எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, May 29, 2020

ஜீ பூம்பா!

 
அம்பேரிக்காவில் எடுத்த சில படங்களைப் பகிரலாம்னு நினைச்சால் அவற்றை எல்லாம் ஏற்கெனவே போட்டிருக்கேன். ஆகவே வேறே படங்கள் தேடித்தான் போடணும். நண்பர் ஒருத்தர் அவருடைய புத்தகம் ஒன்றை பிடிஎஃப் ஆக அனுப்பி இருக்கார். அதைப் படிச்சு முடிக்கணும். பாதி படிச்சேன். அப்புறமா படிக்க நேரமே சரியா வரலை. ஏற்கெனவே சித்தப்பாவின் "ஒற்றன்" புத்தகம் மறுபடி படிச்சு முடிச்சேன்.  சித்தப்பா 73 ஆம் வருடம் ஐயோவா/(மினியாபொலிஸ் அருகே) போனப்போ நடந்த நிகழ்வுகளை வைத்து எழுதியது. மறுபடி படிக்கக் கமலா சடகோபனின், "கதவு" "பொன்னியின் செல்வன்" (லக்ஷம் தரம் இருக்கும்) எடுத்து வைச்சிருக்கேன். அதுக்கு நடுவில் ஸ்ரீரங்கம் பற்றித் தொகுக்க மீண்டும் "திருவரங்கன் உலா" வை அவ்வப்போது எடுத்துப்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதற்கு நடுவில் "பலே பாண்டியா!" படத்தை வேறே கொஞ்சம் கொஞ்சமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எல்லாம் அந்தப் பாடல் காட்சி ஒன்றுக்குத் தான். "அத்திக்காய், காய்!" பாடலுக்காக. இன்னும் அந்தப் பாடல் வரவில்லை. ஜிவாஜி, தேவிகா எல்லாம் குண்டு குண்டாக ஆடிப்பாடும்போது இதை அந்தக் காலத்தில் எப்படி ரசித்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

இதுக்கு நடுவில் வீட்டு வேலைகள், சமையல், சாப்பாடு போன்றவை. இந்த ஊரடங்கு நீடிக்கப் போவதாய்ச் சொல்கின்றனர். தமிழ்நாட்டுக்குப் பேருந்துகள் சேவையோ, ரயில் சேவையோ வேண்டாம் என முதலமைச்சர் சொல்கிறார். ஆனால் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ரயில் வண்டிகள் ஓடிக் கொண்டு தான் இருக்கின்றன. அவற்றில் தொழிலாளர்கள் பயணித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனாலும் நடந்து செல்பவர்கள் நடந்து சென்று கொண்டே இருக்கின்றனர்.  இதை எந்த அரசும் செய்யச் சொல்லவில்லை என்றாலும் காத்திருந்து ரயிலிலோ அல்லது பேருந்துகளிலோ பயணித்துப் போவதற்கு நடந்து செல்லலாம் என முடிவு செய்திருப்பார்கள் போல. இத்தனைக்கும் ஆங்காங்கே காவல்துறையினர் கன்டெயினர் லாரியில் பயணிப்பவர்களை எல்லாம் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பிப் பேருந்திலோ, ரயிலிலோ போகச் சொல்கின்றனர். ஆனாலும் அவர்கள் போவதில்லை.

வழிப்பயணம் செல்பவர்களுக்கு உணவு கிடைப்பதில்லை என்கிறார்கள். அவர்கள் செல்லும் வழியைத் தெரிந்து வைத்துக் கொண்டு உணவுப் பொட்டலங்கள் எடுத்துக் கொண்டு சென்றாலும் அவர்கள் அந்த வழியிலேயே சென்று கொண்டிருப்பார்களா நிச்சயம் இல்லை. வடக்கே செல்லும்  எல்லாச் சாலைகளிலும் இவர்களை எதிர்பார்த்துக் கொண்டு உணவுப் பொட்டலங்களோடு தொண்டர்கள் தான் தயாராக இருக்க வேண்டும் என நினைக்கிறார்களோ என்னமோ புரியலை. ஆனால் எல்லாவற்றுக்கும் அரசு தான் காரணம் என்று எளிதாகச் சொல்லி விடுகிறார்கள். இந்த அழகில் சில மாநில அரசுகள் திரும்பி வருபவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று வேறே சொல்கின்றன. இப்படி ஒரு நிலைமை வந்ததால் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள புலம் பெயர் தொழிலாளர்கள் பற்றி நமக்குத் தெரிய வந்திருக்கிறது. இல்லைனா தெரியவே போவதில்லை. அவ்வளவு ஏன்? அந்த அந்த மாநில அரசுகளிடமே இதற்கான சரியான கணக்கு இல்லை.

இப்போப் புதிய பிரச்னை வெட்டுக்கிளி. அதுக்கும் மத்திய அரசையும் பிரதமரையும் காரணம் சொல்கின்றனர். 20 லக்ஷம் கோடிப் பணம் எனத் தவறாகச் சொல்லிவிட்டார். 20 லக்ஷம் கோடி வெட்டுக்கிளிகளைத் தான் பிரதமர் கொடுத்திருக்கிறார் எனக் கேலி செய்துக் கருத்துப்படங்கள் மூலமும் பதிவுகள் மூலமும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். நாட்டை இப்போது பிடித்திருக்கும் கொரோனா பிரச்னையிலிருந்தும் இன்னமும் நாடு முழுவதுமாக விடுதலை அடையவில்லை. அதனால் ஏற்பட்ட ஊரடங்கால் பொருளாதாரப் பிரச்னை. அண்டை நாடுகளின் தொல்லைகளினால் எல்லைப் பிரச்னை எனப் பல்வேறு பிரச்னைகளை இப்போது நாடு எதிர் கொண்டிருக்கிறது. இந்த அழகில் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் தொற்று நோய் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது.  தமிழக அரசும் பொது விநியோகப் பொருட்களோடு பணமும் 3 மாசமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. வரப்போகும் ஜூன் மாசமும் கொடுக்கப் போகிறது. மத்திய அரசும் புலம்பெயர் தொழிலாளர்கள் ரேஷன் அட்டை இல்லாமலேயே அரிசியோ கோதுமையோ பருப்போடு வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறது. அதைத் தவிரவும் அடித்தட்டு மக்களுக்கு ஜன் தன் திட்டத்தின் மூலம் அவரவர் சொந்த வங்கிக் கணக்கில் பணம் போடப்பட்டுள்ளது,. விவசாயிகளுக்கும் இரண்டு தவணைகளாகப் பணம் கொடுத்துள்ளது. குன்னியூரில் விவசாயம் செய்யும் என் பெரியம்மா பையர் (தம்பி) இரு தவணைப் பணமும் தனக்கு வந்து சேர்ந்ததையும் மற்றவர்களுக்கு வந்திருப்பதையும் உறுதி செய்கிறார்.

எல்லோரும் மத்திய, மாநில அரசுகள் புலம்பெயர் தொழிலாளர்கள், விவசாயிகள், கீழ்த்தட்டு மக்கள் அனைவருக்கும் 7,500 ரூபாய் ( 7500 ரூ? அது என்ன கணக்கு?) கொடுக்கணும்னு சொல்கிறார்கள். நோட்டை அடிச்சால் போச்சுனு நினைக்கறாங்க போல.  அதோட இந்தப் பணம் எத்தனை நாட்களுக்கு? அவங்களுக்கு நிரந்தரமாக ஓர் வருமானத்துக்கு அல்லவோ ஏற்பாடு செய்யணும்? எதிர்க்கட்சித் தலைவர்கள் இப்படி நடந்து செல்லும் தொழிலாளர்களோடு தெரு நடைமேடைகளில் அவங்களும் உட்கார்ந்து படம் பிடித்துப் பத்திரிகைகள், முகநூல், டிவிட்டர் எனப் பகிர்கிறார்கள். மத்திய அரசின் இயலாமையை எடுத்துச் சொல்கிறார்களாம்! ஏன் இவங்களுக்குப் பொறுப்பு இல்லையா? கட்சி நிதியிலிருந்தும் அனைவரின் சொந்த சொத்துக்களில் இருந்தும் நிதி அளிக்கக் கூடாதா? பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யக் கூடாதா? இன்னொரு தலைவி ஆயிரம் பேருந்துகளை ஏற்பாடு செய்யறேன்னு சொல்லிட்டுக் கடைசியில்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! வேண்டாம்!

இத்தனை பேர் போகும்போது யார், யாருக்கு எங்கே, எந்த மாநிலத்தில் எந்த ஊருக்குப்  போகணும்னு யாரால் கண்டுபிடிக்க முயலும்? ஏதோ ஒரு பத்து இருபது பேரிடம் கேட்கலாம். சாரிசாரியாக வரும் நபர்களிடம் எப்படி விசாரிப்பது? அனைவரும் ஒரே ஊருக்கா போகிறார்கள்? அனைவரும் ஒரே மாநிலத்தில் இருந்தா வந்திருக்கிறார்கள்? அவர்களிடம் ஆதார் அட்டையோ ரேஷன் அட்டையோ இருந்தாலும் கண்டுபிடிக்கலாம். அதெல்லாம் இருந்தால் தான் அவங்க காத்திருந்து பொறுமையா அரசு ஏற்பாடு செய்யும் ரயில்களில் முன்பதிவு பண்ணிக் கொண்டு போகலாமே! அதெல்லாம் இல்லாததால் தானே நடந்தே போகிறார்கள். உள்ளூர பயம்! எங்கே நம்மைப் பிடித்து வைத்துக் கொண்டு விடுவார்களோ என! ஆகவே நடந்தே செல்லலாம் என முடிவெடுத்திருக்கிறார்கள்.  இவர்களில் ஒரு சில வெளிநாட்டவர்களும் இருப்பதாய்ச் சொல்கிறார்கள். ரயில்களில் போகிறவர்களும் போய்க்கொண்டே தான் இருக்கிறார்கள். நடந்து செல்பவர்களும் சென்று கொண்டு தான் இருக்கிறார்கள். இதில் மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து உபி, பிஹாருக்குச் செல்லும் மக்கள் அதிகம். அங்குள்ள அரசாங்கங்கள் மத்திய அரசு தான் இதற்குக் காரணம் என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றன.  யாரிடமும் ஒரு தெளிவான கணக்கு இல்லை என இப்போது அரசைக் குறை கூறுபவர்கள் அரசு கணக்கெடுக்கும்போது முறையான விபரங்களைக் கொடுக்கக் கூடாது என்று மக்களிடம் வலியுறுத்திச் சொன்னவர்கள் தான்!

மத்திய அரசு எதற்குத் தான் பொறுப்பேற்கும்? இந்த மாநிலங்களின் வேறு எந்த விஷயத்திலும் மத்திய அரசு தலையிட்டால் இது மாநிலச் சுதந்திரம், மத்திய அரசு தலையீடு என்பார்கள். சட்டம், ஒழுங்கு மாநில அரசின்பொறுப்பு என்பார்கள். ஆனால் இப்போதோ? எல்லாம் மத்திய அரசு தான் பொறுப்பு என்று சொல்லிக் கை கழுவி விடுகின்றனர்.  ரயில்களும் கன்னா, பின்னாவென ஓடுகின்றன. பிஹாருக்குச் செல்ல வேண்டிய ரயில் ஒடிசா போய் அங்கிருந்து பிஹாருக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது. இம்மாதிரிப் பல ரயில்களும் திசைமாறிப் பயணிக்கின்றன. விபத்து இல்லாமல் போகிறதே ஒரு பெரிய விஷயம். ஆங்காங்கே கிடைக்கும் சிக்னல்களினால் இந்தப் பிரச்னை. ரயில்களில் சரியான சிக்னல்கள் கிடைக்கும்படி சிக்னல் தொழிலாளர்கள் இன்னமும் வேலைக்கு வரவில்லை போலும். இப்படி எல்லா விஷயங்களிலும் பிரச்னை நுணுக்கமாக ஊடுருவி இருக்கும்போது ஒரே இரவில் அனைத்தையும் சரி பண்ண, "ஜீ பூம்பா!" தான் வரணும்.

ஜீ! பூம்பா!

Pattanathil Bhootham [1967] Tamil Movie Full Details | Antru Kanda ...

Wednesday, May 20, 2020

இந்த நாள் என்ன நாள்? என்னுடைய நாள்!

கொரோனாவின் தாக்கத்தினால் கொஞ்சம் அலுப்புத் தட்டிய வாழ்க்கையில் ருசியூட்ட வந்தது இன்றைய காலைப் பொழுது. இன்னிக்கு என்னமோ காலம்பர எழுந்துக்கவே நேரம் ஆகிவிட்டது. ஐந்தரைக்கு எழுந்த நம்ம ரங்க்ஸ் என்னை எழுப்பினார் என்றால் பார்த்துக்குங்க! அடடானு நினைச்சுட்டுக் காலைக்கடன்களை முடிக்கக் குளியலறைக்குள் சென்றால், குழாயைத் திறந்தால் தண்ணீர் ஒரே சிவப்பும்  கருப்புமாகக் கொட்டிற்று. கழிவறையில் நீர் திறந்தால் அந்தத் தொட்டியில் இருந்து கருஞ்சிவப்பு நிற நீர். வாஷ் பேசினில் கேட்கவே வேண்டாம். சரி, இந்தப் பக்கத்துக் குழாயில் ஏதேனும் பிரச்னை இருக்கு போலனு நினைச்சு அரை மணி நேரம் எல்லாக் குழாய்களிலும்  நீரைத் திறந்துவிட்டபின்னர் என் வேலைகளை முடித்துக் கொண்டு வந்தால் நம்ம ரங்க்ஸுக்கும் அதே பிரச்னை. இன்னொரு குளியலறையில்! சரினு மூன்றாவது குளியலறைக்குழாயைத் திறந்தால்! ஆஹா, வண்ணமயமான நீர் கொட்டோ கொட்டுனு கொட்டுது! எல்லாக்குழாய்களையும் சுமார் அரைமணி நேரமாவது திறந்து வைக்கணும்னு திறந்து வைச்சோம். அதுக்கப்புறமாத் தான் காபி போட ஜலமே  எடுக்க முடிஞ்சது.

இது எல்லாவற்றையும் முடித்துக் கொண்டுக்கஞ்சி வைத்துக் காபியும் போட்டுக் குடித்துவிட்டு கணினியில் உட்கார்ந்தால் பாஸ்வேர்ட் போட்டு உள்ளே நுழைந்து க்ரோமில் வேலை செய்யக்  க்ரோமைத் திறந்தால், "சுத்துது! சுத்துது! சுத்துது! பாரு அங்கே!" சுற்றிக்கொண்டே இருக்கு! எதுவுமே வரலை. சரினு க்ரோமை மூடலாம்னு பார்த்தால் மூட முடியலை. அந்த வெள்ளைப் பக்கம் மட்டுமே இருக்கு! எக்ஸ்ப்ளோரருக்கும் போக முடியலை.  டாகுமென்ட்ஸைத் திறக்க முடியலை. படங்கள் இருக்கும் பக்கங்கள் வரலை. ஒரே களேபரம்! அந்த வெள்ளைப் பக்கம் மட்டும் மவுசின் சுற்றும் ஆரோவோடு இருக்கு ஸ்திரமாக! அணையவே இல்லை சரினு கைகளால் ஸ்விட்சை அணைத்துக் கணினியை மூடிட்டு மறுபடி, மறுபடி, மறுபடி, மறுபடி போட்டால் அதே தான் நிலைமை. எந்தவித முன்னேற்றமும் இல்லை. ஆஹா! இன்னிக்குச் சுவையூட்ட இப்படி ஒரு பிரச்னையா என நினைத்துக் கொண்டு, பழைய மடிக்கணினியை (ரொம்பச் சமத்து அது) எடுத்து வைத்துக் கொண்டு பெயருக்குச் சிலவற்றைப் பார்த்துட்டு அப்புறம் உட்கார்ந்தால் நேரம் ஆயிடும்னு மூடி வைச்சுட்டு வேலையைப் பார்க்கப் போயிட்டேன்.

தண்ணீர்ப் பிரச்னை எதனால் என்பதைப் பால் வாங்கக் கீழே போன நம்மவர் விசாரித்து வந்தார். முதலில் நாங்கள் தண்ணீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தவர்கள் கடைசியாக இருக்கும் அழுக்கு ஜலத்தோடு தொட்டியை நிரப்பிட்டாங்க போலனு நினைச்சோம். ஆனால் இது தானியங்கியாகத் தண்ணீர் மேலே ஏறும் அமைப்புக் கொண்டது. அது ஏதோ சரியா வேலை செய்யாமல் தண்ணீரே ஏறவில்லை. சுத்தமாய்க் காலி! காலை நாலரைக்கு எழுந்த எதிர்க் குடியிருப்புக்காரங்க தண்ணீர் வரலைனு பார்த்துட்டுக் கீழே பாதுகாவலருக்குத் தகவல் கொடுக்க அவர் வந்து தொட்டியை எல்லாம் சோதித்துவிட்டுத் தண்ணீரே இல்லை எனக் கைகளால் மோட்டாரை இயக்கித் தண்ணீரை ஏற்றி இருக்கார். கடைசி வரைக்கும் போன தண்ணீர் அடியில் இருந்த அழுக்குகளை எல்லாம் இழுத்துக்கொண்டு வந்து ஒரு வழி பண்ணிவிட்டது.

கணினிக்கு சுமார் ஒன்பதரை, பத்து மணி அளவில் மருத்துவரை அழைத்தேன். பதினோரு மணிக்கு மேல் வந்து பார்ப்பதாகச் சொன்னார். இப்போத் தான் அரை மணி முன்னால் வந்துவிட்டுப் போனார். கணினி சரியாக மூடவில்லை என்பதால் அவர் நான் எப்போதும் ஹைபர்நேட்டில் வைத்திருப்பதாக நினைத்துவிட்டார். அப்படி இல்லை, இன்னிக்கு மூடலை என்று சொன்னேன். அப்புறமும் அவருக்கு நம்பிக்கை வரலை. கணினியில் சேர்ந்திருந்த வேண்டாதவற்றை நீக்கிக் கணினியைச் சரி செய்துவிட்டு என்னையே கணினியை மூடி மறுபடி திறக்கச் சொன்னார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!  பதினைந்து வருஷங்களுக்கும் மேலாகக் கணினியோடு உறவு பூண்ட எனக்கா இந்த சோதனைனு மனசுக்குள் நினைத்துக் கொண்டு அவர் சொன்னதைச் செய்து காட்டினேன். அதுக்கப்புறமா அவருக்கு அரை மனசா எனக்குக் கணினியை அணைத்து வைக்கத் தெரிஞ்சிருக்குனு புரிந்து கொள்ள முடிந்தது போலும். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இப்போக் கணினி சரியா இருக்கு.

மொத்தத்தில் இந்த நாள் எனது நாள்! Today is Myday. God made my day! 

Sunday, May 17, 2020

ஐம்பெரும் விழா வருது!

அப்பாடானு இருக்கு. அரை மணி நேரமாக மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. சாயந்திரமே மழை ஆரம்பிக்க முயற்சி செய்து காற்று கோபமாக வந்து விரட்டி விட்டது. பின்னர் இப்போதும் நடந்த சண்டையில் கடைசியில் வருணன் தான் ஜெயித்தார். கதவுகள் எல்லாம் அடித்துக்கொண்டன.  எதற்கும் மசியவில்லை வருணனார்.  இரண்டு நாட்களாக இடைவிடாத வேலைகள், வேலைகள்! இன்னிக்குக் குடியிருப்பில் உள்ள பாதுகாவலர்களுக்குச் சாப்பாடு கொடுக்கும் முறை எங்களுடையது. ஆகவே நேற்றே அதற்காக இட்லி மாவெல்லாம் தயார் செய்து, சமையல் என்ன பண்ணுவதுனு யோசிச்சுக் கடைசியில் சாம்பார், ரசம்னு வேண்டாம்னு புளியஞ்சாதம், தயிர் சாதம் கொடுக்கலாம்னு முடிவு பண்ணியாச்சு. சாயந்திரம் குட்டிக் குஞ்சுலுவைப் பார்த்தோம். இன்னிக்கும் குஞ்சுலு வந்தது.

இன்னிக்குக்கல்யாண நாள் ஆங்கிலத் தேதிப்படி. இந்த சார்வரி வருஷத்தில் வைகாசி மாதம் மே 14 ஆம் தேதியே வந்துட்டதாலே நேத்திக்கே வைகாசி 3 ஆம் தேதி வந்துவிட்டது. ரேவதி முகநூலில் பதிவே போட்டுவிட்டார். அப்புறமாச் சொன்னேன், இன்னிக்குத் தான் ஆங்கிலத் தேதினு. நமக்கெல்லாம் தமிழ்த் தேதி தானே! ஆகவே நான் அதையும் கொண்டாடி, இன்னிக்கும் கொண்டாடிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். ஏற்கெனவே நமக்குப் பிறந்த நாளே 3 வரும். பாஸ்போர்ட், எஸ்,எஸ்,எல்,சி, சான்றிதழ் ஆகியவற்றில் உள்ள பிறந்த நாள் போனமாதமே வந்து அலுவல் முறையில் தொடர்புள்ளவர்கள் வாழ்த்துகளும் சொல்லியாச்சு! அதைத் தவிரவும் ஆங்கிலத் தேதி, தமிழ் நக்ஷத்திரப் பிறந்த நாள்னு 3 ஆயிடும். முப்பெரும் விழா முன்னாடி எல்லாம் கொண்டாடிக் கொண்டிருந்தேன். எடைக்கு எடை தங்கம், வெள்ளி, நவரத்தினம் எல்லாமும் தம்பிகளைக் கொடுக்கச் சொல்வேன். இம்முறை கல்யாண நாள் இரண்டு தரம் வந்திருக்கிறதாலே ஐம்பெரும் விழாவாக் கொண்டாடிடலாம்னு எண்ணம்.

தம்பிகள், தங்கைகள், அக்காக்கள், பெரியவங்க எல்லோரும் அவங்க அவங்க கொடுக்கும் சீரை ஐந்து முறை கொடுத்துவிடவும். இன்னும் ஒரே வாரம் தான். காத்துண்டு இருக்கேன். இன்னிக்கு ஜவ்வரிசி, கடலைப்பருப்புப் போட்டு வெல்லப் பாயசம் பண்ணினேன். பண்ணும்போது படம் எடுக்க முடியலை! சாயங்காலம் எடுக்கலாம்னா சுத்தமா மறந்துட்டேன். பாதுகாவலருக்குத் தம்பளரில் ஊற்றிக் கொடுத்துட்டேன். அவங்கல்லாம் நல்லா இருக்கு என்றார்கள். நம்ம நெல்லைக்கு மட்டும் சந்தேகம். எப்படி இருக்குமோனு. ரொம்பவே நல்லா இருக்கும். வெல்லம் போட்டிருக்காப்போல் தெரியவே தெரியாது. தேங்காய்ப் பால் ஊற்றினால் இன்னும் நன்றாக இருக்கும். நான் இன்னிக்குப் பசும்பால் தான் ஊற்றினேன். தேங்காய்ப் பால் எடுக்கச் சோம்பல்! நெல்லை அடுத்து எப்போ ஸ்ரீரங்கம் வராரோ அன்னிக்கு இந்தப் பாயசம் தான் பண்ணணும்னு இருக்கேன்.

Tuesday, May 12, 2020

என்னதான் நடக்கும், நடக்கட்டுமே!

இன்று சர்வதேச செவிலியர் தினமாம். கடந்த ஆறுமாதமாக ஒப்பற்ற சேவை செய்து வரும் அனைத்து செவிலியருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள். நடமாடும் தெய்வங்களான அவர்கள் சேவை தொடர்ந்து செய்ய ஏற்றவகையில் அவர்கள் உடல்நலனும், மனநலனும் இருக்கும்படிக் கடவுளைப் பிரார்த்திக்கிறேன். 



இன்று இரவு பிரதமரின் உரை இருக்கிறது எனச் செய்திகள் சொல்லுகின்றன. வரும் பதினேழாம் தேதியுடன் ஊரடங்கு முடியப் போகும் நிலையில் இன்று பிரதமர் உரை. ஊரடங்கை நீட்டிக்கச் சொல்லித் தமிழ்நாட்டு முதலமைச்சர் பிரதமரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஏற்கெனவே பெயரளவுக்குத் தான் ஊரடங்கு இருக்கும் நிலையில் இன்னும் நீட்டித்தால் அதனால் என்ன பலன் ஏற்படப் போகிறது என்பது புரியவில்லை. மக்களில் ஒரு சாரார்/மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே ஊரடங்கையும் அதை ஒட்டிய கட்டுப்பாடுகளையும் ஆதரிக்கின்றனர்/ கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கின்றனர். இனி பேருந்துகள் ஓட ஆரம்பித்தால், ரயில்கள் ஓட ஆரம்பித்தால் இது தொடர முடியுமா? பேருந்து, ரயில்களில் இருக்கைகள் மாற்றி அமைக்கப்படுவதாகச் சொல்கின்றனர். இதற்கெல்லாம் செலவுகள், ஆட்கள் பலம்னு எல்லாம் தேவைப்படும். பயணச் சீட்டின் விலையும் மக்கள் வாங்கும்படி இருக்கவேண்டும்.

இது இத்தனையும் இருக்க வெளிமாநிலத் தொழிலாளருக்கு அரசு எதுவுமே செய்யவில்லை என்றவர்கள் இப்போது அனைத்துத் தொழிலாளர்களும் சென்றுவிட்டதால் இங்கே தொழிற்சாலைகளில் வேலை செய்ய ஆட்கள் பற்றாக்குறை என்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இருந்து மஹாராஷ்ட்ரா போனவர்கள் பலரும் அங்கே கரும்பு வெட்டப் போனதாகச் சொன்னார்கள். அதே கரும்பை, வயல் வேலைகளை இங்கே இருந்து செய்திருக்கலாமே என்னும் எண்ணம் வரத்தான் செய்தது. தமிழ்நாட்டில் கட்டுமான வேலைகள், வயல்வேலைகள் போன்ற கடினமான உடல் உழைப்பு நிறைந்த வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது கடினமாக உள்ளது எனவும், தமிழர்கள் எனில் கூடுதல் சம்பளம் தர வேண்டி உள்ளது எனவும் இவர்களை வேலை வாங்குபவர்கள் கூறுவது. இப்போதோ ஆட்கள் பற்றாக்குறை எனச் சொல்கின்றனர்.

இந்த ஊரடங்கு ஆரம்பத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் பொருளாதாரம் அதல பாதாளத்துக்குப் போய்விட்டது எனவும்,அடித்தட்டு மக்கள் வாழ்வாதாரம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும், சாப்பாடே இல்லாமல் தெருத்தெருவாக அலைவதாகவும் சொன்னார்கள். சிலர் உணவு, நிவாரணப் பொருட்கள் கொடுத்து உதவியதாகவும் சொன்னார்கள். அரசோ ஆயிரம் ரூபாய் பணத்துடன் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து மளிகைப் பொருட்களும் உணவுப் பங்கீடு நிறுவனம் மூலமாகக் கொடுத்து இருக்கிறது. இனி வரப்போகும் மாதமும் கொடுக்கப் போவதாகச் சொல்லி உள்ளது. இதைத் தவிரவும் முதல் ஊரடங்கின் போதே அனைத்து அடித்தட்டு மக்கள், விவசாயிகள் ஆகியோரின் ஜன் தன் வங்கிக் கணக்கில் பணமும் மத்திய அரசால் போடப்பட்டுள்ளது. ஆனாலும் எதிர்க்கட்சிகளுக்கு இதில் திருப்தி இல்லை. ஒரு தலைவர் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு கோடி நிதி உதவி செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார். பணக்கார நாடு எனச் சொல்லப்படும் அம்பேரிக்காவிலேயே அப்படி எல்லாம் கொடுக்கவில்லை. கனடாவில் ஏதோ நிதி உதவி கொடுத்திருப்பதாகச் சொல்கின்றனர். முழு விபரம் தெரியவில்லை.

வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவங்க ஊர்களில், மாநிலங்களில் வேலை வாய்ப்பு இல்லாமல் தான் தென்னாடுகளுக்கு வந்தனர். இப்போது திரும்பிப் போனால் அங்கே அவங்களுக்கு வேலை காத்துக்கொண்டு இருக்கிறதா? இல்லை. ஆனால் அனைவருக்கும் உயிர் மேல் பற்றும், பாசமும், பயமும். தனியாக இங்கே இருக்கும்போது ஏதேனும் நடந்துவிட்டால்? அந்த எண்ணமே சொந்தங்களின் அருகே போகும்படிச் சொல்லி அவர்களும் சென்றுவிட்டனர். இத்தனைக்கும் இங்கே தமிழ்நாட்டில் அவர்களுக்கென தனி முகாம் ஏற்படுத்திச் சாப்பாடு, மற்ற வசதிகளைத் தமிழக அரசு செய்து கொடுத்துக் கொண்டிருந்தது. இப்போது அவர்கள் ஊர் திரும்பவும் ஏற்பாடுகள் செய்து கொடுத்துள்ளது. மத்திய அரசால் அவர்களின் ரயில் பயணச் செலவில் 85 சதம் இந்திய ரயில்வேயும் மீதி உள்ள 15 சதம் அந்த அந்த மாநிலங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் கேரளா தன்னால் முடியாது என்று சொல்லிவிட்டது. என்றாலும் பலரும் இதைப் புரிந்து கொள்ளாமல் அனைத்துச் செலவுகளையுமே மத்திய அரசு மாநிலங்களை ஏற்கச் சொன்னதாகவும், அதனால் மாநில அரசுகள் மறுத்ததாகவும் கூறிக்கொண்டிருக்கின்றனர். விளக்கங்கள் அளித்தும் அவர்கள் தங்கள் கூற்று தவறு என மாற்றிக்கொள்ளவில்லை.  இங்கே தமிழக அரசு தன்னால் முடியும் என (கஜானா காலியாக இருந்தும்) ஒத்துக் கொண்டு விட்டது. கேரளா மேலும் மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சொல்கிறது. இதே போல் மேற்கு வங்காளத்திலும் அந்த மாநில அரசு அங்கே திரும்பி வந்த மேற்கு வங்கத் தொழிலாளர்களை ஏற்க மறுத்துவிட்டது.

இப்போது இன்றிரவு பிரதமர் என்ன சொல்வாரோ, ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது பதினேழாம் தேதியோடு முடிவடையுமா என்பதே பெரிய கேள்வி. ஏற்கெனவே ஜனவரி மாதமே ஊரடங்கை ஆரம்பிக்கவில்லை என்று சிலரும் பெப்ரவரியிலேயே செய்திருக்க வேண்டும் எனச் சிலரும் சொல்கின்றனர். இப்போது கடந்த 48 நாட்களாக ஊரடங்கில் இருக்கையிலேயே மக்கள் அதை மதிக்கவில்லை. அதை யாருமே கண்டிக்கவில்லை. இன்னொரு பக்கம் ஊரடங்கினால் வாழ்வாதாரம் போய்விட்டது என்றும் புலம்பல். அடித்தட்டு மக்களுக்கு அரசு உதவ வேண்டும் என்றும் புலம்பல். அரசு ஒரு பக்கம் ஊரடங்கு, கொரோனா தொற்றுப் பாதிப்பு, சுகாதார ஏற்பாடுகள், நோயாளிகளைக் கவனித்தல் எனச் செய்யும் போது இதையும் சேர்த்து எப்படிச் செய்யும்? எல்லோரும் மனிதர்கள் தானே! ஏதோ பிரதமரும், தமிழ்நாட்டில் முதலமைச்சரும் சேர்ந்து கொண்டு பேசி வைத்துக் கொண்டு கொரோனாவை உள்ளே விட்டு விட்டார்கள் என்று சொல்லாத குறை!

ஊரடங்கை முதலில் அறிவித்தபோது மத்திய அரசு சொல்லாமல் தமிழகத்தில் அறிவித்துவிட்டதாகச் சொன்னார்கள். அடுத்த ஊரடங்கை நீட்டிக்கும் சமயம் மத்திய அரசின் முடிவுக்குக் காத்திருக்கையில் மத்திய அரசின் அடிமை அரசு, மற்ற மாநிலங்கள் நீட்டிக்கையில் இங்கேயும் ஏன் செய்யவில்லை எனக் கேள்வி. நீட்டித்த பின்னர் எத்தனை நாட்கள் ஊரடங்கில் இருப்பது? மக்களால் பொறுக்க முடியவில்லை. இதற்கு என்ன செய்யப் போகிறோம்? அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என்றெல்லாம் கேள்விகள். ஏன் இவர்களே இதற்கு ஒரு மாற்றுக் கண்டறிந்து அதை முதலமைச்சருக்குத் தெரியப்படுத்தலாம். இப்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன், ஆங்காங்கே கொரோனா பரவிக்கொண்டிருக்கும் வேளையில் "அரசு கொரோனாவோடு நீங்கள் வாழப் பழகிக்கொள்ளுங்கள்!" என்று சொல்லிக் கை கழுவி விட்டது எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆக ஊரடங்கு இருந்தாலும் குற்றம் சொல்வோம்; எடுத்துவிட்டாலும் குற்றம் சொல்வோம். ஊரடங்கு நியமங்களுக்கும் கட்டுப்பட மாட்டோம். ஆனால் எங்களுக்குக் கொரோனா மட்டும் வரக்கூடாது! இது தான் இப்போதைய போக்கு! நம்மால் அரசுக்கோ, மற்ற மக்களுக்கோ உதவி ஏதும் செய்ய முடியலைனாலும் தொல்லை கொடுக்காமலாவது இருக்கலாம்.

டிஸ்கி: நான் எந்த அரசின் ஆதரவாளரோ அல்லது எதிர்ப்பாளரோ இல்லை. பொதுவாக அரசின் சட்ட திட்டங்களை மதிக்கும் ஒரு சாதாரணப் பிரஜை. அது எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும்!

Saturday, May 09, 2020

மாவு மிச்சமானால் என்ன? இதோ ஒரு திப்பிசம்!

நேற்றைய காராவடையே இன்னமும் போணி ஆகிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் மிச்ச மாவை இந்த வெயில் காலத்தில் எத்தனை நாட்கள் வைப்பது? அதான் அதில் பஜியா போடலாம்னு தீர்மானிச்சுட்டேன் நேத்திக்கே! இந்த பஜியா என்பது வேறே ஒண்ணும் இல்லை. நம்ம தூள் பஜ்ஜி தான். வட மாநிலங்களில் உருளைக்கிழங்கு, வெங்காயம், குடமிளகாய், வெந்தயக்கீரை, பாலக் போன்றவற்றை நறுக்கி பஜ்ஜிக்கு மாவு கரைப்பது போல் காரம், உப்பு, பெருங்காயம் போட்டுக் கடலைமாவைக் கரைத்து அதில் நறுக்கிய இந்தக் காய்களைச் சேர்த்துப் போடுவார்கள். சில சமயங்களில் வெறும் கீரையில் மட்டுமே போடுவதும் உண்டு. ஆனாலும் இந்த உ.கி., வெங்காயம் போட்டுப் பண்ணும் பஜியா நம்மவருக்கு ரொம்பப் பிடிக்கும். இதைக் காலை ஆகாரத்துக்கே அதிகம் பண்ணுவார்கள். சில கடைகளில் நாள் முழுவதுமே கிடைக்கும். காரட்டைத் துருவி அதைக் கடுகு தாளித்துக் கொண்டு மஞ்சள் பொடி, காரப்பொடி, உப்புப் போட்டு லேசாக வதக்கி வைத்துக்கொள்வார்கள். அதில் கொத்துமல்லியை நறுக்கி தாராளமாகத் தூவுவார்கள். வெங்காயமும் பொடியாக நறுக்கித் தனியாக வைத்துக் கொள்வார்கள். இந்த பஜியா குறைந்த பக்ஷம் நூறு கிராமில் இருந்து வாங்கிக்கலாம். பஜியா மேல் காரட், வெங்காயம் தூவித் தருவார்கள்.




காரட், வெங்காயம் எல்லாம் துருவாமல் வெறும் பஜியாவாகவே போடலாம்னு நினைச்சேன். மாவில் முதலில் கருகப்பிலை, கொஞ்சம் போல் உப்பு, (நேற்றைய மாவு இல்லையா) பெருங்காயம், அரைத் தேக்கரண்டி காரப் பொடி போட்டுக் கொத்துமல்லி நறுக்கிப் போட்டு ஒரு சின்ன பச்சை மிளகாயும் போட்டேன். குடமிளகாய் இல்லை என்பதோடு அவருக்குப் பிடிக்காது. பின்னர் உருளைக்கிழங்கு ஒன்றும் வெங்காயம் ஒன்றும் நடுத்தரமானது. சீவல் கட்டையில் சீவி வைத்துக்கொண்டு உருளைக்கிழங்கை மட்டும் நன்கு அலசிப் போட்டு, வெங்காயத்தையும் போட்டேன்.


உ.கி.யை நன்கு அலசிப் போட வேண்டும்.







கலந்த மாவு


மாவை நன்கு கலந்து கொண்டேன். பின்னர் அடுப்பில் எண்ணெயைக் காய வைத்துக் கொண்டு இதை அப்படியே பரவலாகக் காய்ந்த எண்ணெயில் தூவினேன். பின்னர் நன்கு சிவக்க வேக விட்டு எடுத்தேன். என்னிடம் காரட் இருந்தாலும் காரட் எல்லாம் துருவிச் சேர்க்கவில்லை. ரொம்பவே அதிகம் ஆகிவிடும். இது கொஞ்சம் கொஞ்சம் வந்தாலும் போதும்! ஆகவே கலந்த மாவைப் போட்டு முடித்துச் சாப்பிட்டாயிற்று. இனி நாளைக்கெல்லாம் எண்ணெய் வைத்துப் பண்ணப் போவதில்லை என்று சொல்லிவிட்டேன். ஏதேனும் சுண்டல் தான்.


Friday, May 08, 2020

திப்பிசக் காராவடை!

நானும் அண்ணாவும் சின்ன வயசில் அதிகம் தாத்தா வீட்டிலேயே இருந்தோம். அப்பாவுக்கு அப்போ நிரந்தரமான வேலை ஏதும் இல்லை. கொஞ்ச நாட்கள் பெரியப்பா வீடு, பின்னர் தாத்தா வீடு என மாறி மாறி இருந்தோம். அப்பா எப்போதோ வருவார், போவார். ஆகையால் நாங்க அவரை "மாமா" என்றே கூப்பிட்டு வந்தோம். ஆச்சு, தம்பியும் பிறந்துட்டான். அப்பாவுக்கு சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் நிரந்தரமான வேலையும் கிடைத்துவிட்டது. ஆகவே அப்பா அம்மாவுடன் எங்களையும் அழைத்துக்கொண்டு கழுதை அக்ரஹாரம் எனப்பட்ட மேலப்பாண்டியன் அகழித் தெருவில் (ராஜா பார்லிக்கு நேர் எதிரே) குடித்தனம் வைத்தார். எங்களைப் பள்ளியிலும் சேர்த்தாச்சு. ஆனாலும் நானும் அண்ணாவும் "மாமா"எனக் கூப்பிடுவதை நிறுத்தவில்லை. அப்பா எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். தம்பியும் மாமானே கூப்பிட ஆரம்பிப்பான் என்றெல்லாம் சொன்னார். அக்கம்பக்கம் எல்லோரும் சொன்னார்கள். ஆனாலும் எங்களுக்கு மாமா என்றே வந்தது.

அப்போதெல்லாம் மதுரையில் மாலை மூன்று மணி ஆனால் தவலை வடை, போண்டா, வெள்ளை அப்பம், காராவடை, போளி போன்றவைகள் போட்டுச் சூடாகக் கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்துக் கொண்டு வருவார்கள். வீடு வீடாகப் போய்க் கேட்பார்கள். அதில் ஒருத்தர் போடும் காராவடை நன்றாக இருக்கும். நாங்க காராவடை சாப்பிடுவதில் ஆர்வம் காட்டவும் அப்பா எங்களிடம் அந்த நபரிடம் (அவர் பெயர் நரசிம்மன்) காராவடை  வேண்டும் எனில் நீங்க இரண்டு பேரும் என்னை அப்பானு கூப்பிடணும் என்றார். இந்த டீல் நன்றாக இருக்கே என நாங்களும் ஒத்துக் கொண்டோம். இதிலே ஒரு பிரச்னை என்னன்னா, என் அம்மாவோட அத்தை பையர் பெயரும் நரசிம்மன். அவர் மதுரை முனிசிபாலிடியில் சுகாதார அதிகாரியாக வேலை செய்து வந்தார். அவர் தான் எனக்கும், என் தம்பிக்கும் அப்போ வீட்டுக்கு வந்து அம்மைப் பால் வைத்துவிட்டுப் போனார். நரசிம்மா என அம்மாவும் அப்பாவும் கூப்பிட்டுப் பேசவே நான் அவரைப் பார்த்து, "காராவடை ஏன் கொண்டு வரலை?" நு கேட்டு வைக்க அவர் திருதிரு. அம்மாவும் அப்பாவும் சிரிப்பை அடக்கிக் கொண்டு அவரிடம் விவரித்தனர். பின்னர் அவரும் சிரித்துக் கொண்டே என் கன்னத்தைத் தட்டிவிட்டுப் போனார். மீ அப்போ ரொம்பச் சின்னக் குழந்தை தானே! எனக்கு என்ன தெரியும்? அதுக்கப்புறமாக் காராவடை நரசிம்மனைப் பிடித்க்டுக் காராவடை வாங்கித் தந்து, நாங்கள் அப்பானு கூப்பிட்டதெல்லாம் தனிக்கதை.

இப்போ இது எதுக்குனு கேட்கறீங்களா? நானும் பல வருஷங்களாகக் காராவடை பண்ண நினைச்சு முடியாமலே போயிட்டு இருந்தது. கடைசியாக் காராவடை வீட்டில் பண்ணிச் சாப்பிட்டது என்பது எங்க பையர் பிறந்தப்போ என நினைக்கிறேன். அதுக்கப்புறமா யாரானும் பண்ணிக் கொடுத்து எப்போவானும் சாப்பிட்டிருக்கலாம். இங்கே நம்ம புக்ககத்தில் இதெல்லாம் தெரியாது. காராவடையா என்று கேட்டுவிட்டுச் சிரிப்பார்கள். இப்போச் சிரிக்கவும் யாரும் இல்லை, நாங்க ரெண்டு பேர்தானே! காராவடை ஆசையை எப்படித் தீர்த்துக்கறதுனு யோசிச்சேன். நேத்திக்கு இட்லிக்கு மாவு அரைத்தேன். வழக்கம் போல் உளுந்து மாவு பொங்கிப் பொங்கி நிறைய வர அதில் கொஞ்சம் எடுத்து வைச்சேன். நேற்றே முருங்கைக்கீரை போட்டு வடை தட்டலாமானு நினைச்சேன். அப்போத் தான் மூளையில் பளிச்! ஆஹா காராவடைக்கும் உளுந்து மாவை இப்படித் தான் அரைச்சுக்கணும். மற்றதெல்லாம் ஊற வைச்சு அரைச்சுச் சேர்த்தால் போதுமே எனப் பளிச், பளிச் என எண்ணங்கள். ஆனால் நேற்றுச் சாயங்காலமா அரைச்சதால் காராவடை பண்ண நேரம் ஆகிவிட்டது. ஆகவே இன்னிக்குப் பண்ணினேன்.



அரைச்ச உளுந்து மாவு, ஊற வைச்ச கடலைப்பருப்பு, ஊறிக்கொண்டிருக்கும் அரிசி, பருப்பு வகைகள் மிளகாய் வற்றலோடு. மிளகாய் வற்றலை இப்படிச் சேர்ப்பதால் நல்ல நிறம் கொடுக்கும்.

காராவடைக்கு ஒரு கிண்ணம் புழுங்கலரிசியை நன்கு கழுவிட்டு அதோடு காராவடைக்குத் தேவையான மிளகாய் வற்றலைப் போட்டு ஊற வைக்கணும். அரைக்கிண்ணம் துவரம்பருப்பு, அரைக்கிண்ணம் கடலைப்பருப்புத் தனித்தனியாக ஊற வைக்கணும். கடலைப்பருப்பு ஊறியதில் ஒரு கைப்பிடி எடுத்துத் தனியாக வைக்கணும். இங்கே நான் கொஞ்சமாகவே பண்ணப் போவதால் ஒரு கரண்டி புழுங்கலரிசியில் அரைக்கரண்டி துவரம்பருப்பும் அரைக்கரண்டி கடலைப்பருப்பும் சேர்த்தே கழுவி ஊற வைச்சு மிளகாய் வற்றலையும் அதோடு ஊற வைச்சேன். கைப்பிடி கடலைப்பருப்பைச் சின்னக் கிண்ணத்தில் தனியாக ஊற வைச்சிருக்கேன். உளுத்தமாவு இட்லி மாவுக்கு அரைக்கும் பதத்தில் எடுத்தது தனியாக ஒரு பாத்திரத்தில் இருக்கு. காராவடைக்கு என அரைக்கும்போதும் இப்படித் தான் அரைச்சுச் சேர்க்கணும்.


அரிசி, பருப்பு அரைச்சது

எல்லாவற்றையும் ஒன்றாக மிக்சி ஜாரில் போட்டு நன்றாக நைஸாக அரைக்கவேண்டும். கொஞ்சமாக அரைப்பதால் சேர்த்துப் போட்டு அரைப்பது சுலபம். நிறையப் பண்ணினால்   தனித்தனியாகவே அரைத்துச் சேர்க்கணும். அரைக்கும்போதே தேவையான உப்பைச் சேர்க்கலாம். உளுந்து மாவில் நாம் உப்புச் சேர்க்கலை என்பதால் எல்லா மாவையும் ஒன்றாகக் கலக்கும்போது நான் உப்புச் சேர்த்தேன். பெருங்காயம், மிளகாய் வற்றலோடு சேர்த்தே அரைக்கலாம். ஊற வைத்த கடலைப்பருப்பை நன்கு வடிகட்டி இந்த மாவில் சேர்க்கணும். கருகப்பிலை போட வேண்டும். மாவை நன்றாகக் கலக்க வேண்டும். கெட்டியாக அப்பம் ஊற்றும் பதத்தில் இருக்கும்.



கடாயில் எண்ணெயைக் காய வைத்துக் கொண்டு கரண்டியால் எடுத்து ஊற்றினால் ஊற்றியதுமே மேலே உப்பிக் கொண்டு வரும். நன்கு வெந்ததும் மெதுவாகத் திருப்பி மறுபுறமும் வேக வைக்க வேண்டும். இரு பக்கமும் சிவக்க வெந்ததும் எடுத்துத் தேங்காய்ச் சட்னி அல்லது அப்படியே அல்லது தக்காளி, கொத்துமல்லிச் சட்னிகளோடு சாப்பிடலாம்.



நம்ம நெல்லை இது என்ன கொஞ்சம் தான் வரும் என்பார். நான் கலந்த மாவில் எனக்கு 4 அவருக்கு 4 பண்ணினது போக மிச்சம் மாவு இருக்கு. அதை நாளைக்குச் செலவழிக்க என்ன செய்யலாம்னு இன்னிக்கே யோசிச்சு வைச்சுட்டேன். அது நாளை அது வரை சஸ்பென்ஸ்.






Saturday, May 02, 2020

சரணம், சரணம் ஆண்டவன் பாதார விந்தங்களே சரணம்!

முன்னைப் போல் பதிவு அடிக்கடி போட முடியவில்லை. முன்னர் ஒரு தரம் வந்த அதே Eye floaters  கண் பிரச்னை ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் சோர்வு, அலுப்பு! கடந்த 2 வருடங்களாகப் பிரச்னை இல்லை. இப்போ திடீர்னு கண்ணில் கட்டி கிளம்பிக் கூடவே இந்தப் பிரச்னையும் வந்திருக்கிறது. 
eye floaters

இந்த ஊரடங்கினால் மக்கள் படும்பாடு ஒரு பக்கம் எனில் மக்கள் படுத்தும் பாடு அதைவிட மோசமாக இருக்கிறது. கொரோனா தாக்குதல் இல்லாத மாவட்டமாக இருந்த கிருஷ்ணகிரியிலும் ஒருத்தர் நோயால் பாதிப்பு எனத் தகவல். சென்னை பற்றிச் சொல்லவே வேண்டாம். சென்னையில் இருப்பவர்கள் படித்தவர்களா இல்லையா என்றே சந்தேகமாக இருக்கிறது. அரசும் கொஞ்சமானும் கடுமை காட்டலாமோ எனத் தோன்றுகிறது. இதனால் கஷ்டப்படப் போகிறவர்கள் சுகாதாரத் தொழிலாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் தாம். அவர்கள் எவ்வளவு சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு பணி ஆற்றுகிறார்கள் என்பதை இன்னமும் தமிழ்நாட்டில் யாரும் புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன்.

சென்னை தி.நகரில் இருக்கும் உறவினர்களுக்கு மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் வாங்கக் கடைகளுக்குச் சென்றால் எப்போதும் கூட்டமும் வரிசை நீளமாகவும் இருப்பதாகச் சொல்லுகின்றனர். மக்கள் ஊரடங்கினால் உள்ளேயே இருக்க மாட்டார்கள் போல!  இதிலே ஸ்விகி, ஜொமோடோ மூலம் உணவு அளிப்பவர்களில் சிலருக்குக் கொரோனா பாதிப்பு என்கிறார்கள். ஆகவே உணவையும் வாங்குவதில் மிகவும் யோசிக்க வேண்டும்.  சிவப்பு மாவட்டமாகச் சென்னை நீடித்து வருகிறது. கூடவே செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற அண்மை மாவட்டங்களும்! திருச்சி ஆரஞ்சு மாவட்டமாக இருக்கிறது. இன்னும் பதினைந்து நாட்களில் பசுமை மாவட்டமாக மாறிவிடும் என உறுதி கொடுக்கின்றனர். இங்கே மக்கள் நடத்தை கொஞ்சம் பரவாயில்லை ரகம் தான். அதிகம் கூட்டம் கூடுவதில்லை. அதோடு தள்ளுவண்டிகளில் காய்கள், பழங்கள் வருகின்றன. பூக்கள் வருவதில்லை. அது ஒரு குறைதான்.  காபிப் பொடி விநியோகம் செய்பவர் இரண்டாம் முறையாகக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். அது ஒன்றுக்குத் தான் கொஞ்சம் சிரமமாக இருந்தது. 

அம்பேரிக்காவில் உணவகங்கள் திறந்திருப்பதாகப் பையரும் பெண்ணும் சொன்னார்கள். காய்கள், பழங்கள் இணையம் மூலம் தேவையைக் கூறி வீட்டிற்குக் கொண்டு வந்து தருகின்றனர். ஆனால் இதில் ஒரு பிரச்னை என்னவெனில் நாம் கேட்கும் அளவை விட அநேகமாகக் கூடுதலாக இருப்பது. எங்க பெண் வெள்ளைப் பூஷணிக்காய்ச் சின்னதாக ஒன்று கேட்டிருக்கிறாள். அவங்க அனுப்பியதோ பெரிய பறங்கிக்காய்! என்ன செய்வது என்று தெரியவில்லை என்றாள். கூட்டு, கறி, துவையல், பச்சடி, சாம்பார், குழம்பு எனப்பண்ணிவிட்டு முடிந்தால் அல்வா, பாயசம் பண்ணலாம். அப்படியும் மிகுந்தால் அடையில் போடு என்று சொன்னேன்.பறங்கிக்காய் வாரம் கொண்டாடினாள். இன்று அப்புவின் பிறந்த நாள். காலை வீடியோ அழைப்பில் கூப்பிட்டுப் பேசினோம். மீண்டும் இரவு (அவங்களுக்கு அப்போத் தானே மே 2) கூப்பிடுவதாய்ச் சொல்லி இருக்காங்க. குட்டிக் குஞ்சுலுவையும் பார்த்துச் சில நாட்கள் ஆகின்றன.

பேருந்துகளை 50 சதம் பயணிகளோடு இயக்கலாம் என்கின்றனர்.நம் மக்கள் கேட்பார்களா? குறைந்தது 200 சதம் பயணிகளாவது பயணிப்பார்களே!அதை நினைச்சால் இப்போவே திக், திக் என்றிருக்கிறது.  இந்த நோய்க்கு மருந்தே இல்லை என ஒரு சாராரும், மருந்து கண்டு பிடிச்சாச்சு என இன்னொரு சாராரும், எத்தனை மருந்து கண்டுபிடித்தாலும் இது திரும்பத் திரும்ப வரும் என ஒரு சாராரும் சொல்லுகின்றனர். யாருக்கும் எதுவும் நிச்சயமாகச் சொல்லத் தெரியலை. எங்கிருந்து வந்திருந்தாலும்  இது எப்போது போகும் என்னும் எண்ணமே அனைவரிடமும் உள்ளது! இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவது எப்போது என்னும் எண்ணம் அனைவரிடமும் உள்ளது. அது அதிகமாய் உள்ளவர்களால் தான் ஊரடங்குச் சட்டமும் மீறப்படுகிறதோ எனத் தோன்றுகிறது. அதோடு நோய்த் தொற்று அறிகுறி இல்லாமலேயே கொரோனா தாக்கும் என்று வேறு சொல்கின்றனர். எல்லாவற்றுக்கும் அரசைக் குறை கூறும் மக்கள் நாம் அரசின் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கிறோமா என்பதைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். எங்க உறவினர் ஒருவர் சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக இங்கே வந்து மாட்டிக்கொண்டு திரும்பும் வழி தெரியாமல் விழிக்கிறார். 

மருத்துவர்கள் வேறே இப்போதெல்லாம் அவசரம் என்றால் தவிரப் பார்ப்பதில்லை. நோயாளிகளைத் தொட்டுப் பரிசோதனை செய்ய வேண்டுமே! அதே போல் ரத்தம் எடுப்பதற்கும் யாரும் வருவதில்லை. எல்லோருக்கும் கொரோனா பயம். ஆண்டவனைப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை. முக்கியமாகச் சென்னை மக்களுக்கு நல்ல புத்தி வரப் பிரார்த்திக்கிறோம். நிலைமையின் தீவிரம் அவர்களுக்கும் புரியும்படி ஆண்டவன் அருள வேண்டும்.