எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, March 30, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்! 2-ம் பாகம்!

கண்ணனின் சந்தேகம்!

“கண்ணா! இது ஒரு பயங்கரமான நாடு. நம் நாட்டின் ரிஷிகளையும், முனிவர்களையும், சந்யாசிகளையும் போல இந்த ராணிக்கும் வருங்காலத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும் என்கிறார்கள். ம்ம்ம்ம் சரி, வா, போகலாம், அடுத்த பட்டத்துக்கு உரிய பட்டத்து இளவரசியே உன்னை வரவேற்க வந்திருக்கிறாள். ஆ, மறந்துட்டேனே, அவளைத் தான் நீ தெய்வீகமான இளவரசி என அழைக்கவேண்டும். அவள் கணவனாக இருக்கப் போகும் இளவரசனுக்கு இங்கே எந்தவித மதிப்போ, மரியாதையோ இல்லை. அதை நன்றாக நினைவில் வைத்துக்கொள்.” என்றான் உத்தவன்.

“நல்ல தெய்வீக அன்னை ராணி! தெய்வீக இளவரசி!” கண்ணன் சிரித்துக்கொண்டான். இருவரும், அந்த நாட்டின் மற்ற பெருந்தரத்து அதிகாரிகள் புடைசூழ அரசியால் அனுப்பப் பட்டிருந்த விசேஷமான படகில் ஏறினார்கள். அது அரசர்கள், அரசிகளுக்கென உள்ள ராஜாங்கப் படகு என்பதால் மிக நேர்த்தியாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. கண்ணன் ராணிக்கும், இளவரசிக்கும், மற்ற அரண்மனை வாழ் மக்களுக்கும் எடுத்துச் சென்ற பரிசுப் பொருட்கள் வேறு இரண்டு படகுகளில் ஏற்றப் பட்டு அவையும் பின் தொடர்ந்தன. முன்னும், பின்னும் இரு படகுகள் காவல் காத்துக்கொண்டு செல்ல கண்ணனின் படகு கரையை நோக்கி நகர்ந்தது. கரையில் அந்த தெய்வீக இளவரசி கண்ணனை வரவேற்கக் காத்திருந்தாள். ஆஹா! அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்ததோ? இது நடையா? அல்லது மயிலின் நடனமா? இத்தனை மெல்லிய உடலா? அது வளைவதைப் பார்த்தால் ஒடிந்து விடுமோ எனத் தோன்றுகிறதே! ஆனாலும் அதையும் மீறிய அவள் அழகு கண்ணைப்பறிக்கிறதே! தன்னைச் சூழ்ந்திருக்கும் மற்றப் பெண்களின் நடுவே அவள் நக்ஷத்திரங்கள் சூழ்ந்திருக்கும் வானத்தில் பிரகாசமாய் ஒளி விடும் பூரண சந்திரனைப் போன்ற தண்மையான குளிர்ச்சி வாய்ந்த அழகோடு காட்சி அளித்தாள்.

கண்ணனை எதிர்கொண்டு அழைக்க வந்த பெண் அதிகாரியைப் போலவே இவர்களும் ஆபரணங்களையே ஆடையாக அணிந்திருந்தனர். இளவரசியின் ஆபரணங்களில் ஜொலித்த கற்கள் பாம்பின் கண்களைப் போலவே பிரகாசித்தன. அவள் தலையில் சூடிக்கொண்டிருந்த நல்ல பாம்பைப் போன்ற ஆபரணத்தின் சிவப்புக் கற்கள் பாம்பு ஒன்று படமெடுத்துச் சீறிக்கொண்டே ஆடுவதைப் போலவே அவள் தலையைத் திருப்பும்போதெல்லாம் தோற்றமளித்தது. இந்தப் பட்டத்து இளவரசியைச் சூழ்ந்திருந்த பெண்கள் ஆபரணங்கள் மட்டுமின்றி ஆயுதபாணியாகவும் இருந்தனர். சற்றுத் தூரத்தில் அவள் கணவன் எனப்படும் இளவரசன் நின்றுகொண்டிருந்தான். அவனும் இளவரசியைப் போலவே அலங்கரித்துக்கொண்டிருந்தாலும் இடையில் ஒரு சிறு வாளும் தொங்கியது. அவனுக்குச் சற்றுத் தூரத்தில் சில ஆண்கள் பூரண ஆயுதபாணியாக எதற்கும் தயார் நிலையில் நின்று கொண்டிருந்தனர். சற்றே யோசனையுடன் அந்த இளவரசனைப் பார்த்துக்கொண்டிருந்த கண்ணன் இளவரசியை வணங்கினான். தன்னுடைய வணக்கங்களையும் அவளுக்குத் தன் மொழியில் தெரிவித்தான். இளவரசி தன் மொழியில் ஏதோ சொல்லிவிட்டுப் பின்னர் கண் ஜாடை காட்டினாள். உடனேயே சற்றுத் தூரத்தில் நின்று கொண்டிருந்த இளவரசன் முன்னே வந்து முதலில் இளவரசியை வணங்கினான். கண்ணனுக்கு இது ஆச்சரியமாக இருந்தது. பின்னர் மிகவும் சுத்தமான அதே சமயம் சரளமான கண்ணனின் சொந்த மொழியில் , இளவரசி பேசியவற்றை மொழி பெயர்த்துக் கண்ணனுக்குக் கூறினான். கண்ணன் அசந்து போனான். இவனுக்கு நம் மொழி தெரிந்திருக்கிறது. அன்றி மிகவும் சரளமாகவும், சகஜமாகவும் பேசுகிறானே? ம்ம்ம்ம்??

“தெய்வீக இளவரசி, நான், வசுதேவன் என்னும் யாதவகுலத் தலைவனின் மகன், என் பெயர் கண்ணன் என்னும் வசுதேவ கிருஷ்ணன். என்னுடைய குரு சாந்தீபனி என்பவர். அவர்கள் அனைவரின் சார்பிலும் இங்கே வந்துள்ளேன். உன்னை வணங்குகிறேன்.” கண்ணன் தன் வணக்கங்களைத் தெரிவித்துக்கொண்டான். அதே சமயம் அவன் கண்கள் கூர்மையாக அந்த இளவரசனின் முகத்தையே கவனித்துக்கொண்டிருந்தது. கண்ணன், குரு சாந்தீபனியின் பெயரை உச்சரித்ததுமே அந்த இளவரசனின் முகம் வெளுத்துப் போனதையும், கண்களில் தெரிந்த பயத்தையும் கண்ணன் கவனித்துக்கொண்டான். கண்ணன் பேசியதை அவனால் உடனடியாக மொழி பெயர்க்க முடியாமல் தொண்டை அடைத்துக்கொண்டது என்பதையும் கண்ணன் கவனித்தான். என்றாலும் அவன் சமாளித்துக்கொண்டு கண்ணன் கூறியவற்றை மொழி பெயர்த்து இளவரசிக்குச் சொன்னான். கண்ணனுக்கு இப்போது சர்வ நிச்சயமாய்ப் புரிந்துவிட்டது. இது குரு சாந்தீபனியின் மகன் புநர்தத்தன் ! வேறு யாரும் இல்லை. பிக்ரு பாஞ்சஜனா விற்றதாய்ச் சொன்னதும் இவனையே எனப் புரிந்துகொண்டான்.

கண்ணனை தெய்வீக அன்னை ராணியின் சார்பாக வரவேற்பதாய்க் கூறினாள் பட்டத்து இளவரசி. அவள் அருகே அவளுக்குச் சிறிய அவள் தங்கையான இளவரசியும் நின்றிருந்தாள். கண்ணன் வந்ததில் இருந்து அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த அவள் கண்ணனின் புன்னகையையும், அவன் வசீகரமான முகத்தையும் பார்த்துக்கொண்டே தன்னை மறந்த நிலையில் இருந்தாள். பின்னர் பட்டத்து இளவரசி ஏதோ ஜாடை காட்ட, அவளும் அவள் கணவன் என்று அழைக்கப்பட்ட இளவரசப் பதவியில் இருக்கும் புநர்தத்தனும் நகர்ந்து சென்றனர். அவள் கட்டளையின் பேரில் இளைய இளவரசி கண்ணனையும் அவனோடு வந்தவர்களையும் அங்கே காத்துக்கொண்டிருந்த பல்லக்குகளுக்கு அழைத்துச் சென்றாள். இளையவளும் கண்ணனின் பல்லக்கிலேயே ஏறிக்கொண்டாள். அவள் தன்னுடைய மொழியில் கண்ணனிடம் ஏதேதோ பேசிக்கொண்டே வந்தாள். கண்ணனுக்கு அவள் பேசுவது சுத்தமாய்ப் புரியவில்லை எனினும், அவள் குரலின் தொனியில் இருந்து அவள் கண்ணனோடு நட்பை விரும்புகிறாள் எனப் புரிந்துகொண்டான். கண்ணைக் கவரும் அவள் அழகு, கருத்தையும் கவருகிறது என்பதைப் புரிந்து கொண்ட கண்ணன், இந்த நாட்டின் பழக்க, வழக்கங்கள் எதுவும் புரியாமல் நாம் எதிலும் மாட்டிக்கொள்ளக் கூடாது. நாம் வந்த காரியம் கெட்டுப் போய்விடும். ஆகவே கவனமாகவும், எச்சரிக்கையுடனும் நடந்து கொள்ள வேண்டும் எனத் தீர்மானித்தான். பல்லக்கு ராணியின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தது.

Monday, March 29, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்

வைவஸ்வதபுரியில் கண்ணன்!


மீண்டும் ஒருமுறை அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும் இது திரு முன்ஷிஜி அவர்கள் எழுதியவை என. மொழிபெயர்ப்பில் வேண்டுமானால் சில குறைபாடுகள் இருக்கலாம். மூலத்தில் இருந்து மாற்றம் இல்லை. கடைசியாய் எழுதியது இங்கே
************************************************************************************

கண்ணன் தனக்கெதிரே தோன்றிய கரிய நிழலைக் கண்டதுமே எச்சரிக்கை அடைந்தான். சட்டென ஒரு குதி குதித்து எழுந்துவிட்டான். மின்னல் வேகத்தில் தனக்கெதிரே வீசப் பட்ட வாளைப் பிடித்திருந்த கையைத் தன் கரங்களால் பிடித்துவிட்டான். அது வேறு யாரும் இல்லை. பாஞ்சஜனாவே தான். கண்ணன் அடுத்து எதுவும் செய்யும் முன்னர் பாஞ்சஜனாவின் பின்னிருந்து மற்றொரு உருவம் எழுந்து வந்து பாஞ்சஜனாவை அப்படியே தன்னிரு கரங்களாலும் தூக்கிக் கடலுக்குள் வீசியது. கண்ணன் ஏதும் செய்வதறியாது திகைத்து நிற்கக் கப்பல், எதுவுமே நடவாதது போல் மேலே சென்று கொண்டிருந்தது. சமுத்திரத்தின் அலைகளும் அந்த நிகழ்வுக்குப் பயந்தோ என்னமோ, ஆக்ரோஷத்தைக் குறைத்துக் கொண்டிருந்தன. விண்மீன்களோ, சற்றே கவலையுடனும், கொஞ்சம் சந்தோஷத்துடனும் நடந்ததையும், இனி நடக்கப் போவதற்கும் தாங்களே சாட்சி எனக் கண் சிமிட்டித் தெரிவித்துக்கொண்டிருந்தன.

ஆயிற்று. எங்கும் மகிழ்ச்சி! சுதந்திரம். வயிறு நிறைய உணவு. ஆடலாம், பாடலாம், கொண்டாடலாம். பாஞ்சஜனாவால் சேமித்து வைக்கப் பட்டிருந்த உணவுப் பண்டங்கள் தாராளமாய் விநியோகம் செய்யப் பட்டு உணவு சமைக்கப் பட்டுக் கப்பலின் அனைத்து ஊழியர்களுக்கும் வயிறு நிறைய உணவு கொடுக்கப் பட்டது. புத்தாடைகள் அளிக்கப் பட்டன. பாஞ்சஜனாவால் கப்பல் ஊழியர்கள் துணையோடு கொள்ளையடிக்கப் பட்ட பெரும் செல்வம் பகிர்ந்தளிக்கப் பட்டது. மறைத்து வைக்கப் பட்டிருந்த பெரும் ஆயுதங்கள் வெளிக் கொணரப் பட்டுக் கப்பல் ஊழியர்களுக்கு அவரவர் திறமைக்கேற்ற பயிற்சியும் அளிக்கப் பட்டது. உத்தவன் இதற்குப் பொறுப்பெடுத்துக்கொண்டான். கிருஷ்ணனும் பாஞ்சஜனாவின் மறுமகன்கள் இருவருக்கும், கப்பல் மாலுமியின் பேரன் குக்குராவிற்கும், தச்சன் ராதுவிற்கும் தன் சொந்தப் பொறுப்பில் ஆயுதப் பயிற்சி அளிக்க ஆரம்பித்தான். கண்ணன் பாஞ்சஜனாவின் மறுமகன்களுக்குக் கப்பல் அவர்கள் பொறுப்பிலேயே இருக்கும் என்றும் பிக்ருவே மாலுமியாக நீடிப்பான் எனவும் உத்தரவாதம் அளித்தான். ஹூக்குவையும், ஹூல்லுவையும் காவலுக்கு நியமித்தாலும், எவரையும் காரணமில்லாமல் துன்புறுத்தவோ, சாட்டை அடிகளோ கொடுக்கப் படக் கூடாது என்ற நிபந்தனையையும் விதித்தான்.

கண்ணனும், உத்தவனும் அங்கே இருந்த உடைகளிலிருந்து தங்களுக்கும் சிறந்த உடைகளையும், ஆபரணங்களையும் எடுத்துக்கொண்டதோடு நீண்ட வாள்களையும் தேர்ந்தெடுத்துக்கொண்டனர். வைவஸ்வதபுரி நெருங்கிக் கொண்டிருந்தது. பிக்ரு அந்த நகரைப் பற்றியும், நாட்டைப் பற்றியும் தனக்குத் தெரிந்தவரை கண்ணனுக்குக் கூறினான்:

“சூரியனின் நாடு, நகரம் என அழைக்கப் பட்ட வைவஸ்வதபுரி, நாகலோகத்தில் அமைந்துள்ளது. படாலா என்னும் நாட்டிற்கு அருகே உள்ள இந்த நாடு முற்றிலும் நாககன்னிகைகளால் ஆளப் படுகிறது. இவர்களைச் சாமானியப் பெண்கள் என நினைக்கவேண்டாம். ஆண்களை விடத் தீரமாய்ப் போர் புரியும் வல்லமை கொண்டவர்கள். இதன் அரசியானவள் தேவி பராசக்தி, ஜகதம்பாவுக்கு இணையாகச் சொல்லப் படுகிறாள். அவளை “அம்மா” என்றே அழைக்கின்றனர். சர்வ சக்தியும் வாய்ந்த அந்தப் பராசக்தியே இவள்தான் என நம்பவும் செய்கின்றனர். அவள் கணவன் இந்த நாட்டின் அரசன் எனப் பெயரளவுக்கு அழைக்கப் பட்டாலும், அவனும் இந்த மஹாராணியின் முதல் சேவகன் என்றே கருதப் படுகிறான். ராணியை மீறி இந்த அரசனால் எதுவும் செய்ய முடியாது. இந்த நாட்டின் இளவரசிக்கு மணம் புரிவிக்க என்றே புநர்தத்தன் பெரும் விலை கொடுத்து இந்த ராணியால் பாஞ்சஜனாவிடமிருந்து வாங்கப் பட்டான்.”

இவையே பிக்ருவுக்குத் தெரிந்தவை. கண்ணன் அனைத்தையும் கேட்டுக் கொண்டான். சில நாட்களில் அவர்கள் கடலும், நதியும் சேரும் கடற்கழியில் அமைந்துள்ள வைவஸ்வதபுரிக்கு அருகே வந்து சேர்ந்தார்கள். தூரத்திலிருந்து நகரம் சுற்றிலும் கோட்டைச் சுவர்களால் சூழப் பட்டுத் தெரிந்தது. மாலைச் சூரியனின் அந்திச் சிவப்பால் அந்தச் சுவர்கள் பொன்னாலானது போன்ற தோற்றம் அளித்துக்கொண்டிருந்தது. துறைமுகத்தில் கணக்கற்ற படகுகள் காணப்பட்டன. சரக்குகளை இறக்குமிடமும், அங்கிருந்து கோட்டைக்குள் நுழையும் படிகளும் காணப்பட்டன. கப்பல் துறைமுகத்தை நெருங்க, நெருங்கக் கரையில் ஒரு பெருங்கூட்டம் தூரத்தில் இருந்தே இந்தக் கப்பலைப் பார்த்துவிட்டு வரவேற்கக் காத்திருந்தது தெரிந்தது. ராணியின் அநுமதி வாங்க வேண்டும் அல்லவா உள்ளே நுழைய? கண்ணன் அதற்கென பாஞ்சஜனாவின் மறுமகன்களில் ஒருவனைத் தேர்ந்தெடுத்தான். உள்ளூர் மொழியை அறிந்தவன் அவன். அவனோடு உத்தவனையும், ராதுவையும் அனுப்பி வைத்து ராணியின் அநுமதியை வாங்கி வரச் சொன்னான். கூடவே அங்கிருந்த அதிகாரிகளுக்கெனச் சிறு சிறு பரிசுகளையும் கொடுத்திருந்தான். ஒரு படகில் மூவரும் கிளம்பிக் கரைக்குச் சென்றனர்.

அடுத்த நாள் காலையில் துறைமுகத்திலிருந்து நகருக்குச் செல்லும் வழியில் ஒரு பெரும் ஜனக்கூட்டம் கண்ணனையும், கப்பலில் வந்த மற்றவர்களையும் வரவேற்க நின்றது. உத்தவனும் கண்ணனை வரச் சொல்லி ராணி கொடுத்த அநுமதியோடும், அந்த அநுமதியைக் கொடுத்த ஒரு பெண் அதிகாரியோடும் கப்பலுக்குத் திரும்பி வந்தான். உத்தவனோடு வந்திருந்த அந்தப் பெண்மணிக்கு நடு வயதிருக்கும். தங்கத்தாலான சில ஆபரணங்களே அவள் உடலை அலங்கரித்தது. அவையும் நாகப் பாம்புகளைப் போல் செய்யப் பட்டிருந்தன. அவள் உடலையே நாகங்கள் அலங்கரித்தாற்போன்ற தோற்றத்தில் காட்சி அளித்தது. அவள் தலையைக் கட்டி இருக்கும் விதமும், அதில் அலங்கரிக்கப் பட்டிருந்த தங்க ஆபரணமும், படம் எடுத்தாடும் நல்ல பாம்பின் படத்தை ஒத்திருந்தது. பாம்பின் சீறும் நாக்கைப் போலவே அந்த ஆபரணத்திலிருந்தும் சிவந்த ஒளி வீசும் கற்கள் தென்பட்டன. அவள் ஓர் உயர் அதிகாரி என்னும் தோற்றத்தையும் அளித்தாள். பிக்ருவும் அதை உறுதி செய்தான். ஆனால் கண்ணன் ஓரளவுக்கு இவற்றை எல்லாம் எதிர்பார்த்திருந்தான். பிக்ருவின் முன் கதைச் சுருக்கமும் அதைப் புரிந்து கொள்ள கண்ணனுக்கு உதவியிருந்தது. ஆகவே அவன் இந்தப் பெண்மணியைப் பார்த்ததும் அதிர்ச்சி அடையவில்லை.

இந்த நாடு பெண்களால் ஆளப்படுவதும், ஆட்சிமுறை பெண்வழியில் இருப்பதும் கண்ணன் அறிந்து கொண்டிருந்தான். இந்த அன்னை ராணிக்குப் பின்னர் அவள் மகள் அடுத்த அன்னை ராணியாவாள். இப்படியே மகள் வழி இந்த ஆட்சி முறை தொடரும். இந்தப் பெண்கள் ஆட்சியில் அரசனாகப் பதவி வகிக்கும் ஆண் பெயரளவுக்குத் தான் அரசன் என்பதும், ராணிக்குப் பிடிக்கவில்லையானால் அவன் உயிருக்கும் ஆபத்தே வரும் என்பதையும் கண்ணன் புரிந்து கொண்டான். உத்தவனைப் பார்த்தான்.

"கண்ணா, நீ இங்கே இந்த நாட்டுக்கு வருவாய் என இந்த நாட்டு அன்னை ராணி ஏற்கெனவே ஆரூடம் கூறிவிட்டாள். அதிலும் பல மாதங்கள் முன்னாலேயே!" என்றான் உத்தவன்.

இப்போது கண்ணனுக்கு உண்மையாகவே அதிர்ச்சி! "என்ன????" என்றான்.

Friday, March 26, 2010

நடராஜா, நடராஜா, நர்த்தனசுந்தர நடராஜா!


ஆடும் கோலத்தி்ல் நடராஜர் சிலையைப் பார்க்கும் அனுபவமே தனி. அளக்கமுடியாத அண்டங்கள் வளத்துடன் திகழும் அண்டங்களைச் சிவனோடு ஒப்பிட்டுப் பார்த்தால், ஆஹா, முழுமையாக சிவ வடிவை, அதுவும் சிவ நடராஜ வடிவை, ஆநந்த தாண்டவம் ஆடும் வடிவைப் பார்த்தால்!!! அதிகாலையில் வீட்டில் நுழையும் சூரியக் கதிர்களில் காணப்படும் அணுத்துகள் களைப் போல் சிறியவன் என எண்ணமுடியுமா?? சூரியோதயத்தில் மலரும் தாமரை எப்படி முழுமையாக சூரியனைக் கண்டதும் மலருகிறதோ, அந்த மலர்ச்சியைப் போலவும், இவ்வுலகைப் படைத்துக் காத்து, ரட்சித்து, சம்ஹாரம் செய்யும் ஒவ்வொரு செயலையும், இவ்வுலக வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் சூக்ஷ்மமாகவும், தூலமாகவும், புயலில் அகப்பட்ட சிறு துரும்பு போலவும் எவ்வாறு அநுபவித்துச் செயல் படுகிறானோ அவ்வாறு நினைக்கலாமா? நமக்கு அவன் இருப்பு மலைகளில் உற்பத்தி ஆகி, மேடு, பள்ளங்களில் வேகமாய் இறங்கி தடையில்லாமல் ஓடி வரும் நீரோட்டத்தில் தெரிய வருகிறது. இந்தக் கிழக்கு நாடுகளின் அதிலும் நம் திராவிடக் கலையின் சிற்பிகள் வடித்த அதி அற்புத உந்நதக் கலைச் செல்வம் இது என்றே சொல்லலாம்.

மனிதனின் தெய்வீகத் தன்மை எப்போது தெரிய வருகிறது?? நாம் நம்முடைய படைப்பின் ரகசியத்தைப் புரிந்து கொள்வதாலோ, அதன் அருகாமையில் இருப்பதாலோ அல்ல, ஏனெனில் ஒவ்வொரு பிறவியிலும் நம்முடைய உருவ அமைப்பு மாறுவதில்லை, பின் எவ்வாறெனில் இவ்வுயிர்களைக் கட்டும் பாசப் பிணைப்பை அறுத்து அவற்றிலிருந்து விடுபடக் கூடிய வீடுபேறு அடைய வேண்டிய உயர்ந்த பக்குவத்தை உயிர்களிடத்தில் உண்டாக்குகிறான். எல்லையற்றுப் பரந்து விரிந்திருக்கும் ஆகாயத்திலும் அண்டங்களிலும் நம்மைச் சுற்றிச் சுழற்றிக் கடைசியில் நாம் மோட்சம் அடைகிறோம். அத்தகைய ஆநந்தத்தை நாம் நம்மிடையே எப்போதும் வைத்திருக்கிறோமா?? இல்லையெனில் இழந்துவிட்டோமோ? ஆம், இது போன்ற சிற்ப அற்புதங்களைப் பார்ப்பதோடல்லாமல் அதன் உந்நத தத்துவங்களைப் புரிந்து கொள்ளும் உணர்வுகளை இழந்தே விட்டோம்.

இந்த அருமையான சிற்பங்களை இப்போது நாம் ஒவ்வொரு கோணத்திலும், ஒவ்வொரு பார்வையிலும் பார்த்தோமானால், இந்த சிவ வடிவம் ஒரு அழகான பிறைச் சந்திரனை ஒத்திருக்கிறது. என்ன ஒரு பெரும்பேறு? எவ்வளவு பெருமைப்படதக்க வடிவான உடலமைப்பு! இன்று இந்த மறக்கமுடியா அழகுடன் கூடிய இந்த வடிவத்தை உலோகச் சிலையாகப் பார்க்கிறோம். கருமேகத்தில் பளீரென ஒளிவிடும் அழகிய மின்னல் போன்ற ஒளியைக் கொண்டிருக்கிறது. பார்த்தால் சிலைதான், அசைவில்லைதான், ஆனால் ஒளியால் குளிப்பாட்டப் பட்ட அந்தச் சிற்பம், எந்த நேரம் உயிர் பெற்று அசைந்து ஆடத் தொடங்குமோ என எண்ண வைக்கிறது! இதோ இந்த ஒளி சற்று நகர்ந்தாலும் போதும், அசைந்து அசைந்து ஆடத் தொடங்கிவிடுமோ?? நம்மை ஆட்டுவிக்கும் அந்த ஆட்டம் இடைவிடாமல் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது என்பதை உணர்த்துகிறதோ.!

வெகுநாட்களாக, ஏன் பல்லாண்டுகளாக இருந்த இருட்டில் இருந்து விலகி,அந்த இருள் என்ற மந்திரச் சொல்லின் வசியம் நீங்கிப் போய், இன்று ஒளியில் குளிப்பாட்டப் பட்டு, அவ்வாறு ஒளி வரும்போது இந்த அற்புத சிற்பத்தின் மேல் தென்படும் நிழல் அந்த சிவநடராஜாவிற்குக் கொஞ்சம் கொஞ்சமாய் ஆடைபோல் போர்த்திப் போர்த்தி விலகுகிறது. நாம் தாயின் கர்ப்பத்திலிருந்து வெளி வருவதைப் போல! எங்கும் நீக்கமற நிறைந்த இந்த ஒழுங்கான வடிவின் அற்புதம்! மூடுபனி போன்ற மெல்லிய திரை போன்ற உடலமைப்பு! மற்றத் தெய்வங்களான பிரமன், மன்மதன், எமன், சந்திரன் போன்றவர்கள் அடையாளங்கள் மாயாமல் சிரம் அறுத்து, எரித்து, உதைத்து, தேய்ந்து போகவைத்து எனப் பல்வகைப் பட்டவாறு இருந்த போதிலும், இந்த சிவநடராஜ வடிவோ, எது எது எப்படி இருக்கவேண்டுமோ அப்படி வடிவமைக்கப் பட்டுள்ளது.

பெரிய மூங்கிலைப்போன்ற தோள்கள் ஆடும்போது எவ்வாறு வேகமாய்ச் சுழலுகிறது, அந்த வேகத்தையும் அதன் காரண, காரியங்களையும் மட்டும் நாம் புரிந்துகொண்டோமானால்,ஆஹா, நமக்குப் பரம்பொருளின் தத்துவமே பூரணமாய்ப் புரிந்துவிடுமல்லவோ? கைகளின் வளைவு, தோள்களின் வளைவு, புஜங்கள் ஏற்படுத்தும் அற்புதமானதொரு எழுச்சி, யானையின் துதிக்கையை நினைவூட்டும் வண்ணம் உருண்டு திரண்ட அந்தத் தோள்கள், அவை சூரியகிரஹணத்தின்போது சூரியனைச் சுற்றி ஏற்படும் மறைந்திருக்கும் சந்திரனின் சிவந்த ஒளிவட்டம்போன்ற காட்சி, நம்மைப் போன்ற சாதாரண மனிதருக்குக் காட்சி தருவது போல் தெரியும் விலா எலும்புகள், அவை சேர்ந்திருக்கும் விதம், தோள்களை அவை தாங்கிப் பிடிக்கும் அமைப்பு, இவற்றை உற்றுக் கவனித்தால், இது சிலையல்ல, எந்நேரம் வேண்டுமானாலும் ஆடத் தயாராய் இருக்கும் மனிதனோ என்னும் தோற்றத்தைத் தருகிறது.

உடுக்கை போன்ற சிறிய இடையோ உறுதியும் பலமும் கொண்டு விளங்குகிறது. தோள்களுக்கு அருகே விசாலமாய் இருக்கும் உடலானது போகப்போகக் குறுகி, இடைக்கு அருகே மிகக் குறுகி, மீண்டும் அகன்று பலம் பொருந்தியும், உறுதியாகவும் காட்சி அளித்து இரு தொடைகளாகக் கீழே இறங்குகிறது. கணக்குடன் செதுக்கப் பட்ட சிலை என்ற உணர்வே தோன்றுவதில்லை. இடுப்புப் பகுதி அந்தப் பருத்த தொடைகளைத் தாங்கும் வல்லமையுடன் அகன்று காணப்பட்டாலும், அவை காட்டும் அற்புதக் கோணங்கள்! ஆஹா, என்ன அற்புதமான, பரிபூரணமான கோணம்! அந்தக் கால்கள் எவ்வளவு மென்மையாகத் தன் பாதங்களைப் பூமியில் பதிக்கும்போது மாறுகின்றன! ஆச்சரியமாய் உள்ளது. அந்த மென்மையாகப் பதிக்கப்படும் பாதங்களிலிருந்தா இத்தனை வேகமான ஆட்டம் ஆடப்படுகிறது? நினைக்க நினைக்க ஆச்சரியமாக இல்லை??

நடராஜரின் சிற்பப் பகுதியின் தலை பாகத்தை ஒரு பக்கமாய்ப் பார்த்தால், ஆட்டத்தின் வேகத்தில் அந்த விரிந்த குழல்கற்றைகள் அலைவதைப் பாருங்கள். அந்த இரு கைகளும், மார்புப் பகுதிக்கும், வயிற்றுக்கும் உள்ள இடைவெளியைப் பிரித்திருப்பதைக் கண்டால், Venus de’ Medici, சிற்பம் நினைவில் மோதுகிறது. ஏனெனில் தன்னில் ஒரு பாதியாக உமையைக் கொண்டவர் அன்றோ? ஆகவே தன் பெண்மையின் அழகை அவ்விதம் மறைத்துக்கொள்கிறாரோ? அந்தக் கிரேக்கத்தின் காதல் தேவதை தன் எழிலை எவ்வாறு தன்னிரு கரங்களால், ஒரு நளினத்தோடு மறைப்பாளோ அதோடு போட்டி போடும் வண்ணம் இந்த சிவநடராஜா தன்னையும் மறைத்துக்கொள்கின்றாரோ? ஒரு நீண்ட நெடிய நிழல் இந்தச் சிற்பத்தின் உடல்பகுதியை இரண்டாகப் பிரித்தவண்ணம் தொடைகள் வரை செல்கிறதே! உடலின் ஒரு பகுதியை நிழல் மறைக்கிறது, மறுபகுதியில் அரை வெளிச்சம்! அந்த இருட்டே அதை ஆடையாய்ப் போர்த்தியது போல் காண்கின்றோம். மொத்தத்தில் இது புனிதத் தன்மையின் ஆழத்தைக் காட்டுகிறது, ஒவ்வொரு அணுவின் இயக்கத்திலும், இயங்காமையிலும், இன்னும் இடைவிடாத, நிற்கவே நிற்காத பரம்பொருளின் இந்த ஆட்டத்தைப் பற்றி வர்ணிக்க ஆரம்பித்தால் அவை வெறும் அலங்காரச் சொற்களாகவே போய்விடும். அந்த நீண்ட, மெல்லிய கால்கள் வேகத்தைத் தவிர வேறு ஒன்றும் அறியாதவையோ?


ஒரு விதத்தில் இது புனிதத்தின் ஆழம், அண்டப் பேரொளியின் காட்சி, சிவனோடு இணைந்த சக்தியின் தரிசனம், ஆனாலும் இவற்றை எல்லாம் சொல்லுவது, இந்த ஆட்டத்தின் வேகத்தையும், லயத்தையும், தாளம் தப்பாமல் ஆடுவதையும் அதனால் உலகமே இயங்கும் இயக்கதையும் நோக்கும்போது வெறும் வார்த்தைகளாகிவிடுகின்றன. அந்த இரு நீண்ட, மெல்லிய, அதே சமயம் உறுதியான கால்களைப் பார்க்கும் போதே அவை ஆடும் ஆட்டத்தின் வேகம் நமக்குப் புரியவருகிறது.
நேருக்கு நேராகக் காணும்போதோ?? ஒரு கை தேர்ந்த சிற்பி வடித்த சிற்பம் என்று மட்டுமே தோன்றும். ஒவ்வொரு விதமான பார்வைகளிலும் மேலே, கீழே, பக்கவாட்டுப்பார்வை என எப்படிப் பார்த்தாலும், அதில் உள்ள இயற்கையான, இயல்பான தனித் தன்மையின் அமைப்பும் தெரிகிறது. என்றாலும் எல்லாவற்றுக்கும் மேல், அனைவராலும் கவனிக்கப் படாத ஒன்றும் உள்ளது. வாழ்க்கையின் மையம் என்ற நம் போன்ற சாதாரண மனிதர்களின் கண்ணுக்குப் புலப்படாத ஒரு ஆழமான புள்ளி தெரிகிறது. மிக மிக எழிலும், நளினமும் கலந்த படைப்பு, அதைவிட அதன் நேர்த்தி கண்ணைக் கவருகிறது. இன்னும் சொல்லலாம். இதை நாம் பரிசுத்தம், புனிதம் என்னலாமா?? மிகவும் சக்தி வாய்ந்ததொரு புனிதம் எனலாமா?? வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத ஒன்று.. ஆஹா, அந்த நிழல்கள் ஒரு மாலைபோல் தோள்களிலிருந்து இடுப்பு வரை வழிகின்றது, இந்த வலப்பக்கக் கோணத்தில் பார்த்தால், அது மிகவும் அருமையாய்ப் புரிய வருகிறது.

மற்றொரு பக்கவாட்டுக் கோணத்தில் பார்த்தோமானால்,

இரண்டு கால்களிலும் விழும் வித்தியாசமான ஒளிக்கோணத்தில், இந்த ஒரு தொடையின் நீண்ட நிழல் மற்றொரு காலின் மீது விழுந்திருக்கும் கோணத்தைப் பார்த்தால்?? அடடா!!!!!! உள்ளார்ந்ததொரு நேர்த்தி இல்லையெனில் இந்த முழுமையும், வளைந்து கொடுக்கிற மிருதுத் தன்மையும் வந்திருக்க முடியாது. இல்லையெனில் அந்த நீண்ட நிழல் கூர்மையாக, நேராகச் சென்றிருக்கும். இந்தக் கால் இங்கே இத்தனை மென்மையுடனும், அழகான வளைவு, நெளிவுகளோடும் காணப்படுவதற்குக் காரணம் இந்த நடராஜா அன்னையைத் தன் உடலின் சரிபாதியாக ஏற்றதாலோ?? இடக்கால் அன்னையினுடையதாயிற்றே??

சிவநடராஜாவின் இந்தச் சிற்பத்தை ஒரு படிப்பறிவற்ற காட்டுமிராண்டியைப்போல் பார்க்கக் கூடாது. அதன் உள்ளார்ந்த தத்துவத்தைப் புரிந்து கொண்டு, அதன் தாத்பரியம் என்ன என்ற எண்ணத்தோடு ஆய்ந்து நோக்கவேண்டும். அறியாமையில் மூழ்கி இருக்கும் மனிதனுக்கு என்ன புரியும்?? எதுவுமில்லை. வெறும் சிலை என்ற உணர்வோடு ஒரு அழகான சிற்பக்கலையை ரசிப்பதிலிருந்து அவன் விலகிவிடுகிறான். நடராஜ தத்துவத்தை ஒருவன் பரிபூரணமாக அறிந்திருப்பதோடு, பூரணமாய் உணர்ந்திருக்கவும் வேண்டும். இந்த நடராஜாவின் அழகைப் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமும் இல்லை. விரிந்த செஞ்சடை, ஆடும் ஆட்டத்தில் அதுவும் சேர்ந்து சுற்றுகிறது. சடை சுற்றும் வேகத்தில் அங்கே குடிகொண்டிருக்கும் கங்கையும் இங்கேயும், அங்கேயுமாய் அலைகிறாள். நீர்த்திவலைகள் தலை வழியே வழிந்து நேரே இடக்கையின் மூலம் பாதத்தை அடைவது கங்கை சிவனை நமஸ்கரிப்பதை ஒத்திருக்கிறது. சிவனின் இந்தத் தலைப்பாகத்தை ஒரு நீண்ட சிந்தனையுடன் கூடிய கண்ணோட்டத்தில் பார்த்தோமானால், அந்த உப்பிய சற்றே வீங்கினாற்போன்ற தோற்றம் கொடுக்கும் அழகிய வாய் எவ்வளவு அற்புதமாகப் புலன்களைத் தாக்கும் உணர்வுகளைக் காட்டுகின்றது என்பது புரியவரும். அந்த அழகான வாயின் அமைப்பும், கண்களும் ஓர் ஒத்திசைவோடு கூடிய இந்திரிய சம்பந்தமான உணர்வுகளை ஒரே சமயத்தில் பிரதிபலிக்கின்றன. அந்த உதடுகளோ எனில் மெய் சிலிர்க்க வைக்கும் நாசித் துவாரங்களை விளிம்பாய்க் கொண்டு அசத்துகின்றன.

அமுதம் உண்டானோ என்னும்படிக்கு வாயினில் உள்ள ஈரம் அலைபோல் அடிக்கின்றது. ஏனெனில் தலையிலே அந்த விரிந்த செஞ்சடையிலே குடி கொண்டிருக்கும் கங்கையானவள் அங்குமிங்கும் அலைந்து தண்ணீரை அப்படி வர்ஷிப்பதால் அந்த வாயும், அதன் நாவும் எந்நேரமும் நீர் நிரம்பி அமுதம் உண்டவனைப் போல் காண்கின்றது. அதுமட்டுமா?? அந்த நாவிலிருந்து கிளம்பும் ஜதிக்கட்டுகளின் வேகத்தால் பாம்பு வேகமாகப் படமெடுத்து ஆடுகிறாற்போல் அசைகின்றது. கண்ணின் இரு கருவிழிகளுமோ எனில் மூடியுள்ள அந்த இமைகளுக்கிடையிலே இவ்வுலகத்தை எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன் என்பதை நிச்சயம் செய்வது போல சூரிய, சந்திரர் போல் பிரகாசிக்கின்றன. கண்களின் ஒளியோ மனதை மயக்கும் ஒளியாக இல்லாமல் மனதை அமைதிப்படுத்தி சாந்தத்தை ஏற்படுத்தும் ஒளியாக உள்ளது. நம்மை இழந்து, நம்மை மறந்து அந்தக் கண்ணொளியில் நாம் ஆழ்ந்துவிடுகிறோம். கண் இமைகள் ஒரு மென்மையான பட்டு ஆடை போல் அந்தக் கண்களை மூடியுள்ளன. தீர்க்கமான நாசி, அளவெடுத்தாற்போல் செதுக்கப் பட்டுள்ளது. தானே தனது ஆட்டத்தில் மயங்கிவிட்டானோ என்னும்படியான பார்வை!



குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்” என அப்பர் பெருமான் சொன்னாற்போல ஒரு குமிண் சிரிப்பு அந்த உதடுகளில் நெளிகின்றது. உதடுகளின் வளைவுகளும், கன்னக் கதுப்புகளும், முகமும், ஏன் மொத்த உடலுமே அந்தப் புன்னகையால் பூத்திருக்கிறது என்றால் மிகையில்லை. இவ்வுலகத்து மர்மங்களை எல்லாம் நான் அறிவேன் என்னும் சிரிப்போ அது?? ஆடற்கலையின் அற்புதத்தைத் தன் கண்ணசைவால், தன் குமிண் சிரிப்பால், தன் கையசைவால் காட்டும் இந்த அதி அற்புத உந்நத வடிவம் , செழுமையான கன்னங்கள், சிரிப்பினால் கன்னத்தில் விளைந்த குழிவு, இடக்கையால் தன் பாதத்தைச் சுட்டும் அமைப்பு, தலையின் கங்கை சிந்த அந்த ஒவ்வொரு நீர்த்துளியிலும் தெரியும் ஆநந்த நடனம்! இந்த ஆநந்தம் எதற்காக? உலகு உய்யவன்றோ! விஷம் உண்டதால் நீலமான மேனி, திருமாலே கண்டத்தில் மாலையாக அமர்ந்தாற்போன்ற தோற்றத்தைத் தருகின்றது. ஆடும் வேகத்தில் அரையில் கட்டிய புலித்தோலின் அசைவு ஒரு புலியே வேகமாய் ஓடி வருவதைப் போன்ற தோற்றமளிக்கின்றது. நீண்ட மெல்லிய கால்கள், வலக்காலை ஊன்றி, இடக்காலைத் தூக்கி இருப்பது, வலக்கால் அண்டத்தின் மையப்புள்ளியில் பதிந்திருப்பதையும், இடக்காலின் சுழற்சியால் அண்டபகிரண்டங்களும் இயங்குவதையும், அந்த இயக்கத்தின் வேகத்தையும் சுட்டுகிறது அல்லவோ?
*************************************************************************************

நண்பர் விஜய் (poetryinstone)
http://www.poetryinstone.inஅவர்களின் வேண்டுகோளுக்காக எழுதப் பட்டது. முதலில் மொழிபெயர்ப்பு என ஆரம்பித்து நேருக்கு நேர் அர்த்தம் எழுத ஆரம்பிச்சது எங்கேயோ போய் முடிந்தது. பல புத்தகங்கள், பல தேடல்கள், பல விஷயங்கள் புரிந்து கொண்டேன். எழுதுவது கஷ்டமே. இதில் எனக்கு உதவி செய்த நடராஜ தீக்ஷிதருக்கும் www.natarajadeekshidhar.blogspot.com என் மனமார்ந்த நன்றிகள்.

Wednesday, March 24, 2010

மறு மகள் மெச்சிய மாமியார்

வா, வா, டிவி பாரு.

ம்ம்ம்ம்ம்?? நான் சீரியலெல்லாம் பார்க்கிறதில்லை. எதுவும் புரியாதே!

அதனால் என்ன?? இப்போப் பார்த்தியானா புரிஞ்சுடும். இப்போ மேகலா வரும், எனக்கு வேறே என்ன பொழுது போக்கு?? புஸ்தகமும் படிக்க முடியலை. இங்கே வாங்கறதே இல்லை. நீ நிறைய வாங்கிண்டு இருந்தியே?

இல்லை, இப்போ ஆநந்தவிகடன், குமுதம், சிநேகிதி, அவள் விகடன் எல்லாம் நிறுத்தியாச்சு. துக்ளக், கல்கி, சக்திவிகடன், குமுதம் பக்தி, மங்கையர் மலர் மட்டுமே வாங்கிண்டு இருக்கேன்.

அங்கே இருக்கும்போது படிச்சதுதான் எல்லாம். இங்கே துக்ளக் மட்டும் எப்போவானும் பேப்பர்காரர் போடுவார். இந்த சோ துக்ளக் மாநாடு பத்தி எழுதினதைப் படிச்சயோ??

ம்ம்ம் படிக்கிறேனே!

கோயமுத்தூரிலே தமிழ் மாநாடு நடக்கப் போறதாமே?

ஆமாம்,

புதுசா சட்டசபைக்கட்டிடம் கட்டித் திறப்புவிழாவாமே? சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் வராங்களாமே?

அப்படியா?? எனக்குத் தெரியாதே?

டிவியிலே சொன்னாங்களே, நீ பார்க்கலை??

இல்லை, பார்க்கலை. ஒருவேளை வந்திருக்கும் கவனிச்சிருக்க மாட்டேன்.

எஸ்.வி.சேகர் இப்போ அதிமுகவிலே இல்லையாமே??

அப்படியா?? அதிகாரபூர்வமாச் சேர்ந்தாப்பலே தெரியலையே!

பிஜேபிக்கு இப்போ அத்வானி போய்ப் புதுசா வேறே ஒருத்தர் வந்தாச்சாமே!

ஆமாம். படிச்சேன்.

கம்யூனிஸ்ட் தலைவர் ஏரியிலே விழுந்து செத்துட்டாராமே?

அட, ஆமாம்.

பாம்பேயிலே போன வருஷத்துக்கு முந்தின வருஷம் குண்டு வெடிச்சாங்களே, அந்த ஆளை அமெரிக்காவிலே பிடிச்சாச்சுனு பார்த்தேன். அப்படியா? அவனை இங்கே கொண்டு வந்து கேஸ் போடுவாங்களா??

இதுக்குள்ளே எதிராளி அழும் நிலைக்குத் தள்ளப்பட எழுந்து செல்கிறார். அந்த எதிராளி வேறே யாரும் இல்லை. நானே தான்!

மேலே நடந்த சம்பாஷணை கற்பனை அல்ல. நிஜம். எண்பத்தி ஆறு வயதாகும் என் மாமியார் என்னிடம் கேட்டவை. விரல் நுனியில் அனைத்துத் தகவல்களையும் வைத்திருக்கிறார். இப்போவும் ஆர்வமுடன் படிப்பது துக்ளக் பத்திரிகை. பல வருடங்கள் முன்னால் பத்திரிகைகளை வீட்டில் வாங்க முடியாத நிலை இருந்தப்போ, என் கணவர் அலுவலக நூலகத்தில் இருந்து எடுத்து வருவார். அப்போ துக்ளக் பத்திரிகை, மங்கையர்மலர் பத்திரிகை இரண்டும் வந்ததுமே ஒருத்தருக்கும் தெரியாமல் தனியா எடுத்து வச்சுண்டு, தினமும் ஸ்லோகங்கள் சொல்லி முடித்ததும், அந்தப் புத்தகங்களுக்குள் வைத்துப் படித்துவிட்டுப் பின்னர் எடுத்தது தெரியாமல் வைத்துவிடுவார். அவ்வளவு ஆர்வம் புத்தகங்கள் மீதும் அரசியல் விஷயங்களிலும். எங்களுக்கு இந்த விஷயம் தெரிய வந்ததும், நாங்களே புத்தகம் வந்ததும் எடுத்துப் படிக்கக் கொடுத்துடுவோம். இந்த வயசில் நான் இருப்பேனா என்பதே தெரியாது. இருந்தாலும் இவ்வளவு ஆர்வமும், துடிதுடிப்பும் இருக்குமா என்பதும் சந்தேகமே. அதே போல சீரியல்கள் பார்ப்பதிலும் தடுமாறாமல் கதைகளைச் சொல்வதில் அவருக்கு நிகர் யாருமில்லை. சாயந்திரம் ஆறரை மணிக்கு மேகலாவில் ஆரம்பித்தால், அடுத்த சீரியலின் பெயர், அதில் நடிப்பவர்கள் எனச் சொல்லப் படுகிறது. அதே போல் தினமும் எந்தத் தொலைக்காட்சியில் என்ன பக்தி நிகழ்ச்சி என நேரம் தப்பாமல் தெரிஞ்சு வைத்துக்கொண்டு போடச் சொல்லிப் பார்ப்பார். தினமும் சீரியல் பார்க்கும் என் கணவரோ, மேகலாவின் நடிப்பவளை மற்றொரு சீரியலிலும், செல்வத்தில் நடிப்பவளை மேகலாவில் என்றும் ஒரு நாளைக்கு ஒரு மாதிரி மாத்திச் சொல்லுவார். பெயரும் அவர் இஷ்டத்துக்கு மாத்திப்பார். என்ன பார்த்தார், என்ன கதைனு கேட்டால் சொல்லத் தெரியாது. ஆனால் இங்கே கதை மட்டுமின்றி நடிகைகள் பெயரும் சரியாகச் சொல்லப் படுகிறது.

தலை வணங்குகிறோம்.


கொசுறுத் தகவல்: என் மாமியாரின் தந்தை ராதாகிருஷ்ண ஐயர், சுதந்திரப் போராட்டத் தியாகி. சிறை சென்று கஷ்டப் பட்டிருக்கிறார். இவரின் பேட்டியை சுதந்திர வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தின் போது மும்பை வானொலி நிலையம் ஒலிபரப்புச் செய்தது. ஒருவேளை தந்தையின் ஆர்வம் மகளிடம் இருக்கிறது போலும்!

Tuesday, March 09, 2010

கொலம்பஸ், கொலம்பஸ், விட்டாச்சு லீவு!

நானும் கண்ணன் தொடரைப் போட்டுப் போகத் தான் நினைக்கிறேன். தெரியலை, முடியுமா என. என்னவோ திட்டமிடாத பல வேலைகள். தாமதம். நாளையிலிருந்து 25-ம் தேதி வரைக்கும் கண்ணன் தொடரோ, ஆன்மீகப் பயணம் பக்கத்தில் திருவாரூர்ப் பயணமோ வராது. எல்லாருக்கும் கொஞ்சமாவது ஓய்வு கொடுக்கவேண்டாமா என் தொந்திரவில் இருந்து. அதான். ஜாலியா இருங்க. அப்போ அப்போ என்னையும் நினைச்சுக்குங்க. வரேன். நன்றி.

Saturday, March 06, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்

சங்கே முழங்கு!


ஹூக்கு இருந்த இடத்தை விட்டு நகரவே இல்லை. பாஞ்சஜனா ஹூக்கு எனக் கோபமாய் ஒரு அதட்டல் போட்டான். கப்பலின் மாலுமிகள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்க, வெட்கத்துடனும், கோழை போலவும் ஹூக்கு தயங்கிக் கொண்டிருந்தான். அதற்குள்ளாக பிக்ரு வந்து பாஞ்சஜனாவின் காலில் விழுந்து கெஞ்ச ஆரம்பித்தான். கண்ணனுக்குத் தண்டனை கொடுக்கக் கூடாது என வேண்டுகோள் விடுத்தான். சத்தம்போட்டு அழவும் ஆரம்பித்தான். “முட்டாளே, சும்மா இரு!” என அவனை அதட்டிய பாஞ்சஜனா தானே அவனை அடிக்கவும் முனைந்தான். பின்னர் திடீரென மனதை மாற்றிக்கொண்டு மீண்டும் ஹூக்குவைப் பார்த்து சைகை செய்தான் கண்ணனை அடிக்கச் சொல்லி. கண்ணனோ இவை எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. இந்தச் சம்பவங்களுக்கும், தனக்கும் எந்தவித சம்பந்தமுமே இல்லை என்பது போல் எந்தப் பாதிப்பும் இல்லாமல் எப்போதும்போலவே இருந்தான். சற்று நேரம் கடந்தால் ஹூக்குவிற்கே அடி விழுமோ எனப் பயந்த ஹூக்கு தன் கைகள் நடுங்க, கால்கள் எழும்பி நடக்கக் கஷ்டப்பட மெல்ல மெல்ல கண்ணனை நோக்கித் தயங்கித் தயங்கி அடி எடுத்து வைத்தான். அதைப் பார்த்த பாஞ்சஜனாவின் கோபத் தீ கொழுந்து விட்டு எரியச் சாட்டையை அவன் ஹூக்குவின் கைகளில் இருந்து பிடுங்கிக் கொண்டான்.

சாட்டை மாடுகளை மேய்ப்பவர் வைத்திருப்பது போன்ற நீண்ட பிடி உள்ளது, பாஞ்சஜனா அதை வாங்கிக் கண்ணனின் முதுகின் மேல் ஓங்கி ஓர் அடி வைத்தான். அவ்வளவு தான். பிறந்தது முதல் மாடுகளுடன் வளர்ந்த கண்ணன் அந்தச் சாட்டையின் அடிப்பாகத்தைப் பிடித்து ஒரு சொடுக்குச் சொடுக்கி இழுத்தான். அந்த அடிக்கே கண்ணன் முதுகு அருணோதயச் சூரியன் போல் சிவந்திருந்தது. கண்ணன் மென்னகை புரிந்துகொண்டே தன் கைகளில் பிடித்த சாட்டையால் தன் முழுபலத்தையும் பிரயோகித்துப் பாஞ்சஜனாவை அடிக்க ஆரம்பித்தான். மாலுமிகள் பயத்தில் அலற ஆரம்பித்தனர். ஹூல்லு தன் முதலாளியைக் காக்கவென விரைந்தான். ஆனால் நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களினால் பிரமிப்பு அடைந்திருந்த ஹூக்கு அவனைத் தடுத்தான். பாஞ்சஜனா தொடர்ந்து அடிவாங்கினான். அனைவரையும் அடிக்கப் பயன்பட்ட அதே சாட்டையினால் இன்று அவன் அடிவாங்க ஆரம்பித்தான். தனக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டே பாஞ்சஜனா வலி பொறுக்க மாட்டாமல் கத்த ஆரம்பித்தான். ரத்தம் வழிய ஆரம்பித்தது. எவருமே இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. முதலில் ஓடி வந்த ஹூல்லுவும் இப்போது இதை ரசிக்கிறாப்போல் பாவனையுடன் நின்று கொண்டிருந்தான். நம்மை எந்த நேரம் வேண்டுமானாலும் நடுக்கடலில் தள்ளிக் கொல்லப் போகிறான் என நினைத்த முதலாளி இன்று ஒரு பதினாறு வயதுச் சிறுவனால் தண்டிக்கப் படுகிறான். அந்தக் கப்பலின் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் பாஞ்சஜனா தங்களுக்கு இழைத்த கொடுமைகள் வரிசையிட்டுக்கொண்டு கண்ணெதிரே வந்தன. பாஞ்சஜனாவின் உறவின் முறை இளைஞர்கள் ஓடிப் போய் ஒளிய, பாஞ்சஜனா கீழே விழுந்தான். ஹூக்குவிடம் சாட்டையைக் கொடுத்தான் கண்ணன். அவனைத் தட்டிக் கொடுத்தான். சொர்க்கத்துக்கே போய் விட்டது போன்ற உணர்வு ஹுக்குவிற்கு.

கண்ணனைப் புதிய மரியாதையுடன் பார்த்தனர் இரு ராக்ஷசர்களும். இத்தனை நாட்கள் பாஞ்சஜனாவின் கட்டளைகளுக்குப் பயந்து கொண்டும், தங்களுக்கே கொடுக்கப் போகும் தண்டனைக்கு அஞ்சியும் தாங்கள் செய்து வந்த கொடூரமான செயல் இன்றைக்கு தங்கள் தலைவனே அநுபவிக்க நேர்ந்துவிட்டது பற்றிய ஆச்சரியம் அகலவில்லை. இந்தப் பையன் கைகளிலும், கண்களிலும் ஏதோ அதிசய சக்தி இருக்கத் தான் செய்கிறது. கண்ணன் திரும்பி உத்தவனைப் பார்த்து பாஞ்சஜனாவைத் தூக்கிக்கொண்டு அவன் அறைக்குச் செல்லும்படிக் கட்டளையிட்டான். தான் பின் தொடருவதாயும் கூறினான். ஹூக்கு உதவியுடன் உத்தவன் பாஞ்சஜனாவைத் தூக்கிச் சென்றான். பிக்ருவைப் பார்த்து கண்ணன் கப்பலை வைவஸ்வதபுரிக்குத் திருப்பச் சொன்னான். அங்கே கட்டாயம் தாங்கள் சென்றே ஆகவேண்டும் என்றும் கூறினான். கீழே பாஞ்சஜனாவின் சங்கு, செந்தாமரைப்பூப் போன்ற வெளிர் சிவப்பு நிறமுள்ள சங்கு கிடந்தது. அதைப் பார்க்கும்போதே தூய்மையான எண்ணங்களே தோன்றின. கண்ணன் அந்தச் சங்கை எடுத்துத் தன் வாயில் வைத்துக்கொண்டு, “பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்”என ஊதினான். சங்கின் நாதம் கப்பலில் நிரம்பியது. அனைவர் மனதையும் மயக்கியது. சங்கின் நாதம் தொடரும்.

கண்ணன் பின்பு பாஞ்சஜனாவின் அறைக்குச் சென்று அவன் காயங்களைக் கழுவி, அவற்றுக்கு மருந்திட்டான். அரை மயக்க நிலையில் இருந்த பாஞ்சஜனா கண்ணைத் திறந்து பார்த்தான். கண்ணனைக் கண்டதும், அவனைச் சரமாரியாகத் திட்ட ஆரம்பித்தான். கண்ணன் எதற்கும் பதிலே சொல்லவில்லை. அவனுக்குத் தெரிந்த அனைத்துமொழிகளிலும் கண்ணனைத் திட்டினான். பாஞ்சஜனாவின் உறவின் முறை இளைஞர்களிடம் அவனை ஒப்படைத்துவிட்டு உத்தவனும், கண்ணனும், அந்த அறையை விட்டு வெளியே வந்தனர். கப்பலின் கீழ்த்தளத்துக்குச் சென்று மாலுமிகளிடம் உதவி வேண்டுமா எனக் கேட்டு கண்ணனும், உத்தவனும் வேண்டிய உதவிகளைச் செய்தனர். அன்றிரவு கண்ணனுக்கும், உத்தவனுக்கும் ஒரு பெரிய விருந்தைப் படைத்து வெற்றியைக் கொண்டாடினார்கள் கப்பலின் சமையல்காரர்கள். இரவும் வந்தது. அனைவரும் தூங்கச் சென்றனர். கண்ணனும் முதலில் தூங்கிவிட்டான். திடீரென அவனுக்கு விழிப்பு வந்தது. ஏதோ ஆபத்து! என்ன அது? சுற்றும் முற்றும் பார்த்தான். அந்த அரை இருட்டில் மிக மிக மெதுவாக யாரோ நகருவதும், மூச்சுக்காற்றும் கேட்டது கண்ணனுக்கு. சில விநாடிகளில் கண்ணனின் தலைக்கு நேரே ஒரு நீண்ட வாள் வீசப்பட்டது.

கிடைத்தது அதிக பவர்!

அப்பாடா! ஒருவழியாய் அதிக பவர் இன்னிக்குக் கிடைச்சுடுச்சு. ஒரு இரண்டு மாசமப் பட்ட கஷ்டம் இருக்கே சொல்லி முடியாது. என்ன இருந்தாலும் பவர் இருந்தாலும் கஷ்டம் தான், இல்லாட்டியும் கஷ்டம் தானே! அதுவும் அதிக பவர்னால் கேட்கவே வேண்டாம். வலை உலகத் தலைவியாச்சே. பவர் இல்லைனாத் தான் கஷ்டம். அம்பி, மெளலி, திராச, தக்குடு எல்லாம் என்ன விஷயம் அதிக பவர்னு குழம்பிண்டு இருந்தாங்க. இப்போப் புரிஞ்சிருக்குமே!

இரண்டு மாசத்துக்கும் மேலாக "ந" "த" மாதிரியும் "ண" "ன" என்றும் "ற" "ந" மாதிரியும், தெரிஞ்சுட்டு இருந்தது. சில சமயம் கூறு என்பது கூகூறுறு என்று இரட்டையாவும் தெரியும். "ம' போட்டால் "ழ"வோனு சந்தேகம் வரும். "க" போட்டால் கேட்கவேண்டாம். "ச" மாதிரித் தெரியும். சிலசமயம் இரண்டிரண்டு தரம் எழுதிட்டேனோனு கூட நினைச்சுப்பேன். எல்லாத் தொல்லையும் கொஞ்ச மாசங்களுக்கு இருக்காது.

புதுக்கண்ணாடி அதிகப் பவருடன் இன்னிக்குத் தான் வந்தது.

Wednesday, March 03, 2010

ஆனைமேலே , குதிரை மேலே டூ!

சின்ன வயசு நினைவுகளில் இந்த டூ விடறது ஒண்ணு இருக்கே! அப்பா! அதுக்கு நான் எவ்வளவெல்லாம் அழுதிருக்கேன் தெரியுமா?? கூடப் படிக்கும் பொண்ணுங்க, பையர்கள், (ஐந்து வகுப்பு வரைக்கும் இருபாலாரும் சேர்ந்து தான் படிச்சோம்) டூ விட்டுட்டா அன்னிக்குப் பூரா மனசே சரியா இருக்காது. நினைச்சு நினைச்சு துக்கம் பொங்கும். ஏற்கெனவே அப்பாவோட கண்டிப்பாலே அதிகமா நட்பை வெளிக்காட்டிக்க முடியாது. அந்த மாதிரி சமயத்தில் இந்த டூவும் சேர்ந்துடுத்துனா கேட்கவே வேண்டாம். மொத்த உலகமே நமக்கு எதிரா இருக்கிறாப்போல் இருக்கும். வீட்டுக்கு வந்து அம்மா கிட்டே மட்டும் தனியாச் சொல்லிட்டு அழறச்சே, அம்மா, போடி பைத்தியம்! இதுக்கெல்லாமா அழுவா? னு சொல்லுவா. தைரியமா இருக்கணும்னும் சொல்லுவா. ஆனால் அப்போ அதெல்லாம் புரியாது, தெரியாது.டூ விட்டவங்க நம்மளைப் பார்த்து, "டூ, டூ, டுப்பாக்கி, போலீஸ்காரன் பொண்டாட்டி"னு பாட்டு வேறே பாடுவாங்களா! துக்கம் இன்னும் ஜாஸ்தியாகும். ஒரு தரம் தாங்க முடியாம நான்,,"டூ விட்டா விட்டுக்கோ, டா, டா டப்பி, டப்பிக்காரன் டாண்டாட்டி"னு திருப்பிச் சொல்ல, அப்புறம் இது எங்க வீட்டுக் குடும்பப் பாட்டாய் மாறிடுச்சு.(முக்கியமாய் இதை எழுத நினைச்சுட்டு ஆன்லைனிலே எழுதினேனா?? விட்டுப் போயிருக்கு! இப்போத் தான் நினைப்பு வந்தது.)

சும்மா டூ மட்டும் விட்டாலே மனசுக்கு துக்கமா இருக்கும். அதிலும் சிலர் ஆனை மேலே, குதிரை மேலே டூ விடுவாங்க. அப்போ உலகமே வெறுத்துட்டாப்பல ரொம்பவே வேதனையா இருக்கும். அதிலும் மதுரை மீனாக்ஷிக்கு த.பி. சொக்கலால் ராம்சேட் ஒட்டகங்கள் பரிசளிச்சதுக்கு அப்புறம் ஒட்டகத்தின் மேலே கூட டூ விட்டிருக்கோம். பொதுவா நான் யாரோடயும் டூ விடறதில்லை. யாரானும் டூ விட்டால் கூட அவங்களைக் கெஞ்சி, கொஞ்சி சமாதானம் பண்ணிண்டுடுவேன். என்றாலும் சில சமயங்களில் இந்த டூ படுத்தின பாடு இருக்கே மறக்கவே முடியாது. என்னோட டூ விட்டு, பள்ளிப் பருவத்து நினைவுகளையும் , பல நண்பர்களையும், அவங்க விட்ட டூவையும் நினைக்க வைக்கச் செய்த இந்த டூவின் மகத்துவம் சொல்லி முடியாது.

வலை உலக நண்பர்கள் அனைவரோடும் டூ விடறதே இல்லை. சேத்திதான். சேர்த்தி தான், வழக்குச் சொல்லில் சேத்தினு வரும்னு நினைக்கிறேன். :)))))))))))))))) பிள்ளையார் கூட மட்டும் அப்போஅப்போ டூ விடுவேன். அதை இதிலே எழுத மறந்திருக்கேன். ஏன்னா, பிள்ளையார்தானே நாம டூவிட்டாக் கூடத் திருப்பி டூ விட்டு நம்மை அழ வைக்க மாட்டார்.

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்

கண்ணனை என்ன செய்யலாம்?


மறுநாள் அதிகாலை நேரம், பொழுது புலர இன்னும் ஒரு நாழிகை இருக்கையில் ஹூக்கு கப்பலின் முன்பக்கம் தற்செயலாக வந்தான். வந்தவன் அதிர்ச்சியில் உறைந்தான். தன் கண்களைத் துடைத்துவிட்டுக்கொண்டு, கசக்கிவிட்டுக் கொண்டு, தன்னைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டு, பல விதங்களிலும் பார்த்தும், அவனால் தன் கண்களை நம்பமுடியவில்லை. அங்கே சூரியன் உதிக்கும் திசையை நோக்கி அமர்ந்து காலை அநுஷ்டானங்களைச் செய்வது யார்?? கிருஷ்ணனும், உத்தவனும். என்ன இது? இருவரையும் கூண்டில் அடைத்துப் பெரிய பூட்டையும் போட்டல்லவோ பூட்டினேன்? இங்கே எப்படி இவர்கள்? இது என்ன மாயம்? அதிசயம்? இந்தப் பையனுக்கு உண்மையிலேயே தெய்வீக சக்தி உள்ளதா? அல்லது சின்னச் சின்ன சித்துவேலைகளைக் கற்று வைத்திருக்கிறானோ? ஓட்டமாய்க் கப்பலின் கீழ்ப்பகுதிக்கு ஓடிக் கூண்டு வைத்திருக்கும் இடம் சென்று அங்கே அவர்கள் இருவரும் இருப்பதை உறுதி செய்து கொள்ள நினைத்தான். ஓடிப் போய்ப் பார்த்தான். கூண்டு காலியாக இருந்தது. எந்த இடத்தில் கூண்டின் கதவை அல்லது அதன் கம்பிகளை உடைத்திருக்கமுடியும் எனக் கூர்மையாகக் கவனித்தான். எல்லாமே சரியாக இருந்தது. எங்கேயும் எந்தத் தப்பும் நடக்கவில்லை. கூண்டின் கதவுகளும் உடைக்கப்படவில்லை. கம்பிகளும் வளைக்கப்படவில்லை. அப்போ??? எப்படி இது நடந்தது??

ஹூக்குவிற்கு எதுவுமே புரியவில்லை. விளங்கவில்லை. எங்கிருந்தோ வந்த இரு பையன்கள், ஏதோ கெட்ட சூன்யக் காரங்களோ இவர்கள்? காற்றில் நடப்பார்களோ? கடல் நீரின் மேலும் நடப்பார்களோ?? கடவுளே, இப்படிப்பட்டவர்களின் கோபத்தால் பல வீடுகளும், பல மக்களுக்கும் நாசம் விளையுமோ?? இவர்களை ஏன் நம் கப்பல் தலைவர் அநுமதித்தார்?? நம்மை விடவும் இவர்கள் கெடுதலைச் செய்வார்களோ? யாருக்கும் பயப்படமாட்டார்கள் போல் தெரிகிறதே. இப்போ இந்தக் கூண்டிலிருந்து எப்படித் தப்பினார்கள்? அதுவும் கூண்டின் எந்தப் பாகமும் உடையாமல்?? ம்ம்ம்ம்ம்??? எதுக்கும் நம் எஜமானிடம் சொல்லிவிடவேண்டும் இவர்களைப் பற்றி. ஹுல்லுவையும் அழைத்துக்கொண்டே போய்ச் சொல்லலாம். ஹூக்கு தன் தலைவன் பாஞ்சஜனாவிடம் சொல்லிவிட்டு, அந்த இரு இளைஞர்களுக்கும் தண்டனை கொடுக்க வேண்டி ஹூல்லுவையும், தங்கள் சாட்டைகளையும் எடுத்துக்கொண்டு மீண்டும் கப்பலின் முன்பக்கம் வந்தான். பாஞ்சஜனா அங்கே நின்றுகொண்டிருந்தான். அவன் கண்களில் கோபத் தீ கொழுந்து விட்டெரிந்தது. கிருஷ்ணனையும் உத்தவனையும் பார்த்து, “எங்கே போயிருந்தீர்கள் இருவரும்? நேற்றிரவெல்லாம் எங்கே உறங்கினீர்கள்?” என வினவினான்.

கண்ணன் சற்றே அலக்ஷியமாக, “ம்ம்ம்ம்???” என்றான். பின்னர் சிறிய ஒரு மென்னகையுடன், “ஹூக்கு சொல்லவில்லை?? உன்னிடம் தண்டனை வாங்கிய அந்தச் சிறுவனுக்குத் தேறுதல் கூறி அவன் புண்களுக்கு மருந்திட்டு அவனைத் தூங்க வைத்தோம்.” என்றான்.

“என்ன அலட்சியம்?? என்ன தைரியம்?? உங்கள் வேலை அதுவன்று.” என்றான் பாஞ்சஜனா.
கண்ணன் முகத்தில் மீண்டும் புன்னகை சிரிப்பாக மலர்ந்தது. “ஆம், ஆம், அது எங்கள் வேலை அல்லதான். ஆனால் அது எங்கள் தர்மம். எங்களுக்கு விதிக்கப்பட்ட ஒன்று. நீ அவனுக்குத் துன்பத்தையும், வலியையும் கொடுத்தாய். அந்தத் துன்பத்தில் இருந்தும், வலியிலிருந்தும் அவனை விடுவிக்கச் சிறு முயற்சி எடுத்துக்கொண்டோம். அது எங்கள் தர்மம்.” மீண்டும் கண்ணன் அவனைப் பார்த்துக் கொண்டே பிடிவாதம் பிடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு ஒரு தாய் எப்படிப் புரிய வைப்பாளோ அவ்வாறு அதே அன்பு குரலில் தொனிக்க, முகத்திலும் அன்பைக் காட்டியவண்ணமே சொன்னான்.

“தண்டனை அளிக்கப்பட்டவர்களைத் தனிமையிலே தான் விடவேண்டும் என்பது என் கண்டிப்பான கட்டளை. அதை அறிய மாட்டீர்களா இருவரும்? அதனால் போனீர்களோ?” பாஞ்சஜனாவிற்குக் கிருஷ்ணனின் அழகான, மென்மையான உடலில் சாட்டை அடி பட்டால் விலை போகமாட்டானே என்ற கவலை. ஆகவே அவனுக்குத் தெரியாமல் செய்துவிட்டான் என்ற சாக்கில் தண்டனையை நிறுத்தி வைக்கலாம் என நினைத்தான் போலும். ஆனால் கண்ணனோ, “எங்களுக்கு நன்றாகத் தெரியுமே! தெரிந்தேதான் போனோம். எங்கள் தர்மத்தை நாங்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் கைவிடமுடியாது. காயம்பட்டு மனத்துயரம் நிரம்பி உள்ளவனுக்கு உதவியே ஆகவேண்டும்.”

“என்ன துணிச்சல் உனக்கு? இங்கே நீ தலைவனா? நான் தலைவனா? என்ன அவமரியாதை?? மிருகங்களா நீங்கள்? ம்ம்ம்ம்ம்…, மறந்தே விட்டேனே, ஹூக்கு உங்கள் இருவரையும் கூண்டில் அல்லவோ அடைத்திருந்ததாய்ச் சொன்னான்?”

“ஆம், கூண்டில் தான் இருந்தோம்.”

“”ஆஹா, கூண்டை உடைத்துக்கொண்டு வந்திருக்கிறீர்களா?? உங்களை…… உங்களை……..”

கிருஷ்ணன் கலகலவென்று சிரித்தான். அவனின் அலக்ஷியத்தைப் பார்த்த பாஞ்சஜனாவின் கோபத்துக்கு இன்னும் எண்ணெய் வார்த்தாற்போல் ஆயிற்று. “எப்படி வெளியே வந்தீர்கள்?” அவன் போட்ட சப்தத்தில் கப்பலில் இருந்த அனைவரும் ஒவ்வொருவராக அங்கே கூட ஆரம்பித்தனர். அனைவர் கண்ணெதிரேயும் இந்த இரு இளைஞர்களும் தங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாத அளவிற்குத் தண்டனை கொடுக்கவேண்டும் என்று பாஞ்சஜனா எண்ணினான். ஹுல்லுவைக் கூப்பிட்டான்.ஹூக்குவையும் அழைத்தான். ஏற்கெனவே இவர்கள் சூன்யக்காரர்கள், கெட்ட ஆவி என நினைத்துக்கொண்டு அதையே ஹூல்லுவிடமும் சொல்லி இருந்தான் ஹூக்கு. இருவருக்கும் இப்போது நடுக்கம் ஏற்பட்டது. என்றாலும் எஜமானின் கட்டளையையும் மீறமுடியாது. மெல்ல மெல்ல இருவரும் சென்றனர். ஹூக்குவிற்குப் போகும்போதே உடல் நடுங்கியது; திடீரென ஒரு பெரிய காற்று வீசியது . அந்தக் காற்றில் அலைகள் மேலே எழும்பக் கப்பல் பேயாட்டம் ஆடியது. வானம் இருண்டு வர ஆரம்பித்தது. ஹூக்குவிற்கு இது சாத்தானின் வேலை என்றும் கெட்ட ஆவிகள் கோபமாய் இருக்கும்போது இப்படிப் புயலையும், மழையையும் வரவழைத்து அனைவரையும் கஷ்டப்படுத்தும் என்றும் அறிந்திருந்தான். ஆகவே இது இந்த இரு இளைஞர்களின் வேலையே என எண்ணிக்கொண்டே கிருஷ்ணனின் அருகே தயக்கத்தோடேயே சென்றான்.

கண்ணனோ அவனை ஒரு சிரிப்போடு வரவேற்றான். “ஹூக்கு, இருவரையும் கூண்டில் அடைத்து நன்கு பூட்டினாயா? நிச்சயமா அது?” எனப் பாஞ்சஜனா வினாவினான். “ஒருவேளை உன் கனவாய் இருந்திருந்தால்?” என்றும் சந்தேகப்பட்டான். ஹூக்கு நிச்சயமாய் மறுத்தான். தான் தன் கைகளாலேயே கூண்டில் இருவரையும் அடைத்துப் பூட்டியதை உறுதிபடச் சொன்னான். பின்னர் எப்படி வெளியே வந்தார்கள்?? எஜமானனின் இந்தக் கேள்விக்குப் பதில் தெரியாமல், சொல்ல முடியாமல் ஹூக்குவின் உதடுகள் நடுங்கின. கூண்டு உடைக்கப்படவில்லை என்றும் கூறினான். பாஞ்சஜனா நம்பவில்லை. தன் பிரியத்துக்கு உகந்த மருமகனைக் கூப்பிட்டுப் போய்க் கூண்டைப் பார்த்துவரச் சொன்னான். அவனும் சென்று கூண்டு நன்றாகவே இருப்பதாகவும், எந்த இடத்திலும் உடைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தான். அதிர்ந்து போனான் பாஞ்ச ஜனா.

“என்ன???”

நீண்ட மெளனம் நிலவியது அங்கே. யாருமே பேசவில்லை. கப்பலின் மற்றத் தொழிலாளர்கள் நடுங்கியவண்ணம் பார்த்துக்கொண்டிருந்தனர். பாஞ்சஜனா கண்ணனைப் பார்த்து, “எப்படி வெளியேறினாய்?” என்று கேட்டான். “நீயே கண்டுபிடி!”என்று கண்ணன் சர்வ அலக்ஷியமாய்ச் சொன்னான். ஆனாலும் அவன் முகத்தில் காட்டிய விநயம், மென்னகை இரண்டையும் பார்த்த பாஞ்சஜனாவிற்கு அவனைத் தண்டிக்க மனம் வரவில்லை,

“சரி, போனால் போகட்டும், தம்பி, இனி இம்மாதிரிச் செய்யாதே! நான் எவருக்குத் தண்டனை அளித்தாலும், நீ அதில் தலையிடாதே! நீ உண்டு, உன் வேலை உண்டு என்று இருந்துவிடு. இம்முறை உன்னை மன்னித்தேன்!” என்றான் பாஞ்சஜனா.

கண்ணனோ, “ம்ஹும், அது மட்டும் என்னால் முடியாது அப்பனே! நீ அப்பாவி ஒருவனைத் தண்டிப்பாய், நான் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா?? இனி நீ உன் சாட்டையைத் தூக்காதே! நானும் பேசாமல் இருக்கிறேன்.” என்றான் கண்ணன்.

“நீ யார் எனக்கு ஆணையிட! உன்னால் முடியாத காரியத்தில் தலையிடாதே! நான் எவருக்கு வேண்டுமானாலும் தண்டனை அளிப்பேன். உனக்கு என்ன வந்தது!” என்றான் பாஞ்சஜனா.

“நீ சாட்டையால் அடிக்கும் ஒவ்வொருவருக்கும் என் அன்பான கவனிப்பு நிச்சயம் உண்டு.” கண்ணன்.

“உன்னால் முடியாது.” பாஞ்சஜனா.

“பார்ப்போம்!” கண்ணன்.
“ஹூக்கு, அந்தச் சாட்டையை எடு, இருவருமாய்ச் சேர்ந்து இந்தக் கண்ணனைச் சாட்டையால் நாலு முறைகள் அடியுங்கள்.” என்றான் பாஞ்சஜனா. அதைப் பார்த்துக்கொண்டிருந்த மாலுமி பிக்ருவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

Monday, March 01, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம்பாகம்!

கண்ணனை அடைக்க முடியுமா???


மறுநாள் காலை ராது தன்னுடைய காயங்களைக் கூட நினைக்காமல் வழக்கம்போல் வேலை செய்ய ஆரம்பித்தான். கப்பலின் மாலுமி ஏதோ தைலத்தைத் தடவி யிருந்தான். ராதுவின் மனம் பூராவும் கண்ணன் நேற்றிரவு தனக்குக் கிடைக்கப் போகும் தண்டனையைப் பற்றிக் கூட எண்ணாமல் பணிவிடைசெய்து தன்னைத் தேற்றியதே நிரம்பி இருந்தது. மெல்ல, மெல்லக் கப்பலின் மற்றப் பணியாளர்களுக்கும் இந்த விஷயம் பரவ, அவர்களுக்குள் மெல்லக் கிசுகிசுத்துப் பேசிக்கொண்டனர். அனைத்து மாலுமிகளும் புதிதாய் வந்த இரு இளைஞர்களின் நன்னடத்தையையும், அன்பையும், கருணையையும் பார்த்து வியந்தனர். பாஞ்சஜனாவின் கொடூரத்தால் பாலைவனம் போல் காய்ந்திருந்த அவர்கள் மனதில் ஊற்றுப் போல் அன்பு பெருக்கெடுத்தது. அது முழுதும் கண்ணனுக்காகவே என நிரம்பி வழிந்தது. பாஞ்சஜனாவும், கண்ணனிடமும், உத்தவனிடமும் அன்பாகவே நடந்துகொண்டான். அவனுடைய மெய்க்காவலர்களான இரு ராக்ஷசர்களும் வழக்கம்போல் சாட்டையும், கையுமாக அலைந்தனர்.

மூன்றாம் நாள் கப்பல் ஏதோ ஒரு துறைமுகத்தில் நங்கூரமிட்டு நின்றது. அது குஷஸ்தலை எனச் சொல்லப் பட்டது. அந்த நாட்டு அரசனான குக்குடுமின்னைத் துரத்திவிட்டு புண்யாஜனா ராக்ஷசர்கள் இதைக் கைப்பற்றிவிட்டதாகவும் கூறப்பட்டது. கப்பலில் இருந்து இறங்கிக் கரைக்குச் சென்று அவர்கள் தங்கள் கப்பலுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டே அல்லது பெற்றுக்கொண்டோ வந்தனர். மறுநாள் காலையில் ஒரு சின்னஞ்சிறு சிறுவன் வயது பதினாறு கூட இருக்காது. பாஞ்சஜனாவின் தண்டனைக்குக் காத்து நின்றான். அவன் செய்த தவறு மரியாதையுடன் நடக்கவில்லை என்பதாம். பாஞ்சஜனாவின் உத்தரவின் பேரில் ஹுல்லு அவனுக்கு சாட்டை அடிகளை வழங்க சிறுவன் துடிதுடித்தான். பாஞ்சஜனாவோ அதை ஓர் சிரிப்போடு பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான். அன்றிரவும் கண்ணனும், உத்தவனும் தண்டனை பெற்றுக்கொண்டு துடிப்பவனைப் போய்ப் பார்த்து ஆறுதல் மொழிகள் சொல்லி, தேற்றி, சாட்டை அடியினால் பட்டிருக்கும் காயத்திற்கு மருந்தையும் இட்டனர். அவனுக்குத் தங்கள் பங்குக்கு அளிக்கப் பட்ட நீரிலிருந்து குடிக்க நீரும், அருந்த உணவும் அளித்தனர். கப்பலின் மாலுமிகள் கொஞ்சம் ஆச்சரியத்தோடே வந்து, வந்து பார்த்துவிட்டுச் சென்றனர். பாஞ்சஜனாவின் செய்கையை இவ்வளவு தைரியமாகவும் ஒருவனால் எதிர்க்கமுடியுமா??

அந்தச் சிறுவன் இந்த செளராஷ்டிரக் கடற்கரையில் எங்கேயோ ஓர் இடத்திலிருந்து இந்த ராக்ஷசர்களால் கடத்திக்கொண்டுவரப்பட்டவன் என்றும், அவன் இங்கு வந்து சில மாதங்கள் ஆயிற்று என்றும், அவனுக்கு ஆதரவு அளிக்கவோ, அன்பைக் காட்டவோ யாருமே இல்லை என்பதால் மனம் நொந்து வெம்பிப் போய் இருக்கிறான் என்பதும் கண்ணனுக்குப் புரிந்தது. தன் பூரண அன்பையும் அவனிடம் பொழிந்து கண்ணன் அவனுக்குத் தேறுதல் சொன்னான். அந்தப் பையனைத் தன் மடியில் போட்டுக்கொண்டு ஒரு தாயைப் போல் அவனுக்குப் பணிவிடைகள் செய்தான். அழுதுகொண்டிருந்த அந்த இளைஞன் மெல்ல, மெல்ல தன்னை மறந்து தூங்க ஆரம்பித்தான். ஒரு தாயைப் போலவே தன் மடியிலிருந்து அவனை எடுத்துக் கீழே விட்ட கண்ணனுக்குத் தனக்குப் பின்னால் யாரோ நிற்கின்றார்கள், தன் செயல்களைப் பார்க்கிறார்கள் என்ற உணர்வு ஏற்பட்டது. சட்டெனத் திரும்பிப் பார்த்தான். ஹூக்கு! ராக்ஷச இரட்டையர்களில் ஒருவனான ஹூக்கு கண்ணனைச் சாட்டையால் தாக்கச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தான். கண்ணன் மெதுவாக உத்தவனுக்கு எச்சரிக்கைக் குரல் கொடுத்தான். “அசையாதே! உத்தவா! அப்படியே நில்! இந்த ராக்ஷதனை எதிர்கொள்ளுவோம்!” என்றான் கண்ணன்.

முதலில் யாரோவென நினைத்த ஹூக்குவிற்கு இப்போது இந்த இரு இளைஞர்களையும் அடையாளம் புரிந்தது. தன் எஜமானின் மனதுக்கு உகந்தவர்கள் என்பதும் புரிந்தது. ஆனாலும் அவனுக்குக் கட்டளை தவறு செய்பவர்களைப் பிடித்து இழுத்துவருவது ஒன்றே. அதிலிருந்து அவன் மீற முடியாது. இவர்கள் யாரானால் என்ன?? இழுத்துச் செல்வோம் எஜமானிடம். ஹூக்கு இருவரையும் தோள்களைப் பற்றி இழுத்துக்கொண்டே கண்ணனுக்கு விளங்காத ஏதோ ஓர் மொழியில் என்னவோ சொன்னான். பின்னர் இருவரையும் தரதரவென்று இழுத்துக்கொண்டே போனான்.

ஏற்கெனவே அடி வாங்கிக்கொண்டு கிருஷ்ணனால் தூங்க வைக்கப்பட்ட பையனும் எழுந்து நடந்ததைப் பார்த்தான். பிக்ரு என்ன செய்கிறான் எனக் கவனித்தான். இதை ஒன்றையுமே அறியாதவன் போல அவன் கப்பல் சரியான திசையில் தான் செல்கிறதா என்பதை அறிபவன் போல விண்ணின் நக்ஷத்திரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவற்றிலிருந்து அவன் தன் கண்களை அகற்றவே இல்லை. கண்ணனும், உத்தவனும் கீழே சாமான்கள் கொட்டி வைக்கும் இடத்திற்குக் கொண்டு செல்லப் பட்டு அங்கே இருந்த ஒரு மரக் கூண்டில் அடைக்கப் பட்டனர். அதை நன்கு ஒரு பெரிய பூட்டினால் பூட்டினான் அந்த ஹூக்கு என்னும் ராக்ஷசன். பின்னர் அவன் சென்றுவிட்டான். கூண்டு வைத்திருந்த இடமும் சரி, கூண்டும் சரி, காற்றுக்குக் கொஞ்சமும் இடம் கொடுக்காவண்ணம் அமைக்கப் பட்டிருந்தது. அதோடு அங்கே குவிக்கப் பட்டிருந்த வித விதமான மளிகைப் பொருட்கள், மற்றும் பல்வேறு பொருட்களின் வாசனைகளும் சேர்ந்த ஒரு கலவை மூச்சை அடக்க வைத்தது. சீக்கிரத்திலே உத்தவனுக்கு வாந்தி வந்துவிட்டது.

கொஞ்ச நேரம் ஆனதும் கண்ணன் மெல்ல மெல்ல உத்தவனையும் தூங்கச் சொல்லிவிட்டுத் தானும் தூங்க யத்தனித்தான். யாரோ அங்கே வந்திருக்கிறார்கள். மெல்லிதாக மூச்சுவிடும் சப்தமும், மெதுவாக நடமாடும் சப்தமும் கேட்டது. கண்ணன் எச்சரிக்கை அடைந்தான். “கிருஷ்ணா! என்ன செய்கிறாய்?” மெல்ல மெல்ல ரகசியம் பேசுவது போல் ஒரு குரல்.

அப்பாடா, அது பிக்ருதான் வேறே யாருமில்லை. கண்ணனும், “என்ன விஷயம்?” என்று விசாரித்தான். “கப்பல் தலைவன் கப்பலின் யாத்திரை செல்லும் திசையை மாற்றச் சொல்லிவிட்டான். நாம் வைவஸ்வதபுரிக்குப் போகப் போவதில்லை” என்றான் பிக்ரு.
“ஓ, பின்னர் எங்கே போகிறோம்?”

“மிக மிக தூரத்தில், ஷோனிதாபுரி என்னும் நகரம்!” என்றான் பிக்ரு. கண்ணனுக்கு முதல்நாள் குஷஸ்தலையில் நிறுத்தி ஏன் அவ்வளவு பொருட்கள் வாங்கப்பட்டன என்பது புரிந்தது. “ம்ம்ம்ம்ம்..,, பாஞ்சஜனாவின் எண்ணம் என்னவாய் இருக்கும்? நீ என்ன நினைக்கிறாய் பிக்ரு?” கண்ணன் கேட்டான்.

“வேறு பக்கம் சென்று தொலைதூரத்து நாடுகளில் ஏதாவதொன்றில் உன்னை விற்கப் போகிறான். யாரேனும் அரசனுக்கு விற்பான். நிறையப் பணம் கிடைக்குமே அவனுக்கு. அவன் பணத்தாசை பிடித்தவன்.”

“பிக்ரு, நாம் எப்படியேனும் வைவஸ்வதபுரி போயாகவேண்டும். எனக்குப் புநர்தத்தனைப் பார்த்தே ஆகவேண்டுமே!”

“ஆஹா, அவன் விடமாட்டான், கண்ணா, விடமாட்டான். போகமுடியாது!”

“சரி, அப்போ அவனுக்குத் தெரியாமல் அவனின் அநுமதி இல்லாமலேயே இந்தக் காரியத்தைச் செய்தாகவேண்டும். உன்னிடம் இந்தக் கூண்டின் சாவி இருக்கிறதா?”

“ஹூக்குவிடம் அன்றோ உள்ளது?”

“அப்போ நான் கூண்டை உடைத்துக்கொண்டு வரட்டுமா?”

“வேண்டாம், கண்ணா, வேண்டாம், பின்னர் அதற்கும் சேர்த்துத் தண்டனை கிட்டும் உனக்கு. உன்னைக் கொன்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.”

“ம்ம்ம்ம்??? சரி, நான் இந்தக் கூண்டின் கம்பிகளை உடைத்துக்கொண்டு வெளியே வந்துவிடுகிறேன். ராதுவால் காலை விடிவதற்குள்ளாக இதைச் சரி செய்யமுடியுமா என்று கேள்” என்றான் கண்ணன். கண்ணன் முகத்தைப் பார்த்த பிக்ரு அவன் உண்மையாகவே சொல்கிறான் என்பதைப் புரிந்துகொண்டு, ராதுவைத் தேடிக்கொண்டு போனான். அவனைக் கேட்டுப் பார்க்கவேண்டும் என்று சொல்லிக் கொண்டே போனான். கண்ணனோ அவனால் முடியாவிட்டாலும் தங்களால் இந்தக் கூண்டில் இருக்கமுடியாது என்றும் உடைத்துக்கொண்டு வெளிவரப் போவதாயும் அறிவித்தான். கண்ணனும், உத்தவனும் கலந்து பேசிக்கொண்டனர். கூண்டை நன்கு ஆராய்ந்தனர். எந்தப் பக்கம் கம்பிகள் ஆட்டம் கொடுக்கின்றன என்பதைக் கண்டுகொண்டு அந்தக் கம்பிகளைப் பிளந்துகொண்டு இருவரும் ஒருவர் பின் ஒருவராக வெளியேறினார்கள். பின்னர் ராதுவைத் தேடிக்கொண்டு இருவரும் சென்றனர். வழியிலேயே கீழே வந்துகொண்டிருந்த ராதுவைப் பார்த்தார்கள். ராது ஒருவருக்கும் தெரியாமல் மறைந்து மறைந்து வந்து கொண்டிருந்தான். கிருஷ்ணன் புன்னகை புரிந்தான்.