எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, August 30, 2016

ஒரு சின்னத் திப்பிசம்! ஆனாலும் ரசிக்கலாம்!

இன்னிக்கு வீடு நிறைய விருந்தினர்கள். ஒரு குட்டிப் பயலும் வந்தான். வீட்டில் வாங்கி வைச்சிருந்த சின்ன வெங்காயத்தை எல்லாம் வாரி இறைச்சான். ரொம்ப சந்தோஷமா இருந்தது. வீட்டில் வைச்ச சாமான் வைச்ச இடத்தில் இருந்தால் அதில் என்ன அழகு இருக்கு! கலையணும் இல்லையா? அதுவும் சின்னக் கையால் கலைவதுன்னா! அதுவே ஒரு கவிதை!

அப்புறமா இப்போச் சொல்ல வந்தது ஒரு முக்கியமான விஷயம். ஹிஹிஹி! நேத்திக்கு ராத்திரிக்கு என்ன செய்யறதுனு மண்டை காய்ஞ்சது. ஏற்கெனவே குளிர்சாதனப் பெட்டியில் வெந்தய தோசை மாவு இருந்தது தான். ஆனால் அது இரண்டு நாட்களாகச் சாப்பிட்டாச்சு. ரவா இட்லி பண்ணலாமானு பார்த்தால் அதுக்குத் தோதாக எதுவும் கிடைக்கலை! சரி கோதுமை தோசை பண்ணலாம்னு நினைச்சால். கேழ்வரகு ரவா இட்லிக்காக வாங்கின எம்.டி.ஆர் கேழ்வரகு ரவா இட்லி மாவு இருக்குனு நினைவுக்கு வந்தது. அதோடு கிருஷ்ணன் பிறப்புக்காக மிக்சியில் பொடித்த அரிசி மாவுக் கப்பியும் இருந்ததா! போதாதுக்குக் கிருஷ்ணனுக்குத் தட்டின வடை போக மிச்ச மாவும் இருந்தது. இங்கே தினம் தினம் ராத்திரி மழை பெய்யுதா! சூடு அதிகம் இல்லை. ஆகவே வடை மாவும் புளிக்கலை!

ஆகவே ஒரு திப்பிச வேலை செய்யலாம்னு முடிவு பண்ணினேன். கேழ்வரகு ரவா இட்லி மாவு அரைக்கிண்ணமும், அரிசி ரவை பொடித்தது அரைக்கிண்ணமும், கோதுமை ரவை(சம்பா) அரைக்கிண்ணமும் எடுத்துக் களைந்து ஊற வைச்சேன். சாயந்திரமா எல்லாத்தையும் போட்டு அரைச்சு மிச்சம் இருந்த வடை மாவையும் (உளுந்து வடை மாவு) கலந்தேன். இஞ்சி, ப.மி. கருகப்பிலை, கொத்துமல்லி, வெங்காயம் பொடியாக நறுக்கிச் சேர்த்தேன்.



அரைச்சுக் கலந்த மாவை தோசையாக ஊற்றியதன் படம். தோசையைத் திருப்பிப் போட்டதும் உள்ள படம் கீழே.



திருப்பிப் போடப்பட்டு வெந்து கொண்டிருக்கும் தோசை. சாம்பார், வத்தக்குழம்பு எல்லோத்தோடயும் நன்றாகவே இருக்கும்போல! :)

வாட்சப்பில் ஶ்ரீராமுக்குப் படத்தை அனுப்பினேன். அவர் என்னோட மெயிலுக்கு அனுப்பப் படத்தைப் போட்டாச்சு! இனிமே செல்லில் எடுக்கிறதுன்னா இன்னொரு செல்லில் தான் எடுக்கணும். இல்லைனா காமிராவிலேயே எடுத்துடணும்! :)

 என்ன என்று ஆவலுடன் கேட்ட ரங்க்ஸிடம் விஷயத்தைப் பட்டென்று உடைக்க அவருக்கு பயம் வந்துடுச்சு. மறுபடி நான் சோதனை எலியா என்று கவலை வந்துடுச்சு. அவரைச் சமாதானம் செய்வதற்காகத் தேங்காய்ச் சட்னி என்னும் அஸ்திரப் பிரயோகம் பண்ணிச் சட்னி அரைச்சுட்டு தோசை வார்த்துக் கொடுத்தால் வாயே திறக்காமல் மூன்று தோசைகள் சாப்பிட்டார்.

தோசை நல்லாவே இருந்தது. நினைவாகப் படமும் எடுத்தேன். ஆனால் பாருங்க காமிராவில் எடுக்கலை. :( மொபைலில் எடுத்தேனா! அதை அங்கிருந்தே என்னோட மெயில் பாக்சுக்கு அனுப்பிப் பின்னர் அதைப் பதிவில் இணைப்பேன். ஆனால் மொபைல் டாட்டா டிசேபிள் பண்ணி இருக்காம். சரினு அதை எனேபிள் பண்ணினால் என்னஎன்னவோ சொல்லுது! மொத்தத்தில் படம் இங்கே போட முடியலை! :( என்ன செய்யலாம்னு யோசிக்கிறேன். பார்க்கலாம். யாருக்கானும் என்ன செய்யணும்னு தெரிஞ்சால் சொல்லுங்க! இன்னிக்கு வந்திருந்த உறவினர்கள்  இன்னும் சிறிது நேரம் இருந்திருந்தால் அவங்க கிட்டே கேட்டுப் போட்டிருக்கலாம். இன்னிக்கு முழுக்க கணினியைத் திறக்கவே இல்லை. நேத்திக்கு இடிச்ச இடியிலும், மின்னிய மின்னலிலும் காலை பத்து மணி வரை இணையமும் வரலை. தொலைக்காட்சியும் வரலை! 

Friday, August 26, 2016

தக்காளி, வெங்காயம், பறவைகள் குறித்த ஓர் பார்வை! :)

மஹாராஷ்டிராவில் ஒரு குவின்டால் வெங்காயம் 50 ரூபாயாக ஆகி விட்டது. கிலோ ஐந்து ரூபாய்க்கும் கீழே. மத்திய பிரதேசத்தில் வெங்காயம் விளைச்சல் அதிகம் என்பதால் அரசைக் கேட்டு அவற்றை ஏலத்தில் விடச் செய்திருக்கிறார்கள். ஆனாலும் விலை போகவில்லை! அந்த வெங்காயம் இப்போது ரேஷனில் இலவசமாக விநியோகம் ஆகிறது. சரியானபடி பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தால் ஆறு மாதம் இருந்திருக்கும். இப்போது இப்படி வீணாகவும் போய் இலவசமாகவும் கொடுத்தபடியினால் திடீர்னு வெங்காயம் விலை ஏற வாய்ப்பு இருக்கிறது. அப்போது எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு மோதி அரசைத் திட்டவும் வாய்ப்பு அதிகம். :) மத்திய, மாநில அரசும் இந்த மாதிரி விரைவில் வீணாகும் பொருட்களைப் பாதுகாக்கத் தக்க நடவடிக்கைகள் செய்ய வேண்டும். அது சரி, வெங்காயம் விலை ஏறினால் அது குறித்து ஜோக்குகள் வருகிற மாதிரி விலை குறைந்தால் வராதோ!!!!!!!!!!!!!!!!!!!!

இப்படித் தான் தக்காளியும் வீணாகப் போகிறது. தக்காளி விரைவில் வீணாகும் பொருளும் கூட! அதையும் தக்கபடி பாதுகாக்கலாம். பொதுவாக உணவுப் பண்டங்கள், முக்கியமாய்க் காய்கறிகள், பழங்கள் விலை குறைந்துள்ளது என்னமோ உண்மை. ஆனால் விலை கொஞ்சம் உயர்ந்தால் மக்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்று சொல்லும் ஊடகங்கள் எதுவும் இப்போதுள்ள விலை குறைவைக் குறித்து வாயே திறக்கவில்லை. வேண்டாத கேள்விகளைக் கேட்டுக் காஷ்மீர் பிரச்னையை  மேலும் மேலும் அதிகரிப்பதில் உள்ள ஈடுபாடு நல்ல விஷயங்களிலும் ஊடகங்கள் மேற்கொள்ள வேண்டும்.


முள்ளங்கி விளைச்சல் குறித்தும் அது நல்ல விலைக்குப் போவதால் விவசாயிகள் அடைந்திருக்கும் மகிழ்ச்சி குறித்தும் நேற்றைய தொலைக்காட்சி செய்திகளில் பார்க்க முடிந்தது. எல்லா சானல்களிலும் இது வரவில்லை! ஆனால் முள்ளங்கி நன்கு விளைந்திருந்தது பார்க்கக் கண்களுக்கே குளிர்ச்சியாக இருந்தது. தஞ்சாவூரில் உள்ள விவசாய நிலங்களில் இது நடந்துள்ளது. 24 மணி நேரமும் தண்ணீர் கிடைத்தது என்றும் கூறினார்கள். இப்படிக் கிடைத்தால் விவசாயத்தில் நம் விவசாயிகள் சாதனையே படைப்பார்கள்.

எங்க வீட்டிலே பறவைகளுக்குத் தண்ணீர் வைக்க ஒரு மண் சட்டியும் அதுங்களுக்குத் திங்க நொறுக்ஸ் வைக்க ஒரு தட்டும் வைச்சிருப்போம். அது தவிர ஒரு தம்பளரிலும் தண்ணீர் வைப்போம். நொறுக்ஸ் போட்டால் தான் சாதமே சாப்பிடுதுங்க. சாப்பிட்டு முடிச்சதும் எப்படியோ அந்தத் தட்டைக் கீழே தள்ளி விட்டுடுதுங்க! தண்ணீர்ப் பாத்திரத்தையும் அப்படித் தான் நகர்த்தி விடுதுங்க. ரொம்பவே விஷமக்காரப் பறவைங்களா இருக்கும் போல! முந்தாநாள் தட்டையும் தம்பளரையும் கீழே தள்ளி அப்புறமா நம்ம ரங்க்ஸ் கீழே போய்ப் பக்கத்துத் தோப்பில் இருந்தவங்களைக் கூப்பிட்டுத் தட்டையும், தம்பளரையும் எடுத்துத் தரச் சொல்லி வாங்கி வந்தார். இதுங்க இதே வேலையா வைச்சுக்கப் போகுதுங்கனு கொஞ்சம் யோசனையா இருக்கு! அலகாலேயே இவ்வளவு தூரம் தள்ளி விடுதுங்களே! 

Thursday, August 25, 2016

கிருஷ்ணா , கிருஷ்ணா!









கிருஷ்ணனுக்குப் பால், தயிர், வெண்ணெய் அவல் வெல்லம், அப்பம், முறுக்கு, தட்டை, உப்புச் சீடை, வெண்ணெய்ச் சீடை, கோளோடை, சீப்பி, பால் பாயசம், வடை, வெற்றிலை, பாக்கு, பழங்கள் நிவேதனம் பண்ணியாச்சு. பக்ஷணங்கள் எல்லாம் இந்த வருஷம் சொதப்பல்! :( முறுக்குச் சுத்தவே வரலை எனக்கு! அதிர்ச்சியாப் போயிடுச்சு! மற்ற பட்சணங்களும் சுமார் ரகம் தான். ஆகவே கவனிச்சு ஜாக்கிரதையாச் சாப்பிடுங்க! வெல்லச் சீடை பரிசோதனையில் இறங்கவே இல்லை! அதுவும் காலை வாரிடுச்சுன்னா என்ன செய்யறது! கிருஷ்ணன் குழந்தையா! அதனால் பக்ஷணங்கள் எல்லாமும் மிருதுவாகவே வந்திருக்கு! பல்லே இல்லாதவங்க கூடச் சாப்பிடலாம்.

கிருஷ்ணா ஏண்டாப்பா இப்படி சோதிக்கிறே என்னைனு வாய் விட்டு அழலாம் போல இருக்கு! முறுக்கு அப்படிப் படுத்திடுச்சு! நான் கல்யாணம் ஆன புதுசிலே கூட இப்படிச் சொதப்பினது இல்லை. முறுக்கும் நல்லாவே வரும். என்ன அப்போல்லாம் கெட்டியாச் சுத்துவேன். மெலிசுச் சுத்து சுத்தினதில்லை. இப்போச் சுத்தவே வரலை! என்னவோ போங்க! ஒண்ணும் புரியலை!

Wednesday, August 24, 2016

ரஞ்சனிக்காக இரட்டை விளிம்பு தோசை! :)

ஹிஹிஹி,  உல(க்)கை நாயகர், கமல் ஒரு சீரியஸ் படம் கொடுத்தால் அடுத்து ஒரு நகைச்சுவைப் படம் கொடுப்பார். அது போல நானும் அவரைப் பார்த்து முந்தைய சீரியஸ் பதிவுக்குப் பின்னர் கொடுக்கும் மொக்கைப் பதிவு இது! ஆனால் இது இங்கே கொடுக்கக் காரணம் உண்டு. காமாட்சி அம்மா தன் தொட்டில் பதிவில் தொட்டில் 12 இரட்டை விளிம்பு தோசை என்று எழுதி இருந்தார். அதைப் பற்றி ரஞ்சனி அவரிடம் கேட்க நான் இலுப்பச்சட்டி தோசை தானேனு காமாட்சி அம்மாவிடம் கேட்க அவரும் ஆமாம் என்றார். இதைக் குறித்து ஏற்கெனவே அப்பாதுரைக்காகப் பதிவு போட்டேன். 2012 ஆம் ஆண்டில்! ஆமாம், அப்பாதுரை எங்கே? யாருக்குத் தெரியும்?

இப்போ அதே பதிவு மீள் பதிவாகப் போடறேன், ரஞ்சனிக்காக! :) இதை ஏன் இரட்டை விளிம்பு என்று சொல்கிறோம் என்றால் தோசை மாவைச் சட்டியில் ஊற்றியதும் சுற்றி எண்ணெய் விட்டதும் ஓர் விளிம்பு வரும் அல்லவா? அதன் பின்னர் மாவு நடுவில் வேக வேண்டும் என்பதற்காகக் கரண்டியை தோசையின் நடுவில் சிறிதே நேரம் வைப்போம். சிறிது நேரம் என்றால் சிறிது நேரம் தான். அதிக நேரம் இருந்தால் மாவெல்லாம் கரண்டியில் ஒட்டிக் கொண்டு அடியில் பெரிய ஓட்டையுடன் கறுப்பாகி விடும். எடுத்ததும் கரண்டி வைத்த பாகத்தில் ஓர் விளிம்பு வரும். ஆகவே இரட்டை விளிம்பு தோசை! நல்ல காரசாரமான வெங்காயச் சட்னி அல்லது மிளகாய்ப் பொடி இதற்கு நல்ல துணை!  இப்போல்லாம் நம்ம ரங்க்ஸுக்கே இது பிடிக்க ஆரம்பிச்சுடுத்தாக்கும்!  கீழே இருக்கும் தோசையில் பார்த்தால் இரு விளிம்புகள் நன்றாகவே தெரியும். :)


அப்பாதுரைக்காக இலுப்பச்சட்டி தோசை! :))))

அப்பாதுரைக்காக இலுப்பச் சட்டி தோசை.  இது இட்லி மாவிலே நல்லா இருக்கும்.  ஆனால் நான் இட்லிக்கு, தோசைக்குனு எல்லாம் தனியா அரைப்பதில்லை.  சின்ன மொட்டைச் சட்டி.  எங்க குடும்பத்திலே பரம்பரையா எல்லாருக்கும் சீர் வரிசையிலே இந்தச் சட்டி கட்டாயம் கொடுப்பாங்க.  எல்லாருக்கும் இந்த தோசை ரொம்பப் பிடிக்கும்.  தொட்டுக்க மிளகாய்ப்பொடிதான் இதுக்கு நல்லா இருக்கும்.  அப்பாதுரை வாங்க,  இந்தியா வந்தப்போ இங்கே வந்திருந்தா கிடைச்சிருக்கும்.  வராம ஏமாத்திட்டீங்க!  கீழே வார்த்து எடுத்த தோசைகள்.  மேலே பொன் முறுகலா உள்ளே ஸ்பாஞ்ச் மாதிரி ஓட்டை ஓட்டையா நல்லா வரும் இது.

யாருக்கெல்லாம் வேணுமோ சாப்பிடுங்க.

Saturday, August 20, 2016

சடங்குகள் செய்வது குறித்து ஒரு பார்வை!

தெளிவு
 பிரதிலிபியில் கண்ணன் எஸ். அவர்களின் இந்தக் கதையைப் படிக்க நேரிட்டது. அவர் கதைகள் எனக்குப் பிடிக்கும். இயல்பான ஓட்டத்துடன் இருப்பதால் ரசிப்பேன். இந்தக் கதை மூடநம்பிக்கை என்று ஆசிரியர் நினைப்பதைச் சாடுவதாக வந்துள்ளது. மூட நம்பிக்கை என்று ஆசிரியர் எதைக் குறிப்பிடுகிறார் எனில் பித்ருக்களுக்கு அதாவது இறந்தவர்களுக்கு வருடா வருடம் கொடுக்கும் திதியையும் அப்போது அனுஷ்டிக்கப்படும் ஒரு சில கட்டுப்பாடுகளையும் தான். ஆனால் அந்தக் கட்டுப்பாடுகள் குழந்தைகளாக இருந்த அவர்கள் மேலும் திணிக்கப்பட்டிருக்கிறது. அது தான் கொடுமை. ஒருவேளை அவருடைய பெற்றோர் பார்வை அப்படி இருக்கலாம்.

ஆனால் நான் அறிந்தவரை எங்கள் வீடுகளில் அப்படி எல்லாம் இல்லை. என் மாமியார் கடுமையாக ஆசாரங்களைக் கடைப்பிடிப்பவர் தான். சிராத்தம் வருவதற்கு ஒரு மாதம் முன்னிருந்தே மாமியார், மாமனார் இருவரைத் தவிர நான், என் கணவர், எங்கள் இரு குழந்தைகள் ஆகிய அனைவருமே வெங்காயம், மசாலாப் பொருட்கள் சாப்பிட முடியாது. சமைக்கவும் முடியாது. குழந்தைகளுக்கு மட்டும் என என் பிறந்த வீட்டில் செய்வார்கள். அப்படியும் செய்ய முடியாது. ஆனாலும் சிராத்தம் அன்று என் கணவர், குழந்தைகள் காலை ஆகாரம் செய்வார்கள். அதை வீட்டிலேயே செய்து கொடுத்ததும் உண்டு. ஹோட்டலில் வாங்கியும் சாப்பிட்டது உண்டு. சிராத்தக் காரியங்களில் நான் பங்கேற்பதால் எனக்குச் சாப்பிட அனுமதி இல்லை. அவ்வளவே. அதுவே என் மைத்துனர்கள், ஓரகத்தி, நாத்தனார் ஆகியோர் ஹோட்டலில் வாங்கிச் சாப்பிடுவார்கள். அவர்களுக்குத் தடை இருந்தது இல்லை. சிராத்தம் ஆரம்பித்ததும் தான் யாரும் எதுவும் சாப்பிடக் கூடாது என்பார்கள். காக்கைக்கு உணவளிக்கும் வரை நீர் கூட அருந்த முடியாது. அது மிஞ்சிப் போனால் இரண்டு மணி நேரம் தான் ஆகும்.  ஆனால் இங்கே ஆசிரியர் குழந்தைகளான அவர்களும் சேர்ந்து சிராத்தம் முடியும் 2 மணி வரை பட்டினி கிடந்ததாகவும், புரோகிதர் அனுமதித்த பின்னரே சாப்பிட முடிந்தது என்றும் சொல்கிறார்.

அதோடு இல்லாமல் தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும் என்று பயமுறுத்தியும் வளர்க்கப்பட்டிருக்கிறார். தப்பு ஏன் செய்யக் கூடாது என்னும் மூல காரணம் சொல்லிக் கொடுக்கப்படவில்லை! இது துரதிர்ஷ்டவசமானது தான். இதனால் பலருக்கும் உண்மையான தாத்பரியம் புரியாமல் மூட நம்பிக்கை என்றே சொல்கின்றனர். நாத்திகவாதிகளாக மாறுகின்றனர். இன்னும் சிலர் இப்படியும் போகமுடியாமல் அப்படியும் போகமுடியாமல் திண்டாடுகின்றனர். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். எந்தக் கடவுளும் நம்மை அழிப்பதில்லை. மனிதரை மனிதரே அழிக்கின்றனர். நாம் செய்வது தப்பு என்பதை நாம் உணர்ந்து கொண்டு விட்டால் திருத்திக் கொள்ள முடியும். அதற்கான தண்டனையை நம் மனசாட்சியே நமக்குக் கொடுத்துவிடும்! அதைவிடச் சிறந்த தண்டனையை வேறு எவராலும் கொடுக்க முடியாது. மூட நம்பிக்கைகள் கூடாது என்பது வேறு. அதற்காக சிராத்தம் போன்ற திதிகள் கொடுக்காமல் அநாதை ஆசிரமம், முதியோர் இல்லம்னு அன்னதானம் செய்தால் போதும் என்பது வேறு.

இன்னும் சிலர் காசிக்குப் போய்விட்டு வந்தால் சிராத்தமே செய்ய வேண்டாம் என்றும் பிரசாரம் செய்கின்றனர். காசிக்குச் சென்று கர்மாக்கள் செய்வது என்பது நம் பணத்தை சேமிப்பை நிரந்தர வைப்பில் போடுவது போலத் தான். அது நீண்ட பலனை அளிக்கும். ஆனால் வருடா வருடம் திதி செய்வது என்பது வேறு! இப்போ இரண்டு நாட்கள் முன்னர் வந்த ஆவணி அவிட்டத்தன்று வடை, பாயசத்துடன் சாப்பிட்டிருப்போம். அதுக்காக நேத்து சமைக்காமலோ, சாப்பிடாமலோ இருந்தோமா? இன்று சமைப்போம் அல்லவா? ஒரு நாள் விதரணையாகச் சாப்பிட்டு விட்டதற்காக மற்ற நாட்கள் நம்மைப் பட்டினியா போட்டுக்கறோம். அது போலத் தான் வருடா வருடம் திதிகள் செய்வது, முன்னோர்களுக்குத் திதி கொடுக்காமல் இருப்பது மிகவும் தவறு. இப்போது நாம் நன்றாக இருப்பது போல் தெரிந்தாலும் பின்னால் வரும் சந்ததிகளுக்குப் பாதிப்பு ஏற்படும். இது கண்கூடாகப் பார்த்த ஒன்று.

எப்போதுமே புரோகிதர்கள் அனுமதி கொடுத்தப்புறமாக் குழந்தைகள் சாப்பிடலாம்னு சொல்லிப் பார்க்கவும் இல்லை. பிராமணார்த்தம் சாப்பிட்டவர்கள் சிறிது நேரம் சிரமப்பரிகாரம் செய்து கொள்வார்கள் தான். ஆனால் அவர்கள் எவ்விதக் கட்டளைகளும் இட்டதில்லை. பிராமணர்கள் சாப்பிட்டு முடிந்த பின்னர் பிண்டப் பிரதானம் என்ற ஒன்றும் அதன் பிறகு திதி கொடுப்பவர் செய்யும் தர்ப்பணமும் முடிந்த பின்னரே சாப்பிட வேண்டும் என்பது நடைமுறை, சாஸ்திர ரீதியானதும் கூட. ஆனாலும் பிண்டப் பிரதானம் ஆகிவிட்டால் குழந்தைகளுக்கு பட்சணம் சாப்பிடக் கொடுப்பார்கள். அதற்காகக் காத்திருந்த நாட்கள் இப்போதும் நினைவில் இருக்கின்றன.

மற்றபடி இந்த ஏழைகளுக்கு உதவுதல், இல்லாதவர்களைப் படிக்க வைத்தல் போன்றவை எப்போதுமே நம் நாட்டில் குறிப்பாகத் தமிழ் நாட்டில் உண்டு.  கடுமையாகக் கட்டுப்பாடுகளுடன் சிராத்தம் செய்பவர்கள் மனதில் ஈரமே இருக்காது, ஏழை, பாழைகளுக்கு உதவ மாட்டார்கள் என்னும் ஓர் எண்ணம் பரவலாகக் காணப்படுகிறது. என் பெரியப்பா கடுமையாக ஆசார அனுஷ்டானங்களைக் கடைப்பிடிப்பார். வெளியே எங்கும் சாப்பிட மாட்டார். கூடிய வரை எங்கு சென்றாலும் நடந்தே செல்வார். பிரமசாரி என்பதால் நாலு முழ வேட்டி தான். பாரத ஸ்டேட் வங்கியில் பெரிய பதவி வகித்தவர். ஆனாலும் மிக எளிமையாக இருப்பார். அந்தப் பெரியப்பா பலரைக் கைதூக்கி விட்டிருக்கிறார் ஜாதி வித்தியாசம் இல்லாமல்! இதற்கும் சடங்குகளைக் கடுமையாகக் கடைப்பிடிப்பதற்கும், சாஸ்திரங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. சாஸ்திர சம்பிரதாயங்களைக் கடுமையாகக் கடைப்பிடிப்பவர்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிலர் இப்படிக் கடுமையாக நடக்கலாம்; நடந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் பெரும்பாலும் அப்படி இல்லை என்றே எண்ணுகிறேன்.


கோவில்கள் கட்டியதும், கோவில்களுக்குச் செல்வதும் சோம்பேறித்தனம் என்றும் சொல்கிறார். இதுவும் முழுத் தவறு.  அந்தக்காலத்து மக்கள் சோம்பேறிகளாக இருந்திருந்தால் அப்போதைய இந்தியாவின் முன்னேற்றத்தையும், செழிப்பையும் பார்த்துவிட்டு மெக்காலே வியந்திருக்கவே மாட்டார். மக்கள் ஒருநாளும் சோம்பேறிகளாக இல்லை. சோம்பேறி மக்களா இப்படிப்பட்ட கலை உணர்வு செறிந்த, தொழில்நுட்பங்களில் சிறந்த கலைப் பொக்கிஷங்களை உருவாக்கினார்கள்? அவற்றில் ஒரு சிறு பகுதியையாவது அப்போது போல் இப்போது நம்மால் உருவாக்க முடியுமா? இத்தனைக்கும் நாம் தொழில் நுட்பத்தில் முன்னேறியதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.


குறிப்பிட்ட சில தினங்கள் மட்டும் மூலவர் மேல் வெயில் கிரணங்கள் படும்படி கர்பகிரஹத்தைக் கணக்குப் பண்ணிக் கட்டி இருப்பது சோம்பேறி மக்களா? அப்படி ஒரு கர்பகிரஹத்தை நம்மால் இன்றுள்ள தொழில் நுட்பத்தால் கட்டமுடியுமா? ஆசிரியர் செய்திருப்பது நல்ல அலசல் தான். ஆனால் ஒரு சில கருத்து வேறுபாடுகளும் உண்டு! :) முக்கியமாகக் கடவுளைப் பொல்லாதவர், கண்ணைக் குத்திடுவார்னு சொல்லி எல்லாம் எங்களை வளர்க்கலை! தப்புப் பண்ணாதே, பொய் சொல்லாதே, கடவுள் நம்பிக்கை முக்கியம்னு தான் சொன்னாங்க! அதோடு முன்னோர்களின் சிராத்தம் நடக்கையில் குழந்தைகளைப் பட்டினி போட்டதில்லை. இன்னும் சொல்லப் போனால் ஹோட்டல் இட்லியிலிருந்து வீட்டில் மிகுந்திருக்கும் பழைய சாதம் வரை சாப்பிட அனுமதி உண்டு!

இப்போதும் அநாதை இல்லங்களுக்கு உதவுவதை நிறுத்தியதில்லை. அதே போல் சிராத்தம் போன்ற சடங்குகளைச் செய்வதில் இருந்தும் பின்வாங்கியதில்லை, இது வேறு, அது வேறு! :) இரண்டிற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்!


கடவுள் புரியாதவர் அல்ல! உணர்ந்து அறிய வேண்டியவர். மற்றபடி இதிலுள்ள ராமாயண, மஹாபாரதக் கதைகளைக் குறித்த விமரிசனங்களுக்கும் பதில் சொல்ல ஆரம்பித்தால் பெரியதொரு கட்டுரையாகி விடும்! :) தவறாக நினைக்க வேண்டாம். இந்த விமரிசனத்தை ஆக்கபூர்வமாகப் புரிந்து கொள்வீர்கள் என்னும் நம்பிக்கையுடன் கொடுத்திருக்கிறேன். மற்றபடி நான் எஸ்.கண்ணனின் பரம விசிறி! அவருடைய பல கதைகளை பிரதிலிபி மூலம் தொடர்ந்து படித்து வருகிறேன்


இதிலே எந்த உள் குத்தும் இல்லை. அவங்க வீட்டுப் பெரியவங்களோட புரிதல் மாறுபட்டிருக்கு! நல்லவேளையா எங்களுக்கெல்லாம் காரண, காரியங்களோடு ஒவ்வொன்றையும் புரிய வைத்திருக்கின்றனர். இப்படிப் புரிதல் இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு செயல்படுவதை என் புக்ககத்தில் கண்கூடாகக் கண்டு வியந்திருக்கிறேன். என் மாமியாரும் சுவாமி கண்ணைக் குத்திடுவார், தண்டனை கொடுப்பார் என்ற ரகம் தான்! இன்னும் பலவேறு மூட நம்பிக்கைகளும் உண்டு! ஆகவே இது ஒவ்வொருத்தரின் புரிதலைக் குறித்தே அமைகிறது. அவங்க வளர்ந்த சூழ்நிலை அப்படி. என்றாலும் அவங்களுக்குப் புரியற மாதிரி எடுத்துச் சொல்வோம். மூட நம்பிக்கை என்றும் சுட்டிக் காட்டி இருக்கோம்.

திரு கண்ணன் அவர் கோணத்திலிருந்து பார்த்தவைகளைச் சொல்லுகிறார். இன்று பலருக்கும் பல சடங்குகளை ஏன் செய்கிறோம் என்பதே தெரியாமல் தானே செய்கின்றனர்? ஆனால் அமாவாசை அன்றோ மற்ற தர்ப்பண தினங்களிலோ செய்யும்  நம் தர்ப்பணங்களில் கூடக் கடைசியாக  உலக க்ஷேமத்துக்காகவும் உலகில் வாரிசுகளற்ற அநாதைகளுக்காகவும் நற்கதி கிடைக்க வேண்டிக் கொண்டு  ஜாதி, மத பேதமில்லாமல் எள்ளும் தண்ணீரும் விடுவார்கள். அதே போல் காசிக்குச் செல்பவர்களும் கயாவில் அப்படிப்பட்டதொரு தர்ப்பணம் செய்வதைப் பார்த்திருக்கலாம். அதில் நம் வீட்டுச் செல்லங்களுக்குக் கூட எள்ளும் தண்ணீரும் விடுவது உண்டு. எங்க மோதிக்கு நாங்க கொடுத்தோம். பகைவன், எதிரியாக இருந்தாலும், வேறு ஜாதி, சமயத்தைச் சேர்ந்தவரானாலும் கயாவில் அவர்களுக்குத் தர்ப்பணம் செய்யலாம். செய்திருக்கோம்.  அப்படிப்பட்ட உயர்ந்த பல தத்துவங்களைக் கொண்டது இந்த சநாதன தர்மம். இதற்கு ஒரு நாளும் அழிவில்லை! :)

Thursday, August 18, 2016

அன்னமூர்த்தி யாரு? குழப்பம்!

துளசி அன்னமூர்த்தியைப் பத்திச் சொன்னதிலிருந்து மடப்பள்ளி வழியா வரச்சே எல்லாம் அந்த சந்நிதியைப் பார்த்துக் கொண்டே வருவேன். சந்நிதி திறந்தே பார்க்கலை!  ஒரே ஒரு முறை சந்நிதி திறந்திருந்த போது படம் எடுக்க முடியலை, காமிரா ரங்க்ஸ் கிட்டே மாட்டிண்டு இருந்தது. அவர் எங்கேயோ போக நான் மெதுவாக உலா வரக் கடைசியில் துளசியின் பதிவில் உள்ள படத்தைத் தான் பகிர்ந்தேன். அன்னிலேருந்து அன்னமூர்த்தியைக் கோயிலுக்குப் போறச்சே எல்லாம் பார்க்க முயற்சிகள் பல செய்தும் அந்த சந்நிதி திறக்கிறாப்போல் தெரியலை. கதவை எல்லாம் பார்த்துட்டுத் துளசியும் ஆச்சரியப்பட நானும் கதவு இருக்குனு சாதித்தேன்.  அப்போ எடுத்தபடம் கீழே!
இந்தப் படத்தில் பக்கவாட்டில் அன்னமூர்த்தி தெரிகிறார் பாருங்க. இன்னிக்கு ரங்க்ஸ் சொன்னார். எப்போவுமே பக்கவாட்டிலேயே எடுக்கிறியே, இன்னிக்காவது நேரே வைச்சு எடுன்னு! என் ம.ம.க்கு அப்போத் தான் உறைச்சிருக்கு! என்னத்தைச் சொல்ல! யானைக்கும் அடி சறுக்கியது! :)




ஆனால் படம் எடுக்கும்போது கூடப் பக்கத்தில் இருந்த இம்புட்டுப் பெரிய விக்ரஹம் கண்ணில் படாமல் போனது நினைச்சால் ஆச்சரியமா இருக்கு. இன்னிக்குக் கோயிலுக்குப் போனப்போ வழக்கம்போல் பெரிய மடப்பள்ளி வழியாக வரச்சே நம்ம ரங்க்ஸ் அன்னமூர்த்தியைப் படம் எடுக்கலையானு கேட்கவும், நான் நிமிர்ந்து பார்த்தால் எதிரே அமர்ந்த வண்ணம் சிரிக்கிறார். இவர் எப்படி இத்தனை வருடங்களாக என் கண்களில் படாமல் எனக்குப் பூட்டிய கதவு மட்டுமே கண்ணில் பட்டுக் கொண்டிருந்தது? இதன் தாத்பரியம் என்னனு யோசிக்கிறேன்.  இதோ கீழே அன்னமூர்த்தி!


சாதாரணமாக ஒரு கல்லைக்கூட விடாமல் ஆராய்ச்சி செய்வேன் என்ற பெயரை வாங்கி இருக்கும் எனக்கு அந்த சந்நிதியை ஒட்டியே இருந்த இவர் கண்களில் படவே இல்லை என்பது ஆச்சரியம் என்றால் அதைவிட ஆச்சரியம் இன்று கண்களில் பிரம்மாண்டமாகப் பட்டது தான்! துளசிக்கும் இதைச் சரியாச் சொல்லத் தெரியலை. கதவு இல்லைனு மட்டும் சொன்னாங்க. நானோ கதவை மட்டுமே பார்த்திருக்கேன். இந்த அன்னமூர்த்தியை ஒட்டியே அந்த சந்நிதிக் கதவு மூடியே இன்றும் காட்சி அளித்தது. ஹிஹிஹி அ,வ,சி,

தொண்டமான் ஏற்றத்தில் மேலே ஏறினதும் இன்னிக்குப் பளிச்சென்று கோபுரம் எவ்விதமான இடையூறுகளும் இல்லாமல் காண முடிந்தது. 

கோயிலில் மீண்டும் வழியை எல்லாம் மாற்றி, நடக்க வசதியாகச்  சாய்வாகப் போடப்பட்டிருந்த மரப்படிகளை எல்லாம் அகற்றி என்னென்னவோ மாற்றங்கள். சில காலம் கோயிலுக்குப் போகலைனா எல்லாம் மாறிடுது. இப்போதைக்குக் காசு கொடுத்து தரிசனம் செய்யும் நபர்கள் டிக்கெட் வாங்கும் கவுன்டர் மட்டும் மாறலை! நல்லவேளையா கொடிமரத்தருகேயே இருக்கு. இலவச தரிசனத்துக்கு இன்று கொடிமரம் வரை கூட்டம்! அதே 250 ரூ டிக்கெட்டுக்கோ, 50 ரூ டிக்கெட்டுக்கோ யாருமே இல்லை. நாங்க போய்ச் சீட்டு வாங்குகையில் இரண்டு, மூன்று பேர் வாங்கினார்கள்.  ஒரே மணி நேரத்தில் தாயாரையும், பெருமாளையும் தரிசித்து வந்தாயிற்று.

தாயார் சந்நிதியில் வழக்கத்தை விடக் கூடுதலாக நிற்கவும் முடிந்தது. விரட்டவில்லை. பெருமாள் சந்நிதியிலும் விரட்டலை என்றாலும் கூட்டம் இருந்தது. என்றாலும் இரண்டு நிமிஷம் நின்று நம்பெருமாளைப் பார்த்து விசாரிச்சுட்டு வந்தேன். பெரிய ரங்குவையும் முகம் மற்றும், திருவடி சேவை எல்லாம் நன்கு  பார்க்க முடிந்தது.  போனமுறை போனப்போ நம்பெருமாளைச் சரியாவே பார்க்க முடியலை. அது வருத்தமாகத் தான் இருந்தது. இப்போது பெரிய ரங்குவின் திருவடி தரிசனம் கிடைக்கிறது. இன்னும் சில நாட்களில் மீண்டும் தைலக்காப்புச் சார்த்தும்போது மூடி விடுவார்கள். 

Tuesday, August 16, 2016

மஹாலக்ஷ்மியும், குழந்தை வேலப்பரும்!



சமீபத்தில் கொடைக்கானல் சென்றிருந்த போது பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் போகும் வழியில் இருந்த மஹாலக்ஷ்மி கோயில். ஒரு தூரப் பார்வையில்.





மஹாலக்ஷ்மி கோயிலில் நம்ம ஆள் ஜம்முனு உட்கார்ந்திருக்கார் பாருங்க. 



கொடைக்கானலில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் பெரிய மலையில் உள்ளது பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில். இது முருகன் குழந்தையாகக் காட்சி அளிக்கும் கோலத்துடன் போகரால் வடிக்கப்பட்ட நவபாஷாண விக்ரஹம். பழனி முருகன் பழத்துக்காகக் கோவிச்சுண்டு போனப்போ, (ஹிஹிஹி, அது சரி இல்லைனு பலரும் சொல்வாங்க என்றாலும் இதானே வெகுஜன வாக்கு!) முதல்லே இங்கே தான் வந்து உட்கார்ந்துண்டாராம். கிட்டத்தட்டப் பழனியில் மேல் மலையில் காட்சி அளிப்பதைப் போலவே இங்கேயும் காட்சி அளிக்கிறார். ஆனால் எந்தவிதமான இடையூறுகளும் இல்லாமல் நன்றாக தரிசனம் செய்யலாம் யாரும் போ, போனு விரட்டுவதில்லை. சிறப்புத் தரிசனம் கிடையாது. நாங்க போனப்போ யாரோ அபிஷேஹம் செய்து பிரசாத விநியோகங்கள் நடந்து கொண்டிருந்தது.

அதோடு இன்னும் யாரோ முக்கியமான அரசியல்வாதிகள் வருகை தர இருந்தனர். ஆகவே கோயில் பரபரப்புடன் காணப்பட்டது. என்றாலும் நாங்கள் தரிசிப்பதில் எவ்விதமான தடையும் இல்லை. பஞ்சாமிர்தப் பிரசாதம், அபிஷேஹ விபூதிப் பிரசாதம், தேனும், தினைமாவும் என்று கிடைத்த பிரசாதங்களை எல்லாம் வாங்கிச் சாப்பிட்டோம். கோயில் அமைதியான சூழ்நிலையில் சுத்தமான சுகாதாரமான பராமரிப்பில் இருக்கிறது. 
குழந்தை வேலப்பர் கோயிலில் படம் எடுக்கத் தடா! :( கோமதி அரசு போனப்போப் படங்கள் நிறைய எடுத்துப் போட்டிருந்தாங்க. ஆனால் எங்களை எடுக்கக் கூடாதுனு சொல்லிட்டாங்க. ஆகவே எடுக்க முடியலை. இந்தக் கோயில் பழனி மலைக் கோயில் தேவஸ்தானத்தின் கீழ் வருகிறது.  அன்னிக்கு முக்கியமான மனிதர்கள் வருகையினால் படம் எடுக்கத் தடானு நினைக்கிறேன். மதுரையிலே காமிராவை வெளியேயே செருப்பு வைக்கும் ஸ்டாண்டில் வைக்கச் சொல்லிட்டாங்க. அது மாதிரி சொல்லலை! ஆனாலும் காமிராவை வெளியே எடுத்தால் சத்தம் போட்டாங்க! 


இப்போப் போனவாரம் காணாமல் போனது கொடைக்கானலுக்கு இல்லை! ஹிஹிஹி! அது வேறே! இது அதுக்கு முன்ன்ன்ன்ன்ன்ன்ன்னாடி போனப்போ!

Monday, August 15, 2016

சொர்க்கத்துக்கு மீண்டோம்! ஜெய்ஹிந்த்!

ஒரு வாரமா சூட்டில் வெந்து கொண்டிருந்தோம். இப்போ மறுபடி சொர்க்கத்துக்கு மீண்டாச்சு.   அப்பாடானு இருக்கு. விபரங்கள்  மெல்ல, மெல்ல. அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள். கத்தியின்றி, ரத்தமின்றி சுதந்திரம் வந்ததாகச் சொல்லிக் கொண்டாலும் பலருடைய ரத்தமும் சிந்தித் தான் இந்த சுதந்திரமே நமக்குக் கிடைச்சிருக்கு. ரத்தம் சிந்தினவங்க பத்தி நாம் அதிகம் அறியவில்லை. பஞ்சாபில் ஜலியாவாலாபாகில் ஜெனரல் டயரால் உயிரிழந்தவர்கள் பலர். அதன் பின்னரும் மக்களைப் பல விதங்களில் கொடுமைப்படுத்தியவை எல்லாம் அங்கே படங்களாக, செய்திகளாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றை நாம் படம் எடுத்துப் போடுவதற்குத் தடை! :( ஆகவே பலரின் தியாகங்கள் வெளியே வரவே இல்லை. அத்தகைய  மௌனராகம் பாடிய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் நம் நன்றியை இன்று தெரிவித்துக் கொள்வோம்.



ஜெய்ஹிந்த்!

தேசியக் கொடி க்கான பட முடிவு

Wednesday, August 03, 2016

சிவன் குடும்ப தரிசனம்!

முகநூலில் நண்பர் ஜடாயு பகிர்ந்தது. சிவக் குடும்பம். முருகனும், ஆனைமுகனும்  ஆனைத் தோல்க் கூடாரத்தினுள் இருக்காங்க. நந்தி தேவர் அருகே அமர்ந்திருக்கும் அம்பிகை மான் தோலை ஆடையாக உடுத்திக் கொண்டு புலித் தோலினால் ஆன குல்லாய்/தொப்பியைக் கிரீடம் போல அணிந்திருக்கிறாள். பிக்ஷைப் பாத்திரத்தை ஈசனிடம் நீட்டிக் கொண்டிருக்க ஈசனோ புலித் தோலை அரைக்கசைத்துக் கொண்டு அம்பிகையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். திருக்கயிலையில் இப்படித் தான் இருப்பாங்கனு ஓவியர் கற்பனை செய்து வரைஞ்சிருக்கார். காங்க்ரா ஓவியமாம். ட்விட்டரில் இருந்து எடுத்துப் போட்டிருக்கார்.  என்ன ஒரு இயல்பான எளிமையான குடும்பம்! மானசரோவர் ஏரிக்கரையிலே குடித்தனம் நடக்குதோ? குளிருக்குப் பக்கத்தில் கட்டைகளை மூட்டி இருக்காங்க!

Photo courtesy: https://twitter.com/blog_supp…/…/760285275218120704/photo/1…

Tuesday, August 02, 2016

ஆடிப் பெருக்கு காவிரிக்கரையில்! நம்பெருமாள் விஜயம்!

இன்னிக்கு ஆடிப் பெருக்கு, ஆடி அமாவாசை, குரு பெயர்ச்சினு எல்லாம் சேர்ந்து வந்திருக்கு. ஆடி அமாவாசைக்கு எப்போவுமே அம்மாமண்டபத்தில் கூட்டம் இருக்கும். இன்னிக்கு ஆடிப் பெருக்கு வேறே சேர்ந்திருக்கா! கூட்டம் தாங்கலை! இன்னிக்கு நம்ம ராமரை இந்த வெளிச்சம் பிரதிபலிப்பு இல்லாமல் எடுக்கணும்னு முயன்றேன். ஆனால் முடியலை! விளக்கே இல்லாமல் ஒரு நாள் எடுக்கணும். பக்கவாட்டு விளக்கின் வெளிச்சம் தான் பிரதிபலிக்குதோனு நினைச்சால் வேறே விளக்குப் போட்டதிலும் அதே போல் வெளிச்சம்!


கீழே உள்ள உம்மாச்சிங்க எல்லாம்! முன்னால் தெரிகிறாரே பிள்ளையார்! இடப்பக்கமாக மெரூன் பிங்க் கலரில்! அவர் தான் கீழே விழுந்தார். அப்புறமா இடம் மாத்தியாச்சு! 

 இதான் இன்னிக்குச் செய்த மொத்த சாப்பாடுமே! :) வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம்! என்பாங்க! இங்கேயும் அப்படித் தான்! இரண்டு டேபிள் ஸ்பூன் தே.சா. இரண்டு டேபிள் ஸ்பூன் பு.சா. ஒரு டேபிள் ஸ்பூன் வெ.சா. இரண்டு டேபிள் ஸ்பூன் த.சா. வடை நாலைந்து, அம்புடுதேன், இன்னிக்குச் சாப்பாடு. தொட்டுக்க வெண்டைக்காய் போட்டு மோர்க்குழம்பு! அதை நிவேதனத்தில் வைக்கலை!  கூடவே ஒரு செம்பில் காவேரித் தண்ணீர். புதுசாக் கொண்டு வரணும். ஆனால் இந்தக் கூட்டத்தில் யார் போறது? வீட்டில் வர காவிரி நீரையே பிடிச்சு வைச்சாச்சு! நீர்வளம் பெருகப் பிரார்த்தனைகளும் செய்தாச்சு. 


நம்பெருமாள் இன்னிக்குச் சாயந்திரம் வரைக்கும் காவிரிக்கரை அம்மாமண்டபத்தில் ஆஸ்தானம் இருப்பார். அதுக்காக வந்திருந்தார். அவர் பக்கத்து மண்டகப்படிக்கு வந்துட்டார்ங்கற விஷயமே தெரியலை! கொஞ்சம் தாமதமாகப்போனோம். ரங்க்ஸ் முன்னாலே போயிட்டு எனக்குத் தொலைபேசித் தெரிவிச்சார். அவசரம் அவசரமாப் போனேன். உம்மாச்சி வெளியே வரும் இடத்திலே முன்னாடி நின்னுண்டு இருந்தேன் என்றாலும் கூட்டம் அதிகம்! மண்டகப்படிக் கூட்டம். எங்கள் குடியிருப்பு வளாக மனிதர் கூட்டம். தெருவிலே ஏற்கெனவே இருபக்கமும் போட்டிருக்கும் புதிய நடைபாதைக்கடைகளால் கூட்டம். காவிரிக்கரைக்கும் பெருமாளைப் பார்க்கவும் வந்திருக்கும் மக்கள் கூட்டம்! பெருமாளைப் பார்ப்பதே பெரிய விஷயமாயிடுச்சு! இதிலே படம் எங்கே எடுக்கறது? முடியலை! அவர் கொஞ்சம் தள்ளிப் போனப்புறமாப் படம் எடுக்கலாம்னு நினைச்சா அப்போப் பார்த்து ஜனங்க வந்து நின்னுட்டு மறைச்சுட்டாங்க! 



நம்பெருமாள் க்கான பட முடிவு


நம்பெருமாள் படம் நன்றி தினமலர் கூகிளார் வாயிலாக! இன்னிக்குச் சின்னப் பல்லக்கில் வந்தார். அதிலே திரை போட்டு மறைத்து வேறே வைச்சிருந்தாங்களா! கொஞ்சம் கஷ்டமாத் தான் இருந்தது பார்க்கவே! ஆனாலும் ஒரு மாதிரியாப் பார்த்துட்டேன். கிட்டக்க நின்று கொண்டிருந்ததால் பார்க்க முடிந்தது. அதே காரணத்தால் படமும் எடுக்க முடியலை! 

Monday, August 01, 2016

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை!


1. சுமார் 25% சதவித இடங்களை பொருளாதாரத்தில் நலிந்த மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் ஒதுக்க வேண்டும். மத்திய அரசு அதற்கான உரிய தொகையை வழங்கும்.

இதன் மூலம் நலிந்த மாணவர்களும் பயன்பெறலாம். எல்லோருக்கும் கல்வி என்பது நிறைவேற்ற முதற்படி இது. தமிழ்நாடு மற்ற மாநிலங்களைப் பார்க்கையில் பரவாயில்லைனு சொல்லலாம். உ.பி, பிஹார் போன்ற மாநிலங்களில் கல்வியின் தரம் அதளபாதாளம் என்பதோடு அங்கே படிப்பறிவு பெற்றவர்களும் குறைவே! நல்ல தரமான பள்ளிகள் கிடைத்தால் கட்டணமும் கட்டுபடியானால் ஏழைக் குழந்தைகள் படிக்க முன்வருவார்கள்.

2. 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை இந்தியா முழுமைக்கும் ஒரே கல்வி திட்டம். இணையங்களிலும் இந்த பாடங்கள் நடத்தப்படும்.

இதன் மூலம் இந்திய மாணவர்கள் அனைவரும் மத்திய அரசுப் பாடத்திட்டத்தின் மூலம் உலக அளவில் போட்டியிடத் தகுதி பெறுவார்கள். இந்தியாவிலேயே நடக்கும் நுழைவுத் தேர்வுகளில் அச்சமின்றிக் கலந்து கொள்ள முடியும்! தகுதியுள்ள மாணவர்களுக்குத் தகுதி உள்ள இடங்கள் கிடைக்கும்.

3. ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வுகளை மத்திய அரசே நடத்தி வேலைக்கு அமர்த்தும்.

ஆசிரியர் தகுதி வாய்ந்தவராக அமைந்தால் மாணவர்களுக்கு அதிர்ஷ்டம் தானே! தகுதி பெற வேண்டும்; தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற முனைப்புடன் ஆசிரியர்கள் செயல்படுவார்கள். கல்வியின் தரம் நிச்சயமாய் உயரும்.

4. எல்லாப் பள்ளிகளும் தேவையான வசதிகளுடன் இருக்க வேண்டும். இல்லையேல் பள்ளிகள் தகுதி நீக்கம் செய்யப்படும்.

இது ரொம்பவே முக்கியமானது. பல பள்ளிகளும் சரியான கட்டிடங்கள் இல்லாமல் மேலே கூரையுடனோ அல்லது அஸ்பெஸ்டாஸ் ஷீட்டால் மூடப்பட்டோ காட்சி அளிக்கிறது. மேலும் கழிவறைகள் என்பதே பல பள்ளிகளில் இல்லை. பயிற்சிக் கூடங்கள் கிடையாது! மத்திய அரசின் நிதி உதவியுடன் கிராமத்துப் பள்ளிகளும் இதன் மூலம் பயன்பெறும்.

5. ஒரு கிளாஸ் யோகா , நல் ஒழுக்கம் சொல்லி கொடுக்கப்படும் ,,

இவை இரண்டுமே மனக்கட்டுப்பாடுக்கு உதவும் ஒரு விஷயம். சுமார் 40, 50 வருடங்கள் முன்னர் நீதி போதனை, உடல் பயிற்சி போன்றவை கட்டாயப்பாடமாக இருந்தன. இப்போது எதுவும் இல்லை. ஆகவே நீதி போதனை வகுப்புகள் நிச்சயம் தேவை. அதோடு யோகாசனம் கற்பதன் மூலம் மாணவ, மாணவிகளின் மனம் ஒருமைப்படும். திடமான மனதும் எதற்கும் கலங்காத உறுதியும் ஏற்படும். மனம் தீங்கான விஷயங்களை நினைக்காது!

6. சமஸ்கிருதம் , படிக்க விருப்பம் உள்ள மாணவர்கள் படிக்கலாம்

இது ஏற்கெனவே பல பள்ளிகளிலும் நடைமுறையில் உள்ள ஒன்றே. புதிது அல்ல. இன்னும் சொல்லப் போனால் காங்கிரஸ் கட்சி ஆண்டு வந்த காலங்களிலேயே இது இருந்து தான் வந்தது. இப்போது புதிதாக அறிமுகம் செய்யவில்லை. மேலும் விருப்பம் உள்ளவர்கள் தானே படிக்கப் போகின்றனர்! அனைவரும் இல்லையே! ஏற்கெனவே அஹோபிலம் மடம் பள்ளிகளில் சம்ஸ்கிருதம் ஒரு மொழிப்பாடமாக வைக்கப்பட்டு அதில் முஸ்லீம் மாணவர்கள் கூட நல்ல மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் வந்திருக்கின்றனர்.

மேலும் ஏதேனும் தொழில் கல்வி கற்றுக்கொடுக்கப் போவதாய்ச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அதுவும் விருப்பம் உள்ளவர்கள் தான் கற்பார்கள். அனைவரும் கற்கப் போவதில்லை. இதன் மூலம் படிப்பைத் தொடர முடியாத மாணவர்களுக்கோ அல்லது படிப்பு முடிவடைந்தும் வேலை வாய்ப்புக் கிடைக்காத மாணவர்களுக்கோக் கொஞ்ச காலமாவது இந்தத் தொழிலின் மூலம் பிழைப்புக்கு வழி கிடைக்கும். இப்போதெல்லாம் இந்தத் தொழில் கல்வி சொல்லிக் கொடுப்பதில்லை.

ஆனால் மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் என் அப்பா வேலை பார்த்தபோது அங்கே தச்சுத் தொழில், நெசவுத் தொழில் கற்றுக் கொடுத்து வந்தனர். எனக்குத் தெரிந்து எண்பதுகள் வரை அவை இருந்தன. விரும்பிய மாணவர்களே கற்றனர். நெசவுத் தொழில் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் இருவரும் பிராமணர்கள் என்பதும் இங்கே கவனிக்க வேண்டிய ஒன்று. மறைந்து வரும் பல தொன்மையான தொழில்களை இதன் மூலம் மீட்டெடுக்கலாம். ஒரு பக்கம் மறைந்து வருகின்றன என்று சொல்வோம். இன்னொரு பக்கம் அதைக் கற்க அரசு ஏற்பாடு செய்தால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்போம். இது தான் எல்லாவற்றிலும் நம் நிலை!

பாலிய விவாஹம் என்றால் எதிர்ப்போம். ஆனால் பள்ளி மாணவ, மாணவியர் படிக்கையிலேயே காதலித்தால் அதை ஆதரித்து கோஷம் போடுவோம். அந்தக் காதல் நிறைவேற வேண்டும் என்று சொல்வோம். எதிர்ப்பவர்களைக் கண்டிப்போம். பள்ளி மாணவ, மாணவியர் காதலைக் குறித்துத் திரைப்படங்கள் எடுத்து மகிழ்வோம். :(  இதே போல் தான் குழந்தைத் தொழிலாளர் விஷயமும்! ஒரு பக்கம் படிக்கையிலேயே வேலை செய்வதைப் பாராட்டி எழுதுவோம். இன்னொரு பக்கம் குழந்தைத் தொழிலாளி என்போம். தீப்பெட்டித் தொழிலாளர்களின் குழந்தைகள் வேலை செய்கின்றன என்றால் அதன் மூலம் அவங்க கல்விக்குத் தானே பணம் சேர்க்கிறார்கள்! இதை மறந்துவிடுவோம்.

ஆனால் இங்கே நகரங்களில் பேப்பர் போட்டு, பால் போட்டுப் பணம் சேர்த்துப் படிப்பதை வரவேற்போம். நகரத்துக் குழந்தைகள் இம்மாதிரி சம்பாதித்தால் கிராமத்துக் குழந்தைகள் தங்களுக்குத் தெரிந்த வகையில் சம்பாதிக்கிறார்கள். குடும்பத்துக்கு உதவுகிறார்கள். தங்கள் கல்விச் செலவை ஈடுகட்ட முயல்கிறார்கள். இதை நாம் புரிந்து கொள்வோமா?  அமெரிக்காவில் பத்தாம் வகுப்பு முடித்ததுமே வேலைக்குச் செல்ல ஆரம்பிக்கின்றனர். இப்போது எங்கள் பேத்தியும் அங்கே வேலை செய்து கொண்டு தான் இருக்கிறாள். அவளுடைய சம்பளப் பணம் அவளுடைய கல்விச் செலவுக்காகச் சேமிக்கிறாள். இதை அங்கே யாரும் குழந்தைத் தொழிலாளர் என்று சொல்வதில்லை. பத்து வயதுக்குக் கீழ்ப்பட்ட குழந்தைகள் வேலை செய்தால் தான் தவறு.

இன்னும் இது போன்று பல நல் விஷயங்கள்.. இது குறித்துத் தமிழ்நாட்டுக் கல்வியாளர்களின் கருத்தையும் மத்திய அரசு கேட்டிருக்கிறது. அந்த அந்த மாவட்டத் தலைவர்களிடமும் கல்வியாளர்களோடு கலந்து ஆலோசனை செய்து தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுமாறு மத்திய அரசு கேட்டிருக்கிறது. ஆனால் ஒரு சில மாவட்டத் தலைவர்கள் தவிர மற்றவர்கள் வருவாய்த் துறையின் வேலைகளில் மும்முரமாக இருந்தபடியால் கலந்தாலோசனைக் கூட்டமே நடைபெறவில்லை! நம் கருத்தையும் பதிவு செய்ய முடியவில்லை.  இது மிகவும் வருந்தத்தக்க ஒரு விஷயம்!

நவோதயா பள்ளிகளைத் தான் வரவிடவில்லை. ஆனால் குறைந்த பட்சமாக இந்தக் கல்வித் திட்டத்தையாவது மாநில அரசு ஏற்க வேண்டும். மாநில அரசின் சுமை பெருமளவு குறையும்! மற்ற நலத்திட்டங்களில் கவனம் செலுத்தலாம். இன்னும் நிறையச் சொல்லணும்னு தான்! ஆனால் ஏற்கெனவே பத்து வருடங்களாக இதைக் குறித்துப் பேசி வருகிறேன். ஆகவே இது போதும்னு நினைக்கிறேன்.