எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, March 31, 2008

கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 5



ரிஷ்யசிருங்கரால் புத்ரகாமேஷ்டி யாகம் நடந்து கொண்டிருந்த வேளையில் தேவர்களும், சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் பிரம்மாவை அணுகி, "உங்களால் ஆசீர்வதிக்கப் பட்ட ராவணன் என்னும் ராட்சசனின் தொல்லைகள் தாங்க முடியவில்லை. யாராலும் அவனை வெல்ல முடியாத வரம் வேறே பெற்றிருக்கின்றான். அவனைக் கண்டால் சூரியனும் மேகங்களுக்கிடையில் மறைந்து கொள்கின்றான். வருணனும் தன் பொழிவை மட்டுப் படுத்திக் கொள்கின்றான். வாயுவும் அடக்கியே வீசுகின்றான். சமுத்திர ராஜன் ஆன அலைகடலும் தன் அலைகளை அடக்கியே வைத்துக் கொள்ள வேண்டி உள்ளது. இதற்கு என்ன வழி?" எனக் கேட்கின்றார்கள். பிரம்மாவும், "ஆம், நாம் இதனை அறிவோம், இந்த ராவணன், தன் மமதையால் தேவர்கள், யக்ஷர்கள், அசுரர்கள், ராக்ஷசர்கள் எனக் கேட்டுக் கொண்டானே ஒழிய, மனிதர்களைத் தூசி மாத்திரம் நினைத்து அவர்களை அலட்சியம் செய்து விட்டான். ஆகவே அவன் பிறப்பு மனிதப் பிறவியாலேயே ஏற்படவேண்டும். இதற்கு ஸ்ரீமந்நாராயணனே அருள் புரிய வேண்டும்!" என்று சொல்ல, அப்போது முனிவர்களும், தேவர்களும் நாராயணனைத் துதிக்க, அவரும் அவர்களின் வேண்டுகோளை ஏற்றுத் தான் மானுடனாய்த் தோன்றி, ராவணனை வதம் செய்வதாய் உறுதி அள்க்கின்றார். தன்னுடைய அம்சத்தை நான்கு பாகங்களாய்ப் பிரித்துக் கொண்டு, அப்போது புத்ர காமேஷ்டி யாகம் செய்யும் தசரதனுக்கு மகன்களாய்ப் பிறக்கத் தீர்மானித்துக் கொண்டார் மகாவிஷ்ணு.

உடனேயே பிரம்மாவும் தேவர்களுக்கும், யட்சர்களுக்கும் மானுடனாய்ப் பிறந்து ராவண வதம் செய்யப் போகும் விஷ்ணுவுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுக்க, மாயவித்தைகள் அறிந்தவர்களாயும், வீரம் செறிந்தவர்களாயும், தர்மமும், நீதியும் அறிந்தவர்களாயும், அறிவாளிகளாகவும், வானர உருவம் படைத்தவர்களாயும் உள்ள பல சந்ததிகளை உருவாக்கினார்கள். இந்திரன் தன் சக்தியால் வாலியை உருவாக்க, சூரியனால் சுக்ரீவன் உருவாக்கப் பட்டான். பிரம்மாவோ ஏற்கெனவேயே ஜாம்பவானைப் படைத்திருந்தார். நளனை விஸ்வகர்மா படைக்க, ராமதூதனாகவும், அன்றும், இன்றும், என்றும் ராமசேவையில் ஈடுபட்டிருப்பவனாகவும், எங்கெல்லாம் ராம கதை சொல்லப் படுகிறதோ, அங்கெல்லாம் மானசீகமாய் அந்தக் கதையைக் கேட்டு உருகவேண்டும் என்பதற்காகவே, தனக்கு அளிக்கப் பட்ட வைகுந்தப் பதவியைக் கூட மறுத்தவனும் ஆன அனுமனை வாயு படைத்தான். இப்படி வானரத் தலைவர்களும், வீரர்களும் உருவாக்கப் பட்டு வாழ ஆரம்பித்தனர். இவர்களுக்கு வேண்டிய உருவத்தை எடுத்துக் கொள்ளும் வல்லமையும், கடல், மலை போன்றவற்றைத் தாண்டக் கூடிய பலமும், மரங்களை வேரோடு பிடுங்கும் வீரமும் வாய்ந்தவர்களாக உருவாக்கப் பட்டார்கள். இவர்களை வாலி அரசனாய் இருந்து ஆண்டு வந்தான். இனி அயோத்தியில் என்ன நடந்தது?
************************************************************************************ உரிய காலத்தில் அரசியர் மூவருக்கும் குழந்தைகள் பிறந்தன. சித்திரை மாதம், சுக்கிலபட்ச நவமி திதியில், புனர்வஸு நட்சத்திரத்தில் ஐந்து கிரகங்கள் உச்ச நிலையில் இருந்த சமயம் ஸ்ரீராமர், கோசலைக்கும், புஷ்ய நட்சத்திரத்தில் கைகேயிக்கு பரதனும், ஆயில்ய நட்சத்திரத்தில் சுமித்திரைக்கு லட்சுமணனும், சத்ருக்கனனும் பிறந்தனர். நாடே கோலாகலத்தில் ஆழ்ந்தது. தேவர்கள் கோலாகலத்தில் ஆழ்ந்தார்கள். யக்ஷர்களும், கின்னரர்களும் பூமாரி பொழிந்தனர். கந்தர்வர்கள் தன் இனிமையான குரலினால் இனிமையான கீதம் இசைத்தார்கள். குலகுருவான வசிஷ்டர், கெளசலையின் மகனுக்கு ராமன், என்றும், கைகேயியின் மகனுக்கு பரதன் எனவும், சுமித்திரையின் மகன்களுக்கு முறையே லட்சுமணன், சத்ருக்கனன் என்றும் பெயரிட்டார். குழந்தைகள் பிறந்து வளர்ந்து வருகின்றன. சகல வித்தைகளையும் கற்றுக் கொண்டு வளர்ந்தார்கள் அரசகுமாரர்கள் நால்வரும். முறையாக அனைத்துச் சடங்குகளும் செய்விக்கப் பட்டு, அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சி பெற்ற அரசகுமாரர்களுக்குத் திருமணப் பருவம் வந்து விட்டதை உணர்ந்த மன்னன், தன் மந்திரி, பிரதானிகளிடம் அது பற்றி ஆலோசிக்க ஆரம்பித்தான். அப்போது அரசவைக்கு வருகை தந்தார் விசுவாமித்திர முனிவர்.

ஸ்ரீராமரின் இந்தக் குழந்தைப் பருவத்தை அருணகிரிநாதர் தமது வருகைப் பருவப் பாடல்களில் பத்து முறை வருக என அழைத்துப் பாடி இருப்பதாய்க் கேள்விப் படுகிறோம். புத்தகம் கிடைக்கவில்லை! :( பிள்ளைப் பருவங்கள் பத்து என்று வைத்துப் பிள்ளைத் தமிழ் பாடுவதுண்டு, அந்தக் கணக்கிலேயும், திருமாலின் அவதாரங்கள் பத்தையும் கணக்கில் கொண்டும் இவ்வாறு பாடி இருக்கலாம் என்று ஆன்றோர் வாக்கு. அருணகிரிநாதரின் கூற்றுப் படி சூரியன் - சுக்ரீவன், இந்திரன் - வாலி, அக்னி -நீலன், ருத்திரன் - அனுமன், என்பதோடு மட்டுமன்றி, பிரம்மா தான் ஜாம்பவான் என்றும் சொல்கின்றார். சிவ அம்சமாகவே அனுமன் தோன்றியதாய்த் தம் திருப்புகழிலும் சொல்லி இருக்கிறதாயும் கேள்விப் பட்டிருக்கிறேன். திருப்புகழைப் பார்க்கணும்.
*************************************************************************************
இந்த வானரர்கள் பற்றி அனைவருக்குமே எழும் சில சாதாரண சந்தேகங்கள் இந்த ராமாயணத்தை எழுதியவருக்கும் ஏற்பட்டிருக்கின்றது. அவர் கண்ட தீர்வு இது தான்:

இந்தக் கதை நடந்த காலத்தில் இந்தப் பிரபஞ்சத்தில் கடவுளர், வானவர்,அசுரர்கள், ராட்சசர்கள் அவர்கள் பெற்ற வரங்கள், செய்த தவங்கள், சாபங்கள், மந்திர, தந்திரப் பிரயோகங்கள், அவற்றினால் ஏற்பட்ட நல் விளைவுகள் மட்டுமின்றி துர் விளைவுகள், பறக்கும் ரதங்கள், சக்தி வாய்ந்த ரிஷி முனிவர்கள், அதிசயமான வடிவம் கொண்ட பேசும் மிருகங்கள், பேசும் பறவைகள், வீரம் செறிந்த மனதனைப் போல் பேசும், வாழ்க்கை நடத்தும் குரங்குகள், இவற்றுக்கு நடுவில் ஒரு ஒழுக்கம் செறிந்த, சற்றும் கண்ணியம் தவறாத, அரச நீதியை மீறாத சொன்ன சொல் தவறாத ஒரு மனிதனின் வாழ்க்கைப் போராட்டமாகக் காணுகின்றார். கடைசி வரையிலும் தான் ஒரு அவதார புருஷன் என்பது தெரிந்து கொள்ளாத ஒரு சாதாரண மனிதனாகவே ராமன் வால்மீகியால் படைக்கப் பட்டிருக்கின்றான். அதனாலேயே பின்னர் வரும் சில தவறுகளுக்கும் அவன் காரணம் ஆகின்றான். ஒரு தேவதைக் கதையில் உள்ள அனைத்துச் சம்பவங்களுக்கும் இதில் குறை இல்லை. அதே சமயம் மனிதன் எவ்வாறு வாழவேண்டும் என்று உணர்த்தவும் செய்கின்றது.

ஆசிரியரின் கருத்துக்கள், ஒவ்வொரு அத்தியாயத்திலும் முடிவில் வரும்.

முழுக்க முழுக்க வால்மீகி ராமாயணத்தையே எழுதப் போவதாய் இருந்தாலும் சில சமயங்களில் வேறு ராமாயணங்களும் குறிப்பிடப் படும். சன் தொலைக்காட்சியிலே "ராமாயணம்" தொடர் வருவதாய் வேந்தர் தெரிவித்திருந்தார், என் அண்ணா பெண்ணும் அதை உறுதி செய்தாள். என்றாலும் நான் அதைப் பார்ப்பதில்லை, அதன் தாக்கமும் இதில் வராது, முற்றிலும் மாறுபட்டே இருக்கும்.

Sunday, March 30, 2008

கதை கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி -4


பிருகு முனிவரின் ஆசிரமம். அவர் மனைவி க்யாதி தட்சனின் மகள். ஆகவே இயல்பாகவே அவளுக்கு அசுரர்களிடம் பாசம் மிகுதியாக இருந்து வந்தது. தேவர்களிடம் தோற்றுப் போன அசுரர்களை அவள் தன் கணவரின் ஆசிரமத்தில் மறைத்து வைத்துப் பாதுகாத்து வந்தாள். அப்போது இதை அறிந்த மகாவிஷ்ணு, ஏமாற்றிப் பிழைத்து வந்த அசுரர்கள், இங்கே பயம் இல்லாமல் வாழ்வதற்கு பிருகு முனிவரின் மனைவியே காரணம் என்பதைத் தெரிந்து கொண்டு, தன் சக்ராயுதத்தை ஏவ, அவள் தலை துண்டிக்கப் படுகின்றது. தன் மனைவி இறந்ததைக் கண்ட பிருகு முனிவர் கடும் கோபத்துடன், தன் மனைவியைக் கொன்றவன் மகா விஷ்ணுவே என்று அறிந்திருந்தாலும், அவரைப் பார்த்துச் "சற்றும் நியாயமே இல்லாமல் குற்றமற்ற என் மனைவியைக் கொன்ற நீர் மனிதப் பிறவி எடுத்து, மனைவியைத் துறந்து அதன் பின்னரும் நீண்ட காலம் தனிமையில் வாழக் கடவது!" என்று சபிக்கின்றார். மகாவிஷ்ணுவும், தான் ராவண சம்ஹாரத்துக்காக மனிதப் பிறவி எடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொண்டவராய், அந்தச் சாபத்தை ஏற்றுக் கொண்டார். அவர் தான் இந்தப்பிறவியில் ராமராக அவதரித்துள்ளார்.

இந்த விஷயம் துர்வாச முனிவரால் தசரதனுக்கு, வசிஷ்டரின் முன்னிலையில் சொல்லப் பட்டதாயும், ஆகவே இது இவ்வாறுதான் நடக்கும் எனத் தான் முன்பே அறிந்திருந்ததாயும், என்றாலும் இது பற்றிப் பேசக்கூடாது என்று தான் பணிக்கப் பட்டிருந்ததாயும் சுமந்திரர் வாய் மூலமாக லட்சுமணன் சீதையை வால்மீகி ஆசிரமத்தில் தன்னந்தனியே விட்டு விட்டு வரும் வழியில் அறிந்து கொள்கின்றான். யாராக இருந்தாலும் "விதி வலியது" என்பதும், முன்பிறவியின் பாவங்களுக்கு ஏற்ற தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும் என்பதையும் புரிந்து கொண்டான். என்றாலும் அவன் மனம் அமைதி அடையவில்லை. நாட்டுக்குத் திரும்பி ராமரிடம் நடந்த விபரங்களைத் தெரிவிக்கின்றான். ராமர் மன அமைதியின்றித் தவிக்கின்றார். அவர் தான் அஸ்வமேத யாகம் செய்ய நிச்சயித்துச் செய்யும் வேளையில் லவ, குசர்களால் பாடப் பட்ட ராமாயண காவியத்தை மக்களோடு மக்களாய்ச் சேர்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றார்.
**************************************************************************************
கோசல நாட்டு மன்னன் ஆன தசரதன் அயோத்தி என்னும் மாநகரைத் தலைநகராய்க் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்குக் குழந்தைகள் இல்லை. பல விதங்களிலும் சிறப்பு வாய்ந்த மன்னனுக்கு மூன்று மனைவியர் இருந்தனர். என்றாலும் மூவருக்கும் குழந்தைகள் இல்லை. நீதி தவறாத மன்னன் ஆன தசரதனின் அவையின் மந்திரிகள் நன்னடத்தை வாய்ந்தவர்களாய் இருந்ததிலும், குடிமக்கள் தெய்வ பக்தி நிரம்பி இருந்ததையும் கண்டு ஆச்சரியம் ஏதும் இல்லை அல்லவா? தன் மந்திரிகளைக் கலந்து ஆலோசித்த மன்னன் அஸ்வமேத யாகம் செய்தால் குழந்தை பிறக்கும் எனத் தெரிந்து கொண்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் வேளையில், தன் மந்திரியும், தேரோட்டியும் ஆன சுமந்திரர் மூலம் விபாண்டகரின் மகன் ஆன ரிஷ்யசிருங்கர் பற்றியும், பிறந்தது முதல் பெண்களையே அறியாத அவர் அங்க தேசத்து வறட்சியைப் போக்க அந்த தேசத்து மன்னனால் வரவழைக்கப் பட்டதையும் சொல்கின்றார். பின்னர் ரிஷ்யசிருங்கர் நாட்டுக்குள் நுழைந்ததுமே அங்க தேசம் வறட்சி நீங்கிப் பசுமை பெற்று மழை பொழியத் துவங்கினதையும், மனம் மகிழ்ந்த அங்க தேச மன்னன் தன் மகள் ஆன சாந்தையை ரிஷ்யசிருங்கருக்குத் திருமணம் செய்வித்துத் தன்னுடனேயே வைத்திருப்பதையும் சொல்கின்றார். அந்த ரிஷ்ய சிருங்கர் இங்கே வந்தால் உங்கள் கவலையைப் போக்கிக் குழந்தை வரம் பெற யோசனையும் சொல்லுவார் என்று சுமந்திரர் சொல்கின்றார். அதன் படியே ரிஷ்ய சிருங்கரை மன்னன் தசரதன் வரவழைக்கின்றார். ரிஷ்ய சிருங்கரும் அஸ்வமேத யாகம் முடிந்ததும் தசரதரைப் புத்ர காமேஷ்டி யாகம் செய்யும்படிப் பணிக்கவே, தசரதர் புத்ரகாமேஷ்டி யாகம் ரிஷ்ய சிருங்கரின் தலைமையில் செய்கின்றார்.

யாகக் குண்டத்தில் இருந்து தேவ தூதன் போன்ற ஒருவர் எழுந்து வந்து தன் கையில் வைத்திருந்த ஒரு தங்கப் பாத்திரத்தை தசரதரிடம் கொடுத்து, "மன்னா! இதில் உள்ள பாயாசத்தை உன் மனைவிமார் அருந்தச் செய்! யாகம் செய்ததின் பலனைப் பெறுவாய்!" என்று கூறி மறைகின்றான். தசரதரும் அதை வாங்கிக் கொண்டு, முதல் மனைவியான கெளசலைக்குப் பாயாசத்தில் பாதியைக் கொடுக்கின்றார். மிச்சம் இருந்த பாதியில் பாதி பாகத்தை சுமத்திரைக்கும், மிச்சம் இருந்த பாதியைக் கைகேயிக்கும் கொடுத்த பின்னரும் கொஞ்சம் மிச்சம் இருக்கவே அதை மீண்டும் சுமத்திரைக்கே கொடுக்கின்றார். கொஞ்ச நாட்களில் மூன்று மனைவியருமே கர்ப்பம் தரிக்கின்றார்கள்.
*************************************************************************************
தசரதனுக்கு அறுபதினாயிரம் மனைவிகள் என்ற ஒரு வழக்கு உண்டு. ஆனால் வால்மீகியின் ராமாயணத்தில் தசரதனுக்கு இந்த மூன்று மனைவியர் தவிர வேறு மனைவியர் இருப்பதாய் எங்குமே குறிப்பிடவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. தசரதனின் அந்தப் புரத்தில் நூற்றுக் கணக்கான பெண்கள் இருந்து வந்தார்கள் என்று சொல்லப் பட்டாலும், அவர்கள் எல்லாருமே மனைவியர் என்று எங்குமே குறிப்பிடப் படவில்லை. அந்தப் புரத்தின் வேலைகளைக் கவனிக்கும் பெண்கள், அந்தரங்கத் தாதிமார், மற்றும் தசரதனின் உறவின் முறைப் பெண்கள் என்ற அளவில் மட்டுமே குறிப்பிடப் பட்டிருக்கின்றது. மற்றபடி கம்பராமாயணத்தில் இருக்கிறதானும் பார்த்தேன், எனக்குத் தெரிந்த வரையில் அதிலும் அவ்வாறு குறிப்பிடப் படவில்லை. மேலும் ரிஷ்யசிருங்கரின் மனைவியான சாந்தை என்பவள் அங்க தேச மன்னன் ஆன ரோமபாதனின் மகள் ஆக இருக்கச் சிலர் அவளை தசரதனின் மகள் என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அதுவும் தவறு. இனி நாளை, தேவருலகில் என்ன நடந்தது என்றும் பார்க்கலாம், நாளை ஸ்ரீராமர் பிறக்கப் போகின்றார். காத்திருங்கள்.

கதை கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி - 3


தான் பெற்ற மகன்களே தன் முன்னால் வந்து தன் கதையையே சொல்லுவதை ராமர் அறிந்திருக்கவில்லை, என்பதே வால்மீகி ராமாயணத்தின் மூலம் நாம் காண்பது. கம்ப ராமாயணத்தில் கம்பர் ராமாயணம் எழுதும்போது அவரை ஒரு அவதார புருஷனாகவே நினைத்துக் கடவுளருக்குச் சமமாக மட்டுமில்லாமல் கடவுளாகவே நினைத்தும் வந்ததால் அவர் அவ்வாறு எழுதவில்லை. ஆகவே வால்மீகி ராமாயண ராமர் ஒரு சாதாரணமனிதன் போலவே தன் மனைவியிடம் கோபம் கொள்ளுவதையும், சந்தேகம் கொள்ளுவதையும், பின் நாட்டு மக்களுக்காக மனைவியைத் தியாகம் செய்வதையும் செய்ய முடிகின்றது. ஏன் தியாகம் செய்ய வேண்டும்? எல்லாரும் நினைப்பது போல் வண்ணானும், வண்ணான் மனைவியும் பேசிக் கொண்டார்கள் என்பதாலா? இல்லை, அம்மாதிரி எங்கேயும் வால்மீகி ராமாயணத்தில் காணவே முடியாது. பின் என்ன தான் நடந்தது?

ராம, ராவண யுத்தம் முடிந்து ராமர் அயோத்திக்குத் திரும்பிப் பட்டாபிஷேகம் முடிந்து நல்லாட்சி புரிந்து கொண்டிருக்கும் வேளையில் சில வருடங்களில் சீதை கருவுருகிறாள். கருவுற்றிருக்கும் மனைவியை மனமகிழ்விக்க ராமர் பலவிதங்களிலும் முயலுகின்றார். அப்போது சீதை ராமரிடம், தான் மீண்டும் காட்டுக்குப் போய்ச் சில தினங்கள் ரிஷி, முனிவர்களுடைய ஆசிரமத்தில் இருந்து வரவேண்டும் என்ற ஆசையைத் தெரிவிக்கின்றாள். மனைவியின் ஆசையைப் பூர்த்தி செய்வதாய்ச் சொல்லுகின்றார் ராமர். அப்போது நாட்டின் பல திசைகளுக்கு அவர் அனுப்பி இருந்த தூதுவர்கள் வந்திருப்பதாய்ச் செய்தி வரவும், ராமரும் அவர்களைச் சந்திக்கப் போகின்றார். அவர்களில் ஒருவன், "பத்ரன்" என்ற பெயர் கொண்டவன், மிகவும் தயக்கத்துடனும், வணக்கத்துடனும் ராமரைப் பார்த்து, "அரசே, மக்கள் உங்கள் நல்லாட்சியால் மனம் மகிழ்ந்திருந்தாலும், அரசர், மனைவியின் அழகிலும், அவளுடன் வாழ்வதிலும் உள்ள பெரிய ஆசையால், பல மாதங்கள் ராவணனிடம் சிறை இருந்த மனைவியைத் திரும்பச் சேர்த்துக் கொண்டு விட்டாரே? ராவணனைக் கடல் கடந்து சென்று கொன்று வீழ்த்திய அவரின் சாதனை, இந்தச் செயலால் மாசு பட்டுவிட்டதே? சிறை இருந்த ஒரு பெண்ணை எப்படி அவர் திரும்பச் சேர்த்துக் கொண்டு வாழலாம்? நாளை நம் மனைவிகளுக்கும் இம்மாதிரியாக நேர்ந்தால், நாமும் அவ்விதமே செய்யவேண்டும், ஏனெனில் அரசன் எவ்வழி, அவ்வழி குடிமக்கள்" எனப் பேசிக் கொள்வதாயும், மற்ற விஷயங்களில் மக்கள் பெருமளவு திருப்தியாகவே இருப்பதாயும் தெரிவிக்கிறான். மனம் நொந்த ராமர், மற்றவர்களையும் பார்த்து இது நிச்சயம் தானா எனக் கேட்க, அவர்களும் அவர்கள் சென்ற இடங்களிலும் இம்மாதிரியான பேச்சே இருப்பதாய்ச் சொல்லுகின்றனர்.

செய்வது அறியாமல் திகைத்த ராமர், தன் சகோதரர்களிடம் கலந்து ஆலோசிக்கின்றார்.சீதை அக்னிப் பிரவேசம் செய்ததையும், அவள் மாசற்றவள் என்றே தாம் நம்புவதாயும் தெரிவித்த அவர், ஆனால் இவ்வாறு ஒரு அவப் பெயர் ஏற்பட்டுவிட்டதே, எனவும் மனம் நொந்தார். ஒரு அரசனுடைய அரசாட்சியில் இவ்வாறு அவப் பெயர் யாரால் ஏற்பட்டாலும் அவன் அவர்களைத் துறக்கவேண்டியதே நியாயம். உங்களால் ஏற்பட்டிருந்தாலும் உங்களையும் நான் துறக்கவேண்டியதே! இப்போது சீதையை நான் துறக்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் பட்டிருக்கின்றேன். லக்ஷ்மணா, நீ நாளைக் காலை அரண்மனைத் தேரைத் தயார் செய்து சீதையைக் கங்கைக் கரையில் உள்ள ரிஷிகளின் ஏதாவதொரு ஆசிரமத்துக்கருகில் விட்டு விட்டு வா. என்னுடைய இந்த முடிவுக்கு மாறாக ஒருவரும் பேச வேண்டாம். அது நீங்கள் எனக்கு இழைக்கும் தீங்கு. மேலும் சீதையும் காட்டில் வாழவேண்டும் என ஆசையும் பட்டாள்" என்று ஆணையிட்டுவிட்டு, கண்ணில் பெருகும் கண்ணீரை நிறுத்த வழியில்லாமல் தனிமையை நாடிச் சென்றார். இனி தனக்கு வாழ்நாள் முழுதும் சீதை கிடைக்க மாட்டாளே என்று உணர்ந்தவர் போல்.

மறுநாள் சீதையை லட்சுமணன் கூட்டிச் செல்கின்றான். வழக்கம்போல் சுமந்திரர் தேரை ஓட்டுகின்றார். யாருக்கும் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. இதை அறியாத சீதை தன் கணவன் இவ்வளவு சீக்கிரம் தன் ஆவலைப் பூர்த்தி செய்வதை அறிந்து தான் மகிழ்ச்சி அடைவதாயும், அங்கே உள்ள ரிஷிபத்தினிகளுக்கும், ரிஷி குமாரிகளுக்கும் தான் அளிக்கப் போகும் பரிசுகள் பற்றியும் சொல்லிக் கொண்டு வருகின்றாள். கங்கைக் கரையும் வந்தது. லட்சுமணன் "ஓ"வெனக் கதறுகின்றான். சீதை சொல்கின்றாள்:"லட்சுமணா, பிரிந்து இருப்பதை நினைத்தா அழுகின்றாய்? எனக்கும் ஸ்ரீராமரைப் பிரிந்து இருப்பது வருத்தமாய்த் தான் இருக்கப் போகின்றது. ஆனால் எல்லாம் கொஞ்ச நாட்கள் தானே? ஒன்று செய்யலாம், நதியைக் கடந்து அக்கரைக்குச் சென்று, ரிஷிகளின் ஆசிரமத்தை அடைந்து அவர்களுக்குப் பரிசுகள் கொடுத்துவிட்டு ஆசிகளைப் பெற்றுக் கொண்டு உடனடியாக நான் திரும்பி விடுகின்றேன். அது வரை பொறுத்துக் கொள்!" என்று சொல்லி நதியைக் கடக்கச் சொல்கின்றாள். நதியைக் கடந்து சென்றார்கள். ராமர் இல்லாத தன் வாழ்க்கைப் பயணத்தைக் கடக்கப் போவதை அறியாத பேதை சீதையும் சந்தோஷமாய் நதியைக் கடந்தாலும், மனதில் உறுத்தலும் சில துர்ச்சகுனங்களும் அவளையும் வேதனைப் படுத்தின. லட்சுமணன் மறுகரையை அடைந்ததும் சீதையை வணங்கி, ராமர் தனக்கு இட்ட வேலையைச் சொல்கின்றான். இது எனக்கு மட்டுமில்லாமல் மற்ற தம்பிமார், மற்றும் அரண்மனையில் யாருக்கும், இன்னும் சொன்னால் ராமருக்குமே விருப்பம் இல்லாத ஒன்று என்றும் வேறு வழியில்லாமல் அரச தர்மத்த்தைக் காப்பாற்றவே இவ்வாறு செய்ய நேர்ந்தது எனவும் சொல்கின்றான். அவ்வளவில் அங்கேயே சீதையை விட்டுவிட்டு லட்சுமணன் திரும்பும்போது சீதை அவனிடம் தான் பூர்ண கர்ப்பவதியாகவே இங்கே வந்திருப்பதை நினைவில் கொள்ளவேண்டும் என்று தன் கர்ப்ப வயிற்றை அழுகையுடனேயே லட்சுமணனுக்குக் காட்டிச் சொல்கின்றாள். லட்சுமணன் வேதனையுடனேயே திரும்ப சீதை சத்தம் போட்டு அழுகின்றாள்.

அவள் அழுகுரல் கேட்டு அங்கே வரும் ரிஷிகுமாரர்களும், மற்றவர்களும் வால்மீகியிடம் போய்ச் சொல்ல அவரும் தன் மனக்கண்களால் பார்க்கக் கூடிய திறமை பெற்றவராய் இருந்தமையால் , நடந்ததை ஊகித்துச் சீதைத் தன் ஆசிரமத்தில் வைத்துப் பாதுக்காக்கின்றார். உரிய நேரத்தில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறக்க அவர்கள் இருவருக்கும் வால்மீகியே லவன், என்றும் குசன் என்று பெயர் இடுகின்றார். தன் கையில் இருந்த தர்பையை இரண்டாய்க் கிழித்து மேல்பாகத்தால் சுத்தம் செய்யப் பட்டவனைக் "குசன்" என்றும், தர்பையின் கீழ்பாகத்தால் சுத்தப் படுத்தப் பட்டவனை "லவன்" என்றும் அழைக்குமாறு கூறினார். பின்னர் அந்தப் பிள்ளைகளுக்கு அவரே குருவாக இருந்து அனைத்து வித்தைகளையும் கற்பித்தார். அந்த பிள்ளைகள் தான் தன் தகப்பனுக்கு எதிரேயே அமர்ந்து தன், தாயின், தகப்பனின் சோகக் கதையைத் தன் தகப்பனிடமே பாடிக் கொண்டிருந்தார்கள். இதில் பால காண்டமும், ராமர் ஏன் சீதையைப் பிரிய நேரிட்டது? என்பதும் நாளை பார்ப்போமா?


மேலே நாம் காணும் ஆசிரமத்தில் தான் சீதை வந்து தங்கியதாய்ச் சொல்லப் படுகின்றது. கதாசிரியையின் கருத்துப் படி, வால்மீகி ராமரை ஒரு சாதாரணமான கட்டுப்பாடுகளும், ஒழுங்கும் நிறைந்த மனிதனாக மட்டுமில்லாமல் "மனிதருள் மாணிக்கம்" ஆகவே திகழ்கின்றான். தன் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தன் காதல் மனைவியையே தியாகம் செய்கின்றான். அம்மாதிரியான சூழ்நிலைக்கு அவன் தள்ளப் படுகின்றான். முதலில் தந்தை சொல்லைக் காப்பாற்றிய ஒரு முன்மாதிரியான மகன், பின்னர் சகோதரனுக்காக நாட்டை விட்டுக் கொடுத்தவன், தன் சிறிய தாயாரின் ஆசைக்காகக் காட்டுக்கும் சென்றவன், அப்போதும் தன் மனைவியை விட்டுப் பிரியாத அன்பான கணவன், என்று இம்மாதிரியான ஒரு தேர்ந்தெடுக்கப் பட்ட முன்னுதாரணம் ஆன ஒரு அருமையான அரசாட்சியும் செய்து வந்த அரசனின் நேர்மைக்கும், திறமைக்கும் பின்னே அவனின் தனிப்பட்ட வாழ்க்கையின் உறவுகளின் அர்த்தங்கள் தான் என்ன? அதை விவரிக்கும் ஒரு கோணத்திலேயே சில காட்சிகளை வால்மீகி சித்திரித்திருப்பதாய்ச் சொல்கின்றார். இனி, நாம் நாளை முதல் காணப் போகும் பாலகாண்டத்தில் இருந்து ராமரின் குணாதிசயங்கள் மட்டுமில்லாமல், மற்றவர்களின் மேல் அவருக்கு உள்ள உறவின் வெளிப்பாடுகளையும் அதன் தாக்கத்தையும் காண்போம்.

ராமர் தன் மனைவியைப் பிரிந்ததற்குக் காரணமே அவரின் ஊழ்வினையும், விஷ்ணுவின் அவதாரமாகவே அறியப் பட்ட அவர் ஒரு கடவுளாக இருந்தாலும், தவறு செய்தால் சாபத்துக்குக் கட்டுப் பட்டவரே என்பதையுமே நாளை காணப் போகின்றோம். ஒழுக்கமும், நேர்மையும், சொன்ன சொல் தவறாமையும் உள்ள ஒரு மனிதன் தன் வாழ்நாளில் கண்ட பேரிழப்புக்களயும் அவற்றை அவன் மனத்திண்மையுடனேயே தாங்கிக் கொண்டதுமே ராமாயணத்தின் மையக் கருத்தாக அவர் சொல்கின்றார்.

Saturday, March 29, 2008

கதை கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி -2


இடம் வால்மீகி ஆசிரமம். சிந்தனையில் இருந்த வால்மீகிக்கு ராமன் இன்னும் அரசாண்டு கொண்டிருப்பதும், அவனுடைய நல்லாட்சி பற்றியும் நாரதர் எடுத்து உரைத்தது நினைவில் இருந்தது. இப்படிப் பட்ட ஒரு உயர்ந்த மனிதனின் சரித்திரத்தைத்தான் சாட்சியாகவும் இருந்து கொண்டு எழுத நேர்ந்தது பற்றி அவர் மனமகிழ்ச்சி அடைந்தார். காவியம் இயற்றத் தீர்மானம் செய்த வால்மீகிக்கு அதுவரை நடந்த நிகழ்வுகளும், பேசப் பட்ட சொற்களும், அழுத அழுகைகளும், செய்த சபதங்களும், வாங்கிய வரங்களும், நிறைவேற்றப் பட்ட பிரதிக்ஞைகளும், நடந்த நடையும், செய்த பிரயாணங்களும் மனதில் வந்து அலைகடலில், மோதும் அலைகள் போல மோத ஆரம்பித்தன. அதே சமயம் இனி என்ன நடக்கப் போகிறது, என்ற உள்ளுணர்வாலேயும் உந்தப் பட்டார். எழும்பியது ஒரு அமர காவியம்! சூரிய, சந்திரர் உள்ளவரையும், நட்சத்திரங்கள் ஜொலிக்கும் வரையும், கடல் மணல் உள்ளவரையும், இப்பூவுலகில் மக்கள் வசிக்கும் வரையும் பேசப் படப் போகும், அனைவராலும் விவாதிக்கப் படப் போகும் ஒரு மகத்தான எழுத்தாக்கம் எழும்பி நின்றது.

ஆறு காண்டங்களில், 500 சர்க்கங்கள் எனப்படும் அத்தியாயங்களில், 24,000 ஸ்லோகங்கள் எழுதப் பட்டதாய்ச் சொல்லப் படுகிறது. இனி நடக்கப் போவதை உத்தரகாண்டமாக இயற்றினார். எல்லாம் முடிந்தது. இனி மக்களுக்கு இதை எடுத்துச் சொல்லும் பேறு பெற்றவர் யார்? தகுதியான நபர்கள் யார்? சிந்தித்த வால்மீகியை வந்து வணங்கினார்கள் இரு இளைஞர்கள். லவன், குசன், என்ற பெயர் பெற்ற இரு இளைஞர்களும் வால்மீகியின் சிஷ்யர்கள் தான். என்றாலும் இந்த மகத்தான காவியத்தின் முக்கிய கதாபாத்திரங்களும் அவர்களே, ஆனாலும் அவர்கள் அதை அச்சமயம் அறியமாட்டார்கள். தங்கள் குருவை வணங்கிய இரு இளைஞர்களுக்கும், இந்த ஒப்பற்ற காவியம் கற்பிக்கப் பட்டது. பிறவியிலேயே இனிமையான குரல்வளம் பெற்றிருந்த இரு இளைஞர்களும் அந்தக் காவியத்தை தங்கள் இனிமையான குரலில் இசைக்க ஆரம்பித்தனர். ரிஷிகளும், முனிவர்களும், நல்லோரும் கூடி இருக்கும் இடங்களில் அந்தக் காவியத்தைப் பாடலாகப் பாடிக் கொண்டு இரு இளைஞர்களும் சென்ற வழியில், ஸ்ரீராமரின் அசுவமேத யாகம் நடந்து கொண்டிருந்த இடத்தை அடைந்தனர்.

யாகம் நடக்கும்போது ஏற்படும் சிறு இடைவேளைகளில் இச்சிறுவர்கள் பாடும் ராமாயணப் பாடல்களைக் கேட்டறிந்த ரிஷிகள், முனிவர்களோடு, பொது மக்களும் அந்தச் சிறுவர்களை வாழ்த்திப் பரிசுகளை அளிக்கின்றனர். செய்தி பரவி, நகரத் தெருக்களில் இருந்து, மெல்ல, மெல்ல அரண்மனையைச் சென்றடைந்தது. ஸ்ரீராமரின் செவிகளில் இந்தச் செய்தி விழுந்ததும், இளைஞர்களை அரண்மனைக்கு வரவழைக்கின்றார். இளைஞர்கள் பாட ஆரம்பித்ததும், கொஞ்சம் கொஞ்சமாகத் தன் வயம் இழந்த ஸ்ரீராமர் சிம்மாசனத்தில் இருந்து கீழே இறங்கி மற்ற சபையோர்களுடன் சேர்ந்து அமர்ந்து அந்தக் காவியத்தைக் கேட்கலானார்.

இந்த இடத்தில் துளசி ராமாயணம், மற்றச் சில ஹிந்தியில் எழுதப் பட்டிருக்கும் ராமாயணக் கதையில் லவ, குசர்கள், ஸ்ரீராமரின் அசுவமேதக் குதிரையைப் பிடித்துக் கட்டி விட்டு, அதை விடுவிக்க வந்த ராம பரிவாரங்களைத் தோற்கடித்ததாயும், பின்னர் சீதை வந்து நேரில் பார்த்துவிட்டுத் தன் பதியின் சகோதரர்களே என அறிந்து கொண்டு, லவ, குசர்களிடம் அதைத் தெரிவித்ததாயும், ஸ்ரீராமருடனேயும், லவ, குசர்கள் சண்டை போடத் தயாராக இருந்ததாயும் வரும். அதற்குப் பின்னரே அவர்கள் அசுவமேத யாகத்தில் கலந்து கொண்டு ராமாயணம் பாடச் செல்லுவார்கள். ஆனால் வால்மீகி ராமாயணத்தில் ராமரின் கடைசித் தம்பியான சத்ருக்கனன் மட்டுமே லவ, குசர்கள் பிறந்த சமயத்திலும், அதற்குப் பனிரெண்டு வருடங்கள் பின்னால் அவர்கள் ராமாயணத்தை வால்மீகி மூலம் கற்றுப் பாடிப் பயிற்சி செய்து கொண்டிருந்த போதும் வால்மீகி ஆசிரமத்தில் தற்செயலாகத் தங்குகிறான். அவன் ஒருவனுக்கு மட்டுமே ஸ்ரீராமருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்த விபரம் தெரிய வருகிறது, என்றாலும் அவன் கடைசி வரை அது பற்றிப் பேசுவதில்லை.

வால்மீகியும் ராமனை ஒரு அவதார புருஷன் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை, என்பதும் கவனிக்கத் தக்கது. ஆனால் வால்மீகி ராமனை ஒரு சாதாரண, ஆசா பாசங்கள் நிறைந்த மனிதனாய்க் காணவில்லை. கட்டுப்பாடுகள் நிறைந்த ஒழுக்க சீலன் என்றும் எண்ணவில்லை. மாறாக "மனிதருள் மாணிக்கம்" என்றும் கிடைத்தற்கரிய அரிய மனிதன் என்றும் சொல்கின்றார். ஒரு முன்மாதிரியான மகன், சகோதரன், நண்பன், கணவன், இவை எல்லாவற்றுக்கும் மேல் குடிமக்களைத் தன் மக்கள் போல் எண்ணும் ஒரு ஒப்பற்ற அரசன். தன் கடமையைச் செய்வதற்காகவும், தன் குடிமக்களைத் திருப்தி செய்வதற்காகவும் எந்த விதமான ஒப்பற்ற தியாகத்தையும் செய்யத் தயாராய் இருந்தவன், தன் அன்பு மனைவியைக் கூட. அதை நாளை காண்போமா?


பி.கு: முதன் முதல் நாரதர் வால்மீகிக்குச் சொன்ன "சம்க்ஷிப்த ராமாயணம்" தவிர, வால்மீகி எழுதிய ராமாயணத்தின் மூலம் தவிர, நாம் அறிந்தவை, கம்ப ராமாயணம் தமிழில் என்றாலும் இது தவிர, துளசி ராமாயணம், ஆனந்த ராமாயணம், அத்யாத்ம ராமாயணம், அத்புத ராமாயணம், அமல ராமாயணம், ரகு வம்சம் உட்பட பல ராமாயணங்கள் இருக்கின்றன. சங்க காலத்திலும் பழைய ராமாயணம் ஒன்று இருந்திருக்கிறது. இது தவிர, தமிழ்க்காப்பியங்கள் ஆன சிலப்பதிகாரம், மணிமேகலையும் ராமாயணம் பற்றிக் குறிப்பிடுகிறது. அருணகிரிநாதரும் தன் பங்குக்கு ஒரு ராமாயணம் எழுதி இருக்கிறார். முடிந்த வரை சில வரிகள் கம்ப ராமாயணத்தில் இருந்தும், அருணகிரிநாதரின் ராமாயணத்தில் இருந்தும் குறிப்பிடப் படும். ஆனால் கம்பரும் சரி, அருணகிரியாரும் சரி ராமரை ஒரு அவதாரமாகவே வர்ணிக்கிறார்கள். படிப்பவர்கள் அனைவரும் உங்கள் கருத்துப் படி எடுத்துக் கொள்ளலாம். கதை கதையாம் காரணமாம் என்ற தலைப்புக் கொடுத்ததுக்கும் காரணம் இருக்கிறது. காரணம் இல்லையேல் காரியம் இல்லை என்பதை நிரூபிக்கும் ராமாயணக் கதை அதை எடுத்துச் சொல்லும் என நம்புகிறேன்.

Friday, March 28, 2008

கதை கதையாம், காரணமாம்! ராமாயணம் பகுதி 1


விநாயகப் பெருமான் அருளால் இப்போது தொடங்கும் தொடர் எந்தவிதத் தடங்கலும் இல்லாமல் தொடரப் பிரார்த்திக்கிறேன்."அரியும் சிவனும் ஒண்ணு" பதிவில் குமரன், ராகவன், இ.கொ., திராச எல்லாரும் எழுதி இருக்கும் பின்னூட்டங்களுக்குப் பதிலோ, அல்லது அந்தப் பதிவின் தொடரோ இப்போது கொஞ்ச நாட்களுக்கு இல்லை. இதுவும், ஏப்ரல் 2-ம் தேதியில் இருந்து 10 அல்லது 11-ம் தேதி வரையில் போட முடியாது. அது வரை போடுவேன், வந்தப்புறம் முடிக்கணும்னு ஒரு எண்ணம், இறைவன் சித்தம் எப்படியோ அப்படி! இது பல நாட்களாய் உருப்போட்டு வைத்த ஒரு விஷயம், அனைவரும் அறிந்த ஒன்றே, என்றாலும், இது நான் படித்த ஒரு ஆங்கில மொழி பெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டே பெரும்பாலும் எழுதப் போகிறேன். அந்தப் புத்தகமும் இப்போ கைவசம் இங்கே இல்லை. ஒரு வருஷம் முன்னால் எழுதி வைத்த குறிப்புக்களின் அடிப்படையிலேயே எழுதப் போகிறேன். எழுதப் போவது ராமாயணத் தொடர். வால்மீகி ராமாயணம் தான், ஆனால் ஆர்ஷியா சத்தார் என்னும் பெண்மணி இந்தத் தொடரை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்திருக்கிறார். கிட்டத் தட்டப் பத்து வருடங்கள் இதற்காக உழைத்துவிட்டுப் பின்னரே இதில் இறங்கி இருக்கிறார். மொழி பெயர்ப்புக்கும்,மொழி மாற்றத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது என்றே நினைக்கிறேன். ஆகவே என்னைப் பொறுத்த அளவில் வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட மொழி மாற்றமே இது. ஆர்ஷியா சத்தார் பற்றிய ஒரு குறிப்பு இப்போது காணலாம்.

1960-ம் வருஷம் பிறந்த இவர் தெற்காசிய மொழிகளிலும், நாகரீகத்திலும் ஆராய்ச்சி செய்து அதற்கான முனைவர் பட்டம் ஷிகாகோ பல்கலைக் கழகத்தில் 1990-ம் ஆண்டில் பெற்றிருக்கிறார்.வடமொழி எனப்படும் சம்ஸ்கிருதத்தில் உள்ள "கதாசரிதசாகரா" மற்றும் வால்மீகி ராமாயணத்தை இவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உள்ளது குறிப்பிடத் தக்கது. பெங்குவின் பதிப்பகத்தால் வெளியிடப்ப்பட்ட இவரின் இந்த மொழிபெயர்ப்பு நூல்கள் டைம்ஸ் ஆப் இந்தியா,இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி போன்ற பத்திரிகைகளால் விமரிசிக்கப் பட்டுள்ளது. இதற்காக இவர் உழைத்திருக்கும் உழைப்புக் குறைத்து மதிப்பிடக் கூடிய ஒன்றல்ல. பழங்கால மொழியின் பேச்சு வழக்குத் தெரிந்து கொள்ள வேண்டும். நாகரீகங்கள், பழக்க வழக்கங்கள் தெரிய வேண்டும். அப்போது தான் அந்தக் குறிப்பிட்ட நூலின் உண்மையான உள் அர்த்தங்களைப் புரிந்து கொள்ள முடியும். வால்மீகி ராமாயணத்தின் மூலத்தைத் தேடி அலைந்த இவருக்குக் குஜராத்தின் எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் அதன் பிரதி ஒன்று கிடைத்தது.

தான் கேட்டு அறிந்த ராமாயணக்கதைக்கும் இந்த வால்மீகி ராமாயண மூலப்பிரதியிலும் பல வேற்றுமைகள் இருப்பதை அறிந்து கொண்டார் ஆர்ஷியா சத்தார் அவர்கள். ஆகவே மேலும் பல பிரதிகளைத் தேடி அலைந்து ஸ்ரீஹரிப்ரசாத் சாஸ்திரியின் மொழி பெயர்ப்பு, என். ரகுநாதன் அவர்களின் ராமாயணம், ராபர்ட் கோல்ட்மேன் மற்றும் அவரின் மற்ற நண்பர்களால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது, சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரின் "சக்கரவர்த்தித் திருமகன்", ஆர்.கே, நாராயணனின் ராமாயணக் கதை, பி.லால், கமலா சுப்ரமணியன், வில்லியம் பக் போன்றவர்களின் புத்தகம் போன்ற பல புத்தகங்களையும் ஆராய்ந்தார். பின்னர் வால்மீகியின் ராமாயண மூலப் பிரதியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஒரே புத்தகமாய் வந்துள்ள இது கிட்டத் தட்ட 1000 பக்கங்களுக்கு மேல் உள்ளது. சரளமான மொழிபெயர்ப்பு. கதையின் மையக் கருத்தை நன்கு உள்வாங்கிக் கொண்டு கடைசியில் கதையைப் பற்றிய தன் கருத்தையும் சொல்லி இருக்கிறார்.அது கடைசியில் வரும். இப்போது வால்மீகி பற்றிய சிறு குறிப்பு. பின்னர் ராமாயணம், வழக்கம்போல் உத்தரகாண்டத்தில் லவ, குசர்கள் சொல்லுவது போலவே தொடங்கும்.

வால்மீகி முனிவர் நாரதரால் ஆசீர்வதிக்கப் படும் முன்னர் ஒரு கொள்ளைக்காரனாய்த் திகழ்ந்தார் என அனைவருமே அறிந்திருக்கலாம். காட்டில் செல்லும் வழிப்போக்கர்களைக் கொள்ளை அடித்தும், கொன்றும் அவர்களின் பொருட்களைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த இவரை, நாரதர் ஒரு முறை சந்திக்க நேர்ந்தது. நாரதர் அவரிடம் அவர் செய்யும் கொலை,கொள்ளை போன்றவற்றைச் செய்யக் கூடாது எனப் போதிக்க இவரோ, என் பெரிய குடும்பத்தைக் காப்பாற்றவே நான் இம்மாதிரியான காரியங்களில் இறங்குகிறேன் எனச் சொல்கின்றார். நாரதர் அவரிடம் அப்போது "வலியா, நீ செய்யும் இந்த துஷ்கிருத்தியங்களின் பலனை நீ மட்டுமே அனுபவிக்க நேரிடும். எங்கே, இப்போது உன் குடும்பத்தினரிடம் சென்று இதன் துர்ப்பலன்களை அவர்கள் ஏற்றுக் கொள்ளுவார்களா எனக் கேட்டு வா!" என்று சொல்லி அனுப்ப, வலியனாக இருந்த வால்மீகியும் தன் குடும்பத்து உறுப்பினர்கள் ஒவ்வொருவராய்ச் சென்று, "என் பாவத்தை ஏற்றுக் கொள்," என வேண்டிக் கேட்க, குடும்பத்துக் கடைசி உறுப்பினர் வரை யாருமே அவர் பாவத்தை ஏற்க மறுக்கவே, மனம் வருந்திய வலியன் திரும்ப நாரதரிடம் வருகிறான். நாரதர் மூலம் அவனுக்கு வித்யை கற்றுக் கொள்ள நேர்ந்ததுடன், ஒரு முனிவராகவும் உருவெடுக்கிறான்.

ஒருநாள் அவருக்கு, "மனிதர்களில் சர்வ உத்தமனாகவும், யாராலும் போற்றப் படக் கூடியவனாகவும் யாரும் இருக்கிறார்களா? இருந்தால் அவன் யார்?" என்ற கேள்வி தோன்றியது. உடனேயே நாரதரிடம் சென்று தன் இந்தச் சந்தேகத்தைக் கேட்கிறார். நாரதரும் அவருக்கு ஸ்ரீராமரின் கதையைச் சொல்லி, இவர் தான் மனிதர்களிலேயே உத்தமரும், யாவரும் போற்றத் தக்கவரும் ஆவார்." எனச் சொல்கின்றார். பின்னர் தன் மாலைக் கடன்களில் மூழ்கிய வால்மீகி கண்களில் ஒரு வேடன் இரு கிரெளஞ்சப் பட்சிகளைத் துரத்தும் காட்சியும், வேடனால் ஒரு கிரெளஞ்சப் பட்சி அடித்து வீழ்த்தப் பட்டதையும், தப்பிய மற்றதின் அழுகுரலும் படுகிறது. வேடனைக் குறித்து அவர் கூறிய சொற்கள் ஒரு இனிமையான அதே சமயம் சோகம் ததும்பிய சந்தத்தோடு கூடிய பாடலாக அமைந்தது. திகைத்துப் போன வால்மீகி செய்வதறியாது திகைக்க அவருக்கு நாரதரும், பிரம்மாவும் ஆசி கூறி இந்தப் பாடலை முதலாக வைத்து ராமனின் கதையை பாடச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கின்றனர். இது ஒரு இதிகாசமாக இருக்கும் எனவும் சொல்லப் படுகிறது. இதிகாசம் என்றால் அதை எழுதுபவர்களும் அந்தக் குறிப்பிட்ட இதிகாசக் கதையில் ஒரு பாத்திரமாக இருப்பார்கள் என்று நம் நண்பர் திரு திராச அவர்கள் சொன்னார்கள். இந்த ராமாயணக் கதையில் வால்மீகியும் ஒரு பாத்திரமே! இனி நாளை வால்மீகி ஆசிரமம் செல்வோமா?

Thursday, March 27, 2008

மன்னியுங்கள், சூரி சார், இது என் கண்ணோட்டம்!


என் கையில் விழுந்த சாக்லேட் பதிவுக்கு சூரி சாரின் பின்னூட்டத்தின் ஒரு பகுதி கீழே கொடுத்திருக்கேன். அதற்கான பதிலைக் கொடுக்கும் முன்னர், இதைப் பற்றி என் கணவரிடம் சொன்னபோது, அவர் சொன்ன ஒரே பதில், "உனக்குச் சொல்லத் தெரியவில்லை!" என்பதே! அது தான் உண்மையோனும் தோணுது. ஏனெனில், இதற்குப் பெருமளவில் பின்னூட்டங்களை எதிர்பார்க்காவிட்டாலும், இந்த மாதிரியான ஒரு புரிதலை நிச்சயமாய் எதிர்பார்க்கவில்லை. மிஸ்டர்& மிஸஸ் எக்ஸ் படம் பார்த்திருக்கேன், ஆனால் அதுக்கும் இந்த சம்பவத்துக்கும் துளிக்கூடச் சம்மந்தமே இல்லை. ஏனெனில் இந்தக் கோணமே வேறு. அதுக்கு முன்னாலே அவரோட பின்னூட்டத்துக்கு ஒரு பதில்.

//ஒரு கணம் நினைத்துப் பார்ப்போமா ?]

இதே எழுத்துக்கள் விகடனில் ஒரு 30 வருடங்களுக்கு முன்னால் வந்து அதை நீங்கள் அல்லது த‌ங்கள் தாய் தந்தையர் படிக்க நேர்ந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்கள் ? அது இருக்கட்டும் ! இப்படிப்பட்ட ஒரு கட்டுரை அல்லது கதைதனை விகடனில் பிரசுரித்து இருப்பார்களா என்றே தோன்றுகிறது.//

தெரியலை, சார், ஆனால் நிச்சயமாய் என் கணவரோட இதைப் பத்திப் பேசி இருப்பேன் என்பது மட்டும் நிஜம். விகடன் பிரசுரித்திருக்கும் என்றே தோணுகிறது. இதை விட மோசமான கதைகள் எல்லாம் அப்போ விகடனில் வந்துட்டு இருந்தது. :((((((

//2008 ல் உங்களுக்கு " சாக்லேட் ..கையில் வந்துட்ட மாதிரி உணர்வு " ஒருவேளை

2028 அல்லது 2038 ல் ,
காட்சி காலத்துக்கேட்டவாறு மாறும்போது,
இது போன்ற வர்ணனை வரின் ? (சற்றே பாத்திரங்களை மாற்றி எழுதுங்கள் ! )//

இதைப் பற்றி முத்தமிழில் கூடப் பேசினாங்க, ஒரு பெண்ணால் இப்படிச் சொல்ல முடியுமா என்று. எத்தனை பெண்கள் அந்தக் காலம் தொட்டு, இன்று வரையிலும் சினிமா நடிகர்களைப் பற்றிப் பேசுகிறார்கள்? பேசுகிறார்கள். ஆனால் சொல்வதென்னமோ பெண்ணால் இப்படி எல்லாம் சொல்ல முடியாதுனு. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

//"..அந்தப் பெண்ணின் தெளிவான மனமும், கணவனிடம் இன்னொரு ஆணின் அழகைப் பற்றிச் சொல்லப்போவதையும், அவன் கொடுத்த சாக்லேட்டைப் பின்னர் தான் சாப்பிட வேண்டும் என வைத்திருப்பதும்....."

ஒரு வர்ணனை இப்படிப் போனால்,
எத்தனை ஆண்கள் பொறுமையுடன் கலை உணர்வுடன் இலக்கிய சுவையுடன் படிப்பார்களெனத்
தெரியவில்லை.//

இப்போதைய காலத்தில் ரசிப்பார்களா என்று தெரியலை, ஆனால் இப்போவும் பெண்கள் சினிமா நடிகர்கள் பத்தியும், தனக்கு வரவேண்டிய கணவன் எப்படி இருக்க வேண்டும் என்றும் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள். நீங்க விஜய் டிவியில் "நீயா, நானா" நிகழ்ச்சி பார்த்ததே இல்லைனு நினைக்கிறேன்.

Mr.& Mrs.X படம் பார்த்திருக்கிறீர்களா ?

படம் பார்த்திருக்கேன், சார், அந்த மாதிரியானத் தடுமாற்றம் எதுவுமே இதில் இல்லை. திரும்ப ஒருமுறை படிங்க, சார். தான் பார்த்த ஒரு பெண்ணை அவன் வர்ணிப்பதில் இருந்தே தெரியுது, அவன் எந்த விதமான வக்கிரக் கண்ணோட்டத்துடனும் பார்க்கலைனு. சங்க காலம் தொட்டிருந்தே பெண்கள் வர்ணிக்கப் பட்டே வருகிறார்கள். அபிராமி பட்டர் சொல்லாததா? நான் நியாயப்படுத்த வில்லை, ஆனால் என்னோட கோணத்தை மட்டுமே சொல்கிறேன். ஒவ்வொருத்தருக்கும் மாறுபடலாம், என்றாலும் தமிழில் மட்டுமில்லை, சம்ஸ்கிருதம், ஆங்கிலம், என்று எல்லா மொழிகளிலும். காளிதாசன் சாகுந்தலத்தில் சகுந்தலையை வர்ணிக்கிறது படிச்சிருப்பீங்க. இங்கே அப்படி எதுவும் இல்லையே? ஒண்ணும் வேணாம், பாரதியை எடுத்துக்குங்க, அவர் சொல்லலையா? கண்ணம்மாவின் அங்க வர்ணனையில் சொல்றார் பாருங்க:

"எங்கள் கண்ணம்மா எழில் மின்னலை நேர்க்கும்
எங்கள் கண்ணம்மா புருவங்கள் மதன் விற்கள்
திங்களை மூடிய பாம்பினைப் போலவே
மங்களவாக்கு நித்யானந்த ஊற்று
மதுர வாய் அமிர்தம் இதழமிர்தம்
சங்கீதமென்குரல் ஸரஸ்வதி வீணை
சாயல் அரம்பை: சதுர் அயிராணி

இங்கித நாத நிலயம் இரு செவி
சங்கு நிகர்த்த கண்டம் அமிர்த சங்கம்
மங்களக் கைகள் மஹா சக்தி வாஹம்
வயிறு ஆலிலை இடை அமிர்தவிடு

சங்கரனைத் தாங்கு நந்தி பத சதுரம்
தாமரை இரு தாள்: லக்ஷ்மி பீடம்
பொங்கித் ததும்பித் திசை எங்கும் பாயும்
புத்தன்பும் ஞானமும் மெய்த்திருக்கோலம்"

இது பாரதியின் வரிகள். அந்தப் பையன் மட்டும் கவிஞனாய் இருந்திருந்தால் கிட்டத் தட்ட இப்படித் தான் சொல்லி இருப்பானோ என்னமோ? ஏனெனில் அவன் பார்த்ததும், பார்த்து மகிழ்ந்ததும் அப்படியான தெய்வீக அழகே. செளந்தரிய லஹரியில் ஆதிசங்கரர் சொல்லாத வர்ணனையா? அதுவும் என்ன சொல்றான், "அம்மன் கோயிலில் இருந்து அப்படியே பெயர்த்து எடுத்து வந்து," என்று ஆரம்பித்துக் கண், மூக்கு என்று சொல்கிறான். உண்மையாச் சொல்லப் போனால் எனக்கு எங்க ஊர் சர்வாங்க சுந்தரி தான் நினைவில் வந்தாள். அத்தனை உயரம், எடுப்பான தோற்றம், எந்தப் புடவை கட்டினாலும் நேரே நின்று பேசுகிறாப்போலவே இருப்பாள்.
இன்னும் சொல்கிறான், "அப்படியே கை எடுத்துக் கும்பிடணும் போல இருந்தது" என்று. இது ஒண்ணே போதாது? அப்புறமா வருது பாருங்க, "தொப்புனு, தண்ணிக்குள்ளே விழுந்து, விரால் அடிச்சுப் போய்ப் பறிச்சுட்டு வந்த தாமரைப் பூ"னு. தாமரைப் பூவே பூஜைக்கு மட்டுமே உரியது. ஏன் வேறே பூவை அவன் சொல்லவில்லை? தாமரைப் பூவை எந்தப் பெண்ணாவது சூடிக் கொள்கிறாளா? அவனோட இந்த உணர்வை அவள் புரிந்து கொண்டு தான் சாக்லேட் கொடுத்திருக்கிறாள். காசியில் அன்னபூர்ணி கோயிலில் அன்னபூரணி லட்டுத் தேரில் வருவதோடு அல்லாமல், பிரசாதமும் லட்டுத் தான். அதே போல ஹொரநாடு அன்னபூரணி கோயிலிலும் லட்டுத் தான் பிரசாதம். இங்கே சாக்லேட் கிடைத்திருக்கிறது. அவ்வளவு தான். அவன் மனைவியோடும் அவனுக்கு அந்தரங்கமான நட்பும், புரிதலும் இருப்பதாலேயே மனைவியிடமும் இதைப் பற்றித் தயக்கம் இல்லாமல் சொல்லவும் முடிகிறது. இது ஒரு தெய்வீகமான உணர்வு என்றநிலையிலேயே நான் இதைப் பார்த்தேன், பார்ப்பேன், பார்த்துக் கொண்டும் இருக்கிறேன்.

இதுக்கு மேலே சொல்ல ஒண்ணும் இல்லை. :(

Monday, March 24, 2008

என் கையில் விழுந்த சாக்லேட்!

இந்த வார ஆனந்த விகடனில் "வண்ணதாசன்" எழுதும் "அகம், புறம்" அனுபவக் கட்டுரைத் தொடரில் நான் ரசித்த பகுதியை இங்கே போடுகிறேன்.

"பெயரை அறிவது ஒரு நெருக்கம் உண்டாக்குகிறது அல்லவா? அந்த உணர்வுடன் தான் சேர்ந்த வேலை, இப்போது செய்கிற வேலை, சம்பளம், குழந்தைகள் பற்றி எல்லாம் அந்தப் பெண் சொல்லிப் பகிர்ந்திருக்கிறார். "ஒரு தோழமை நிரம்பிய பெண்ணின் பெயரை அறிவதற்கு எனக்கு இருபது வருடங்கள் ஆகியிருக்கின்றன" என்று அந்த நண்பர் சொல்லும்போதே, இத்தனை வருடங்களிலும் பெயர் அறியாஹ முகங்களின் அணிவகுப்பு துவங்கியதைத் தடுக்க முடியவில்லை. மஜீத்கள், சுஹ்ராக்கள் இளம்பருவத் தோழியை பஷீர் எழுதியது போல, முதிர் பருவத்துத் தோழி பற்றி யார் எழுதப் போகிறார்கள்? முதிர்பருவத்துத் தோழியே எழுதப் படாதபோது, முதிர் பருவத் தோழன் பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியாது!

"உங்க கிட்டே இதைச் சொல்லணும், அத்தான்!" அலுவலகத்திலிருந்து வீட்டுக்குப் போகிர பாதையில் வந்திருப்பான் போல, கையில் பை இருந்தது. ஆர்.ஷண்முகசுந்தரத்தின் "நாகம்மாள்" புத்தகம் பக்கவாட்டில் எட்டிப் பார்த்தது. ஒரு முழுவேலை நாளின் எந்த அலுப்பும் இல்லாமல், முகம் பளிச்சென்று இருந்தது, "சொல்லு மாப்பிளே!" என்று நான் உட்காரச் சொல்கையில், முகம் இன்னும் கொஞ்சம் மலர்ந்தது. கொடியில் காயப் போட்டிருக்கிற சிவப்புச் சேலையில், இதுவரை மங்கியிருந்த வெயில், இரண்டு நிமிடங்கள் தீப்பிடித்த மாதிரி பிரகாசிக்கும்போது இப்படித் தான் இருக்கும்.

உடனே சொல்ல ஆரம்பிக்கவில்லை. இந்த வீட்டை இப்போது தான் முதலில் பார்க்கிறமாதிரி கொஞ்ச நேரம் இருந்தான். வாரப் பத்திரிகையை எடுத்து விசிறிப் புரட்டாலாகத் திருப்பிவிட்டு வைத்தான். உட்கார்ந்திருந்த சோபாவில் மிச்சம் கிடந்த காலியிடத்தைத் தடவிக் கொடுத்தான். மறுபடி சிரித்தான்.டக்கென்று "ஒண்ணுமில்லை அத்தான், நகைக்கடன் வாங்குறதுக்கு ஒரு புள்ளை வந்திருந்தது. உடனே நீங்க ஒண்ணும் யோசிச்சிராதீங்க, கல்யாணம் ஆகிக் கைப்பிள்ளை இருக்கு" என்று மேற்கொண்டு சிரித்தான்.

அந்தப்பெண் கன்னங்கரேர் என்ரு ஒரு சிலை மாதிரி இருந்தாளாம். அம்மன் கோயிலில் இருந்து அப்படியே பெயர்த்து எடுத்து வந்து, இப்படி நடு ஹாலில் காஷ் கவுண்டருக்கு முன்னால் நிறுத்தி வைத்தது போலவாம்! மூக்கு அப்படியாம்! கண் அப்படியாம்! பல் அப்படியாம்! சிரிப்பைப் பற்றிச் சொல்லவே முடியாதாம்! அப்படியே "கை எடுத்துக் கும்பிடணும்போலே" இருந்தாளாம்! இத்தனைக்கும் படிப்பு, நாகரிகம் எதுவும் இல்லையாம்!"தொப்"னு தண்ணிக்குள்ளே விழுந்து, விரலால் அடிச்சுப் போய் பறிச்சுட்டு வந்த தாமரைப் பூ மாதிரினு வச்சுகிடுங்களேன்" என்று அவன் சொல்லச் சொல்ல நான் எனக்குத் தெரிந்த முகங்களின் கற்பனையில் இருந்தேன். உலகமே அப்படித் தானே!

ஒருத்தர் வைத்த புள்ளிக்கு இன்னொருத்தர் போடுகிற கோலம் வேறு அல்லவா? நான் வரைந்த ஊஞ்சல் ஆடும் பெண்ணை, நீங்கள் பார்க்கும்போது ஆடுவது உங்களுக்கு நெருக்கமான பெண்தானே?

"அது அழகா இருக்கிறது எல்லாம் முக்கியமில்லை அத்தான்!"யம்மா! நீ ரொம்ப அழகா இருக்கே தாயி!"ன்னு அதைக் கூப்பிட்டு ஒரு வார்த்தை சொல்லணும்னு எனக்குத் தோணினதுதான் ஆச்சரியம்!"

"சொல்லிட்டியா?"

"சொல்லிட்டேன்!"

"அடிகிடி, விழுந்ததா?"

"நான் சொன்னவுடனே அது முகத்திலே வெட்கத்தைப் பார்க்கணுமே!" கிட்டத் தட்ட அந்தப் பெண் வெட்கப் பட்ட விதத்தை அவன் நடித்தே காண்பித்து விட்டான்.

"அது வெட்கமா? மாப்பிளே! சந்தோஷம்! நீ சொன்னது, அது அதைக் கேட்டுக்கிட்டது இரண்டையுமே நம்ப முடியல்லே!" நான் சொல்ல, அவன் தங்கத் தாள் சுற்றின அந்தச் சாக்லேட் பட்டியை என் முன்னே நீட்டினான். "இதை நம்புகிறீர்களா? அது கொடுத்துட்டுப் போச்சு!" என்று என்னைப் பார்த்தான்.

"சாப்பிடாமல் அப்படியே வச்சுகிடப் போறியா?"

"யார் சொன்னா? உங்க கிட்டே சொன்ன மாதிரி எல்லாக் கதைகளையும், ஹரி அம்மா கிட்டே சொல்லிட்டு, அப்புறம் அல்லவா முடிவு பண்ணணும்? அதைச் சாப்பிடுறதா, வச்சிருக்கறதா என்று!"

சாக்லேட் பட்டி அவனுடைய உள்ளங்கையை நிரப்பியிருந்தது. நான் என்னுடைய கையைப் பார்த்துக் கொண்டேன்.

எல்லோர் கையிலும் இப்படி ஒன்றை வைத்துக் கொள்ள முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!"

வண்ணதாசனின் எழுத்தின் ஒரு பகுதி, எனக்குப் பிடிச்ச இடத்தை மட்டுமே கொடுத்திருக்கேன். ஸ்கான் பண்ணிப் போடவேண்டாம்னு முடிவெடுத்ததுக்குக் காரணமே, மீண்டும் ஒரு முறை படிக்கிற ஆசையில் தான். அந்த இளைஞனின் தெளிவான மனமும், மனைவியிடம் இன்னொரு பெண்ணின் அழகைப் பற்றிச் சொல்லப் போவதையும், அவள் கொடுத்த சாக்லேட்டைப் பின்னர் தான் சாப்பிட வேண்டும் என வைத்திருப்பதும், எழுத்தில் அந்த உணர்வுகளை வண்ணதாசன் வடித்திருப்பதும்

சாக்லேட் என் கையிலேயே வந்துட்ட மாதிரி உணர்வு!

டாமும் ஜெர்ரியும் நண்பர்கள் ஆகிட்டாங்களே! :P


நம்ப முடியாத அதிசயம் ஏதாவது ஒண்ணு உண்டென்றால் அது கே ஆர் எஸ் நிகழ்த்திக் காட்டி இருப்பது தான். கேஆரெஸ் பதிவுகளிலே வைணவம் சற்றுத் தூக்கலாய் இருக்குனு யார் சொன்னாங்களோ தெரியலை, (நான் சொல்லலைப்பா, அந்தச் சமயம் பார்த்து எனக்கு ஏதாவது பிரச்னை வந்து இணையத்துப் பக்கமே வந்திருக்க மாட்டேன்! :) எல்லாம் முடிஞ்சப்புறம் தான் எட்டிப் பார்க்கவே முடியும்!) அது போல இப்போவும் நடந்திருக்கு. எனக்கு குமரன் ஒரு பக்கம் கேஆர் எஸ் சார்பிலே மெயில், கே ஆர் எஸ்ஸே ஒரு தனி மெயில்னு மெயிலுக்கு மேலே மெயில், நானோ, என் பாட்டுக்கு இந்த மழை பெய்யறதாலே சுண்டைக்காயை எப்படிக் காய வச்சு எடுக்கிறதுனு கவலைப்பட்டுட்டு, தொலைக்காட்சியிலே திரைப்படங்களுக்கு மேலே திரைப்படமாப் பார்த்து மனசை ஆறுதல் படுத்திட்டு இருந்தேன். ஆனால் நடந்திருக்கு பாருங்க, ஒரு நடக்கக் கூடாத விஷயம், சென்னையிலே இந்தக் காலமில்லாத காலத்திலே மழை பெய்யறதுக்கே அது தான் காரணம்னு அப்புறமாத் தான் புரிஞ்சது.

கிட்டத் தட்ட நாலு நாள் கழிச்சு சனிக்கிழமை சாயங்காலத்துக்கு மேலே தான் இணையத்திலேயே உட்கார்ந்தேன். கே ஆர் எஸ் மெயிலைப் பார்த்துட்டு அவரோட பதிவுக்குப் போய்ப் பார்த்தா என்ன ஆச்சரியம்? அங்கே என் சார்பில் இருவர் வாதாடி இருந்தார்கள். ஒருத்தர் திவா. இன்னொருத்தர் அம்பி. திவா வாதாடியது ஒண்ணும் ஆச்சரியம் இல்லை. ஆனால் அம்பி வரிஞ்சு கட்டிட்டுக் கிளம்பி வாதாடியது தான் எனக்கு இன்னும் ஆச்சரியம் அடங்கவே இல்லை. ஒரு வேளை ஏதாவது தப்பாப் படிச்சுட்டேனோன்னு கூடச் சந்தேகம். ஆனால் அப்படி இல்லைனு புரிஞ்சது. கே ஆர் எஸ், சைவமும், வைணவமும் இணையுதோ இல்லையோ, உங்க பதிவுகள் வைணவத்தை மட்டுமே ஆதரிக்கிறதுனு சொல்றோமோ இல்லையோ தெரியலை, உங்களை அறியாமல் அம்பியை எனக்குச் சப்போர்ட் பண்ண வைத்து விட்டீர்கள். நடக்கவே முடியாத ஒன்று நடந்து விட்டது. டாமும், ஜெர்ரியும் இப்போ நண்பர்கள்! இது போதாது உங்களுக்கு? இனி கே ஆர் எஸ்ஸின் கேள்விகள் என்னைப் பார்த்துக் கேட்டது.

//கீதாம்மா-அவங்க ஊர் பெருமாள் கோயில் பற்றிச் சொன்னாலும், சிதம்பரநாதன் அழகை நிறைய அள்ளிக் கொட்டுவாங்க-யாரும் கேட்பதில்லை//

நிச்சயமா எங்க ஊர்ப் பெருமாள் கோயில் பத்தி நிறையவே எழுதி இருக்கேன், நீங்க படிச்சது இப்போ சமீபத்தில் எழுதியது மட்டுமே. அதுவும் தவிர அந்தப் பெருமாள் கோயிலுக்குப் பரம்பரை அறங்காவலர்களே எங்க குடும்பம் தான். நான் கல்யாணம் ஆகிவந்து 5,6 வருஷங்களுக்குப் பின்னரே அரசு அறங்காவலர் கையில் ஒப்படைக்கப் பட்டது. இது மட்டுமில்லாமல், திருநரையூர் எனப்படும் நாச்சியார் கோயில் பெருமாள் கோயிலும், உப்பிலியப்பன் கோயிலிலும் அறங்காவலர்களாக என் மாமனார் குடும்பத்தினரே பல வருஷங்கள் இருந்திருக்கிறார்கள். எந்தச் சிவன் கோயிலும் இல்லை என்பதே நிஜம்! எனக்கும் ஸ்ரீரங்கம் கோயில் பத்தி எழுதத் தான் ஆசை. ஆனால் பெருமாளைப் பார்க்கிறதே குதிரைக் கொம்பாக இருக்கே? பணம் கொடுத்தாலும் வரிசை நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்டு வருது. பணம் கொடுக்கலைனாலோ பிரகாரத்தில் நின்னால் எப்போ தரிசனம்னு சொல்லவே முடியலை. கோயிலில் ஒரு சிற்பத்தையோ, சிலையையோ நின்னு தரிசிக்கவும் முடியலை. கூட்டம் அள்ளுது! மதுரை மீனாட்சி கோயிலில் அதுக்கு மேலே. நான் மதுரையிலே பிறந்தேன்னு எனக்கு மீனாட்சி எங்கே தரிசனம் கொடுத்தாள், இந்த முறை டிசம்பரில் ஸ்ரீரங்கத்து அண்ணனும் சரி, மதுரையின் தங்கையும் சரி முறைச்சுக்கிட்டதிலே இன்னும் மனசு வலிக்குது!

//இவிங்க எல்லாரும் என் இனிய நண்பர்கள்!
இவிங்க எத்தினி பேரு ஆழ்வாரை எழுதினார்கள்? எத்தினி பேரு திவ்யதேசங்களைச் சொன்னார்கள்?
சதவிதம் மூனுக்கும் கீழே????//

அட, ஆழ்வார்கள் பத்தி நிறையப் படிச்சிருந்தாலும், தவறு நேரிடக் கூடாது என்பதாலேயே எழுதுவதில்லை. திவ்யதேசங்கள் என்ன, நவதிருப்பதி பத்தியும் எழுதணும்னு தான் ஆசை. ஆனால் நேரம் இல்லையே? ஏற்கெனவே செய்துகொண்ட வேலைகளை முடிக்காமல் ஆச்சு, போச்சுனு எழுத முடியுமா என்ன? தவிர எல்லாத் திவ்ய தேசங்களுக்கும் போனதில்லை. உடனேயே பெருமாளிடம் பக்தி இல்லைனு நினைச்சுக்காதீங்க. முக்திநாத் போயிட்டு வந்து அது பத்தி எழுதி இருக்கேனே? படிக்கலை? பத்ரிநாத் போயிட்டு வந்திருக்கேன், ஆனால் எழுதலை, துவாரகை பத்தி எழுதலை, எப்போவோ போனது அங்கே எல்லாம் அதனால் எழுதலை, சமீபத்தில் போயிட்டு வந்த உடுப்பி பத்தி எழுதினேனே பார்க்கக் கூடாது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

இப்போ அம்பி கிட்டே போகலாமா? அம்பி என்ன சொல்றார்னா,

//கீதா மேடம் கை வைக்காத தெய்வங்களே இல்லை, நவராத்திரினா அம்மனை கூப்டு சுண்டல் குடுக்கறாங்க,
ஆடி மாதமானா கூழ் ஊத்தி வேப்பிலை எடுத்து ஆடறாங்க. சிவராத்ரினா பதிவு போட்டு கைலாசத்தை கலங்கடிக்கறாங்க, பிள்ளையார் சதுர்த்தினா வேகாத கொழுகட்டைய போட்டோவா போட்டு பதிவு போடறாங்க,
அட கூடாரவல்லிக்கு பதிவு போட்டாங்கய்யா அவங்க!

(மேடம், சைடு கேப்புல கிடா வெட்டி இருக்கேன், இப்போதைக்கு கண்டுகாதீங்க என்ன?) :p//

ஆமாம், எனக்கு எல்லாத் தெய்வத்தையும் பத்தி எழுத இஷ்டம் தான் எழுதறேன், இல்லைனு சொல்லலை, அதுக்காகச் சுண்டலுக்கு எல்லாம் அலையாதீங்க, உங்களுக்குத் தனியா பாகல் விதைச் சுண்டல் மட்டுமே வழங்கப் படும்! நறநறநறநற

ஆடிக் கூழா, பாயாசமே ஊத்தறேன், ஆனால் உங்களுக்கு இல்லை, வேப்பிலையை அரைச்சு வச்சது தான் உங்களுக்கு. சிவராத்திரிக்குப் பதிவு போடாமல் உங்களை மாதிரி திரைப்படம் அதுவும் தங்கமணிக்குத் தெரியாமல் பார்த்துட்டு, "அசின், நமீதா"னு ஜொள்ளறீங்களே? அது பாவம் இல்லை? :P க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

வேகாத கொழுக்கட்டையா? இருங்க வரேன், வெறும் மாவு கூடக் கண்ணிலே காட்டப் போறதில்லை உங்களுக்கு, வந்தா இருக்கு இங்கே, விளக்கெண்ணெய்க் கேசரி, கத்திரிக்காய் மாலை எல்லாம், தயாரா இருங்க! :P கூடாரவல்லி அக்கார வடிசல் கூட உங்களுக்கு இல்லை, நீங்க வழிய அசடை ஏற்கெனவே பங்களூரில் பார்த்தாச்சு! கணேசன் ஒருத்தன் மாட்டிட்டு முழிக்கிறானே பத்தாது! சைடு காப்பிலே நீங்க கடா வெட்டுங்க, உங்க வழக்கம், ஆனால் நான் சைகிள் காப்பிலே சாண்ட்ரோவோ ஓட்டுவேன்னு கே ஆர் எஸ்ஸே சொல்லி இருக்காரே?

இப்போ கொஞ்சம் சீரியஸ்:
கண்ணபிரான், உங்க இஷ்ட தெய்வத்தைப் பத்தி எழுதாமே வேறே எதைப் பத்தி எழுதுவீங்க?
மேலும் எல்லாரும் ஒரே மாதிரி எழுதினாலும் படிக்கிறவங்களுக்கும் எரிச்சலா வராது? எனக்குப் பிள்ளையார் தான் இஷ்ட தெய்வம், ஆனால் பிள்ளையார் பத்தி மட்டுமே எழுத முடியுமா என்ன? எல்லாக் கடவுள்கள் பத்தியும் தான் எழுதணும். ஆனால் கொஞ்சம் லாஜிகலாயும் இருக்கணும் இல்லையா? அதனாலேயே சிலவற்றை நான் தவிர்க்கிறேன். மேலும் ராகவேந்திரர் பத்தியும், மந்திராலயம் பத்தியும், நவபிருந்தாவனம் பத்தியும் எழுதத் தகவல் சேமித்து வைத்திருக்கிறேன், நேரப் பற்றாக்குறை, வீட்டில் வேலை அதிகம், கணினி பிரச்னைனு இப்போ ஒரு 4 மாசமா சரியா எழுத முடியலை! உங்க கருத்தை நீங்க எழுதுங்க, எங்க கருத்தை நாங்க முன் வைக்கிறோம், இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகாதீங்க! உங்கள் வசதியைப் பொறுத்துச் சந்திக்கலாம்.

Sunday, March 23, 2008

தமிழ் "பிரவாகம்" குழுமத்தின் போட்டி பற்றிய ஒரு அறிவிப்பு!

அன்புடன் நண்பர்களுக்கு!

வணக்கம்!

ஆங்கில மொழியின் ஆதிக்கத்தில் இருந்த இணையத் தளத்தில் தமிழ் மொழியின் பங்களிப்பை பெருக்குவதில் தமிழ் குழுமங்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன என்றால் மிகையாகாது. தமிழ் மொழியை சுவாசிக்கும் அத்தனை இதயங்களுக்கும் இக் குழுமங்கள் இலக்கியத்தையும் , இலக்கணத்தையும், வரலாற்றையும், அன்றாட உலக நடப்புகளையும் அலசும் கருத்துக் களமாக விளங்குவதோடு நல்ல பல நட்புகளையும் வழங்கி இருக்கின்றது. இலைமறை காயாக இருக்கும் பல படைப்பாளிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வர இணையத் தளமும் , வலைப்பூக்களும் , தமிழ் குழுமங்களும் பெரிதும் உதவி வருவது ஆத்ம திருப்தியை தரும் விசயமாக இருந்து வருகிறது. இத்தனை பெருவெள்ளமாக இலக்கியப் பெருக்கும், கருத்துக் களமுமாக தமிழ் குழுமங்கள் வளர்ந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் அதில் ஒரு துளியாக, சிறு தளமாக எமது தமிழ் பிரவாகம் உருவாகி வருவது குறித்து நாம் மிகவும் பெருமையடைகின்றோம்.

தமிழ் பிரவாகத்தின் அன்புக்குரிய உறுப்பினர்களுக்கும் , எமது குழுமத்தின் வளர்சியிலும் நலனிலும் அக்கறை கொண்டு பின் புலத்தில் எமக்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருந்து வரும் நல் இதயங்களுக்கும் இந்த வேளையில் எமது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிக்க விழைகிறோம்.

வரும் மே மாதம் 1ம் திகதி தனது முதலாம் ஆண்டு பூர்த்தியை தமிழ் பிரவாகம் மிகச் சிறப்பாக கொண்டாடும் இலக்குடன் வலை உலகில் இலக்கிய ஆர்வத்துடன் இருக்கும் சகலரும் பங்கேற்கும் வண்ணம் இலக்கியப் போட்டிகளை நடத்த திட்டமுள்ளது. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுகள் வரும் ஜூலை மாதம் நடை பெறவிருக்கும் முத்தமிழ்- பிரவாக நண்பர்களின் சந்திப்பில் வழங்கப் படும்.

போட்டிகளின் விபரங்கள் வருமாறு:

இலக்கியப் போட்டிகள்

சிறுகதை
கவிதை
கட்டுரை
நகைச்சுவை துணுக்கு ஆகிய பிரிவுகளில் நடாத்தப்படும்.

ஒருவர் எத்தனை போட்டிகளிலும் பங்கு பெறலாம். ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு ஆக்கம் மட்டுமே அனுப்பலாம்.
ஒவ்வொரு ஆக்கமும் உங்கள் சொந்தக் கற்பனையில் படைக்கப்பட்டதாய் இருக்க வேண்டும்;
வேறெந்த ஊடகங்களிலும் பிரசுரமாகாத படைப்புகளாக இருக்க வேண்டும்.
மொழிபெயர்ப்பு படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா.
ஆபாசம் அல்லது தனி மனிதக் கீறல் இருப்பதாகக் கருதப்படும் எந்த ஆக்கமும் போட்டியிலிருந்து நீக்கப்படும் அதிகாரம் நடுவர்களுக்கு வழங்கப்படும்.

போட்டிகளுக்கான ஆக்கங்கள் நம்மை வந்தடைய வேண்டிய கடைசி திகதி 2008 ம் ஆண்டு மே 31ம் திகதி.

சிறுகதை & கட்டுரை போட்டிகளின் பரிசு விபரங்கள்:

1வது பரிசு - 2500.00 பெறுமதியான புத்தகங்களும், 2500.00 இந்திய ரூபாயும் வழங்கப்படும்.
2 வது பரிசு- 1250.00 பெறுமதியான புத்தகங்களும் 1250.00 இந்திய ரூபாயும் வழங்கப்படும்.

பரிசு பெறும் ஒவ்வொரு ஆக்கமும் தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு மலரிலும், குழுமத்திலும் பிரசுரமாகும். மற்றைய ஆக்கங்கள் தமிழ் பிரவாகக் குழுமத்தில் பிரசுரமாகும்.

சிறுகதை:


ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.
எத்தகைய கருவையும் பின்னணியாகக் கொண்டு கதை புனையப்படலாம்.

ஒருவர் ஒரு சிறுகதை ஆக்கம் மட்டுமே அனுப்பலாம்.

சிறுகதை 7 பக்கங்களிலிருந்து 10 பக்கங்களுக்குள் இருக்க வேண்டும். (A4 அளவு தாள்களே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது)

நடுவர்களின் முடிவே இறுதியானது.
கட்டுரை:

ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.
கட்டுரைகள் இங்கு தரப்பட்டிருக்கும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து ஒருவர் ஒரு கட்டுரை மட்டும் எழுதலாம்.
ஒவ்வொரு கட்டுரையும் 1000 சொற்களுக்கு மேற்படாதவையாக இருக்க வேண்டும்.
கட்டுரைகளுக்கான தலைப்புகள் :

பெண்ணியம்.

உலக அரங்கில் புலம் பெயர்ந்த தமிழர்களின் இன்றைய நிலை.

தமிழ் கலாச்சாரமும் , இந்துசமயத்தின் ஆதிக்கமும்.

உலக அரங்கில் இந்தியா வல்லரசாகக் கணிக்கப்டுகிறாதா இல்லையா?

ஈழத்தமிழரும் , இந்திய அரசியலும்.

அரசியலில் பொது மக்களின் பங்கு.

இன்றைய இளைஞர்களின் வளர்ச்சி ஆக்கபூர்வமான பாதை நோக்கியா? அழிவுப்பாதையை நோக்கியா?

இன்றைய சூழ்நிலையில் பணத்தின் ஆதிக்கத்தில் பாசம் மறைந்துவிட்டதா? இல்லையா?'

மெல்லத் தமிழினி....வாழும்?வீழும்?

கடவுள் பக்தியா , சுய கட்டுப்பாடா மனிதனை செம்மைப்படுத்தவல்லது?

தியானம் என்பது....!

நகைச்சுவைத் துணுக்கு:

ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.
ஒருவர் ஆகக் குறைந்தது ஐந்து துணுக்குகளை ஒரே தாளில் அனுப்பலாம். ஆனால் சிறந்த துணுக்காக 3 துணுக்குகளே தேர்வு செய்யப்படும். ஒவ்வொரு துணுக்கும் பரிசாக தலா 500.00 இந்திய ரூபாய்கள் வழங்கப்படும்.


கவிதை:

கவிதைப் போட்டி 2 பிரிவுகளில் நடத்தப்படும்.

மரபுக் கவிதை.
புதுக்கவிதை
ஒவ்வொரு பிரிவிலும்

ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.
இரண்டு பக்கங்களுக்குள் கவிதை இருக்க வேண்டும். (A4 அளவு தாள்களே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது)


1வது பரிசு 1500.00 ரூபா பெறுமதியான புத்தகங்களும் 1500.00 இந்திய ரூபாயும் வழங்கப்படும்.
2வது பரிசு 1000.00 ரூபா பெறுமதியான புத்தகங்களும் 1000 .00இந்திய ரூபாயும் வழங்கப்படும்.
தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு இலக்கியப் போட்டியில் யாரும் கலந்து கொள்ளலாம். பரிசு பெறும் ஆக்கங்கள் ஆண்டு மலரிலும் , தமிழ் பிரவாகக் குழுமத்திலும் பிரசுரிக்கப்படும். மற்றைய ஆக்கங்கள் தமிழ் பிரவாகக் குழுமத்து இழைகளாகப் பிரசுரிக்கப்பட்டு உறுப்பினர்களின் கருத்துப் பகிர்வுகளுக்கு சமர்பிக்கப்படும்.

எந்தவொரு ஆக்கமும் தனிமடலில் thamizmakal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும். போட்டி சம்மந்தமான மேலதிக விபரங்களுக்கும் இதே மின்னஞ்சல் மூலமே தொடர்பு கொள்ளவும். Subject பகுதியில் தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு இலக்கியப் போட்டிகள்- 2008 என்று குறிப்பிடவும்.

இணையத் தளத்தில் எழுதிவரும் அத்தனை அன்புள்ளங்களும் இவ் அறிவித்தலை ஏற்று பங்குபெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுவதோடு ஆர்வமுள்ள படைப்பாளிகள் , இணையத்தள அனுபவமில்லாத ஆனால் எழுத்துத் திறமையுடைய உங்கள் நண்பர்களுக்கும் தெரிவிக்குமாறும் பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

*படைப்புகள் கட்டாயமாக யுனிகோடு முறையிலான ஈ-கலப்பை
தமிழ் உருவிலே தட்டச்சுப் பெற்றிருக்க வேண்டும் என்பது மிக
முக்கியம்.

இந்த இலக்கியப் போட்டிகளை அனைவரும் அறிந்துகொள்ள உதவியாக குழும உறுப்பினர்களும், நண்பர்களும் இவ் இலக்கியப் போட்டி அறிவித்தலை தத்தமது வலைப்பூக்களிலும் , வலைத்தளத்திலும் பிரசுரிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
நன்றி !
வணக்கம்!!

பிரவாகம் குழுவின் சார்பில் சகோதரி சுவாதிக்காக இதை வெளியிட்டுள்ளேன்.

Saturday, March 22, 2008

மழை கொட்டு கொட்டுனு கொட்டுது பாரு இங்கே!

மூன்று நாட்களாய் மழை வெளுத்து வாங்குது சென்னையிலே. கணினியும் புதுப் பிறவி எடுக்கிறதுக்காகப் போயிருந்தது. புத்தகங்கள், டிவியிலே சினிமானு பொழுது போக்க வேண்டியதா ஆயிடுச்சு. புத்தகங்கள் நிறையவே படிச்சேன், எப்போவும்போல். கணினி இருந்தாலும் புத்தகம் படிக்க நேரம் ஒதுக்கிற மாதிரி டிவிக்கு நேரம் ஒதுக்க முடியறதில்லை. இப்போ வெளியேயும் போக முடியாமல் இருக்கிறதாலே டிவியும் பார்த்தேன். நேற்றுப் பார்த்த படம் மாதுரி தீட்சித், ரேகா, மனிஷா கொய்ராலா, ஜாக்கி ஷெராப், அஜய் தேவ்கன் இன்னும் பலர் நடிச்ச "லஜ்ஜா" திரைப்படம். ராஜ்குமார் சந்தோஷியின் படம்? தெரியலை. ஆனால் படத்தின் கருத்துக்களம் நல்லா இருந்தாலும், முடிவு வழக்கம் போல் சொதப்பல். மாதுரி தன் காதலனிடம் ஏமாந்து போக, திரைப்படக் கதையின் படி மேடை நாடகங்களில் நடிக்கும் கதாநாயகியான ஜானகி, (இதுதான் மாதுரியின் பெயர் படத்தில், நாடக இயக்குநர், மனிஷானு நினைக்கிறேன், பாதியிலே இருந்து சினிமா பார்க்கிறதே வழக்கமாப் போச்சு! :P) ராமாயணம் நாடகத்தில் சீதை தீக்குளிக்கும் காட்சியில் தன்னை மறந்து, தன் இயல்பு வாழ்க்கையையும் நாடகத்துடன் பிணைத்துப் பேசும் வசனங்கள் கூர்மை என்றால், கடைசிக் காட்சியில் மனிஷா வில்லனுக்குப் பாராட்டு விழாவில் பேசுவது அப்படி ஒண்ணும் பொருத்தமான ஒன்றாக இல்லாமல், கொஞ்சமும் இயல்பாய் இல்லாமல் செயற்கையாகவே தெரியுது. பெண்ணியம் பேசும் மனிஷா, பாதிக்கப் பட்ட பெண்களுக்கு என்ன செய்தார்னு தெரியலை. கணவன் மனம் மாறியதும், அவரோட வெளிநாடு போகிறார். ஜானகியை அங்கேயும் நாடகத்தில் நடிக்க வைக்கிறார்.

அடுத்தது உடனேயே ஸ்டார் உத்சவில் ஒரு படம் வந்துட்டு இருந்தது. பெயர் "அன்கஹி". இதிலே தெரிஞ்ச முகம்னு பார்த்தால் ஹேமமாலினியின் பெண்ணான இஷா டியோல் தான். வேறே யாரும் தெரியலை. பிரீத்திஷ் நந்தியின் தயாரிப்பில், விக்ரம் பட்டின் இயக்கத்தில் வந்திருக்கு. 4,5 வருஷங்களுக்குள் வந்திருக்கும்னு நினைக்கிறேன். வழக்கமான முக்கோணக் காதல் கதை தான். இதுவும் முதலில் இருந்து பார்க்கலை, என்றாலும் படம் ஆரம்பிச்சுக் கொஞ்ச நேரம் தான் ஆகி இருந்தது. ஏற்கெனவேயே காவ்யா என்னும் பெண்ணைக் காதலித்துவிட்டுப் பின்னர் என்ன காரணம்னு புரியலை, வேறே பெண்ணை மணந்து ஒரு குழந்தையும் பிறந்து எட்டு வருஷங்கள் ஆன பின்னர் மீண்டும் காவ்யா புயல் மாதிரி கதாநாயகன் டாக்டர் சேகர் வாழ்க்கையில் நுழைகிறாள். புயல் என்றால் நிஜமாவே புயல் தான். காவ்யாவாக நடித்த இஷா டியோல் நடிக்கவே இல்லை. வாழ்ந்திருக்கிறார். உண்மையில் ஹேமமாலினியின் நடிப்பைப் பார்த்துவிட்டு இவரோட நடிப்பை ஒப்பிட்டால் இமயத்துக்கும், சிறு குன்றுக்கும் உள்ள வித்தியாசம் தான். மேக் அப் சரியாக எடுபடவில்லை இஷாவுக்கு, என்றாலும் அம்மாவின் கண்கள் இவருக்கு வரம் போல் வாய்த்திருக்கிறது. அந்தக் கண்களில் தான் என்ன ஒரு பாவங்கள் வெளிப்படுகிறது. காதலனிடம் காதல், அவன் மனைவியிடம் வெறுப்பு, கோபம், காதலையும், காதலனையும் தக்க வைத்துக் கொள்ள அவர் படும் பாடு. அவருடைய அதீதமான பொசசிவ்னெஸ், தனக்கே உரியவன் காதலன் என்ற எண்ணத்தைச் சற்றும் மறைக்காமல் அவர் காட்டும் பாங்கு, எல்லாம் ஒரு நிமிஷத்தில் கண்களாலேயே காட்டுகிறார்.

மனவியைப் பார்க்கப் போகிறான் என்று தெரிந்ததும் வரும் கோபம், தன்னைத் தனியே விட்டு விட்டுப் போகிறானே என்று தெரிந்து கெஞ்சும் கெஞ்சல், போகவில்லை, என்றதும் வரும் சந்தோஷம், காதலன், தன் பிடியினுள் இருப்பது தெரிந்து வரும் கர்வம் என்று மொத்தத்தில் ஒரே உணர்ச்சிக் குவியல். அதே போல் மனைவியிடம் செல்லும் காதலனைத் தடுக்க முடியாமல் தவிப்பதும், காதலனின் மனைவியைப் பார்க்க மறுப்பதும், அவள் திரும்பிச் சென்றதும் நீண்ட நாள் வேலக்காரனிடம் தன் மனம் திறந்து பேசுவதும், தன் மனதைப் புரிந்து கொள்ளவில்லை யாருமே என ஏங்குவதும், இஷா டியோல் அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்து காட்டி விட்டார். மனைவி நந்திதாவாக வரும் நடிகை யார்னு தெரியலை, பெயர் நினைவில்லை, நல்லாவே நடிச்சிருந்தாலும், அவங்க கணவனின் தடுமாற்றத்தைப் பார்த்துக் கூட வேறு பெண்ணின் நினைவு அலை மோதுகிறது கணவன் மனதில் என்பதைப் புரிந்து கொள்ளாத மனைவி. ரொம்பவே அப்பாவி. பத்திரிகைகளில் வரும் அளவுக்கு விஷயம் முத்திப் போய் விடும் வரைக்கும் அவங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் விஷயம் தெரிஞ்சதும் கணவனிடம், அவன் அந்தப் பெண்ணைக் காதலிக்கிறானா? என்று கேட்டுவிட்டுக் கணவன் "ஆம்" என்றதும், அறைகிறார் பாருங்க, ஒரு அறை, அந்த இடம் ஒரு மனைவியின் உள்ளார்ந்த தோல்வியின் வெளிப்பாடு.

குழந்தைக்காகக் கூட சமரசம் செய்துகொள்ளவில்லை தன் கணவன் என்பது தெரிந்தும், குழந்தையைச் சிரிக்கவைத்து விட்டுத் தான் அழுவதும், பள்ளியில், கணவனைப் பார்த்தும் கூடச் சற்றும் கலங்காமல், திரும்புவதும், நல்லா இருந்தது. ஆனால் காவ்யாவின் வற்புறுத்தலால், இரவு 2 மணிக்குக் கணவன் விவாகரத்துக் கேட்டதும், அதற்குச் சம்மதித்துவிட்டு, உடனேயே தன்னந்தனியாகக் குழந்தையை விட்டு விட்டுத் தன் பழைய முதலாளியை அந்த நடு இரவில் போய்ப் பார்த்து வேலை கேட்பது, ரொம்பவே அமெச்சூர்த் தனமாய் இருந்தது. தொலைபேசியிலேயே கேட்டிருக்கலாம். குழந்தைக்கு ஜுரம் வந்திருந்தபோதும் கணவனை அழைக்காமல் தான் தனியே இருந்து ஜெயிக்கவேண்டும் என்று நினப்பதும் சரியே. பின்னால் வயதான பெண்மணியாக வரும்போது இவரின் மேக்கப் நல்லா இல்லை.

ஆனால் டாக்டர் சேகர் குழந்தையை பார்க்கக் கிளம்பும்போது காவ்யா தடுப்பதும், அதை மீறிச் செல்ல நினைத்தும் முடியாமல் டாக்டர் சேகர் தடுமாறுவதும் பின்னர் ஒரு பக்கம் மனைவியின் நிலை, குழந்தையின் உடல் நிலை, மறுபக்கம் காதலியின் வேண்டுகோள் என்று தவித்துவிட்டுப் பின்னர் பொங்கிக் கத்துவதும் இயல்பாகவே இருக்கிறது.டாக்டர் சேகர் காவ்யாவின் தவறுகளைச் சுட்டிக் காட்டியதும் பின்னர் காவ்யா உள்ளே போய்க் கதவைச் சாத்திக் கொண்டதுமே கதை முடிந்து விடுகிறது. ஆனால் அதுக்குப் பின்னரும் டாக்டர் சேகர் சந்தேகத்துடன் உள்ளே போய்ப் பார்த்ததும் ஒரு நீண்ட வசனம பேசிவிட்டுத் தன்னைத் தானே சுட்டுக் கொள்கிறாள் காவ்யா. இதை அறைக்குள் நுழைந்ததுமே செய்திருக்கணும். அந்த நேரம் வசனத்துக்கு இடமே இல்லை. கடைசியில் வழக்கம் போல் கதாநாயகன் மனைவியிடம் திரும்பி வர, சுய மரியாதையுள்ள அந்தப் பெண் தன் வாழ்க்கையைத் தானே தீர்மானித்துக் கொள்கிறாள். ஆகவே தனிவாழ்க்கை வாழும் கதாநாயகன் தன் இறுதி நாட்களில் தன் பெண்ணைப் பார்த்துத் தன் கதையைச் சொல்லுவது தான் படம்.


டாக்டர் சேகராக நடிக்கும் நபர் தன் தர்ம சங்கடமான மன நிலையை நன்றாக உணர்ந்து நடித்துள்ளார். மனைவியையும் விட முடியாமல், காதலியையும் விட முடியாமல் தவிப்பதும், தூக்கம் வராமல் தவிப்பதும், குழந்தையின் ஆண்டுவிழாவின் பங்கெடுக்க முடியாமல் போனதும் வருந்துவதும்,பள்ளியில் தலைமை ஆசிரியர் குழந்தையின் மனநிலை அப்பா, அம்மா பிரிவால் கெட்டுவிட்டதாய்ச் சொல்லுவதைக் கேட்டு வருந்துவதும் ஆனால் தன்னால் காதலியை விட முடியாது என்று உணர்ந்து வருந்துவதும், பின்னர் குழந்தையின் உடல் நலம் குறித்துக் கவலைப் படுவதும், பின்னர் தன் பெண்ணிடமே தன் நிலையைச் சொல்லுவிட்டுப் பெண்ணாவது புரிந்து கொண்டாளே என்ற ஆறுதலோடு இறப்பதும், நன்கு நடித்துள்ளார். வயதானவர் மேக்கப் இவருக்கு நன்றாகவே பொருந்துகிறது.

வழக்கமான பட் குடும்பத்துப் படம். முன்னர் மகேஷ் பட் "டாடி" எடுத்து பூஜா பட்டை அறிமுகம் செய்தார். இந்தக் கதையும் கிட்டத் தட்ட தன் பெண்ணிடமே தன் கதையை அப்பா தன் கடைசி நாட்களில் சொல்வதாய் அமைகிறது. டாடியில் அனுபம் கேர், பூஜா பட் இருவரும் தந்தை, மகளாக நடித்து இருந்தனர். முடிவு சுபம். இதிலும் டாக்டர் சேகர், நந்திதா இருவருக்கும் பெண்ணாக நடிக்கும் இளம்பெண் பட் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான். தன் பெண்ணிடமே தான் மனைவியையும், காதலியையும் தான் பிரிய நேர்ந்த விதத்தைச் சொல்லிவிட்டு இறக்கும் தந்தையை மன்னிக்கச் சொல்லித் தன் தாயிடம் வந்து கேட்கிறாள் அந்தப் பெண். நந்திதா தான் எப்போவோ மன்னிச்சுட்டதாய்ச் சொல்லுவதோடு படம் முடிகிறது. இன்று "ராத்" என்று ரேவதி, ரோஹிணி ஹட்டங்கடி, ஆனந்த நாக், ஓம்புரி நடிச்ச திகில் படம். பேயாய் வந்து ரேவதியின் உடலில் புகுந்து கொண்டு பழிவாங்கும் பெண்ணைப் பற்றியது. மின்சாரம் வேறே போயிட்டுப் போயிட்டு வந்தது. கேபிள் சரியாவே வரலை மழையால். படம் விட்டு விட்டுத் தான் பார்க்க முடிஞ்சது. கதை, வசனம் ராம் கோபால் வர்மா னு போட்டிருந்தது, அதிசயமா இருந்தது, ராம் கோபால் வர்மாவுக்கு இப்படியும் கதை எழுத வருமானு. தமிழில் "சிதம்பர ரகசியம்" லட்சத்துப் பதின்மூன்றாம் முறையாக ராஜ் டிவியில் போட்டுக் கொண்டிருந்தார்கள். அதுக்குள்ளே கதையும் முடிஞ்சு, கத்திரிக்காயும் காய்த்துவிட்டது. ஆகவே கணினிக்கு வந்துட்டேன். இனிமேல் எப்போப் படம் பார்த்து விமரிசனம் எழுதுவேன்னு தெரியலை. உங்க அதிர்ஷ்டம்.

Tuesday, March 18, 2008

மனதைக் குத்திய கவிதை!

கதவைத் தட்டும்
கணத்துக்கு முன்னிருந்து
சப்தங்களால் நிரப்பப்பட்டிருக்கிறது

யார் யாரோ அழுகிறார்கள்
யார் யாரோ சிரிக்கிறார்கள்!

வீட்டின் அழைப்பு மணியின்
பெரும் சத்ததையும் மீறி
விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்
வசை மொழி வார்த்தைகளினூடே!

சிறு தட்டல், பெருந்தட்டலாகி
பெருங்குரலெடுத்து அழைக்கையில்
வேண்டா வெறுப்பில்
கதவு திறக்கும் முகங்களில்
"ஏன் வந்தாய்!" என்பதற்கான நிழற்படம்!

இன்னாரென அறிமுகமாகி
புன்முறுவல் பூக்கையில்
"சீக்கிரம் சொல்லுங்க,
நாடகத்தைப் பாதியிலேயே
விட்டுட்டு வந்திருக்கேன்!"

வந்த வழி திரும்புகிறேன்
ஆறாத சினத்தோடு
சொற்களால் அறைந்த
முகத்தைத் தடவியபடி!

கவிதை "கன்னிக்கோவில் ராஜா" கல்கி பத்திரிகைக்கு எழுதியது.

நாம் அனைவருமே ஒரு நாளாவது இம்மாதிரியான உணர்வில் இருந்திருப்போம், அல்லது இனி இருப்போம், இது தேவையா?

சுப்ரமண்யம், சுப்ரமண்யம்!



பழநி மலைக்கோயிலுக்குச் செல்லும் முன்னர் கீழே உள்ள திருவாவினன் குடிக்குச் செல்லுவோமென்றால், கூட்டம் உள்ளே செல்லவே விடவில்லை. சரி, முதலில் மலைக்கோயிலுக்குச் சென்று பார்ப்போம் என மலை ஏற முடியாது என்ற காரணத்தால், ரெயிலுக்குச் சென்றோம். வழியிலேயே பலவிதமான ஏஜெண்ட்கள். எங்க மூலம் போனால் ஒழிய சாமி தரிசனம் கிட்டாது எனப் பயமுறுத்தல்கள். எல்லாவற்றையும் தாண்டி மலைக்குச் செல்ல ரெயிலில் டிக்கெட் எடுக்கப் போனால், அதிலும் சீக்கிரம் செல்லச் சிறப்புக்கட்டணம் 50ரூ. மலைக்குப் போக மட்டும், இந்தக் கட்டணம், திரும்பி வர மீண்டும் வாங்கணுமாம். 10ரூ. சாதாரணக் கட்டணம். இரண்டிலும் கூட்டம் வழிந்தது. என்ன செய்யலாம் என யோசித்தால் 50 ரூ. கட்டணம் சீக்கிரம் போக முடியும் எனச் சில உள்ளூர்க்காரர்கள் சொன்னதின் பேரில் அந்த வரிசையில் நின்றோம், நின்றோம், நின்று கொண்டே இருந்தோம். எத்தனை யுகம் என்று தெரியாத ஒரு முடிவிற்குப் பின்னர் டிக்கெட் கொடுத்தனர். ஆனால் 10ரூ. வரிசை நகர்ந்து கொண்டே இருந்தது. பின்னர் 50 ரூ. எதுக்கு? புரியலை! பயணச்சீட்டு வாங்கி உள்ளே போயும் உடனேயே ரெயிலில் ஏற முடியவில்லை. ரெயில்கள் மூன்றுதான் இருந்தன. ஒன்று பராமரிப்புக்குக் காத்திருந்தது. மற்ற இரண்டும் பயணிகளை ஏற்றிச் சென்றாலும், அதிலேயே ஊழியர்கள் வேலை மாற்றத்துக்கும் செல்ல வேண்டும், பொருட்கள் செல்ல வேண்டும், கட்டுமானப் பணி நடப்பதால் அதற்கான பொருட்கள் செல்லவேண்டும். பயணிகளுக்கு இத்தனையும் மீறி இடம் கிடைப்பது ஒரு 30 பேருக்கு இருந்தால் அதிகம். :(((((((

பின்னர் ரெயில் வந்து நாங்கள் ஏறிக் கொண்டு மேலே போய்த் தரிசனத்துக்கு நின்றோம். கெட்ட வேளையிலும், நல்லவேளையாக எங்கள் சிறப்பு தரிசனக் கட்டணச் சீட்டு வரிசை கொஞ்சம் வேகமாகவே நகர்ந்தது. பால் அபிஷேகம் செய்பவர்களும் அந்த வரிசையில் விடுவதால் அவர்களும் செல்கின்றார்கள். அபிஷேகச் சீட்டும், பாலும் தான் அவர்கள் வாங்குவது. கட்டணம் ஏதும் இல்லை. சிறப்புக்கட்டணச் சீட்டு என்றதும் அர்ச்சகர்கள் கொஞ்சம் தரிசனத்துக்கு இடம் கொடுப்பது சற்றே ஆறுதல் அடைய வேண்டிய விஷயம். ஆனால் இந்த ரெயில் சேவை ரொம்பவே மோசம். இதே மாதிரியான inclined rail service யு.எஸ்ஸிலும் உள்ளது. அங்கே 1895-ல் இருந்தோ என்னமோ இந்த ரெயில் ஓடுவதாய்க் கேள்விப் பட்டேன். இங்கே இந்த புதிய நவீன யுகத்திலும் பாதி நாட்கள் ரயில் சேவை நடப்பதே இல்லை. சரியான, முறையான பராமரிப்பு இல்லை என்றே சொல்லலாம். ஒழுங்கு முறை இல்லை. நம் நாட்டிலேயே ஹரித்வாரில் இதே மாதிரியான மலையின் மேல் உள்ள மானசா தேவி கோயிலுக்கும், சண்டி தேவி கோயிலுக்கும் செல்ல தொங்கு பெட்டிகள்(வின்ச்?) மூலம் அழைத்துச் செல்கின்றார்கள். அருமையான ஏற்பாடுகள். இரண்டுக்கும் சேர்த்தே பயணச்சீட்டு வாங்கினால் சலுகை என்பதோடு அல்லாமல் போக, வர இரண்டுக்கும் சேர்த்தேதான் பயணச்சீட்டும் கொடுக்கிறார்கள். பயணத்தின்போது சிறு குழந்தைகளைக் கவரத் தொப்பி, கண்ணாடி, போன்றவைகளும், ஒவ்வொருவருக்கும் தண்ணீர் பாட்டிலும், அன்றைய செய்தித் தாளும் தருகிறார்கள். இங்கே அந்த மாதிரியான சேவை இல்லாவிட்டாலும் குறைந்த பட்சமாய் சரியான நேரத்துக்குச் சரியான முறையில் சேவையைக் கொடுத்து பக்தர்களை மணிக்கணக்காய்க் காத்திருக்க வைக்காமல் இருந்தாலே போதுமானது.

Sunday, March 16, 2008

மீனாட்சி எங்கே இருக்கிறாள் மதுரையில்?


//ஹூஸ்டன் மீனாட்சி திருக்கோயிலில் மதுரைச் சகோதரர்கள் இராஜரத்தின பட்டர்
(வயது 81), தங்கம் பட்டர் (85 வயது) ஆகிய ஆகம விற்பன்னர்களுடன்
பேசிக்கொண்டிருந்தேன். சென்னை உயர்நீதி மன்றம், டெல்லி உச்ச நீதிமன்றம்
போன்றவற்றில் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், வெங்கட்ராம சாஸ்திரி போன்றோர்
முழுமுயற்சியின் விளைவாக 20-ஆம் நூற்றாண்டில் 'சிதம்பரம் கோயில் ஒரு
'ப்ரைவேட் ப்ராப்பர்ட்டி', அது மடம், கோயில் (temple) அல்ல' என்று சட்ட
பூர்வமாக எழுதப்பட்டுள்ளது என்பதுதான் பிரச்சினை என்று விளக்கினர்.
அதற்கு ஆதரவைச் சைவமடங்கள் - தருமபுரம், திருவாவடுதுறை, ... போன்றவை
தந்துள்ளன. எனவே, மெல்ல மெல்லத் தான் மக்களளட்சி அரசின் முயற்சிகள்
நடைமுறைக்கு வரும். தீட்சிதர்களுக்கு வருமானம் பெருகவும், தனியாரிடம்
விதவிதமாய் வசூல்கள் ஒழுங்கடையவும், கோயில் கட்டிடங்கள், மண்டபம்,
கோபுரம், விமானம் நல்லமுறையில் வெகுபணம் செலவிட்டு ஏனைக் கோவில்கள் போலச்
செழிக்கவும் தில்லைத் திருத்தலம் ஒரு private property அன்று, அனைத்துச்
சைவருக்கும் சொந்தமானது என்னும் நிலையை அரசு ஏற்படுத்தவேண்டும். 21-ஆம்
நூற்றாண்டில் ஏற்படப்போகும் நீதிமன்றங்களும், சர்க்கார்களும்
அந்நிலைக்குச் சரி செய்துவிடுவார்கள் என்று நம்புவோம். திருப்பதி, பழனி,
மதுரை, ... போன்று வரும்படி சிதம்பரத்தில் மிகுங்காலத்தில் தமிழ்ப்
பள்ளிகள், நுட்பக் கல்லூரிகள் தொடங்கி அரசாங்கம் நடத்தலாம்.
தென்னார்க்காடு மாவட்டத்தில் (உ-ம்: வள்ளலாரின் வடலூரில் ஒரு
சர்வகலாசாலை), யாழ்ப்பாணத்திலுங் கூட, கல்லூரிகளுக்கு நிதி அளிக்கும்
நிலை ஏற்பட வேண்டும்.//

திரு நா.கணேசன் அவர்கள் எழுதியவை மேற்கண்ட குறிப்புக்கள். மதுரைக் கோயிலைப் போல் தில்லைக் கோயிலும் ஆகவேண்டும் என்று ஆசைப் படுகின்றார். ஆனால் மதுரைக்கோயிலுக்கு அவர் போய் எத்தனை வருஷம் ஆகின்றது என்று புரியவில்லை. 70களிலும், அதற்கு முன்னரும் மதுரையில் மீனாட்சி அம்மனைத் தரிசனம் செய்வது மிக மிக எளிது. பண்டிகை நாட்களிலும், கோயிலின் திருவிழா நாட்களிலும் மட்டுமே கூட்டம் காணப்பட்டாலும் அம்மனைத் தரிசனம் செய்வது என்பது அப்போதும் சுலபமான ஒன்றாகவே இருந்து வந்தது. அப்போது அறங்காவலர் திரு பி.டி.இராசன் அவர்கள் என நினைக்கிறேன். அதற்குப் பின்னரும், சில காலம் வரையிலும் மீனாட்சி அம்மனைத் தரிசிக்க எந்தவிதத் தடையும் இல்லை. கர்ப்பக் கிரஹத்தில் மிக அருகே சென்று தரிசிக்க முடியும்.

அப்படியே பணம் கொடுத்துத் தரிசனம் செய்தாலும் ரொம்ப அதிகமாய்ப் போனால் ஒரு ரூ, 2ரூ, 5 ரூ என்றுதான் இருந்தது. கல்யாணம் ஆகி நான் திரும்ப எப்போ மதுரை போனாலும் இந்த மாதிரிப் பணம் எல்லாம் கொடுத்து மீனாட்சியைப் பார்த்ததே இல்லை. காலை வேளையில் 11-00 மணிக்குப் போனால் நன்றாய்த் தரிசனம் செய்ய முடியும். மாலையில் 4-00 மணியில் இருந்து 4-30 வரையிலும், சில சமயம் 5-00 மணி வரையிலும் கூடப் பார்க்கலாம். இரவில் 9-00 மணிக்கு மேல் எப்போப் போனாலும், கோவில் நடை சாத்தும் வரையிலும் அம்மனைப் பார்க்க முடியும்.

ஆனால் இப்போது 2 வருஷத்துக்கு முன்னர் மீனாட்சி கோயிலுக்குச் சென்ற போது அம்மனை வெளியில் உள்ள உள் பிராகாரத்துக்குச் செல்லும் வழியிலோ, அல்லது உள்ளேயோ சென்று பார்க்க முடியாமல் டிக்கெட் முதல் முறையாக வாங்கினோம். ஆனாலும்
அம்மனை கர்ப்பகிரகத்துக்குச் செல்லும் வழியில் கீழே உட்கார்ந்து தான் பார்க்க முடிந்தது. ஒரு ஐந்து நிமிடங்கள் உட்கார்ந்து பார்க்க முடிந்தது. வெளியே கம்பிகளுக்குப் பின்னர் தரிசனம் செய்யுமிடத்தில் கூட்டமோ கூட்டம்,தாங்க முடியவில்லை. சாமி சன்னதியில் அவ்வளவாய்க் கூட்டம் இல்லை, கொஞ்சம் பார்க்க முடிந்தது, என்றாலும் உள்ளே போய்த் தரிசனம் செய்ய முடியவில்லை. இது தவிர, கோயிலில் கடைகள் பெருகி விட்டன. எங்கே பார்த்தாலும் மூலைக்கு மூலை புத்தகங்கள், பிரசாதங்கள் விற்கும் கடைகள். முன்னர் ஆடி வீதியில் மட்டுமே இருந்த புத்தகக் கடைகள் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய்த் தெற்கு கோபுர வாசல் வழியாகக் கோயிலின் ஊஞ்சல் மண்டபம், கிளிக்கூட்டு மண்டபம் எதிரே வந்து இடம் பிடித்துக் கொண்டு, இப்போது எங்கேயும் நெரிசல். பொற்றாமரைக் கரையிலும் எப்போவும் கூட்டம், தாங்க முடியலை.

சென்ற வருஷம் டிசம்பரில் இப்போ என்ன கூட்டம் வந்திருக்கப் போகிறது, மார்கழி மாதம் தானே, திருநாள் ஒன்றும் இல்லைனு மதுரைப் பயணம் வைத்ததே தப்பாப் போச்சு. முதலில் காலேஜ் ஹவுசில் தங்கவே இடம் இல்லைனு சொல்லிட்டாங்க. வேணும்னா 1,500/-ரூக்கு ஒரு ரூம் காலி இருக்கு, அதைத் தரோம்னு சொல்றாங்க, அனெக்ஸில் போய்க் கேட்டா அங்கே தான் அறைகள் நிறைய, இங்கே இல்லைனு ஒரு மத்தியானம் பூரா அங்கேயும், இங்கேயும் அலையவிட்டுப் போதும், போதும்னு ஆயிடுச்சு. பின்னர் எப்படியோ வேறே ஒரு லாட்ஜில் ரூம் போட்டுக் கொண்டோம், கோயிலுக்குப் போனால் கூட்டம் தெற்கு கோபுரத்துக்கு வெளியே நிற்கிறது. எப்போ சாமி பார்த்து, எப்போத் திரும்பறதுனு புரியலை. இதிலே வண்டியை வேறே அங்கே நிறுத்தக் கூடாதுனு வேறே இடம் சொல்லிட்டாங்க. அது தனியாகத் தெற்காவணி மூலவீதியில், நியூ சினிமா எதிரே போயிட்டது. நாங்க கூட்டத்தில் எப்படியாவது போய்த் தரிசனம் பண்ணிடலாம்னா முடியாது போல் இருந்தது. பின்னர் ஸ்பெஷல் தரிசனம் தான் முடியும்னு யோசிச்சு, (கண்ணபிரான் கவனிங்க) டிக்கெட் வாங்கிட்டுப் போனோம். அப்போக் கூடக் கொலு மண்டபம் தாண்டி உள்ளேயே போக முடியலை, முன்னர் ஒரு வயசான தாத்தா மயில் தோகை விசிறியால் நின்னுக்கிட்டே விசிறிட்டு இருப்பார். இப்போவும் யாரோ இருக்காங்க, ஆனால் அவருக்கே நிக்க இடம் இல்லை, கூட்டம். அதையும் தாண்டி உள்ளே போய் டிக்கெட் கவுண்டர் வழியா ஸ்பெஷல் தரிசனத்துக்கு அர்த்த மண்டபத்துக்குப் போகலாம்னா, அர்த்த மண்டபத்துக்கு விடறதே இல்லையாம், இப்போ எல்லாம் வெளியே கம்பிக்குப் பின்னால் நின்னு பார்க்கத் தான் இந்த டிக்கெட்டாம், பின்ன டிக்கெட் வாங்காதவங்க எப்படிப் பார்ப்பாங்கன்னால், உண்டியலுக்குப் பின்னர் வழி ஏற்படுத்தி அவங்க கூட்டமா, (வரிசையா எல்லாம் இல்லை, கூட்டமான்னா கூட்டமாத் தான்) வந்து தரிசனம் பண்ணுவாங்கனு சொன்னாங்க. அதை ஒழுங்கு படுத்த யாருக்கும் தெரியலை, இத்தனைக்கும், ஆண், பெண், போலீஸ் காரங்க, கோவில் ஊழியர்கள் எல்லாமே இருந்தாங்க. யாரும், யாரையும் தடுத்து நிறுத்தி, ஒரு ஒழுங்கான முறையிலே விடவில்லை. நாங்க டிக்கெட் வாங்கினவங்க போற வழியிலே உள்ளே நுழைஞ்சோமோ இல்லையோ, உடனேயே ஒரு பெரும் கூட்டம் எங்க பின்னாலேயே வந்து எங்களைத் தாண்டிட்டுப் போய்ச் சாமி தரிசனத்துக்குப் போயாச்சு. கூட்டத்தின் நடுவில் நான் மாட்டிக் கொள்ள, என் பையன், கணவர் இருவருக்கும் என் மூச்சுத் திணறல் பற்றிய கவலை வந்து, பெண் காவலரிடம் இருவரும் சண்டை போட்டு வழி ஏற்படுத்தி, என்னை மீட்டு வெளியே கொண்டு வர, நான் மீனாட்சியைப் பார்க்காமலேயே அவளிடம் இருந்து விடை பெற்று வெளியே வந்து விட்டேன். 15ரூ? அல்லது 25 ரூ கொடுத்து( நினைவில்லை, மறக்க நினைத்த சம்பவம், மறந்தும் போச்சு) டிக்கெட் வாங்கியும் கடைசில் அம்மனையும் பார்க்கவில்லை, சுந்தரேஸ்வரரையும் பார்க்கவில்லை. சாமி சன்னதிக்குள் நுழையவே முடியலை. இது தான் இன்றைய அறநிலையக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் மீனாட்சி கோயிலின் நிலைமை. பழனி பற்றியும் இன்னும் விரிவாய் எழுதறேன்.

இதுக்கு என்ன செய்யலாம்?

கடந்த 2 மாதமாய்த் தொடர்ந்து பல பெயர்களில் எனக்கு இந்தச் செய்தி பின்னூட்டம் என்ற பெயரில் வந்து கொண்டே இருக்கிறது. warning! see here! என்று சொல்லிப் பலமுறைகள் பின்னூட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. இது ஒரு மறை முக மிரட்டலோ? எப்படி நிறுத்துவது என்று புரியவில்லை. புரியாத, தெரியாத பெயர்களில் வரும் பின்னூட்டத்தை மட்டுறுத்தி விடுவேன் என்றாலும் ஏன் இப்படிச் செய்கிறார்கள் எனப் புரியவில்லை. இன்னும் சிலருக்கும் வருகிறது என்று புரிந்தாலும் தடுத்து நிறுத்தும் வழி யாருக்காவது தெரியுமா? கொஞ்சம் தெரிஞ்சால் சொல்லுங்களேன். அவங்க பார்க்கச் சொல்லும் தளத்துக்குள் நான் போவதே இல்லை, என்பதோடு மெயிலில் பார்த்த உடனேயே அதை மட்டுறுத்தியும் விடுகின்றேன், என்றாலும் தொல்லை தாங்க முடியலை! என்ன செய்யலாம்??????????????

Saturday, March 15, 2008

எழுத்தாளர் சுஜாதாவுக்குத் தாமதமான ஒரு அஞ்சலி!


எழுத்தாளர் சுஜாதாவுக்கு எல்லாரும் அஞ்சலி எல்லாம் தெரிவிச்சு எழுதியாச்சு. கூட்டத்தோடு கோவிந்தா சொன்னால் யார் பார்க்கப் போறாங்கனு நான் அப்போ ஒண்ணும் எழுதலை. அவரை நேரடியாக நான் பார்த்ததே இல்லை. சித்தப்பா வீட்டில் இருக்கும்போதும் அவர் அங்கே வந்ததில்லை. பின்னாட்களில் வந்திருந்தாரோ என்னமோ? நான் அவரைப் பார்த்ததே இல்லை. ஆனால் நான் பள்ளி மாணவியாக இருந்தப்போவில் இருந்தே அவர் எழுத்துக்களின் பரிச்சயம் ஏற்பட்டது. அப்போது சித்தப்பா அசோசியேடட் ஆசிரியர் ஆக இருந்த "கணையாழி" பத்திரிகையின் கடைசிப் பக்கத்தில் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்ற பெயரில் சுஜாதா அவர்கள் எழுதிக் கொண்டிருந்ததைச் சேமித்து வைத்திருந்தேன். உண்மையில் பொக்கிஷம் ஆன அது, பின்னால், அப்பா நான் கல்யாணம் ஆகிச் சென்னை வந்ததும்,அவற்றை எல்லாம் தனித்தனியான தாளாக இருந்ததால் வேணாம்னு நினைச்சு எடைக்குப் போட்டு விட்டார். நான் மதுரைக்குப் போனப்போ அதுக்காக ஒரு குருக்ஷேத்திர யுத்தம் நடந்தது தனிக்கதை!

அதற்குப் பின்னர் அவர் குமுதத்தில் எழுதிய நைலான் கயிறு படிக்கும்போதே சித்தப்பாவிடம் இது அந்த ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். தானேனு கேட்டிருக்கேன். அவர் கதைகளில் எல்லாம் பெண்களைப் பற்றிய வர்ணனை கொஞ்சம் மோசமாய் இருக்கும் என்று சொன்னாலும், கதைகளில் ஒரு உள்ளார்ந்த சோகமும் இருக்கும். அவர் படைத்த கணேஷ், வசந்த் அறிமுகம் ஆனது முதல் முதல் "ப்ரியா" கதையிலா? நினைவில்லை! பின்னர் அவர் எழுதிய பதினாலு ரூபாய்-தீவு படிச்சுட்டு எத்தனை ராத்திரி தூங்காமல் இருந்தேன் என்றால் சொல்ல முடியாது. நிஜமான நிகழ்வை அதன் தாக்கத்தோடு உணர்த்தி இருக்கின்றார். எப்போவும் தங்கைக்காகக் கஷ்டப் படும் அண்ணன் ஒருத்தன் இருப்பான் அவர் கதைகளில். பின்பு அவர் எழுதிய கற்றதும், பெற்றதும் தொடர்களில் தான் அவருக்கு ஒரு தங்கை இருந்ததும், சின்னவயதிலேயே இறந்ததும் தெரிய வந்தது. கனவுத் தொழிற்சாலை, திரைப்படத் தொழிலாளர்களின் நிலையை அப்பட்டமாய்க் காட்டியதென்றால், என் போன்ற விஞ்ஞான அறிவு இல்லாதவர்கள் கூடப் புரிந்து கொள்ளும் வண்ணம் அவர் எழுதிய "சிலிக்கான் சில்லுப்புரட்சி" அமைந்தது. தொடர்கதைகளிலோ அல்லது சிறுகதைகளிலோ மெல்லிய நகைச்சுவையும், திகிலும், உண்மைச்சம்பவங்களின் கலவையும் சேர்ந்து அவர் கொடுக்கும்போது, நம்மை ஆச்சரியப் பட வைக்கும். குதிரை கடித்தது பற்றிய அவரின் சிறுகதையும், டெல்லியில் இருந்து கோடை லீவுக்குத் தமிழ்நாட்டுக்குச் சிறப்பு ரயிலில் வந்த அனுபவம் பற்றிய கட்டுரையும் இன்றும் நினைத்து, நினைத்துச் சிரிக்க வைக்கும்.

"கொலையுதிர் காலம்" தொடர் தூர்தர்ஷனில் வந்தப்போ என் பெண் அதை பார்த்துவிட்டு தமிழில் இந்த மாதிரிக் கதைகள் எல்லாம் கூட வந்துட்டு இருக்கானு ஆச்சரியப் பட்டாள். பின்னர் அவளுக்கும், என் பையனுக்கும் சுஜாதா கதைகளின் அறிமுகத்தைக் கொஞ்சம் கொஞ்சம் செய்து வைத்தேன். "ஜீனோ" தொலைக்காட்சித் தொடராய் வந்து தமிழ்நாட்டையே ஆட்டி வைத்துக் கொண்டிருந்ததை, நான் குஜராத்தில் இருந்தப்போ எனக்குக் கடிதம் எழுதிச் சொன்னாள்.நாட்டுப்புறப்பாடல்கள் பற்றிய அவரின் ஆராய்ச்சியும், பழந்தமிழ்ப் பாடல்களைத் தேடிப் பிடித்துப் படித்து அதன் உள்ளார்ந்த அர்த்தத்தைக் கண்டு வியப்பதும் அவர் தனக்கு மட்டுமில்லாமல் தன் வாசகர்களுக்கும் பகிர்ந்தளித்தார். கற்றதும், பெற்றதும் தொடரில் அவர் போட்ட ரீபஸ்களை நினைத்துக் கொண்டே, முதல் முதல் நான் வலைப் பதிவில் நுழைந்தபோது இ.கொ. போட்ட ரீபஸ்களையும் போய்ப் பார்த்தேன், க்ர்ர்ர்ர்ர்ர்ர்., சுஜாதாவோடதே ரொம்ப சுலபமா இருந்தது. அவர் தம்பியான டாக்டர் ராஜகோபாலனோடு(?) சேர்ந்து அவர் எழுதிய அத்வைதம் பற்றிய கட்டுரையும், ஆழ்வார்கள் பாசுரங்கள் பற்றிய அவரின் விளக்கங்களும், அதைக் கூடியவரை விஞ்ஞான விளக்கங்களோடு ஒப்பிடுவதும், அவரின் கூரிய அறிவுக்குச் சான்று. உதாரணம் சமீபத்திய 16-3-2008-ல் வெளிவந்த கல்கி பத்திரிகையில் வெளிவந்த திருமங்கை ஆழ்வார் பாசுர விளக்கமே சான்று:

பார் ஏழு, கடல் எழுமலை எழும் ஆய்,
சீர் கெழும் இவ்வுலக் ஏழும் எல்லாம்
ஆர் கெழு வயிற்றினில் அடக்கி நின்று அங்கு
ஓர் எழுத்து ஓர் உரு ஆனவனே!
ஆண்டாய்! உனைக் காண்பது ஓர் அருள்
எனக்கு அருளுதியேல்,
வேண்டேன், மனை வாழ்க்கையை,
விண்ணகர் மேயவனே!"

என்னும் இந்தப் பாசுரத்தில் இறைவனைத் திருமங்கை ஆழ்வார், "ஏழு உலகங்கள், ஏழு கடல்கள், மலைகள் இவை எல்லாவற்றையும் ஆபரணமணிந்த ஓர் வயிற்றில் அடக்கி நின்று ஓர் எழுத்தும், ஓர் உருவும் ஆனவனே!" என இறைவனை விளிப்பதைக் க்வாண்டம் இயற்பியல், பிரபஞ்சம் அனைத்தையும் ஓர் சக்தி, ஓர் துகள் இரண்டிலும் அடக்கிவிடலாம் என்ற முடிவிற்குச் சென்ற நூற்றாண்டில் வந்திருப்பதை நினைவு கூருகிறார். இது போலப் பல பாசுரங்களிலும் இவர் இன்றைய விஞ்ஞானம் சொல்வதை நினைவு கூருகின்றார். முடிந்தால் அனைத்தையும் தேடிப் பிடித்துத் திரட்டி ஒரு தொகுப்பாய் ஆக்க வேண்டும் என ஆசை! பார்க்கலாம். விஞ்ஞானத்தின் எல்லையே மெய்ஞானம் என்பதை நன்கு உணர்ந்த இவர் போன்ற ஓர் எழுத்தாளர் இன்று நம்மிடையே இல்லை என்பதை இன்னும் நம்பத் தான் முடியவில்லை.

Wednesday, March 12, 2008

அரியும் சிவனும் ஒண்ணா? வேறே, வேறேயா?


திருக்கைலையில் சிவபெருமான் ஆடிக்கொண்டிருக்கிறார். ஆட்டத்தைத் தான் நிறுத்த முடியாதே! நிறுத்தினால் உலக இயக்கமும் நின்றுவிடும், பக்கத்தில் உமாதேவியாரும் நின்று கொண்டிருக்கிறார். சிவனின் ஆறு முகங்களும், ஆறு திசைகளை நோக்கி இருக்கிறது. ஆறாவது முகமான அதோமுகம், பாதாளத்தை நோக்கிக்கொண்டு கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஈசான்ய முகம் ஆன ஐந்தாம் முகம் ஆகாயத்தையே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. மற்ற நான்கு முகங்களும் நால்திசைகளையும் பார்க்க, தென் திசையில் இருந்து ஒரு பேரிரைச்சல், வருத்தம் கலந்த பேச்சு. திடீரென தெற்கு தாழ்ந்து போக வடக்கு உயருகிறது. என்ன இது? இப்போ சமீப காலத்தில் நாம் கல்யாணம் ஒண்ணும் செய்துக்கலையே? பூமியில் ஒரே சண்டையும், சச்சரவுமாக இல்லை இருக்கு? இந்த நாராயணனோ, பேசாமல் படுத்துட்டு, மனசுக்குள்ளே என் நடனத்தைப் பார்த்துச் சிரிச்சுட்டு இருக்கார், நடனத்தை நிறுத்தலாம்னா இன்னும் பிரளய காலமும் வரலை, இரண்டு பேரும் சேர்ந்து தானே எதுவா இருந்தாலும் செய்தாகணும், என்னுள்ளே அந்த நாராயணன் மூச்சுக் காற்றிலே இருந்துட்டு ஆட வைக்கிறான். ரெண்டு பேரும், நாங்க பிரிக்க முடியாதவங்கனு நிரூபிக்கிறதுக்காகவே, என் பேரில் இருந்தும், நாராயாணன் பேரில் இருந்தும், "ரா" வையும், "ம"வையும் சேர்த்து வச்சு, "ராம" னு பேரை பொதுப் பெயரா வச்சுட்டு இருக்கோம். ஆனால் எல்லாரும் ராம என்னமோ தனிப் பெயர்னு நினைச்சுக்கிறாங்க. அது இருக்கட்டும், இப்போ என்ன சத்தம், தென் திசை நோக்கிப் பார்க்கிறார், தட்சிணா மூர்த்தி ஆன ஈசன்.

ஏற்கெனவேயே குறுகிப் போயிருக்கும் அகத்திய முனி, தன் மனைவியான லோபாமுத்திரையுடன் அங்கே ஓட்டமாய் ஓடி வந்து கொண்டிருக்கிறார். என்ன ஆச்சுனு தெரியலையே? யாரோ துரத்துவது போன்ற பாவனையுடன் வேக வேகமாய் வருகிறாரே அகத்தியர்? என்ன ஆச்சு அவருக்கு? இந்த நாட்டை 4 பாகமாய்ப் பிரிச்சு, மேற்கே உள்ள பாகத்தை விதேகம் என்றும், கிழக்கே உள்ள பாகத்தை, ரேபதம் என்றும், இமயத்துக்கும், விந்தியத்துக்கும் மத்தியில் உள்ள பாகத்தை மத்தியம் என்றும், தென் பகுதியை பரதம் என்றும் பிரிச்சு, தென் பகுதிக்கு அகத்தியரை அனுப்பிச்சும் வச்சாச்சு. அங்கே போய்த் தமிழை வளர்க்க அவரால் ஆனது பண்ணவும் சொல்லியாச்சு, இன்னும் என்ன? அவன் தான் பொதிகைமலையில் போய் நல்ல குளிர்ச்சியான வாசஸ்தலத்தில் இடம் பிடிச்சுக் கொண்டு விட்டானே? ம்ம்ம்ம்ம்ம்???? அங்கே இருந்து தமிழ்க் காற்று நல்லாவே வீசுதுனும் சொன்னாங்க, இப்போ என்னனு புரியலையே? சிவபெருமான் உமாதேவியைக் கடைக் கண்ணால் பார்க்க உமாதேவியோ, பிள்ளையாரையும், முருகனையும் பார்க்கிறார்.

எல்லாம் வல்ல விநாயகனோ அனைத்தும் அறிந்து அமைதியாய் நிற்க, இறைவனின் ஆறாவது முகமான "அதோமுகத்தோடு" சேர்ந்து, அவற்றின் நெற்றிக் கண்களில் இருந்து தோன்றி நெருப்புப் பொறிகளில் உதயம் ஆன முருகனோ என்றால், தமிழ்க்கடவுள் என்று பெயர் பெற்றவன், ஆண்டியாக, சேனாபதியாக, வேலனாக, விருத்தனாக இருந்தவன் இப்போ என்ன செய்யறதுனு தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டு இருக்கிறானே? என்னதான் ஆச்சு? அகத்தியர் வருகிறார். ஈசனின் கால்களைப் பிடித்துக் கொண்டு கதறுகிறார். "என்ன அகத்தியரே? ஏன் இந்த அழுகை? கொஞ்சம் சொல்லுங்களேன்," ஈசன் கேட்க, "ஈசா, தமிழ்நாட்டில் உன் கோயில்களில் தேவாரம், திருவாசகம் போன்ற தமிழ்ப்பாடல்கள் ஒலிக்கவில்லை என்று போராட்டம் நடக்கிறதே? அதான்!" என்று அகத்தியர் தயங்கினார். "என்ன? தேவாரமும், திருவாசகமும் ஒலிக்கவில்லையா? இல்லையே? ஒவ்வொரு காலத்துக்கும் என் காதுகளில் விழுகின்றனவே, அவை என்ன பின்னர்? என்னோட ஐந்து முகங்களில் இருந்து பிறந்த 28 ஆகமங்களின் முறைப்படிக் கட்டி வழிபாடு நடத்தப் படும் கோயில்களில் ஒலிக்கிறதே? இது யார் சொன்னது ஒலிக்கவில்லை என்று?" ஈசன் கேட்கின்றார். "சொல்கின்றவர்களும் என் அடியார்கள் தானோ?" ஈசனின் கேள்வி. அப்படித் தான் சொல்கின்றார்கள், என்றார் அகத்தியர்.

கருஞ்சாம்பல் நிறத்தில் ஒரு குட்டி!


எல்லாரும் படிச்சுட்டுப் பின்னூட்டம் போடறதுக்குப் பதில் சொல்ல முடியலை, மன்னிக்கவும், ஒண்ணும் இல்லை, ஏற்கெனவேயே தேன் கலரில் ஒரு அம்மாப் பூனை வந்து குட்டி போட்டுப் பதினைந்து நாள் ஆகிவிட்டது. அது வந்து சைடில் உள்ள பாத்ரூமில் குட்டி போட்டுட்டு, நாங்க யாரும் அங்கே வரவே கூடாதுனு தடை உத்தரவு போட்டுட்டு இருக்கு. இந்தத் தேன்கலர்ப் பூனை சயாமிஸ் பூனை மாதிரிச் சின்ன ரகம். ஒரு கைக்குள் அடக்கிவிடலாம், இந்தப் பூனையை. குட்டிகளும் உள்ளங்கைக்குள் அடங்கறாப்போலச் சின்ன சைஸ்தான். மூணு குட்டிகள். எல்லாம் மெத்து, மெத்துனு பார்க்கவே ரொம்ப சாஃப்டாக, வழவழனு, ரொம்பவே பிரகாசமான நிறங்களிலும் இருக்கு. கிட்டேத் தான் போக முடியலை. ப்ளம்பிங் வேலை செய்ய வந்த ப்ளம்பரை பார்த்ததும் அது சீறிய சீறல் இருக்கே, ரொம்பவே ஜாக்கிரதையாக் குட்டிகளைப் பார்த்துக்குது. மூணு குட்டியும் மூணு கலர். சின்னக் கண்களைத் திறந்து பார்க்கிறதே அழகா இருக்கு. இந்தத் தேன் கலர் பூனை குட்டிகளை விட்டுட்டு, வேலைக்கு? அல்லது சாப்பாடு தேடப் போகும்போது, குட்டிகளிடம் சொல்லிட்டுப் பிரியாவிடை பெற்றுக் கொண்டு போகிறது. அதுங்க "மியாவ்" "மியாவ்"னு கத்திட்டு ஒண்ணை ஒண்ணு சுத்திச் சுத்தி வந்துட்டு, ஏதோ புரிஞ்சாப்பலே குட்டிகள் அமைதியாப் போய்ப் படுத்துக்கிறதும், இந்த அம்மாப் பூனை எங்கேயோ போயிட்டு வரதும், எப்படியோ குட்டிகள் கத்தற சத்தம் கேட்டு ஓடி வந்து பார்க்கிறதுமாய் ஒரே பாசமழை தான் போங்க!

இது இவ்வாறிருக்க இப்போ இன்னொரு சாம்பல் கலர் பூனையும் வந்திருக்கு. இது பார்க்க நாட்டு/காட்டுப் பூனை சைஸில் பெரிசா இருக்கு. இதுவும் குட்டி போடத் தயாரா வந்திருக்கு போலிருக்கு. அதே பாத்ரூமிற்குப் போட்டி போட்டுட்டு இருக்கு. ஆனால் தேன் கலர் பூனை இன்னும் காலி செய்யலை. அதைப் புக்ககத்துக்கு அனுப்பாமல் இதை எப்படி உள்ளே விடறதுனும் தெரியலை. தேன் கலர் பூனையோட மாமியார் அதிகமாய் நகை, பாத்திரம், பண்டம்னு கேட்கிறாங்க. அதைப் பார்க்கிறதா? இல்லை பிரசவத்துக்குக் காத்திருக்கிற இதைப் பார்க்கிறதானு புரியலை. மேலே, மேலே ஒரே செலவா வைக்குதுங்க இரண்டுமாச் சேர்ந்து, கொஞ்ச நாள் கழிச்சு வச்சுக்கக் கூடாதோ? இப்போ எங்கே போவேன் பணத்துக்குனு புரியலை! ராத்திரி எல்லாம் தூக்கமே வரலை கவலையினாலே. யாராவது பணம் கொடுத்து உதவுங்க, இல்லைனா பூனை இரண்டையும் பிடிச்சுட்டுப் போங்க!

ஞாயிறு அன்று குரோம்பேட்டையில் ஒரு கல்யாணத்திலே கலந்துக்கப் போயிட்டுத் திரும்பி வரும்போது காலை பத்து மணி தான் ஆகி இருந்தது. ஆனால் வெயில் சுட்டெரித்தது. நிஜமாவே கை எல்லாம் வெயில் பட்டு எரிச்சல் ஜாஸ்தியா இருந்தது. இப்போவே இப்படி இருக்கே, இன்னும் அக்னி நட்சத்திரம்னா என்ன செய்யப் போறோமோனு கவலைப் பட்டுட்டு இருந்தேன் பாருங்க. திங்கள் அன்று என்னோட ம.பா. வாசலில் கீரைக்காரி ரொம்பத் தொந்திரவு செய்தாள்னு அவள் கிட்டே மனைத்தக்காளி வாங்கினார் ஒரு 2 ஆழாக்கு. அதை திங்கள் அன்று மோரில் ஊறப் போட்டு வைத்தேன். செவ்வாய் அன்றில் இருந்து சென்னையில் காலம் இல்லா காலத்தில் மழை, அதுவும் லோ ப்ரஷரில் மழை. சும்மாவே அங்கங்கே, நம்ம விஷயம் தெரிஞ்சு எங்க ஊரில் மழை இல்லை, நீங்க வந்து வத்தல் போடுங்க, வடாம் காய வையுங்கனு கூப்பிடறாங்க, இப்போ என்னன்னா, கோடை காலம் மாதிரியே இல்லை சென்னை! வெயிலின் தாக்கமே தெரியலை 2 நாளா. தினம் தினம் இப்படி ஏதாவது வாங்கிப் போடுன்னு என் ம.பா. யோசனை சொன்னதோடு இல்லாமல், நீ ஆன்மீகமே அதிகம் எழுதறதாலே வருணபகவானுக்கு ரொம்பவே சந்தோஷம் வந்துடுச்சு போலிருக்கு, வேணும்னா அவருக்கு நன்றி தெரிவிச்சு ஒரு மெயில் கொடுத்துடுனு சொல்லிட்டு இருக்கார். என்ன செய்யலாம் சொல்லுங்களேன்!

Monday, March 10, 2008

சில எண்ணங்கள்!

மகளிர் தினத்துக்கென்று மிச்சம் வைத்திருந்த பதிவைப் போடலாமா, வேண்டாமானு ஒரே யோசனை. மகளிர் தினம் என்னமோ போயிடுச்சு, இனிமேல் அடுத்த வருஷம் தான், ஆனால் மகளிர் நிலை என்ன மேம்பட்டு விட்டதானு தான் எனக்கு இன்னும் புரியலை. தொலைக்காட்சிகளும், அவங்க பங்குக்கு எல்லாரையும் கூப்பிட்டுப் பேட்டி கண்டு ஒளிபரப்பி, ஒலிபரப்பி, படங்கள் போட்டுக் கொண்டாடியாச்சு. "பொதிகை"மட்டுமே வழக்கம்போல் வித்தியாசமான நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறது. ஆனால் என்னால் பார்க்க முடியலை. வழக்கம்போல் இதுவும் டாட்டாவின் சதியாகவே போனது. போன ஜன்மத்துப் பகையோ என்னமோ தெரியலை, டாட்டாவுக்கும் எனக்கும், சரியா வெள்ளிக்கிழமை அன்று பார்த்து, கேபிள் ஆபரேட்டர்கள் மெயிண்டனன்ஸ் வேலையை ஆரம்பிச்சாங்க. என்னடா ஒண்ணுமே வரலையேன்னு பார்த்தால், மெயிண்டனன்ஸ் என்று சொன்னார்கள். சரினு பொறுத்திருந்தால் கொஞ்ச நேரத்தில் "டாடா ஸ்கை" மூலம் சன் தொலைக்காட்சியும், கலைஞர் தொலைக்காட்சியும் வந்தது. "பொதிகை"யும் வந்துடும், வந்துடும்னு பார்த்தால் வரவே இல்லை, மறுநாள் மாலை வரை! காலையில் இருந்த முக்கியமான ஒரு நிகழ்ச்சி, ரொம்பவே ஆவலாய் எதிர்பார்த்திருந்த நிகழ்ச்சி பார்க்கவே முடியலை. இப்போ மறுபடி நேற்றில் இருந்து எஸ்சிவியின் ஒளிபரப்புத் தொடங்கி விட்டது. நான் நல்ல நிகழ்ச்சிகளைப் பார்க்கவே கூடாதுனு டாட்டா ஏற்பாடு செய்து நடந்த சதினு நினைக்கிறேன், வெள்ளியும், சனியும். கணேசன் தொலைபேசினப்போ கூடச் சொன்னேன், உங்க அண்ணா சதியா இருக்கும் போல் இருக்கேனு, அவரும் ஆமாம், நான் சொன்னேன்னு யார் கிட்டேயும் சொல்லவேண்டாம்னு சொல்லிட்டார். அம்பி, ஓகேயா? இதான் கணேசன் என்னோட பேசினதில் ஹைலைட்டான விஷயம்! :P ம்ம்ம்ம் பொதிகையின் டைரக்டர் ஸ்ரீதர் பற்றிய தொகுப்பும் குறிப்பிட்டுச் சொல்லும்படியா இருக்கு. இப்படி ஒரு அருமையான டைரக்டருக்கு வந்த கதியை நினைச்சா ரொம்ப வருத்தமாவும் இருக்கு. என்றாலும் மறக்காமல் பொதிகை மட்டுமே அவர் பற்றிய தகவல்களை விடாமல் தருகிறது.

ஒரு திரைப்படமாவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது ஆரம்பத்தில் இருந்து பார்க்கணும்னு நினைச்சால், அன்னிக்குத் தான் அதைப் பார்க்கவே முடியாது. அன்னிக்குனு முக்கிய விருந்தாளி வருவாங்க, இல்லைனா மின்சாரம் இருக்காது, எல்லாம் இருந்தால் மறந்து போகும், இல்லைனா வெளியே போகவேண்டி வந்திருக்கும். போனவாரம் தப்பிப் போய்த் தொலைக்காட்சியை ஒவ்வொரு சானலாய் மாற்றிக் கொண்டே வந்தப்போ அப்போத் தான் டைடில் ஆரம்பிச்சிருந்த தெனாலி படம் ராஜில்? ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். படம் பார்த்தாச்சு, பாவத்தைப் போக்கிக் கொண்டாச்சு, என்றாலும், "ஆலங்கட்டி மழை" பாட்டுக்காக மறுமுறையும் பார்க்கலாமேனு பார்த்தேன், என்ன இருந்தாலும் கமல் நடிப்பை ஜெயராம் ரொம்ப அனாயாசமாய்த் தூக்கிச் சாப்பிட்டுட்டார்னே சொல்லலாம், குண்டு வைக்கிற காட்சிகளைத் தவிர, அதை மட்டும் இன்னும் என்னால் ஏத்துக்க முடியலை, ஒரு டாக்டர், அதிலும் குடும்பத்தில் பற்றும், பாசமும் அதிகம் உள்ள ஒரு மருத்துவரால் இந்த அளவுக்கு யோசிக்க முடியுமா என்று நகைச்சுவைக்காகக் கூட எடுத்துக் கொள்ள முடியவில்லை. டிவிடினால் அதை ஓஓஓஓஓட்டிடலாம், இப்போ வேறே சானல் மாத்திப் பார்க்கிறதைத் தவிர வேறே ஒண்ணும் செய்ய முடியலை.

நேற்றுப் பொழுதுக்கு என்ன படம் பார்க்கிறதுன்னு ஒவ்வொரு சானலாய்த் திருப்பினால் தமிழ்ப்படங்கள் எதுவும் அப்படி ஒண்ணும் நல்லா இல்லை, கடைசியில் தூர்தர்ஷன் (நமக்கு இது ஒண்ணுதான் லாயக்கு போலிருக்குனு தோணுது!) நேஷனலில், "ரங்கீலா" படம் (எத்தனாவது முறைனு தெரியலை) ஒளிபரப்பிட்டு இருந்தாங்க, சரி பரவாயில்லைனு அதையே பார்த்தேன். பாவம் ஊர்மிளாவுக்கு டிரஸ் தைக்கத் துணி வாங்க நேரமே இல்லை தயாரிப்பாளருக்கும், டைரக்டருக்கும். என்றாலும் ஊர்மிளாவின் நடிப்புப் பாராட்டும்படியாகவே இருந்தது,சில காட்சிகளைத் தவிர. சில காட்சிகளில் ஸ்ரீதேவியையைக் காப்பி அடிக்கிறாங்கனு எண்ணம் எப்போவும் வரும், இப்போவும் வந்தது. முடிவு தெரிஞ்ச ஒன்று என்றாலும், சராசரிப் பெண்களைப் போல் நகைக்கும், நல்ல ஆடைக்கும், கொண்டாட்டங்களுக்கும் ஆசைப் படும் பெண்ணாக இருந்தாலும், வாழ்க்கை என்பது தனி, அதுக்குத் தேவை இவை இல்லை என்பதைச் சொன்னாலும், ஆமீர் கானைத் தேடி வந்து கண்டுபிடிக்கும் இடத்திலேயே படம் முடிஞ்சுடுது, என்னைப் பொறுத்தவரை. அதுக்குப் பின்னர் எல்லாமே மெலோ டிராமா தான். சராசரியான வெகு சாதாரணமான ஒரு ஆணுக்கும், கீழ் மத்தியதரக் குடும்பத்துப் (????) பெண்ணுக்கும், உள்ள காதலைக் காட்டுவது என்பதால் வசனங்களின் தேவை இருக்கவேண்டும் என்று நினைத்திருக்கலாம், எனக்கு என்னமோ இதில் மணிரத்னம் கூட மெளனராகம் படத்தில் தப்புச் செய்து விட்டார்னு தோணும். (ஹை, நானும் அறிவுஜீவியாகி விட்டேனே?) இவர் நடிப்பு பாராட்டும்படியாக இருந்தது எனக்குத் தெரிஞ்சு ஒரே ஒரு படத்தில் தான். ம்ம்ம்ம்ம்ம்??? மனோஜ் வாஜ்பாயுடன் ஜோடியாக இவர் நடிச்ச அந்தப் படம் பத்தி ஏற்கெனவே எழுதி இருந்தாலும் ஒவ்வொரு முறையும் படம் பேர் நினைவுக்கு வரதில்லை.

நேற்றைய தினமலரில் புத்தக விமரிசனத்தில் "நரசையா" அவர்களின் நீண்ட புத்தக விமரிசனம் அந்தப் புத்தகத்தைத் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டியது. நரசையாவின் எழுத்துக்கள் தான் என்னைச் சுதந்திரப் போராட்டத்தின் மறுபக்கத்தைத் தேடிப் பிடித்துப் படிக்க வைத்தது. இப்போதும் அவர் எழுதி உள்ள இந்தப்புத்தகம் ஆவலைத் தூண்டுகிறது. எப்போ கிடைக்குமோ தெரியலை! விவேகானந்தா கேந்திரம் வெளியீடான இந்தப் புத்தகத்தைப் படித்தவங்க யாராவது இருக்காங்களானும் தெரியலை. இது மாதிரியாக நான் படிக்கக் காத்துட்டு இருக்கும் புத்தகங்கள் நிறையவே இருக்கு. முக்கியமாய் சீனி.விஸ்வநாதனின், பாரதி பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய புத்தகங்களின் தொகுப்பு. ஏற்கெனவேயே பெரியசாமி தூரன் எழுதி இருக்கின்றார் என்றாலும் இவ்வளவு விவரங்களின் தொகுப்பு அதில் இல்லை. மிகச் சிறிய அளவிலான புத்தகங்களே அவை. குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பாடல்களைப் பற்றி மட்டுமே இருக்கும். இப்போது மீண்டும் பாரதியின், "மெல்லத் தமிழினிச் சாகும்" பற்றிய கேள்வி எழுந்திருக்கும் நிலையில், மீண்டும், மீண்டும் படிக்க ஆசைப் படுவது சீனி.விஸ்வநாதன் அது பற்றி என்ன கருத்துச் சொல்லி இருக்கார் என்பதும் தான். மற்றபடி இந்தப் பதிவு ஒரு உரத்த சிந்தனை தான். குறிப்பாய் எதுவும் இல்லை.

Friday, March 07, 2008

கும்மியடி! தமிழ்நாடு முழுதும் குலுங்கிடக் கும்மியடி!

"பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்
பேசிக்களிப்போடு நாம் பாடக்
கண்களிலே ஒளி போலே உயிரில்
கலந்தொளிர் தெய்வம் நற் காப்போமே! "

கும்மியடி! தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கை கொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோமென்று கும்மியடி!"

பாரதி இந்தப் பாட்டைப் பாடியது எப்போதுனு தெரியலை, இருந்தாலும் பாரதி பாடிய காலத்தில் பெண்கள் சற்று ஒடுக்கி, அடக்கித் தான் வைக்கைப் பட்டிருந்திருக்கின்றனர். ஆகவே பாரதி இவ்வாறு பாடினான், சரி, ஆனால் நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின, என்று கும்மி அடிக்கும் நிலையில் இன்ரு நாம் இருக்கிறோமா, என்றால் இல்லை. இப்போது பெண்களைப் பிடித்திருக்கும் புதிய பிசாசு, "மெகா தொடர்" என்னும் பிசாசு, அது போயிடுச்சா என்றால் இல்லைனு தான் சொல்லணும். மூட நம்பிக்கைகளைக் களைய வேன்டிய தொலைக்காட்சிகளின் தொடர்களிலே, அதை அதிகரிக்கும் வண்ணம், போலி சாமியாரிடம் சென்று ஜோசியம் பார்ப்பது, எதிரி அழியவேண்டி அவரிடம் சென்று வழி கேட்பது, இன்னும் சில தொடரில் , இந்த சூன்யம் வைக்கிறதுனு சொல்லுவாங்களே, அதுவே வைக்கிறாப்போல எல்லாம் வருது. நேற்று ஒரு தொலைக்காட்சித் தொடரில் திருமணம் ஆகும் முன்னரே கர்ப்பம் அடைந்த ஒரு பெண் அதைப் பற்றிய செய்தியைத் தன் அண்ணனிடம் சர்வ சாதாரணமாய்க் "கடையில் போய்க் கத்தரிக்காய் வாங்கினேன்" என்று சொல்லும்படியான அலட்சிய பாவத்தோடு சொல்லுவதும் இல்லாமல், தான் வாழப் பிறரை அழிப்பேன் என்றும் ரொம்பவே சந்தோஷமாய்ச் சொல்லுகிறாள். என்னே புதுமைப் பெண்? இப்படி அல்லவோ இருக்க வேன்டும்! இப்படி நம்மோட சொந்தக் காசை கொடுத்துத் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கி, சொந்தக் காசிலே கேபிளுக்கும் பணத்தை அழுது, சொந்தச் செலவில் சூன்யம் வச்சுக்கிறதிலே தமிழ்நாட்டுப் பெண்களை யார் மிஞ்ச முடியும்? அடிப்போம் கும்மி அனைவரும் சேர்ந்து!
"கும்மியடி தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கை கொட்டிக் கும்மியடி!"

"ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை என
எண்ணி இருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற
விந்த மனிதர் தலை கவிழ்ந்தார்!"

உண்மை தான், 18-ம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து பெண்கள் நிலைமை இவ்வாறே இருந்து வந்திருக்கிறது, குறைந்த பட்சமாய் இரன்டு நூற்றாண்டுகளுக்காவது. அதற்கு முன்னர் பெண்கள் இவ்வாறு இருந்ததாய்த் தெரியவில்லை. சங்க காலத்தில் பல தமிழ்ப் புலவர்கள் பெண்களாய் இருந்திருக்கின்றனர். வேதம் படித்த பெண்களும் இருந்திருக்கின்றார்கள். பெண்களுக்குச் சம உரிமை என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் பெண்களின் உரிமைகள் மதிக்கப் பட்டே வந்திருக்கிறது. என்றாலும் இடையில் ஏற்பட்ட தொய்வுக்குப் பின்னர் தற்சமயம் பெண்கள் படிக்க அரசும் எவ்வளவோ வழியில் ஒத்துழைப்புக் கொடுக்கின்றது. பல சலுகைகள் கொடுக்கிறது. பெண்கள் தனியாக வீட்டை விட்டு வெளியே போவது கூட மறுக்கப் பட்டது போய் இப்போது வெளிநாடுகளுக்குக் கூடத் தனியாகச் சென்று வருகின்றார்கள். எல்லாம் சரி, ஆனால் அந்தப் படிப்பு எவ்வகையில் பெண்களுக்கு உதவி என்றால் சொல்லக் கொஞ்சம் தயக்கமாகவே உள்ளது. பெரும்பாலான படித்த பெண்கள், தவறான வழிகாட்டுதலினால், தவறான உறவுகள் வைத்துக் கொள்ளுவதும், அதை நியாயப் படுத்துவதும் தான் நடக்கின்றது. முதல் கல்யாணத்தை மறைத்தோ, அல்லது அதற்காக முறையான விவாகரத்துச் செய்யாமலோ, இன்னொருவரைத் திருமணம் செய்யும் பெண்கள் தான் அதிகம் ஆகி இருக்கிறார்கள் என்பதோடு மட்டுமில்லாமல் இவர்கள் அனைவரும் சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில், பணம், படிப்பு யாவற்றிலும் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் என்பதும் கவனிக்கத் தக்கது. ஆகவே பெண்களுக்குச் சம உரிமை கிடைச்சாச்சு!
"கும்மியடி!தமிழ்நாடு முழுதும்
குலுங்கிடக் கை கொட்டிக் கும்மியடி!"

"மாட்டை அடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொன்டு வந்தே
வீட்டினில் எம்மிடங்காட்ட வந்தார் அதை
வெட்டி விட்டோமென்று கும்மியடி!"

பெண்கள் வீட்டு வேலை செய்வதற்கு மட்டுமே என்றிருந்த காலத்தில் எழுதப் பட்டது என்றாலும், இன்றைக்கும் அதிக அளவில் பெண்கள் தான் வீட்டை நிர்வாகம் செய்யவும் செய்கின்றார்கள். அந்த வகையில் இறைவனுக்கு நன்றி. ஆனாலும் சில பெண்கள், கணவனின் கொடுமைக்கு ஆளானாலும், பெருமளவில் பெண்கள், தங்கள் தவறான உறவினால் ஏற்பட்ட உறவை விட முடியாமல் கணவனையோ, மாமியாரையோ, புக்ககத்து மற்ற மனிதர்களையோ போலீஸில் புகார் கொடுக்கும் சம்பவங்களும் இருக்கின்றது. பெண்கள் செய்யும் கொடுமையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் வெளியே வாய் திறந்து சொல்லவும் முடியாமல் தவிக்கும் ஆண்களும், மாமியார், மாமனார்களும் உண்டு. நம்ம தொலைக்காட்சிகளும் இந்த விஷயத்தில் மாமனாரைப் பழிவாஙுவது முதற்கொண்டு, கணவனைப் பழி வாங்குவது வரை அனைத்தையும் சொல்லிக் கொடுத்து விடுகிறதே, அப்புறம் அதை எப்படி முயன்று பார்ப்பதாம்? அப்பாவையே அடிப்பது போலவும், காதலிக்கும் காதலனையோ, கணவனையோ அடிப்பது போலவும் காட்ட நிறையவே இயக்குநர்கள் இருக்கின்றார்கள், இவங்க எல்லாம பெண் விடுதலைக் காரர்கள். இதைப் பார்த்து ரசித்துச் சிரிக்கும் ஒரு கூட்டம் இருக்கும் வரையில் இம்மாதிரித் தொடர்களுக்கும் பஞ்சமே இல்லை. அவங்களும் பிழைக்க வெண்டாமா? ஆகவே கும்மி அடிப்போம் வாங்க!
"கும்மியடி!தமிழ்நாடு முழுதும்
குலுங்கிடக் கை கொட்டிக் கும்மியடி!"


நாளைக்குப் பெண்கள் தினம், நாளைக்கு என்னோட கணினி என்ன செய்யும்னு எனக்கே தெரியாத ஒன்று. ஆகவே இன்னிக்கே போட்டுட்டேன், இது இன்னும் முடியலை, நேரமும். கணினியும் சரியா இருந்தா உங்களுக்கும் அதிர்ஷ்டம் இல்லாமலும் இருந்தால் மீதிப் பகுதி நாளைக்கும் வரும். வருஷா வருஷம் இது ஒண்ணு, இந்தத் தினம், அந்தத் தினம்னு வருது, இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு அன்னையர் தினம்னு வரும், என்னைப் பொறுத்த வரை, பெண்கள் தினமோ, அன்னையர் தினமோ, ஊனமுற்றோர் தினமோ, தந்தையர் தினமோ, நண்பர்கள் தினமோ, நாம் தினம் தினம் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்தாலே போதும், நம்மளாலே முடிஞ்சதைச் செய்தாலே போதுமானது. நம் சக்திக்கு உட்பட்டதே போதும்.

யோசனை சொல்லுங்க ப்ளீஸ்!

யப்ப்ப்ப்ப்பாஆஆஆஆ, இந்தப் பூனை ரொம்பவே பிடிவாதமா இருக்கு. எல்லாம் எங்க வீட்டிலே குட்டி போட்டிருக்கே, அதைத் தான் சொல்றேன், ஒரே அடம், குட்டி போட்டு ஒரு வாரம் ஆயிடுச்சு, போனால் போகுது, பிள்ளை, குட்டியோட இருக்கேனு, சாதம் மோர் விட்டுக் கொடுத்தால், அதைச் சாப்பிட்டுட்டு, என்னையே பார்த்து மிரட்டுது. துணி உலர்த்த வீட்டின் கிழக்குப் பக்கத்துக்குப் போகவே முடியலை. எப்போவும் அங்கே உள்ள குளியல் அறை வாசலில் உட்கார்ந்துட்டு, மிரட்டிட்டே இருக்கு. அந்தப் பக்கமே வராதேனு சொல்லுது. அங்கே தான் துணி காய வைக்கக் கொடி கட்டி வச்சிருக்கோம். வீட்டில் வெயில் சிறிது நேரமாவது வரும் இடமும் அது மட்டும் தான். இந்த அநியாயம் எங்கேயானும் உண்டா? வீட்டின் கொல்லைப்புறம் பெருச்சாளி எடுத்துட்டது. அதை விரட்டிட்டு, சமையல் அறையில் கொஞ்சம் சுத்தப் படுத்தும் வேலை செய்வோம் என்றால் அணில் குட்டி போட்டு இருக்கு. கூடு கலையாமல், அதை எடுத்து வச்சுட்டுச் சுத்தம் செஞ்சு பின்னர் அதை மறுபடி வைக்கிறதுக்குள்ளே, அம்மா அணிலா, அப்பா அணிலா தெரியலை, ஜன்னலில் உட்கார்ந்து கொண்டு, வெடுக், வெடுக், னு ஒரே கூச்சல்.

ஜன்னலைச் சாதாரணமாய் முழுக்கத் திறக்கிறதில்லை. வலை போட்டிருக்கும். ஆனால் இந்த அம்மா அணில் எப்படியோ ஜன்னல் திறந்து வைக்கும் நேரமாய் உள்ளே வந்துட்டு, வலையைக் கடிச்சு வழி ஏற்படுத்திட்டுப் போயிட்டுப் போயிட்டு வருது. சரி, போகட்டும்னு வலையை எடுத்து வச்சிருக்கோம் அணிலுக்காக. அந்த நன்றி கூட இல்லை, பாருங்க, சமைக்கும்போது குறுக்கேயும், நெடுக்கேயும் போறதும் வரதும், ஜன்னல் கதவைச் சாத்தினால் ஒரே கூப்பாடு போடறதுமாய் அமர்க்களம் பண்ணுதுங்க. அதை மிதிக்காமல் இருக்கோமே அதுவே பெரிய விஷயம். குடுகுடுனு ஏதோ வச்சதை எடுக்கறப்போல ஜன்னல் வழியா தென்னை மரத்துக்கு ஒரே ஜம்ப். அப்புறம் அங்கே இருந்து வீட்டு ஜன்னலுக்கு ஒரே ஜம்ப்.

இப்போ இந்தப் பூனை வீட்டின் சைடு பக்கமே வராதேனு சொல்லிட்டு இருக்கு. இத்தனைக்கும் காக்காய்க்கு வைக்கிற சாதம் எல்லாம் கூட இதுவே தான் சாப்பிடுது. காக்காய் காம்பவுண்டு சுவரில் உட்கார்ந்து கொண்டு பரிதாபமாய்ப் பார்த்துட்டு இருக்கும். ஆனால் இந்தக் காக்காய் இருக்கு பாருங்க, அது கூடு கட்டினது என்னமோ மாமரத்தில் தான். மாமரம் பட்டுப் போச்சுனு போன மாசம் வெட்டினப்போ அதிலே காலியாக இருந்த காக்காய்க் கூட்டை எடுத்தால் இரும்புக் கம்பியை எல்லாம் வச்சுக் கூடு கட்டி இருக்கு ரொம்பவே அழகாய், கம்பி தான் அஸ்திவாரம் போலிருக்கு. அதன் மேலே கூட்டைக் கட்டி இருக்கு, சின்னச் சின்ன நார், வைக்கல், சணல், நூல், போன்றவைகளை மெத் மெத்னு ஆக்கிட்டு இத்தனை அழகாய் நம்மளாலே எல்லாம் முடியாது, அதுங்க தன்னோட குஞ்சுகளுக்கும், குட்டிகளுக்கும் பண்ணற ஏற்பாடுகளைப் போல நம்மாலே முடியுமா? நாம செய்யறோம், ஆனால் பிரதிபலனன எதிர்பார்க்கிறோம், அதுங்க குஞ்சோ, குட்டியோ பெரிசா ஆனதும், அதனதன் வாழ்க்கை அது, அதுக்கு. அப்பாவோ, அம்மாவோ எதுவும் எதிர்பார்க்காது.

வாசலில் கேட்கவே வேண்டாம். பைரவர்கள் வருவாங்க, போவாங்க, இஷ்டத்துக்கு இருப்பாங்க, அவங்களுக்கு இஷ்டம் இருந்தால் எழுந்துப்பாங்க, இல்லைனா, என்ன கெஞ்சினாலும் இடத்தை விட்டு அசையாதுங்க. ஆனால் சாதம் வச்சால் கூடச் சாப்பிடாதுங்க சில சமயம். வந்து பார்த்துட்டுப் போயிடும், பத்தாக் குறைக்கு வாசலில் ஒரு பெரிய வேப்ப மரம் இருக்கா, அதன் நிழல் தெருவின் பாதியை அடைச்சுக்குமா, எங்க காம்பவுண்டுக்கு இரண்டு பக்கமும், தெருவில் உள்ள எல்லார் வீட்டு வண்டிகளும் நிறுத்தப் படும். சில சமயம் வீட்டு வாசலில் கதவுக்கு நேரேயே கூட நிறுத்திப்பாங்க, அது அவங்க இஷ்டம், நாம் கேட்க முடியாது, கேட்கவும் கூடாது. நமக்கு வெளியே போக முடியலைனாலோ, வண்டியை எடுக்க முடியலைனாலோ அவங்களா பொறுப்பு? நாம ஏன் வீட்டைக் கட்டிட்டுச் சும்மா இருக்காம, மரம் செடி, கொடினு வைக்கிறோம், அது தப்பில்லையா? அதனால் அப்படித் தான் இருக்கும். சில சமயம் வண்டியை நிறுத்திட்டு டிரைவர் எங்கேயாவது போயிடுவார். யாருக்கு வந்ததுனு தெரியாமல் யாரைக் கூப்பிடறதுனும் தெரியாம நாம முழிச்சா அவங்க என்ன பண்ண முடியும். ரோட்டில் தானே நிறுத்தறோம்னு சொல்லுவாங்க, இல்லையா, ரோட்டுக்கு வராப்பலே வீட்டைக் கட்டினது தான் நம்ம தப்பு. யாராவது யோசனை சொல்லுங்களேன், ப்ளீஸ்!