எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, September 29, 2015

பத்மநாபபுரம் அரண்மனை! படங்கள் தொடர்ச்சி!

இங்கே




கதவைப் பூட்டுவதற்காகச் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடு



கதவில் கலை வண்ணம்




கண்ணன் வேய்ங்குழல் ஊதிய வண்ணம்  நடுவில் இருக்கச் சுற்றிலும் கோபியர் தூரப்பார்வை







வேய்ங்குழல் ஊதும் கண்ணன் மட்டும் கிட்டப்பார்வையில் மேலே உள்ள அதே வேலைப்பாடு தான். இதுவும்  அதில் நடுவில் கண்ணன் உள்ள பாகம் மட்டும் படம் எடுத்தேன். 

Sunday, September 27, 2015

வரகு புழுங்கலரிசியில் இட்லியும், தோசையும்! கம்பில் அடை கூட உண்டு!




கம்பு அடை
நான்கைந்து நாட்கள் முன்னர் கம்பில் அடை செய்தேன். அதற்கான படம் மேலே.

தேவையான பொருட்கள்

கம்பு ஒரு கிண்ணம்

இட்லி அரிசி+பச்சரிசி இரண்டும் சேர்ந்து அரைக்கிண்ணம்

துவரம்பருப்பு+கடலைப்பருப்பு+உளுத்தம்பருப்பு மூன்றும் சேர்ந்து முக்கால் கிண்ணம். துவரம்பருப்புக் கூட இருந்தால் அடை மொறுமொறுவென்றும் நிறமாவும் வரும். என்றாலும் கம்பு சேர்ப்பதால் கொஞ்சம் நிறம் கம்மி தான்.

4  மி.வத்தல்+பச்சை மிளகாய் 2

உப்பு, பெருங்காயத் தூள், தேங்காய்த் துருவல் (விரும்பினால்) அல்லது சின்ன வெங்காயம் பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். அவரவர் விருப்பம் போல்.
கருகப்பிலை, கொத்துமல்லி. வேறு ஏதேனும் கீரையைக் கூடப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். நான்  ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம் நறுக்கிச் சேர்த்தேன்..  காலை சுமார் பத்து மணி அளவுக்கு ஊற வைத்தேன். மாலை நாலு மணி சுமாருக்கு அரைத்தேன்.





தைரியமா எடுத்துக்குங்க! நல்லாவே இருந்தது. சோள ரவையில் உப்புமா பண்ணியது தான் படம் எடுக்க முடியாமல் விட்டுப் போச்சு! முடிந்தால் இன்னொரு நாள் பண்ணுகையில் படம் எடுக்கிறேன். வர வர இந்த எண்ணங்கள் பதிவு சாப்பாட்டு எண்ணங்களா மாறிட்டு வருதோனு ஜந்தேகமா இருக்கே! ::)

இந்தக் கம்பு அடை சாப்பிடும்போதும் சரி (ஏற்கெனவே 2.3 முறை கம்பு செய்து பார்த்திருக்கேன்.)பண்ணும்போதும் சரி, எனக்கு நினைவில் வருவது கல்கியின் பார்த்திபன் கனவு தான்! அதில் தான் படகோட்டி பொன்னன், மனைவி வள்ளி வார்த்துப்போடப் போடச் சுடச் சுடக் கம்பு அடையைக் கீரைக்குழம்போடு ஒரு கை பார்த்துக் கொண்டிருப்பான். கம்பு அடையின் மணம் அந்தக் காவேரிக்கரையில் பரவியதாக எழுதி இருப்பார். அது போல் இந்தக் கம்பு அடையின் மணமும் பரவி இருக்கணும். :)

அடுத்த சோதனை வரகில்! இதுக்கு நடுவில் ப்ரவுன் ரைஸ், கைக்குத்தல் அரிசி இரண்டும் ஒண்ணுதாங்கறங்க. ஆனால் கடையில் தனித்தனியாகக் கொடுத்தாங்க. இரண்டையும் சமைத்துப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். அதிலே முக்கால் மணியிலிருந்து ஒரு மணி ஊற வைக்கச் சொல்லி இருந்தாலும் அது போதலை. மூன்று மணி நேரம் ஊற வேண்டி இருக்கு. பதினோரு மணிக்குக் குக்கர் வைக்க நான் எட்டு மணிக்கே ஊற வைச்சாச் சரியா இருக்கு! :)


வரகு புழுங்கலரிசியில் வியாழன் அன்று இட்லி, தோசைக்கு அரைத்து வைத்தேன். நாங்க இரண்டே  நபர்கள் என்பதால் கொஞ்சமாகவே நனைத்தேன்.

ஒரு கப் அல்லது 200 கிராம் வரகு புழுங்கலரிசி

அரை கப் இட்லி புழுங்கலரிசி

முக்கால் கப் உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன் வெந்தயம்.

சிலர் ஆமணக்கு விதைகள் சேர்க்கச் சொல்றாங்க. நமக்குப் பழக்கம் இல்லை என்பதால் சேர்க்கவில்லை. தனித்தனியாகக் கழுவி ஊற வைத்தேன். நான் எப்போதுமே நன்கு கழுவி விட்டே ஊற வைப்பேன். ஏனெனில் ஊறிய நீரில் சத்துக்கள் அதிகம் இருக்கும். ஆகவே அந்த நீரை வீணாக்காமல் அதை விட்டே அரைப்பேன். ஆகையால் எப்போவுமே இட்லி, தோசை, அடை பொன்றவற்றிற்கு அரைக்கையில் நன்கு நாலு அல்லது ஐந்து முறைக்கும் மேல் கழுவி விட்டே அரைக்க ஊற வைப்பேன்

பொதுவாகக் காலை பத்துமணிக்குள்ளாகவே அரைத்தும் வைப்பதால் காலையிலேயே நனைத்து வைத்துவிடுவேன். அதே போல் இப்போதும் அரைத்து வைத்தேன். அப்போது தான் இரவுக்கு தோசை வார்க்கலாம் என்பதால் எப்போதுமே இந்த வழிமுறை தான். கிரைண்டரில் நன்கு அரைத்து எடுத்து உப்புப் போட்டுக் கலந்து வைத்ததை இரவு தோசையாக வார்த்தேன். வரகு அரிசியில் அரைத்த மாவு கீழே!



தொட்டுக்கக் கொத்துமல்லிச் சட்னி, தக்காளிச் சட்னி. ரங்க்ஸுக்கு மிளகாய்ப் பொடி மேல் திடீர்க் காதல். ஆகையால் அவர் அதைத் தான் தொட்டுக் கொண்டார்.  தோசை கொஞ்சம் போல் நிறம் சிவந்திருந்தாலும் தீயவில்லை. ருசியும் பரவாயில்லை.





அடுத்த நாள் காலை சப்பாத்தி பண்ணியதால் மாலைக்கு வரகு இட்லி வார்த்தேன். கீழே படம்




இட்லிக் கொப்பரையில் மாவு விட்டு வைத்திருக்கேன் அரை வேக்காட்டில் எடுத்த படம்! :)




வெந்த இட்லிகள். இட்லியும் பஞ்சு, தோசையும் பஞ்சு!  தோசை, இட்லி இரண்டு பேருமேதகராறு செய்யாமல் சமர்த்தாக ஒழுங்காக அவங்க வேலையைப் பார்த்தாங்க!  தொட்டுக்க சாம்பார் தான்! ஹூம் ஹூம் இல்லை, இல்லை ஶ்ரீராம் சாம்பார் இல்லை. சாதாரண சாம்பார் தான். 

Saturday, September 26, 2015

சமாராதனை சாப்பாடு சாப்பிட வாங்க!

இன்னிக்குப் புரட்டாசி மாத 2 ஆம் சனிக்கிழமை. வீட்டில் வெங்கடாஜலபதி சமாராதனை செய்தோம்.   மத்தியானமே பதிவு போடலாம்னு வந்தேன் ஆனால் மனசு சரியில்லாமல் போச்சு! அப்புறமா இப்போத் தான் கணினியைத் திறந்தேன். தெரியாமல் செய்த தப்புன்னாலும் தப்பு தப்புத் தானே. இன்னமும் உறுத்தல் இருக்கு. என்றாலும் எல்லாத்தையும் வெங்கடாசலபதிக்கு விட்டுட்டு அனைவரிடமும் மன்னிப்பும் கேட்டுட்டுப் பதிவைப் போடலாம்னு வந்தேன்.

அந்தக் காலத்துப் பழைய  வெங்கடாசலபதி படம். இது முகத்தை மறைத்து நாமம் வரும் முன்னர் உள்ள படம். 



கொஞ்சம் ஜூம் செய்து எடுத்தது..



எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு நம்ம ராமர் வழக்கம்போல்





ராமருக்குக் கீழே ஶ்ரீதேவி, பூதேவி சமேதரான பெருமாள் விக்ரஹம்



புரோகிதர் வழி நடத்துகிறார். 


பெருமாளுக்கு நிவேதனம் ஆன  பின்னர் இங்கே ஸ்வாமி அலமாரியிலும் செய்த நிவேதனம். சர்க்கரைப் பொங்கல், எள்ளு சாதம், உளுந்து வடை, அன்னம் பருப்பு. 

எல்லோரும் பிரசாதம் எடுத்துக்குங்க. இரண்டு நாட்களாக வரகு புழுங்கலரிசியில் தோசை, இட்லி செய்ததும் படம் எடுத்து வைச்சிருக்கேன். இன்னிக்கு அதைப் போடலை. இன்னிக்குப் பிரசாதங்கள் மட்டுமே. 

ஆரத்தியை ஸ்வாமிக்கு முன்னே வைச்சாச்சு, நவராத்திரியில் வைக்கிறாப்போல் மனிதர்களுக்கு மட்டுமே ஆரத்தி சுற்ற வேண்டும். ஸ்வாமிக்கு இல்லை என்கின்றனர். ஆகவே ஸ்வாமிக்கு முன்னால் ஆரத்தியை வைப்பதோடு சரி! 






Thursday, September 24, 2015

இதெல்லாம் ஒரு பிரமாதமா!

கொஞ்ச நாட்களாகவே பிரச்னைகள், பிரச்னைகள். முக்கியமாய் எலக்ட்ரானிக் பொருட்களால் பிரச்னைகள்.  அதிலே முதல்லே வாஷிங் மெஷினில் வெளியேற்றும் நீர் வெளியே போகாமல் வீட்டுக்குள்ளேயே வந்து கொண்டு தினமும் ஒரே அவதி! அதுவும் பொண்ணு வந்திருக்கிறச்சே அவ தான் அவங்க துணியைத் தோய்க்கையில் மாட்டிப்பா! :) நாங்களும் வாஷிங் மெஷினில் தான் பிரச்னைனு நினைச்சு ஹேயர் கம்பெனி ஆட்களைக் கூட்டி வந்து ஒருமுறைக்கு இருமுறை பார்த்தும் சரியாச்சுனு நினைச்சால்! எங்கே! சரிஆகவே இல்லை! கடைசியில் பொண்ணு கண்டிப்பாச் சொல்லிட்டா! நான் ஊருக்குப் போறவரைக்கும் வாஷிங் மெஷின் நீரைக் குளியலறையில் வெளியேற்றிக்கறேன்னு! அப்படியே செய்தா! நானும் அது வசதியா இருக்கேனு அப்படியே வைச்சேன்.

ஆனால் நம்ம ரங்க்ஸுக்கு அதுக்குனு தனியா இணைப்பு இருக்கிறச்சே ஏன் இப்படிச் செய்யணும்னு ஒரே மண்டைக்குடைச்சல் தாங்காமல் மறுபடி வாஷிங் மெஷினின் நீர் வெளியேற்றும் குழாயை அதற்கான குழாய் இணைப்பில் கொடுக்கக் கொஞ்ச நாட்கள் எல்லாம் சரியாக இருந்தாற்போல் தான் இருந்தது. பார்த்தியா! நான் சரி பண்ணிட்டேன்னு அவர் பெருமையா மார்தட்டிக்கொண்டு சொன்ன  ஒரு நாள் இரவில் தற்செயலாகக் கணினி அறைக்குச் சென்ற நான் வழியெல்லாம் தண்ணீராக இருக்கக் கண்டு என்னனு பார்த்தால் வாஷிங் மெஷின் அடியிலிருந்து நீர்! ஆனால் மெஷினிலிருந்து  நீரை வெளியேற்றும் குழாய் சுத்தமாகக் காய்ந்து இருந்தது. ஏதேனும் பேய், பிசாசு வந்து நீரை ஊத்திட்டுப் போயிடுச்சாங்கற லெவல்லே  ஜிந்திக்க ஆரம்பிச்சோம். இரண்டு நாட்கள் தீவிர ஆய்விற்குப் பின்னர் கை கழுவும் வாஷ் பேசின் குழாயில் விடும் நீர் தான் திரும்ப வீட்டுக்குள்ளே வருகிறது என்பதை  வாஷ் பேசின் குழாயில் நீரைத் திறந்துவிட்டுப் பார்த்துக் கண்டு பிடித்தோம். பின்னர் இதைக் குழாய்க்காரர் தான் சரி பண்ணணும்னு அவரைக் கூப்பிட்டு அதைச் சரி பண்ணினோம். இரண்டு குழாய்கள் இணையும் இடத்தில் இருந்த அடைப்பைச் சரி செய்தார் அவரும். ஒரு அரை அடி நீளக் குழாய் அங்கே குப்பைகளோடு அடைத்துக் கிடந்திருக்கிறது. 

சரி அதான் போச்சுன்னா அடுத்து இன்வெர்டர்! அதுக்குத் தண்ணீர் நிரப்ப ஆளைக் கூப்பிட இருந்தார். ஆனால் முதல்நாளிலேயே எனக்கு அழுகிய முட்டை நாற்றம், கழிவறை சுத்தம் செய்யாமல் கிடந்தது போல் நினைவு! உட்கார முடியலை! என்னனும் புரியலை. மறுநாள் பாட்டரிக்குத் தண்ணீர் ஊற்ற வந்த பையர் பார்த்துட்டு பாட்டரீ லீக் ஆவதாகவும், அது தான் அழுகிய முட்டை நாற்றம் என்றும் இதைத் தொடர்ந்தால் மின்சாரமே பிரச்னை வேறேதும் விபத்து நேரிடலாம் என்றும் மேலும் மின்சாரக் கட்டணமும் அதிகம் ஆகும்படி மீட்டர் ஓடும் என்றும் தெரிவித்தார். உடனடியாகப் புது பாட்டரி வாங்கிப் போட்டு அதைத் திருப்தி செய்தாயிற்று. இப்போது ஒரு வாரமாக ஏ.சி. சீரியல் ஓடுது.  ஸ்ப்லிட் ஏசி! வெளியே இருக்கும் அவுட்டர் யூனிட்டில் வெளியேறும் நீரை ஒரு குழாய் மூலம் கீழே உள்ள தொட்டி வரை கொண்டு போகக் குடியிருப்புக் கட்டும்போதே யோசனை செய்து கட்டி இருக்காங்க.  ஏசி புதுசு  நிறுவும்போதே அதை எல்லாம் எடுத்துக் காட்டி நிறுவ வைத்தோம். மே மாதத்தில் இருந்து தான் புது ஏசி பயன்பாட்டுக்கும் வந்தது. ஞாயிற்றுக்கிழமை வரை பிரச்னை இல்லை. திங்களன்று சும்ம்ம்ம்மா அங்கே கொஞ்சம், இங்கே கொஞ்சம் நீர் சொட்டிப் படுக்கை அறையில் ஈரமாக இருந்தது. உடனடியாக எல்ஜிக்குத் தொலைபேசி ஆளை வரவழைத்தோம். அவர் சாயந்திரம் ஆறு மணிக்கு வந்தார். இந்த நேரம் அவுட்டர் யூனிட்டை எப்படிப் பார்ப்பீங்கனு கேட்டால் பார்ப்பேன்னு சொல்லிட்டுப் போய்ப் பார்த்துட்டு, குப்பை தான் வேறே ஒண்ணும் இல்லைனு சொல்லிட்டு ஃபில்ட்ரை சுத்தம் செய்து மாட்டிட்டுப் போயிட்டார். அன்னிக்கு ஒண்ணும் இல்லை. மறுநாள் மழை மாதிரி தண்ணீர் கொட்டிப் படுக்கை அறையில் வெள்ளம்!

இதோ, இப்போது புகார் கொடுத்து 2 நாட்கள் ஆகியும் இன்று வரை இந்த நிமிடம் வரை யாரும் வரவில்லை. இன்னொரு படுக்கை அறையில் உள்ள ஏசியைப் போட்டுக் கொண்டு படுத்தாலும் நேற்று அடிக்கடி மின்சார வெட்டின் காரணமாக இரவு 2 மணிக்கப்புறமாகவே மின்சாரம் தொடர்ந்து இருந்தது. கடும் சூடு காரணமாகச் சரியாகவே தூங்க முடியலை!  இந்த அழகில் சூடு தாங்காமல் உடலெல்லாம் வெந்து போச்சு! சில குறிப்பிட்ட நிறம் போட்டால் அன்னிக்கு அரிப்பும், இம்சையும் தாங்கலை! :) ஹிஹிஹி, தம்பி வந்து ஒரே புலம்பல்னு திட்டப் போறார் டோய்!  இன்னிக்குப் பாருங்க, சோள ரவையில் உப்புமா செய்யவேண்டி தாளிதம் எல்லாம் போட்டு சோள ரவையையும் போட்டு வறுத்துக் கொண்டு வெந்நீரைக் கொதிக்க வைத்து ஊற்றினால் அலுமினியம் சட்டியில் வேகவே நேரம் எடுத்தது. அப்புறமாக் குக்கரில் மாற்றினேன்! :) இந்தக் கலாட்டாவில் படம் எல்லாம் எடுக்கலை! நேத்திக்கு எடுத்தக் கம்பு அடை படம் மட்டும் இருக்கு. அதை மட்டும் போடறேன்.  அதுவும் இப்போ இல்லை! அப்புறமாப் போடறேன். இப்போச் சமைக்கப் போகணும். புதுசா சமையல் கத்துட்டுச் சமைக்கிறாப்போல் இருக்கு. இன்னிக்கு ப்ரவுன் ரைஸில் சாதம் வைக்கணுமாம்! பிள்ளையாருக்குத் தேங்காய் உடைக்கிறேன்னு வேண்டிட்டுச் சமைக்கப் போறேன்.  சமையல் என்ன ஒரு பிரமாதமானு சொல்லிட்டு இருந்த எனக்கு நல்லா வேண்டும். வேணுங்கட்டிக்கு வேணும், வெங்கலங்கட்டைக்கு வேண்டும். :)

வாழ்த்துங்க தோழர்களே, தோழியரே!

Wednesday, September 23, 2015

அரிசி சாகுபடி செய்யலாம் வாங்க!

அரிசி நம் நாட்டில் கிட்டத்தட்ட 12,000 ஆண்டுகளாக உண்ணப்பட்டு வரும் உணவு. பலருக்கு முக்கியமான உணவே அரிசிச் சோறு தான். எப்போது தோன்றியது என்று சொல்ல முடியாத காலகட்டத்திலேயே அரிசி நம் முக்கிய உணவாக ஆகி இருந்திருக்கிறது.  அஸ்ஸாம், சீனா, திபெத் ஆகிய இடங்களில் தோன்றி இருக்கலாமோ என்னும் ஓர் கருத்து இருந்தாலும் இதைக் குறித்து வேதங்களில் கூடச் சொல்லப்பட்டிருக்கிறதாகத் தெரிய வருகிறது.  சங்க இலக்கியங்களில் நன்செய் நிலத்தில் விளையும் நெல்லை வெண்ணெல் என்றும்புன்செய் நிலத்தில் வானம் பார்த்த பயிராக விளைந்த நெல் ஐவன வெண்ணெல் என்றும் அழைக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது.  அரிசியைச் சேமிக்கப் பத்தாயங்கள், நெல் குதிர்கள், களஞ்சியங்கள் மண் பானைகள் போன்றவற்றில் பத்திரப்படுத்தி வந்தனர். செங்கற்களால் கட்டப்பட்டப் பெரிய பெரிய களஞ்சியங்களும் இருந்திருக்கின்றன. இதைக் குறித்த ஓர் படம் நாம் ஏற்கெனவே ஶ்ரீரங்கம் கோயிலில் இருப்பதைப் பார்த்தோம்.

நெல் குதிர் க்கான பட முடிவு




நெல் குதிர் க்கான பட முடிவு

இவ்வளவெல்லாம் பிரசித்தி பெற்ற அரிசிச் சோறு இன்று நாம் அனைவரும் உண்ண முடியாத ஓர் உணவாக மாறி வருகிறது. அரிசிச் சோறு  ஆபத்தானது என்னும் எண்ணம் நம் மனங்களிலே விதைக்கப்பட்டு வருகிறது. அரிசிச் சோற்றை உண்பதால் தான் நாம் தொந்தியும், தொப்பையுமாக குண்டாக ஆகி விடுகிறோம் என்று பெரும்பாலானவர்கள் கூறுகின்றனர். முக்கியமாக ஆங்கில மருத்துவர்கள் கூறுகின்றனர்.  அரிசிச் சோற்றினாலே குண்டர்கள் உதயம் என்றால் நம் நாட்டிலே கடந்த பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகக் குண்டர்கள் பரம்பரை தான் தோன்றி இருக்க வேண்டும். நம் நாட்டில் ஆட்சி புரிந்த மன்னர்களோ, போர்க்களத்தில்  பல போர்களில் ஈடுபட்ட வீரர்களோ குண்டாக இருந்ததாகச் சரித்திரம் பேசவில்லை.  அந்தக் காலத்து மக்களைக் குறித்தும், வாழ்க்கை முறை குறித்தும் சித்திரங்கள், சிற்பங்கள் தீட்டும், செதுக்கும் ஓவியர்களோ, சிற்பிகளோ யாரேனும் ஒருவரை குண்டாகத் தொந்தி, தொப்பையுடன் வரைந்தோ அல்லது செதுக்கியோ காட்டி இருக்கின்றனரா? இல்லையே!

சர்க்கரை வியாதி குறித்த விழிப்புணர்வு அப்போது இல்லை என்பது காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் நம் நாட்டு மருத்துவ முறைகளில் முக்கியமாக சித்த மருத்துவத்தில் நீரிழிவு குறித்தும் சொல்லப்பட்டே இருக்கிறது. என்றாலும் பெரும்பாலான மக்கள் இந்நோயால் பீடித்துத் துன்பப் பட்டதாகத் தெரியவில்லை. சமீப காலங்களில் தான் இவை அதிகம் காணப்படுகின்றன. அதற்குக் காரணம் நாம் முழுதும் தீட்டப்பட்ட அரிசியை உண்பது தான் காரணமே ஒழிய அரிசியே காரணம் அல்ல. அரிசிச் சோற்றை தட்டில் நிறையக் கொட்டிக்கொண்டு நாம் உண்பதும் இல்லை. அதோடு வெறும் சோற்றை மட்டும் உண்பது இல்லை. அதோடு பருப்பு, காய்கள் சேர்த்த சாம்பாரோ, அல்லது ரசமோ, மோரோ ஊற்றித் தான் சாப்பிடுகிறோம். கூடவே துணைக்குக் காய்களும் இருக்கின்றன.  நம் உடலுக்கும் மரபுக்கும், வாழ்க்கை முறைக்கும் ஏற்ற இந்த அரிசி உணவு அனைவருக்கும் கெடுதலான ஒன்று எனப் பிரசாரம் செய்யப்படுகிறது. 

அரிசிச் சோற்றுடன் சேர்க்கும் குழம்புப் பருப்பின் புரதம், காய்களின் சத்துக்கள், அனைத்தும் நம் சிறுகுடலால் உறிஞ்சி எடுக்கப்பட்டுச் சத்தாக மாறி நமக்கு நடமாடும் சக்தியைக் கொடுக்கிறது. இத்தகைய திறன்படைத்த அரிசியை இன்று ஒதுக்குவது சரியா?


தொடரும்.


ஹிஹிஹி, நம்ம ரங்க்ஸுக்குச் சர்க்கரை அளவு வெறும் வயிற்றில் எடுக்கும்போதே 170க்குப் போயிடுது. அதனால் இன்றிலிருந்து சிறு தானியங்களுக்கு மாறி இருக்கோம். காலை குதிரைவாலி அரிசிப் பொங்கல்! பிரமாதம் போங்க! தொட்டுக்க கத்திரி, வெங்காயம் போட்ட பருப்புச் சேர்க்காத கொத்சு! மதியம் கைக்குத்தல் அரிசிச் சாதம், வடிக்கணும் போல. நான் குக்கரில் வைத்தேன். முதலில் குக்கரை அணைச்சதும் சிறிது நேரம் கழித்துத் திறந்து பார்த்தால் சாதமே ஆகலை! :) அப்புறமா திரும்பக் குக்கரை வைச்சு கிட்டத்தட்டப் பத்து விசில் கொடுத்ததும் சாதம் ஆகி இருந்தது. புடலங்காய்ப் பொரிச்ச குழம்பு, எலுமிச்சை ரசம், நாரத்தங்காய் காரம் போட்ட ஊறுகாய்,  கத்திரிக்காய்க் கறி, மோர். படம் எடுக்கலை. காலையில் அவசரத்தில் நினைவில் வரலை. இப்போவும் காக்காய்க்கு இந்தச் சாதம் பிடிக்குமானு கவலைப் பட்டுக்கொண்டே போய்க் காக்காய்க்குச் சாதம் வைச்சுட்டு வரும்போது படம் எடுக்க மறந்துட்டேன். ராத்திரி கம்பு அடை! முடிஞ்சால் அதைப் படம் எடுத்துடறேன். :) சாப்பிடாமல் காத்திருங்க எல்லோரும்!

Sunday, September 20, 2015

உப்பு, வெள்ளை உப்பு! எங்கள் ப்ளாக் கவனிக்கவும்!

சமையல் அளவுகள் பற்றி ஒரு குறிப்புக் கொடுக்கலாம்னு எண்ணம். நாளைக்கு "எங்கள் ப்ளாகி"ல் "திங்க"ற கிழமை! அதிலே எக்கச்சக்கமா உப்பைப் போட்டுடறாங்க. சாப்பிட முடியறதில்லை. :)

ஒரு டீஸ்பூன் உப்பு அல்லது சர்க்கரை 5 கிராம் இருக்கும்.

இப்படி  3 டீஸ்பூன்கள் சேர்ந்ததே ஒரு டேபிள் ஸ்பூன். இது 15 கிராம் உப்பு ஆயிடும். 5 கிராம் உப்பே சில சமயம் கரிக்கும். 15 கிராம் உப்பை மேசைக்கரண்டியில் எடுத்துப்பாருங்க எவ்வளவு இருக்குனு புரியும்! :)

அதுவே திட உணவுகளில் ஒரு கப் என்றால் குறைந்த பட்சம் 200 கிராம் இருக்கும். அதாவது ஒரு ஆழாக்கு.

மாவு கொஞ்சம் கூட வரும். வெண்ணெய்  250 கிராம் வரும். பாலும் 250 கிராம் இருக்கும். அரிசி 200 கிராம் தான் வரும். குவித்து அளந்தால் கூட வரும். அளப்பதையும் பொறுத்திருக்கிறது. ஒரு கப்புக்குப் பதினாறு டேபிள் ஸ்பூன் என்று அளவு சொன்னாலும் பொருளை உத்தேசித்து இவை மாறும்.  தொலைக்காட்சியில் சமையல் பற்றிச் சொல்லித் தரும் பிரபலமான செஃப்கள் அனைவரும் உப்பைக் கொஞ்சமாகவே தூவுவார்கள். கவனிக்கவும். அதுவும் கடைசியில் தான் உப்பைச் சேர்ப்பார்கள்.

ஒரு டீஸ்பூனுக்கும் குறைவாகவே உப்பைச் சேர்ப்பார்கள். காஃபிக்குச் சர்க்கரை ஒரு டீஸ்பூன் போட்டாலே அதிகமாகத் தெரியும். கரண்டியால் சர்க்கரை போட்டுக் குடிக்கிறவங்க எங்க வீட்டிலும் உண்டுனாலும் காஃபியில் குறைவாகச் சர்க்கரை போடுவதே ருசியைக் கொடுக்கும்,. இல்லைனா ருசியைக் கெடுத்துடும்.

ஆகவே நாளைக்கு யார் சமைச்சாலும் எங்கள் ப்ளாக் செஃப் உப்பைக் குறைச்சுப் போடுங்க! இல்லைனா சாப்பிட வர மாட்டேன்! இரண்டு டேபிள் ஸ்பூன் உப்பெல்லாம் போட்டுடாதீங்க! கரிச்சுத் தொலைக்கும்! :)

Thursday, September 17, 2015

பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை கொடுத்தீங்களா?



வழக்கம் போல் ஶ்ரீராமர் படம் மேலே



கீழே மற்ற விக்ரஹங்கள்



பிள்ளையார்கள் மூணு பேர் அலங்கரிக்கப்பட்டு உட்கார்ந்திருக்காங்க. ஒண்ணு பூர்விகப் பிள்ளையார் வலப்பக்கம். நடுவில் களிமண் பிள்ளையார். இடப்பக்கம் வெள்ளை உலோகப்பிள்ளையார்.




கீழே நிவேதனங்கள், சாதம் பருப்பு, பாயசம், தேங்காய்ப் பூரணக் கொழுக்கட்டை, உளுந்துப் பூரணக் கொழுக்கட்டை இட்லி, வடை அப்பம், பழங்கள், தேங்காய், வெற்றிலை பாக்கு. நிவேதனங்களில் இருந்த கரண்டியை நினைவா தளிர் சுரேஷை நினைத்துக் கொண்டே எடுத்துத் தனியாக வைத்தேன். :)




கற்பூர தீபாராதனை! 


பிள்ளையார் அனைவருக்கும் எல்லா வளங்களையும் அருள்வாராக! 


Wednesday, September 16, 2015

பிள்ளையார் சதுர்த்தி ஏற்பாடுகள் எல்லாம் எந்த அளவில் இருக்கு?

பிள்ளளையார் க்கான பட முடிவு



எல்லோரும் நம்ம நண்பரை அவங்க நண்பர்னு சொல்லிக்கிறாங்கப்பா! அநியாயமா இல்லையோ! நாளைக்கு அவர் வராரே நம்ம வீட்டுக்கு! இன்னிக்கே பூக்கள் எல்லாம் எக்கச்சக்க விலை! கதம்பம் உதிரிப்பூக்கள் வாங்கித் தொடுக்கலாம்னா வாங்கறாப்போல் இல்லை. நூறு கிராம் மல்லிகைப் பூ 40 ரூபாய்! இத்தனைக்கும் பூ வரத்து இருக்கு! இன்னிக்கு ஒரு நாள் தானே சம்பாதிக்கலாம்னு ஏகத்துக்கு விலையை ஏத்திட்டாங்க. பிள்ளையாரைக்  களிமண் கொண்டு அச்சில் போட்டுச் செய்து கொடுப்பவங்களே இங்கே இல்லையாம். எல்லாம் ஏற்கெனவே தயார் செய்யப்பட்ட பிள்ளையார்கள்.

போன வருஷம் எல்லாம் பிள்ளையார் வாங்க வேண்டாம்னு ரங்க்ஸ் சொல்லிட்டார். எனக்கு என்னமோ வருத்தமா இருந்தது.  இந்த வருஷம் சரினு வாங்கிண்டு வந்தார். 50 ரூபாய்க்குச் சின்னதாய்ப் பிள்ளையார். அவருக்குப் பவுடர் அடிச்சிருக்காங்க. கேட்டால் இங்கே எல்லாப் பிள்ளையார்களுக்கும் பவுடர் அடிச்சுத் தான் கொடுக்கறாங்களாம். அப்படியும் லேசா விரிசல் காண ஆரம்பிச்சிருக்கார். பேசாம நாளைக்கே வாங்கி இருக்கலாமோன்னா நாளைக்கு இந்தப் பிள்ளையாரையே நூறு ரூபாய்க்குக் கொடுப்பாங்க. அவங்க வைச்சது தான் சட்டம் நாளைக்கு!

சென்னையிலே பிள்ளையார் வாங்கினால் கூடவே குடை, எருக்கமாலை எல்லாமும் கொடுப்பாங்க. பழங்கள் வாங்கப்போனாலும் செட்டாக எல்லாப் பழங்களும் வைத்திருப்பாங்க. பிரப்பம்பழம் கூட இருக்கும். இங்கே எல்லாம் தனித்தனியாக இருக்கு! எருக்க மாலையே இல்லை பிள்ளையாருக்கு! மதுரையிலேயும் இப்படித் தான் பிள்ளையார் தனியா! அவருக்கான சாமக்கிரியைகள் தனியானு இருக்கும். சென்னை வந்த வருஷம் பிள்ளையார் வாங்கிட்டு வரும்போதே குடையையும் கொண்டு வந்த ரங்க்ஸைப் பார்த்து ஆச்சரியத்துடன் குடை வாங்கினீங்களானு கேட்கப் பிள்ளையாரோடு குடையும் சேர்ந்து தான் என்றார். ரொம்ப சந்தோஷமா இருந்தது. அந்தப் பிள்ளையாரைக் கிணற்றில் போட்டப்புறமும் குடையை நவராத்திரி வரை வைச்சிருந்தேன்.

அப்போல்லாம் மாவு கல்லுரலில் இடித்துக் கிளறிக் கொழுக்கட்டை செய்வேன். ஆகையால் முதல்நாளில் இருந்தே வேலை இருக்கும். பூரணமும் தயாரித்து வைத்துக் கொள்வேன். விநியோகம் நிறைய இருக்கும். இப்போ எல்லாமும் குறைஞ்சு போச்சு! எண்பதுகளில் தான் மிக்சி முதல் முதல் வாங்கினோம். அப்போதெல்லாம் சுமீத் மிக்சி தான் பிரபலம். அதுவும் முன் பதிவு செய்து வைத்து வாங்கணும். என்றாலும் அதில் கொழுக்கட்டைக்கு மாவு அரைப்பதெல்லாம் பயமாக இருந்த காலம். பயந்து பயந்து ரொம்ப முடியாமல் இருக்கும் சமயங்களில் மாவு அரைத்தால் மிஷின் சீக்கிரம் சூடாகி விடும். அணைச்சுடுவோம். பின்னர் மிச்ச அரிசியை மறுபடி கல்லுரலில் போட்டு இடித்து மாவாக்குவோம்.

கிட்டத்தட்ட அரைக்கிலோ அரிசி அப்போதெல்லாம் கொழுக்கட்டைக்குப் போடுவது உண்டு. வீட்டிலும் பத்துப் பேர் இருந்தார்கள். கொடுக்க வேண்டியவர்களும் நிறைய உண்டு. பல சமயங்களில் இந்த அரைக்கிலோ அரிசியும் போதாமல் வெறும் அரிசி மாவு மிஷினில் அரைத்து வைத்திருப்பதைப் போட்டுச் செய்து கொடுப்பதும் உண்டு. இப்போ சமீப காலங்களில் ஒரு கப் அரிசிக்குக் கொழுக்கட்டை பண்ணினாலே ராத்திரி வரை வருது. அதிலும் வெல்லம் போட்டது ரொம்பச் செய்ய முடியலை. ரங்க்ஸுக்குச் சாப்பிட முடியாதே! :( உளுத்தங்கொழுக்கட்டை தான் ஓரளவுக்குச் சாப்பிடுவார். ஆகையால் இப்போதெல்லாம் முதல்நாளே எதுவும் செய்யறாப்போல் இல்லாமல் வேலையே இல்லாமல் ஆயிடுச்சு!

இனி எனக்கு அப்புறமா இந்த அளவுக்கானும் எங்க குடும்பத்தில் பண்டிகை கொண்டாடுவாங்களா? இல்லைனாக் கடையில் வாங்கி மணையில் வைப்பாங்களா! தெரியாது. மருமகளுக்கும், பெண்ணுக்கும் கொழுக்கட்டை செய்யத் தெரிந்தாலும் அம்பேரிக்காவில் இதுக்கெல்லாம் லீவு ஏது?  இப்போதெல்லாம் அவசர யுகமாக ஆகிக்கொண்டு வருவதால் இங்கே இந்தியாவிலும் பெரும்பாலும் இதைக் கம்யூனிடி பண்டிகையாகவே கொண்டாடி வருகின்றனர். வட மாநிலங்களைப் போல் தமிழ்நாட்டிலும் ஆகிக் கொண்டு வருகிறது.  முன்னெல்லாம் வடக்கே போன புதுசுலே அவங்க கடையிலே வாங்கி பக்ஷணங்களை சுவாமிக்கு நிவேதனம் செய்வதை அதிசயமாப் பார்ப்பேன். இப்போத் தமிழ்நாட்டிலேயே கொழுக்கட்டையிலே இருந்து எல்லாமும் விற்பனைக்கு வருது. அதுவும் இன்னிக்கு வாங்கறவங்களுக்குச் சிறப்பு இலவசப் பரிசுனு அறிவிப்போட! அதே போல் கிருஷ்ண ஜயந்திக்கும் வருது! இனி நவராத்திரிச் சுண்டலும் அப்படி வரும்போல! ஏற்கெனவே தீபாவளிக்கு இருக்கு!  கார்த்திகைக்குப் பொரி உருண்டையும் தயார் நிலையில் வந்தாச்சு! பொங்கலுக்கும் நவராத்திரிக்கும் தான் வரலைனு நினைக்கிறேன். 

Monday, September 14, 2015

பத்மநாபபுரம் அரண்மனையில் --படங்கள் தொடர்கின்றன!



உயரே வெளிச்சம் வர அமைக்கப்பட்டிருக்கும் மர வேலைகள். 







இது தர்பார் ஹாலில் (மந்திரசாலை) உள்ளது என நினைக்கிறேன். நான் தான் அங்கே போகவே இல்லையே! :) படங்களைக் கொண்டு வருவதே பிரம்மப் பிரயத்தனமாக இருக்கிறது. :(  ஏதோ  தப்பு நடந்திருக்கு! :) இல்லைனா நாம ரொம்ப நல்லா எடுத்துடுவோம் இல்ல! :P :P :P :P சும்மா ஏதோ நொ.சா. அம்புடுதேன்! படம் எடுக்கவும் வரலை, போடவும் வரலை! விஷயம் அதான்! :)



இது தாய்க் கொட்டாரத்தில் அதைப் பற்றிய குறிப்புகள் எழுதி இருக்கும் அறிவிப்புப் பலகை!




முழுதும் தேக்கு மரத்தில் ஆன மேல் விதானத்தின் வேலைப்பாடு

Sunday, September 13, 2015

மீண்டும் பத்மநாபபுரம் மாளிகையில்!


மேற்கண்ட சுட்டியில் கடைசியாய் எழுதினது. இப்போது மாளிகையின் சில தோற்றங்கள்.

தர்பார் ஹாலுக்குச் செல்ல ஏற வேண்டிய படிகள். இது  மந்திரசாலை என்றும் சொல்கின்றனர். ஒவ்வொருத்தராகவே ஏற முடியும். அதிலும் ஒரு படிக்கும் இன்னொரு படிக்கும் நடுவே குறைந்தது இரண்டு அடிகள்!!!!!!!!!!!! என்னால் ஏற முடியவில்லை. கீழேயே தங்கி விட்டேன். ஆனால் அப்படி மேலே ஏறி அந்தப் பக்கம் கீழே இறங்கணுமாம். அது எனக்கும் தெரியாது. கஷ்டப்பட்டு மேலே ஏறிய நம்ம ரங்க்ஸுக்கும் தெரியாது. அவர் நான் இருக்கும் பக்கமே வந்துட்டார். அப்புறமா அங்கிருந்த இன்னொரு வாயிலைத் (இது பாதாளம்) திறக்கச் சொல்லிக் கீழிறங்கினோம். எங்களுக்காகக் கீழிறங்கும் வழியைத் திறந்து விட்டார்கள். வேறு யாரையும் விடவில்லை.  கீழிறங்குவதும் கஷ்டமே! அந்தக் காலத்தில் எல்லோரும் ரொம்பவே உயரமா இருந்திருப்பாங்க போல! :)


நான் மட்டும்தான் மேலே ஏறலைனு நினைச்சால் எனக்குத் துணையாக இன்னும் சிலர் இருந்தனர். ஆனால் அவங்களை எல்லாம் எங்களை விட்டப் பாதாள வழியில் விடலை! :)







மந்திரசாலையைக் கடந்து கீழிறங்கும் இடம் மணி மாளிகை என்கிறார்கள். இங்கே ஒரு பிரச்னை என்னவெனில் தகுந்த வழிகாட்டி இல்லை. உள்ளூர் மக்களே தெரிந்தவர்களை அழைத்து வந்து அவர்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுகின்றனர். அப்படித் தெரிந்து கொண்டது தான் சிலவற்றின் பெயர்.  இதற்கடுத்து அன்னதான மண்டபம் என்னும் பெரிய மண்டபம். அடுத்துத் தாய்க் கொட்டாரம் எனப்படும் பழைய மாளிகை


இந்த மாளிகையில் மின் விளக்குகளோ மின் விசிறிகளோ கிடையாது. மின் இணைப்பே இல்லைனு நினைக்கிறேன். பழமையைப் பாதுகாக்கவேண்டியும் இருக்கலாம்.


ஜன்னல் வழியே இயற்கையாகத் தெரியும் வெளிச்சம் தான் உள்ளேயும். ஜன்னலின் அமைப்பு மாதிரிக்கு.




பால்கனி போன்ற அமைப்பு. மர வேலைப்பாடுகளில் அசத்தி இருக்கின்றனர்.


Friday, September 11, 2015

ரயிலில் மூத்த குடிமக்களுக்கான முன் பதிவு பற்றிய குழப்பம்! ஒரு விளக்கம்!

ரயில் க்கான பட முடிவு

ஒரு சில பத்திரிகைகள் தவறாகச் செய்தியைப் பிரசுரித்திருப்பதால் அனைவருக்கும் நேரிட்டிருக்கும் குழப்பம் மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து செய்யப்படப் போகிறது என்பதாகும். இதற்காக ரயில்வே அமைச்சகம் ஆகஸ்ட் 31-ந்தேதி சுற்றறிக்கை அனுப்பி இருப்பதாகவும் அந்தப் பத்திரிகையில் கண்டிருக்கிறது. பத்திரிகை சுற்றறிக்கையை ஒரு காபி எடுத்துப் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என முன்னர் நினைத்தேன். ஆனால் அதுவும் சிலருக்கு அரசு மொழி ஆங்கிலம் புரியவில்லை என்பதைப் புரிந்து கொண்டதும் இந்த விளக்கத்தைக் கொடுக்கத் தீர்மானித்தேன். எனக்கு வேலை வைக்காமல் மொழி பெயர்த்து உதவிய தம்பிக்கு என் நன்றி. ஒரு தெளிவுக்காகவும் இதைக் குறித்துப் பதறும் பலருக்காகவுமே இந்த விளக்கம். மற்றபடி யாரையும் குறை கூறும் எண்ணமோ தாக்கும் நோக்கமோ இந்தப் பதிவில் கிடையாது. அப்படி யாருக்கேனும் மனம் வருத்தம் அடைந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.


ரயில்வே அமைச்சகம் கீழ் பெர்த் குறித்து ஆகஸ்ட் 31 அன்று பிறப்பித்த ஒரு சுற்றறிக்கை.
எடுத்த எடுப்பிலேயே பொருள் ந்னு சொல்லி பெண்கள் மூத்த குடிமகன்களுக்கு முன்பதிவு கோட்டா ஒதுக்குதல் ந்னு  சொல்லி இருக்கு. அதை படிக்காம கன்சஷனை வாபஸ் வாங்கறாங்கன்னு சொன்னா மூ.தே ந்னு சொல்லாம என்ன சொல்லறது?

மேலும் வருவதன் சாராம்சம்:

தனியாக பயணம் செய்யும் மூத்த குடிமகன்கள், 45 வயதுக்கு மேலான பெண்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்காக ஒவ்வொரு கோச் சிலும் இரண்டு கீழ் பெர்த்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. பின்னால் இது 4 ஆக உயர்த்தப்பட்டது.
 அவ்வப்போது புகார்கள் பரிந்துரைகள் பெறப்பட்டதில் தம் குழுவில் பயணம் செய்யும் மூத்த குடிமகன், பெண்களுக்கு இந்த கோட்டாவில் ஒதுக்கீடு செய்யும்படி கோரிக்கை எழுந்தது. இந்த கோட்டாவில் அந்த கோச்சில் ஏற்கெனெவே புக் ஆகிவிட்டதானால் குழு பிரிக்கப்படும் என்பதால் இது முன்னால் அனுமதிக்கப்படவில்லை.
இது மறுபரிசீலனை செய்யப்பட்டு ஒரு முடிவெடுக்கப்பட்டு உள்ளது. படிவத்தில்   மூத்த குடிமகன்கள், 45 வயதுக்கு மேலான பெண்கள், கர்பிணிகள் ஆகியோரில் இரண்டு பேர் இருந்தால் இந்த மூத்த குடிமகன்கள் கோட்டாவில் டிக்கெட் கொடுக்கலாம். இந்த கோட்டாவில் வராதவர்கள் இந்த கோட்டாவில் வருவோருடன் சேர்ந்து படிவம் சமர்ப்பிக்க இயலாது.

2016 ஜனவரி முதல் தேதி முதல் க்ரிஸ் இதற்கான மாற்றங்களை மென்பொருளில் செய்து அறிவிக்கும். டிக்கட் புக் செய்யும் பயணிகளுக்கு தகுந்த எச்சரிக்கை தரப்படும். இதற்காக
1. ஐஆர்சிடிசி ஒரு வசதி செய்ய வேண்டும். மூத்த குடிமகன் கோட்டாவில் 2 பயணிகள் புக் செய்யப்பட்டால் அவர்கள் குழுவிலிருந்து பிரிக்கப்பட நேரிடலாம் என்று எச்சரிக்கை தரப்பட வேண்டும். மேலே தொடர அவர்கள் ஆம் என்று டைப் செய்ய வேண்டும்.
2. க்ரிஸ் பிஆரெஸ் டெமினலிலும் இது போல வசதி தருவதை ஆராய வேண்டும். புக் செய்யும் க்ளர்க் பயனியிடமோ புக் செய்பவரிடமோ கேட்டுத்தெரிந்து கொண்டு தொடர ஆம் என டைப் செய்ய வேண்டும்.
3. ஜோனல் ரயில்வே இதை பொது மக்களுக்கு சரியாக புரிய வைக்க வேண்டி தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

ஆக, இதில் எங்கேயும் கட்டண சலுகை பற்றி பேச்சே எழவில்லை.

மூத்த குடி மகன்களுக்கு நிச்சயமாக கீழ் பெர்த் வேண்டும் எனில் அது கிடைக்கும் பட்சத்தில் உறுதி படுத்திக்கொள்ள வசதி செய்யப்பட்டு இருக்கிறது. அதுவும் குழப்பம் இல்லாமல் குழுவில் இருந்து பிரிந்து விடுவீர்கள் பரவாயில்லையா என்று கேட்ட பிறகே செய்யப்படும்.

இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமானால் குழுவாக போகிறவர்கள் தம் குழுவில் இருக்கிற சீனியர் சிடிசனுக்கு நிச்சயமா கீழ் பெர்த் வேணுமானால் தனியாக படிவம் சமர்ப்பியுங்கள். 

இதற்கான சுற்றறிக்கையின் ஆங்கில வடிவம் பெறக் கீழ்க்கண்ட சுட்டிக்குச் செல்லவும். பலருக்கும் இதன் ஆங்கில வடிவம் புரியாததால் ஏதோ மூத்த குடிமக்களுக்கான சலுகையையே ரத்து செய்துவிட்டதாகவும், குடும்பத்துடன் செல்கையில் அவர்கள் தனித்துச் செல்ல நேரிடும் என்றும் கூறிக்கொண்டிருக்கின்றனர். இது குறித்து இன்றைய தினமலரில் ஆசிரியர் கடிதம் பக்கத்திலும் ஒருத்தர் புலம்பி இருந்தார். அரசு ஆங்கிலம் அதுவும் வரைவுப் படிவத்தின் ஆங்கிலம் புரிவது ரொம்பக் கஷ்டம்.  அதில் பழக்கம் இருந்தால் தான் புரியும். நானே மொழி பெயர்க்க இருந்தேன். ஆனால் தம்பி வாசுதேவன் நேற்று மொழிபெயர்த்துப் போட்டு விட்டார்.  எளிமையாகப் புரிந்து கொள்ளும்படி மொழி பெயர்த்திருக்கிறார். யாரும் பதறும்படி எதுவும் நடக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டாலே போதும். ஆங்கிலம் அதுவும் அரசு ஆங்கிலம் புரியும் என்பவர்கள் கீழ்க்கண்ட சுட்டியில் போய் ஆங்கில வடிவ சுற்றறிக்கையைக் காணலாம். 

குழுவிலிருந்து பிரிக்கப்படலாம், மேற்கொண்டு தொடரலாமா என உங்களைக் கேட்டுக் கொண்டே உங்கள் அனுமதியுடனேயே இணைய மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். அதே போல் நீங்கள் ரயில்வே முன்பதிவுச் சீட்டு அலுவலகம் சென்றாலும் அங்கிருக்கும் ரயில்வே ஊழியர் நிலைமையை உங்களுக்கு எடுத்துச் சொல்லிக் குழுவிலிருந்து பிரிந்தால் பரவாயில்லையா எனக் கேட்ட பிறகே உங்களிடமோ அல்லது உங்கள் சார்பாகப் பயணச்சீட்டு வாங்குபவரிடமோ கேட்டுக் கொண்டே  மேற்கொண்டு தொடருவார்கள். ஆக நீங்கள் குழுவிலிருந்து பிரியாமல் இருந்தாலே அங்கே குழுவில் இருப்பவர்களோடு உங்கள் படுக்கை இருக்கையை உங்கள் வசதிப்படி மாற்றிக் கொள்ளலாமே! ஏன் கவலைப்பட வேண்டும்? நீங்கள் கீழ்ப் படுக்கைதான் வேண்டும் என உறுதியாக இருந்தால் தான் குழுவிலிருந்து பிரிய நேரிடும். ஆக இதை அனுமதிப்பதும் அனுமதிக்காததும் உங்கள் கையில் தான் இருக்கிறது. 

 http://www.indianrailways.gov.in/railwayboard/uploads/directorate/traffic_comm/Comm-Cir-2015/CC-51.pdf


ஆங்கிலத்திலிருந்து சுற்றறிக்கையை எளிய தமிழில் மாற்றி இருக்கும் தம்பி தி.வாசுதேவனுக்கு என் நன்றி.