எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, April 30, 2007

உலக நாடுகள் சொல்வது என்ன?

முதலில் நேதாஜியுடன் மிக மிக நெருக்கமாய் அவரின் கடைசி நாட்களில் இருந்த ஜப்பான் என்ன சொல்கிறது எனப் பார்ப்போம். நேதாஜி மறைந்ததே சரியாகத் தெரியாதபோது எந்தத் தேதி எனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதபடி அதிலேயே குழப்பம். ஆனால் இந்திய தேசீய ராணுவத்தைச் சேர்ந்தவர்களின் கூற்றுப் படி அவரைக் கடைசியாக ர்ஷ்யாவின் ஒரு பகுதிக்குச் செல்லும் விமானத்தில் ஏரும்போது அவரைச் சைகோனில் பார்த்தவர்கள் அவரின் அந்தரங்க மெய்க்காப்பாளர்கள் ஆன தேப்நாத் தாஸும், பிரித்தம் சிங்கும் ஆவர். ஆகஸ்ட் 17 காலையில் அவருடன் உடன் சென்றவர்களில் ஹபிபுர் ரஹ்மானும், லெப்டினன்ட் ஜெனரல் சுநாமாசா ்ஷிதேய் என்ற ராணுவ அதிகாரியும் ஒருவர். ஆனால் விமானம் செல்லும் வழியில் நொறுங்கி விபத்துக்குள்ளானதாய்ச் சொல்லப் பட்டது ஆகஸ்ட் 18 அன்று.

ஜப்பான் அரசு அதிகார பூர்வச் செய்திகளோ, அல்லது ஜப்பானின் ராணுவத் தலைமையகமோ இதைக் கடைசி வரை உறுதி செய்யவே இல்லை. பின் முதலில் யார் சொன்னது? ஜப்பானின் செய்தி ஏஜென்சி ஒன்று இந்தச் செய்தியைத் திரு எஸ்.ஏ.ஐயருக்குக் கொடுத்தது. ஐயர் இதை முதலில் நம்பவே இல்லை. ஏனெனில் ஐயருக்கு இந்தச் செய்தியை அந்த ஏஜென்சி 23 ஆகஸ்டில் கொடுத்து போஸ் இறந்து விட்டார் எனத் தெரிவிக்கும்படிச் சொன்னது. ஆனால் 20 ஆகஸ்டிலேயே ஜப்பானிய ராணுவத்தின் முக்கிய உளவு அதிகாரிகள் இருவர் ஐயரிடம் இம்மாதிரிச் செய்தி வந்திருப்பதாயும் அதை வந்தால் நம்பவேண்டாம் எனவும் அவரிடம் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர். ஆகவே அவர் உடனேயெ தாய்பேய் போய் விபத்து நடந்ததாய்ச் சொல்லப் படும் இடத்தையும், ஹபிபுர் ரஹ்மானையும் பார்க்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். ஆனால் அவர் விருப்பம் நிறைவேற்றப் படவில்லை. குறைந்த பட்சம் இறந்த தலைவரின் உடலையாவது பார்க்கவேண்டும் என்ற விருப்பமும் நிராகரிக்கப் பட்டது. இறந்ததாய் இந்திய தேசீய ராணுவ வீரர்களிடம் அறிவிக்கும்படி வற்புறுத்தப் பட்டார்.

போஸின் மெய்க்காப்பாளர்கள் இருவருக்கும் இந்த வதந்தியை நம்பவேண்டாம் என ஜப்பானிய உளவுப்படைத் தகவலும், இந்திய தேசீய ராணுவத்தின் உளவுப்படைத் தகவலும் வந்திருந்தது. ஜப்பானிய அரசும் உறுதி செய்ய மிகவும் தாமதித்து இந்த வி்ஷயத்தில் அதிக அலட்சியம் காட்டி வந்தது. பின்னர் வந்த ஐம்பதுகளில் நியமிக்கப் பட்ட கமிஷன்களுக்கும் சரி, சமீபத்தில் நியமிக்கப் பட்ட முகர்ஜி கமிஷனுக்கும் சரி, ஜப்பானிய அரசு போதிய ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை. போஸ் இறந்ததாகச் சொல்லப் படுவது ஆதாரமற்ற செய்தி என முகர்ஜி கமிஷனால் தெளிவு படுத்தப் பட்டபோது அதை மறுக்கவும் இல்லை. போஸ் சென்ற விமானம் சென்றது என்னமோ ர்ஷிய எல்லைக்குட்பட்ட ஒரு பகுதிக்கு. அங்கே தான் போகவேண்டிய இடத்துக்குச் செல்ல வேண்டிய போஸும், விமான ஓட்டிகளும், அல்லது லெஃப்டினன்ட் ஜெனரல் ்ஷிதேயும் மட்்டும் இறந்திருக்கிறார்கள். அவர்கள் உடனேயே 18 ஆகஸ்ட் அன்றே எரியூட்டவும் பட்டிருக்கிறார்கள். இவருடன் சென்ற மற்றவர்கள் தங்கள் கதையைச் சொல்ல உயிருடன் இருக்கும்போது இவர்கள் மட்டும் இறந்ததாய்ச் சொல்லப் படுவது விசித்திரமாய்த் தான் இருக்கிறது. இம்மாதிரியான அபூர்வ நிகழ்ச்சியை யாரும் கண்டிருக்கிறீர்களா? புத்தகங்களிலும், திரைப்படங்களிலும் வருவதை உண்மை என்பது எவ்வளவு கொடூரமான ஒரு விஷயம்?

இனி, ஆங்கில அரசு என்ன சொன்னது என்பதும் இந்திய அரசு என்ன சொன்னது என்பதும் அமெரிக்க அரசு சொன்னதும், ர்ஷ்யாவின் பங்கு என்ன என்பதும் வரும் நாட்களில்.

Saturday, April 28, 2007

உ.வே.சாமிநாத ஐயரவர்களின் நினைவு நாள்

ஏப்ரல் 28-ம் தேதி உ.வே.சாமிநாத ஐயரவர்களின் நினைவு நாள் என்று நாகை பாலமுரளி செய்தி அனுப்பி இருக்கிறார். உண்மையில் அவர் சொல்ல வில்லை என்றால் எனக்கு நினைவில் இருந்திருக்காது. ஹிஹிஹி போஸில் மூழ்கி இருக்கேனே அதான், தவிர இங்கே தமிழ் நான் மட்டும் தான் படிக்க வேண்டி இருக்கு. மற்றவர்கள் எல்லாம் தமிழ் எங்கே படிக்கிறாங்க? இப்போ நாட்டுப் பற்றைப் பற்றித் தமிழ்த் தாத்தா சொன்னதை இங்கே கொஞ்சம் எடுத்துப் போடுகிறேன். இப்போது எழுதி வரும் தொடருக்கும் கொஞ்சம் ஏற்புடையதாய் இருக்கும். எல்லாமே தாத்தா சொன்னது. அதனால் பாராட்ட வேணும்னா அவரைப் பாராட்டவும். இதோ தாத்தாவின் வார்த்தைகள்:

"பெற்ற தாயைப் போலவே பேசும் மொழியையும், பிறந்த நாட்டையும் போற்றிப் பாராட்டுவது மக்கள் கடமையாகும்.மொழிக்குத் தெய்வமான கலைமகளைத் தாயாகவே கருதி வழிபடுவது பெரியோர்கள் இயல்பு. அப்படியே நிலமகளையும் அன்னையாக வணங்கி வருவதும் நம் நாட்டினர் வழக்கம். பண்டைக்கால முதற்கொண்டே தம் தம் நாட்டினிடத்தே அன்பு கொள்ள வேண்டுமென்ற கொள்கை மக்களும்மு இருந்து வருகின்றது. காப்பியங்களில் கடவுள் வாழ்த்துக்குப் பிறகு நாட்டுப் படலம் சொல்லப் படுகிறது. அதனால் நாட்டைப் பற்றிய செய்தியின் தலைமை விளங்கும். மனிதராய்ப் பிறந்த யாவருக்கும் தாய் நாட்டின் மீது அபிமானம் இருத்தல் இயல்பு. திருக்குறளில்,
"சிறை நலனுஞ் சீரு மிலரெனினு மாந்தர்
உறைநிலத்தோடொட்டல் அரிது." என்பதன் விசேடவுரையில் பரிமேலழகர் பலத்திற் குறைந்த வீரர்களூம் தம்முடைய நாட்டினிடத்திலேயுள்ள பற்றினால் பகைவரை எதிர்த்து வெற்றி பெறுவார்கள். அவர்கள் தம்முடைய நாட்டை விட்டுப் பிரிவதைக் காட்டிலும் சாவதற்குத் துணிந்திருப்பார்கள்" என்று தெரிவிக்கிறார்.

நக்கீரர் சிலகாலம் மதுரையை விட்டுச் செல்ல நேர்ந்த போது அவர்,
"என்றினி மதுரை காண்பேன்
எப்பகல் சவுந்தரேசன்
தன்றிருவடிகள் காண்பேம்
தாயையெஞ்ஞான்று காண்பேம்"
என்று வருந்தினாரென சீகாளத்திப் புராணம் கூறுகிறது. (என்னை மாதிரி போலிருக்கு :D)
தமிழ்ப்பிரபந்தங்களில் ஒருவகையாகிய குறவஞ்சிகளில் குறத்தி தான் பிறந்த நாட்டுவளம் கூறுவதாக ஒரு பகுதி உண்டு. அதிலிருந்து குறமகளிரின் தாய் நாட்டன்பு சிறப்பாக அமைந்திருந்தது என்பதைப் புலவ்ர்கள் சிறப்பாகப் புலப்படுத்திச் சொல்லி இருப்பது வெளிப்படும். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற விர்ந்த அன்புடைய பெரும்புலவர்களும் தம்முடைய தாய்நாட்டின் கண் தனி அன்பை வைத்திருந்தார்கள். தாய் நாட்டைப் பிரிந்திருத்தல் மிக்க துயரத்தை உண்டாக்கும். திருவிளையாடல் புராணம் இயற்றிய பாண்டிநாட்டுப் புலவர் பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவர் நாட்டு வணக்கப் பாடலில் சொல்கிறார்:

"ஆவியந் தென்றல் வெற்பின்
அகத்தியன் விரும்பும் தென்பால்
நாவலம் தீவம் போற்றி
நாவலந் தீவந்தன்னுள்
மூவர்கட் கரியான் நிற்ப
மூத்தமிழ்த் தெய்வச் சங்கப்
பாவலர் வீற்றிருக்கும்
பாண்டி நன்னாடு போற்றி!" என்று பாடுகிறார். இதிலிருந்து தாய் நாட்டுப் பற்று அனைவருக்கும் பொதுவானது என்று அறிகிறோம். அதனால் தான் ஒருவனை நாட்டை விட்டு ஓட்டி விடுதல் பெரிய தண்டனையாக விதிக்கப் பட்டு வருகின்றது. " இவை தாய் நாட்டுப் பற்றைப் பற்றித் தாத்தா எழுதிய கட்டுரையில் இருந்து தொக்குப் பட்ட சில பகுதிகள். படிக்க வசதிக்காகத் தமிழ் நடை சற்றே மாற்றப் பட்டிருக்கிறது.

இப்போ எனக்கும் தாய்நாடு நினைப்புத் தான். இன்று (இங்கே வெள்ளிக்கிழமை) மீனாட்சி பட்டாபி்ஷேஹம். நாளை திக்விஜயம். ஞாயிறன்று மீனாட்சி திருக்கல்யாணம்.இந்தியாவில் இருந்தால் தொலைக்காட்சித் தரிசனமாவது கிடைக்கும். இப்போ நினைப்பு மட்டும் இருக்கு. புதன் கிழமை மே 2-ம் தேதி அழகர் ஆற்றில் இறங்குகிறார்னு நினைக்கிறேன். இந்த வருஷம் அழகர் என்ன கலர் உடை உடுத்தப் போகிறாரோ? அழகருக்கே வெளிச்சம்!

போஸ் மறைந்தாரா? இறந்தாரா?

2-ம் உலகப் போர் மும்முரமாய் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் அது. ஜப்பான் இந்தியாவிற்குள் வந்து நுழைய முயற்சி செய்து கொண்டிருந்தது. ஜப்பானிய அரசின் ஆதரவுடனும், அவர்களின் பண உதவியுடனும் போஸும் தன்னுடைய இந்திய தேசீயப் படையின் வீரத்தைக் காட்ட ஆரம்பித்தார். சிப்பாய்களுக்கு இரெண்டே இரண்டு சொற்கள் தான் சொன்னார். ஒன்று "டெல்லி சலோ!" (டெல்லிக்குப் போ) இரண்டாவது "ஜெய்ஹிந்த்" (இதைத் தான் பின்னால் காங்கிரஸ் ஸ்வீகரித்துக் கொண்டது.) இந்த வார்த்தைகளினால் உற்சாகம் அடைந்த வீரர்கள் பர்மா வழி டெல்லிக்குள் நுழையத் தயார் ஆனார்கள். முதலில் அவர்கள் வழியில் இருந்த அந்தமான், நிகோபார் தீவுகளைப் பிடித்து பிரிட்டி்ஷாரிடம் இருந்து விடுவித்தார்கள். அதற்கு ்ஷஹீத், ஸ்வராஜ் தீவுகள் எனப் பெயர் மாற்றம் செய்யப் படுகிறது. அங்கே உள்ள உள்நாட்டு மக்களைப் பார்க்க முடியாமல் போஸ் தடுக்கப் படுகிறார். பின் அங்கிருந்து பர்மா வந்தடைந்து 18 மார்ச் 1944-ல் மணிப்பூரில் உள்ள மோய்ரங் என்னும் ஊரில் முதன் முதல் மூவர்ணக் கொடி அரசு சார்பில் ஏற்றப் படுகிறது. பின்னர் கொஹிமாவையும், இம்பாலையும் ஜப்பானிய, பர்மியப் படைகளுடன் சேர்ந்து இந்திய தேசீயப் படையும் முற்றுகை இடுகிறது. அந்த முற்றுகையில் கலந்து கொண்ட இந்திய தேசீயப் படையின் யுனிட்டுகளின் பெயர் என்ன தெரியுமா? ஒன்று "காந்தி யூனிட்" இன்னொன்ற்ய் "நேரு யூனிட்".

அப்போது பக்கத்தில் வங்காளத்தில் கடுமையான பஞ்சம். மக்கள் உணவின்றித் தவித்தனர். ஆங்கில அரசால் சமாளிக்க முடியவில்லை. தன் சொந்தத் தாய்நாட்டின் அவலம் தாங்க முடியாமல் போஸ் அவர்கள் பர்மாவில் இருந்து வானொலி மூலம் செய்தி விடுக்கிறார்."பர்மாவில்் இருந்து பர்மிய அரிசி அனுப்புவதாய்". ஆனால் ஆங்கில அரசு அதை ஏற்கவில்லை. இங்கிலாந்தில் இருந்த அரசும் போஸின் கூற்றை ஏற்கவில்லை. விளம்பரத்துக்காகச் செய்யும் தந்திரம் என போஸ் விமரிசிக்கப் பட்டார். ஏற்கெனவே ஹிட்லருடன் சேர்ந்ததில் அவர் ஃபாஸிஸ்ட் எனவும், ஜப்பான் பிரதமர் "டோஜோ" வின் ஆதரவு இருந்ததால் "டோஜோவின் கைக்குலி" என்றும், தேசத்தை விற்று விட்டார் எனவும் விமரிசிக்கப் பட்டிருந்தார்.

அந்தச் சமயம் பார்த்துத் திடீரென மழைக்காலமும் ஆரம்பிக்கிறது. பல்வேறு தொற்று நோய்களாலும் சிப்பாய்கள் பீடிக்கப் படுகிறார்கள். அதிகமாய் மழை பெய்யும் அந்தப் பகுதியில் வேகமாய் முன்னேற முடியவில்லை. சரியான மருத்துவ உதவியும் கொடுக்க முடியவில்லை. ஜப்பான் வேறே அப்போது தளர்ந்து போய் விட்டது. அவர்கள் மெதுவாய்ப் பின்வாங்க ஆரம்பித்தனர். யுத்ததின் அதிகச் செலவினாலும் அவர்களின் தோல்வியினாலும் போஸுக்கு எதிர்பார்த்தபடி பண உதவி செய்ய முடியவில்லை. போஸ் அப்போது ஆங்கிலேய அரசுக்குக் கட்டுப் பட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் தன் பக்கம் சேருவார்கள் எனப் பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால் இங்கே சரியான உதவி கிடைக்காமல் இந்திய தேசீய ராணுவமே பின் வாங்க நேரிட்டது. தன்னுடைய அரசு மக்களுக்கு உதவியாய் இருக்க வேண்டும் என்று போஸ் நினைத்ததற்கு மாறாய் கட்டாயமாய் வரி வசூலிக்க வேண்டி வந்தது, அப்போதைய மலேசியா, சிங்கப்பூரில் இருந்த அவர் அரசுக்கு. ஜூலை மாதம் 4-ம் தேதி 1944-ம் வருடம் பர்மாவில் இந்திய தேசீயப் படை வீரர்களிடம் போஸ் நேரடியாக வீர முழக்கம் இடுகிறார். "வீரர்களே! உங்கள் குரு்தியைத் தாருங்கள். நான் பதிலுக்கு சுதந்திரம் வாங்கித் தருகிறேன்." என்று சொல்கிறார்.

ஜப்பான் பின்வாங்கிச் சென்றதும் வேறு வழியில்லாமல் சோவியத் ர்ஷ்யாவின் உதவியை நாடுகிறார். வருடம் 1945 மாதம் ஆகஸ்ட் தேதி 17. தாய்பேய்க்குச் செல்ல ஒரு விமானம் தயாராய் இருப்பதாய்ச் செய்தி வருகிறது. போஸ் தனக்கு செக்ரட்டரியாய் இருந்த திரு சஹாயிடமும், தன்னுடைய பப்ளிசிடி மந்திரியாக இருந்த திரு எஸ்.ஏ. ஐயரிடமும் சொல்லி விட்டு இன்னும் இரண்டு லெஃப்டினன்ட் கர்னல்களுடன் விமானம் ஏறப் போகிறார். அது தான் இந்திய தேசீயப் படையைச் சேர்ந்தவர்கள் கடைசியாய் போஸைப் பார்த்தது. சில நாட்கள் கழித்து எஸ்.ஏ. ஐயருக்கு ஜப்பான் அரசு போஸ் சென்ற விமானம் நொறுங்கி விழுந்ததாயும் அனைவரும் இறந்து விட்டார்கள் என்றும் சொல்கிறது. ஆகஸ்ட் 18 இது நடந்ததாய்ச் சொல்லப் படுகிறது. ஆகஸ்ட் 17 அன்று கிளம்பிய விமானம் எப்படி ஆகஸ்ட் 18 அன்று நொறுங்கி இருக்கும்? யாருமே யோசிக்கவில்லையா? உண்மையில் விமான விபத்து நடந்ததா? சுபா்ஷ் என்ன ஆனார்? உலக நாடுகளின் பார்வையில் நாளை!

Friday, April 27, 2007

இந்திய தேசீய ராணுவத்தின் எழுச்சி!

ஜெர்மன் போன போஸ் சும்மா இருக்கவில்லை. தலைவர்களின் ஆதரவை இந்தியாவிற்காகத் திரட்டுகிறார். ஹிட்லரையும் அவரின் ஜனநாயகப் படுகொலையையும், யூதர்களை அவர் நடத்திய விதத்தையும் பகிரங்கமாய் விமரிசிக்கிறார். இந்த முயற்சியில் சில காலம் தலை மறைவாயிருக்கிறார். மறுபடியும் பிரிட்டி்ஷாரின் பிரசாரம் போஸ் இற்ந்து விட்டதாய். அப்போது ஜெர்மன் வானொலியின் உதவியுடன் முதன் முதல் வெளி வருகிறது "ஆசாத் ஹிந்து ரேடியோ." மார்ச் 25 1942-ல் ரேடியோ பெர்லினில் இருந்து, "ஜெய்ஹிந்த்! நான் சுபாஷ் சந்திர போஸ் பேசுகிறேன்.!" என்று ஆரம்பித்து அவர் கொடுக்கும் பேச்சு உலகம் பூராவும் சென்றடைந்ததோடல்லாமல் இந்தியர் உள்ளத்தில் கிளர்ச்சியும் ஏற்படுத்துகிறது. பெர்லினிலும், மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் இருந்த யுத்தக் கைதிகளை ஒன்று திரட்டி 4,500 சிப்பாய்களுடன் படை திரட்டுகிறார். அங்கேயே Free India Centre ஆரம்பிக்கிறார்.

இந்தியாவைத் தம் படையுடன் சென்று அடைந்து மீட்க வேண்டும் என்ற ஆசையில் போஸ் இந்தியா வந்தடைய வழி வகுக்கிறார். ரஷியா அப்போது ஹிட்லருடன் நேசம் கொண்டிருந்ததால் இந்தியாவுக்குத் தரை வழி ர்ஷியா சென்று ஆப்கன் போய் நுழையத் திட்டம் போடுகிறார். என்ன காரணத்தாலோ ஹிட்லர் இந்த வழியை ஆதரிக்கவில்லை. அவருக்குத் தன்னுடைய பதவியைத் தக்க வைத்துக் கொள்வது தான் முதல் வேலையாய் இருந்தது. இருந்தாலும் போஸ் அங்கிருந்து செல்ல விரும்பியதால் ஓர் நீர்மூழ்கிக் கப்பலில் செல்ல உதவுகிறார். இந்த நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வழியில் ஜப்பானில் இருந்து வந்த மாற்று நீர் மூழ்கிக் கப்பலில் மாறிக் கொள்கிறார் போஸ் கடலுக்கடியிலேயே இவை நடைபெறுவதாய்ச் சொல்கிறார்கள். ஜப்பானில் அவருக்கு அவர் நினைத்த ஆதரவு கிடைக்கிறது. அங்கிருந்து அவர் அப்போது ஜப்பான் வசம் இருந்த சிங்கப்பூர் வருகிறார். சிங்கப்பூரில் அப்போதே நிறைய இந்தியர்கள் ஒரு படை திரட்டி இருந்தார்கள் திரு ராஷ் பிஹாரி போஸ் தலைமையில்.

உண்மையில் இந்தப் படையைத் தேர்ந்தெடுத்தது திரு மோஹன் சிங் என்பவர். சிங்கப்பூரிலிருந்த யுத்தக் கைதிகளை ஜப்பானிய அரசின் உதவியுடன் விடுவித்து ஒன்று சேர்த்து இந்தியாவிற்குச் செல்ல முடிவுடன் ஏற்படுத்தப் பட்டிருந்தது. ஆனால் இவரின் நண்பர் ஒருவர் பிரிட்டி்ஷாருக்கு உதவி செய்கிறதோ என ஜப்பான் அரசுக்குச் சந்தேகம் வர இவர் படைத் தலைமையை விட்டு விட்டுப் படையையும் தன்னிடம் இருந்து ராஷ் பிஹார் போஸிடம் ஒப்படைக்க, அவரோ சரியான தலைமை இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த நேரம் அப்போது. போஸ் அங்கே போய்ச் சேர்ந்தார். 1943 ஜூலையில் சிங்கப்பூரில் ஒரு பொதுக் கூட்டம் நடத்தி நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தலைமையை ஏற்றுக் கொள்வதாய் உறுதியுடன் 85,000 வாலிபர்கள் அந்தப் படையில் இணைந்தனர். இதற்குத் தான் இந்திய தேசீயப் படை என்று பெயரிடப் பட்டது. ஆசியாவிலேயே முதல் முறையாக இந்தப் படையில் பெண்கள் தனிப் படையாக அணி வகுத்தனர், திருமதி ல்ஷ்மி என்னும் தமிழ்நாட்டுப் பெண்ணின் தலைமையில். (அவர் சில வருடங்கள் முன்வரை உயிருடன் இருந்தார். சுதந்திரப் பொன்விழா ஆண்டில் பேட்டி வந்திருக்கிறது என நினைக்கிறேன்.)

முதல் முறையாகத் தனியான அரசு நிர்மாணிக்கப் பட்டு மூவர்ணக் கொடி ஏற்றப் பட்டது. நிதியையும் தனியாகக் கையாள முடிவு செய்தனர். தனியாக நீதிமன்றங்கள் ஏற்படுத்தப் பட்டன. சட்டங்களும், விதிமுறைகளும் ஏற்படுத்தப் பட்டன. இந்த அரசை 9 நாடுகள் அங்கீகரித்தன. அவை ஜெர்மன், ஜப்பான், இத்தாலி, க்ரோவே்ஷியா, Wang Jing WEir Govt. in Nanjung, தாய்லாந்து, பர்மா, மஞுகோ மற்றும் பிலிப்பைன்ஸ். அப்போது ரஷியா இந்த அரசை ஆதரிக்க வில்லை எனவே பலரும் நினைத்தனர். ஆனால் சமீபத்தில் வெளியிடப் பட்ட செல அரசுக் குறிப்புக்களில் இருந்து அதுவும் ஆதரித்திருக்கிறது.

சந்தேகங்களுக்கு விளக்க ஒரு சிறிய தடங்கல்

முதலில் நேற்றுப் பின்னூட்டம் போட்டவர்களுக்குச் சில விஷயங்கள் புரியவில்லை எனத் தெரிகிறது. போஸ் காங்கிரஸில் இருந்து விலகியதும் ஃப்ார்வர்டு ப்ளாக் கட்சி ஆரம்பித்ததை எழுத இருந்தேன். பொற்கொடி போஸ் ஏன் பகத்சிங் தூக்கிலிடப் பட்டபோது சும்மா இருந்தார் எனக் கேட்கவே அவளுக்குப் பதில் கூறும் விதத்தில் எழுதிய அந்தப் பதிவுகளில் வருஷமும், தேதிகளும் குறிப்பிடாததால் தொடர்பு இல்லை எனத் தோன்றுகிறது. பல முறை சிறையில் அடைக்கப் பட்ட போஸ் 1930-ல் நாடு கடத்தப்பட்டு ஐரோப்பா செல்கிறார். அதற்குப் பின்னர் வந்த நாட்களில் தான் பகத்சிங், சுக்தேவ் போன்றோரின் தூக்குத் தண்டனை நிறைவேறுகிறது. இந்த இளைஞர்களைப் பொறுத்த வரை கடைசி வரை நாட்டு விடுதலையை உயிர் முச்சாய்க் கொண்டிருந்தாலும் காந்தி இவர்களை ஒரு பொருட்டாய் எண்ணவில்லை என்பதும் நிஜம். வரலாற்று உண்மை. அபி அப்பா சொன்னது போல் நான் சொல்லாதது எத்தனையோ இருக்கிறது. அப்புறம் போஸ் 2-ம் உலக யுத்தம் ஆரம்பித்ததும் தான் ஒத்துழையாமை இயக்கத்திற்கு அறைகூவல் விடுக்கிறார். யுத்தம் ஆரம்பிக்கும் சிலநாட்கள் முன்தான் ஃபார்வர்டு ப்ளாக் கட்சி ஆரம்பிக்கப் படுகிறது. 40களின் ஆரம்பத்திலும் போராட்டம் நடத்துகிறார், பின்னர் 41-லும் தான் ஜனவரி மாதம் 26-ம் தேதி தப்பிச்செல்கிறார். ஓரளவு வரிசையாய்த் தான் எழுதுகிறேன். சிலவற்றை நினைவில் இருந்தும், தேதி, மாதங்கள் போன்றவற்றைக் குறித்துக் கொண்டும் எழுதுவதால் முன்னும் பின்னுமாய் இருக்கிறது. கூடிய வரை ஒழுங்கு செய்கிறேன்.

மணிப்ரகாஷுக்கு,
இங்கிலாந்து பார்லிமென்டில் உள்ள இரு சபைகளில் கன்சர்வேட்டிவ் சபை அந்த நாட்டுப் பிரபுக்கள், இளவரசர்கள், பெரும்பணக்காரர்கள் நிறைந்தது. இவர்கள் தான் முன்னால் முடிவெடுக்கும் நிலையில் இருந்தனர். காலப் போக்கில் மாறிப் பின்னர் "ஆலிவர் க்ராம்வெல்" என்று எண்ணுகிறேன். இவர் அரசியலில் புகுந்ததும் அப்போதிருந்த அரசனைக் (King Charles?1வது சார்லஸா 2வதா என்பதும் நினைவில் இல்லை.சரியாய் நினைவில்லை.) கழுத்து வெட்டிக் கொலை செய்து விட்டு அவர் பிரதமாரய் வந்த போது தான் மன்னராட்சி என்பது பேருக்கு இருக்க ஆரம்பித்தது. அப்போது ஏற்பட்டது தான் சாமானியர்களுக்கான லேபர் கட்சி. இந்தக் க்ராம்வெல் ஒரு கசாப்புக் கடைக்காரரின் பிள்ளை என்பதால் ஆடு, மாட்டை அறுக்கிற மாதிரி மன்னரை அறுத்துவிட்டார் என்று பேசிக் கொள்வார்கள் என்பதாய்ப் படித்திருக்கிறேன். அவரைப் பிரபுக்களும், மன்னரும் " butcher boy" என்றே அழைப்பார்கள் என்றும் படித்திருக்கிறேன். நம் நாட்டில் மாறி மாறி வந்து அரசாளும் அரசியல் கட்சிகள் போல இவையும் மாறி மாறி வரும். இந்தப் பிரபுக்கள் கட்சிக்கும் அதன் உறுப்பினர்கள் ஆன பிரபுக்களுக்கும் இந்தியா என்றாலே பிச்சைக்கார நாடு என்ற எண்ணம். இத்தகைய பிரபுக்களில் ஒருவரான சர் வின்ஸ்டன் சர்ச்சில் பிரதமராய் இருக்கும் சமயம் தான் 2-ம் உலகப் போர் வந்தது. சர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள் கடைசி வரை இந்தியா சுதந்திரம் பெறுவதை எதிர்த்தார். இது மாதிரி பல பேர் இருந்திருக்கிறார்கள். சரித்திரப் பாடம் பிடிக்காதோ உங்களுக்கு? :D
*************************************************************************************

Thursday, April 26, 2007

போஸ் தப்பித்தார்!!!

ஆங்கில அரசு உண்மையில் போஸையும் அவரின் சொல்லாற்றலையும் செயலாற்றலையும் கண்டு பயந்தது. அவர் பலமுறை சிறையில் அடைக்கப் பட்டார். அதில் அநேகம் முறை மாண்டலே சிறையில் நாடு விட்டு நாடு அடைக்கப் பட்டார். காங்கிரஸின் மற்ற தலைவர்களைப் போல் எந்த விதமான செள்கரியமும் பெறவில்லை. எல்லாவற்றுக்கும் மேல் 1930-ல் ஐரோப்பாவிற்கு நாடு கடத்தப் பட்டு அவர் தந்தை இறந்த போது வைதீகச் சடங்குகளில் மட்டும் கலந்து கொண்டு உடனேயே திரும்ப வேண்டும் என்ற நிபந்தனையுடன் கல்கத்தாவில் அனுமதிக்கப்பட்டார். 36 வரை ஐரோப்பாவில் சுற்றி வந்த போஸ் பல தலைவர்களையும் சந்தித்துப் பேசி ஆதரவு திரட்டினார். ஆங்கில அரசு அவர் இறந்து விட்டார் என்று அவதூறு கிளப்பியும் அவர் ஜெர்மனியில் இருந்து அந்நாட்டு அரசு உதவியுடன் ரேடியோவில் பேசித் தான் உயிருடன் இருப்பதைத் தெரியப் படுத்தினார். "நான் சுபா்ஷ் சந்திர போஸ்! இன்னும் உயிருடன்தான் இருக்கிறேன்." என்று ஆரம்பித்து அவர் பேசிய பேச்சு சரித்திரப் பிரசித்தி பெற்றது. இதற்குப் பின்னர் தான் காங்கிரஸில் இருந்து விலகி, "அகில இந்திய ஃபார்வர்டு ப்ளாக் கட்சி"யை ஆரம்பிக்கிறார். இதை ரவீந்திரநாத் தாகூர் மஹாஜதி சதனில் அடிக்கல் நாட்டித் துவக்கி வைக்கிறார்.

கட்சி ஆரம்பித்தாலும் தன்னுடைய கொள்கைகளைக் கைவிடாமல் ஆங்கில அரசு 6 மாதத்துக்குள் நாட்டிற்கு நிபந்தனை அற்ற சுதந்திரம் கொடுக்க வேண்டும் எனவும், நாடு முழுதும் ஒத்துழையாமை இயக்கம் நடக்கும் எனவும் அறிவித்தார். அப்போது 2-ம் உலக மஹா யுத்தம் ஆரம்பிச்சு நடந்து கொண்டிருந்த சமயம். போஸ் இந்தச் சமயம் தான் நாம் சுதந்திரம் பெறச் சரியான தருணம் என்று நினைத்ததோடு அல்லாமல், ஒரு நாடு சுதந்திர நாடாக இருக்க அது தனக்கென்று தனிப்படை, நீதிமன்றங்கள், விதிமுறைகள், சட்டங்கள், தொழில்துறைகள், பணவசதி எல்லாம் பெற்றிருக்கவேண்டும் என்றும் நினைத்தார். அதற்காகவே காங்கிரஸில் செயல் படுத்த முடியாத National Planning Committee-ஐ மீண்டும் அறிமுகம் செய்தார். குறைந்தது நாடு சுதந்திரம் அடைந்து 20 வருடங்களுக்காவது Socialist Authoritarianism இருக்க வேண்டும் என்றும் நினைத்தார். உலகப் போர் அறிவிக்கப் பட்டதும் காங்கிரஸ் கட்சி ஆட்சியாளர்களுக்குத் துணையாக ஒத்துழைக்க நினைக்க போஸோ ஒத்துழையாமை இயக்கம் நடத்த நினைத்தார். காந்தி அதை ஆதரிக்கவில்லை. பிரிட்டஷார் பலவீனம் அடைந்திருந்த இந்தச் சமயம்தான் நமக்குச் சரியான சமயம் என்பது போஸின் கருத்து. ஆனால் காந்தி அதைத் திட்டவட்டமாய் நிராகரித்தார். போஸ் கல்கத்தாவில் ஒரு பொதுக் கூட்டம் நடத்திக் குறைந்த பட்சம் கல்கத்தா டல்ஹெளசி ஸ்கொயரில் இருந்த " Holwell Monument"-ஐ எடுக்கச் சொல்லிப் போராட்டம் நடத்தினார். ஆங்கில அரசு அவரைக் கைது செய்து அலிப்பூர் ஜெயிலில் அடைத்தது. 7 நாட்கள் போஸ் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். அரசு அவரை விடுதலை செய்தது என்றாலும் கல்கத்தா வீட்டில் வீட்டுச் சிறை வைத்தது. இடைவிடாமல் கண்காணிப்புச் செய்தது. நாட்டையும், வீட்டையும், கல்கத்தாவையும் விட்டு வெளியில் செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப் பட்டது. ஆனால் போஸ் அங்கிருந்து தப்பிச் செல்ல முடிவு செய்தார். தப்பியும் சென்றார் மிகவும் சாமர்த்தியமாய்!

ஜெர்மனிக்குத் தப்பிச் செல்ல முடிவு செய்த போஸ் என்ன செய்யவேண்டும் எனத் திட்டம் போட்டுக் கொண்டார். ஆப்கனில் அப்போது வடமேற்குப் பிராந்திய எல்லையில் இருந்த அப்போதைய ஃபார்வர்டு ப்ளாக் கட்சித் தலைவர் ஆன மியான் அக்பர்ஷா உதவியுடன் தப்ப முடிவு செய்தார். இந்தியாவில், கல்கத்தாவில் இருந்த தன்னுடைய வீட்டில் இருந்து தன்னுடைய மருமகன் சிசிர் கே. போஸின் உதவியுடன் முஸ்லீம் மதகுருவின் வேஷம் தரித்துப் பெ்ஷாவரை வந்தடைந்தார். பெ்ஷாவர் கன்டோன்மென்டில் அக்பர் ஷா, மொஹம்மத் ஷா, பகத்ராம் தல்வார் உதவியுடன் அவர்கள் நண்பர்களுடன் தங்கி இருந்து அங்கே இருந்து செவிட்டு, ஊமை வே்ஷத்தில் தப்ப முடிவு. ஏனெனில் இம்முறை ஒரு பதானைப் போல் வேஷம் தரித்திருந்த போஸுக்கு உள்நாட்டு மொழி தெரியாது. வழியில் சோதனை செய்யும்போது உள்நாட்டு மொழி தெரியாமல் மாட்டிக் கொள்ள நேரிடுமே. ஆகையால் அக்பர் ்ஷாவின் ஆலோசனைப்படி செவிட்டு ஊமை வே்ஷத்தில் ஆப்கன் எல்லையைக் கடந்து ரஷியாவுக்குள் நுழைந்தார். எல்லையைக் கடக்க அவருக்கு உதவியது ஆகா கானின் ஆட்கள். ர்ஷியாவின் ஆங்கிலேய எதிர்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த போஸிற்கு ர்ஷிய அரசுக்கு இந்திய சுதந்திரத்தில் அவ்வளவாய் ஆர்வம் இல்லை எனக் கண்டு அங்கிருந்து இத்தாலி போகிறார். அங்கே இருந்து பின் ஜெர்மன் போய் ஹிட்லரைச் சந்திக்கிறார். அனைவரும் ஹிட்லரையும் அவரின் யூத எதிர்ப்பையும் கண்டு அஞ்சி நடுங்கி இருக்க போஸ் அவரின் இந்தக் கொள்கைகளைப் பகிரங்கமாய்ச் சாடுகிறார். ஆங்்கில அரசுக்கு அவர் ஜெர்மன் செல்வது தெரிந்ததும் அதைத் தடுக்கப் பார்க்கிறது. முடியவில்லை என்றதும் அவரைக் கொலை செய்யுமாறு ஆட்களை நியமனம் செய்கிறது.
ஜெர்மன் செல்லும் வழியில் பலமுறை ஆங்கில அரசு அவரைக் கொலை செய்ய முயற்சி செய்கிறது. இதன் விவரங்கள் சமீபத்தில் வெளிவந்த சில குறிப்புக்களில் இருந்து தெரிய வருகிறது. ஜெர்மனில் இருந்த போஸ் செயதது என்ன?

போஸ் ஐரோப்பாவில் நாடு கடத்தப் பட்டு இருந்த சமயங்களில் தன் சுதந்திரப் போரைப் பற்றி "The Struggle" என்னும் பெயரில் ஒரு புத்தகம் ஒரு பாகம் எழுதினார். அது லண்டனில் வெளியிடப் பட்டு அனைத்துத் தரப்பினாலும் பாராட்டுப் பெற்றது. லண்டனின் பிரசித்தி பெற்ற Lawrence & Wishart Publishers published the book in January 17 1935. British Press வரவேற்பைப் பெற்றது அந்தப் புத்தகம். ஐரோப்பா முழுதும் வரவேறுபுப் பெற்ற அந்தப் புத்தகம் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய அரசால் இந்தியாவில் வெளியிடப் படுவது தடுக்கப் பட்டது. இந்தியாவிற்கான Secretary of State Samuel Hoare, House of Commons-ல் சொன்னார்: மேற்கண்ட புத்தகம் இந்தியாவில் வெளியிடப் பட்டால் இந்தியாவில் வன்முறையும் புரட்சியும் வெடிக்கும். ஆகவே தான் அதை நான் தடை செய்தேன்." என்றார். இந்தியா சுதந்திரம் அடைந்தது, லேபர் கட்சியைச் சேர்ந்த "அட்லி" பிரதமராய் இருந்தபோது. கன்சர்வேட்டிவ் கட்சி ஒரு போதும் இந்திய சுதந்திரத்தை ஆதரிக்கவில்லை.

Wednesday, April 25, 2007

காந்திக்கும் போஸுக்கும் பனிப்போர் ஏன்?

Wற்கெனவே ஆங்கிலேய அரசால் நாடு கடத்தப் பட்டு ஐரோப்பா சென்றிருந்த போஸ் மறுபடி தாய்நாடு திரும்பியதும் ஆங்கிலேய அரசால் சிறையிலும் அடைக்கப் பட்டார். கிட்டத் தட்ட 11 முறை அவர் சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார். அதிலே உடல்நலமும் பாதிக்கப் பட்டிருக்கிறார். ஆகவே 37-ல் ஆஸ்திரியாவிற்குச் சிகிச்சை எடுத்துக் கொள்ளச் சென்ற போஸ் அங்கே இருக்கும்போது தான் தான் போட்டியின்றிக் காங்கிரஸ் தலைவராய்த் தேர்ந்தெடுக்கப் பட்டதை அறிகிறார். அப்போது 1938-ம் ஆண்டு. காந்தி நினைத்தது வேறு. ஆனால் போஸ் அப்போது ஆஸ்திரியாவில் இருந்து இங்கிலாந்து சென்று அங்கே உள்ள முக்கியத் தலைவர்களைச் சந்திக்கிறார். அவர் சந்திப்பில் இடம் பெற்றவர்கள் கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரபுக்கள் மட்டுமில்லாது, இந்தியாவிடம் அனுதாபம் கொண்டு அதற்குச் சுதந்திரம் கொடுக்க ஆதரவு கொடுத்து வந்த லேபர் கட்சி மட்டும் லிபரல் கட்சிப் பிரமுகர்களும் அடங்குவர். சர் ஸ்டாஃப்போர்டு கிரிப்ஸும் அவர் சந்தித்த பிரமுகர்களில் ஒருவர்.

இந்தியா எந்த விதமான நிபந்தனைகளும் இன்றிச் சுதந்திரம் அடைய வேண்டும் என்ற தன்னுடைய ஆசையை போஸ் இப்போது காங்கிரஸ் தலைவர் ஆனதின் மூலம் நிறைவேற்றிக் கொள்ள ஆசைப் பட்டார். தேச சுதந்திர விஷயத்தில் தன்னுடைய இந்த முடிவுக்கு மாற்றுக் கருத்து இருக்காது எனவும் எதிர்பார்த்தார். ஆங்கிலேய அரசுக்கு எதிராய் காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பையும் வலுப்படுத்தி, நிபந்தனை அற்ற சுதந்திரம் வேண்டும் எனவும், அதே சமயத்தில் தேசம் முழுதும் ஒரே சமயம் போராட்டங்கள் நடத்தவும் தீர்மானிக்கிறார். ஆனால் அஹிம்சைக் கொள்கை என்னும் கடலில் மூழ்கிப் போன காந்தீயவாதிகளுக்கு, காந்தி உள்பட போஸ் இப்படி முடிவெடுத்தது பிடிக்கவில்லை. அவர்கள் இந்தியாவில் உள்ள ஆங்கிலேயப் பிரதிநிதிகளிடம் ஒருவிதமான புரிதலுடன் இருந்து வந்தார்கள். இருவருக்கும் இடையே understanding சரியான விகிதத்தில் இருக்கவே அவர்களை எதிர்த்து ஏதும் செய்ய இவர்களுக்கு இ்ஷ்டம் இல்லை. போஸ் தாய்நாடு திரும்புகிறார். National Planning Committee ஆரம்பித்து உறுப்பினர்களை நியமித்துத் தொழில் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படவேண்டும் எனச் சொல்கிறார். தொழில் துறைகளினால் நாடு முன்னேற வழி இல்லை எனச் சொல்லிக் கொண்டிருந்த காந்தீயக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர்களுக்கும், காந்திக்கும் இதில் உடன்பாடு இல்லை. ஆட்சேபிக்கிறார்கள். அதே வரு்ஷம் "மூயூனிக்" நகரில் ஏற்பட்ட ஒப்பந்தத்துக்குப் பின் போஸ் பகிரங்கமாய் அறை கூவல் விடுகிறார் நாடு தழுவிய போராட்டத்துக்கும், நிபந்தனை அற்ற சுதந்திரத்துக்கும், மக்களுக்கு. மக்கள் நடுவில் கிளர்ச்சி ஏற்படத் துவங்குகிறது.

ஆனால் காந்தீயவாதிகளுக்கு இந்தத் தேசம் தழுவிய போராட்டத்தில் துளிக்கூட இஷ்டம் இல்லை என்பதோடு 2-உலகப் போர் நடந்தால் ஆங்கில அரசுக்கு ஆதரவு தெரிவிக்கவும் தயாராய் இருந்தார்கள். சுதந்திரம் சில வருடங்கள் தள்ளிப் போகலாம், தப்பில்லை எனவும் நினைத்தார்கள். காந்திக்கும் போஸுக்கும் நடுவே இடைவெளி அதிகம் ஆகிறது. இந்தச் சமயம் மறு தேர்தல் வருகிறது காங்கிரஸ் தலைவர் பதவிக்கு. அப்போதே காங்கிரஸில் இடதுசாரிகள் எனப்படும் ஒரு கூட்டம் காந்தியக் கொள்கைகளில் இருந்து மாறுபட்டு இருந்தார்கள். இவர்கள் பெரும்பான்மையாகவும் இருந்தனர். இவர்களைத் தவிர சோஷலிஸ்ட எனப்படுபவர்களும் காங்கிரஸுக்குள்ளேயே இருந்து வந்தனர். இவர்கள் எல்லாரும் போஸ் மறுமுறையும் காங்கிரஸ் தலைவராய் வர ஆதரவு தெரிவிக்கக் காந்தியால் அவருடைய சொந்த வேட்பாளராக நியமிக்கப் பட்ட "பட்டாபி சீதாராமையா" தோற்றுப் போனார். இதைத் தன் சொந்தத் தோல்வியாகக் கருதினார் காந்தி. "ஹரிஜன்" பத்திரிகையிலும் இதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். உண்மையில் இது காந்தியின் இந்திய அரசியல் வாழ்வில் 1923-24-க்குப் பின் வந்த முதல் தோல்வி என்றே சொல்லலாம்.

இருந்தாலும் காங்கிரஸ் தலைவராய்ப் பொறுப்பேற்றுக் கொள்வதில் தயங்காமல் போஸ் தன் வேலைகளைத் தொடருகிறார். மூன்றாம் முறையாக காங்கிரஸ் தலைவராய்ப் பொறுப்பேற்றுக் கொள்ளும் போஸ் 1939-ல் இன்னும் ஆறு மாதத்துக்குள்ளே இந்தியா நிபந்தனை அற்ற சுதந்திரம் அடைய வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வருகிறார். அதே சமயம் நாடு தழுவிய போராட்டத்துக்கும் மக்களைத் தயாராகுங்கள் என்று கூறுகிறார். காந்தி அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார். உண்மையில் காங்கிரஸில் அப்போது காந்தியவாதிகள் சிறுபான்மையாக இருந்தாலும், அவர்கள் அனைவரும் "காந்தி" என்ற ஒரு மனிதரின் தலைமைக்கும், ஆளுமைக்கும் கட்டுப் பட்டு இருந்தனர். அடுத்தது நேரு அவர்கள். இவருக்கும் ஆங்கிலேய அரசிடம் செல்வாக்கு இருந்தது. ஆகவே வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால் இவர்கள் இருவரையும் மீறி போஸால் ஏதும் செய்ய முடியாமல் போயிற்று. காங்கிரஸ் கட்சியின் விதிகளின்படி காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு உறுப்பினர்களை காங்கிரஸ் தலைவர்தான் தீர்மானித்து நியமிக்க வேண்டும். ஆனால் போஸால் அதைத் தீர்மானிக்க முடிந்தாலும் நியமிக்க முடியவில்லை. காந்தி ஆதரவாளர்கள் சொல்லுபவர்களை நியமிக்கும்படி நிர்ப்பந்தப் படுத்தப் பட்டார். (இதை போஸே எழுதி இருக்கிறார்.) இப்படித் தன்னிச்சையாக அவர் செயல் படமுடியாமல் எல்லா விதத்திலும் அவருக்கு மறைமுகத் தடை போடப் பட்டது. இந்தச் சமயம் இடது சாரிகள் கொடுத்து வந்த ஆதரவும் சரியாக செயல்படுத்த முடியவில்லை. சோ்ஷலிஸ்ட்டுகளோ இதிலிருந்து தம்மை விலக்கிக் கொண்டனர்.ொரு பொம்மைத் தலைவராக ரப்பர் ஸ்டாம்பாக இருக்க விரும்பால் போஸ் தானே விலகி ராஜினாமா கொடுக்கும்படியான சூழ்நிலை உருவாக்கப் பட்டது.

இந்த விவரங்கள் போதுமா? போஸ் பகத்சிங் தூக்கிலிடப் பட்டதற்கு ஆதரவு ஒன்றும் தெரிவிக்கவில்லை. அப்போது கல்கத்தா இளைஞர் காங்கிரஸ் தலைவராய் இருந்தாரோன்னு நினைக்கிறேன். எதிர்ப்பைத் தெரிவித்துவிட்டு "மாண்டலே" சிறையில் இருந்தார். எதுக்கும் ஒருமுறை கூகிளாண்டவர் கிட்டேயும் கேட்டுக்கறேன். போர்க்கொடி, இது போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

Tuesday, April 24, 2007

உதித்தது புதிய உத்வேகம்!

ரவீந்திரநாத் தாகூருக்குக் காந்தி அடிகளிடமும், நேருவிடமும் செல்வாக்கு உண்டு. அப்படி இருந்தும் போஸின் விஷயத்தில் அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. காந்தியோ என்றால் வாயே திறக்காமல் உண்ணாவிரதத்துடன் மெளன விரதமும் இருந்து காரியத்தைச் சாதித்துக் கொண்டார். மாக்கியவல்லியின் தந்திரம் என்றே சொல்லலாம் இதை. மாக்கியவல்லிக்கும் காந்திக்கும் ஒரே வித்தியாசம் காந்தி வாய் பேசாமல் "அஹிம்சை" என்ற பேரால் தன் வேலைகளை நடத்திக் கொண்டது தான். தன்னுடைய பலம் தெரிந்திருந்தது அவருக்கு. போஸ் தன்னை மதிக்கிறார், வணங்குகிறார், தன் பேச்சுக்கு மறு பேச்சுப் பேசமாட்டார் என்று தெரிந்தே சின்டிகேட்டைக் கூட்டி அவர்கள் மூலம் போஸின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர ஏற்பாடு செய்தார். வெற்றியும் பெற்றார். இதை emotional black mail என்றே சொல்லலாம். டொமினிக் லாப்பியர் கூட தன்னுடைய "Freedom at Midnight" புத்தகத்தில் நவகாளி யாத்திரை சம்பவத்திலும், நேரு பிரதம மந்திரியாக வர ஏற்பாடு செய்த வி்ஷயத்திலும் காந்தியை " Wily Gandhi" என்றே குறிப்பிடுவார். ஆங்கில அரசுக்கும் காந்தியின் பேரில் அதிக நம்பிக்கை இருந்தது என்றே சொல்லலாம். போஸ் வந்தால் தங்களுக்கு ஆபத்து என்பதை அவர்களும் உணர்ந்தே இருந்தார்கள்.

ஆனால் கட்சிக்குள் அனைவருக்கும் இது மகிழ்ச்சி அளிக்க வில்லை. திரு அமலே்ஷ் திரிபாதி போஸுக்குப் புரிய வைக்க முயற்சி செய்தார். காந்தி தான் பின்னிருந்து இயக்குவதாய் எடுத்துச் சொல்லி அவர் ஏன் நேரிடையாக இதைச் செய்யக் கூடாது? என்றும் கோபம் அடைந்தார். ஆனால் போஸ் ஆங்கில அரசைப் புரிந்து கொண்ட அளவிற்கு காந்தியைப் புரிந்து கொள்ளவே இல்லை. போஸ் இதில் காந்தியின் பங்கு இல்லை என்றே நம்பினார். அல்லது மற்றவர்களைப் போல் காந்தியின் மீது அவர் கொண்டிருந்த "தெய்வ நம்பிக்கை" அவரை அவ்வாறு எண்ணச் செய்ததோ என்னவோ? ஆனாலும் அமலே்ஷ் திரிபாதி சும்மா இருக்க வில்லை. நேருவுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறுகிறார்: "அந்தக் கிழவர் சண்டை போட ஆசைப் பட்டால் நேரடியாய்ப் போட்டிருக்கலாமே? ஏன் மற்றவர்களை ஏவி விட்டு வேடிக்கை பார்க்கிறார்?" என்று. திரு நேதாஜியின் சகோதரரும் இவ்வாறே கூறுகிறார்.நேருவுக்கு அவர் எழுதிய ஒரு கடிதத்தில் இவ்வாறு கூறுகிறார்:"நடந்த ்விஷயங்கள் எதுவும் எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாய் இல்லை. இது இவ்வாறு நடந்திருக்க வேண்டாம். இதனால் நீங்கள் அடைந்த லாபம் தான் என்ன?" என்று கேட்கிறார். ஆக காந்தியைப் பொறுத்த மட்டில் போஸின் வளர்ச்சியை எவ்விதத்திலாவது தடுக்க வேண்டும். அவர் நினைத்தவாறே செய்தார். இதற்கு போஸ் நாடு கடத்தப் பட்ட சமயம் ஐரோப்பியப் பெருந்தலைவர்களைச் சந்தித்ததும் அவர்களிடம் ஆதரவு திரட்டியதும் அதில் வெற்றி அடைந்து வந்ததும் முக்கியக் காரணமாய்ச் சொல்லப் படுகிறது. எப்படியோ வெளியில் தானாகவே ராஜினாமா கொடுத்டு விட்டு வந்த போஸ் சும்மா இருக்கவில்லை.

உதித்தது ஃபார்வார்ட் ப்ளாக் கட்சி. அதன் விவரம் நாளை!

Sunday, April 22, 2007

போஸ் நீக்கப் பட்டார்!

காந்தியை மகாத்மா என்றும் தேசத் தந்தை என்றும் சொல்லுபவர்களுக்குக் கொஞ்சம் ஆச்சரியமாய்த் தான் இருக்கும் இது. என்றாலும் அப்போது நடந்த வி்ஷயத்தை இப்போ மற்றச் சிலரின் பார்வையில் இருந்தும் பார்க்கலாம். போஸின் அசுர வளர்ச்சி காந்தியைப் பிரமிக்க வைத்தது என்றே சொல்ல வேண்டும். ஆனால் இந்த வளர்ச்சி காந்திக்குப் பிடிக்கவில்லை. காந்தி சொன்னபடி தேர்தலில் நிற்க நேருவும் படேலும் மறுத்தாலும் காங்கிரஸின் சின்டிகேட்டைக் காந்தி கூட்ட ஏற்பாடு செய்து அதில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரச் செய்து போஸை நீக்க மறைமுக ஏற்பாடுகள் செய்தார் என்றே சொல்ல வேண்டும். இதில் மாக்கியவல்லியின் தந்திரம் வெளிப்படுகிறது என்று சொல்கிறார்கள். ஒரே வித்தியாசம் மாக்கியவல்லியின் அரசியல் ஆன்மீகம் கலக்காதது. காந்தியின் அரசியல் ஆன்மீகத்துடன் பின்னிப் பிணைந்தது. ஆக்வே வித்தியாசம் யார் கண்ணையும், மனதையும் உறுத்தாமல் காந்தியால் தன் வேலைகளை நிறைவேற்றிக் கொள்ள முடிந்தது எனச் சொல்லலாம்.

காந்தியின் வார்த்தைகளிலேயே இதைப் பார்க்கலாம். ஜனவரி 29, 1939-ல் தன்னுடைய காரியதரிசியான மகாதேவ தேசாய்க்குக் காந்தி எழுதிய கடிதத்தில் கூறுகிறார். "திரிபுரா காங்கிரஸில் நான் கலந்து கொள்ளப் போவதில்லை" என்று. அதற்குப் பின் 3 பெப்ரவரியில் நேருவுக்கு எழுதுகிறார்:தான் காங்கிரஸ் கூட்டங்களில் கலந்து கொள்ளாமலேயே நாட்டுக்கு உழைக்கப் போவதாயும், தான் ராஜ்கோட் சென்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாயும் சொல்கிறார். 27 பெப்ரவரியில் ராஜ்கோட் அடைந்த காந்தி உண்ணாவிரதம் அறிவிக்கிறார். 3 மார்ச்சில் தேசாய், படேல் போன்றவர்கள் தங்களுடைய அதிகப் பிரசித்தி பெறாத 'PANT RESOLUTION" கொண்டு வருகிறார்கள். காந்தி அதற்கு ஒன்றும் வாயே திறக்கவில்லை. உண்மையில் போஸ் தோல்வி அடைந்திருந்தால் அப்போதும் காந்தி உண்ணாவிரதம் இருந்திருப்பாரா? காந்தி போஸிடம் உன்னுடைய தோழர்களுடன் ஒத்துப் போய் வேலைகளைச் செய் என்கிறார். அவர்கள் கருத்துக்கு மதிப்புக் கொடு என்கிறார். உண்மையில் போஸின் வெற்றியை விரும்பி இருந்தால் ஏன் பட்டாபி சீதாராமையாவின் தோல்வி என்னுடைய சொந்தத் தோல்வி என அவர் அறிவிக்க வேண்டும்? ஏப்ரல் 10 1939-ல் காந்தி பந்த் ரெசலூஷன் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. அது எனக்கு மிக்க மனவருத்தத்தை அளித்தது என்கிறார். உண்மை எனில் அவர் ஏன் தன் செல்வாக்கை உபயோகித்து அதைத் தடுக்கவில்லை? Amillion dollar question indeed!

இதை அவர் நேரடியாய்ச் செய்யாமல் மறைந்திருந்து தாக்கும் கொரில்லாப் போரைப் போல் பின் நின்று இயக்கினார் என்றே சொல்ல வேண்டும். ஆனால் அஹிம்சை என்ற பேரில். காந்தியின் பார்வையில் இது சரியே! காந்தியைத் தெய்வம் என நினைப்பவர்களுக்கும் இது சரியே! ஏனெனில் அன்றைய இளைஞர் கூட்டம் போஸின் தலைமையில் உற்சாகம் அடைந்து ஒரு புதிய இந்தியாவிற்கு வழிகாட்டப் போகும் தலைவர் என அவரை நினைக்க ஆரம்பித்து இருந்தனர். இது காந்தியின் செல்வாக்கிற்கு வீழ்ச்சி என்றே சொல்லலாம். வீழ்ச்சி அடைந்தவர் மேலே வரப் பார்ப்பது தவறு ஒன்றும் இல்லை அல்லவா? ஆனால் அவர் தன்னுடைய சொந்தக் காரணங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நாட்டின் நன்மைக்கு போஸின் தலைமை உகந்தது அல்ல என்னும் எண்ணம் வரும்படி நடந்து கொண்டதால், சர்தார் வல்லபாய் படேல் அப்போது உடல் நலம் கெட்டிருந்த போஸ் அவர்களின் வெற்றி "ஒரு அரசியல் ஜுரம். இதை நீக்க வேண்டும்" என்று சொல்லும்படி நேர்ந்தது. இதை அப்போதே அநேகத் தலைவர்கள் கேட்டிருக்கிறார்கள். முக்கியமாய் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார்.
(தொடரும்)

டிஸ்கி: எல்லாருக்கும் சந்தேகம் நான் பின்னூட்டம் அளிப்பது தமிங்கிலத்தில் என்பதால் எப்படி பதிவு எல்லாம் தமிழில் போடறேன் என்று. தமிழ் அஞசலில் நெருப்பு நரியில் இருந்து தட்டச்சு செய்கிறேன். தட்டச்சு செய்வதில் தேர்ச்சி அதிகம் என்பதால் என்னால் தட்டச்சு செய்ய முடிகிறது. ஆனால் எக்ஸ்ப்ளோரரில் பார்க்கும் போது தவறுகள் தெரிகின்றன. இருந்தாலும் ஓர் ஊகத்தின் பேரிலும், தமிழில் உள்ள பயிற்சியினாலும் ஓரளவு தட்டச்சு செய்ய முடிகிறது. அதனாலேயே வரும் பின்னூட்டங்களுக்குப் பதில் நெருப்பு நரியில் இருக்கும்போது கொடுக்க முடியவில்லை. யார் என்ன சொன்னாங்கன்னு நினைவு வச்சுக்கணுமே அதான். பொறுத்துக்குங்க. வேறே வழியே இல்லை. மற்றவழிகளெல்லாம் முயன்று பார்த்து விட்டேன். இங்கே அது முடியலை. ஆகவே இன்னும் கொஞ்ச நாளைக்கு எல்லாரையும் இப்படித்தான் வாட்டி எடுக்கணும்.

Saturday, April 21, 2007

காந்தி பயந்தாரா போஸிடம்?

மணிப்ரகா்ஷின் சந்தேகங்களுக்குப் பதில் அப்புறமாய்க்கொடுக்கிறேன். ச்யாம் சொன்னதும் சத்யப்ரியனின் பதிவிலேயும் போய்ப் பார்த்தேன். வரு்ஷமும், போஸ் எத்தனாவது குழந்தை என்பதிலும் நான் எழுதியதும் அவர் எழுதி இருப்பதிலும் சற்றே வித்தியாசம் உள்ளது. நானும் கூகிளாண்டவர் தயவில் தான் எழுதி இருக்கிறேன் என்றாலும் இன்னும் நிச்சயப் படுத்திக் கொள்ள வேண்டும். இந்த சத்யப்ரியனும் கல்கி பத்திரிகையில் அடிக்கடி எழுது சத்யப்ரியனும் ஒருவரா தெரியலை. இப்போ நேற்று வந்த பின்னூட்டங்களுக்கும் பதில் இப்போ இல்லை. அப்புறமாய்த் தான். போஸ் வாழ்ந்த காலத்துக்குப் போவோமா?
****************************************************************************************

2-வது முறையாக போஸ் தேர்ந்தெடுக்கப் பட்டார் என்று நேற்று எழுதி இருந்தேன்.முதலில் 1938-ல் ஹரிபுராவில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மகாநாட்டில் காந்தியே போஸின் பெயரை முன்மொழிந்து, வழி மொழிந்து அவர் காங்கிரஸின் தலைவராக வர ஏற்பாடு செய்தார்.ஒரே வரு்ஷத்தில் மனம் மாறிய காந்தி 1939-ல் திரிபுரா காங்கிரஸில் நேருவையும், பட்டேலையும் புதிய தேர்தலில் நிற்கச் சொன்னார். ஆனால் இருவரும் மறுக்கவே பட்டாபி சீதாராமையாவை தன்னுடைய வேட்பாளராக நிறுத்டினார். ஒரு வேளை இளம் புயல் ஆன போஸ் காங்கிரஸில் துடிப்புடன் செயல்பட்டு வந்த காரணத்தால் அவரைத் தன் பால் ஈர்த்துக் கொள்வது சுலபம் என்று நினைத்தாரோ என்னவோ காந்தி அவர்கள். தெரியாது. ஏனெனில் ஏற்கெனவ ேபோஸ தேச ப்ந்து சி.ஆர். தாஸைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டிருந்ததையும் அவருடன்் சேர்ந்து பலமுறை சிறை சென்று ஒரு முறை நாடும் கடத்தப் பட்டதில் போஸின் பெயரும் சரி, அவரின் உழைப்பும் சரி மிக உயர்ந்த இடத்துக்கு வந்திருந்தது. அதுவும் ஐரோப்பாவிற்கு அவர் சென்ற சமயம் உயர் பதவிகள் வகிக்கும் முக்கியத் தலைவர்களுடன் சந்திப்பு ஏற்பட்டு அவர்களுடன் நட்புறவும் கொண்டார். இதுவும் அவரின் சாமர்த்தியமான் அணுகு முறை என்பதால் போஸ் பெயர் நாடு முழுதும் பிரபலமாய் இருந்தது. காந்தி அதை விரும்பவில்லை. அைத் தனக்குச் சாதகமாய் உபயோகிக்க முயன்ற காந்தியால் போஸைத் தன் இஷ்டத்துக்கு வளைக்க முயன்று தோற்றுப் போனார் என்றே சொல்ல வேண்டும். (காந்தி ஆதரவாளர்கள் மன்னிக்க வேண்டும். காந்தியின் பேரைக் கெடுக்கும் எண்ணம் ஏதும் இல்லை. இத்தனை நாள் கழிச்சு என் ஒருத்தியால் அது முடியவும் முடியாது.)செய்வதறியாது திகைத்த காந்தி அடிகளிடம் ஏற்கெனவே மன வருத்தத்தில் இருந்து வந்தார். 1931-ல் அப்போது தூக்கில் இடப்பட்ட பகத்சிங், ராஜ்குரு, சக்தேவ் போன்றவர்களை காந்தி ஆதரித்து ஆங்கிலேய அரசிடம் பேசுவார் என போஸ் எதிர்பார்த்தார்.

ஆனால் காந்தி அந்தச் சம்பவத்தைப் பற்றி வாயே திறக்க வில்லை. போஸுக்கு அதில் ஏமாற்றம் தான் என்றாலும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. அவரளவில் அவர் தான் தலைவராக இருந்தார். இன்னும் சொல்லப் போனால் முதன் முதல் காந்தியை, "மகாத்மா' என்றதும் போஸ் தான். 1939-ல் திரிபுராவில் கூடிய காங்கிரஸ் கூட்டத்தில் காங்கிரஸின் மூத்த தலைவர்களால் போஸின் செயல்பாடுகள் சரியில்லை எனவும் அவரை நீக்க வேண்டும் என்றும் முடிவு எடுக்கப் பட்டது. அந்தக் கூட்டத்துக் காந்தி போகவில்லை. போகாமல் நிராகரித்தார். ஆனால் அந்தக் கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவுகளை நிராகரிக்கவில்லை. போஸ் இடைவிடாமல் காந்தியை அணுகி மூத்தவர்களின் இந்தக் கசப்பான அணுகுமுறையை மாற்ற வேண்டினார். ஆனால் காந்தி செவி கொடுக்க வில்லை. மெளனம் சாதித்தார். மூத்த தலைவர்களுக்கோ என்றால் போஸின் இந்தப் பெயர், புகழை மங்கச் செய்து அவரின் அரசியல் வாழ்வே முடிந்து விடும் இத்தோடு என்ற எண்ணம். காந்திக்கும் உள்ளூர அந்த எண்ணம் இருந்திருக்குமோ என்னவோ? அவரும் பேசாமலே இருந்தார். ஏற்கெனவே பட்டாபி சீதாராமையாவின் தோல்வியால் தனக்கு ஏற்பட்ட சொந்தத் தோல்வி என நினைத்த காந்தி போஸ் காங்கிரஸை விட்டு வெளியே செல்வதையே விரும்பினார். அதற்காக காந்தி எல்லாவிதமான தந்திரங்களும் செய்தார் என்றே சொல்ல வேண்டும்.

காந்தி செய்தது சரியா? தப்பா? தெரியாது. போஸைக் கண்டு பயந்தாரா என்றும் தெரியாது. காந்தி ஆதரவாளர்களுக்கு இதை ஒத்துக் கொள்ள முடியாது. காந்தியை விட போஸ் அப்படி ஒண்ணும் பிரபலம் இல்லை. அவர் சிறிய அளவில் தான் தெரிந்தவர், காந்தி அப்படி இல்லை எனச் சொல்வார்கள். அப்படி என்றால் காந்தி ஏன் போஸ் தலைமை வகிப்பதில் அசெளகரியம் அடைய வேண்டும்? அவருக்கு என்ன தொந்திரவு போஸால் ஏற்பட்டது? போஸ் தலைமை வகிப்பதை ஏன் காந்தி விரும்பவில்லை? காந்தியை ஆலோசிக்காமல் எதுவும் போஸ் தன்னிச்சையாகச் செய்தது இல்லை. வேகம் தேவை அவருக்கு. அதற்குக் காந்தியுடன் வாதாடுவார். காந்தியின் அஹிம்சைக் கொள்கையினால் சுதந்திரம் தாமதப் படும் என்பது அவர் கருத்து. ஆனால் காந்தியோ என்றால் ஆங்கிலேய அரசை விட போஸின் தலைமையையும் அவர் புகழையும் கண்டு அதிகம் பயந்தாரோ என்று சொல்லும்படி அவர் நடவடிக்கை இருந்தது அந்தச் சமயத்தில். இன்றளவும் வங்காளியருக்குக் காந்தி திரிபுரா காங்கிரஸில் போஸுக்குச் செய்த அநியாயத்தை மறக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை போஸுக்குப் பின் தான் மகாத்மா.
(தொடரும்)

நன்றி:கூகிளாண்டவர்>

Friday, April 20, 2007

மெளன ராகங்கள்

முதல்லே புலி ரொம்பக் கோபத்தோடக் கொலைவெறியோட இருக்கிறதா வேதா சொன்னதாலே இந்தப் பதிவு புலிக்கு சமர்ப்பணம். புலி, இந்தப் பதிவிலே ஏதானும் தப்பா இருந்தா மெதுவா பின்னூட்டம் கொடுத்துக் கேளுங்க. தெரிஞ்ச பதிலையோ தெரியாட்டி ஏதோ பொய்யோ சொல்லிச் சமாளிச்சுப்பேன். பிராண்டற வேலை வேண்டாம்.
***************************************************************************************

பாரத மணித் திருநாட்டில் திரு அவதாரம் செய்த எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள். (ஹிஹிஹி, நானும் ஒரு தலைவி தான்.) அதிலே நமக்குத் தெரிந்த பிரபலமான தலைவர்கள் பலர் இருந்தாலும் சுதந்திரப் போராட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படி பணி ஆற்றிய எத்தனையோ தலைவர்களில் நம் அனைவராலும் "நேதாஜி" என்று அன்புடன் அழைக்கப் படும் திரு சுபாஷ் சந்திர போஸ் அவர்களில் முக்கியமானவர். சமீபத்தில் நம் இந்தியாவில் தகவல்கள் பெறும் சட்டம் ஏற்படுத்தப் பட்டதும் ஒருவர் திரு நேதாஜி பற்றிய தகவல்கள் அவருக்கு மிக அவசரமாய்த் தேவைப் பட்டதால் இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தை நாட அமைச்சகம் கையை விரித்து விட்டது. "நேதாஜியா? யார் அவர்? எங்கே இருந்தார்? சுதந்திரப் போராட்ட வீரரா? அப்படி ஒண்ணும் எங்க கிட்டே தகவல் இல்லையே?"னு சொல்லி விட்டது. சொன்னவர் யாரோ படிக்காதவர் இல்லை. இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தில் பொறுப்பான பதவி வகிப்பவர். ஒரு மாதம் முன்னால் இதைத் தின்சரிப் பத்திரிகைகளி படிச்சதில் இருந்தே மனம் கொதிப்படைந்தது. இன்றைய நாட்களில் விளம்பரம் எதுக்கும் தேவைப் படுகிறது. ஆனால் திரு நேதாஜி நாட்டின் நலத்தையும், அதன் விடுதலையையும், மக்களின் சுதந்திரத்தையும் மட்டுமே முதன்மையாக நினைத்தவர். அதற்காகப் பதவியைத் துறக்கவும் சித்தமாய் இருந்ததோடு துறந்தும் காட்டியவர். மக்கள் தலைவர். அவரைப் பின்பற்றிய அநேகரில் தமிழ்நாட்டவர் தான் அதிகம். ஆனால் இன்றய தலைமுறை அதிகம் அவரை அறிந்திருக்கவில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஒரிஸா மாநிலம் கட்டாக் ஜில்லாவில் 1897-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ம் தேதி திரு ஜானகிநாத் போஸுக்கும், பிரபாவதி போஸுக்கும் 6வது மகனாய்ப் பிறந்தார் திரு சுபா்ஷ் சந்திர போஸ் அவர்கல். அவருக்குப் பின் 2 குழந்தைகள் பிறந்தன அவர் பெற்றோருக்கு. 8 குழந்தைகளில் ஒருவரான போஸுக்கு வீட்டில் அவ்வளவாய்க் கவனிப்பு இல்லை என்றாலும் தந்தை படிக்க அனுப்பியது கல்கத்தாவில் உள்ள பிரசித்தியான ஆங்கிலேயப் பள்ளிக்கு. எல்லாக் குழந்தைகளையும் அங்கே அனுப்பிப் படிக்க வைத்த அவர் தந்தை போஸையும் அங்கே அனுப்பி வைத்தார். மிகவும் நன்றாய்ப் படித்து வந்த போஸ் அவர்கள் இந்தியர்களின் குழந்தைகள் அந்தப் பள்ளியில் நடத்தப் பட்ட விதத்தில் மேலும் மனம் வருந்தினார். படிப்பு முடிந்ததும் அவர் தந்தை அவரை மேல்படிப்புக்காகவும் அந்தக் கால கட்டத்தில் மிகவும் உயர் படிப்பெனக் கருதப் பட்ட ஐசிஎஸ் தேர்வு எழுதவும் போஸ் அவர்களை 1920-ல் இங்கிலாந்துக்குஅனுப்பினார். மனமே இல்லாமல் சென்ற போஸ் அவர்கள் 8 மாதங்களிலேயே ஐசிஎஸ்ஸில் முதல் இடத்தில் தேர்ச்சி பெற்றதோடு அல்லாமல் அங்கேயே நல்ல வேலையிலும் அமர்ந்தார். மேலதிகாரியின் நடத்தையில் மனம் வெறுத்துப் போய் போஸ் வெலையை ராஜினாமா செய்து விட்டு இந்தியா திரும்பினார்.

சுதந்திரப் போராட்டம் காந்தியைத் தலைவராகக் கொண்டு வேகம் பிடித்திருந்த அந்தக் கால கட்டத்தில் தாய்நாடு திரும்பிய போஸ் அவர்கள் முதலில் இளைஞர் காங்கிரஸ் காரியதரிசியாக இருந்தார். அந்தக் கால கட்டத்தில் அவருக்குத் "தேசபந்து சித்தரஞ்சன் தாஸ்" அவர்களுடன் நல்லுறவு ஏற்படவே இருவரும் கல்கத்தா முனிசிபல் தேர்தல்களில் தங்கள் உழைப்பினால் வெற்றி பெற்றனர். மேயராய்த் தேர்ந்தெடுக்கப் பட்ட சி.ஆர். தாஸ் சிலநாட்களில் இறந்து விட்டார். காந்தியின் தலைமையில் இயங்கி வந்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியக் காரியக் கமிட்டியின் காரியதரிசியாக 1927-ல் தேர்ந்தெடுக்கப் பட்ட போஸுக்கு காந்தியைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. வேகம் நிறைந்த போஸ் அவர்களுக்கு காந்தியின் மென்மையான அணுகுமுறையும், நிதானமான போக்கும் பிடிக்கவில்லை. ஏமாற்றம் அடைந்தார் என்றே சொல்ல வேண்டும். இந்தப் போரட்டங்களில் பலமுறை சிறைக்குச் சென்றார் போஸ். என்றாலும் அவர் மனம் உறுதிப் பட்டது. சற்றும் மனம் சலிக்க வில்லை.

1931-ம் ஆண்டு முதன் முறையாக அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராய்த் தேர்ந்தெடுக்கப் பட்ட போஸ் அவர்கள் தவிர்க்க முடியாமல் 2 ஆண்டுகளில் ஐரோப்பா சென்றார். ஐரோப்பாவில் இருந்து திரும்பியதும் மீண்டும் காங்கிரஸில் சேர்ந்து உழைத்தார். 1938-ல் இரண்டாம் முறையாக அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராய்த் தேர்ந்தெடுக்கப் பட்ட போஸுக்கு ஆதரவு நிறையவே இருந்தது. அவரின் அணுகுமுறையும் அனைவரையும் கவர்ந்தது. அவரின் சொற்பொழிவோ என்றால் கேட்கவே வேண்டாம். அனைவரையும் சுண்டி இழுத்தது. கவியரசர் ரவீந்திர நாத் தாகூர் போஸ் காங்கிரஸ் தலைவர் ஆனதைத் தன்னுடைய சாந்தி நிகேதனில் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார் என்றால் மற்ற சாதாரண மக்களைப் பற்றிச்சொல்லவா வேண்டும்?

மீதி கட்டாயமாய் நாளை வரும். இது தொடர்ந்து வெளி வர முயற்சி செய்கிறேன். அது வரை வேறு போஸ்ட வராது.

Thursday, April 19, 2007

பொண்ணு இப்படி இருந்தா?

Photo Sharing and Video Hosting at Photobucket



சச்சின் மாதிரிக் கல்யாணம் செய்துக்கலாம் தான். ஆனால் இது கொஞ்சம் ஓவரா இல்லை? என்ன புலி? இது எப்படி இருக்கு?

ஆணி வாங்கலையோ ஆணி, இந்திய ஆணி!

ஆணி ரொம்ப சேர்ந்து போனதால் 2 நாளா எழுதலை. எல்லாம் பழைய ஆணிகள். இந்தியாவிலேயே பிடுங்கிட்டு வந்திருக்கணும். முடியலை. இங்கே வந்து எல்லாம் செட் ஆகிப் பிடுங்க நாள் ஆயிடுச்சு. அதுக்குள்ளே நம்ம அணுக்கத் தொண்டர் கார்த்திக், வந்து ஆஃபீஸ் ஆணியை எல்லாம் விட்டுட்டு ஏன் மேடம் ஒண்ணும் எழுதலைன்னு கேட்டுட்டுப் போனார். காலையிலே அதுவும் காலங்கார்த்தாலேயே புலி வந்து (காஃபி கூடக் குடிக்காமல் இருந்தேன், அம்பி note the point) அப்போ வந்து எனக்கும் என் ஆருயிர்த் தோழி வேதாவுக்கும் சிண்டு முடியப் பார்த்துட்டு அதுக்கு எட்டாமல் தோற்றுப் போய்ப் போயிடுச்சு. ஹிஹிஹி, புலி இருக்கிறது சூடானிலே, வேதா இந்தியாவிலே, நான் யு.எஸ்ஸிலே. சிண்டு எப்படி எட்டும்? இந்த நாரதர் வேலை என் கிட்டே வேணாம்னு சொன்னா, புலி என்ன சொல்லுது தெரியுமா? மேடம், நாரதர் அம்பி தான், நான் புலி, உறுமறேன் பாருங்கனு அம்பியைப் போட்டுக் கொடுத்துட்டுப் போயிடுச்சு. புலி, இது எப்படி இருக்கு? நம்ம வேலை? அம்பிக்கும் உங்களுக்கு சிண்டு முடிஞ்சாச்சு! என் வழி தனீஈஈஈஈஈஈஈஇ வழீஈஈஈஈஈஈஈஈஈஈ (ரஜினி ஸ்டைலில் படிச்சுக்குங்க)அதெல்லாம், சூரிய சந்திரர்கள் உள்ள அளவும், இந்த நட்சத்திரங்கள் உள்ள அளவும், கடல் அலைகள் உள்ள அளவும், மணல்கள் உள்ள அளவும், மலைகள் உள்ள அளவும், என்னையும் வேதாவையும் சண்டை மூட்டி விடப் பார்க்கிறவங்க அவங்க தான் மாட்டிப்பாங்க. நறநறநறநற .
*************************************************************************************

இப்போ சிகாகோவில் குளிரில் நடுங்கிட்டு இருந்த நாங்க என்ன செஞ்சோம்னு பார்ப்போம். அதான் சிகாகோக் காரங்க எல்லாம் சொல்லிட்டாங்களே, குளிரில் நடுங்கினீங்களான்னு. க்ர்ர்ர்ர்ர்ர்ர்......... என்ன சஸ்பென்ஸ் வேண்டிக் கிடக்கு? :P என் பொண்ணு கிளம்பும் முன்னாலேயே சொன்னா, குளிருக்குப் பாதுகாப்பா ஒரு ஸ்வெட்டரும், ்ஷாலும் கையிலே வச்சுக்குங்க 2 பேரும். அப்போ கோட், உன்னோட கோட் வச்சுக்குங்க. நாங்க 2 பேரும் ரொம்பப் பெருமையா ஹூம், எல்லாம் அந்தக் கைலைக்கே போய்ப் பார்த்தாச்சு. இது என்ன பிரமாதம்? அதுவும் ஏப்ரல் மாதத்தில் அப்படின்னு அலட்சியமா ஒரு கைக்குட்டை கூடக் கையிலே வச்சுக்கலை. அதான் டிஸ்யூ பேப்பர் தராங்களே கை துடைக்க. அதனாலே. தவிர கையிலே எடை அதிகம் வச்சுக்கிட்டா யார் தூக்கிட்டு "லோ லோ"ன்னு ஒரு டெர்மினல்லேஇருந்து இன்னொரு டெர்மினலுக்கு நடக்கிறது?

சிகாகோவை "காற்று நகரம்" என்று சொல்வதுண்டு. நம்ம திருநெல்வேலிப் பக்கம் "முப்பந்தலில்' முன்காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் கோடைக்கால ப்ளாகர்ஸ் மீட்டிங் வச்சுப்பாங்களாம். கேள்விப் பட்டிருக்கேன். ஏனெனில் அங்கே வரு்ஷம் 365 நாளும் அப்படி ஒரு காற்று. அந்த மாதிரித்தான் இருக்கும்னு நினைச்சா., இது காற்று இல்லை, காத்துனு சிவாஜி "பிராப்தம்" படத்திலே (மிலன் இன்னும் நல்லா இருக்கும்) சொன்னாப்பலே கூட இல்லை. காஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆத்து. நடுங்கிட்டே வந்தால் சாமான்கள் எல்லாம் அங்கேயே எடுத்துக் கொண்டு கஸ்டம்ஸ் க்ளியர் பண்ணிக் கொண்டு பின் உள்நாட்டு விமானப் போக்குவரவு நடக்கும் டெர்மினல் போகணும். சாமான்கள் எல்லாமே ரொம்பக் கரெக்டா வந்திருந்தது. எங்களாலே தூக்கி வைக்க முடியலைங்கிறதைத் தவிர. உள்நாட்டுப் பயணத்துக்கே நாங்க தூக்கிற மூட்டை முடிச்சு பத்தி இங்கே அடிக்கடி வந்தவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். ஹிஹிஹி, இதிலே ரொம்ப சந்தோ்ஷமான வி்ஷயம் என்னன்னா பங்களூர் போனப்போ அம்பியை மூட்டை தூக்க வச்சது தான். காமிரா பெட்டியிலே இருந்துடுச்சு. இல்லாட்டி ஒரு ஃபோட்டோ எடுத்துப் போட்டிருக்கலாம். அப்புறமா எடுத்தோம், நாங்க போன ஃபங்க்ஷனிலே ஆனால் அம்பி மூட்டை தூக்கினது தானே முக்கியமா இருக்கணும். அதை விட்டுட்டேன். தோணவே இல்லை, இப்போ நினைச்சாக் கூட வருத்தமா இருக்கு. இன்னொரு சான்ஸ் அம்பி கொடுக்காமலா போகப் போறார்? :P (மெயில் கொடுத்து என்னை மிரட்டலா? இது எப்படி இருக்கு?)

ம்ம்ம்ம், என்ன சொல்ல வந்தேன்? ஹாங், மூட்டை தூக்கி உதவ ஒரு ஆபத்பாந்தவன் அங்கே வந்தான். எல்லா மூட்டையையும் மொழி ஜோதிகா மாதிரி அனாயாசமாத் தூக்கி (ஹிஹிஹி, படம் பார்த்துட்டேன், விமரிசனம் தனியா வரும்) வச்சு எங்களைக் கஸ்டம்ஸ் கூட்டிப் போய் அவரே கிளியர் பண்ணி, ஹிஹிஹி, கஸ்டம்ஸ் செக் பண்ணவே விடலை, அந்த ஆசாமி, நேரே போய் அந்த ஆஃபீஸர் கிட்டேச் சொல்லிட்டுக் கூட்டிப் போயிட்டார் எஸ்கலேட்டர் பக்கம். நான் மறுபடி நடுங்கிப் போயிட்டேன். ஹிஹிஹி.அ.வ.சி. இந்த எஸ்கலேட்டருக்கும் நமக்கும் 7-ம் பொருத்தம். எப்போவுமே. அதுவும் ஒரு 2,3 விபத்து வேறே நேரே பார்த்துட்டனா? மனதளவில் ஒரு பயம் இன்னும் இருக்கு. போன முறை ஹூஸ்டனில் "மால்" போனப்போ என் பையன் ஷாக் ட்ரீட்மென்ட் மாதிரி சொல்லாமல் கொள்ளாமல் படிகள் இருக்கும் பக்கம் போகாமல் வேணும்னே எஸ்கலேட்டரில் திடீரென ஏற்றி விட்டுட்டு அப்புறம் அவனே பயந்துட்டான். ஹிஹிஹி, நான் கத்தியதில். இப்போ இந்த போர்ட்டரிடம் அந்த ரிஸ்க் வேணாம்னு முன்னாலேயே நான் லிஃப்டில் தான் போகணும் இல்லாட்டி படிகள்னு வாக்குறுதி வாங்கிட்டேன், அவரும் அதை மீறாமல், லிஃப்டில் கூட்டிப் போய் மேலே ஏறிப் போனதும் உள்நாட்டு விமானப் பணியாளர்கள் சாமான்கள் வாங்கும் இடம் வந்ததும் அங்கே போய் எங்கள் சாமானின் "டாக் நம்பரைக்" காட்டிச் சாமான்களை ஏற்றி விட்டுப் பின் ரெயிலில் ஏறும் இடம் கூட்டிப் போய் ரெயிலில் ஏற்றி விட்டு இறங்கும் இடமும் தெரிவித்து விட்டு (அங்கே உள்ள மத்தவங்க கிட்டே ஊர் வந்ததும் இறக்கி விடுங்கன்னுதான் சொல்லலை, இதிலே என்னோட கையிலே நான் வச்சிட்டு இருந்த பையையும் அவரே எனக்காகத் தூக்கி வந்தார்) நாங்க கொடுத்த பிச்சைக் காசை மறு பேச்சுப் பேசாமல் வாங்கிக் கொண்டு எங்களுக்கு வாழ்த்துக் கூறி விடை பெற்றார்.

Tuesday, April 17, 2007

ஒரு வேண்டு கோள்

என்னோட இன்னொரு வலைப்பக்கம் ஆன "ஆன்மீகப் பயணத்தில்" சிதம்பரம் பற்றிய அரிய தகவல்களை எழுது கிறேன். அதற்குப் பின்னூட்டமே வரதில்லை ஆதலால் மறுமொழியப் பட்ட இடுகைகளில் வராது. ஆகவே குறைந்த பட்சம் 4, 5 பின்னூட்டங்களாவது வந்தால் தான் தமிழ் மணத்தில் தெரியும். அனைவரையும் போய்ச் சேரும். படிக்கிறவர்கள் கட்டாயம் ஏதாவது பின்னூட்டம் கொடுக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

அப்புறம் இ.கொ. யாராவது மூன்று நபர்களை நானும் கூப்பிடவேணும்னு சொல்லிட்டு இருக்கார். அவருக்காக நான் அழைப்பது:
வேதா(ள்), குறைந்த பட்சம் 10 நாளாவது எடுத்துப்பாங்க எழுத. இப்போ சோளிங்கர் தொடர் வேறே எழுத ஆரம்பிச்சிருக்காங்க. அதனால் இன்னும் டைம் எடுக்கும். வேதா(ள்) யாரும் கூப்பிடலையே?

லதா ரொம்ப நாளா இந்தப் பக்கமே வரலை. அவங்க பதிவுக்கும் போக முடியலை. அதனால் இதை எங்கேயோ இருந்து அவங்க இதைப் பார்த்துட்டு எழுதி எனக்கும் தகவல் கொடுப்பாங்கன்னு நம்பறேன்.

கைப்புள்ள, யாரும் கூப்பிடலையே? ஆள் அட்ரஸே காணோம். அப்போ அப்போ வ.வா.ச. பதிவுகளில் வந்து எழுதிட்டுப் போயிடறார். எங்கே இருக்கார், என்ன ஆச்சு? ஏன் இன்னும் சுடர் ஏந்தினதுக்கு அப்புறம் ஆளே காணோம். ஒண்ணுமே புரியலை. கையைச் சுட்டுக்கிட்டாரோ என்னவோ. இவங்க மூன்று பேரையும் கூப்பிட்டிருக்கேன். அப்பாடி, ஒரு சுமை இறங்கியது.

அடுத்து மணிப்ரகாஷ் உங்க பதிவிலே என்னாலே பின்னூட்டமே கொடுக்க முடியலை. அப்புறம் உங்களோட கமென்டுக்கு நான் பதில் சொல்லலைன்னு வருத்தப் படறீங்க. நான் கமென்ட் வந்திருக்கான்னு நெருப்பு நரியில் பார்த்துப் பப்ளிஷ் செய்து அதை எடக்ஸ்ப்ளோரரில் படிச்சு, அதில் தமிழ்ப் பின்னூட்டம் கொடுக்க முடியாது, திரும்ப நெருப்பு நரிக்கு வந்து எது யார் எழுதினதுன்னு தெரியாமலே ஓரளவு நினைவு வச்சுப் பதில் கொடுக்கிறேன். (பாருங்க, தமிழுக்காக எப்படி உழைக்கிறேன்னு!:D) இந்தக் குழப்பத்திலே சிலருக்குப் பதில் வரும், சிலருக்கு வராது. என் கையிலே இல்லை, வழக்கம்போல். எல்லாம் அவன் அருள்! :)))))))))))))))))
நேதாஜி பற்றி நீங்க படிச்சேன்னு சொன்னதையும் அதிலே சந்தேகம் இருக்குன்னு சொன்னதும் நல்லா நினைவு இருக்கு. அதற்குப் பதில் சொல்லும் முன், நான் மறுபடி ஒருமுறை தயார் செய்துக்கணும் இல்லையா? ஆகவே நீங்க படிச்சேன்னு சொல்ற லிங்கை எனக்குக் கிடைச்சாப் பார்த்துட்டு வரேன். முடிஞ்சா திரும்ப ஒரு முறை லிங்கைக் கொடுங்க. நேத்துக் கூட உங்க சந்தேகம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். பின்னூட்டம் கொடுக்கிறதுன்னா இது எல்லாம் ரொம்பப் பெரிசாப் போகுது. அதான் பதிவாவே எழுதிட்டேன். பதிவுக் கணக்கு ஹிட் ஏறுமே! ஹிஹிஹி!

Monday, April 16, 2007

262. அழகா, அழகா?

எப்படியோ 262 போஸ்ட் நானும் போட்டிருக்கேன். உருப்படியாப் பார்த்தாக் கொஞ்சம் தான் இருக்கும். இதிலே சங்கிலித் தொடர் வேறே நிறைய வந்திருக்கு. முதன் முதல் வலைப்பக்கம் ஆரம்பிச்சப்போ கூடச்சங்கிலித் தொடர் ஓடிட்டுத் தான் இருந்தது. அப்போ நான் புதுசுன்னாலே யாரும் என்னைக் கூப்பிடலை. அப்புறமா வேதா(ள்)வும், கார்த்திக்கும், வல்லி சிம்ஹனும் கூப்பிட்டாங்க. இப்போக் கண்ணபிரான் ரவிசங்கர் KRS. அழகைப் பத்தி எழுதக் கூப்பிட்டிருக்கார். கொஞ்சம் கஷ்டம் தான் என்றாலும் முயற்சி செய்யறேன். உண்மையான அழகு என்பது உள்ளத்தில் இருந்து வரும். இதுக்கு நிறமோ, உருவமோ தேவை இல்லை. உள்ளொளி பரவினால் முகம் அழகு கொடுக்கும். அந்த விதத்தில் அழகு என்று மனிதர்களில் சொல்ல வேண்டுமானால்

ஸ்வாமி விவேகானந்தர்: கம்பீரமாய்க் கையைக் கட்டிக் கொண்டு இவர் இருக்கும் படங்களைப் பார்த்தால் அதைப்பார்த்துத் தான் இன்று நிறையப் பேர் கை கட்டிக் கொள்கிறார்களோன்னு தெரியும். சிகாகோ வந்து இறங்கியதும் முதலில் நினைவு வந்தது இவர் தான். இவரால் தான் நம் நாடும், அதன் பெருமையும் உலகு அறிந்தது. இவரோட கம்பீரமே ஒரு அழகு தான். நிறைய எழுத வேணாம்னு சுருக்கமா எழுதறேன்.

மஹாகவி பாரதி: என்னை ரொம்பவே பாதித்தவர். திரும்பத் திரும்பப் படிப்பேன். எங்கே போனாலும் என்னோட ஸ்லோகப் புத்தகங்களோட இவரின் கவிதைப் புத்தகமும், திருக்குறளும் கட்டாயம் இருக்கும். என் கணவ்ர் கேலி செய்வார், "இது என்ன ரட்சையா?" என்று. கிட்டத் தட்ட அப்படித்தான். பாரதியுடன் என்னோட பக்திக்கு என் ஆசிரியர்களும் ஒரு காரணம். சொல், செயல், எழுத்து, உணர்ச்சி, எண்ணங்கள் எல்லாமே அழகு நிறைந்ததால் மிகச் சிறந்த சக்தி உபாசகரான இவரும் ஒரு அழகு தான்.

திரு ஜே.கே. இவர் முகம் பார்க்கப் பார்க்க வசீகரமானது. "தன்"னை உணர்ந்தவர். மிகச் சிறந்த அத்வைதிகளில் ஒருவர். பேசுவது கேட்டால் நாத்திகர் போல் இருக்கும். ஆனால் பழுத்த ஆன்மீகவாதி.

திருமதி எம்.எஸ். இவரைப் பற்றி ஏற்கெனவே கண்ணன் எழுதி விட்டார். இன்னும் 2 முக்கியமான பெண்மணிகள் இருக்கிறார்கள். அவங்களை நான் பார்த்தது கூடக் கிடையாது. என்றாலும் இவங்களும் அழகுதான்.

பொன்னியின் செல்வன்: இவங்க ஒரு பெண்மணி. இவங்களோட பையன் யாஹூவில் உள்ள "பொன்னியின் செல்வன்" குழுமத்தில் சேர்ந்து விவாதங்களில் கலந்து கொள்வாராம். இந்த இளைஞர் திடீரென ஒரு விபத்தில் இறந்து போகத் திகைத்துப் போன இந்தத் தாய், தன் மகன் உபயோகித்து வந்த இந்தப் "பொன்னியின் செல்வன்" என்ற பெயரிலேயே மகன் போல் எழுதி வருகிறார். இறந்து போனவரின் நண்பர்களுக்கு முதலில் ஆச்சரியமாய் இருந்திருக்கு. பின் அந்தத் தாய் விளக்கி இருக்கிறார். இவரைப் பற்றி முதலில் மரபூரார் ஜெ.சி. எழுதி இருந்தார். அம்மா என்று தலைப்பில் ஒரு போட்டிக்கு. தேன் கூடு நடத்தியது என நினைக்கிறேன். நானும் போய் வாக்குக் கொடுக்க முயற்சி செய்தும் முடியவில்லை. என்றாலும் இந்தத் தாயை என்னால் மறக்க முடியவில்லை. சமீபத்தில் ஒரு முறை திரு தி.ரா.ச. அவர்கள் பதிவில் தன் மகனை இழந்தது பற்றிக் குறிப்பிட்டுப் பின்னூட்டம் இட்டிருந்தார். இவங்க மனதை விட அழகு உண்டோ?

திருமதி லலிதா: இவங்களும் வாழ்க்கையில் முதுமையான காலகட்டத்தில் சோகத்தைச் சுமந்தவர் தான். இவரும், இவர் கணவரும், மகனுடன் பங்களூர் சென்று கொண்டிருந்த போது விபத்தில் இவர் கண்ணெதிரேயே இவர் மகனும், கணவரும் இறந்து போனார்கள். செய்வதறியாது திகைத்த இந்தப் பெண்மணி தன் 70-வது வயதில் கன்னடம் கற்றுத் தேர்ந்து, இன்று கன்னடத்தில் இருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து கன்னடத்துக்கும் இலக்கியங்களை மொழி பெயர்க்கிறார். என் உள் மனதிலே ஒரு சந்தேகம் உண்டு. இந்தப் பொன்னியின் செல்வன் எழுதும் தாயும், இவரும் ஒருவரோ என. புரியவில்லை. என்றாலும் இவர் மனமும் மிக மிக அழகானது. இவர் பாதம் பணிந்து வணங்குகிறேன்.

இப்போ எங்க ஊர மதுரை ்தான் அழகு, எங்க மீனாட்சி தான் அழகு,அவளோடப் பட்டாபி்ஷேஹக் காட்சி அழகு, அவள் திக்விஜயம் செய்வது அழகு, அவள் கல்யாணக் கோலம் தான் அழகு, அவள் பவனி வரும் பூப்பல்லக்கின் மல்லிகை வாசனை இங்கே கூட வருது. அது அழகு, அந்தத் தேர் அழகு, அழகர் அழகு. அவர் பவனி வரும் குதிரை வாகனம் அழகு, கருட வாகனம் அழகு, அழகர் மலை அழகு, பரங்குன்றம் அழகு, நாகமலை அழகு, யானைமலை அழகு, வைகை அழகு. அதுவும் வைகையின் தனிச் சிறப்பே அது கடலில் கலக்காது என்பது தான். ராமநாதபுரம் அருகே உள்ள கூடல் என்னும் ஊரில் உள்ள ஒரு ஏரியில் கலக்கிறது வைகை. இவள் போல் தான் பாண்டிய நாட்டுப் பெண்களும். அவங்களும் அழகுதான். மொத்தத்தில் மதுரையே அழகு, அதன் சுந்தரத் தமிழும் அழகு.

Saturday, April 14, 2007

சித்திரை மாதம் பெளர்ணமி நேரம்!

ஹிஹிஹி, கவிதை எல்லாம் ஒண்ணும் எழுதப் போறது இல்லை. பயப்படாதீங்க. அப்புறம் ஒரு வி்ஷயம் முடிஞ்சவரை எல்லார் வீட்டுக்கும் வரப் பார்க்கிறேன். சிலர் வீடு திறக்கலை இங்கேயும் வந்து அதே கதை தான். ஹிஹிஹி, காசிக்குப் போனாலும் கருமம் தொலையாதுங்கிற கதையா இருக்கு. நேத்துப் பாருங்க, திடீர்னு இணையமே வரலை. ஒரே ஆச்சரியமாப் போச்சு! நாம் வந்திருக்கிறது இங்கே உள்ள கேபிள்காரங்களுக்குக் கூடத் தெரிஞ்சு போச்சான்னு! ஒரு வேளை "டாட்டா இன்டிகாம்" காரங்க தகவல் கொடுத்திருப்பாங்களோ என்னவோ? :D அப்புறம் பார்த்தா ஏதோ கேபிள் ப்ராப்ளமாம். டாடா இன்டிகாமுக்கு அண்ணா போல் இருக்கு. அதான் வரலை. ஒரே ஆறுதல் இந்த அபார்ட்மென்ட் காம்ப்ளெக்்ஸில் உள்ள அனைவருக்குமே வரலைங்கிறது தான். அப்புறமாப் போடலாம்னா ஒரே இடி, மின்னல், மழை, மோகினி!!!! கனெக்ஷனையே எடுத்து வைக்க வேண்டியதாப் போச்சு. அதான் எல்லாருக்கும் கொஞ்சம் தாமதமா வந்துப் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லலாம்னு.

சித்திரை மாதமும் தமிழ்ப் புத்தாண்டும் சேர்ந்து வரது என்றாலும் பாரதியார் அவர்கள் ஒரு முறை தன்னோட ஒரு கட்டுரையில் அவர் இருந்தப்போவே இந்தத் தமிழ்ப் புத்தாண்டுச் சித்திரை மாதம் கொண்டாடும் தேதி வருடா வருடம் கொஞ்சம் மாறும் என்று குறிப்பிட்டிருப்பார். சம்மந்தப் பட்ட கட்டுரையைப் போட இப்போ அந்தப் புத்தகம என்னிடம் இல்லை. இந்தியாவிலே இருக்கு. இருந்தாலும் நாம் எல்லாரும் இப்போத் தான் கொண்டாடுகிறோம் என்பதால் அதைப் பற்றிச் சில வார்த்தைகள்:

முதலில் அகத்தியர் குமரி வாழ் அம்மனிடம் சொல்வது போன்று அமைந்த பாடலுடன் தொடங்கலாம்.
"முத்தமிழ் போல் முக்கடல் சூழ்
குமரிமுனை வளரும் உத்தமியே!
ச்ரீசக்கரந்தன்னில் உதித்தவளே!
எத்தருணத்திலும் எனைப்
பிரியாமல் எனக்கிரங்கிச்
சித்திரைத் திங்களிலே வந்து
அருள் செய்வாய்! சிவக் கொழுந்தே!"
இம்மாதத்தில் வசந்தம் அதன் உச்சியில் இருக்கும். பூக்களும், பழங்களும் பூத்துக்குலுங்கி, கனிந்து மணம் பரப்பும் காலம் இது. திருமணங்கள் நடத்தப்படும் காலம் இது. அதான் நம்ம அம்பி கூட இந்த மாதக் கடைசியில் திருமணம் வைச்சிட்டு இருக்கார். என்னைக் கூப்பிடலை, வழக்கம் போல். அவங்க அம்மா சொன்னாங்க. :P இந்த மாதத்தில் ஆரம்ப நால் அன்று பஞ்சாங்கம் படிக்கப் படும்.

காலபுருZஅன் என்ரு சொல்லப் படும் கால தேவதையின் ஒவ்வொரு நாளும் கணிக்கப் படுவதே பஞ்சாங்கம். வருடம் என்ரும் சொல்லப் படும் காலத்தின் கை, கால், முகம் போன்ற உறுப்புக்களே பன்னிரண்டு மாதங்கள் ஆகும். இந்த வருடத்துக்கு உரிய ஐந்து அங்கங்களைப் பற்றிக் கூருவதே ப்ஞ்சாங்கம் ஆகும். இந்தச் சமயம் நவக்கிரஹங்களும் விண்ணைச் சுற்றி வந்து நிர்வாகம் செய்கிறார்கள். இந்த வருடத்தின் ஐந்து அங்கங்களைக் குறிக்கும் பஞ்சாங்கத்தின் ஐந்து அங்கங்கள் யாவன: யோகம், திதி, கரணம், வாரம், ந்ட்சத்திரம் ஆகியவை பற்றி விவரிக்கப் படும். இவை கொடுக்கும் பலன்கள்:
"யோகம்" ரோகங்களைப் (வியாதியை) போக்கும்.
"திதி" நன்மையைத் தரும், அதிகரிக்கச் செய்யும்.
"கரணம்" வெற்றியைத் தரும்.
"வாரம்" ஆயுளை வளர்க்கும்.
"நட்சத்திரம்" பாவத்தைப் போக்கும்.
வருடத்தின் முதல் நாள் அன்று பஞ்சாங்கம் படித்துச் சொல்லக் கேட்பது மிகவும் நல்லது என்று ஆன்றோர் வாக்கு. இது கோவில்களிலோ அல்லது சிலர் வீடுகளில் கூடியோ புது வருடப் பஞ்சாங்கதை வைத்துப் பூஜை செய்துவிட்டுப் படிப்பார்கள். அன்றைய தினம் பலவகைகளிலும் தானங்கள் செய்யலாம். அன்னம், நீர், மோர், பழங்கள், காய்கள், குடை, விசிறி, செருப்பு, துணிமணிகள் என்று அவரவர் சக்திக்கு ஏற்பக் கொடுக்கலாம். தமிழ்நாட்டில் மதுரையில் (ஹிஹிஹி, எங்க ஊர் அதைப் பத்தி எழுதலைன்னா எப்படி?) சித்திரை மாதம் தான் மீனாட்சி அம்மையின் திருமணமும், அதை ஒட்டி அழகர் ஆற்றில் இறங்குவதும் நடை பெறும். அழகர் ஆற்றில் இறங்கும் தினத்தன்று காலை அழகருக்கு அலங்காரம் செய்யும் பட்டாச்சாரியார்கள் கண்ணை மூடிக்கொண்டு அழகருக்கான துணிகளைத் தேஎர்ந்தெடுப்பார்கள் என்றும் அதன் வண்ணத்தைப் பொறுத்து அந்த வருடத்தின் பலன்கள் அமையும் என்றும் இன்றளவும் சொல்லப் படுகிறது. சிவப்பு வண்ணத்தைத் தவிர மற்ற வண்ணங்கள் பரவாயில்லை எனவும், பச்சை வண்ணம் மிகச் சிறப்பாகவும் சொல்வது உண்டு. கன்னியாகுமரி மாவட்டத்தில் புதுத் திருமணம் ஆன இளந்தம்பதிகளுக்குச் "சித்திரைச் சீர்" என்று சிறப்புச் செய்யும் வழக்கமும் உண்டு.

அண்டை மாநிலமான கேரளாவில் சித்திரை முதல் நாளன்று "விஷுக் கச்னி காணுதல்" என்னும் நிகழ்ச்சி நடைபெறும். முதல்நாள் அன்று இரவே வீட்டுப் பெரியவர்கள் பூஜை அறையில் புதுத் துணிமணிகள், ஆபரணங்கள், காய் கனிகள், பூக்கள் இவற்றால் அழகு செய்து வைத்து எதிரே ஒரு பெரிய நிலைக்கண்ணாடியையும் வைத்திருப்பார்கள். வீட்டுப் பெரியவர்கள் காலையில் முதலில் எழுந்து பூஜை அறையில் ஸ்வாமிக்கு விளக்கு ஏற்றி வைத்து ஒரு தட்டில் வெற்றிலை, பாக்குப் பழங்களும் வைத்து நாணயங்களையும் குவியலாக வைத்திருப்பார்கள். வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களை ஒவ்வொருவராய் வரவழைத்துக் கண்ணைத் திறக்கச் செய்து இந்தப் பூ, பழங்கள், ஆடை ஆபரணங்களால் ஆன அலங்காரத்தைக் கண்ணாடி வழி முதலில் பார்க்கச் செய்து பின் அலங்காரத்தையும் காட்டிப் பின் வெற்றிலை பாக்குடன் தங்கள் சக்திக்கு இயன்ற நாணயங்களையும் பரிசளிப்பார்கள். அன்று இந்தப் பணம் கொடுப்பதும் வாங்குவதும் மிகவும் முக்கியமான் ஒன்றாய்க் கருதப் படுகிறது. இதை "விஷுக்கனி கை நீட்டம்" என்று சொல்வதுண்டு. இதைத் தவிர நம்ம ஊர் தீபாவளி போல கேரள மாநிலத்தில் வி்ஷு அன்று பட்டாசுகளும் வெடித்துப் புத்தாடை அணிந்தும் கொண்டாடுவது உண்டு.

Friday, April 13, 2007

என்னத்தை எழுதறது?

வி்ஷயம் இல்லைனு நினைக்காதீங்க. நிறைய இருக்கிறதாலே தான் என்ன எழுதறது? எதுக்கு முன்னுரிமை கொடுக்கிறதுன்னு ஒரே பிரசனை. இப்போ ஒண்ணொண்ணாப் பார்ப்போம். நான் எழுதிய ஒரு வார்த்தையில் எல்லாருக்கும் ஒரே தத்துவமும், கவிதையுமா வருது. அந்த வார்த்தை ''test" என்னும் வார்த்தை தான். அதைப் பார்த்துப் பாசமலரான அபி அப்பா, அபி அம்மாவையும், அபி பாப்பாவையும் கூட்டி வந்து காட்டிக் கண் கலங்க, அதுக்கு மேலே கொத்தனார் வந்து தத்துவ மழை பொழிய, போறாததுக்கு கோபிநாத் வந்து குறைந்தது 500 பின்னூட்டமாவது போடறேன்னு சொல்ல (ஹிஹிஹி கோபிநாத் மாட்டி விட்டுட்டேனே), அதுக்கு மேலே ஐயனாரும், வெட்டியும் போட்டி போட்டுக் கொண்டு வந்து கவிதை மழை பொழிய, சூடான் புலி என்னைப் பார்த்து பயந்து நான் வரலை இந்த விளையாட்டுக்குன்னு ஒதுங்க, எதை எழுதறதுன்னே தெரியாமல் நான் விழிக்க, என்னத்தை எழுதறது?

சரி, அதெல்லாம் போகட்டும்னு இங்கே வந்ததுக்கு டிவிடியில் தமிழ்ப் படம் பார்த்தே தீருவது என்ற சபதத்தினாலும், ஜெட்லாகில் இருந்து தப்பிப்பதற்காகவும் சிலபல திரைப்பட டிவிடிக்கள் வாங்கி வந்ததில் அதில் பருத்திவீரனும் ஒன்றாக இருக்கணுமா? பருத்தி வீரன் பார்த்து அதன் முடிவைப் பார்த்து அழுதவர்கள் பட்டியல் என் கையில் கிடைக்க, என்னோட மறுபாதி நான் வரலை இந்தப் படத்துக்கு என்று ஒதுங்க, நான் மட்டும் தனியாய்ப் பார்த்தேன். என்ன ஆச்சரியம் போங்க! சரியாய்ப் படம் முடிந்து கிளைமாக்ஸ் ஆரம்பிக்கும்போது என்ன நடந்தது தெரியுமா? கார்த்திக்கும், (ஹிஹிஹி, நம்ம கார்த்திக் இல்லை, இது சிவகுமார் பிள்ளை கார்த்திக்) பிரியாமணியும் ஓடிப் போக முடிவு செய்து பேசிக் கொண்டே போவார்கள், போவார்கள், போவார்கள், போவார்கள், போவார்கள், அப்போ வில்லன் ஆட்கள் வந்து வழி மறிப்பார்கள், மறிப்பார்கள், மறிப்பார்கள், மறிப்பார்கள், மறிப்பார்கள். அதுக்கு மேலே என்னங்க ஆச்சு? மண்டையை உடைக்குதே! எல்லாரும் படம் பார்த்துட்டு முடிவைப் பார்த்து அழுதுட்டாங்களாம். இங்கே படம் முடிவே பார்க்காமல் எனக்கு அழுகை வருது, ஏன் எனக்கு இந்த மாதிரி ஒரு டிவிடி அமெரிக்கா வந்து கூடக் கிடைக்கணுமா? குறைந்த பட்சம் இந்த ஒரு படமாவது நான் முழுசாப் பார்க்கக் கூடாதான்னு? பருத்திவீரன் பார்த்துட்டு முடிவு தெரியாமல் அழுத ஒரே நபர் நானாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன். என்னத்தை எழுதறது? சொல்லுங்க!

அப்புறமா ஒரு முக்கியமான விஷயம். சூடான் புலி ஏன் சோகமா இருக்குன்னு தெரியுமா? உகாண்டா போய்ப் பொண்ணு பார்த்துட்டு வந்திருக்கு. அதான் சோகம். புலி, சரியா? நான் எழுதி இருக்கிறது? சரி,இங்கே இப்போ ராத்திரி ஆயிடுச்சு, நான் தூங்கப் போறேன். என்ன எழுதறதுன்னுதான் தெரியலையே? :))))))))))))))))

Thursday, April 12, 2007

சூடாமணியின் கதை!

வல்லி எழுதின சுந்தரகாண்டம் பத்திய பதிவிலே "சூடாமணி கொடுக்கும் படலம்" பற்றி எழுதிட்டு அவங்க அது என்ன ஆபரணம் தெரியலைன்னு சொல்லி இருந்தாங்க. மதுரையம்பதி சொன்னது ஓரளவு சரின்னாலும், அம்பி அதை நான் தான் சீதைக்கு வாங்கிக் கொடுத்தேன்னு குறிப்பிட்டிருந்தார். எனக்கு மறந்தே போச்சு! :D எப்போ வாங்கிக் கொடுத்தேன்? அவரும் அதைப் பார்த்திருக்காரேன்னு நினைச்சுக்கிட்டு, ராமாயணம் புத்தகத்தைப் புரட்டினேன். அம்பி, எல்லாம் ஸ்டாக் கொண்டு வந்திருக்கேன் கையோடு. இங்கே வந்து பதில் சொல்லலாம்னு தான் முன்னாடி பேசாமல் இருந்தேன். புரியுதா?

வால்மீகி, கம்பர், துளசிதாசர் எல்லாருமே "சூடாமணி" பற்றிக் குறிப்பிட்டிருந்தாலும் அது யார் சீதைக்குக் கொடுத்தது? அது என்ன ஆபரணாம் என்று விவரிப்பது வால்மீகிதான். முதலில் கம்பரைப் பார்ப்போம்.
"சூடையின்மணி கண்மணி ஒப்பது, தொல்நாள்
ஆடையின் கண் இருந்தது, பேர் அடையாளம்;
நாடி வந்து எனது இன்ுயிர் நல்கினை, நல்லோய்!
கோடி என்று கொடுத்தனள், மெய்ப்புகழ் கொண்டாள்!"
என்னுடைய கண்ணின் மணி போன்ற இந்த ஆபரணத்தை என் புடவையில் முடிந்து வைத்திருந்ததை உன்னிடம் தருகிறேன்." என்கிறாள். அது தலையில் சூடிக் கொள்ளும் ஆபரணம் என்று சொன்னாலும் அது எந்த மாதிரி என்பது வால்மீகியில் தெரிகிறது.

"சூடா" என்றால் சம்ஸ்கிருதத்தில் "உச்சி முடி" என்று அர்த்தம் ஆகும். உச்சி முடியின் மீது அணிகின்ற இந்த ஆபரணம் ஒரு சங்கிலியில் கோர்க்கப் பட்டிருக்கும். அதன் முடிவில் ஒரு பதக்கம் போன்ற அமைப்பு இருக்கும். அந்தப் பதக்கம் போன்ற அமைப்புப் பெண்களின் "ச்ரீமந்தம்" என்று சொல்லப் படும் உச்சிப் பொட்டு வைக்கும் இடத்தில் வந்து முடியும். இது தாய்வழிச் சீதனமாய்க் கொடுக்கப் படுகிறது. அதுவும் சீதையின் வார்த்தைகளின் மூலமே வால்மீகி சொல்கிறார்.
சீதை அனுமனிடம் சொல்வதாய் வால்மீகி சொல்கிறார்:
"இந்த நகையைப் பார்த்ததுமே ராமருக்கு நீ என்னைப் பார்த்துவிட்டுத் தான் வருகிறாய் என்பது புரியும். ராமருக்கு என் நினைவு மட்டும் இல்லாமல் தன் தந்தையாகிய தசரத மஹாராஜாவின் நினைவும், என் தாயாரின் நினைவும் கட்டாயம் வரும். ஏனெனில் இது தசரத ராஜாவின் முன்னிலையில் என் தாயார் எனக்குப் பரிசாகக் கொடுத்தது.!" இது வால்மீகி வாக்கு. துளசிதாசர் சூடாமணி என்னும் தலையில் சூடிக் கொள்ளும் ஆபரணத்தைச் சீதை கொடுத்தாள் என்பதோடு நிறுத்திக் கொள்கிறார்.

டிஸ்கி: பொதுவாகவே வட இந்தியாவில் அநேகக் குடும்பங்களில் இன்றும் திருமணத்தின் போது இத்தகைய ஆபரணங்களைத் தாய்வீட்டுச் சீதனமாய்ப் பெண்கள் அணிவது உண்டு. அங்கே இதற்கு மங்கலசூத்திரத்தின் முக்கியத்துவம் கொடுக்கப் படும்.

Wednesday, April 11, 2007

தமிழா இது?

என்னத்த செய்யறது? இங்கே ஒண்ணு வந்தால் இன்னொண்ணு வரதில்லை. இந்த லட்சணத்தில் நான் பதிவு எழுதறதும் அதைப் போடறதுமே பெரிய வி்ஷயமா இருக்கு. எழுதாமலும் இருக்க முடியலை. அப்புறம் ரசிகப் பெருமக்கள் எல்லாம் தவிப்பாங்களே? அதனால் கொஞ்சம் பொறுத்துக்குங்க. உபிச எடிட் செய்யறேன்னு சொல்லி இருக்காங்க. அது வரை பொறுக்கவும். இங்கே நான் அடிக்கிறது எனக்கு உருது மாதிரித் தெரியுது. அப்படி இருந்தும் ஏதோ அடிக்கிறேன்னா பார்த்துக்கோங்க. காப்பி, பேஸ்ட் பண்ண நேத்திக்கு என்னை விடவே இல்லை. இதெல்லாம் என்ன கெட்ட பழக்கம்னு சொல்லித் திட்டு வாங்கிக்கிட்டேன். இந்தியா, என் அருமை இந்தியா, ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸிதா ஹமாரா, ஹமாரா, ஹம் புல்புல் ஹை இஸிகிச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ன்னு பாடிட்டு வரணும் போல் இருக்கு, என்ன இருந்தாலும் இம்மாதிரி வெளிநாடு போகும்போது தான் நம்ம நாட்டின் அருமை பெருமை புரியுது.

இங்கே எல்லாமே உபயோகப்படுத்திட்டுத் தூக்கி எறியவேண்டியது தான் கணவன், மனைவி உள்பட. :D ஒரு சிலர் வித்தியாசமாய் இருக்கலாம். என்றாலும் புதிய பால், புதிய காய்கனிகள் என்று நம்ம இந்தியாவில் நாம் அனுபவிக்கிற மாதிரி இங்கே கிடைக்காது. போன முறை வந்தப்போ ஹாஃப் அன்ட் ஹஸப் பால் வாங்கினா எங்க பொண்ணு. இப்போ ஆர்கானிக் பால். என்றாலும் நம்ம ஊர்ப் பாலின் ருசியும், மோரின் ருசியும், காஃபி, டீயின் ருசியும் வராது. அதுவும் எங்க வீட்டிலே இன்று வரை நல்ல புதிய கறந்த அன்றன்றைய பால்தான். காஃபியோ, டீயோ, பாலோ எங்க வீட்டில் சாப்பிடறவங்க அதை மறுமுறை நினைக்காமல் இருக்கவே மாட்டாங்க. இங்கே காஃபி எல்லாமே மெஷின் தான் தயார் செய்யுது. பின் அதைக் கப்பில் ஊற்றி மைக்ரோவேவில் வைத்துச் சூடு பண்ணணும்.

நம்ம டபரா, தம்ளர் எல்லாம் இங்கேயும் வச்சிருக்கோம். என்றாலும் ருசியோ தரமோ மாறுபடுது. நேத்திக்குப் பப்பாளிப் பழம் வாங்கி வந்தால் ஒரு பழம் விலை 2 டாலர்தான்னு ரொம்பவே சகஜமாச் சொல்வாங்க. நமக்கு அடிச்சுக்கும். இந்தக் கணக்குப் போடும் வேலையை விடுன்னு பொண்ணு கோவிச்சுக்குவா. இருந்தாலும் நம்ம புத்தி நம்மை விட்டுப் போகாதே! இருங்க, அப்புறமா வந்து மிச்சப் பயண விவரங்கள் எழுதி அறுவை போடறேன். கார்த்திக் உங்க வலைப்பக்கத்துக்கு வந்து படிச்சேன். பின்னூட்டம் தான் கொடுக்கலை. ஒருமுறை கொடுத்தேன்னு நினைக்கிறேன். அப்புறமா எக்ஸ்ப்ளோரரில் இருந்து படிக்கிறேன். திரும்பவும் நெருப்பு நரிக்குப் போய்ப் பின்னூட்டம் கொடுக்கணும். இன்னிக்கு முடிஞ்சா கொடுக்கிறேன். வராமல் எல்லாம் இல்லை. தவிர, இங்கே நேரம் வேறே பார்த்துத் தான் கணினியில் உட்காரமுடியும். :D

Tuesday, April 10, 2007

மாயவரத்த்ஹு மருமகளுக்கு

கும்பகோணம் மருமகள் மாயவரத்து மருமகளைத் தாய்நாடு திரும்பும்போது வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நேத்துத் தான் அபி அப்பாவின் பதிவில் அண்ணிக்கு எழுதி இருந்ததைப் பார்த்தேன். அப்போத் தான் தெரியும் விஷயமே. கொஞ்சம் பயண ஏற்பாடுகளில் மும்முர்மா இருந்த காரணத்தால் வலை உலக வி்ஷயங்களே தெரியவில்லை. தாமதமான வரவேற்புக்கு வருந்துகிறேன். இந்தியாவில் இருந்து இருந்தால் தடபுடலாய் ஏற்பாடு செய்திருக்கலாம். அங்கே உள்ள தொண்டர்கள் பார்த்துக் கொள்வார்கள் என நினைக்கிறேன். உங்கள் பணியைத் தொடரவும் என்னுடைய வாழ்த்துக்கள்.

WELCOME HOME NUNUPPUL USHA

சிகாகோவில் மக்கள் வெள்ளம்!!!!!!!!!

ஃப்ராங்க்பர்ட்டில் சிகாகோ செல்லும் விமானத்தில் ஏறினோம். ஹா ஹா, நொம்பவே சந்தோ்ஷமாய் இருந்தது. எங்க இரண்டு பேருக்கும் மட்டும் இரட்டை இருக்கை கொண்டது கொடுத்திருந்தாங்க. விமானப் பயணம் செய்யறவங்களுக்குப் புரியும் மூணு இருக்கையிலும், நாலு இருக்கையிலும் உட்கார்ந்து போவதின் சிரமம். அப்புறமாய்க் கொஞ்ச நேரத்தில் கொறிக்கவும் ஜூஸும் சாப்பிட்டு முடித்தச் சிறிது நேரத்தில் சாப்பாடு வந்தது,. பிரித்தால் 2 வரு்ஷம் முன்னாலே யு.எஸ். போகும்போது என்ன சாஅப்பாடு கொடுத்தாங்களோ அதே மெனுதான். எனக்கு ஒரே சந்தேகம் அதே சாப்பாட்டைப் பத்திரமா வச்சிருந்து கொடுக்கறாங்களோன்னு. அதே ஃப்ரைடு ரைஸ், அதே கீரை, அதே காலிஃப்ளவர் சப்கஜி, அதே கேக், அதே ஸ்ட்ராபெரிப்் பழம், இத்யாதி, இத்யாதி. விமானப் பணிப்பெண்ணிடம் ஒரு வார்த்தை கேட்டுடலாமானு நினைச்சேன். இந்தச் சாஅப்பாடு இரண்டு வரு்ஷத்துக்கு முன்னாலே கொடுத்த அதே சாப்பாடான்னு. ஏற்கெனவே என்னை அல்பம்னு நினைச்சிருப்பா, ஹிஹிஹி ஜூஸ் இரண்டு முறை குடிச்சேன் அதுக்கு. அதனாலே இப்போ ஒண்ணும் வேணாம்னு விட்டுட்டேன்.

விமானம் போஓஓஓஓஓஒய்க் கொண்டேஏஏஏஏஏஏஏஎ இருந்தது. காலை 9.00 மணிக்குக் கிளம்பினோம். ஹிஹிஹி, அதே காலை 11-45-க்கு சிகாகோ வந்துட்டேமே!!!!, வரும் வழியில் ஜன்னல் வழியாப் பார்த்துட்டே வந்தேன். ஒரே மேகக் கூட்டம். போற்க்கொடி விட்ட பெருமூச்சு வேறே கேட்டுட்டே இருந்தது. ஜன்னலைத் திறந்து வச்சுக்கலாமான்னு நினைச்சேன். :D. கூடாதுன்னுட்டாங்க. அதனாலே என்னை வரவேற்க வச்சிருந்த விண்ணை முட்டும் லங்கார வளைவுகளையும், போஸ்டர் ஒட்டிட்டு இருந்த ச்யாமையும் பார்க்கவே முடியலை. சிகாகோ வந்ததும் விமானம் இரங்க ப்லளாட்பாரம் கிடைக்காமல் சுத்திக்கிட்டே இருந்தோம். கீஈஈஈஈஈஈஇழேஏஏஏஏஏஎ த"தண்டர் லேக்" தெரிஞ்சதா? நம்ம ஊர் வழக்கப் படி நதி, ஆறு பார்த்தால் காசு போடணுமே, இங்கே போடமுடியலையேன்னு நினைச்சேன்.

ஹிஹிஹி, என்ன பட்டிக்காடுன்னு பார்க்கறீங்க போல் இருக்கு> அப்ப்புறமா மெதுவா விமானப் பைலட் விமானத்தில் நான் பயணம் செய்வதைசச் சொல்லிக் கீழே இறங்க அனுமதி கேட்கவே உடனேயே அனுமதி கிடைத்தது. கீழே இறங்கினோம். ஒரே பட்டாச்சுச் சத்தனம், ஒரே வாழ்த்தொலி, நான் சொல்லாமல் வச்சிருந்தும் எப்படியோ தெரிஞ்சுட்டு வந்துட்டாங்க. ஒரே கூட்டம், கீழேயேஎ இறங்க முடியலை. மெதுவா எப்படியோக் கீழே இறங்கி ஒருத்தருக்கும் தெரியாமல் வந்தால் எங்க சாமானைத் தூக்கிட்டு எங்களை மெம்பிஸ் விமானத்தில் ஏற்றி விட ஆள் தயாராக் காத்துட்டு இருந்தார். அப்பாடின்னு நிம்மதியா அவர் கிட்டேச் சாமான்களை ஒப்படைச்சோம். அவர் எங்க கூடவே வந்து சாமான்களை மெம்பிஸ் செல்லும் விமானப் பணியாளரிடம் ஒப்படைத்து விட்டு எங்களை அங்கே வேறு டெர்மினல் போகும் ரெயிலில் ஏற்றி விட்டார். நாங்கள் போகும் 3-வது டெர்மினல் வந்து கீழே இறங்கி மேலேஎ ஏறி, செக்யூரிட்டி எல்லாம் முடிச்சு போக வேண்டிய வாயிலுக்கு வந்து சேர்ந்தோம். அதுக்குள்ளே ஒரேயடியா நடுங்கிப் போயிட்டோம். என்னன்னு கேட்கறீங்களா? நாளைக்குத் தான் எழுதுவேன்.

Monday, April 09, 2007

ஹ ஹா ஹா ஹா ஹா இட்லிவடையும் வந்தத்வந்த்அது

என்ன தமிழ் எழுத மாட்டேன்னு நினைச்ச அம்பிக்கு ஒரு குட்டு, பலமாவே கொடுக்கிறேன். நாங்க 5-ம் தேதி இரவு சென்னையை விட்டுக் கிளம்பினோம். முதல் நாள் திரு தி.ரா.சா. சாரும் (சேம் சைட் கோல்?) ரொம்பவே மோசம் சார் நீங்க. அம்பியைப் பததி ஒரு குரல் என் கிட்டே அழுதுட்டு இதைச் சொல்ல வேணாம்னு சொல்லிட்டார். ஆனாலும் நான் பெருந்தன்மையா ஒண்ணுமே எழுதலை. இங்கே வந்து பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன். அப்புறம் சந்திரமெளலி தொலைபேசி அவரும் அம்பியைப்பத்தி என் கிட்டே சொன்னார். ஹிஹிஹி, மெள்லி, இது எப்படி இருக்கு? 5-ம்தேதி இரவு சென்னை ஏர்போர்ட்டில் நாங்க சுங்கக் கடமைகளை முடித்துக் கொண்டு கொஞ்சம் சந்தோZஅத்துடனும், கொஞ்சம் கவலையுடனும் கிளம்பி விமானம் ஏற்ம் வாயிலுக்கு வந்தோம். விமானத்டில் நடு இரவில் கொடுக்கும் உணவு வேண்டாம்னு சொல்லிடலாம்னு நினைத்துக் கொண்டு கையிலேயே தயிர்சாதம் எடுத்து வந்திருந்தோம். அதைச் சாப்பிட்டு விட்டு விமானம் ஏறினோம். சந்தோZஅம் சென்னையில் விமானம் ஏறும்போது சாமான்கள் குறிப்பிட்ட எடைக்குள்ளேயே இருந்தது பற்றி. கவலை சாமான்கள் சரியாக வந்து சேரவேண்டுமே என. ஏனெனில் போன வருZஅம் என் பையனுக்கு ஒரு பெட்டியே காணாமல் போய்ப் பின் கிடைக்கவே இல்லை. கிட்டத் தட்ட ஒரு லட்ச ரூபாய்ப் பொருட்கள் இருந்தன. அவங்க கொடுத்த நZட ஈடு 30,000/-ரூக்கான டாலர் மதீபில் தான். மிக அதிக பட்ச ந்ஷ்ட ஈடே அது தான் எனச் சொல்லி விட்டார்கள்.

விமானத்தில் ஏறினதும் சாப்பாடு எல்லாம் வரப் போகுதுன்னு நினைச்சா பெரிய நாமமாப் போட்டாங்க. ஒரு விதத்தில் நல்லது என்றாலும் ஜூஸ் கூடக் கேட்கவில்லை. எல்லாமே ச்யாமுக்குப் பிடிச்ச ஐட்டமா வந்தது. பக்கார்டி சாப்பிட ச்யாம் இங்கே இல்லையேனு நினச்சுட்டுத் தூங்கி விட்டோம். காலையில் காலை உணவு என்னன்னு நினைச்சீங்க? அதான் சஸ்பென்ஸ். நாங்க கொடுத்த ஆப்்ஷன் ஏசியன் வெஜிடேரியன் மீல்ஸ்னாலே நூடில்ஸ் மாதிரி ஏதாவது கொடுப்பாங்கன்னு நினைச்சோம். பணிப்பெண் வந்து வெஜ் உணவா? நாந்வெஜ்ஜானு எல்லார் கிட்டேயும் கேட்டுக் கேட்டுக் கொடுத்தாங்க. எங்க உணவுப் பாக்கெட்டைப் பிரித்தால் உள்ளே இருந்ததைப் பார்த்து ஒரே அதிர்ச்சி ஆகிட்டோம். உள்ளே ஒரு சின்ன மினி இட்லிக்கும் தம்பியை இரண்டாய்க் கட் பண்ணி அலங்காரமாய் வைத்து விட்டுப் பக்கத்தில் ஒரு சின்னக் கப்பில் ஒரு குட்டி ஸ்பூனில் சாம்பாரும் அதுக்குப் பக்கத்தில் என்னோட நெத்திப் பொட்டை விடச் சின்ன சைஸில் ஒரு வடையும் வச்சிருந்தாங்க.

எனக்கு ஒரே ஆச்சரியம். ஆஹா, இந்த இட்லிவைட கிட்டே நாம் சொல்லவே இல்லை அப்போக் கூட நம்மளை நினைவு வச்சுட்டி இருந்திருக்காரே, வாக்கெடுப்புக்குப் பேரை எடுத்துக் கிட்ட மாதிரின்னு நினைச்சு சந்தோஷத்திலே கண்ணீரே வந்துடுச்சு. அதோட ப்ரெட், கேக், பழங்கள், சீஸ், பட்டர் போன்ற வழக்கமான உணவுகளும் இருந்தது. கா ஃபியும் இம்முறை நல்லாவே இருந்தது. (இது அம்பிக்காக. அப்போத் தான் அவர் கைைலைப் பயணத்தில் காபி கொடுக்கலைன்னு எழுதினதைக் குறிப்பிட முடியும். அம்பி இப்போ சந்தோ்ஷமா?) அப்புறமா ஃப்ராங்க்பர்ட்டும் வந்தது. தொடர்பு விமானத்துக்குப் போகணும். கீழே இறங்கினோம். தொடர்பு விமானத்துக்குப் போக முதலில் மேலே ஏறிக் கீழே இறங்கிப் பின் மறுபடி மேலே ஏறி ரயிலில் போய்ப் பின் கீழே இறங்கி மேலே ஏறி ஹிஹிஹி தலை சுத்தலா இருக்கா? வேறே வழியே இல்லை, அப்படித்தான் போகணும். எல்லாம் தலை எழுத்துன்னு வச்சுக்கணும். போனோம். விமானம் ஏறும் வாயில் அருகே மறுபடி ஒரு செக்யூரிட்டி செக்ாப். செருப்பில் இருந்து கழட்டிப் போட்டுச் செக் அப் முடிச்சு, வாயிலுக்கு வரவும் விமானம் புறப்படும் நேரம் வரவும் சரியாக இருந்தது.
என்ன ஆச்சுனு புரியலை. எல்லாமே மாறி மாறி வருதே. அதனாலே கொஞ்சம் கஷ்டமாவே இருக்கு. நறநறநற. நான் யு.எஸ். வந்து மூன்று நாள் ஆகியும் யாரும் எனக்கு இன்னும் வரவேற்புலக் கொடுக்கவே இல்லை. எல்லாருக்கும் நான் கொஞ்சம் நாள் இல்லைன்னதும் பயம் இல்லாமல் போச்சு. இருக்கு எல்லாருக்கும் ஆப்பு வருது பாருங்க எல்லாரும்.
வரம்தான இம்மாதிரி நான வந்தூ ஏழூதறேல வேரன

Monday, April 02, 2007

தலைவியின் வெளிநாடு விஜயம்! தொண்டர்கள் பரபரப்பு!!!!

தலைவி அவர்கள் யு.எஸ்.விஜயம் செய்ய இருப்பது அனைவரும் அறிந்ததே! அதற்கான ஏற்பாடுகளில் தலைவி அவர்கள் முழிச்சுட்டு இருக்கிறபடியால், சீச்சீ மூழ்கி இருக்கிறபடியால், தலைவியின் எண்ணங்களைத் தெரிந்து கொள்ளாமல் தொண்டர்கள் தவிக்கிற செய்தி அறிந்து தலைவி இன்று ஓர் அறிக்கையைச் சமர்ப்பிக்கிறார். அதாகப் பட்டது:

"தொண்டர்களின் சேவை மனப்பான்மையால் தலைவி அவர்கள் பூரித்துப் போய் உள்ளார். பாசத்தைப் பார்த்துப் புல்லரித்துப் போய் உள்ளார். (ஒரே அரிப்புத் தாங்கலையாம். வெயில் வேறே ஜாஸ்தியா இருக்கா? அதுவும் காரணமா இருக்கும்.) அப்புறம் துபாய் ரசிகர் மன்றம் வேறே தவியாய்த் தவிக்குதாம். செய்திகள் கசிகின்றன. கூடிய சீக்கிரம் எல்லார் மனமும் குளிரும் வகையில் தலைவி தோன்றி தொண்டர்களை வாழ வைப்பார் எனத் தெரிவித்துக் கொள்கிறார்."

ஹிஹிஹி, இது நல்லா இருக்கா? அப்புறம் கோபிநாத், அந்த 3 கோடி, 4 கோடி இல்லை, கணக்கே தெரியலை, சீரியலை ஒழுங்காப் பார்த்தால் தானே!! அபி அப்பாக் கொடுக்காட்டிப் போகுது! உங்க கிட்டே கலெக்ஷன் ஆன பணத்துக்கு ஒழுங்காக் கணக்குக் கொடுங்க. அது சரி, என்ன இந்த பரணி நிதி அமைச்சர்னு போட்டு இருக்கீங்க? வாயை மூடிட்டுப் பேசாமல் இருந்தா எப்படி? வேதா அனுப்பிச்ச பெட்டியில் உள்ளது என்ன ஆச்சு? எல்லாக் கணக்கும் ஒழுங்காக் கொடுக்கணும். கார்த்திக், கவனிச்சுக்குங்க எல்லாத்தையும், வரவேற்பு ஏற்பாடுகள் சிறப்பா இருக்கணும், சொல்லிட்டேன். எனக்கு ஆடம்பரமே பிடிக்காதுன்னுதான் தெரியுமே உங்க எல்லாருக்கும்.

அதனாலே சும்மா டிஜிட்டல் விளம்பர பேனர் வைச்சாப் போதும். அப்புறம் இந்த ஸ்கூல் பையங்க, பொண்ணுங்க, மாலை, மரியாதை இருந்தாப் போதும். அப்புறம் இந்தப் போர்க்கொடி என்னமோ ஹையா ஜாலி, எனக்கு வேலை ஏதும் இல்லைனு கும்மாளம் போடற மாதிரி தெரியுது. அது மேலே ஒரு கண் இல்லை, இரண்டு கண்ணும் வச்சுட்டு வேலை ஏதும், ரொம்பவே கஷ்டமாக் கொடுங்க. சீக்கிரம் முடிக்க முடியாமல் என் கிட்டே மாட்டிக்கிறமாதிரி இருக்கணும். இந்தியாவில் நான் இல்லாதப்போ உ.பி.ச. பருப்பு, ச்சீச்சீ, பொறுப்பு ஏத்துக்குவாங்க. இந்தியத் தொண்டர்கள் அவங்க சொல்படி கேட்டு நடக்கணும். முக்கியமா அம்பி. அப்புறம் இந்த பாலராஜன்கீதா வேறே "புஷ்"க்குத் தனியாச் செய்தி கொடுத்திருக்காங்க. (சார், உங்க பேரையும் இழுத்தாச்சு இதிலே). அப்புறமாய்த் திராச. சார் ஃபோன் செய்து அம்பி யாருக்குமே பின்னூட்டம் கொடுக்கக் கூடாதுன்னு சொல்றதாய்ச் சொல்லி வருத்தப் பட்டுக்கிட்டு என்ன செய்யறதுன்னு கேட்டார். அதுவும் தவிர, வலைஉலகில் உள்ள எல்லாக் கட்டைப் பிரம்மச்சாரிப் பையன்களும் அவர் வீட்டுக்குப் படை எடுக்கிறதாவும், அதனால் வீட்டை மாத்தலாமா? அல்லது எங்கேயாவது போய் ஒளிஞ்சுக்கலாமான்னு யோசிக்கிறதாயும் சொல்றார். எல்லாம் இந்த அம்பியும், போர்க்கொடியும் அவர் வீட்டுக்குப் போயிட்டு வந்ததுக்கு அப்புறம் இரண்டு பேருக்கும் கல்யாணம் நிச்சயம் ஆயிட்டதாய்ச் சொன்னதால் வந்த தொல்லை. வேறே என்ன? சார், நீங்க ஃபோனில் சொன்ன மாதிரியே சொல்லிட்டேன், சரியா இருக்கா, வந்து பார்த்துக்குங்க.

அப்புறம் இந்தச் சிங்கங்களுக்கு ஏதோ ஆபத்தாமே? ஹிஹிஹி, வல்லி, உங்க வீட்டு நரசிங்கம் இல்லை, இது நிஜச் சிங்கம். அப்பாடி, ஒரு வழியா யோசிச்சு, யோசிச்சு உங்களையும் இழுத்தாச்சு. இன்னும் யார் பாக்கி? தெரியலை! இந்தச் சிங்கங்களுக்காக ஏதோ திட்டம் போடறாங்க. அதையும் பார்க்கணும். அப்புறமாய் எஸ்.கே.எம். உங்களுக்கு இப்போ மெயிலமுடியலை. அப்புறமா மெயிலறேன். மதுரையம்பதி, நீங்களும் ஆட்டத்தில் உண்டு. அதான் மாற்றுக் கட்சியினரின் அணியில் சேர்ந்துட்டீங்களே? நறநறநறநற :)))))))))))))) உடனே வந்து என்னாலே பார்க்க முடியாது. பின்னூட்டம் போடறவங்களோ, திட்டறவங்களோ வந்து திட்டிட்டுப் போங்க. நான் மெதுவா வந்து பார்த்துக்கறேன். வர்ட்டா????

@அம்பி, கம்பர் "அம்பி"யைப் பாடினாரா? இருங்க, இன்னிக்கு எழுத ஆரம்பிச்சேன். அப்புறம் வேணாம்னு விட்டுட்டேன். தமிழ் முதலிலே ஒழுங்காப் படிங்க. :P

இந்திய வலைஉலகிலே முதல் முறையாகத் தலைவி வெளிநாடு விஜயம்!!!!!!

திரும்பிப் பார்க்கிறேன்

இன்னிக்கோட நான் தமிழில் எழுத ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆகிறது. ஒண்ணும் பெருசாக் கிழிக்கலைன்னாக் கூட ஏதோ ஓரளவு சிலரின் கவனத்தையாவது என்னோட எழுத்துப் பெற்றிருக்கிறது. ஆரம்பிச்சது என்னவோ 2005 நவம்பரில் என்றாலும் சிலநாள் எதுவும் எழுதாமலும், அப்புறம் ஆங்கிலத்தில் மிகவே குறைவாகவும் எழுதினேன். என்ன தமிழ்ப் புலமையைப் பார்த்து நீங்க எல்லாம் பிரமிச்சுப் போற மாதிரி ஆங்கிலப் புலமையையும் பார்த்து பிரமிச்சுடுவீங்களோன்ற பயத்தில் தான் தொடரவில்லை!!!! அப்போ முதன்முதல் என்னோட பின்னூட்டங்களைப் பிரசுரித்து எனக்கு ஆதரவு கொடுத்து வந்தவர்கள் திரு டோண்டு அவர்களும், கைப்புள்ளயும் தான். அப்புறமாய்ப் பினாத்தலும், பிதற்றலும், தருமியும் ஆதரவு கொடுத்தார்கள். இதில் பினாத்தலுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு உண்டு. அதே போல் தருமி அவர்களுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு உண்டு என்றாலும் இருவரும் என்னுடைய கருத்துக்களைப் பிரசுரித்ததோடு அல்லாமல் எனக்குப் பதிலும் கொடுத்து வந்தார்கள். சிபியோடு கருத்து வேறுபாடு என்று எதுவும் இல்லை. அவ்ருடைய "அமானுஷ்ய வாசகி"யைப் படித்து அவரோட பதிவுக்குப் போக ஆரம்பித்தேன். "குமாரகாவியம்" எழுத ஆரம்பித்தார். அப்போ எல்லாம் சிபி ஒரு சமயத்தில் நான் பின்னூட்டம் கொடுக்க இன்னும் வரலையே என்று கேட்டுப் பிதற்றிக் கொண்டிருந்தார். எல்லாம் நேரம்!!!! எனக்குத் தான்!!! ஹிஹிஹி!! வேறே என்ன? இப்போ அவர் எங்கேயோ! நான் எங்கேயோ! தமிழ் எழுத ஆரம்பிச்சதும் முதல் வாழ்த்துக் கைப்புள்ளயிடம் இருந்தும், முதல் கிண்டல் அம்பியிடம் இருந்தும் வந்தது. அன்றில் இருந்து இன்று வரை தன் பணியை சற்றும் மாற்றமில்லாமல் செய்து வருகிறார் அம்பி!!!!! கைப்புள்ள நடு நடுவில் காணாமல் போய்ப் பின்னர் வந்தார். இப்போவும் கொஞ்ச நாளாய்க் காணாமல்தான் இருக்கிறார். வந்துட்டாரா தெரியலை. நான் எழுத ஆரம்பிச்ச அதே சமயம் ஆரம்பிச்சார் வல்லியும். அப்போ எல்லாம் கொஞ்ச நாள் வல்லியும், நானுமே பின்னூட்டம் கொடுத்துக் கொண்டிருந்தோம். அம்பி திடீர் என சொல்லிக்கொள்ளாமல் (வழக்கம் போல்) கல்லிடை போக நாங்கள் இருவரும் எங்கள் இருவர் பின்னூட்டத்தைத் தவிர அம்பி கொடுக்கும் பின்னூட்டம் இல்லாமல் என்ன ஆச்சோ என்று கவலைப்பட்டு அம்பியோட பதிவுக்குப் போய்க் கண்டுபிடிச்சோம் அம்பி ஊரில் இல்லை என. அம்பி மூலம் பழக்கம் ஆன வேதா, அப்புறம் நானாய்த் தேடிக் கண்டு பிடிச்ச கார்த்திக் என்று எனக்கு நண்பர்கள் வர ஆரம்பித்தார்கள்.

இதுக்கு நடுவில் நான் வழக்கம் போல் சுற்றுலா போக வல்லியின் பதிவுகளின் போக்கும், அவர் என்னோட பதிவுக்கு வருவதும் மாற்றம் காண ஆரம்பித்தது. அவர் வழி தனி வழி என்று ஆகி அவர் சில பல மாற்றங்களுடன் இன்று எழுதி வருகிறார் ஒரே மாதிரியான சீரான தரத்துடன்.எனக்கு அப்புறம் ஆரம்பிச்ச நாகை சிவா ஆரம்பம் முதலே நல்ல நட்புடன்
பழகி வருகிறார். என்னோட எழுத்தில் மாற்றம் வருவதற்கும், ஓரளவு கிண்டலுடன் நான் எழுதுவதற்கும் சூப்பர் சுப்ராவும், வெ.பா.வடிக்கலாம் வா. ஜீவ்ஸும் காரணம். இதில் சூப்பர் சுப்ரா தான் என்னோட பார்வையின் கோணத்தை மாற்ற முயன்றார். ஓரளவுக்கு நான் மாற்றிக் கொண்டேன். ஓரளவு என்று இங்கே நான் குறிப்பிடுவதின் காரணம் என்னால் இன்னும் முழுதாய் மாறமுடியவில்லை. தப்பு என் மீது தானே தவிர, அவர் மீது இல்லை. அப்போ என்னோட 50-வது பதிவில் மதுமிதாவுக்கு நான் எழுதிய பதிவில் குறிப்பிட்ட கடைசி வரி "நான் சாதனை மனுஷி இல்லை" என்பது. அதைக் குறிப்பிட்டு மீண்டும் அந்தப் பதிவுக்கு அவர் ஒரு பின்னூட்டம் தற்சமயம் மகளிர் தினத்தை ஒட்டிக் கொடுத்ததில் இருந்து அவர் எங்கேயோ இருந்து என்னோட எழுத்தைப் படித்து வருகிறார் என்றும் புரிந்தது. இம்மாதிரியான ஊக்கங்களுக்கு நான் யாருக்கும் எதுவும் செய்யவில்லை. என்றாலும் தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வருகிறார்கள்.

75-பதிவுகள் போட்டு முடித்த சமயம் என்னோட தவறினால் பதிவுகள் காணாமல் போனதும், திரு மஞ்சூர் ராஜா அதைத் தேடிக் கண்டுபிடிச்சுக் கொடுத்ததும், அப்போது என்னுடன் சேர்ந்து என்னோட கணவர் என்னை விட ரொம்பக் கவலைப்பட்டு மஞ்சூருடன் ஆன்லைனில் தொடர்பு கொண்டு வேண்டிய தகவல்களை நான் சொல்லச் சொல்லக் கொடுத்தும் (அப்போது வேறு முக்கியமான வீட்டு வேலை எனக்கு இருந்தது) அவரிடமிருந்து தகவல்கள் பெற்றும் உதவினார். இப்போவும் நான் எழுதும் சில முக்கியமான பதிவுகள் பற்றியும் அதற்கு வரும் பின்னூட்டங்கள் பற்றியும்,நான் கொடுக்கும் பதில்கள் பற்றியும் என் கணவர் கேட்டுத் தெரிந்து கொள்வார்.

பதிவுகள் காணாமல் போன அந்த சமயத்தில் இருந்து நாகை சிவா ரொம்பவே உதவி செய்ய ஆரம்பித்தார். அப்போதும் சரி, அதற்குப் பிறகும் சரி, நாகை சிவா ரொம்பவே உதவி செய்தார். தாய்நாடு வந்ததும் நான் சொன்ன எனக்கு செளகரியப்பட்ட தேதியில் எங்க வீட்டுக்கு வந்து விட்டும் போனார். அதற்கு முன்னாலேயே முத்தமிழில் இருந்து திரு காழியூராரும், பாசிட்டிவ் ராமாவும் வந்தார்கள் நல்ல கொட்டும் மழைக்காலத்தில். சிவா வந்துவிட்டுப் போனதும் முத்தமிழில் இருந்து ஜெயந்தியும், அவர் பெற்றோரும், ஜெயந்தியின் பையனும் வந்தனர். பின்னர் திரு கண்ணபிரான் ஒரு பெரிய பதிவர் மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்து பார்த்துவிட்டுப் பின் அது நான், கண்ணபிரான், பாலராஜன்கீதா, திரு தி.ரா.ச. மட்டும் சந்தித்துப் பார்த்துக் கொண்ட சிறிய ஓர் சந்திப்பாய் ஆனது. வேதாவிற்கும் அன்று வரமுடியவில்லை.



இந்த ப்ளாக்கர் எனக்குக் கொடுக்கிற தொந்திரவு மாதிரி வேறே ஏதும் கொடுக்காது. அவ்வளவு தொந்திரவு கொடுக்கிறது. அப்படியும் நான் ஏதோ ஓரளவு எழுதிக் கிழிக்கிறேன்னா அதற்கு ராம் போன்றவர்களும் காரணம். அவரோட வேலைத் தொந்திரவுகளுக்கு இடையிலும் அவர் என்னோட ப்ளாகைப் புது ப்ளாகருக்கு மாற்றிக் கொடுத்தார். அதற்காக அவர் ஓர் இரவு கண்விழிக்க வேண்டி இருந்திருக்கிறது. அவர் எனக்காக உழைத்துக் கொண்டிருந்த சமயம் நான் என்னமோ நல்லாத் தூங்கிட்டு இருந்தேன். அதுவும் தவிர தமிழ்மணம் மறுமொழி மட்டுறுத்தல் நிலவரத்திலும் என்னுடைய பதிவுகள் பெயர் தெரியுமாறு செய்திருக்கிறார். இவரைத் தவிர, நான் இல்லாத சமயங்களில் என்னோட ப்ளாகுக்கு மறைமுகமாய்க் காவல் செய்தும், எனக்காகப் பதிவுகளைச் சிலசமயம் இல்லை, பல சமயங்களில் பப்ளிஷ் செய்தும், பின்னூட்டங்களைப் பப்ளிஷ் செய்தும், நான் போடும் பூதாகாரமான ஃபோட்டோக்களை ஒழுங்கு படுத்தியும், பலவிதங்களில் உதவி செய்து வந்து கொண்டிருக்கும் உ.பி.ச.வின் உதவியும் கட்டாயம் என்னால் மறக்கவே முடியாது. ஹிஹிஹி, யார் அந்த உ.பி.ச? கண்டுபிடிக்கிறவங்களுக்கு அவங்களே சொந்த செலவில் வந்து பின்னூட்டம் கொடுப்பாங்க. இப்போக் கூடப் பாருங்க, போன பதிவில் நீங்க எல்லாரும் என்னடா பின்னூட்டங்கள் வந்திருக்கு? பதிலே இல்லைனு நினைப்பீங்க! பப்ளிஷ் செஞ்சது அவங்கதான். பதில் கொடுக்க நேரம் இல்லை எனக்கு. அதனால் பதில் கொடுக்கலை. ஆகவே இது என் தனி ஒருத்தியின் சாதனைன்னு சொல்லவே முடியாது. எல்லாருமாய்ச் சேர்ந்து செய்த கூட்டுச் சாதனைன்னுதான் சொல்லணும். ஏனெனில் நான் எழுதறதை விட முக்கியம் அது பப்ளிஷ் ஆகிறது. அவ்வளவு கஷ்டம் பப்ளிஷ் பண்ணுவதற்கு ஆகிறது. அப்புறம் இன்னொரு முக்கியமான பதிவு இப்போ எழுதிட்டு நான் போகணும். அதனால் இதை இத்தோடு முடிச்சுக்கறேன். அப்புறம் யு.எஸ். வந்ததும் எல்லாருக்கும் பெரிய "ஆப்பா" வச்சுடலாம். வர்ட்டா????