எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, June 28, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்! ராதையின் நெஞ்சமே!

ராதையுடன் உடன் வந்த லலிதாவும், விஷாகாவும் அவளை ஆஸ்வாசப் படுத்தினார்கள். அவள் மயக்கத்தைத் தெளிவித்தனர். கண் திறந்து பார்த்தாள் ராதை. கண்ணன் அந்தப் பாம்பை அடக்கிக் கொண்டிருப்பதைக் கண்டதும் "கானா, என் கானா! ஏன் இப்படி உன் உயிரை நீயே போக்கிக் கொள்கின்றாய்? உன் உயிர் எனதன்றோ? அதை நீ அறிய மாட்டாயா?" எனக் கேட்டுவிட்டு மீண்டும் மூர்ச்சையானாள் ராதை. யசோதைக்கும், நந்தனுக்கும் ராதையின் இந்தக் கோலம் சற்றும் சகிக்க முடியாத ஒன்றாய் இருந்தது. ஒரு இளம்பெண் அதுவும் வேறு ஒருவனுக்கென நிச்சயிக்கப் பட்டவள் தங்கள் பையனோடு சிநேகமாய் இருப்பதோடு, இவ்வாறு பொது இடத்தில் தன்னை மறந்து நடக்கின்றாளே? அதிலும் இவள் திருமணம் நிச்சயிக்கப் பட்டும் இன்னும் அவனுடன் திருமணம் நடக்காமல் இருப்பதையும் அவர்களால் சகிக்க முடியவில்லை. அனைவரிலும் ராதையின் சிற்றன்னையான கபிலாவிற்கு இன்னமும் ராதையின் மேல் கோபம் இருந்து வந்தது. இப்போது ராதையின் இந்த வெளிப்படையான நடத்தையால் அவள் பக்கம் இன்னும் நியாயம் கூடிவிட்டதாய் உணர்ந்தாள். ஏற்கெனவே இந்தப் பெண் ராதை பெற்றெடுத்த தாய் இல்லை எனத் தந்தையாலும், தாய்வழிப்பாட்டியாலும் மிகவும் செல்லம் கொடுத்துக் கெடுக்கப் பட்டிருக்கிறாள். இவளோட இந்த நடத்தை நம் குடும்பத்திற்கே அவமானம். இன்றைக்கு இரண்டில் ஒன்று பார்த்துடணும். இதுதான் கபிலாவின் எண்ணம்.ஏற்கெனவேயே இந்தப் பெண் நந்தனின் மகன் கண்ணனோடு சேர்ந்து "ராஸ்"விளையாடுவதாய்க் கூறிக் கொண்டு கண்ட நேரத்திலும் ஆடுவதும், பாடுவதுமாய் இருப்பதோடு அல்லாமல், இந்த நந்தனின் பிள்ளையை என்னமோ கண்காணாத தெய்வம் போலப் பூஜிக்கின்றாளே? இது அடுக்குமா?? இப்போ நல்ல சமயம் வாய்ச்சிருக்கு. கம்சன் திரும்பிவிட்டதாயும், அவனோடு ஐயனும் வேலையில் ஒருபடி முன்னேறிக் கம்சனின் மெய்க்காப்பாளனாக ஆகி வந்திருப்பதாகவும் மதுராவில் இருந்து செய்தி வந்திருக்கிறது. இந்தப் பெண்ணை ஐயனிடம் எவ்வாறேனும் ஒப்படைத்துவிடவேண்டும். ராதையின் சகோதரர்கள் அரை மயக்க நிலையில் இன்னும் கண் திறந்து பார்க்காத ராதையைத் தூக்கிச் சென்றார்கள். அவர்கலும் உள்ளூரக் கோபத்துடனேயே இருந்ததாய் அவர்கள் முகத்தில் இருந்து தெரிந்தது. ராதையின் சிற்றன்னையோ, ராதையை வீட்டில் கொண்டு சேர்த்ததுமே, அவள் உடல்நிலையைக் கூடக் கவனிக்காமல், அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். எழுந்திருக்கக் கூடச் சக்தியற்ற நிலையில் இருந்த ராதை, கண்களில் கண்ணீரோடு அரைக்கண் திறந்து சிற்றன்னையைப் பார்த்துவிட்டு ஏதும் செய்யமுடியாத நிலையில் மீண்டும் மயக்கம் அடைந்தாள்.இன்று இத்தனை நாள் இல்லாமல் ராதையின் தந்தை விருஷபானுவிற்கும் கோபம் தலைக்கு மேல் ஏறி இருந்தது. அனைவர் கண் முன்னாலும் இப்படி அவமானப் பட வைத்துவிட்டாளே இந்த ராதை? இனி இந்தக் கோபர்கள் முன்பாகத் தலை நிமிர்ந்து நடக்கக் கூட முடியாதே? ஐயன் வந்துவிட்டான். ஆனால் இப்போது உடனே திருமணம் நடத்தமுடியாது. அதற்கான நேரம் இப்போது இல்லை. இப்போ கடவுளரின் இரவு முடியும் மாதங்களில் இருக்கின்றோமே?? கல்யாணங்கள் செய்யமுடியாதே? இருக்கட்டும், ம்ம்ம்ம்ம்?? இன்னும் எத்தனை நாட்கள் உத்தராயணத்திற்கு??? உத்தராயணம் வந்ததும், முதல் முஹூர்த்த நாளிலேயே ஐயனிடம் இவளை ஒப்படைக்கவேண்டும். ஐயன் இன்னும் சில நாட்களில் விருந்தாவனம் வருவதாய்ச் சொல்லி இருக்கின்றான். அதுவரையிலும் இந்தப் பெண்ணைப் பாதுகாக்கவேண்டும். யாரங்கே, இனி இந்தப் பெண் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது. அதோ, அந்த அறையில் இவளை உள்ளே விட்டுப் பூட்டுங்கள். வெளியே, யாராவது ஒருவர் மாற்றி ஒருவர் காவல் இருங்கள். என்ன?? கையை எல்லாம் கட்டவேண்டாம். பூட்டினாலே போதும், இவளால் என்னை மீறி வெளியே வரமுடியாது. கானாவாம், கானா! இந்தப் பெண்ணிற்கு இருபது வயது ஆரம்பிக்கப் போகின்றது. இன்னமும் சிறுபெண் போல தன்னைவிடச் சிறுமிகளோடும், சிறுவர்களோடும் விளையாடுகின்றாள். ஆடுகிறாள். பாடுகிறாள்.

இனி இவள் கானாவைப் பார்க்கவே கூடாது. ஆயிற்று, அவனுக்கும் பதினைந்து முடிந்துவிட்டதே? அதோடு அல்லாமல் அவன் நம் தலைவன் நந்தனின் ஒரே மகன். அவர்களைப் போல் பணக்காரர்களின் ஒரே மகன் நம் பெண்ணைப் போல் சாதாரண நிலையில் உள்ள பெண்ணை மறுமகளாய் ஏற்பார்களா?? இவளை உள்ளேயே பூட்டி வையுங்கள். வெளியே விடவே கூடாது. ராதை அறையில் அடைக்கப் பட்டாள். கண் திறந்து தன் நிலையைக் கவனித்த ராதைக்குக் கண்ணீர் பொங்கிப் பிரவாஹமாய் ஓடியது. தன் முழங்காலில் முகத்தைப் புதைத்துக் கொண்டு பெருங்குரலெடுத்து அழுதாள். விருஷபானுவும், கபிலாவும் அவளைப் பார்த்து, "குடும்ப கெளரவத்திற்கே உலை வைத்த உன்னை வெளியே விடமுடியாது. உனக்குச் சாப்பாடும் கொடுக்கப் போவதில்லை. இந்த அறையிலேயே அடைந்து கிட?" என்று சொல்லிவிட்டுக் கோபமாய் வெளியே சென்று அறையை நன்கு அழுந்தப் பூட்டினார்கள். வெளியே காவலும் போடப் பட்டது.

ராதையின் நெஞ்சமோ கண்ணனிடம் சென்றுவிட்டது. அவனை முதன்முதல் பார்த்தது, உரலோடு சேர்த்துக் கட்டப் பட்டிருந்தது, இரு மரங்களை அவன் வீழ்த்தியது, தன்னிடம் விருந்தாவனம் வந்து சேருவேன் எனச் சத்தியம் செய்தது. அதே போல் விருந்தாவனம் வந்தது. விருந்தாவனத்தில் அவனோடு சுற்றியது. காட்டில் கானாவோடு அலைந்தது, கானா தன்னிடம் பேசிய பேச்சுக்கள், விளையாடிய விளையாட்டுக்கள், ஹஸ்தின் முதுகில் தன்னையும் ஏற்றிக் கொண்டு கானாவும், தானும் மட்டும் காட்டை நோக்கிச் சென்றது. ஆஹா, ஹஸ்தினுக்கு மட்டும் இரு இறக்கைகள் இருந்திருந்தால்?? எவ்வளவு ஆனந்தமாய் இருக்கும்? தானும், கானாவும் ஹஸ்தின் முதுகின் மேலேயே பறந்து கொண்டே அலைந்து திரிந்து இந்தப் பூவுலகின் அனைத்து இடங்களையும் பார்த்து யாரும் வர முடியாத ஓர் இடத்தைக் கண்டு பிடித்து அங்கு கானாவும், தானும் மட்டும் சந்தோஷமாய் இருந்திருக்கலாமே?? யார் இந்த ஐயன்?? யார் வரச் சொன்னது இவனை? ஏன் நிச்சயம் செய்தனர் இவனோடு நம் திருமணத்தை? இந்த ஐயனை இன்னும் பார்த்தது கூட இல்லையே?

மனம் என்னமோ அவன் மனைவி தான் என்பதை ஒத்துக் கொள்ள மறுக்கின்றதே. இல்லை, இல்லை, நான் ஐயனுக்காகப் பிறக்கவில்லை. என் உயிர் கானா, என் ஜீவன், கானா, என் பார்வை கானா, என் மூச்சு கானா. அவன் கோபர்களின் தலைவனின் ஒரே மகனாய் இருந்தால் எனக்கு என்ன? என்னுள்ளே உறைந்து என் ஜீவசக்தியாய் இருக்கும், என் உடலில் ஓடும் ஒவ்வொரு நரம்பிலும் அவனுடைய சக்தியே பொங்கிப் பிரவாஹமாய் ஓடுவதை யார் அறிவார்கள். இல்லை, இல்லை, கானா அறிவான், அவனுக்குத் தெரியும், அவனே நான், நானே அவன், நானில்லாமல் அவனில்லை. அவனில்லாமல் நானில்லை. கானா பெரும் பணக்காரர்களான ஷூரர்களுக்குத் தலைவனாகிவிட்டால்?? யசோதா அம்மா என்னைத் தன் மறுமகளாய் ஏற்பாளா?? மாட்டாள், மாட்டாள், நான் கானாவை மணக்கவே முடியாது. ஆனால் கானா இல்லாமல் வேறொருவனை என் கணவனாய் நினைக்கக் கூட முடியவில்லையே? கானா, கானா, ராதைக்கு அன்றிரவு பூராத் தூக்கமே வரவில்லை. அன்று உணவும் கொடுக்கப் படவில்லை அவளுக்கு.

மறுநாள், பெளர்ணமி. ஒவ்வொரு பெளர்ணமிக்கும் யமுனை நதிக்கரையில் "ராஸ்" நடக்கும். அனைத்துக் கோபஸ்த்ரீகளும், கோபர்களும், சிறுவர், சிறுமிகளோடு கட்டுச்சாதம் கட்டிக் கொண்டு வந்து ராஸில் கலந்து கொள்ளுவார்கள். கண்ணன் இனிய புல்லாங்குழல் இசைப்பான். அந்த அமுதகீதம் என் காதிலும் விழுமா?? பூட்டிய இந்தக் கதவைத் தாண்டி வந்து விழுமா?? இந்த வீட்டு மனிதர்களின் பூட்டிய இதயம் திறக்குமா??? அன்று ராதைக்கு மிகக் கொஞ்சமாய் உணவு அளிக்கப் பட்டது. ஏதோ நினைவு பளிச்சிட ராதை அந்த உணவை மறுக்காமல் உண்டாள். இரவும் வந்தது. யமுனை நதிக்கரை வெண்ணிலவின் ஒளியில் ஜாஜ்வல்யமாய்ப் பிரகாசித்தது. இயற்கையாகவெண்மணல் பரப்பிய கரையில் வித, விதமாக உடை அணிந்த பெண்களும், ஆண்களும் அன்றிரவு கொண்டாட்டத்திற்குத் தங்களைத் தயார் செய்து கொண்டிருந்தனர். ராதை தவித்துக் கொண்டிருந்தாள்.
"கண்ணனிடம் எடுத்துச் சொல்லடி, சகியே,
கன்னி நான் அவன் மேல் கொண்ட காதலை" என்று மனம் தவிக்க ராதை எதையோ எதிர்பார்த்துக் காத்திருந்தாள். அப்போது கண்ணனின் புல்லாங்குழலின் இனிய கீதம் ஆரம்பித்தது. மெல்ல, மெல்ல யமுனைக் கரையைத் தாண்டி, விருந்தாவனத் தெருக்களுக்குள் நுழைந்து, ராதையின் வீட்டிற்கும் வந்து, அனைவரையும் தாண்டி, காவல் இருப்பவர்களை எல்லாம் தூங்க வைத்து ராதை பூட்டி இருக்கும் அறைக்குள்ளாக நுழைந்தது. ராதையின் இதயமோ திக், திக் என அடித்துக் கொண்டது. ஏதோ நடக்கப் போகிறது. இது என்ன கண்ணனின் புல்லாங்குழல் இசை இவ்வளவு அருகில்?? இசை அந்தப் பிராந்தியத்தையே நிரப்பியது. அனைவரும் மயங்கினர். ராதைக்கு எதிரே அந்த அறை, அவள் படுத்திருந்த கட்டில், மற்றும் அந்த வீடு எல்லாம் சுழல்வது போல் இருந்தது. அந்த இசையைக் கேட்ட அவள் மனம் பித்துப் பிடித்தது போல் அலைந்தது. சுவற்றில் தலையை முட்டிக் கொண்டு அழலாம் போலத் தவித்தாள் ராதை. "கானா, என் கானா, உன்னை நான் மீண்டும் காண்பேனா?? உன் அருகில் இருக்கும் பேறு பெறுவேனா? உன் இனிய கானத்தைக் கேட்பேனா?" என வாய்விட்டுப் புலம்பினாள்.

உடனேயே புல்லாங்குழல் இசை நின்றது. ஒரே மெளனம் சூழ்ந்தது. ராதைக்கு அந்தப் பிராந்தியமே இருட்டாகிவிட்டாற்போன்ற உணர்வு.

Wednesday, June 24, 2009

உன்னை ஒன்று கேட்பேன்! உண்மை சொல்ல வேண்டும்!

புலி வருது, புலி வருது கதையாக் கடைசியிலே புலி வந்தே விட்டது. குமரன் இந்தச் சங்கிலித் தொடருக்கு அழைத்து விட்டார். இன்னும் சிலரும் கூப்பிட்டிருக்கிறதா மெளலி சொல்றார். இப்போ வல்லி சிம்ஹன் வேறே அழைப்பு விட்டாச்சு. இதுக்கு முன்னாலே கூப்பிட்டவங்க யாருனு தெரியலை. மன்னிச்சுக்குங்க. ஏப்ரலில் இருந்தே சரியாகப் பதிவுகள் போடவோ, பதிவுகளைப் பார்க்கவோ முடியலை. அதனால் யார் கூப்பிட்டதுனு தெரியாது. பதில் கொடுக்கலைனு நினைக்காதீங்க. இந்தக் குமரன் அட, நம்மையும் மதிச்சுக் கூப்பிட்டிருக்காரேனு பார்த்தால் இல்லாததை எல்லாம் சொல்லி இருக்கார். எனக்குத் தெரியாத விஷயம் தான் அதிகம். எழுதறது எல்லாம் தெரிஞ்ச விஷயங்களே! தெரியாத விஷயங்களைத் தொடறதே இல்லை. குமரன் அதைக் கவனிக்கணும்! வல்லியோ அதுக்கும் மேலே ஒருபடி போய் ரொம்பப் புகழ்ந்திருக்காங்க. அதுக்குத் தகுதியான மாதிரியா நடந்துக்கணும். இப்போ முடிஞ்சவரைக்கும் பதில்கள்:-

1உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்கள் பெயர் பிடிக்குமா?

உண்மையான பெயர் சீதாலக்ஷ்மி தான். அப்பாவோட அம்மா பெயர்.
வீட்டில் பிறந்த அனைத்துப் பேத்திகளுக்கும் இதே பெயர் என்பதால் ஒவ்வொருத்தரையும் கூப்பிடுவது மாற்றப்பட்டது. கீதானு ஏன் கூப்பிட ஆரம்பிச்சாங்க? தெரியலை! பிடிக்குமா? என்றால் அதுவும் சொல்லத் தெரியலை. ஆனால் அப்பாவழி, அம்மாவழித்தாத்தாக்கள் சீதா என்றே கூப்பிட்டிருக்காங்க. அவங்களுக்கப்புறம் எனக்கே அந்தப் பேர் மறந்து போச்சு! :D

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

ம்ம்ம்ம்ம், அது வேண்டாமே! நேரிலே பார்த்தால் தவிர பெரும்பாலும் என்னோட சோகத்தை அதிகமாய் வெளிக்காட்டிக்காமலேயே இருந்துடுவேன். நான் எழுதறதை வச்சும், பேசறதை வச்சும் அநேகமாய் எல்லாரும் என்னோட வாழ்க்கையிலே சோகங்கள் இல்லைனு நினைக்கிறாங்க. அது அப்படியே இருக்கட்டும்.


3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
ம்ம்ம்ம் ஒரு காலத்தில் பலராலும் பாராட்டப் பட்டது. முன் மாதிரியாகக் காட்டப் பட்டது. இப்போ அப்படி இல்லை. அந்த வருத்தம் உண்டு.

4. பிடித்த மதிய உணவு என்ன?

ரசம் சாதம், சுட்ட அப்பளம், அப்பளம் சுட்டு அதிலே நெய் ஊற்றித் தொட்டுக் கொண்டு சாப்பிட வேண்டும்.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

பழகுவதில் தயக்கம் ஏதும் இருக்காது. நெருக்கம் என்று கேட்டால் உடனே நெருக்கம் வராது.

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

கடலில் குளிச்சாலும் திரும்ப ஒரு முறை நல்ல நீரில் குளிக்கணும். ராமேஸ்வரம் கடலில் குளிச்சிருக்கேன். அருவிகளைப் பார்த்திருக்கேன். குளிச்சது இல்லை. அருவியின் மேலிருந்து நீர் விழும் வேகத்தில் குளிச்சால் மூச்சுத் திணறல் அதிகமாகும் என்பதால். :(


77. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

பொதுவாய் எல்லாரையுமே நேருக்கு நேர் கவனிச்சே பழக்கம்.


8. உங்ககிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடிச்ச விஷயம்: ஒவ்வொரு வேலைக்கும் ஒரு நேரம் வச்சுச் செய்யறது. அந்த நேரம் வேறே வேலை தவிர்க்க முடியாமல் இருந்தாலொழியச் செய்யறதில்லைனு வச்சிருக்கேன். எதையும் குறிப்பிட்ட நேரத்துக்குள் திட்டமிட்டுச் செய்வது. 11 மணிக்குச் சாப்பாடு தயாராகணும் என்றால் 10-45-க்கு முடிச்சுட்டு உட்காருவேன். வெளியே சென்றாலும் அப்படித் தான். இத்தனை மணிக்குள் திரும்புவேன் என்று சொல்லிட்டுப் போனால் சரியா அந்த நேரத்துக்குள்ளே வந்துடுவேன். அன்னிக்கு ஊர்வலம், பந்த், ஸ்டிரைக்னு எதுவும் இல்லாமல் இருக்கணும்! :(((((( ஆனால் இப்போ இணையம் அடிக்கடி கிடைக்காமலும், மற்ற வேலைகளின் தாக்கத்தாலும் இணையத்தில் இருக்கும் நேரம் கொஞ்சம் மாறிப் போயிருக்கு, சில நாட்கள் தான் இதுவும். வெளியே கிளம்பணும்னாலும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே தயாராகி உட்கார்ந்துடுவேன்.

பிடிக்காதது: ம்ம்ம்ம்ம்ம்???? அது மத்தவங்க சொன்னால் தான் சரியா இருக்கும், எனக்குத் தெரிஞ்சவரை அனைவரையும் திருப்தி செய்ய நினைப்பேன். அது முடியாதுனு தெரிஞ்சும்.

9. உங்க சரிபாதிகிட்ட உங்களுக்குப் பிடித்த பிடிக்காத விஷயம் எது?

என்னை இன்னும் ஒரு குழந்தையாகவே நடத்துவது. ஒண்ணும் தெரியலைனு சொல்லுவார். இதையும் பிடிக்காத விஷயம்னு சொல்ல முடியாது. தலைமுறை இடைவெளியால் இப்படிச் சொல்றார்னு சொல்லலாம்.

பிடிச்சதுனால் எதைச் சொல்றது? பிடிக்காமல் கல்யாணமே நடந்திருக்காதே?? அநேகமாய் இரண்டு பேரும் ஒரே அலைவரிசையில் நினைப்போம். நான் சொல்ல வாய் திறந்தால் அவர் அதையே சொல்லுவார். அல்லது அவர் சொல்ல நினைக்கிறதை நான் சொல்லிடுவேன். மற்றபடி சாதாரணக் கணவன், மனைவிக்குள்ள சண்டை, சச்சரவு எங்களுக்குள்ளும் உண்டு. என்னதான் நாலு தென்னை மரங்கள் இருந்தாலும் அதைச் சுத்தி எப்போவுமே டூயட் பாட முடியாதே?? :))))))))))

10. யார் பக்கத்துல இல்லாம இருக்கிறதுக்கு வருந்துகிறீர்கள்?

பையரும், பெண்ணும் தான். யு.எஸ்.ஸில் போய் உட்கார்ந்திருக்காங்க. அக்கம்பக்கம் எல்லார் வீட்டிலேயும் பெண்ணும், பையரும் வந்தால் இன்னும் அதிகமாய் வருத்தம் வரும்! அவங்க அவங்க வாழ்க்கை, வாழவேண்டிய இஷ்டப் படி தானே வாழணும். வாழட்டும், வாழவேண்டும் இனிமையாக. வாழ்க! வளர்க!

11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

என்ன பெரிசா?? என் கிட்டே இருக்கிறதே பச்சை, மெரூன், மஞ்சள் தான். பச்சைக்கலரு ஜிங்குசா, அரக்கு கலரு ஜிங்குசா, மஞ்சள் கலரு ஜிங்குசா னு பாடலாம். இன்னிக்கு பச்சையும் மெரூனும் கலந்த புடைவை, ரவிக்கை.

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்கீங்க?
ஒண்ணும் பார்க்கலை. கணினியைப் பார்த்துட்டு தட்டச்சறேன், இந்தக் கேள்வி, பதிலுக்கு. காதிலே தொலைக்காட்சியிலே போட்டிருக்கிற ஹிந்தி சினிமா வசனம் விழுது.

13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வண்ணமாக உங்களுக்கு ஆசை?

பேனாவா மாறிட்டப்புறம் ஆசை எப்படி வரும்???(இது இல்லை பதில்??? யாருக்காவது தோணிச்சா?) ம்ம்ம்ம்ம்ம்??? இளநீலம். ஆகாயக் கலர்.

14. பிடித்த மணம்?

மல்லிகை மணமும், எங்க வீட்டுப் பாக்கு மரம் பூத்திருக்கும்போது வரும் பாக்குப் பூ மணமும். இளங்காலைப் பொழுதிலே மாமரத்தில் இருந்து குயில் கூவி அழைக்க, வேறே இடத்திலிருந்து அதுக்குப் பதில் வர, கொல்லைக் கிணற்றடிக்கதவைத் திறக்கும்போதே கம்மென்று வரும் பாக்குப் பூவின் மணம்!!! அம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆ!!!!!


15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

அநேகமா எல்லாரையும், எல்லாரும் கூப்பிட்டாச்சு. அதனால் நான் யாரையும் கூப்பிடலை, பாவம் எல்லாரும் என்ன வேலையிலே இருக்காங்களோ?? எதுக்குத் தொந்திரவு செய்யணும்???


6. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

குமரனும், வல்லியும் அனுப்பி இருக்காங்க. குமரனோட புல்லாகிப் பூண்டாகி ரொம்பப் பிடிச்சது. வல்லி அவங்க திருமணம் ஆன கதையை எழுதி இருந்தாங்க. அதை அடிக்கடி நினைச்சு, நினைச்சு எனக்குள்ளே சிரிச்சுப்பேன். மத்தவங்க யாருனு தெரியாததால் குறிப்பிடலை. மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்.

17. பிடித்த விளையாட்டு:

விளையாட எல்லாம் அனுமதி கிட்டியதில்லை. அதனால் அதிகம் விளையாடியது இல்லை. வீட்டில் விளையாடும் விளையாட்டுகள் அம்மாவழித் தாத்தா வீட்டில் கற்றுக் கொண்டது, செஸ், காரம்போர்டு, ட்ரேட், போன்றவை. செஸ் விளையாட்டில் கொஞ்சம் ஆசை இருந்தது. அப்புறம் அதில் முன்னேறவில்லை.



18. கண்ணாடி அணிபவரா?

கண்ணாடி பதினைந்து வருஷமாய்ப் படிக்கும்போது மட்டும் அணிகின்றேன். பவர் அதிகம் இருக்கு, ஆனாலும் சில காரணங்களால் தொடர்ந்து அணிய முடியவில்லை.

9. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

ஹிஹி, தியேட்டரில்??? அது ஆச்சு வருஷக் கணக்காய்! மத்தபடி தொலைக்காட்சியில் என்றால்,Black Wednesday?? படம் பேர் சரியா நினைவில் இல்லை, நஸ்ருதீன் ஷா நடிச்சது. தீவிரவாதம் பற்றிய ஒரு படம். அருமையான படம். அந்த முஸ்லீம் போலீஸ் அதிகாரியாய் நடிச்சது யாரு?? அற்புதமான நடிப்பு. வாழ்ந்திருக்கார். அப்புறமாய் ஒரு இத்தாலியன் படம் தற்செயலாய்க் காண நேர்ந்தது. முசோலினி காலத்தில் ஒரு யூதப் பெண்ணை மணந்து ஒரு குழந்தையும் பெற்றுக் கொண்ட ஒரு கிறிஸ்துவர் எவ்வாறு அந்தப் பெண்ணையும் விடாமல், குழந்தையையும் விடாமல் இத்தாலியில் இருந்து தப்பிக்க முயல்கின்றார் என்பது பற்றி. கண்ணில் ரத்தமே வந்துவிட்டது. அப்புறமா ஜெயா தொலைக்காட்சியில் போட்ட "குட்டி" படம். அந்தப் பெண் குட்டியாகவே வாழ்ந்திருந்தாள். எம்.என்.ராஜமும் கொடுமைக்காரப் பாட்டியாக நன்றாய் நடித்திருந்தார். மற்றபடி காமெடிப் படங்கள் மட்டுமே பிடிக்கும். சில சமயம் கதைக் களம் நன்றாக இருந்தால் இம்மாதிரிப் படங்கள் பார்ப்பதுண்டு.

20. கடைசியாகப் பார்த்த படம்?

இப்போப் பார்க்கிறது ஜங்கிள் புக், மிஸ்டர் பீன், பவன்புத்ரா ஹனுமான், ராமாயணா, டாம் அண்ட் ஜெரி தான்! நம்மளை மாதிரிக் குழந்தைங்க வேறே என்ன பார்ப்பாங்க?? சொல்லுங்க! போகோ தவிர வேறே சானலே பார்க்கிறதில்லை, போடறதே இல்லை வீட்டில்! :))))))))))))))

21. பிடித்த பருவகாலம் எது?

குளிர்காலம் தான், அதுவும் மிதமான குளிர்காலம்.

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

துக்ளக், கல்கி, தவிர, மத்தப் புத்தகங்கள் அவ்வப்போது பதிவுகளில் எழுதத் தேடுதலுக்காகப் படிக்கிறேன். ஆழ்ந்து படிச்சுக் கொஞ்ச நாட்கள் ஆகுது. நேரம் கிடைக்கிறதில்லை. :( இன்னும் சில நாட்கள் ஆகும். நண்பர் ஒருத்தர் பரிசாய் அளித்த திருவாசகம் அவ்வப்போது பார்ப்பேன். ஆழ்ந்து படிக்க ஆரம்பிக்கலை இன்னும்.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

அப்படி எல்லாம் மாத்தறதில்லை. ஒரே படம் தான்! பொண்ணோ, பையரோ வந்திருக்கும்போது அவங்க இஷ்டத்துக்கு மாத்திடுவாங்க! அப்போவும் அதுவே நீடிக்கும்.

24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடிச்ச சத்தம், இனிமையான சங்கீதம். சங்கீதம் கேட்டுக் கொண்டே வேலைகள் செய்யறது தான் ரொம்பப் பிடிக்கும். நான் வீட்டில் இருந்தாலே இசை கேட்டுக் கொண்டிருக்கும். ஆனால் இப்போ பக்கத்திலே வந்திருக்கும் அடுக்கு மாடிக் குடி இருப்பில் உள்ள சில வீடுகளில் மாரியம்மன் கோயில் போல பாடல்களைச் சத்தமாய் ஒலிக்க விடுவதால், என்னோட இசை கேட்கும் இன்பமே போயிடுச்சு. இது தான் பிடிக்காததும் கூட! சொல்லவும் முடியலை! என்ன செய்யறது???


25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

யு.எஸ். தான். அதிக பட்ச உயரம் என்றால் கைலை சென்றது தான்.

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

திறமையே இல்லை, தனித் திறமைக்கு எங்கே போறது??? ஆனால் ஒரு காலத்தில் தையல் மிஷினில் எம்ப்ராய்டரி செய்வதில் தேர்ச்சி பெற்றிருந்தேன். 2003--ம் வருஷம் இனிமேல் கால்களால் மிஷினை ஓட்டித் தைக்க முடியாது என்பதால் தவிர்க்க முடியாமல் தையல் மிஷினை விற்று விட்டோம். இன்னமும் அந்த வருத்தம் உண்டு. ம்ம்ம்ம்ம்??? பையர் திடீர்னு அமெரிக்கா போய்ப் படிக்கப் போறேன்னு அறிவிப்புக் கொடுத்ததும், அவருக்காக இங்கே சென்னையில் சரத் கன்சல்டண்ட்ஸ் என்பவர்களின் ஆலோசனையில் வங்கிக் கடன் உள்பட அனைத்து வேலைகளையும் தனியே திறம்பட முடிச்சிருக்கேன். பையர் அப்போ பரோடாவிலே, கணவர் ஊட்டியிலே, பொண்ணு பாஸ்டனிலே, நான் மட்டும் இங்கே இருந்து மூன்று மாதங்கள் அலைந்து, திரிந்து எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொடுத்தேன். அனைத்துப் பேப்பர்களையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தயார் செய்து அனுப்பி வைத்ததால் பையரால் மும்பையில் விசா பேட்டிக்குச் செல்ல வசதியாக இருந்தது. முதல் பேட்டியிலேயே விசாவும் கிடைச்சது.

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

சென்னைத் தெருக்களும், அதில் குவிந்து கிடக்கும் குப்பை மலைகளும், ஏன் இதை ஒருவருமே கண்டுக்க மாட்டேங்கறாங்கனு புரியலை. அதுவும் எங்க பக்கத்துக் குடியிருப்புக்காரங்க எங்க வீட்டுப் பக்கம் தான் குப்பை கொட்டுவோம்னு பிடிவாதம். அதை மாத்தறதுக்குள்ளே ரொம்பப் பாடுபட்டோம். ஆனால் அவங்க பக்கம் குப்பைத் தொட்டியை வழிய விடுவதால் குப்பைகள் பறந்து தெருப்பூராவும். சுத்தம் ஏன் மறுக்கப் படுகின்றது? இது தான் புரியாத விஷயம் ஆக இருக்கின்றது, சுத்தமும், சுகாதாரமும் மறுக்கப் படுவது ஏற்க முடியாத விஷயமுமாக உள்ளது. மோசமான சாலைகள். அதுவும் எங்க அம்பத்தூர் பகுதியில் ஆசியாவிலேயே அதிக வருமானம் கிட்டும் முனிசிபாலிட்டி அம்பத்தூர் முனிசிபாலிட்டி தான். ஆனால் சாலைகளும், தெருக்களுமோ???? கைலையின் மேடு, பள்ளங்கள் கூட இதன் அருகே வரமுடியாதோனு தோணுது. எப்போச் சரியாகும்??? இந்த மாதிரி அடிப்படை வசதிகள், அதுவும் அரசு முனைந்து தானாகச் செய்யவேண்டியவைக்கே கெஞ்சும் நிலைமை ஏற்பட்டிருப்பதை முற்றிலும் ஏற்கமுடியலை. நகராட்சி உறுப்பினர்களிடம் சாலை வசதிக்கும், குடிநீர் வசதிக்கும், சுகாதார வசதிக்கும் போராடிப் பார்த்தாச்சு. முடியலை!

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

நல்லதா கெட்டதா தெரியாது, வெளிப்படையாகப் பேசும் வழக்கம். இதனால் நிறையப் பிரச்னை வந்திருக்கு. என் கணவரும் இதைத் தான் என்னிடம் உள்ள குறையாச் சொல்லுவார். ஆனால் இப்போ குறைச்சிருக்கேன். என்றாலும் பொய்யும் சொல்லாமல், உண்மையும் சொல்லாமல் சமாளிக்கும்போது சில சமயம் கஷ்டமாயே இருக்கு. அநேகமாய்ச் சிரிச்சுச் சமாளிச்சுடறேன்.

29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலா தலம்?

மலையும், மலை சார்ந்த காடுகளும். குறிப்பாய் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் எல்லாப் பகுதிகளும். ஊட்டி. அரவங்காட்டிலே நாங்க இருந்த அலுவலகக் குடி இருப்பின் முற்றத்தில் மேகங்கள் தவழ்ந்து விளையாடும். சமைக்கும்போது முற்றத்தில் இறங்கின மேகங்கள் சமையலறைக்கு வந்து, "என்ன சமையல்?"னு கேட்டுட்டுப் போகும்.

30. எப்படி இருக்கணும்ன்னு ஆசை?

இப்போ இருக்கிறதே போதுமே. எத்தனை பிறவி எடுத்தாலும் இப்போ இருக்கிறாப்போல் இருந்தாலே போதுமே! More than enough!

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?

கணவர் இல்லாமல்?? சான்ஸே இல்லை! அநேகமாய்ப் பதிவுகள் எழுதறதும், பின்னூட்டங்கள் வரது, நான் கொடுக்கும் பதில்னு எல்லாமே அவருக்குத் தெரியும். நண்பர் வட்டம் கூட அனைவரையும் அவருக்கும் நல்லாவே தெரியும். அப்படி எதுவும் செய்ய விரும்பலை. நான் இல்லாமல் எந்த முக்கியக் காரியமும் அவரும் செய்ய மாட்டார்!


32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க.
இப்போ நான் வாழ்கிற வாழ்க்கையே நல்லா இருக்கு. இப்படியே இருந்தாலே போதும். எனக்கு என்ன கிடைக்கணுமோ அது கூடவும் இல்லாமல் குறையவும் இல்லாமல் தடையும் இல்லாமல் கிடைச்சுட்டு இருக்கு. இதுவே அதிகம். மற்றபடி உலகில் துன்புறும் அனைவருக்குமாய்ப் பிரார்த்திக்கிறேன். உலகில் அனைவருக்கும் நல்வாழ்க்கை கிட்டவும், அமைதியாகவும், மன நிம்மதியுடனும் வாழப் பிரார்த்திக்கிறேன். வாழ்க! வளர்க! முக்கியமாய் அனைவரும் குப்பைகள் இல்லாத, மேடு, பள்ளங்கள்(வாழ்க்கையில் ஏற்பட்டால் அது வேறே) இல்லாத நல்ல சாலைகளில், தெருக்களில் அனைத்து அடிப்படை வசதிகளோடும், முக்கியமாய்க் குடிநீர் வசதியோடும் குடி இருக்கப் பிரார்த்திக்கிறேன்.

Tuesday, June 23, 2009

மழை வேண்டிப் பிரார்த்திப்போம்!

இந்த வருஷம் பருவமழை பொய்த்து விட்டது எனச் சொல்லுகின்றார்கள். கேரளத்திலும், கர்நாடகத்திலும் பெய்யவேண்டிய அளவுக்கு மழை பொழியவில்லை. சென்ற மாதம் வந்த ஆய்லா புயல் அனைத்து ஈரப் பதத்தையும் தன்னுடன் எடுத்துச் சென்றுவிட்டதால் மழை பொழியவில்லை என்றும் வெப்ப அலை அதிகம் இருக்கும் எனவும் சொல்லுகின்றனர். வெயிலும் தேவைதான். ஆனால் ஆதாரமான நீர் இல்லாமல் என்ன செய்வது? இப்போவே சென்னையில் பல இடங்களிலும் குடிநீர்த் தட்டுப்பாடு. சென்னைக்குக் குடிநீர் ஆதாரமான வீராணம் ஏரியும், புழலேரியும் வறண்டு போயாச்சு. மழையினால் சென்னைத் தெருக்களின் நிலைமை இன்னும் மோசமாகத் தான் போகும். அதைப் பார்த்தால் தண்ணீருக்குத் தட்டுப்பாடு வந்துவிடும். பெய்யும் மழை நீரைச் சேமிக்க அரசு கடுமையாகக் கட்டளை பிறப்பிக்கவேண்டும். இதன் பலன்களையும் ஏற்கெனவே பார்த்தாயிற்று. பொதுமக்களில் பலரும் தினம் தினம் அக்னியில் வெந்து போவதைப் போல சூரியனின் உஷ்ணத் தாக்குதலால் பலரும் தாக்குப் பிடிக்கமுடியாமல் தவிக்கின்றனர். ஒரு சிலர் இறந்தும் போயிருக்கின்றனர். உஷ்ணத்தின் அளவு என்னவோ உஷ்ணமானியின் மூலம் பார்த்தால் குறைச்சலாய்த் தான் தெரிகின்றது. ஆனால் சீதோஷ்ணத்தில் மழை இல்லாத காரணத்தால் குளிர்ந்த தன்மையும், ஈரப் பதமும் தெரியவில்லை. ஆகவே வெப்பம் அதிகம் உணரப் படுகின்றது. இந்நிலையில் கடவுளை வேண்டுவதைத் தவிர வேறு வழி இல்லை. மழை வேண்டிப் பிரார்த்திப்போம். பெய்ய வேண்டிய அளவு மழையைத் தாமதமாகவேனும் கொடுக்க அந்த வருணனை வேண்டுவோம்.

"திக்குகள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்கமலைகள் உடைந்து -வெள்ளம்
பாயுது பாயுது பாயுது - தாம்தரிகிட
தக்கத் ததுங்கிட தித்தோம் - அண்டம்
சாயுது சாயுது சாயுது - பேய் கொண்டு
தக்கை யடிக்குது காற்று - தக்கத்
தாம் தரிகிட தாம் தரிகிட தாம் தரிகிட தாம் தரிகிட


வெட்டியடிக்குது மின்னல் - கடல்
வீரத்திரை கொண்டு விண்ணை யிடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம் -கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத் திசையும் இடிய - மழை
எங்ஙனம் வந்ததடா, தம்பி வீரா!


அண்டம் குலுங்குது, தம்பி - தலை
ஆயிரந்தூக்கிய சேடனும் பேய் போல்
மிண்டிக் குதித்திடுகின்றான் - திசை
வெற்புக் குதிக்குது: வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடுகின்றார் -என்ன
தெய்வீகக் காட்சியைக் கண் முன்பு கண்டோம்
கண்டோம், கண்டோம் கண்டோம் - இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!"


அனைவரும் காணப் பிரார்த்திக்கின்றோம். பிரார்த்திக்கவும் வேண்டுகின்றோம்.

Thursday, June 18, 2009

பதிவுகள் தாமதம் ஆவதற்கு மன்னிக்கவும்!

படிக்கிறவங்க இருக்காங்களா இல்லையானு தெரியலை. ஆனால் பின் தொடருபவர்கள் எண்ணிக்கை 35-ல் இருந்து 34 ஆகக் குறைந்துள்ளது. ஆகவே பதிவுகள் தாமதம் ஆவது தான் காரணமோனு தோணுது. கொஞ்ச நாட்கள் இப்படித் தான் இருக்கும். பாகவதம், பாரதம் ஆகியவற்றிலிருந்து விலகாமல், அதை ஒட்டியே கொண்டு போகவேண்டும். அதே சமயம் திரு முன்ஷிஜி எழுதி இருப்பதையும் மாற்றாமல், "இது எப்படி முடியும்?" என்ற கேள்விக்கும் விடை கண்டு பிடித்து எழுதுவது, படங்கள் கிடைக்கத் தாமதம், வீட்டில் அடுத்தடுத்து விருந்தினர் வருகை, உடல் நலம் மதிய வேளையில் கணினியில் உட்கார விடாமல் செய்வது, நீண்ட நேர மின் தடை, இணையம் வேலை செய்யாமை போன்ற காரணங்களால் தாமதம். ஜூலை மாசம் முடிய இந்தத் தாமதம் இருக்கும். அதுக்கு அப்புறமாய்க் கண்ணன் கதையை ஒரே ஓட்டமாய்த் தான் ஓட்ட வேண்டி இருக்கும். முக்கிய நிகழ்ச்சிகள் எல்லாம் அப்புறம் தானே வருது! ஆர்வம் உள்ளவர்கள் காத்திருபபார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. நன்றி.

Wednesday, June 17, 2009

கண்ணன் வருவான்! கதை சொல்லுவான்! காளிங்க நர்த்தனம்!

நஞ்சுமிழ்நாகம்கிடந்த நல்பொய்கைபுக்கு
அஞ்சப்பணத்தின்மேல் பாய்ந்திட்டுஅருள்செய்த
அஞ்சனவண்ணனைப்பாடிப்பற
அசோதைதன்சிங்கத்தைப்பாடிப்பற. 5.

கோவர்த்தனகிரியின் ஒரு பக்கம் ஒரு பெரிய மடு இருந்தது. அதில் நிறையத் தண்ணீர் இருக்கும். தண்ணீர் இருப்பதால் ஆய்ச் சிறுவர்கள் தாங்கள் மேய்த்த மாடுகளை அங்கே அழைத்துச் சென்று நீர் அருந்த வைப்பதுண்டு. ஆனால் அதில் நீர் அருந்தின மாடுகள் உடனே இறந்துவிடும். காரணம் புரியாமல் திகைத்த ஆய்ச்சிறுவர்களுக்குப் பின்னர் தெரிய வந்தது அதில் கொடிய விஷ நாகம் ஒன்று இருக்கின்றது எனவும், அது தான் தன் விஷத்தைக் கக்குகின்றது என்றும் புரிந்தது.. சுற்று வட்டாரத்து மக்கள் அந்த நாகத்தைக் காலியன் என்றே அழைத்து வந்தனர். அந்தக் காலியன் அவ்வப்போது கக்கும் கொடிய விஷத்தால் அந்த நீரை அருந்தும் மாடு, கன்றுகள் இறந்து கொண்டிருந்தன. காளியன்பொய்கைகலங்கப்பாய்ந்திட்டு அவன்
நீள்முடியைந்திலும்நின்று நடம்செய்து
மீளஅவனுக்கு அருள்செய்தவித்தகன்
தோள்வலிவீரமேபாடிப்பற
தூமணிவண்ணனைப்பாடிப்பற. 7


கண்ணன் இதைத் தெரிந்து கொண்டான். கண்ணனுக்கு இந்தப் பாம்புகளிடம் எப்போதுமே பயம் இருந்ததில்லை. ஒருமுறை ஒரு பெரிய மலைப்பாம்பு மாடு, கன்றுகளைத் தின்ன வர, கூட வந்த சிறுவர்கள் அனைவரும் பயந்து ஓட, கண்ணன் சற்றும் கலங்காமல் அந்தப் பாம்பை நெருங்கினான். அவன் கிட்டே வருவதைக் கண்ட மலைப்பாம்பு தன் வாயைத் திறக்கக் கையில் மறைத்து வைத்திருந்த கற்களை அதன் வாயில் கண்ணன் போட்டுவிட, ஏதோ உணவு என நினைத்த பாம்பு அதை விழுங்கப் பின்னர் இறந்தது. ஆகவே இப்போதும் இந்தக் காலியனிடமிருந்து ஆய்ப்பாடிச் சிறுவர்களையும் மாடு, கன்றுகளையும் காப்பது தன் பொறுப்பு எனக் கண்ணன் நினைத்தான்.

கண்ணனுக்கு ஏற்ற வகையில் பலராமனும் நன்கு வளர்ந்து அதீத பலத்துடன் இருந்தான். பலராமனின் கை முட்டி ஒரு சுத்தியல் போல வலுவுடன் மற்றவர் நெற்றியையோ, மண்டையையோ தாக்கும் வல்லமை பெற்றிருந்தது. இருவரும் சேர்ந்து தங்களைக்கொல்லவேண்டும் என்ற எண்ணத்தோடு கம்சன் அனுப்பும் நபர்களைத் தங்களை அறியாமலேயே எதிர்த்து வெற்றி கொண்டு வந்தனர். நந்தனின் மகன் கண்ணனின் இந்த அணுகுமுறை பற்றியும், பலராமன் வீரம் பற்றியும் பிருந்தாவனத்திலிருந்து பல செவிவழிச் செய்திகள் மதுரா நகரைப் போய் அடைந்தன. இப்போது காலியன் குடியிருக்கும் விஷப் பொய்கையில் கண்ணன் காலியனை வீழ்த்த நினைக்கின்றான்.

என்றும்போல் அன்றும் மாடுகளை மேய்த்துவிட்டு அந்தப் பொய்கையில் நீர் அருந்த மாடுகளை அழைத்துச் செல்லாமல் வேறு நல்ல நீர் இருக்குமிடம் செல்ல மற்றப் பையன்கள் யோசித்த வேளையில் கண்ணன் விஷப் பொய்கைக்குச் சென்றான். மற்றப் பையன்கள் பயந்து நடுங்க, கண்ணன் சற்றும் தயக்கம் இல்லாமல் பொய்கையைக் கூர்ந்து கவனித்தான். ப்ளாப்! ப்ளாப்! சத்தம் தொடர்ந்தது. பொய்கையின் நடுவில் ஆழமான பகுதியில் இருந்து முதலில் ஒரு வால் போன்ற பகுதி தென்பட்டது. மெல்ல மெல்ல தலையைத் தூக்கினான் காலியன் என்ற அந்த விஷ நாகம். தன் தலையைத் தூக்கிக் கரையில் இருக்கும் அனைவரையும் தனக்கு விருந்து என்ற மகிழ்வோடு பார்த்தானோ காலியன்?? கண்ணன் காலியனையே உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தான். சுற்றிலும் இருந்தவர்கள் என்ன நடக்கிறது என ஊகித்துச் செயல்படுவதற்குள் கண்ணன் மடுவிலே பாய்ந்தான்.

வீல்,என்ற சப்தம். ஐயோ, என்ன?? என்ன ஆச்சு?? கண்ணன் எங்கே?? கண்ணா? கண்ணா?? ஒரே கூக்குரல். இதற்கு நடுவில் சில பையன்கள் மயங்கி விழ, ஸ்ரீதாமாவும், உத்தவனும் விருந்தாவனம் நோக்கி ஓட ஆரம்பித்தனர். உடனே சென்று நந்தனிடமும், யசோதா அம்மாவிடமும் சொல்லவேண்டும். ஆனால் அதுக்குள்ளே கண்ணன், கண்ணன்/// ஐயோ அவனுக்கு ஏதேனும் ஆகிவிட்டால்??? இருவரும் தலைகால் புரியாமல் ஓடினார்கள். இங்கே மடுவில்....... மடுவில் குதித்த கண்ணனுக்குக் காலியன் இருக்குமிடம் நோக்கி நீந்துவது ஒரு கஷ்டமான வேலையாகவே இருந்தது. நீர் ரொம்பவும் அசுத்தமாய் இருந்ததோடு அல்லாமல் பல்வேறுவிதமான நீர்ச் செடிகளும் கன்னா பின்னாவென முளைத்துக் கையிலும், காலிலும் மாட்டிக் கொண்டு, உடலில் சுற்றிக் கொண்டு கண்ணனை முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது. காலியன் தன்னிடத்திற்கு வந்திருக்கும் புதிய வரவை வரவேற்க முடியாமல் சீற ஆரம்பித்தான். வரட்டும், வரட்டும், வச்சுக்கறேன் உன்னை என்பது போல், சீறிவிட்டு வாலால் நீரை ஓங்கி ஓங்கி அடித்தான். நீர் கலங்கித் தெளிந்தது. கண்ணனை நோக்கிக் காலியன் முன்னேற ஆரம்பிக்க இறங்கும்போதேக் கையில் ஒரு பெரிய கயிற்றுடன் சென்றிருந்த கண்ணன் அந்தக் கயிற்றில் ஒரு சுருக்குப் போட்டு வீச, காலியனின் தலை படத்தோடு சேர்ந்து அந்தச் சுருக்கில் மாட்டிக் கொண்டது. காலியன் திணற ஆரம்பித்தான்.

விருந்தாவனம் சென்ற ஸ்ரீதாமாவும் உத்தவனும் அங்கே போய்ச் சொல்லுவதற்குள், மற்றச் சில பையன்கள் மூலம் விஷயம் தெரிந்து கொண்ட ராதையோ கண்ணனின் இந்தத் தற்கொலை முயற்சியால் அதிர்ச்சி அடைந்தாள். அவள் இதயமே வெடித்துச் சிதறிவிட்டதோ என்றே தோன்றியது அவளுக்கு. என்ன செய்கின்றோம், எங்கே இருக்கின்றோம் என்பதே புரியவில்லை. ஒரே ஓட்டம் தான். கோவர்த்தன மலையில் காலியனின் விஷப் பொய்கை இருக்குமிடம் நோக்கி ஓடினாள் ராதை. வேடுவனால் துரத்தப்படும் மான் உயிருக்குப் பயந்து ஓடும் ஓட்டத்தில் கூட வேகம் கம்மியாய் இருந்திருக்குமோ??? ராதை மடுவை அடைந்து மடுவின் உள்ளே பார்த்தால் மடுவில் நட்ட நடுவே ஒரு கையில் பாம்பின் வாலும் மற்றக் கையினால் அதன் வாயோடு கூடிய படத்தைக் கட்டிய கயிற்றால் பாம்பை அடக்கிக் கொண்டும் திணறிக் கொண்டிருப்பது போல் காட்சி அளித்த கண்ணனைக் கண்டாள். "கானாஆஆஆஆஆஆஆஆ!" அடுத்த கணம் ராதை மயங்கிக் கீழே விழுந்தாள். சுற்றி நின்றிருந்த மற்றவர் திகைத்தனர். விஷயம் தெரிந்து ஓடோடியும் வந்த நந்தனும், யசோதையும் ராதையின் நிலையைக் கண்டு செய்வதறியாது திகைத்தனர்.

Monday, June 15, 2009

லாவண்யாவின் அறிவிப்பு! சிறுகதைப் போட்டி!

Sunday, June 14, 2009
சிறுகதைப் போட்டி - பரிசுகள் பற்றிய அறிவிப்பு

என் இனிய வலைப்பூ தோழ/தோழியர்க்கு,

சில நாட்களுக்கு முன் ஒரு சிறுகதைப் போட்டிக்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தேன். அப்போட்டிக்கு ஆர்வமாக கதைகள் வந்து சேர்ந்த‌ வ‌ண்ண‌ம் இருக்கின்ற‌ன‌. எழுதும் அனைவரும் தங்கள் கதைகளை அவர்களுடைய வலையிலும் வெளியிட்டு கொள்ளலாம் மறக்காமல் உயிரோடை சிறுகதைப் போட்டிக்கு என்று அறிவித்து வெளியிடவும்.

பரிசுக்கு தெரிவு செய்யும் கதைகளைக்கு
முதல் பரிசாக இந்திய ரூபாய் 2500 வழங்கப்படும்.
இரண்டாம் பரிசு ரூபாய் 2000 ஆகும்.
மூன்றாம் பரிசு ரூபாய் 1500.

நடுவர்கள் முடிவே இறுதியானது. ஒரே பரிசை பலகதைகள் வெல்லும் பட்சம் பரிசு தொகை பகிர்ந்தளிக்கபடும். பரிசுத் தொகை புத்தகங்களாக வழங்கப்படும். வெளிநாட்டில் இருப்பவர் பரிசை இந்திய முகவரி அளித்து பெற்றுக் கொள்ளலாம்.

ஜீலை மாதம் முதல் வாரத்தில் போட்டிக்கு வந்திருக்கும் கதைகளில் பட்டியல் வெளியிட பெறும். தேர்வான கதைக்கான அறிவிப்பும் அதே வாரம் வெளியிட பெறும்.



மேலதிகத் தகவல்களுக்கு இங்கே பார்க்கவும்.

நேயர் விருப்பங்கள் சில! :D

பைரவர் பற்றி எழுதச் சொல்லி வல்லி சிம்ஹன் கேட்டார்கள். கீழே கொடுத்திருப்பது சிதம்பர ரகசியத்தில் சிதம்பரம் சித்சபையின் உள்ளே நடராஜருடன் காக்ஷி அளிக்கும் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் பற்றியது. அதன் பின்னர் பைரவர் பற்றிய பொதுவான குறிப்புகளும், பைரவ அஷ்டகமும். அனைவரும் பயன் பெறும்படி வேண்டிக் கொள்கின்றேன்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&



ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்: சித் சபையின் உள்ளே சிவகாம சுந்தரிக்கு இடப்பக்கமாய் மேற்கே பார்த்துக் கொண்டு ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார். எல்லாச் சிவன் கோவில்களிலும் பைரவருக்குத் தனிச் சன்னிதி உண்டு. ஆனால் இங்கேயோ நடராஜரின் பக்கத்திலேயே இருக்கிறார். இவருடைய வாகனம் ஆன நாய் ஆனது சிவனிற்குக் குடை பிடிக்கும் கணங்களில் ஒருவரான குண்டோதரனின் மறு பிறவி எனச் சொல்லப் படுகிறது. நடராஜருக்குப் பூஜை நடக்கும் கால பூஜையில் ஒருமுறை இவருக்கும் அபிஷேகம், ஆராதனை செய்யப் படுகிறது. நடராஜ தரிசனத்துக்கும், சிதம்பர ரகசிய தரிசனத்துக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் இவருடைய தரிசனத்துக்கும் கொடுக்கப் படுகிறது.

எல்லாச் சிவன் கோவில்களிலும் காலபைரவர் தான் காவல் தெய்
வம். சிவனால் நியமிக்கப் பட்ட இவர் சிவனின் அவதாரங்களில் ஒன்றாகவே கருதப் படுகிறார். முன்னாட்களில் கோவிலைப் பூட்டிச் சாவியைக் கால பைரவர் சன்னிதியில் வைத்துவிட்டுப் போய்விடுவார்கள் எனச் சொல்லப் படுகிறது. சிதம்பரம் கோவிலிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன் தினசரி பூஜை முடிந்ததும், இரவில் கால பைரவர் சந்நிதியில் அன்றைய பூஜை செய்யும் தீட்சிதர் ஒரு தாமிரத் தட்டை வைத்து விட்டு வருவார் எனவும், காலையில் அது தங்கமாய் மாறி இருக்கும் எனவும் நம்பப் படுகிறது. அந்தத் தங்கத் தட்டை வைத்துக் கொண்டுதான் தீட்சிதர்கள் தங்கள் வாழ்நாள் செலவிற்கு வழி பார்த்துக் கொண்டதாயும் சொல்லப் படுகிறது. இந்த செவிவழிச் செய்திகளால்தான் இந்த பைரவருக்கு "ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்" என்ற பெயரும் ஏற்பட்டது என்று சொல்கிறார்கள். எப்போது நின்றது என்று நிச்சயமாய்க் கூற முடியாத கால கட்டத்திலேயே இந்தப் பழக்கம் நின்று விட்டதாயும் சொல்லப் படுகிறது. இந்த பைரவர் "க்ஷேத்திர பாலகர்" எனவும் சொல்லப் படுகிறார்.

சிவனின் அம்சமாய்ச் சொல்லப் படும் இவரே ஆணவத்துடன் இருந்த பிரம்மாவின் தலையைக் கொய்தார் எனவும் சொல்லப் படுகின்றது. இவரைப் பிரார்த்தித்தால் தீராத கடன்கள் தீரும் என்றும் சொல்கின்றனர். காசிமாநகரின் க்ஷேத்திர பாலகர் பைரவர் தான். காசி நகர் முழுதும் அவரே காவல் காக்கின்றார் என்று ஐதீகம். காசி யாத்திரை மேற்கொள்ளுபவர்கள் கடைசியில் பைரவர் கோயிலுக்குச் சென்று அவரைத் தரிசித்து அங்கே காசிக்கயிறு பெற்றுக் கொண்டு பின்னரே திரும்ப வேண்டும் என்றும் யாத்திரை பைரவர் தரிசனம் செய்யாமல் நிறைவேறாது எனவும் ஐதீகம்.

பைரவர் நிர்வாணமாய் நாயுடன் காவல் காக்கும் கோலத்தில் இருப்பார். எப்போதும் சிரித்த முகம். ஆனால் துஷ்டர்களைத் தண்டிக்கவும் தண்டிப்பார். தண்டனை கடுமையாகவே கொடுப்பார் என்றும் சொல்லுவார்கள். இரவு வேளைகளில் கோயிலின் பிராஹாரத்தை பைரவரே தன் துணையான நாயுடன் சுற்றி வந்து காவல் காப்பார் என்றும் நம்பப் படுகின்றது. நான் பார்த்த பைரவர்களிலேயே பட்டீஸ்வரம் கோயிலின் பைரவர் நிஜமான ஒரு மனிதன் போலவே பார்த்தால் ஒரு கணம் சட்டுனு மனதில் திடுக்கிட்டுப் போகும் வண்ணம் ஜீவனுடன் விளங்குகின்றார். பட்டீஸ்வரம் சென்றபோது திரும்ப இருந்த எங்களை குருக்கள் அழைத்து பைரவரைத் தரிசனம் செய்ய வைத்தார். கீழே பைரவ அஷ்டகம் வடமொழியிலும், தமிழிலும் கொடுத்துள்ளேன். இதைத் தினமும் படித்து வந்தால் தீராத கடன்கள் தீரும். கையில் பணம் இல்லையே என நினைத்து வருந்தும்போது குறைந்த அளவுக்கான தேவைக்காவது பணம் கிடைக்க்ம் என ஆத்தீகர்களின் நம்பிக்கை.



ஸ்ரீ காலபைரவ பஞ்சரத்னம்
======================

கட்கம் கபாலம் டமருகம் த்ரிசூலம்
ஹஸ்தாம்புஜே ஸ்ந்நதம் த்ரிணேத்ரம்
திகம்பரம் பஸ்ம விபூஷிதாங்கம்
நமாம்யஹம் பைரவமிந்துசூடம்

கவித்வதம் ஸத்வரமேவ மோதான்
நதாலேய ஸம்பு மனோபிராமம்
நமாமி யானீக்ருத ஸார மேயம்
பவாப்தி பாரம் கம்யந்த மாஸ¥

ஜராதி துக்கௌக விபேத தக்ஷம்
விராகி சமஸேவ்ய பாதாரவிந்தம்
நரபதிபத்வ ப்ரதமாஸ¥ நந்த்ரே
ஸ¥ராதிபம் பைரவ மானதோஸ்மி

ஸமாதி ஸம்பத் ப்ரதமான தேப்யோ
ரமா தவாத்யாசித பாதபத்மம்
ஸமாதி நிஷ்டை ஸ்தரஸாதிகம்யம்
நமாம்யஹம் பைரவமாதிநாதம்

கிராமகம்யம் மனஸாபி தூரம்
சராசாஸ்ய ப்ரபாவதி ஹேதும்
கராக்ஷிபச் சூன்ய மாதாபிரம்யம்
பராவரம் பைரவமான தோஸ்மி


>ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் =========================== தனந்தரும் வயிரவன் தளிரடி
>பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும் மனந் திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்வுகள்
>வந்து விடும் சினந்தவிர்த் தன்னையின் சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனே தனக்கிலை யீடு
>யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (1) வாழ்வினில் வளந்தர வையகம்
>நடந்தான் வாரியே வழங்கிடுவான் தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென
>வந்திடுவான் காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான் தனக்கிலை யீடு
>யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (2) முழுநில வதனில் முறையொடு
>பூஜைகள் முடித்திட அருளிடுவான் உழுதவன்விதைப்பான் உடைமைகள் காப்பான் உயர்வுறச்
>செய்திடுவான் முழுமலர்த் தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான் தனக்கிலை யீடு யாருமே
>என்பான் தனமழை பெய்திடுவான் (3) நான்மறை ஓதுவார் நடுவினில்
>இருப்பான் நான்முகன் நானென்பான் தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள்
>நிறைத்திடுவான் வான்மழை எனவே வளங்களைப்பொழிவான் வாழ்த்திட வாழ்த்திடுவான் தனக்கிலை யீடு
>யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (4) பூதங்கள் யாவும் தனக்குள்ளே
>வைப்பான் பூரணன் நான் என்பான் நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான்
>காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான் தனக்கிலை யீடு யாருமே
>என்பான் தனமழை பெய்திடுவான் (5) பொழில்களில் மணப்பான் பூசைகள்
>ஏற்பான் பொன்குடம் ஏந்திடுவான் கழல்களில் தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான்
>நிழல்தரும் கற்பகம் நினைத்திடபொழிந்திடும் நின்மலன் நானென்பான் தனக்கிலை யீடு யாருமே
>என்பான் தனமழை பெய்திடுவான் (6) சதுர்முகன் ஆணவத் தலையினைக்
>கொய்தான் சத்தொடு சித்தானான் புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம்
>செய்யென்றான் பதரினைக் குவித்து செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான் தனக்கிலை யீடு
>யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (7) ஜெய ஜெய வடுக நாதனே
>சரணம் வந்தருள் செய்திடுவாய் ஜெய ஜெய ஷேத்திர பாலனே சரணம் ஜெயங்களைத் தந்திடுவாய்
>ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா செல்வங்கள் தந்திடுவாய் தனக்கிலை யீடு யாருமே
>என்பான் தனமழை பெய்திடுவான் (8)

கீழே இருப்பவை ஷைலஜாவுக்காகப் பட்டீஸ்வரம் பற்றிய குறிப்புகள்.



கும்பகோணத்தின் புறநகர்ப் பகுதியாக இன்று மாறி இருக்கும் பட்டீஸ்வரம் கும்பகோணம் நகரில் இருந்து சுமார் 7 கி.மீ தூரத்தில் உள்ளது. திருவலஞ்சுழியும், ஸ்வாமிமலையும் போய் விட்டுத் திரும்பும் வழியில் சற்றுத் தென்மேற்கே வந்து பட்டீஸ்வரம் போனோம். காமதேனுவும் அதன் மகள்களான நந்தினியும், பட்டியும் பூஜித்த தலம். அதுவும் பட்டி தன் பாலைப் பொழிந்து பூஜித்த காரணத்தால் அவள் பெயரிலேயே "பட்டீஸ்வரம்" என்ற பெயர் கொண்டது. வடமொழியில் தேனுபுரம் என்ற பெயர் கொண்ட இந்தக் கோயிலின் சுயம்பு லிங்கம் ஆன மூலவர் "தேனுபுரீஸ்வரர்" என்று அழைக்கப் படுகிறார். மார்க்கண்டேயர் பூஜித்த தலமும் கூட. அன்னை ஞானாம்பிகை. வசிஷ்டர் விஸ்வாமித்திரருக்குப் "பிரம்ம ரிஷி"ப் பட்டம் கொடுத்த தலம். மேலும் "திருச் சத்தி முற்றத்தில்" இருந்து வந்த ஞான சம்மந்தப் பெருமானுக்கு இந்தக் கோயில் தேனுபுரீஸ்வரர் ஞானசம்மந்தரை வெயிலின் கொடுமை தாக்காமல் இருக்க முத்துப் பந்தல் அனுப்பி வைத்து இருக்கிறார். ஞானசம்மந்தர் முத்துப் பந்தலில் வரும் அழகைத் தன் கண்ணால் காண வேண்டி நந்தியை விலகி இருக்கும்படித் தேனுபுரீஸ்வரர் பணித்தாராம். திருக்கோயிலின் ஐந்து நந்திகளுமே "சற்றே விலகி இருக்கும் பிள்ளை" களாக இருக்கின்றன. ராமேஸ்வரத்தில் ராமநாதரைப் பிரதிஷ்டை செய்த ராமர் இங்கும் வந்து வில்முனையால் கோடிதீர்த்தத்தை உண்டாக்கி வழிபட்டதாக வரலாறு.

உயர்ந்த பாணமான மூலவரையும், அம்மனையும் நிதானமாகத் தரிசனம் செய்ய முடிகிறது. காரணம் கூட்டம் எல்லாம் துர்க்கை சன்னதியில்தான். திருப்பணி செய்த கோவிந்த தீட்சிதர் சிலையையும் காட்டுகிறார்கள். ஸ்வாமி சன்னதிப் பிரஹாரத்தில் உள்ள பைரவர் சன்னதியின் பைரவர் நிஜமாகவே ஒரு ஆள் உயரத்துக்கு இருக்கிறார். கண்ணையும் கருத்தையும் கவரும் அழகு வாய்ந்த சிற்பம். மற்றக் கோவில்களில் சிறு சிற்பமாகக் காணப்படும் காவல் தெய்வமான பைரவர் இங்கே நிஜமான ஒரு ஆள் போல இருக்கிறார். அந்தச் சன்னிதியின் குருக்கள் எங்களைக் கூப்பிட்டுத் தரிசனம் செய்து வைத்தார்.

வடக்குக் கோபுர வாயிலில் துர்க்கை அம்மன் அருள் பாலிக்கிறாள். இவளும் அண்ணாந்து பார்க்கும் உயரம் கொண்டிருக்கிறாள். பக்தர்கள் கூட்டம் எல்லாம் இங்குதான். தற்சமயம் கோவிலின் நுழைவாயிலே வடக்குக் கோபுர வாயிலாக மாறி விட்டிருக்கிறது.எட்டுக்கைகளுடன் அருள் பாலிக்கும் அன்னை வேண்டியவர்களுக்கு வேண்டியதை அள்ளித் தருகிறாள். அதனால்தான் கூட்டம் தாங்கவில்லை என்கிறார்கள்.

இங்கிருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே "சத்தி முற்றம்" உள்ளது. உண்மையில் திருஞானசம்மந்தர் முதலில் இங்கே வந்துவிட்டுத்தான் தேனுபுரீஸ்வரர் அனுப்பிய முத்துப்பந்தலில் "பட்டீஸ்வரம்" சென்றிருக்கிறார். முத்துப்பந்தல் விழா ஆனி மாதம் நடைபெற்றிருக்கிறது. திருநாவுக்கரசர் இங்கே வந்துவிட்டு தழுவக் கொழுந்தீஸ்வரரை வணங்கிச் சென்ற பின் தான் திருநல்லூர் சென்று திருவடி தீட்சை பெற்றிருக்கிறார்.மனைவியைப் பிரிந்து பாண்டிய நாடு சென்ற புலவர் ஒருவர் நாரையின் மூலம் தூது விட்ட
"நாராய்! நாராய்!, செங்கால் நாராய்!" என்ற பாடலை எழுதிய சத்திமுற்றப்புலவர் இந்த ஊர்தான்.

வேத ஆகமங்களின் பொருள் தெரிய ஆசை கொண்ட அன்னை அண்ணலை வேண்ட அண்ணலும் கூறுகிறார். தன் பக்தியின் மூலம் உலகத்தோர்க்கு "பக்தியே முக்திக்கு வித்து" என உணர்த்த எண்ணிய அன்னை சக்தி வனம் வந்து ஒற்றைக்காலில் கடுந்தவம் செய்கிறாள். அன்னையின் தவத்தையும், பக்தியையும் உலகத்தோர்க்கு உணர்த்த எண்ணிய அண்ணல் அன்னையைச் சோதிக்க எண்ணி அனல் பிழம்பாக வருகிறார். ஞானாம்பிகையான அன்னை தன் ஞானத்தால் வந்தது தன் பதியே என உணர்ந்து அந்தப் பரஞ்சோதியை, எல்லை இல்லாப் பரம்பொருளைத் தன் கைகளால் கட்டிக் குழைய அண்ணல் அன்னைக்கு அருள் பாலிக்கிறார். அன்னை கட்டித் தழுவிய நிலையிலேயே ஒரு தனி சன்னதி மூலவருக்கு இடப்பக்கம் உள்ளது. அதன் பின்னாலேயே அன்னை ஒற்றைக் காலில் தவம் இருந்த கோலத்தையும் கண்டு களிக்கலாம். மூலவர் கருவறையில் "சிவக்கொழுந்தீஸ்வரர்" ஆக அருள் பாலிக்கிறார். திருமேனியில், தீச்சுடர்கள் தெரிகின்றன. தெரியாதவர்கள் குருக்களிடம் கேட்டால் தீப ஆராதனை செய்து காட்டுகிறார். ஆனால் நன்றாகப் பார்க்கும் வண்ணம் மூன்று சுடர்கள் புடைத்துத் தெரிகின்றன. அன்னை பெரியநாயகியாகத் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள்.

திருமணம் ஆகாதவர்களும், விதிவசத்தால் பிரிந்து போன தம்பதியரும் தழுவக்குழைந்த அன்னைக்கும் , ஈசனுக்கும் சிறப்புப் பூஜை செய்து வழிபடுகின்றனர். அன்னை தழுவி முத்தமிட்டதால் "சக்தி முத்தம்" என்பது மருவி "சத்தி முற்றம்" என்று ஆகி இருக்கிறது. எங்கும் காணக் கிடைக்காத இந்தக் காட்சியை நான் பார்க்க வில்லை என்றால் நிச்சயம் வருந்தி இருப்பேன். என்னை விடாப்பிடியாக இழுத்துக் கொண்டு போன என் கணவருக்கும் இந்தக் கோயிலைப் பற்றிச் சொல்லி எங்கள் ஆவலைத் தூண்டி விட்ட ஆட்டோ டிரைவர் ரவிக்கும் தான் என் நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.

இங்கிருந்து வரும் வழியில் தான் தாராசுரம் இருக்கிறது, என்றாலும் நேரம் ஆகிவிட்டபடியால் போக முடியவில்லை. பட்டீஸ்வரத்தில் இருந்து சற்றுத் தூரத்தில் தான் பழையாறையும் இருக்கிறது. கோவில் சீக்கிரம் மூடி விடுவார்கள் என்பதால் இங்கே எல்லாம் போக முடியவில்லை. வரும் வழியில் "சோழன் மாளிகை" என்றபெயரில் ஒரு ஊர் வருகிறது. அங்கே சோழன் மாளிகை இருந்த இடத்தையும், சில வருடங்களுக்கு முன் வரை சுற்றுச்சுவர் மட்டுமாவது இருந்த இடம் தற்சமயம் மண்ணோடு மண்ணாகி விட்டதையும் டிரைவர் காட்டினார்.

Friday, June 12, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்!


நன்மணி மேகலை நங்கை மாரொடு நாள்தொறும்
பொன்மணி மேனி புழுதி யாடித் திரியாமே
கன்மணி நின்றதிர் கா னதரிடைக் கன்றின்பின்
என்மணி வண்ணனைப் போக்கினேன் எல்லே பாவமே 3(பெரியாழ்வார் பாசுரம்)


பறவைகளின் இனிய கீதம் காட்டையே நிறைத்திருந்தது. பல்வேறுவிதமான குரல்களில் பக்ஷிகள் கூக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. காட்டை நோக்கிச் செல்லும் பாதையில் ஹஸ்தின் வீரநடை போட்டுக் கொண்டிருந்தது. பாதையில் நேர் எதிரே சூரியன் தன் தங்கநிறக் கதிர்களால் ஒளியைப் பாரபக்ஷமின்றி வாரி வழங்கிக் கொண்டிருந்தான். கண்ணன், ஹஸ்தினிடம், “ ம், வேகம், பையா, வேகம்! எங்கே ஓடு பார்க்கலாம்!” என்று மிக மிக மென்மையாகக் கூறிக் கொண்டிருந்தான். ஹஸ்தினுக்குப் புரிந்தது போல் வேகமெடுத்தது. ராதை தன் இரு கரங்களாலும் கண்ணனை இறுக்கிக் கட்டிக் கொள்ள, கண்ணன் அவள் கைகளை ஆதரவுடன் பிடித்துக் கொண்டு, தன் கால்களால் ஹஸ்தினை வேகமாய் ஓடும்படி பணித்துச் சிறு உதை கொடுத்தான்.

237 வண்ணக் கருங்குழல் மாதர் வந்துஅலர் தூற்றிட
பண்ணிப் பலசெய்துஇப் பாடி யெங்கும் திரியாமே
கண்ணுக் கினியானைக் கா னதரிடைக் கன்றின்பின்
எண்ணற் கரியானைப் போக்கினேன் எல்லே பாவமே 4

உத்தரவு கிடைத்தது தான் தாமதம், ஹஸ்தின் ஓட ஆரம்பித்தது. வேகமாய் ஓட, ஓட, ராதை இனம் புரியாத உணர்ச்சிக்கு ஆளானாள். மயிர்க்கூச்செறியச் செய்யும் இத்தகைய அனுபவத்தை அவள் இன்றுவரை அனுபவித்ததில்லை. வேகமாய் ஓடின ஹஸ்தினுக்கு மூச்சு இரைக்க ஆரம்பித்தது. ஆனாலும் அதற்கும் இந்த அனுபவம் புதுமையாகவும், இனிமையாகவும் இருந்திருக்கவேண்டும். குன்று ஒன்றின் அருகே இருந்த சமவெளிக்கு வந்ததும், அது தன் ஓட்டத்தை நிறுத்தியது. ராதையும், கண்ணனும் மெதுவாய்க் கீழே இறங்கினார்கள். அவர்கள் இருவரையும் பார்த்த ஹஸ்தின் தனக்கு நேரிட்ட இத்தகையதொரு அனுபவத்துக்கு நன்றி கூறுவது போல் தலையை ஆட்டிவிட்டுப் பக்கத்தில் இருந்த புல்வெளிக்கு மேயச் சென்றது. ராதையும் கண்ணனும் அருகருகே அமர்ந்தனர். இருவருக்கும் ஒரே நேரத்தில் ஒரு விஷயம் சந்தேகம் ஏதுமின்றிப் புரிந்தது. இருவரும் ஒருவர், இனி யார் என்ன முயன்றாலும் இருவரையும் பிரிக்க முடியாது என்பது. வாய்விட்டுப் பேசிக் கொள்ளாமலேயே இருவரும் இந்த உணர்வை உணர்ந்ததோடு அல்லாமல், அது தங்களில் மற்றவருக்கும் தெரிந்திருக்கின்றது என்பதையும் புரிந்து கொண்டார்கள்.

238 அவ்வவ் விடம்புக்கு அவ்வாயர் பெண்டிர்க்கு அணுக்கன
சிந்துரப் பொடிக்கொண்டு சென்னி யப்பித்
திருநாம மிட்டங்கோ ரிலையந் தன்னால்
அந்தர மின்றித் தன்னெறி பங்கியை
அழகிய நேத்திரத் தால ணிந்து
இந்திரன் போல்வரு மாயப் பிள்ளை
எதிர்நின்றங் கினவளை இழவே லென்ன
சந்தியில் நின்று கண்டீர் நங்கை தன்துகி
லொடுசரி வளைகழல் கின்றதே 8

ராதை தன் சேலைத் தலைப்பால் கண்ணன் முகத்தில் முத்து முத்தாய்ப் பூத்திருந்த வியர்வைத் துளிகளை ஒற்றி எடுக்க, கலைந்திருந்த அவள் கூந்தலை கண்ணன் சரி செய்து கொடுத்தான். இவர்கள் இருவரின் உறவையும் பற்றி விருந்தாவனத்தில் என்ன பேசிக் கொள்ளுகின்றார்கள் என்பது பற்றி இருவரும் கவலை கொள்ளவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் ராதை ஐயனையே மறந்துவிட்டாள். தான் அவனுக்கு நிச்சயிக்கப் பட்ட பெண் என்பதே அவள் நினைவில் இல்லை. ஆனால் அவள் தகப்பனோ ஐயன் எப்போது வருவான் எனக் காத்திருந்தான். சில நாட்களில் வந்து சேர்வதாயும், கம்சனின் அந்தரங்கப் பணியாளர்களில் ஒருவனாய் பணி உயர்வு கிடைத்திருப்பதாயும் செய்தி வந்திருந்தது. ஆனால் அதற்குள்??? ராதையும், கண்ணனும் ஒருவருக்காக ஒருவர் என்பதை உறுதி செய்யும் வண்ணம் ஒரு நிகழ்வு சில நாட்களில் அங்கே நடந்தது. அது............

ஸ்ரீதாமாவுடனும், உத்தவனுடனும் மற்றும் பணியாளர்களுடனும் அங்கே வந்த பலராமன் கண்ணனின் இத்தகைய வீரச் செயலால் நெகிழ்ந்து போயிருந்தாலும் தந்தைக்கு இது பிடிக்காது என்பது மட்டும் உறுதியாகப் புரிந்து கொண்டான். கண்ணனோ அவனிடம் தான் அடுத்துச் செய்யப் போவது என்ன என்பதைப் பற்றிப் பேச ஆரம்பித்தான். விருந்தாவனத்துக்கு அருகே கோவர்த்தனம் என்ற பெயரில் குன்று இருந்தது. அதை ஒட்டிய காட்டிற்கே மாடுகள் மேயச் செல்லும். அந்தக் காட்டில் விளையும் புற்கள் மென்மையாகவும், மாடுகளுக்குச் சத்து நிறைந்தும் காணப் பட்டதால் அங்கேயே அனைத்துச் சிறுவர்களும் மாடுகளை அழைத்துச் செல்லுவார்கள். கண்ணனுக்கு அந்தக் காட்டின் ஒவ்வொரு செடியும், கொடியும், மரங்களும், இலைகளும், பூக்களும், காய், பழங்களும் பரிச்சயம். முதலில் அவனைக் கவர்ந்தது விருந்தை என அழைக்கப் பட்ட துளசிச் செடியே ஆகும். அதன் மணமும் நிறமும் அதன் சுவையும், நீரில் போட்டுப் பருகினால் நீரின் சுவையும் அவன் மனதைக் கவர்ந்தது. அதன் பின்னர் கடம்ப மரங்களின் மீதும், அவற்றின் சிவந்த நிறமுள்ள மலர்கள் மீதும் அவன் கவனம் சென்றது. கோவர்த்தன கிரியின் ஒவ்வொரு பாகமும் கண்ணனுக்கு அத்துப்படியானது.

அதன் செடி, கொடிகளை மட்டுமின்றி, அந்த மலையையே அவன் மிகவும் நேசித்தான். மலையின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு புதுமையுடன் ஒவ்வொரு நாளும் காக்ஷி அளித்து வந்தது கண்ணனுக்கு. மலையில் தினமும் ஒரு முறையாவது ஏறி இறங்காமல் போனால் அந்த நாள் நாளாகவே தோன்றாது கண்ணனுக்கு. பக்ஷிகளின் விதவிதமான கூக்குரல்களும், விநோதப் பழக்க வழக்கங்களும், காட்டு மிருகங்களின் நடத்தைகளும், உணவுப் பழக்கங்களும் என அனைத்துமே கண்ணனுக்குப் புரிய வந்திருந்தது. இந்த மலையில் அவ்வப்போது கண்ணன் தன் நண்பர் குழாமோடும், சில சமயம் தன்னந்தனியாகவும் உலாவுவான். அவ்வாறு தனியாக உலாவி வரும் வேளையில் கண்ணனுக்குத் தன்னிடம் ஏதோ ஒன்று உட்புகுந்து கொண்டிருப்பதாயும், அது தன்னை ஓர் அதிசய சக்தி கொண்டவனாய் மாற்றுவதாயும் தோன்றும். தன்னுடைய இந்த உணர்வுகளைப் பற்றி அவன் இன்னமும் தன் அண்ணன் பலராமனுடனோ, சிநேகிதனும், சகோதரனும் ஆன உத்தவனுடனோ, ஸ்ரீதாமாவுடனோ, ஏன் அன்புக்குரிய காதலியான ராதையுடனோ பகிரவில்லை. இது பற்றிச் சில நிச்சயங்கள் செய்து கொள்ள வேண்டி இருந்தது கண்ணனுக்கு. ஆனால் தன் உணர்வுகள் பொய்யல்ல என்று புரிந்து கொண்டிருந்தான்.

மலையில் ஏறி உச்சியில் நிற்கும்போதெல்லாம் கண்ணனுக்குத் தான் இந்த உலகிலிருந்து தனித்து இருப்பது போலவும், தனக்குக் கட்டுப் பட்டே இந்த மலை மட்டுமில்லாமல் உலகின் அனைத்து மலைகள், நதிகள், நீர்த்தேக்கங்கள், சமுத்திரங்கள், காடுகள், ரிஷி, முனிவர்கள், மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் என உயிர் வாழும் அனைத்து ஜீவராசியிலும் தன்னையே தான் காணுவதாய் அவனுக்குத் தோன்றும். ஒரு கணநேரம் தன்னை மறக்கும் அவனுக்கு அடுத்த கணம் தான் இருக்குமிடம் நினைவில் வந்து விடும். ஆனால் கண்ட காக்ஷி மறக்காது. ஏதோ ஓர் குரல் அவன் உள்ளிருந்து, “ நீ இவ்வுலகத்தைக் காக்கவென்றே பிறந்தவன். தர்மம் உன்னால் தான் காப்பாற்றப் படவேண்டும். அதற்குப் பாடுபடு!” என்று ஆணை இட்டுக் கொண்டே இருந்தது போல் தோன்றும். சில சமயம் அந்தக் குரலின் கூப்பாடு அதிகம் ஆகும். அப்போது அது தாங்க முடியாமல் கண்ணன் மலை மீது வேகமாய்த் தன்னந்தனியே ஏற ஆரம்பிப்பான். சில சமயம் தன் உணர்வுகளில் தான் கட்டுப்பாடுடன் நடந்து கொண்டால் தவிர முடியாது என்பது நன்கு புரியவர, தான் ஏதோ சாதிக்கப் பிறந்தவன், அதற்காகவும், உரிய தருணத்திறக்காகவும் தான் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பது புரியும். காத்திருத்தல் எத்தனை நாள் என யோசிப்பான் கண்ணன்.

Wednesday, June 10, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்!

சுரிகையும்தெறிவில்லும்செண்டுகோலும்
மேலாடையும்தோழன்மார்கொண்டோ ட
ஒருகையால்ஒருவன்தன்தோளையூன்றி
ஆநிரையினம்மீளக்குறித்தசங்கம்
வருகையில்வாடியபிள்ளைகண்ணன்
மஞ்சளும்மேனியும்வடிவும்கண்டாள்
அருகேநின்றாள்என்பென்-ஓக்கிக்கண்டாள்
அதுகண்டுஇவ்வூர்ஒன்றுபுணர்க்கின்றதே. 3(பெரியாழ்வார்)


“ஆனால் ராதை, நீ என்னுடன் காளையின் மேல் சவாரி செய்வது இயலாத ஒன்று!” கண்ணனும் திட்டவட்டமாய்த் தெரிவித்தான். ராதை கோபத்தில் கைகள் நடுங்க, கண்களின் ஒளி தீ போலப் பிரகாசிக்கப் பார்க்கவே பயம் மேலிடும்படிக் காட்சி அளித்தாள். கண்ணன் சற்று நேரம் ஒன்றும் பேசவில்லை. தன் கண்களின் கருணையும், பாசமும், அன்பும், காதலும் நன்கு தெரியும்படியான ஒரு பார்வையை ராதையின் மேல் பிரயோகம் செய்தான். கண்ணன் மனதில் தோன்றியது, நான் இவளைவிடச் சிறியவன் ஆனாலும், இவள் என்னைவிடச் சிறியவளாய்த் தோன்றுகின்றாளே எனக்கு? ம்ம்ம்ம்ம்ம்ம்..,., புன்னகை புரிந்த கண்ணன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான். “சரி, ராதை, நீ என்னுடம் ஹஸ்தின் மேல் சவாரி செய்யத் தயாராகிவிடு. அண்ணா, நீ ஸ்ரீதாமாவையும் உத்தவனையும் அழைத்துச் சென்று அங்கே இரு. “ பலராமன் தயக்கத்துடனேயே செல்ல, கண்ணன் ராதையைப் பார்த்து, “இங்கே சற்று நேரம் காத்திரு. நான் தயார் செய்து கொண்டதும் காளையின் மேல் சவாரி செய்ய உன்னையும் அழைத்துப் போகிறேன்.”

அவ்வளவில் கண்ணன் ராதையிடமிருந்து விலகி, பருத்திக் கொட்டையும், கடலைப் புண்ணாக்கும் கொண்ட கூடையை எடுத்து வந்து ஹஸ்தினிடம் சென்றான். காளை ஏற்கெனவேயே ஏதோ நடக்கின்றது, அல்லது நடக்கப் போகின்றது என்று பொறுமை இழந்திருந்தது. ராதையைக் கொஞ்சம் சந்தேகத்துடனேயே பார்த்துக் கொண்டிருந்தது. ராதையோ அடுத்து என்னவோ என்ற கலக்கத்துடன் காத்திருந்தாள். கூடையைக் காளைக்கு எதிரே சற்றுத் தொலைவில் வைத்த கண்ணன் தன் புல்லாங்குழலை எடுத்து இனிய கீதம் இசைத்தான்.

"சிறு விரல்கள் தடவிப் பரிமாறச் செங்கண் கோடச்
செய்யவாய் கொப்பளிப்பக் கோவிந்தன் குழல் கொடூதினபோது
பறவையின் கணங்கள் வந்து கிடந்து படுகாடு கிடப்பக்
கறவையின் கணங்கள் கவிழ்ந்திறங்கிச் செவியாட்ட கில்லாவே."(பெரியாழ்வார்)



கொஞ்ச நேரம் வரையில் பொறுமையற்றிருந்தது ஹஸ்தின். மெல்ல மெல்ல இனிமையான புல்லாங்குழலின் நாதம் அந்தச் சுற்றுப் புறத்தையே நிறைக்க ஹஸ்தினும் அந்த நாதத்துக்கு வசப் பட்டது. அதன் புலன்கள் சாந்தம் அடைய ஆரம்பித்தன. இப்போது கண்ணன் காளையின் அருகேயே அந்த உணவுக்கூடையை வைக்க இன்னும் ஆனந்தம் கொண்ட காளை ஒரு இன்பச் செறுமல் செறுமியது கண்ணனைப் பார்த்து.

காளயின் அருகே சென்ற கண்ணன் அதன் திமிலைத் தடவிக் கொடுத்து, அதைத் தட்டிக் கொடுத்து உடலை நீவி விட்டு உற்சாகப் படுத்தினான். காளை மேலும் உற்சாகம் அடைந்து உணவை உண்ண ஆரம்பித்தது. கண்ணன் காளையின் மேலே ரொம்பவும் சாவதானமாகச் சாய்ந்து கொண்டே புல்லாங்குழலை இசைத்த வண்ணம் இருந்தான். காளை உண்ணும்போதே ராதையிடம் கண்ணன், காளையை நீர் அருந்தத் தான் அழைத்துச் செல்லப் போவதாயும், அப்போதும் புல்லாங்குழலை இசைத்துக் கொண்டே இருக்கப் போவதாயும், அப்போது ராதை வந்து கண்ணனை இறுகக் கட்டிக் கொண்டு விடவேண்டும் என்றும் சொல்லுகின்றான். ராதை கேள்விக் குறியுடன் கண்ணனை நோக்கக் கண்ணன்,” நீ என்னைக் கட்டிக் கொண்டதும் தான் நான் காளையின் மேல் ஏறவே முடியும். இவ்வாறு நீ நின்று கொண்டிருந்தாயானால் காளை உன்னை முட்டிக் கொம்பால் குத்தித் தள்ளிவிடும். ஆகவே எவ்வளவு முடியுமே அவ்வளவு என்னை இறுகக் கட்டிக் கொண்டு அமர்ந்து விடு. விட்டுவிடாதே. என்ன தைரியம் இருக்கா உனக்கு?”

இந்தக் கேள்வி ராதையை உசுப்பிவிட, அவள் ஆறாத சினத்தோடேயே கண்ணனிடம், “ நீயும் அருகில் இருக்கையில் எனக்கு தைரியம் இல்லாமல் போகுமா என்ன?” என்று கேட்கின்றாள். காளை நீர் அருந்தச் சென்றது. கண்ணனின் புல்லாங்குழலின் கீதம் ஓயவில்லை. ராதை மெல்லத் தவழ்ந்து ஹஸ்தினுக்குத் தெரியாமல் மறைந்து மறைந்து கண்ணனுக்குப் பின்னே வந்து நின்றாள். கண்ணன் காளையைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே அதன் மேல் சாய்ந்தாற்போல் நின்று கொண்டான். ராதை அவன் முதுகில் ஏறப் போவது காளை அறியாவண்ணம் மறைத்துக் கொண்டான். காளை நீர் அருந்தி முடித்தது. கண்ணன் ஒரு குதி குதித்துக் காளையின் முதுகில் ஏறினான். ராதையும் கண்ணனை இறுகப் பிடித்த வண்ணம் அவன் முதுகில் தொங்கினாள். ராதை சரியாக அமர உதவிய வண்ணம் கண்ணன் காளையைக் கட்டியிருந்த மூக்கணாங்கயிற்றை மெல்லத் தன் கைகளில் எடுத்துக் கொண்டான். ராதை நடுங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

ஹஸ்தின் நிமிர்ந்து பார்த்தது. அது இப்போது உணவும் அருந்தி நீரும் குடித்ததால் மிகவும் மகிழ்வான மன நிலையில் இருந்தது. மீண்டும் ஓர் வாய் நீர் குடித்துக் கொண்டது. கண்ணன் அதனிடம், "ஹஸ்தின், என் நண்பா, நாம இப்போக் காட்டுக்குப் போறோமே? எங்கே ஓடு பார்க்கலாம்," என்று கனிவும் பாசமும் மிகுந்த குரலில் கூறினான். காளையும் கண்ணன் சொன்னது புரிந்தாற்போல் நிமிர்ந்து பார்த்துச் செறுமி விட்டுச் சற்று வேகமான நடையாகக் காட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தது.

பி.கு. கோபி நல்லவேகம்னு சொல்லி இருக்கிறது பதிவுகளையா? இல்லை கண்ணனையானு புரியலை. :P எதாய் இருந்தாலும் ஜூலை வரைக்கும் இப்படித் தான், கண்ணன் வருவான். கொஞ்ச நாட்கள் எல்லாரும் நம்ம அறுவை இல்லாம நல்லா இருக்கலாமேனு ஓரு அநுதாபம் தான். அப்புறம் இருக்கவே இருக்கு!

Tuesday, June 09, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்!

ஆனால் நம் கண்ணனா கேட்பவன்? அவன் தான் கன்று குடிலாய் எறியவெனவே பிறந்தவன் ஆயிற்றே?? தினம் தினம் காலையில் மாடுகள் கட்டி இருக்கும் தொழுவத்திற்குச் சென்று ஹஸ்தின் என்ற அந்த முரட்டுக் காளையின் அருகே சென்று பயிற்சி எடுத்துக் கொள்ளப் போவதாயும், இந்த விஷயம் ஒரு விளையாட்டாய்ச் சொல்லப் பட்டிருந்தாலும் தான் அவ்வாறு எடுத்துக் கொள்ளாமல் தனக்கு இடப்பட்ட ஒரு பந்தயமாகவே எடுத்துக் கொண்டிருப்பதாயும் கண்ணன் சொல்லுகின்றான். ஸ்ரீதாமா பயத்துடன், பலராமனைப் பார்த்து, “பலராமா? இது என்ன? என்ன நடக்கப் போகின்றது?” எனக் கேட்க பலராமனோ, தன் தம்பிக்கு இதன் மூலம் ஒரு பாடம் கிடைக்கும் என நம்புவதாய்ச் சொல்ல இருவரும் பயந்து போகின்றனர்.

இந்த ஹஸ்தின் விருந்தாவனத்துக் காளைகளுக்கெல்லாம் அரசன் போன்றது. பெரிய திமிலுடனும், நன்கு தீட்டி விடப் பட்ட கொம்புகளோடும், தீட்சண்யமான கண்களோடும், முறுக்கி விடப் பட்ட வாலோடும், பளபளவென்ற கருநிற மேனியோடும் காட்சி அளித்தது. அதைக் கட்டிப் போடவென்றே ஒரு பெரிய மரம் விருந்தாவனத்தில் உள்ளது. அங்கே நின்று கொண்டு தினமும் தன் கால்களால் பூமியில் குழி பறித்துக் கொண்டே இருக்கும். ஒரு இடத்தில் நிற்காது. பொறுமையின்றி அலையும். தன்னிடம் யார் நெருங்கினாலும் ஜன்ம விரோதி போல் பாவித்துக் கொண்டு, தலையைக் குனிந்து கொம்புகளால் முட்ட ஆயத்தமாகி, சீறும்.

இந்தக் காளையைத் தான் கிருஷ்ணன் அடக்கி அதன் மேல் ஏறி உட்காரவேண்டும் என்ற பந்தயம். அந்தக் காளையை முதன்முதலாய்ப் பார்த்தபோது பலராமனுக்குத் தன்னால் கூட இதை அடக்க முடியாது, இன்னும் பலவானாக ஆகவேண்டும் எனத் தோன்ற, அதை வாய்விட்டுச் சொன்னான். ஆனால் நம் கண்ணனோ தன்னால் அதை அடக்க முடியும் என்பதோடு அல்லாமல் அதன் மேல் ஏறியும் உட்கார முடியும் எனச் சொல்ல அன்றிலிருந்து ஒரு மாதத்துக்குள்ளாகக் கண்ணன் காளையை அடக்க முடிவு செய்யப் பட்டிருந்தது. அந்தப் பந்தயத்தின் கடைசி நாள் அன்று. நாளை கண்ணன் காளையை அடக்கவேண்டும். கண்ணன் தினம் தினம் தொழுவத்திற்குப் போய் தன் புல்லாங்குழலை ஊதித் தன் இன்னிசையால் முதலில் காளையைத் தன் வயப் படுத்தி இருந்தான்.

ஆனால் முதன்முறை கண்ணன் அந்தக் காளையைக் காண அதற்கு உணவளிப்பவரோடு சென்றபோது ஹஸ்தின் கண்ணனை முட்டவே வந்தது. கண்ணன் சாதுரியமாய் விலகிக் கொண்டதோடு உடனேயே தன் புல்லாங்குழலையும் எடுத்து ஊத ஆரம்பித்தான். காளை கண்ணனின் புல்லாங்குழல் இசைக்குப் பழக ஆரம்பித்திருந்தது. மெல்ல மெல்லக் கண்ணன் காளையின் அருகே சென்று அதைத் தடவிக் கொடுத்து, உணவு அளிக்கவும் ஆரம்பித்திருந்தான். என்றாலும் போட்டிக்கு முதல்நாள் பலராமன், ஸ்ரீதாமா, உத்தவன் ஆகியோருடன் கண்ணனும் சென்ற போது காளை மற்ற மூவரையும் பார்த்துப் பயங்கரமாய்ச் சீறியது. மூவரும் பயந்தனர். போட்டியே வேண்டாம் என்று கண்ணனை அந்த விஷயத்தை அதோடு விடுமாறு கூறினார்கள் கண்ணனோ கேட்கவில்லை.

முன்யோசனையாக உத்தவன் ராதையைத் தன்னோடு அழைத்து வந்திருந்தான். ராதைக்கு இந்த விஷயத்தைக் கேட்டதும் இருப்பே கொள்ளவில்லை. கண்ணனைக் காண ஓடோடி வந்துவிட்டாள். வந்ததுமே, கண்ணனைப் பார்த்து, “கானா, இது என்ன பைத்தியக்காரத் தனம்? பெரிய அண்ணா, ஏன் இப்படி ஒரு பந்தயம் போட்டீர்கள்? என பலராமனிடமும் ஒரே சமயத்தில் கேட்டாள். பலராமன் தாங்கள் விளையாட்டிற்கே சொன்னதாகவும், கண்ணன் அதைக் கேட்காமல் பந்தயமாக ஏற்றுக் கொண்டுவிட்டதாயும் சொன்னார்கள். ராதை கோபத்துடன் கண்ணன் பக்கம் திரும்பினாள். “இது என்ன கானா?” கண்ணன் சிரித்தான், அவன் கண்களும் கூடவே சிரித்தன. “ராதே, எவ்வளவு அழகாய் இருக்கின்றாய்! கோபத்திலும் அழகாய் இருக்கும் பெண்ணை இப்போத் தான் பார்க்கிறேன். அதிலும் அந்தக் கண்கள், வைரங்கள் போல் ஜொலிக்கின்றனவே!”


“போதும் கண்ணா, பேச்சை மாற்றாதே! நீ நாளை ஹஸ்தினை அடக்கி அதன் மீது ஏறப் போவதில்லை.” ராதை திட்டவட்டமாய்க் கூறினாள். கண்ணனோ,”யார் சொன்னது, காளையை நான் அடக்கப் போவதில்லை என?” என்று கேட்க, கீழே படுத்திருந்த ஹஸ்தினுக்குத் தன்னைப் பற்றி ஏதோ பேசுகின்றார்கள் எனத் தோன்றியதோ என்னமோ, எழுந்து கூடி இருந்த அனைவரையும் ஒரு கோபப் பார்வை பார்த்துவிட்டு உறுமியது. மாலை மயங்கி இருள் சூழ்ந்து கொண்டிருந்த நேரம். அந்த உறுமலைக் கேட்ட ராதைக்கு உடல் நடுங்கியது. கண்ணன் கதி என்னவோ என எண்ணினாள். “கண்ணா, வேண்டாம், பிடிவாதத்தை விடு.” என்று கண்ணனைப் பார்த்துச் சொல்ல, பிடிவாதம் இல்லை எனக் கண்ணன் மறுக்கின்றான். பலராமனோ இப்போது கெஞ்சும் நிலைக்கு வந்துவிட்டான். ராதை தன் கடைசி ஆயுதத்தைக் கண்ணன் பேரில் பிரயோகிக்கின்றாள். “இதோ பார் கானா, நாளை நீ தனியாக ஹஸ்தினின் மேல் ஏற முடியாது. கூடவே நானும் வருவேன்.”

கண்ணன் கொஞ்சம் திகைத்துத் தான் போனான். அவன் ஒருவன் ஏறி அமர்ந்து அதை அடக்குவதே பெரிய வேலை. இதில் ராதை வேறே கூடவா? “அதெல்லாம் முடியாது” என வன்மையாக மறுக்க, “ அப்போ நான் இறந்ததும் தான் நீ அந்தக் காளை மீது ஏற முடியும்.” ராதை கண்ணனை விட வன்மையாகவும் உறுதியாகவும் கூறினாள். என்ன நடக்கப் போகிறதோ?