எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, October 25, 2010

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் 14


நம் உடலின் மூலப் பொருட்களாகிய மஜ்ஜை, சுக்கிலம், பிராணன், ஜீவன் ஆகியவற்றை சிவாம்சம் எனவும், தோல், ரத்தம், மாமிஸம், மூளை, எலும்பு ஆகிய ஐந்தும் சக்தி அம்சம் எனவும் சொல்லப் படும். இது நம் பிண்டத்தின் சிவ, சக்தி அம்சங்கள் எனில் அண்டத்தில் பிருதிவி, வாயு, தேயு, அப்பு, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்கள் ஐந்தும் சக்தி அம்சமாகவும், அதைச் சார்ந்த மாயை, சுத்தவித்தை, மகேஸ்வரன், சதாசிவன் ஆகியன சிவாம்சமாகவும் கொள்ளப் படும். ஸரஸ்வதி அஷ்டோத்திரத்திலும், லக்ஷ்மி அஷ்டோத்திரத்திலும் தேவியை ப்ரஹ்ம-விஷ்ணு-சிவாத்மிகாயை நம: என்று சொல்லி இருக்கிறது. அம்பிகையே ப்ரம்ம ரூபமாயும், விஷ்ணு ரூபமாயும், ருத்ர ரூபமாயும் இருக்கிறாள் என்பதையும் முன்னரே பார்த்தோம். இந்த மாத்ருகா ரூபங்கள் அனைதுமே தேவியுடையவையே. தேவியை பட்டர் ஐந்து வர்ணங்களையும் உடையவள் என்றும் கூறுகிறார்.

“மங்கலை செங்கலசம் முலையாள் மலயாள் வருணச்
சங்கலை செங்கைச் சகல கலா மயில் தாவு கங்கை
பொங்கலி தங்கும் புரிசடையோன் புடை ஆளுடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும்பெண்கொடியே!” சில புத்தகங்களில் பசும்பொற்கொடியே என்றும் பாடம் இருக்கிறது.

மங்கலை என்றால் சுமங்கலி, அதுவும் நித்திய மங்கலையாகிய அபிராமி அன்னை, சிவந்த கலசம் போன்ற தனபாரங்களுடன், வருணனால் அளிக்கப் பட்ட சங்கு வளைகளை அணிந்த சிவந்த திருக்கரங்கள், எல்லாக் கலைகளுக்கும் தலைவி. இதை லலிதா சஹஸ்ரநாமம் சதுஷ்ஷஷ்டி கலாமயீ” என்றும் “கலாவதீ” என்றும் கூறும். அறுபத்து நான்கு கலைகளையும் தன்னிடத்தே கொண்டிருக்கிறாள் அம்பிகை என்றொரு அர்த்தம் கொள்ளலாம். அதோடு கலா என்றால் தோகை மயிலையும் குறிக்கும். ஈசனின் வாமபாகத்தை ஆட்கொண்ட அம்பிகையானவள் பொன் போன்ற நிறம் படைத்த பிங்கலை என்றும் கருநீல நிறம் கொண்ட காலி என்றும், செந்நிறம் கொண்ட லலிதாம்பிகையாகவும், வெண்ணிறம் பெற்ற விந்தியாவாகவும், பச்சை நிறம் பெற்ற மீனாக்ஷி, உமை அம்மையாகவும் இருக்கிறாள். இதிலே பிங்கலை ஸ்வாதிஷ்டானத்தில் ஆறிதழ்த் தாமரையில் காகினி என்னும் திருநாமத்தோடு பொன்னிறங்கொண்டு விளங்குகிறாள்.

இதை ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம்,
ஸ்வாதிஷ்டாநாம்புஜகதா சதுர்வக்த்ர-மநோஹரா!
சூலாத்யாயுத- ஸம்பந்தா பீதவர்ணாதி கர்விதா!!
மேதோ-நிஷ்டா- மதுப்ரீதா பந்தின்யாதி- ஸமன்விதா
தத்யன்னாஸக்த-ஹ்ருதயா காகினீ-ரூப-தாரிணீ”

என்று கூறும். இவளே மூலாதாரத்தில் வீற்றிருக்கையில் ஸாகினீ என்னும் பெயரோடு நான்கிதழ்த் தாமரையில் பஞ்ச முகத்தோடு கரிய நிறத்தவளாய் இருக்கிறாள். லலிதா சஹஸ்ரநாமம் இதை,

“மூலாதாரம்புஜாரூட பஞ்சவக்த்ராஸ்தி-ஸம்ஸ்திதா
அங்குசாதி-ப்ரஹரணா வரதாதி-நிஷேவிதா
முக்கெளதநாஸக்த-சித்தா ஸாகின்யம்பா-ஸ்வரூபிணீ”

என்றும் ஆக்ஞா சக்ரத்தில்,
ஆக்ஞா-சக்ராப்ஜ-நிலயா-சுக்லவர்ணா-ஷடானனா!
மஜ்ஜா-ஸம்ஸ்தா ஹம்ஸவதீ-முக்ய-சக்தி-ஸமன்விதா
ஹரித்ரான்னைக-ரஸிகா ஹாகினீ –ரூப-தாரிணீ”

என்றும் கூறுகிறது. இதை பட்டர் “வெளியாள்=கலைமகள்” என்னும் பொருளில் அழைக்கிறார். ஆக்ஞா சக்ரத்தில் ஈரிதழ்த் தாமரையில் ஆறு முகத்துடனே ஹாகினீ என்னும் பெயரோடு வெண்ணிறமுடையவளாய் (சுக்ல வர்ணா)எழுந்தருளி இருக்கிறாள். விசுத்தி சக்ரத்தில் ரக்த வர்ணத்தில் டாகினீ என்னும் பெயரோடும் பட்டர் இவளைப் பொதுவாக “செய்யாள்=திருமகள்” என்னும் பெயரில் அழைக்கிறார்.

விசுத்தி- சக்ர –நிலயா-ரக்தவர்ணா த்ரிலோசனா
கட்வாங்காதி-ப்ரஹரணா வதனைக-ஸமன்விதா
பாயஸான்ன-ப்ரியா த்வக்ஸ்தா பசுலோக-பயங்கரீ
அம்ருதாதி-மஹாசக்தி-ஸம்வ்ருதா-டாகினீஸ்வரீ!

, மணிபூரகத்தில் லாகினீ என்னும் பெயருடனும் இருப்பதாய்க் கூறுகிறது சஹஸ்ரநாமம்.

மணிபூராப்ஜ-நிலயா வதனத்ரய-ஸம்யுதா
வஜ்ராதிகாயுதோபேதா டாமர்ப்யாதிபி-ராவ்ருதா
ரக்தவர்ணா மாம்ஸநிஷ்டா குடான்ன-ரீத-மானஸா
ஸமஸ்த-பக்த ஸுகதா லாகின்யம்பா ஸ்வரூபிணீ

அநாஹதத்தில் ச்யாமளையாக ராகினீ என்னும் பெயரோடு வீற்றிருக்கிறாள்.

“அநாஹதாப்ஜ-நிலயா ச்யாமாபா வதனத்வயா!
தம்ஷ்ட்ரேஜ்வலாக்ஷமாலாதி-தரா ருதிர-ஸம்ஸ்திதா
காலராத்ர்யாதி-சக்த்யெளக-வ்ருதா ஸ்நிக்தெளதன-ப்ரியா
மஹாவீரேந்த்ர-வரதா ராகிண்யம்பா ஸ்வரூபிணீ!”

இனி ஸ்ரீலலிதையின் சேனை என்ன செய்தது என்பதைப் பார்ப்போம்.

விக்ன யந்திரம் பொடிப்பொடியாகிப் போனதை அறிந்த பண்டாஸுரன் தன் தம்பிகளை அனுப்புகிறான். விசுக்கிரன் முன்னால் தலைமை வகித்து வருகிறான். மந்த்ரிணீ அவனை எதிர்த்துப் போரிடுகிறாள். அஷ்வாரூடையும் துணை புரிய சக்தி சேனைகள் எதிர்த்துச் சண்டை போட்டும் விசுக்கிரனின் பாணங்கள் மழையெனப்பொழிய அம்பிகையை வேண்டுகின்றனர்.

விஷங்களோடெதிர்த்தாள் மந்திரிணியும் பொல்லா
விசுக்கிரனை எதிர்த்தாள் வாராஹிதேவி
அச்வாரூடை முதலானபேரெதிர்த்தாள்
அந்தச் சேனைகளக்ஷெளஹிணிகளையும்
வஞ்சக விசுக்கிரன் பாண வருஷத்தால்
வாடி மெலிந்து சக்தி சேனைகளும்
அம்பாவின் சேனைகள் அஸ்திரத்தின் தாபத்தால்
அம்மனை வேண்டினார்-சோபனம் சோபனம்

மந்த்ரிணி உரையாலே சிந்துவைச்
சக்திகள் தாபந்தீர அழைத்தாள்
வந்து சொரிந்தது சுத்த கங்கா தீர்த்தம்
வாரணத்துக்கை போல் இரண்டு சாமம்
வேண்டிய மட்டும் குடித்தே சக்திகளெல்லாம்
வெகு தாகந்தீர்ந்து பலமடைந்து
தேகக்களைகள் தீர்ந்து சத்தி சேனைகளெல்லாம்
ஜயத்துடன் எதிர்த்தார்கள்- சோபனம், சோபனம்

கங்கையின் நீரைப் பருகி புதிய பலம் பெற்று சக்தி சேனைகள் போரிட்டு விஷங்கன், விசுக்கிரன் போன்றோரை மந்திரிணியும், அஷ்வாரூடையும் வதம் செய்கின்றனர். இனி தானே நேரிடையாய்ப் போரிடவேண்டியதுதான் என பண்டாஸுரன் நினைத்தான். அவன் போருக்கு ஆயத்தமாகிறான்.

சேனாதிபதிகள் முதல் தம்பிகள் வரைக்கும்
செலவாய்ப் போனதைக் கேட்டுப் பண்டாஸுரன்
மானங்கெட்டவன் இன்னும் பின்னதி கோபமாய்
மஹேச்வரியை வைது திட்டிக்கொண்டு
கடித்துக்கொண்டான் பர்களையும் உதட்டையும்
கண்களிலே அனல்பொறி பறக்கக்
குடிலாக்ஷனைப் பார்த்து ஆக்கினை செய்கின்றான்
கிப்பக் குழந்தாய் கேள்-சோபனம், சோபனம்

கேளாய் குடிலாக்ஷா லலிதையென்பாளொருத்தி
கேடு செய்தாள் நமக்கினியவளை
வாளாலே லேசுலேசாகவே கொய்கிறோம்
வரவிடுவாய் என்றன் சேனையெல்லாம்
முன்கோட்டை வாசலில் காக்கும் சேனையைத் தள்ளி
மிச்சம் மீதியாயுள்ள சேனையெல்லாம்
பெண்கள் தவிர, மற்றப் பேர்களும் புறப்பட்டார்
பெண்கொடி லலிதைக்கு-சோபனம் சோபனம்

கழுதை, குதிரைகள் போன்றவகள் தேரில் பூட்டப் பட்டன. கரடி, சிங்கம், ஒட்டகம், கரும்பன்றி, காக்கை, பருந்து, கோழி, செந்நாய்கள், பாம்புகள், இன்னும் பூதப் ப்ரேதங்கள், வேதாளங்கள் போன்றவையும் வாஹனங்களாய் வந்து துணை செய்கின்றன. இதைத் தவிரவும் சாமானிய வாஹனங்களும் அநேகமாய் வருகின்றது. பண்டாஸுரன் கிளம்பும்போதே வழக்கம்போல் அபசகுனங்கள் தெரிய வருகின்றன. பூமாதேவி நடுங்கினாள். விண்ணிலிருந்து ரத்தம் சொரிந்தது. யானைகளுடைய தந்தங்கள் திடீரெனக் காரணமே இல்லாமல் முறிந்தன. இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் பண்டாஸுரன் கிளம்பி வருகிறான்.

எந்த உற்பாதமும் எண்னாமல் வருகிறான்
இலவம்பஞ்சு காற்றில் பறக்கின்றாப்போல்
பொல்லாத காலத்தில் பண்டாஸுரன் சேனை
புறப்பட்ட தம்மனை ஜயிக்கவென்றே
துஷ்டப் பண்டாஸுரன் வருவதைக் கண்டு
சூரிய சந்திரன் ஏழு சமுத்திரமும்
அஷ்டதிக் கஜங்களும் அலறி நடுங்கிற்று
அம்மனுக்கே ஜயம்- சோபனம் சோபனம்

Sunday, October 24, 2010

நீங்க பாசிடிவா? நெகடிவா?

இங்கே பார்க்கவும்
இதைப் பத்தி மறுபடியும் எழுத நேர்ந்ததுக்குக் காரணம் இருக்கிறது. நவராத்திரியில் மஞ்சள், குங்குமத்துக்கு வந்த என்னுடைய உறவுக்காரப் பெண் ஒருத்தருக்குக் கல்யாண வயதில் பையர் இருக்கிறார். பெண் பார்க்கிறார்கள். ஏற்கெனவே இப்போ கன்னிகளை விடவும், கன்யர்கள் (நன்றி தேவ்) நிறைய இருக்கின்றனர். பெண்கள் கிடைக்கிறதே கஷ்டமா இருக்கு. அந்தப் பெண் தன் பையருக்கு வந்த ஒரு பெண்ணை எல்லாப் பொருத்தங்களும் இருந்தும் இரு தரப்பிலும் புகைப்படம் பார்த்துப் பிடிச்சிருந்தும் வேண்டாம்னு சொல்லப் போறோம்னு சொன்னாங்க. காரணம் ரொம்ப சிம்பிள். பெண்ணுக்கு ஓ நெகட்டிவ் வகை ரத்தம். ஆதலால் வேண்டாம்னு சொல்லப் போறாங்களாம்.

பெண் வீட்டிலே இதைக் குறிப்பிடவில்லை என்றால் கட்டாயமாய்ச் சம்மதம் சொல்லி இருப்பாங்களோ?? ஆமாம்னு நினைக்கிறேன். நெகட்டிவ் வகை ரத்தமாய் இருந்தால் குழந்தை பிறக்கும்போது பாதிப்பு ஏற்படும் என்று பயம் அவங்களுக்கு. உண்மைதான் இல்லைனு சொல்லவே இல்லை. எனக்கு அந்த அநுபவம் உண்டு. என்னுடையதும் ஓ நெகட்டிவ் வகை ரத்தமே. ஆனால் எங்க கல்யாணத்தில் அதை எல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்கலை. முதல் குழந்தைக்கு மஞ்சள் காமாலை பிறந்த மூன்றாம் நாளே கடுமையாக வந்தும் மருத்துவருக்குக் கூட ரத்தம் நெகட்டிவா, பாசிட்டிவா என்று அதைப் பார்க்கத் தோணலை. என் கணவருக்கு அந்தச் சமயம் மஞ்சள் காமாலை வந்து குணமாகி இருந்தால் அவரிடமிருந்து எனக்குத் தொற்றி, என்னிடம் இருந்து குழந்தைக்கு வந்திருக்குமோ என்ற கோணத்திலேயே யோசித்தனர். ஆனால் இரண்டாம் குழந்தைக்கு வயிற்றில் இருக்கும்போதே வந்து, பிறக்கும்போதே மஞ்சள் காமாலை, லிவர் என்லார்ஜ்மெண்ட் என்று தான் பிறந்தது.

இது அனைத்தும் அவங்களுக்கும் தெரியும். அதனால் வேண்டாம்னு சொல்றாங்க போல! ஆனால் இப்போ மருத்துவம் எவ்வளவோ முன்னேறி விட்டது. பெண்ணுக்கு நெகட்டிவ், ஆணுக்குப் பாசிட்டிவ் வகை ரத்தம் என்று குழந்தை பிறக்கும் முன்னாடியே கண்டு பிடித்தால் கர்ப்பம் தரிக்கும் போதே, அல்லது முன்னரோ பாதுகாப்புக்கள், தற்காப்புகள், அதற்கு உரிய மருந்துகள் என நிறையவே வந்தாச்சு. மேலும் இப்போது கர்ப்பம் தரிக்கும்போது இந்த ரத்தப் பரிசோதனையை நாம் கேட்டும் செய்யச் சொல்லித் தெரிந்து கொண்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பிரசவத்துக்கு முன்னரே எடுத்துக்கலாம். என்றாலும் இன்னமும் சிலர் நெகட்டிவ் வகை ரத்தம் உள்ள பெண்ணா?? வேண்டாம்னே சொல்றாங்க. அது கொஞ்சம் வருத்தமாவே இருக்கு! அந்தப் பெண்களுக்கும் கல்யாணம் ஆகும்,குழந்தை பிறக்கும். இறைவன் கொடுத்த வாழ்க்கையை வாழ்வாங்க என்றாலும், மனதளவில் கொஞ்சம் வருத்தம் ஏற்படும் என்றே தோன்றுகிறது.

என்னோட கேள்வி நெகட்டிவ் வகை ரத்த க்ரூப் பெண்களை வேண்டாம்னு ஏன் ஒதுக்கணும்?? எல்லா ரத்த வகையிலும் பாசிடிவ் நெகட்டிவ் இரண்டும் இருக்கு. நெகட்டிவ் வகை ரத்தம் நாம் கேட்டுப் பெறுவதில்லையே?? ரத்த க்ரூப் என்பது எது என்பது நம் கையிலும் இல்லை அல்லவா?? கறுப்பு நிறம் என்று ஒதுக்குவது எவ்வளவு தவறோ அவ்வளவு தவறு இதிலும் இருக்குனு என்னோட கருத்து. இதுக்கு நீங்க என்ன சொல்றீங்க??

எங்கே ரெடி, ஷ்டார்ட், வரிசையா வாங்க பார்க்கலாம்!

Friday, October 22, 2010

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 13


இப்போ அடுத்ததுக்குப் போகறதுக்கு முன்னால் ராம்ஜி யாஹூவின் நேயர் விருப்பம்.

த்ரயாணாம் தேவானாம் த்ரிகுண-ஜநிதானாம் தவ சிவே
பவேத் பூஜா தவ சரணயோர்-யா விரசிதா!
ததா ஹி த்வத் பாதோத்வஹன-மணிபீடஸ்ய நிகடே
ஸ்திதா ஹ்யேதே சச்வந்முகுலித-கரோத்தம்ஸ-மகுடா:

குணங்கள் மூன்று வகைப்படும். சத்வம், ராஜஸம், தாமஸம். சத்வ குணமே அனைத்திலும் மேலானதாய்ச் சொல்லப் படும். எனினும் எல்லாரிடமும் சத்வ குணமே மேலோங்கி இருப்பதில்லை. மூன்று குணங்களின் கலவையாகவே இருப்போம். இந்த மூன்று குணங்களின் மூலகர்த்தாவே அம்பிகைதான். லலிதா சஹஸ்ரநாமம் அம்பிகையை, “யோநிமுத்ரா த்ரிகண்டேசீ த்ரிகுணாம்பா த்ரிகோணகா” என்று கூறுகிறது. இந்த குணங்களில் ரஜோ குணம் மேலிட்டிருந்தால் அதனுடன் சம்பந்தப் பட்ட சைதன்யம் ஆன பிரம்மாவும், சத்வ குணம் மேலிட்டிருக்கும்போது விஷ்ணு சைதன்யமும், தமோ குணம் மேலிடும்போது ருத்ர சைதன்யமும் சம்பந்தப் படும். ஆகவே அம்பிகை இந்த ஈரேழு பதினான்கு உலகையும் ஈன்றவளாய், அனைத்துக்கும் மூத்தோளாய் இருக்கிறாள். அருள் கொண்டு ஈன்றது போல அவற்றைப் பாதுகாக்கவும் செய்கிறாள். தேவைப்படும்போது சம்ஹரிக்கவும் செய்கிறாள். மும்மூர்த்திகளையும் அவரவருக்கு உரிய தொழிலைச் செய்யுமாறு இயற்றுபவள் அம்பிகை என்பது இதன் மூலக் கருத்து.

இதையே அபிராமி பட்டர்,
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக்கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கிளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே!”

என்கின்றார். சக்தி தத்துவத்தில் இருந்தே சதாசிவ தத்துவம் தோன்றியதால் இங்கே அம்பிகையை மூத்தவள் என்கிறார். இன்னும் தெளிவாய்ச் சொல்லப் போனால் அம்பிகையில் மும்மூர்த்திகளும் அடக்கம். ஆகவே அம்பிகையைப் பூஜித்தால் மும்மூர்த்திகளையும் பூஜித்ததாகும் என்பதே இந்த ஸ்லோகத்தின் மையக் கருத்து. இதையே லலிதா சஹஸ்ரநாமம்,

ஸ்ருஷ்டி கர்த்ரீ ப்ரஹ்மரூபா கோப்த்ரீ கோவிந்த ரூபிணீ
சம்ஹாரிணீ ருத்ரரூபா திரோதானகரீ ஈஸ்வரீ
ஸதாசிவா அனுக்ரஹதா பஞ்சக்ருத்ய-பராயணா!

என்று கூறுவதை ஏற்கெனவே பார்த்தோம்.

இங்கே செளந்தர்ய லஹரியில் மேலும் மணிபீடஸ்ய நிகடே என்றும் கூறி இருக்கிறார் ஆசாரியாள். நம் சரீரத்தில் ஆறு ஆதாரங்கள் உள்ளன என்பதையும் அவற்றுக்கு உள்ள தத்துவத்தையும் ஏற்கெனவே பார்த்தோம். மூலாதாரம், மணிபூரகம், ஸ்வாதிஷ்டானம், அநாஹதம், விசுத்தி, ஆக்ஞா ஆகிய ஆறு ஆதாரச் சக்கரங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் நம் உடலின் ஒவ்வொரு தத்துவத்தைக் குறிக்கும். அதோடு சம்பந்தப் பட்டதே. எப்படி எனில் மூலாதாரம் (இளவேனில் காலம்)வஸந்தருதுவாகவும் 55 நாட்கள் கொண்டதாயும், (வறண்ட கோடைக்காலம்)மணிபூரகம் 52 நாட்கள் கொண்ட க்ரீஷ்மருதுவாகவும், ஸ்வாதிஷ்டானம் 62 நாட்கள் கொண்ட (மழைக்காலம்)வர்ஷருதுவாகவும், அநாஹதம் 54 நாட்கள் கொண்ட (இலையுதிர்காலம்)சரத்ருதுவாகவும், விசுத்தி72 நாட்கள் கொண்ட (முன்பனிக்காலம்)ஹேமந்த ருதுவாகவும், ஆக்ஞா 64 நாட்கள் கொண்ட (பின்பனிக்காலம்)சிசிர ருதுவாகவும் வர்ணிக்கப் படுகிறது. இந்த ஆறு ஆதாரங்களும் மூன்று கண்டங்களாயும் பிரிக்கப் பட்டுள்ளது. அக்னி கண்டம், சூர்ய கண்டம், சோம கண்டம். அக்னி கண்டத்தில் பிரம்மக்ரந்தி, சூர்ய கண்டத்தில் விஷ்ணு க்ரந்தி, ஸோம கண்டத்தில் ருத்ர க்ரந்தி. ஆறு சக்கரங்களின் வழியாகவும் தேவியை உள்முகமாய் வழிபட்டால், மும்மூர்த்திகளையும் வழிபட்டதாகும். கடைசியில் சஹஸ்ராரத்தில் சச்சிதாநந்த ஸ்வரூப தரிசனம்.

இதை லலிதா சஹஸ்ரநாமம்,
மூலாதாரைக-நிலயா ப்ரஹ்மக்ரந்தி-விபேதினீ
மணிபூராந்தருதிதா விஷ்ணுக்ரந்தி-விபேதிணீ
ஆக்ஞா-சக்ராந்தராலஸ்தா ருத்ரக்ரந்தி-விபேதினீ
ஸஹஸ்ராராம்புஜாரூடா ஸூதாஸாராபி-வர்ஷிணீ!!

என்று சொல்கிறது.

ஒவ்வொரு ஆதார சக்கரத்தின் வழிபாட்டின் மூலமும், சக்தியானவள் ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள ஒவ்வொரு முடிச்சையும் அவிழ்த்துக்கொண்டு மேலே ஏறி சஹஸ்ராரத்தில் நிலை பெற்று இருக்கிறாள். இது யோகியருக்கே புரியும். நம் போன்ற சாமானியருக்கு எளிதில் புரியாது. குரு மூலமாகவே முயலவேண்டும். நம் உடலின் பஞ்சபூத தத்துவங்கள், இவ்வுலகின் பஞ்சபூத தத்துவங்களோடு பெரிதும் சம்பந்தப் பட்டிருக்கிறதைப் புரிந்து கொள்ள முடியும். அதைப் புரிந்து கொண்டோமானால் இந்த வார்த்தைகளுக்குப் பொருளும் எளிதில் விளங்கும்.

மூலாதாரம்-பூமி தத்துவம்
மணிபூரகம்- ஜல தத்துவம்
ஸ்வாதிஷ்டானம்-அக்னி தத்துவம்
அநாஹதம்-வாயு தத்துவம்
விசுத்தி- ஆகாயதத்துவம்
ஆக்ஞா- மனஸ் தத்துவம்

இந்த ஆறு ஆதாரங்களும், பஞ்ச பூதங்களும் காலகதிக்கு உட்பட்டவை, ஆனால் தேவியோ காலத்தைக் கடந்து என்றென்றும் நிற்பவள். இவ்வுலகத்தை அண்டம் என்கின்றோம். அதே பஞ்ச பூதங்களைக் கொண்ட நம் உடலோ பிண்டம் எனப்படும். நம் உடலின் மூலப் பொருட்கள் ஒன்பது. இவ்வுலகின் மூலப் பொருட்களும் ஒன்பது. ஆகவே அம்பிகையும் நவகோண நாயகியாவாள்.

Thursday, October 21, 2010

சித்தப்பாவுக்கு எண்பது வயசாமே!!!!


முதல் முதல்லே சித்தப்பாவைப் பார்க்கும்போது எனக்குப் பத்து வயது இருக்கும். மீனாக்ஷி கோயில் கும்பாபிஷேஹத்திற்காக மதுரையில் இருக்கும் தன்னோட அத்தை வீட்டுக்கு அம்மாவோடு வந்தவர், அப்படியே அன்று சாயந்திரமே என் அப்பாவின் முயற்சியால் சித்தியைப் பெண்பார்த்துவிட்டுப் போனார். அன்னிக்கு அவர் ஒரு கதை சொல்ல ஆரம்பிச்சதும், அந்தக் கதை எனக்குத் தெரிந்தது என நான் சொன்னதும் இன்னமும் நினைவில் இருக்கு. அதுக்கு அப்புறமாய் வங்கி வேலைக்காகப் பரிக்ஷை கொடுக்கச் சென்னை வந்தால் சித்தி வீட்டில் தான் தங்குவேன். மாதக் கணக்கில் தங்கி இருக்கேன். என்னிடம் உள்ள அன்பின் காரணமாயும், என் அப்பாவின் மேல் உள்ள மதிப்பின் காரணமாயும் என் திருமணத்திற்குப் பிள்ளை பார்த்து, அதை முடித்தும் வைத்தார். என்னோட கல்யாணத்திற்குத் தனிப்பட்ட பரிசாக முதல் முதல் வந்த அவரோட சிறுகதைத் தொகுப்பு வாழ்விலே ஒரு முறையைப் பரிசளித்தார். பல வருடங்கள் இருந்த அந்தப் புத்தகம் ஏதோ ஒரு ஊருக்கு மாற்றலாகும்போது காணாமல் போயிருக்கு! :(

ஓரளவாவது இன்று நான் எழுதுகிறேன் என்றால் அதுக்குக் காரணம் அங்கே இருந்தப்போப் படிச்ச புத்தகங்கள், சித்தப்பா எழுதும்போது பார்த்துக் கொண்டிருந்தது, இன்னும் அவரைக் காண வரும் பிரபலங்கள் என்று பல காரணங்கள் சொல்லலாம். ஒரு மாபெரும் நூலகமே இருந்தது. கல்யாணம் ஆனதுக்குப் பின்னரும் தியாகராயநகர் வந்தால் அங்கே இருந்து புத்தகங்களை எடுத்துக்கொண்டு வந்து படிப்போம். அப்புறம் வட மாநிலங்கள் சென்றதில் எல்லாம் போச்சு, அதோடு அவங்களும் பழைய வீட்டைக் கொடுத்து அடுக்குமாடிக்குடியிருப்புக் கட்டியபோது புத்தகங்களை எடைக்குப் போட்டுவிட்டதாய்ச் சொன்னார். ரொம்ப வருத்தமாய் இருந்தது. அந்தக் காலத்து துப்பறியும் சாம்புவில் ஓவியர் ராஜு வரைந்த படங்களோடு இருக்கும். ஓவியர் மாலியின் கேலிச் சித்திரங்கள், எஸ்விவியின் தொடர்கள், துமிலனின் கட்டுரைகள், கல்கி கர்நாடகம் என்ற பெயரில் எழுதியவை, ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார் என மாபெரும் பொக்கிஷமே இருந்தது.

செப்டெம்பர் 22-ம் தேதியே ஆங்கில வருடத்தின் படி பிறந்த நாள் என்று தெரியும், என்றாலும் எண்பது என்பது இன்னிக்குச் சித்தி சொல்லித் தான் தெரியும். சமீப காலங்களில் கண் சரியாய்த் தெரியாததால் புத்தகங்கள் படிக்கக் கஷ்டமாய் இருப்பதைப் பற்றிச் சொல்லி வருந்தி இருக்கிறார். தனியாய் வெளியே போக முடியவில்லை. மேலும் சென்ற மாதம் கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு மருத்துவமனையில் இருந்திருக்கிறார். ஆகையால் சரஸ்வதி பூஜை அன்று தமிழ் மாதப் படி வந்த அவரின் நக்ஷத்திரப் பிறந்த நாளை வீட்டு மனிதர்கள் வரையில் கொண்டாடியதாய்ச் சித்தி சொன்னார். தலையைத் தொட்டுப் பார்த்தேன். இன்னும் ரத்தம் கட்டி வீக்கம் வடியவில்லை.

சீக்கிரம் குணமடையப் பிரார்த்திப்பதோடு, தாமதமான வாழ்த்துகளையும் நமஸ்காரங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஓ, தெரியாதவங்களுக்கு! சித்தப்பா பெயர் அசோகமித்திரன்!

Wednesday, October 20, 2010

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 12

ஹர –நேத்ராக்னி-ஸந்தக்த-காம-ஸஞ்ஜீவ நெளஷதி:

ஈசன் காலாக்கினி ருத்ரனாகத் தன் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்தபோது அம்பிகையானவள் தன் குளிர்ந்த நோக்கால் சஞ்சீவனி மருந்து போலச் செயல்பட்டு மன்மதனைப் பிழைக்க வைத்தாள். அத்தகைய சஞ்சீவனி போலவே ருத்ரன் உலகங்களை எரிக்கும்போது எரிந்த உலகிற்குக் குளிர்ச்சியைத் தன் பார்வையால் கொடுத்து மன்மதனைப் பிழைக்க வைத்தது போல் அனைவரையும், உலகங்கள் அனைத்தையும் பிழைக்க வைக்கிறாள். ஈஸ்வரனுடைய ஸ்வரூபத்தோடு அம்பிகையின் ஸ்வரூபமும் கலந்திருக்கின்றதாவது பூவிலே எப்படி மணம் சேர்ந்திருக்கிறதோ அவ்வாறு இருக்கிறதாம். பூவிலிருந்து சுகந்தத்தை எவ்வாறு பிரிக்க இயலாதோ, அக்னியில் இருந்து பிரகாசத்தை எவ்வாறு பிரிக்க இயலாதோ அப்படியே ஈஸ்வரனையும் அம்பிகையையும் பிரிக்க இயலாது. இந்த அபூர்வ தம்பதிகளின் ஆநந்தமயமான பிரகாசமே அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் ஜீவாதாரமாய் விளங்குகிறது. இதையே லலிதா சஹஸ்ரநாமத்தில் வ்யோமகேசீ, விமானஸ்தா” என்று கூறுகின்றனர். இதை ஆகாச தத்துவம் எனவும் கூறுவர். அர்த்தநாரீச்வரரைக் குறிப்பதாயும் கூறுவார்கள்.

இதை பட்டர்

“அதிசயமான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி
பதிசயமான தபசயமாகமுன் பார்த்தவர் தம்
மதிசயமாக அன்றோ வாமபாகத்தை வவ்வியதே!

தேவியின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அவ்வளவு அதிசயமான வியப்பைத் தரும் திருவுருவை உடைய தேவி, அழகிய தாமரை மலர்களால் துதிக்கப்படும் அந்தத் தேவியே அந்தத் தாமரைக்கொடி போன்ற மெல்லிய உடலை உடைய அழகியவள், மன்மதனை எரித்துச் சாம்பலாக்கிய ஈசனைத் தன் வயம் இழுத்து அவரது இடப்பாகத்தைக் கவர்ந்து கொண்டதை எங்கனம் சொல்லுவேன்? என்கிறார். மேலும், அந்த வாமபாகத்து இறைவரும், நீயும் மகிழ்ந்து ஒன்றி இருக்கும் கோலமும், நம் உள்ளத்துள்ளே உள்ள ஆணவத்தைப் போக்கி நம்மைத் தடுத்தாட்கொள்ளுகிறதாம். அதுவும் எப்போது?? “வெவ்விய காலன் என்மேல் வரும்போது வெளிநிற்கவே!” என்கிறார்.

“வவ்விய பாகத்திறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என்மேல் வரும்போது வெளிநிற்கவே!”

காலன் வந்து நம் உயிரைக்கொள்ளும்பொருட்டு வரும்போது அம்பிகையின் தரிசனம் வேண்டிப் பிரார்த்திக்கொள்ளவேண்டும் என்கிறார் பட்டர். இனி லலிதையின் சேனை எவ்வாறு யுத்தம் செய்தது என்று பார்ப்போம்.

“பண்டஸைந்ய-வதோத்யுக்த-சக்தி-விக்ரம-ஹர்ஷிதா!
நித்யா-பராக்ரமாடோப-நிரீக்ஷண-ஸமுத்ஸூகா!!
பண்டபுத்ர-வதோத்யுக்த-பாலா-விக்ரம-நந்திதா!
மந்த்ரிண்யம்பா-விரசித-விஷங்க-வத-தோஷிதா!
விசுக்ர-ப்ராணஹரண-வாராஹீ-வீர்ய-நந்திதா!
காமேச்வர-முகாலோக-கல்பித-ஸ்ரீகணேஸ்வரா!
மஹாகணேச-நிர்பின்ன-விக்னயந்த்ர-ப்ரஹர்ஷிதா!
பண்டாஸூரேந்த்ர-நிர்முக்த-சஸ்த்ர-ப்ரத்யஸ்த்ர-வர்ஷிணீ!!


மேற்கண்ட ஸ்லோகங்களில் நடைபெறும் சம்பவங்களையே இன்று பார்க்கப் போகிறோம். பண்டாசுரனை வதம் செய்யவென்று அம்பிகை அனுப்பிய சேனைகளோடு முதலில் மந்திரி போர் செய்ய வந்தான். நாற்பது அக்ஷெளஹிணி சேனைகளைக் கொண்டு யுத்தம் செய்தவனை சம்பத்கரி வதைக்கிறாள். அதன் பின்னர் அனுப்பிய குண்டனை அச்வாரூடை சம்ஹரிக்க, தன் சேனாபதிகள் ஐவரை அனுப்பி வைக்கிறான். கூடவே விஷமான மாயைகளையும், சர்ப்பேணிப் பிசாசுகளையும் அனுப்பிப் பயமுறுத்துகிறான். அந்தச் சர்ப்பேணியானவள் அசுரனின் கட்டளையாலே பல பாம்புகளைப் பெற்று அவற்றை எல்லாச் சக்திகளின் மேலும் ஏவிவிடுகிறாள்.

“விதவித சர்ப்பங்கள் விஷத்தைக் கக்கிக்கொண்டு
விழுந்ததுகள் சக்திசேனையின் மேல்
இதைக்கண்டு நகுலியம்மன் கருடன் தோளில்
இருந்ததிவேகமாய் ஓடி வந்து
பாம்புக்கு ம்ருத்யுவாம் கீரிப்பிள்ளைகளைப்
பல்லுகளிலிருந்து விழவடிஅத்தாள்
அம்மெட்டுப் பாம்பையும் துண்டாக்கியது
அம்மன் கீரிப்பிள்ளைகள்-சோபனம் சோபனம்

இதைக் கண்ட பண்டாசுரன் தன் ஏழு பிலாஸ்கார் மந்திரி ராணுவத்தை அனுப்பி சூரியனையும் மிகவும் வருத்தித் தன் வரத்தாலே அம்மன் சேனையை ஸ்தம்பிக்க வைத்தான். அப்போது தண்டினி முன்னால் ஓடோடி வந்து மந்திரிகளின் கண்களைக் குருடாக்கி அனைவரின் தலைகளையும் கொய்து மாலையாகப் போட்டுக்கொள்கிறாள். பண்டாசுரன் தன் சகோதரர்களோடு கலந்து ஆலோசித்துவிட்டுக் குடிலாக்ஷனை மேலும் சேனைகளோடு அனுப்பி லலிதையை உயிரோடு பிடித்துக்கொண்டு வரச் சொல்கிறான். தேரைச் சுற்றி வளைத்துக்கொண்ட குடிலாக்ஷனின் கொடுமையால் சக்திகள் தேவியிடம் முறையிடுகின்றனர். அப்போது,

“பின்னே கள்ளர் வந்து செய்யுங் கலகத்தைப்
புரட்டுச் செய்கையைத் தேவியறியாமல்
முன்னே தண்டநாதைச் செய்கின்ற சண்டையின்
வேடிக்கை பார்த்தம்மனிருந்து விட்டாள்
துரோகி விஷங்கள் ஒரு பாணத்தால் தேரின்
துலங்குங் கொடிதன்னை அறுத்துவிட்டான்
வேகமாய்ப் புருவங்களை அம்மன் கோபத்தால்
வில்லுப்போல வளைத்தாள்- சோபனம், சோபனம்.

அன்னையின் கோபத்தைக் கண்ட பதினைந்து காமேச்வர சக்திகள் அசுரனைக் கொல்ல அம்மனால் அனுப்பப் பட்டனர். ஜ்வாலா மாலினி முதல் பதினைந்து அசுரர்களையும் கொன்றழிக்க, குடிலாக்ஷனை வாராஹி துரத்துகிறாள். பின்னர் ஜ்வாலா மாலினியின் உதவியோடு அக்னிக் கோட்டையை நிர்மாணம் செய்து சக்திகள் அனைவரோடும் அம்பிகை உள்ளே இருக்கின்றாள்.

“குடிலாக்ஷனையும் துரத்தினாள் வாராஹி
கூடிவந்த அஸுராளைக் கொன்றாள்
விடியற்காலங் கண்டு விஷங்கன் செய்ததுகளை
விசையாய் மந்த்ரிணி தண்டநாதையுமாய்
அம்பாவிடத்தில் சொல்லி ஜ்வாலாமாலினியாலே
அக்னிக்கோட்டையைப் போடச் சொன்னாள்
தென்புறம் வீதியொரு யோஜனை வாசலில்
ஸ்தம்பினியும் காவல்-சோபனம் சோபனம்.

முப்பது யோஜனை உயரமுள்ள கோட்டை
முழுவதும் நூறு யோஜனை சுற்றளவு
இப்படி ஸ்ரீசக்கரத் தேருஞ் சேனையுங் கொண்டு
இருக்கின்றார் சக்திகள் தீக்கோட்டைக்குள்
தம்பியும் மந்திரியும் தப்பி வந்ததையும்
சலியாத தீக்கோட்டை மஹிமை கேட்டு
அன்பாய் முப்பது பிள்ளைகளைப் பண்டன்
சண்டைக்கு அனுப்பினான் தேவி மேல்-சோபனம், சோபனம்

இப்போது பாலா திரிபுரசுந்தரியை அனுப்புகிறாள் தேவி. தண்டினியும், மந்த்ரிணியும் துணைக்கு வர, சின்னஞ்சிறு பெண்ணான பாலா கண்டித ரதத்தில் ஏறிக்கொண்டு போருக்குப் போகிறாள். பண்டபுத்ர-வதோத்யுக்த-பாலா-விக்ரம-நந்திதா!” என மேலே கூறியுள்ள படிக்கு பண்டாசுரனின் புத்திரர்களையும், கூட வந்த அசுரர்களையும் பாலா திரிபுர சுந்தரி அழிக்கிறாள். அதைக் கேள்விப் பட்ட பண்டாசுரன் கொடிய அசுரன் ஆன விசுக்கிரனை அனுப்பி விக்ன யந்திரம் செய்யச் சொல்கின்றான்.

“பாலாதேவி கையால் பிள்ளைகள் மாண்டதைப்
பண்டன் கேட்டுப் புலம்பி அழுதான் மெத்த
கொலைபாதகன் விக்னயந்திரஞ் செய்யச் சொல்லிக்
கொடூரன் விசுக்கிரனை அனுப்பி வைத்தான்
துஷ்ட விசுக்கிரன் அக்னிக்கோட்டையில் வந்து
சுற்றி உள்ளே போகமாட்டாதே
கெட்டவன் பாறையில் எட்டுத் தேவதேயந்திரம்
சீறி ஏவினான் கேளும்-சோபனம் சோபனம்

யந்திரத்தால் சக்திகள் புத்தி மயங்கியே
எல்லோரும் ஸ்தம்பித்து இருந்தார்கள்
தண்டினி, மந்த்ரிணி, அம்பாளிடத்திற்குச் சொல்ல
மாதாவும் காமேசர் முகத்தைப் பார்த்தாள்
சக்தி கணபதி சுத்த லக்ஷணத்துடன்
திடுமென்று குதித்து வ்ந்து யந்திரத்தைக்
குத்தித் தன் கொம்பாலே தூளாய்ப் பறக்கவிட்ட
குஞ்ஜார முகர்க்குச் –சோபனம், சோபனம்

விசுக்ர-ப்ராணஹரண-வாராஹீ-வீர்ய-நந்திதா!
காமேச்வர-முகாலோக-கல்பித-ஸ்ரீகணேஸ்வரா!
மஹாகணேச-நிர்பின்ன-விக்னயந்த்ர-ப்ரஹர்ஷிதா!

அம்பாள் தன் பார்வையைக் காமேச்வரர் பக்கம் திருப்ப, அம்பாளின் மறுபாதியான ஈசனும் அம்பிகையின் எண்ணம் தெரிந்து விக்னேஸ்வரரை அவதரிக்க வைக்கிறார். விக்னேஸ்வரர் வந்து தன் கொம்பாலே விக்ன யந்திரத்தைப் பொடிப் பொடியாக்கி நிர்மூலமாக்கி அம்பாள் மனதைக் குளிர வைக்கிறார்.

நாளை பண்டாசுரனின் சகோதரர்கள் வதமும், பண்டாசுரன் யுத்தம் செய்தலும்

ஒரு யோஜனை என்பது கிட்டத் தட்ட பனிரண்டு, அல்லது பதின்மூன்று மைல்களைக் குறிக்கும்.

டிஸ்கி: இன்னிக்குப் படம் காட்டாதே என்று ப்ளாகர் காலம்பர இருந்து சொல்லிட்டு இருக்கு. முடிஞ்சால் படங்களை நாளை சேர்க்கிறேன்.

கூடிய வரைக்கும் ரொம்பவே எளிமையான வார்த்தைகளாய்ப் போட்டே விளக்கம் சொல்கிறேன். தத்வார்த்தமான விளக்கத்துக்கு எல்லாம் போகலை! ஆகவே புரியலைனா சொல்லிடுங்க. :)))))))

Tuesday, October 19, 2010

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 11


“ஸுமேரு – மத்ய- ஸ்ருங்கஸ்தா ஸ்ரீமந்நகர -நாயிகா!
சிந்தாமணி-க்ருஹாந்தஸ்தா பஞ்ச –ப்ரஹ்மாஸன –ஸ்திதா!!
என்று லலிதா சஹஸ்ரநாமம் சொல்லியபடிக்கு லலிதா காமேஸ்வரரின் திருக்கல்யாணத்துக்குப் பின்னர் ஸ்ரீபுரத்தில் ஸ்ரீகாமேஸ்வரரோடு வீற்றிருந்த தேவியிடம் தேவாதி தேவர்கள் பண்டாசுர வதம் பற்றி நினைவூட்டுகின்றனர். அம்பிகையும் இதற்கெனவே தான் தேவ கார்யத்துக்காக அவதாரம் எடுத்திருப்பதால் இனி தாமதிக்கக் கூடாதென்று தன் சேனைகளைத் திரட்டிக்கொண்டு பண்டாஸுரனோடு யுத்தம் செய்யத் தயாராகின்றாள். இதை லலிதா சஹஸ்ரநாமம் “தேவர்ஷி-கண-ஸங்காத ஸ்தூயமானாத்ம-வைபவா
பண்டாஸுர-வதோத்யுக்த சக்திஸேனா-ஸமன்விதா!! என்று கூறுகிறது.

“ரதகஜ துரக பதாதிகளுடன் கடல்
அலைபோல வருகின்றாள் சேனையுடன்
சதுரங்கமான சக்தி சேனைகளுடனே
சங்கரி வருகிறாள் –சோபனம் சோபனம்

சக்ரராஜ-ரதாரூட-ஸர்வாயுத-பரிஷ்க்ருதா
கேயசக்ர-ரதாரூட- மந்திரிணீ-பரிஸேவிதா
கிரிசக்ர-ரதாரூட-தண்டநாதா-புரஸ்க்ருதா
ஜ்வாலாமாலினிகாக்ஷிப்த-வஹ்னி ப்ராகார-மத்யகா
பண்டஸைன்ய-வதோத்யுக்த-பாலா விக்ரம-நந்திதா
மந்த்ரிண்யம்பா-விரசித-விஷங்க-வத-தோஷிதா

ஸ்ரீசக்ர ராஜ ரதத்திற்கொன்பது தட்டு
சிங்கார உருளைகள் நான்கு வேதம்
பூஜ்யமான தர்மார்த்த காம மோக்ஷம்
புனிதமான நான்கு குதிரைகளாம்
ஆனந்தக் கொடிமரம் அதற்கு மேலழகாய்
ஐந்து யோசனை யகலம் முத்துக்குடை
முந்நூறு தேர்ப்படை முழுதுஞ் சக்திகள் வாராள்
முழுத்தேரும் தேவிக்குச் –சோபனம் சோபனம்


அம்மன் தொரட்டியில் இருந்துமொரு தேவி
ஸம்பத்கரி என்று உண்டானாள்
நன்மையாகவே பின்னும் அச்வாரூடை யுதித்தாள்
நாகபாசத்திலே உண்டாகி
யானைகள் ஸம்பத்கரிக்குச் சேனையாம்
அச்வாரூடைக்குக் குதிரைகளாம்
தாயார் மந்திரிணியுடைய ஸ்ரீசக்ரத்தில்
தட்டுக்களேழுண்டு-சோபனம் சோபனம்

மந்த்ரிணி தேரிலும் ஸ்ரீசக்ரம்போலவே
மஹாசக்திதேவிகள் நிறைந்திருக்காள்
விந்தையாய்ப் பதினாறு நாமத்தால் தேவர்கள்
மந்த்ரிணியை ஸ்தோத்திரங்கள் செய்தார்
சியாமளையுடைய திருக்கையிலிருந்து
தானும் பாணத்தோடொரு கோதண்டத்தை
நமஸ்கரித்தம்மனிடம் வாங்கியே மந்த்ரிணி
நாயகி வருகிறாள் –சோபனம் சோபனம்


பைரவி, பஞ்சமி பாசாங்குசைபஞ்ச பாணிவஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும் கலா
வைரவி மண்டலி மாலினி சூலி வாராஹி என்றே
செயிர் அவி நான்மறை சேர்திருநாமங்கள் செப்புவரே!”
என்கின்றார் அபிராமிபட்டர்.


பைரவியும்=பைரவரின் சக்தியான இவள் பார்த்தாலே அச்சம் தருபவளாயும், பஞ்சமியும், சதாசிவத்தின் சக்தியைப் பஞ்சமி என்பார்கள் இங்கே! இது ஐந்தாவது சக்தியான அனுகிரஹ சக்தியாகும். லலிதா சஹஸ்ரநாமம் இவளை, “பஞ்சமி, பஞ்சபூதேசீ பஞ்ச-ஸக்யோபசாரிணீ!” என்கிறது. வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர் சண்டி=சண்டிகா தேவி, கோபத்தோடு வந்து அசுரனை வதம் செய்தவள். “அபர்ணா, சண்டிகா, சண்டமுண்டாசுர நிஷூதனி” என லலிதா சஹஸ்ரநாமம் கூறும். அடுத்து காளி, கருநிறமுள்ள காளியை “மஹேச்வரி, மஹாகாளி” என லலிதா சஹஸ்ரநாமம் கூறும். கலா வைரவி மண்டலி =சூரிய, சந்திர மண்டலங்களில் வீற்றிருப்பதைக் குறிக்கும். மாலினி=அக்ஷரமாலையைச் சூடியவள், சூலினி=சூலத்தை ஆயுதமாகக் கொண்டவள், , வாராஹி, விஷ்ணு சக்தி வகையைச் சேர்ந்தவளான இவளை அம்பிகையின் அம்ச சக்திகளுள் தண்டினி என்னும் பெயரோடு அழைக்கப் படுவாள்.

இவ்வாறு அம்பிகை பல சக்திகளாய் விரிந்து நிறைந்து இருப்பதையே பட்டர்,
ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்திவ்வுலகெங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா இப்பொருள் அறிவார்
அன்றால் இலையில் துயின்றெம்பெம்மானும் என் ஐயனுமே.”
என்கின்றார்.

“வாராஹி தேரிலும் சக்திகள் இருக்கின்றார்
வாராஹிப்போன்ற ப்ராக்கிரமமாய்க்
கோரமஹிஷம் மிருகம் சிம்ஹம் யாளிமேல்
கூட வருகிறார் சக்திகளும்
தண்டெடுத்து வரும் வாராஹியைப் போற்றி
அப்ஸரஸ்த்ரீகளும் தேவர்களும்
கண்டு பன்னிரண்டு நாமத்தால் வாராஹியைக்
கைகூப்பி ஸ்துதிக்கின்றார்-சோபனம் சோபனம்

ஆலவட்டம் வெண்கத்திக்குடைகள் கொடிகள்-கொண்டு
அஸுராள் மேல் கோபிஷ்டைகளாகக்
கோலாஹலமாக யுத்த பேரி வாத்யம் முழங்க
கொடி பறக்க அணியணியாய் வாராள்
தேவ வாத்தியம் முழங்க கந்தர்வர் கானம் பண்ண
தேவதாஸிகள் நாட்டியமாடிவர
தூயமுனிவர் மலர்சொரிய லலிதேச்வரி
சுகத்துடன் வருகிறாள்-சோபனம் சோபனம்

தேவி யுத்தத்திற்கு வருகின்றதைக் கேட்டு
திடுக்கிட்டுப் பண்டாஸுரன் சபையில்
கோபத்துடனே சிம்ஹாசனத்திலிருந்து
கூடிய அஸுராளோடு யோசித்தான்
இடிபோல் அட்டகாசஞ் செய்தான், கோட்டை வாசல்கள்
எல்லாவற்றிலும் காவல் வைக்கச் சொன்னான்
குடிலாக்ஷன் மந்திரியை யுத்தத்திற்கனுப்பினான்
கோபிஷ்டை லலிதையுடன் – சோபனம் சோபனம்

அடுத்து விநாயகர் உற்பத்தியும், விக்ன யந்திரம் அழிதலும் பார்க்கலாம்.

Saturday, October 16, 2010

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 10


நவராத்திரி ஒன்பதாம் நாளான இன்று ஆயுதங்களால் கோலம் போட்டு அலங்கரித்து, அம்பிகையை மஹாசரஸ்வதியாக, ஆதிகாரணியாக ஆவாஹனம் செய்யவேண்டும் . சிறு பெண் குழந்தையை சரஸ்வதியாகப் பாவித்து வழிபடவேண்டும். கடைசிநாளான விஜயதசமி அன்று அம்பிகையும், ஈசனும் சேர்ந்திருக்கும் சிவசக்தி ஐக்கியம். அன்றையதினத்து விஜயா முஹூர்த்தத்தில் தான் அவள் அம்பு போட்டு அசுரனை வதம் செய்ததால் அந்த நேரம் சுப முஹூர்த்தநேரமாகவும், நல்ல காரியங்களை ஆரம்பிக்கக் கூடிய நேரமாகவும் குறிப்பிடப் படுகின்றது. நவராத்திரி ஆரம்பத்தின்போது தங்கள் சக்திகளை எல்லாம் அம்பாளிடம் ஒப்படைக்கும் தேவாதிதேவர்கள் சக்தியை இழந்து ஒரு பொம்மையைப் போல் இருப்பார்கள். அதை நினைவூட்டும் விதத்திலேயே பொம்மைக்கொலு வைக்கும் வழக்கம் ஏற்பட்டது என்பார்கள். இதைச் சென்ற வருடமே பார்த்தோம். தேவர்களின் அனைத்து சக்தியும் அம்பிகையிடம் சென்றதால் அவர்கள் சக்தியில்லாமல், இயக்கங்கள் இல்லாமல் பொம்மையைப் போல் இருந்ததாலேயே பொம்மைகளை வைத்து வழிபடும் வழக்கம் தோன்றியது என்பதும் ஆன்றோர் கருத்து. பொதுவாகப் பருப்புப் பாயசம், அதிரசம் அல்லது அப்பம், உளுந்து வடை, சிய்யம், கொண்டைக்கடலைச் சுண்டல் போன்றவையே நிவேதனமாய்ச் செய்யப் படும். என்றாலும் நவராத்திரி ஒன்பது நாளும் பெண்குழந்தையை வைத்து வழிபட்டவர்கள் வெண்பொங்கல் செய்து கறிவடாம் பொரித்துச் சாப்பிடக் கொடுக்கலாம். குழந்தைக்குப் பிடித்த ஆடைவகைகளையும் கொடுக்கலாம்.

பெரும்பாலான சிவன் கோயில்களில் மஹிஷாசுர வதமும், சில கோயில்களில் வதம் முடிந்து அம்பாள் சிவபூஜை செய்யும் கோலமும் அலங்கரிக்கப் படும். சிவனும், சக்தியும் ஸமமாகவே இருக்கின்றார்கள். அங்கே ஆணாதிக்கம் என்ற பேச்சோ, பெண்ணீயம் என்ற பேச்சோ கிடையாது. சிவனுக்கு ஸமய: என்றும் சக்திக்கு ஸமயா என்றும் பெயர். அதே போல் சிவ-சிவா என்றாலும் ஈசனையும், சக்தியையும் குறிக்கும். பைரவர், பைரவி என்பதும் அவர்களின் சமத்துவத்துக்கு எடுத்துக்காட்டு. இப்படிப் பெயர்களின் மூலம் காட்டும் ஸமம் நாம ஸாம்யம் எனப்படுகிறது. அவர்களின் ரூபலாவண்யத்தால் சிவந்த நிறம், இருவருக்கும் மூன்று கண்கள், தலையில் பிறை அலங்கரிப்பது போன்றவை ரூப ஸாம்யம் எனப்படும். ஆதியும் அந்தமும் இல்லா இந்தத் தம்பதிகளை வழிபட்டு அம்பாளைச் சிறப்பாக ஸ்ரீவித்யா வழிபாட்டின் மூலம் வழிபடுகிறவர்களின் தாம்பத்தியத்தில் பரஸ்பரம் சிநேகபாவம் உண்டாகும். மேலும் ஆண்களுக்குக் கர்மாக்களைச் செய்வதில் முக்கியத்துவம் கொடுத்திருப்பது போல பெண்களுக்குக் குடும்ப விஷயங்களில் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இவை இரண்டும் சமமாக நடந்தாலே அந்தக் குடும்பம் “நல்லதொரு குடும்பம், பல்கலைக்கழகம்” என்னும்படிக்குச் சிறப்பாக இருக்கும். சிவ தத்துவம் சக்தியில் அடங்கியது. சக்தி சிவத்தோடு சேர்ந்தது. ஒன்றில்லாமல் ஒன்றில்லை. இதையே அபிராமி பட்டர்,

தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே அவர் தமக்கன்னையும் ஆயினள் ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்
துவளே இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே!’

என்கிறார். சக்தி தத்துவத்தில் இருந்தே சதாசிவ தத்துவம் தோன்றுதலால் “அவர் தமக்கு அன்னையும் ஆயினள்” என்கின்றார் பட்டர். இதே கருத்தைத் திருவாசத்தில் மணி வாசகரின் பொற்சுண்ணம் இடித்தலிலும் சிதம்பரச் செய்யுட்கோவையிலும், மீனாக்ஷி அம்மன் அம்மானையும் காணக்கிடைக்கிறது என்பது ஆன்றோர் கூற்று. மனைவியைத் தாய் என்றும், சக்திதான் சிவத்தை யீன்றது என்றும் கூறுவார்கள். இதனுடைய உள்ளார்ந்த கருத்து நமக்கு இந்தக் குறிப்பிட்ட யோகப் பயிற்சியை குரு மூலம் தீக்ஷை பெற்று மேற்கொள்ளும்போதே புரியவரும்.

அம்பிகையானவள் நம்முடைய ஆக்ஞா சக்ரத்தில் மனமாகவும், விசுத்தி சக்கரத்தில் ஆகாயமாகவும், அநாஹத சக்ரத்தில் வாயுவாகவும், ஸ்வாதிஷ்டானத்தில் அக்னியாகவும், மணி பூரகத்தில் ஜல தத்துவமாகவும், மூலாதாரத்தில் ப்ருத்வி என்னும் பூமி தத்துவமாகவும் விளங்குகிறாள். இன்னும் சொல்லப் போனால் இந்தப் பிரபஞ்சமே அம்பிகையாகவே பரிணமிப்பதாய் சாக்தர்கள் சொல்வார்கள். என்றாலும் அவள் தன்னைப் பரமசிவனுடைய பத்னி என்னும் பாவனையால் இவற்றை எல்லாம் ஏற்றுக்கொண்டு சிவசக்தி ஐக்கிய வடிவான சச்சிதானந்தத்தை நமக்கும் காட்டுகிறாள். இதையே அபிராமி பட்டரும்,

பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர் விசும்பும்
ஊரும் முருகு சுவைஒளி ஊறொலி ஒன்றுபடச்
சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே
சாரும் தவம் உடையார் படையாத தனம் இல்லையே.”

என்கின்றார். ஐந்து பூதங்களையும் அவற்றால் விளையும் ஐந்து தன்மாத்திரைகள் ஆன கந்தம், சுவை, ஒளி, பரிசம், சத்தம் ஆகியவற்றையும் ஒன்றுக்கொன்று இசைந்து செல்லும்படியாக அவற்றினிடையே வியாபித்து நிற்பவள் சிவகாம சுந்தரியான அந்த சாக்ஷாத் அம்பிகையே ஆவாள். அவள் திருவடியைத் தொழுவோர்க்குக் கிட்டாத செல்வம் ஏதும் இல்லை என்பதே இதன் பொருள்.

இனி ஸ்ரீலலிதையின் திருக்கல்யாணம் காண்போம்.

“அம்மன் கிருபையாலே விச்வகர்மாவும்
அழகான புரங்களும் சபைகளுடன்
சிந்தாமணி ரத்னம் பளபளவென்று மின்ன
சிம்ஹாஸனம் உண்டு பண்ணி வைத்தான்
பட்டண அமைப்பையும் அம்மன் தன் அழகையும்
பார்த்துப் பிரம்ம தேவர் யோசிக்கின்றார்
நாட்டுக்குப் பதியான அம்மனுக்கிப்போ
நாயகர் வேண்டுமே –சோபனம் சோபனம்.

இப்படிப் பிரம்ம மனதிலெண்ணியதை
ஈசர்அறிந்து நல்ல ஒளியுடனே
முப்பது கோடி மன்மதாகார ரூபமாய்
வேஷந்தரித்ததி ஸுந்தரமாய்
மகுட குண்டலத்துடன் அழகு பீதாம்பரமும்
மார்பில் சந்தனம் முத்துமாலையுடன்
மோஹன வேஷந் தரித்திருந்தபடி தேவி
முன்னே நின்றாரீசன் – சோபனம் சோபனம்

நின்ற நிலையில் அதிஸுந்தரமான
லலிதாதேவிக்கு இசைந்த அழகும்
என்றும் பதினாறு வயதுந் தரித்துக்கொண்டு
இருக்கின்ற ஈச்வரரைக் கண்டு பிரம்மா
காமேச்வரரென்று பேருமிட்டவருக்கும்
கண்ணாட்டி லலிதேச்வரி தேவிக்கும்
ஓமென்று இவர்கள் இரண்டு பேருக்கும் இப்போ
விவாஹஞ் செய்யலாமென்றார் – சோபனம் சோபனம்

சோடித்துக் கலியாணத்துக்கெல்லாம் பிரம்மாவும்
கோவிந்தருடைய சம்மதத்தாலே
ஒடுக்க வணக்கமாய் அம்மனைப் பார்த்து
உம்மைக் கணவருடன் பார்ப்போமென்றார்
மாதாவும் தன்னுடைய கழுத்திலிருந்ததொரு
மாலையைக் கழற்றி அம்பலத்தில் போட்டாள்
நாதர் காமேச்வரர் கழுத்திலந்த மாலை
ராஜியாய் சேர்ந்தது –சோபனம் சோபனம்

அம்பாளுக்குத் தக்க மணாளன் காமேஸ்வரரே என நிச்சயித்துக் கல்யாணம் நடக்கிறது. அம்பாளும் ஈசனும் மாலை மாற்றிக் கொள்கின்றனர். வாத்தியங்கள் முழங்குகின்றன. தேவலோக மாதர்கள் நர்த்தனம் செய்கின்றனர்.

ஈசருந் தேவியும் மாலையிட்டார்கள்
இருவரும் இருந்து கன்னூஞ்சல் ஆட
வாஸுதேவராலே உமையவளைத் தாரை
வார்க்கச் சொன்னார் பிரம்மா- சோபனம் சோபனம்

பத்மாஸனர் சொல்லால் நல்ல முஹூர்த்தத்தில்
பரிமளிக்கும் தேவஸபை நடுவே
பத்தினியுடன் கூட விஷ்ணு காமேசருக்குப்
பக்தியாய் மதுவர்க்கந்தான் கொடுத்தார்
காமேஸ்வரருக்கு லலிதேச்வரியைக்
கன்னிகாதானம் செய்தார் மஹாவிஷ்ணுவும்
காமேச்வரரும் திருமங்கல்ய தாரணம்
கட்டினார் லலிதைக்குச் –சோபனம் சோபனம்

நெய்யால் ஹோமஞ்செய்து பாணிக்கிரஹணஞ் செய்து
ஈசன் அம்மனை அம்மி ஏற்றினார்
மெய்யாக அக்னியை மூன்று தரஞ்சுற்றி
முக்கண்ணர் பொரியினால் ஹோமஞ்செய்தார்
காமேச்வரரும் லலிதேச்வரியைத் தான்
கலியாணஞ் செய்து கொண்டார் ஸுகமாய்
பூமிமுதல் மூன்று லோகத்தவர்களும்
புகழ்ந்தார்கள் அகஸ்தியரே-சோபனம் சோபனம்

நாளை பண்டாசுர வதம். அப்புறமும் ஒன்றிரண்டு பதிவுகள் வரும். பின்னர் சகோதரி சுப்புலக்ஷ்மி பற்றிய ஒரு அறிமுகத்தோடு முடியும். படித்து வருபவர் அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.

Friday, October 15, 2010

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 9

எட்டாம் நாளான இன்று பத்மக் கோலத்தில் மஹாலக்ஷ்மியாக அம்பிகையை உபாசிக்கவேண்டும். சிறு பெண் குழந்தையை மஹாலக்ஷ்மியாகவே பாவித்து வழிபடவேண்டும். சிலர் வீணை இல்லாத பிராஹ்மியாகவும் வழிபடுவார்கள். வெண்தாமரையில் வீற்றிருக்கச் செய்து அம்பிகையின் நெற்றிக்கண் தெரியும்படியாக அலங்கரித்துக் கையில் ஏடு மட்டுமே கொடுத்து ஞான முத்திரை காட்டிய வண்ணம் அலங்கரிக்கலாம். இன்று புளியோதரை நிவேதனம் செய்து மொச்சைச் சுண்டல் செய்யலாம்.

பெண்களுக்கும் அம்பிகையைத் தியானம் செய்வதன் மூலம் சாயுஜ்யம் கிட்டுமா என்ற பொருளில் ப்ரியா ஆர். கேட்டிருந்தார் அல்லவா?? தாராளமாய்ப் பெண்களும் இந்த ஸ்ரீவித்யா வழிபாட்டைச் ஸ்ரீ சக்ரத்தை வைத்து ஆராதிக்கலாம். முக்கியமாய் அம்பிகை காதில் அணிந்திருக்கும் தாடங்கம் என்று சொல்லப் படுவது ஸ்ரீசக்ரரூபமே. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியின் தாடங்க மஹிமை பற்றி நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை அல்லவா? எந்த ஸுவாசினியும் கணவனுக்குப் பரிபூர்ண ஆயுளை வேண்டியும், தன் குடும்பத்தின் சுக க்ஷேமத்துக்காகவும் தக்க குரு மூலம் முதலில் தன் கணவரை ஸ்ரீவித்யா வழிபாட்டை ஏற்கும்படி பண்ணுவது நல்லது. பின்னர் கணவரையே குருவாய்க் கொண்டு பெண்களும் வழிபடத் துவங்கலாம். இந்தத் தாடங்கம் சக்தி பொருந்தியது என்பதாலேயே சுமங்கலிப் பெண்கள் காதில் தோடு இல்லாமல் இருப்பது சரியல்ல என்பார்கள். அம்பிகையை உபாசிக்கும் ஒருவரை சாக்ஷாத் அந்த சதாசிவனாகவே அனைவரும் கருதுவார்கள், அடிபணிவார்கள் என்று செளந்தர்ய லஹரியின் 30-வது ஸ்லோகம் கூறுகிறது. நம்முடைய மூலாதாரத்திலிருந்து மேலே ஏறி வரும் அம்பிகையானவள் ஆக்ஞாசக்ரத்தில் மின்னல் கொடி போல க்ஷண காலம் காட்சி அளித்து சஹஸ்ராராத்தில் நிலை பெறுவாள் என்றும் கூறுவார்கள். ஆக்ஞா சக்ரத்தில் அவளை க்ஷண செளதாமினி எனவும், சஹஸ்ராரத்தில் நிலை பெறுவதால் ‘ஸ்திர செளதாமினி” எனவும் அழைக்கப் படுவாள். அம்பிகையை உபாசிப்பவர்களுக்கு அந்த வழிபாடு சூரியன் எவ்வாறு இருளைப் போக்குகிறதோ அவ்வாறு வெளிச்சத்தைக் கொடுத்தும், சந்திரனைப் போல் தாபத்தை நீக்கிக் குளிர்ச்சியைத் தருவதாயும், அக்னியைப் போல் நம் மனத்தில் மாசுக்களை நீக்கிப் புண்ணிய கர்மாக்களை விரைவு படுத்தி அவற்றைப் பக்குவப் படுத்துவதாயும் ஆகின்றது. அபிராமி பட்டரோ,

“பின்னே திரிந்துன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கபிராமி என்னும் அருமருந்தே
என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்றேத்துவனே!
என்கிறார். இனி ஸ்ரீலலிதையின் மஹத்துவம்.

“வானுலகத்துத் தேவாள் தாபத்தைத் தீர்த்திட
வந்து அலிதை அவதாரமாய்
பட்டுக்குடை கவியச் சித்திரப் பொன்ரதம்
பளிச் பளிச்சென்று ஒளி திகழ
ஸ்ரீசக்ரராஜ ரதத்தினில் தேவியும்
சிங்கார ரூபமாய்க்காந்தி மின்ன
ஆலவட்டம் வெண்சாமரம்போடச்சகிகளும்
அக்னிகுண்டத்தின் நடுவில் வந்தாள்.”சோபனம் சோபனம்

இதையே ஸ்ரீலலிதா சஹ்ஸ்ரநாமம், “ சிதக்னி-குண்ட-ஸம்பூதா தேவ கார்ய-ஸமுத்யதா!!” என்று சொல்கிறது. அம்பிகை எப்படி வந்தாளாம்?? சம்பக மொட்டுப் போன்ற மூக்கையும், பவளம் போன்ற சிவந்த உதடுகளும், குருக்கத்திப் போன்ற பற்களும் கருநீலம் போன்ற விழிகள், தாழம்பூவின் மடல் போன்ற காதுகள், வில்லைப் போன்ற புருவங்கள், கண்ணாடி போல் பளபளக்கும் கன்னங்கள் என அம்பிகையைப் பார்க்கும்போதே தெய்வீகமான அழகு புலப்பட்டு அனைவர் மனதிலும் சாந்தி ஏற்பட்டதாம்.

“அர்த்தசந்திராகார நெற்றியில் சிந்தூரம்
அதி சிவப்பாம் மூன்றாங்கண்ணதுபோல்
அர்த்தசந்திரக்கலையும் சுட்டி ராக்கோடியும்
அழகு நீளமான கேசத்தின் மேல்
சிந்தாமணி ரத்தினத்தாலே கிரீடம்
சிரஸிலே தரித்துக்கொண்டிருக்காளம்மன்
சந்தனம் கஸ்தூரி புனுகு பூமாலையும்
தரித்து மாதா வந்தாள் –சோபனம் சோபனம்

தேவர்கள் அனைவரும் அம்பிகையைத் துதித்துப் போற்றி வணங்க அவர்களின் அங்க ஹீனங்களைக் கண்டு வருந்திய அம்பிகை தன் கண்களின் பார்வையின் சக்தியினால் அவற்றைப் போக்குகிறாள்.

மண்டலபால அரக்கன்போலம்மன் வர்ணமும்
வளமுள்ள சந்திரகாந்தி சீதளமும்
கண்டவுடன் தேவியைக் கைகூப்பித் தேவர்கள்
கனகத்தடிபோல் விழுந்து பணிந்தார்கள்
தேவர்களுடைய தேஹரணத்தைக் கண்டு
ஸ்ரீலலிதை மெத்த இரக்கத்துடன்
அவ்வளவு பேரையும் அம்ருதக் கண்னால் பார்த்து
அங்கக்குறைகள் தீர்த்தாள்- சோபனம் சோபனம்

அம்பிகை தேவர்களின் குறையைக் கேட்டுவிட்டு அவர்களைத் தேற்றுகிறாள்.

“ஸ்துதியாலே மெத்தமனங்குளிர்ந்தீஸ்வரி
சொல்லுவாள் திரும்பவும் கீர்வாணர்க்கு
இன்றுமுதல் பயத்தைத் தூரவிட்டு விடுங்கள்
இந்தப் பண்டாஸுரன் நமக்குப் பஞ்சு
அரை நிமிஷத்தில் பண்டாஸுரப் புழுவை
அக்கினி எரித்தாற்போல் வதைத்திடுவோம்
ஒருவாக்கிற்கு மறுசொல்லில்லை நமக்கு
உங்கட்கே மங்களம்-சோபனம் சோபனம்

நாளை ஸ்ரீலலிதைக்கும், ஸ்ரீகாமேஸ்வரருக்கும் திருக்கல்யாண உற்சவம்.


பி.கு. இணைய இணைப்பு எப்போ வரும், எப்போப் போகும்னு சொல்ல முடியலை. ஆகவே நாளைய பதிவையும் போட்டாலும் போட்டுடுவேன். உங்க அதிர்ஷ்டம் எப்படியோ? :))))))) மின்சாரமும் தான். நேத்திக்குப் பூராவும் ஆற்காட்டார் காட்டிலே மழை! :P

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 8


ஏழாம் நாளன்று திட்டாணிக் கோலம் போட்டு துர்கையாக அம்பிகையை துர்கையாக அலங்கரிக்கலாம். சரஸ்வதி ஆவாஹனமும் இன்றே செய்யவேண்டும். ஆவாஹனம் செய்யும்போது அக்ஷமாலை, கமண்டலு, பரசு, கதை, வில், அம்பு,வஜ்ராயுதம், தாமரை தண்டாயுதம், சூலம், கத்தி, கேடயம், சங்கு, மணி, அமுத கலசம், பாசம் போன்றவை இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். அனைத்துத் தேவிகளும் மஹாதேவியிடம் ஐக்கியமாவதால் அவர்களின் ஆயுதங்களும் அம்பிகையிடம் இருக்கவேண்டும். சிலர் வித்யா லக்ஷ்மியாகவும் அலங்கரிப்பார்கள். சிறு பெண் குழந்தையை துர்காவாய்ப் பாவித்து வழிபடவேண்டும். இன்றைய நிவேதனம் பால் சாதமும், கடலைச்சுண்டலும் செய்யலாம்.
“நாயகி, நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாய் அகி மாலினி வாராஹி சூலினி மாதங்கி என்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!”
என்று இந்தக் கோலத்தையே அபிராமி பட்டரும் பாடி இருக்கிறார். நான்கு முகங்களை உடைய ஈஸ்வரி, இவளையே “சதுர் வக்த மநோஹரா” என லலிதா சஹஸ்ரநாமம் கூறும்; இவளே காகினி என்னும் திருநாமத்துடன் நான்கு முகங்களுடன் ஆறிதழ்த் தாமரையில் நம் உடலின் ஸ்வாதிஷ்டானச் சக்கரத்தில் வீற்றிருப்பாள் எனவும் யோகியர் கூற்று. இதை லலிதா சஹஸ்ரநாமம், “ மேதோ -நிஷ்டா மதுப்ரீதா பந்தின்யாதி-ஸமன்விதா! தத்யன்னாஸக்த-ஹ்ருதயாகாகினீ-ரூப-தாரிணீ!! என்று கூறுகிறது. மேலும் பட்டர் அம்பிகையை நாராயணி, சம்புவின் மனைவியான சாம்பவி, சங்கரி, சாமளை, நஞ்சுடைய பாம்பை ஆபரணமாய்த் தரித்தவள், என்றெல்லாம் கூறுகிறார். இனி ஸ்ரீலலிதையின் அவதார மஹத்துவத்தைக் காண்போம்.

மோஹினி அவதாரத்தையும் அம்பிகையின் அவதாரமென்றே கூறும் லலிதாம்பாள் சோபனம், அதை இவ்வண்ணம் கூறுகிறது.

“முன்னே பிரம்மாவை ரக்ஷிக்க வந்தாளே
முதலாவது அந்த அவதாரம்
பின்னே இப்பொழுது சொன்னோம் மோஹினி ரூபம்
பின்னுங்கேள் இது விரண்டு- சோபனம் சோபனம். என்று கூறுகிறது. பிரும்மாவை ரக்ஷிக்க வந்த மதுகைடப வதத்தையும், அதைத் தொடர்ந்த மற்ற அம்பிகையின் திருவிளையாடல்களையும் கண்டோம். இப்போது ஸ்ரீலலிதையின் மஹிமை.
லலிதாதேவியுடைய மஹிமை தன்னிலே
லக்ஷங்கோடியுள்ளதில் லேசஞ் சொல்வோம்,
கேளும் பக்தியுடன் கேட்டவர்க்கு மங்களம்
கிட்டும் நிச்சயம் ஸந்தேஹமில்லை
பூர்வத்தில் தக்ஷனுடைய கன்னிகையாக்கும்
பூர்வாவதாரம் பரமேச்வரிக்கு
சாம்பவர் சொல் தள்ளி தகப்பனார் யக்ஞத்துக்குத்
தாக்ஷாயணி போனாள்- சோபனம் சோபனம்
இதைத் தொடர்ந்து தக்ஷன் தேவியையும், ஈசனையும் இகழ்ந்ததையும் அது பொறுக்காத தேவி அக்கினியில் வீழ்ந்ததையும் அறிவோம். தேவி பின்னர் பர்வதராஜனின் மகளான பார்வதியாய்த் தவம் செய்யுங்காலை குமரக்கடவுள் பிறக்கவேண்டி மன்மதனை தேவாதி தேவர்கள் ஸ்வாமிக்கு முன் ஏவினதையும் ஈசனின் நெற்றிக்கண்ணால் மன்மதன் சாம்பலானதும் அறிவோம். எரிந்த மன்மதனின் சாம்பலைப் பிசைந்து விஸ்வகர்மா மனித உருவம் செய்ய, ஈசன் அதை ஒரு கண நேரம் நோக்க அந்தச் சாம்பலில் செய்யப்பட்ட மனித உருவம் ஓர் மனிதனாக மாற விஸ்வகர்மா அந்தக் குழந்தையைக் கொண்டு போய் வளர்த்து அனைத்தும் கற்பிக்கிறான்.
“மன்மதன் சாம்பலைப் பிசைந்து விச்வகர்மா
மனித உருவஞ் செய்தான் – சோபனம் சோபனம்
சாம்பமூர்த்தியப்போ அம்ருத கடாக்ஷத்தால்
சாம்பல் பொம்மையைப் பார்த்தார்; பார்த்தவுடன்
சாம்பசிவனுடைய அம்ருத கடாக்ஷத்தால்
சாம்பல் புருஷன் ஜீவனோடெழுந்தான்
விச்வகர்மா அந்தக் குழந்தையைக் கொண்டு போய்
விருப்பத்துடனே வளர்த்த பின்பு
வேண்டிய வரங்களை அடையும் பொருட்டவன்
ஈசனைப் பூஜித்தான் –சோபனம் சோபனம்
தவம் செய்து ஈசனிடம் வரங்கள் பெற்று ஆட்சி செய்யும் அந்தக் குழந்தை ஈசனின் நெற்றிக்கண்ணின் அக்னியில் உண்டானதால் பண்டன் என்ற பெயரைப் பெறுகிறது. வரங்கள் வாங்கிய கர்வத்தில் ஆட்சி செய்த அவனை பண்டாசுரன் என அனைவரும் கூற, தேவர்களுக்குப் பயந்து பாதாளம் சென்று ஒளிந்திருந்த அசுரக்குலம் மீண்டும் வெளியே வருகிறது. அசுரர்களின் குருவான சுக்கிராசாரியார் அவனுக்குப் பல யோசனைகள் கூறுகிறார். ஆனாலும் அவன் அதைக் கேட்கவில்லை.
“பண்டாஸுரனுக்குப் பலநாளைக்குப் பின்பு
கெட்ட புத்தி வந்து தேவர்களைப் ப்
பிடிக்கத் துவங்கினான்; வாஸ்வன் முதலாகப்
பிடித்துக்கொண்டு வந்து தன் கோட்டையில்
காவல் காக்கச் சொல்லிச் சேவகராகவே
கட்டளையிட்டான் தேவர்களை;
துஷ்டன் கையிலகப்பட்டு விழிக்கிறார்கள்
வில்வலாந்தகனே கேள் –சோபனம் சோபனம்
தங்கட்கு வினையைத் தேவாள் வருத்திக்கொண்டார்
தாருகாஸுரனை வதைக்கவென்றே
சங்கரரிடத்தில் மன்மதனை ஏவப் போய்த்
தானே வலையில் விழும்புலியைப் போல
ஸ்வாமி தபஸிற்குத் துரோகம் நினைத்ததால்
சத்துருவாகினான் பண்டாஸுரன்
வம்பன் பண்டாஸுரனை வதைப்பதற்கு
மனதில் நிச்சயித்தார்கள் –சோபனம் சோபனம்
மஹாவிஷ்ணு தன் மாயையின் மூலம் அவனை மயக்கிச் சிவபூஜையிலிருந்து அவனை விலகி இருக்கச் செய்ய தேவர்கள் அனைவரும் தேவியைத் துதித்து ஜபம், தவம், ஹோமம் போன்றவற்றைச் செய்கின்றனர்.
தேவமுனி சொல்ல இந்திரனுடன் கூடச்
செய்கிறார் தேவர்கள் உக்கிரதபஸை
ஈச்வரியை நோக்கி வருஷம் பதினாயிரம்
இப்படித் தேவர்கள் தபஞ் செய்தார்கள்
ஆஹார நித்திரை விட்டெல்லாத் தேவர்களும்
அதிகடினமான தபஸிருந்தார்
பகவதி ஈச்வரியாள் இதுவரைக்கும்
பிரத்யக்ஷமாகவில்லை –சோபனம் சோபனம்
தங்கள் உடலை வருத்தி, உறுப்புக்களையும் ஆஹுதியில் இட்டு யாகம் செய்ய ஆரம்பித்தனர் தேவர்கள். அப்போது யாக குண்டத்தில் இருந்து ஒரு பிரகாசமான வெளிச்சம் தோன்றியது. கோடி கோடி சூரியப் பிரகாசங்களை ஒத்திருந்த அந்த வெளிச்சத்தில் ஒரு அழகான ஸ்ரீ சக்ரரதம். அந்தச் சக்ர ரதத்தின் மேல் ஸ்ரீலலிதை சுப ஜனனம்.

கால் முதல் தோள்வரை ஹோமஞ்செய்து தேவாள்
கழுத்துடன் குதிக்க நிச்சயித்தார்கள்
மின்னல்மலை போல அக்னி குண்டத்தில்
மின்னிக்கொண்டொரு காந்தியுண்டாயிற்று
ஆச்சரியத்துடன் தேவாள் தேஜஸைக் கண்டார்
அதற்குள்ளே ஸ்ரீசக்ரரதத்தைக் கண்டார்.
அழகான ஸ்ரீசக்ரரத்தின் மேல் லலிதா
அம்மனவதரித்தாள் – சோபனம் சோபனம்

Wednesday, October 13, 2010

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 7

ஆறாம் நாளான இன்று தேவியின் பெயர்களால் கோலம் போட்டு, அம்பாளைக் கெளமாரியாக அலங்கரிக்க வேண்டும். சிறு பெண் குழந்தையை ஸ்ரீவித்யாவாகப் பாவித்து சித்ரான்னம், மொச்சைச் சுண்டல் போன்றவற்றை நிவேதனம் செய்து வழிபடவேண்டும். இந்தக் கெளமாரி குமாரனின் சக்தி. குமாரன் என்றால் சுப்ரமண்ய ஸ்வாமி ஒருவரே. ஷண்முகனின் சக்தியான இவளைக் “குமார கண நாதாம்பா” என லலிதா சஹஸ்ரநாமம் கூறுகிறது. துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் செய்யும் வல்லமை படைத்தவள். “துள்ளி வருகுது வேல், பகையே சுற்றி நில்லாதே போ!” என்னும்படிக்குப் பகையை ஓட ஓட விரட்டி அடிப்பாள் இவள். ஆறுமுக சக்தியான இவள் ஷட்கோணத்தில் உள்ள ஆறு ஆதாரங்களின் மூலமும் சஹஸ்ராரத்தில் இருக்கும் சச்சிதானந்தத்தை அடைய உதவுவாள். நம் சரீரத்தில் உள்ள ஆறு ஆதாரங்களையும் மணி பீடம் என்று சொல்வார்கள். இவற்றை மூன்றாய்ப் பிரித்து வயிறும், வயிற்றுக்கீழே உள்ள பாகமும் அக்கினிக் கண்டமாகவும், வயிற்றுக்கு மேலே மார்பு வரை உள்ள பாகம் சூரிய கண்டமாகவும், அதற்கு மேலே உள்ள பாகம் ஸோம கண்டமாகவும் சொல்லப் படும். அக்னிக்கண்டத்தில் உள்ள பிரம்மக்ரந்தி பிரம்மாவின் இருப்பிடமாகவும், சூரியக் கண்டத்தின் விஷ்ணுக்ரந்தி விஷ்ணுவின் இருப்பிடமாகவும், ஸோமகண்டத்தின் ருத்ரக்ரந்தி ருத்ரரின் இருப்பிடமாகவும் கூறப்படும். நம் உடலின் இயக்கங்களோடு சேர்ந்து கூர்ந்து கவனித்தால் இவற்றின் உள்ளார்ந்த தத்துவங்கள் நன்கு புரியவரும். இங்கே இதற்கு மேல் விளக்குவது சரியில்லை. அம்பிகையை உபாசிப்பவர்கள் இவற்றை ஒவ்வொன்றாய்க் கடப்பார்கள். ஒவ்வொரு இடத்திலும் அந்த அந்த முடிச்சுக்களை அவிழ்த்துக்கொண்டு அம்பிகை தோன்றி மேலே மேலே அதி உந்நதத்திற்கு கூட்டிச் செல்வாள். அமிர்த தாரை வர்ஷிக்கும்.

இதையே லலிதா சஹ்ஸ்ரநாமம்,

“மூலாதாரைக –நிலயா-ப்ரஹ்மக்ரந்தி-விபேதினீ
மணிபூராந்தருதிதா விஷ்ணுக்ரந்தி-விபேதினீ
ஆக்ஞா-சக்ராந்தராலஸ்தா ருத்ரக்ரந்தி-விபேதினீ
ஸஹஸ்ராராம்புஜாரூடா ஸூதாஸாராபி-வர்ஷிணீ
என்று கூறுகிறது. அபிராமி பட்டரோ,

“பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மநோன்மணி வார் சடையோன்
அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே!”
என்கின்றார்.

இதன் யோக தந்திர முறையிலான விளக்கம் என்னவெனில் திரிபுரை என்பதற்குப் பல பொருட்கள் சொல்லலாம். எனினும் இங்கே நம் உடலின் மூன்று நாடிகள், மனம், புத்தி, சித்தம் மூன்று இடங்களிலும் உறைபவள், முத்தேவர்களாலும் தன் தொழிலை நடத்துபவள், மும்மறைகளுக்கும் அதிபதியானவள், மூன்று வகை அக்னிக்களையும் ஒழுங்கு செய்பவள், மூன்று வகை சக்திகளைத் தன்னிடத்தே கொண்டவள், மூன்று ஸ்வரங்களைக் கொண்டவள், மூவுலகையும் தன்னகத்தே இருத்தியவள், என எல்லாவற்றுக்கும் அதிபதியானதோடு அல்லாமல் மூன்று பிரிவை உடைய ஆறு சக்கரங்களுக்கும் தலைவியாகவும் இருப்பவள். இவளின் அருளாலேயே நஞ்சை அமுதாக்கி நம்மை சாயுஜ்யத்திற்கு அழைத்துச் செல்கிறாள். இனி சும்ப, நிசும்பர்களின் வதத்தைப் பார்ப்போமா?

சண்ட,முண்டர்களின் வதத்தைக் கேட்டுக் கோபம் கொண்ட சும்பனும், நிசும்பனும் ரக்தபீஜனைப் பலவகைப் படைகளோடும் அம்பிகையோடு யுத்தம் செய்ய அனுப்பி வைத்தான். காளி மிக உக்கிரமாய்ப் போரிடுகிறாள். சிங்க நாதத்தையும் வில்லின் நாண் ஒலியையும் மீறிக்கேட்ட காளியின் குரலோசை கேட்டுக் கோபம் கொண்ட அசுரப் படைகள் சண்டிகையையும், காளியையும் சூழ்ந்து கொண்டு அவர்களைக் கொல்ல முயன்றன. அப்போது தேவாதி தேவர்கள் அம்பிகையின் சேனைக்குத் தலைவர்கள் தேவை என எண்ணிக் கொண்டு, அம்பிகைக்கு ஏற்றாற்போல் பெண்களையே அவள் சேனைக்குப் படைத்தலைவர்களாய் அனுப்ப யோசித்தனர். அனைத்துத் தேவர்களும் தங்கள் வலிமையையும், சக்தியையும் ஒன்று கூட்டி தங்கள் வடிவங்களிலேயே ஒரு தேவியாக ஆக்கினார்கள். ஹம்ஸ வாகனத்தில் அக்ஷமாலையும் கமண்டுவும் ஏந்திக்கொண்டு ப்ரஹ்ம சக்தி ப்ராஹ்மணி என்ற பெயருடனும், ரிஷப வாகனத்தில் திரிசூலம் ஏந்திக்கொண்டு , நாகாபரணங்களைச் சூடிக்கொண்டு சந்திரகலையோடு மஹேஸ்வரரின் சக்தி மாஹேஸ்வரி என்ற பெயருடனும், அசுரனான சூரனைக் கொல்வதற்கென்றே பிறந்த குமாரனின் சக்தி கெளமாரி என்ற பெயருடன் மயில் வாகனத்தில் குகவடிவோடு, அம்பிகை குகனுக்கு அளித்த சக்தியாயுதத்தை ஏந்தியவண்ணமும், சங்கு, சக்ர, கதாதாரியாய், கதை, சார்ங்கம், வாள் ஆகிய ஆயுதங்களோடு கருட வாகனத்தில் வைஷ்ணவியும், ஸ்ரீஹரியின் யக்ஞ வராஹ வடிவத்தின் சக்தியான வாராஹியும், சங்கு, சக்ரங்களை ஏந்திக்கொண்டும், நரசிம்மத்தின் பெண் வடிவான நாரசிம்மி தன் உடலைச் சிலிர்த்துக்கொண்டும், கர்ஜனை செய்து கொண்டும் நாரசிம்மியாகவும், ஐராவதத்தின் மேல் ஏறிக்கொண்டு தேவருலகை ஆளும் இந்திரனின் சக்தியான ஐந்த்ரீ இந்திரனைப் போன்றே வஜ்ராயுதம் ஏந்தி யானை வாகனத்திலும் தேவியின் படைத் தலைவர்களாக வந்து சேர்ந்து கொண்டனர். இவர்களே முறையே சப்த கன்னியர் என்றும், சப்த மாதாக்கள் எனவும் அழைக்கப் படுவார்கள். பின்னர் சண்டிகா தேவியானவள் சிவனை அசுரர்களிடம் தூது அனுப்பினாள். சிவனையே தூது செல்ல ஏவியதால் அவள் சிவதூதீ என்ற பெயராலும் அழைக்கப் பட்டாள். சிவனின் தூதுக்கும் அசையாத அசுரர்கள் கோபம் கொண்டு தேவியின் இருப்பிடத்தை நோக்கிக் கோபத்துடன் சென்றனர்.

தேவியானவள் அசுரர்கள் எய்த அம்புகளையும், சூலங்களையும், ஈட்டிகளையும், கோடரிகளையும் தன் வில்லினின்று எய்யப்பட்ட அம்புகளால் தடுத்து நிறுத்தக் காலியானவள் தன் கட்வாங்கம் என்னும் ஆயுதத்தால் அசுரக் கூட்டத்தை நசுக்கினாள். பிரம்மாணியோ தன் கமண்டலுவின் நீராலேயே சத்துருக்களை பலமற்றவர்களாக்கினாள். மாஹேஸ்வரி, திரிசூலத்தாலும், வைஷ்ணவி, தன் சக்கரத்தாலும், கெளமாரி ஈட்டியாலும், ஐந்திரி வஜ்ராயுதத்தாலும் அசுரர்படையைத் தாக்கினர். வாராஹி தன் கூரிய மூக்காலும், நாரசிம்ஹி தன் கூரிய நகங்களாலும் அசுரப் படைகளை ஒழித்தார்கள். அப்போது ரக்தபீஜனின் ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்தும் அவனைப்போல் ஓர் அசுரன் உதிக்க, சப்த மாதர்களும் சூழ்ந்து கொண்டு அவனைத் தங்கள் ஆயுதங்களால் தாக்கினார்கள். சண்டிகையானவள் சாமுண்டியான காலியைப் பார்த்து ரக்தபீஜனின் ரத்தம் கீழே விழாதவாறு பார்த்துக்கொள்ளச் சொன்னாள். காலியும் அவ்வாறே அவனின் கடைசிச் சொட்டு ரத்தம் கீழே விழும்வரைக்கும் அவனைக் களைப்படையச் செய்து ரக்தபீஜனின் ரத்தத்தைத் தன் வாயில் ஏந்தினாள். ரக்தபீஜன் ரத்தம் இல்லாமல் கீழே விழ, சும்பனும், நிசும்பனும் கோபம் கொண்டு அம்பிகையைத் தாக்கினார்கள்.

நிசும்பன் தன் கூரிய வாளால் தேவியின் வாகனமான சிங்கத்தின் தலையில் அடிக்க அந்த வாள் தேவியின் கூரிய பாணத்தால் துண்டாக்கப்பட்டது. இவ்வாறே நிசும்பன் எய்த ஆயுதங்கள் அனைத்தும் தேவியின் ஆயுதங்களுக்கு முன்னர் பயனற்றுப் போக நிசும்பன் மூர்ச்சை அடைந்து கீழே விழுந்தான்.

சங்கநாதமும், மணியை ஒலித்தும் ஓசை எழுப்பிய தேவி, நிசும்பனை மூர்ச்சை அடைய வைத்ததைக் கண்டு . கோபம் கொண்ட சும்பன் தேவியோடு போரிட, விஸ்வரூபம் எடுத்துக்கொண்டு எட்டுக் கைகளோடு பாய்ந்தான். சும்பனின் ஆயுதங்களும் தேவியின் ஆயுதங்களுக்கு முன்னர் பலனற்றுப் போக சும்பனையும் தன் சூலத்தால் அடித்து மூர்ச்சை அடைய வைத்தாள் தேவி. இதற்குள் எழுந்த நிசும்பன் மீண்டும் போருக்கு வர தன் சூலத்தால் நிசும்பனின் இதயத்தைப் பிளந்து அவனைக் கொன்றாள் தேவி. சகோதரன் கொல்லப்பட்டது கண்ட சும்பன் தேவியைப் பார்த்துக் கேலியாக மற்றவர்கள் பலத்தினால் ஜெயித்துவிட்டுக் கர்வம் கொள்ளாதே என்றான். அப்போது தேவி அவனைப் பார்த்து, “மூடா, இங்கு இருப்பவள் நான் ஒருத்தியே. இரண்டாவதாக எவரும் இல்லையடா! இவர்களெல்லாம் என்னிலிருந்து தோன்றிய என் அம்சங்களே அன்றி என்னிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல! இதோ பார்!” என்றாள். சப்த கன்னியரும், காளியும் மறைந்து சும்பன் கண்ணெதிரே தேவி ஒருத்தியின் உடலில் புகுவதைக் கண்டான். “என்னால் அளிக்கப்பட்ட என் பல்வேறு சக்திகளும் இப்போது என்னிலேயே கலந்துவிட்டன. இப்போது போரில் உறுதியாக இருந்து போர் செய்வாய்!” என்றாள் தேவி.

அசுர ராஜன் சும்பன் பல ஆயுதங்களால் தேவியைத் தாக்கினான். மிக உக்கிரமான அஸ்திரங்களை எய்தான். அனைத்தும் தேவி தன் ஹூங்காரம், உச்சாரணம் போன்றவற்றாலேயே அழித்தாள். அவனுடைய குதிரையையும் கொன்று ரத சாரதியுமின்றி வில்லையும் ஒடித்தாள் தேவி. சும்பன் முத்கர ஆயுதம் என்னும் ஆயுதத்தால் தேவியைத் தாக்கப் போக, தேவி அதைப் பிளந்தாள், அசுரனின் இருதயத்தின் தன் முஷ்டியால் குத்தினாள். அவன் அப்படியே தேவியைத் தூக்கிக்கொண்டு ஆகாய மார்க்கமாய்ச் செல்ல, தேவியும் அங்கே இருந்த வண்ணமே அவனோடு போர் புரிந்தாள். அவனுடைய அட்டஹாசம் அதிகமாகக் கண்ட தேவி இனி தாங்காது எனக் கருதித் தன் சூலத்தால் சும்பன் மார்பையும் பிளந்து குத்தி அவனைப் பூமியில் வீழ்த்தினாள்.

காளிதேவியும் ரக்தபீஜர்களை
வாரி வாரி விழுங்கிவிட்டாள்
ரக்தபீஜனும் பட்டவுடன் பொல்லா
நிசும்பனும் பார்த்துக் கோபத்துடன்
ஸம்ஹரிப்பேன் இவளையென்று சொல்லி
சபதம் செய்து தமையன் முன்னே
தேவியுடன் எதிர்த்து நிசும்பனும்
தோற்காமலே யுத்தம் செய்து நின்றான்
ஆயிரமாயிரம் அம்பு தொடுத்தவன்
அஞ்சாமலே யுத்தம் பண்ணலுற்றான்
நேரே யுத்தம் பண்ணி லீலாவிநோதமாய்
நிசும்பனக் கொன்றாள் ஸ்ரீதேவியும்
தம்பியும் பட்டதைக் கேட்டுச் சும்பாஸுரன்
சங்கையில்லாத கோபத்துடன்
அம்பிகையெதிரில் வந்து சும்பாஸுரன்
ஆங்காரத்துடன் ஏது சொல்வான்

யுத்தம் பண்ணத் தெரிந்தவளே எங்கள்
இத்தனை பேரையும் ஏய்த்தாயேடி நீயும்
யாருமில்லாதே யிருந்தாயேடி நீயும்
ஏழுபேருனிப்போ நின்றாயடி.
சதிகாரியடி நீயுமிப்போ என்னை
சற்பனை செய்யவே வந்தாயடி
வஞ்சித்தாயடி நீயுமென்னை யிப்போ
வாரத்தைகள் இரண்டு சொன்னாயடி.
ஒருத்தியாக இருந்து கொண்டன்றோ நீ
உத்தரஞ்சொல்லி யனுப்பி வைத்தாய்
அத்தனைபேர்களைச் சேர்த்துக்கொண்டு இப்போ
அதட்டுகிறாயடி நீயுமென்னை

சும்பன் வார்த்தையைக் கேட்டு ஸகிகளே
இங்கே வாருங்கள் என்றழைத்து
வாரியணைத்தாள் ஸகிகள் எல்லோரையும்
மாரோடு மறைத்து ஐக்கியமானாள்
இரண்டாம்பேரிங்கில்லை காளியுடன் நீ
எதிர்த்து யுத்தமும் பண்ணுயென்ரால்
அம்மன் செயலையும் வார்த்தையையும் கேட்டு
அ ம்புபட்டாப்போலுந்தானுருகி,
சும்பாஸுரனும் காளிகாதேவியும்
தோற்காமலே யுத்தம் பண்ணலுற்றார்

அடித்த பந்து கிளம்பினாற்போலவன்
ஆகாயத்தினிலே கிளம்பி,
ஒருவருக்கொருவர் சளையாமல் அங்கு
ஓடோடி யுத்தமும் பண்ணினார்கள்
சும்பாஸுரனும் காளிகாதேவியும்
தொந்தயுத்தமும் பண்ணினார்கள்
தேவர்களெல்லாம் பயத்துடனே மஹா
தேவியை ஸ்துதித்துக்கொண்டிருந்தார்கள்
எத்தனை பொழுதாக யுத்தம் பண்ணுவோம்
என்று காளியும் கோபத்துடன்
சும்பாஸுரனை வதைத்தாள் காளியும்
துர்க்காதேவி என்றவம்மனை அழைத்தாள்
துர்க்காதேவியம்மன் அஸுரனை வதைக்கத்
தேவர்கள் புஷ்பமழை சொரிந்தார்.

நாளை ஸ்ரீலலிதையின் உதயம்.

Tuesday, October 12, 2010

தாமதத்தின் காரணம்!

தாமதமாய் மொத்தமாய் ஒரே நாளில் பதிவுகள் போட்டதுக்குப் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். Optical Fibre Cables cut ஆனதில் பத்து நாட்களாய் இணையம் பிரச்னை. கடந்த ஐந்து நாட்களாகச் சுத்தமாய் இணையம் இல்லை. அதனால் ஏற்பட்ட தாமதம்!

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 6


நவராத்திரியின் ஐந்தாம் நாள் “மஹதீ” என்னும் மஹேஸ்வரியாக ரிஷபவாகனத்தில் எழுந்தருளச் செய்யவேண்டும். இவள் ஆயுதம் திரிசூலம். பிறைச்சந்திரனையும், பாம்பையும் தரித்திருப்பாள். உடலுழைப்புச் செய்யும் அனைவருக்கும் வேண்டிய வரமளிக்கும் வல்லமை கொண்டவள். இன்று பெண் குழந்தையை சதக்ஷியாகப் பாவித்து வழிபடவேண்டும். வழிபாட்டுக்குப் பாவைகளால் ஆன கோலம் போடவேண்டும். பால் பாயாசம் , பச்சைப்பயறில் சுண்டல் நிவேதனம் செய்யலாம். .

இவ்வுலகில் எப்போதும் நன்மைக்கும் தீமைக்கும் இடைவிடாத போர் நடந்து கொண்டே இருக்கிறது. தீமைகளே அசுரர்களாக உருவகம் செய்யப் பட்டிருக்கின்றன. தீமைகள் பலவகைப்படும். எனினும் எல்லாவற்றிலும் பெரிய தீமை அதீதப் பெண்ணாசை எனலாம். பெண்கள் மேல் கொண்ட மோகத்தால் அழிந்தவர்களில் ராவணன் தனிப்பட்டுச்சொல்லப் பட்டிருந்தாலும், இங்கே சும்ப, நிசும்பர்களும் அம்பிகையின் மேல் கொண்ட மோகத்தால் அழிகின்றனர். காமத்தையே வென்றவளுக்கு இந்தச் சிற்றின்பமான காமம் ஒரு பொருட்டல்லவே. இங்கே காமம் என்பது ஆசைகளையே குறிக்கின்றது. இப்போது சொல்வது போல் வெறும் உடல் சம்பந்தப்பட்ட காமத்தை மட்டுமே சொல்வதில்லை. அம்பிகையை ஒருமித்த மனத்தோடு உபாசிக்கும் உபாசகன் அல்பசுகமான காமவசப்படுவதில்லை. எல்லாப் பெண்களையுமே அந்த சாட்சாத் அம்பிகை வடிவாகவே பார்ப்பான். அம்பிகையின் பீஜாக்ஷரங்களைத் தியானம் செய்து வேறு எண்ணம் இல்லாதவன் பரமாநந்தக் கடலில் மூழ்கி அம்பிகையின் ஸ்வரூபமாகவே தானும் ஆகின்றான். அத்தகைய பாக்கியத்தைப் பெற்றவர்களுக்கு மறுபிறவி என்பதே கிடையாது. மீண்டும் கர்ப்பத்வாரத்தைக் காணாமல் அம்பிகை சாயுஜ்ய பதவியை அளிப்பாள்.
துள்ளும் அறியா மனது பலி கொடுத்தேன் கர்ம துட்ட தேவதைகள் இல்லை
துரிய நிறை சாந்த தேவதையாம் உனக்கே தொழும்பன் அன்பு அபிஷேக நீர்
உள்ளுறையில் என்னாவி நைவேத்தியம் பிராணன் ஓங்கும் அதி தூபதீபம்
ஒருகாலம் அன்றிது சதாகால பூஜையா ஒப்புவித்தேன் கருணை கூர்
தெள்ளி மறை வடியிட்ட அமுதப் பிழம்பே தெளிந்த தேனே சீனியே
திவ்ய ரசம் யாவுந் திரண்டொழுகும் பாகே தெவிட்டாத வானந்தமே
கள்ளன் அறிவூடுமே மெள்ல மெள்ல மெளனியாய்க் கலக்கவரு நல்ல உறவே
கருதரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகரக் கடவுளே!
என்கின்றார் தாயுமானவ ஸ்வாமிகள். இதையே அபிராமி பட்டரும்.
“நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை
என்றும் வணங்குவதுன் மலர்த்தாள் எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்
தன்றும் பிறந்தவளே அழியாமுத்தி ஆனந்தமே!
என்றும்,
ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்தமான வடிவுடையான் மறை நான்கினுக்கும்
தானந்தமான சரணாரவிந்தம் தவள நிறக்
கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே!
இதையே லலிதா சஹஸ்ரநாமமும், பரமாநந்தா, தயாமூர்த்தி, முக்திரூபிணி” என்றெல்லாம் சொல்கிறது. அபிராமி பட்டர் கூறும் நிறைந்த அமுதம் என்பது இந்த மரணமில்லாப் பெருவாழ்வு பெறும் பரமாநந்தத்தைக் குறிக்கிறது. இனி சும்ப, நிசும்பர்கள் என்ன ஆனார்கள் எனப் பார்க்கலாமா??
சுக்ரீவன் கூறியதைக் கேட்ட சும்பன் முதலில் தூம்ரலோசனன் என்பவனை அனுப்புகிறான். அம்பிகையைக் கேசத்தைப் பிடித்து இழுத்துவரப் பணிக்கப்பட்ட தூம்ரலோசனன் அம்பிகையை நோக்கிப் பாய்ந்தான். தன் ஹூங்காரம் ஒன்றாலேயே அம்பிகை அவனை அழித்தாள். அம்பிகையின் வாகனம் ஆன சிங்கமும் கோபத்துடன் அசுரச் சேனையின் மீது பாய்ந்து அவர்களை அழித்தது. திகைத்துப் போன சும்ப, நிசும்பர்கள் இப்போது சண்ட, முண்டர்களை அனுப்புகிறான். சண்ட, முண்டர்கள் பலத்த ஆயத்தங்களோடு கூடிய சதுரங்க சேனைகளுடன் பரிபூர்ண ஆயுதபாணிகளாய்த் தேவியைக் கொல்லச் செல்கின்றனர். அம்பிகை தன் கோபத்தில் இருந்து காளியைத் தோற்றுவித்தாள். நாக்கைச் சுழற்றிக்கொண்டும், நாக்கை நீட்டிக்கொண்டும் பயங்கர ஸ்வரூபத்துடன் தோன்றிய காலியானவள், சற்றும் தாமதிக்காமல் அசுரப் படைக்குள் புகுந்து அவர்களை அழிக்க ஆரம்பித்தாள். கோபம் கொண்ட சண்டன் காலியை நோக்கி ஓடி அம்புகளால் அவளை மறைத்தான். காலியின் சிரிப்பால் அவை சரமழையாக உதிர்ந்தன. பின்னர் காலி தேவி , சண்டனை அழித்துப் பின் முண்டனையும் அழிக்கிறாள். கெளசிகீ அவளை நோக்கி சண்ட, முண்டர்களைக் கொன்ற அவளைச் சாமுண்டா என அழைக்கப்படுவாள் என்றாள். இதையேலலிதா சஹஸ்ரநாமம், இந்த ஸ்வரூபமே லலிதா சஹஸ்ரநாமத்தில், “மஹேஸ்வரி, மஹாகாலி, மஹாக்ராசா, மஹாசநா” அபர்ணா, சண்டிகா, சண்ட, முண்டாசுர நிஷூதினி!” என்று கூறும்.
தூம்ரலோசனன் பட்டுப் போனானென்று
தூதர்கள் ஓடிச் சொன்னாருடனே
மந்திர்யும் பட்டுப்போனான் என்றவுடன்
மண்டியெரிந்து கண்கள் சிவந்து,
சண்டமுண்டரைக்கிட்டழைத்து நீங்கள்
ஸம்ஹரித்திங்கே வாருமென்றான்
சண்டமுண்டரும் ஓடிவந்து அந்தச்
சங்கரிதேவியை வந்தெதிர்த்தார்.
கண்டுதேவிதன் கோபத்தினாலே
காளிதேவியை உண்டாக்கினாள்(அவள்)
சண்டமுண்டர் தலையை வெட்டிச்சிவ
சங்கரிதேவிமுன் வைத்து நின்றாள்.
சங்கரியம்மனும் ஸந்தோஷமாயப்போ
சாமுண்டி என்ற பேர்தான் கொடுத்தாள்
தேவர்கள் எல்லாருங்கூடிக்கொண்டு மஹா
தேவிக்குப் புஷ்பமலர் சொரிந்தார்.”

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 5


நான்காம் நாளான இன்று படிக்கட்டுக் கோலம் போடவேண்டும். தேவியை இன்று விஷ்ணுவின் அம்சமான வைஷ்ணவியாக சங்கு, சக்ர, கதாதாரியாக வழிபடவேண்டும். சிறு பெண் குழந்தையை இன்று “சுமங்கலி” என்னும் நாமத்தில் வழிபட்டு கல்கண்டு சாதமும், பச்சைப்பட்டாணிச் சுண்டலும் நிவேதனம் செய்யலாம்.
ஒரே உடலின் வலப்பக்கம் ஈசன் எனில் இடப்பக்கம் அம்பாள். அம்பாளின் நிறம் உதிக்கின்ற செங்கதிர்களைப் போன்ற சிவந்த நிறம் எனில் ஈசனின் நிறம் ஸ்படிகம் போன்றது. ஸ்படிகத்தின் அருகே வேறு நிறக்கற்களை வைத்தால் எவ்வாறு அது அந்தக் கல்லின் நிறத்தைத் தனதாக்கிக் கொள்கிறதோ அவ்வாறே அம்பாளைத் தன் இடப்பாகத்தில் வைத்த ஈசனும் மறைந்து போய் அம்பாளோடு ஐக்கியமாகி அவளாகவே ஆகிவிடுகிறான். ஆகவே தேவி வழிபாடே ஈசனுக்கும் உகந்ததாகிவிடுகிறது. இங்கே அவன் தேவியோடு ஐக்கியமாகித் தனக்கென ஒரு வடிவமும் இல்லாமல், தொழிலும் இல்லாமல் அவளாகவே ஆகிவிடுகின்றான்.
எவளை வழிபட்டால் அனைத்துத் தேவதைகளையும் வழிபட்டதற்குச் சமானம் ஆகிறதோ அந்த மூலப் பொருள் அம்பிகை. இவளே ஐந்து தொழில்களையும் நடத்துகிறாள் என்பதையும் ஏற்கெனவே பார்த்தோம். இதையே லலிதா சஹஸ்ரநாமமும், ஸ்ருஷ்டி கர்த்ரீ, ப்ரஹ்மரூபா, கோப்த்ரீ, கோவிந்த ரூபிணீ,
சம்ஹாரிணி, ருத்ரரூபா, திரோதானகரீஸ்வரீ, ஸதாசிவா அனுக்ரஹதா, பஞ்ச க்ருத்ய பராயணா!” என்று கூறுகிறது.
மஹிஷாசுரனை வதம் செய்த தேவியைத் துதித்த தேவர்களிடம் அவர்களுக்குத் தேவையான சமயம் தான் திரும்பவும் தோன்றுவதாய்க் கூறி மறைகின்றாள். இனி ஸும்ப, நிஸும்பர்களின் வதத்தைப் பார்ப்போம். எல்லா அசுரர்களையும் போலவே ஸும்பன், நிஸும்பன் என்ற இரு சகோதரர்களும் தேவேந்திர பதவியைப் பறித்துக்கொண்டு மூவுலகையும் தங்களுக்குக் கீழே கொண்டு வந்தனர். ஆபத்தில் தன்னை நினைக்குமாறு கூறிச் சென்ற தேவியின் வாக்கு நினைவில் வர, தேவர்கள் இமயத்தை அடைந்து தேவியைத் துதித்தனர். பல்வேறு நாமங்களால் தேவியைத் துதித்துப் போற்றி வழிபட்டனர். தங்கள் கஷ்டங்களைக் களைய வந்திருக்கும் துர்காதேவி எனவும், ஜகத்தின் ஆதாரமும், இயக்கமும் அனைத்துமாக உள்ள தேவிக்கு நம்ஸ்காரங்கள் செய்தும் வழிபட்டனர். அனைத்து உயிர்களிலும் விஷ்ணு மாயை உருவத்தில் இருப்பவளும் அவளே எனக் கூறி வழிபட்டனர். இந்த வழிபாட்டு ஸ்லோகங்கள் அனைத்தும் தொகுக்கப் பட்டு 2008-ம் வருஷத்திய நவராத்திரிப் பதிவுகளில் காணலாம்.
“யாதேவி ஸர்வ பூதேஷூ விஷ்ணுமாயேதி சப்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:”
என்று ஆரம்பிக்கும். தேவர்கள் இங்கனம் தேவியைத் துதித்து வருகையில் பர்வத ராஜனின் மகளான பார்வதி அங்கு வந்து தேவர்களைப் பார்த்து, “என்ன?” என்று வினவ, அவளின் உடலில் இருந்து அப்போது மங்கள சொரூபியாக ஒரு பெண் தோன்றினாள். அம்பாளின் சரீர கோசத்திலிருந்து தோன்றிய அவளைக் கெளசிகீ என்பார்கள். சிவந்த அவள் வெளிவந்ததும் பார்வதியான அம்பாள் கறுப்பு நிறமடைந்து காலி(ளி)கை யானாள். கெளசிகீயின் அழகையும் நிறத்தையும் பார்த்து மோகித்தனர் சண்ட, முண்டர்கள் என்னும் அசுரத் தளபதிகள். இவர்கள் சும்ப, நிசும்பனின் படைத்தலைவர்கள். சும்ப, நிசும்பர்களைக் கண்டு கெளசிகீயின் அழகை வர்ணிக்கின்றனர். அவளைப் போன்ற உத்தமமான வடிவை எங்கும் கண்டதில்லை என்றும், அவளை அடையவேண்டியவர்கள் சும்ப, நிசும்பர்கள் தானே தவிர வேறு எவரும் இருக்கமுடியாது எனவும் சொன்னார்கள். அவளுடைய சிவந்த நிறம் உதய சூரியனின் கிரணங்களின் நிறத்தைத் தோற்கடிக்கக் கூடியதாகவும், எட்டுத் திசைகளையும் பிரகாசப் படுத்துவதாயும் இருப்பதாயும், கூறிவிட்டு, அவளுக்கு ஈடு, இணையாக இன்னொரு பெண் மூவுலகிலும் இல்லை என்கின்றனர்.
விலை மதிக்க முடியாத பல சொத்துக்களை சும்ப, நிசும்பர்கள் பெற்றிருப்பதாயும், அவை அனைத்தும் தேவாதி தேவர்களிடமிருந்தும், பிரம்மா, சமுத்திரராஜன், மற்றும் திக்கஜங்கள் போன்றவர்களிடமிருந்த விலை மதிக்க முடியாத பொருட்களும் சும்ப நிசும்பர்கள் பெற்றிருப்பதையும் எடுத்துக் காட்டினார்கள். அவ்வாறிருக்கையில் இவ்வளவு உத்தமமான ஸ்த்ரீ ரத்னம் இருக்கவேண்டிய இடம் இதுதான் என்றும் கூறினார்கள். சும்பன் இதைக் கேட்டுவிட்டு, தன் சபையில் இருந்த அசுரர்களில் சிறந்தவன் ஆன சுக்ரீவன் என்பவனைத் தூது அனுப்புகிறான். (ராமாயண சுக்ரீவனோடு குழப்பிக்கொள்ளவேண்டாம்). சுக்ரீவன் தேவியிடம் வந்து தன் இனிமையான சொற்களால் அவள் மனதை மாற்ற முயல்கின்றான். மூவுலகையும் ஆளும் ஈஸ்வரன் சும்பன் ஒருவனே என்றும் தேவர்கள் அனைவரையும் தன் கட்டளைக்குக் கீழ்ப்படிய வைத்திருக்கும் சும்பனைத் தவிர, மற்றவர் யார் எது கூறினாலும் கேட்கவேண்டாம் எனவும் தேவியிடம் கூறுகிறான். இவ்வுலகின் தலை சிறந்த ரத்தினங்கள் அனைத்தும் தன் வசம் வைத்திருக்கும் சும்பனிடமே இந்த ஸ்த்ரீரத்னம் இருக்கவேண்டிய இடம் என்றும் சுட்டிக் காட்டுகிறான். சும்பனைப் பிடிக்கவில்லை எனில் அவன் தம்பி நிசும்பனை ஏற்றுக்கொள்ளலாம் எனவும் சொல்கின்றான். இதை ஆலோசித்துக் கொண்டு சும்பனுக்கோ அல்லது நிசும்பனுக்கோ பத்தினியாக வந்து அடையுமாறு தேவிடம் சும்பன் தெரிவித்ததாய் சுக்ரீவன் கூறுகிறான்.

தேவி தன் முகத்தில் குமிண்சிரிப்புத் தெரிய, கூறிய பதில் என்னவெனில்:”உண்மைதான், சும்பனும் நிசும்பனும் பராக்கிரமசாலிகள் தான். ஆனால் நான் யாருக்குப் பத்தினியாகவேண்டும் என்பதற்கு ஏற்கெனவே ஒரு முடிவு எடுத்துவிட்டேன். அதை மாற்ற முடியாது. அந்தப் பிரதிக்ஞை என்னவெனில் என்னைப் போரில் வெல்லவேண்டும். போரில் என்னை வெல்பவர்களே எனக்குக் கணவன் என முடிவு செய்திருக்கிறேன். ஆகையால் சும்பனையோ, நிசும்பனையோ என்னோடு வந்து போர் புரியச் சொல். என்னை ஜெயித்துவிட்டுப் பின்னர் அடையட்டும். “ என்கிறாள்.
தேவரெல்லாருமாய் ஸ்தோத்தரிக்கத்
தேவியும் பிரத்யக்ஷமாக வந்து
அஞ்சாதேயுங்கள் நீங்களென்று
அபயஹஸ்தங் கொடுத்தாள் தேவருக்கு.
ஹிமயபர்வதந்தன்னில் வந்து தேவி
கன்னிகாரூபமெடுத்துக்கொண்டு
கோகிலம் போலும் குரலுடையாள்
கொம்புத்தேன் போலும் மொழியுடையாள்
ஹம்ஸம்போலும் நடையுடையாள்
அபயங்கொடுக்கும் கரமுடையாள்
மன்மதன் கைக்கொண்ட விற்போலுமுள்ள
வளைந்த புருவச் சிலையழகும்
முத்துக்கோத்தாற்போல் பல்லொளியும்
பவழம் போன்ற அதரங்களும்
பட்டமுஞ்சுட்டியும் நெற்றிதன்னில் மின்ன
பதக்கம் சரப்பளி மார்பிலசைய,
தண்டைசிலம்பு கலகலவென்னக் காலில்
சிலம்பு கொஞ்சிச் சலுஞ்சலென்க
சொர்ணமயமான ஊஞ்சலில் இருந்து
கோடி சூரியர் உதித்தது போல்
தங்கத்தினாலான சங்கிலியைத் தொட்டு
தானே பாடிக்கொண்டு ஆடலுற்றாள்

சுக்கிரீவன் கேட்டு ஸந்தோஷமாய்
வெகு சீக்கிரமாகவே ஓடிவந்தான்
தேவியருகினில் கிட்ட வந்துமெள்ளச்
சேதியை நன்றாய் எடுத்துரைப்பான்.
சும்பநிசும்பனென்று இரண்டு பேர்
மூன்றுலகங்கட்டி யாண்டிருக்கார்
உமக்கு மெத்த அழகிஅருந்தும் நல்ல
போகபாக்கியம் புஜியாமல்
இந்த அதிரூப செளந்தரியத்துடன்
தனித்திருக்கின்ற காரியமேன்?
எங்கள் ராஜாவிற்கு ஏர்வையம்மா நீர்
இந்த க்ஷணத்தில் வாருமென்றான்
வாருமென்று அழைக்கவுமேயவன்
மஹேஸ்வரியுமேது சொல்வாள்
சபதமொன்றல்லவோ செய்திருக்கேன்
சத்தியமாகவே சொல்லுகிறேன்
சண்டையிட்டு என்னை ஜெயித்தவர்கள்
கொண்டு போகலாமென்று சொல்லி,
உங்கள் ராஜாவிற்குச் சொல்லுங்களென்று
உத்தரஞ்சொல்லி யனுப்பி வைத்தாள்