எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, December 31, 2010

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 16

நாயக னாய்நின்ற நந்தகோ பனுடைய
கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்!
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்,
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.


நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே!= நந்தகோபன் ஆயர்களுக்கெல்லாம் தலைவன். ஆகவே அவன் மாளிகை மிகப் பெரியதாய் ஒரு கோயில் போல் உள்ளது. இப்போது ஆண்டாள் தான் அழைத்து வந்த பெண்களோடு நந்தகோபன் வீட்டுக்கே வந்துவிட்டாள் போலும். ஆனால் இங்கேயோ ஒவ்வொரு வாயில்கள், பல நிலைகள், பல காவலர்கள் இருப்பார்கள் போலும். ஒவ்வொன்றையும் கடந்தல்லவோ உள்செல்லவேண்டும். முதல்லே வாசலைக் கடக்க அவனைக் கேட்கிறாள்.

கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே!= நந்தனுடைய கொடிக்கம்பத்தில் கொடி கட்டப்பட்டுத் தெரிகிறது. வாயிலில் தோரணங்களும் கட்டப்பட்டிருக்கின்றன. அங்கேயும் ஒரு வாயில் காப்போன். அவனையும் இறைஞ்சுகிறாள் ஆண்டாள்.

மணிக்கதவம் தாள் திறவாய்= மணிகள் பொருந்திய அழகிய கதவின் தாளைத் திறக்க மாட்டாயா? என்று கெஞ்சுகிறாள். கண்ணன் உள்ளே இருக்கிறான். நம் மனமாகிய கோயிலுக்குள்ளே. அங்கே சென்று அவனை அடையத் தான் எத்தனை தடை! நம் செயல்களே நம்மைத் தடுக்கின்றன அன்றோ!

அந்த வாயிற்காப்போர்கள் கண்ணனுக்குத் தெரியுமா நீங்க வரதுனு கேட்கிறாங்க போல

ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்= அட, கண்ணன் அறியாதவனா? எங்களை அவனுக்கு நன்கு தெரியுமே! நாங்கள் ஆயர்பாடிச்சிறுமிகள் தாம் என்று ஆண்டாள் சொல்ல, சிறுமிகளாய் இருந்தாலும் ஏன் இப்போது வந்தீர்கள் என்று கேட்க, அவர்கள் எங்களுக்குப் பாவை நோன்புக்கான சாதனங்களைத் தருவதாய்க் கண்ணன் வாக்களித்திருந்தான். அதைப் பெற்றுச் செல்ல வந்தோம். வேறு ஒன்றும் இல்லை என்கிறாள். அவன் கருணா கடாக்ஷம், அவன் கடைக்கண் கடாக்ஷம் ஒன்றே இங்கே சுட்டப் பட்டிருக்கிறது. கண்ணனின் கருணைப் பார்வை ஒன்றே போதும் என்கிறாள் ஆண்டாள்.

தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா! = தூய்மையான எண்ணங்களோடு, உள்ளம் முழுதும் கண்ணன் மேல் மாறாத பக்தியோடு வந்திருக்கிறோம் காவலனே, எங்களுக்கு வேறு எந்தவிதமான துர் எண்ணங்களும் இல்லை. கண்ணனைத் துயிலில் இருந்து எழுப்பு என்கிறாள் ஆண்டாள். பகவானின் பாதாரவிந்தங்களே சரண் என அடைந்தவர்களுக்கு, அவர்களுடைய முன்வினைகளையும் போக்கிவிட்டு அவன் தன் யோக நித்திரையிலிருந்தும் எழுந்து அவர்களைத் தன் அருட்பார்வையால் கடாக்ஷிப்பான். ஆனால் முன்வினைகளோ இங்கே தடுக்கின்றன. பக்தர்கள் கதறுகின்றனர். அம்மா, அம்மா, உன் கருணை ஒன்றே போதுமே, உன் கடைக்கண்பார்வை ஒன்றே போதுமே, உன் அருட்பார்வையை எங்கள் பக்கம் திருப்பாமல் மாற்றிவிடாதே கண்ணா, எங்களுக்கு அனுகிரஹம் செய் என்று கதறுகிறார்கள்.

நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.= இந்த மாபெரும் தடையாகிய கதவுகளை நீக்கிவிட்டு உள்ளே சென்று கண்ணனைச் சந்திக்க எங்களை அநுமதிப்பாய். இப்பிறவியில் செய்யும் புண்ணியங்களே, நற்செயல்களே நம்மை ஈசன் பால் கொண்டுவிடும். முன்வினைகளோ நாம் ஈசன் பால் செல்லமுடியாமல் தடுக்கும். ஆகவே நாம் தூயமனத்தவராய் எந்நேரமும் கண்ணன் புகழ் பாடுவது ஒன்றே குறிக்கோளாய்க் கொண்டு வேறு சிந்தனைகளை மனதில் நிறுத்தாமல் இருந்தால் கண்ணன் நம்மை ஆட்கொள்வான்.

கண்ணனோடு ஐக்கியமடைவதைப் பற்றி ஆண்டாள் கூறினால் பட்டத்திரியோ கண்ணன் இல்லாத இடமே இல்லை என்கிறார். அவன் அனைத்துள்ளும் இருக்கிறான். சர்வ வியாபி என்கிறார்.

மூர்த்த்நா மக்ஷ்ணாம் பதா வஹஸி கலு ஸஹஸ்ராணி ஸம்பூர்ய விஸ்வம்
தத் ப்றோத்க்ரம்யாபி திஷ்ட்டந் பரிமிதவிவரே பாஸி சித்தாந்தரேபி
பூதம் பவ்யஞ்ச ஸர்வம் பரபுருஷ பவாந் கிஞ்ச தேஹேந்த்ரியாதிஷ்
வாவிஷ்டோ ஹ்யுத்கதத்வாதம்ருத முகரஸம் சாநு புங்க்ஷே த்வமேவ

ஆயிரக்கணக்கான தலைகள், கண்கள், என உலகனைத்தும் வியாபித்து அதற்கும் அப்பால், அப்பாலுக்கும் அப்பால் வியாபித்து இருக்கும் பரம்பொருளே, உள்ளமாகிய சிதாநந்த வெளியிலே அனைவரின் சித்தத்துக்குள்ளும் பிரகாசிப்பதும் நீரே! இருந்ததும் நீரே, இருக்கிறதும் நீரே; இனி இருக்கப்போவதும் நீரே! உடலின் ஒவ்வொரு அணுவிலும் நீரே இருக்கிறீர்! சரீரத்திலும், இந்திரியங்களிலும் இருப்பதும் நீரே! எனினும் நீர் அனைத்திலும் பற்றில்லாமல் இருக்கிறீரே!

பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தாரே!


ஊருக்குப் போவது மட்டுமே முடிவு செய்திருந்தோமே தவிர சிதம்பரம் பயணம் கிளம்ப இரண்டு நாட்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்டு தீக்ஷிதரிடமே தங்குமிடத்துக்கும் சொல்லி இருந்தோம். சாதாரண நாட்களிலேயே சிதம்பரத்தில் தங்குமிடம் கிடைப்பது அரிது. பக்கத்தில் வைத்தீஸ்வரன் கோயிலோ, ,மாயவரமோ போனால் வசதியாய்த் தங்கலாம். வசதியாய் தரிசனம் செய்ய இயலாது. ஆகையால் தீக்ஷிதர் காட்டி இருந்த அறை கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் சரினு போய்த் தங்கிட்டோம். ஒருமுறை நிகழ்வுகளை எங்களுக்குச் சொல்லிவிட்டு, அன்று மாலை நடராஜர் தரிசனம் பொன்னம்பலத்தில் செய்து வைக்கிறதைச் சொல்லி எங்களை வரச் சொல்லி இருந்தார்.

அறையில் போய் ஓய்வு எடுத்துக்கொண்டு பின்னர் மாலை நாலரை அளவில் கோயிலுக்குக் கிளம்பினோம். கீழவீதியிலேயே தீக்ஷிதர் வீட்டுக்கு எதிரேயே அறை இருந்ததால் எல்லாவற்றுக்கும் வசதியாகவும் இருந்தது. எங்கள் வீட்டில் எல்லாருக்கும் சிதம்பரம் கட்டளை இருப்பதால் பொன்னம்பலம் தரிசனமும், சிதம்பர ரகசியம் தரிசனமும் கனகசபையிலே இருந்தே பார்க்க முடியும். அதே சலுகையை தேரோட்டத்துக்கு முன்னர் ஸ்வாமி புறப்பாடிலும், தேரோட்டத்தின் போதும், அதன் பின்னர் ஸ்வாமி ஆயிரங்கால் மண்டபவருகையின் போதும், அபிஷேஹம், ஆருத்ரா தரிசனம் போதும் எதிர்பார்க்க முடியாது என்பதை தீக்ஷிதர் ஏற்கெனவே குறிப்பால் உணர்த்தி இருந்தார். இவை எல்லாம் அன்றைய கட்டளை தாரர்களை முன்னிறுத்திச் செய்யப் படும். கட்டளைக்காரர்கள் பச்சையப்ப முதலியார் குடும்பத்தினர்.

மார்கழி மாசம் ஆரம்பத்தில் இருந்தே மாணிக்க வாசகருக்குச் சிறப்பான வழிபாடுகள் நடக்கும். ஈசன் அந்தணர் வடிவில் வந்து மாணிக்கவாசகர் சொல்லச் சொல்லத் திருவாசகம் முழுதும் எழுதி முடித்துக் கடைசியில், "வாதவூரான் சொல்ல தில்லைச் சிற்றம்பலத்தான் எழுதியது" எனக் குறிப்பிட்டுக் கைச்சாத்து வைத்து அதைப் பொன்னம்பலப் படிகளில் வைத்திருந்தார். மறுநாள் ஈசன் வழிபாட்டுக்கு வந்த தீக்ஷிதர்கள் அதைக்கண்டு வியந்து அடிகளாரிடம் கேட்க, அடிகளாருக்கு அப்போது தான் நடத்தியது ஈசன் திருவிளையாடல் எனப் புரிந்தது. திருவாசகத்தின் பொருளை விளக்கும்படி தில்லை வாழ் அந்தணர்கள் கேட்டதுக்குச் சிற்றம்பலம் வந்து சொல்வதாய்ச் சொன்ன மணிவாசகர், சிற்றம்பலத்துக்கு வந்ததும், "திருவாசகத்தின் பொருள் இதுவே!' எனக்கூறி சிற்றம்பலத்தின் உள்ளே சென்று அனைவரும் காண ஈசனோடு ஐக்கியமானார். அந்த நிகழ்ச்சி நடைபெற்ற நாள் திருவாதிரைத் திருநாள் என்ற ஐதீகம். ஆகவே மார்கழி மாதம் முழுதும் மாணிக்க வாசகர் ஒவ்வொரு கால வழிபாட்டின் போதும் சிற்றம்பத்தில் எழுந்தருளுவார். மாணிக்கவாசகருக்குத் தனிச் சந்நிதி உண்டு. மாணிக்கவாசகரின் பதிகங்கள் ஓதுவார்களால் பாடப்பெறும்.

21 பதிகங்கள் பாடப்பட்டு 21 முறை தீபாராதனை எடுக்கப் படும். இதிலே மாணிக்கவாசகர் ஈசனுக்கு எடுப்பதாகவும் ஐதீகம். இவை முடிந்ததும் மாணிக்கவாசகருக்கும், ஆநந்த நடராஜருக்கும் அடுக்குதீபாராதனை, கற்பூர ஆரத்தி காட்டப்படும். ஆகவே நாங்கள் சென்ற 20-ம்தேதி மாலை அதைப் பார்த்துவிட்டுச் செல்லும்படி தீக்ஷிதர் கூறி இருந்தார். நாங்கள் கோயிலுக்குச் சென்றபோது மாலை வழிபாடு இன்னும் ஆரம்பிக்கவில்லை. ஆகவே முதலில் நடராஜர், சிவகாமசுந்தரி தரிசனம் காணச் சென்றிருந்தோம். அங்கே நடராஜரும், சிவகாமி அம்மையும் பட்டுத்துணிகளால் மூடப்பட்டு முகம் மட்டுமே தெரியும்படி அமர்ந்திருந்தார்கள். இது என்ன???

நேத்திக்குப் பார்த்தது ஆநந்த நடராஜரின் தேரும், பிள்ளையார் தேரும், இப்போது பார்ப்பது சிவகாமசுந்தரியின் தேரும், சுப்ரமண்யர் தேரும்.

தொடரும்.

Thursday, December 30, 2010

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 15

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென்றழையேன் மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக.
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றானை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலொ ரெம்பாவாய்!

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?= எலேய் னு அழைப்பது இப்போவும் உண்டு. ஆனால் ஆண்குழந்தைகளையும், நெருங்கிய ஆண் சிநேகிதர்களை மற்ற ஆண் சிநேகிதர்களும் மட்டுமே அழைக்கின்றனர். ஆண்டாளின் காலத்தில் பெண்பிள்ளைகளைக் கூட அழைத்திருக்கின்றனர். அதுவும் இந்தப் பெண் சின்னக் குழந்தையாய் இருக்கவேண்டுமோ? கிளியே என அழைத்திருக்கிறாள். குழந்தைகளையும், சின்னக் குழந்தைகளையும் செல்லமாய்க் கிளி எனக் கூப்பிடுவது உண்டு. அல்லது இந்தப் பெண்ணின் பேச்சுக் கிளியின் மழலை மாதிரி மிழற்றலாய் இருக்கவேண்டும். கிளி கொஞ்சுகிறது என்பார்கள் அல்லவா?? அப்படி!

சின்னஞ்சிறு கிளி போன்ற அழகிய பெண்ணே, இன்னுமுமா நீ உறங்குகிறாய்? என்று கேட்கின்றனர் இந்தப் பெண்ணை அழைக்கவந்த தோழிகளும், ஆண்டாளும்.

சில்லென்றழையேன் மின் நங்கைமீர் போதர்கின்றேன்= உள்ளே அந்தப்பெண் என்ன செய்யறாளோ தெரியலை, ஒருவேளை சீக்கிரம் எழுந்து குளிக்கச் செல்லத்தயாராகிக்கொண்டிருக்கலாமோ? அல்லது ஏற்கெனவே கண்ணனின் நாமாக்களை நினைந்து நினைந்து பரவசம் அடைந்து கொண்டிருக்கும் வேளையில், இவர்கள் சப்தம் அவளுக்கு இடஞ்சலாய் இருந்ததோ?? தெரியலை, உள்ளே இருந்து உடனே பதில் வருகிறது. கொஞ்சம் மெல்லத்தான் அழையுங்கள், பெண்களா? நான் வந்துகொண்டே இருக்கிறேன். ஒண்ணும் தூங்கவில்லை என்கிறாள். இதைச் சொல்லாமல் சொல்லி இருக்கிறாள்.

வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்= அவள் அப்படிச் சொல்ல வெளியே இருப்பவர்களுக்கு உள்ளே அவள் ஏதோ நொண்டிச்சாக்குச் சொல்கிறாள் எனத் தோன்ற, அடி, நீ ரொம்பக் கெட்டிக்காரிதான், உன்னைப் பத்தி எங்களுக்குத் தெரியாதா? அப்படித்தான் சொல்லுவாய், வரேன் வரேன்னு, ஆனால் நீ இதுக்கு முன்னாடியெல்லாம் இப்படிச் சொல்லிவிட்டு என்ன செய்தாய்? எங்களுக்குத் தெரியாதா என்ன உன்னைப் பத்தி? என்று கேலி பேசுகிறார்கள்.

வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக.= உள்ளே அவளுக்குக் கோபம் அதிகம் ஆக, ஆமாம், ஆமாம், நானே பொல்லாதவளாய் இருந்துட்டுப் போறேனே, நீங்களெல்லாம் நல்லவங்களாவே இருங்க என்று கூறுகிறாள்.

ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை= சரி, சரி, சீக்கிரமாய்க் கிளம்பு, உனக்குன்னு தனியாவா பாவை நோன்பு நூற்க முடியும், எல்லாரும் சேர்ந்து தானே செய்யணும்னு கூப்பிடுகிறார்கள்.

எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள்= உள்ளே உள்ள பெண்ணோ விடாமல் எல்லாரும் வந்துட்டாங்களா என்று கேட்க, நீ முதல்லே வெளியே வா, வந்து நீயே எண்ணிப் பார்த்துக்கோ என்கிறார்கள். மேலும்,


வல்லானை கொன்றானை மாற்றானை மாற்றழிக்க= வல்லானை கொன்றானை என்பதை இங்கே வலிய ஆனையாகிய குவலயாபீடத்தைக் கண்ணன் அடக்கியதையும் குறிக்கும். வல்லவன் ஆன கம்சனைக் கொன்றதையும் குறிக்கும். மேலும் அசுரர்களை அழிப்பதோடல்லாமல் நம்மிடையே இருக்கும் அசுரக் குணங்களையும் கண்ணன் நாமம் அடியோடு ஒழிக்கும் இந்த இடத்தில் அந்தப் பொருளே மிகவும் பொருந்தி வரும்.

வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்= வல்லவன் ஆன மாயக்கிருஷ்ணனைப் பாடி ஆடலாம் வா பெண்ணே.

இங்கே பகவானின் நினைவில் ஒரு கோபி அமிழ்ந்து இருப்பதையும், அவளை மற்றக் கோபிகள் வழிபாட்டுக்குக் கூப்பிடுவதைக் கூட இடைஞ்சலாக எண்ணுவதையும் மேல்பார்வைக்குக் கண்டாலும் உள்ளே இருந்த கோபியின் பணிவான பதிலில் அவள் கண்ணனின் அடியார்கள் அனைவரையும் தன் மனதுக்கு உகந்தவர்களாய்க் கண்டாள் என்பதும் புரியவருகிறது.

இப்படி பகவான் நாமத்தின் மகிமை பற்றி பட்டத்திரி கூறும்போது இவ்வுலகையே படைத்த விஷ்ணுவின் நாமங்களைச் சொல்லாமல் அவனிடம் ஈடுபாடு கொள்ளாமல் இருப்பதும் ஒரு வாழ்க்கையா என்கிறார்.

ஹே லோகா விஷ்ணுரேதத் புவநமஜநயத் தந்ந ஜாநீத யூயம்
யுஷ்மாகம் ஹ்யந்த்ரஸ்த்தம் கிமபி ததபரம் வித்யதே விஷ்ணுரூபம்
நீஹார ப்ரக்க்ய மாயா பரிவ்ருத மநஸோ மோஹிதா நாமரூபை:
ப்ராணப்ரீத்யைக த்ருப்தாஸ்சரத மகபரா ஹந்த நேச்சா முகுந்தே

இந்த உலகை சிருஷ்டித்தது அந்த மஹாவிஷ்ணு தான், மக்களே, இதை யாருமே புரிந்துகொள்ளவில்லையே; அவன் உருவம், ரூப செளந்தர்யம் இத்தகையது என எவராலும் விளக்கமுடியாமல் இருக்கிறது. அவன் உங்களுக்குள்ளேயே இருக்கிறான். ஜீவனாக இருக்கிறான். அவன் உங்கள் உள்ளே உறைவதைத் தெரிந்து கொள்ள முடியாமல் உங்கள் உள்ளம் மாயை என்ற மூடுபனியால் மூடப்பட்டுக்கிடக்கிறதே; வெறுமே உண்டு, உடுத்து உயிர்வாழ்வதிலேயே திருப்தி அடைந்து கொண்டிருக்கிறீர்களே, அந்த விஷ்ணுவின் நாமரூபங்களை மட்டுமே பார்த்து மயங்கி இருக்கிறீர்களே, அவன் உங்களுள்ளே இருப்பதை அறியாமல் இருக்கிறீர்களே; ஏ ஜனங்களே, உங்கள் ஆடம்பரமான முறையிலான வழிபாடுகளை நிறுத்திவிட்டு, வெறும் வயிற்றுக்காக மட்டுமல்லாமல் முகுந்தனிடம் முழு ஈடுபாடு கொண்டு பக்தி செய்யுங்கள்.

Wednesday, December 29, 2010

மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாள் 14

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!


உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்= ஆண்டாள் இப்போது இன்னொரு பெண்ணின் வீட்டுக்கு வந்திருக்கிறாள். இவள் இன்னும் எழுந்திருக்கவில்லை. இத்தனைக்கும், இவள் நாளைக்கு நானே வந்து உங்களை எல்லாம் முதல்லே எழுப்புவேனாக்கும்னு சொல்லி இருந்தாள். இப்போ அசையக் கூட இல்லை!

அடி, பெண்ணே, உங்க வீட்டுக் கொல்லைப்புறத்திலே, அந்த நாட்களில், இப்போவும் சில ஊர்ப்பக்கம் கொல்லையைப் புழக்கடைனு சொல்வதுண்டு. முன்பெல்லாம் கிணறு மட்டுமில்லாமல் வீட்டுப் பெண்கள் குளிக்கவென்று சின்னஞ்சிறு குளம் கூட இருக்குமென்று என் அப்பா சொல்லி இருக்கிறார். அந்தக் குளத்தில் தாமரை, அல்லிபோன்ற மலர்கள் காணப்படுமாம். இப்போவும் தஞ்சை மாவட்டத்தில் சில கிராமங்களில் பகலில் மலரும் தாமரைப்பூக்கள் நிரம்பிய குளங்களையும் இரவில் மலரும் அல்லிப்பூக்கள் நிரம்பிய அல்லிக்குளங்களையும் காண முடிகிறது. அத்தகையதொரு குளம் இந்தப் பெண்ணின் வீட்டுக் கொல்லையில் இருக்கிறது. ஆண்டாள் மெதுவா எட்டிப் பார்க்கிறாள். தாமரைப்பூக்கள் மலர்ந்திருக்கும் அந்தக் குளத்தின் அல்லிப்பூக்களோ வாடிவிட்டன. மீண்டும் இரவில் நிலவைக்கண்டாலேயே மலரும். ஆகையால் அந்தப் பெண்ணை எழுப்ப இதுதான் சரியான நேரம், எழுந்திரு பெண்ணே, உன் வீட்டுக்கொல்லைப்புறத்தில் இருக்கும் வாவியில் தாமரைப்பூக்கள் மலர்ந்து அல்லிப்பூக்கள் கூம்பிவிட்டனவே.

செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்= அது மட்டுமா, செங்கல்பொடியைப் போலச் சிவந்த காவிநிறமுடைய உடையை அணிந்த தவக்கோலம் பூண்ட சந்நியாசிகள், இங்கே அவர்களை வெண்பல் தவத்தவர் என்கிறாள் ஆண்டாள். வெற்றிலை போட்டால் பற்கள் வெண்மையாய் இராது. இவர்களோ சந்நியாசிகள். சந்நியாசிகள் வெற்றிலை போடக்கூடாது. அதனால் அவர்கள் பற்களும் வெண்மையாகவே இருக்கின்றன. அந்த சந்நியாசிகள் தங்கள் ஈசனின் கோயிலுக்குச் சென்று வழிபடச் செல்கிறார்கள். அந்தக் கோயில்களிலிருந்தெல்லாம் வழிபாட்டுக்கான சங்கநாதம் ஒலிக்கத் தொடங்கிவிட்டது.

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்= அடியே, எங்களை முன்னாடி வந்து எழுப்புவேன்னெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாயே, ஏ நங்கையே , உனக்கு வெட்கமாய் இல்லையா? நீ சொன்னதெல்லாம் வெறும் பேச்சுத்தானா?? அதற்கு அர்த்தம் இல்லையா??


சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!= சூரிய, சந்திரர்களைப் போல் விளங்கும், சங்கையும் சக்கரத்தையும் தன்னிரு திருக்கைகளில் தாங்கிக்கொண்டிருக்கும் தாமரை போன்ற விழிகளை உடைய அந்தக் கண்ணனை வந்து பாடு வா, பெண்ணே. தன் அழகான தாமரைக்கண்களால் நம்மைப் பார்த்து அருள் செய்வதோடு நம்மையும் அவனுக்கு அடிமையாக்கிக்கொள்கிறான் அந்தப் பரம்பொருள். அப்படி அவனுக்கு அடிமையாவோம் வா, அவன் புகழைப்பாடி ஏத்துவோம் என்கிறாள் ஆண்டாள்.

இப்படிப் பரம்பொருளுக்கே அடிமையாய் இருப்பதைப் பற்றிய பக்தி யோகத்துக்கு பட்டத்திரி கூறுவது:

த்வத் பாவோ யாவதேஷு ஸ்புரதி ந விசதம் தாவதேவம் ஹ்யுபாஸ்திம்
குர்வந்நைகாத்ம்ய போதே ஜடிதி விகஸதி த்வந்மயோஹம் சரேயம்
த்வத்தர்மஸ்யாஸ்ய தாவத் கிமபி ந பகவந் ப்ரஸதுதஸ்ய ப்ரணாஸ:
டஸ்மாத் ஸர்வாத்மநைவ ப்ரதிஸ மம விபோ பக்திமார்க்கம் மநோஜ்ஞம்

இவ்வுலகிலுள்ள புழு, பூச்சிகளில் இருந்து மிக உயர்ந்த நிலையிலுள்ள மனிதர் வரை அனைவருமே , உயிரற்ற மரம், மலை போன்ற ஜடப் பொருட்களும் கூட பரமாத்மாவின் அம்சம் என்ற நினைப்பே வரவேண்டும். அவ்வாறு நினைக்க எத்தனை நாட்கள் ஆனாலும் அதுவரை நான் தங்களை ஆராதித்துக்கொண்டே இருப்பேன். எந்த ஆத்மாவும் ஒன்றே என்ற உறுதியான அசைக்கமுடியாத மெய்யறிவு எனக்குக் கைகூடவேண்டும். அந்த நிலையில், "நீங்களே நான், நானே நீங்கள்" என்னும் வேறுபாடற்ற இரண்டும் ஒன்றே என்ற பாவம் பெற்று நான் உலவ வேண்டும். ஆஹா, இவ்விதம் என்னுடைய பக்தியானது மாறுமானால் அதற்கு அழிவேது! ஹே ப்ரபு, அத்தகையதொரு பக்தி மார்க்கத்தை நீ எனக்குத் தந்தருளுவாய்!
************************************************

பிச்சைப்பாத்திரம் ஏந்தி வருவார் இருங்க!

இங்கே


இங்கே

முன் இரண்டு பதிவுகளை மேலே கண்ட சுட்டியில் காணலாம். ஸ்டேஷன் மாஸ்டர் டிக்கெட்டை வாங்கிப் பார்த்ததுமே ஏமாந்துட்டார். ஹிஹிஹி, நாங்க ஏதோ தொலைதூரத்திலே இருந்து வரோம்னு நினைச்சிருக்கார். சென்னையிலிருந்து வரோம்னதும், அடுத்து மாயவரம் மிஞ்சிப்போனால் ஒரு மணிநேரம் தான் இறங்கி இருக்கணும், சிதம்பரம்னதும் அவர் சொன்னது குறைந்த பக்ஷம் ஆயிரம் கிமீ பயணத்திலே ஐந்நூறு கிலோமீட்டராவது பயணம் செய்தால் தான் நடுவில் பயணத்தை நிறுத்திக்கொண்டு இறங்கிப் பின் நாலு நாட்கள் ரயில்வே அநுமதியோடு இறங்கிய இடத்தில் இருந்து நான்காம் நாள் ஏற முன்பதிவு கிடைக்கும்னும் இந்த அல்ப விஷயத்துக்கெல்லாம் கிடைக்காது என்றும் சொன்னார். நான் என்னமோ வெங்காயம் தான் காணாமல் போச்சாக்கும்னு நினைச்சேன் என்பதே அவர் சொல்ல விரும்பி இருப்பார். கேவலம் வெங்காயம் நூறு ரூபாய் விக்கும்போது சிதம்பரம்-மாயவரம் பதினைந்து ரூபாய்க்கு வந்துட்டாளேனு பார்த்தார். அதை ஒண்ணும் வெளியே காட்டிக்காமல் முகத்தைச் சாதாரணமா வச்சுண்டு வெளியே வந்து ரங்க்ஸிடம் ஐநூறு கிமீட்டர் பயணம் செய்திருக்கணுமாம்னு மட்டும் சொன்னேன். அவரோ நான் தான் வேண்டாம்னு சொன்னேன், கேட்டியானு சொல்றார். அநுகூல சத்ரு! :P வேறே என்ன செய்யறது?

நல்லவேளையா தீக்ஷிதர் ஆட்டோ அனுப்பி இருந்தார். ஹிஹி, பயப்படாதீங்க! அவங்க வீட்டுக்குப் போகத்தான். குடும்ப ஆட்டோ! அங்கே போனதும் எனக்கு பக் பக் னு இருந்தது. எல்லாம் இந்த அறை எப்படி இருக்குமோங்கற கவலைதான். தீக்ஷிதர் வீட்டில் சாப்பாடு ரெடி சாப்பிட வாங்கனு சொல்ல, நாங்க ரயிலிலே சாப்பிட்டோம்னு சொல்ல, ஏன் வாங்கிச் சாப்பிட்டீங்கனு கோவிக்க, காலம்பர மூணு மணிக்கு எழுந்து, குளிச்சுட்டுச் சமைச்ச எனக்குக் கோபம் வர, அதைக் கண்ட ரங்க்ஸ் நிலைமை முற்றும்முன் குறுக்கிட்டு என்னைப் புகழ்ந்து பேச, மறுபடியும் என் கவலை ரூம் எப்படி இருக்குமோனு திரும்ப, அவரும் நிம்மதி அடைந்தார். ஏன்னா, இப்போ ரூம் எப்படி இருந்தாலும் பழி தீக்ஷிதருக்குத் தானே! மாட்டிக்கப் போறது அவர் தானே! பாவம் அல்ப சந்தோஷி! அநுபவிச்சுட்டுப் போகட்டுமே! :)))))))

அவங்க கிட்டே பேசவேண்டியது, கேட்கவேண்டியது முடிஞ்சதும், ஆட்டோ டிரைவரே எதிரே இருந்த லாட்ஜுக்கு சாமானை எடுத்து வந்து கொடுத்தார். அறை கீழே இருக்காக்கும்னு நினைச்சால் கீழே ஏதோ ரெஸ்டாரண்ட். அட கடவுளே, எங்கே இருக்கு லாட்ஜ்னு பார்த்தால் விண்ணிலிருந்து அசரீரி கிளம்பியது. மேலே வாங்க சார். மேஏஏஏஏஏஏஏலே பார்த்தோம். முதல் மாடியாம். அம்ம்மாடி எம்புட்டு உயரம்! பையன் யாராவது இருந்தால் அனுப்புங்களேன், சாமானைத் தூக்க முடியலைனு ரங்க்ஸ் சொல்லிட்டு, நாலு நாளைக்கு எவ்வளவு புடைவை?னு பல்லைக் கடிக்க, புடவைமடிப்புக்குள் வைச்சிருந்த புத்தகம் அவர் கண்ணில் படக்கூடாதேனு நான் கவலைப்பட பைய(ர்)ன் (60 வயசிருக்கும்)சாப்பிடப் போயிருக்காராம். வேறே வழியில்லாமல் ரெண்டு பேரும் சாமானைத் தூக்கிண்டு மாடி ஏறினால் அஜந்தா, எல்லோரா எல்லாம் கெட்டுது ஒவ்வொரு படியும் இரண்டடி உயரம். ஒரு படியிலிருந்து இன்னொரு படிக்கு ஏறப் படியைத் தேடினேன்னா பாருங்களேன்!

ஒருவழியா ஏறி மேலே போய் மானேஜரைப் பார்த்துப் பேசி அறையைப் பார்த்தா உள்ளே ஒண்ணுமே தெரியலை! வெயில்லே வந்திருக்கீங்க அதான்னு சொன்னார். அது சரிதான்னு நினைச்சுட்டு, பாத்ரூம் எப்படி இருக்குனு பார்த்தால் பாத்ரூமையே காணோம். காலைத் தூக்கி மேலே ஏதோ பரணில் வைச்சுட்டேன் போலிருக்கு. கீழே இறங்கத் தெரியலை. திகைச்சுப் போயிட்டேன். மானேஜர் அதான் மேடம் பாத்ரூம்னு சொல்றார். பக்கெட் எங்கே? குழாய் எங்கே? தண்ணீர் எங்கே?? விளக்கு எங்கே? ஒண்ணையும் காணோமே! ஹிஹிஹி, இது நானில்லை, அ.வ.சி. மானேஜர், கரண்ட் இல்லை. இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும் வர. அப்போ ஜெனரேட்டர் போடலாமே? இது நான் தான் வேறேயாரு. வாயை வச்சுண்டு சும்மாவா இருக்க முடியும்? ஜெனரேட்டரா?? அப்படின்னா? இது மானேஜர்!

எங்கே உங்க முதலாளி?

ராத்திரி வருவார்! நீங்க அப்போ கோயில்லே இருப்பீங்க! இது மானேஜர்!

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ரெண்டு பேரும் உறுமினோம் இதென்னடா கூத்து, எடுத்த எடுப்பிலேயே ஏழாம்பொருத்தம் இந்த இடத்தில் வாழ்க்கைப்பட்டு இரண்டு நாளைக்குக் குப்பை கொட்டணுமா?? அதுவும் போற இடமெல்லாம் துரத்தும் ஆற்காட்டார் வேறே! பேசாமல் கட்டிலில் போய் உட்கார்ந்தோம். கட்டில் விரிப்பெல்லாம் ஓரளவு பரவாயில்லை. யாரோ என்னைப் பத்திப் போட்டுக் கொடுத்திருப்பாங்கனு நினைக்கிறேன். சுத்தமாத் துவைச்சு இருந்தது. நாங்களும் இப்போல்லாம் நம்பறதில்லைகையோடு எடுத்துப் போயிடறோம். 3 ஸ்டார் ஹோட்டல்னு ஒரு ஊரிலே (புதுக்கோட்டை?? மதுரை???) தங்கிட்டு ஒரு அறைக்கு ஆயிரம் ரூபாய்க்கும் மேலே வாடகை கொடுத்துட்டுப் பட்ட அவஸ்தை!

Tuesday, December 28, 2010

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்! 13

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைக ளெல்லாரும் பாவைக்களம் புக்கார்
வெள்ளி யெழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந் தவிர்ந்து கலந்தே லொரெம்பாவாய்!

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்= ஆண்டாள் பாட்டுக்கு முந்தைய பாட்டில் ஸ்ரீராமனைப் பற்றிப் பாட ஆரம்பித்தாலும் ஆரம்பித்தாள், சில கோபியருக்குக் கோபம் வந்திருக்கு போல! அவங்க இங்கே மறுபடியும் கிருஷ்ணனைத் துதிக்க ஆரம்பிச்சாச்சு! புள்ளின் வாய்க் கீண்டானை என்பது இங்கே பகாசுரன் கொக்காய் வந்து கிருஷ்ணனைக் கொல்ல வந்தபோது அந்தக் கொக்கின் வாயைக் கண்ணன் பிளக்க முயன்றதைக் குறிக்கும். அதைக் குறித்துச் சில கோபியர்கள் பாட, ஆண்டாளோ விடாமல் ஸ்ரீராமனையே குறித்துச் சொல்கிறாள். நாலு பெண்கள் சேர்ந்தாலே பேச்சு அதிகம். இங்கேயோ பாகவதர்களின் விசேஷம் வேறே. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்று ப்ரீதி. அது போலத் தான். ஆண்டாள் பாட்டுக்குப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை அப்படினு முந்திய பாடலின் தொடர்ச்சியாக ராவணனின் பத்துத் தலைகளையும் ஸ்ரீராமன் அறுத்ததைக் குறிப்பிடுகிறாள். அப்படிப் பட்ட பரம்பொருளின் கீர்த்திகளைப் பாடிக்கொண்டே போவோம்.


பிள்ளைக ளெல்லாரும் பாவைக்களம் புக்கார்
வெள்ளி யெழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!= இங்கே பிள்ளைகள் என்று கூறி இருப்பது மீண்டும் பாவை நோன்பு நூற்கும் பெண்களையே. தென்மாவட்டங்களில் இன்றும் பெண்குழந்தைகளைப் பெண்பிள்ளை என்று கூறுவதும், ஏ, பிள்ளே, என அழைப்பதும் வழக்கத்தில் இருக்கிறது. மேலே ஒருத்தி ஸ்ரீகிருஷ்ணனையும், மற்றொருத்தி ஸ்ரீராமனையும் பாட ஆரம்பிக்கவும், ஒருத்தருக்கொருத்தர் சண்டை போட்டால் வேலைக்காகாது என இன்னொருத்தி, சரி, சரி, எல்லாப் பெண்பிள்ளைகளும் பாவை நோன்புக்காக நதிக்கரைக்குப் போய்ப் பாவையைப் பிடித்து வைத்து வழிபாட்டுக்கு ஆரம்பிக்கப்போகிறார்கள். அதோடயா?? ஆச்சரியமான வாநிலை அறிக்கையும் தருகிறாள் ஆண்டாள் இங்கே. வெள்ளியெழுந்து வியாழம் உறங்கிற்று என்கிறாள். சுக்கிரன் உதயம் ஆகி வியாழ கிரஹம் அஸ்தமனம் ஆகிவிட்டதாம். ஆகையால் பொழுது விடிந்துவிட்டதே? இன்னுமா நீ தூங்குகிறாய்?? அந்தக் காலகட்டங்களிலே பெண்கள் கிரஹ சஞ்சாரங்களை எல்லாம் பார்த்துக் கேட்டுத் தெரிந்து கொள்பவர்களாய் அறிவு நிரம்பி இருந்திருக்கின்றனர். மற்றப் பறவைகளும் காச், மூச்சென்று கத்த ஆரம்பிச்சாச்சு, ஏ பெண்ணே, மலர் போன்ற கண்களை உடையவளே,

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந் தவிர்ந்து கலந்தே லொரெம்பாவாய்! = சீக்கிரம் வந்து நதியில் ஆழ்ந்து அமுங்கிக் குளிரக் குளிரக் குளித்தால் குளிரெல்லாம் போய்விடும். அதாவது ஸ்ரீகிருஷ்ண பக்தி அநுபவம் என்ற நதியில் மூழ்கி முங்கி எழுந்தால் நம் பாவங்களாகிய குளிர் போய்விடும். மேலும் தாமதம் ஆவதற்குள்ளாக சும்மாக் குளிருது, குளிருதுனு பொய் சொல்லி நடிக்காமல் வா, பெண்ணே!

இங்கே நம் மனம் ஒரு சமயம் ஈஸ்வர பக்தியில் ஆழ்ந்தாலும் மற்றொரு சமயம் வெளி உலக இன்பங்களில் ஆழ்கிறதைக் குறிக்கிறது. அதை விடுத்து மனப்பூர்வமாய்க் கண்ணனிடம் பக்தி பூண்டு, அந்த பக்தி ரசமாகிய அமுதக் குளத்தில் முங்கி மகிழ்வோம்.

பட்டத்திரியோ முக்குணங்களால் கிடைக்கும் வெவ்வேறு பலாபலன்களையுமே பகவானைச் சேவிப்பதும், பகவானின் க்ஷேத்திரங்களைத் தரிசனம் செய்வதுமாகிய செயல்களை நிர்பலனாக நிஷ்களங்கமாகப்பரிபூரண மனதோடு செய்து வந்தால் அதிலேயே முக்தி அடையலாம் என்கிறார்.

த்ரைகுண்யாத் பிந்ந ரூபம் பவதி ஹி புவனே ஹீநமத்யோத்தமம் யத்
ஜ்ஞாநம் ஸ்ரத்தா சகர்த்தா வஸதிரபி ச ஸுகம் கர்ம சாஹார பேதா:
த்வத் க்ஷேத்ர த்வந்நிஷேவாதி து யதிஹ புநஸ் த்வத்பரம் தத்துஸர்வம்
பராஹூர் நைர்குண்ய நிஷ்டம் ததநு பஜநதோ மங்க்ஷு ஸித்தோ பவேயம்

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 12

கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால்சோர
நனைத்தில்லஞ் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்!
இனித்தானெ ழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத் தாரும் அறிந்தே லோரெம்பாவாய்!

கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால்சோர
நனைத்தில்லஞ் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!= எருமை மாடுகள் கறக்க ஆளில்லாமல் பால் கட்டி அவஸ்தைப் படுகின்றனவாம். அதோடு கன்றுக்கு ஊட்டவும் முடியாமல் மாடுகள் கட்டிப் போடப் பட்டிருக்கின்றன. இங்கே கட்டுதல் என்பது அறியாமையில் நாம் கட்டப் பட்டிருப்பதையும் சொல்லலாம். எருமையும் அறியாமையின் அடையாளமே என முன்னரே பார்த்தோம். அப்படிக் கட்டிப் போட்டிருக்கும் எருமைகள் பால் கனம் தாங்க முடியாமல் தானாகவே பாலைச் சொரிகின்றன. அந்தப்பாலெல்லாம் கீழே விழுந்து கோபர்களின் இல்லமெல்லாம் பாலும், மண்ணும் கலந்து சேறாகிவிட்டதாம். இந்த கோபன் இல்லை போலும், அதான் பால் கறக்க ஆளில்லை!

அவன் எங்கேயும் போகவில்லை. நற்செல்வன் ஆச்சே! வெறும் பொருளால் ஆகிய செல்வம் மட்டும் இல்லை அவனிடம், அவனிடம் சிறந்த பக்திச் செல்வமும் இருப்பதாலேயே கோதை அவனை நற்செல்வன் என்று கூறுகிறாள். அத்தகைய நல்ல பக்திச் செல்வம் நிறைந்தவனின் தங்கை வீட்டிற்கு இப்போது போயிருக்கிறாள் ஆண்டாள். அவளை எழுப்புகிறாள்.

பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்! = பனி கொட்டுகிறது. அதுவும் கோகுலத்தில் கேட்கவும் வேண்டுமா?? கொட்டும் பனியில் நனைந்து கொண்டு கீழே நிற்கலாம் என்றால் கீழேயும் பால் கொட்டிச் சேறு. இத்தனை அமர்க்களத்தில் நாங்கள் நிற்க முடியாமல் உன் வீட்டு வாசல் கதவைப் பிடித்துக்கொண்டு நிற்கிறோம். என்கிறாள் ஆண்டாள். அப்படியும் அவள் அசைந்தே கொடுக்கவில்லை.

சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற = சினம் என்ன சாதாரண சினமா? தன் மனைவியைச் சிறைப்பிடித்த சினம். சிறைப்பிடித்தவனும் சாமானியன் அல்லவே. சிறந்த சிவபக்தன். நவகிரஹங்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவற்றைத் தான் மிதிக்கும் படியாகப் போட்டுக்கொண்டவன். தன் அண்ணனாகிய குபேரனின் செல்வத்தைக் கொள்ளை அடித்து அவனை லங்காபுரியிலிருந்து அலகாபுரிக்கு விரட்டி அடித்தவன். ஈசனிடமே சரிக்குச் சரியாக நின்று அவரை ஆட்டி வைக்கப் பார்த்துப் பின்னர் அவர் கால்விரலின் கனம் தாங்காமல் கத்தோ கத்துனு கத்தி அதனால் ராவணன் என்ற பெயரும், சந்திரஹாசம் என்ற வாளும் பெற்றவன். இப்படிப் பட்ட ராவணனைத் தோற்கடித்தவன் யார்??

மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்!
இனித்தானெ ழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத் தாரும் அறிந்தே லோரெம்பாவாய்! =வேறே யாரு? நம்ம மனதுக்கு இனியவனே என்கிறாள் ஆண்டாள். ஆமாம், இந்தக் கண்ணன் படுத்தற பாடு தாங்கலை தான். கோபியர்களை அங்கேயும், இங்கேயும் அலைக்கழிக்கிறான். திடீர்னு ஒருத்திக்குப் பூச்சூட்டுகிறான் இன்னொருத்திக்குத் தலை வாரிவிடுகிறான். வேறொருத்தியின் வீட்டில் வெண்ணெய் சாப்பிடுகிறான். சரினு பார்த்தால் நம் வீட்டு முற்றத்திலே நிற்கிறான். புல்லாங்குழல் பாட்டிசையைக் கேட்டுப் போனால் ஒளிஞ்சுக்கறான்.

ஆனால் ஸ்ரீராமன் அப்படி இல்லை. கருணாமூர்த்தி! தனக்குத் தீமை செய்தவர்களுக்குக் கூட நன்மையே செய்பவன், ராவணனைக்கூட இன்று போய் நாளை வா என்றே பெருந்தன்மையாய்க் கூறினான் அன்றோ! ஆகவே ஏ, பெண்ணே இந்தக் கண்ணன் நாமம் வேண்டாம், சரியா, ராவணனுக்கே சரணாகதி கொடுக்கத் தயாராய் இருந்த ஸ்ரீராமன் நமக்கும் கொடுப்பான். அத்தகைய மனதுக்கு இனிய நற்குணங்கள் நிரம்பிய ஸ்ரீராமனைப் பாடுவோம் வா, நாங்களும் அவன் புகழைப் பாடுகிறோம். நீ என்னன்னா இன்னும் தூங்குகிறாயே! எழுந்திரு பெண்ணே! இனியாவது எழுந்திரு! அக்கம்பக்கம் எல்லாம் பார்க்கிறாங்க பார்! எங்களுக்கு ஒண்ணுமில்லை அம்மா, உனக்குத் தான் அவமானம், இப்படியும் ஒரு பெண் இத்தனை பேர் இத்தனை நேரம், இத்தனைப் பாட்டுப்பாடியும் தூங்கறாளேனு சொல்லுவாங்க. வா, வா சீக்கிரமாய்!

இத்தகைய பக்தியைப் பற்றி நாராயண பட்டத்திரி சொல்வது:
"ஸோயம் மர்த்யாவதாரஸ்தவ கலு நியதம் மர்த்ய ஸிக்ஷார்த்தமேவம்
விஸ்லேஷார்த்தி: நிராகஸ்த்யஜநமபி பவேத் காமதர்மாதி ஸக்த்யா:
நோ சேத் ஸ்வாத்மாநுபூதே: க்வ நு தவ மநஸோ விக்ரியா சக்ரபாணே
ஸ த்வம் ஸத்வைகமூர்த்தே பவந புரபதே வ்யாதுநு வ்யாதிதாபாந்

குருநாதரின் வாதநோயைத் தனதாக்கிக்கொண்ட பட்டத்திரி மஹாவிஷ்ணுவின் திவ்ய சரித்திரத்தைப் பாடுவதன் மூலம் தன் வாத நோய் தீரும் எனத் தீர்மானத்தோடு மஹாவிஷ்ணுவின் ஒவ்வொரு அவதார மகிமை பற்றியும் பாடி வந்தார். அதிலே ஸ்ரீராமாவதாரத்தின் மகிமை பற்றிக்கூறுகையில் ஸ்ரீராமாவதாரமானது சாமான்ய மக்களுக்குப் படிப்பினை சொல்லுவதற்காகவும், ஒரு மனிதன் எவ்வாறு வாழவேண்டும், தர்மம் என்பது எந்த எந்த சமயங்களில் எவ்வாறு கடைப்பிடிக்கவேண்டும் என்பதைக்கூறுவதாயும் அமைந்திருப்பதை எடுத்துக்காட்டுகிறார். நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு அன்பிற்குரியவர்கள் கொஞ்ச நேரம் கண்கள் எதிரே இல்லைனாலும் மனம் சஞ்சலம் அடையும், கவலை அடையும், வருத்தம் கொள்வோம். ஆனால் ஸ்ரீராமரோ தன் கண்ணுக்கும் மேலாக அன்பு செலுத்தி வந்த மனைவியை முதலில் ஸ்ரீராவணன் அபகரித்துச் சென்றபோது பிரிந்தார். பின்னர் அரச தர்மத்தைக் காக்கவேண்டி, நாடு முழுதும், தன் நல்லாட்சியைப் பாராட்டும் அதே சாமான்யக் குடிமக்கள் ராவணன் ஊரில் அசோகவனத்தில் சிறை இருந்த சீதையைத் தான் திரும்ப ஏற்றுக்கொண்டது சரியில்லை என்ற கோணத்தில் பேசிக்கொள்வதையும், இனி தாங்களும் அவ்வாறுதான் இருக்கவேண்டுமோ என்றும் பேசிக்கொள்வதை ஒற்றர்கள் மூலம் கேட்டுத் தெரிந்து கொண்டு மனைவியை நிரந்தரமாய்ப் பிரிகிறார். குடிமக்களின் நல்வாழ்க்கைக்காகவும், அவர்களுக்கு ஒரு சரியான முன்னுதாரணமாய் இருக்கவேண்டியும் தன் அன்பு மனைவியைப் பிரிந்தார் ராமர். இவ்வாறு திவ்யச் செயல்கள் புரிந்த ஸ்ரீராமர் குற்றமற்ற சீதையை எப்படிப் பிரிந்தார்?? தர்மத்தின் மேல் வைத்த அதீதப் பற்றா?? இவ்வளவு புகழ் வாய்ந்த ஸ்ரீராமர் இப்போது குருவாயூரப்பன் உருவில் வந்து இறங்கி இருக்கிறாரே, அவரே என் வாத நோயைப் போக்கி அருளவேண்டும் என்கிறார்.

ஆண்டாள் கண்ணனை விடுத்து ஸ்ரீராமனை மேற்கோள் காட்டியவாறு பட்டத்திரியும் மஹாவிஷ்ணுவின் அளப்பரிய லீலைகளை நினைத்து ஆநந்தம் அடைவதோடு நம்மையும் அடையச் செய்கிறார். சதா விஷ்ணுவின் லீலைகளைக் கண்ணாரக் கண்டு ஆநந்திக்கும்படியும் கூறுகிறார்.

Monday, December 27, 2010

தவறுக்கு மன்னிக்கவும்.

மிகப் பெரிய தவறு நடந்திருப்பதை இப்போதே கவனித்தேன். அதைச் சரி செய்துவிட்டுத் திருப்பாவையைப் போடுகிறேன். ஒன்பதாம் நாள் திருப்பாவையைப் போடுவதற்குப் பதிலாக ஆறாம் நாள் திருப்பாவை இரண்டு முறை இடம் பெற்றுவிட்டது. ஊருக்குப் போகும் அவசரம்! மன்னிக்கவும். தாமதத்துக்கும் பொறுக்கவும்.

பிச்சைப்பாத்திரம் ஏந்தி வரப் போறார்!

Posted by Picasa
தேர்களில் நடராஜர் தேரையும், சுப்ரமணியர் தேரையும் முன் பதிவில் பார்த்தோம். இது அம்மன் தேரும், பிள்ளையார் தேரும், சற்றுப் பின்னால் சண்டேஸ்வரர் தேரும் இருக்கிறது. நாங்க ஊர்ப்பக்கம் போகிறதுனு முடிவானபோது சிதம்பரம் போகும் எண்ணம் இல்லை. நேரே மாயவரம் போகத் தான் இருந்தோம். அபி அப்பா கிட்டே சொல்லி அறைக்கு ஏற்பாடு செய்யச் சொல்லலாம் என்று நம்ம ரங்க்ஸ் சொன்னார். அபி அப்பா கிட்டே சொல்றதும், தினத்தந்தி, மாலைமலர், தினமலர்னு எல்லாத்திலேயும் செய்தியா வரதும் ஒண்ணுதான்னு எனக்குத் தோணினதாலே வேண்டாம், போய் அவரைப் பயமுறுத்திக்கலாம்னு சொல்லிட்டேன். இண்டர்நேஷனல் லெவல்லே நாம மாயவரம் போகிறது விக்கி லீக்ஸில் வரக்கூடிய சாத்தியக்கூறுகளும் இருக்கு. ஆனால் திடீர்னு சிதம்பரம்னு முடிவானதும், மாயவரத்துக்கு டிக்கெட் வாங்கிட்டுச் சிதம்பரத்தில் இறங்கினோம்.

சிதம்பரத்தில் எப்போவுமே தங்கும் இடம் கிடைப்பது பிரச்னை. நாங்க அதிகம் அங்கே தங்கியதும் இல்லை. பக்கத்தில் வைத்தீஸ்வரன் கோயில் வந்துடுவோம். ஆனால் இப்போ திருவிழா பார்க்கணுமே. தீக்ஷிதர் கிட்டே சொல்லித் தங்க ஏற்பாடு பண்ணச் சொல்லி இருந்தோம். அவரும் பண்ணிட்டேனு சொன்னார். அதனால் தைரியமாச் சிதம்பரம் இறங்கினோம். இரண்டுநாள் கழிச்சுத் தான் மாயவரம் போகணும். ரயிலில் தான் break of journey avail பண்ணும் வசதி உண்டேன்னு விடாப்பிடியா டிக்கெட்டில் எண்டார்ஸ்மெண்ட் வாங்கணும்னு நான் சொல்ல, ரங்க்ஸ் வேண்டாம் வா போனாப்போகட்டும்னு பெருந்தன்மையா ரயில்வேக்கு விட்டுக்கொடுக்கக் கடைசியில் நான் மட்டும் விடாப்பிடியாய்ப் போய்க் கேட்கலாம்னு ஸ்டேஷன் மாஸ்டர் ரூமுக்குப் போனேன்.

அவர் நாங்க வந்த ரயிலை வழியனுப்பப் போயிருந்தார். சரி, வழியனுப்பிட்டு வரட்டும்னு காத்திருந்தேன். ஸ்டேஷன் மாஸ்டர் வந்தார். அவர் கிட்டே விஷயத்தைச் சொன்னேன். அவரும் உதவுகிறேன்னு சொல்லிட்டு டிக்கெட்டைக் கொடுங்கனு கேட்டார். சரினு கொடுத்தேன். உடனே என்னை ஒரு பார்வை பார்த்தார் பாருங்க, என்ன இது அல்பம்! என்ற தோரணை அவர் முகத்திலே பளிச்சிடவே எனக்குக் கோபம் பொங்கியது. சற்று நேரத்தில் ரசாபாசம் ஆகியிருக்குமோனு தோணும்போது படம் முடியற சமயத்திலே தலையைக் காட்டுகிற தமிழ் சினிமா போலீஸ் மாதிரி நான் கோவிக்க ஆரம்பிக்கப் போற சரியான சமயத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் சொன்னார். அது நாளைக்கு! வர்ட்டா???

தொடரும்!

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தாரே!

 
Posted by Picasa
சிதம்பரம் தேரோட்டத்துக்குத் தயாராகக் காத்திருக்கும் தேர். தேரில் நடராஜர் அமர்ந்தபின்னர் படம் எடுக்கத் தடை. இது முதல்நாளே எடுத்தது. சென்ற திங்கள் 20-ம்தேதி ஆருத்ரா தரிசனவிழாவுக்கான ஏற்பாடுகளில் சிதம்பரம் மூழ்கி இருந்தது. நாங்கள் மதியமே எங்கள் தீக்ஷிதர் வீட்டிற்குச் சென்றோம். ஆருத்ரா தரிசனம் ஈசன் தனது எல்லையில்லாத் தாண்டவத்தை தாருகாவனத்து ரிஷிகள் அறியவும், பின்னர் உமைக்கு அறைக்குள்ளேயும் ஆடிக்காட்டியது. ஆடிக்கொண்டே அவன் சிதம்பரம் வந்திருக்கிறான். அந்த அதி அற்புதக் காட்சி தான் ஆருத்ரா தரிசனம். தாருகாவனத்து ரிஷிகளின் கர்வத்தை அடக்க ஈசன் பிக்ஷாடனராக வந்ததும், அதன் பின்னர் நடந்ததும் அறிந்தவையே.பிட்சாடனர் பற்றிய புராணக்கதைக்கு இங்கே பார்க்கவும்.

அந்த பிக்ஷாடனக் கோலத்தில் ஈசன் அன்று கிளம்பிக்கொண்டிருந்தான். சாதாரணப் பிச்சைக்காரனா என்ன?? உலகத்துக்கே ராஜாவாச்சே?? அதனால் நாதசுரக்காரர்கள் மல்லாரி வாசிக்க, தங்கப் பல்லக்கில், தங்கத் திருவோட்டை ஏந்திக்கொண்டு குறுநகை விளங்க, எதுக்கு அந்தச் சிரிப்பு?? உங்களை எல்லாம் வாழ வைக்கும் பிச்சையே நான் போடறது தானே? இதிலே எனக்குப் பிச்சைபோட வந்துட்டீங்களோனு கேட்கும் சிரிப்பு. சிரிப்பு முகத்தில் விளங்க சிதம்பரம் வீதிகளில்கொட்டும் மழையில் பிச்சை எடுக்கக் கிளம்பினான் ஐயன். அவனுடைய திருவோட்டில் அன்று பிச்சை இடும் பாக்கியமும் கிடைத்தது. பிச்சை வாங்கிக்கொண்டு தான் மறுநாள் நர்த்தன சுந்தர நடராஜாவாக வீதிவலம் அழகாய் அலங்கரிக்கப் பட்ட தேரில் வரப் போகிறான். பிக்ஷாடனர் வீதி வலம் வந்து உள்ளே சென்றதும், ராஜா ஊர்வலம் வரும் முன்னர் ஊர் நிலவரத்தையும், பாதுகாப்பையும் பரிசோதிக்கச் சந்திரசேகரர் நடு இரவில் ஒரு அவசரப் பார்வை பார்த்து எல்லாம் சரியாய் இருக்கா? காலம்பர ராஜா வந்து தேரில் உலா வரப் பிரச்னை இல்லையேனு பார்த்துட்டுப் போகிறார். அதுக்கு அப்புறமாய் மறுநாள் அதிகாலையிலே சித்சபையில் இருக்கும் நடராஜா தீவட்டிகள் முழு வீச்சில் ஒளி வீசிப் பிரகாசிக்க,கொம்பு, எக்காளம், பேரிகை, சங்கு, பறை, மேளம், கொட்டு, உடுக்கை, நாதஸ்வரம் அனைத்தும் முழங்க ஆடிக்கொண்டே சிவகாமி பின் தொடர கீழச் சந்நிதியின் விட்ட வாசல் வழியாக வெளியேறி ஆடிக்கொண்டே சென்று தேரில் அமர்கிறார்.

பித்துப் பிடித்த கூட்டம் தன்னை மறந்து ஆடுகிறது. அந்தக் காட்சிகளை எல்லாம் படம் எடுக்க முடியலை. ஏனெனில் நடராஜாவுக்கு எதிரே அவர்கள் ஆடுகிறார்கள். அவர்களைப் படம் எடுத்தால் நடராஜாவும் சேர்ந்து வருவார். அதோடு மாணிக்கவாசகருக்கு நடந்த, நடக்கும், நடந்து கொண்டிருக்கும் சிறப்பு வழிபாடுகளும் இதில் அடங்கியது. தேவாரம் ஓதும் ஓதுவார்கள் முன்னே தேவாரம், குறிப்பாய் மாணிக்க வாசகரின் திருவாசகப் பாடல்கள், சேந்தனாரின் பல்லாண்டு, திருஞாநசம்பந்தர், திருநாவுக்கரசர், சேக்கிழாரின் பெரியபுராணப்பாடல்களை இடைவிடாமல் ஒலிபெருக்கியில் பாடிக்கொண்டே இருக்கிறார்கள். அன்றைய கட்டளை எவருடையதோ அவர்கள் முன்னிலையில் நிறுத்தப் பட்டு எந்த விஐபிக்கும் முன்னுரிமை இல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களும் பார்க்க ஏதுவாக நடந்த இந்த மாபெரும் விழாவின் வர்ணனை தொடரும்.

Sunday, December 26, 2010

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 11

கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழிய சென்றுசெருச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே போதராய்!
சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்!

கற்றுக்கறவை கணங்கள் பல கறந்து= கற்றுக்கறவை இங்கே இளங்கன்று மாட்டைக் குறிக்கும். பசுமாடு மிகச் சின்ன வயசிலேயே கன்றை ஈன்று பால் கொடுக்குமாம். அத்தகைய கற்றுக்கறவையில் இருந்து இன்னும் வயது அதிகம் ஆன பல பசுக்கள், அதுவும் எப்படி கணங்கள்னு சொல்கிறாள் ஆண்டாள். இங்கே கூட்டம் னு பொருள் கொள்ளலாம். அத்தகைய பசுக்கள் நிரம்பிய கூட்டங்கள், எண்ணிப்பார்க்கமுடியாத அளவுக்குப் பசுக்கள். அப்படிப்பட்ட பசுக்களிடம் இருக்கும் பாலையெல்லாம் கறக்கும் ஒரு கோபனின் பெண்ணைப் பார்த்து இந்தப் பாடலைப் பாடுகிறாள் ஆண்டாள்.

அந்த கோபன் பசுக்களிடம் பால் தாராளமாய் இருக்கிறதேனு கறக்கவில்லை. கன்று குடிச்சும் பால் மடியில் நிரம்பிப் பால் கட்டிக்குமாம் பசுக்களுக்கு. அது அவற்றுக்குத் தரும் துன்பத்தை நீக்கவே பாலைக் கறக்கிறானாம்.

செற்றார் திறலழிய சென்றுசெருச் செய்யும்= செற்றார் இங்கே அசுரர்களைக் குறிக்கும். பொதுவாய் எதிரிகள் என்று கூறினாலும் இங்கே அந்த கோபருக்கு எதிரிகள் யார்னு கேட்டால் கண்ணனை அழிக்க வரும் அசுரர்களே எதிரிகள் ஆவார்கள். ஆகவே தேடித் தேடிக் கண்ணனின் எதிரிகளை அழிக்க இவரும் கிளம்பிடுவாராம். கண்ணனின் எதிரிகள்னு தெரிஞ்சாலே போதுமாம், அவர்களை அழிக்கக் கிளம்பிடுவாராம்.

குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே= அத்தகைய நற்குணங்கள் நிரம்பிய குற்றம் ஒன்றுமே கூறமுடியாத அளவுக்குக் கடமை வீரராய் இருந்து கண்ணன் தொண்டே நம் முதற்கடமை என்றிருக்கும் கோபனின் பெண்ணாகிய கொடி போன்ற பெண்ணரசியே, இங்கே கொடியைக் குறிப்பிட்டிருப்பது மேலாகப் பார்த்தால் மெல்லிய தேகத்தைச் சுட்டுவதாக இருந்தாலும், கண்ணன் என்ற நாமத்தைச் சொன்னாலேயே இவள் உயிர்வாழ்கிறாளன்றி அவன் நாமம் இல்லையெனில் இவள் கொழுகொம்பில்லாத கொடிபோல் வாடுகிறாள் என்பதையும் கூறும்.

புற்றர வல்குல் புனமயிலே போதராய்= புற்றரவு அல்குல் =இடுப்பிலே மேகலை, ஒட்டியாணம் போன்ற ஆபரணங்கள் தரிக்கும் இடம், தொப்புள் னும் சொல்லலாம். அது எப்படி இருக்கிறது என்றால் பாம்பு புகுந்து புறப்படும் புற்றைப் போல் சிறுத்து இருக்கிறதாம். இங்கே சிறுத்து இருப்பது இடையைனு நேரடி அர்த்தம் வந்தாலும் கண்ணன் நாமத்தைச் சொல்பவர்களுக்கு ஆசைகளும் சிறுத்துக் கண்ணனின் நாமம் ஒன்றே பெரும் செல்வம் என்ற எண்ணம் வரவேண்டும் என்பதையும் குறிக்கும். பொதுவாய் பெண்களின் உடற்கூறுகளைப் பற்றிய இந்தக் குறிப்புக்கள் உள்ளார்ந்த அர்த்தம் பொதிந்தவை என்பதை மனதில் கொண்டு படிக்கவேண்டும்.

அடுத்துப் புனமயிலே போதராய்= மயில் தோகை விரிந்தாற்போல் விரிந்த கூந்தலை உடைய பெண்ணே

சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட= இங்கே இருக்கும் நம் சுற்றம், நண்பர் வட்டம் அனைத்துத் தோழிகளும் சேர்ந்து வந்து உன் வீட்டு முற்றத்தில் இந்தக் குளிரில் பனியில் நின்று கண்ணனின் புகழைப் பாடிக்கொண்டிருக்கிறோமே, உன் காதில் விழவில்லையா?? இங்கே நாங்கள் கண்ணன் பேரைச் சொல்லிப் பாடிக்கொண்டிருக்க உள்ளே நீ அதைக் கேட்டு ஆநந்தித்துக்கொண்டு இருந்த இடத்தை விட்டு நகராமல் இருக்கிறாயே?


சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்!= என்னடி இது பெண்ணே, இப்படியும் ஒரு பெண் இருப்பாளா?? செல்வம் நிறைந்த பிராட்டியாக நீ இருந்தால் எங்களுக்கு என்ன வந்தது?? இதுதான் கண்ணனிடம் நீ வைத்திருக்கும் பக்திக்கு அழகா? இது அத்தனையையுமா கேட்டுக்கொண்டு இன்னமுமா நீ உறங்குகிறாய்? சீக்கிரமாய் வா பெண்ணே!

மேலே கூறியது பாகவத லக்ஷணங்கள் என்று கூறலாம். கண்ணனை நினையாத மனமும், கண்ணனுக்காக உருகாத உள்ளமும், கண்ணனுக்காக ஒழிக்காத ஆசையும் எதற்கு என ஆண்டாள் கேட்கிறாள். அதையே நாராயண பட்டத்திரி எவ்வாறு கூறுகிறார் எனில்,

தாரம் அந்தர் அநுசிந்த்ய ஸந்ததம் ப்ராணவாயும் அபியம்ய நிர்மலா
இந்த்ரியாணி விஷயாத் அதாபஹ்ருத்யாஸ்மஹே பவத் உபாஸ்நோந்முகா:

இங்கே பட்டத்ரி குறிப்பிடுவது ப்ராணாயாமம் பற்றி. சாதாரணமாய் அன்றாடம் செய்யும் மூச்சுப் பயிற்சிக்கும் இதுக்கும் வேறுபாடு உண்டு. என்றாலும் அன்றாட முறையான மூச்சுப் பயிற்சியின் மூலம் இதையும் பழக்கத்துக்குக் கொண்டு வரலாம். பிரானாயாமம் என்பது வெறும் சுவாசக் காற்று மட்டுமல்ல, அது நம் பிராணனைக் கட்டுப்படுத்தி அக ஆற்றலையும் மேம்படுத்தும் பிரபஞ்ச நுட்பமானதொரு தத்துவம். அத்தகைய பிராணாயாமம் செய்கையில் பிரணவ மந்திரத்தை, (பிரணவ மந்திரத்துக்கு இந்தப் பெயர் ஏன் வந்ததுனு இப்போப் புரியுதா?) உள்ளுக்கு ஸ்மரித்து, அதாவது நினைத்துக்கொண்டு (இதுதான் அஜபா மந்திரம்னும் சொல்லலாம், இதோடு கூடச் சொல்லும் மந்திரமும் இருக்கிறது, குருமூலம் உபதேசம் கேட்டுக்கணும்) நம் உள்ளத்து மாசுக்களைத் தீயிலிட்டுப் பொசுக்குவது போல் பொசுக்கிக்கொண்டு நம் பஞ்ச இந்திரியங்களையும், அதாங்க, கண், காது, மூக்கு, வாய்னு எல்லாம் இருக்கே அதுங்களையும் அதன் மூலம் கட்டுப்படுத்தி இவ்வுலகத்து அநுபவங்களிலிருந்து அவற்றை மெல்ல மெல்ல விலக்கி, பகவானின் நாமத்தை மனதுக்குள் உச்சரிப்பது ஒன்றையே குறிக்கோளாய்க் கொண்டு பக்தி செலுத்துவோம். இந்தப் பிராணாயாமத்தைத் தினசரி செய்து வந்தாலே மனதில் தன்னடக்கமும், உடலில் நலனும் வந்து சேரும்.

Saturday, December 25, 2010

திங்களுமாட, கங்கையுமாட 2

ஆடுகின்றானடி தில்லையிலே,
அதைக் காணச் சென்றேன் அவன் எல்லையிலே!"

சிதம்பரம் ஆருத்ரா தரிசனம் பற்றிய ஒரு தொகுப்பு விரைவில். நன்றி.

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 10


நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ!
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்!

மார்கழி மாசம் காலையில் எழுந்திருக்கிறதுன்னா எல்லோருக்கும் கஷ்டமாய்த் தான் இருக்கு போல! :( தினமும் நான் பார்க்கிறேனே, காலங்கார்த்தாலே விளக்கை ஏத்தி வாசலில் வச்சுட்டு நான் மட்டுமே வாசல் தெளிச்சுக் கோலம் போட்டுட்டு இருப்பேன். தெருவில் சத்தமே இருக்காது. கோயில்களின் பாடல் ஓசையும் கூட ஐந்தரைக்குப் பின்னாலேயே கேட்கிறது. இப்போ இப்படி இருக்க ஆண்டாளின் காலத்திலும் இப்படித் தான் எழுந்திருக்கச் சோம்பல் பட்டுக்கொண்டு ஒரு பெண்ணரசி உள்ளே படுத்திருக்கிறாள். தோழிகள் அனைவரோடும் ஆண்டாள் அங்கே போயாச்சு! அவளைக் கூப்பிட்டுப் பார்க்கிறாள். ம்ஹும், அசைவே இல்லை!

நோற்றுச்சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்= இந்தப் பெண் முதல்நாள் தான் பாவை நோன்பைப் பற்றியும் அதன் மகிமை பற்றியும் அனைவரோடும் பேசிக்கொண்டிருந்தாள். மறுநாள் சீக்கிரம் எழுந்து நோன்பிற்குச் செல்லவேண்டும் என்றாள். ஆனால் இப்போத் தூங்குகிறாள். அதுவும் எவ்வாறு?? "கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?"= இங்கே ஸ்ரீராமாவதாரம் பேசப் படுகிறாது. நோன்பு நூற்று அதன் மூலம் இந்தப் பெண்ணரசி சுவர்க்கத்தில் புகுந்து கொண்டிருக்கிறாள். ஆகவே அவளை நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய், என அழைக்கும் ஆண்டாள், என்ன இது? கும்பகர்ணன் தூங்கறாப்போல் தூங்கறயே என்று கேட்கிறாள்.

நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால் போற்ற=கிருஷ்ணனோடு பக்தி செலுத்தும் அற்புத அநுபவத்தை விட்டு விட்டு இந்தப் பெண் இப்படித் தூங்கினால் என்ன அர்த்தம்?? ஒருவேளை கண்ணனே உள்ளே இருக்கிறான் போல! அதான் இப்படி ஒரு தூக்கம் தூங்கறாள். ஆண்டாள் கண்ணனை அங்கே தேடிக் குரல் கொடுக்க, அந்தப் பெண்ணோ கண்ணன் இல்லைனு சொல்லி விடுகிறாள். என்னது கண்ணன் இல்லையா? என்றால் அவன் மாலையாகச் சூடும் துழாயின் நறுமணம் எங்கிருந்து வந்தது?? புரிந்தது, புரிந்தது, உள்ளே கண்ணனோடு நீ கிருஷ்ணானுபவத்தை அநுபவித்துக்கொண்டு சுவர்க்கம் போகிறாய். அதனால் தான் வெளியேயும் வரவில்லையா??

தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ! = ஆஹா, உனக்குத் தெரியாமல் கண்ணன் எங்கே வருவான்? என்றாள் அந்தப் பெண். இல்லை, இல்லை, சகலத்திலும் தானாக நிறைந்திருக்கும் பரம்பொருள் அல்லவோ கண்ணன்?? அவன் இங்கே இருப்பான். எதனுள்ளும் இருப்பான். என்று ஆண்டாள் கூற அந்தப் பெண்ணிடம் இருந்து பதிலே இல்லை. சரியாப் போச்சு, மறுபடியும் கண்ணனை நினைத்துக் கனவு காணப் போய்விட்டாளா?? ஏ கும்பகர்ணி, கும்பகர்ணன் தான் தவம் செய்துவிட்டு, ஒரு சொல்லில் வாய் பிறழ்ந்து நித்திரைத்துவம் கேட்டு வாங்கி வந்தான் என்றால், நீயுமா?? ஸ்ரீராமன் தன்னை அழிக்க வந்த மாபெரும் சக்தி என்பது தெரிந்தே கும்பகர்ணன் அவனை எதிர்த்தான் அல்லவோ? அப்படிப்பட்ட கும்பகர்ணனைப் போல் நீயும் நித்திரையில் ஆழ்ந்துவிடாதே!

ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய் = அல்லது உன்னுடைய பெரும் ஆற்றலினால் கண்ணன் உன் கைக்குள்ளே வந்துவிட்டானோ? அந்த கர்வத்தில் நீ இருக்கிறாயோ?? பெண்ணே, சீக்கிரம் எழுந்து வா, எழுந்து வரும்போது படுக்கையில் இருந்து அப்படியே எழுந்துவராமல் உன் ஆடைகளைத் திருத்திக்கொண்டு எழுந்து வா.



இங்கே பட்டத்திரியும் பகவானின் வைபவத்தைப் பாடுகிறார். அவனே சிருஷ்டி கர்த்தா என்னும் பட்டத்திரி அந்த சிருஷ்டியே அவனுக்கு ஒரு விளையாட்டாகும் என்றும் கூறுகிறார். பகவானின் அநுகிரஹப் பார்வை ஒன்றாலேயே சகலமும் தோன்றுகிறது. அதையே இல்லை என்று அவரே மறைக்கவும் செய்கிறார். பின்னர் நம்மிடம் காட்டியும் விளையாடுகிறார். பரம்பொருளின் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டின் அதி அற்புதத்தை எவரால் வர்ணிக்க முடியும்?

கஷ்டா தே ஸ்ருஷ்டிசேஷ்டா பஹூதரபவ கேதாவஹா ஜீவபாஜாம்
இத்யேவம் பூர்வமாலோசிதம் அஜித மயா நைவமத்யாபிஜாநே
நோ சேஜ்ஜீவா: கதம் வா மதுரதரமிதம் த்வத்புஸ் சித்ரஸார்த்ரம்
நேத்ரை: ஸ்ரோத்ரைஸ்ச பீத்வா பரமரஸ ஸூதாம்போது பூரே ரமேரந்"

இறைவனை எவரால் வெல்ல முடியும்?? எவராலும் முடியாத ஒன்று. நம் அன்பும், மனப்பூர்வமான பக்தியுமே அவனை வெல்லும் சக்தி உள்ளது. அந்தப் பரம்பொருளின் சிருஷ்டி விளையாட்டு முதலில் ஜீவர்களுக்குத் துன்பங்களை விளைவிப்பது போல் தோன்றினாலும் பரம்பொருளின் அர்ச்சாவதாரத் திருமேனியின் அழகைக் கண்ணாரக் கண்டு ஆநந்திக்கும் பேறு இந்த ஜீவர்களுக்குத் தானே வாய்க்கிறது? அதோடு மட்டுமா?? பரம்பொருளின் திவ்ய சரித்திரத்தையும் அவன் மேன்மையையும் பாடி, ஆடவும் ஜீவர்களால் தானே இயலும் ஒன்று??


என் குருவாயூரப்பா, எத்தனை பிறவி எடுத்தாலும் உன் புகழைப் பாடியும், ஆடியும், உன்னை மறவாமலும் இருக்கும் பேறு ஒன்றே எனக்குப் போதும்.(சொந்த வேண்டுகோள்)

Friday, December 24, 2010

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 9


தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழ துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்;
மாமீர் அவளை எழுப்பீரோ? உன் மகள்தான்
ஊமையோ? அன்றி செவிடோ அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்!

இந்தப்பெண்ணை எழுப்பச் செல்லும் ஆண்டாளுக்கு அவள் உறவு போல் தெரிகிறது. இல்லை என்றாலும் கண்ணனுக்கு நெருங்கியவளாயும் இருக்கலாம். கண்ணனுக்கு நெருங்கியவள் தனக்கும் அணுக்கமானவள் என்ற பொருளிலேயே கோதை நாச்சியார் சொல்லி இருக்கலாம். கோபிகைகள் அனைவருமே பகவானின் பக்தர்கள், பாகவதக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். அந்த உரிமையாலும் இருக்கலாம். அந்தப் பெண்ணோ தூமணி மாடத்தில் தூங்குகிறாளாம். சுற்றும் விளக்குகளும் எரிய, தூபம் கமழத் துயிலணை மேல் துயில்கிறாள்.

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய = பகவானுக்கு நாம் மட்டுமில்லாமல் தேவாதிதேவர்களும் நவரத்தினங்களையும் அர்ப்பணிக்க அவற்றில் உள்ள அனைத்துத் தோஷங்களையும் நீக்கிய பகவான் அவற்றால் ஒரு அழகான மாடம் மணிகளால் ஆன மணிமாடம் கட்டிக் கொடுக்கிறன் பாகவத சிரோன்மணிகளுக்காக. அதிலே பாகவத சிரோன்மணிகளிலேயே கண்ணனுக்கு மிகவும் அண்மையில் இருப்பவள் ஆன இந்தப் பெண்ணரசி, ஆனந்தமாய்த் தூங்குகிறாள்.

தூபம் கமழத் துயிலணை மேல் கண் வளரும்= இப்போதெல்லாம் திரைப்படப் பாடல்களிலே மட்டும் கண்வளர்வது பற்றிக் கேள்விப் படுகிறோம். அக்காலங்களில் தூங்குவது என்றெல்லாம் சொல்லாமல் கண் வளர்தல் என்றே வழங்கி வந்திருக்கிறது. அழகான பல தமிழ்ச் சொற்களை நாம் இழந்துவிட்டோம். துயிலணை மேல் படுத்துக்கொண்டு தூக்கம் வர நறுமண தூபம் போட்டுக்கொண்டு சுற்றிலும் விளக்குகளும் ஜகஜ்ஜோதியாய் எரிய (ம்ஹும் என்னால் முடியாது வெளிச்சத்தில் தூங்க) தூங்கறாளாம் இந்தப் பெண். நிஜமாவே தூங்கறாளா அல்லது கண்ணன் நினைவில் ஆழ்ந்து போயிருக்காளா? தெரியலை. சரி, மாளிகைக்குள்ளே நுழைந்து பார்க்கலாம் என்றால் அவள் எழுந்து வந்து கதவைத் திறக்கவேண்டாமோ? அடம் பிடிக்கிறாள்!

மாமீர் அவளை எழுப்பீரோ? உன் மகள்தான்
ஊமையோ? அன்றி செவிடோ அனந்தலோ?=மாமன் மனைவியை மாமி என அழைக்கும் வழக்கம் ஆண்டாள் காலத்திலேயே இருந்திருக்கிறது பாருங்க! அந்தப் பெண்ணின் தாயை உறவுமுறைசொல்லி அழைத்து மாமி, அவளை எழுப்புங்கள், உங்க பொண்ணு என்ன பேசவே மாட்டேங்கிறாளே? ஊமையா? இல்லைனா காதிலே விழவில்லையா?? காது செவிடா? அடுத்து அனந்தலோனு கேட்கிறாள், அனந்தல் இந்த இடத்திலே மயக்கம் என்ற பொருளில் வருதுனு நினைக்கிறேன். ஒரு சிலர் கர்வம், பெருமைனும் சொல்வாங்க. இங்கே எப்படிப் பொருள் கொண்டாலும் சரியாய் இருக்கும். கண்ணன் எனக்கு நெருங்கியவன் என்ற மயக்கத்தில் இருக்கிறாளா எனக் கேட்பதாயும் கொள்ளலாம். கர்வம் கொண்டு விட்டாளோ என்று கேட்பதாயும் கொள்ளலாம்.

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?= சாதாரணமாய்ப்பார்த்தால் யாரானும் இவளை மயக்கிட்டாங்களோனு அர்த்தம் கொள்ளவேண்டும். இங்கே ஆண்டாள் கண்ணன் மேல் கொண்ட காதல் மயக்கத்தில் அவன் நாமத்தின் மகிமையில் மயங்கிவிட்டாளோனு கேட்கிறாள் என்று கொண்டால் சரியாய் இருக்கும். ஸ்ரீகிருஷ்ண மந்திரத்தை உச்சரித்து உச்சரித்து மனம் கசிந்து அந்த ஆழ்நிலைத் தூக்கத்துக்குப் போயிட்டாளோனு கேட்கிறாள் என்று கொள்ளவேண்டும்.

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்!= மாமாயன், அந்தக் கண்ணன் மாயக்கண்ணன் மட்டுமல்ல, நம்மைப் பிறப்பு, இறப்பு போன்ற கர்மவினைகளிலிருந்தும் காப்பாற்றி மோக்ஷத்தைக் கொடுக்கக் கூடிய மாதவன் என்னும் ஆண்டாள், அதையே மா என்னும் லக்ஷ்மியின் கணவன் என்ற பொருளிலும் கூறி இருக்கிறாள்.
வைகுந்தன்=வைகுந்த வாசியான அந்தப் பர வாசுதேவன் நாமங்களைச் சொல்லி அவன் புகழைப்பாடிப் பரப்புவோம் வா பெண்ணே!


இந்த மாமாயன், மாதவனின் குணாதிசயங்களைப் பட்டத்திரி சற்றே வேறுவிதமாய்க் கூறுகிறார். அதாவது மஹாவிஷ்ணுவையே இந்த உலகின் ஆதிபுருஷர் எனக்கூறும் பட்டத்திரி, இவ்வுலகில் புதிது புதிதாய்த் தோன்றும் அனைத்துக்கும் அதிபதியான மஹாவிஷ்ணுவுக்கு வழிபாடுகளும், யாகங்களும் செய்வதோடு நில்லாமல் அவருடைய திவ்ய சரித்திரங்களை முக்கியமாய்க் கிருஷ்ணாவதாரத்தைப் பாடி, வர்ணித்து ஆநந்தம் அடைந்து, மற்றவரையும் ஆநந்தம் அடையச் செய்யவேண்டும். இவ்வாறு செய்தால் மோக்ஷம் நமக்கு வெகு எளிதாய்க் கிட்டும் என்கிறார்.

அத்யாயாஸேஷக்ர்த்ரே ப்ரதிநிமிஷ நவீநாய பர்த்ரே விபூதே:
பக்தாத்மா விஷ்ணவே ய: ப்ரதிஸதி ஹவிராதீநி யஜ்ஞார்ச்ச்நாதெள:
க்ருஷ்ணாத்யம் ஜந்ம யோவா மஹதிஹ மஹதோ வர்ணயேத் ஸோயமேவ
ப்ரீத: பூர்ணோயஸோபிஸ்த்வரித மபிஸரேத் ப்ராப்யமந்தே பதம் தே

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 8

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பறந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம்! கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம்சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோரெம்பாவாய்!

இப்போ வானமோ வெளுத்துவிட்டது. எருமைமாடுகளும் கறவை முடிந்து மேயக்கிளம்பிவிட்டன. நீ இன்னுமா எழுந்திருக்கவில்லை என்கிறாள் ஆண்டாள்.

அவள் அழைக்கும் பெண்ணோ கண்ணன் மனதுக்கு நெருங்கியவளாய் இருக்கணும். அதனால் அவளைக் கோதூகலமுடைய பாவாய் என அழைக்கிறாள்.

கோதூகலமுடைய பாவாய், கீழ்வானம் வெளுத்து எருமைகள் எல்லாம் புல் மேயக் கிளம்பிவிட்டனவே. நீ என்ன இன்னும் எழுந்திருக்கவே இல்லையா? இங்கே வானம் என்பது ஆகாயத்தைக் குறித்தாலும் நம் உள்ளத்தையும் குறித்துச் சொல்லப் பட்டிருக்கலாம். நம் உள்ளம் தூய்மையாக வெளுத்து எந்தவிதமான தோஷங்களும் இல்லாமல் நிர்மலமாய் இருத்தலையே இங்கே சொல்லி இருக்கவேண்டும். அதேபோல் எருமையும் இங்கே நம் அறியாமையைக் குறிப்பதாய் இருக்கவேண்டும். அறியாமையில் மூழ்கி மூழ்கி நாம் ஆங்காங்கே தடங்கித் தடங்கி மெல்ல மெல்ல இறைவன் திருவடியை நோக்கிப் பயணிக்கிறோம். எருமை மாடுகள் மேயப் போனாலும் மேய்ச்சல் நிலத்துக்கு நேராய்ப் போவதில்லை அல்லவா? அதே போல்! வழியில் அதுபாட்டுக்குப் படுத்துக்கும், நிற்கும், தண்ணீரைக் கண்டால் வாலால் அடித்துச் சேற்றைக் குழப்பும். இப்படியே நாமும் அந்த எருமை மாட்டைப் போலவே வாழ்க்கையின் அனைத்து ரசங்களிலும் ஆழ்ந்து போய் மிகவும் தாமதமாகவே இறைவனைத் தேட ஆரம்பிக்கிறோம்.

(இது எல்லாமே என்னையே சுட்டுவது போல் இருக்கே! )

மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னை= ஆனால் இங்கே வந்திருப்பதோ பரமனுக்குப் ப்ரீதியான பிள்ளைகள் அன்றோ, அவன் மனதுக்கு அண்மையில் இருப்பவர்கள் அன்றோ. இவர்கள் வெகுவிரைவில் அவர்கள் போகவேண்டிய இடத்துக்குச் சென்றுவிடுவார்களே, அதுவரையிலும் அவர்களைப் போகாமல் உனக்காகத் தடுத்து நிறுத்தி உள்ளேன்.



கூவுவான் வந்து நின்றோம்!
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம்சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோரெம்பாவாய்! =

பெண்ணே, நீ கண்ணனுக்கு மிகவும் பிடித்தவள் அன்றோ? நாங்கள் முன்னாலேயே இது இது செய்யவேண்டும் என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டோம். இப்போது உன்னை இங்கேயே விட்டு விட்டுச் சென்றால் கண்ணன் நீ வந்திருக்கிறாயா எனக் கேட்டால்?? என்ன சொல்வோம் பெண்ணே! கண்ணனைப் பாடி அவன் புகழைப் பாடி வாழ்த்துவோம். கண்ணன் கம்சன் சபையில் மல்லர்களை வென்றான், கேசி என்ற அசுரனை வென்றான். பகாசுரன் என்னும் கொக்கசுரனை வென்றான். இப்படி அனைத்து அரக்கர்களையும் வென்ற தேவாதிதேவனாகிய கண்ணனின் திருவடியை நாம் போற்றிப் பாடினால் , "ஆஹா, நாம் நம் அடியார்களைத் தேடிப்போகவேண்டியதிருக்க அவர்களே இங்கு வந்துவிட்டார்களா?" என்று கண்ணன் நமக்கு அவன் அருளை மழையாகப் பொழிவான்.

இதையே நாராயண பட்டத்திரி கண்ணனின் மகிமைகளை எடுத்துச் சொல்லும் விதமாய்க் கூறுகிறார். பரப்ரம்மம் என்பது எல்லையைக் கடந்து நிலை பெற்றிருப்பது என்கிறார். மேலே ஆண்டாள் அவன் மனதுக்குப் ப்ரீதியானவர்களை எவ்விதம் விட்டுச் செல்வது என அனைவரையும் கூட வருமாறு அழைக்கிறாள். பட்டத்திரியோ நிறைந்திருக்கும் இந்தப் பரம்பொருள் சகலமாகவும் இருக்கிறானே என ஆச்சரியப் படுகிறார்.

"நிஷ்கம்பே நித்யபூர்ணே நிரவதி பரமாநந்த பீயூஷரூபே
நிர்லீநாநேக முக்தாவலி ஸுபகதமே நிர்மல ப்ரஹ்மஸிந்தெள
கல்லோலோல்லாஸ துல்யம் கலு விமலதரம் ஸத்வமாஹூஸ் ததாத்மா
கஸ்மாந்தோ நிஷ்கலஸ்த்வம் ஸகல இதி வசஸ்த்வத் கலாஸ்வேவ பூமந்

தெளிந்த கடல் போன்ற ஆழமான எங்கேயும் நிறைந்திருக்கும் எல்லைகளே இல்லாத பரப்ரும்மம் ஆனது பரமாநந்தம் என்னும் அமுதக் கடலாகும். அசைவற்றிருக்கும் இது ஒரு சமயம் அசையவும் செய்யும். ஆழ்கடலில் அடியில் காணப்படும் நல்முத்தூக்களைப் போல இங்கே பக்தர்கள் இந்த அமுதக் கடலில் மூழ்கித் தங்களை மறந்து பகவத் பக்திப் பரவசத்தில் ஆழ்ந்து கிடக்கிறார்கள். எல்லா நலன்களையும் தன்னில் மூழ்கிய பக்தர்களுக்குத் தரும் இந்தக் கடலில் பகவானுடைய திவ்ய மங்கள விக்ரஹம் ஓர் பேரலையைப் போல் தோன்றுகிறது. பக்தர்கள் அதைக் கண்டு பரவசம் அடைகின்றனர்.

Thursday, December 23, 2010

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 7


கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்பெண்ணே!
காசும்பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ!
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ!
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்!


ஆனைச்சாத்தன் என்பது ஒரு குருவி வகை. எப்போவும் கிளுகிளுனு பேசிக்கொண்டே இருக்கும், அதோட கொஞ்சம் சோம்பேறியும் கூட. குயில் காலங்கார்த்தாலே எழுப்பி விட்டதுன்னா, இது மெதுவா காக்கைக்கும் அப்புறமா எழுந்திருக்கும், அத்தகைய ஆனைச்சாத்தன் கூட எழுந்துவிட்டது, கீசு கீசுனு பேச ஆரம்பிச்சுட்டதுனு இங்கே சொல்றாள் ஆண்டாள்.

கீகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே!= இந்த ஆனைச்சாத்தன் கூட எழுந்து கொண்டு கீசு கீசுனு சொல்றது கிருஷ்ணா, கிருஷ்ணா என்று சொல்றாப்போல் இருக்காம். ஆ, அவைகளின் பேச்சொலி கேட்கவில்லையா பெண்ணே,

காசும் பிறப்பும் கலகலப்பக்கைபேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ= ஆய்ச்சியர்கள் எல்லாரும் எழுந்திருந்து தயிர் கடைகிறார்கள்.
பானையில் மத்து மோதும் ஓசை, தயிர் சிலுப்பும்போது எழும் ஓசை, ஆய்ச்சியர்களின் கை வளைகளின் கிண்கிணி நாதம், அவர்கள் கழுத்து ஆபரணங்கள் அங்குமிங்கும் அசையும்போது எழும் ஒலி என ஒரே சத்தமாய் இருக்கே! இது எதுவுமா உனக்குக் கேட்கவில்லை, அடி பெண்ணே, என்ன இப்படி ஒரு பெருந்தூக்கம் தூங்குகிறாயே? உனக்கு என்ன பேய்க்குணம் வந்துவிட்டதோ?

நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ!
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்!= நீ அருமையான நாயகப்பெண்ணாயிற்றே, நாங்கள் கேசி என்ற அரக்கனைக்கொன்றதன் மூலம் கேசவன் என்ற பெயர் பெற்ற கண்ணனைப்பாடிப் புகழ்ந்துகொண்டிருக்கிறோம். நீ அதைக் கேட்டுக்கொண்டே படுத்திருக்கிறாயே? ஆனால் அந்தப் பெண்ணுக்கோ இதுவும் ஒரு சுகம்தான் போலிருக்கு. இவர்கள் கேசவனின் புகழைப்பாடப் பாட அதைப் படுத்துக்கொண்டே கேட்பதில் பெரும் ஆநந்தம் கொள்கிறாளோ என்னமோ.

ஒளிபொருந்திய முகத்தை உடைய பெண்ணே, வா, வந்து கதவைத் திறப்பாய் என்கிறாள்.

நாராயண பட்டத்திரி,சொல்லுவது என்னவெனில் வெறும் வறட்டுத் தர்க்கத்தில் சிரமப்பட்டு சித்தி அடைவதில் தாமதம் அடையாமல் பக்தி மார்க்கத்தின் மூலம் ஈசனை விரைவில் அடையலாம் என்கிறார்.

"பவத் பக்திஸ் தாவத் ப்ரமுக மதுரா த்வத்குண ரஸாத்
கிமப்யாரூடா சேத் அகில பரிதாப ப்ரசமநீ
புநஸ்சாந்தே ஸ்வாந்தே விமல பரிபோதாதய மிலந்
மஹாநந்தாத்வைதம் திஸதி கிமத: ப்ரார்த்யம் அபரம்

ஆரம்பத்திலிருந்து பகவானிடம் நாம் வைக்கும் பக்தியானது அவனுடைய லீலா விநோதங்களாலும், பகவானின் குண விசேஷங்களாலும் இனிமையானதாய் உள்ளது. வளர்ந்துவிட்டாலோ நம் மனத்தின் அனைத்துத் தாபங்களையும் அறவே நீக்குகிறது. அதோடு உள்ளத்தில் மாசற்ற தெளிவான ஞாநத்தையும் உதிக்கச் செய்கிறது. பக்தியானது இவ்வளவு செய்கிறதே இதற்கும் மேல் வேறேன்ன வேண்டும்??

Wednesday, December 22, 2010

திங்களுமாட, கங்கையுமாட! திருவாதிரை!

கார்த்திகை தீபத்திருவிழாவின் போது அடிமுடிகாணா ஜோதி ஸ்வரூபமாய் நின்ற எம்பெருமானின் திருநடனக் கோலம் காணும் நாளே ஆருத்ரா தரிசனம் ஆகும். ஆருத்ரா என்பது ஆதிரை நக்ஷத்திரத்தைக் குறிக்கும். திரு என்னும் அடைமொழியைச் சேர்த்துக்கொண்டு திருவாதிரை என்று சொல்கிறோம். விண்ணில் விண்மீன் குழுமத்தில் திருவாதிரை நக்ஷத்திரம் இருக்கும் குழுவை ஓரியன் என அழைக்கின்றனர். இதை வேட்டைக்காரன் என்றும் சொல்லுவதாய்த் தெரிய வருகிறது. மிருகசீர்ஷ நக்ஷத்திரமும் இந்தக் குழுமத்தில் இருக்கிறது. இந்த ஓரியன் குழுவின் நக்ஷத்திரங்கள் அனைத்தையும் பொதுவாய் வேட்டைக்காரன் என்று கூறுகிறார்கள் அல்லவா? இந்த வேட்டைக்காரனின் இடதுபக்கம் அவன் தோள்பட்டை போல் இருப்பது மிருகசீர்ஷம் எனில் வலது தோள்பட்டையாக விளங்குவதே இந்தத் திருவாதிரை நக்ஷத்திரம் ஆகும். செக்கச் சிவந்த நிறத்தில் காட்சி அளிக்கும் என்று தெரியவருகிறது. ஈசனின் நிறமும் செக்கச் சிவந்த வண்ணம் தானே?செந்தழல் வண்ணனுக்குரிய நக்ஷத்திரம் ஆன திருவாதிரையும் விண்மீன் குழுவிலேயே மிகப்பெரிய நக்ஷத்திரமாய்ச் சொல்லப் படுகிறது. மிகப் பிரகாசமான ஒளி பொருந்தியும் பரிமாணத்துக்கு ஏற்றவாறு ஒளி மாறும் தன்மையும் கொண்டுள்ளது என்றும் தெரியவருகிறது. பூமியிலிருந்து 430 ஒளி ஆண்டு தூரத்திலுள்ள இதன் அடிமுடியை எவரால் காண இயலும்?? பேரொளியும் அதனால் ஏற்பட்ட பெருவெப்பமும் கொண்ட இந்தத் திருவாதிரை நக்ஷத்திரம் விண்ணில் அசைந்தாடுவதானது எல்லாம் வல்ல அந்தக் கூத்தனே இந்த நக்ஷத்திர வடிவில் இவ்வுலகை இயக்க ஆடுவதை நினைவூட்டுகிறது. இந்த நக்ஷத்திரத்தின் குணமே துடிப்புடனும் செயலாற்றல் கொண்டவர்களாயும், உறுதியும் திடமும் படைத்தவர்களாயும் நிலையான மனம் படைத்தவர்களாயும் இருப்பார்கள் என்பது பொதுவான கருத்து. ஏனெனில் ஈசன் அன்போடு படைக்கிறான். அன்போடு காக்கிறான். அதே சமயம் நமக்காக விஷத்தைக் கூட அருந்துகிறான். அவன் தலையிலே பாம்பையும் ஆபரணமாய்க் கொண்டிருக்கும் அதே சமயம் அமுத கிரணங்கள் உடைய பிறைச் சந்திரனையும் தலையில் சூடிக்கொண்டு சந்திரசேகரனாய்க் காட்சி அளிக்கிறான். ஒரு பக்கம் அமைதியின் வடிவாகவும் இன்னொரு பக்கம் அழிவைக் கொடுக்கும் ருத்ரனாகவும் காட்சி கொடுக்கிறான்.

கற்பனைக்கெட்டாத அருட்பெருஞ்சோதியான எம்பெருமான் தன் கூத்தினாலேயே இவ்வுலகை இயக்குகிறார். நம் போன்ற சாமானியருக்கெல்லாம் புரியாத இந்த அற்புதக் கூத்தைச் செய்யும் எம்பெருமானை நடராஜராகக் காணும் நாளே திருவாதிரைத் திருநாள் ஆகும். எங்கும் நிறைந்த பரம்பொருள் தாமே எல்லாமுமாகி, எல்லாவற்றையும் காத்து, அழித்து, மறைத்து, மோக்ஷத்தை அளித்து என்று அனைத்தையும் நிகழ்த்துவதே நடராஜரின் தத்துவம் ஆகும். அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாத இந்தத் தத்துவத்தை நம்மால் புரிந்து கொள்ள இயலாது. நமக்குத் தெரிந்ததெல்லாம் காலையில் நீராடி உடல் தூய்மையோடு உள்ளத் தூய்மையுடன் கோயிலுக்குச் சென்று நடராஜரை வழிபடுவ்துதான்.
அன்று காலை களி செய்து, எல்லாக் காய்களையும் போட்டுக் குழம்பு வைத்து வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காயுடன் நடராஜருக்குப் படைப்பதுதான் நமக்குத் தெரியும். ஆனால் இந்தக் களிக்கும் ஒரு கதை உண்டல்லவா? களி என்றாலே மகிழ்ச்சி தானே பொருள்?? அத்தகைய களியைத் தன் அடியாருக்குத் தந்தார் ஈசன்.

சோழநாட்டின் அரசர்களுக்கு முடிசூட்டுவது தில்லை வாழ் அந்தணர்களே ஆகும். ஆகவே சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அதிக அளவில் திருப்பணிகளும் சோழ மன்னர்களால் செய்யப் பட்டது. சேந்தனாரின் காலம் சரிவரத் தெரியவில்லை எனினும் சில குறிப்புகள்கண்டராதித்த சோழனுக்கு முற்பட்டவர் என்றும், சில குறிப்புகளால் முதல் ராஜராஜ சோழன் காலம் எனவும் கூறுகின்றனர். எப்படி இருந்தாலும் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சேந்தனார் பட்டினத்து அடிகளின் தலைமைக் கணக்கராய் விளங்கினார். பட்டினத்து அடிகள் துறவு மேற்கொண்ட பின்னர் அவரின் கட்டளைப்படி பட்டினத்தடிகளின் கருவூலத்து பொக்கிஷத்தைத் திறந்துவிட்டு எல்லோரும் அவரவர் விரும்பிய வண்ணம் அள்ளிக்கொள்ளச் செய்தார். இதைக் கண்டு கோபம் கொண்ட சோழமன்னன் சேந்தனாரைச் சிறையில் அடைத்தான்.

பொக்கிஷத்தைப் பகிர்ந்து கொடுத்த சேந்தனாரோ தம் வாழ்க்கையைக் கழிக்க விறகு வெட்டியே பிழைத்துவந்தார். அதை அறியாத மன்னன் சிறையில் அடைக்க, சேந்தனாரின் மனைவியும், மகனும் பிச்சை எடுக்கவேண்டியதாயிற்று. உறவினர் அனைவரும் கேலி செய்ய சேந்தனாரின் மனைவி தங்கள் குருவான பட்டினத்தாரை வேண்ட, அவரும் விநாயகரை வேண்டித் துதித்தார். மேலும் திருவெண்காட்டு ஈசன் மேல் தனிப்பாடலும் இயற்றித் துதித்தார்.

மத்தளை தயிருண்டானும் மலர்மிசை மன்னினானும்
நித்தமும் தேடிக் காணா நிமலனே அமலமூர்த்தி
செய்த்தலைக் கயல்பாய் நாங்கூர்ச் சேந்தனை வேந்தனிட்ட
கைத்தளை நீக்கி என்முன் காட்டு வெண்காட்டுளானே"
என்று இறைவனைப் பட்டினத்தடிகள் வேண்ட. இறைஅருளாலும் பட்டினத்தடிகள் வேண்டுதாலும் சேந்தனாருக்கு விடுதலை கிடைத்தது. தில்லையம்பதி சென்று அங்கும் விறகு வெட்டிப் பிழைத்த சேந்தனார் அன்றாடம் தாம் சம்பாதிக்கும் பொருளில் இருந்து ஒரு சிவனடியாருக்கு உணவு சமைத்துப் போட்டுப் பின்னரே தாம் உணவு அருந்தும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார்.

மழைக்காலம் வந்துவிட்டது. வெட்டும் விறகெல்லாம் மழையில் நனைந்து போயிற்று. விற்க முடியவில்லை. ஈரவிறகை வாங்க யாருக்கும் இஷ்டமில்லை. யோசித்த சேந்தனார் சிவனடியார் எவருக்கேனும் உணவு பரிமாறவேண்டுமே என்பதால் பண்டமாற்று முறையில் விறகைக் கொடுத்து அரிசிமாவையும், வெல்லத்தையும் பெற்று வந்துக் களிசமைக்கச் சொன்னார். கொல்லையில் இருந்த கீரைத்தண்டோடு கொல்லையிலேயே கிடைத்த சில காய்களையும் போட்டுக் குழம்பும் சமைத்துச் சாப்பிட அடியாரைத் தேடிக் காத்திருந்தார். ஆனால் அடியாரே தென்படவில்லை. துன்பத்தோடு அமர்ந்திருந்த சேந்தனர் கண்களுக்கு ஒரு முதிய அடியார் தள்ளாட்டத்தோடு வருவது தெரிந்தது. பசியினால் விளைந்த தள்ளாட்டம் என்பது புரிந்து அவரை அழைத்துச் சென்று களியும், குழம்பும் உண்ணக் கொடுத்தார். பெரியவரும் திருப்தியாகச் சாப்பிட்டு விட்டு, "மிச்சம் இருப்பதையும் கொண்டா" என்று கேட்டு வாங்கிக் கொண்டு போயிவிட்டார்.
இங்கே தில்லை வாழ் அந்தணர்கள் திருவாதிரைத் திருநாளுக்கான ஏற்பாடுகள் செய்து வந்தார்கள். அப்போது கருவறையில் ஈசனருகே களியாகச் சிதறிக் கிடந்ததைக் கண்டு திகைத்தனர்.

உடனேயே மன்னனுக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டது. மன்னனும் தீர விசாரித்துச் சேந்தனாரே இதன் மூலகர்த்தா என உணர்ந்து அவரைப் பிடித்துவருமாறு கட்டளையிடுகிறான். அப்போது நடராஜப் பெருமானின் திருத்தேரை இழுக்கும் அடியார்களில் ஒருவராய்ச் சேந்தனார் திருத்தொண்டு செய்து வந்தார். திடீரெனத் தேர் நின்று போக, அனைவரும் திகைத்தனர். மன்னன் தேரை நிலைக்குக் கொண்டு வர ஆட்களை அழைக்கத் தேர் இம்மியளவும் நகரவில்லை. அப்போது அசரீரியால் ஈசன், "சேந்தனாரே, நீர் திருப்பல்லாண்டு பாடும் தேர் நிலைக்கு வரும்" எனக் கூற சேந்தனார் முதலில் திகைத்தாலும் பின்னர் ஈசன் அருளால் திருப்பல்லாண்டு பாடி அருள தேரும் நிலைக்கு வந்தது.


மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
வஞ்சகர் போயகலப்
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
புவனியெல் லாம்விளங்க
அன்ன நடைமட வாள்உமை கோன்அடி
யோமுக் கருள்புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்
பல்லாண்டு கூறுதுமே.

மிண்டு மனத்தவர் போமின்கள்
மெய்யடியார்கள் விரைந்து வம்மின்
கொண்டும் கொடுத்தும் குடிகுடி யீசற்காட்
செய்மின் குழாம்புகுந்
தண்டங்கடந்த பொருள்அள வில்லதோர்
ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே
பல்லாண்டு கூறுதுமே.

Tuesday, December 21, 2010

மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாள் 6

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ!
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

இப்போது ஆண்டாள் தன்னுடன் கண்ணன் புகழைப்பாட மற்றப் பெண்களையும் அழைக்க ஆரம்பிக்கிறாள். ஒரு மாதிரியாகத் தடங்கல் சொல்லிக்கொண்டிருந்தவர்களை எல்லாம் பரமனின் புகழையும், செளந்தர்யத்தையும் அவன் கருணையையும் விவரித்துக் கூறி அவனைச் சரண் என அடைந்தால் நம் அனைத்துப் பாவங்களும் தீயில் எரிந்த தூசைப் போல் எரியும் என்றவள், இப்போது மற்றப் பெண்களையும் கூப்பிடுகிறாள். ஒரு வீட்டிற்குச் சென்று அந்தப் பெண்ணை எழுப்புகிறாள். பெண்ணே எழுந்திரு என்கிறாள். அதுவும் எவ்வாறு?

புள்ளும் சிலம்பின காண்= அடி பெண்ணே, விடிந்துவிட்டதே? இங்கே புள் என்பது பறவைகளைக் குறிக்கும். பறவைகள் விடியலைக்கண்டு சந்தோஷத்தில் கத்திக் கூச்சல் போடுகின்றனவே! அதற்கு என்ன அழகான ஒரு தமிழ்ச்சொல்! சிலம்பின!

புள்ளரையன் கோயில்= புள்ளரையன் இங்கே கருடனைக் குறிக்கும் என்று சிலர் கூற்று. எப்படி ஆனாலும் அனைத்துக்கும் தலைவன் ஆன அந்த ஸ்ரீமந்நாராயணனையே இது சொல்கிறது. புள்ளரையன் பக்ஷிராஜாவான கருடனின் தலைவன் ஆன ஸ்ரீமந்நாராயணனின் கோயிலில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ = விடிந்து வெள்ளை வந்துவிட்டது என்பதற்கு அறிகுறியாகச் சங்கு ஊதுகிறார்களே அந்தச் சத்தம் கேட்கவில்லையா உனக்கு??

பிள்ளாய்! எழுந்திராய்! ஏ பெண்ணே! எழுந்திரு.
தென் தமிழ்நாட்டில் இப்போதும் பெண்குழந்தைகளைப் பிள்ளை என அழைக்கும் வழக்கம் உண்டு. அது அந்நாட்களிலும் இருந்திருக்கிறது தெரிய வருகிறது.

பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,= பால கிருஷ்ணனைக் கொல்ல அனுப்பப்பட்ட பூதனையின் நஞ்சு கலந்த பாலை உண்டானே கண்ணன், அது மட்டுமா? சகடாசுரன் வண்டிச்சக்கரத்துக்குள்ளே புகுந்துகொண்டு கண்ணனைக் கொல்லப் பார்த்தானே? கண்ணன் இதுக்கெல்லாம் அஞ்சவே இல்லையே? தன்னைக்கொல்ல வந்த பூதனையைக் கொன்றும், சகடாசுரனை அழித்தும் அவர்கள் மூலம் மேலும் நமக்குக் கஷ்டம் வராமல் காத்தானே அதை மறந்துவிட்டாயா பெண்ணே!

ஆனாலும் அந்தப்பெண் அதான் எல்லாம் முடிஞ்சாச்சே, அதனால் என்னனு மேலும் கேட்கிறாள்.

வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை=ஆதிசேஷன் மேல் துயில் கொண்டிருக்கும் மூலவித்தான பரமனை. பரமன் ஒருவனே ஆதிவித்து, மூலவித்து, சகலமும் அவன் மூலமே வந்தது. அவன் ஒருவனே நிரந்தரம். அத்தகைய மூலவித்தான பரமன் வெண்மையான பாற்கடலில் அரவத்தின் மேல் துயில் கொண்டிருக்கிறான் என்றும் கொள்ளலாம். அல்லது யோக மார்க்கத்தில் உள்ளே இருக்கும் குண்டலினியை எழுப்பும் மூலகர்த்தாவாய் இருக்கிறான் என்றும் கொள்ளலாம்.

உள்ளத்துக்கொண்டு முனிவர்களும் யோகிகளும் =அத்தகைய மூலவித்தைத் தியானித்துத் தவமும், யோகமும் இருக்கும் முனிவர்களூம், யோகிகளும் மெல்ல எழுந்து

அரியென்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்= "ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி" என்று கோஷிக்கிறார்களே, அந்த ஓசை உனக்குக் கேட்கவில்லையா? எங்கள் உள்ளமெல்லாம் குளிர்ந்துவிட்டதே! அந்தப்பேரொலி கேட்டே நாங்கள் உன்னை எழுப்ப வந்தோம். எழுந்திரு பெண்ணே! பரந்தாமனின் குணவிசேஷங்களைப் பற்றிக் கேட்டாலோ, பார்த்தாலோ, சொன்னாலோ உள்ளம் மயக்கம் கொள்ளும், என்றாலும் சிலரால் மட்டுமே விரைவில் அத்தகைய மோன நிலைக்குச் செல்ல முடிகிறது. சிலரால் அவரவர் கர்மவினையைப் பொறுத்து மெல்லத் தான் செல்ல முடிகிறது. ஆகவே கர்மவினையிலிருந்து சீக்கிரம் விடுபட நாம் சீக்கிரமாகவே அவன் திருவடியில் சரணடையவேண்டும். அதற்கு நமக்குத் தேவைப்படுவது எளிய பக்தியே.

இதையே பட்டத்திரி கூறுவது எவ்வாறெனில்,

த்வத்பக்திஸ்து கதா ரஸாம்ருதஜரீ நிர்மஜ்ஜநேந ஸ்வயம்
ஸித்த்யந்தீ விமல ப்ரபோத பதவீம் அக்லேஸதஸ்தந்வதீ
ஸத்ய: ஸித்திகரீ ஜயட்யயிவிபோ ஸைவாஸ்துமே த்வத்பத
ப்ரேம ப்ரெளடி ரஸார்த்ரதர த்ருதரம் வாதாலயாதீஸ்வர'

பரந்தாமனின் திவ்ய சரித்திரங்களைக் கேட்டாலோ, பாராயணம் பண்ணினாலோ, அவை அமுதபானம் செய்தற்கு ஒப்பாகும். அமுதமான அவற்றில் மூழ்கித் திளைக்கும் அடியார்கள் பரமனை நினைந்து பக்தியில் பொங்குகிறார்கள். இந்த எளிய பக்தி ஒன்றே அவர்களுக்கு ஞாநபோதத்தை அளிக்கவல்லதாகிறது. பிறவிப்பயனையும் அளிக்கிறது. ஆகையால் இத்தகைய பக்தியே சிறந்தது. ஏ, பகவானே, உம்மை நான் வேண்டுவதே இத்தகைய பக்தியில் நான் மூழ்கி எந்நேரமும் உன் திருவடிகளிலேயே திளைத்திருக்கவேண்டும் என்பதே.

Monday, December 20, 2010

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள் 5


மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,
தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய்!

ஆண்டாள் இந்தப் பாடல்களை எல்லாம் கோகுலத்துப் பெண்களை நோக்கியே பாடுவதாக அமைந்திருக்கிறது. தான் வாழ்ந்த ஸ்ரீவில்லிபுத்தூரையே ஆண்டாள் கோகுலமாய் நினைத்திருக்கலாம். என்றாலும் கண்ணன் இடைக்குலம் என்பதால் தன்னையும் ஒரு இடைப்பெண்ணாக நினைத்துக்கொண்ட ஆண்டாள் இன்னொரு இடைப்பெண்ணின் சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் வகையில் இந்தப்பாடல் உள்ளது.

அந்த இடைப்பெண்ணோ மிகச் சாதாரணமானவள். தத்துவங்களோ, வேதமோ, வேதாந்தமோ, எதுவுமே தெரியாது. சாஸ்திர சம்பிரதாயங்கள் சரிவரத் தெரியாது, புரியாது. நமக்குத் தெரிந்ததெல்லாம் நம்முடைய பாப, புண்ணியங்களுக்கு ஏற்றாற்போல் அனைத்தும் நடக்கிறது என்பதே. அப்படி இருக்கையில் இத்தகைய விரதங்கள் இருப்பதால் என்ன பயன்?? பிழையுள்ள நமக்கு இதனால் தடை ஏதும் ஏற்படாதா? நம் கர்மவினை நம்மைச் சும்மாவிட்டுவிடுமா?? என்றெல்லாம் கேட்கிறாள். அதற்கு ஆண்டாள் அளிக்கும் விடையே இந்தப்பாடல் ஆகும்.

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை= மாயன் ஆன அந்த ஸ்ரீமந்நாராயணனை வடமதுரையின் மைந்தனை,

கண்ணன் பிறந்தது வடமதுரையில் அன்றோ. ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகே இருந்த மதுரை தென்மதுரை. ஆகவே வடமதுரை எனக் குறிப்பிட்டுச் சொல்கிறாள் ஆண்டாள். வடமதுரையில் பிறந்த வசுதேவனின் மைந்தன் ஆன கண்ணன்,

தூயபெருநீர் யமுனைத் துறைவனை= புனிதம் நிறைந்த யமுனைக்கரையில் பிறந்தவனை

யமுனைக்கரையில் பிறந்ததோடு ஆயிற்றா?? அந்த யமுனையைக் கடந்து கோகுலத்துக்கு அல்லவோ வந்தான்??
ஆகவே அடுத்த வரியில் கண்ணன் கோகுலத்துக்கு வந்ததைச் சொல்கிறாள்.

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை= யமுனையைக் கடந்து தகப்பன் தலையின் மேலே ஒரு கூடையில் வைத்துக் கொண்டு வந்து ஆயர் குலத்தினரிடம் நம்பிக்கையோடு தன் குலவிளக்கை ஒப்படைக்கிறான் வசுதேவன். எல்லாம் வல்ல அந்தப் பரந்தாமனுக்கே என்ன ஒரு நிலை!
பிறந்தது சிறையில். பிறந்ததுமே தாயைப்பிரிந்தான். சில மணி நேரத்திலே தந்தையையும் பிரிந்தான். ஆனால் அதனால் தாயும், தந்தையும் இன்னொரு குடும்பத்தில் அல்லவோ விளக்கேற்றிவிட்டனர்? ஆயர்குலத்தில் அவர்களின் ஒளிவிளக்காய்த் தோன்றிய கண்ணனை

தாயைக்குடல்விளக்கம் செய்த தாமோதரனை= தேவகி பெருமைப்படும்படியாக அவள் வயிற்றில் பிறந்திருந்தாலும் கண்ணனின் லீலைகள் அனைத்தும் கோகுலத்திலே யசோதையே கண்டு அநுபவிக்கிறாள் அல்லவா?? தேவகித் தாயின் கர்ப்பத்தைப் பெருமைப்படுத்தும்படியாகப் பிறந்திருந்தாலும், ஆயர்குலத்தில் வளர்ந்து அங்கே யசோதை கையால் கட்டுண்டு கிடந்தவன் அன்றோ! கண்ணனின் விஷமம் பொறுக்கமாட்டாமல் கண்ணனைக் கட்டிவிடுகிறாள் யசோதை. அதனால் கண்ணனின் உதரம்=வயிற்றுப்பாகம் வடுவிழுந்துவிடுகிறதாம். அதனால் அவன் தாமோதரன். யசோதை கட்டினால் தான் என்ன?? அவனால் விடுவித்துக்கொள்ள இயலாதா? எனினும்தன் சக்தியை மறைத்துக்கொண்டல்லவோ இங்கே குழந்தையாய்க் காட்சி தருகிறான் கண்ணன்.

இத்தகைய எளிமையான கண்ணனை நாம்

தூயோமாய் வந்து நாம் தூமலர்கள் தூவித் தொழுது= இங்கே தூயோம் என்பது குளித்து நீராடி வருவதையும் குறிக்கும் அதே சமயம் மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல் சுத்தமாய்க் கண்ணனை மட்டுமே மனதினால் கண்ணனை ஒருமுகமாய்ச் சிந்திப்பதையும் கூறும்.

வாயினால் பாடி மனதினால் சிந்திக்கப்= நம் மனம், வாக்கு, காயம் என அனைத்தினாலும் கண்ணன் ஒருவனையே சிந்திப்போம், அவனையே தொழுவோம், என்றும் கொள்ளலாம், அல்லது நம் கைகளால் மலர் தூவி அர்ச்சித்து, வாயினால் இனிய கீர்த்தனைகளைப் பாடி, மனதினால்கண்ணனை நினைக்கலாம் என்றும் கொள்ளலாம். ஆனால் இவற்றில் எதைப் பின்பற்றினாலும் அனைத்தும் கண்ணனுக்கே என்ற அர்ப்பணிப்பு உணர்வோடு செய்யவேண்டும். பூசலார் நாயனார் மனதிலேயே ஈசனுக்குக் கோயில் கட்டினார். கோயில் கட்டியதோடு மட்டுமின்றிக் கும்பாபிஷேஹமும் செய்ய நாளை நிச்சயித்தார். அதே நாள் பல்லவனும் கோயில் ஒன்றை உண்மையாகவே கட்டிக் கும்பாபிஷேஹம் செய்ய நாள் நிச்சயித்தான். ஈசனோ மன்னன் கனவிலே சென்று , "பூசலாரின் கோயில் கும்பாபிஷேஹத்திலேயே தான் உறையப் போவதாய் மன்னனின் கும்பாபிஷேஹத்துக்கு வர இயலாது." என்று கூறுகிறார். மன்னன் திகைத்துப்பூசலாரின் கோயிலைத் தேடிப் போக ஏழையான அவர் பொருளில்லாமல் மனக் கோயில் கட்டியது தெரியவருகிறது. அப்போது தான் மன்னனுக்கு உண்மையான பக்தி என்பதும் புரியவருகிறது. அப்படி நாமும் கண்ணனைத் தவிர வேறு சிந்தனை இல்லாமல் இருக்கவேண்டும்.


போயப் பிழையும் புகுதருவான் நின்றனவும்= இத்தனையும் செய்தால் நம் பிழைகள் எல்லாம் போன இடம் தெரியாமல் போய்விடுமே. குழப்பமே அடைய வேண்டாம். எத்தனையோ ஜென்மங்களில் சேர்த்த பாவங்கள் அனைத்துமே தொலைந்து போம். அதுக்காகப் பாவம் செய்துட்டே இருக்கணும்னு அர்த்தம் இல்லை. எப்போப் பாவம் பண்ணி இருக்கோம், இது கர்மவினைனு புரிஞ்சுக்க ஆரம்பிக்கிறோமோ அப்போவே இறைவன் மேல்நிலைக்கு அழைத்துச் செல்ல முன் வந்துவிடுவான். பாவங்களைத் தொலைக்கவும் அவனே வழிகாட்டுவான். அவனை நினைத்தால் பாவங்கள் தொலைந்தும் போகும். அதுவும் எப்படி?

தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்= தீயில் இட்ட தூசைப் போல ஆகும், பெண்ணே. ஆகவே நீ சீக்கிரம் வா, நாம் பாவை நோன்பை ஆரம்பிக்கலாம்.

இங்கே ஆண்டாள் கூறும் பக்தி யோகத்தையே பட்டத்திரி கூறுவது எவ்வாறெனில்,

"ஏவம் பூத மநோஜ்ஞதா நவஸுதா நிஷ்யந்த ஸந்தோஹநம்
த்வத்ரூபம் பரசித் ரஸாயநமயம் சேதோஹரம் ஸருண்வதாம்
ஸத்யா ப்ரேரயதே மதிம் மதயதே ரோமாஞயத்யங்ககம்
வ்யாஸிஞ்சத்யபி ஸீதபாஷ்ப விஸரை: ஆநந்த மூர்ச்சோத்பவை:"

பரமனின் அழகான செளந்தர்யமான ரூபம் என்றும் புத்தம்புதியதாய் கண்ணுக்கு இனியதாய் அமுதத்தைச் சொரியும் தன்மையோடு கூடியதாய் விளங்குகிறது. அந்த திவ்யமங்கள சொரூபத்தைப் பற்றிக் கேட்டால் மேலும் கேட்கத் தூண்டும், மனம் எல்லையற்ற ஆநந்த பரவசநிலையை அடைகிறது. உடல் சிலிர்த்து, கண்கள் ஆநந்தக் கண்ணீரைச் சொரிய மனமும் மட்டுமின்றி உடலும் குளிர்கிறது.

ஏவம் பூததயா ஹி பக்த்யபிஹிதோ யோக: ஸயோகத்வயாத்
கர்மஜ்ஞாந மயாத் ப்ருஸோத்தமதரோ யோகீஸ்வரைர் கீயதே
ஸெளந்தர்யைக ரஸாத்மகே த்வயி கலு ப்ரேனப்ரகர்ஷாத்மிகா
பக்திர் நிஸ்ரமமேவ விஸ்வ புர்ஷைர்லப்யா ரமாவல்லப"

ஆகவே பக்தியோகமானது கர்ம யோகத்தையும், ஞாந யோகத்தையும் விடச் சிறந்து விளங்குவதோடு அல்லாமல், பலரும் பாராட்டவும் செய்கின்றனர். ஏ, ரமாகாந்தனே, இவ்வுலகத்து அழகெல்லாம் உள்ள நீர் உம்மிடத்தில் அடியார்கள் காட்டும் ப்ரேமையான இந்த பக்தியை அனைவரும் எளிதாக அடையும்படியல்லவோ செய்திருக்கிறீர்!

Sunday, December 19, 2010

ஆடலாம், பாடலாம், கொண்டாடலாம்

லீவிலே போறேன், லீவு எனக்குத் தான் உங்களுக்கு யாருக்கும் இல்லை. பதிவெல்லாம் அப்லோட் பண்ணி வச்சாச்ச்ச்ச்ச்ச். எல்லாம் அந்தந்த நாளில் சரியா வந்துடும், எல்லாரும் ஒழுங்காப் படிங்க. வந்து தேர்வு நடக்கும். மதிப்பெண் கம்மியா வாங்கினா அம்புட்டுத் தான்! :)))))))))))) என்னிக்கு வரேன்னு சொல்லப் போறதில்லையே! எப்போ வேணா வருவேன், படிக்கிறீங்களானு பார்க்கணுமுல்ல?? பின்னூட்டத்துக்கு( என்னமோ யாரோ வந்து கொடுக்கிறாப்போல் பில்ட் அப், ஹிஹிஹி, இது ம.சா. அடக்கி வச்சிருந்தேன், சமயம் தெரியாம உயிரை எடுக்கும் :P) பதில் வந்து கொடுப்பேன். கொடுப்பீங்கனு நானே சமாதானம் செய்துக்கவேண்டியது தான்! பின்னே! :D

Saturday, December 18, 2010

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்! 4


ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகர்ந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!



ஆழி மழைக்கண்ணா= ஆழி இங்கே கடலையும் குறிக்கும், வருணனையும் குறிக்கும், பரமன் கைச்சக்கரத்தையும் குறிக்கும். ஆனால் இந்த முதல் ஆழி என்பது வருணனைக் குறிக்கிறது. நாட்டில் மழை சரிவரப் பருவம் தப்பாமல் பொழிந்தாலே நிலவளம் செழிக்கும். அதற்கு மழை பொழிய வேண்டுமெனில் எப்படி?? பள்ளியிலே படிச்சதை ஆண்டாள் சர்வ சாதாரணமாக அப்போவே சொல்லிட்டுப்போயிட்டாள். கடல் நீர்தான் ஆவியாக மாறி மேகங்களுக்குள் புகுந்து மழையாகப்பொழிகிறது என்பதைச் சின்ன வயசிலேயே படிச்சிருக்கோம் இல்லையா?? அதனால் முதல் ஆழியை வருணன் என எடுத்துக்கொள்ள வேண்டும், அடுத்த ஆழியைக் கடல் என எடுத்துக்கணும்."ஆழி மழைக்கண்ணா!" வருணணைக் கூப்பிட்டு = இங்கே ஏன் கண்ணா என்கிறாள் என்றால் மழை பொழியும்போது வருணன் கண்ணனின் அருள் மழையை நினைவூட்டுவதாயும் கொள்ளலாம். கண்ணனின் கரியநிறத்தைப் போன்ற மேகங்கள் அவன் நிறத்தை நினைவூட்டுதலையும் கொள்ளலாம். ஆண்டாளே வேண்டுகிறாள் இதே பாடலில், "ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து" என.

ஒன்று நீ கை கரவேல்= ஏ, வருண பகவானே, உன் கருணையை நிறுத்திவிடாதே. என்கிறாள்.

அந்த ஆழி மழை எப்படிப் பொழிகிறது? ஆழியுள் புக்கு முகர்ந்து கொடு ஆர்த்தேறி= கடலினுள் புகுந்து மேலெழும்பி ஆவியாக மாறி மேகங்களுக்குள் புகுந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு சத்தமாய் இடியோசையுடன் வேகமான பெருமழையாகப்பொழிந்து எங்கள் மேல் பொழிவாயாக.
வருணனை மழைபொழியுமாறு வேண்டும் ஆண்டாள் அதற்கு அவனை எவ்வாறு இருக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகிறாள். மழைமேகங்கள் கருத்து இருப்பவை கண்ணனின் நிறத்தைக் குறிக்கின்றன. கண்ணனின் சங்கு இடியோசை போல் எழுந்து தீமைகளை ஒழித்து அடியார்களுக்குக் கருணை என்னும் மழையைப் பொழிகிறது. அவன் கைச்சக்கரமோ தீயவற்றை வேரோடு அறுத்துத் தள்ளுகிறது. அந்தச் சங்கையும் சக்கரத்தையும் போல் வருணனின் இடியும், மின்னலும் இருக்கவேண்டுமாம். இடியோசையும், மின்னலும் அவன் கைச் சக்கரத்தையும், சங்கையும் குறிக்கும். இந்த மழைமேகங்களையும் அவை நீருண்டு கன்னங்கரேல் எனக் கருத்து இருப்பதையும் பார்க்கும் ஆண்டாளுக்குக்கண்ணன் உருவமும் அவன் கரிய திருமேனியும் நினைவில் வருகின்றன.

ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கருத்து= மஹா பிரளயத்துக்கும் முந்தையவனாய் ஆதி முதல்வனாய் இருக்கும் அந்த நாராயணனைப் போலவே அவனுடைய நிறம் போலவே நீயும் கருமை வண்ணத்தோடு வருவாய் என்பது இங்கே பொருள்,

பாழியம்தோளுடைய பற்பநாபன் கையில்= அழகான தோள்களை உடைய பத்மநாபன் என்று பொருள். பரமன் தன் நாபியிலிருந்து பிரம்மாவை சிருஷ்டிக்கிறான். அதுவும் பத்மம் என்னும் தாமரை மலரில் தோன்றச் செய்து அதில் பிறப்பிக்கிறான். அந்தப்பிள்ளையைத் தன் திருத்தோள்களால் ரக்ஷிக்கவும் செய்கிறான். அத்தகைய பற்பநாபன் கைகளில்

ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து= ஆழி இங்கே சக்கரம் என்னும் பொருளில் வரும். நாராயணனின் கைச்சக்கரம் எப்படி மின்னுகிறது?? அத்தகைய சக்கரத்தைப் போல் ஏ, வருணனே, நீயும் உன் மின்னலை மின்னச் செய்வாயாக. அவனுடைய வலம்புரிச்சங்கின் நாதம் எவ்வாறு ,பூம்ம்ம்ம்ம்ம்ம்ம் என வருகிறதோ அதே போல் இடியை இடிக்கச் செய்வாயாக.


தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்= சார்ங்கம் இங்கே வில்லைக் குறிக்கும். சிவன் கையில் இருப்பது சாரங்கம். விஷ்ணுவிற்கோ சார்ங்கம். இரண்டுக்கும் ஒரு சின்னப் புள்ளியில் வேறுபாடு என்பதையும் கவனிக்கவும். இங்கே சார்ங்கம் என்பது வில். வில்லை ஏந்தியவன் ஸ்ரீராமன். ஸ்ரீராமனின் வில்லானது அம்பை மழையாகப் பொழியும். பகைவரை அழிக்கும். ஸ்ரீராமனின் வில்லில் இருந்து வரும் சரமழைபோல் அப்படி மழையை நீயும் பொழியச் செய்வாய் வருணனே என்று வேண்டுகிறாள் ஆண்டாள்.

அடுத்தது பிரார்த்தனை, தனக்கு மட்டுமா?? அனைவரும் வாழப் பிரார்த்திக்கிறாள்.

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

நாங்களும் வாழ உலகினில் பெய்திடமாட்டாயா வருணனே.

இப்போது நாங்கள் மார்கழி நீராடி மகிழ்ந்து எம்பிரானைக் கும்பிட்டுப் பிரார்த்தனைகள் செய்கிறோம். உன் கொடையை எண்ணி நாங்களும் மகிழ்வோம் என்கிறாள் ஆண்டாள். ஆண்டவனின் உதார குணத்தை இங்கே சுட்டுகிறாள் ஆண்டாள். பரமனைத் தஞ்சமடைந்தால் அவன் கருணை மழை நமக்குக் கிடைக்கும். குறைவில்லாது காத்து ரக்ஷிப்பான். குறைவில்லா அனுகிரஹம் செய்யக் கூடிய பெருமானை வழிபட்டால் அனைத்துத் துன்பங்களும் நீங்கி இன்ப மழை வர்ஷிக்கும்.

இதற்கு பட்டத்திரி கூறுவது என்னவென்றால், சகல செளபாக்கியங்களையும் கொண்ட பகவானை நாம் வழிபட்டால் பக்தர்களுக்கு அவன் தன்னையே கொடுப்பான் என்பதுவே.

"காருண்யாத் காம மந்யம் தததி கலு பரே ஸ்வாத்மதஸ்த்த்வம் விஸேஷா
ஐஸ்வர்யாதீஸதேந்யே ஜகதி பரஜநே ஸ்வாத்மநோபீஸ்வரஸ்த்வம்
த்வய்யுச்சை ராரமந்தி ப்ரதிபத மதுரே சேதநா: ஸ்ப்பீத பாக்யா:
த்வம் சாத்மாராம ஏவேத்யதுல குணகணாதார ஸெளரே நமஸ்தே.

அனைத்துக் கல்யாண குணங்களையும் கொண்ட பரமனை வழிபட்டால் அவன் தன் பக்தர்களுக்குத் தன்னையே கொடுத்துவிடுகிறான். இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான நிலையற்ற செல்வங்களை மட்டும் அவன் கொடுப்பதில்லை. வெறும் ஐச்வரியங்களை மட்டும் அளிப்பதில்லை. ஐஸ்வரியங்களின் மூலம் பக்தர்கள் மனதையும் ஆள்வதில்லை. மேலான தன்னையே கொடுத்து பக்தர்களை ஆட்கொள்கிறான். பக்தர்களின் பாக்கியம் தான் என்ன?? அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய ஆநந்தம் தான் என்ன?? ஆஹா இதைவிடவும் உயர்ந்ததொரு ஆநந்தம் தேவையா பக்தர்களுக்கு?? பகவானே ஆநந்த ஸ்வரூபி, அவனே ஆட்கொண்டுவிட்டால் அதைவிடவும் உயர்ந்ததொரு பாக்கியம் எது இருக்க முடியும். ஆனால் நாமோ நிலையற்ற செல்வத்துக்காகத் தான் ஆலாய்ப் பறக்கிறோம்.

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்-3

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

அருமையான பாடல். வைணவர்களின் கல்யாணம் போன்ற சுப நிகழ்ச்சிகளிலும், கோயில்களிலும் வாழ்த்திப்பாடும்போது இந்தப்பாடல் தவறாமல் பாடப்படும். அத்தகையதொரு உலகளாவிய நன்மைக்கான வேண்டுதல் இந்தப் பாடலிலே அடங்கி இருக்கிறது. எடுத்த எடுப்பிலேயே ஆண்டாள் பரமனை

ஓங்கி உலகளந்த உத்தமன் என்று அழைக்கிறாள். மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் அறிவோம். ஒவ்வொரு அவதாரத்திலேயும் ஒவ்வொருத்தரை மஹாவிஷ்ணு அழித்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் அந்த அரக்கர்களைக் கொல்லவென்றே அவதாரம் செய்திருக்கிறார். ஆனால் வாமன அவதாரம் அப்படி அல்ல. என்ன ஆச்சரியமா இருக்கா? ஆமாம், அப்படித்தான். மச்ச, கூர்ம, வராஹ, நரசிம்ம அவதாரங்களில் அதுவும் அந்த நரசிம்ம அவதாரத்தில் எதிர் எதிர் சிந்தனைகளான + - ஒன்று சேரவும் ஈசன் தோன்றி நரசிம்மனை அழித்தான். கடுமையான கோபம் கொண்ட அவதாரம், மஹாலக்ஷ்மியே பக்கத்தில் போக அஞ்சினாளாம்.

அதுக்கடுத்து இந்த வாமன அவதாரம். சின்னஞ்சிறு பிரமசரியப் பிள்ளை. பிரமசரிய விரதம் இருக்கிறது. பிரமசாரி ய விரதத்தில் பிக்ஷை எடுத்துத் தான் சாப்பிடணும். இந்தப் பிள்ளையும் வந்து பிக்ஷை கேட்கிறது. மஹாபலிச் சக்கரவர்த்தி யாகங்கள் செய்து இந்திர பதவியை அடையப் போகிறான். இதுவோ கடைசி யாகம், இதை முடித்தால் இந்திரனை விடவும் உயர்ந்த பதவியை அடையலாம். ஆனால் அவனுக்கோ மோக்ஷம் காத்திருக்கிறது. சிரஞ்சீவி பதவி காத்திருக்கிறது. ஆகவே யாகத்துக்கான முன்னேற்பாடுகளாய் தானங்கள் அனைத்தையும் செய்து முடித்துவிட்டான் மஹாபலி. எல்லாம் முடிஞ்சாச்சுனு நிச்சயமாத் தெரிஞ்சுண்டு சாவகாசமா நம்ம ஆள் போறார் நமட்டுச் சிரிப்போடு. சின்னத் தாழங்குடையைப்பிடிச்சுண்டு, காலிலே கட்டைச் செருப்போடு வரும் சின்னப் பிள்ளையைப் பார்த்த பலிக்கு சந்தோஷம், ஆகா, இந்தப் பிள்ளையின் தேஜஸ் என்ன?? யாரோட பிள்ளை இவன்??

அதுக்குள்ளே சுக்ராசாரியாருக்கு மூக்கிலே வேர்க்க அவரோ பலியிடம் எச்சரிக்கிறார். அப்பா, உன் யாகத்தைக் கெடுக்க வந்த பிள்ளை இவன். காசியபரின் புத்திரன் என்ற பெயரில் வந்திருக்கும் இவன் வேறு யாரும் இல்லை. சாட்சாத் அந்த மஹாவிஷ்ணுவே. நீ பாட்டுக்கு அவசரப் பட்டு வாக்குக் கொடுத்துவிடாதேனு சொல்றார். ஆனால் மஹாபலியோ , "குருவே, மஹாவிஷ்ணுவே வந்து கேட்கும்போது கேட்பதைக் கொடுப்பது என் அரச தர்மம். அரச தர்மத்தை நான் மீற மாட்டேன்." என்று சொல்லிவிடுகிறான். வந்துட்டார் வாமனனும். யாசகமும் கேட்டாச்சு.
"குழந்தாய், என்னப்பா வேண்டும்?"

அரசே, என் காலடியால் மூன்றடி மண் கொடுத்தால் போதும்!" குழந்தை தானே? தன் சின்னஞ்சிறு காலைக் காட்டுகிறது. அது பென்னம்பெரிய காலாகப் போறதுனு பலி கண்டானா? ஆனால் சுக்ராசாரியார் கண்டுவிட்டார்.
குறுக்கே போக, பலியோ வாக்குக் கொடுக்கிறான். பூமி தானம் சும்மா சரினு சம்மதிக்கிறதோடு போயிடாது. சாஸ்திரோக்தமா தாரையும் வார்க்கிறான் பலி. அப்போவும் சுக்ராசாரியார் வண்டாய் மாறி நீர் விடும் கெண்டியின் கண்ணை அடைத்துக்கொள்ள, ஒரு தர்ப்பைக்குச்சியால் அவர்கண்ணையே குத்துகிறான் வாமனச் சிறுவன். பின்னர் தாரையும் வார்த்து, சின்னஞ்சிறு கால் பென்னம்பெரிய காலாக ஆகிறது. ஒரு கால் மேலே, மேலே, மேலே போக, அங்கே தேவாதிதேவர்கள் அந்தக் கால் விஷ்ணுவின் கால்னு தெரிஞ்சு பாதபூஜை செய்ய அந்த நீர்தான் , அழகர் மலையில்,"நூபுரகங்கை"னு வந்துட்டு இருக்கு. எங்கே இருந்து எங்கேயோ போயிட்டேன்?? அட?? திருப்பாவை எங்கே போச்ச்ச்ச்???
ம்ம் பிடிச்சாச்ச். இங்கே பலியை வாமனன் சம்ஹாரம் செய்யவில்லை. அவனைப் பாதாளத்துக்கு அதிபதியாக்கிச் சிரஞ்சீவியாக வாழ வழி செய்கிறான். அதனால் இங்கே வாமனனை ஓங்கி உலகளந்த உத்தமன்னு ஆண்டாள் சொல்கிறாள். அதோட பகவான் மூன்றடி எடுத்து வைத்ததில் சகலவிதமான ஜீவராசிகளுக்கும் அவரது ஸ்பரிசம் கிடைத்திருக்கிறது. எப்படி பிட்டுக்கு அடிவாங்கிய பரமனின் அடி ஒவ்வொரு ஜீவராசிக்கும் பட்டதோ அப்படியே. அப்பாடி ஒருவழியா விட்ட இடத்தைப் பிடிச்சாச்ச்..
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்= நதிக்கரையில் பாவை நோன்புக்கு என அம்மனைப் பிடித்து வைத்து வழிபடுவார்கள். அந்த அப் பாவைக்கு மலர்கள் சாற்றி வழிபடுவதற்காக நீராடிவிட்டு வரவேண்டும். அதற்காக நாம் நீராடச் செல்வோம் தோழியரே. இந்த அருமையான பாவை நோன்பை நாம் நூற்பதால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து= நாட்டிலே தீமை என்பதே இராமல் அனைத்தும் ஒழிந்து போய் ஒவ்வொரு மாதமும் மூன்று முறை முறையே மழை பெய்து நீர் வளம், சிறந்து, அதன் மூலம் நில வளமும் செழிக்கும்.
ஒவ்வு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள்= செந்நெல் செழுத்து ஓங்கி வளரும், வயலில் பாய்ச்சி இருக்கும் நீரில் குளத்து நீரோ என மயக்கம் கொண்ட மீன்கள் பாய்ந்தோடி மகிழ்ந்து விளையாடும்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப= குவளைப் பூக்களின் மகரந்தத்தில் {போது=மகரந்தம்) வண்ண விசித்திரமான வண்டுகள் தேன் குடிக்க வந்து கண்கள் செருகி
மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும்

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி =தயங்காமல் வந்து செழிப்பான கறவைப்பசுக்களின் பெருத்த மடியில் இருந்து இரு கைகளாலும் பாலைக் கறக்கக் கறக்க அவையும் வஞ்சனை என்பதே இல்லாமல் வள்ளலைப் போல் குடங்களை நிறைத்துக்கொண்டே இருக்குமாம். ஆகவே என்றும் வற்றாத நிறைந்த செல்வத்தைத் தரும் இந்த விரதத்தை நாம் அனைவரும் கடைப்பிடிக்கலாம் வாருங்கள் பெண்களே.

இதை பட்டத்திரி, கூறுவதை வேறொரு கோணத்தில் பார்க்கலாம். இங்கே ஆண்டாள் கூறி இருப்பது நாடு செழித்து இருப்பது குறித்து. பட்டத்திரியோ, நிலையற்ற செல்வத்தை நாடுவதை விட, பகவான் திருநாமத்தைப் போற்றுவதே நிலையான செல்வம் என்று கூறுகிறார்.

"நம்ராணாம் ஸந்நிதத்தே ஸததமபி புரஸ்தை ரநப்யர்த்திதாந்
அப்யர்த்தாந் காமாநஜஸ்ரம் விதரதி பர்மாநந்த ஸாந்த்ராம் கதிஞ்ச
இத்தம் நிஸ் ஸேஷலப்ப்யோ நிரவதிக பல; பாரிஜாதோ ஹரே த்வம்
க்ஷுத்ரம் தம் சக்ரவாடீ த்ருமம் அபிலஷதி வ்யர்த்த மர்த்தி வ்ரஜோயம்

மக்கள் தங்கள் மனோ ரதங்கள் ஈடேற அதுவேணும் இது வேணும்னு கேட்கிறார்கள்; அதோடு சொர்க்கத்தில் இருக்கும் கற்பக விருக்ஷம் மாதிரி இருந்தால் நல்லதுனு நினைக்கிறார்கள். ஆனால் ஸ்ரீஹரி, நீரோ அந்த கற்பக விருக்ஷத்தை விடவும் உயர்ந்தவர் அன்றோ. உம்மை வணங்கியவர்களுக்கு அள்ளி அள்ளிக் கருணை என்னும் செல்வத்தை வாரி வழங்கும் வள்ளல் அன்றோ நீர். வேண்டியதற்கு மேல் பரம ஆநந்தத்தையும், முக்தியையும் கொடுக்கும் வள்லல் நீர். மேலும் உம்மை அனைவரும் எளிதில் அடைய முடியும். எல்லையற்ற பலன்களை அள்ளித்தருபவர் நீர். இங்கே செல்வமாக அவர் குறிப்பிடுவது பகவானையே. மேலும் பகவான் என்ற சொல்லுக்கு உள்ள விசேஷ குணங்களாக, ஐச்வர்யம், தேஜஸ், கீர்த்தி, லக்ஷ்மீகரம், ஞாநம், வைராக்யம் ஆகிய ஆறுகுணங்களும் நிரம்பியவர்கள் எனப்பொருள்.