எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, December 24, 2016

சோசியம் பார்க்கலியோ, சோசியம்!

ஜோசியத்தை எத்தனை பேர் நம்பறீங்க? அநேகமா வாழ்நாளில் ஒரு முறையாவது ஜோசியம் பார்க்காதவங்களே இருக்க மாட்டாங்கனு நம்பறேன். குறைந்த பட்சமாகப் பத்திரிகைகளில் வரும் ராசி பலன்களையாவது பார்த்திருப்பாங்க. ஆனால் நம்ம ரங்க்ஸ் காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரைக்கும் உள்ள எல்லா ஜோசியர்களையும் பார்த்துட்டார். ஊட்டியிலே இருந்தப்போ ஒரு ஜோசியரைப் பார்க்கப் புஞ்சைப் புளியம்பட்டிக்கு என்னைக் கூட்டிப் போனார்னா பாருங்களேன். அந்த ஜோசியர் ரயில் சிநேகமாம். விலாசமெல்லாம் வாங்கி வைச்சுண்டு வருங்காலத்தைத் தெரிஞ்சுக்கக் கிளம்பிட்டார் என்னையும் அழைத்துக் கொண்டு! :)))) தெருவிலே வரும் குறி சொல்றவங்க, குடுகுடுப்பைக்காரங்கனு ஒருத்தர் பாக்கி இல்லை! :))))

புஞ்சைப் புளியம்பட்டிக்காரர்  சொன்னது எல்லாம் பலிச்சதா, பலிக்கலையாங்கறது ஒரு பக்கம் இருக்கட்டும். சில ஜோசியர்கள் நாட்டு பலன், தலைவர்கள் பத்தி எல்லாமும் சொல்றாங்க. அப்படிச் சொன்னவர்களிலே சிலர் சென்ற வருஷம் சென்னை வெள்ளத்தைப் பற்றி ஆற்காடு  பஞ்சாங்கத்திலே குறிப்பிட்டிருந்ததாகவும், இந்த வருஷமும் அதே போல் மழை வெள்ளம் வர வாய்ப்பு இருப்பதாகவும் சொன்னாங்க. அதே போல் பிரபலமான பெண் அரசியல் தலைவர் இறப்பு பற்றியும் சொல்லி இருந்ததாச் சொல்லிட்டு இருக்காங்க. ஜெயலலிதா இறந்ததும் உடனே வர்தா புயல் வந்ததும் அந்தப் பஞ்சாங்கத்தைக் கொஞ்சமானும் நம்பணும்னு சொல்றாப்போல் ஆயிட்டது! மேலும் ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழந்து போனது குறித்தும் அதிலே சொல்லி இருப்பதாகச் சொல்கின்றனர். தேதி குறிப்பிட்டே அதிலே ரூபாய் நோட்டு மதிப்புக் குறைவு பத்தி  வந்திருப்பதாகவும் சொல்கின்றனர்.

கறுப்புப் பண நடவடிக்கை குறித்தும் அதன் மூலம் அரசுக்கு வருமானம் அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம். அதுவும் நடந்திருக்கிறது. இனி வரப் போகும் வருடத்திற்கு  என்ன சொல்லி இருக்காங்க என்று தெரியலை! எங்க வாழ்நாளில் பல ஜோசியர்களைப் பார்த்தாச்சு. பெரும்பாலானவர்கள் சொன்னது பலித்ததே இல்லை. சும்மா சாதாரணமா எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பாராமல் சொன்னவங்க ஜோசியம் பலிச்சிருக்கு! என் கல்யாணமும் அப்படி ஜோசியர் சொன்ன மாதிரியே நடந்தது. என் கைரேகையைப் பார்த்துட்டு என் நண்பர் சிவா என்பவர் ஐம்பது வயசுக்கு மேலே நீ வெளிநாடு போவேனு சொன்னப்போச் சிரிச்சேன். ஆனால் அது உண்மையாக நடந்தது. ஆனால் பொதுவாக எனக்கு ஜோசியம் பார்ப்பதிலேயோ வார பலன்கள் படிப்பதிலேயோ அவ்வளவு ஆர்வம் இல்லை. நடக்கிறது நடக்கட்டும், வருவதை எதிர்கொள்வோம்னு இருப்பேன்.

நம்ம ரங்க்ஸ் ஶ்ரீரங்கத்திலே இருந்தவரைக்கும் காலை ஏழு மணிக்குத் தொலைக்காட்சிப் பெட்டியைப் போட்டுட்டு உட்கார்ந்தார் என்றால் ஒவ்வொரு தொலைக்காட்சியா ஜோசியம் சொல்றவங்க சொல்றதை எல்லாம் கேட்டு முடிச்சுட்டு ஒருவழியா அரைமனசோடு எட்டரை மணிக்கு எழுந்திருப்பார். இதிலே ஏதோ ஒரு சானலிலே ஹரிகேசநல்லூர் ஜோசியர் ஒருத்தர் சொல்லுவார். யாருக்குமே கெடுதல் தரும் வார்த்தைகளைச் சொல்லவே மாட்டார். எல்லோருக்குமே வாழ்க்கையில் வளம் சேரும் என்றே சொல்லுவார். இதிலே சங்கரா தொலைக்காட்சியிலே சொல்றவர் ஒருத்தருக்கும் நல்லதாவே சொல்ல மாட்டார். நம்ம ரங்க்ஸ் தான் ரொம்பவே ஈடுபாட்டுடன் கேட்டுக் கொண்டு இருப்பார். அநேகமா ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொருத்தர் வீட்டிலே இருக்கிறதாலே மொத்தமும் கேட்டுப்பார்.


 நான் பாட்டுக்குச் சமைச்சுட்டோ அல்லது ஏதேனும் வேலை செய்து கொண்டோ இருப்பேன், இந்த ஜோசியக்காரங்க சொல்றதைக் கேட்டு ரங்க்ஸ் என்னிடம் , "இன்னிக்கு உனக்குச் சந்திராஷ்டமம்! ஜாக்கிரதையா இரு!" னு சொல்லிடுவார். அது வரைக்கும் நல்லாச் செய்துட்டிருந்த வேலை அப்புறமாத் தடுமாறுகிறாப்போல் இருக்கும்.  அப்போ வர கோபம் அன்னிக்குப் பூராப் போகாது. இதெல்லாம் சந்திராஷ்டமத்தோட வேலைனு ரங்க்ஸ் சொல்ல, "நான் பாட்டுக்கு இருந்தேன், நீங்க சொன்னதும் தான் எனக்கு இப்படி ஆயிடுச்சு,"னு நான் சொல்ல ஒரு குருக்ஷேத்திரம் தான் அங்கே நடக்கும்!

எது எப்படியோ, நமக்குனு உள்ளது, நமக்குக் கிடைக்க வேண்டியது கட்டாயமாய்க் கிடைத்தே தீரும்! கடவுள் அதை நிறுத்த மாட்டார். ஆகவே இந்த ஜோசியம் எல்லாம் எதுக்குப் பார்க்கணும்?  எல்லாவற்றையும் ஆண்டவன் கைகளில் ஒப்படைத்துவிட்டு நிம்மதியா இருப்போம். ஆனாலும் பாருங்க, மக்களுக்கு எதிர்காலம் குறித்து அறியறதுக்குத் தான் அதிக விருப்பம் இருக்கு!  இந்தியா குறித்தும் மோதி ஆட்சி குறித்தும் கூட நாஸ்ட்ரடோம்ஸ் எழுதி வைச்சிருக்கிறதாச் சொல்றாங்க. நான் தேடினவரைக்கும் புத்தகத்தில் கிடைக்கலை; அல்லது எனக்குத் தேடத் தெரியலை! எதிர்காலத்தை நினைத்துக் கொண்டு நிகழ்காலத்தை விட்டு விடாமல் இருக்கணும். அதான் வேண்டியது.

ஜோசியம் பாருங்க, பொழுது போக்கா வைச்சுக்கோங்க. அதையே நம்பிக் கொண்டு உங்கள் முயற்சிகளைக் கைவிட வேண்டாம். நாம் முயற்சி செய்வதைப் பொறுத்தே கடவுள் அனுகிரஹமும் இருக்கும். ஒண்ணுமே செய்யாமல் கையைக் கட்டிக் கொண்டு பொறுப்புக்களைத் தட்டிக் கழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தால் கடவுள் மட்டும் என்ன செய்வார்! அவரும் பேசாமல் தான் இருப்பார். முயற்சி தான் திருவினை ஆக்கும்! 

Thursday, December 22, 2016

ஜங்கிள் புக்!

ஹிஹிஹி, மீ த ஒன்லி குழந்தை இன் இணைய உலகம். இன்னிக்கு ஜங்கிள் புக் படம் பார்த்தேன். எண்பதுகளின் கடைசியில் (?) நெடுந்தொடராக வந்து கொண்டிருந்தது. பல குழந்தைகளின் மனதைக் கவர்ந்தது! மோக்லி, மோக்லி, மோக்லி என்று இசை ஆரம்பித்ததுமே குழந்தைகள் தொலைக்காட்சிக்கு வந்துடுவாங்க. கதை எல்லோரும் அறிந்தது தானே! தன் தகப்பனுடன் பயணத்தில் இருந்த சிறு குழந்தை ஒன்று புலி தகப்பனை அடித்துக் கொன்றது தெரியாமல் அங்கே உள்ள ஓநாய்களால் வளர்க்கப்பட்டுப் பின் அதே புலியால் தொடரப்பட்டுத் தன் சாமர்த்தியத்தாலும் தைரியத்தாலும் புலியைக் கொன்று காட்டில் தன் வாழ்க்கையைத் தொடர்கிறான்.

மோக்லி என்னும் சிறுவனாக நீல் சேத்தி நன்றாக நடித்துள்ளார். மோக்லியைக் காப்பாற்றும் பகீரா என்னும் சிறுத்தைக்கு காந்தியாக நடித்த பென் கிங்க்ஸ்லி குரல் கொடுத்துள்ளார். படத்தில் வசனங்கள் எழுத்து வடிவிலும் வருகின்றன. ஆங்காங்கே காட்டுச் சூழ்நிலை அருமையாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. யானைகளைப் பார்த்ததும் பகீராவும் பாலுவும் கீழே விழுந்து வணங்கச் சொல்வது பார்த்து வியப்பு ஏற்பட்டது. இது தொடராக வந்தப்போ பார்த்ததில்லை. புலி ஷேர்கானுக்குக் குரல் கொடுத்திருப்பவர் இட்ரிஸ் எல்பா என்பவர் நன்றாகக் குரல் கொடுத்துள்ளார். வசனங்கள் அருமை.

படம் எடுத்திருப்பது வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ்! அப்புறம் படத்தோட தரத்துக்குக் கேட்கவா வேண்டும்! ஒன்றரை மணி நேரப் படம் தான். ஒரு முறை பார்க்கலாம்.  ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு பத்தியோ காமிராக் கோணங்கள் குறித்தோ ஏதும் சொல்லும் அளவுக்கு அறிவு இல்லையாதலால் அதைக் குறித்து ஏதும் சொல்லவில்லை. ஏனெனில் கை தேர்ந்த திரைப்பட நிபுணர்கள் எடுத்த படம் இது.

Monday, December 19, 2016

இறைவனுக்கு நன்றி!

சென்னை நகருக்கும் அதன் சுற்று வட்டாரங்களுக்கும் முதன் முதல் 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் தான் பிரச்னை ஏற்பட்டது. அநேகமாகத் தமிழ்நாட்டுக்கடலோரங்கள் எல்லாமும் பாதிக்கப்பட்டாலும் சென்னைக்கு அதிகப் பிரச்னை. அப்போவும் நாங்க யு.எஸ்ஸிலே தான் இருந்தோம். அப்போ எல்லாம் நான் எழுத்தாளி ஆகலை! :) கணினியைப் பயன்படுத்தத் தெரியும் என்பதால் அவ்வப்போது கணினி மூலம் செய்திகளைப் படிப்போம். அப்படிப் படித்ததில் தான் தெரிந்தது கடலலைகள் சென்னை மெரினாக் கடற்கரையில் மிக உயரமாக வந்தது என்று சின்னச் செய்தியாக முதலில் கொடுத்திருந்தார்கள். பின்னர் தான் நேரம் ஆக, ஆக விரிவான செய்திகளும் அதன் தாக்கமும் புரிய வந்தது. அப்போதே இங்கே யு.எஸ்ஸில் சன் தொலைக்காட்சி போன்றவை வந்து விட்டாலும் பெண் வீட்டிலோ, பையர் வீட்டிலோ அது பார்க்க முடியாது. நம்ம ரங்க்ஸும் அப்போ சீரியல் ரசிகராக இல்லை. 

அதன் பின்னர் நாங்க திரும்பி வந்த 2005 ஆம் ஆண்டு தமிழ்நாடே மழை, வெள்ளத்தால் மூழ்கியது. என்றாலும் எங்கள் வீட்டிற்கோ எங்களுக்கோப் பிரச்னைகள் ஏதும் இல்லை. அந்த வருடம் அடுத்தடுத்துப் புயல்கள் மாறி மாறி வந்து தாக்கினாலும் சென்னையில் பாதிப்பு அவ்வளவாக இல்லை. ஹிஹிஹி, இதுக்குக் காரணம் நாங்க சென்னையைப் பாதுகாத்துக் கொண்டிருந்தது தான் அப்படினு சொன்னா நம்பவா போறீங்க? போகட்டும்! அந்த வருடம் டிசம்பரில் பத்தாம் தேதிக்கு ஒரு பெரிய புயலுக்குச் சென்னையைத் தயாராகச் சொல்லி வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. பையருக்கு டிசம்பர் 11 ஆம் தேதி கல்யாணம். டிசம்பர் ஐந்தாம் தேதி வாக்கிலேயே பையர் ஹூஸ்டனிலிருந்து வந்துட்டார். ஒன்பதாம் தேதியிலிருந்து உறவினர்கள் திருமணம் நடக்குமானு தொலைபேசிக் கேட்க, நாங்க யார் வந்தாலும் வராட்டியும் பெண் வீட்டாரும் நாங்களும் இருந்து கல்யாணத்தை நடத்திவிடுவோம் என்று சொல்லி விட்டு எதுக்கும் பாதுகாப்பா இருக்கட்டும்னு ஒன்பதாம் தேதி இரவுக்கே திடீரெனத் திட்டம் போட்டுக் கல்யாண மண்டபம் போயிட்டோம்.

மறுநாள் ஏதோ அரசியல் கட்சியின் திடீர் போராட்டத்தினால் ஆங்காங்கே பேருந்துகள் நிற்க நல்லவேளையாக நாங்க பிழைச்சோம்னு எண்ணிக் கொண்டோம். உறவினர்கள் எல்லோரும் ஒவ்வொருவராக வர ஆரம்பிக்கப் புயலும் கல்யாணத்தையும் மணமக்களையும் ஆசீர்வதித்துவிட்டு ஒதுங்கிக் கொண்டது. வெளி ஊர் உறவினர்கள் கூட அதன் பின்னர் கிளம்பி வந்தனர். ஆக மொத்தம் இப்படியாகச் சென்னையைக் காப்பாற்றி வந்த நாங்க 2007 ஆம் வருடம் கடுங்கோடையில் யு.எஸ். வந்ததால் அந்த வருடம் அதன் பின்னர் ஒன்றும் இல்லாமல் பாதுகாத்தோம். ஆனால் 2011 ஆம் வருடம் பாருங்க, நாங்க அக்டோபரில் கிளம்பி வந்தப்புறமா டிசம்பரில்  தானே புயல் தானாகவே வந்து கடலூரைத் தாக்கச் சென்னையும் பாதிக்கப்பட்டது. ஹிஹிஹி, நாங்க இல்லையே, அதான்!  ஆனால் பாருங்க, 2012 ஆம் ஆண்டு யு.எஸ்ஸில் இருந்து திரும்பினதும் நாங்க ஶ்ரீரங்கம் வந்துட்டோமா, அதன் பின்னர் சென்னைக்கு அடிக்கடி வந்து போயிட்டிருந்ததாலே சென்னை ஒருவழியாக் காப்பாற்றப் பட்டது. 

போன வருடம் தான் கடும் மழை பொழிந்து சென்னை வெள்ளத்தில் மூழ்க இதுக்குக் காரணம் நாங்க அங்கே இல்லாததால் தான் என்று புரிந்தது. அதுக்கப்புறமாப் பாருங்க இந்த வருஷம் நாங்க இருந்தவரை வருவேன், வருவேன் என்று பயமுறுத்திட்டிருந்த நடா புயல் வராமல் மறைய, நாங்க அங்கிருந்து கிளம்பியதும், எங்கோ போக இருந்த வர்தா புயல் அதிசயமாகச்சென்னையைப் பல வருஷங்களுக்குப் பின்னர் தாக்கி விட்டது. அதுவும் கடுமையாக! இன்னும் பல இடங்களிலும் பலருக்கும் மின்சாரம் வரலைனு படிச்சோம். பல இடங்களிலும் அலைபேசிச் சேவையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. பிஎஸ் என் எல் இணைய இணைப்பும், தொலைபேசியுமே ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளும் சாதனமாக இருந்திருக்கிறது. சில இடங்களில் இன்னமும் இருந்து வருகிறது. 

அம்பத்தூரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். என்றாலும் எங்கள் வீட்டில் அருமையாக வளர்த்த வேப்பமரத்துக்கு ஒண்ணும் ஆகலைனு உறுதி செய்து கொண்டோம். தென்னை மரங்களும் விழலை! இறைவன் காப்பாற்றினார். ஆனால் ஒரு சிலரின் வீடுகள் சுவர் இடிந்து விழுந்திருக்கின்றது. சில வீடுகளில் மாடிப்படிக் கைப்பிடிச் சுவர் இடிந்து இருக்கிறது. மரங்களால் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் பிரச்னை. இதிலே அரசு உடனே வந்து ஒண்ணும் செய்யலைனு புகார்கள்! எதைனு முதலில் கவனிப்பாங்க. பாதிப்பு எல்லோருக்கும் தானே! ஒவ்வொரு இடமாகத் தானே கவனிக்க முடியும். மரங்களை அந்த அந்த தெருக்காரங்களே சேர்ந்து ஆட்களை நியமித்து ஒரு வீட்டுக்கு இத்தனை ரூபாய்னு கட்டணம் நியமிச்சு அகற்றலாமே! இந்த மழையிலும் தங்கள் கஷ்டம் பாராது ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் மின்சார விநியோகத்தைச் சீர் செய்யும் தொழிலாளர்களுக்கு உதவலாம். அவங்களும் நம்மைப் போன்ற பொது ஜனங்கள் தான். அவங்க வீடுகளிலும் மின்சாரம், குடிநீர்ப் பிரச்னை இருக்கும். அதைக் கூடக் கவனிக்காமல் அவங்க பொதுமக்கள் பிரச்னையைத் தீர்க்க வேண்டி வந்திருக்காங்க இல்லையா! அதைப் பார்க்கணும்.

நம்மால் இயன்றவரை அரசு செய்யும் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புத் தரணும். உயிர்ச் சேதம் அதிகம் இருப்பதாகத் தெரியவில்லை . சென்ற வருடம் அளவுக்குப் பொருட்சேதமும் இருப்பதாகச் சொல்லவில்லை. அந்த மட்டில் இறைவன் கருணை என நினைத்துக் கொண்டு இறைவனுக்கு நன்றி சொல்வோம். விழுந்த மரங்களை எல்லாம் ஒரே நாளில் யாராலும் அப்புறப்படுத்த முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத் தான் செய்ய முடியும். ஆகவே பொறுத்திருப்போம்.  மற்ற மாவட்டங்கள் ஓரளவுக்குத் தாக்குப் பிடித்திருக்கின்றன என எண்ணுகிறேன். 

ஜேகே அண்ணா, இந்தியாவின் பிரச்னைகள் குறித்துப் பதிவுகள் வராதுனு சந்தோஷப் பட்டீங்களே, இது எப்பூடி இருக்கு?

இப்போ இங்கே காலை ஏழு மணி. அங்கே உங்களுக்கெல்லாம் மாலை ஆறரை இருக்கும்னு நினைக்கிறேன். :)))))

Sunday, December 18, 2016

மஹாகவிக்கு ரொம்பவே தாமதமான வாழ்த்துகள்! :(

கடந்த பத்து வருட இணைய நாட்களில் ஒரு வருடமும் மஹாகவிக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லத் தவறியதில்லை. சென்ற வாரம் தான் முதல்முறையாகப் பதிவு போட முடியவில்லை. முதல்நாள் டிசம்பர் பத்து அன்று தான் யு.எஸ். வந்து இறங்கினோம். மறுநாள் அடுத்தடுத்து வேலைகள், மற்றும் மடிக்கணினி தயாராகவில்லை என்பதாலும் போட முடியவில்லை. சரியாக ஒரு வாரம் கழித்து இன்று சொல்கிறேன். தாமதமான வாழ்த்துகள் மஹாகவி அவர்களுக்கு.

பாரதியார் பிறந்த நாள் க்கான பட முடிவு

Friday, December 16, 2016

புதுக் கணினியிலிருந்து புதிய விஷயம்!

வணக்கம். இப்போது அம்பேரிக்காவில் ஹூஸ்டனில் இருக்கிறேன். எத்தனை நாட்கள்/மாதங்கள் என்பது தெரியாது. போன வாரம் வந்தோம். கிளம்பும் வரை நிச்சயமில்லாமல் இருந்ததால் யாரிடமும் சொல்லவில்லை. கடைசி நிமிஷம் வரையிலும் பிரச்னைகள். ஒரு வழியாய் இங்கே போன வாரம் சனிக்கிழமை வந்து சேர்ந்தாச்சு. வந்த பின்னரும் பிரச்னைகள் தான். வரும்போது என்னுடைய மடிக்கணினியை எடுத்து வரவேண்டாம்னு பையர் சொல்லிட்டார். ஆகையால் எடுத்து வரலை. இங்கே புதுக்கணினி வாங்கி வைச்சிருந்தார். அதை எல்லாம் இன்ஸ்டால் பண்ணி நேற்றுத் தான் கொடுத்தார். ரொம்பவே வேலை மும்முரத்தில் இருந்தார். நேற்றுச் சும்மாத் திறந்து பார்த்துட்டு வைச்சுட்டேன். இப்போத் தான் வேலை செய்ய ஆரம்பிச்சேன்.

முதல்லே வேறே இடத்திலிருந்து உள் நுழைந்ததால் முகநூல் பூட்டி விட்டார்கள். அதை ஒரு வழியாப் பையர் உதவியுடன் திறந்தேன். அப்புறமாவும் அலைபேசியில் திறப்பதற்குள்ளாகப் போதும் போதும்னு ஆயிடுச்சு. பின்னர் இதிலே ஒரு வழியாக் கலப்பையைக் கொண்டு வந்தேன். முதல்லே எழுதுவது இது தான். கீ போர்டும் பழகணும். மெல்ல மெல்ல மற்ற விஷயங்களுக்கு வருகிறேன். அதுக்குள்ளே சென்னைப் புயல்! நாங்க கிளம்பும்போது புயலில் மாட்டிப்போம்னு நினைச்சு பயந்தோம். அதிலிருந்தெல்லாம் தப்பியாச்சு! இப்போ வேறே மாதிரிப் புயல்! பார்ப்போம். புது மடிக்கணினியிலிருந்து எழுதியவை இவை எல்லாம். இனி நாளை சந்திப்போம். இங்கே இரவு ஒன்பது முப்பத்தைந்து. அங்கே காலை ஒன்பதாக இருக்கும்.

புயல் அனுபவங்கள் எல்லாரும் பகிர்ந்திருப்பீர்கள். எல்லாவற்றுக்கும் மெல்ல மெல்ல வரணும்.

Tuesday, December 06, 2016

ஒரு சகாப்தம் முடிந்தது!

ஜெயலலி க்கான பட முடிவு

ஒரு சகாப்தமே முடிந்தது. இரும்புப் பெண்மணி, அனைவரையும் தன் ஒரே கண்ணசைவாலும், கையசைவாலும் கட்டுப் ப்டுத்திய பெண்மணி, தானாக முன்னுக்கு வந்தவர், அரசியலுக்கு நுழைந்ததிலிருந்து போராட்டங்கள், அவமானங்கள், சிரமங்கள் என அனைத்தையும் தாண்டிக் கொண்டு எதைக் குறித்தும் கவலைப்படாமல் தமிழ்நாட்டு எளிய மக்களின் சேவையே தன் கொள்கையாகக் கொண்டு வாழ்ந்தவர் மறைந்து விட்டார்.

அவருடைய அரசியல் எதிரிகள் கூட அவர் இல்லாத தமிழ்நாட்டு அரசியலும் இந்திய அரசியலும் வெற்றிடத்தை ஏற்படுத்தி இருப்பதை உணர்கிறார்கள். சாமானிய மக்களுக்காக அவர் பற்பல நன்மைகளைச் செய்திருக்கிறார். ரேஷனில் அரிசியில் ஆரம்பித்தால் மாணவ, மாணவிகளுக்கு சைகிள், மடிக்கணினி, இல்லத்தரசிகளுக்கு மிக்சி, கிரைண்டர் போன்றவைகளையும் கொடுத்ததோடு அல்லாமல் தாலிக்குத் தங்கம், குழந்தை பிறந்தால் பரிசுப் பொருட்கள், பெண் குழந்தைகளுக்குத் தனிச் சலுகைகள் என்று கொடுத்ததினால் தமிழ்நாட்டின் ஒட்டு மொத்தப் பெண்களையும் மிகவும் கவர்ந்தவர். வயதான பெண்மணிகள் கூட அம்மா, அம்மா என்று கதறுகின்றனர்.

மக்களின் பொறுமையும் கட்டுப்பாடும் வியக்கத்தக்க விதத்தில் அமைந்திருந்தது. எங்கும் எதிலும் கலவரமோ, பிரச்னைகளோ, சண்டையோ இல்லாமல் அமைதியாக இறுதி ஊர்வலம் நடந்து முடிந்தது. அதோடு அல்லாமல் இன்றைய தினம் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் அனைத்து அம்மா உணவகங்களிலும் உணவு சமைத்துப் பரிமாறப்பட்டிருக்கிறது. இந்தியாவின் அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டுத் தலைவர்களும் இரங்கல் செய்திகளை அனுப்பிய வண்ணம் இருக்கிறார்கள். இந்தியாவின் 20 மாநிலங்களின் முதலமைச்சர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர். குடியரசுத் தலைவரே நேரில் வந்திருக்கிறார். பிரதமர் வந்திருக்கிறார். இப்படி அனைவரையும் தன் பால் ஈர்த்த அந்தப் பெண்மணி இன்று இல்லை.

மிகத் திறமையானவர். தன் கட்சியையும் கட்சிக்காரர்களையும் மிகுந்த கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர். அவர் இல்லாத தமிழகம் இனி என்ன ஆகும்? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  மாலுமி இல்லாக்கப்பலைப் போல் இருக்கும் அதிமுக கட்சியையும் தமிழகத்தையும் தக்க மாலுமியக் காட்டித் தர எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

செல்வி ஜெ.ஜெயலலிதாவின் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்தனைகள்.

Friday, December 02, 2016

கேள்வி கேட்பதும் நானே! பதிலும் நானே! :)

மடிக்கணினிக்கு ஆன்டி வைரஸ் போடணும். இங்கே ஒரு இளைஞர் எனக்கு வாடிக்கையாகப் போட்டுக் கொடுக்கிறார். நீயே செய்துக்கலாமேனு கேட்கலாம். செய்துக்கலாம் தான்! ஆனால் அவர் வந்தால் அப்படியே கணினி சரியாக இருக்கானு ஒரு வழக்கமான பரிசோதனையையும் செய்துடலாம். ஏனெனில் இதுக்கும் வயசாச்சே! நமக்கு ஆகலைனா அதுக்கு வயசு ஆகாதா என்ன?

நேற்று வந்தவர் என்னோட மடிக்கணினியை எப்போதும் பார்க்கும் நபரின் உதவி ஆள். அவரும் இளைஞர் தான். எப்போவும் ஆன்டி வைரஸ் போடும்போது புத்தம்புதிய உறையைப் பிரித்தே சிடியை கணினியில் போடுவார்கள்.  அதை நிறுவியதும் சோதனைகள் செய்து பார்த்த பின்னர் அதைத் திறப்பதற்கான சாவி என்னும் எண்களையும் சிடியையும் உத்தரவாத அட்டையையும் நம்மிடம் கொடுப்பார்கள். ஆனால் நேத்திக்கு அந்த இளைஞர் தன்னிடம் வைத்திருக்கும் ஏற்கெனவே போட்டுக் கொண்டிருக்கும் பல சிடிக்களில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து (ஆன்டி வைரஸ் என்னமோ வழக்கமாப் போடுவது தான்! ஆனால் புதியது அல்ல, பலருக்கும் போட்டதுனு நினைக்கிறேன்.) போட்டார். நான் கேட்டதுக்கு இப்போல்லாம் இப்படித் தான் வருதுனு சொன்னார். திறப்பதற்கான எண்கள் மட்டும் தனியாக வரும் என்றும் இதை எனக்கு மட்டும் தான் போடுவதாகவும் சொன்னார்.

ஆனால் சிடியைத் திரும்ப என்னிடம் கொடுக்கவில்லை. திறக்கும் எண்களைச் சேர்த்துப் போட்டுவிட்டுப் பின்னர் சிடியைத் தானே எடுத்துக் கொண்டு விட்டார். ஐநூறு ரூபாய் பணம் வாங்கிக் கொண்டார். பணமாக இல்லை என்பதால் செக்காகக் கொடுத்துவிட்டோம். ஆனால் எனக்கு மட்டும் சந்தேகம் போகவே இல்லை. அதே சிடியில் இன்னும் பலருக்கு இவர் போட முடியுமே என்பது தான்! அவரைத் திரும்பக் கேட்டதற்கு அவர் "நானும் பலருக்குப் போட்டுக் கொடுத்திருக்கேன். யாருமே என்னைக் கேள்வி கேட்டதில்லை இதைப் பற்றி யாரும் கவலைப்பட்டதில்லை!" என்று பதில் சொன்னார். நான் கேள்வி கேட்பேன் என்று பதில் கொடுத்தேன். அதோடு நான் சொன்னது இப்போதைய இளைஞர்கள் ஒரு வேளை இதனால் என்ன என்று இருக்கலாம். எங்கள் தலைமுறை அப்படி இருந்ததில்லை என்றேன். ஆனாலும் இப்போதும் பல இளைஞர்களும் கவனமாகத் தான் இருப்பதாகத் தெரிகிறது. எங்களுக்கு இப்படிப் பல அனுபவங்கள் உண்டு.  இப்படித் தான் மின் சாதனங்களைப் பழுது பார்க்கையிலும் ஏதேனும் உபரி சாமான்கள் வாங்க நேர்ந்தால் பழுது பார்க்க வரும் நபர்கள் அவங்களே போய் வாங்கி வருவாங்க. யாரும் கடையின் ரசீதைக் கொடுப்பது இல்லை. ஆனால் நாங்க பணம் கொடுக்கும்போதே ரசீது வேண்டும்னு சொல்லுவோம்.

அப்படியும் இரு முறைகள்  பில்லில் எண்களில் போட்ட தொகையும் மொத்தத் தொகையும் ஒன்றாகவும் இருக்கையில் அதிலேயே  எழுத்தால் அதிகத் தொகை எழுதப்பட்டிருக்கும். அதுவும் பேனாவால் எழுதி இருப்பாங்க. ரசீது கணினியால் கொடுக்கப்பட்ட ரசீது! அதில் எழுத்தால் எழுதி இருக்கும் தொகை மேல் அது தெரியாதவண்ணம் பேனால் மேலே எழுதிக் கொடுத்திருப்பாங்க. ஒரு முறை ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள ஒரு மின்சார சாதனத்துக்குக் கூட விலை வைத்து ஆயிரத்து எண்ணூறு ரூபாய் என எழுதப் பட்டிருந்தது. சென்ற மாதம் ஒரு புது எலக்ட்ரீஷியன் வந்து குழல் விளக்குக்குச் சோக் வாங்குகையில் பட்டியும் சேர்த்து வாங்குவதாகச் சொல்லிவிட்டு அதில் கண்ட தொகைக்கு மேல் இருநூறு ரூபாய் சேர்த்துப் போட்டிருந்தார். பின்னர் நாங்க சுட்டிக் காட்டியதும் கடையில் தப்பாகப் போட்டிருப்பதாகச் சொல்லிவிட்டு அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டவர் வரவே இல்லை! இன்னொருத்தர் இன்வெர்டருக்கு வயரிங் பண்ணணும்னு 600 மீட்டர் வயர் வாங்கினார் ஆனால் வீட்டில் ஏற்கெனவே இன்வெர்டருக்கு வயரிங் செய்திருந்தது, அவ்வளவு திறமையான எலக்ட்ரீஷியனுக்கு இன்வெர்டருக்கு வயரிங் செய்திருப்பதைக் கூடவா கண்டு பிடிக்க முடியாது! அந்த 600 மீட்டர் வயரையும் எங்கள் தலையில் கட்டிட்டுப் போயிட்டார்! :(

ஆக மொத்தம் இந்த நாட்டில் தப்பைக் கண்டால் கேள்வி கேட்கக் கூடாது போல! இந்தக் கணினி விற்பன்னர் இனி வருவாரானு யோசனையும் வருது! பார்ப்போம்! நேற்று வந்தவர் உதவி ஆள் தான். நிறுவனத்தை நடத்துபவர் அல்ல! ஆகையால் நம்பிக்கை இருக்கிறது! என்றாலும் பொறுத்திருந்து தான் பார்க்கணும். 

Wednesday, November 30, 2016

என்ன தான் நடக்கிறது நாட்டிலே!

எங்கு பார்த்தாலும் கூவல், புலம்பல், பணமே இல்லைனு! ஒருத்தர் அரிசி வாங்கப் பணமில்லைங்கறார். அவர் ஆட்டோ ஓட்டுநராம். ஆட்டோவை தினமும் ஓட்டுவதில்லையா? அதுக்குக் கூலி வரதில்லையானு தெரியலை! கையிலே பணமே இல்லைனு சொல்றாங்க! அதிலே சிலர் வியாபாரிகள்! வியாபாரமே ஆகலைனு சொல்றாங்க! வியாபாரம் ஆகலைனு சொன்னாலும் இன்னொரு பக்கம் காய்கறிகள், பழங்கள், நடைபாதைக் கடைகள் என்று இருக்கத் தான் செய்கின்றன. அவற்றில் வியாபாரம் செய்வோர் செய்யத் தான் செய்கின்றனர். எல்லோருமே ஐநூறு, ஆயிரம் என்று தான் வியாபாரம் செய்தார்களானு நினைக்கவும் ஆச்சரியம் தான் வருது! யாருமே நூறு, ஐம்பது, இருபது, பத்து ரூபாய்களைப் பயன்படுத்தியதே இல்லையா? அதிலே வியாபாரம் செய்ய முடியாதா? எல்லோரிடமும் கடன் அட்டை இருப்பது சாத்தியமில்லை தான்! ஆனால் வியாபாரிகளிடம் குறைந்த பட்சத் தொகை கூட இல்லாமல் இருக்குமா? அதைச் சுற்றுக்கு விட்டுத் திரும்பப் பெறலாமே!
ஐநூறு ரூபாய் நோட்டு க்கான பட முடிவு
ஒரு தோழி இன்னொரு தோழியிடம் சமையலுக்கு அரிசி பருப்பு, காய்களுக்கு எல்லாம் என்ன செய்தேனு கேட்கிறாங்க. அவங்க வீட்டில் தினம் அரிசி, பருப்பு வாங்குவாங்களோ! நாங்க மொத்தமா அரிசி வாங்கி வைச்சுப்போம். குறைந்தது பத்துக் கிலோவானும்! அதே போல் பருப்பு வகைகள் மற்றப் பொருட்கள் எல்லாமும் ஒரு மாதத்துக்குத் தேவையானதை வாங்கிப்போம். அதுவே ஒன்றரை மாதம் வந்துடும். காய்கள் ஒரு வாரத்துக்கு வாங்குவது உண்டு. அது பத்து நாட்களுக்கானும் வந்துடும். பாலுக்கு மாதா மாதம் பணம் கொடுப்போம். ஆகவே பணம் கொடுப்பதிலோ வாங்குவதிலோ சிரமங்கள் ஏற்படவில்லை. பெரிய அளவில் செய்யும் வியாபாரங்களுக்கு டெபிட் கார்டில் பணம் கட்டிடலாம்.  அப்படி வாங்குவது இப்போதைக்கு மருந்துகள் மட்டுமே. அங்கே குறைந்த பட்சத் தொகையான 150 ரூபாய்க்குக் கூட ஸ்வைபிங் மெஷின் இருக்கிறதால் பிரச்னை இல்லை. எப்படியும் மருந்து  வகைகள் ஆயிரத்தைத் தாண்டும் என்பதால் செக்கிலோ, டெபிட் கார்டிலோ தான் பணம் கொடுக்கணும். மற்றபடி இங்கே உள்ள ஆண்களுக்கான சலூனில் கூட ஸ்வைபிங் மெஷின் குறைந்த பட்சத் தொகையாக ஐம்பது ரூபாயில் ஆரம்பித்து வைத்திருக்கின்றனர். பெரிய ஹோட்டல்களிலும் 150 ரூபாய் வரை சாப்பிட்டாலோ, பார்சல்கள் வாங்கினாலோ டெபிட் கார்டிலோ, அல்லது க்ரெடிட் கார்டிலோ கொடுக்க முடிகிறது. துணிக்கடைகள் எல்லாம் எப்போதுமே கார்ட் வசதி உள்ளவை தான்.

அதோடு அரசாங்கம் ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுக்களைத் தான் மாற்றச் சொல்லி இருக்கிறது. நூறு, ஐம்பது, இருபது, பத்து மற்றும் ஒரு ரூபாய் நோட்டுக்களை மாற்றச் சொல்லவில்லை. எல்லோரிடமும் ஐநூறும் ஆயிரமும் மட்டுமா இருந்திருக்கும்? நூறு, ஐம்பது, இருபது, பத்து ரூபாய் நோட்டுக்கள் ஒருத்தரிடமுமே இல்லையா? இங்கே கீரைக்காரர்கள், வாழை இலை விற்கும் வியாபாரிகள், பூக்கடைக்காரர்கள், பழக்கடைக்காரர்கள் என அனைவருமே நூறு, ஐம்பது, இருபது, பத்து ரூபாய் நோட்டுக்களைப் புழக்கத்தில் விடுகின்றனர். துணிகளை இஸ்திரி செய்யும் பெண்மணி இஸ்திரிக்குக் கொடுக்க வேண்டிய பணம் முப்பத்திரண்டு ரூபாய்க்கு மிச்சம் பதினெட்டு ரூபாய் ஐம்பது ரூபாய் கொடுத்தால் கொடுக்கிறார். அதே போல் ஆட்டோக்காரரும், இந்த ஆட்டோக்களில் மும்பை, சென்னை, திருச்சி என்று கடந்த இருபது நாட்களாகப் பயணம் செய்து பார்த்து அவர்களிடம் பேசியும் பார்த்தோம். அனைவரும் ஆதரவே தெரிவிக்கின்றனர்.

ஆனால் நேற்றுத் தொலைக்காட்சிகளில் காட்டியபோது ஆட்டோக்காரர்கள் அரிசி வாங்கவே பணம் இல்லைனு சொல்வதாகக் காட்டினார்கள். அப்போ ஆட்டோ ஓட்டி வரும் பணமெல்லாம் என்ன ஆகும்? அதோடு இப்போ யாரும் ஐநூறு, ஆயிரம்னு கொடுக்கவும் போறதில்லை. ஐநூறு, ஆயிரம் மாற்றுபவர்களும் இப்போது குறைந்திருக்கின்றனர். இன்னும் சிலர் பத்து நாட்களுக்கும் மேலாகப் பணத்தையோ, அட்டையைத் தேய்க்கவோ இல்லைனால் உடனே ஓசிச் சாப்பாடானு கேட்கிறாங்க. இவங்க கிட்டேயே இல்லைனால் ஓசிச் சாப்பாடு போடறவங்க மட்டும் எப்படிப் போடுவாங்க? புரியலை. அதோடு பணம் செலவு செய்யலைனா உடனே ஓசிச் சாப்பாடுனு அர்த்தமாகுமா? வீட்டிலே பொருட்கள் இருக்கு, சமைச்சிருக்காங்கனு எடுத்துக்கலாமே! இதெல்லாம் படித்த அறிவு ஜீவிகள் தான் சொல்றாங்க! படிக்காத ஜனங்கள் இல்லை.

படிக்காத கீரைக்காரியும், ஆட்டோ ஓட்டுநரும், வாழைப்பழ வியாபாரியும், பூக்கடைக்காரரும், காய்கறிக்காரர்களும், துணிகளை இஸ்திரி செய்து பிழைப்போரும் இது குறித்துக் குறை சொல்லவே இல்லை. பணமே இல்லை செலவுக்குனு சொல்லவும் இல்லை. சிறு வியாபாரம் படுத்துவிட்டது என்போர் எத்தனை ஊர்களில் எத்தனை கடைத்தெருவிற்குப் போய்ப் பார்த்திருக்காங்கனு தெரியலை! நான் பார்த்தவரை மாநகரங்களான மும்பை, சென்னை, மற்றும் இங்கே திருச்சியில் பாதிப்பு அதிகம் தெரியவில்லை. முன்கூட்டித் திட்டமிடவில்லை என்போர் முன் கூட்டித் திட்டமிட்டால் கறுப்புப் பணக்காரர்கள் உஷார் ஆகிவிடுவார்கள் என்பதை அறியாமலா இருப்பார்கள்? எதிர்க்க வேண்டும் என்பதே எதிர்ப்போரின் எண்ணம். காரணமே தேவையில்லை! தொலைக்காட்சிச் சானல்களிலும் சாதகமான செய்திகளைச் சொல்லுவதில்லை! பாதகமாகவே சொல்கின்றனர்.

நடைபாதை வியாபாரிகள் பொருட்களை வைத்து வியாபாரம் செய்யத் தான் செய்கின்றனர். தள்ளு வண்டிகளில் காய்கள், பழங்கள், ப்ளாஸ்டிக் சாமான்கள் என்று விற்பனை ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன. சாலையோரக் கடைகள் உணவுப் பண்டங்கள் தயார் செய்து விற்றுக் கொண்டு தான் இருக்கின்றனர். எங்கும் எதிலும் இயக்கம் நிற்கவில்லை.  மக்கள் வாழ்க்கை நடத்திக் கொண்டு தான் இருக்கின்றனர். இதுவும் கடந்து போகும்.

Friday, November 25, 2016

மனிதரில் எத்தனை முகம்!

கடந்த சில மாதங்களாகக் கிடைத்த அனுபவங்களில் இருந்து மனிதரின் முகங்கள் எப்படி எல்லாம் மாறும் என்பதை இப்போது தான் நன்கு புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன் என்று சொல்லலாம். காரியம் ஆகணும்னா காலைப்பிடி என்பது வெறும் சொலவடை மட்டுமல்ல, உண்மையும் அதுதான் என்பது புரிந்தது. அவங்க காரியம் ஆகவேண்டி எங்கள் காலைப் பிடித்தவர்கள் அனைவரும் அந்த வேலை தேவையில்லை என்றானதும் எங்களை நடத்திய முறை வியப்புக்குரியதாக ஆகி விட்டது. நம் அழைப்புகளுக்கு எவ்விதமான பதிலும் இருக்காது! கண்டுகொள்ளவே மாட்டாங்க! அவங்களுக்குத் தேவைனா நம்மைக் கொஞ்சமும் வெட்கப்படாமல் தொடர்பு கொண்டு தேவையைச் சொல்வாங்க! இது தான் கலியுகமோ என்றெல்லாம் தோன்றியது.


ஒரு வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை சீரடைந்து வருகிறது. என்றாலும் இன்னமும் பூரணமாக ஆகவில்லை. முக்கியமான பிரச்னைகள் தீர்க்கப்பட்டு விட்டன.  கடந்த சில மாதங்களாகவே போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கை! அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு! கவலை, விசாரங்கள்! தூக்கமில்லா இரவுகள்! ஆனால் இந்த மோசமான அனுபவங்கள் மூலம் மனிதர்களைப் பற்றிய அறிவு மேம்பட்டிருக்கிறது. கஷ்டமான சமயங்களில் மனிதர்கள் நடந்து கொள்ளும் விதமும், நம்மை நடத்தும் விதமும் புரிய வந்திருக்கிறது.

நாம் எந்தக் காரியத்துக்காக ஒருத்தரைத் தொடர்பு கொள்கிறோமோ அந்த நபர் மனம் இருந்தால் தான் நம் தொடர்புக்கு எதிர்வினையாற்றுவார். இல்லைனா இல்லை தான்! ஒரு நாள் இரண்டு நாள் இல்லை! நாள் கணக்கில், மாசக்கணக்கில்!  அதே நபர் நம்மிடம் அவர் வேலைக்குத் தொடர்பு கொள்வது எனில் கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் முன்னால் நடந்து கொண்டதை மறந்துவிட்டு அதிகாரமாக நம்மிடம் அவர் வேலையை முடித்துக் கொள்கிறார். ஆக மற்றவர் உணர்வுகளோ அவங்களோட அவசரமோ இங்கே யாருக்கும் முக்கியம் இல்லை! அவங்க அவங்களோட நிலைமையை வைச்சு அதற்கேற்றபடி தான் நடந்துக்கறாங்க. 

அதே போல் நம்மிடமிருந்து வாங்கிக்க வேண்டியதை ஒரேயடியாக வாங்கிக் கொள்பவர்கள் திரும்பக் கொடுக்கையில் அப்படித் தருவதில்லை. ஏதோ நாம் தான் அவங்களிடம் அவங்க பொருளைக் கேட்கிறோம் என்பது போல் நடந்து கொண்டு அலைக்கழித்துத் தான் கொடுக்கிறார்கள். அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக! நாம கேட்டாலும் ஏதோ அவங்க கிட்டே அவங்களோட சொந்தப் பொருளைக் கேட்கிறாப்போல் பேச்சு வேறே! இப்போத் தர முடியாதுனா என்ன பண்ணுவீங்க என்று கிண்டல், கேலி! இத்தனைக்கும் நம் பொருளை,  நமக்குச் சொந்தமானதைத் தான் நாம் கேட்கிறோம். அதுக்கே இப்படி!  சுயநலம் என்பது அதிக அளவில் மனிதரைப் பிடித்து ஆட்டுகிறது என்பதும் புரிந்தது. இது மட்டுமா?

 இன்னும் சிலர் வேறே மாதிரி! எப்போவும் அவங்களைச் சுற்றியே நாம் வரணும், அவங்க தான் மையப் பொருளாக இருக்கணும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டு எல்லாவற்றிற்கும் தானாக வலுவில் வந்து நம்மை எதையும் செய்யவிடாமலோ யோசிக்க விடாமலோ தடுப்பார்கள்.  எவரையும் கலந்து ஆலோசிக்காமல்  தன்னுடைய சொந்த நலனுக்காகச் செய்து கொண்ட ஏற்பாடுகளைச் சூழ்நிலை காரணமாகத் தனக்கு ஏற்றபடி மாற்றிக் கொண்டு தன்னை ஒரு தியாகியாகக் காட்டிக் கொள்ளுகிறார்கள், இத்தகைய  மனிதர்களைப் பார்த்தாலும் சிரிப்புத் தான் வருகிறது.  உழைப்பே இல்லாமல் பெயர் வாங்கிக் கொண்டு இருப்பதையும் பார்த்தாகி விட்டது!  நம் உழைப்பு எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது! 

என்றாலும் கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்கும் ஒரு சில சம்பவங்கள், நிகழ்ச்சிகள் மூலம் நம்பிக்கை என்னமோ குறையவே இல்லை! மொத்தத்தில் இதுவும் கடந்து போகும்!  எல்லோரும் நான் என்னுடைய அனுபவங்களையே எழுதுவதாகச் சொல்கிறார்கள், இப்படியும் சிலர்! :) ஆனால் நான் என்னோட அனுபவத்திலிருந்து கற்றவற்றைத் தானே பகிர முடியும்? மற்றவங்க அனுபவம் வேறாக இருக்கும் இல்லையா! அதை அவங்க சொல்லித் தான் நான் தெரிஞ்சுக்க முடியும்! ஒரே விஷயத்தில் அவங்க அனுபவம் வேறே, என்னோட அனுபவம் வேறேனு தான் இருக்கும்.

உதாரணமாக இந்த ரூபாய் நோட்டுக்கள் மாற்றுவதையே எடுத்துக்கோங்க. நாங்க அறிவிப்பு வந்த மூன்றாம் நாள் வியாழனன்று வங்கியில் சேமிப்புக்கணக்கில் சேர்த்துவிட்டோம். சில்லறை நோட்டுக்கள் கைவசம் கொஞ்சம் இருப்பதால் பிரச்னை இல்லை. ஆனாலும் மருந்துகள் வாங்கவோ, காய்கறிகள் வாங்கவோ டெபிட் கார்ட் தான் பயன்படுத்துகிறோம். குறைந்த பட்சமாக 150 ரூபாய் வரைக்கும் நாம் வாங்கும் பொருள் இருக்கணும் என்கிறார்கள். ஆகவே இது வசதியாகவும் இருக்கிறது. ஆனாலும் சிலருக்கு இது கொஞ்சம் பிரச்னையாகவும் கஷ்டமாகவும் இருக்கிறது. பால் வாங்கக் காசு இல்லை என்று சிலர் புலம்பல்! புலம்புபவர்கள் எல்லாம் நல்ல வேவலையில் இருப்பவர்கள். அவங்களால் மாதாமாதம் பாலுக்கு முன் பணம் கட்டி வாங்க முடியும். அல்லது மாதம் முடிந்ததும் பால் பணத்தைக் கொடுத்துத் தீர்க்க முடியும்! அப்படியானவங்க தான் அதிகம் புலம்பல்!

ஆனால் மும்பையிலும் சரி, இங்கே சென்னையிலும் சரி, ஶ்ரீரங்கத்திலும் சரி ஆட்டோ ஓட்டுநர்கள் சில்லறைத் தட்டுப்பாட்டால் சிரமப்படுவதாகத் தெரியவில்லை.  சென்னையிலாவது ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரு சிலர் பிரச்னை என்றனர். மும்பையில் அப்படி இல்லை. சில்லறை கிடைப்பதோடு அங்கே வங்கிகளிலும் பணம் மாற்றுவதற்கான கூட்டம் அதிகம் இல்லை. அதோடு இங்கே ஶ்ரீரங்கத்திற்கு சுற்றுலாப் பயணிகள் கூட்டமும் அதிகம் வருகிறது. நேற்றுத் திருச்சி போயிருந்தப்போ கடைத்தெருவில் எப்போதும் போல் கூட்டம். மக்கள் யாரும் எவ்விதக் கஷ்டமும் படுவதாகத் தெரியவில்லை. எப்போதும் போல் நடைபாதை வியாபாரிகள் கடை வைத்திருக்கின்றனர். வியாபாரமும் நடக்கிறது.

இத்தனைக்கும் அரசு பலவிதமான சலுகைகளைக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது.  இதனால் நாம் கண்ட முக்கியமான ஆதாயம் என்னவெனில் காஷ்மீரில் கல்லெறி குறைந்து சகஜ வாழ்க்கை ஆரம்பித்திருப்பதோடு அல்லாமல் காஷ்மீர் முஸ்லிம் ஒருவர் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதி இருப்பதும் தான். இதற்காகவேனும் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது நன்மையையே தந்திருக்கிறது எனலாம். 

Thursday, November 24, 2016

மற்றவை பின்னர்!

இந்த ஒரு வாரத்தில் எதுவும் தலைகீழாகப் போகலை. யாரும் தேடலை! யாரும் ஏன் பதிவுகள் வரலைனு கேட்கலை. நாம இல்லாமல் எதுவும் நடக்காமல் போகலை. ஆனாலும் திரும்ப வந்ததும் சந்தோஷமாத் தான் இருக்கு! ஆனால் இந்த ப்ளாகர் தான் டாஷ்போர்டையே காட்ட மாட்டேங்குது. என்னனு புரியலை! என்னை வேறு யாரோனு நினைச்சிருக்கானு தெரியலை.  தலைப்புக் கொடுக்கும் கட்டத்துக்கூ அருகே இது கீதா சாம்பசிவம்ங்கற பெயரிலே வெளியிடப்படுகிறதுனு ஒரு முன்னெச்சரிக்கை! என்ன ஆச்சு? எல்லோருக்கும் இப்படி இருக்கா?  ரீடிங் லிஸ்ட்ங்கற பெயரிலே நண்பர்களோட பதிவுகளைக் காட்டுது. டாஷ்போர்டை எடுத்துட்டு இப்படிப் போட்டிருக்காங்க போல! வலப்பக்கம் சைட் பாரிலே நான் தொடரும் பதிவர்களைக் காட்டுது!

போன புதன்கிழமை போகும்போது பல்லவனில் பாடாவதி போகி! ரயில் பெட்டி கட்ட ஆரம்பிச்ச நாட்களில் கட்டிய பெட்டி போல! ரொம்பவே மோசமா இருந்தது! அது தான் அப்படின்னா மும்பைக்குப் போன விமானமும் விமானங்கள் பறக்கத் தொடங்கியப்போ வாங்கினதோ, கட்டியதோ தெரியலை! ஏ.சி.யே வேலை செய்யலை. ஊழியர்களிடம் புகார் கொடுத்ததில் விமானம் கிளம்பியதும் சரியாகும்னு சொல்றாங்க. இது என்ன பேருந்துப் பயணமா? இல்லை ரயில் பயணமா? என்னத்தைச் சொல்ல! எல்லாப் பயணிகளும் அவதிப் பட்டார்கள். ஆனால் யாருமே கேட்டுக்கலை ஒரு சிலரைத் தவிர. அந்த ஒரு சிலரில் நாங்களும் உண்டு. நாம தான் வாயை வைச்சுட்டுச் சும்மா இருக்க மாட்டோமே!

சாப்பாடு திராபை! ஒரு வழியாப் போயிட்டு நேத்திக்குத் திரும்பியாச்சு. போன இடத்தில் படங்கள் எல்லாம் எடுக்கணும்னு காமிராவெல்லாம் கொண்டு போயும் ஒண்ணும் எடுக்க மனம் வரலை! சூழ்நிலை சரியாக அமையவில்லை. நம்ம அதிர்ஷ்டம் அப்படி! :) நேத்திக்குத் திரும்பும்போது விமானமும் புத்தம்புதியது. போன மாசம் தான் வாங்கி இருப்பாங்க போல! :) ஏசியும் வேலை செய்தது. இரவு வந்த மலைக்கோட்டை விரைவு வண்டியும் புத்தம்புதியது! நேரே தொழிற்சாலையிலிருந்து வந்திருக்கு போல! பெயின்ட் வாசனையே போகலை. வடிவமைப்பு அசத்தல்! ஆனால் ஏசியாக இருந்தாலும் முன்னால் மின் விசிறியும் இருந்தது. இப்போது புதிய வண்டிகளில் ஏசி பெட்டிக்கு மின் விசிறி இல்லை! மற்றபடி வண்டி சுத்தமோ சுத்தம்! ராத்திரி தூங்கத் தான் முடியலை. காலையிலே எழுந்துக்கணுமே! சரியான நேரம் ஶ்ரீரங்கத்துக்கு 3-54 அப்படினு போட்டிருந்தாங்க பயணச் சீட்டிலே. ஆனால் வண்டி வந்தது 4-30க்குத் தான். வீட்டுக்கு வந்து சேர்ந்தாச்சு.

மற்றவை பின்னர்! 

Thursday, November 17, 2016

Unexpected Holidays

We are in Mumbai and will be back by next week. Till then no posts. I have tried via Pudhuvai Unicode writer but cannot copy and paste.:( Some problem in the mouse. So enjoy the unexpected holidays.

Tuesday, November 15, 2016

நிலாவும் ஆண்டாளம்மாவும்!


இன்னிக்குக் காலை ஐந்து மணிக்கு எடுத்தது!  இந்த மேற்குப் பக்கம் காவிரி இருப்பதால் குறுக்கே தடைகள் ஒண்ணும் இல்லை. ஆகையால் சந்திரனார் மட்டும் வந்திருக்கார்.

கொஞ்சம் தள்ளி நின்ற வண்ணம் எடுத்தது!

இன்னிக்கு ஐப்பசி (துலா)மாதக் கடைசி நாள் என்பதால் ஆண்டாளம்மா இன்னிக்குத் தான் கடைசியா காவிரித் தண்ணீரை ரங்குவுக்கு எடுத்துட்டுப் போவாங்க! இன்னிக்கு வந்தப்போ எடுத்த படம்.




தங்கக் குடத்தை எடுக்க நினைச்சுக் கடைசியில் ஆண்டாளம்மா வாழைப்பழம் வாங்கக் கிட்டே வந்ததில் அதை மறந்துட்டேன்! ஹிஹிஹிஹி, எல்லாம் ஒரு பயம் தேன்! :)))))))

Monday, November 14, 2016

ஜூப்பர் மூன்!


இன்னிக்கு சூப்பர் சந்திரன் தெரியும்னு சொன்னாங்களா! காலையிலிருந்து காத்துட்டு இருந்தேன். இன்னிக்குனு பார்த்து ஒரே மேக மூட்டம். என்றாலும் ஐந்தே முக்காலுக்கே மாடிக்குப்போய்க் காத்திருந்தேன்.  ஆறு மணிக்கு மெல்ல எட்டிப் பார்த்தார் சந்திரனார். உடனே ஓரிரு க்ளிக்குகள். முடிஞ்சால் நாளைக் காலம்பரயும் போய்ப் பார்க்கிறேன். நாளைக்குத் தான் நம்ம யானையார் கடைசி நாளாக இங்கே காவிரிக்கு வருவார். புதன்கிழமையிலிருந்து கொள்ளிடத்துக்குப் போவார். அதனால் நாளைக்கு ஆண்டாளம்மாவையும் பார்க்கணும். சந்திரனையும் பார்க்கணும். பார்ப்போம்.

மேகங்கள் மறைக்கத் தான் செய்தன! என்ன செய்ய முடியும். மேலேயும் கீழேயும் அழகாக மேகங்கள்!

ஜூம் பண்ணித் தான் எடுத்திருக்கேன் என்றாலும் நிலா மட்டும் தனியாத் தெரியும்படி எடுக்க முடியலை என்பதோடு இன்னும் பெரிதாகக் காட்டும்படியும் எடுக்கத் தெரியலை. அதோடு மரங்களும், டெலிஃபோன், அலைபேசி கோபுரங்களும் நிறைய இருப்பதால் என்ன தான் அவற்றை நீக்க முயன்றாலும் அவை இடம் பெற்றே தீர்கின்றன.  குறைகளைப் பொறுத்துக் கொள்ளவும். நிலா இன்னும் கொஞ்சம் மேலே வந்ததும் எடுத்திருக்கலாம். ஆனால் அப்போது இந்த அளவுப் பெரிசாத் தெரியுமானு சந்தேகம்! 

Sunday, November 13, 2016

ஏடிஎம் மிஷின்கள் இயங்க இன்னும் 3 வாரங்கள் ஆகலாம்!

பிரதமருக்கு இதில் தனிப்பட்ட லாபம் இருப்பதாகப் பலரும் சொல்கின்றனர். அதைக் கேட்டால் சிரிப்பு வருது! இன்னும் சிலர் அவர் டீக்கடையில் வேலை செய்ததைக் கேலி செய்து டீக்கடைக்காரர் எல்லாம் ஆள வந்தால் இப்படித் தான் என்கின்றனர். பொருளாதார அறிவு அவருக்கு இல்லை என்றும் சொல்கின்றனர். ஒரு விஷயம் மட்டும் தெளிவு. சில்லறையாக நூறு, ஐம்பது, இருபது நோட்டுக்களை வங்கிகளுக்கு விநியோகித்திருக்கலாம். ஆனால் பணம் வங்கியில் போட்டுவிட்டுப் போவது தான் மக்களுக்கும் சிரமம் இல்லை, வங்கிப் பணியாளர்களுக்கும் சிரமம் இல்லை. ஏனெனில் ஒருவர் குறைந்த பட்சமாகப் பத்தாயிரம் போடுகிறார் எனில் அந்தப் பத்தாயிரத்தையும் நூறு ரூபாய் நோட்டுக்களாக இந்தக் கூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் எண்ணி எண்ணிக் கொடுப்பது காசாளர்களுக்குக் கஷ்டமான ஒன்று.

அதற்காகத் தான் உங்கள் பணம் பத்திரமாக இருக்கிறது என்பதை உறுதி செய்யும் விதமாக வங்கியில் பணத்தைக் கணக்கில் சேர்க்கச் சொல்கின்றனர். அதையும் மீறித் தேவைப்படுபவரகளுக்கு 2,000 ரூபாய் நோட்டுகள் கொடுக்கின்றனர். சில்லறைத் தட்டுப்பாடு இருக்கிறது. 2,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லும் என்றாலும் அதை வாங்கிக் கொண்டு சில்லறை கொடுக்க யாரும் தயார் இல்லை. 2,000 ரூபாய்க்கும் பொருள் வாங்கச் சொல்கின்றனர். :) யாருமே அவங்களிடம் உள்ள நூறு ரூபாய், ஐம்பது ரூபாய் நோட்டுக்களை எடுப்பதில்லை! அது தான் பிரச்னையே! எல்லோருமே தங்களிடம் உள்ள ஐநூறு, ஆயிரம் நோட்டுக்களை மற்றவர்களிடம் தள்ளிவிட வேண்டும் என்றே நினைக்கின்றனர். ஏன் அவங்களே போய் மாத்திக்கக் கூடாதா?  வங்கிக் கணக்கு இருந்தால் தான் மாத்தலாம் என்றெல்லாம் இல்லையே!


இதிலே வேடிக்கை என்னன்னா ஆட்டோக்காரரும் எங்களுக்குப் பால் ஊற்றும் இளைஞரும் இதைப் பாராட்டி வரவேற்கிறார்கள் என்பதே! கிட்டத்தட்ட ஒரு பேட்டியே எடுத்தோம். அவங்க சொன்ன சிலவற்றைப் பொதுவில் பகிரமுடியாது! ஆனாலும் அவங்க வரை தெளிவாகவே இருந்தாங்க. இது நல்லது என்று சொல்கிறார்கள்.  பொதுவா நாம ஏழை மக்கள் என்றும் ஏழைகள் தான், அவங்க கிட்டே ஐநூறும் ஆயிரமும் எப்படி இருக்கும்னு சொல்வோம். அதே இந்த மாதிரி வந்துட்டா ஏழை மக்கள் ஐநூறையும் ஆயிரத்தையும் எப்படி மாத்துவாங்க, அவங்களுக்குக் கஷ்டம்னு சொல்லுவோம். ஏழை மக்களிடம் பணமே இருக்காது என்று சொல்லிக் கொண்டிருந்த நாம் இப்போ அவங்க ஐநூறையும், ஆயிரத்தையும் எப்படி மாத்துவாங்க என்று கேட்பது முரண்பாடாக இல்லையா?  என்ன, கொஞ்சம் வரிசையில் நின்று தான் மாற்ற வேண்டும்.  நாம் எல்லாவற்றிற்கும் வரிசையில் தான் நிற்கிறோம். இதுக்கும் நிற்பதில் என்ன வந்தது?

நாம ராகுல் காந்தி மாதிரிப் பெட்ரோலுக்குப் பணம் செலவழித்துக் காரில் வந்து மீடியாவுக்கு எதிரே போஸ் கொடுத்துக் கொண்டா பணம் போடுகிறோம்! அவங்கல்லாம் என்னிக்காவது வரிசையில் நின்றிருந்தார்களெனில் தெரிஞ்சிருக்கும். நாம் குழந்தைகளுக்குப் பள்ளியில் சேர்க்க விண்ணப்பம் வாங்கவே முதல் நாள் இரவிலிருந்து வரிசையில் நிற்போம். சினிமா டிக்கெட் வாங்க, அமெரிக்க விசா வாங்க நாள் கணக்காக நின்றவர்களைத் தெரியும், கோயில்களில் சுவாமி தரிசனத்துக்கு! ஆதார் அடையாள அட்டை பெற, வேலை வாய்ப்பு அலுவலகத்தில், சினிமா டிக்கெட் வாங்க, சமையல் எரிவாயு இணைப்புக்கு, மின்சார பில் கட்ட, டெலிஃபோன் பில் கட்ட, வீட்டு வரி கட்ட, வருமான வரி கட்ட! இன்னும் எத்தனை வேணும்? இதெல்லாம் வாரச் சம்பளக்காரங்களுக்கும், தினக்கூலிக்காரங்களுக்கும் பொருந்தாது என்கின்றனர்.   எத்தனை வாரச்சம்பளக்காரங்க சம்பளம் வாங்கியதும் டாஸ்மாக்குக்கும், சினிமாவுக்கும், ஓட்டலுக்கும் போறாங்க என்பதைச் சொல்ல முடியும்! தினக் கூலிக்காரங்க கூடப் போறாங்க! அவங்களோட பொழுது போக்கே இதானே! ஆகவே அவங்க கிட்டேயும் ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருக்கத் தான் செய்யும்.

ஏடிஎம் இயங்கலைனா அதுக்குக் காரணம் இருக்குனு என்பதை யாரும் புரிஞ்சுக்கலை. அவங்களே எதிர்பார்க்காத அளவுக்குப் புதிய நோட்டுக்களை இப்போதுள்ள ஏடிஎம் தொழில் நுட்பம் ஏற்க மறுக்கிறது. ஆகவே குறைந்த பட்ச அளவான நூறு ரூபாய்களை மட்டும் வைக்கிறாங்க. என்ன பிரச்னைன்னா ஏடிஎம்கள் இயங்காது என்பதை முன்கூட்டி அறிந்திருக்கவில்லை. பழைய நோட்டுகளை விட இப்போதைய 2,000 ரூபாய் நோட்டுகள் அளவில் சின்னது என்பதால் அதை ஏடிஎம் மிஷின்கள் ஏற்க மறுக்கின்றன. குறைந்த அளவிலான நூறு ரூபாய் நோட்டுக்கள் விரைவில் தீர்ந்துவிடுகின்றன. அதான் அனைவருக்கும் கிடைப்பதில்லை. மேலும் பணத்தை ஏடிஎம்மில் நிரப்புவது தனியார் ஒப்பந்ததாரர்கள். அவர்கள் ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு முறை வேண்டுமானால் ஒரு ஏடிஎம்மை நிரப்பலாம். குறையக் குறைய கிட்டே இருந்து நிரப்புவது கடினம். ஏனெனில் அதற்குத் தகுந்த ஆட்கள், காவல், பாதுகாப்பு போன்றவை அவர்களுக்குக் கிடைப்பது கடினம். மேலும் அவர்கள் ஏற்கெனவே 24X7 வேலை செய்கின்றனர். நகரில் ஒரு இடத்தில் மட்டுமா ஏடிஎம்? எத்தனை இருக்கின்றன!

உண்மையில் படித்த அறிவு ஜீவிகள் தான் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கிராமத்து ஏழை, எளிய ஜனங்கள் இல்லை! ஏடிஎம்கள் இயங்க இன்னும் மூன்று வார காலம் ஆகலாம் என்று அரசு அறிவிப்புச் செய்து விட்டது. இதையும் கிண்டல் செய்கின்றனர். மூன்று வாரம் கழித்து மூன்று மாதம் என்றும் மூன்று மாதம் கழித்து மூன்று வருடம் என்றும் சொல்வார்களாம்.  எதிலும் நம்பிக்கை வேண்டும். பொதுவாகத் தெரிவது என்னவெனில் இந்த வரிசையில் நிற்கும் மக்கள் அடித்துப் பிடித்துக் கொண்டெல்லாம் செல்லவில்லை. ஒழுங்காகவே செல்கின்றனர். பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தவில்லை. மக்கள் கட்டுப்பாட்டுடனேயே இருக்கின்றனர். ஆனால் எதிர்ப்பவர்களின் கருத்து மக்கள் மனதைப் பாதிக்காமல் இருக்க வேண்டும்.

முக்கியமாக வங்கிப் பணியாளர்களைக் குறித்துச் சொல்லியே ஆகவேண்டும். அனைவரும் இரவு, பகல் பாராமல் ஒத்துழைப்பதோடு மக்களிடம் கடுமையாகவும் நடந்து கொண்டதாக எங்கிருந்தும் புகார் வரவில்லை. ஆங்காங்கே ஓரிருவர் சொல்லி இருக்கலாமோ தெரியவில்லை. பொதுவாக அனைவரும் மக்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றனர். அரசுக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கின்றனர். இதற்கு வங்கிப் பணியாளர்களைப் பாராட்டியே ஆகணும். இதுக்கும் ஒரு சிலர் இப்போத் தானே வேலையே செய்யறாங்க என்று கேலி செய்கின்றனர். அவங்க வேலை செய்யாமல் பணப் பரிவர்த்தனை எப்படி நடந்தது என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. அன்றாட வரவு, செலவுக்கணக்கை ஒழுங்காகக் காட்டாமல் எந்த வங்கிப் பணியாளரும் தன் இடத்திலிருந்து வெளியேற முடியாது. அவங்க சொல்லும் கணக்குகள் பொது மேலாளர் மற்றும் தலைமைக்காசாளர் ஆகியோரின் கணக்குகளோடு ஒத்து இருந்தாக வேண்டும்! பல சமயங்களிலும் இரவு எட்டு, ஒன்பது மணி கூட ஆகும் வீட்டுக்குத் திரும்ப! 

Saturday, November 12, 2016

நோட்டுக்களை மாத்தியாச்சா?

நான்கு நாட்களாக தேசமே அல்லோலகல்லோலப் படுது! எல்லோரும் இதே பேச்சு! முகநூல், ஜி+, பதிவுகள் என எல்லாவற்றிலும் இதைக்குறித்தே ஆலோசனைகள்! கேள்விகள், பதில்கள்! எல்லாம் இந்த ரூபாய் நோட்டு விஷயம் தான் சொல்றேன். ஒரு விஷயம் முக்கியமாச் செய்திருக்கணும். எதுனு கேட்கறீங்களா? இப்போச் சொல்லப் போவது ரூபாய் நோட்டுக்கள் குறித்து தான்! ஆயிரம், ஐநூறு செல்லாது என அறிவிச்சவங்க அதை மாற்றுகையில் மக்களுக்குப் பயன்படும் வகையில் நூறு, ஐம்பது, இருபது, பத்து ரூபாய் நோட்டுக்களை நிறைய இருக்குமாறு வங்கிகளுக்கு வழங்கி இருக்கணும். ஆனால் அதிலே ஒரு சிரமம் இருக்கத் தான் செய்யும். எல்லாருமே குறைந்த பட்சமாகப் பத்தாயிரம் மதிப்புள்ள ஆயிரம், ஐநூறு நோட்டுக்களை மாற்றுகையில் எல்லோருக்கும் அந்தக் கூட்டத்தில் நூறு, ஐம்பது, இருபது ரூபாய்களை அந்த மதிப்பின்படி  எண்ணிக் கொடுப்பது சாத்தியமில்லை. ஆகவே பணத்துக்குப் பணம் என்னும் பேச்சுப்படி கொடுக்கும் பணத்தின் மதிப்பைத் திரும்பக் கொடுக்கின்றனர். ஆனால் அதை மாற்றுவது என்பது கையில் வேறே பணமே இல்லாதவர்களுக்குச் சிரமம் தான்.
ஆயிரம் ரூபாய் நோட்டு க்கான பட முடிவு  ஐநூறு  ரூபாய் நோட்டு க்கான பட முடிவு

பழைய ஐநூறு நோட்டுக்களில் போலி அதிகம் இருப்பதால் புது நோட்டுக்களை இன்னமும் புழக்கத்தில் விடவில்லை. கொஞ்ச நாட்கள் ஆகும் என்கிறார்கள். ஆனால் சாமானிய மக்கள் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை வைத்துக் கொண்டு செய்வதறியாமல் விழிக்கத் தான் வேண்டி இருக்கிறது. இப்போ எங்களிடம் இருந்த குறைந்த பட்சத் தொகையான ஆயிரம், ஐநூறு நோட்டுக்களை டெபாசிட் செய்து விட்டோம். அதற்கு வங்கியில் இருந்து நாலாயிரம் ரூபாயே எடுக்க முடிந்தது. இப்போக் கையில் இருப்பது அந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் இரண்டு தான். மருந்து வாங்கணும், அரிசி மற்றச் சில பொருட்கள் வாங்கணும். இரண்டாயிரத்தைக் கொடுத்தால் அவங்க திருப்பிச் சில்லறை கொடுக்கையில் ஐநூறு ரூபாய் நோட்டுக்களைத் தான் கொடுப்பேன்னு அடம் பிடிக்கிறாங்க. அரிசி வேண்டுமானால் வாங்காமல் சமாளிக்கலாம். மருந்து வாங்க என்ன செய்வது? மருந்துக்கடையிலும் ஐநூறு ரூபாயாகத் தான் சில்லறை தருவேன் என்கிறார்கள்.

யாருமே அவர்களிடம் உள்ள நூறு ரூபாய்த் தாள்களைப் புழக்கத்தில் விடுவதற்கு யோசிக்கின்றனர். இந்த அறிவிப்பால் இந்த ஒரு சிரமம் இருக்கத் தான் செய்கிறது. மற்றபடி இதுவும் தாற்காலிகமானதே! மருந்துக்கடையில் வழக்கமான வாடிக்கையாளர் என்பதால் பணம் பின்னால் தருகிறேன் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் எல்லோருமே தங்களிடம் இருக்கும் பணத்தை வங்கியில் போய் மாற்றாமல் தங்களிடம் பொருட்கள் வாங்குபவர்களிடம் தள்ளி விடலாம் என்று நினைப்பது சரியல்ல. அரசாங்கமோ அனைவருமே வந்து மாற்றிக் கொள்ளலாம் என்று தானே சொல்லி இருக்கிறது. அப்படி இருக்கையில் வாடிக்கையாளர்களுக்குச் சில்லறை கொடுத்தால் என்ன? 

புதிய இரண்டாயிரம்  ரூபாய் நோட்டு க்கான பட முடிவு

இத்தனை வருடங்களாக இடதுசாரியாக இருந்த காந்தி இந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டின் மூலம் வலது சாரியாகி விட்டார்! :)

படங்களுக்கு நன்றி கூகிளாண்டவர்!

மற்றபடி இந்த அறிவிப்பு தேசத்துக்கு நன்மை தரக் கூடிய ஒன்றே என்று அனைவருமே ஒப்புக் கொள்ளுவதோடு எல்லா வங்கிகளும் வங்கிக்கிளைகளும் இந்த விஷயத்தில் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதும் உண்மையிலேயே பிரமிப்பைத் தருகிறது. எல்லோருக்குமே ஓர் உத்வேகம் தோன்றி இருக்கிறது. ஆகவே முழு முனைப்புடன் இதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். இதை எதிர்ப்பவர்களும் உண்டு. முக்கியமாய் எதிர்க்கட்சிகள் மற்றும் ஒரு சில தலைவர்கள். என்றாலும் அவர்கள் குரல் அத்தனை எடுபடவில்லை என்பதே உண்மை.  முகநூலில் ஒருத்தர் இந்த விஷயத்தை ஐஎஸ் ஐஎஸ்ஸினால் பாதிப்புற்ற ஓர் சிறுவனோடு ஒப்பிட்டுக் காட்டி இருக்கிறார்.  அதிலும் பிரதமரை," டீக்கடைக்காரன்" என்று அழைத்து, டீக்கடைக்காரன்  செய்த கொடுமை என்றும் சொல்லி இருக்கிறார்.

எல்லோருமே பிறக்கும்போது வாயில் வெள்ளி ஸ்பூனுடன் பிறக்க முடியாது. ஆகவே 1978 ஆம் ஆண்டில் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த காலத்தில் எச்.எம்.படேல் என்னும் அருமையான நிதி மந்திரியின் காலத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவு இதே போன்றது. அப்போதும் ஆயிரம் ரூபாய், பத்தாயிரம் ரூபாய்கள் செல்லாது என்ற அறிவிப்புச் செய்யப்பட்டது, ஓர் பணக்காரர் இதைக் கேட்டு மாரடைப்பினால் இறந்தார் என்றும் சொல்லுவார்கள்.  அதற்கு முன்னர் 1946 ஆம் ஆண்டிலே இருந்த பிரிட்டிஷ் சர்க்காரினால் இம்மாதிரி ஒரு அறிவிப்புச் செய்யப்பட்டது. அப்போது நூறு ரூபாய்கள் என்று நினைக்கிறேன்.  அதன் பின்னர் இத்தகைய துணிச்சலான முடிவு டீக்கடைக்காரர் என்பதால் மோதியினால் தான் எடுக்க முடிந்திருக்கிறது. இதன் நன்மைகள் அநேகம்! பதிவு நீண்டு விடும். ஆகவே அனைவரும் தேசத்துக்காக நமக்கு ஏற்படும் சின்னச் சின்ன சிரமங்களைப் பொருட்படுத்தாமல் ஒன்று சேர்ந்து ஒத்துழைப்போம். 

இந்தச் சமயத்தில் தான் பலரும் பல விதங்களில் உதவி செய்வதைப் பார்க்கவும் முடிகிறது. சில கடைகளில் வலுவில் அவர்களே ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வாங்கிக் கொண்டு சில்லறை கொடுக்கிறார்கள். திருநெல்வேலியில் ஒரு ஓட்டலில் யாரும் பணமே கொடுக்காமல் இலவசமாகச் சாப்பிடலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். வங்கி அதிகாரிகளும் வங்கி ஊழியர்களும் ரிசர்வ் வங்கியின் தென் மண்டல இயக்குநரும் திரும்பத் திரும்பத் தொலைக்காட்சியில் இது குறித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்கின்றனர். முன்னாடியே சொல்லிட்டு நேரம் கொடுத்துச் செய்திருக்கணும்னு பலருக்கும் எண்ணம். அப்படிச் செய்தால் கறுப்புப் பணம் பதுக்கப் பட்டிருப்பது அவசரம் அவசரமாக நகைகளாக தங்கமாக பொருட்களாக மாற்றப் பட்டிருக்கும் வெளி வராது. எல்லோரும் ஜாக்கிரதைப் படுத்தப்படுவார்களே! அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று தானே இந்த தடாலடி வேலையே! 

இதை மூட்டை மூட்டையாக வைத்திருந்தவர்களுக்குத் தான் அதிர்ச்சியே! நம்போன்ற சாமானியர்களுக்கு இல்லை. ஆகவே யாரும் எதுக்கும் கவலைப்படாமல் இருந்தாலோ போதும். அடுத்த வருடம் மார்ச் 31 ஆம் தேதி வரை இந்த நோட்டுக்களை மாற்ற நேரம் இருக்கு! நிதானமாக் கூட்டம் இல்லாத நேரத்திலே போய் மாத்திக்கலாம்! அப்புறமா இன்னொண்ணும் சொல்ல விட்டுப் போச்சு. ஸ்விஸ் பாங்கிலே இருந்த கறுப்புப் பணத்தை இங்கே கொண்டு வந்து மக்களுக்கெல்லாம் 15 லட்சம் கொடுக்கிறதா மோதி சொல்லி இருந்தாரே, கொடுத்தாரா என்னும் கேள்வி! ஸ்விஸ் பாங்கில் இருக்கும் பணத்தை விநியோகம் செய்தால் இந்திய மக்கள் தொகைக்கு ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் வரும் அளவுக்கு இருக்கிறது என்று தான் சொன்னதே! எல்லோருக்கும் கொடுக்கிறேன்னு எல்லாம் சொல்லலை! அதோடு அங்கே இருந்து பணத்தை மூட்டையாவா கட்டி எடுத்து வர முடியும்? அது எந்த உருவிலே இருக்குனு பார்த்து அதைச் சொந்தக்காரங்க சரியாகச் சொன்னால் அதற்கேற்றபடி வரி விதிப்பாங்க. அதான் நடக்கும்!

தொலைக்காட்சி சானல்களும், மற்றத் தலைவர்களும் இதில் பல குறைகளைக் கண்டாலும் பொதுவில் மக்கள் ஒத்துழைப்பு இருக்கத் தான் செய்கிறது. அதுவும் இங்கே முதியோருக்குத் தனியாகக் கூப்பிட்டு அவங்க பணத்தை மாற்றிக் கொடுக்கிறார்கள். மற்ற இடங்களிலும் அப்படியே செய்வதாகப் பலரும் கூறுகின்றனர். இவ்வளவு பெரிய நாடு, மக்கள் என்னும்போது ஆங்காங்கே ஓரிரு இடங்களில் தவறு நடக்கலாம். அதைச் சரி செய்ய முனைய வேண்டும். பிஜேபி அமைச்சர் மகள் கைகளில் இரண்டாயிரம் ரூபாய்க் கட்டுக்களை வைத்துக் கொண்டு காமிராவுக்கு போஸ் கொடுப்பது போன்றதொரு படம் வாட்ஸப்பிலும் முகநூலிலும் வைரலாகப் பரவி வருகிறது. உண்மையில் அது அந்த அமைச்சரின் மகளே இல்லை. அந்த அமைச்சருக்கு மகளே இல்லையாம். மகன்கள் தானாம். ரிசர்வ் வங்கியிலிருந்து மற்ற வங்கிகளுக்குச் செல்லும் பணம் பண்டில் பண்டிலாகக் காணக் கிடைப்பதை இப்படிப் படம் போட்டு மனதைத் தேற்றிக்க முயல்கின்றனர்.  படத்தைப் பெரிது பண்ணிப் பார்த்தால் இது ரிசர்வ் வங்கியின் செஸ்ட் என்பதும் அங்கிருந்து ஆக்சிஸ் வங்கி மற்றும் பாங்க் ஆஃப் இந்தியாவுக்குச் செல்லும் பண்டில்கள் என்பதும் தெரிய வருகிறது.

தகவலுக்கு நன்றி: திருமூர்த்தி வாசுதேவன்