எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, June 27, 2020

வெற்றி! வெற்றிக்கு மேல் வெற்றி!

மசால் தோசையை எதிர்பார்த்துக் காத்துட்டு இருப்பீங்க. நேற்று வழக்கம்போல் தோசைக்குக் கிழங்கு பண்ணும்போதும் சரி, நம்மவருக்குக் கொடுக்கும்போதும் சரி சுத்தமா மறந்துட்டேன். அப்போத் தான் பையர் தொலைபேசி ஹூஸ்டனில் எக்கச்சக்கமான கொரோனா நோயாளிகள் என்னும் வருத்தமான தகவலைச் சொன்னார். இங்கே வேறே நிலைமை இப்படி இருக்கேனு வருத்தத்தில் மறந்திருக்கேன். நடுவில் எதுக்கோ மொபைலை எடுக்கும்போது நினைவு வந்தது.ஆஹா! மறந்துட்டோமே! என நினைத்துக் கொண்டு போனால் கிழங்கும் கொஞ்சமாக இருந்தது. இருந்தவரை படம் எடுத்துக் கொண்டு எனக்கு தோசை வார்க்கும்போது நினைவாகக் கிழங்கை வைத்து (நான் இரவு நேரம் எனக்குக் கிழங்கு வேண்டாம், வெறும் தோசை போதும்  எனக் கொஞ்சமாகப் பண்ணி இருந்தேன். இரண்டே உ.கி. தான். அவருக்குக் கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு தோசையில் வைத்தேன். மீதம் இருந்ததை எனக்கு வார்த்துக் கொண்டிருந்த தோசையில் வைத்தேன். படங்கள் எடுத்தேன். தொட்டுக்கக் காலையிலேயே பண்ணின வெங்காய சாம்பார் தான். சின்ன வெங்காயம் போட்டது. அந்தப் படங்களைத் தான் கீழே பார்க்கிறீர்கள். சாம்பார்ப் படம் எடுக்கலை. 






அட! படங்களை வெகு எளிதாக இணைத்துவிட்டேனே! வெற்றி! வெற்றி! வெற்றிக்கு மேல் வெற்றி!

கிழங்கு பண்ணும் முறை எப்போவும் போல் தான். உருளைக்கிழங்கைக் குக்கரில் போட்டு (நான் இம்மாதிரிச் சமைக்க மட்டும் குக்கர் பயன்படுத்துகிறேன்.) வேக வைத்துக் கொண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருகப்பிலை, பெருங்காயம், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்புப் போட்டுத் தாளித்துக் கொண்டு எல்லாவற்றையும் வரிசையாகப் போட்டு வதக்கிக் கொண்டு உருளைக்கிழங்கை உதிர்த்து உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொண்டு அரைக்கரண்டி ஜலத்தில் நன்கு கலந்து வெங்காய வதக்கலில் சேர்த்துக் கிளற வேண்டியது தான். இதுவே பூரிக்கான கிழங்கு எனில் அது வேறே மாதிரி! பின்னர் ஒரு முறை செய்முறையோடு போடறேன். இது கெட்டியாக இருக்கணும். அது கொஞ்சம் தளர்வாக இருக்கலாம். ஆச்சா! இப்படியாக மசால் தோசைப் புராணம் முடிந்தது. இனி ரேவதி கேட்டிருந்த இரு மருந்து வகைகளின் செய்முறைக்குறிப்புக் கீழே!

**********************************************************************************

ஹை! ஜாலியா இருக்கு! ஸ்டாரை அழுத்தியதும் இரண்டு பக்கமும் தானாகவே போகுதே! இஃகி, இஃகி, இஃகி,

நாங்க நம்ம ரங்க்ஸுக்குச் சர்க்கரைனு தெரிந்ததுமே நெல்லிக்காய்ச் சாறு சாப்பிடுகிறோம். அப்போல்லாம் எனக்குச் சர்க்கரை என்பதே இல்லை. ஆனாலும் அவர் என்னல்லாம் சாப்பிடுகிறாரோ எல்லாம் நானும் சாப்பிடுவேன், மாத்திரைகள் தவிர்த்து. ஆகவே நெல்லிக்காய் மட்டும் போட்டுச் சாறு எடுத்துச் சாப்பிட்டது இப்போக் கொரோனாக் காலத்தில் கொஞ்சம் வேறு மாதிரியாகச் சாப்பிடுகிறோம். அது எப்படி எனில் இரண்டு பேருக்கு நான்கு நெல்லிக்காய்கள், ஒரு அங்குலத்துண்டு இஞ்சி, இரண்டு சின்ன வெங்காயம், பாகல்காய் இரண்டு அங்குலத் துண்டு எல்லாம் எடுத்துக் கொண்டு நன்கு பொடியாக நறுக்கி மிக்சி ஜாரில் போட்டு மஞ்சள் பொடி (நினைவாக) சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து வைத்துப்பேன். சின்னத் தம்பளரால் ஆளுக்கு ஒரு தம்பளர் காலை எழுந்ததும் காலைக்கடன்கள் முடித்துப் பின்னர் இதைக் குடித்துவிடுவோம். அதன் பின்னர் சுமார் 45 நிமிஷம் கழித்தே காஃபி எல்லாம். அதுவரைக்கும் நோ காஃபி.

அதற்குப் பின்னர் முருங்கைக்கீரை இப்போ நிறையக் கிடைப்பதால் வாரம் ஒரு கட்டு வாங்கி விடுவார். யாருக்கு நேரம் இருக்கோ அவங்க அதை ஆய்ந்து எடுத்து வைத்துக் கொள்வோம்.

அந்த முருங்கைக்கீரை இரண்டு கைப்பிடி (இருவருக்கு), சின்ன வெங்காயம் சுமார் பத்து, தோல் உரித்து நறுக்கிக் கொள்ளவும். தக்காளி நல்ல சாறுள்ளதாக இருந்தால் இரண்டு போதும். இவற்றைத் தயார் செய்து கொண்டு அடுப்பில் கடாய் அல்லது அடி கனமான பாத்திரத்தைப் போட்டு நெய் இரண்டு டீஸ்பூன் ஊற்றிக் கொண்டு மிளகு, ஜீரகம், சோம்பு, கருஞ்சீரகம், லவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு எல்லாம் போட்டு வறுத்துக் கொண்டு நறுக்கிய சின்ன வெங்காயத்தையும் போட்டு வதக்க வேண்டும். ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். வெங்காயமும் வதங்கும் சூப்பிலும் சுவை கூடும். பின்னர் தக்காளியைச் சேர்த்து வதக்கிப் பின் முருங்கைக்கீரையைச் சேர்த்து வதக்க வேண்டும். ஒவ்வொன்றாக வதக்கினாலே நன்றாக இருக்கும். முருங்கைக்கீரை வதங்கியதும் மஞ்சள் பொடி, தனியாப் பொடி சேர்த்துக் கொஞ்சம் வதக்கி விட்டு இரண்டு கிண்ணம் நீரை விட்டு உப்புப் போட்டுக் குக்கர் எனில் மூடி நாலைந்து விசில் கொடுக்கவும். இல்லை எனில் பத்து நிமிஷம் நன்றாகக் கொதிக்கவிடவும். கொதித்துக் கொஞ்சம் கெட்டிப்பட்டதும் அடுப்பை அணைத்துவிட்டு நல்ல வடிகட்டியில் வடிகட்டி சூப்பை மட்டும் தனியாக எடுக்கவும். பாத்திரத்தில் இருக்கும் சக்கையைப் பிழிந்தாலும் சூப் வரும். ஒட்ட எடுக்க வேண்டும். பின்னர் மீண்டும் அடுப்பில் வைத்து மிளகு பொடி மட்டும் போட்டுக் கொஞ்சம் வெண்ணெய்(இருந்தால், இல்லைனா நெய் போதும்.) போட்டுக் கொதித்ததும் சூடாகக் குடிக்கக் கொடுக்கவும். நீங்களும் மறக்காமல் குடிக்கவும்.

Friday, June 26, 2020

புதிய ப்ளாகரில் இருந்து கொடுக்கும் சோதனைப்பதிவு.

 
சற்று முன்னர் ஒரு தொலைபேசி அழைப்பு. ஆலம்பாக்கம் என்றார்கள். கேக் ஆர்டர் கொடுத்திருக்கீங்களே என்று கேட்டார்கள். ஆலம்பாக்கம் இங்கே சுற்று வட்டாரத்தில் உள்ள ஊர் தான் என்றாலும் அவங்க ஏன் இங்கே அழைக்கவேண்டும் என்று புரியவில்லை. திரும்பத் திரும்பத்திரும்ப அழைப்பு வந்து கொண்டே இருந்தது. பின்னர் நாங்க இல்லைனு சொல்லி அழைப்பை நிறுத்தினேன்.

நேற்று மாலை நல்ல மழை. நின்று நிதானமாக ரசித்து ரசித்து வருணன் நீரைப் பொழிந்தான். காலையில்  மொட்டை மாடிக்குப் போனப்போக் காவிரியைப் படம் எடுக்கக் காமிரா கொண்டு போகலையேனு நினைவில் வந்தது. இப்போத் தண்ணீர் நிறைய ஓடுகிறது. ஆங்காங்கே எச்சரிக்கைப் பலகைகள் வைத்திருக்கின்றனர்.  மொட்டை மாடியில் இன்னிக்குத் தான் மோர்மிளகாயைக் காய வைச்சிருக்கேன். நாலு மணிக்குப் போய் எடுத்துக்கொண்டு வரவேண்டும்.  

இன்னிக்குப் பல நாட்கள் கழிச்சு மசால் தோசை பண்ணலாம்னு ஒரு எண்ணம். சும்மாக் கொஞ்சம் போல் உ.கி. போட்டு! பண்ணினால் படம் எடுத்துப் போடறேன். காலையிலேயே இன்னிக்கு சாம்பார் வைச்சுட்டேன்.  ஆகவே சாயங்காலம் கிழங்கு மட்டும் பண்ணினால் போதும். சட்னியெல்லாம் அரைக்கப் போவதில்லை. செலவு ஆகாது! யாரானும் இருந்தால் அரைக்கலாம். 

இது நேரடியாகத் தட்டச்சும் பதிவு. சும்மா சோதனைக்காக எழுதுகிறேன். இதில் எழுதுவது ஒண்ணும் ரொம்ப வசதியாக எல்லாம் தெரியலை.  வேர்ட் டாகுமென்டில் கொடுத்திருக்காப்போல் நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கின்றன. இந்த மாதிரி மரபு விக்கியிலே இருக்கும். இது ஏற்கெனவே வேலை செய்தது தான். அங்கேயும் தேவைப்பட்ட இடங்களில் ஃஃபான்ட்ஸை மாற்றிக் கொள்ளலாம். தனிப்படத் தெரிய வேண்டும் எனில் ஃபான்ட்ஸை மாற்றிக் காட்டலாம். பத்திகளை ஒழுங்கு செய்யலாம். மார்ஜின்கள் கொடுக்கலாம்.  வரிகளுக்கு இடையில் உள்ள இடங்களை அதிகரிக்கலாம். ஒன்றின் மேல் ஒன்று வரி விழாது. ஆகவே இது ரொம்பவே புதுசெல்லாம் இல்லை. ஷெட்யூல் பண்ணும் வசதி இதில் கொஞ்சம் தெளிவாகவே இருக்கு. ஒண்ணும் பிரச்னை இருக்காது என்றே நம்புகிறேன். இதில் படங்கள் எல்லாம் எப்படிக் கொடுக்கிறது என்பதையும் பார்க்கவேண்டும். அது பின்னர். காவிரியை எடுத்துட்டு வந்ததும் பார்த்துக்கலாம். இப்போ இது போகுதானு பார்க்கணுமே! 

Tuesday, June 23, 2020

பொழுது போக்கிய நாட்கள்/நேரங்கள்!

காரே இல்லை, ஆனால் காருக்கான இன்சூரன்ஸுக்குப் பிரிமியம் கட்டச் சொல்லி மட்டும் கேட்டுட்டே இருக்காங்க. முதல்லே காருக்கான பணத்தைக் கொடுத்தாங்கன்னா பரவாயில்லை. அதே போல் எனக்கு லக்ஷக்கணக்கிலே கடன் சாங்க்‌ஷன் ஆகி இருப்பதாயும் சொல்லுவாங்க! திரும்பக் கட்டுவதும் அவங்களே செய்தா நல்லா இருக்கும். நாமல்ல கட்டணுமாம்! அது எப்பூடி?
*********************************************************************************

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி இருந்தாலும் பெரும்பாலும் அன்றாட நடப்புகள் பாதிக்கப்படுவதில்லை. இன்னிக்குக் காலம்பர வழக்கம்போல் எழுந்தாலும் அதிகப்படி வேலைகள் சுமையாக ஆகிவிட்டன. அதிலும் இரண்டு வருஷங்களாக வேலைக்கு ஆள் வைத்துக் கொண்டு அந்த சுகத்தை அனுபவித்ததாலோ என்னமோ ஒவ்வொரு வேலையும் மாபெரும் நிகழ்வாகப் பயமுறுத்துகிறது. அதோடு தோசைக்கு அரைக்கப் போடலாம் என அரிசி, உளுந்து தயார் செய்துவிட்டுக் களையப் போனால் காவிரித் தண்ணீர்க் குழாயில் சொட்டு ஜலம்வரலை.  இது என்னடா புதுக்கதைனு கீழே பாதுகாவலரைக் கூப்பிட்டுக் கேட்டால் எல்லோருக்கும் வருது, உங்க வீட்டுக்குத் தான் வரலை. நீங்களே மொட்டை மாடியில் போய் என்னனு பார்த்துக்கோங்க என்று சொல்லிவிட்டார். சரினு எதிர் வீட்டில் கேட்டால் மெலிதாக வருதுனு முதல்லே சொன்னாங்க. அரை மணிக்கெல்லாம் இரண்டு எதிர்வீடுகளிலேயும் தண்ணீர் வரலைனு சொன்னாங்க. சரினு காரியதரிசியைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்லிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம்னு போனேன். ப்ளம்பர் பத்து மணிக்குத் தான் வருவாராம். அதுக்கப்புறமாத்தான் என்னனு தெரியும் என்று சொன்னாங்க.

சரினு போர்த் தண்ணீரைப் பிடித்துக்கொண்டு அதில் களைந்து ஊறப்போட்டுவிட்டு, மற்ற எல்லா வேலைகளையும் முடித்துவிட்டுக் குளித்துவிட்டு வந்து சமைக்க ஆரம்பிக்கையில் பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. உடனே சொல்லாமல் கொள்ளாமல் மின்சார வெட்டு. இப்போத்தான் மாதாந்திர வெட்டுப் பதினைந்து நாட்களுக்கு முன்னர் வந்து போனது. இன்னிக்குக் காரணம் என்னனு தெரியாமல் மின் வெட்டு. இதோ வந்துடும், அதோ வந்துடும்னு காத்திருந்ததில் நேரம் தான் வீணானது. மற்றச் சில்லறை வேலைகளைச் செய்து கொண்டே சாதம், ரசம், கூட்டு எனத் தயாராகிக் கொண்டிருந்தது. இன்னிக்குனு மோர்க்குழம்புக்கு ஏற்பாடு செய்தேன். அதோடு அரைக்கவும் போட்டிருந்தேன். எப்படி அரைப்பது? மின்சாரம் மத்தியானம் வந்துவிட்டதெனில் சரி. இல்லைனா ஐந்து மணிக்கு மேலே அரைத்துக் கரைத்துப் பின்னர் ராத்திரிக்கும் பண்ணுவதற்குள் போதும் போதும்னு ஆகிடும்.  ஒரு நாளைக்குப் பத்துப்பேருக்கு மேல் சமைத்தது எல்லாம் பொய் என்னும்படி இப்போ ஆகிவிட்டது!

மின்சாரம் மத்தியானம் 2 மணிக்கு மேல் தான் வந்தது. கிட்டத்தட்ட அப்போத் தான் காவிரித் தண்ணீரும் வந்தது. ப்ளம்பர் வரவே இல்லையாம். அசோசியேஷன் செக்ரடரியும் இன்னும் யாரோ என்னனு பார்த்துட்டு இரண்டு ப்ளாக்கிலும் உள்ள தண்ணீரைப் பங்கிட்டிருக்கின்றனர். அதனால் எங்களுக்கும் கொஞ்சம் தண்ணீர் வந்தது. குடிநீருக்காக ஃபில்டரைப் போட்டுவிட்டுத் தண்ணீர் எடுத்து கிரைண்டரைக் கழுவலாம்னா செக்கச்செவேர்னு தண்ணீர். பிடிச்சுப் பிடிச்சுப் பிடிச்சுப் பிடிச்சுப் பிடிச்சுப் பிடிச்சுக் கொட்டினாலும் அப்படியே நிறம் மாறாத தண்ணீர். விதியேனு மீண்டும் போர்த்தண்ணீரையே பயன்படுத்திக்கொண்டேன். அரைத்துக் கொண்டே பாத்திரங்களையும் தேய்த்துவிட்டு, விளக்குத் தேய்த்து ராகுகால விளக்கு ஏற்றி வைத்து வாழைப்பழம் நிவேதனம் பண்ணிட்டுத் தேநீரும் போட்டு முடித்து உட்காரும்போது மணி 3.35 ஆகிவிட்டது. இன்றைய பொழுது காத்திருப்பில் போய் விட்டது.
*********************************************************************************

ஒடிஷாவில் புரி ஜகந்நாதர் ரத யாத்திரை மனிதர்களே அதாவது பக்தர்களே இல்லாமல் நடந்து வருகிறது. கொஞ்ச நேரம் மொபைலில் யூ ட்யூபில் வந்ததைப் பார்த்தோம். இந்த ரத யாத்திரையை நிறுத்தினால் நாட்டிற்குக் கேடு உண்டாகும் என்று உச்ச நீதி மன்றத்தில் சொன்னார்களாம். மேலும் புரி ஜகந்நாதர் ரதம் ஓட ஆரம்பிச்சால் நடுவிலும் நிற்காதாம் முழுக்க முழுக்க ஓட வேண்டுமாம். சிதம்பரம் கோயிலிலும் ஆனித்திருமஞ்சனத்துக்கு ஏற்பாடு செய்திருக்கின்றனர். அங்கேயும் தேரோட்டம் உண்டு. ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. பல்லக்கில் நடராஜரை வைத்துப் பிரகாரத்தினுள் சுற்றிக்கொள்ளுமாறு கூறி இருக்கின்றனர். ஆனால் இது ஒரு வகையில் நல்லதே! நம் மக்கள் அதீத உணர்ச்சி வசப்படுவார்கள். நடராஜர் தேரோட்டம் நடந்தது எனில் நிச்சயம் கூட்டம் கூடி இருக்கும். கட்டுப்படுத்த முடியாமலும் போயிருக்கலாம். ஏற்கெனவே ஊரடங்கை ஒழுங்காய்க் கடைப்பிடிக்காமல் தான் இப்போ மீண்டும் ஊரடங்கு ஏற்பட்டிருக்கிறது. நேற்றிலிருந்து மதுரையிலும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இங்கே திருச்சியிலும் ஊரடங்கைச் செயல்படுத்துவது பற்றி யோசிக்கின்றனர். நாளுக்கு நாள் இங்கேயும் கொரோனா பாதிப்பு அதிகம் ஆகி வருகிறது. ஸ்ரீரங்கத்தினுள்ளும் நுழைந்து விட்டது.
*********************************************************************************
"ஒரு யோகியின் சுயசரிதை!" புத்தகத்தைப் படித்து முடித்தேன். நெல்லைத்தமிழர் அனுப்பி வைத்தார். மெய் சிலிர்க்கும் சம்பவங்கள்/உண்மைச் சம்பவங்கள் நிறைந்த புத்தகம். அதில் உள்ள சில அறிவுரைகள் எங்க குருநாதர் எங்களிடம் சொல்லுவது தான். அவரும் கிட்டத்தட்ட இந்த யோகியைப் போலவே நன்கு படித்தவர். நடு நடுவில் யோகப் பயிற்சிக்குச் சென்று சென்று வந்தவர். யோகப் பயிற்சி என்பது இங்கே நாம் தினசரி செய்யும் யோக ஆசனப் பயிற்சி இல்லை.  இது ஒருவிதமான கிரியா. பல முத்திரைகள் உண்டு. அதில் கேசரி முத்ரா என்னும் முத்ராவில் கடைசி கிரியா என்னும் ஆக்ஞா சக்கரத்தின் மூலம் உயிரை வெளியேற்றுவது என்பது இந்த யோகங்களைச் செய்து வருபவர்களால் மட்டுமே முடியும். அத்தகைய பயிற்சியைப் பெற்றவர் தான் "எம்" எனப்படும் இந்த யோகி. இவருக்குத் தன் ஒன்பதாவது வயதிலேயே குருவின் தரிசனம் கிடைக்கிறது. அதன் பின்னரும் பற்பல யோகிகளையும் யோகினியையும் பார்த்துப் பார்த்து இவருக்கு மனதில் தானும் இத்தகையவனாய் இருந்தவனே என்பது தெரிய வருகிறது. ஆனால் தான் யார் என்பதை வெளி உலகுக்குச் சொல்லாமல் ஓர் யோகியாக வாழ்ந்து வந்தவர் பின்னர் பொது மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டித் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இப்போது 72 வயது ஆகும் இவர் இன்னமும் நம்மிடையே வாழ்ந்து வருகிறார் என நம்புகிறேன்.

ஏற்கெனவே யோகியாய் வாழ்ந்த ஓர் பத்தொன்பது வயது யோகி தன் அறியாமையால் செய்ததொரு தவறால் மறு பிறவி எடுத்துத் தன் யோக வாழ்க்கையை வாழும்படி நேர்கிறது. ஆனால் மறுபிறவியில் கேரளத்தின் திருவனந்தபுரத்தில் ஓர் முஸ்லீம் பதான் குடும்பத்தில் பிறக்கும் திரு "எம்" எவ்வாறு தன் குருவைத் தரிசிக்கிறார், தன் முற்பிறவி பற்றி அறிகிறார் என்பதும் இவருக்கு அந்த நினைவுகள் எல்லாம் ஒன்பது வயதுக்குள்ளாகக் கனவுகளாக வந்து போயிருக்கின்றன.  தன் குருவான "பாபாஜி" இவர் ஸ்ரீகுரு எனப்படும் ஆதிகுருவின் அத்யந்த சீடர். இந்த ஸ்ரீகுரு தான் தன்னை முற்பிறவியில் உயிரை விடச் சொன்னார் என்பதெல்லாம் இவருக்கு, அதாவது திரு "எம்" அவர்களுக்கு இப்போதைய குரு பாபாஜி மூலம் தெரிய வருகிறது. உறைபனி சூழ்ந்த இமயத்திற்குச் சென்று அங்கே தன் குருநாதரைப் போன்ற பல அசாதாரண மனிதர்களைச் சந்தித்துத் தன் ஆன்மிகத் தேடலை நிவர்த்தி செய்து கொள்ளும் "எம்" முதல் முறை கயிலைப் பயணம் போக முடியாமல் உடல் நிலை காரணமாகத் தடுத்து நிறுத்தப்பட்ட "எம்" பின்னாட்களில் சென்ற கயிலைப் பயணத்தில் தன் குருவை மட்டுமில்லாமல் தன்னையும் தன் குருவையும் வழி நடத்தி வந்த ஸ்ரீகுருவையும் தரிசித்ததையும் தான் லௌகிக வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டிய காரணத்தையும் தெரிந்து கொண்டு ஜனகரைப் போல் ஓர் இல்லறத்துறவியாக வாழ்ந்து வருகிறார்.

இவருடைய நண்பர்கள், தெரிந்த மனிதர்கள் பட்டியலில் இருக்கும் அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் நம்மை ஆச்சரியப் பட வைக்கின்றனர். எனினும் யாரிடமும் அதிகம் தொடர்பில்லாமல் தன் வேலையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தன் வேலையைத் தன் குருநாதர் சொன்னபடி நடத்தி வருகிறார் எம். இதில் இருந்து சிலவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம் தான். ஆனால் படிப்பதில் உள்ள சுவாரசியம் குறைந்து விடும். விடாமல் படித்தால் இரண்டு நாட்களில் முடிந்து விட்டிருக்கும். நான் கொஞ்சம் விட்டு விட்டுத் தான் படித்தேன். நடு நடுவில் வீட்டு வேலைகள், கணினியில் உட்காருதல், என எல்லாவற்றையும் செய்து கொண்டே படித்ததால் நான்கு நாட்கள் ஆகிவிட்டன. மறு வாசிப்பை ஆரம்பித்துள்ளேன். புரியாத இடங்களில் எல்லாம் அப்போவே மீண்டும் மீண்டும் போய் மறுபடி மறுபடி படித்தாலும் மறு வாசிப்பில் என்ன மாதிரி புரிதல் வரப்போகிறது என்று பார்க்கும் எண்ணமும் கூட!

இமயகுருவின் இதய சீடன்! ஒரு யோகியின் சுயசரிதை! ஸ்ரீ எம்!

தமிழில் : பி.உமேஷ் சந்தர் பால்,

மஜன்டா பதிப்பகம், மடிக்கேரி, கர்நாடகா! பக்கங்கள் 512, விலை 295

Tuesday, June 16, 2020

ஒசிந்து ஒசிந்து வரும் காவிரி!

காவிரியில் தண்ணீர் நேற்று மதியம் 2 மணி சுமாருக்குத் திருச்சிக்கு வந்தது. மூன்று மணி அளவில் மாடிக்குக் காய வைத்த வற்றலை எடுக்கப் போனேனா! சரி தண்ணீர் வரும்போது படம் எடுப்போம்னு எடுக்கப் போனேன். ஒரே வெயில்! அதிலும் எதிர்வெயில்! கண் கூசிக் கொண்டிருந்தது. கொஞ்சம் சிரமமாகத் தான் இருந்தது. என்றாலும் ஆவலில் சில படங்கள். இன்னொரு நாள் காலம்பரப் போய் எடுத்துக் கொண்டு வரணும்.


படங்கள் சில ஒரே மாதிரியாகக் காட்சி கொடுத்தாலும் வெவ்வேறு இடங்களில் இருந்து எடுத்தவை. வெயில் தாங்காமல் வியர்வை வெள்ளமாய்ப் பெருகவே அவசரம் அவசரமாய் எடுக்கும்படி ஆகிவிட்டது.



இப்போத் தண்ணீர்ப் பூரணமாய் வந்திருக்கும். காலம்பரப் பார்த்தப்போ அவ்வளவு இல்லை. ஏனெனில் கல்லணைக்குப் போக நேரம் எடுத்திருப்பதால் தண்ணீர் வேகம் குறைவோனு நினைக்கிறேன்.










நாளைக்கோ, அல்லது நாளை மறுநாளோ காமிராவை எடுத்துக் கொண்டு போய்ப் படங்கள் எடுக்கணும்னு நினைக்கிறேன். காமிராவையும் பயன்படுத்தி ரொம்ப நாட்கள் ஆகின்றன.  அது என்னமோ தெரியலை, தமிழ்நாட்டிலே பாலாறில் இருந்து ஆரம்பித்துப் பல நதிகள் இருந்தாலும் எல்லோரும் கவலைப்படுவது, கவனிப்பது காவிரியின் போக்கைத் தான். காவிரியில் தண்ணீர் வரலைனா அது ஓர் பெரிய மன வருத்தமாகிவிடும். மற்ற நதிகளைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. இவற்றில் தாமிரபரணியும், வைகையும் தமிழ்நாட்டுக்குள்ளேயே உற்பத்தி ஆகி அங்கேயே முடிகின்றன.  காவிரியில் தண்ணீர் வருவதால் மனதுக்குக் கொஞ்சம் ஆறுதல். 

Sunday, June 14, 2020

படித்த புத்தகங்களும் கடக்கும்/கடத்தும் நேரமும்!

ஏதோ பொழுது நகர்கிறது. உபயோகமான வேலைகள் ஏதும் செய்யலை.  வீட்டு வேலைகள் இருக்கவே இருக்கின்றன. எல்லாவேலைகளும் செய்தாலும் எதுவும் சரியாகச் செய்ய முடியாமல் மனமும் பதியவில்லை. எல்லாம் இந்தக் கொரோனா ஆட்டி வைப்பது தான். இங்கே திருச்சியில் இல்லாமல் இருந்தது! பசுமை மண்டலமாக மாறப் போகிறது என நினைக்கும் வேளையிலே ஆரஞ்சு மண்டலமாகி விட்டது. இப்போது 40க்கும் அதிகமான நோயாளிகள் எனச் சொல்கின்றனர்.  திருவானைக்கா, ஸ்ரீரங்கம் வரை கொரோனா பரவி விட்டது. சென்னையிலிருந்து ஓடி வரும் மக்கள் தான் காரணம் என்கின்றனர். மக்கள் இரு சக்கர வண்டிகள், ஆட்டோக்கள், குட்டி யானைப்படும் டெம்போக்கள் எனக் கிடைத்தவற்றில் ஏறிக்கொண்டு தெற்கு நோக்கிப் பயணிக்கின்றனர். அவர்கள் சென்னையிலிருந்து கொண்டு வரும் தொற்று விரைவில் தமிழ்நாடு முழுவதும் பரவி விடும் போல் அச்சமாக உள்ளது. சென்னையின் வழித்தடங்களை அடைத்துச் சோதனை செய்தால் தவிர இது தொடர்ந்து கொண்டே இருக்கும். ஈ-பாஸ் இல்லாமலேயே பலரும் வருவதாக தினசரிகள் கூறுகின்றன. இன்னும் சிலர் வாடகைக்கார் கொடுக்கும் ஏஜென்டுகள் மூலமாக ஈ பாஸும் பெற்றுக் கொண்டு வருவதாகச் சொல்கின்றனர். தினசரிகளைப் பார்த்தாலே விதம் விதமான கொரோனாச் செய்திகள். மதுரைக்கு மட்டும் பல வண்டிகளில் மக்கள் சென்றுள்ளனர் எனத் தொலைகாட்சிச் செய்தி கூறுகிறது.  ஒரு கட்டுக்குள் இருந்து வந்த தென் மாவட்டங்களில் இனி அது போல் நிலைமை இருக்குமா தெரியவில்லை.  இறைவன் திருவடிகளே சரணம்!
********************************************************************************

கடந்த நாட்களில், "திருவரங்கன் உலா" திரும்பத்திரும்பப் படித்தேன். சித்தப்பாவின் "ஒற்றன்" படித்தேன். சித்தப்பா முதல் முறை அம்பேரிக்கா போனப்போ அங்கே மினசோட்டா மாநிலத்தில்  சித்தப்பாவின் ஐயோவா வாழ்க்கையைப் பற்றியது "ஒற்றன்." இதைத் தவிர்த்து நண்பர் திரு திவாகர் அனுப்பிய, "ஹரிதாசன் என்னும் நான்!" என்னும் நாவலின் பிடிஎஃப் படித்து முடித்தேன். திவாகர் நான் எழுதத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் இருந்து நண்பர். என்னைப் பல விதங்களிலும் ஊக்கம் கொடுத்து எழுத வைத்தவர். ஒரு காலத்தில் என் விளம்பர மானேஜர் என்றே அவரைச் சொல்வேன். அந்த அளவுக்கு என்னைப் பற்றிப் பலரிடமும் சொல்லி என் எழுத்தைப் படிக்க வைத்திருக்கிறார். திவாகருக்குச் சரித்திரத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு.  தமிழ்நாட்டின் சரித்திரத்தில் மட்டுமில்லாமல் பொதுவான சரித்திரத்திலேயே ஈடுபாடு கொண்டு பல கல்வெட்டுக்கள், ஆய்வுகள், சரித்திரத் தகவல்களைத் திரட்டித் தேடுதல் எனச் செய்து கொண்டிருப்பார். ஆய்வுகளின் அடிப்படையில் கிடைத்த உண்மையான தகவல்களைக் கருவாக வைத்துக் கதைப்பின்னல் போடுவதில் தேர்ந்தவர்.  தான் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் "வம்சதாரா", "விசித்திர சித்தன்",  "எஸ்.எம்.எஸ். எம்டன் போன்ற பல புத்தகங்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.  அது மட்டுமல்ல.

இவரும் இவர் மனைவியுமாகப் பன்னிரு திருமுறையில் முதல் 3 திருமுறைகளை (திருஞானசம்பந்தர் அருளிச் செய்தது) தெலுங்கு மொழியில் மொழி பெயர்த்திருக்கின்றனர். முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம், 
136 பதிகங்கள், 1469 பாடல்கள்.

தெலுங்கு மொழிபெயர்ப்பு
விசாகப்பட்டினம் சசிகலா திவாகர். 
தமிழுக்கு இவர்கள் செய்த மாபெரும் தொண்டு இது. பக்தி இலக்கியங்கள் பலவும் இப்படி மற்ற மாநில மொழிகளுக்கு மொழி பெயர்க்கப்படுவதன் மூலம் தமிழ்நாட்டின் அன்றைய கால கட்டத்துச் சிறப்பான நிலையும், அரசர்கள் வரலாறும், மக்களின் பழக்கவழக்கங்களும் நிலையானதொரு இடத்தைப் பெற்று விடுகிறது. அதற்குத் திரு திவாகர் எப்போதுமே தன்னால் ஆன உதவிகளைச் செய்து வருகிறார்.  பன்னிருதிருமுறைகளில் மற்றவற்றையும் தேர்ந்த தமிழறிஞர்கள்  தருமை ஆதீனத்தின் மேற்பார்வையில் செய்து கொடுத்திருக்கின்றனர். மிகப் பெரிய பணி இது. இதை எடுத்துச் செய்தவர் தேவாரம் தளத்தின் நிர்வாகியான ஈழத்துப் பெரும் புலவர் ஐயா மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள்.

 திவாகர்  சமீபத்தில் எழுதிய இந்த "ஹரிதாசன் என்னும் நான்!" என்னும் புதினம் கிருஷ்ணதேவ ராயர் காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து எழுதப்பட்டது. கிருஷ்ணதேவ ராயர் அரசனாக மகுடம் சூட்டும் முன்னர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் சூழ்நிலையும், வடக்கே பாமானி சுல்தான்களால் அவர்கள் எந்நேரமும் கண்காணிக்கப்பட்டதையும், அதைத் தவிர்க்க வேண்டி, ராயரின் தங்கையை பாமணி சுல்தானுக்கு மணம் செய்து கொடுக்க அனுப்பி வைக்கப்பட்டதையும் சொல்லுகிறது இந்தச் சரித்திர நாவல். ஹரிஹர புக்கர்களால் ஆளப்பட்ட இந்த விஜயநகர சாம்ராஜ்யத்தில் அவர்களுக்கு சுமார் 170 ஆண்டுகளுக்குப்பின்னர் வந்த நாயக்க மன்னர்களின் காலத்தையும் அவர்களில் சிறந்தவன் ஆன கிருஷ்ணதேவ ராயன் என்னும் துளு வம்சத்து இளவரசன் அரசனாக எப்படி முடிசூட்டிக் கொண்டான் என்பதையும் குறிப்பிட்டுச் சொல்லும் நூல் இது. திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி அரசர்கள் எப்போதும் விஜயநகர அரசர்களுக்குக் கட்டுப்பட்டவர்களாயும், நண்பர்களாயுமே இருந்துள்ளனர். அவர்களில் கிருஷ்ணதேவராயர் காலத்தில் இருந்த இளவரசன் ஆன ஹரிதாசன் என்னும் இளைஞன் கிருஷ்ண தேவராயனின் நண்பன்.

அவன் தானே தன் வாழ்வில் நடந்தவற்றைச் சொல்வதாக எழுதி இருக்கிறார் திவாகர். பொதுவாகச் சிறுகதைகள் மட்டுமே அப்படி எழுதுவார்கள். ஆனால் இதில் பதினைந்து நாட்கள் நடக்கும் விஷயங்களைப் பனிரண்டு  அத்தியாயங்களில் சொல்லி இருக்கிறார். கிருஷ்ண தேவராயர் இல்லை எனில் இன்று நம் நாட்டுக் கோயில்கள் எதுவும் இருந்திருக்காது.  நம் தென்னாட்டின் கோயில்களையும் அதன் ஆகம முறை வழிபாடுகளையும் கட்டிக்காத்தவர்கள் விஜயநகர சாம்ராஜ்யத்து அரசர்களே! அவர்கள் இல்லை எனில் இன்றைக்கு நமக்கு வழிபடக் கோயில்களே இருந்திருக்காது என்பதில் சிறிதும் கருத்து வேறுபாடு இல்லை. அத்தோடு இல்லாமல் நம் மொழியையும் கட்டிப் பாதுகாத்தவர்கள் நாயக்க வம்சத்து அரசர்கள் ஆவார்கள். அதிலும் கிருஷ்ணதேவராயர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளின் கதையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு அவள் கதையை "ஆமுக்த மால்யதா" என்னும் பெயரில் தெலுங்கில் எழுதி உள்ளான். அத்தோடு இல்லாமல் நம் நாலாயிர திவ்யப் பிரபந்தங்களும் அங்கே தெலுங்கில் எழுதப்பட்டு வைணவக் கோயில்களில் படிக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் மூல காரணமே கிருஷ்ண தேவராயனும் அவனுக்குப் பின்னர் வந்த நாயக்க வம்சத்து அரசர்களும் ஆவார்கள். சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் தென்னாட்டை ஆட்சி புரிந்து வந்திருந்தும் நம் தமிழ் மொழிக்கு எவ்விதமான ஆபத்தும் நேரவில்லை. கிருஷ்ணதேவ ராயன் காலத்தில் விஜயநகரப் பேரரசு புகழின் உச்சத்தில் இருந்தது. அத்தகைய ஓர் அரசன் எவ்வாறு அரியணை ஏறினான் என்பதே இந்தப் புதினத்தின் மையக்கருத்து.

ஆசாரியரான வித்யாரண்யரால் ஆரம்பிக்கப்பட்ட விஜயநகர சாம்ராஜ்யத்தில் கிருஷ்ணதேவ ராயரின் காலத்தில் இருந்த ஆசாரியர் வியாச ராய தீர்த்தர். இவர் கிருஷ்ண்தேவனைக் காப்பாற்றுவதற்காகச் சில நாட்கள் அரியணையில் அமர நேர்ந்தது. அதனால் வியாசராஜ தீர்த்தர் என்னும் பெயர் பெற்றார். அவர் அரியணையில் அமர நேர்ந்த நிகழ்வு இந்தக் கதையில் வேறுவிதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பொதுவில் அரசனைக் காப்பாற்றவே வியாசராயர் சிம்மாசனம் ஏறினார். கிருஷ்ண தேவராயனின் உயிரைக்  காப்பாற்ற எனச் சொல்லப் பட்டாலும் இந்தக் கதையின் படி அவர் கிருஷ்ணதேவராயனின் அண்ணனுக்குச் சமாதானம் ஏற்பட வேண்டி தானே அரசனாக சிம்மாசனம் ஏறுகிறார்.  பனிரண்டு அத்தியாயங்களும் விறுவிறுப்புடன் ஒரே ஓட்டமாக ஓடுகிறது. அந்தக் கால கட்டங்களில் துருக்கியரால் தூக்கிச் செல்லப்படும் பெண்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிச் சுண்டுவிரலையும் மோதிர விரலையும் வெட்டிக் கொள்வார்களாம். அதைக் குறித்த கல்வெட்டு ஒன்று இலஹங்காவில் கிடைத்துள்ளது. அதுவும் இந்தக் கதையில் ஓர் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கிறது.

அந்தக் காலகட்டத்தில் கிருஷ்ணதேவராயனின் அண்ணனான வீரநரசிம்ம ராயன் தன் வாழ்நாளின் கடைசிக் கட்டத்தில் இருந்ததும், அவன் மனதை மாற்றிச் சூழ்ச்சி செய்து ராஜ்யத்தைப் பிடிக்கச் செய்த முயற்சிகளையும் அனைத்தையும் முறியடித்துக்  கிருஷ்ண்தேவராயனின் தங்கையின் மனதையும் வென்று அவளைக் கைப்பிடித்த ஹரிதாசனையும் இந்தக்கதையை எல்லாம் ஹரிதாசன் வாயிலாகவே சொல்ல வைத்திருக்கும் திவாகரையும் பாராட்டுவோம். இதற்கு மேல் கதையின் சம்பவங்களைக் குறிப்பிட்டால் கதையைப் படிக்கும் ஆவல் இல்லாமல் போய்விடும். ஆகவே அவற்றைக் குறிப்பிடவில்லை.

மனமார்ந்த பாராட்டுகள் திவாகர். படித்துச் சில நாட்கள் ஆகிவிட்டன என்றாலும் இன்றே இந்தப் புத்தகம் குறித்துக் கொஞ்சமானும் எழுத நேரம் வாய்த்தது. 

Saturday, June 06, 2020

எங்கும், எதிலும் ஏமாற்றம் தான்!

நேற்றுக் காலை  9-42 க்கு ஒரு தொலைபேசி அழைப்பு. என்னோட மொபைலில் தான். 98516 47899 என்னும் எண்ணில் இருந்து. யாரு இது புது நம்பரா இருக்கேனு நினைச்சுட்டு எடுத்தா, "வணக்கம், சார், நான் உங்க பாங்க் மானேஜர் சார், முத்துக்குமார் சார்!" என்று ஒரு ஆண் குரல். "யாரு நீங்க? எந்த பாங்க்?" என்று கேட்டதுக்கு, "உங்க மானேஜர் தான் சார் பேசறேன். முத்துக்குமார் சார் நான்! உங்க ஏடிஎம் நம்பரையும் பின் நம்பரையும் கொஞ்சம் சொல்றீங்களா? சரி பார்க்கணும்!" என்றார். நான் உடனேயே அவரிடம் எனக்கு பாங்கில் அப்படி ஒரு கணக்கு இல்லவே இல்லைனு சொல்லிட்டுத் தொலைபேசியை வைச்சுட்டேன். பின்னர் அந்த எண்ணை கூகிளில் போட்டுத் தேடினால் விசித்திரமான முடிவுகள் எல்லாம் வந்தன. சரிதான் போ! என நினைத்துக் கொண்டேன். வங்கிகளிடமிருந்து இப்படி ஒரு அழைப்பு வரும். அதற்கு நீங்க எந்த பதிலும் சொல்லாதீங்கனு தொலைபேசி எண்ணுக்குச் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. நாங்க யாரும் மானேஜர் என்னும் பெயரில் ஏடிஎம் எண்ணோ, க்ரெடிட் கார்ட் எண்ணோ, டெபிட் கார்ட் எண்ணோ கேட்க மாட்டோம். அது எங்க வேலை இல்லை. என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அப்படி இருந்தும் இப்படி!

முன்னெல்லாம் உங்க எண்ணுக்குப் பரிசு விழுந்திருக்கு. இந்த ஓட்டலில் இந்த நடிகருடன் விருந்து சாப்பிடலாம். நீங்க கட்ட வேண்டியதெல்லாம் 5000 ரூ மட்டுமே/அல்லது வேறே தொகை ஏதானும் சொல்லிக் கட்டச் சொல்லி நடிகருடனான உங்க விருந்து சாப்பிடும் நிகழ்வைப் படம்பிடித்துத் தொலைக்காட்சியில் போடப் போறோம். அதுக்கு உங்களுக்குப் பரிசு உண்டு என்றெல்லாம் சொல்லுவாங்க.  நான் ஓட்டலிலேயே சாப்பிடமாட்டேன் என்றும் நடிகருடன் எல்லாம் சாப்பிடுவது பிடிக்காது என்றும் பதில் சொல்லிடுவேன்.  இன்னும் சிலர் முத்துமாலை பரிசு உங்களுக்கு விழுந்திருக்கு. நீங்க இந்த இடத்துக்கு வந்து உங்க தொலைபேசி எண்ணைச் சொல்லிட்டு, ஆயிரமோ, இரண்டாயிரமோ கட்டினால் பத்தாயிரம் மதிப்புள்ள நகை உங்களுக்குக் கிடைக்கும் என்பாங்க. எனக்கு நகையே வேண்டாம்னு சொல்லிடுவேன். நடுவில் கொஞ்ச நாட்களாக நின்று போயிருந்தது. இப்போ மறுபடி ஆரம்பிச்சிருக்காங்க போல! பாவம்!
*********************************************************************************

கொஞ்ச நாட்களாகச் செய்திகளே மோசமாக வந்தால் கேரளத்தில் இருந்து வரும் செய்திகள் அதை விட மோசமாக இருக்கின்றன. இன்னிக்குத் தொலைக்காட்சிச் செய்தியில் கேரளத்தில் ஓர் இளம் கணவன் தன் மனைவியியும் ஐந்து வயதுப் பையரையும் வெளியே கடற்கரைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி அழைத்துச் சென்றுவிட்டுக் கடைசியில் யாரோ நண்பன் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கே ஏற்கெனவே நான்கைந்து நபர்கள் குடிபோதையில். இவரும் அங்கே சென்ற உடனே குடித்ததோடு அல்லாமல் மனைவியையும் வலுக்கட்டாயமாகக் குடிக்க வைத்திருக்கிறார். பின்னர் அனைவருமாகச் சேர்ந்து அந்தப்பெண்ணை பலவந்தமாகச் சின்னாபின்னமாக்கி இருக்கிறார்கள். தடுக்கப் போன ஐந்து வயதுக் குழந்தையை அடித்துத் தூக்கி வீசி இருக்கிறார்கள். அந்தப் பெண்ணை சிகரெட்டால் சுட்டுக் கொடுமை! அவர்களின் குடிபோதை அதிகம் ஆனதும் அந்தப் பெண் எப்படியோ தப்பிக் கிழிந்த ஆடைகளோடு குழந்தையையும் தூக்கிக் கொண்டு தெருவுக்கு வந்து உதவி கேட்டிருக்கிறாள். யாரோ புண்ணியவான் அவள் நிலையைப் பார்த்துவிட்டுக் காவல் துறையை அழைக்க அனைவரும் கையோடு பிடிக்கப்பட்டிருக்கின்றனர். நல்லவேளையாக அந்தப் பெண்ணுக்கு மகளிர் பாதுகாப்பு ஆணையம் பாதுகாப்புக் கொடுத்திருக்கிறது.

கொரோனாவினால் வரும் துயர் போதாது போல! பெண்களுக்கு எப்படி எல்லாம் கஷ்டம் வருகிறது! அதிலும் கட்டிய கணவனே. ஐந்து வயதுக் குழந்தை இருப்பதால் திருமணம் ஆகி ஆறேழு ஆண்டுகள் ஆகி இருக்கும்! ஏன் இந்த வக்கிர புத்தி! பெண் என்பவள் ஆண் தேவைப்படும்போது உபயோகிக்கும் பொருளா? இயந்திரமா? அவளுக்கும் உணர்ச்சிகள் இல்லையா?  தொலைக்காட்சிச் செய்திகள் எங்கு பார்த்தாலும் கடத்தல், கொலை என்றே வருகின்றன. அதிலும் கடவுளின் நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் எதுவும் மகிழ்ச்சி அடைய வைக்கவில்லை! 

Wednesday, June 03, 2020

சில எண்ணப் பகிர்வுகள்!

மிக மோசமான புயல் மஹாராஷ்ட்ரா, குஜராத்தைத் தாக்குகிறது/தாக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 140 வருடங்களில் மும்பை இப்படி ஒரு புயலைப் பார்த்தது இல்லையாம். ஏற்கெனவே கொரோனாவில் முன்னணியில் இருக்கும் மும்பை  இப்போப் புயல் தாக்கத்திலும் முன்னணியில் இருக்கிறது. ஆங்காங்கே பேரிடர் மேலாண்மைக்கான ஊழியர்கள் கடற்கரை எங்கும் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அவசர உதவிக்கு. மரங்கள் ஆடுவதும், கடலில் மிதக்கும் கப்பல்கள் அலைகளின் போக்குக்கு ஏற்ப ஏறி, இறங்குவதும் பார்க்கவே கவலை தருகிறது. என்றாலும் மஹாராஷ்ட்ரம், குறிப்பாக மும்பை இதையும் கடந்து வெளியே வரும் என எண்ணுகிறேன். ஏற்கெனவே அங்கே மாநிலமே தத்தளித்துக் கொண்டிருக்கையில் இப்போது இயற்கைச் சீற்றம் வேறே! இப்போத் தான் நாட்டின் கிழக்குப் பகுதியில் மேற்கு வங்கம் முழுவதையும் புயல் தாக்கியது. இப்போ மேற்குப் பகுதி! மக்கள் அனைவரும் பாதுகாப்பாக அவரவர் இல்லங்களில் இருக்கவும், ஒருவரும் இந்தப் புயலால் பாதிப்படையாமல் பாதுகக்கவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
*********************************************************************************

தமிழ்நாட்டில் எகிறிக்கொண்டிருக்கும் கொரோனா! இதில் பலரும் இன்னும் சரியாக அனைவரையும் சோதிக்கவில்லை. ஒரு வீட்டில் ஒருவருக்குக் கொரோனா எனில் அந்த வீட்டின் உறுப்பினர் அனைவரையும் சோதிக்க வேண்டும் என்கிறார்கள். அப்படிச் சோதிப்பதில்லை என்றும் சொல்கின்றனர். முறையான சோதனை இருந்தால் இன்னமும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்கிறார்கள். ஆனால் சுகாதாரத் துறையோ சரியான புள்ளி விபரங்களையே கொடுப்பதாகச் சொல்கிறது. ஆனால் ஊரடங்கு தளர்த்தப்பட்டதில் தொலைக்காட்சியில் பார்த்தவரையில் யாரும் வாயில், மூக்கில் மறைத்து முகமூடி போட்டுக்கொள்ளவே இல்லை. அனைவருக்கும் எது வேண்டுமானாலும் நடக்கட்டும். எத்தனை நாட்கள் தான் அடங்கிக் கிடப்பது என்னும் எண்ணம் வந்துவிட்டதோ என்னமோ!

*********************************************************************************

நான் எங்க குருநாதர் பற்றி எழுதினாலும் எழுதினேன்; எல்லோருக்கும் அவர் யார் எனத் தெரிந்து கொள்ள ஆவல். எங்களுக்கே கடந்த நான்கு வருடங்களாகக் கண்ணில் படவில்லை. மற்றவர்களுக்கு எங்கே இருந்து காட்டுவது? ஆனால் குரு எங்களைத் தேடி வந்தார். எங்களைப் பக்குவம் அடைந்தவர்களாக நினைத்தாரோ இல்லையோ அது தெரியவில்லை. ஆனால் எங்களிடம் மரியாதையும், பாசமும் மிகுதியாக இருந்தது./இப்போவும் இருக்கும். அவர் வந்துவிட்டுப் போனாலே எங்களுக்கு மனம் அமைதியாகவும், நிறைவாகவும் இருக்கும். இத்தனைக்கும் தனிப்பட ஏதும் சொல்லி இருக்க மாட்டார். நாங்களும் தனிப்பட எதுவும் கேட்டுக்கொண்டதில்லை. ஆனாலும் நம் மனதில் உள்ள பிரச்னைகளுக்கான தீர்வை அவர் பேச்சின் மூலமே தெரிந்து கொண்டு விடுவோம். அவரைப் பார்க்கணும்னு யார் ஆசைப்பட்டாலும் பார்க்க வேண்டும் என்றிருந்தால் மட்டுமே கண்களில் படுவார்.  ஆனாலும் பார்க்கவேண்டும் என்னும் ஆவல் விடவில்லை. அவர் வணங்கும் அம்பிகையே அவரை விரைவில் எங்களுக்குக் காட்டித் தரவேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.
*******************************************************************************