எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, November 29, 2021

சென்னை மழையும் நானும்!

 தண்ணீருக்கே ததிங்கிணத்தோம் போட்டுக் கொண்டிருந்த தமிழ்நாட்டில்/முக்கியமாகச் சென்னையில் இப்போது எங்கே பார்த்தாலும் தண்ணீர்! தண்ணீர்!  இன்னிக்குச் சென்னையில் ஒரு முக்கியமான கல்யாணம். நேற்றே போயிருக்கணும். வண்டி எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டோம். ஆனால் இந்த மழையால் போகவில்லை. விழுப்புரம்/செங்கல்பட்டுப் பக்கம் உள்ள மழை நீரையும் வெள்ளத்தையும் பார்த்துவிட்டுப் போவதற்குத் தயக்கம். ஏற்கெனவே மதுராந்தகம் ஏரி நீரில் விட்டுக் கொண்டிருந்த உபரி நீர் ஏரி நிரம்பியதால் வெளியேற்றப்படுகிறது எனவும், அதனால் ரயில் தண்டவாளங்கள் தண்ணீரில் இருப்பதால் ரயில்கள் மெதுவாக இயக்கப்படுகின்றன என்றும் தகவல்கள் வந்தன.  ஆனால் திருமணத்தை நேரடி ஒளிபரப்பாகக் காட்ட ஏற்பாடு செய்திருந்தனர். நேற்றைய ரிசப்ஷனில் இருந்து இன்று திருமணம் சப்தபதி வரை பார்த்தோம். உண்மையில் சத்திரத்துக்குப் போயிருந்தால் இத்தனை வசதியாகப் பார்த்திருக்க முடியாது.  மிகவும் எதிர்பார்த்திருந்த திருமணம். நேரில் பார்க்க முடியலையேனு இருந்தது. ஆனால் அதை விட வசதியாக மொபைல் மூலம் பார்த்தாச்சு!


நேற்றுத் தண்ணீரில் கூடுவாஞ்சேரி அருகே முதலை என வீடியோ வாட்சப்புகளில் வந்தன. இன்னொரு வீடியோ கேகே நகரில் என்றது. என் அண்ணா பெண் அதெல்லாம் இல்லைனு மாவட்ட ஆட்சியரே சொல்லிட்டார். அது உண்மையில் டயர் என்றும் சொன்னாள். மக்கள் எப்படியெல்லாம் பயமுறுத்தப்படுகிறார்கள் என்பதும் புரிந்தது. இன்னொரு வீடியோவில் இளையராஜா வீட்டைக் காலி செய்து கொண்டு போகிறாப்போல் வந்தது. சரினு சித்தி அங்கே தானே இளையராஜா வீட்டுக்கு எதிரே இருக்காங்கனு தம்பிக்குத் தொலைபேசி விசாரிச்சா அது 2015 ஆம் ஆண்டு வெள்ளத்துக்கான வீடியோவாம். இப்படிப் பலவும் 2015 ஆம் ஆண்டிற்கான வீடியோக்கள் சுற்றுவதாகவும் தெரிவித்தார்.  என்ன மக்கள்! மனித  மனத்தின் பலவீனத்தையும் தற்போது இருக்கும் நிராதரவான நிலையையும் பயன்படுத்திக்கொண்டு அவர்களை மேலும் மேலும் பயந்தாங்கொள்ளிகளாக ஆக்கி மகிழும் சிலரின் வக்கிரமான எண்ணம் வேதனையில் ஆழ்த்துகிறது. 


படங்களுக்கு நன்றி கூகிளார். 

என் முதல் பிரசவத்தின் போது வேலைக்குப் போய்க் கொண்டிருந்தபடியால் அறுபது நாட்களே பிரசவ கால விடுமுறை. அறுபத்தி ஒன்றாம் நாள் கட்டாயம் அலுவலகத்தில் இருக்கணும். அதுக்கப்புறமாத் தேவைன்னா விடுமுறை எடுத்துக்கலாம். குழந்தையைப் பார்த்துக்க ஆள் இருந்தா வேலைக்கும் போய்க்கலாம். எனக்கு செப்டெம்பர் கடைசியில் பிரசவம் ஆனதும். நவம்பர் கடைசியில் விடுமுறை முடிந்து வேலையில் சேரணும். அலுவலகத்தில் இருந்து நினைவூட்டுக் கடிதமும் வீட்டுக்கு வந்திருப்பதாக நம்ம ரங்க்ஸார்  எனக்கும் மதுரைக்குக் கடிதம் எழுதி இருந்தார். குழந்தை பிறந்து கணக்குக்கு மாதம் மூன்று ஆனதால் (தமிழ் மாதக்கணக்கு) என் அப்பா/அம்மா என்னையும் குழந்தையையும் சென்னையில் கொண்டு விட முடிவு செய்து நாள் பார்த்தார்கள். நவம்பர் 29 ஆம் தேதி வேலையில் சேரணும். அதற்கு இரண்டு நாட்கள் முன்னர் மதுரையை விட்டுக் கிளம்பினோம். இப்போ குருவாயூர் விரைவு வண்டி என அழைக்கப்படும் வண்டி அப்போது காலை ஆறே கால் மணிக்கு மதுரையில் இருந்து சென்னைக்குப் போய்க் கொண்டிருந்தது. முதல் நாள் இரவே குருவாயூரில் இருந்து வந்து மதுரையை அதிகாலை அடைந்து அங்கிருந்து காலை ஆறேகாலுக்குக் கிளம்பிச் சென்னை நோக்கிச் செல்லும். அந்த வண்டியில் முன்பதிவு செய்திருந்தார்கள். காலை சீக்கிரமே எழுந்து அம்மா ரயிலுக்கு வேண்டிய உணவு வகைகள், குழந்தைக்குத் தேவையான வெந்நீர். உடனே கொடுப்பதற்கு வேண்டிய பால் எனத் தயாரித்து எடுத்துக் கொள்ள தம்பி அப்போது காலேஜில் படித்ததால் அவனை வீட்டில் விட்டு விட்டு நான், அப்பா, அம்மா குழந்தையுடன் சென்னைக்குக் கிளம்பினோம்.

நானும் அம்மாவும் குழந்தையுடன் சைகிள் ரிக்‌ஷாவில் ஸ்டேஷனுக்குப் போக அப்பாவும் தம்பியும் மூட்டை முடிச்சுக்களை முடிந்தவரை ரிக்‌ஷாவில் வைத்தது போக மிச்சத்தைத் தூக்கிக் கொண்டு ஸ்டேஷனுக்கு வந்தனர். ரயில் வந்ததும் எங்களுக்கான பெட்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டோம். நான்கு பேர் உட்காரும் ஒரு பக்கப் பலகையில் நாங்கள் 3 பேர் இருந்ததால் இடம் தாராளமாகவே இருந்தது. சாமான்களை வைத்துவிட்டு நான் ஜன்னலோரம் உட்கார்ந்து கொண்டு குழந்தையை எனக்கும் அம்மாவுக்கும் நடுவில் போட்டுவிட்டுத் தூங்கப்பண்ணிவிட்டுக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். ரயில் என்னமோ கிளம்பவே இல்லை. தம்பி என்னனு போய் விசாரித்த்தற்கு இஞ்சின் மாற்றணும்னு சொல்லி இருக்காங்க. சரிதான், சித்தரஞ்சன்லே இருந்து இஞ்சின் எல்லாம் வரணும் போலனு நாங்க கேலி பேசிக் கொண்டோம். பின்னர் ஒருவழியாக ஏழு மணிக்குக் கிளம்பியது.  வழியில் இட்லி, புளியஞ்சாதம், தயிர் சாதம் போன்றவற்றைச் சாப்பிட்டு முடித்தோம். குழந்தைக்கும் நானும் பால் கொடுத்து விளையாட விட்டுப் பார்த்துக் கொண்டோம்.  சாயந்திரமாய் ஐந்தேகால் மணிக்கு சென்னை/எழும்பூர் போகணும். மத்தியானம் இரண்டரை மணி இருக்கும் விழுப்புரம் வந்தது. விழுப்புரத்தில் அரை மணியாவது நிற்கும். எப்போதும் மத்தியானம் ஒரு மணிக்குக் காஃபி குடிச்சுப் பழகிய அப்பா காப்பி வாங்கி வரக் கீழே இறங்கினார். வண்டி கிளம்பறதுக்குள்ளே வரணுமேனு எனக்குக் கவலை. 

எனக்கு எப்போவுமே வண்டி நடுவில் நிற்கும் ஸ்டேஷன்களில் இறங்கி ஏதாவது வாங்கணும்னா கொஞ்சம் யோசனையா இருக்கும். அதுக்குள்ளே வண்டி கிளம்பிடுமோனு பயம் வரும். ஆனால் அப்பா காஃபி வாங்கி வந்துட்டார். கூடவே ஒரு செய்தியையும் கொண்டு வந்தார்.அது தான் வண்டி விழுப்புரத்தை விட்டுக் கிளம்புமா என்பது! விழுப்புரம்/செங்கல்பட்டு நடுவே மழையினால் தண்டவாளம் தண்ணீரில் மூழ்கி இருப்பதாகவும் வண்டியை மேலே செலுத்திக் கொண்டு போவது கடினமான காரியம் எனவும் பேசிக் கொண்டதாய்ச் சொன்னார். கவலை சூழ்ந்தது. நிலைமை புரியாமல் குழந்தை கத்தி விளையாடிக்கொண்டிருந்தாள்.  ஆனால் அதற்குள்ளாக வண்டி கிளம்பி மேலே சென்றது. அப்பாடா! என நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொஞ்ச நேரத்திலேயே ஒரு நீண்ட குரல் எழுப்பி விட்டு ஓய்ந்த இஞ்சின் தடாரென இழுக்கப்பட வண்டி சட்டென நின்றது. பின்னர் மெல்ல மெல்ல அப்படியே பின்னாலேயே போக ஆரம்பித்தது. யாருக்கும் எதுவும் புரியவில்லை.



Tuesday, November 23, 2021

வந்தோமே! வந்தோமே! கல்யாணத்துக்கு வந்தோமே!

 எனக்கு ஏற்பட்ட குழப்பத்திலும், கவலையிலும் தம்பி பையரிடம், இதுக்குத்தான் உன்னைச் சீக்கிரமா வானு சொன்னேன். இப்போப் பாரு! இங்கே கும்மிருட்டா இருக்கு. வெளிச்சமே இல்லை. நாங்க எங்கே வந்து உன்னைப் பார்ப்பது? அல்லது நீ எப்படி வந்து எங்களைக் கூட்டிப் போவாய்! ஒண்ணுமே புரியலை என்று படபடத்தேன்.  பின்னர் நானும் ரங்க்ஸுமாகக் கலந்து ஆலோசித்தோம். நல்லவேளையாக ஒரு மெழுகு வர்த்தி எடுத்து வந்திருந்தார். அதை ஏற்றிவிட்டு அந்த வெளிச்சத்தில் அவர் வெளியே சென்று ஒரு ஆட்டோ பிடிப்பதாகவும், அந்த ஆட்டோ ஓட்டலுக்கு வரேன்னு சொன்னால் நேரே ஓட்டலுக்குப் போயிடலாம் எனவும் இல்லை எனில் தம்பி பிள்ளை எங்கே இருக்கானோ அங்கே போகலாம்னும் சொன்னார். உடனே தம்பி பிள்ளையைக் கூப்பிட்டால் அவரும் அந்த நேரம் எங்களைத் தொடர்பு கொள்ள முயன்று கொண்டிருந்திருக்கார். ஆகவே அவர் எங்களைத் தொடர்பு கொண்டு துரைசாமி சப்வே அருகே வர மூடியுமானு கேட்க, எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. துரைசாமி சப்வே அருகே போவதே கஷ்டமாச்சே என நினைத்தபடியே கொஞ்சம் பயந்ததோடு அல்லாமல் சில நாட்கள் முன்னர் சப்வேயில் மூழ்கி இறந்த பெண் மருத்துவர் நினைவும் வந்து தொலைத்தது. ஆகவே அவரிடம் நான் துரைசாமி சப்வேக்கு எல்லாம் வரவில்லை என்று சொல்லிவிட்டேன். மறுபடி குழப்பம். அவரும் யோசனையில் ஆழ்ந்து போக நாங்களும் யோசிக்க ஆரம்பித்தோம்.

பின்னர் மறுபடி யோசித்ததில் தம்பி பையரே எங்களை அழைத்து எங்களை ஆர்யகௌடா ரோடு அயோத்யா மண்டபம் அருகே வர முடியுமா எனக் கேட்டார். அவசரமாக ரங்க்ஸைக் கலந்து ஆலோசித்ததில் அந்தப் பக்கம் மேடு எனத் தெரியவும் தம்பி பையரிடம் சரி எனச் சொன்னேன். உடனே அவரும் தாங்கள் காருடன் அயோத்யா மண்டபம் அருகே காத்திருப்பதாகவும் எங்களை ஓர் ஆட்டோ பிடித்துக்கொண்டு அங்கே வந்து சேரும்படியும், அங்கிருந்து அவர்கள் எங்களை ஓட்டலுக்குக் கூட்டிச் செல்வதாகவும் சொன்னார். உடனே மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சாமான்களை மாடிப்படி அருகே கொண்டு வைத்துவிட்டுப் பூட்டுவதற்குத் தயாராகக் கதவை வைத்துவிட்டு அந்தக் குறைந்த வெளிச்சத்திலேயே நம்மவர் ஆட்டோவைத் தேடிச் சென்றார். மாடிப்படி அருகே ஒரு நாற்காலியைப் போட்டுக் கொண்டு நான் சாமான்களுக்குக் காவலாக உட்கார்ந்திருந்தேன். பின்னால் இன்னொரு குடித்தனத்தின் வாயில் கதவு. இவர் போனவர் வரவே இல்லை. மெழுகுவர்த்தி காற்றில் அணையவா என பயமுறுத்திக் கொண்டிருந்தது. மணியைப் பார்த்தால் அப்போத் தான் ஆறு மணி ஆகப் போகிறது. ஆனால் இருட்டு என்னமோ நடு இரவு மாதிரி என்பதோடு அரை மணி நேரம் தான் கழிந்திருக்கிறது என்பதும் எனக்கு என்னமோ நாள்கணக்காகக் காத்திருப்பது போலவும் தெரிந்தது.

சிறிது நேரத்தில் ஒரு ஆட்டோவின் வெளிச்சம் காம்பவுண்டுச் சுவர்களில் பட்டு நான் உட்கார்ந்திருந்த இடத்தில் பிரதிபலிக்கக் கடவுளை இவர் ரங்க்ஸ் கொண்டு வந்த ஆட்டோக்காரராய் இருக்கணுமேனு வேண்டிக் கொண்டேன். இதுக்குள்ளாகப் பின்னாலிருந்து "யாரது?" என்னும் பெண்குரல் கேட்கத் திரும்பிப் பார்த்த நான் அங்கே நின்றிருந்த மாமியிடம், நாங்கள் பக்கத்து அபார்ட்மென்டுக்குத் தங்க வந்ததையும் இப்போ இங்கே மின்சாரம் இல்லை என்பதாலும், சாப்பாடு கிடைக்கவில்லை என்பதாலும் ஓட்டலுக்குப் போவதாய்ச் சொன்னேன். அதுக்குள்ளே ரங்க்ஸே வந்துவிட்டார். அவர் கொண்டு வந்த ஆட்டோத் தான் அது. அந்த மாமி உடனே தன் கையிலிருந்த டார்ச்சை அடித்து நல்ல வெளிச்சம் காட்டச் சாமான்களை மெதுவாக ரங்க்ஸ் ஆட்டோவில் ஏற்ற ஆட்டோக்காரர் அவற்றை ஆட்டோவில் நாங்கள் உட்கார இடம் இருக்கும்படி விட்டுவிட்டுக் கவனமாக வைத்தார். பின்னர் நான் ஏற வசதியாக ஆட்டோவை வாயிலுக்கு அருகே மேடான படியில் கொண்டு வந்து நிறுத்த நான் ஏறிக்கொண்டேன். மாடிக்கு வாடகைப் பணம் கொடுக்கச் சென்றிருந்த ரங்க்ஸ் அங்கிருந்து அந்த  மாமி காட்டிய வெளிச்சத்தில் ஆட்டோவுக்கு வந்து சேர்ந்து ஏறிக்கொண்டார். ஆர்யகௌடா ரோடை நோக்கி ஆட்டோ சென்றது. இல்லை, இல்லை ஊர்ந்தது.

ஆட்டோக்காரர் ஏற்கெனவே சொல்லிட்டார். தண்ணீரைப் பார்த்துப் பயப்படாதீங்க. நான் கவனமாக மெதுவாகப் போய் உங்களைக் கொண்டு சேர்த்துவிடுவேன். இரண்டு, மூன்று தெருக்கள் சென்றதும் இவ்வளவு தன்ணீர் இருக்காது. கவனமாக உட்காருங்க என்றார். ஆட்டோ மெல்ல, மெல்ல, மெல்ல, மெல்லச் சென்றது. தண்ணீர் இரு பக்கங்களிலும் வாரி அடித்தது. முன்னாலும் அப்படியே எண்ணினாற்போல் ஒரு சில ஆட்டோக்களும் ஒரே ஒரு காரும் தள்ளாடித் தத்தளித்துக் கொண்டிருந்தன. கிரி ரோடு, ஜூபிலி ரோடு தாண்டிக் கொஞ்சம் மேடான பகுதி வந்ததும் அங்கெல்லாம் மின்சாரமும் இருந்தது. தண்ணீரும் அவ்வளவாய்த் தேங்கவில்லை. சுமார் ஒரு அரை மணி நேரப் பயணத்தில் (சாதாரண நாட்களில் அவ்வளவெல்லாம் ஆகாது) ஆர்யகௌடா ரோடு அயோத்யா மண்டபம் வந்துவிட்டோம்.  நாலைந்து கார்கள் நின்று கொண்டிருந்தன. தம்பி பையர் எந்தக்காரில் இருக்கார்னு ஆட்டோக்காரர் கேட்க, நாங்கள் வெளியே தலையை நீட்டிக் கைகளை ஆட்டினோம். உடனே தம்பி பையரும் காரை விட்டு வெளியே வந்து கைகளை அசைத்துக் காட்ட,  அப்பாடா என நிம்மதிப் பெருமூச்சு வந்தது.

அதன் பின்னர் கார் ஓட்டுநர் வந்து என்னை மட்டும் அழைத்துக் கொண்டு முன்னால் உட்கார்த்தி வைத்து விட்டுப் பின் எல்லோருமாய்ச் சாமான்களை ஏற்றிக் கொண்டு டிக்கியில் வைத்து விட்டு ஆட்டோக்காரருக்கு நன்றி சொல்லிவிட்டு அவர் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டோம். நூறு ரூபாய் கேட்டார் ஆட்டோக்காரர். பேரமே பேசாமல் கொடுத்துட்டோம். பின்னர் வண்டி அங்கிருந்து கிளம்பி லக்ஷ்மண் ஸ்ருதி வழியாக வந்து சுற்றிச் சுற்றிச் சுற்றி மெயின் ரோடில் இருந்த ஓட்டலுக்குப் பின் வழியாகக் கூட்டி வந்து சேர்த்தார். ஒன்வே என்பதோடு மழைத் தண்ணீரைத் தவிர்க்கவும் வேண்டி அப்படி வர நேர்ந்தது.  ஓட்டலில் வந்து கீழே இறங்கியதுமே வீல் சேர் வேண்டுமானு ஓட்டல் ஊழியர் கேட்க வேண்டாம்னு சொல்லிட்டு மெல்ல மெல்ல நடந்தேன். கூடவே தம்பி பையர் அறை எண்ணைச் சொல்லி என்னையும் ரங்க்ஸையும் அறையில் கொண்டு சேர்க்கச் சொல்லி ஊழியரிடம் சொல்ல அவர் எங்களை அழைத்துச் சென்றார். அங்கே தம்பியும், தம்பி மனைவியும் எங்களை வரவேற்றார்கள். நாங்கள் எங்கள் அறைக்குச் சென்றோம். கொஞ்ச நேரத்தில்  தம்பி பையர் சாமான்களை ட்ராலியில் ஏற்றி இன்னொரு லிஃப்ட் மூலம் எங்கள் அறைக்கு எடுத்து வந்து சேர்த்தார். தம்பி பையரிடம் சூடாய்க் காஃபி வாங்கிக் கொடுனு சொல்லிவிட்டு அங்கிருந்த படுக்கையில் கை,கால்களை நீட்டிப் படுத்துவிட்டேன். பின்னே? மத்தியானம் பதினோரு மணியில் இருந்து படுக்கை கொள்ளாமல் அங்கேயும் இங்கேயும் அந்த இருட்டில் போய்க்கொண்டும் பேசிக்கொண்டும், யோசித்துக் கொண்டும் சாப்பாடு என்னும் பெயரில் எதையோ கொரித்துக் கொண்டும் இருந்தாச்சு. இப்போத் தான் உடல் ஓய்வு கேட்டது. அசதி தெரிந்தது.

Sunday, November 21, 2021

கார்த்திகைக் கொண்டாட்டம்!

 கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி!கார்த்திகை பதிவு. இங்கே சென்று பார்க்கவும்.

ஒரு பழமொழி சொல்லுவாங்க, ஏற்கெனவே மாமியார் பேய்க்கோலம் ; அதிலேயும் அக்லி புக்லி என்பார்கள். இல்லைனா ஏற்கெனவே துர்க்குணி, இப்போ அதிலும் கர்ப்பிணி என்பார்கள். அந்த மாதிரி நமக்கு ஏற்கெனவே உடம்பில் இல்லாத வியாதிகளே இல்லை எனலாம். அப்படி இருக்கையில் வியாழனன்று இரவு சாப்பிட்ட உணவால் வெள்ளியன்று காலை எழுந்திருக்கவே முடியலை. அப்படி ஒண்ணும் பெரிசாச் சாப்பிட்டுடலை. சாபுதானா கிச்சடி. எப்போவும் பண்ணுவது தான். அடிக்கடி சாப்பிட்டது/ சாப்பிடும் உணவு தான். இப்போ ஒத்துக்காமல் போனதுக்குக் காரணம் இந்த ஜவ்வரிசி நைலான் ஜவ்வரிசி. எப்போதும் போல் காலம்பரவே ஆழாக்குக்குக் குறைவாக ஜவ்வரிசி எடுத்து நனைத்து வைத்தாச்சு. சாயந்திரமாக, வேர்க்கடலை மைக்ரோவேவில் போட்டு வறுத்துச் சுத்தம் செய்து பொடி தயார் செய்து, உருளைக்கிழங்கைத் துருவித் தண்ணீரில் போட்டுனு எல்லாம் தயார் செய்து கொண்டு முறைப்படித்தான் பண்ணினேன். ஆனால் ஊறிய ஜவ்வரிசியில் மைதாமாவுப் பசை கிளறிய மறுநாள் ஒரு ஊசல் வாசனை வருமே அதுபோல் வந்தது. சரினு அதைக் கொட்டி இருக்கணும்.  இத்தனைக்கும் வெயில் கூடச் சுள்ளென்றெல்லாம் அடிக்கலை. எப்படி ஊசி இருக்கும்னு நினைச்சு, அதை மறுபடி சுத்தம் செய்து உப்புமாப் பண்ணிச் சாப்பிட்டாச்சு. அதனால் எல்லாம் வாசனை போகலை. அப்படியே இருந்தது.  அதோடு தான் சாப்பிட்டோம். அதான் தப்பு.  அன்னிக்கு (வியாழனன்று) இரவு படுத்ததும் தூங்கிட்டேன். 

இரண்டு, இரண்டரை மணி போல விழிப்பு வந்தது. வயிறு ஒரு மாதிரியாக உணர்ந்தேன். கல்லைப் போட்டாற்போல் கனமாக இருந்தது. ஜவ்வரிசியைச் சாப்பிட்டேனா கற்களாய்ச் சாப்பிட்டுவிட்டேனோ என எண்ணும்படி ஆயிற்று. என்ன செய்யறதுனு புரியலை. கழிவறை போகலாம்னு போனால் திடீரென வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. கூடவே வாந்தியும் அப்போதில் இருந்து ஆரம்பித்துக் காலை சுமார் ஐந்தரை மணி வரை தொடர்ந்தது. இன்னிக்குத் திருக்கார்த்திகை ஆச்சே. விளக்குகள் ஏத்தணுமேனு மனசு பரபரத்தது. ஆனால் உடல் சொன்னபடி கேட்கலை. ஆனாலும் எழுந்து கொண்டு வாசலில் கோலமெல்லாம் போட்டு விளக்குகளை ஊற வைத்துக் காஃபி, கஞ்சி கடமை முடித்துக் கொண்டு குளித்துவிட்டுப் பின்னர் வயிற்றைக் காயப் போடுவோம் என நினைத்துக் காஃபி ஒரே தரம் தவிர்த்து பின்னர் குடிக்காமல் அடுத்தடுத்து வந்த வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தேன். என்னோட வழக்கமான குடிநீரான சுக்கு, மிளகு, சோம்பு, ஜீரகம், லவங்கம், பட்டை, ஏலக்காய் சேர்த்துத் தட்டிப் போட்டக் குடி நீரைத் தயாரித்துக் கொண்டு அவ்வப்போது குடித்துக் கொண்டேன். மதியமும் வெகு குறைவாக உணவு எடுத்துக் கொண்டேன். மாத்திரை சாப்பிடணுமே அதுக்காக மட்டும். பின்னர் பொரியைப் பாகு செலுத்தி வைத்துக் கொண்டேன். காலையிலேயே வடைக்கு அரைத்து வைத்தாச்சு. மாமியார் வீட்டில் அப்பம் பண்ணுவதில்லை. 

பின்னர் மாக்கோலத்துக்கு அரைத்துக் கோலம் போடப் போனால் தலை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! வாசல் வராந்தாவிலும் நிலைப்படியிலும் மட்டும் கோலம் போட்டுவிட்டு விளக்குகள் வைக்கும் பலகைக்கு மட்டும் எப்படியோ போட்டு முடித்தேன். அதுக்குள்ளே ஓய்வு எடுத்துக்கொண்டு எழுந்து வந்த ரங்க்ஸிடம் விளக்குகளுக்குத் திரி போட்டுச் சந்தனம்,குங்குமம் வைக்கும்படியும் கேட்டுக்கொண்டேன். அவரும் செய்து கொடுத்தார். மெல்ல மெல்ல மணியும் நான்கரை ஆகிவிட்டது. பின்னர் மறுபடி உடல் சுத்தம் செய்து கொண்டு புடைவை மாற்றிக்கொண்டு நிவேதனப் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு தேங்காயும் உடைத்து வைத்துக் கொண்டு நாலைந்து விளக்குகளை ஏற்றினேன். மற்றவை அவர் ஏற்றினார். வாசலில் ஒன்றிரண்டு விளக்குகளை மட்டும் கொண்டு வைத்தேன். மற்றவற்றை எல்லாம் நான் சொல்லச் சொல்ல அவரே வைத்தார். இப்படியாக ஒரு மாதிரியாகக் கார்த்திகைக் கொண்டாட்டம் முடிந்தது. எப்படியோ இதையும் ஒப்பேத்திட்டேன்.  இன்னிக்குத் தான் வயிறு சரியாச்சு. அதான் பதிவுக்கும் தாமதம்.



எல்லாவற்றுக்கும் எப்போதும் போல் சாட்சியாக நம்ம ஶ்ரீராமர்.


உம்மாச்சிக்கு எதிரே பலகைகளில் ஒன்றில் வெண்கல விளக்குகள், இன்னொன்றில் அகல்கள். 


நிவேதனங்கள். சின்னப் பாத்திரத்தில் நெல் பொரி, ஹிஹிஹி, ஐந்து ரூபாய்க்கு வாங்கினார், தூக்கில் அவல் பொரி, பத்து ரூபாய்க்கு வாங்கினது, வடைகள், வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் உடைத்து வைத்தேன். பின்னர் நிவேதனம் விளக்குகளையும் சேர்த்துப் பண்ணி விட்டு தீபாராதனை காட்டிவிட்டு எல்லா இடங்களிலும் விளக்குகளை வைத்தோம். அந்தப் படமெல்லாம் எடுக்க முடியலை. விளக்குகளை வைக்க நேரம் ஆயிடும்னு முன்னாடியே எடுத்த படங்கள் இவை.


வீட்டு வாசலில் விளக்குகள். அதிகம் வைக்கவில்லை. இந்த வருஷம் குறைத்து விட்டோம். முடியலை இருவருக்குமே! :)

Friday, November 19, 2021

விடுதியில் இருந்து கிளம்ப முடியுமா?

 காலையில் நாங்கள் டிஃபன் சாப்பிட்ட சிறிது நேரத்துக்குள்ளாக ஶ்ரீராம் மொபைலில் அழைத்தார். நிலவரம் இருவருக்குமே தெரிந்திருந்ததால் நான் எங்கள் விலாசத்தையும் கொடுக்கவில்லை. அவர் இருக்குமிடத்தில் இருந்து வெகு தூரம் மாம்பலம் இருப்பதால் அதைப் பற்றிப் பேசாமல் பொதுவாகப் பேசிக் கொண்டோம். சிறிது நேரம் பேசிவிட்டு ஶ்ரீராம் மொபைலை வைத்த அடுத்த கணம் மீண்டும் அழைப்பு! ஙேஏஏஏஏஏஏ! என்னடா, என மொபைலை எடுத்தால் இஃகி,இஃகி,இஃகி, அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே ஶ்ரீராமின் பாஸ் வந்து வந்து பார்த்திருக்கார். ஶ்ரீராம் பேசிட்டு அவரிடம் ஃபோனைக் கொடுப்பார்னு நினைச்சிருக்கார். ஶ்ரீராம் அவரிடம் எதுவும் சொல்லாமலே ஃபோனை வைச்சுட்டு நல்லா வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பார் போல! ஏன்னா திரும்பக் கூப்பிடறச்சே ஶ்ரீராம் குரலில் அ.வ.சி.  ஹிஹிஹி, நானும் கண்டுக்காதது போல் பாவனையுடன் ஃபோனை வாங்கி ஶ்ரீராமின் பாஸுடனும் பேசிவிட்டு வைத்தேன். கொஞ்ச நேரம் மொபைலை நோண்டியதில் எ.பி. வாட்சப் குழுமத்தில் நான் மாம்பலத்தில் இருக்கும் தகவலைப் போட்டேனோ இல்லையோ, உடனே அப்பாதுரையிடமிருந்து செய்தி. "நான் உங்களைப் பார்க்க மாம்பலம் வரலாமா?" என. இரண்டு நாட்கள் சென்னையில் இருக்கப் போவதாகவும் எங்களை வந்து பார்க்கலாமா என்றும் கேட்டிருந்தார். அவர் சென்னையில் இருப்பதே எங்களுக்குத் தெரியாது. எங்கே இருக்கார்னும் தெரியாது. வரட்டுமானு கேட்கிறாரே என நம்மவரைக்கலந்து ஆலோசித்தேன்.

இங்கே பக்கத்தில் இருந்தால் வரச் சொல்லலாம்; இல்லைனா கூப்பிடாதே என்றார். நானும் அவர் எங்கே இருக்கார் எனக் கேட்டதற்குப் பள்ளிக்கரணை என்றார். அங்கிருந்து இங்கே வர நேரம் எடுக்கும். காரில் வந்தால் காரெல்லாம் வருமானு சந்தேகமா இருந்தது. ஏற்கெனவே இவர் வெளியே செல்கையில் மக்கள் நாலைந்து பேர்களாகக் குடும்பம் குடும்பமாகத் தேவையான சாமான்களுடன் பாதுகாப்பான இடம் தேடிச் சென்று கொண்டிருந்திருக்கிறார்கள். மின்சாரம் இப்போதைக்கு வராது எனவும் நீர் எல்லாம் வடிந்ததும் தான் திரும்ப விநியோகம் என்றும் சொன்னார்கள். ஆகவே மக்கள் அவரவர்கள்வீட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். இந்த நிலைமையில் அப்பாதுரையைப் பள்ளிக்கரணையிலிருந்து இங்கேயா வரச் சொல்லுவது?  அந்தச் சமயம் பார்த்துத் தான் தம்பி தொலைபேசி எங்களையும் தயார் நிலையில் இருக்கச் சொல்ல சாப்பாடு வருவதற்குள்ளாகச் சாமான்களைச் சேகரம் செய்து கொண்டு எல்லாவற்றையும் எடுத்துச் செல்ல வசதியாகத் தயார் நிலையில் வைத்தோம். தம்பியும் அவர்கள் குடும்பமும்  டெம்போ ட்ராவலர் மூலம் சாமான்களை எடுத்துக் கொண்டு வடபழனியில் உள்ள சத்திரத்துக்குச் சென்று முதலில் சாமான்களைப் போட்டுவிட்டுப் பின்னர் எதிரே உள்ள "க்ரீன் பார்க்" ஓட்டலில் அறைகள் பதிவு செய்யப் போவதாயும், அவர்கள் யாரும் சாப்பிடவில்லை எனவும், சாப்பிட்ட பின்னர் தம்பியின் பெரிய பிள்ளை எங்களை அழைத்துச் செல்லக் காருடன் வருவார் என்றும் சொன்னார். உடனே அப்பாதுரைக்கு வாட்சப் மூலம் நாங்கள் க்ரீன் பார்க் ஓட்டலுக்கு மாறப்போவதைத் தெரிவித்துவிட்டுச் செவ்வாய் காலை வரை அங்கே இருப்போம் என்பதால் அவர் சௌகரியப்படி வந்து பார்க்கலாம் என்று சொன்னேன். ஆனால் அவருக்கு அங்கே சூழ்நிலை எப்படி இருந்ததோ! நல்லவேளையாக வரேன்னு சொல்லலை. பிடிவாதம் பிடிக்கலை. ஹிஹிஹிஹி!

நானும் தம்பியிடம் நாங்கள் தயாராக இருப்போம் னு சொல்லிட்டு அன்னிக்கு ராகுகாலம் வருவதால் நாலரைக்கு முன் வரச் சொன்னேன். அது முடியுமானு தம்பிக்கு யோசனை. ஆறு மணிக்கு வரச் சொல்றேன் என்றார். நானும் சரினு சொல்லிட்டேன். அது எவ்வளவு தப்புனு அப்போவே புரிந்தது. அப்போ மணி இரண்டாகிக் கொண்டிருந்தது.  இதற்குள்ளாக என் மைத்துனர் மும்பையிலிருந்து தொலைபேசி மூலம் எங்கள் நிலவரத்தைத் தெரிந்து கொண்டிருந்தவர் தஞ்சாவூர் மெஸ்ஸில் சொல்லிச் சாப்பாடு கொண்டு வரச் சொல்றேன் என்று சொல்லிவிட்டு அங்கே பேசினால் அவங்க அந்தத் தண்ணீரில் சாப்பாடு எல்லாம் கொண்டு கொடுக்க ஆள் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அதே போல் காமாட்சி மெஸ்ஸிலும் காலை ஆகாரத்துக்காகப் பேசினப்போவே நீங்கள் ஆள் அனுப்பி வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லி இருந்தனர். பல இடங்கள் திறக்கவே இல்லை. ஏனெனில் மின்சாரம் இல்லாததால் எங்கு பார்த்தாலும் ஒரே இருட்டு. எப்படிச் சமைப்பது? கடைகளுக்கு வேலைக்கு வந்திருந்த ஆட்களும் அவரவர் குடும்பத்தைக் கவனிக்கச் சென்று விட்டனர்.  தம்பி சாப்பாடு வந்ததா எனக் கேட்டு விசாரித்துக் கொண்டே இருந்தார். ஒரு வழியாக இரண்டேகால் மணிக்குச் சாப்பாடு   வந்தது. அந்த மாமா சுமார் பத்துப் பேர் சாப்பிடும் அளவுக்குச் சமைத்துக் கொண்டு வந்திருந்தார். எங்களுக்கு ஏதேனும் ஒரு சாதம் போதும்னு ஏற்கெனவே சொல்லி இருந்தோம். ஆனால் அவர் வகை வகையாகக் கொண்டு வந்திருந்தார். அப்போதைய மனநிலையில் ஜாஸ்தி இறங்கவே இல்லை. சாப்பிட்டோம் எனப் பெயர் பண்ணிவிட்டுப் பாத்திரங்களைக் கொடுத்தோம். என்னிடம் மிச்சம் இருந்த பாலையும் அவரிடம் கொடுத்துவிட்டுப் பாத்திரத்தைத் தேய்த்து எடுத்து வைத்துக் கொண்டோம். அதுக்குள்ளே மழையும் ஆரம்பித்தது. நாங்கள் இருந்த ஹால் ஒரே இருட்டு. கொஞ்சம் போல் வெளிச்சம் படுக்கை அறையில். ஆகவே அங்கே போய் உட்கார்ந்தோம்.மற்ற இரு படுக்கை அறைகளும் கும்மிருட்டு. 

அப்போத் தான் புரிந்தது இந்த இருட்டில் சாமான்களை எடுத்துக் கொண்டு தம்பி அனுப்பும் காரில் எப்படிச் சாமான்களை எல்லாம் ஏற்றப் போகிறோம் என்பதே. அவரும் சொன்னார், வெளிச்சத்தோடு வரச் சொல்லு. தெருவில் வெளிச்சம் இருந்தால் தான் சாமான்களை ஏற்ற முடியும். அதோடு காரை இந்தச் சின்னத் தெருவில் ரொம்ப நாழி நிறுத்தினால் பிரச்னை ஆகும் என்றார். நானும் தம்பிக்கு இதைச் சொல்லச்சாப்பிட்ட உடனே பிள்ளையை அனுப்புவதாகச் சொன்னார். மணி நான்கு, நான்கரை எனப் போய்க் கொண்டே இருந்தது. ஆனால் யாருமே கூப்பிடவில்லை. காரும் வரவில்லை.  சுமார் ஐந்தரை மணி போல இருக்கும். தம்பி பிள்ளை அலைபேசி மூலம் அழைத்து அவர்கள் துரைசாமி சப்வே பக்கம் இருப்பதாகவும் அங்கே எல்லா வழிகளையும் மூடிவிட்டார்கள் எனவும் ஏற்கெனவே மாட்லி ரோடிலும் மூடி இருப்பதால் உள்ளே எப்படி வருவது என்பதே தெரியவில்லை எனக் கூறிவிட்டு என்ன செய்யலாம் என்றும் கேட்டார். எனக்கு ஒரே சமயம் படபடப்பும், இங்கிருந்து கிளம்பவே முடியாதோ என்னும் பயமும் வந்தது. 

Wednesday, November 17, 2021

பெண்ணிற்குத் திருமண வயது 40?

 எனக்கு முடியாமல் இருந்தப்போ எங்க வீட்டில் வீட்டு வேலைகளுக்கு உதவும் பெண்  எனக்காக சமயபுரம் மாரியம்மனிடம் வேண்டிக் கொண்டிருந்திருக்கிறார். அவர் அடிக்கடி சமயபுரம் போவார்.  போயிட்டு வந்து எனக்குப் பிரசாதம் கொடுப்பார். வாங்கிப்பேன். ஆனால் அவர் பிரார்த்தனை பற்றி என்னிடம் இப்போத்தான் சில நாட்கள் முன்னர் சொன்னார். அதுவும் நான் வெளியூர் போகும் அளவுக்குக் கிளம்புவது தெரிந்ததும் தான் சொன்னார். ஊருக்குப் போவதற்குச் சில நாட்கள் முன்னால் தான் சொன்னதால் ஊரில் இருந்து வந்ததும் போகலாம்னு நம்மவர் சொல்லிட்டார். இங்கே வந்ததில் இருந்து காலை வேளையில் சிறு தூற்றல், பெருந்தூற்றல், பெரிய மழைனு இருந்து கொண்டே இருந்தது. இப்போத் தான் திங்களில் இருந்து எதுவும் இல்லை. அதுவும் அவருக்கு சொப்பனத்தில் அம்பிகை வந்தாப்போல் கண்டதும் உடனே போயிட்டு வரணும்னு முடிவெடுத்தாச்சு. அதோடு இல்லாமல் ஒரு இரண்டு நாட்கள் கழிச்சுக்கிளம்பினாலும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் தாளாது. ஏற்கெனவே இன்னிக்குக் கார்த்திகை ஒண்ணு. மாலை போட்டுக்கும் நாள். அந்தக் கூட்டம் இருந்தாலே கொஞ்சம் சிரமம் தான். என்றாலும் போயிடலாம்னு முடிவு பண்ணி இன்னிக்குக் காலையில் ஐந்தரைக்குக்கிளம்பணும்னு எங்களுக்குத் தெரிந்த ஆட்டோக்காரரிடம் சொல்லி வைத்தோம். அவரும் வரேன்னு சொல்லிட்டார்.



ஆனால் பணம் அதிகம் கேட்டார். என்ன செய்ய முடியும்! பேரம் பேசவில்லை. இன்னொரு ஆட்டோக்காரர் இருக்கார் என்றாலும் அவரோடது இப்போ வர டிவிஎஸ் ஆட்டோ. அதில் என்னால் ஏறவே முடியாது. இது பழைய ஆட்டோ. ஏறுவது கொஞ்சம் சிரமம் என்றாலும் ஏறிடுவேன்.  காலையில் ஐந்தரைக்குக் கிளம்பி சமயபுரம் போய்ச் சேர்ந்தோம்.என்னதான் சாலைகள் விரிவாக்கத்தில் சாலைகளெல்லாம் நன்றாக இருந்தாலும் இதில் தூரம்கொஞ்சம் அதிகம் தான் தெரிந்தது. உள்ளே போவதற்கு நூறு ரூபாய்ச் சீட்டுக்குப் போனால் எங்களுக்குச் சீட்டுக் கிடையாதுனு உள்ளே விட்டுட்டாங்க. அந்த வரிசையில் யாருமே இல்லை/ இலவச தரிசனம்/20 ரூபாய் தரிசனத்தில் தான் அதிகக் கூட்டம் அந்தக் காலை வேளையிலேயே இருந்தது. கொஞ்சம் சுற்றிச் சுற்றிப் போக நேர்ந்தாலும் உள்ளே போய் அம்மனுக்கு மிக அருகே நின்று கொண்டு திவ்ய தரிசனம்/ அம்மன் அழகாய்ப் பேசுகிறாப்போல் உட்கார்ந்திருந்தாள். நாங்கள் கொண்டு போன பெரிய மாலையை (ஶ்ரீரங்கம் மாலைகளுக்குப் பிரபலம்) அம்மனுக்குச் சார்த்திவிட்டுக் கற்பூர தீபாராதனையும் காட்டி எங்களுக்கும் காட்டினார் குருக்கள். பூசாரியும் இருந்தார்.  பின்னர் மல்லிகைப் பூச் சரம் பிரசாதமாய்க் கிடைத்தது. அதை வாங்கிக் கொண்டு மறுபடி மறுபடி கண் குளிர அம்மனைத் தரிசனம் செய்துவிட்டு வீடு வந்து சேர்ந்தோம். ஏழு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்தாச்சு! சுமார் இரண்டரை வருடங்கள் கழித்துக் குலதெய்வம் கோயிலுக்குப் போனது போன மாசம். இப்போ சமயபுரம். எல்லாம் அவள் அருள்! 

***********************************************************************************


பாட்டையா என அன்புடன் அழைக்கப்படும் திரு பாரதி மணி அவர்கள் காலமாகிவிட்டதாக முகநூலில் பெண்ணேஸ்வரன் போட்டிருந்தார். அதன் பின்னர் நம்ம ரேவதியும் பதிவு போட்டிருந்ததைப் பார்த்தேன். வயது ஆனாலும் உள்ளத்தால் இளமையான பாட்டையா எனக்கும் முகநூல் சிநேகிதர்.  திருமண நாள்/பிறந்த நாட்களில் மெசஞ்சர் மூலம் வாழ்த்துச் செய்திகள் அனுப்புவார். அவர் மாமனார் க.நா.சு. அவர்கள் தூரத்து உறவு. ஆனால் பாட்டையா அதை அறிவாரா இல்லையானு எனக்குத் தெரியாது. அவரின் நகைச்சுவையான கட்டுரைகளையும் விதம் விதமான நாகர்கோயில் சமையல்களையும் இனிக் காண முடியாது! அவரின் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்திக்கிறோம்.

***********************************************************************************


காலையில் இன்னொரு அமர்க்களம் முகநூலில். யாரோ நம்ம ரிஷபன் சார் அவர்கள் நேற்றிரவு காலமாகிவிட்டதாகச் சொல்லி இரங்கல் பதிவைப் பெரிசாகப் போட்டதோடு அல்லாமல் யாரைத் தொடர்பு கொண்டால் அவங்க வீட்டோடு பேச முடியும்னும் கேட்டிருந்தார். இதைப் பார்த்த நண்பர் என்னைக் கேட்க எனக்கோ திக் திக்! என்னடாப்பானு பார்த்தால் நண்பர் மேலே சொன்ன முகநூல் பதிவின் சுட்டியைக் கொடுக்க அதைப் படிச்சுட்டு நானும் இரங்கல் தெரிவிக்கையிலேயே ரிஷபன் அவர்களே வந்து "நான் சாகலை. உயிரோடு தான் இருக்கேன்." என்றாரே பார்க்கலாம்! அப்படியே தொலைந்த சந்தோஷம் திரும்ப வந்தது. அவரை மனமாற வாழ்த்திவிட்டு வந்தேன். நீடுழி வாழட்டும்! சில திரைப்படப் பிரமுகர்கள் பற்றியும் இப்படி எல்லாம் வதந்தி பரவி இருந்தது தெரியும். நெருங்கிய வட்டத்தில் இப்போத் தான் முதல் முதலாக ரிஷபன் சார்! பதிவு போட்டவர் தீர விசாரிக்கலை. மன்னிப்பாவது கேட்டாரானு தெரியலை. :(

***********************************************************************************

தெரிந்த ஒரு சிநேகிதியின் பிள்ளைக்கு 39 வயதாகிவிட்டது. 40 இருக்கலாம்னு அனுமானம். ஆனால் இல்லை என்றார் சிநேகிதி. இப்போப் பிரச்னை அது இல்லை. இந்தப் பையருக்குப் பத்து வருஷங்களுக்கும் மேலாகப் பெண் தேடிக்கொண்டு இருக்கிறார் அந்த சிநேகிதி. என் தம்பி பையருக்கு ஆகிறாப்போல் கிட்டி முட்டி வரும்; நின்னுடும். பையர் ஐடியில் இருக்கார்.நல்ல சம்பளம். ஒரே தங்கை/ திருமணம் ஆகி அம்பேரிக்கா வாசம். பிக்குப் பிடுங்கல் இல்லை. நல்ல இடம் தான். ஆனால் ஏனோ தட்டிப் போய்க் கொண்டே இருந்தது. இப்போத் தான்சில நாட்கள் முன்னர் அந்த சிநேகிதி வந்து பையருக்குத் திருமணம் நிச்சயம் ஆகப் போவதைச் சொல்லிவிட்டுச் சென்றார். அதோடு இல்லாமல் நீங்க ஊருக்குப் போயிட்டு வந்ததும் தான் நிச்சயம் என்றும் சொன்னார். ஊரிலிருந்து வந்ததும் இந்த வாரம் ஞாயிறன்று நிச்சயம் எனக் கேள்விப் பட்டேன். ஆனால் சிநேகிதியைப் பார்க்கவில்லை. நானும் அதிகம் வெளியே செல்வதில்லை என்பதால் பார்க்க நேரவில்லை.

இன்று நம்பகமான ஒருத்தர் மூலம் தெரிந்த தகவல் அந்தப் பெண் இந்தப் பையரை வேண்டாம்னு சொல்லிவிட்டாளாம்.இத்தனைக்கும் இந்தப் பெண்ணையே இரு வருடங்கள் முன்னரே பார்த்துப் பிடிச்சுப் போய் ஆனால் பெண் தான் வேலை பார்க்கும் ஶ்ரீரங்கம் வங்கியிலேயே தொடர்ந்து இருக்கணும் என்றும் அப்பா/அம்மாவுக்கு வேறு யாரும் இல்லை என்பதால் அவங்களை விட்டுட்டு வரமாட்டேன் என்றும்சொல்லி விட்டாளாம். ஏற்கெனவே இரண்டு வருடங்கள் முன்னரும் இதே காரணம் தான் வேண்டாம்னு நிராகரிச்சிருக்காங்க. இப்போப் பெண் வீட்டிலே தானாக வந்து பையர் இரு வருடங்களாக இங்கேயே இருப்பது தெரிந்து பெண்ணைக் கொடுக்கலாம்னு வந்திருக்காங்க.ஆனால் பையர் முன் கூட்டியே சொல்லணும் என்பதால் எப்போ வேண்டுமானாலும் சென்னைக்குப் போக நேரிடும்னு சொல்லி இருக்கார்.  அதோடு இல்லாமல் அவர் ஒரே பையர் என்பதால் பெற்றோர் தன்னுடன் தான் இருப்பார்கள் என்பதையும் சொல்லி இருப்பார் போல!

அந்தப் பெண்ணுக்குச் சென்னைக்குப் போய் வேலை செய்யவோ மாமனார்/மாமியாருடன் கூட இருக்கவோ இஷ்டம் இல்லை. அதோடு தான் சென்னை சென்றுவிட்டால் தன் பெற்றோர் இங்கே தனியாகத் திண்டாடுவார்கள் என்றும் கவலையாம். ஆகவே வேண்டாம்னு மறுபடியும் நிராகரித்து விட்டாள். பெண்ணுக்கும் 37 வயது. பையரின் அம்மா/என் சிநேகிதி அந்தப் பெண்ணிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார். உங்களுக்குத் திருமணம் ஆனால் பையர் இங்கேயே ஶ்ரீரங்கத்திலேயே  இருந்தார் எனில் உங்க வீட்டுக்கு வந்துடட்டும். நாங்க இதே வீட்டிலே இருந்துக்கறோம். அப்படிச் சென்னை மாற்றல் ஆனாலும் நீ உன் பெற்றோருடன் போய் அங்கே எங்க பையருடன் இருந்து வாழ்க்கையை நடத்து. நாங்க வரவே மாட்டோம். வரச் சொல்லி அழைப்பதற்கு மட்டும் வருவோம். என்றெல்லாம் சொல்லிப் பார்த்துட்டாங்க.  நீ எங்களுடன் குடித்தனம் நடத்த வேண்டாம்னு எல்லாம் சொல்லிப் பார்த்தாச்சு. பெண்ணின் மனம் இளகவில்லை. நாளைக்கு மறுபடி போய்ப் பார்க்கப் போறாங்க. எனக்குக் கண்களில் ரத்தம் வருது! இந்த மாதிரிப் பெண்களை என்ன சொல்லித் திருத்த முடியும்?

இந்தப் பெண்ணிற்கு வயது தான் முதிர்ந்திருக்கே தவிர மனம் முதிர்ச்சி அடையலை. இதுக்குத் தான் அந்தக் காலத்தில் சின்ன வயசிலேயே கல்யாணம் பண்ணினாங்க. சிந்தனை வேறு பக்கமெல்லாம் போகாமல் இருக்கும். அதோடு பெண்களை அந்த வயதில் சுலபமாக வளைக்கலாம். இப்போல்லாம் இருபது வயதில் கல்யாணம் பண்ணினாலே குழந்தைக் கல்யாணம் என்கிறார்கள். அதனால் 22,25 வயதுக்குள்ளாகவாவது கல்யாணத்தைப் பெண்களுக்குக் கட்டாயமாய்ப் பண்ணிடணும். முப்பது வயதுக்கு மேல் அந்தப் பெண்களுக்கெனத் தனிக் கருத்துகள்/பிடிவாதங்கள்/ருசிகள்னு ஏற்பட்டு நிலைத்து விடுவதால் அனுசரிப்பு என்பதை எதிர்பார்க்கவே முடியாது. எங்கேனும் ஒரு சில பெண்கள் இருக்கலாம். எனக்குத் தெரிந்த இரண்டு, மூன்று பெண்கள் அப்படி இருந்திருக்காங்க/இருக்காங்க. ஆனால் இப்போதைய பெண்களின் பொதுவான மனோநிலை இப்படித்தான் இருக்கு!

Tuesday, November 16, 2021

தண்ணீர்! தண்ணீர்!

 உடனே விழித்துக் கொண்டு விட்டேன். அவரும் எழுந்து விட்டார். இடி எனில் பயங்கரமான இடி. ஜன்னல்கள் சார்த்திக் கண்ணாடிக் கதவு போட்டிருந்தது. அதையும் மீறிக்கொண்டு மின்னல் கிழித்துக் கொண்டு உள்ளே பாய்ந்த உடனேயே மீண்டும் ஓர் இடி.முன்னை விட அதிக சப்தத்துடன். இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் போருக்கு ஆயத்தம் ஆகிவிட்டான். ஆனால் வருணனும் வாயுவுமோ ஒருவரோடொருவர் போட்டி வேண்டாம் என நினைத்தோ என்னமோ அதிவேகக் காற்றுடனும், மழைப்பொழிவும் ஆரம்பித்துவிட்டது.  மழையின் சப்தம் காதுகளை அறைந்தது. கதவுகள் சார்த்தி இருந்ததையும் மீறிச் சப்தம் கேட்டது.  கொட்டித் தீர்த்தது என்பார்கள் அப்படி ஒரு மழை. இதுக்கு முன்னாடி மழை பெய்த அளவெல்லாம் தெரியாது என்பதால் பெய்தால் பெய்யட்டும்னு விட்டுட்டோம். கவலைப்பட்டுக்கலை. காலை ஐந்து மணிக்கே விழிப்பு வந்தாலும் எழுந்திருக்கலை. வாசல் தெளிக்கணுமா? கோலம் போடணுமா? ஸ்வாமி விளக்கேற்றணுமா? ஆகவே படுத்துக் கொண்டே இருந்தேன். மழையோ நின்றபாடில்லை. மெதுவாக ஆறரை மணி போல் மழை கொஞ்சம் குறைந்து தூற்றலாக இருந்தது. எழுந்து இயற்கைக்கடன்களை முடித்துக்கொண்டு பல் தேய்த்துக் காஃபி டிகாக்‌ஷன் போட்டேன்.


அதுக்குள்ளே அவரும் எழுந்து முதல் நாளே பார்த்து வைத்திருந்த பால் கடையில் போய்ப்பால் வாங்கி வருவதாகச் சொன்னார். வாசல் கதவைத் திறந்தால் எதிரே நடைபாதையெல்லாம் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. அங்கே உள்ளே ஏற இருந்த மூன்று படிகளில் முதல் படி வரை நீர் வந்திருந்தது. ஒரு ராத்திரியில் இவ்வளவு தண்ணீரா என ஆச்சரியமாக இருந்தது. என்றாலும் அவர் உயரம் என்பதால் கவலைப்படாமல் இறங்கிச் சென்றார்.  அந்தப் பாதையெல்லாம் தண்ணீர் தேங்கி அங்கிருந்து வாசல் போர்ட்டிகோவுக்கு ஏறும் வழியெல்லாம் நீர். அங்கிருந்து தெருவில் இறங்கினால் அவருக்கே முழங்கால் தண்ணீர். மெல்ல மெல்லப் போனார். போகும்போதே பலரும் சப்தம் போட்டிருக்காங்க. ஆனால் பால் கடை நாலு வீடு தள்ளித் தான் என்பதால் போய் வாங்கி வந்துட்டார். பாலைக் காய்ச்சிக் காஃபி ஆளுக்கு ஒரு தம்பளர் எடுத்துக் கொண்டு மிச்சம் பாலைக் காஃபி குடிச்சுட்டு வந்துக் காய்ச்சலாம்னு இருவருமே காஃபியை எடுத்துக்கொண்டு நாற்காலிகளில் உட்கார்ந்தோம். மணி ஏழு இருக்கலாம்.  "பட்" என ஒரு சப்தம். சுற்றிக்கொண்டிருந்த மின் விசிறி நின்று விட்டது. அதிசயத்திலும் அதிசயமாக ஒரு காற்று அடித்தாலே கம்பளியைத் தேடும் நம்மவருக்கு வியர்த்து ஊற்றுகிறது. அத்தனை நேரம் மின்விசிறிக்காற்றுக் குளிரில் இருந்த எனக்கு அப்பாடா என்றிருந்தது. இப்படித் தான் நாங்க இரண்டு பேரும் எல்லாவற்றிலும் கிழக்கும்/மேற்குமாக இருப்போம்.


மின்சாரம் நின்று போனதுக்கு ட்ரான்ஸ்ஃபார்மரில் பழுது இருந்திருக்கலாம்/சிறிது நேரத்தில் வந்துடும்னு நாங்க அதைப் பெரிசா எடுத்துக்கலை.  தம்பி வீட்டிலிருந்து தொலைபேசியில் அழைத்துக் காஃபி குடிக்கப் பால்கிடைத்ததா/மின்சாரம் இருக்கா என்றெல்லாம் விசாரித்தார் தம்பி.  நாங்க காஃபி குடிச்சதையும் இன்னும் சிறிது நேரத்தில் போய்க் காலை ஆகாரம் வாங்கி வரப் போகிறார் என்பதையும் சொன்னேன். அங்கேயும் மின்சாரம் இல்லை எனவும்/பாலும் வரலை எனவும் தம்பி சொன்னார். மோட்டார் போட்டு நீரை மேலேற்ற முடியவில்லை. நாலைந்து குடித்தனங்கள் இருப்பதால் மேலே இருந்த டாங்கில் தண்ணீர் செலவாகி இருக்கிறது. இவங்களுக்குத் தண்ணீரும் கிடைக்கலை. மின்சாரம் வருமானு பார்க்கணும்னு சொன்னார். அந்த வகையில் நமக்குப் பரவாயில்லை. தண்ணீர் நிறையவே வருதுனு நாங்க நினைச்சோம். சிறிது நேரத்தில் இவர் காலை ஆகாரம்வாங்கி வரக் கிளம்பினார்.எனக்கு 3 இட்லி தவிர வேறே ஏதும் வேண்டாம்னு சொல்லிட்டேன். அவர் மறுபடி அதே போல் தூற்றலில் மழை நீரில் இறங்கிச் சென்றிருக்கிறார். நாங்க இருந்த தெருவில் இருந்து மாம்பலம் ஸ்டேஷன் ரோடு பக்கம் என்பதால் அங்கிருந்து ஏதேனும் ஒரு ஓட்டலில் காலை ஆகாரம் வாங்கலாம்னு நினைப்பு.

போகும்போது வழியில் பார்த்தவர்கள் எல்லாம் போகாதே/போகாதே என எச்சரிக்கை கொடுத்திருக்கின்றனர். அங்கேயும் தண்ணீர் முழங்காலுக்கு மேல் இருந்திருக்கிறது. ஓட்டல்களில் எதுவும் திறக்கவில்லையாம். இவர் சாப்பிடணும்னு ஆசைப்பட்ட காமேஸ்வரி மெஸ் திறக்கவே இல்லையாம். ஏதோ ஒரே ஒரு ஓட்டல் மட்டும் திறந்திருக்க நல்லவேளையாக அது சைவ ஓட்டல் தான் என்பதால் அங்கிருந்து காலை ஆகாரம் வாங்கிக் கொண்டு வந்தார். மத்தியானத்துக்கு சாம்பார் சாதம், தயிர் சாதம், வெஜிடபிள் பிரியாணி, தக்காளி சாதம், புளியஞ்சாதம் எனக் கிடைக்கும் என்றும் சொல்லி இருக்காங்க. மத்தியானம் ஒரு மணிக்கு வரச் சொல்லி இருக்காங்க. சிறிது நேரத்தில் வந்துடும்னு நினைச்ச மின்சாரம் வரவே இல்லை. மின்சாரம் இல்லாமல் எப்படிச் சமைப்பது? ஆகவே திறந்திருந்த அந்த ஓட்டலையும் காலை ஒன்பது மணிக்கே மூடி இருக்காங்க. மழையோ விட்டு விட்டுப் பெய்கிறது. நீர் மறுபடியும் வெள்ளமாகப் பாய்கிறது. இதுக்கு நடுவே எங்க செர்வீஸ் அபார்ட்மென்ட் அருகே இருக்கும் ஒரு வீட்டில் அந்த நபர்கள் பேசிக் கொண்டதில் தெரிந்தது செம்பரம்பாக்கம் ஏரியைத் திறக்கப் போகிறார்கள் என்பது.

அதுக்குள்ளே அங்கே தம்பிக்கும் இந்த விஷயம் தெரிந்து நாங்க என்னசெய்யறோம்னு தொலைபேசினார். விஷயத்தைச் சொன்னோம். வெந்நீர் போட முடியாமல் குளிக்காமல் உட்கார்ந்திருந்தோம். சாப்பாட்டுக்கு வழியில்லை என்பதைச் சொன்னோம். அங்கே தம்பி மனைவி சாதமும், குழம்பும் ஏதோ ஒரு காயும் பண்ணி இருப்பதாகத் தம்பி சொன்னார். அதை வேணாக் கொடுத்தனுப்பவானு கேட்டதுக்கு இவர் வேண்டாம், இங்கே கடை ஏதேனும் திறந்திருந்தால் ப்ரெட் வாங்கிக் கொண்டு பால் கடை மாமா காஃபி, தேநீர் தருவதாய்ச் சொல்லி இருக்கார்னு சொல்லிட்டு அதை வாங்கிக்கறேன் என்றார். ஆனால் போனால் தெருவில் எந்தக் கடையும் திறக்கவே இல்லை.பால்கடையில் பாலும் இல்லை தீர்ந்துவிட்டது. ப்ரெடா? ஏது? கடை இருந்தால் தானே ப்ரெட்! ஒரே குழப்பம். மறுபடி விடுதிக்கு வந்தார். இரண்டு பேருமே தண்ணீராக இருந்தாலும் பரவாயில்லைனு குளிச்சோம். தேவையான துணிகளைத் துவைச்சோம். அதுக்குள்ளே தம்பியோட பெரிய பிள்ளை தொலைபேசியில் எங்களை அழைத்து மணி பனிரண்டு ஆச்சே, சாப்பாட்டுக்கு என்ன பண்ணினீங்கனு கேட்டார். கடை ஏதும் திறக்கலை/ப்ரெட் கிடைக்கலைனு சொன்னோம். உடனே தம்பியும் தொலைபேசியில் அழைத்துக் கேட்டுவிட்டு அங்கே அந்தத் தெருவிலேயே அருகே பத்து வீடுகள் தள்ளிக் குடியிருக்கும் நண்பர் ஒருவரை அழைத்து எங்களுக்குச் சாப்பாடு தர முடியுமா எனக் கேட்க. அவரோ சமைத்துத் தான் தரணும், இப்போச் சமைக்க ஆரம்பிச்சாலும் ஒன்றரை மணி நேரம் ஆகும். ஆகவே ஒன்றரை மணி இரண்டு மணிக்குத் தான் சாப்பாடு கிடைக்கும்னு சொல்லி இருக்கார். தம்பியும் அதுக்கு ஒத்துக்கொண்டு எங்களை அழைத்துச் சாப்பாடு இரண்டு மணிக்கு வரும் என்றார்.

இதற்கு நடுவில் தம்பி வீட்டில் ஏற்கெனவே படிகள் வரை வந்திருந்த தண்ணீர் முதல் தளத்துக்கு வரலாமானு யோசிப்பதைப் பார்த்துட்டு அவங்க நான்கு பேரும் கூடிப் பேசி இப்போதைக்கு வீட்டைக் காலி செய்து கொண்டு கல்யாணத்துக்கு வேண்டிய முக்கிய சாமான்களோடு கல்யாண மஹாலுக்கு எதிரே இருக்கும் ஓட்டலில் போய்த் தங்கிடலாம்னு முடிவு செய்துட்டுத் தேவையான பொருட்களைச் சேகரம் செய்து கட்டி எடுத்துப் போக வசதியாகத் தயார் நிலையில் வைத்துக் கொண்டிருந்தனர். இவற்றுக்கு நடுவே தான் தொலைபேசி அழைப்புக்களும். அதோடு தம்பி நாங்க என்னதான் விடுதியில் உள்ளே நீர் வரலைனு இருந்தாலும் மின்சாரம் இல்லாததாலும் ஓட்டல்கள் எதுவும் இல்லை என்பதாலும் செம்பரம்பாக்கம் திறந்தாச்சு நீர் வரத்து அதிகரித்துக் கொண்டிருந்தது என்பதாலும் எங்களையும் ஓட்டலுக்கே அழைத்துச் செல்லப் போவதாகச் சொல்லி இருந்தார். ஆகவே எங்களை எப்போ வேண்டுமானாலும் கிளம்பத் தயாராக இருக்கச் சொன்னார்.

Saturday, November 13, 2021

ஒன்றும் பிரச்னை இல்லை!

 அது வரை பெய்த மழையால் ஓரளவுக்குத் தண்ணீர் தேங்கி இருந்தாலும் வண்டிகள் வரவோ/போகவோஎந்தவிதமான பிரச்னையும் இல்லை. அதோடு விட்டு விட்டுத்தான் பெய்து கொண்டிருந்தது. தம்பி வீட்டில் நாங்கள் நுழைந்தபோது வைதிகர்கள் அப்போது தான் சமாராதனை வழிபாடுகளை முடித்துவிட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். 

இது 2015 ஆம் ஆண்டில் எங்க வீட்டில் ஶ்ரீரங்கத்தில் நடைபெற்ற சமாராதனைப் படம்.

ஆகவே நாங்கள் சாப்பிட இன்னும் நேரம் எடுக்கும். அங்கேயே இருந்த நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டோம். ஶ்ரீராமுக்குத் தொலைபேசலாமா என நினைத்து ரங்க்ஸைக் கேட்டப்போ "யோசிச்சுக்கோ!" என்றார். ஏனெனில் ஶ்ரீராம் அதற்கு முதல் வாரம் தான் 2,3 நாட்கள் காய்ச்சலில் படுத்துவிட்டு எழுந்திருந்திருக்கிறார். அவரை இந்த மழையில் அலைக்கழிக்கலாமா என்பது ஒரு யோசனை. அதோடு அவர் இருக்கும் இடமும் மாம்பலத்தில் இருந்து தூரமாகவே இருக்கிறது. என்னதான் ஆட்டோவில் வந்தாலும் இந்த மழைக்காலத்தில் வருவதற்கும் போவதற்குமே இரண்டு மணி நேரம் எடுத்து விடும்.  அதோடு மழை பிடித்துக் கொண்டால் மீண்டும் அவருக்கு உடம்பு வந்துட்டால் என்ன செய்வது? ஆகவே பார்த்துக்கலாம் நாளைக்கு என முடிவெடுத்துக் கூப்பிடவே இல்லை.

அந்தக் காலத்து வெங்கடாசலபதி இப்படித் தான் இருப்பார். நாமம் நெற்றியை முழுக்க மறைக்க ஆரம்பித்தது பின்னாட்களில் தான்.  அப்பா வீட்டிலும் இதே போன்ற வெங்கடாசலபதி படம் தான் சமாராதனைகளுக்கு. 







இது அன்று நான் செய்திருந்த நிவேதனம். சர்க்கரைப் பொங்கல், அன்னம், பருப்பு, எள்ளுச் சாதம், வடைகள்/ தம்பி வீட்டிலும் அதே தான்!

பிறகு அங்கே சாப்பிடும்போதே தி.நகரில் நாங்கள் சந்திக்க இருந்தவர்கள் வாட்சப் மூலம் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே சாப்பிட்டு முடித்த உடனே சுமார் மூன்று மணி அளவில் தி.நகர் கிளம்பினோம். என் அண்ணா பையரும் தம்பியின் மூத்த பையரும் வங்கிக்கு வேலையாகச் சென்றிருந்தார்கள். வெகு நேரம் ஆகியும் அவர்கள் வரவில்லையே என வீட்டில் அனைவரும் கவலைப்படுகையில் நாங்கள் கிளம்பி வாசலுக்கு வரவும்,  அவங்க கார் வரவும் சரியாக இருந்தது. ஆட்டோ பிடித்துக் கொடுக்க வந்த அண்ணாவின் மருமகள் அத்தை,அத்திம்பேரைத் தி/நகரில் விட்டுவிட்டு வரும்படி தன் கணவனுக்கு உத்தரவு போட அவரும் அதை உடனடியாக மறுப்பே சொல்லாமல் ஏற்றுக் கொண்டார்.  வழிகாட்டியாகத் தம்பியின் மூத்த பிள்ளையும் ஏறிக்கொள்ளச் சுற்றிச் சுற்றிச் சுற்றிச் சுற்றித் தி.நகருக்கு நாங்கள் போக வேண்டிய வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம். அப்போதெல்லாம் துரைசாமி சுரங்கப்பாதை வழியாகவே சென்றோம். மாட்லி சாலை வழியாகச் சென்றால் கிட்டக்க என்றாலும் அங்கே பாலங்கள் கட்டுமானப்பணி நடந்து கொண்டிருந்ததால் அந்த வழியை ஏற்கெனவே அடைத்து வைத்திருந்தார்கள்.

தி.நகரில் நாங்கள் சென்ற வேலை முடிய ஆறரை மணிக்கு மேல் ஆகி விட்டது. அங்கே எங்களைச் சந்திக்க வந்திருந்த என் நாத்தனார் பெண் ஶ்ரீவித்யா வீரராகவன் (பிரதமரால் பாராட்டுப் பெற்றவர்) மற்றும் அவள் கணவர் இருவரும் அவர்கள் காரில் எங்களைத் தங்குமிடத்தில் கொண்டு போய் விட்டார்கள். சரிதான் இன்று நல்ல வாகன யோகம் என்றே பேசிக் கொண்டோம். இரவு உணவுக்காக தோசைகளை வார்த்துச் சட்னி/சாம்பாருடன் அனுப்புவதாகத் தம்பி மனைவி சொல்லி இருந்தார். கொஞ்சம் யோசிச்சாலும் காலை நான்கு மணிக்கு முன்னால் எழுந்திருந்து சென்னை வரை செய்த கார்ப்பயணம் அதன் பிறகு ஓய்வே இல்லாமல் அலைந்தது எல்லாம் சேர்ந்து எங்களுக்குச் சிரமம் ஜாஸ்தியாக இருந்ததால் வெளியே சாப்பிட ஓட்டலைத் தேடிச் செல்ல வேண்டாம், நாளைக்குப் பார்த்துக்கலாம் என்று தம்பி மனைவி சொன்னதுக்கு ஒத்துக்கொண்டோம். சுமார் ஏழரை மணி அளவில் இரவு உணவை எடுத்துக் கொண்டு தம்பியின் பெரிய பிள்ளை வந்தார். அவரிடம் சாப்பிட்டுவிட்டுப் பாத்திரங்களைக் கொடுத்துவிடுவதாகவும் சற்றுக் காத்திருக்கும்படியும் சொல்லிவிட்டுச் சாப்பிட்டோம். அவர் காலை உணவுக்கு என்ன வேண்டும் என்று கேட்க நாளைக்குச் சாப்பாடெல்லாம் கொண்டு வர வேண்டாம். இங்கேயே பார்த்துக்கறோம். காமேஸ்வரி மெஸ், ஸ்டேஷன் ரோடில் ஒரு மாமி கொடுக்கும் மதிய உணவை வாங்கிக்கறோம். அதுக்காகக் காரியர் எல்லாம் கொண்டு வந்திருக்கோம் என்று சொல்லிவிட்டோம். ஆனால் நாளை நடக்கப் போவது என்னனு அந்த ஈசனுக்குத் தானே தெரியும்.

விடுதியில் தொலைக்காட்சிப் பெட்டி இருந்தாலும் அதை ரீ சார்ஜ் செய்யவில்லை. சில ஓட்டல்களில் கூட இம்மாதிரி வைப்பார்கள். நாமே பணம் கட்டி ரீ சார்ஜ் செய்துக்கணும். அது போல இங்கேயும் வைச்சிருப்பாங்க போல. அநாவசியமாக இரண்டு நாட்களுக்காக எதுக்கு ரீ சார்ஜ் செய்துக்கணும்னு விட்டுட்டோம். தம்பி பையரும் தொலைக்காட்சிப் பெட்டியை ஆராய்ந்து விட்டு நாம் தான் ரீ சார்ஜ் செய்துக்கணும் போல என்றார். ஆகவே எட்டு/எட்டரைக்கெல்லாம் போய்ப் படுத்துட்டோம். அசதியில் இருவருமே நன்றாய்த் தூங்கி விட்டோம். சுமார் பதினோரு /பனிரண்டு மணி அளவில் பெரிய சப்தம். கடமுடா/கடமுடானு எல்லாம் இல்லை. அண்டமே விழுந்து விட்டது போல் தோன்றியது. 

Friday, November 12, 2021

மலை ஏற்றத்தில் ஜெயிச்சேன்.!

 தம்பியின் இரண்டாவது மகனுக்கு ஏப்ரலில் திருமணம் நிச்சயமானது. அப்போவே நவம்பரில் கல்யாணம் என முடிவு செய்திருந்தார்கள். எனக்கு என்னமோ ஆரம்பத்தில் இருந்தே அது நல்ல மழைக்காலமே எனத் தோன்றியது. தம்பியிடம் சொல்லி ஜூலை, ஆகஸ்ட், செப்டெம்பருக்குள் திருமணத்தை முடிக்குமாறு சொன்னேன். ஆனால் முடியலை. அதோடு அப்போது என் உடல்நிலையும் மோசமாக இருந்ததால் எல்லோருக்குமே அப்போத் திருமணத்தை வைத்திருந்தால் என்னால் கலந்துக்க முடியுமானு யோசிச்சாங்க.  ஆகவே நவம்பரில் தான் திருமணம் என்பது உறுதி ஆகிவிட்டது. இருந்தாலும் செப்டெம்பர் வரை என் உடல்நிலை பூரண குணம் அடையாததால் கல்யாணத்திற்குப் போக முடியுமா என்பதே கேள்விக்குறியாக இருந்தது. ஆனாலும் எல்லாவற்றையும் கடந்து இறைவன் அருளால் நான் ஓரளவுக்கு நடமாடவும் வீட்டு வேலைகளைக் கவனிக்கவும் ஆரம்பித்தேன்.

முதலில் தீபாவளி அன்றே சென்னை கிளம்பும்படி இருந்தது. ஆகவே அதற்கேற்றாற்போல் திட்டம் போட்டுக் கொண்டோம். தம்பி வீட்டில் தங்குவதற்கான வசதிகள் இல்லை. வீடு சின்னது. இருப்பது ஒரு கட்டில். கல்யாண சமயம் என்பதால் அவர்களுக்கு நிறைய வேலைகள் இருக்கும். அந்தச் சமயம் போய் நம்மையும் அவங்களே கவனிக்குமாறு உட்கார வேண்டாம் என்பதால் என் மைத்துனர் மூலம் அவர் அலுவலகத்தின் ஹாலிடே ஹோம்(உண்மையில் அது செர்வீஸ் அபார்ட்மென்ட்) ஏற்பாடு செய்து விட்டார். அதுவும் தம்பி வீட்டருகேயே ஒரு கிலோ மீட்டருக்குள் இருந்ததால் போய்வரவும் வசதியாக இருக்கும் என்று அதையே உறுதி செய்து கொண்டு தம்பிக்கும் தெரிவித்தோம். 


எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருந்தது. ஆறாம் தேதி சனிக்கிழமை கிளம்புவதாகத் திட்டம். வெள்ளியன்றே வழியில் சாப்பிடுவதற்கான காலை உணவைத் தயார் செய்து கொண்டோம். மதியம் சாப்பிடத் தம்பி வீட்டிற்குப் போயிடலாம். அதோடு அன்று தான் வெங்கடாசலபதி சமாராதனை வைத்திருந்தார்கள். திங்களன்று சுமங்கலிப் பிரார்த்தனை. அப்போதே மழை சென்னையில் மட்டுமில்லாமல் தமிழ்நாடு முழுதும் ஆரம்பித்து விட்டது. என்றாலும் யாரும் இவ்வளவெல்லாம் மோசமாக ஆகும்னு நினைக்கவில்லை போல. ஆனால் இங்கிருந்து நாங்கள் கிளம்புகையில் எங்கள் குடியிருப்பு வளாகத்தில் எங்கள் தளத்தில் எங்களுடன் இருக்கும் அண்டை வீட்டார் என் உடல் நிலை குறித்து ரொம்பவே கவலையைத் தெரிவித்தார்கள். அதோடு மழையும் சேர்ந்து கொள்ளவே அனைவருக்கும் கவலை தான். பார்த்துப் போங்க,பார்த்துப் போங்க என்று திரும்பத் திரும்பச் சொன்னார்கள். எங்கள் வீட்டில் வீட்டு வேலைகளில் உதவும் பெண்ணுக்கும் கவலை.  "மாமி! பத்திரமா இருங்க. கையில் ஸ்டிக் இல்லாமல் நடக்காதீங்க. மழைத்தரையில் பார்த்துக் காலை வைங்க. மேடு, பள்ளம் தெரியாமல் போயிடும்." என்றெல்லாம் சொல்லி எச்சரிக்கை கொடுத்துக் கொண்டிருந்தார்.

நாங்க சென்னைக்குக் கிளம்புவது உறுதியானதுமே ஶ்ரீராமிற்கு வாட்சப் மூலம் தகவல் தெரிவித்தேன். நாங்கள் சனிக்கிழமை காலையே வரப் போவதால் அன்று மாலையோ அல்லது மறுநாள் ஞாயிறன்றோ பார்க்கலாம் எனச் சொன்னேன். என்னால் அவங்க குடியிருப்புக்குப் போக முடியாது. அது இருப்பது இரண்டாம் தளம் என்பதோடு லிஃப்ட் வசதி எல்லாம் இல்லை/ ஆகவே தான் அவரை வரச் சொன்னேன். கூடவே அவரோட பாஸையும் அழைத்து வருமாறு சொல்லி இருந்தேன். ஏன்னா ஶ்ரீராமை எனக்கு அடையாளம் தெரியணும் இல்ல? அதான்! எல்லாம் முடிவு செய்யப்பட்டு விட்டது. நாங்கள் சர்வீஸ் அபார்ட்மென்டை அடைந்ததுமே ஶ்ரீராமுக்குத் தொலைபேசித் தகவல் தெரிவித்து ஞாயிறன்று வரும்படி சொல்லணும்னு முடிவு செய்து கொண்டேன். ஏனெனில் திடீரென சனிக்கிழமை தி.நகரில் ஒரு முக்கிய வேலை வந்து விட்டது. சனிக்கிழமை காலை ஐந்தரை மணியிலிருந்து ஆறுக்குள் கிளம்ப முடிவு செய்து கொண்டு  Drop Taxi க்குத் தொலைபேசியில் நாங்கள் சென்னை செல்வதற்காக வண்டியை முன்பதிவு செய்து கொண்டோம். விமானத்தில் போனால் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து அங்கே இருக்கும்/கிடைக்கும் டாக்சியை புக் செய்து கொண்டு தம்பி வீட்டிற்கூ மேற்கு மாம்பலம் வரணும். அதோடு இல்லாமல் இப்போதெல்லாம் விமானப் பயணச்சீட்டின் விலையை அதிகரித்து விட்டார்கள். ஒருத்தருக்கேப் பத்தாயிரம் ஆகும்போல! ஆகவே விமானத்தைத் தவிர்த்து விட்டோம்.


ரயில், பேருந்து எல்லாம் என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதது. ரயில் எனில் திருச்சியில் நான்கு அல்லது ஆறாவது நடை மேடை. ஶ்ரீரங்கத்தில் முதல் நடைமேடை என்றாலும் ரயில் நிற்கும் 2 நிமிடங்களுக்குள்ளாக சாமான்களையும் தூக்கிக் கொண்டு ஏறணும். அப்படித்தான் போய்க் கொண்டிருந்தோம். ஆனால் இரண்டு வருஷங்களாகவே அப்படிப் போவதில்லை. இரண்டு பேருக்கும் சாமான்களைத் தூக்கிக் கொண்டு அந்த நடைமேடை முழுவதும் நடந்து சென்று ரயிலில் ஏறும் அளவுக்குத் தெம்பில்லை. ஶ்ரீரங்கத்தில் போர்ட்டர் என்பவரே இல்லை. திருச்சியில் கூப்பிட்டால் கூட வருவதில்லை. ஆகவே காரில் செல்வதே நல்லது என்று முடிவு செய்தோம். சனிக்கிழமை காலை எழுந்து குளித்துக் காஃபி குடித்துத் தயார் ஆனோம். வண்டியும் நேரத்தில் வந்து விட்டது. இங்கேயே அம்மா மண்டபம் சாலையில் இருக்கும் நம்ம ஃபேவரிட் பிள்ளையாருக்கு ஒரு சிதறு காய் போட்டு விட்டுப் பிரயாணத்தைத் தொடர்ந்தோம்.

வழியில் கார் செல்லும்போதே காலை உணவை முடித்துக் கொண்டு கொண்டு சென்றிருந்த காஃபியையும் குடித்தோம். ஓட்டுநருக்குக் காலை உணவுக்காகப் பணம் கொடுத்துச் சாப்பிடச் சொல்லி விட்டோம். அவ்ர் சாப்பிட்டு வந்ததும் எங்குமே நிற்காமல் வண்டி சென்றது. நடுவில் ஒரே ஒரு முறை கழிவறை செல்வதற்காக ஒரு பெட்ரோல் பங்கில் நிறுத்தினார். அவ்வளவே. அச்சரபாக்கம் வரை ஆங்காங்கே தூற்றல் தான். அச்சரபாக்கத்தில் இருந்து போக்குவரத்தும் அதிகம். மழையும் பெய்து கொண்டிருந்தது. ஓட்டுநரும் அலைபேசியில் பேசிக் கொண்டே வந்தார். ஆகவே பத்து மணிக்கு அச்சரபாக்கத்தை அடைந்தாலும் மாம்பலம் போய்ச் சேரப் பதினோரு மணிக்கு மேல் ஆகிவிட்டது. அங்கே போய் துரைசாமி சுரங்கப்பாதை அருகே இருந்த வெங்கடாசலம் தெருவில் உள்ள நாங்கள் தங்க வேண்டிய சர்வீஸ் அபார்ட்மென்டைக் கண்டுபிடித்தோம். நல்லவேளையாகத் தெரு முனையிலேயே இருந்தது. உள்ளே போனோம். நன்கு சுத்தம் செய்து வைத்திருந்தார்கள். படுக்கைகளுக்கெல்லாம் புதிய விரிப்புகள் போடப்பட்டு நன்றாகவே இருந்தது. பெரிய சமையலறை. அங்கேயும் அநேகமாக அடுப்பைத் தவிர்த்து, மளிகை சாமான்களைத் தவிர்த்து எல்லாப் பொருட்களும் இருந்தன. 

நாங்கள் கொண்டு போயிருந்த இன்டக்‌ஷன் ஸ்டவை அங்கே பொருத்தி வேலை செய்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டு மற்றச் சாமான்களையும் வைத்துவிட்டுத் தம்பிக்கு நாங்கள் வருவதைத் தொலைபேசிச் சொல்லலாம் எனில் அவங்க எல்லோருமே பூஜையில் மும்முரம் போல! சரினு ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டு தம்பி வீட்டுக்குச் சென்றோம். அவர் இருப்பது முதல் மாடி. சுமார் 20 படிகள். நடுவில் வேறே சில,பல படிகள். எல்லாவற்றையும் எப்படி ஏறப் போகிறேனோ என்று எல்லோரும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருந்தார்கள். ஆட்டோ போனதுமே வாசலில் பேசிக் கொண்டிருந்த தம்பி பையர்/கல்யாண மாப்பிள்ளை பார்த்துட்டுச் சாமான்களை வாங்கிக் கொண்டு மேலே போய்த் தெரிவித்தார். மேல் படியில் தம்பியின் பெரிய பிள்ளை, நடுவில் லான்டிங்கில் தம்பி, பின்னால் நம்ம ரங்க்ஸ் என நின்று கொண்டு என்னைக் கண்காணித்தார்கள். ஹிஹிஹி! எல்லோருக்கும் பயம்! விழுந்துடப் போறேனேனு. வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருந்தார்கள்.  இதுக்குள்ளே நம்மவர் படிகளில் நடுவில் காலை வை. ஓரத்தில் வைக்காதே என்றெல்லாம் நான் வாழ்க்கையிலேயே  முதல் முதல் மாடி ஏறப்போவதாக நினைத்துக்கொண்டு சொல்லிக் கொடுத்தார். மெதுவாகப் படிகளில் ஏறினேன். இதுக்குள்ளே மேலே இருந்து யாரோ பிடிச்சுக்கோ என்று சொல்ல, நான் கடுமையாக மறுக்க ஒரு வழியாக அரை மணி நேரத்திற்குள்ளாக எல்லாப் படிகளையும் ஏறி விட்டேன். கயிலை யாத்திரையிலோ, அஹோபிலம் சென்றபோதே அல்லது கிஷ்கிந்தாவிலோ கூட இத்தனை சந்தோஷம் அடைந்ததில்லை. ஏனெனில் அதெல்லாம் மிகக் கடுமையான மலை ஏற்றம். இங்கே கயிலையை விட மோசமான மலை ஏற்றம் என நினைத்துக் கொண்டு அப்பாடா! ஜெயிச்சுட்டோம் என நினைத்த வண்ணம் வீட்டுக்குள்ளே போனோம். 

Friday, November 05, 2021

ஜெய் பீம் அண்ணாத்தே! :)

 ஹாஹாஹா, நான் தான் திரை அரங்கிற்குப் போய்ப் பார்த்துட்டு வந்துட்டேனாக்கும்னு நினைச்சீங்கன்னா இஃகி,இஃகி,இஃகி/ அதெல்லாம் இல்லை.  சிலர்/பலரின் விமரிசனங்களைப் பார்த்ததின் விளைவு இந்தப் பதிவு. தினமலர் தினசரியில் "ஜெய்பீம்" நன்றாக இருப்பதாக விமரிசனம் எழுதி இருந்தாங்க. ஆனால் பெரும்பாலோர் அதில் உள்ள குற்றம்/குறைகளைச் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.முக்கியமாய் எந்த இருளர் சமூகத்தை வைத்துப் படம் எடுக்கப்பட்டிருக்கோ அந்த இருளர் சமுதாயத்தைச் சேர்ந்தவரே எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.  அது ஒரு பக்கம் இருக்கப் படத்திலும் ஏகப்பட்ட குறைகள் என்று சொல்கின்றனர். ஹிந்தி எதிர்ப்பும், இந்துக்கள் மேல் குற்றம் சாட்டுதலுமே திரைப்படத்தின் முக்கியக் கரு என்றும் சொல்கின்றனர்.  ஆனால் இதே படத்தை ஹிந்தியிலும் வெளியிட்டிருப்பது தான் மிக முக்கியமான ஒன்று. ஒரு இடத்தில் வடநாட்டுக்காரர் ஒருவர் தமிழகப் போலீஸ் அதிகாரியிடம் ஹிந்தியில் பேச, "தமிழில் பேசுய்யா!" என அந்தப் போலீஸ்காரர் சொல்கிறாராம். தெலுங்குப் பதிப்பிலும் "தெலுங்கில் பேசுய்யா" என்றே வருகிறதாம். ஆனால் ஹிந்திப் பதிப்பில் "உண்மையைப் பேசுய்யா" என அதே போலீஸ் அதிகாரி சொல்வதாய்க் காட்டி இருக்காங்களாம். அங்கே வடக்கே போய் ஹிந்தியை வேண்டாம்னு எப்பூடிச் சொல்லுவாங்க!

அதிலே வரும் ஒரு போலீஸ் அதிகாரி முக்கியமான வில்லன். நிஜத்தில் அவர் சார்ந்திருக்கும் மதம் வேறே. ஆனால் திரைப்படத்தில் அவர் பெயரை "குருமூர்த்தி" என்று மாற்றி அவரை வன்னியராகவும் காட்டுகிறார்களாம். சிவ பக்தராக இருக்கும் ஒருவரைக் (இருளர்கள் சிவபக்தர்கள். சிவனின் நேரடி வாரிசுகளாகச் சொல்லிக்கொள்வார்கள்.) கோமாளியாகவும் சித்திரித்து, "ஓம் நம சிவாய" என்னும்  பஞ்சாக்ஷரத்தையும் கேலி செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதைப் போல் பல்வேறு விதமான அடிப்படைத் தவறுகள். ஒரு கோடி நன்கொடை கொடுத்திருப்பதின் பின்னணியும் வருமான வரி விலக்கிற்காக என்று சொல்கின்றனர். எது நிஜம் என்பது தெரியவில்லை. ஆனால் வக்கீலாக நடித்திருக்கும் சூர்யா "கௌரவம்" ஜிவாஜி போலும் இல்லாமல் (ஜிவாஜி ரசிகர்கள் கவனிக்க) விதி "சுஜாதா" போலவும் இல்லாமல் அவர்களை விட நன்றாக நடித்திருக்கிறாராம். மிகவும் இயல்பாக இருக்கிறதாம். இஃகி,இஃகி,இஃகி! 

அடுத்து அண்ணாத்தே! "பாசமலர்" படத்தின் உல்டா என்கின்றனர். அதையே இன்னமும் பார்த்த பாடில்லை. அண்ணாத்தேயை எல்லாம் எப்போப் பார்ப்பது! ஆனால் இதில் கொஞ்சம் கலாசாரத்திற்கு எதிராக வசனங்கள் வருகின்றன என்கிறார்கள். கணவனோடு வாழ்வதைப் பிடிக்கலைனா இன்னொருத்தரைத்தொடர்பு கொள்ளலாம் என்பதை நியாயப்படுத்தும்படியான வசனங்கள் வருவதாய்ச் சொல்கின்றனர். கலாசாரக் காவலர் என்று அறியப்படும் ரஜினியின் படத்திலா இப்படி? ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ. கவனித்த வரையில் அண்ணாத்தே படத்தைப் பற்றி யாரும் நன்றாக இருப்பதாகச் சொல்லவில்லை. :(


இதுக்குக் கருத்துச் சொல்றவங்கல்லாம் அவங்க அவங்க கருத்தைச் சொல்லி வைங்க! நான் மெதுவா வந்து பார்த்துட்டு பதில் கொடுக்கிறேன். நன்றி. வணக்கம். :))))))

Thursday, November 04, 2021

தீபாவளி வாழ்த்துகள்!

இந்த வருஷ தீபாவளிக் கொண்டாட்டத்தின் படங்கள். தீபாவளிக்கெல்லாம் எழுந்து நடமாடுவேன் என்றே எதிர்பார்க்கலை. ஆனால் எதிர்பாராவிதமாக நேற்றுக் கொஞ்சம் பக்ஷணம் பண்ண வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பக்ஷணங்கள் எல்லாமும் காடரிங்கில் செய்து தரச் சொல்லிக் கேட்டுக் கொண்டாச்சு. திங்கள் வரை அவங்க எப்போத் தருவோம்னு சொல்லலை என்பதால் நான் தொலைபேசியில் கேட்டேன். செவ்வாய் மாலைக்குள் கொடுத்துடுவோம் என்றார்கள். ஆனால் செவ்வாயன்றும் வரலை. புதன் அன்று கிடைச்சுடும் என நினைச்சால் மத்தியானம் ஒரு மணி வரை எந்தத் தகவலும் இல்லை. சுவாமிக்கு வைக்க பக்ஷணங்கள் வேண்டுமே. மற்ற வெற்றிலை, பாக்கு, பழங்கள், பூ எல்லாம் வாங்கியாச்சு. துணிமணிகளும் தயார் நிலையில். பக்ஷணம் முக்கியம் இல்லையோ?
அப்புறமா யோசித்து வீட்டில் இருந்த அரிசி மாவில் எப்போதும் தயாராக வைத்திருக்கும் வறுத்த உளுத்தமாவைச் சேர்த்து வெள்ளைத் தேன்குழலாகப் பத்துப் பனிரண்டு (கரெக்டாப் பதினைந்து) பண்ணிவிட்டுப் பின்னர் சட்னிக்கு வாங்கி வைச்சிருந்த பொட்டுக்கடலையைச் சிவக்க வறுத்துச் சர்க்கரை வேண்டாம்னு நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய், முந்திரிப்பருப்புப் போட்டு நெய்யைச் சுட வைத்து ஊற்றிக் கலந்து சுமார் 20 லாடுகள் பண்ணி வைத்துவிட்டு மருந்து சாமான்களை வறுத்துப் பொடித்துக் கொண்டு தனியா/இஞ்சி அரைச்சுச் சாறை வடிகட்டிக் கொண்டு அதில் வெல்லம் சேர்த்துக் கொதித்த பின்னர் மருந்துப் பொடியைப் போட்டு மருந்தையும் கிளறி வைச்சேன்.





ராமர் மேல் அந்த வெளிச்சப் பிரதிபலிப்பைத் தவிர்க்க முடியவில்லை.


அலுமினியம் ஃபாயில் பேப்பரில் இருப்பது காடரிங்கில் கொடுத்த முள்ளுத் தேன்குழல், ஓட்டு பக்கோடா/(ரிப்பன்), மிக்சர். டப்பாவில் நான் செய்த சாதாரணத் தேன்குழல். பக்கத்து டப்பாவில் பொட்டுக்கடலை மாவு உருண்டைகள். அதன் பக்கம் காய்ச்சிய எண்ணெய், சூடான வெந்நீரில் கரைத்த சீயக்காய் (மீரா), மஞ்சள் பொடி மருந்து, வெற்றிலை பாக்கு, பழங்கள் காடரிங்கில் கொடுத்த உருண்டைகள், மைசூர்ப்பாகு முதலியன.

பக்ஷணங்களுக்கு நடுவே அவரோட வேட்டிகள், டீ ஷர்ட்டுகள்/ பக்கத்தில் என்னோட புடைவை. ஒன்று பருத்திச் சேலை. சிவப்பிலும் நீலத்திலும் கட்டம் போட்டது. இன்னொன்று மஞ்சள் பொடி கலர்/மாம்பழக்கலர்/ மெஜந்தா பார்டர்/தலைப்பு உள்ள சில்க் காட்டன்/ஆந்திரா கைத்தறிப்புடைவை!. ஜேகே அண்ணா கண்களுக்கு என்ன நிறமாய்த் தெரியப் போறதோ தெரியலை. சில்க் காட்டன் புடைவையைக் கட்டிக் கொண்டேன் சிறிது நேரம். 


காடரிங்காரர்கள் பக்ஷணங்கள் விநியோகம் செய்யப்படுவதாயும் எங்க வீட்டிற்கு  மாலை ஏழு மணிக்கு மேல் வரும் எனத் தகவல் சொன்னார்கள். ஆர்டர் நிறைய என்பதால் காலை ஏழு மணியில் இருந்து கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறார்கள். மதியம் ஒரு மணி நேரம் வீட்டுக்குப் போய் மத்தியான உணவு சாப்பிட்டுக்கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு மறுபடி ஆரம்பிச்சுக் கொடுத்திருக்காங்க. எட்டு மணி போல் ஒரு வழியாக வந்து சேர்ந்தது. அதிகம் பக்ஷணம் சொல்லவில்லை. எல்லாமே கால் கிலோ தான். 

காலை அலாரம் வைக்காமலேயே 3 மணிக்கு விழிப்பு வந்துவிட்டது. உடனே எழுந்தால் ரங்க்ஸ் திட்டுவார் எனக் கொஞ்ச நேரம் பேசாமல் படுத்திருந்தேன். இருப்புக் கொள்ளவில்லை. மூன்றரைக்கு முன்னால் எழுந்து கொண்டு ஒவ்வொரு வேலையாக முடித்துக் கொண்டு குளித்துப்புடைவை கட்டிக்கொள்கையில் மணி ஆறுக்கும் மேல் ஆகிவிட்டது. ரங்க்ஸ் காலை எண்ணெய் தேய்த்துக் கொண்டால் திரும்பத் தர்ப்பணம் பண்ணுகையில் மறுபடி குளிக்க வேண்டும் என்பதால் தீபாவளியும்/அமாவாசையும் சேர்ந்து வந்தால் தாமதமாகவே குளிப்பார்.  சிறிது நேரம் புதுப்புடைவையில் இருந்துவிட்டுப் பின்னர் உடை மாற்றிக் கொண்டு சமையல் வேலைகளைத் தொடங்கினேன். அம்பத்தூர் எனில் குறைந்த பட்சமாக ஐந்து வீடுகளாவது போகும்படி இருக்கும். இங்கே அப்படி எல்லாம் இல்லை. 

 புடைவையைக் கட்டிக் கொண்டு வெளியே எங்கும் போகாமல் வீட்டுக்குள்ளேயே இருப்பதும் ஒரு சாகசம் தான் எனத் தோன்றி விட்டது! :))))) 


அனைவருக்கும் மனம்நிறைந்த தீபாவளி வாழ்த்துகள்.