எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, June 28, 2017

வறண்ட காவிரி! :(


அமெரிக்காவிலே இருந்து வந்ததும் ஓரிரு முறை மாடிக்குப் போயிருந்தாலும் நின்று பார்க்கவில்லை. இன்னிக்குக் காலம்பர மறுபடி நடைப்பயிற்சியை ஆரம்பிக்கச் சென்ற போது கையில் அலைபேசி இருந்தது. ஆகவே அதன் மூலம் காவிரியைப் படம் எடுத்தேன். பார்க்கவே கண்ணில் தண்ணீர் வருகிறது. கல்லணைப்பக்கம் வறண்ட காவிரியைப்  படம் பிடித்து சக பதிவர் திரு தமிழ் இளங்கோ அவர்கள் முகநூலில் பகிர்ந்திருந்தார்! அதையும் பார்த்தேன். 



இப்போ இரண்டு, மூன்று நாட்களாகத் தான் இங்கே காற்று அடிக்கிறது. அப்போ மேற்கே மழை பெய்கிறது என்று அர்த்தம். இத்தனை நாட்கள் காய்ந்த வெயில் மாதிரி இதற்கு முன்னால் பார்த்ததே இல்லை! அனல் காற்று வீசியது! 




காவிரி ஆற்றைச் சில கோணங்களில் எடுத்த படங்கள் தான் இவை எல்லாம். 



கடவுள் தான் கண் திறக்க வேண்டும். அந்த ரங்கநாதன் பார்வையில் தானே இருக்கு காவிரியும்! 

Sunday, June 25, 2017

ஆடுவோம், பாடுவோம், கொண்டாடுவோம்!

 முகநூலில் சிநேகிதி ஒருவர் நம் கல்யாணங்கள் இப்போது சம்பிரதாயமாகவும் இல்லாமல் தமிழ் முறைப்படியும் இல்லாமல் முழுக்க முழுக்க வட இந்திய முறைப்படி மாறி வருகிறதைக் குறிப்பிட்டிருந்தார். கல்யாணங்கள் மட்டுமா? கல்யாணத்தில் பரிமாறப்படும் உணவு வகைகளும் தான்!  அதோடு மட்டுமா? உடுத்தும் உடைகளும் தான். மணப்பெண் ரிசப்ஷனுக்கு குஜராத்தி முறைப்படியோ அல்லது ராஜஸ்தானி காக்ரா, சோலியோ அணிந்தால் தான் மதிப்பு! மணமகன் பைஜாமா குர்த்தா விலை உயர்ந்த துணியில் தைத்ததை அணிந்து இருக்க வேண்டும். ரிசப்ஷன் மேடையிலேயே ஆடுவார்கள், பாடுவார்கள். ஆனால் தமிழ் உணர்வு பொங்கும்போது சும்மா இருக்க மாட்டோம். ஒரே பொங்கல் தான்!

கல்யாணத்துக்கு முன்னும், பின்னும் கூட வட இந்திய முறைப்படி மெஹந்தி விழா, சங்கீத், பராத், பாங்க்ரா நாட்டியம், கர்பா எல்லாமும் உண்டு.  ஆனால் தமிழ், தமிழ் உணர்வு என்னும்போது அப்படியே கொதித்துக் கொந்தளித்துப் போவோம். பார்ப்பனர்கள் சம்ஸ்கிருதம் படிக்க விடாமல் மற்ற ஜாதியினரைத் தடுத்து விட்டார்கள் என்று சொல்வோம். ஆனால் அதே சம்ஸ்கிருதம் படிக்க இப்போது வாய்ப்புக் கொடுத்தால் மொழித்திணிப்பு என்போம்.  ஹிந்தி மொழியை இங்கே யாரும் படிக்கக் கூடாது! மொழித்திணிப்பு என்போம். ஆனால் வட இந்திய முறைப்படி தான் நம் திருமணங்களை நடத்துவோம்! அதிலும் பல பிராமணர்கள் வீட்டுத் திருமணங்கள் இப்படித் தான் நடக்கின்றன. இதில் அவர்களே மற்றவர்களுக்கு வழிகாட்டி எனலாம்.( நல்ல வேளையா எங்க பொண்ணு, பிள்ளை கல்யாணங்களில் இப்படி எல்லாம் நடக்கலை.) நம்ம பாரம்பரிய முறைப்படி திருமணம் நடப்பதைக் கேலி செய்வோம். ஆனால் வட இந்திய முறைப்படி எல்லாவற்றையும் ஆவலுடன் செய்வோம். அதில் பெருமையும் கொள்வோம்.

எங்களுக்கு ஹிந்தி என்னும் மொழி தான் வரக் கூடாது! மொழித்திணிப்பை எதிர்ப்போம். வடவர் ஆதிக்கம் என்போம்.  ஆனால் எங்க வீட்டுக் கல்யாணங்களில் வட இந்திய முறைப்படி மெஹந்தி விழா மற்றும்
 அவங்க முறைப்படி உடை உடுத்துதல், பராத், பாங்ரா நாட்டியம், கர்பா எல்லாமும் ஆடுவோம், பாடுவோம், கொண்டாடுவோம்,
உணவுகளில் கூட வட இந்திய உணவு முறைப்படி தான் சாப்பிடுவோம். சாட் பண்டார் தனி ஸ்டால், சமோசா தனி ஸ்டால், பானி பூரி, பேல் பூரி, தஹி பூரி தனி ஸ்டால், உணவு வகைகளில் சப்பாத்தி, குருமா, நான், ஃபுல்கா ரொட்டி, சப்ஜி என்றே சாப்பிடுவோம். ஆனால் ஹிந்தி மட்டும் படிக்கச் சொன்னீங்களோ! எங்கள் தமிழார்வம் உங்களைச் சும்மா விடாது!
ஆமாம் தெரிஞ்சுக்குங்க! :)))) ஹூம், நாங்க தமிழார்வம் நிறைஞ்சவங்களாக்கும்! :))))  மைல் கல்லில் ஹிந்தி எழுத்து தென்பட்டால் கூட எதிர்ப்புத் தெரிவிப்போம். இத்தனைக்கும் அது தேசிய நெடுஞ்சாலையாக இருக்கும்! அங்கே இத்தனை மைல்களுக்கு ஒரு மைல்கல்லில் மூன்று மொழிகளிலும் விபரம் கொடுக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத் துறை ஆணை இருக்கும்! இருந்தாலும் நாங்க தமிழர்கள் இல்லையா? எங்க தமிழ்நாட்டில் அதெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். அதை அழிக்கும்வரை போராட்டம் தான்!

தமிழ் மொழிக்காக உயிரையும் கொடுப்போம். ஆனால் எங்கள் திருமணங்களில் எல்லாம் வட இந்தியர் போடும் உடைகள், உணவு வகைகள், பழக்க, வழக்கங்களையே பின்பற்றுவோம். எந்த வட இந்தியராவது தமிழ்நாட்டு முறைப்படி திருமணம் செய்து கொண்டதாகச் செய்தி வந்திருக்கா? இல்லை! ஆனால் தமிழ் உணர்வு மிகுதியாக உள்ள நாம் மட்டுமே தனித்துவம் கொண்டவர்கள் ஆதலால் இப்படிச் செய்வோம். தமிழ்ப் பற்றில் எங்களை மிஞ்ச ஆளில்லை! எங்காவது ஹிந்தி எழுத்தைப் பார்த்தால் தார் பூசி அழிப்போம். ஆனால் எங்கள் திருமணங்களில் கட்டாயமாக சமோசா, பாவ் பாஜி, தஹி சாட், பேல் பூரி, தஹி பூரி, பானி பூரி போன்றவை இடம் பெறுமாறு பார்த்துப்போம். அதான் எங்கள் முக்கிய உணவே! விடுமுறை நாட்களில் ஓட்டலுக்குச் சென்றால் கூட நாங்க இவற்றைத் தான் வரவழைத்துச் சாப்பிடுவோம். இட்லி, சாம்பாரெல்லாம் எவன் சாப்பிடுவான்! சாதம் என்றால் அதில் பிரியாணியோ, புலவோ என்றால் சாப்பிடலாம். சாம்பார் சாதமா? ரசமா? சேச்சே! ரசனையே இல்லாத திருந்தாத ஜன்மங்கள்தான் அதைச் சாப்பிடுவார்கள். நாமெல்லாம் புலவும், பிரியாணியும், ஃப்ரைட் ரைஸும் தானே சாப்பிடுவோம்!

நம்ம பாரம்பரிய உணவே மறந்துவிடுவோம் போல இருக்கு! ஏதோ எங்களைப் போன்றவர்கள் அதை நினைவூட்டினால் தான் உண்டு!  பழக்க வழக்கங்களுமே மாறிக் கொண்டு வருவதையும் பார்க்க முடியுது! ஒரு பக்கம் தமிழ், தமிழ் மொழிப் பற்று, தமிழ்க் கலாசாரம் பேணுதல்! இன்னொரு பக்கம் மறைமுகமாக வட நாட்டு முறைகள், பழக்க, வழக்கங்கள், உணவுகள் உள்ளே நுழைந்து ஆதிக்கம் செலுத்துதல்! என்னவோ போங்க!

வாழிய செந்தமிழ், வாழிய பாரத மணித்திருநாடு

Saturday, June 24, 2017

ஒரு தீவிரமான பதிவு அன்று! மொக்கைப் பதிவு இன்று!

சாப்பிடலாம் வாங்க!  இங்கே பார்க்கவும்!




அரிசி+து.பருப்பு மி.வத்தல், உப்பு, பெருங்காயத்தோடு அரைக்க ஜாரில் பொட்டிருக்கேன்.

நாம உல(க்)கை நாயகர் மாதிரி ஒரு சீரியஸ் பதிவு கொடுத்தால் அடுத்து ஒரு மொக்கைப் பதிவு கொடுப்போமுல்ல! அதான் இன்னிக்கு இந்தப் பதிவு! நேத்திக்குக் காராவடை செய்தேன். இது அநேகமா மதுரைப் பக்கம் மட்டுமே செய்யற ஒண்ணுனு நினைக்கிறேன். செய்முறை கீழே!

அரிசி+துவரம்பருப்பு = ஒரு கப் அரிசின்னால்  கால் கப் து.பருப்பு சின்னக் கிண்ணம் அரிசின்னால் ஒரு டேபிள் ஸ்பூன் து.பருப்புப் போதும்.

உளுந்து அரைக் கிண்ணம், கொடகொடவென்று அரைக்கவும்.

அரிசி+துவரம்பருப்போடு மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் தேவையான அளவு சேர்த்து நன்கு நைசாக (வெழுமூண என்று நாங்கள் சொல்வோம்) அரைத்துக் கொள்ளவும். கொட கொடவென அரைத்த உளுந்து மாவையும் போட்டுக் கலந்து அரைக்கிண்ணம் கடலை மாவையும் போட்டு நன்கு கலக்கவும். புளிப்புச் சுவை வேண்டும் எனில் ஒரு கரண்டி தயிர் சேர்க்கலாம். கடலைப்பருப்பை நன்கு ஊற வைத்து இதில் சேர்த்துக் கொண்டு கருகப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். இஞ்சி, பச்சை மிளகாய் தேவை எனில் சேர்க்கவும். சேர்க்காமலும் இருக்கலாம். கருகப்பிலை முக்கியம்.  கீழே அரைத்த மாவு!



இங்கே எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கும் காராவடைகள்!
 நல்ல நிறமாக இருக்கும்! மஞ்சள் பொடியெல்லாம் போடவே வேண்டாம்! அதுவே நல்ல நிறமாக வந்துடும். சட்னி தேவை எனில் தேங்காய்ச் சட்னியோடு சாப்பிடலாம். நாங்க அப்படியே சாப்பிட்டோம்!


சூடான காராவடைகள் இங்கே! இதன் செய்முறையில் நேற்று ஒரு திப்பிச வேலை செய்தேன். ஹிஹிஹி, வடைக்கு ஏற்கெனவே அரைத்து மீந்திருந்த உளுத்த மாவை அரிசி+துபருப்பு அரைத்த கலவையோடு கலந்துட்டேன். அதோடு கடலை மாவு சேர்த்துச் செய்தேன். வித்தியாசம் ஒண்ணும் தெரியலை. ஆனால் பொதுவாக உளுந்து தனியாகக் கொட, கொடவென அரைத்துச் சேர்த்தால் தான் காராவடை நன்கு உப்புக் கொண்டு பெரிது பெரியதாகவும் மேலே மொறு மொறுவெனவும் உள்ளே ஸ்பாஞ்ச் மாதிரியும் வரும். நேற்று நன்றாக அப்படியே வந்திருந்தது. :))))



Friday, June 23, 2017

க.க.போ.வுக்கான கதை இங்கே!

க.க.போ.தெரியுமா?  எங்கள் ப்ளாக் கௌதமன் "நம்ம ஏரியா"வுக்காகக் கதைக் கரு கொடுத்து எழுதச் சொன்ன கதைக்கு நான் எழுதிய கதை கீழே. இதைக் கதைனு நம்பினால் படிங்க! இல்லைனா வேண்டாம்! ஏன்னா முதலில் எழுத ஆரம்பிச்சது ஒண்ணு! அப்புறமா மாத்தினது வேறே! அதுக்காகக் கற்பனை வளம் அதிகமா இருக்குனு நினைச்சுடாதீங்க!  இனி உங்கள் பாடு! கௌதமன் பாடு! அவர் தானே கதையே கேட்டார். யாருக்கானும் கோபம் வந்து திட்டணும்னு தோணிச்சுனா கௌதமனைப் போய்த் திட்டுங்க! இனி ஒரு முறை இம்மாதிரிப் போட்டி எல்லாம் வைப்பாருங்கறீங்க? ம்ஹூம்! ஓடிப் போயிட மாட்டாரா! :)))))

*********************************************************************************

எதிர்பாரா அதிர்ச்சி அவளுக்கு! சென்ற இடத்தில் அவனைச் சந்திப்போம் என்றே நினைக்கவில்லை. கணவனுடன் ஒரு சுற்றுலாவுக்குச் செல்ல வேண்டும் என்று தெரிந்ததும் அவளுக்குள்ளே பொங்கி வந்த மகிழ்ச்சி ஊற்று இப்போது வற்றி விட்டது! அவனைப் பார்த்தால் அவளைத் தெரிந்து கொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. அழுத்தம்! மிகுந்த அழுத்தம்! அவள் வேண்டுமென்றே அவன் பார்க்கையில் தன் கணவ்னை ஒட்டி அணைத்தாற்போல் அமர்ந்து கொண்டாள்! அவன் இதழ்க்கடையில் அது என்ன? ஏளனச் சிரிப்பா? பற்களைக் கடித்துக் கொண்டாள்! முன்னெல்லாம் அவள் கோபத்தில் இப்படிப் பற்களைக் கடித்துக் கொள்ளும்போதெல்லாம் அவன் சொல்வது அவள் நினைவில் வந்து தொலைத்தது!

"ஆஹா! ரசம் சொட்டும் ஆரஞ்சுச் சுளைகள்! விதைகளே இல்லாத சுளைகள்! இப்படி அழுத்திக் கடித்தாயானால் ரசமெல்லாம் சிந்திவிடுமே!" என்பான். அவளுக்குச் சிரிப்பு வந்துவிடும். அந்த நினைவு இப்போது அவளுள் தலைதூக்க முகத்தில் தன்னையும் அறியாமல் ஏற்பட்டிருந்த புன்னகையோடு தலை நிமிர்ந்து பார்க்க அவனுள்ளும் அப்போது அதே எண்ணம் தோன்றி இருக்க வேண்டும். அங்கிருந்த ஓர் ஆரஞ்சுப் பழத்தை எடுத்துக் கைகளில் உருட்டிய வண்ணம் அவளையே பார்த்தான்! அவள் உடலோடு மனமும் சேர்ந்து கூசிற்று! இது சரியா? இன்னமும் அவனையே நினைப்பது சரியா? ஆயிற்று! கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கும் மேல் ஆகப் போகிறதே! அவனை விட்டு அவள் விலகி! அற்பக் காரணம்! ஆனால் அதிலேயே சண்டை பெரிதாகி அவனை விட்டு விலகிப் பிறந்த வீடு சென்ற அவள் பின்னர் திரும்பவே இல்லை! இத்தனைக்கும் அவர்கள் திருமணம் காதல் திருமணம் தான்! பெற்றோர் சம்மதத்துடன் நடந்த திருமணம்!

ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது. ஆனால் அவளுக்குத் தான் திருமணத்திற்குப் பின்னர் பல மன மாற்றங்கள். அவன் பெற்றோர் வருவது பிடிக்கவில்லை! அவன் பெற்றோரைச் சந்திக்கச் செல்வதும் அவளுக்குப் பிடிக்கவில்லை! அவள் மருமகளாக வரக் கூடாது என்று ஆரம்பத்தில் தடை போட்டவர்கள் தானே! பின்னர் மகனுக்கு அவளைத் தான் பிடித்திருந்தது என்பதால் தானே சம்மதித்தார்கள்! அங்கே இங்கே சுற்றிக் கடைசியில் அவன் பெற்றோர் அதே ஊருக்கே வந்து விட்டனர். இது இன்னமும் அவளுக்குப் பிரச்னையாகி விட்டது! தன்னுடனேயே பெற்றோரை வைத்துக் கொள்ளவும் விரும்பி அழைத்தும் வந்து விட்டான்! இது அவளுக்கு ஓர் மானப் பிரச்னையாகத் தோன்றி விட்டது. அவளைக் கேட்காமல் எப்படி அழைத்து வரலாம் என்று சண்டை போட்டாள்! என் பெற்றோர் என்னோடு இருக்காமல் எங்கே போக முடியும் என்பது அவன் வாதம். போகப் போகச் சரியாகி விடும் என்றும் கூறினான். ஆனால் அவளால் தான் பொறுக்க முடியவில்லை. கோபத்துடன் பிறந்த வீடு சென்றவள், "நான் அல்லது அவர்கள்! இரண்டில் ஏதாவது ஒன்று தான்!" என நிபந்தனை போட, "மனைவி இன்னொருத்தி கிடைப்பாள்! ஆனால் பெற்றோர் ஒருத்தர் தான்! அவர்களை என்னால் எக்காரணம் கொண்டும் இழக்க முடியாது!" என்று சொல்லி விட்டான்.

மேலும், "நீ உன் பெற்றோருடன் இருக்கையில் என்னுடன் என் பெற்றோர் இருக்கக் கூடாதா?" என்றும் கேட்டான். பெரிய அளவில் கோர்ட், வழக்கு என அலையாமல் இருவரும் மனம் ஒப்பிப் பிரிந்து செல்வதாக எழுதிக் கொடுத்து விட்டார்கள். அதன் பின்னரே அவளுக்குச் சோதனை ஆரம்பித்தது. ஆரம்பத்தில் எல்லாம் அவளைத் தாங்கிய பெற்றோராகட்டும், அண்ணனாகட்டும், பின்னர் அவளைக் குறை கூற ஆரம்பித்துவிட்டனர்.அனுசரித்துப் போயிருக்கணும் என்றார்கள். பின்னர் அவர்கள் தேடித் தந்த மாப்பிள்ளை தான் இப்போதைய கணவர். இவரும் நல்லவரே! வல்லவரும் கூட! ஆனால் இவளைப் போலவே அவரும் ஏற்கெனவே திருமணம் ஆகி மனைவியை ஒரு விபத்தில் இழந்தவர். அவள் பெற்ற குழந்தை இப்போது இவர்களுடன் தான் வளர்கிறது. இதெல்லாம் தெரிந்தே தான் அவள் இந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்க நேரிட்டது! ஏன் எதிர்காலம் குறித்த பயமா? தெரியவில்லை! அவனிடம் மனமாரக் காதலித்த முன்னாள் கணவனிடம் அவள் போட்ட நிபந்தனைகள்! கடுமையான நிபந்தனைகள்! அவை எல்லாம் இப்போதும் போட முடிந்ததா? செல்லாக்காசாகி விட்டன! அவள் தலையை நிமிர்த்திப் பார்த்தாள்.

அவன் இப்போது அவள் கணவருடன் பேசிக் கொண்டிருந்தான். அவளைப் பற்றி அவனிடம் மிகவும் உயர்வாகக் கூறிக் கொண்டிருந்தார் அவளுடைய கணவர். அவளுக்கு மனம் கூசியது! அவன் பெற்றோர் வயது வந்த காலத்தில் அவர்களுடன் சேர்ந்து இருக்க வந்தபோது சம்மதிக்காத அவள் இப்போது இன்னொருத்தி பெற்ற பிள்ளையை வளர்த்து வருவதை அவன் அறிந்தால் என்ன சொல்வான்? அவனுக்கு அது தெரியாமலே போகட்டும் என நினைத்துக் கொண்டாள். ஆனால் அவள் இப்போதைய  கணவன் விடவில்லை. குறிப்பாக இந்த விஷயத்தையே அவனிடம் திரும்பத் திரும்பப் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் பெற்றோர் இப்போ அவனுடன் தான் இருக்கிறார்களா? அவன் வேறே கல்யாணம் செய்து கொண்டானா என்பதை அறிய அவளுக்கு ஆவல் அதிகமாயிற்று.

ஆனால் அவன் பேச்சிலிருந்து எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை. அவன் அவளிடம் வைத்திருந்த காதல் அவன் மனதிலேயே இன்னும் இருக்குமா என்று அவளுக்கு சந்தேகமும் ஏற்பட்டது. அதைத் தெரிந்து கொண்டு அவள் என்ன செய்ய முடியும்? என்றாலும் அவன் வேறொரு பெண்ணிடம் தன்னை விட அதிக அன்புடன் இருப்பான், இருக்கிறான் என்பதை அவளால் இன்னமும் பொறுக்க முடியாது போல் தோன்றியது! நினைக்க நினைக்க அவள் தலையே வெடித்து விடும் போல் இருந்தது. அப்போது பார்த்து அவள் கணவன் அவனிடம் அவன் குடும்பத்தைப் பற்றிக் கேட்க, "எனக்குக் குடும்பம் என்று எதுவும் இல்லை! என் பெற்றோர் இருந்தனர்! அவர்களும் நோய்வாய்ப்பட்டு ஒருவர் பின் ஒருவராகப் போய்ச் சேர்ந்து விட்டார்கள்!" என்று மெல்லிய புன்னகையுடன் அவளைக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே சொன்னான்.

"அடி! பழிகாரி! இப்படிச் சீக்கிரமாகவே இறக்கப் போகிறவர்களைக் குறித்தா நீ என்னிடம் சண்டைபோட்டாய்?" என்று அவன் அவளை மறைமுகமாகக் கேட்பது போல் உணர்ந்தாள்! அங்கே கால்கட்டு, பாரம் சுமக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லித் தானே வாழ்க்கையை விட்டே விலகினாள்! இப்போது அங்கே அவன் மட்டும் தான்! ஆனால் அவளோ! இங்கே வந்துஇன்னொரு திருமணம் செய்து கொண்டும் பாரம் சுமக்கத் தான் வேண்டி இருக்கிறது. அதுவும் யாரோ பெற்ற குழந்தையைத் தன் குழந்தையாக எண்ணி வளர்க்க வேண்டும்! ஏன் இந்தப் பரந்த மனம் அவளிடம் முன்னால் இல்லை? தன் மனம் இன்னமும் சரிவரப் பக்குவப்படவில்லை என்பதை அவள் உணர்ந்தாள். அவனோடு இருந்திருந்தால் வாழ்க்கை நிச்சயம் சொர்க்கமாகத் தான் இருந்திருக்கும். அவள் மனதின் ஓரத்தில் இல்லை, இல்லை, மனம் முழுவதுமே இன்னமும் அவன் தான் இருந்தானோ!

தன் எண்ணங்களைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போனாள் அவள். அவனை விட்டு விலகிய பின்னும் அவள் மனம் அவனையே நினைக்கிறது! அவனுடன் வாழ்ந்த நாட்களை எண்ணிப் பார்க்கிறதே! இது அவள் கணவனுக்குத் தெரிந்தால்! எங்கேயாவது அவன் பேச்சு வாக்கில் அவளிடம் பழைய உரிமையோடு பேசிவிடப் போகிறான் என்று கலங்கினாள்! அவள் கண்களில் பயம் குடி கொண்டது. வாய் பேசாமல் தன் கணவனருகே அமர்ந்திருந்தாள். அப்போது அவள் கணவன், " என் மனைவிக்குப் பரந்த மனம்! என் குழந்தையை வளர்க்கிறாள் தன் குழந்தையாக! இதற்காகவே தான் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்றும் நினைக்கிறாள்! இப்படியும் ஒரு பெண்ணைப் பார்த்திருக்கிறீர்களா?" என்று பெருமையுடனும் கர்வத்துடனும் சொன்னான்.

அவளைப் பார்த்துச் சிரித்தான் அவள் முன்னாள் கணவன்! அவனுக்கும் அவளுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் அது! அது தான் அவளுக்குக் குழந்தையை கர்ப்பத்தில் சுமக்கும் பாக்கியம் இல்லை என்பது! அவள் கர்ப்பப் பைக்கு ஒரு குழந்தையைத் தாங்கும் வல்லமை இல்லை. அவளால் அவன் வம்சம் தழைக்க ஒரு குழந்தையைப் பெற்றுத் தர முடியாது!  ஏதோ ஒரு விபத்து ஏற்பட்ட போது இது குறித்து அவளுக்குத் தெரிய வந்தது. அவனிடமும் அதைச் சொல்லி இருந்தாள். ஆனால் அவன் இதைக் கொஞ்சமும் லட்சியம் செய்யவில்லை.  திருமணம் ஆவதற்கு முன்பே  இது தெரிந்தே தான் அவள் மேல் கொண்ட அழியாக் காதலினால் அவளைத் திருமணம் செய்து கொண்டான் அவன். அவளிடம் அன்பாகவும் இருந்தான். ஒரு நாள் கடிந்து ஒரு சொல் சொன்னதில்லை! ஆனால் அவளோ! அவன் பெற்றோர் இவர்களுடன் வாழ வந்தபோது அவர்களை எவ்வளவு கேவலப் படுத்தி இருப்பாள்! அவர்களும் அவளை ஒரு வார்த்தை சொன்னதில்லை! அவள் கணவனும் இந்தக் குறையைச் சுட்டிக் காட்டியதே இல்லை. பெற்றோரிடம் கூட இதைக் குறித்து அவன் சொல்லி இருக்கவில்லை! ஆனால் இப்போது! அவனை விட்டு விலகி வந்தாயிற்று. இது தான் சாக்கு என்று அவளைக் காட்டிக் கொடுத்து விடுவானோ! பயத்துடன் அவள் உட்கார்ந்திருந்தாள். அவள் முகம் பயத்தில் வெளுத்தது. கைகள் நடுங்கின

ஆனால் அவனோ மிகவும் சாவதானமாக அவளைப் பார்த்து,
"அப்படியா, திருமதி மோகன், உங்கள் பெருந்தன்மையான மனம் யாருக்கு வரும்? உங்கள் கணவரின் குழந்தையை நீங்கள் வளர்த்து வருவது உண்மையிலேயே மிகவும் அரிதான ஒன்று. அதுவும் உங்கள் சொந்தக் குழந்தையைப் போலவே வளர்க்கிறீர்களாமே! உங்களைப் போன்றவர்கள் இருப்பதால் தான் நாட்டில் மழையே பெய்கிறது!" என்றான் அவ்ளைப் பார்த்து. அவளைத் தெரிந்ததாகவே காட்டிக் கொள்ளாமல் பேசிய அவனைப் பார்த்து அவள் கண்கள் நீரை மழையாக வர்ஷிக்க அதைக் கண்ட அவள் கணவன் கண்களிலும் கண்ணீர் வர, அவள் முன்னாள் கணவனின் கண்களும்   கண்ணீரால் நிறைந்தன. அதன் காரணம் அவளுக்கு மட்டுமே தெரியும். அவளை இழந்த பின்னாலும் இன்னொருத்தியை நினைத்துக் கூடப் பார்க்காமல் வாழ்ந்து வரும் அவன் முன்னே அவள் மிகச் சிறியவள்! தன்னை மிக உயர்ந்த இடத்தில் தூக்கி வைத்துவிட்டானே! இதை எண்ணியதும் தன் கண்களில் பொங்கி வரும் கண்ணீரை அடக்க அவள் மிகச் சிரமப்பட்டாள்! அவர்களும் பொங்கி வரும் கண்ணீரை அடக்கமுடியாமல் சிரமப்பட்டார்கள். 

Friday, June 16, 2017

சிகரி போட்ட கட்சி அங்கே! சிகரி போடாத கட்சி இங்கே! :)

ஹிஹிஹி, நாங்க சிகரி போட்ட காஃபியே சாப்பிடறதில்லை! சுத்தமான காஃபி தான்! நீங்க சொல்லும் அதே கடுக்காய் டேஸ்டில் தான்! நிறமெல்லாம் சந்தன நிறமா இருக்கும்! அதுவும் நல்ல பசும்பால் என்றால் எங்க வீட்டுக் காஃபியை அடிச்சுக்க முடியாது!

(என்னோட கண்ணே பட்டுதோ என்னமோ இப்போப் பால் பாக்கெட் தான் வாங்கறோம்! காஃபி சுமார் ரகம் தான்)

Coffee Day? மாசத்துக்கு நூறு கிராம்காஃபி பவுடர் போதும்! :) வெந்நீர் விட விடத் திக்காக இறங்கிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே இருக்கும்! :)

பீபரி, ஏ காஃபியோடு சேர்த்து டிகாக்‌ஷன் திக்காக இறங்க ரொபஸ்டா சேர்க்கலாம். நாங்க கொட்டை வாங்கி அரைக்கிறச்சே இப்படித் தான் போட்டிருக்கோம். இப்போ பீபரி 70%+30% ஏ காஃபி!  (முன்னெல்லாம் உருண்டைக் கொட்டை, தட்டைக் கொட்டை என்பார்கள். இப்போ உருண்டைக் கொட்டையே வரதில்லைனு நினைக்கிறேன். அதோடு இல்லாமல் ரேஷன் கார்டிற்குக் காஃபிக் கொட்டை கொடுத்துட்டு இருந்தாங்க! அப்புறமா அதுவும் நின்னு போச்சு!

மும்பை, டெல்லியிலும் பார்த்துட்டேன். :) சென்னையிலும்! :) இங்கே ஶ்ரீரங்கத்தில் பத்மா காஃபி ரொம்ப உயர்வாச் சொல்வாங்க. அங்கேயும் வாங்கிப் பார்த்தோம். கொட்டையை அதிகமா வறுக்கிறாங்க! எங்களுக்கு வறுத்து அரைத்தே சாப்பிட்டு வழக்கம் என்பதாலோ என்னமோ கொஞ்சம் அதிகமா வறுபட்டாலும் தீய்ந்த வாசனை வராப்போல் ஓர் எண்ணம்! ஆகையால் இங்கே வேறொரு கடையில் எங்களுக்கு நேரே வறுத்து அரைத்துத் தருவாங்க! :)

கும்பகோணத்தில் எந்தத் தெரு? அடிக்கடி போவோம். மோகன் காஃபி? முயற்சி செய்யறோம்

(மடத்து தெரு. காவேரி பழைய பாலக்கரைக்கு அருகில். வெளி நாட்டுக்கெல்லாம் அனுப்புகிறார்கள்.) நண்பர் குறிப்பிட்டது!

 நீங்க சொல்வது சரியே! காஃபி கொட்டையைப் பொறுத்தே காஃபியின் சுவை! யு.எஸ்ஸில் கொலம்பியன் காஃபி!


காஃபி க்கான பட முடிவு


முகநூலில் நேத்திக்கு (?) கே.ஜி.ஜவர்லால் காஃபிக்குச் சிகரி போட்டே ஆகவேண்டும் என்று சொல்லி இருந்தார். அதுக்கு எழுதின கருத்துரைகள் மேலே! காஃபி பத்தி நிறையப் பதிவு எழுதிட்டேன்! ஆகையால் மேற்கொண்டு சொல்லாமல் சும்மாக் கருத்தை மட்டும் பதிஞ்சிருக்கேன். அதிலும் நான் சொன்னவை மட்டுமே!  என் ஓட்டு சிகரி கலக்காத காஃபிக்கே!


காஃபி  இங்கே காஃபி பற்றி எழுதிய ஓர் பதிவு!

தொடர்ச்சி

ஒரு வாய்க் காஃபி  காஃபி பத்தி 2006 ஆம் வருஷம் எழுதினது! 

Wednesday, June 14, 2017

ப்ளாஸ்டிக்கில் அரிசி! ஓர் உண்மை!

டூப். டூப் டூப் பிளாஸ்டிக் சேர், பிளாஸ்டிக் தட்டு என்றெல்லாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். அதென்ன பிளாஸ்டிக் அரிசி?
நல்ல பாம்புக்கும் ‘நல்லது’க்கும் எப்படி சம்பந்தம் கிடையாதோ... பிளாஸ்டிக் சர்ஜரிக்கும் பிளாஸ்டிக்கும் எப்படி தொடர்பு கிடையாதோ... அதுபோல்தான் பிளாஸ்டிக் அரிசிக்கும் பிளாஸ்டிக்குக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பிளாஸ்டிக் அரிசி என்பது பிளாஸ்டிக்கில் செய்யப்படுவது இல்லை.
அப்படி என்றால் பிளாஸ்டிக் அரிசி என்பது என்ன?
அரிசி அரவை ஆலைகளில் நெல்லை அரைத்து அரிசி எடுக்கும் போது, குறிப்பிட்ட அளவிலான அரிசி நொறுங்கி குருணையாக மாறும். கிராமப்புறங்களில் இந்த குருணையை கோழிகளுக்கு தீவனமாக போடுவார்கள்.
ஆனால் எந்த புண்ணியவானோ, இந்த குருணையை ஏன் கோழிகளுக்கு வீணாக தீவனமாக போடவேண்டும் என்று யோசித்து இருக்கவேண்டும். அதன் விளைவாக உருவானதுதான் இந்த பிளாஸ்டிக் அரிசி.
குருணை அரிசியுடன் உருளைக்கிழங்கு, சீனி கிழங்கு என அழைக்கப்படும் சக்கரவள்ளி கிழங்கு, ரசாயனம் (போரிக் ஆசிட்), தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து எந்திரத்தில் போட்டு அரைக்கிறார்கள். நன்றாக அரைக்கப்பட்டு கூழ் வடிவத்துக்கு வந்ததும் அதை ஊற்றி உலர வைத்து கிட்டத்தட்ட காகிதம் போல் மாற்றுகிறார்கள். அந்த காகித தகடு நன்றாக உலர்ந்ததும், அதை எந்திரத்தில் கொடுத்து அரிசி போல் சிறு சிறு துண்டுகளாக நொறுக்குகிறார்கள். அப்படி நொறுக்கப்படும் துண்டுகள் பார்ப்பதற்கு உண்மையான அரிசி போலவே இருக்கும். ஒரிஜினல் அரிசிக்கும் இந்த போலி அரிசிக்கும் உள்ள வித்தியாசத்தை யாராலும் அவ்வளவு எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது.
எப்படி மரவள்ளி கிழங்கில் இருந்து சவ்வரிசி தயாரிக்கப்படுகிறதோ, அதுபோல்தான் இந்த பிளாஸ்டிக் அரிசியும் தயாரிக்கப்படுகிறது. மற்றபடி பிளாஸ்டிக்குக்கும் இந்த அரிசிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
இப்படி பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கும் முறை பற்றிய வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை உண்டுபண்ணியது. அதைத்தான் பிளாஸ்டிக் அரிசி... பிளாஸ்டிக் அரிசி... என்று சொல்லி பீதியை ஏற்படுத்தி விட்டார்கள்.
தெலுங்கானா மாநிலத்தில் பல இடங்களில் கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாகவும் தகவல் பரவியது. இதைத்தொடர்ந்து அங்குள்ள அரிசி அரவை ஆலை அதிபர்கள் சங்கத்தினர், குருணை அரிசியை பயன்படுத்தி மேற்கண்ட முறையில் அரிசி தயாரிப்பதைத்தான் பிளாஸ்டிக் அரிசி என்கிறார்கள் என்றும், மற்றபடி பிளாஸ்டிக் அரிசி என்ற ஒன்று கிடையவே கிடையாது என்றும் விளக்கம் அளித்தனர்.
பிளாஸ்டிக்கில் பாட்டில், விளையாட்டு சாதனங்கள் போன்ற பல பொருட்களை தயாரிக்கலாம். ஆனால் அரிசி தயாரிப்பது என்பது நெல் விளைவிப்பதை விட அதிக செலவு ஆகும். எனவே யாரும் அந்த விபரீத காரியத்தில் இறங்கி கையை சுட்டுக்கொள்ள மாட்டார்கள் என்பது நிபுணர்கள் கருத்து.
மேலும் பிளாஸ்டிக்கில் அரிசி தயாரிக்கப்பட்டால் அதை வேகவைக்கவும் முடியாது, சாப்பிடவும் முடியாது. வாயில் வைக்கும் போதே தெரிந்துவிடும்.
எனவே குருணை, உருளைக்கிழங்கு மாவு, போரிக் ஆசிட் ஆகியவற்றை சேர்த்து தயாரிக்கப்பட்ட அரிசியைத்தான் பிளாஸ்டிக் அரிசி என்று கூறி மக்களிடம் பீதியை ஏற்படுத்திவிட்டார்கள். பிளாஸ்டிக் அரிசி பார்ப்பதற்கு உண்மையான அரிசியைப் போன்றே இருந்தாலும், போலி அரிசி உடலுக்கு நல்லது அல்ல. சமைக்கும் போதே அதன் யோக்கியதை தெரிந்துவிடும்.
தமிழகத்திலும் இந்த பிளாஸ்டிக் அரிசி விவகாரம் தலைதூக்கி மக்களிடம் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சில இடங்களில் கடைகளில் விற்கப்படும் அரிசியை உணவுத்துறை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்து இருக்கிறார்கள்.
தமிழகத்தில் அசல் அரிசியே நன்றாக இருக்கும் போது பிளாஸ்டிக் அரிசி நுழைவதற்கு வாய்ப்பு இல்லை என்றும், எங்காவது பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.
இந்த பிளாஸ்டிக் அரிசி விவகாரம் தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் ஏற்கனவே பொதுநல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டு இருக்கிறது.

நன்றி Ayyavaiyer Gopu

நேற்று முகநூலில் அய்யாவையர் கோபு என்னும் பெரியவர் மேற்கண்ட பகிர்வைப் பகிர்ந்திருந்தார். உண்மை நிலவரம் அனைவரும் அறியும் பொருட்டு இதை இங்கேயும் பகிர்ந்திருக்கிறேன். உண்மையில் ப்ளாஸ்டிக் அரிசி  என நாம் நினைக்கும் ப்ளாஸ்டிக்கைச் சமைத்தால் சூடு தாங்காமல் உருகி விடும். அதே போல் தொலைக்காட்சிகளிலும் ஒரு சில ஊடகங்களிலும் முகநூல் வாட்சப் குழுமங்களிலும் ப்ளாஸ்டிக் கிண்ணங்களில் இட்லி வார்ப்பதாகவும் கூறுகின்றனர். அதுவும் இயலாத ஒன்றே என நினைக்கிறேன். ப்ளாஸ்டிக் கிண்ணங்களை அடுப்பில் வைத்துச் சூடு செய்தால் உருகும் தன்மை கொண்டது!  அப்புறமா இட்லி எப்படிச் செய்ய முடியும்? பாலிதீன் கவர்களில் செய்வதாகவும் துணிக்குப் பதிலாக அதைப் போடுவதாகவும் சொல்கின்றனர்.

பாலிதீன் கவர்கள் அவ்வளவு தரமானதாக இருப்பதில்லை. தரமான பாலிதீன் பைகளிலேயே (ஜிப்லாக் பைகள்) ஒரு முறை  வாழை இலை இல்லாமல் ஜிப்லாக் பையில் வைத்து  போளி தட்டிவிட்டு ஞாபகக் குறைவாகப் பையை நீக்காமலேயே தோசைக்கல்லில் போட்டு விட்டேன். உடனடியாக கவனம் வந்து அதை எடுக்க முற்பட்டபோது தோசைக்கல்லில் ஒட்டிக் கொண்டு வரவே இல்லை!  சூட்டில் ஒட்டுக் கொண்டு விட்டது. சூட்டை அதிகரித்து அதைச் சுரண்டித் தான் எடுத்தேன். ஆகவே ப்ளாஸ்டிக் கிண்ணங்களிலோ அல்லது பாலிதீன் கவர்களிலோ இட்லி வார்ப்பது என்பது நம்பவும் முடியவில்லை. நேரில் பார்த்தால் தான் புரியும். தரமான பைகளே சூட்டில் ஒட்டிக் கொள்கின்றன.  இட்லிக்கடைகள் நடத்துபவர்கள் தரமான பாலிதீன் கவர்களுக்கு என்ன செய்வார்கள்? கிடைப்பதைத் தானே பயன்படுத்த முடியும்? அவை உருகாமல் இருக்குமா?

ஹோட்டல்களில் சுடச் சுட சாம்பார், காய்கள் கொடுத்தாலே அந்தப் ப்ளாஸ்டிக் பைகள் சூடு தாங்காமல் சுருங்கி விடுகின்றன. சில சமயம் பைகளில் துவாரம் விழுகின்றது. கூடியவரை பாத்திரம் எடுத்துச் செல்வதே நல்லது. ஆகவே ப்ளாஸ்டிக்கில் சமைக்கலாம் என்பதை உடனே நம்பி விடாமல் யோசித்து நேரில் கண்டறிந்து கொண்டு நம்புங்கள்! கூடியவரை ப்ளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கவும். 

Tuesday, June 13, 2017

வீடு!இல்லம்! இனிய இல்லம்! :(

"கல்யாணம் பண்ணிப்பார்! வீட்டைக் கட்டிப்பார்!" அப்படினு சொல்வாங்க. நாங்க கல்யாணமும் பண்ணிப் பார்த்தோம். வீட்டையும் கட்டிப் பார்த்தோம். அதுவும் அம்பத்தூரில் உள்ள எங்கள் வீட்டைக் கட்டுவதற்கு நாங்க பட்ட பாடு! முதல்லே இடம் வாங்க அலைச்சல்! முதலில் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து வாங்க எல்லா ஏற்பாடுகளும் பண்ணிவிட்டுக் கடைசியில் அந்த இடத்தை வாங்கினால் அது அரசால் அங்கீகரிக்கப்பட்ட மனைகள் பட்டியலில் இல்லை என்பதால் அரசுக் கடன் வாங்கிக் கட்ட முடியாது என்று சொல்லிவிட்டார்கள். மீண்டும் நிலம் தேடும் படலம் தொடங்கிக் கடைசியில் இப்போ வீடு கட்டி இருக்கும் இடம் தேர்வு செய்தார் நம்ம ரங்க்ஸ். அவர் எல்லாம் முடிவு பண்ணிட்டுக் கூட்டிப் போய்க் காட்டினார்.  எனக்கு அப்போல்லாம் இந்த விஷயத்தில் சுத்தமாக எதுவும் தெரியாது. ஆனாலும் உள் மனம் என்னமோ அம்பத்தூர் வேண்டாம் என்றே இடைவிடாமல் புலம்பல்! வேறே எங்கே வாங்குவது? நீ தேடிப் போய்க் கண்டுபிடி! மதுரையிலே எல்லாம் வாங்க முடியாதுனு ரங்க்ஸின் நக்கல்! ஆகவே இடத்தைப் பார்த்ததும் ஒண்ணுமே புரியாட்டியும் தலையைப் பெரிசா ஆட்டியாச்சு!  அதை நன்றாக ஆராய்ந்து 1980 செப்டெம்பரில் அதைப் பதிவும் செய்தார் ரங்க்ஸ். அன்னிக்கு வீட்டில் அல்வாக் கிளறி உறவினருக்கு விநியோகித்தது இன்னமும் நினைவில் இருக்கு.

78 ஆம் வருடம் தான் நாத்தனார் கல்யாணம் முடிந்திருந்ததால் அந்தக் கடனே இருந்தது என்பதால் உடனடியாக வீடு கட்டும் வேலையை ஆரம்பிக்க முடியலை. எங்களிடம் இருந்த லூனா வண்டியை விற்கும்படி ஆயிற்று. அந்த வண்டியை விற்றுவிட்டுக் கொஞ்சம் பணம் போட்டுக் கிணறு மட்டும் எடுத்தோம். 30 அடிக்குள்ளாகத் தண்ணீர் வந்து தண்ணீரும் சுவையாக இருந்தது என்னமோ உண்மை! பூமி பூஜையை மட்டும் போட்டோம். அதுக்குள்ளே அடுத்தடுத்துப் பிரச்னைகள். எனக்கு மூலம் அறுவை சிகிச்சை! மைத்துனரின் திருமணம் என்று தொடர்ச்சியான நிகழ்வுகள். மைத்துனரின் திருமணத்தை ஒட்டிப் பெரிய வீடு வேண்டும் என்று தேடியதில் இப்போ வீடு கட்டி இருக்கும் தெருவிலேயே காலியாக இருந்த ஒரு வீட்டுக்குக் குடித்தனம் போனோம். பின்னால் வீடுகட்டும்போது கிட்ட இருக்கணும் என்னும் காரணமும் சேர்ந்து தான்! அங்கே போயும் முதல் இரண்டு வருடங்கள் வீடு கட்ட எந்த முயற்சியும் செய்ய முடியலை! அரசு வீடு கட்டும் கடன்கொடுக்கும் வசதியைத் தாற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்ததே காரணம்! அதுக்குள்ளே வீட்டிற்கான திட்டங்கள் போடப்பட்டு அம்பத்தூர் டவுன்ஷிப்பில் கொடுத்து(அப்போ டவுன்ஷிப் தான்) அதற்கான அங்கீகாரங்கள் எல்லாம் வாங்கியாச்சு.

அப்போ சென்னையில் முக்கிய அலுவலகம் இல்லை என்பதால் பெண்களூரில் உள்ள அலுவலகத்துக்கு இருமுறை போய்ப் பார்த்தார் நம்ம ரங்க்ஸ். நம்மால் இயன்றது கடவுளைப் பிரார்த்திப்பது தான்! ஆகவே நான் சந்தோஷி மாதா விரதம் இருக்க ஆரம்பித்தேன். கடுமையான விரதம். எப்படியோ பதினாறு வாரங்கள் தொடர் சோதனைகளுடன் முடித்தேன். ஒருவழியாகக் கடனுக்கும் அனுமதி கொடுத்து முதல் தவணையும் வர இருந்தது.  இதற்குள்ளாக வீட்டைக் கட்டுவதற்கெனப் போடும் பூமி பூஜையையும் இருமுறை போட்டிருந்தோம்.  இரண்டாம் முறை போட்டதுமே கடன் கிடைத்தது. வீட்டிற்கான அஸ்திவாரம் போட வேண்டும். அம்பத்தூரிலேயே தெரிந்த ஒரு கட்டிடம் கட்டும் நபரைத் தேர்ந்தெடுத்து வேண்டிய ஏற்பாடுகள் செய்து அஸ்திவாரம் போடுவதற்கான செலவுகளைப் பட்டியலிட்டுத் தேவையானவற்றைச் செய்து அஸ்திவாரமும் போட்டோம். அப்போதெல்லாம் அஸ்திவாரம் கட்டிடம் தான்! உள்ளே மூன்றடிக்கு மேல் தோண்டிக் கட்டிடம் கட்டி மேலேயும் இரண்டடிக்கு மேல் எழுப்பிச் சுற்றிலும் கனம் தாங்குவதற்கான "பீம்" கொடுத்து எனக் கவனமாக எல்லாமும் செய்தோம்.


 .

வீட்டின் வாசலில் உள்ள வேப்பமரம். போன வருஷம் எடுத்த படம்.  தெருவுக்கே நிழல்கொடுக்கிறது.



இது போனவருஷம் ஆகஸ்டில் போயிருந்தப்போ வீட்டை ஆள் வைத்து நன்கு சுத்தம் செய்திருந்தோம். ஆகையால் குப்பைகள் இல்லை. இப்போ முன் வாசல் தரையெல்லாம் பெயர்ந்து ஒரே குப்பையும், கூளமுமாகக் கிடக்கிறது. இலைகளை அன்றாடம் வாரிக் கொட்டி எரித்துக் கொண்டு வந்தோம். இப்போ எங்கே பார்த்தாலும் இலைகள், குச்சிகள், மேலே ஷெட் கூரை பிய்ந்து தொங்குகிறது. இத்தனைக்கும் வீட்டில் குடித்தனம் இருக்கிறார்கள்! :(

Sunday, June 11, 2017

நினைத்தேன், எழுதுகிறேன்! :)

நல்லெண்ணெய் கிலோ 132 ரூ

கடலை எண்ணெய் கிலோ 80 ரூ

தேங்காய் எண்ணெய் கிலோ 200 ரூபாய்

இன்றைய எண்ணெய் விலை நிலவரம் இது!  மற்றபடி காய்கறிகள் விலை குறைந்த பட்சமாக 30 ரூபாயாக இருக்கிறது. போன வாரம் 20 ரூக்கு விற்ற நாட்டுத் தக்காளி இந்த வாரம் 30 ரூ ஆகிவிட்டது. வாழை மரங்கள் அதிக அளவில் சேதம் அடைந்ததாலும் தண்ணீர் இல்லாததாலும் வாழை இலைக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது!  வாழைத் தண்டு முன்னர் 5 ரூக்குக் கொடுத்தது இப்போது பத்து ரூபாய். ஆனால் எங்களுக்கு அது 2 நாட்களுக்கு வரும். பால்காரர் பால் விலையை 35 ரூக்கு ஒரு தரம், 40 ரூக்கு ஒரு தரம் என விலை ஏற்றம் பண்ணி விட்டார். இரண்டுமே தரம் குறைந்த பாலாக இருந்தது. எங்கள் வாழ்க்கையிலேயே முதல் முறையாக இப்போது ஆவின் பாக்கெட் பால் வாங்குகிறோம். வாடிக்கையாகப் பால் கொடுக்கும் பால்காரர் ஏகப்பட்ட கடன் வைத்து விட்டு எங்கோ காணாமல் போய்விட்டார். நாங்க அம்பேரிக்கா போறதுக்கு முன்னரே எங்களுக்கு 2,500 ரூக்குக் கிட்டத்தட்டக் கொடுக்கணும்! அப்போவே வேறே பால்காரரை ஏற்பாடு செய்துட்டு அவர் விலகிக் கொண்டார். ஆனால் தினம் தினம் இங்கே வந்து கொண்டிருந்தார். விரைவில் பணத்தைத் திருப்பி விடுவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் கடந்த ஒரு மாதமாக ஆளையே காணோமாம்! பலருக்கும் பணம் பாக்கி என்றார்கள்.


வந்து வீட்டைச் சுத்தம் செய்தது போதாமல் ஏசி, குளிர்சாதனப் பெட்டி, கழிவறைக்குழாய்கள் எனத் தொந்திரவு கொடுத்தனவற்றை எல்லாம் சரி செய்தாயிற்று. எரிவாயுவுக்கு வந்த அன்று பதிவு செய்தோம். உடனே வந்து விட்டது. ஆனால் சிலிண்டர் கொண்டு போடுபவர் தான் மாலை நேரம் ஆகிவிட்டபடியால் மறுநாள் காலை கொண்டு வந்தார். ஏற்கெனவே இருந்த சிலிண்டரில் எரிவாயு இருந்ததால் பிரச்னை இல்லை!

4ஆம் தேதியிலிருந்து தான் அம்பேரிக்காவிலிருந்து கொண்டு வந்த பெட்டிகளைப் பிரித்து எல்லாவற்றையும் அதனதன் இடத்தில் வைத்தோம். இந்த வேலை ஒருவழியாக நேற்றோடு முடிந்தது. இப்போ ஜெட்லாக் இல்லை.   மதியம் ஓய்வாகப் படுத்தால் தூக்கமெல்லாம் இப்போ வரதில்லை. வழக்கம் போல் கொட்டுக் கொட்டு தான்! குட்டிப் பேத்தி ஸ்கைபில் எங்களைப் பார்த்துவிட்டு சந்தோஷம் அடைந்தாலும் தூக்கிக்கவில்லை என்பது தெரிந்து அழுகிறாள். மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது! சுற்றிச் சுற்றிப் பார்த்துத் தேடுகிறாள். :(  இந்த இடைவெளியில் கிடைத்த நேரத்தில் கடுகு சார் அனுப்பிய "கமலாவும் நானும்" புத்தகம் படித்து முடித்தேன். ஏற்கெனவே புஸ்தகா மூலம் வெங்கட் அனுப்பிய "பஞ்ச துவாரகா!" மற்றும் மோகன் ஜி தபாலில் அனுப்பிய "பொன் வீதி" ஆகியன படித்தாயிற்று. பஞ்ச துவாரகா புத்தகத்துக்கு ரஞ்சனி கொடுத்திருக்கும் சிறப்புரையை விட நாம எழுதினால் நன்றாகவா இருக்கும் என்று தோன்றுகிறது. கடுகு சாரை விமரிசிக்கும் தகுதி நமக்கெல்லாம் இல்லை. எவ்வளவு பெரிய மனிதர்! எத்தனை பேரை அறிந்து வைத்திருக்கிறார்! நம்மோடெல்லாம் அவர் பழகுவதே நமக்குப் பெருமை!

அடுத்து தம்பி மோகன் ஜியின் புத்தகமும்! ஏற்கெனவே பலரும் அலசித் துவைத்துக் காயப் போட்டு விட்டார்கள்! அதிலும் வைகோ சார் ஒவ்வொன்றாக அலசுகிறார். இதை விட நாம் என்ன பெரிதாகச் சொல்லப் போகிறோம்.  அவ்வப்போது மோகன் ஜியின் கதைகளைப் படித்து வந்தாலும்
"பாண்டு" கதையிலிருந்து தான் அவரோட பதிவுக்குத் தொடர்ந்து போக ஆரம்பித்தேன்.  தம்பியின் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு முத்து. அதுவும் ஸ்வாதி முத்யம்! ஸ்வாதி நக்ஷத்திரத்தன்று ஆழ்கடலில் உள்ள சிப்பிகள் மேலெழுந்து வருகையில் அதனுள் விழும் அபூர்வமான மழைத்துளியைப் போல், அதிலிருந்து உருவாகும் முத்துக்களைப் போன்றவை இந்தக் கதைகள்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானது.  இதை எழுதுகையில் தினமலர் வாரமலரில் முத்துக்கள் எடுப்பதைக் குறித்து மார்க்கோ போலோ எழுதினதைப் போட்டிருக்கிறார்கள் என்று அதைக் கொடுத்து என்னைப் படிக்கச் சொன்னார் ரங்க்ஸ். இங்கே நான் முத்தைப் பற்றி எழுதியதும் முத்துக்குளிக்கிறவங்க பத்தி ரங்க்ஸ் படிச்சதும் ஒரே சமயத்தில்! :))))

ஏழாம் தேதியன்று காலை சென்னை கிளம்பிப் போய் உறவினர்களில் முக்கியமாகப் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துவிட்டு அன்றிரவு அம்பத்தூரில் அண்ணா வீட்டில் தங்கி விட்டு மறுநாள் காலை ஏழரைக்குக் கிளம்பி ஶ்ரீரங்கம் வந்தாச்சு. அம்பத்தூரில் எங்க வீட்டில் குடி இருப்பவர் வீட்டை வைத்திருக்கும் அழகைக் கண்டால் கண்ணீர் வருது! அவ்வளவு மோசமாக வைத்திருக்கிறார்.  இதை விற்றுவிடலாம் என்று போனவருஷம் முடிவு பண்ணிச் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இப்போதோ நிலங்கள் விற்பது, வாங்குவது போன்றவற்றில் முதலீடு செய்யக் கட்டுமானத் துறையில் இருப்பவர்கள் யோசிப்பதாலும் வியாபாரம் மந்தமாக இருக்கிறது என்கிறார்கள். அதோடு அரசாங்கமும் வழிகாட்டும் விலையைக் குறைத்துள்ளது. ஆகவே விற்பவர்கள் இப்போது விற்றால் நல்ல விலை கிடைக்காது என்கிறார்கள். அந்த வீட்டில் கழித்த நாட்களை நினைத்தால் ஒரு பக்கம் சந்தோஷமாகவும் இன்னொரு பக்கம் வருத்தமாகவும் இருக்கிறது. என்றாலும் நம் வீடு இவ்வளவு மோசமாக இருக்கே என்னும் எண்ணம் மனதில் வருத்தம் அளிக்கிறது. பார்க்கலாம்! கடவுள் இதற்கும் ஒரு தீர்வைக் கட்டாயம் வைத்திருப்பார். அது விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறோம்.!

Saturday, June 03, 2017

ஒரு மாதிரிச் சமாளிச்சாச்சு!

நாங்க யு.எஸ். போன பதினைந்து நாட்களுக்கெல்லாம் மும்பையில் என் மாமியார் இறந்து விட்டார். யு.எஸ். போகும் முன்னர் மும்பை சென்று அவங்களைப் பார்த்து விட்டே திரும்பி இருந்தோம். வயது 93க்கு மேல் ஆகி விட்டது. எப்போ வேணாலும் என எதிர்பார்ப்புடன் இருந்தாலும் கிளம்பும்போது உடல் நலமாக இருப்பதாகத் தெரிந்து கொண்டே கிளம்பி இருந்தோம். அங்கேயும் நாங்கள் போகவேண்டிய சூழ்நிலை. ஆனால் அங்கிருந்து எங்களால் உடனே திரும்ப முடியவில்லை. மாமியாருக்கு ஏற்கெனவே உடம்பு முடியலைனாலும் பெரும்பாலும் வயதானதின் தளர்வே என்று மருத்துவர்கள் சொன்னார்கள். எல்லா உறுப்புக்களும் சரியாகவே வேலை செய்வதாகவும் சொன்னார்கள். சரி எப்படியும் ஆறு மாசம் தாங்கும்னு நினைச்சோம். ஆனால் தாங்கலை! அப்போத் தான் போயிருக்கோம். சரியாப் பதினைந்து நாட்களே! உடனே திரும்புவதெனில் பல பிரச்னைகள்! மனப் போராட்டங்கள்! குழந்தையைப் பிரியணும்! அதோட நாங்க போனதே மருமகளுக்கு உதவியாக இருக்கணும்னு தான்! பதினைந்து நாட்களில் குழந்தையும் ஒட்டிக் கொண்டு விட்டாள்.

அப்படியும் டிக்கெட்டுக்கு முயற்சித்தோம். எங்க டிக்கெட் சென்னைக்கு வாங்கி இருந்தது. நாங்க போக வேண்டியது மும்பை! அது ஒரு பிரச்னை என்றால் இம்மாதிரிக் காரியத்துக்கு எனக் கிளம்பி விட்டுப் பின்னர் திரும்பி ஹூஸ்டனுக்கு வந்தால் தான் மனத் திருப்தியாக இருக்கும் போல இருந்தது. ஆனால் இங்கே வந்துவிட்டால் பத்துநாட்கள் காரியம் முடிந்தாலும் அடுத்தடுத்து மாதாந்திரக் காரியங்கள் இருக்கும். அதையும் விட முடியாது. என்ன செய்வது எனக் குழம்பிக் கொண்டு இருந்தோம். திரும்ப ஒரு மாசத்துக்குள்ளாக ஹூஸ்டன் வந்தால் விசா பிரச்னை! பல்வேறு மனக்குழப்பங்களுக்கிடையே எங்கள் குடும்ப புரோகிதரைக் கலந்து ஆலோசித்தோம். அவர் போனது போனதாகவே இருக்கட்டும். ஆறு மாசங்களையும் முடிச்சுட்டு வந்துடுங்க. திரும்பி வந்து கர்மாவுக்கான காரியங்களைப் பண்ணிக்கலாம். சாஸ்திரத்தில் அதற்கான விதிகள் உண்டு. இம்மாதிரி நடந்ததற்கான முன்மாதிரிகளும் உண்டு என்று சொன்னதோடு ஶ்ரீராமரே தன் அப்பா தசரதனுக்கு அவர் இறந்து பல நாட்கள் கழித்தே பரதன் மூலம் தகவல் தெரிந்து கடைசிக் காரியங்களைச் செய்தார் என்பதையும் எடுத்துக் கூறினார்.

என்றாலும் மனம் சமாதானம் ஆகவில்லை. ஆனால் அதோடு புரோகிதர் எங்களைக் கோயிலுக்குப் போகக் கூடாது என்றும் யாரையும் நீங்களாகப் போய்ப் பார்க்க வேண்டாம் என்றும் சொல்லி இருந்தார். ஆகவே இம்முறை எந்தக் கோயிலுக்கும் போகவே இல்லை. வேறே எங்கேயும் போகவே இல்லை. நண்பர் ஈரோடு நாகராஜ் ஹூஸ்டனுக்கே வந்திருந்தும், எங்க வீட்டிலிருந்து இரண்டு, மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தார் என்பது தெரிந்தும் போய்ப் பார்க்க மனம் இடம் கொடுக்கவில்லை. அவரிடம் என் நிலைமையைத் தெளிவாக்கி விட்டேன். அவரும் சரிதான் என ஒத்துக் கொண்டார். பல ஆண்டுகளாகச் சந்திக்க நினைத்தது! கிட்ட இருந்தும் சந்திக்க முடியவில்லை. கச்சேரிகளுக்கு அழைப்புக் கொடுத்தும் கோயில் வளாகங்களில் நடந்ததால் போகவும் இல்லை.

அங்கே இருந்த சமயம் நண்பர்கள் யாரையும் தொடர்பு கொள்ளவும் இல்லை. வழக்கம் போல் அம்பி தான் நான் வந்திருப்பது தெரிந்து முதலில் பேசினார். அவரிடம் விஷயம் ஏதும் சொல்லிக்கவில்லை. அம்பி பையருக்குப் பூணூல் போட்டார். அதுக்காக இந்தியா வந்திருந்தார். அதன் பின்னர் நண்பர் டாக்டர் எஸ்கே(சங்கர் குமார்), மற்றும் ஒரு அரிசோனன் ஆகியோர் தொடர்பு கொண்டார்கள். சங்கர் குமாரும் நிலைமையைப் புரிந்து கொண்டு ஆறு மாதம் கழித்துச் செய்து கொள்ளலாம். அதுவரை கோயில்களுக்குப் போகாமல் இருங்கள். என்றே சொன்னார். இங்கே வீட்டில் குழந்தை இருந்ததால் கோயிலில் போய் தெய்வத்தை தரிசனம் செய்ய வேண்டும் என்ற கட்டாயமும் இல்லாமல் போயிற்று.

ஒவ்வொரு நாளையும் ஒரு யுகம் போல் கழித்துக் கொண்டிருந்தோம்.   தப்புப் பண்ணிட்டோமோனு பல நாட்கள் குழப்பிக் கொண்டிருப்போம். திரும்ப ஊருக்குக் கிளம்பும்  நாட்களை எண்ணிக் கொண்டே வந்தோம். இதே நினைப்பு! இந்தியா திரும்பியும் ஆகி விட்டது. வந்த உடனேயே காரியங்கள் ஆரம்பித்தன. இன்றோடு முடிந்தது. மனம் பூரணத் திருப்தி அடையாவிட்டாலும் (சூட்டோடு சூடாகச் செய்வது போல் வருமா) ஓரளவுக்கு மனம் சாந்தி அடைந்திருக்கிறது. இனி மாதாமாதம் செய்வதற்கான உடல் தெம்பையும் மனோபலத்தையும் ஆண்டவன் அருள வேண்டும். அதற்காகப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கோம்.