப்புகழ்ப் பாடல்களை மட்டுமாவது படிக்கலாம் என்றும் சொல்லுகின்றனர். இவை மனதுக்கு நிம்மதியையும், சகல செல்வங்களையும் அருளிச் செய்யும் என வாரியார் ஸ்வாமிகள் கூறி இருக்கிறார்.

அதிருங் கழல்பணிந்து னடியேனுன்
அபயம் புகுவதென்று நிலைகாண
இதயந்தனிலிருந்து க்ருபையாகி
இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே!

எதிரங்கொருவரின்றி நடமாடும்
இறைவன் தனது பங்கிலுமைபாலா
பதியெங்கிலுமிருந்து விளையாடிப்
பலகுன்றிலும மர்ந்த பெருமானே.”

சரணகமலாலயத்தை அரை நிமிஷ நேரமட்டில்
தவமுறை தியானம் வைக்க அறியாத
சடகசட மூட மட்டி பலவினையிலேசனித்த
தமியன்மிடியால்மயக்கமுறுவேனோ!
கருணைபுரியாதிருப்பதென குறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே!
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலை செச்சை
கமழுமணமார் கடப்ப மணிவோனே

தருணமிதையாமி குத்தகனமதுறு நீள் சவுக்ய
சகலசெல்வ யோகமிக்க பெருவாழ்வு
தமைமைசிவ ஞானமுத்தி பரகதியு நீ கொடுத்து
தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா!

அருணதள பாத பத்ம மதுநிதமுமேது திக்க
அரிய தமிழ்தானளித்த மயில்வீரா
அதிசயம நேகமுற்ற பழநிமலை மீதுதித்த
அழகதிருவேரகத்தின் முருகோனே!

கிருத்திகைக்கு இன்னும் இருநாட்களே இருப்பதால், விரதம் பற்றிய செய்தி அறிந்து கொள்ளுவோருக்கு உதவியாய் இருக்கும் என்பதால் இன்றே பதிவு வெளிவருகிறது. இந்த விரதங்கள் பற்றித் திருவள்ளுவரும் சொல்லி இருக்கார் தெரியுமா?

"இலர் பலர் ஆகிய காரணம்-நோற்பார்
சிலர் பலர் நோலாதவர்"
அதிகாரம் : தவம்,குறள் எண் 270

சிலருக்கு வாழ்க்கையில் எல்லா வசதி, வாய்ப்புகளும் கிடைக்கும். ஆனாலும் மன நிம்மதி அரிதாகவே இருக்கும். சிலருக்கு வீடு, வாசல் இருக்காது. ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப் படுவார்கள். ஆனாலும் அவங்களுக்கு இருக்கும் ஆனந்தம் மற்றவரிடம் காண முடியாது. ஆனாலும் பணம், காசு இல்லாதவர்கள் என்று மட்டுமே பொருள் கொள்ளாமல், கணவன் சரியாய் இல்லாதவங்க, மனைவி சரியாய் அமையாதவர்கள், நன்கு படித்தும் அறிவு சரியாகப் பயன்படுத்தத் தெரியாம இருக்கிறவங்க, குழந்தைகள் இல்லாதவங்க, குழந்தைகள் இருந்தாலும் அவர்களால் துன்பம் அனுபவிக்கிறவங்க என்று வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வகையில் பிரச்னை இருந்தே தீரும். இல்லாமல் இருக்காது.

ஆகையால் இத்தகைய பிரச்னைகளுக்குக் காரணமே வள்ளுவர் சொல்லுகின்றார். நோற்பார் சிலர், நோலாதவர் பலர் " என்று. அநேக உரைகளிலும் இந்த நோற்பு என்பதைத் தவம் என்ற பொருளில் எடுத்துக்கொண்டாலுமே, அதுவும் இங்கே பொருந்தி வருவதைக் காண்கின்றோம். நாள், கிழமை, விரதம் என நோன்பு நோற்பவர்கள் வர வரக் குறைந்து கொண்டே தான் வருகிறது. பலரும் இதில் உள்ள உடல் சிரமத்தைக் கண்டு நோன்பு, விரதம் என்று இருப்பதில்லை. உலகிலே தீவினைகள் அதிகம் ஆவதற்கே இதுவே காரணம் என்று சொல்லுகின்றார் வள்ளுவர். ஆகவே இந்த இடத்தில் விரதம் என்றும் வைத்துக் கொள்ளலாம். மனத் தூய்மைக்கும், மன ஒருமைக்கும் வழிசெய்யும் விரதங்களைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும்.

Monday, August 10, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்! கண்ணனுக்குத் திருமணம்!

“என் மகன்! விருஷபாநுவின் மகளைத் திருமணம் செய்யப் போகின்றானா?? நடக்காது, நடக்கவே நடக்காது! மேலும் அவள் உன்னைவிடப் பெரியவள் வேறே! “ யசோதை கிட்டத் தட்டக் கத்தினாள். ஒருவேளை, ஒருவேளை, இந்தப் பையன் தன் வழக்கமான பாணியில் நம்மை ஏதாவது ஏமாற்றி விளையாட இப்படிச் சொல்லுகிறானோ?? ஆம் அப்படித் தான் இருக்கணும். கண்ணன் இந்தத் திருமணத்தில் நாட்டத்துடனும், ஆவலுடனும் இருக்கிறான் என்பதை யசோதை உணரவில்லை. ஆனால் கண்ணனோ, “ அம்மா, ஏன் விருஷபாநுவின் மகளை நான் மணந்தால் என்ன ஆகும்? பிரளயமா ஏற்படும்? பல ஆண்கள் தங்களைவிட வயது அதிகமான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுவதை நீ அறிய மாட்டாயா?” என்று கேட்டான். “இல்லை, மகனே, இல்லை, உன்னைவிட வயதில் பெரிய ஒரு மறுமகளை நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. என்னால் அப்படி நினைக்கக் கூட முடியவில்லை. அதை நான் வெறுக்கிறேன்.” யசோதை கண்கள் குளமாகக் கண்ணனைக் கெஞ்ச ஆரம்பித்தாள்.

“இல்லை, அம்மா, ராதை உன்னை அருமையாகக் கவனித்துக் கொள்வாள். “

“கண்ணா, நீ எப்போதுமே இப்படித் தான் ஏதாவது பிடிவாதம் பிடிக்கிறாய். இவ்வளவு நாட்களாய் நீ குழந்தையாய் இருந்ததால் நான் உன்னுடைய பிடிவாதங்களுக்கு இடம் கொடுத்து வந்தேன். ஆனால் இந்த விஷயத்தில் நான் சற்றும் வளைந்து கொடுக்க மாட்டேன். மேலும் நீ இந்த ஆயர்பாடியின் தலைவனின் மகன். ராதை நம்மிடம் வேலை செய்யும் ஒருவனின் பெண். உனக்கு ஏற்ற ஒரு தலைவனின் மகளை நான் உனக்குத் தேர்ந்தெடுக்கிறேன். நீ ராதையை மணக்கவே முடியாது.” யசோதை முடித்துவிட்டாள். கோபமும், துக்கமும் அவள் நெஞ்சை அடைத்தது.

“அம்மா, ஒரு அருமையான மறுமகளை நீ இழந்துவிடுவாயே?” கண்ணன் கண்களில் குறும்பு கூத்தாடியது.

“அப்பா, கண்ணா, வேண்டாம், இந்த ராதையின் முற்போக்கான நடவடிக்கைகள் எதுவுமே எனக்குப் பிடிக்கவில்லை. அவள் எதற்கும், யாருக்கும், கவலைப்படுவதும் இல்லை. எதை நினைத்தும் யாரையும் நினைத்தும் பயப்படுவதும் இல்லை. எனக்கு வேண்டாம் அப்பா, இத்தகைய முற்போக்கான குணமும் நடத்தையும் கொண்ட மறுமகள். இந்த விருந்தாவனமே அவளின் இந்த நடவடிக்கை பற்றித் தான் பேசிப் பேசி அலுத்துப் போய்விட்டது. அவள் ஒரு நல்ல மறுமகளாய் இருக்கத் தகுதி வாய்ந்தவளாய் எனக்குத் தெரியவில்லை.”

“ம்ம்ம்??? அம்மா?? அப்போது நீ உன் மகனை இழக்க நேரிடுமே?” கூடியவரையிலும் கண்ணன் இதை ஒரு புதிர்போலவே அம்மாவுக்குச் சொல்ல நினைத்தாலும் அவனையும் அறியாமல் உள் மனது இதை ஒரு மிரட்டலாகவே காட்டியதோ? யசோதையின் முகம் அப்படித் தான் காட்டியது.

யோசனையுடனும், அதிர்ச்சியுடனும் மகனைப் பார்த்தாள் யசோதை. இதை அவள் எதிர்பார்க்கவில்லைதான். என்றாலும் கண்ணனிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல், “கண்ணா, கண்ணா, என்னை ஏனப்பா தொந்திரவு செய்கிறாய்?? நீ இப்படியெல்லாம் திடீரென நடக்கக் காரணம் என்ன?? போய் உன் தந்தையிடம் இது பற்றிப் பேசு! எனக்கு அலுத்துவிட்டது உனக்குப் புரியவைக்க என்னால் முடியவில்லை.”

“அம்மா, யசோதா அம்மா, என்ன இது?? என்னிடம் உனக்கு அலுப்போ, களைப்போ, ஏற்படாதே? அதேபோல் எனக்கு வரப் போகும் மனைவியிடமும் ஏற்படக் கூடாது. விருஷபாநுவின் மகள் ராதை தினமும் காலையும், மாலையும் உன்னிடம் ஆசி வேண்டி உன் பாதம் தொட்டு வணங்குவாள். இது உறுதி!”

“அதிகப் பிரசங்கி!” தன்னையுமறியாமல் யசோதை சிரித்தாள். கண்ணன் சொல்வது உண்மைதான். ரொம்ப நேரம் அவனிடம் கோபத்தைக் காட்ட முடியவில்லையே? கண்ணனை நந்தனிடம் போய்ப் பேசச் சொல்லி அனுப்பினாள் யசோதை. கண்ணனும் நந்தனிடம் சென்று தன் விருப்பத்தைச் சொன்னான். நந்தனோ மொத்த விஷயத்தையும் கேட்டுவிட்டு ஏதோ பெரிய நகைச்சுவைக் காட்சியைப் பற்றிக் கேட்டாற்போல் ரசித்துச் சிரித்தான் . சிரிப்பை அடக்காமலேயே, “நீ என்ன இன்னிக்குப் புதுசாய் பெண்கள் பின்னால் போகிறாயா கண்ணா? எனக்கு ஒண்ணும் அதிசயமோ ஆச்சரியமோ ஏற்படலை இந்தப் பெண்களில் ஒருத்தியை நீ மனைவியாக்கிக் கொள்ள ஆசைப் படுவாய் என்று நினைத்தேன்.”

“அப்பா, அப்போது உங்களுக்குச் சம்மதமா? அம்மாவைப் போய் ராதையைப் பெண் கேட்கச் சொல்லலாமா?”

“இல்லை, குழந்தாய்! உன் தகுதிக்கு நீ ஒரு இளவரசியை அன்றோ மணக்கவேண்டும்.” புன்னகை மாறாமலேயே நந்தன் சொன்னான்.

“ராதையின் அறிவுக்கும் அழகுக்கும் ஈடு சொல்லும்படியான இளவரசி யார் இருக்கிறார்கள்”

நீ எத்தனை இளவரசிகளைப் பார்த்திருக்கிறாய் கண்ணா?”

‘கோபியர் அனைவருமே இளவரசிகள் தானே! சொல்லப் போனால் இளவரசிகளை விடவும் இவர்களே தேவலை. மேலும் நாமெல்லாருமே இடையர்கள் தானே? இடைக்குலத்துப் பெண்ணை நான் மணந்தால் என்ன? என் தகுதிக்கு அதுதானே சரி?”

நந்தன் பேச்சை மாற்ற விரும்பினான். இன்னும் காலம் கனியவில்லை. கண்ணனைப் பற்றிய உண்மையான தகவலை இப்போது சொல்லலாமா தெரியவில்லை. ஆகவே கண்ணனிடம் நந்தன் சொல்கின்றான். “ ஐயனைப் பற்றி என்ன நினைத்தாய்? அவன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வான் என்றா?”

“அவனுக்கு இந்த விரஜபூமியில் உள்ள அனைத்து இளம்பெண்களும் இன்னும் மதுராவிலும் இளம்பெண்கள் உள்ளனர். அதை விடுங்கள் தந்தையே. அம்மாவைப் போய் விருஷபாநுவிடம் ராதையைப் பெண்கேட்கச் சொல்லி அனுப்புங்கள்.”

நந்தன் இப்போது கொஞ்சம் கலவரம் அடைந்தான். “என்னால் முடியாது, முடியவே முடியாது.” திட்டவட்டமாய் நந்தன் சொல்லக் கண்ணன் ஆச்சரியம் அடைந்தாலும் பணிவாகவே, “ஏன் தந்தையே?” என்று கேட்டான். கண்ணனுக்கும் இதில் ஏதோ இருக்கிறது என்ற சம்சயம் வந்துவிட்டதோ? ஆனால் நந்தன் அசரவில்லை. “நான் உன்னை ராதையை மட்டுமல்ல மற்ற எந்த கோபியர் பெண்ணையும் மணக்கவிட மாட்டேன். நீ கேட்பது எதையும் நான் மறுக்க மாட்டேன் என்பது தெரிந்து நீ உன் திருமணத்திற்கு என்னிடம் சம்மதம் கேட்கின்றாய். இந்த விஷயத்தில் நீ என்னிடம் சம்மதம் கேட்பதை விட குரு கர்காசாரியார் வரும்போது அவரிடம் கேட்டுக் கொள்.” நந்தன் பதில் முடிவாக இருந்தது.

“அவர் சரி என்று சொல்லிவிட்டால்”

“நிச்சயம் மாட்டார்.” நந்தன் இதில் மிகவும் திடமாக இருந்தான்.

ஒருவேளை சம்மதித்துவிட்டாரெனில்?”

“அப்போ நான் என் எதிர்ப்பைக் காட்டவில்லை. ஆனால் கர்காசாரியார் ஒத்துக் கொள்ளமாட்டார் என்பது நிச்சயம்.”

“சரி, நானே குருவிடம் பேசுகிறேன்.” கண்ணன் குரு வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தான். குருவும் வந்தார், கூடவே இன்னொருத்தரும் வந்தார். அவர் பெயர் சாந்தீபனியாம்.

Wednesday, August 05, 2009

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்! ராதையைக் கண்ணன் மணப்பானா?

ராதையின் நிலையை இங்கே பார்க்கவும். ரொம்ப ரொம்ப மன்னிக்கவும் தாமதமான பதிவுகளுக்கு. தவிர்க்க முடியாத தாமதம். நடுவில் நக்ஷத்திர வாரம் வேறே! இந்தப் பதிவுக்குத் தான் எல்லாரும் வராங்கனு சில முக்கியமான இடுகைகளை வேறே இங்கே போட வேண்டி இருக்கு. புரிதலுக்கு நன்றி.
***********************************************************************************
காலியனைக் கண்ணன் அடக்கியபோது ராதை மயங்கியதில் இருந்தும், அதன் பின்னர் அவளை அவள் வீட்டில் அடைத்து வைத்ததையும் எண்ணி எண்ணிக் கண்ணன் ஒரு முடிவுக்கு வந்தான். ராதையை எவ்வாறேனும் ஐயனின் பிடியில் இருந்து விடுவித்துத் தான் மணந்து கொள்ளவேண்டும் என்பதே அது. ராதை தான் தன் ஜீவன் என்று கண்ணன் உணர்ந்தான். அவள் பார்வை, சுவாசம், பேச்சு, அனைத்துமே தனக்கு ஒரு சக்தியைத் தருவதையும், அந்த சக்தி இல்லாமல் தான் இல்லை என்பதையும், தன்னில் ராதை நிறைந்துள்ளாள் என்பதையும், ராதை இல்லாமல் தான் வெறும் கூடு எனவும் உணர்ந்திருந்தான் கண்ணன். ஆகவே இப்போது இன்றைக்கு இந்தப்பெளர்ணமி அன்று நடைபெறப் போகும் இந்த “ராஸ்” உற்சவத்திற்கு ராதை வரமுடியாதே என மனம் தளராமல் எவ்வாறேனும் அவளையும் இதில் ஆடவைக்கவேண்டும் என உறுதியும் பூண்டான் கண்ணன். புல்லாங்குழலை எடுத்து இசைத்தான். கட்டாயம் ராதைக்கு இந்த இசை கேட்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இசையைக் கண்ணன் நிறுத்தினான். அப்போது தான் ராதைக்கு உலகமே இருண்டது.

களைத்திருந்தாள் ராதை. மிக மிகக் களைத்திருந்தாள். கண்களை அவளால் திறக்கவே முடியவில்லை. எப்படித் தூங்கப் போனாள், தூக்கம் எவ்வாறு வந்தது என்பதே தெரியாவண்ணம், எத்தனை நேரம் தூங்கினோம் என்பதும் தெரியாவண்ணம் தூங்கிவிட்டாள். ஆனால், ஆனால் அவள் உடல் மேல் ஒரு மூச்சுக் காற்று பட்டது. இல்லை இல்லை இது அவளின் மூச்சுக் காற்றே தான்.
அவளே இன்னொரு மனுஷியாகி, ம்ஹும், அதுவும் இல்லையே, கானாவாகி விடும் மூச்சைப் போல் அல்லவோ உள்ளது? “கானா, என் கானா!” அரற்றினாள் ராதை தூக்கத்திலேயே. அவள் மேல் இதமாக வருடிச் சென்றது ஒர் ஸ்பரிசம். தூக்கிவாரிப் போட்டு எழுந்தாள் ராதை. சுற்றுமுற்றும் பார்த்தாள். யாரோ, இன்னும் யாரோ அந்த அறையில் இருப்பதாய் ஓர் உணர்வு அவளுக்கு. அவள் கத்தப் போவதை உணர்ந்தாப் போல் மெல்ல மெதுவாய் ஓர் இனிமையான, இதமான குரல் அவளருகே வந்து மெல்லச் சொன்னது, “ராதை, பேசாமல் இரு, கத்தாதே, மாற்றுடை அணிந்து “ராஸ்’ ஆடத் தயாராய் இரு.” என்றது அந்தக் குரல். ராதையின் கண்கள் விரிந்தன. அவள் கனவேதும் காணவில்லையே? இது கனவா, நனவா? ஆஹா, இது கானா! என் கானா! ராதை குரல் வந்த திசையை நோக்கிச் சென்று தன்னிரு கரங்களாலும் கானாவைக் கட்டிக் கொண்டாள். மேலே நிமிர்ந்த அவள் கண்களில் கூரையில் இருந்து யாரோ தொங்குவதும் தெரிந்தது. உடனேயே கண்ணன் ராதையிடம், “ சத்தம் போடாமல், உடை மாற்றிக் கொண்டு என்னோடு வா ராதை! உனக்காகவே இந்த ராஸ் காத்துக் கொண்டிருக்கிறது.” என்று சொன்னான். அந்தக் குரலில் இருந்த ஏதோ ஓர் இனம் புரியாத ஈர்ப்பு அவணையும் ஈர்த்ததோடல்லாமல் அவள் உடலே லேசாகிக் காற்றில் பறப்பது போல் உணர்ந்தாள்.

அந்த இருட்டிலேயே எவ்வாறோ தன் ராஸ் உடையைக் கண்டுபிடித்து அணிந்து கொண்ட ராதையிடம் கண்ணன், “ என் தோள்களில் ஏறிக் கொள் ராதை, நான் உன்னை மேலே அனுப்புவேன். அங்கே ஸ்ரீதாமா உன்னைப் பிடித்துக் கூரையின் மேல் இழுத்துக் கொள்வான். கூரையில் பலராமன் காத்திருக்கான். அவன் ஸ்ரீதாமாவின் கைகளைப் பிடித்து உன்னையும், ஸ்ரீதாமாவையும் இழுத்துக் கொள்ளுவான். பின்னர் நான் ஏறி வந்துவிடுவேன். “ என்று சொல்ல, இந்த அன்பைப் பார்த்த ராதைக்குப் பேச்சே வரவில்லை. கூரை ஏறத் தயாரானாள். “ராதை, பாதியிலேயே பயப்படமாட்டாயே?” கண்ணன் கேட்க ராதை ,”கானா, நீ இருக்கையில் எனக்கு என்ன பயம்?” என்று சொல்லிவிட்டுக் கண்ணன் சொற்படியே நடந்தாள். ஸ்ரீதாமா அவளைக்கூரையின் மேலே ஏற்ற, பலராமன் ராதையை இழுத்துக் கூரையில் விட்டுவிட்டு ஸ்ரீதாமாவின் கால்களைப் பிடித்துக் கொண்டு ஏற முயலும் கண்ணனையும், ஸ்ரீதாமாவையும் ஒரே நேரத்தில் கூரையில் இழுத்துப் போடுகிறான். அப்பா! வலிமையுள்ளவனாய் இருப்பதில் எத்தனை நன்மை! பலராமன் எண்ணிக் கொள்கிறான். சற்று நேரம் கூரையின் மேலேயே நடந்த அனைவரும் ஓர் இடத்திற்கு வந்ததும், முதலில் பலராமன் குதிக்க, அவன் தோளில் ஸ்ரீதாமா நிற்க, கிருஷ்ணன், ராதையையும் தூக்கிக் கொண்டு ஸ்ரீதாமாவின் தோளில் இறங்கிப் பின்னர் கீழே குதிக்க, மறுபடியும் இருவரும் பூமிக்கு வந்தார்கள். அனைவரும் யமுனைக்கரையை நோக்கி நடக்க அங்கே காத்திருந்த இளைஞர் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது அனைவரையும் பார்த்து. ராஸ் ஆட்டம் விறுவிறுப்பாய் ஆடப் படுகிறது.
காலையில் ராதையின் மாற்றாந்தாய் கபிலா கதவைத் திறந்து பார்க்க ராதை அசந்து தூங்குகின்றாள். தன்னை மறந்து தூங்கும் அவள் முகத்தில் ஓர் அலாதியான ஒளியும், நிம்மதியும். செக்கச் சிவந்த இதழ்களில் ஒரு புன்சிரிப்பு. கபிலாவுக்கு அதிசயமாய் இருக்கிறது. ஆனாலும் பெண் வெளியே செல்லவில்லை அல்லவா? அமைதி அடைகிறாள்.

இங்கே கண்ணனோ, அமைதி இல்லாமல் யோசிக்கிறான். பலராமனுக்குக் கூடக் கொஞ்சம் வருத்தம் தான், ராதையை அவள் வீட்டில் அடைத்துப் போடுவது குறித்து. இதற்கு ஏதானும் செய்யவேண்டும், எனக் கண்ணனிடம் சொன்னதுக்குக் கண்ணனோ அதைத் தான் பார்த்துக் கொள்வதாய்ச் சொல்லிவிடுகிறான். வீட்டுக்கு வந்தான் கண்ணன். தன் தாய் யசோதையைப் பார்த்துப் புன்னகையுடன், “அம்மா, விருஷபானுவுக்கும், அவன் மனைவிக்கும் ஒரு செய்தி அனுப்பவேண்டுமே!” என்று சொல்கின்றான். “என்னப்பா” என யசோதை கேட்க, “ராதைக்கு மணமகன் தயார் எனச் சொல்லவேண்டும்” என்கிறான் கண்ணன். யசோதை சிரித்தாள்:” கண்ணா, என் கண்ணா, அவளுக்குத் தான் ஏற்கெனவே நிச்சயம் ஆகி விட்டதே, ஐயனும் போரிலிருந்து திரும்பிவிட்டானாமே? சீக்கிரமே பிருந்தாவனமும் வரப் போகிறானாமே? ராதைக்குக் கல்யாணம் ஆகிவிடும்.” என்று தன் மகனைத் தேற்றுவது போல் கூறினாள். “ராதை ஐயனை மணம் புரிந்து கொள்ளக் கூடாது!” கண்ணன் சொன்னான். யசோதை, சரிதான், இந்தப் பையன் தன் வம்புத்தனம் ஏதோ ஆரம்பிக்கிறான் போல. எப்போவும், எதிலும் இவனுக்கு விளையாட்டுத் தான். “சரிப்பா, பெரியவங்க நீங்க பார்த்திருக்கிற மாப்பிள்ளை யாரு சொல்ல முடியுமா?” யசோதை கேட்டாள்.

“வேறே யாருமே இல்லை, நான் தான் அந்த மாப்பிள்ளை!” கண்ணன் சொல்கின்றான்.

“என்ன??” யசோதை கத்தினாள். சற்று நேரம் பேச்சே வரவில்லை அவளுக்கு.

Monday, August 03, 2009

இந்தக் காலத்திலே தியாகின்னா யாருக்குத் தெரியும்?

நெ.12. பிச்சுப் பிள்ளை தெரு.

மீனாக்ஷி அம்மாள் வாசலைப் பார்த்தாள். அவர் வருகிற அறிகுறியே தெரியவில்லை. காலை பத்தரைக்கெல்லாம் தெருவே தகித்துக் கிடக்கிறது. வெளியே காய்ந்த வெயில் வீட்டுக்குள் புழுக்கமாக உருவெடுக்கிறது. ஞானா அசந்து தூங்குகிறாள். பாவம் கர்ப்பவதி! அதற்காக விசிறியை எவ்வளவு நேரம் தான் வீசிக் கொண்டிருக்க முடியும்?? கைக்கு ஓய்வு கொடுத்த மாதிரியும் இருக்கும், அவர் வருகிறாரா என்று பார்த்த மாதிரியும் இருக்கும் என்றுதான் வெளியே வந்திருந்தாள்.

“நான் வாசப்படிலே நிக்கறேங்கறதுக்காக வந்துடப் போறாரா என்ன?? அவருக்கு ஆயிரம் காரியங்கள்!தெருமண் புழுதியைக் கிளப்புகிற மாதிரி ஒரு காற்றடித்தது. மீனாக்ஷி அம்மாள் கண்களை மூடிக் கொண்டாள். ஒரு நாய் இரைக்க இரைக்க வேகமாய் ஓடியது. அடுத்த வீட்டிலிருந்து விசாலாக்ஷி எட்டிப் பார்த்தாள்.

“என்ன மீனாஷி, வாசல்லே நின்னுண்டு இருக்கே?” என்றபடி அருகில் வந்தாள். “அவர் வர்றாரானு பார்த்துண்டுருக்கேன்.” பளீரென்ற புன்னகையை வரவழைத்துக் கொண்டு சொன்னாள் மீனாக்ஷி அம்மாள். “உள்ளே வாங்கோ!”

வேண்டாண்டியம்மா! ரொம்பப் புழுங்கறது. காத்தாட வாசப்படிலேயே உக்காந்துக்கலாம். நோக்கு வேற ஜோலி ஒண்ணும் இல்லையே?”
இல்லை என்று தலையசைத்தபடி விசாலாக்ஷிக்கு எதிரே அமர்ந்தாள் மீனாக்ஷி அம்மாள். விசாலாக்ஷி வாயைப் பிடுங்குவதற்கு வந்திருக்கிறாள் என்று அவளுக்குத் தெரிந்து தான் இருந்தது. அதற்காக அவளை வெறுத்து, ஒதுக்கிவிட முடிகிறதா என்ன? மீனாக்ஷியம்மாளால் யாரையும் வெறுக்கவும் முடியாது. மனிதர்களை வெறுப்பது “அவருக்கு”ப் பிடிக்காது. “மனுஷாள்னா ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரிதான் இருப்பா மீனாக்ஷி! கையிலே இருக்கற எல்லா விரலும் ஒரே மாதிரியா இருக்கு? அப்படி இருந்தா நாம சாப்பிட முடியுமோ, சொல்லு!” என்பார்.
விசாலாக்ஷி கேட்டாள்:”ஞானபாநு அச்சுக்குப் போயிடுத்தா?”
இன்னும் இல்லே, மாமி!”
“ஈஸ்வரா, நோக்கு ரொம்பக் கஷ்ட காலம்டியம்மா. போனதரம் பத்திரிகை அச்சடிக்கறதுக்கும், ஸ்டாம்ப் வாங்கறதுக்கும் பணம் இல்லாமத் தானே உன்னோட ரெட்டை வடம் சங்கிலியை வித்தே?”
“ஆமாம், மாமி”-விசாலாக்ஷியின் கண்களை எதிர்கொள்ள முடியாமல் தலையைக் குனிந்து கொண்டாள் மீனாக்ஷியம்மாள்.

“பகவானே! இவ்வளவு கஷ்டத்துலே பத்திரிகை நடத்தணுமாங்கறேன்?”
“அதெல்லாம் புருஷா காரியம் மாமி! நாம ஒண்ணும் சொல்லப்படாது!”
“வாஸ்தவம், பத்திரிகை இருக்கட்டும். உன்னோட ஆத்துக்காரரோட தங்கை ஞானம் பிரசவத்துக்கு வந்திருக்காளே, அவளுக்கு வேணுங்கறதை செய்யறதுக்காச்சும் பணம் வேணுமோல்லியோ?”

மீனாக்ஷியம்மாள் பதில் பேசாமல் தெருவைப் பார்த்தாள். இந்த சம்பாஷணை அவளுக்குப்பிடிக்கவில்லை என்பது விசாலாக்ஷிக்குப் புரிந்தது. பேச்சை மாற்றினாள். “மீனாக்ஷி! நானே கேக்கணும்னு இருந்தேன். போன ஞானபாநுவிலே ஒரு கட்டுரை வந்ததே….. யாரோ நித்யதீரர்னு எழுதிருந்தாளே! ரொம்ப நன்னாருந்தது. என் புள்ளையாண்டான் கூடச் சொன்னான். கட்டுரைன்னா இப்பிடி இருக்கோணும்னு. யாராம் அது?”

“நம்ம பாரதியார்தான் மாமி!”
“யாரூ? சுப்ரமண்ய பாரதியா?”
“ஆமாம், அவரே தான். சரஸ்வதி, ஓர் உத்தம தேசாபிமானி, சாவித்திரி என்ற நிருபநேயர் இந்தப் பேர்ல எல்லாம் வேடிக்கைக் கதைகள், கவிதைகள் எழுதறதும் அவர்தான்.
“அதானே பார்த்தேன். இவ்வளவு அழுத்தமா பாரதியை விட்டா வேற யாரால எழுதமுடியும்? அதுசரி, உன் ஆத்துக்காரரோட லேகிய வியாபாரமெல்லாம் எப்படிப் போயிண்டிருக்கு?”
“நன்னா போயிண்டிருக்கு. ஆனா அதுலே வர்ற காசையும் பத்திரிகைல போட்டுடறார். அவருக்கு லோகத்துலே இருக்கற எல்லாத்தையும் விட தேசாபிமானம் முக்கியம்.” இதைச் சொல்லும்போது மீனாக்ஷியம்மாளின் குரல் கம்மி இருந்தது.

“நெஜம்தான். பின்னே??? நாலு வருஷமும் நாலு மாசமும் ஜெயில் தண்டனைன்னா சும்மாவா? பிரிட்டிஷ்காரன் புழிஞ்சுட மாட்டான்? அதோட அவருக்குப் பெருநோய்ங்கற குஷ்டம் வேறே வந்துடுத்து. திருச்சி, சேலம்னு ரெண்டு ஜெயில்லேயும் அவர் பட்ட கஷ்டம் அந்தக் கபாலீஸ்வரனுக்குத் தான் தெரியும். இவ்வளவு நடந்தும் மனுஷர் வீட்ல தங்கறாரா? கால்ல விஷ்ணு சக்கரத்தைக் கட்டிண்ட்டாப்ல ஊர் ஊராகப் போறார். கடற்கரையில கூட்டம் போடற எடத்துக்குத் திலகர் கட்டம் னு பேர் வைக்கறார்.”……….

"கபாலீஸ்வரரை விடுங்கோ மாமி! அவர் வார்த்தைக்கு வார்த்தை அன்னை பராசக்தி, அன்னை பராசக்தின்னு சொல்லிண்டிருக்காரே!... அவ கடைக்கண்ணைக் காட்டப் படாதா?” மீனாக்ஷியம்மாளின் முகம் காய்ந்து போன மல்லிகையைப் போல் வாடியது. வம்பளப்பவர்களிடம் கூட தன் மன ஆற்றாமையை வெளிப்படுத்த முடியும் என்கிற உணர்வு அவளைக் கொஞ்சம் வெட்கப் படச் செய்திருந்தது. சரியாக அதே நேரம் அவர் வந்தார். விசாலாக்ஷி வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள். “நான் வரேண்டி மீனாக்ஷி!” ஓட்டமும் நடையுமாக, வாசலில் இருந்து இறங்கி தன் வீட்டுக்குப் போனாள் விசாலாக்ஷி!.

அவர் தலையில் அங்கவஸ்திரத்தை முண்டாசுபோலக் கட்டியிருந்தார். கையில் இருந்த ஊன்றுகோலைச் சுவரில் சாற்றி வைத்தார். நடையில் கம்பீரம் கொஞ்சம் கூடக் குறையாமல் இருந்தது. மீனாக்ஷி அம்மாளை நேருக்கு நேர் பார்த்தார்.
“ஏன் உன் முகம் வாடியிருக்கு?”
“வீட்ல மணி அரிசியில்லே! ஞானம் கார்த்தால பழைய சாதம் சாபிட்டுட்டு சுருண்டு படுத்திருக்கா! ஆத்துலே தம்பிடி இல்லே! என்ன பண்ணலாம் சொல்லுங்கோ?”

அவர் மனம்விட்டுச் சிரித்தார். “இதுதானா உன் பிரச்னை? அன்னை பராசக்தி, லோகத்தையே ரக்ஷிப்பவள்…… அவள் இருக்கும்போது நமக்கேன் கவலை? அதைரியப் படாதே!”
வாசலில் போஸ்ட்மேனின் குரல் கேட்டது. “ ஐயா, மணிஆர்டர்!” அவர் வாசலுக்கு விரைந்தார். “என்ன?”
“ஞானபாநு மேனேஜர் பேருக்கு மணியார்டர் வந்திருக்குங்கய்யா!”
“மீனாக்ஷி! பராசக்தி வாசலில் நிக்கறா பாரு!”அவர் குரல் கொடுத்தார். மீனாக்ஷியம்மாள் கையெழுத்துப் போட்டுப் பணத்தை வாங்கினாள். அவள்தான் ஞானபாநு பத்திரிகையின் மேனேஜர், காரியதரிசி, குமாஸ்தா எல்லாம். போஸ்ட்மேன் போனதும் அவர் கேட்டார்:” எவ்வளவு வந்திருக்கிறது மீனாக்ஷி?
“ஒண்ணே முக்கால் ரூபாய்!”
“அப்பா….. இன்றைய பாடு கழிந்தது!”
***********************************************888888888********************************
அதே பிச்சுப் பிள்ளை தெரு! நெம்பர் 12
பிச்சுப்பிள்ளை தெரு கோடை வெயிலில் சூடேறிக் கிடந்தது. பைக்கை நிறுத்தியதும் தெருவோரத்தில் படுத்திருந்த கறுப்பு நாய் தலை உயர்த்திப் பார்த்தது. விநோத் ஹெல்மெட்டைக் கழற்றினான். பின்சீட்டிலிருந்து இறங்கிய முத்து கணேஷ் தயக்கமாகப் பார்த்தார்.
“என்ன ஸார், கண்டிப்பா விசாரிக்கணுமா?”
“ஆமாங்க, என் ப்ராஜக்டுக்கு இது ரொம்ப முக்கியம். அவர் வீட்டை ஒரு ஃபோட்டோவாவது எடுக்கணும். அப்போதான் பி.எச்.டி. வைவாவுலே அக்ஸெப்ட் பண்ணுவாங்க.”

முத்துகணேஷ் பத்திரிகைக்காரர். மயிலாப்பூர்வாசி. அதன் இண்டு இடுக்கெல்லாம் அறிந்தவர். அதனால்தான் அவரைக் கூட்டி வந்திருந்தான் விநோத். அவர்கள் நின்ற இடத்துக்கு நேர் எதிரே ஓர் ஓட்டு வீடு. அதன் சுவர்கள் எப்போது விழுமோ என்கிற நிலையில் ஓடுகளைத் தாங்கிப்பிடித்தபடி பலகீனமாக நின்றிருந்தது. வாசலில் சட்டையில்லாமல், கைலியோடு உட்கார்ந்திருந்தார் ஒருவர்.
“ஸார், இங்க சுப்ரமணியசிவா வீடு எங்கருக்கு?” முத்து கணேஷ் கேட்டார்.
“சிவாவா? யாரு?>>>>> ப்ளம்பர் சிவாவா?”
இல்லைங்க, தியாகி, சுப்ரமணியசிவா!”
“தியாகியா? தெரியலைங்களே! அந்தா….. அங்க அயர்ன் கடை இருக்கு பாருங்க. அங்க கேளுங்க, அவருக்கு கரெக்டா தெரியும்.”
விநோத் பைக்கை உருட்டிக் கொண்டு அயர்ன் கடைக்குப் போனான். பீடி பிடித்துக் கொண்டிருந்த கடைக்காரர், யோசித்துவிட்டு, “ரொம்பப் பழைய ஆளுங்கன்னா, அந்தா…. அந்த எதுத்த வீட்டுக்காரருக்குத் தான் தெரியும்… அவரு ரொம்ப வயசானவரு. அவர்கிட்டே கேளுங்க!” ஒரு வீட்டைக் காட்டினார், அயர்ன் கடைக்காரர்.

கதவைத் தட்டியதும் ஒரு எழுபது வயதுப் பெரியவர் வந்தார். விசாரித்ததும் ரொம்ப யோசனைக்குப் பிறகு பக்கத்து வீட்டைக் காட்டினார். ‘இங்கதான் சுப்ரமணிய சிவா இருந்தாரு” பதிலை எதிர்பாராமல் கதவை மூடிக் கொண்டு போனார் அவர்.
அவர் காட்டிய வீடு ஒரு ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த வீடு. வெள்ளையாகச் சுண்ணாம்பு அடித்திருந்தது. பக்க்த்திலேயே ஒரு காரை நிறுத்தும்படியான கேரேஜ். அதன் கதவு மூடிக் கிடந்தது. வீட்டுக்குள் இருந்து ஒரு பெரியவர் பக்கெட் நிறைய துணிகளை எடுத்து வந்து, கொடியில் காயப் போட்டுக் கொண்டிருந்தார்.
“என்ன சார்! அவர்கிட்டே பேசலாமா?” முத்து கணேஷ் கேட்டார்.
“வேணாங்க, இதுதான் அவர் இருந்த வீடான்னு கன்ஃப்ர்மா தெரியலை. பேசுறது வேஸ்ட்.”
“ஆமா ஸார், இந்தக் காலத்துலே தியாகின்னா யாருக்குத் தெரியும்? நடிகை வீடுன்னா தம்மாத்தூண்டு குழந்தை கூட அடையாளம் காட்டும்என்றார் முத்து கணேஷ்.
இருவரும் அந்த இடத்தை விட்டு நகர, பிச்சுப் பிள்ளை தெரு மெளனத்தில் ஆழ்ந்திருந்தது.

நன்றி: கல்கி 5-7-09
எழுதியவர் :பாலுசத்யா



நெஞ்சு பொறுக்குதில்லையே! :((((((((((((