எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, April 29, 2021

ஆண்டவனுக்குக் கண்ணில்லையா?

 இந்த முறை இரண்டாம் சுற்று கொரோனா புதிய விதத்தில் தாக்குவதோடு இல்லாமல் பலரையும் கொள்ளை கொண்டு போகிறது. எங்கள் உறவின் சுற்று வட்டங்களிலேயே இள வயதுக்காரர்கள் சிலர் இந்தப் புதிய கொரோனா தாக்கத்தில் உயிர் இழந்து விட்டனர். எங்க சுற்றத்தில் ஓர் இளைஞன் இன்று காலை கொரோனா தாக்குதலில் உயிர் இழந்து விட்டார். அதைத் தவிரவும் அம்பத்தூரில் சிநேகிதர் ஒருவரும், பெண்களூரில் தெரிந்த ஓர் பெண்மணியும் இறந்துவிட்டார்கள். அனைவருக்குமே 55 வயதுக்குக் கீழே! அதிலும் அம்பத்தூரில் இருந்த பெண்ணிற்கு லேசாகக் காய்ச்சல் வந்து அந்தப் பெண் உதவி கலெக்டர் என்பதால் தானே கிங் இன்ஸ்டிட்யூட் போய் மருத்துவமனையின் உள் நோயாளியாகச் சேர்ந்து கொரோனா சோதனைக்குக் கொடுத்து அது பாசிடிவ் என வரும் முன்னரே செத்து விட்டார். என்ன கொடுமை இது! ஒண்ணும் புரியலை. ஒரு வாரமா மனசே சரியில்லை. இத்தனை நாட்கள் வீட்டில் ஒண்ணு மாத்தி ஒண்ணு ஏதானும் வேலை இருந்து கொண்டே இருந்தது. அது பரவாயில்லை போல இருக்கு! இப்போதைய நிலைமையை நினைத்தால் ஒண்ணும் சொல்லுவதற்கு இல்லை. மனசு நிறைய வேதனை தான் மிச்சம். 

இறந்த அந்தப் பையருக்கு 80 வயதில் வயது முதிர்ந்த தாய் இருக்கிறார். மிகவும் முடியாதவர். அழக்கூடத் தெம்பில்லாமல் உட்கார்ந்திருக்காராம். இந்த வயதில் புத்திர சோகம்!  உலகில் எத்தனையோ கொடிய நோய்கள் வந்திருக்கின்றன. ஆனால் இது உலகை ஆட்டிப் படைப்பது போல் வேறே ஏதும் ஆட்டிப்படைக்கவில்லை. இதிலிருந்து நமக்கு எப்போது விடிவு? மனச்சோர்வு தான் அதிகம் ஆகிறது. யாரைக் குற்றம் சொல்லுவது? பாதுகாக்கும் ஏற்பாடுகளைப் புறக்கணித்து  நமக்கு நாமே தேடிக்கொண்ட வினை இது! 

Monday, April 26, 2021

அம்மன் அருளாலே!

தீபாவளிக்கு இன்னமும் எத்தனையோ மாதங்கள் இருக்கின்றன. ஆனால் என்னோட டாஷ்போர்டில் தீபாவளி சம்பந்தப்பட்ட கேள்விகள். அதைக்குறித்து எழுது என்கிறது ப்ளாகர். முதல் வருஷம் பி.காம் படிப்பவர்களுக்கு தீபாவளி விடுமுறை முடிந்து வகுப்புகள் ஆரம்பித்துவிட்டனவா என்றொரு கேள்வி. இன்னொன்று உன்னோடு தீபாவளி கொண்டாட யாரையேனும் கூட அழைப்பாயா?  என்பது. தீபாவளிக்குனு பெண், மாப்பிள்ளையைத் தான் அழைப்போம். வேறே யாரை அழைப்பாங்கனு தெரியலை. அடுத்தது இன்னும் விசித்திரமானது. தீபாவளிக்கான விளக்கு அலங்காரங்களை இந்தியத் தபால் துறை மூலம் அனுப்ப முடியுமா? நான் அனுப்பி வைக்கலாமா? என்பது. இந்தக் கேள்விகளை வைத்துப் பதிவு  எழுது என்கிறது போல ப்ளாகர்! இதைத் தவிரவும் பொங்கல் பற்றிய கேள்விகள், அதற்கான பரிசுப்பொருட்கள்/அரசு என்ன கொடுத்தது, என்பதெல்லாமும் கேட்டிருக்கு. கூடவே வழக்கமான கேள்வியாகக் கம்சனின் குரு யார்? தளபதி யார்னும் கேள்விகள்! எல்லாத்தையும் விடச் சிரிப்பு வர வைச்சது என்னன்னா சபரிமலை ஐயப்பன் பற்றிய சீரியல் ஏசியாநெட் தொலைக்காட்சியில் எத்தனை மணிக்கு ஆரம்பிக்கும் என்பதே! 

எனக்குத் தோன்றினாற்போலவே சென்னை ஹைகோர்ட்டுக்கும் தோன்றி இருக்கிறது. இந்த முறை கொரோனா பரவலுக்கு முழுக்காரணம் தேர்தல் கமிஷன் தான் என ஹைகோர்ட்டும் சொல்லுகிறது. குறைந்த பட்சம் பிரசாரங்களிலாவது கட்டுப்பாடு கொண்டு வந்திருக்கணும். தேர்தல் கமிஷன் தான் அதைச் செய்யலைனா, நம்ம அரசியல் தலைவர்களும் எதைப் பத்தியும் கவலைப்படாமல் ஓட்டுச் சேகரிக்க மட்டுமே செய்தார்கள்.  யாருக்குமே கொரோனா பற்றிய கவலையே இல்லை.  தேர்தல் கமிஷன் தான் இம்முறை தமிழ்நாட்டில் கொரோனா பரவியதற்கான முக்கியக் காரணம் என்கிறது ஹைகோர்ட். அடுத்து வட மாநிலங்களில்/(இப்போதெல்லாம் தென் மாநிலங்களிலும் தான் !) கொண்டாடிய ஹோலிப் பண்டிகை. கோயில்களில் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் திருவிழாக்களுக்கு ஏகக் கட்டுப்பாடு விதித்த/இன்னமும் விதிக்கும் மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் தூங்கிக் கொண்டு இருந்தனர்.  அப்புறமாக் கொரோனா பரவிடுச்சே என்றால் என்ன செய்ய முடியும்? எதுக்குக் கட்டுப்பாடு விதிச்சாலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குக்கு முதல்நாள் திறக்கும் மீன் சந்தைக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்க முடியாது. அரசாங்கங்கள் பார்த்துக் கொண்டு தான் இருந்தாகணும்.

ஒரு சிலருக்கு தில்லி, குஜராத், மஹாராஷ்ட்ரா மாநிலங்கள் எந்தத் தேர்தலையும் சந்திக்கவில்லையே அங்கே மட்டும் கொரோனா பரவாமலா இருக்கு என்பது! அங்கேயும் கூட்டங்கள், நெருக்கடிகள், பேருந்துப் பயணங்கள், மற்ற எதையும் மக்கள் தவிர்க்கவில்லை. தனி மனித இடைவெளி கடைப்பிடிக்க மஹாராஷ்ட்ராவில் குறிப்பாக மும்பையில் வாய்ப்பே இல்லை/கொடுக்கவும் இல்லை. எங்க உறவினர் ஒருவர் இருக்கும் குடியிருப்பு வளாகத்தையே மூடி விட்டார்கள். அங்கே இருப்பவர்கள் வேறு இடங்களுக்குப் பெயர்ந்து சென்றிருக்கிறார்கள். கொத்துக் கொத்தாக ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறப்பதும் நேர்ந்திருக்கிறது. எப்போது கொரோனா பரவுதல் அதிகரித்துள்ளதோ அப்போதே ஆக்சிஜன் தேவையும் அதிகம் என்று உணர்ந்து மருத்துவமனையின் அதிகாரிகள் தேவையான ஆக்சிஜனைக் கேட்டுப் பெற்றிருக்கலாமோ? ஒரு சிலர் ஆக்சிஜன் சிலிண்டர் வைத்துக் கொண்டு படுத்திருக்கும் நோயாளிக்கு திடீரென ஆக்சிஜன் வருவது நின்று விட்டதால் மரணம் நேரிட்டது/நேரிடுகிறது என்கிறார்கள். ஆக்சிஜன் சிலின்டரில் இருக்கா இல்லையா என்பது கூடத் தெரியாமலா சுகாதாரத் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்! என்னவோ போங்க!

ஒரு வழியாக வெளிநாடுகளெல்லாம் உதவிக்கரம் நீட்டி இருக்கின்றன. அம்பேரிக்காவும் மருந்துக்கான மூலப்பொருள் ஏற்றுமதியைத் தடை செய்திருப்பதைக் குறித்து யோசித்து இந்தியாவுக்கு அந்தத் தடையை நீக்கலாமா என ஆலோசிப்பதாகச் சொல்லி இருக்கிறது. இந்தியாவுக்கு யாரும்/இந்தியாவிலிருந்து யாரும் அம்பேரிக்காவுக்குப் போக முடியாது. பல நாடுகளும் இந்தியாவுக்கான வருகை/இந்தியாவிலிருந்து செல்தல் ஆகியவற்றை நிறுத்திவிட்டன. எங்க பையர் இந்தியா வரணும்னு துடிச்சுட்டு இருந்தார்! பாவம்! கோவிட் இல்லை எனில் 2020 டிசம்பரிலேயே வந்திருப்பார். இப்போது நைஜீரியாவில்.  அங்கிருந்து வரமுடியுமா என்பதும் தெரியவில்லை. நேர் வழி இல்லை. ஐரோப்பா வந்து தான் வரணும்னு நினைக்கிறேன். முன்னெல்லாம் விசா கிடைக்காமல் குடும்பத்தினர் ஒருத்தருக்கொருத்தர் பார்த்துக்க முடியலையேனு வருத்தமா இருக்கும். இப்போ அந்தப் பிரச்னைகள் எதுவும் இல்லை. இந்தக் கொரோனா வந்து மனிதர்களை ஒருவர் முகத்தை ஒருவர் காணவிடாமல் தடுத்துவிட்டது. அதுவும் இந்த இரண்டாம் முறை மிக அதிகம். ஆனாலும் மக்கள் இன்னமும் உணரவே இல்லை.  இந்தப் பிரச்னைகள் எல்லாம் எப்போது தீர்ந்து நாம் பழைய மாதிரி வாழ ஆரம்பிப்போம் என்பதே தெரியலை/புரியலை.

இன்னிக்குச் சித்ரா பௌர்ணமி. இன்று தான் இங்கே ஶ்ரீரங்கத்தில் கஜேந்திர மோக்ஷம் நடக்கும். அம்மாமண்டபத்திற்கு நம்பெருமாள் வருவார். போன வருஷம் பார்க்கலாம்னு நினைச்சிருந்து பார்க்க முடியலை. கொரோனாவால் தடை. இந்த வருஷமும் அதே தடை நீடிக்கிறது. பெருமாளைப் பார்க்க முடியலை. கோயிலுக்கும் போக முடியலை. எங்க குலதெய்வம் கோயிலை நல்லவேளையாப் போன வாரம் பார்த்துட்டு வந்தோம். கொஞ்சம் தள்ளிப் போட்டிருந்தால் போயிருக்க முடியாது. எல்லாம் மாரியம்மன் அருள் தான்.



பக்கத்துக் கல்யாணச் சத்திரத்தில் அடுத்தடுத்துக் கல்யாணங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. எந்தக் கொரோனாவுக்கும் அவங்க நிறுத்துவது இல்லை. உணவு சமைக்கின்றனர். ஒரே சப்தம்/மிச்ச உணவைக் கொட்டுகின்றனர். யாரையானும் கூப்பிட்டுக் கொடுக்கக் கூடாதோ? அந்த உணவு அங்கேயே கிடந்து நாற ஆரம்பித்து விடுகிறது. எங்க வீட்டில் திறந்த பால்கனி வழியாக அந்த துர்நாற்றம் வந்து முன் ஹாலில் உட்காரவே முடிவதில்லை. இங்கே எங்க அசோசியேஷன் தலைவரும், இன்னும் சிலரும் புகார் கொடுத்ததன் பேரில் இப்போச் செண்டை மேளம் வைக்கும் கல்யாணங்களுக்கு இடம் கொடுப்பதில்லை என நினைக்கிறேன். அப்படியே செண்டை மேளம் வைத்தாலும் வெளியே தெருவிலேயே அடக்கி வாசிக்கும்படி சொல்லி இருக்காங்க போல! சமீபத்திய கல்யாணங்களில் செண்டை மேளமே இல்லை. நாதஸ்வரம், தவில் தான். ஆனால் உணவு வீணாவது தான் மனதை வருத்துகிறது. பெரிய பெரிய பாத்திரங்களில் சமைக்க வேண்டாமோ! எத்தனையோ பேர் உணவில்லாமல் தவிப்பவர்களுக்குக் கொடுக்கலாமோ? அல்லது அநாதை ஆசிரமங்களுக்குக் கொடுக்கலாமோ? கீழே கொட்டுகின்றனர். பாத்திரம் தேய்க்கும் நீரில்/கழுவும் நீரில் அவை ஊறி நாற்றமெடுக்கின்றன. இதை எங்கே போய்ச் சொல்லுவது?  இந்தியாவில்/தமிழ்நாட்டில் தான் இவை எல்லாம் நடக்கும்! மக்களும் பொறுத்துப் போயாக வேண்டும்.

Friday, April 23, 2021

போகப் போகத் தெரியும்!

 ஒரு வழியாய் நாங்களும் ஜோதியிலே ஐக்கியம் ஆயிட்டோம். கண் அறுவை சிகிச்சை இருக்குமோனு ஒரு கவலை/யோசனை! அடுத்து மைத்துனரின் ஆப்திகக் கவலைகள். திடீர்ப் பயணம் ஒண்ணு இருக்குமோனு இன்னொரு கவலை, வீட்டில் சுத்தம் செய்யும் வேலைகள் என ஒண்ணு மாத்தி ஒண்ணு பட்டியல் போட்டுக் கொண்டு வந்து விட்டன. கடைசியா நேற்று ப்ளம்பர் வந்து சமையலறைப்பக்கம் இருக்கும் செர்வீஸ் ஏரியாவின் குழாயைச் சரி பண்ணிட்டுப் போயிட்டார். இனி இப்போதைக்குக் கொஞ்ச நாட்கள் எந்த வேலையானாலும் போட்டு வைச்சுடலாம்னு முடிவு எடுத்து இன்னிக்கு அங்கே இங்கே விசாரித்து, அரசாங்க மருத்துவமனையில் ஒரு நாள் எடுக்கும் என்பதால் தனியார் மருத்துவமனைக்குப் போய்க் கோவி ஷீல்ட் ஊசி போட்டுக் கொண்டு வந்தாச்சு.

அங்கே போனதுமே பிபி, ஜூரம் இருக்கானு எல்லாம் சோதனைகள் செய்து ஆதார் கார்ட்/நம்பரோடு பெயரையும் எழுதிக் கொடுத்தவற்றையும் சரிபார்த்து, (அப்படியும் அவர் பெயரைப் பிடிவாதமாய் ஏ.சாம்பசிவம்னு எழுதி இருக்காங்க) பெயர் எழுதிப் பணம் கட்டியவுடன் பத்து இருபது நிமிஷங்களில் கூப்பிட்டு ஊசி போட்டார்கள். அந்த அறைக்குள்ளே ஏறணுமேனு கவலைப் பட்டுக்கொண்டே எழுந்தேன். ஹிஹிஹி, என்னைப் பார்த்ததுமே அந்தப் பெண்மணி, "நீங்க வரவேண்டாம்! அங்கே உட்காருங்க, நான் வந்து ஊசி போடறேன்!" என்று சொல்லி விட்டார். வந்து போட்டும் விட்டார். அப்புறமா அரை மணி அங்கே உட்கார்ந்து அடுத்த ஊசிக்கான தேதியைக் கேட்டுக் குறித்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பி வந்துட்டோம். டோலோ 650 மாத்திரைகள் கொடுக்கலையானு என் தம்பி கேட்டார். அரசு மருத்துவமனையில் தான் அதெல்லாம் கொடுக்கிறாங்க போல! இங்கே எதுவும் தரவும் இல்லை. எந்தவிதமான நிபந்தனைகள் இருப்பதாகவும் சொல்லவில்லை. மாத்திரைகளும் கொடுக்கவில்லை. ஆகவே நாங்க அப்படித் தேவைன்னால் பக்கத்து மருந்துக்கடையிலே வாங்கிக்கலாம்னு முடிவு செய்துட்டோம். 

ஆக மொத்தத்திலே நாங்களும் ஜோதியிலே ஐக்கியமாயிட்டோம். எங்களுக்குப் போட்டிருப்பது கோவிஷீல்ட் என்று சொன்னார்கள். அடுத்தது மே மாதக் கடைசியிலே தான்! இப்போதைக்குக்கையிலே கொஞ்சம் கடுக்கிறது.  இனி போகப் போகத் தான் தெரியும்.  இந்த ஊசியின் தாக்கம் என்னனு புரியும்.  அதோடு அரசு மருத்துவமனையில் தேநீர், ஜூஸ் எல்லாம் கொடுப்பதாகவும் சில/பலர் எழுதி இருந்தனர். இங்கே தண்ணி வேணுமானு கூடக் கேட்கலை. அரை மணி உட்கார்ந்துட்டுப் போங்கனு சொன்னதோடு சரி! வீட்டுக்கு வந்து தான் தண்ணியே குடிச்சோம். லேசாக் கைவலிக்கிறாப்போல்/கனத்தாற்போல் இருக்கு. இனிமேப் பார்க்கணும்.

Wednesday, April 21, 2021

சீதா ராம நாமமே துதி செய்! நாளும் ஒரு தரம்!

 


எங்க வீட்டு ராமர் வெகு நாட்களுக்குப் பின்னர் மீண்டும் வந்திருக்கார். மல்லிகைப் பூ மாலை நேற்றுக் கட்டினேன். இந்த வருஷம் கதம்பத்திற்கான பூக்கள் வாங்கலை. விலை ரொம்பக் குறைவு என்பதால் மொத்தமாய்த் தான் வாங்கணுமாம். கொஞ்சமாகக் கேட்டால் கொடுப்பதில்லை. அவ்வளவு பூக்கள் வாங்கினால் ஒரு வாரத்துக்கு வரும்! ஆகவே மல்லிகைப் பூக்களும் உதிரிப் பூக்களுமாக வாங்கினதோடு சரி! கிருஷ்ணரும்/ராமரும் எல்லாவற்றிலும் நேர்மாறாக இருப்பார்கள்! கிருஷ்ணர் நல்ல மழைக்காலத்தில் தேய்பிறை அஷ்டமியில் பிறந்தார் எனில் ராமரோ நல்ல அடிக்கிற வெயில் காலத்தில் வளர்பிறை நவமி! இங்கே ஶ்ரீரங்கத்தில் கிருஷ்ணாஷ்டமிக்கு ஆவணி மாதம் தான் கணக்கு. அதே போல் ஶ்ரீராமநவமிக்குச் சித்திரை மாதம் கணக்கு. ஒவ்வொரு வருஷமும் ஆவணியில் ஜன்மாஷ்டமியும், சித்திரையில் ராமநவமியும் வருவதில்லை. ஆனாலும் பெருமாள் கோயில்களில் முக்கியமாய் ஶ்ரீரங்கத்தில் ஆவணி மாதத்து தேய்பிறை அஷ்டமி கலந்த ரோஹிணி நக்ஷத்திரத்தில் ஜன்மாஷ்டமி! அதே போல் சித்திரை வளர்பிறை நவமி ஶ்ரீராம நவமி! இந்த வருஷம் பங்குனி மாதம் அமாவாசை மாசக் கடைசியில் வந்ததால் சித்திரையில் ஶ்ரீராமநவமி வந்திருக்கு. இல்லைனால் நமக்கெல்லாம் பங்குனி அமாவாசைக்கு அடுத்து வரும் சுக்ல பக்ஷ நவமியிலேயே கொண்டாடிடுவோம்.



சுவாமி அலமாரியின் கீழ்த்தட்டு உம்மாச்சிங்க! அறிமுகம் தேவை இல்லை. எல்லோரும் பல முறை பார்த்திருக்கீங்க! வெற்றிலை, பாக்கு, பழம் தட்டு மட்டும் இங்கே தெரியுது. மற்றப் பிரசாதங்கள் கீழே!

முன்னால் கொஞ்சம் மஞ்சள் நிறத்தில் தெரிவது கடலைப்பருப்புச் சுண்டல். கடலைப்பருப்பை உப்புச் சேர்த்து நன்கு நசுங்கும் பதத்தில் வேக வைத்துக் கொண்டு நல்லெண்ணெயில் தாளிக்கையில் கடுகு, பெருங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கருகப்பிலை சேர்த்துக் கொண்டு வெந்த பருப்பைக் கொட்டி ஒன்றரைத் தேக்கரண்டி சாம்பார்ப் பொடி சேர்த்துக் கூடவே ஒரு தேக்கரண்டி சர்க்கரை, தேங்காய்த் துருவல், துருவிய காரட், வெள்ளரி, மாங்காய்த் துண்டங்கள், நறுக்கிய பச்சைக் கொத்துமல்லி தூவிக் கிளறி இறக்கினால் சாப்பிட நன்றாக இருக்கும். விரத நாட்கள் இல்லாமலோ/அல்லது சும்மாச் சாப்பிடப் பண்ணினாலோ இவற்றோடு பெரிய வெங்காயம் பச்சையாகப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். புதினாவையும் சேர்க்கலாம். தேவையானால் எலுமிச்சம்பழம் பிழியலாம். 

பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு வறுத்து வேக வைத்துக் கொண்டு அரிசியும், தேங்காயும் சேர்த்து அரைத்து விட்ட பாயசம். வடை. இந்த வருஷம் உளுந்து வடை பண்ணலை. அதென்னமோ எனக்கு வடையே பண்ணத் தெரியலையாம். நம்ம சர்வாதிகாரியோட கண்டுபிடிப்பு! ஆகவே உளுந்து வடையே பண்ணாதே என ஆர்டர் போட்டாச்சு. ஆமவடைதான் பண்ணினேன். எங்க வீட்டில் இரண்டும் பண்ணுவோம் தான்! ஆனாலும் வடை பண்ணத் தெரியலைனு சொல்லிட்டுப் பண்ண வேண்டாம் என்பது என்னமோ சரியில்லை இல்லையோ? போனால் போகட்டும். ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் உளுந்து வடை பண்ணி நான் மட்டுமே சாப்பிடணும்னு முடிவு எடுத்திருக்கேன். 

பானகம், நீர்மோர், சாதம், பருப்பு! வடைப்பருப்பு எனச் சொல்லப்படும் பாசிப்பருப்பை ஊற வைத்துப் பிழிந்து அதில் வெள்ளரி, மாங்காய், காரட், பச்சைமிளகாய், இஞ்சி, கருகப்பிலை கொத்துமல்லி போட்டு உப்புச் சேர்த்து எலுமிச்சை பிழிந்தால் ஆஹா! ஓஹோ! சொர்கம் தான். ஆனால் இங்கே பண்ண முடியாது. இங்கே இவங்களுக்கெல்லாம் வடைப்பருப்புன்னாத் தெரியவும் தெரியாது. பல முறை பண்ணிக் காட்ட நினைப்பேன். ஆனால் அம்பத்தூரில் இருந்தவரை மன்னி கொடுத்தனுப்புவார் என்பதால் பண்ண மாட்டேன். இங்கே வந்து பண்ணணும்னு நினைச்சுட்டுப் பண்ணுவதே இல்லை. ஒரு நாளைக்கு சாலட் மாதிரிப் பண்ணிச் சாப்பிடணும்னு நினைச்சிருக்கேன்.

ஹிஹிஹி, ஶ்ரீராமநவமியை விட்டுட்டு கதா காலட்சேபம் பண்ணிட்டு இருக்கேன் போல! இவ்வளவு தான் ஶ்ரீராமநவமிக்கு எங்க வீட்டில் பண்ணியது. ரொம்ப எளிமை ராமரைப் போலவே! வடை கொஞ்சமாய்த் தட்டினேன். மிச்சம் வடை சாயந்திரமாத் தட்டணும். எல்லோரும் பிரசாதம் எடுத்துக்கோங்கப்பா! சுண்டல் அப்புறமா நல்லா இருக்காது. வாங்க, வாங்க சீக்கிரமா!

Tuesday, April 20, 2021

நீண்ட நாட்கள் கழிச்சு ஒரு பயணம்!

நேற்றே எழுத ஆரம்பிச்சேன். உட்கார முடியலை. போய்ப் படுத்துட்டேன். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக வெளி உலகத்திற்கே செல்லாமல் இருந்துட்டு திடீர்னு போனதாலோ என்னமோ தெரியலை. உடல் அசதி/வலி/நடக்க/உட்கார முடியாமல் பிரச்னை! இன்னிக்குக் கொஞ்சம் பரவாயில்லை. என்றாலும் இப்போதெல்லாம் அடிக்கடி பதிவுலகுக்கு வர முடியாமல் தான் போகிறது. 

கிட்டத்தட்ட ஒன்றரை வருஷங்களாகக் குலதெய்வம் கோயிலுக்குப் போக முடியலை. 2019 செப்டெம்பரில் அம்பேரிக்கா போகும் முன்னர் போனது தான்!  அதன் பின்னர் அங்கே இருந்து வந்த பின்னர் போக முடியாமல் ஆகிவிட்டது. எப்போடா போவோம்னு காத்திருந்தோம். இங்கே உள்ளூரில் உள்ள ரங்குவையே போய்ப் பார்க்க முடியலை. சுமார் ஒன்றரை வருஷங்களாக எங்குமே போகாமல் இருந்துட்டு இப்போத் தான் ஞாயிறு அன்று குலதெய்வம் கோயிலுக்குப் போனோம். அங்கே போவதுன்னாச் சும்மாவா? பொய்யாப் பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை, மாரியம்மன் மாவிளக்குக்கு மாவுனு எல்லாம் தயார் செய்துக்கணுமே! அதோட கோயிலில் அபிஷேஹம் செய்ய வேண்டிய பொருட்கள், மாலை, பூக்கள், பழங்கள், தேங்காய்கள்னு எல்லாமும் தயாராகக் கொண்டு போயிடணும். அங்கே ஒண்ணும் கிடைக்காது. கிராமம் தானே!

சனிக்கிழமையே காலை சீக்கிரம் எழுந்து குளித்துவிட்டுப் பிரசாதங்கள் எல்லாம் தயார் செய்து கொண்டேன். மற்ற சாமான்களையும் தயார் செய்து கொண்டு வண்டிக்கும் தொலைபேசிச் சொல்லிட்டு ஞாயிறன்று காலை மூன்று மணிக்கே எழுந்து வீடு சுத்தம் செய்தல் போன்ற வழக்கமான வேலைகளை முடித்துக் கொண்டு மாவிளக்குப் போட்டதும் சாப்பிட இட்லி தயார் செய்து அதை அலுமினியம் ஃபாயிலில் வைத்து எடுத்துக் கொண்டு இருவருக்கும் காஃபியும் எடுத்துக் கொண்டேன். அவருக்குச் சர்க்கரை இல்லாத காஃபி எனில் எனக்கு அரைத் தேக்கரண்டி சர்க்கரை சேர்த்தது என்பதால் இரண்டு ஃப்ளாஸ்க்! அதைத் தவிர அவருக்குக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்த குடி நீர். எனக்குப் பானைக் குடி நீர். அதுவும் தனியாக! எல்லாம் தயார் ஆனதும் வண்டியும் வந்தது. ஒரு பத்து நிமிஷம் தாமதம். ஆனாலும் பரவாயில்லை. கிளம்பினோம். ஏழரை மணிக்கெல்லாம் கும்பகோணம் வந்தாச்சு. இறங்கலை. அப்படியே நேரே கிராமத்திற்குப் போனோம்.எட்டேகாலுக்குப் போயாச்சு கோயிலுக்கு! 

சாமான்களை எல்லாம் இறக்கிவிட்டுக் கோயிலில் போய் மாவிளக்கை வெல்லம் சேர்த்துத் தயார் செய்தேன். வெயில் காரணமாகவும், பாகு வெல்லம் காரணமாகவும் கொஞ்சம் இளகினாற்போல் தான் இருந்தது. இப்போத் தான் ஏத்திடுவோமே, சரியாயிடும்னு நினைச்சால் கோயிலுக்கு திமுதிமுவெனச் சிலர் வந்தார்கள். அவங்க குழந்தை பிறந்து முதல் முதல் குழந்தையை எடுத்துக் கொண்டு நேர்த்திக்கடனுக்கு வந்திருக்காங்க போல! அபிஷேஹம் தவிர்த்துப் பிரசாதம் எல்லாம் சொல்ல, கடையில் போய் சாமான்களை வாங்கிக் கொண்டு அதன் பின்னர் சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் , சுண்டல், எலுமிச்சைச் சாதம்னு தயார் செய்ய ஆரம்பித்தார் பூசாரி. அது சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகிவிட்டது. அதன் பின்னர் அபிஷேஹம் ஆரம்பித்து அலங்காரங்கள் முடிந்து நான் மாவிளக்குப் போடும்போது நெய்யை விடவும் கர்பகிரஹச் சூட்டிலும் வெயில் காரணமாயும் நெய்யும் ஓட ஆரம்பிக்க ஒரு மாதிரிச் சமாளித்துக் கொண்டு திரியைப் போட்டு விளக்கை ஏற்றினேன். அங்கேயே நின்று கொண்டிருந்தேன். கீழே இறங்கிக் காமிராவை எல்லாம் எடுத்து வரவில்லை. அதுக்குள்ளே மாவிளக்குத் திரி முழுவதும் முடிந்து மலை ஏறி விடுமோனு பயம். 

அதோடு கர்பகிரஹத்தினுள் நுழையும் படிகளில் ஏறி ஏறி இறங்க முடியலை. யாரானும் உதவி தேவைப் படுகிறது. எல்லாவற்றையும் உத்தேசித்து அங்கேயே நின்றுவிட்டேன். இம்முறை ரொம்ப நடக்கவே முடியாமல் கஷ்டமாக வேறே இருந்தது.  வீட்டுக்குள்ளேயே நடந்து கொண்டிருந்து விட்டதால் நடப்பதே புதுமையாகவும் ஆகி விட்டது. எல்லாம் முடிந்து தீப ஆராதனை எடுத்துவிட்டுக் கீழே இறங்குவதற்குள்ளாகப் போதும், போதும்னு ஆகிவிட்டது. வெளியே நின்றிருந்த ஒரு பெண்மணி கையைப் பிடித்துக் கீழே இறக்கி விட்டார். இவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை நானே எதிர்பார்க்கவில்லை. ஒரு வழியாக மாரியம்மன் கோயிலில் அனைத்தையும் செய்து முடித்துவிட்டு அங்கேயே இட்லி சாப்பிட்டுக் காஃபியும் குடிச்சு முடிச்சு அங்கே இருந்து பெருமாள் கோயிலுக்குக் கிளம்பினோம். பெருமாள் ஊர் ஆரம்பிக்கையிலேயே இருப்பார். ஆனால் முதலில் மாரியம்மனைப் பார்த்துக் கொண்டு பின்னர் வரணும் என்பதால் அதை முடித்துக் கொண்டு வந்தோம். பட்டாசாரியார் பாவம் இரண்டு மணி நேரமாகக் காத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். அவரைத் தான் எங்களுக்கு மதிய உணவு கொண்டுவரச் சொல்லி இருந்தோம்.

பெருமாளுக்கு ஆராதனைகளை முடித்துக் கொண்டு பட்டாசாரியார் கொடுத்த பிரசாதங்களை (மதியத்துக்காக) புளியோதரையும், தயிர் சாதமும் வாங்கிக் கொண்டு கருவிலி நோக்கிச் சென்றோம். நாங்கள் சென்ற வண்டி வேறே காலைத் தூக்கி வைத்து ஏற வேண்டி இருந்ததுனா உள்ளேயும் அரை அடிக்கும் மேல் கீழே காலை வைக்கணும். அது வேறே ஒவ்வொரு முறை வண்டியில் இருந்து இறங்கும்போதும், திரும்ப ஏறும்போதும் பிரச்னையாகவே இருந்தது. ஆகவே காமிரா கொண்டு போகாததால் மொபைலில் படங்கள் எடுக்க நினைச்சு மொபைலையும் என் பைக்குள்ளேயே வண்டியில் வைச்சுட்டுத் தான் போனேன். படம் எடுக்க முடியலையே என்று வருத்தம் தான். ஆனால் ஏறும்போதும் இறங்கும்போதும் இருவருக்குமே கஷ்டமாக இருந்ததால் வேண்டாம்னு வைச்சுட்டேன். மாரியம்மனை மட்டும் படம் எடுத்திருந்தேன். அது மட்டும் போடுகிறேன்.

கருவிலி சிவன் கோயிலை முடித்துக்கொண்டு அங்கிருந்து அந்த ஊரில் சுமார் 2000 ஆண்டுகளாக இருக்கும் காத்தாயி அம்மன் கோயிலுக்குப் போனோம். ஏப்ரல் 2 ஆம் தேதி தான் அந்தக் கோயிலுக்குப் பல வருஷங்கள் கழிச்சுக் கும்பாபிஷேஹம் செய்தார்கள். அந்தக் கோயில் சோழர்காலத்தில் கட்டப்பட்டதாம். செம்பியன் மாதேவி இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்திருப்பதாகக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இந்தக் கோயிலை இப்போது புனர் நிர்மாணம் செய்தது பரவாக்கரையைச் சேர்ந்த மாணிக்கவேல் என்னும் காவல்துறை அலுவலர். பணி ஓய்வு பெற்று வந்ததும் சரித்திரத்திலும் பழமையான கோயில்களிலும் ஈடுபாடு கொண்ட அவர் இந்தக் கோயில் பற்றிக் கேள்விப்பட்டுச் சொந்த ஊரான பரவாக்கரையை விட்டுப் பக்கத்து ஊரான கருவிலிக்கு அருகே உள்ள கூந்தலூரில் தங்கிக் கொண்டு கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் வேலைகள் செய்து திருப்பணிகளை முடித்துக் கும்பாபிஷேஹமும் செய்து வைத்திருக்கிறார்.

இந்தக் கோயிலில் சப்தகன்னிகள் இருப்பதாலும் சப்த முனிகள் இருப்பதாலும் இது மிகப் பழமை வாய்ந்த கோயில் என்பது புரிய வந்தது. கோயிலின் படங்கள் கும்பாபிஷேஹ சமயத்தில் எடுக்கப்பட்டவை வந்துள்ளன. அவற்றை எல்லாம் பின் வரும் நாட்களில் ஒவ்வொன்றாகப் பகிர்கிறேன். இந்தக் காத்தாயி அம்மன் கோயிலுக்குப் போனோம். அங்கே நடுவில் பச்சையம்மனும் வலப்பக்கம் மாரியம்மனும் இடப்பக்கம் காத்தாயி அம்மனும் இருந்தார்கள். வெளியே பெரிய மைதானத்தில் (இப்போத் தளம் போட்டுவிட்டார்கள்.) எனக்கு அது தான் கொஞ்சம் வருத்தம். கர்பகிரஹத்தில் கூட கல் தளங்களை அகற்றிவிட்டு டைல்ஸ் போட்டிருக்காங்க. இதனால் அந்தக் கல்லில் செதுக்கப்பட்டிருக்கும் விபரங்கள் முற்றிலும் அழிந்து யாருக்குமே தெரியாமல் போய்விடும். இதை யாருமே நினைத்துப் பார்ப்பதில்லை. எல்லோருமே அரசியல் தலைவர்கள் உள்பட தமிழன்/தமிழ் தொன்மை வாய்ந்தது. உலகின் மூத்த முதல் குடிமக்கள். தமிழ் தான் முதலில் தோன்றியது என்றெல்லாம் பெருமை பேசிக் கொள்வார்கள். ஆனால் தமிழனின் தொன்மையையும் வரலாற்றையும் பேசும் விஷயங்களை அடியோடு அழித்துவிட்டு நாகரிகம் என்னும் பெயரில் தேவையற்ற அலங்காரங்களைச் செய்து கோயிலின் புனிதத்தையும் தொன்மையையும் கெடுத்துவிடுவார்கள். பல கோயில்களிலும் திருப்பணி என்னும் பெயரில் இந்தக் கொடுமை தான் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. 

தொடரும்! படங்களை வலையேற்றிவிட்டுப் பகிர்ந்து கொள்கிறேன்.


Monday, April 12, 2021

அத்திவரதன் மீண்டும் வந்துவிட்டான்!

"அத்திமலைத்தேவன்" இரண்டாம் பாகத்தில் அந்த நாட்களில் கோயில்கள் பராமரிக்கப்பட்ட விதம் பற்றியும் இரவுக் காவலன் ஒருவன் கோயிலில் சுற்றி வந்து காவல் காத்ததையும் சொல்லுகிறது. அதோடு இல்லாமல் சோழ இளவரசன் கரிகாலன் ரகசியமாகக் காஞ்சிக்கு வந்து தமிழ் கற்றதையும், பல்லவ இளவரசனும், கரிகாலனும் உறவு என்பதும் நமக்கு/எனக்குப் புதிய செய்தி! அக்கா/தங்கையின் பிள்ளைகள். அந்த வழியில் உறவு. கரிகாலன் உறவைப் போற்றி வளர்க்க நினைக்க, இளந்திரையனோ ஆரம்பத்தில் அதைப் புரிந்து கொள்ளவே இல்லை.  பின்னர் காஞ்சியை அனைத்துத் துணை நகரங்களையும் சேர்த்து ஒரே நகரமாக இருவரும் நிர்மாணிக்கின்றார்கள்.  சரித்திர ரீதியாக மட்டுமின்றி பூகோள ரீதியாகவும் ஆறுகள் உற்பத்தி ஆகிச் சேர்ந்த இடங்களைக் குறித்தும் எழுதி இருக்கிறார் நரசிம்மா! முன்னர் பாலாறு காஞ்சியின் வடக்கே ஓடியதாகவும், காலப் போக்கில் பாலாறு காஞ்சியின் தெற்கே இப்போது இருப்பது போல் ஓடுவதையும் குறிப்பிட்டு வடக்கே ஓடி இருக்கக் கூடும் என்பதற்கான ஆதாரங்களையும் செயற்கைக்கோள்கள் மூலமும் தொல்லியல் சான்றுகள் மூலமும் தெரிந்து கொள்ள முடிவதாகச் சொல்லி இருக்கிறார்.

இன்றைய அடையாறும், கூவம் நதியும் பாலாறு வடக்கே ஓடியதின் மிச்சங்களே என்பதைத் தொல்லியல் அதிகாரி மூலம் உறுதிப் படுத்தி இருக்கும் நரசிம்மா குசஸ்தலை ஆறு என்பது வடமொழிச் சொல் அல்ல என்பதையும் கொசவர்கள் வாழ்ந்து வந்த கிராமத்தின் கரையில் ஓடியதால் கொசஸ்தலை என்றும் குஷஸ்தலை என்றும் அழைக்கப்படுவதாய்ச் சொல்கிறார். நாவல் முழுவதும் இம்மாதிரி முக்கியத் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அனைத்தும் தர்க்கரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் ஏற்கப்படக் கூடியதாயும் உள்ளன.  இந்தக் கொசவர்கள் தாம் பெருமாள் கோயில்களில் மடப்பள்ளியில் சமைக்க மண் பாத்திரங்களைச் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்பதையும் சொல்கிறார். ஒரு நாள் சமைத்த பாத்திரங்களில் மறுநாள் சமைக்க மாட்டார்கள். ஆகவே ஆற்றங்கரையிலேயே வாழ்ந்து வந்த கொசவர்கள் தினம் தினம் புத்தம்புதியதாகப் பானைகளையும், சட்டிகளையும் செய்து பெருமாள் கோயில்களில் மடப்பள்ளிக்குக் கைங்கரியம் செய்து வந்ததாயும் சொல்கிறார், இந்தக் கொசவர்களின் தலைவனே இரவு வேளைகளில் கோயிலைப் பாதுகாக்கவும் செய்வானாம்.

பொதுவாகப் பல்லவர்களிடையே அதிகம் குழந்தைகள் பிறந்ததாய்த் தெரியவில்லை. முக்கியமாய்ப் பெண் குழந்தைகள். ஆங்காங்கே அங்கொன்றும் இங்கொன்றுமாகவே குழந்தைகள்! இங்கேயும் சாணக்கியர் காலத்துத் திருலோச்சன பல்லவன் குழந்தை வரம் வேண்டி அத்தியூரின் அத்திமலைத் தேவனுக்குப் பச்சை சாற்றிக் குழந்தை வரம் வேண்டுகிறான். பல்லவ அரசர்களுக்கு அத்திமலைத் தேவனே குலதெய்வம் என்றாலும் பல தேசத்து மன்னாதி மன்னர்களும் இந்த அத்திமலைத் தேவனைக் கொண்டு போய்விட எண்ணுகின்றனர். இவரை வைத்து அஸ்வமேத யாகம் செய்தால் உலகனைத்தும் அடக்கி ஆளலாம் என்னும் எண்ணமும் பல மன்னர்களின் பேராசைக்குக் காரணமாய் அமைந்தது. 

முக்கியமாய் பௌத்தர்களுக்கு இந்த தேவ உடும்பர மரத்தின் தேவை மிக அதிகம். புத்த கயாவில் இருந்த தேவ உடும்பர மரம் அசோகனின் மனைவியால் அழிக்கப்படவே அவர்கள் தெற்கே இருக்கும் மரத்தைக் கண்டு பிடித்து அந்த உடும்பர மரத்தால் புத்தர் சிலையை நிர்மாணிக்க வேண்டும் என்னும் ஆவல் கொண்டிருந்தார்கள்.  மேலும் ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை அவதரிக்கும் புத்த அவதாரம் சரிவர நடைபெற வேண்டுமானால் தேவ உடும்பர மரம் இல்லாமல் முடியாது. ஆகவே அவர்கள் பங்குக்கு பௌத்த சந்நியாசிகளும், சந்நியாசினிகளும் (இவர்களில் அசோகனின் பிள்ளை மஹிந்தா, பெண் சங்க மித்தா ஆகியோரும் அடங்குவார்கள்.)  வந்து காஞ்சிக் கடிகையில் படிக்க வந்திருப்பவர்கள் போல் நடித்து எப்படியேனும் அத்திமலைத் தேவனைக்கொண்டு போய்விடக் காத்திருந்தார்கள். ஆனாலும் அவர்கள் எண்ணம் பலிக்கவில்லை.  இப்போது தான் ஆம்ரபாலி உள்ளே நுழைகிறாள். ஆம்ரபாலி பற்றி ஹிந்தி படிக்கையில் நிறையப் படித்திருந்தாலும் இதில் படித்தது தனி அனுபவம். 

நாம் படித்த ஆம்ரபாலி மகத தேசத்து மன்னன் பிம்பிசாரனை மணந்து புத்த பிக்குணியாவாள். அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளையும் பிக்ஷுவாக ஆகிவிடுவான். ஆனால் இங்கே ஆம்ரபாலி சரியான வில்லி. பலரை அழிக்கிறாள். ஒழிக்கிறாள். கடைசியில் பிரசவத்தின்போது ஏற்படும் சிற்சில சிக்கல்களில் முதலை வாயில் போய் இறக்கிறாள். கொடூரமான சாவு!  திரைப்படமாக வந்தபோது வைஜயந்திமாலா நடிச்சிருந்தார்னு நினைக்கிறேன். இங்கே வேறே மாதிரி வந்திருக்கும்.  அதே போல் வேகவதி நதியில் விடும் அத்தியோலைகள் முக்கூடல் சங்கமத்தில் அவரவர் கைரேகைகளை வைத்துக்  கண்டெடுக்கும் நிகழ்வும் ஆச்சரியமாக இருக்கிறது. இந்த மாதிரிச் சடங்குகள், சம்பிரதாயங்கள் எனப் பலவும் எக்காலத்திலும் இருந்து வந்திருக்கிறது என்பதே நமக்கும் ஆச்சரியம் அளிக்கும் விஷயம். இதிலும் சதிவேலை நடக்க, அதிலிருந்து இயற்கையே காப்பாற்றிக் கொடுக்கும் அற்புதங்களும் நடைபெறுகிறது. அதிலும் இலைகளைக் கொண்டு வந்து கொடுப்பது யார் என்பதை நினைத்தால் இன்னமும் ஆச்சரியம் தான்! 


Wednesday, April 07, 2021

தூங்கி எழுந்துட்டேன்!

 நீண்ட தூக்கத்தில் இருந்து விழித்தாற்போல் இருக்கிறது. எங்கேயோ திக்குத் தெரியாத காட்டில் சுத்திட்டு வந்தாப்போல் எண்ணம்.  பத்துநாட்களாகக் கடைசி மைத்துனரின் வருஷ ஆப்திக வேலைகள் நெட்டி வாங்கிற்று. அவருக்கு வெளியில் போல் வாங்கவேண்டிய வேலைகள் எனில் எனக்கு வீட்டிற்குள்ளேயே செய்ய வேண்டியவை. இந்தச் சூட்டோடு சூடாகக் கண் மருத்துவரிடமும் போய் அறுவை சிகிச்சை செய்து கொள்ளத் தேதி கேட்டால் அவங்க இன்னும் முத்தட்டும், ஆறு மாசமாவது ஆகணும்னு சொல்லி அனுப்பிட்டாங்க. ஒரு வழியாக அந்தப் பிரச்னை தீர்ந்தது என்றால் பெரிய மைத்துனரும் ஓரகத்தியும் மும்பையில் இருந்ததால் அவங்க ஆப்திகத்துக்கு வருவாங்களா இல்லையானு கவலை/ பிரச்னை. குடும்பப் புரோகிதரிடம் கேட்டுக் கொண்டு அப்படி அவங்க வர முடியாத பக்ஷத்தில் நாங்களே செய்வதற்கு இயலுமா எனக் கேட்டுச் சொல்லச் சொன்னோம். அவரும் தர்ம சாஸ்திரப் புத்தகங்கள்/ தன்னோட குரு எனக் கேட்டுவிட்டு பெரிய மைத்துனர் அனுமதி கொடுக்கணும், சாஸ்திர ரீதியாக எனச் சொன்னார். 

மும்பையில் ஊரடங்கு வரப் போவதாகச் சொன்னதால் அவரால் அங்கிருந்து கிளம்ப முடியுமா என்பதே பிரச்னையாக இருந்தது. ஆகவே அவரிடம் எதுக்கும் இருக்கட்டும் என வாட்சப், ஸ்கைப் மூலமாக இங்கிருந்து புரோகிதர் சொல்லி அங்கே மும்பையில் மைத்துனர் அனுமதி கொடுக்குமாறு ஓர் ஏற்பாட்டைச் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். அவரும் அதற்கு ஒத்துக் கொண்டாலும் எப்படியேனும் தான் கிளம்பி வரப் பார்ப்பதாகவும் உறுதி அளித்தார். நல்லவேளையாகப் போன ஞாயிறன்று அவங்க சென்னைக்குக் கிளம்பி வந்து பின்னர் சனியன்று இங்கே ஶ்ரீரங்கமும் வந்து விட்டார்கள். மற்ற நாத்தனார்களால் வர இயலவில்லை. வந்த வரைக்கும் போதும். இவர் தானே முக்கியம் என நாங்களும் பேசாமல் இருந்துட்டோம். சமையலுக்கும் மாமி கிடைத்து மூன்று நாட்கள் காரியங்களும் நல்லபடியாக நடந்து முடிந்தன. வந்தவங்களும் திரும்பச் சென்னை போய் விட்டார்கள். இந்தச் சமயம் பார்த்து மும்பை ஊரடங்கு அறிவிப்பால் அனைவரும் மும்பையிலிருந்து கிளம்பிக் கொண்டிருக்கிறார்களாம். மைத்துனரின் பிள்ளை அங்கிருந்து சென்னை வந்துவிட்டார். இனி எப்போது மும்பை போக முடியும்னு தெரியலை.

நேற்று சுபம் முடிந்து அனைவரும் கிளம்பிப் போனதும் நாலரைக்கு மேல் நாங்க ஓட்டுச்சாவடிக்குப் போய் எங்க கடமையையும் ஆத்திவிட்டு வந்தோம். கூட்டமே இல்லை. மக்கள் தங்களுக்கு அளிக்கப்பட்டக் கையுறையை அங்கேயும் இங்கேயுமாகப் போட்டுச் சுத்தம்/சுகாதாரம் பேணி இருந்தார்கள். நம் மக்களுக்கு இந்தப் பழக்கம் போகவே போகாது. வாய் கிழியப் பேசுவார்கள். அங்கிருந்தவர்களும் இது குறித்த சிந்தனை இல்லாமலேயே இருந்தார்கள். நான் ஓட்டுப் போட்டு முடிஞ்சதும் போட்டவர் பெயர் வருதானு பார்த்துட்டு இருந்தால், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வெளியே இருந்து ஒரு தேர்தல் அதிகாரி அம்மா, வெளியே வாம்மானு கத்தினார். ஆனாலும் நான் பார்த்துட்டுத் தானே வந்தேன். அப்புறமா எங்கானும் மாறிடுச்சுனா ஒரு ஓட்டு வீணாகிடாதோ? இருந்தாலும் ஒண்ணும் செய்ய முடியாது தான்! :) இங்கேயும் தேர்தல் முடிந்ததும் ஊரடங்கு எனச் சொன்னார்கள். இன்று வரை எதுவும் தெரியலை. ஆனால் மஹாராஷ்ட்ராவில் இருந்து சென்னை வர ஈ பாஸ் தேவை. மைத்துனர் பிள்ளை பாஸ் எடுத்துக் கொண்டே வந்திருக்கார். வெளி மாநிலங்கள் எனில் ஈ பாஸ் தேவை போல. பெருகி வருகிறது கொரோனா!  விரைவில் அடங்கும் எனச் சொன்னாலும் கவலையும், பயமுமாகத் தான் இருக்கு. 

ரஜினிகாந்துக்கு "தாதா சாஹேப் பால்கே" விருது கொடுத்திருக்காங்களாம். ஒரே அமர்க்களம். இதிலே சிலருக்கு ரஜினி தமிழர் இல்லைனும், (எனக்கும்) அதனால் நாம் குதிக்க வேண்டாம் எனவும் கருத்து. பொதுவாக ரஜினி தமிழ்ப்படங்கள் மூலமே பிரபலம் ஆனதால் அவருக்கு விருது கொடுத்திருப்பது தமிழ்த் திரைப்பட உலகையே கௌரவிச்ச மாதிரித் தான். இன்னும் சிலருக்குக் கமலஹாசன் /உல(க்)கை நாயகருக்குக் கொடுக்கலைனு வருத்தமாம். இப்போ அவர் தேர்தலில் நிற்பதால் இப்போ விருது கொடுத்தால்/அறிவித்தால் சரிப்படாது என நினைச்சிருக்கலாம்.  என்னைப் பொறுத்தவரை இதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. ஒரு வழியாக மிரட்டிக் கொண்டிருந்த இரண்டு பிரச்னைகளுக்கு அதுவாகவே தீர்வு கிடைச்சிருக்கு. இதான் இறைவன் கருணை என்பது. இனி அடுத்தடுத்து வரும் பிரச்னைகளுக்கும் இப்படியே தீர்வைக் கொடுப்பான் என நம்புகிறேன்.

எங்க பெண்ணிற்கு ஒரு மாசமாக வயிற்றில் பிரச்னை. வாயுக் கோளாறு. என்ன சாப்பிட்டாலும் ஒத்துக்கொள்வதில்லை. மோர் குடித்தால் கூட ஜீரணம் ஆகாததோடு ஏப்பமாக வருகிறது. என்ன செய்யறதுனு புரியலை. அவளை இங்கே வா, வந்து மருத்துவம் பார்த்துக்கலாம்னா வர மாட்டேன்னு சொல்லிட்டா. நாங்க போகலாம்னா நேரடியாக விமானம் இருக்கானு தெரியலை. அவ இப்போ வராதீங்க என்கிறாள். என்ன செய்யறதுனே புரியாமல் ஒரே குழப்பம் ஒரு மாசமாக. விரைவில் இந்தப் பிரச்னையும் தீரணும்னு பிரார்த்தித்துக் கொண்டு இருக்கோம்.

Friday, April 02, 2021

ஜீவி சாருக்கு என்னோட பதில்!

பாசவலை

அந்தப் பெண் வித்யா தன் இரட்டை வடம் செயின் நகையுடன் தன் பிறந்த வீட்டிற்குள் நுழைகையிலேயே, "வாம்மா,வித்யா. நேற்று தான் மாப்பிள்ளை இங்கே வந்துட்டுப் போனார். எல்லா விஷயத்தையும் சொன்னார்.. நீ வருவேன்னும் நீங்க தான் வித்யாவுக்கு அவளுக்குப் புரியற மாதிரி எல்லாத்தையும் சொல்லணும்ன்னும் சொன்னார். இதோ நீயே வந்துட்டே.. " என்று அவள் அப்பா முகமலர்ச்சியுடன் அவளை எதிர்கொண்டார்.


மேலே ஜீவி சார் எழுதிய கருத்துரை. இதில் அவர் சொல்லி இருப்பது மறைமுகமாக வித்யாவின் கணவன் அவன் அப்பா ஏற்பாட்டுக்கு ஒத்துக் கொண்டது போலவும், வித்யாவை அவ அப்பா எடுத்துச் சொல்லி ஒத்துக்க வைக்கணும்னும் பொருள் வராப்போல் எழுதி இருக்கார். முதல்லே இதிலே இரண்டு தவறுகள். நேர வித்தியாசங்கள் சரியா வரலை. ஏனெனில் நான் எழுதின கதையில் வித்யா தன் மாமனாரிடம் தான் நகையை விற்க மறுநாள் ஊருக்குப் போவதாகச் சொல்லுவாள். அதற்கு முன்னால் அவள் ஊருக்குச் செல்லப் பயணச் சீட்டு முன்பதிவு செய்யவே அவள் கணவன் வெளியே சென்றிருப்பதாயும் வரும். அப்படி இருக்கையில் அவன் எப்படி வித்யாவிடம் கூடச் சொல்லாமல் தன் மாமனார் ஊருக்கு வித்யா போவதற்கு முன்னாலேயே போய்த் தன்னோட வீட்டில் சரிபாதிப் பங்கை/அதுவும் தான் அரசுக் கடன் பெற்றுக் கட்டும் வீட்டில் (பின்னால் எல்லாம் முடிந்தவுடன் அந்த வீடு குடியரசுத் தலைவர் பெயரில் பதிவு செய்யப்படும். கடன் முடியும்வரை அவர் தான் அந்த வீட்டுக்குச் சொந்தக்காரர்.) தன் தம்பிகளுக்கு சந்தோஷமாய்க் கொடுப்பதாயும் அதற்கு வித்யா உடன்பட வேண்டும் என்றும் கேட்டிருக்க முடியும்? 

அவன் வெளியூருக்குச் சென்றதாகவே வரவில்லை. சொல்லப் போனால் அந்தப் பாத்திரம் கதையில் நுழையவே இல்லை. வித்யாவின் மாமனார் தன் பிள்ளை ஒத்துக்கொண்டுவிட்டான் என்று வித்யாவிடம் சொன்னால் அதைக் கேட்டுவிட்டுக் கொஞ்சமானும் பயத்துடன் அவளும் ஒத்துக்கொள்ளலாம் என்னும் நம்பிக்கையில் பொய் சொல்கிறார் என்பது உடனேயே வித்யாவின் சந்தேகம் மூலம் தெரிந்து விடுகிறது. அதோடு வித்யா அடுத்த நாள் பிறந்த ஊருக்குப் போகப் போகிறாள். அப்படி இருக்கையில் அவளை வழி அனுப்பவோ, அவள் தனியாய்ப் போவதால் குழந்தைகளின் பொறுப்பை ஏற்கவோ இல்லாமல் அவளுக்கும் தெரியாமல் அவள் கணவன் தான் மட்டும் முன்னால் போய்த் தன் மாமனாரிடம் வீட்டை நான் எழுதிக் கொடுக்கத் தயார். அதற்கு வித்யாவைச் சம்மதிக்கச் செய்யுங்கள் என்று கேட்க முடியும்? அப்போ வித்யா ஊருக்குக் கிளம்பும்போது கணவன் அங்கே இல்லை என்றல்லவோ ஆகிறது? தனக்குக் கூடச் சொல்லாமல் தன் கணவன் தன் அப்பாவைப் போய்ப் பார்த்து இப்படிச் சொன்னால் அது வித்யாவுக்கும் அவள் கணவனுக்கும் இடையே பிரச்னைகளை உண்டு பண்ணாதா? தான் மறுத்த ஒரு விஷயத்திற்குத் தன் கணவன் தனக்குக் கூடத் தெரியாமல் ஒத்துக் கொண்டு தன் அப்பாவிடமும் சொல்லி இருப்பது வித்யாவுக்கு அவன் செய்யும் துரோகம் ஆகாதா?

அதோடு கடன் வாங்கிக் கட்டும் வீட்டில் எப்படி இம்மாதிரிப் பங்கு தர முடியும்? பின்னால் தன் குழந்தைகள் படிப்பு அல்லது திருமணத்திற்குச் செலவுக்குப் பணம் வேண்டுமெனில் அந்த வீட்டை விற்க முடியுமா வித்யாவின் கணவனால்? அல்லது இருவரில் யாரேனும் ஒருவர் இல்லை எனில் அந்த வீட்டின் கதி? வித்யாவின் அப்பா தான் தன் மகளுக்கு துரோகம் நினைப்பாரா? மனதார அவரால் இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக்கொண்டு வித்யாவையும் அதற்கு ஒத்துக்கொள்ள வைக்க முடியுமா? அப்படி எனில் வித்யா அவருடைய சொந்தப் பெண்ணே இல்லை என்றே ஆகும். ஒரு கண்ணில் சுண்ணாம்பு, ஒரு கண்ணில் வெண்ணெய் என இருக்கும்  பெற்றோர்களை ஜீவி சார் வேண்டுமானால் அறியாமல் இருக்கலாம். இம்மாதிரி உள்ளதை உள்ளபடியே சொல்லாமல் மூடி மறைத்துக் கொண்டு போவதால் தான் பலருடைய துரோகங்களும் ஏற்கும்போது அதிர்ச்சி தாங்காமல் தற்கொலை வரை போகிறது. யாருக்கும் எந்தவிதமான அதிர்ச்சிகளையோ, துன்பங்களையோ தாங்க முடியாமல் போகிறது. எல்லோரும் நல்லவராக இருக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை.  இதை விடக் கொடுமையான சம்பவங்களை எல்லாம் பார்த்திருக்கேன். பேரக்குழந்தையோடு மருமகளை வீட்டுக்குள் விடாமல் வெளியேயே வெயிலில் நிறுத்தி வைத்த மாமனார்.மாமியாரை அறிவேன். இதெல்லாம் கதை அல்ல நிஜம்! 

எல்லோரும் தப்பு/தவறு செய்யும் சாதாரண மனிதர்கள் தான். சிலருக்கு அதை ஒத்துக்கொள்ள முடிகிறது. பலரால் முடியவில்லை. மத்யமர் குழுவிலே போய்ப் பார்த்தால் அறுபதைக் கடந்த பல பெண்களும் மாமியார்களால் தாங்கள் மூத்த மருமகளாகப் பட்ட கஷ்டங்களை விவரித்திருப்பார்கள். அனைத்தும் உண்மை! கணவனால் கொடுமை/மாமியார்/மாமனாரால் கொடுமை என நாற்பதாண்டுகள் முன் வரை பெண்களுக்கு நடந்ததும் உண்மை. காலம் மாறி வருகிறது. இப்போதைய மாமியார்களோ/மாமனார்களோ/மருமகள்களோ அப்படி இல்லை. ஒருவரின் தேவை மற்றவருக்கு வேண்டும் என்பதைப் புரிந்து கொள்பவர்களாக இருக்கிறார்கள். அதே சமயம் தங்களுக்குள்ளாக ஒரு கோடு போட்டுக் கொண்டு அந்தக் கோட்டை விட்டு வெளிவராமல்/உள்ளேயும் போகாமல் எல்லையிலே இருந்து கொண்டு கவனமாக வாழ்க்கையை நடத்துகிறார்கள். கதைக்கு வேண்டுமானால் ஜீவி சார் சொல்லி இருக்காப்போல் கற்பனையைக் கலந்து சொல்ல முடியும்! ஆனால் உண்மை சுடும்!

Thursday, April 01, 2021

என்னவேணா சொல்லிக்கோங்க! :)))))))

எழுதலாமா வேண்டாமானு ரொம்ப யோசிச்சு எழுதுகிறேன். இன்னிக்குக் காலம்பரக் கண் மருத்துவரைப் போய்ப் பார்க்கணும்னு சமைச்சு வைச்சுட்டுக் கிளம்பினோம். பத்தரை மணி ஆகி விட்டது. கூட்டம் தான். ஆனாலும் போனதும் உடனே அங்கே உதவிக்கு இருக்கும் பெண்கள் கண்ணைச் சோதித்துப் பார்த்துவிட்டு அவங்க கருத்தை எழுதிட்டு மருத்துவரைப் பார்க்கக் காத்திருக்கச் சொன்னார்கள்.  காத்திருந்தோம். மருத்துவர் பார்த்துட்டுக் காடராக்ட் இன்னும் அவ்வளவு பெரிசாக வரலை. உங்களுக்குக் கண் எப்படித் தெரியுது? என்று கேட்டார். கண்ணாடி போட்டால் கொஞ்சம் பரவாயில்லை என்றும் சில சமயங்களில் கண்ணாடி போட்டாலும் பிரதிபலிப்பு./கண்ணுக்குள் வெளிச்சம், பூச்சி பறத்தல் என இருப்பதைச் சொன்னேன். சரி, ரெடினாவையும் பார்த்துடறேன். டைலேட்டர் போட்டுக் கொண்டு அரை மணி கழிச்சுப் பார்க்கலாம்னு சொன்னார். அதே போல் டைலேட்டர் போட்டுக் கொண்டு அரை மணிக்கும் மேல் (இரண்டு தரம் போட்டுட்டாங்க. ஒரே எரிச்சல் தாங்கலை!) காத்திருந்து பின்னர் போனதுக்கு ரெடினாவில் ஒண்ணும் பிரச்னை இல்லை. காடராக்ட் மிஸ்ட் போலத் தான் இருக்கு இப்போ. போன முறைக்கு இந்த முறை ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை. பவர் தான் மாற்றம் கண்டிருக்குனு சொல்லிட்டு அவங்களுக்கு நேரே மீண்டும் கண்ணில் அழுத்தம், பவர் சோதனை எனப் பண்ணிப் பார்த்தார்.

பின்னர் கண்ணிற்கு இப்போது உடனடியாக அறுவை சிகிச்சை தேவை இல்லை. ஒரு மாதத்திற்கு விடமின் மாத்திரைகள் எடுத்துக் கொண்டு, கண்ணில் சொட்டு மருந்தும் விட்டுக் கொள்ளுங்கள். அதோடு பவர் வேறே மாற்றம் கண்டிருப்பதால் வேறே கண்ணாடிக்கு எழுதித் தரேன்னு சொல்லிட்டார். அறுவை சிகிச்சை இப்போதைக்கு வேண்டாம். நான் சொல்றேன், எப்போப் பண்ணணும்னு! அப்போப் பண்ணிக் கொண்டால் போதும்னு சொல்லிட்டார். உள்ளூர சந்தோஷம் தான். வீட்டில் பல பிரச்னைகள்.  தீர்வு காணப் பிரார்த்தனைகள்/ முயற்சிகள். அதோடு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஒரு மாதம் சமைக்க முடியாது என்றும் சொல்கின்றனர். ஒரு நாள்//இரண்டு நாள்னாப் பரவாயில்லை. ஒரு மாசம் வாங்கிச் சாப்பிட்டால் ஒத்துக்கணுமே இரண்டு பேருக்கும் என்று அது வேறு கவலை! எல்லோருமே வயதான்வர்கள். யாரை உதவிக்குனு கூப்பிட முடியும்!  அதோடு வேறு சில பொதுவில் சொல்லிக் கொள்ள முடியாத கஷ்டங்கள்! சொல்லப் போனால் நான் மூலத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டபோது பட்ட கஷ்டத்தை விடக் கஷ்டம் இப்போது இருக்காது. 40 வருடங்கள் முன்னர் இப்போதைப் போல் லேசர் சிகிச்சை எல்லாம் இல்லை. அறுவை சிகிச்சை ஆகி உணர்வு வர ஆரம்பித்ததும் வலி வரும் பாருங்க! அந்த மாதிரி வலியை ஆயுளில் அதன் பின்னர் யாரும் பார்த்திருக்க மாட்டாங்க! அப்படி ஒரு வலி! ஒன்றரை நாட்கள் இருந்தது. அதை விட இதில் பெரிதாக வலி எல்லாம் இருக்கப் போவதில்லை.

ஆனாலும் சந்தோஷம் தான். இப்போது அறுவை சிகிச்சை இல்லைனதும். அதை முகநூலில் போட்டேனா! ஏப்ரல் ஃபூல்னு சிலரும், பயந்து கொண்டு நானாக அறுவை சிகிச்சைக்கு வேண்டாம்னு சொல்லிட்டேன்னு சிலரும் சொல்றாங்க. சொல்றவங்களோட கருத்து அது! அதை என்னால் மாத்த முடியாது. கண் என்னோடது. அதற்குப் பிரச்னைன்னா கஷ்டப் படப் போவதும் நான் தானே! ஆகவே அறுவை சிகிச்சையை வேண்டாம்னு பயந்து கொண்டு சொல்லவெல்லாம் இல்லை.  அப்படி நினைப்பவர்கள் நினைச்சுக்கட்டும். :)))))))) வேறே என்ன சொல்லுவது? அவரவர் கருத்து அவரவருக்கு. இப்போதைக்குக் குறைந்த பட்சமாக ஆறு மாசம் அறுவை சிகிச்சை என்பது இல்லை. நடுவில் பிரச்னை வந்தால் உடனே வரச் சொல்லி இருக்காங்க. பிரச்னை இல்லாமல் இருக்கட்டும்னு பிரார்த்தித்துக் கொண்டிருக்கேன்.