எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, October 31, 2017

கொஞ்சம் ரசிக்க! நோ போட்டி ஶ்ரீராமோடு! :)

முகநூல் நண்பர்கள் பலருக்கும் திரு பாக்கியம் ராமசாமி என்னும் ஜ.ரா.சு. அவர்களைத் தெரியாமல் இருக்காது. பல்லாண்டுகளுக்கு முன்னர் அவர் எழுதின ரவாதோசை பற்றியதொரு கட்டுரையை யாரோ மீண்டும் கேட்க அதைப் பதிவிட்டதோடு ஆனியன் ரவாதோசை ரசிகர் சங்கம் என்னும் பொருள்படி ORDS என்னும் ரசிகர் மன்றத்தையும் துவக்கி அதில் சேருபவர்கள் அவரவருக்கு வெங்காய ரவாதோசையோடு ஏற்பட்ட அனுபவங்களைப் படங்களுடன்பதியச் சொல்லி இருந்தார். அப்போ நான் அம்பேரிக்காவில் இருந்தேன்னு நினைக்கிறேன். பையர் வீட்டிலோ, பெண்ணின் வீட்டிலோ ரவாதோசையே பண்ண முடியாது! அப்படியும் ஒரு நாள் எங்க ரெண்டு பேருக்கு மட்டும் எனப் பெண் வீட்டில் ரவாதோசை பண்ணியும் அதைப் படம் எடுத்துப் போட முடியலை. அதுக்குப் பரிசு எல்லாம் கொடுத்தார்! ம்ஹூம்னு பெருமூச்சு விட்டதோடு சரி! நமக்குக் கொடுத்து வைக்கலைனு நினைச்சுண்டேன்.  அவர் ரவாதோசை பற்றி எழுதிய வெங்காய ரவாதோசை மஹாத்மியம் சுட்டி கிடைச்சால் பகிர்கிறேன்.

அப்புறமா இந்தியா வந்ததும் பலமுறை ரவாதோசை (ஆசை தீர) பண்ணினாலும் ஆனியன் போட்டுப் பண்ண முடியலை. நேத்திக்குத் திடீர் என ரவாதோசை பண்ணும் எண்ணம் வந்தது. ஆனால் காலம்பர சாம்பார் வைக்கலை. ராத்திரிக்கு வைச்சால் மிஞ்சிடும். ஆகவே தேங்காய்ச் சட்னி, ஏற்கெனவே முதல்நாள் அரைச்சு வைச்சிருந்த தக்காளிச் சட்னி மற்றும் கொத்துமல்லிச் சட்னி, வெங்காயச் சட்னியோடு திருப்தி அடையலாம்னு முடிவு கட்டினேன். இதிலே நம்ம ரங்க்ஸ் தேங்காய்ச் சட்னியைத் தவிர மற்றவற்றைக் கண்ணெடுத்தும் பாரார்! ஆகவே கொத்துமல்லிச் சட்னியும் ஏற்கெனவே அரைச்சது கொஞ்சம் இருந்ததைத் தேவை எனில் எடுத்துக்கலாம்னு விட்டுட்டேன். யாருப்பா அங்கே கொத்துமல்லி விற்கிற விலையில் னு கூவுறது? ஹிஹி, அதான் அரைக்கலையே! மற்றபடி தேங்காய், வெங்காயச் சட்னிகள் தயார் செய்யப்பட்டன. ரவாதோசைக்குக் கலவையும் கலந்து வைக்கப்பட்டது.  ஹிஹி, மாவு கலக்கும்போது படம் எடுக்கும் நினைவு வழக்கம் போல் இல்லை. முதல் தோசையை அடுப்பில் உள்ள தோசைக்கல்லில் ஊற்றியதும் நினைவு வந்தது. கீழே மாவு கலந்திருக்கும் பாத்திரத்தின் மேல் தோசைத்திருப்பியோடு! :)


தோசையை தோசைக்கல்லில் ஊற்றியதும் எடுத்த படம்! நினைவா எடுத்துட்டோமுல்ல! :)


தோசையைத் திருப்பிப் போட்டதும் எடுத்த படம் கீழே!




திருப்பிப் போட்டதும் எடுத்த படம். வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கியதால் ஜாஸ்தி தெரியாது. அதோடு நான் வெங்காயத்தை மாவோடு கலந்து விட்டேன். ஓட்டல்களில் மேலே தூவுறாப்போல் தூவவில்லை. ஏனெனில் வெங்காயம் கொஞ்சம் முறுகலாக ஆனால் தான் எங்க ரெண்டு பேருக்குமே பிடிக்கும். மேலே தூவினால் பச்சை வெங்காயம் மாதிரியே இருக்கு பல சமயங்களிலும். கீழே சட்னி வகைகள்.


முன்னால் தெரிவது தேங்காய் அதுக்கு வலப்பக்கம் தக்காளி+கொத்துமல்லிச் சட்னி, இடப்பக்கம் வெங்காயச் சட்னி! ஆசையாய் தோசை சாப்பிட வாங்க!


ரவாதோசை கலவைக் குறிப்பு:

நல்ல பொடி ரவையாக இருந்தால் அரை மணி முன்னால் ஊற வைச்சால் போதும். எங்களோடது கொஞ்சம் பெரிய ரவை.  என்றாலும் அரை மணி முன்னால் தான் ஊற வைச்சேன்.

ரவை இரண்டு கரண்டி அல்லது ஒரு சின்னக்கிண்ணம்

அரிசி மாவு ஒரு சின்னக் கிண்ணம்

வறுத்து அரைத்த உளுத்தமாவு இரண்டு டேபிள் ஸ்பூன்

கோதுமை மாவு ஒரு கரண்டி! (மைதாமாவு இப்போதெல்லாம் சேர்ப்பதில்லை! ஆதலால் கோதுமை மாவு! உளுத்தமாவு சேர்ந்து வரதுக்காக! எப்போவுமே கைவசம் இருக்கும் வறுத்து அரைத்த உளுத்த மாவு!) எந்த தோசைக்கும் உளுத்தமாவு போட்டால் நன்றாக எடுக்க வரும். இதில் பச்சைமிளகாய், ஜீரகம், இஞ்சி, கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்துக் கடுகு தாளித்துவிட்டு அரை மணி வைத்துப் பின்னர் தோசை வார்க்க ஆரம்பிக்கலாம். 

Monday, October 30, 2017

தீராத மன வேதனை! :( எப்போ மாறும்!

நேற்றுக்  காலம்பர இருந்து இணையம் வரலை! இணையச் சேவையில் தான் குறைபாடுனு நினைச்சா இங்கே நம்ம குடியிருப்பிலே உள்ள மின் இணைப்பு ஒரு ஃபேஸ் முழுக்க வேலை செய்யலை. பக்கத்துக் கட்டிடத்தின் லிஃப்ட், விளக்குகள், அவங்க வீட்டு மின் சாதனங்கள் எதுவும் வேலை செய்யலை. நம்ம பக்கம் லிஃப்ட் இருந்தது. மின் சாதனங்கள் வேலையும் செய்தன.  இணையச் சேவை கொடுப்பவர் அலுவலகத்திலிருந்து ஒருத்தர் வந்து பார்த்துட்டு இதை உங்க குடியிருப்பு ஆட்கள் தான் சரி செய்யணும்னு சொல்லிட்டுப் போயிட்டார். அது ஆச்சு electrician வந்து பார்த்துச் சரி பண்ணி இணையம் வர மதியம் ஒரு மணி ஆச்சு! அப்புறம் தொலைக்காட்சியில் படங்கள் வரலை! சரினு மறுபடி அவங்களைக் கூப்பிட்டா யாருமே தொலைபேசியை எடுக்கலை. போனால் போகட்டும் போடானு பாடிட்டுப் போய்ப் படுத்தாச்சு!

3 மணிக்குத் தொலைக்காட்சியைப் போட்டால் வந்திருக்கு! எல்லாச் சானல்களிலும் பி.சி.யைப் போட்டு வாங்கிட்டிருந்தாங்க. தலைவர்கள் தான் இப்படின்னா மக்கள் போற போக்கு! அதுக்கும் மேலே! விசாகப் பட்டினத்தில் சாலையில் மயங்கிப் படுத்திருந்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்ததைப் படிச்ச வேதனை ஆறுவதற்குள்ளாக வேறொன்று. இது தமிழ்நாட்டில்னு நினைக்கிறேன்.   சமீபத்தில் மனம் பதற வைத்த வீடியோக்கள் சில பார்த்துட்டு ரொம்பவே வேதனையாப் போச்சு! தூத்துக்குடியில் ஒரு குடும்பமே எரிந்ததை யாரோ படம் எடுத்துப் பகிர்ந்திருக்காங்களேனு நினைச்சா இன்னொருத்தர் முகநூலில் ஒரு குழுமத்தில் சிநேகிதன் என நினைத்துப் பிக்னிக் சென்ற ஒரு பெண்ணை அந்தச் சிநேகிதன் வலுக்கட்டாயமாய்க் காட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்வதைப் படம் எடுத்துப் போட்டிருக்காங்க. அந்தப் பெண் கத்திக் கூப்பாடு போடுகிறாள். தப்பிக்க முயற்சி செய்கிறாள். கூடவே வந்திருக்கும் இன்னொரு பெண்ணும் அந்தப் பையருக்கு உடந்தையா, யார் படம் எடுத்தாங்க எதுவும் தெரியலை! அந்தப் பெண் தப்பினாளா இல்லையா என்றும் தெரியலை! ஆனால் கதறித் துடித்தாள்! அதைப் பார்த்த சில நண்பர்கள் முகநூலில் அதைப் பகிர்ந்த நண்பரிடம் இந்த வீடியோவை அழித்துவிடு என்று சொன்னார்கள்.

உண்மைதான்! அந்தப் பெண்ணின் முகம் தெளிவாகத் தெரியும் வண்ணம் எடுக்கப்பட்டிருந்தது. தொலைக்காட்சியில் கூட வந்தது என்று நினைக்கிறேன். அதுக்கப்புறமா யாரானும் கேட்டுக் கொண்டதன் பேரில் அதைப் போடாமல் அழிச்சிருக்காங்க போல நல்லது தான்! முகநூலில் கூட அழிச்சிருப்பாங்க என்றே நினைக்கிறேன்.  என்றாலும் இப்போதைய இளைஞர்கள் செல்லும் வழி சரியானதாய்த் தெரியலை! ஏன் இவ்வளவு மோசமாகக் கீழான இழிந்த ரசனையுடன் இருக்கிறார்கள் என்பதும் புரியவில்லை. யார் மேல் குற்றம்? பெற்றோரா? வளர்ப்பா அல்லது சமூகச் சூழலா? அல்லது சரியான வழிகாட்டி இல்லாமையா! எது நல்லது, எது கெட்டது என்பது புரியாமல் போச்சா? இவங்களுக்கெல்லாம் அக்கா, தங்கை இல்லையானு நாம் இப்போக் கேட்க முடியாது! ஏனெனில் பெரும்பாலோர் ஒற்றைப் பிள்ளைகள் அல்லது ஒற்றைப் பெண்கள்! முதல்லே இந்தக் கலாசாரத்தை உடைச்சு எறிஞ்சுட்டு குறைந்தது 2 குழந்தைகளாவது பெத்துக்கணும்னு சட்டம் கொண்டு வரணும்! :(

Tuesday, October 24, 2017

ஏன், ஏன், ஏன்??????

"மெர்சல்" திரைப்பட விவாதங்கள் ஓய்ந்து இப்போக் "கந்து வட்டி" விவாதங்கள், போராட்டங்கள் ஆரம்பிச்சிருக்கு! :( இது வரை எல்லோரும் என்ன பண்ணிட்டிருந்தாங்கனு தெரியலை! இப்போத் தான் நிதி எல்லாம் மும்முரமாத் திரட்டிக் கொடுக்கிறாங்க. இதை முன்பே பண்ணி இருந்தா நாலு உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கும். அவங்க தீ வைச்சுக்கும்போதும் எரியும் போதும் அதைப் படம் எடுக்கும் அளவுக்கு மனசு கல்லாக அங்கிருந்த மக்களுக்கு இருந்திருக்கு! யாரும் தடுக்கலை! ஏதோ இலவசக் காட்சினு நினைச்சாங்க போல! :( மிருகங்களை விட மோசமாகப் போய்க் கொண்டிருக்கோம்! :(

இம்மாதிரி எல்லாம் நடக்காமல் இருக்க வேண்டியே மத்திய அரசு "முத்ரா"திட்டம் கொண்டு வந்திருக்கு! ஆனால் அதை மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டிய ஊடகங்கள் அதைச் செய்வதில்லை. வங்கிகள் கேட்கவே வேண்டாம். இதில் அவங்களுக்கு என்ன லாபம்னு நினைக்கிறாங்க போல! ரிசர்வ் வங்கியோ தன்னுடைய தனி ஆளுமை இதனால் பாதிக்கப்படும்னு நினைக்கிறது! ஆக ஒரு நல்ல திட்டம் பயனின்றி வீணாகிக் கொண்டிருக்கிறது. இந்த மத்திய அரசு ஏழை மக்களுக்கு எனச் செய்து கொண்டிருக்கும் பல நல்ல திட்டங்கள் அடித்தட்டு மக்கள் வரை சென்று அடைவதே இல்லை. இப்போ 108 ஆம்புலன்ஸ் திட்டமே மத்திய அரசின் நிதி உதவியுடன் ஏற்பட்டது தான்! ஆனால் தமிழ்நாட்டில் அப்படிச் சொல்லுவதே இல்லை. இத்தனைக்கும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப் பட்டது என நினைக்கிறேன். ஆனாலும் இது மத்திய அரசின் நிதி உதவியால் நடப்பதைச் சொல்லுவதே இல்லை!  மற்ற மாநிலங்களில் ஊர்தியின் இரு பக்கச் சுவர்களிலும் மத்திய அரசின் நிதி உதவி எனத் தெளிவாகக் குறிப்பிடப் பட்டிருக்கும்!

மற்ற நாடுகள் எனில் ஊடகங்கள் இந்தப் பணியைச் செய்யும். இங்கேயோ இல்லாத ஒரு விஷயத்துக்கு ஊடகம் வாத, விவாதம் செய்வதைத் தான் முக்கியமாய்க் கருதுகிறது.  ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவிலிருந்து நேற்று சோதனைக்கு விஷால் வீட்டுக்குச் செல்லவில்லை என்பதைப் பத்திரிகைகளுக்குத் துறை ரீதியாக அறிக்கை கொடுத்தும் எல்லாத் தமிழ் சானல்களும் இதை ஏதோ முக்கியமாக எடுத்துக் கொண்டு விஷாலுக்கு ஆதரவாக வாத, விவாதங்கள் நடத்திக் கொண்டிருந்தனர்.

கருத்துச் சுதந்திரம் இல்லைனு சொல்லும் ஊடகங்களும், அரசியல்வாதிகளும் சுதந்திரம் இல்லாதப்போவே இத்தனை பேசினால் சுதந்திரம் கொடுத்துட்டா இன்னும் என்னென்ன பேசுவாங்களோ!

அது மட்டுமா? விசாகப்பட்டினத்தில் பசிக்கொடுமையுடன் சாலையில் மயங்கிக் கிடந்த பெண்ணிடம் பட்டப்பகலில் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பலாத்காரம் செய்திருக்கிறான் ஒரு கயவன்! அதைப் படம் எடுத்துத் தள்ளி இருக்கிறார்கள் நம் மக்கள்! யாரும் அதைத் தடுக்கவில்லை. அந்தக் கயவனைப் பிடிக்கவும் முடியவில்லை. அவன் போயே போய்விட்டான்! அந்தப் பெண் இப்போ மருத்துவமனையில்! என்னவோ படிக்கும் செய்திகளும் சரி, பார்க்கும் செய்திகளும் சரி! மனதைக் கலங்க அடிக்கின்றன!


முத்ரா கடன் பெற இங்கே சென்று பார்க்கவும். இந்த முத்ரா திட்டத்தின் மூலம் கடன் வசதியைப் பின் தங்கிய மாநிலங்களான உத்திரப் பிரதேசம், பிஹார், ஒரிசா ஆகிய மாநிலங்களின் மக்கள் பெற்றிருக்கிறார்கள். இந்த அருமையான திட்டத்தைத் தமிழகத்தில் ஏன் அறிமுகம் செய்யவே இல்லை?  வெறும் இட ஒதுக்கீடு மட்டும் போதுமா?  இம்மாதிரியான வசதிகளை மத்திய அரசு செய்து கொடுப்பதும் அவர்களைப் போய்ச் சேர வேண்டாமா? 

Saturday, October 21, 2017

அதிராவின் சிந்தனையும் என் பதிலும்!

//எதுவும் சரியாப் புரியல்ல ... கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் எனத்தான் படிச்சோம்.. //

//அதனால கோயிலுக்குள் போய் விக்கிரங்களுக்கு அருகில் நின்று சேவை செய்தால் மட்டுமே கடவுளை நெருங்கலாம் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை...//

//அன்பு, கருணை... அடுத்தவர்கள் மேல் காட்டும் பாசம், நன்னடத்தை, அடுத்தவர் மனம் புண்படாமல் பேசுவது, மனச்சாட்சிக்குப் பயந்து வாழ்வது, முடிந்தவரை நல்ல விசயங்கள் செய்வது, பிறரைத் தூற்றாமை.... இப்படிச் செயல்கள் மூலம்தான் கடவுளை நெருங்க முடியும் அல்லது இப்படி இருப்போர் கடவுளாகத் தெரிவார்கள் என்பதே என் கருத்து.//

இங்கே

மேலே உள்ளவை தில்லையகத்து துளசிதரனின் பதிவில் அதிரா போட்டிருக்கும் கருத்து.  உயர்ந்த கருத்து என்றாலும் அதன் சாராம்சம் கடவுளை நெருங்குவதற்காகவே கோயில்களில் சேவை என்னும் பொருளில் வருகிறது. அப்படி இல்லை. அவங்க கடவுளைக் கண்டு கொண்டதாலேயே கோயில்களில் உள்ள விக்ரஹங்களை மனப்பூர்வமாகக் கடவுளின் உருவாக ஏற்றுக்கொண்டு அபிஷேஹ ஆராதனைகள், அலங்காரங்கள் செய்து அவர்களும் ஆனந்தம் அடைந்து நம்மையும் மகிழச் செய்கின்றனர். ஆனால் அதிரா அவர்கள் தன்னுள் "கடவுள்" இருப்பதைப் புரிந்து வைத்திருக்கிறார். அதனாலேயே அவருக்குக் கோயில் கட்டி விக்ரஹம் பிரதிஷ்டை செய்து அதை வழிபட ஒரு பூசாரி அல்லது அர்ச்சகர் ஏற்பாடு செய்வது குறித்துப் புரியவில்லை.

ஆனால் அவங்க சொல்வது மிகப் பெரிய விஷயம். அவரால் ஆழமாகச் சிந்திக்க முடிகிறது! எல்லோராலும் இயலுமா? சாமானியரால் புரிஞ்சுக்க முடியாத, ஏற்க முடியாத ஒரு விஷயம். கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்! உண்மை தான்! என்னைப் போன்ற பாமரர்கள்  அந்தத் தூணையும்   கடவுளாக நினைத்துக் கும்பிட ஆரம்பித்தால்? அதை விடுங்க! உண்மையில் கோயிலுக்குள்ளே போய் விக்ரஹங்களை ஆராதித்துச் சேவை செய்பவர் கடவுளை நெருங்கலாம் என்னும் காரணத்துக்காகவா போகிறார்? கடவுள் தான் நம்முள்ளே இருக்காரே! அப்புறமா எதுக்குப் போகணும்? ஏன் ஆராதிக்கணும்? கடவுள் தனி, நாம் தனி என நினைப்பவரா அவரும்? அப்படி எனில் அவரும் நம்மைப் போன்ற பாமரர் தானா?

கடவுளை நெருங்குவதற்காக அவர் வழிபாடுகள் செய்யப் போவதெனில் ஒவ்வொரு பக்தனும் கர்பகிரஹத்தின் உள்ளே போய் அல்லவா வழிபட்டு வரவேண்டும்? அப்படியா செய்கிறோம்? இல்லை! நாம் வெளியே நிற்கிறோம். கடவுளின் அருகே அல்லது விக்ரஹங்களின் அருகே செல்வது வேறு ஒருவர்! அவர் மட்டும் ஏன் போகணும்? அதான் அதிராவின் கேள்விக்குப் பொருள் என நினைக்கிறேன். அவர் தான் மட்டும் அருகே போய் வழிபாடு செய்து கடவுளின் அருகே போய்விட்டார் எனில் எல்லோருமே அதுக்குத் தான் முயல்வார்கள்.

அப்படி எல்லாம் இல்லை. கடவுள் தூணிலும் இருக்கிறான். துரும்பிலும் இருக்கிறான். உங்களுள்ளும், என்னுள்ளும் இன்னும் எல்லோருள்ளும் இருக்கிறான். கடவுள் நம்முள்ளே இருக்கிறான் என்பதை நம்மால் உணர முடியுமா? சரி, நமக்கு அது தெரியுது! ஆனால் பாமரர்களுக்கு? அவங்க புரிஞ்சுப்பாங்களா? கடவுளுக்கு என ஓர் உருவம் கொடுத்து, சிற்பமாகச் செய்து பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் செய்தால் தான் அவங்களுக்குத் திருப்தி!   இன்னும் சிவவாக்கியர் சொன்னாப்போல

நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே;
சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா!
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ!
நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்..!

என்பது போல அதைக் கல் என நினைத்தால் கல் தான்; விக்ரஹம் கடவுள் என நினைத்தால் கடவுள். சிவவாக்கியரைப் போல் நாம் நம்முள்ளே நாதனைக் காண்கிறோமா? நமக்கு என ஒரு வெளிப்பாடு தேவைப்படுகிறது. ஒரு சார்புத் தன்மை தேவை! இது தான் நம் தெய்வம் என ஏதேனும் ஒன்றை பற்றிக்கொள்ள மனம் தேடுகிறது. பற்றுக்கோட்டைத் தேடி அலையும் இப்படியான பாமரர்களுக்குத் தான் கோயில், விக்ரஹங்கள் எல்லாம். அங்கே அந்த விக்ரஹங்களுக்கு உயிர் கொடுத்து, அலங்காரம் செய்வித்து, புனிதத்தன்மையைக் கொண்டு வந்து நமக்காகப் பிரார்த்தனைகள் செய்வதற்காகவும், நம்முடைய நன்மைகளைக் கருதி வேண்டிக் கொள்வதற்காகவும் தான் அங்கே அர்ச்சகர். அவர் தனக்காக எதுவும் செய்வதில்லை! தனக்காக எதுவும் பிரார்த்தித்துக் கொள்ளுவதில்லை! நம் போன்ற மூட பக்தர்களுக்காகவே அங்கே சேவை செய்ய வேண்டிக்காத்திருக்கிறார்.

நமக்குக் கோயிலுக்குச் செல்வதும் அங்கே போய் வேண்டிக் கொள்வதும் அப்போது தான் கடவுள் அருள் புரிவார் என நம்புவதும் தான் வாழ்க்கை! நம்பிக்கை தான் வாழ்க்கை! எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாத அறிய முடியாத மஹாசக்தியை உணரத் தான் முடியும்! அதன் இருப்பை எவ்வகையில் வெளிப்படுத்துவது? அதற்குத் தான் இவ்வகை வழி! இதன் மூலம் ஏதும் அறியாப் பாமரர்களுக்கு ஓர் வடிகால் கிடைக்கிறது. மனதில் நம்பிக்கை பிறக்கிறது. ஆகவே நம்மளவில் இந்தக் கோயில்களுக்கு எல்லாம் செல்வதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் செல்கிறவர்களின் நம்பிக்கையை நாம் தகர்க்க முடியாது!

கோயில்கள் ஒவ்வொன்றும் யோக முறைப்படி கட்டியவை! அந்தக் காலத்துக் கோயில்களைச் சொல்கிறேன். நம் உடம்பையே ஓர் கோயிலாகச் சொல்லுவார்கள்.
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற்பிரானுக்கு வாய் கோபுர வாயில்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளாமணி விளக்கே!" என்பது திருமூலர் வாக்கு! அதோடு இல்லை. இன்னும் சொல்கிறார்.

"உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை நான் இருந்து ஓம்புகின்றேன்!" என்கிறார். நம் உடலே ஓர் கோயில் என்றும் சொல்கிறார். ஆகையால் உடம்பைப் பேண வேண்டிய அவசியத்தையும் கூறுகின்றார்.

உடம்பே ஆலயம் க்கான பட முடிவு
ஆகவே கோயில்கள் எல்லாம் வெறும் கட்டடங்கள் அல்ல. நாம் நம்முள்ளே காண வேண்டிய இறைவனைக் கோயிலில் முதலில் காண்பது தான் நம்முடைய ஞானம் ஆரம்பிக்கிறது என்பதன் அடிப்படை! இதிலிருந்து தான் படிப்படியாக நாம் நம்முள்ளே இருக்கும் சீவன் தான் சிவன் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அங்கே வழிபாடு நடத்துகிறவர்களும் இதைப் புரிந்து கொண்டு தான் செயலாற்ற வேண்டும். இந்தக் காலத்தில் இது எத்தனை பேரால் முடிகிறது என்பது கேள்விக்குறியே!  கோயில்களும் தேவை! அதில் வழிபாடுகள் நடத்த ஆட்களும் தேவை! ஆனால் அவர்கள் உண்மையாக இறை பக்தியுடன் சித்தத்தைச் சிவத்திலே ஒடுக்கி வழிபாடுகள் செய்பவராக இருக்க வேண்டும்.

இப்போக் கேரளத்திலே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அர்ச்சகர்களிலே ஒருவரான யது கிருஷ்ணன் என்பவர் தன் எட்டாம் வயதிலிருந்தே இறை பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். அவர் சம்ஸ்கிருதத்தில் முதுகலைப்படிப்புப் படித்ததோடு அநிருத தந்திரி என்பவரிடம் வேதம் பயின்றிருக்கிறார். இவர் கல்லூரிப்படிப்பையும் முடித்து மத்திய அரசின் சிவில் சர்வீஸ் தேர்விலும் தேர்வாகி இருந்திருக்கிறார். எனினும் பெற்றோரும் இவரும் இந்த அர்ச்சகர் வேலையையே தேர்ந்தெடுத்திருக்கின்றனர். குருநாதர் மூலம் பெற்ற மந்திர உபதேசத்தை 50 லட்சம் முறை உச்சரித்து குருவின் கட்டளையை நிறைவேற்றி இருக்கிறார்.

இங்கே தமிழ்நாட்டில் எல்லா ஜாதியும் அர்ச்சகர் ஆகணும்னு சொல்றாங்க தான். ஆனால் சம்ஸ்கிருதம் கூடாது, ஹிந்தி கூடாது என்கிறார்கள். வேதப்படிப்பையும் கேலி செய்கின்றனர்.ஆகமம் கற்க சம்ஸ்கிருத அறிவு கொஞ்சமானும் தேவை. என்ன தான் மொழிபெயர்ப்புக்களில் கிடைத்தாலும் மூலத்தில் படிப்பது போல் வராது. ஆனால் இங்கே அது கூடாது என்கின்றனர். ஒரு பக்கம் சம்ஸ்கிருதப் படிப்பை பிராமணர்கள் மற்றவர்களுக்கு அளிக்க மறுத்தார்கள் என்று சொல்கின்றனர். இன்னொரு பக்கம் சம்ஸ்கிருதம் படிக்க மறுப்பவர்கள். சமஸ்கிருதம் என்னும் மொழிப்பாடமே தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது என்று எதிர்ப்போர்! ஆக எல்லா ஜாதியினரும் அர்ச்சகர் ஆவது என்பது எப்படி எனப் புரியவில்லை. ஆகம முறைப்படியான கோயில்களில் அந்த அந்த ஆகமப்படியே வழிபாடுகள் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான உச்ச நீதிமன்ற ஆணை உள்ளது. இவை எல்லாவற்றையும் தாண்டி இதெல்லாம் நடக்க வேண்டும். நடைமுறைக்கு சாத்தியமா என்பது புரியவில்லை.    இவை எல்லாம் தமிழ்நாட்டில் நடப்பதற்கான சாத்தியங்களே கண்களில் படவில்லை! அப்படி நடந்தால் அனைவருக்கும் நல்லதே! யாரும் எதிர்க்கப் போவதில்லை. நல்லதே நடக்கும் என எதிர்பார்ப்போம். எல்லோருடைய மனங்களும் மாறப் பிரார்த்திப்போம். யதுகிருஷ்ணனைப் போன்ற இளைஞர்கள் இங்கே தமிழ்நாட்டில் மட்டும் இருக்க மாட்டார்களா என்ன? நம்பிக்கையுடன் தேடுவோம்.

அடுத்து அதிரா கடைசிப் பத்தியில் சொல்லி இருக்கிறாப்போல் அன்பு, பண்பு, கனிவான பேச்சு, நன்னடத்தை, ஒழுக்கம், பிறர் மனம் புண்படாமல் பேசுவது எல்லாமும் வேண்டும் தான்! அதிலும் அர்ச்சகர்களுக்குக் கட்டாயம் தேவைதான்! ஆனால் எல்லோரிடமும் இந்தக் குணங்கள் இருப்பது என்பது சாத்தியம் அல்ல என்றே நினைக்கிறேன்.  அர்ச்சகர்கள் பொதுவாகக் கோபம் கொள்வதில்லை என்பதைப் பார்த்திருந்தாலும் சிலர் கொஞ்சம் இல்லை நிறையவே கோபக் காரர்களாக இருக்கின்றனர். அப்படியும் பார்க்கத் தான் செய்கிறோம். ஆனால் கோயிலில் வழிபாடுகள் செய்கிறவர்கள் அனைவருமே கெட்டவர்கள் என்னும் எண்ணமும் கொள்ளக் கூடாது! எல்லோரிடமும் இரண்டும் கலந்தே இருக்கும்.   எல்லாவற்றுக்குமே இரண்டு பக்கம் உள்ளது. 

Wednesday, October 18, 2017

ஆனையுடன் தீபாவளி கொண்டாடுங்க!


நேற்றைய தினம் துலா மாதப் பிறப்பு. இந்தத் துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் ஸ்நானம் செய்வது சிறப்பாகச் சொல்லப் படுகிறது. காவிரி பற்றிய புராணம் "துலா புராணம்" என்றே அழைக்கப்படுகிறது. இங்கே ஶ்ரீரங்கம் கோயிலில் நம்பெருமாளுக்கு (சின்ன ரங்கு) தினம் தங்கக்குடத்தில் காவிரி நீர் எடுத்துச் செல்லப்பட்டு திருமஞ்சனம் நடைபெறும்.  கடந்த ஐந்து வருஷங்களாக இதைப் பார்த்து வருகிறோம். இந்த வருஷமும் அதே போல் ஆண்டாளம்மா காவிரி நீர் எடுத்துச் செல்லும் காட்சியைக் காணலாம்.  சரியா அம்மாமண்டபத்திலிருந்து ஆனையார் தெருவில் ஏறும் நேரம் தெருவிளக்கை எல்லாம் அணைச்சுட்டாங்க. அதனால் தூரத்தில் வருவதை எடுத்திருப்பது சரியாத் தெரியலை.



இது எங்க குடியிருப்பு வளாக வாசலில்!




 ஆனையார் செல்லும் காட்சி. இந்த வருஷம் ஆனையை வரவழைத்து அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துச் சொல்லியாச்சு. ஶ்ரீரங்கநாதரும் தீபாவளி கொண்டாடப் போகிறார்.  இணையத்து நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த தீபாவளித் திருநாளில் அனைவர் வாழ்க்கையிலும் அமைதியும் மகிழ்ச்சியும் ஓங்கட்டும்.

Monday, October 16, 2017

ஶ்ரீராம்+நெ.த.வுக்குப் போட்டி!

இந்தப் புதிர் விளையாட்டுப்பெரும்பாலோருக்குப் பிடிக்கிறது எனத் தோன்றுகிறது. இதை இன்னும் கொஞ்சம் பிரபல எழுத்தாளர்களின் எழுத்தைக் கொடுத்துத் தெரிகிறதா என்று பார்க்கலாம். மிகிமா "தேவன்" அவர்களின் "கோமதியின் காதலன்" நாவலைத் தேடிப் பிடித்து வாசித்த மாதிரி பலருக்கும் இதன் மூலம் வாசிக்கும் பழக்கம் வரலாம். ஆகவே கொஞ்ச நாட்கள் தொடரலாமா? அந்தக் கால கட்டத்து நாகரிகம், பேச்சு, வார்த்தை, சுற்றுவட்டாரங்களின் சூழல், சமூகச் சூழல்னு எல்லாமும் தெரிந்து கொள்ள இயலும்.  அப்போதைக்கு இப்போது நாம் எவ்வளவு மாறி இருக்கோம், எந்த விதத்தில் மாறி இருக்கோம்னு எல்லாம் புரியும்.  நம் தமிழ் பேசும் பாங்கே மாறி இருப்பதைப் புரிஞ்சுக்கலாம். சங்கத்தமிழ், பக்தி இலக்கிய காலத் தமிழ், பின்னால் சோழர் காலத் தமிழ், பிற்காலத் தமிழ், நாயக்கர் காலத் தமிழ், பின்னர் ஆங்கிலேய ஆட்சி காலத் தமிழ் எனத் தமிழ் மாறி வந்ததும் அறிய முடியும். வை.மு.கோ. காலத்தில் இருந்து எடுத்துப் போடணும்னு ஆசை தான்! ஆனால் எல்லோரும் படிச்சிருக்கணுமே! :)

ம்ம்ம்ம் எல்லோரும் தீபாவளி பக்ஷணம், பட்டாசு, துணிமணிகள் வாங்குவது என மும்முரமா இருப்பீங்க. நம்ம வீட்டிலே இந்த வருஷம் தீபாவளி இல்லை. அதுக்குனு இனிப்புச் செய்யாமல் இருப்போமா என்ன? இன்றைய விசேஷத்துக்காக நேத்திக்கு ஓர் இனிப்புச் செய்தேன். அது தென் மாவட்டங்களிலேயே குறிப்பாத் திருநெல்வேலிப் பக்கம் அதிகம் செய்வாங்க. அதுவும் தலை தீபாவளிக்கு மாப்பிள்ளை வந்தால் இது நிச்சயம் இருக்கும். அப்புறம் அல்வா, தவலை வடை! இப்போ இந்த ஸ்வீட் எப்படிச் செய்யறதுனு பார்ப்போமா? இதை முதல் முதலாச் செய்யறேன் என்பதால் சோதனை எலியாக யார் மாட்டிப்பாங்கனு கவலையா இருந்தது. அப்புறமா இன்றைய விசேஷத்துக்கு என வைச்சுட்டதாலே இன்னிக்குச் சாப்பிட வரவங்க சாப்பிட்டுப் பார்க்கட்டும்னு நாங்க தப்பிச்சுட்டோம். சேச்சே, நாங்க அப்புறமாச் சாப்பிடலாம்னு இருந்துட்டோம். நம்ம ரங்க்ஸுக்குத் தான் இதிலே ஏக சந்தோஷம்! அவர் இம்முறை சோதனை எலியாக இருப்பதிலிருந்து தப்பிச்சுட்டாரே!

இதோட பெயர் திரிபாகம். இதைப் பத்திக் கேள்விப் பட்டிருந்தாலும் செய்முறை எல்லாம் தெரியாது. இப்போத் தான் முகநூலில் ஒருவர் பகிர்ந்திருந்ததைப் பார்த்துட்டு நானும் கூகிளார் தயவில் தேடிப் பார்த்துத் தெரிந்து கொண்டேன். தேவையான பொருட்கள்.

கடலை மாவு இரண்டு கிண்ணம்

பால் நல்ல கொழுப்புச் சத்து உள்ள பாலாக அரை லிட்டர்

சர்க்கரை இரண்டு அல்லது மூன்று கிண்ணம்

நெய் ஒரு கிண்ணம்

ஏலக்காய், பச்சைக் கற்பூரம் பொடித்தது ஒரு டீஸ்பூன்

பாதாம், முந்திரிப் பருப்புப் பொடித்தது இரண்டு டேபிள் ஸ்பூன். பாதாமை நீரில் ஊற வைத்துத் தோலுரித்துக் கொள்ளவும். 50 கிராம் பாதாம் எனில் 50 கிராம் முந்திரிப்பருப்பு, இரண்டையும் மிக்சி ஜாரில் போட்டு நறநறவெனப்பொடிக்கவும்.

 தட்டில் கடலை மாவு, ஏலக்காய்த் தூள் (சுமார் 30,40 ஏலக்காய்களை அல்லது பத்து கிராம் ஏலக்காய்களைத் தோலுரித்துக் கொண்டு இரண்டு டீஸ்பூன் சர்க்கரையோடு சேர்த்துப் பொடித்து வைத்துவிடுவேன். தேவையானப்போ உபயோகிக்கலாம். குட்டி டப்பாவில் பச்சைக் கற்பூரம்.


மற்றத் தேவையான பொருட்கள், முன்னால் இருப்பது அரை லிட்டர் பால், பக்கத்தில் நெய், பின்னால் கவரில் சர்க்கரை, பக்கத்தில் முந்திரி, பாதாம் பொடித்தது!


அடுப்பில் கடாயை வைத்துக் கடலைமாவை அதில் போட்டு நன்றாக மணம் வரும் வரை வறுக்கவும். பின்னர் அரை லிட்டர் பாலை அதில் சேர்க்கவும்.



பால் சேர்த்துக்கிளறும்போது மேலே காணும்படி பேஸ்ட் மாதிரி வரணும். நன்கு கிளறிக் கொடுக்கவும். கட்டி தட்டக் கூடாது! பின்னர் சர்க்கரை இரண்டு அல்லது மூன்று கிண்ணம் அவரவர் இனிப்புச் சுவைக்கு ஏற்றாற்போல் சேர்க்கவும். சர்க்கரை சேர்த்ததும் கலவை நீர் விட்டுக் கொண்டு கீழ்க்கண்டபடி வரும்.



இப்போது இதில் நெய் சேர்த்துக் கிளறிக் கொண்டே இருக்கவும். கட்டிகள் இருந்தால் உடைத்து விடவும். கிளறிக் கொண்டே இருக்கையில் உள்ளே நாலாபக்கமும் நிறம் மாறிப் பொன் நிறத்தில் பூத்துக் கொண்டு பொங்கி வர ஆரம்பிக்கும். அந்த நிலையில் படம் எடுக்க முடியவில்லை. ஏனெனில் படம் எடுத்தால் கிளற முடியாது! ஒரு கையால் கிளறிக் கொண்டே படம் எடுப்பது சிரமம். ஆகவே அந்தச் சமயம் பொடித்து வைத்திருக்கும் முந்திரி, பாதாம் கலவையைக் கொட்டிக் கிளறிவிட்டு ஏலக்காய், பச்சைக் கற்பூரம் சேர்த்து ஒரு கிளறு கிளறிக் கீழே இறக்கித் தாம்பாளத்தில் கொட்டி விட்டேன். இது பாதாம் அல்வா பதத்துக்கு அல்லது திரட்டுப் பால் பதத்துக்கு இருக்க வேண்டும். முந்திரி, பாதாமைச் சேர்த்த பின்னர் அதிகம் கிளற வேண்டாம் என்கின்றனர். ஆகவே இது நன்கு ஆறியதும் பட்டர் பேப்பர் என்னும் வெண்ணெய் பேப்பரில் உருட்டி வைத்துத் தட்டையாக ஆக்கி நாலாபக்கமும் மூட வேண்டும். விநியோகம் மற்றவர்களுக்குக் கொடுக்க எல்லாவற்றுக்கும் அப்படித் தான் வைச்சுப்பாங்க! கீழே அடுப்பிலிருந்து எடுத்துக் கொட்டியதன் படம்.

இது தான் திரிபாகம் என்பது! இது கடலைமாவு சேர்ப்பதால் மைசூர்ப்பாகு மாதிரியும், பால் சேர்ப்பதால் திரட்டுப் பால் மாதிரியும், முந்திரி, பாதாம் சேர்ப்பதால் காஜு கத்லி மாதிரியும் இருப்பதால் இதுக்கு அந்தப் பெயர்னு நினைக்கிறேன். இந்த வருஷ தீபாவளி சிறப்புப் பலகாரம் இதான்!

இன்னிக்கு வர முடியாதுனு நினைச்சேன். வந்துட்டேன். சுடச் சுடப் பதிவும் போட்டுட்டேன். எங்கள் ப்ளாக் "திங்க"ற கிழமைக்குத் தான் அனுப்ப இருந்தேன். ஆனால் இப்போ தீபாவளி என்பதாலும் நாளைக்கே இதைச் செய்து பார்க்கலாம் என்பதாலும் என்னோட வலைப்பக்கமே போட்டுட்டேன். நாளைக்கு எப்படி வர முடியும்னு சொல்ல முடியாது! இதுக்குக் கருத்தெல்லாம் சொல்லி வைங்க! மெதுவா வந்து பார்க்கிறேன். :) அநேகமா இதுக்குக் கூட்டம் கூடும்!

ஶ்ரீராம்+நெ.த.வுக்குப் போட்டி! புதிர் வருது, வருது, வந்துட்டே இருக்கு!

Saturday, October 14, 2017

யார் யார் யார் இவர் யாரோ? ஊர், பேர் தான் தெரியாதோ! 2

"சரி, சந்தேகப்படல்லே. கோயில்லே அப்போ என் பிரெண்டு யாரோ இருந்தான்னு அளகேசன் சொன்னாராமே? அவன் யாருன்னாவது சொல்லு!"

வசு அழ ஆரம்பித்தாள். முந்தானையைப் பந்தாய் வாயில் அடைத்தபடி கீழே ஓடினாள். அறைக்கதவை மூடிக் கொண்டு படுக்கையில் விழுந்தாள்.//

மேலே உள்ளவை நமக்கெல்லாம் மிகத் தெரிந்த ஒருவரின் கதையில் வருபவை. இவற்றிற்குப் பலரும் விமரிசனங்கள் எழுதி உள்ளனர். யார், யார்னு எல்லாம் சொன்னால் எழுத்தாளர் யாருனு புரிஞ்சுடுமே! அதனால் சொல்ல மாட்டேனே! இப்போ நீங்க செய்ய வேண்டியது என்னன்னா எழுத்தாளர் யாருனு மட்டும் சொன்னாப் போதாதாக்கும்! இந்தக் கதையோட பெயரையும் சொல்லணுமாக்கும்! ஹிஹிஹி, இந்த உரையாடல் வரும் சம்பவம் பத்தியும் சொன்னால் இன்னும் சிலாக்கியம்.

அடுத்து இன்னொண்ணு! அநேகமா நெ.த. சரியாச் சொல்லிடுவார்னு நினைக்கிறேன். அவர் பிசியா இல்லைனா உடனே பதில் வரும்னு எதிர்பார்க்கிறேன். அவருக்கு மிகவும் தெரிந்த எழுத்தாளரோடது தான் அடுத்து வருவதும்! அந்தப் புத்தகம் பெயர், எழுத்தாளர் பெயர், மற்றும் கொடுக்கப்பட்டுள்ள கட்டுரை/கதையின் தலைப்பு எல்லாமும் சொல்லணும். அப்போத் தான் பாஸ்! இல்லைனா ஃபெயில்! :)

"நான் செங்கல்பட்டு வாசி. சென்னைக்குப் போய்வர இரண்டு ரூபாயாவது தேவைப்படும். என் ஆர்வத்திற்குத் தடை போட விரும்பாத என் அப்பா இரண்டு ரூபாய் கொடுத்தார். இது சற்றுப் பெரிய தொகைதான். வேறு ஏதோ செலவைக் குறைத்துக் கொண்டு தான் அப்பா கொடுத்திருக்கிறார்.

மேரிஸ் ஹாலில் கூட்டம் நிரம்பி வழிந்தது.கடைசி வரிசையில் நிற்கத்தான் இடம் கிடைத்தது. மீட்டிங் முடிந்து வெளியே வந்த தேவனைமிக அருகில்சில நிமிடங்கள் பார்த்துப் பரவசம் அடைந்தேன். மாரிஸ் மைனர் காரில் விகடன் எழுத்தாளர் கோபுவைத் தன்னுடன் ஏற்றிக் கொண்டு புறப்பட்டுச் சென்றார். //


இதை எழுதினவங்க இரண்டு பேரும் வலை உலகில் தீவிரமான ஈடுபாட்டுடன் இருப்பதால் அவங்க இந்தப் பதிவைப் பார்த்தாலும் பதில் சொல்லக் கூடாது எனத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. நன்றி. நன்றியோ நன்றி 

Thursday, October 12, 2017

யார், யார், யாரவர் யாரோ! ஊர் பேர் தான் தெரியாதோ!

ஏற்கெனவே ரெண்டு, மூணு ட்ராஃப்ட் மோடிலே இருக்கு! அதை எல்லாம் விட்டுட்டு இன்னிக்கு ஒரு மாறுதலுக்காக ஶ்ரீராமோடயும், நெ.த.வோடயும் போட்டி போடலாம்னு! அவங்க தான் படிச்சதைக் குறித்து இங்கே எடுத்துப் போட்டு யார் எழுதினதுனு கேட்கறாங்க! அப்படி ஒரு கேள்வியை நானும் இப்போக் கேட்கப் போறேனே!  கீழே நான் படிச்ச ஒரு நாவலில் இருந்து சில பகுதிகள்:

"சௌகரியமாகத் தான் இருக்கும், அதற்காக என்ன?"

"நீ போய் அதைக் கொண்டு வந்துவிட வேண்டியது! அதற்காகத் தான் உன்னைக் கூப்பிட்டேன்!"

"நானா? நான் எதற்கு? நீங்களே பொன்னாயியைக் கேட்டால் தானே கொடுத்து விடுகிறாள்! உங்கமேல் தான் அவள் காதல் கொண்டு விட்டாளே!"

"கொடுக்க மாட்டாள், எனக்குக் கொடுக்கவே மாட்டாள். அதனால் தான் உன்னைக் கொண்டுவரச் சொன்னது! ஹே!"

"நான் கேட்டால் மட்டும் எப்படிக் கொடுப்பாள்?"

"உன்னை யார் அப்பா அவளைப் போய்க் கேட்கச் சொன்னது? ஹே! மெள்ள எடுத்துக் கொண்டு வந்துவிடு! அவ்வளவு தான்!"

"திருடிக் கொண்டா? என்னிடம் மட்டும் அந்தப் பேச்சு.........."

"ஏன் கூச்சல் போடறே? இதுக்கு முந்தி இந்தமாதிரி வேலைகள் நீ செய்திருக்கிறதனாலேதான் உன்னண்டை அதைச் சொன்னேன்!"

"யாரைப் பார்த்து நீங்கள்......." என்று ஆத்திரமாக ரங்கராஜன் எழுந்தான்.

"உட்கார், அப்பா! உட்கார்! யாரை என்ன சொல்லிவிட்டேன்? போட்டோ என் சொத்து! அதைக் கொண்டுவர்ச் சொல்கிறேன். அதை என்னிடம் கொடுப்பதால் திருடுவதே ஆகாது! இஷ்டமானால் செய்! வேலையிலும் இரு! இல்லையானால் போய்விடு!"

"என்ன சொல்கிறீர்கள்?"


மேலே உள்ள பகுதி யாரால் எழுதப் பட்டது என்பதையும் நாவலின் பெயரையும் சொல்லணும். இது சினிமாவாய்க் கூட வந்தது. சின்ன க்ளூ டி.ஆர் ராமச்சந்திரன் இதில் ஹீரோ!

தவறுதலாய் டி.ஆர். மஹாலிங்கம் எனச் சொல்லிட்டேன். மிகவும் மன்னிக்கவும். :( தவறான க்ளூவைக் கொடுத்திருக்கேன். :(

Saturday, October 07, 2017

திரு தமிழ் இளங்கோவுக்கு என்னுடைய பதில்!

இங்கே  தமிழ் இளங்கோ அவர்களின் பதிவுக்கான சுட்டி!

திரு தமிழ் இளங்கோ அவர்கள் பதிவில் அவர் சொல்லி இருந்தவற்றுக்கு என்னுடைய கருத்து! இவற்றை அங்கே சொல்லி இருக்கேன் என்றாலும் திரு ஜோதிஜி பதிவு மாதிரி இருக்கிறது என்று சொல்லவே பதிவாகவே போடலாம் என்னும் எண்ணத்திலும் அவர் பதிவைப் படிக்காதவர்களும் இருப்பார்களே அவங்களும் தெரிஞ்சுக்கலாம் என்பதாலும் இங்கே கொடுக்கிறேன்.  ஆகமங்கள் குறித்து நான் தேடித் தெரிந்து கொண்டவை பற்றி என்னுடைய "சிதம்பர ரகசியம்" நூலில் குறிப்பிட்டிருக்கிறேன். அது பற்றிய சுட்டிகள் கீழே!

இங்கே

இங்கே

இங்கே

இங்கே
ஆகமம் கற்காமல் யாரும் அர்ச்சகர் ஆக முடியாது. மேலும் கோயில்களில் வழிபாடு செய்யும் சிவாசாரியார்களுக்கும் எங்களைப் போன்ற சாதாரண பிராமணர்களுக்கும் பெரும் வேறுபாடுகள் உண்டு. சிவாசாரியார்கள் வேதம் மட்டும் கற்காமல் ஆகமம், கோயில் வழிபாட்டு முறைகள் போன்றவற்றோடு சிவ தீக்ஷையும் பெற்றிருப்பார்கள். அத்தகையோரே பெரிய கோயில்களில் கருவறைக்குச் சென்று வழிபாடுகள் நடத்த முடியும். மற்றவர்கள் அவருக்குத் துணையாக உதவிகள் செய்யலாம். இந்தப் படிப்பும் சுமார் பனிரண்டு வருடங்கள் படித்தாக வேண்டும். அப்படிப் படித்துக் கோயிலில் உள்ளே சென்று வழிபாடு செய்யும் தகுதி படைத்த நாடார் குல இளைஞர் ஒருவர்தென் மாவட்டத்தில் இருக்கிறார்.

பெரும்பாலும் சரியான புரிதல் இல்லாமலேயே உங்கள் பதிவு எழுதப் பட்டிருக்கிறதோ என எண்ணுகிறேன். இப்படிச் சொல்வதற்கு என்னை மன்னிக்கவும். வேறு யார் எழுதி இருந்தாலும் இப்படிச் சொல்லி இருப்பேனா என்பது சந்தேகம். இங்கே சொல்லலாம் என்று தோன்றியதாலேயே சொல்லி இருக்கேன்.

கட்டண தரிசனங்கள் கோயில்களில் எந்த அர்ச்சரகராலும் ஏற்படுத்தப்படவில்லை. அது அறநிலையத் துறை அதிகாரிகளால் செயல்படுத்தப்படுகிறது, பெரும்பாலான மக்கள் அதை எதிர்க்கிறார்கள். தென் மாவட்டங்களான நாகர்கோயில், சுசீந்திரம், கன்யாகுமரி, திருவட்டாறு ஆகிய இடங்களில் இந்தச் சிறப்பு தரிசனம் என்பது இல்லை. மக்கள் சாதாரணமாகச் சென்று போய்ப் பார்த்து வரலாம். கூட்டம் நிறைந்திருந்தாலும் மக்கள் தரிசனத்துக்கு இடையூறாகவோ தடங்கலாகவோ இல்லை. மாலை வேளையில் கன்யாகுமரியின் தரிசனம் செய்தோம். இரவு ஏழு மணிக்கு சுசீந்திரத்தில்! எல்லாம் நன்றாகவே பார்க்க முடிந்தது.

வைணவர்களிலும் மாற்று இனத்தைச் சேர்ந்த அந்தணரல்லாத ஒருவர் வைணவ ஆசாரியர்களில் ஒருவரான பட்டராக ஆகி உள்ளார். இது அவரவர் விருப்பம், படிப்பைத் தேர்ந்தெடுக்கும் முறை ஆகியவற்றைப் பொறுத்தது. வைணவ ஆகமங்களில் வைகானசம், பாஞ்சராத்ரம், முனித்ரயம் எனப் பிரிவுகள் உள்ளன. வைகானசம், பாஞ்சராத்ரம் குறித்து விளக்கங்களை என்னுடைய சிதம்பர ரகசியம் நூலில் நானும் கேட்டறிந்து விளக்கம் கொடுத்திருக்கிறேன். ஆகமவிதிகளைக் கற்றுக் கொடுக்கவெனச் சென்னையிலும் ஓர் பள்ளி உள்ளதாக அறிகிறேன். பெரும்பாலான சிவாசாரியார்கள் இங்கே திருச்சியில் உள்ள ஓர் பள்ளியிலேயே கற்கின்றனர் என்றும் அறிந்தேன். வெறும் வேதம் கற்பதோடு எதுவும் முடிந்து விடாது. எந்த வேதத்திலும் ஆகமங்கள் பற்றிக் குறிப்பிடவும் இல்லை. ஆகமப் படிப்பு தனி! வேதம் படித்தல் தனி! அதர்வ வேதத்தில் ஒரு சில குறிப்பிட்ட யாகங்கள், யக்ஞங்கள், பரிகார பூஜைகள் குறித்தும் சில தேவதைகளின் வழிபாட்டு முறைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆயுர்வேத வைத்திய முறை பெரும்பாலும் அதர்வ வேதம் சார்ந்தவை என்றே சொல்லப்படுகின்றன. சம்ஸ்கிருதப் புலமை இருந்தால் தவிர ஆயுர்வேதம் படிக்கவும் முடியாது!


கோயில் விளக்கு விஷயம். அந்தக் காலங்களில் கோயில்களில் இலுப்பெண்ணெய், ஆமணக்கு எண்ணெய், நல்லெண்ணெய் கலந்தே தீபங்கள், தீவட்டிகள் ஏற்றுவார்கள். கோயில்களுக்கு என உள்ள நிலங்களில் இலுப்பை மரங்கள், ஆமணக்கு மரங்கள்(கொட்டைமுத்துச் செடி என்பார்கள், சின்ன மரமாகக் காணலாம், வேலியோரங்களில் பெரும்பாலும் காணப்படும்.) எள் விதைப்பு போன்றவை நடைபெற்றுப் பெரும்பாலும் அந்த அந்தக் கிராமம் அல்லது கோயிலைச் சேர்ந்த கணக்குப் பிள்ளை, தர்மகர்த்தா ஆகியோர் முன்னிலையில் எண்ணெய்க்குத் தேவையானவை சேகரிக்கப்பட்டு எண்ணெய் எடுக்கப்பட்டுக் கோயில்களில் கொடுக்கப்படும். இப்போதெல்லாம் எல்லாமும் மாறி விட்டன. கோயில் சொத்துக்களைத் தேடிக் கண்டுபிடிக்கவேண்டியதாய் இருக்கிறது.

அப்புறமா இந்த கே.கே.பிள்ளை சொல்லி இருப்பது குறித்து!

ஹூம், எந்த அரசன் வடக்கே இருந்து பிராமணர்களை வரவழைத்தான் என்பதற்கு ஆதாரங்களைக் காட்டச் சொல்லுங்கள் அவரை!

அவருக்குப் "பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி" பற்றித் தெரியுமா? அறிந்திருக்கிறாரா? ஆயிரக்கணக்கான யாகங்களைச் செய்தவன் என்பார்கள். க்டைச்சங்க காலத்துக்கும் முந்தினவனாகக் கருதபப்டுகிறவன். "சின்னமனூர்ச் செப்பேடு" இவனைக் குறித்துக் குறிப்பிடுகிறது. இவன் தான் கடல் வடிவலம்ப நின்ற பாண்டியனாக இருக்குமோ என்னும் சந்தேகம் எனக்கு உண்டு. ஆனால் இவன் காலத்தில் தான் கடலை வற்றச் செய்த வேல் எறிந்ததாகவும், பின்னர் பிரளயம் ஏற்பட்டதாகவும் இவன் வாரிசே உயிர் பிழைத்து அடுத்த மனுவாக ஆனதாகவும் சொல்வார்கள். இந்த முதுகுடுமிப் பெருவழுதியைப் பற்றிப் பல புலவர்கள் பாடல்கள் புனைந்திருக்கின்றனர். வேள்விக்குடிச் செப்பேடு,
"கொல்யானை பலஓட்டிக்

கூடாமன்னர் குழாந்தவிர்த்த

பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி"

என்று சொல்கிறது.


இன்னும் மாங்குடி மருதனார், இவனைக் குறித்து, பல்சாலை முதுகுடுமித்

தொல்ஆணை நல்லாசிரியர்

புணர்கூட்டுண்ட புகழ்சால்

சிறப்பின்" என்று மதுரைக் காஞ்சியில் சொல்லி இருக்கிறார்.

https://tinyurl.com/y9hydqhs விக்கியின் இந்தச் சுட்டிக்குச் சென்றால் மேலும் இவனைக் குறித்த தகவல்களை அறியலாம். வடமொழியாகட்டும், தமிழாகட்டும் ஒன்றுக்கொன்று துணையாகவே இருந்து வந்திருக்கின்றன. வடமொழிப் புலவர்கள் வட நாட்டை விடத் தென் தமிழ்நாட்டில் தான் மிகுதி! வடமொழி அறியாமலா கம்பனும், வில்லி புத்துராரும் ராமாயணமும், மஹாபாரதமும் தமிழில் எழுதினார்கள்? ஆகவே தமிழ் பிராமணர்கள், வடக்கே இருந்து வந்தவர்கள் என்றெல்லாம் இல்லை. வடக்கே இருந்தும் வந்திருக்கிறார்கள் பிராமணர்கள் உள்படப் பெருவாரியான மக்கள் என்ற பொதுவான பொருளிலே தான் எடுத்துக் கொள்ளலாம். ஒரு சிலர் குறிப்பிட்ட வழிபாடுகளுக்கென வடக்கே இருந்து வரவழைத்திருக்கலாம். ஏனெனில் அதர்வ வேதம் தெரிந்தவர்கள் மிகவும் குறைவு. சாமவேதிகள் குறைவு. அப்படி நேரும் சந்தர்ப்பத்தில் வரவழைத்திருக்கலாம். காளிதாஸன் இயற்றாத வடமொழி நூல்களா? காளிதாஸன் பிராமணனே அல்ல என்பது எல்லோரும் அறிந்தது தானே!



சிதம்பரத்தில் ஆகம முறைப்படி வழிபாடுகள் நடைபெறவில்லை. வைதிக முறைப்படியே நடைபெறுகின்றன. சிதம்பரம் தீக்ஷிதர்கள் தங்களுக்குள்ளேயே மணவினை கொள்வார்கள், கொடுப்பார்கள். எங்களைப் போன்றவர்கள் அவர்களுடன் திருமண சம்பந்தம் வைத்துக் கொள்ள மாட்டோம். அவர்களும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். அப்படி இல்லாமல் மாற்றுச் சம்பந்தம் வைத்துக் கொண்டால் கோயிலுக்கு அவர்கள் வழிபட வரலாமே தவிர்த்து வழிபாடுகளில் பங்கெடுக்க முடியாது. கோயிலில் இருந்து அவர்கள் பங்கும் அவர்கள் குடும்பத்திற்குப் போய்ச் சேராது. இது அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்கும் பாதிப்பாக இருக்கும். அவர்களுக்குள்ளேயே சம்பந்தம் வைத்துக் கொண்டால் தான் கோயிலில் வழிபாடு செய்ய முடியும். அதற்கும் திருமணம் ஆகி இருக்க வேண்டும். திருமணம் ஆகாத பிரமசாரிகள் சிதம்பரம் கோயிலில் வழிபாடுகள் செய்ய முடியாது. ஆனால் மற்றச் சிவன் கோயில்களில் அப்படி இல்லை. பிரமசாரியான சிவாசாரியார்கள் உண்டு.


ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கு முதலில் என் நன்றி. ஆதங்கம் இருப்பது என்னமோ உண்மை தான்! ஆனால் பிராமணர்களைக் குற்றம் சொல்லுவதால் மட்டும் இல்லை. அதற்கேற்றாற்போல் பெரும்பான்மையானவர்கள் நடந்து கொள்ளுவதாலும் தான். இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புணர்வு வருகிறது. என்றாலும் பிராமணர்கள் தங்கள் நிலையை அவர்களாகவே தாழ்த்திக் கொண்டு விட்டார்கள் என்பதிலும் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது. மாற்றங்கள் பெரும்பாலும் பிராமண சமுதாயத்திலேயே ஏற்பட்டும் வருகிறது என்பதும் உண்மை.

போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும்! அனைத்தும் கண்ணனுக்கே! என்னும் மனப்பாங்கு என்னிடம் இருப்பதால் மனோபலத்தை மட்டும் கடவுளிடம் வேண்டிக் கொண்டு இருக்கிறேன்.

ஜோதிஜி திருப்பூர், நான் "தரம்பால்" அவர்களின் பரம ரசிகை. ஆங்கிலத்தில் "ப்யூட்டிஃபுல் ட்ரீ" என்னும் பெயரிலேயே வந்திருக்கும் புத்தகத்தைத் தரவிறக்கி வைத்துக் கொண்டு அவ்வப்போது படித்து வருவதோடு பலருக்கும் சிபாரிசும் செய்திருக்கிறேன். பெரியவர் ஜிஎம்பி ஐயா அவர்கள் பிராமணர் தவிர மற்றவர்க்குக் கல்வி மறுக்கப்பட்டது என்னும் பொருள்பட ஓர் பதிவு எழுதினபோது அதன் சுட்டியும் கொடுத்துப் படிக்கச் சொன்னேன். திறக்க முடியவில்லை என்று சொல்லி இருந்தார்! திரு மகாதேவன் எழுதியவற்றைப் பற்றிய விமரிசனம் "தமிழ் இந்து" தளத்தில், (ஹிந்தி ஆங்கிலப் பத்திரிகையின் தமிழ் த இந்து இல்லை) படித்திருக்கிறேன். தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வந்திருப்பதைப் படிக்க வேண்டும் என்னும் தணியாத ஆவலும் இருக்கிறது. ஃப்ரெஞ்ச் இந்தியா படித்ததில்லை என்றாலும் அது குறித்துக் கேள்விப் பட்டிருக்கேன்.


பிராகிருத மொழியிலும் கலப்புத் தமிழிலும் பேசி ஆட்சி புரிந்த மகேந்திர பல்லவன் காலத்தில் தமிழ் புத்துணர்ச்சி பெற்று பக்தி இலக்கியம் உருவானது. தமிழுக்கு பக்தி இலக்கியத்தை விட வேறு யாரும் தொண்டு செய்யவில்லை! வடமொழியைப் பேசியதால் நாட்டுக்குடிமக்களைத் தமிழில் பேசக் கூடாது என மகேந்திர பல்லவன் சொல்லியதாகவும் தெரியவில்லை. மன்னன் சைவ சமயம் திரும்பியதும் திருநாவுக்கரசர் அப்போது மாபெரும் சிறப்புடனேயே இருந்து வந்தார். ஞானசம்பந்தரும் அப்போது தான் தன் சிவத் தொண்டை தீந்தமிழில் பாமாலைகளாகப் புனைய ஆரம்பித்திருந்தார். அப்போது ஆரம்பித்து பாரதி, உ.வே.சா.வரை அனைவரும் சம்ஸ்கிருதம் அறிந்த தமிழ்ப்பண்டிதர்களே. தமிழுக்குப் பெரும் தொண்டாற்றினார்கள்.

மேலும் தமிழ்நாட்டில் பூணூல் தரித்தவர்கள் அனைவருமே பிராமணர்கள் என நினைக்கின்றனர். ஒரு சில ஸ்தபதிகள், பொன் ஆசாரிகள், தச்சர்கள் ஆகியோர் விஸ்வகர்மா எனப்படும் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவருக்கும் பெரும்பாலும் சம்ஸ்கிருத அறிவு இருந்தே வந்தது. அதிலும் ஸ்தபதிகள் எனப்படும் கல் தச்சர்களுக்கும், உலோக விக்ரஹங்கள் வடிப்பவர்களுக்கும் சம்ஸ்கிருத அறிவு இல்லை எனில் உளி பிடிக்க முடியாது. இவர்களும் செட்டியாரில் குறிப்பிட்ட இனத்தவரும் பூணூல் போட்டுக் கொள்வார்கள் என்பதோடு பிராமணர்களான எங்களைப் போல் ஆவணி அவிட்டத்தன்றும் பூணூல் மாற்றுவார்கள். இன்னும் வடநாடு போனால் க்ஷத்திரியர்களுக்கும் கட்டாயமாய்ப் பூணூல் உண்டு. சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் எல்லாருக்குமே உபநயனமும் இருந்து வந்தது என்பதை என்னுடைய "உபநயனம்" என்னும் நூலில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

பிராமணர்களை வடக்கே இருந்து வந்தவர்கள் எனில் சோழர்களை என்ன சொல்வது? சோழர்களின் பூர்விகம் வடநாடு தான். சூரிய வம்சம் எனத் தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள். முன் காலத்தில் வடக்கே இருந்த நாடுகளைத் தவிர்த்துத் தெற்கே பாண்டிய நாடு மட்டுமே பரந்து விரிந்திருந்ததாகச் சொல்வார்கள். இந்தச் சோழர்கள் சிபியின் வம்சம் என்றும் சொல்லிக் கொள்வார்கள் அந்த சிபி யார் தெரியுமா?

அந்த சிபி புறாவுக்காகத் தன்னையே அர்பணித்தப் பெருமை உடையவன். அவன் வழியில் வந்தவர்களே சோழ மன்னர்கள்.
ஆனால் அவன் ஆண்ட இடம் தமிழகப் பகுதி அல்ல.
அவன் ஆண்ட இடமே அவன் பெயரால் சிபி என்று அழைக்கப்படலாயிற்று. அவன் வம்சத்தில் வந்தவர்கள் சிபி, சிவி, சௌவிரர், சௌரதர் என்றெல்லாம் அழைக்கப்பட்டனர்.

அவன் வம்சாவளியில் பிறந்தவர்கள் எல்லாம் ஆங்காங்கே பரவி ஆட்சி அமைத்திருக்கின்றனர்.
அப்படி தமிழ் நாட்டுப் பகுதிக்கு வந்து ஆட்சி அமைத்தவன் சோழ வர்மன். அவனை முன்னிட்டு அவன் சந்ததியர் சோழர்கள் என்றழைக்கப்பட்டனர்.

சிபி என்னும் பெயரில் வேறு பெயர்கள், மஹாபாரதம், புராணங்களில் வந்தாலும், உசீனரன் மகனான, புறாவுக்காகத் தன் தசையை ஈந்த சிபி ஆண்ட இடம் சிந்து நதிப் பகுதி!!
சிபி என்னும் பெயரில் ஒரு இடம் இன்றும் பாகிஸ்தானில் உள்ளது.
அங்குள்ள மக்கள் சிபி வம்சத்தினர் என்று கூறிக்கொள்கின்றனர்.

ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வருகை தந்த சீன யாத்திரிகரான யுவாங் சுவாங் அவர்கள் இந்த இடத்தைப் பற்றி எழுதியுள்ளார்.
புறாவுகாகத் தன் தசையைக் கொடுத்த அரசனான சிபி இந்த நாட்டை ஆண்டான் என்றும் எழுதியுள்ளார்.

ஆகச் சோழர்களே வடக்கே இருந்து வந்தவர்கள் என்றிருக்க அவர்களைத் தமிழர்கள் இல்லைனு சொல்ல முடியுமா? 

Thursday, October 05, 2017

கீழடியில் என்ன குழப்பம்? - Dr. Santhalingam Chockaiah

இன்னிக்குக் காலையில் எப்போதும் போல் தான் எழுந்தேன். எழுந்து கொண்டு அன்றாடக் கடமைகளை முடித்துக் கொண்டு மோடத்தை செயலுக்குக் கொண்டு வந்தேன். காஃபி கலக்கையில் ரங்க்ஸ் நெட் வரலை, என்னனு பாரு என்றார். போய்ப் பார்த்துட்டு மோடத்தைத் திரும்பவும் செயல் நீக்கி, செயலுக்குக் கொண்டு வந்துனு எல்லாம் செய்துட்டு என் அலைபேசியைத் திறந்து பார்த்தால் வாட்ஸப்பில் 2 செய்திகளே முதல்நாள் இரவு வந்திருந்தவை காணப்பட்டன. ஆச்சரியத்துடன் அலைபேசியைத் தொடர்ந்து இயக்கினால் "இணையம் இல்லை! இணைய இணைப்பை ஏற்படுத்தவும்." என்று செய்தி!

இத்தனைக்கும் இடையில் காஃபியைக் குடித்துவிட்டு மடிக் கணினியைத் திறந்து பார்ப்போம்னு பார்த்தால் கணினியிலும் இணையம் வரலை. சரி மறுபடி போட்டுப் பார்க்கலாம்னு போட்டால் கணினி அப்படியே செயலற்று நின்று விட்டது.  அதை மிக முயற்சி செய்து செயலுக்குக் கொண்டு வரப் பார்த்தும், ம்ஹூம்! அசையவே இல்லை! கணினியை மூடுவது என்றாலும் அது கொஞ்சமானும் நகர்ந்து மூடுவதற்குத்  தேர்ந்தெடுக்கும் நிலைக்குப் போக மறுத்தது.  வேறே வழியில்லாமல் தலையில் மானசிகமாக அடித்துக் கொண்டு அதிலேயே இருக்கும் பொத்தானை அமுக்கி மூடினேன். மீண்டும் திறந்தால்! ஹையோ, ஹையோ! அதே நிலை! சுமார் பத்து முறையாவது பத்துப் பத்து நிமிட இடைவெளியில் மூடி மூடித் திறந்தாலும் அசைந்து கொடுக்கலை!

சரி, வீட்டு வேலையையாவது கவனிக்கலாம்னு போயிட்டேன். ஐபாட் திறக்காத ரங்க்ஸ் அன்றைய தினசரிகளை மனப்பாடம் பண்ண முடியாத சோகத்தோடு குளிக்கப் போயிட்டார். சாதாரணமா இந்த நேரத்திலே எல்லாம் அவரைக் குளிக்க வைக்க முடியுமா? உலக, இந்திய, தமிழ்நாட்டு அரசியல் நிலவரத்தைச் சரி செய்யும் மாபெரும் பொறுப்புத் தன் தலையில் சுமந்திருப்பதாக எண்ணிக் கொண்டு தினசரிகளில் மூழ்கி இருப்பார். நான் வீடு சுத்தம் செய்ய ஆரம்பித்தேன். அடுத்த பிரச்னை தலை தூக்கியது. வீடு துடைக்கும் துணியிலான துடைப்பம் அதன் பிடியிலிருந்து கழன்று விழுந்து விட்டது. கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு மேலாகிறது. துணியிலிருந்து நூல் நூலாக வராமல் நன்றாக உழைத்துக் கொண்டிருந்தது. இப்போது அது அப்படியே இருக்கு! அதைக் கைப்பிடிக் கம்புடன் சேர்க்கும் இடத்தில் துருப் பிடித்துக் கழன்றிருக்கிறது. இனி அதை எதுவும் செய்ய முடியாத நிலை!

இன்னிக்கு இவ்வளவு தானா? இன்னும் இருக்கானு யோசித்துக் கொண்டே வேறே ஒரு துடைப்பானால் வீட்டைத் துடைத்து முடித்துவிட்டுக் குளித்து விட்டு இணைய இணப்பு ஒருங்கிணைப்பாளருக்குத் தொலைபேசித் தகவல் தெரிவித்து அவங்க வந்து பார்த்துட்டு மாடியில் இணைப்பை இணைக்கும் இடத்தில் ஏதோ கருவி பழுதாகிவிட்டதாகச் சொல்லிச் சரி செய்துட்டுப் போனாங்க. அரை மணிக்கெல்லாம் மறுபடி நோ இணையம்! நொந்து நூலாகி விட்டோம். இதுக்கு நடுவில் கணினி மருத்துவர் வேறே வரட்டுமானு கேட்டுத் தொலைபேச அவரை 3 மணிக்கு வரச் சொல்லி விட்டோம். பழைய கணினியை எடுத்துச் சார்ஜில் போட்டு விட்டு அதைத் திறந்து அதன் மூலம் முக்கியமான மின் மடல்களைப் பார்த்துக் கொண்டேன். பின்னூட்டங்களையும் அதன் மூலமாகவே வெளியிட்டேன். ஆனால் அதை என்னால் தொடர்ந்து உபயோகிக்க முடியாமல் அதன் மவுஸை அம்பேரிக்காவிலேயே விட்டு வந்திருக்கேன். மவுஸ் இல்லாமல் கையால் எல்லாம் எனக்கு சரிப்பட்டு வரலை!

மறுபடி இப்போதைய மடிக்கணினியை எடுத்து வைத்துக் கொண்டு மறுபடி திறந்து மூடும் விளையாட்டை ஆரம்பிச்சால்! என்ன ஆச்சரியம்! திடீர்னு திறந்து கொண்டது! ஆஹானு சொல்லிட்டு கணினி மருத்துவரிடம் தொலைபேசி வரவேண்டாம்னு சொல்லிட்டு இப்போத் தான் கணினியைத் திறந்து இதோ உங்களோடு பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கேன்.

ஆகக் குழப்பம், நம்ம வீட்டிலே தான்! கீழடியிலே எல்லாம் இல்லை! இருந்தாலும் கீழடிக் குழப்பத்தைக் கீழே படிங்க! உண்மை புரியும்!
*********************************************************************************

மத்திய அரசின் தொல்லியல் பரப்பாய்வுத்துறை 2015ம் ஆண்டு முதல் மதுரைக்கு அருகில், சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில் அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தேர்வான கதை : இங்கு 1980--81ல் சிலைமானில் இருந்த பாலசுப்பிரமணியம் என்னும் ஆசிரியரால் ஆய்வு செய்யப்பட்டது. அவர் மேற்பரப்பில் சேகரித்த கறுப்பு, சிவப்பு பானை ஓடுகள், சுடுமண் உருவங்களை மதுரையில் திருமலை நாயக்கர் மகாலில் உள்ள மாநில தொல்லியல் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தார். அதனை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், அப்போதைய தொல்லியல் துறை இயக்குனர் நாகசாமி தலைமையில் அதே இடத்தில் ஆய்வு செய்தனர். இதன் மூலம் கீழடி சங்ககாலத்திலேயே ஒரு வாழ்விடமாக திகழ்ந்தது என்பது உறுதிபடுத்தப்பட்டது. அதன் பின் இங்கு எவ்வித ஆய்வுகளும் நடைபெறவில்லை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு மத்திய அரசின் தொல்லியல் துறை, வைகை கரையோரம் உள்ள கிராமங்களில் மேற்பரப்பு ஆய்வு செய்தது. இதில் 293 கிராமங்களில் வரலாற்று எச்சங்கள் இருப்பதை கண்டறிந்தது. அதில் கீழடியில் உள்ள பள்ளிச்சந்தை திடலை அகழாய்வுக்கு தேர்வு செய்தது. இதற்கு காரணம் ஏற்கனவே இந்த இடத்தில் செங்கல் சூளைக்காக மண் எடுக்க நிலத்தை தோண்டிய போது வெளிப்பட்ட ஒரு செங்கல் சுவரை கண்டதுதான். இதை தொடர்ந்து 2015 ல் இப்பகுதியில் நிலஉரிமையாளர்களிடமிருந்து உரிய அனுமதி பெற்று அகழாய்வுப் பணி துவக்கப்பட்டது.

ஆய்வுகள் துவக்கம் : முதல் ஆண்டில் (2015) 43அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டன. அவற்றின் மூலம் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றுள் சுடுமண் உருவங்கள், சதுரங்கக் காய்கள், தந்தத்தில் அலங்கரிக்கப்பட்ட தாயக் கட்டைகள், சூதுபவளம் போன்ற பொருட்கள் கிடைத்தன. பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளில் ஆதன், உதிரன், திஸன், ஸாதன், சரம் பொன்ற பெயர் சொற்கள் இடம்பெற்றிருந்தன. மேற்பரப்பு ஆய்விலேயே இராஜராஜன் காலத்து செப்புக்காசு ஒன்றும் கண்டறிப்பட்டது. மண்ணால் செய்து சுட்டு, உறைகளை ஒன்றன் மேல் ஒன்று அடக்கி கட்டப்படும் உறைகிணறுகளும் காணப்பட்டன. இது போல் ஏற்கனவே சங்ககால வாழ்விடங்களான கரூர், பூம்புகார், உறையூர், மதுரை மாங்குளம் போன்ற இடங்களிலும் வெளிப்பட்டுள்ளன.

திருப்பம் தந்த அகழாய்வு : 2016 ம் ஆண்டில் 2ம் கட்ட அகழாய்வு நடந்தது. இதில் 50க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டன. இதில் 5,000 க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இவற்றிலும் 'சேந்தன் அவதி' என்பன போன்ற பெயர் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்தன. செங்கல் கட்டடப்பகுதிகள் பெரும் அளவில் வெளிப்பட்டதும், அவற்றின் அமைப்பு முறையும் ஆய்வாளர்களிடையே பெரும் விவாதத்திற்கு வழி வகுத்தன.

இது மற்ற சங்க கால வாழ்விடங்களில் வெளிப்பட்ட அளவுகளைக் காட்டிலும் பெரியது. 21 உறைகளை கொண்ட உறைகிணறும் கண்டறியப்பட்டது வியக்கத்தக்கது. இந்த பகுதியில் பெரிய நெசவுக்கூடம் அல்லது ஆபரண தொழிற்கூடம் இருந்திருக்கலாம். இங்கு மக்கள் வாழ்ந்த காலத்தை கி.மு.2000த்திலிருந்து கி.பி.10ம் நுாற்றாண்டு வரை இருக்கலாம் என தொல்லியலாளர்கள் கணித்திருந்தனர். ஒரு சில மாதிரிகளை வேதியல் பகுப்பாய்வுக்கு அனுப்பி அதன் முடிவை பெற்றுள்ளதின் அடிப்படையில் கீழடி அகழாய்வு பொருட்களின் காலம் கி.மு.200; 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

எதிர்மறை விளைவு : இந்த அகழாய்வு தமிழக மக் களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. காரணம் சமீபகாலத்தில் இவ்வளவு பெரிய அளவிலும் நுாற்றுக்கும் மேற்பட்ட குழிகளில் அகழாய்வு மேற்கொள்ளவில்லை. தமிழகத்தில் வேறு எங்கும் இத்தனை பெரிய கட்டடப்பகுதிகள் வெளிப்படவில்லை. இந்த செய்திகள் அதிகப்படியான மக்களிடம் சென்று சேர்ந்தன. அகழாய்வு மேற்கொண்ட அதிகாரிகளும் நல்ல நோக்கத்தில் பார்வையாளர்களை தடையின்றி அனுமதித்தனர். அவர்களது அந்த தாராள மனப்பான்மைதான் இறுதி யில் அவர்களுக்கு எதிராகவும் திரும்பி விடப்பட்டது. பார்வையாளர்கள், அலைபேசிகளில் படங்களை எடுத்து அதனோடு தங்களுக்கு தெரிந்த கட்டுக்கதைகளையும் அறிவுக்கு எட்டியவரையில் அவிழ்த்து விட்டனர்.

'கீழடி கட்டுமானங்கள் சிந்துவெளி பண்பாட்டிற்கு இணையானது' என்றெல்லாம் கற்பனைகளை உருவாக்கினர். இதில் ஒரு சில அரசியல் கட்சியினரும், 'உலகிலேயே தொன்மையான நாகரிகம் இது. இக்குழிகளை அப்படியே பாதுகாக்க வேண்டும். தமிழக பண்பாட்டு கூறுகளை மறைக்க மத்திய அரச முயல்கிறது' என முழங்கினர். இதன் காரணமாக மூன்றாம் கட்ட ஆய்விற்கு நிதி ஒதுக்கீடு தாமதம் மற்றும் பணியில் தொய்வும் ஏற்பட்டது. ஏற்கனவே அகழாய்வு பணியை தலைமையேற்று நடத்திய அலுவலர் பணிமாற்றம் செய்யப்பட்டார்.சில காலதாமதத்திற்கு பின் புதிய பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டார். தற்போது மூன்றாம் கட்ட அகழாய்வு நிறைவடையும் தருவாயில் உள்ளது.

வரலாறு முடக்கப்படுகிறதா : கீழடியின் தொன்மை வரலாறு முடக்கப்படுகிறதா, உரிய கவனத்திற்கு கொண்டுவரப்படுமா என்ற கேள்வி பலரின் மனதிலும் கேட்கப்படும் கேள்வி. பொதுவாக
எவ்வூரிலும் அகழாய்வு பணி நிறைவு பெற்றதும் அங்குள்ள குழிகள் மூடப்படுவது மரபு.

ஏனெனில் அகழாய்வுக்கு உட்பட்ட நிலம் தனியாருக்கு சொந்தமானது. அவரிடம் பணி முடிந்த பின் நிலம் முன்னைப் போலவே ஒப்படைக்கப்படும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலே பணி மேற்கொள்ளப்படும். பணி முடிந்த பின் நிலம் உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என்பது போல கீழடியிலும் குழிகள் மூடப்பட்டன. நிலம், உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது போல சேகரிக்கப்பட்ட தொல்பொருட்கள், ஒளிப்படங்கள், வார்ப்புகள் செய்யப்பட்டு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும். அதே பாணியைத்தான் கீழடியிலும் அதிகாரிகள் பின்பற்றினர். இவற்றை தவறாக புரிந்து கொண்ட சிலர், மக்களை ஆய்வாளர்களுக்கு எதிரான மனநிலைக்கு திருப்பினர்.

ஆய்வுகளில் தெளிவு : இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கீழடி நாகரீகம் எவ்வாறு அழிவுக்குள்ளாகியது என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. 11-12ம் நுாற்றாண்டு கால வரலாற்று ஆவணங்கள் கீழடி, கொந்தகை, மணலுார் பகுதிகளில் தொடர்ந்து கிடைத்து வருகிறது. கொந்தகை என்பது குந்தி தேவிச்சூர்வேதிமங்கலம் என்னும் பெயரில் இயங்கியுள்ளது.

கீழடி பண்பாடு எவ்வாறு அழிந்திருக்க கூடும் என்று ஆய்வோமானால் ஓரிரண்டு சாத்திய கூறுகள் தென்படுகின்றன. ஒன்று வெள்ளப்பெருக்கு. மற்றொன்று வேற்று நாட்டவரின் படையெடுப்பு.

அருங்காட்சியகம் : கீழடியில் கிடைத்த பொருட்களை கொண்டு அருங்காட்சியகம் ஒன்று  அமைக்கப்படவேண்டும் என்னும் வேண்டுகோள் பரவலாக எழுந்துஉள்ளது. அரசும் இசைந்து நிலமும் ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் இந்த அருங்காட்சியகம் கீழடியிலோ, கொந்தகையிலோ அமைவதைக்காட்டிலும் மதுரை நகரத்திற்கு உள்ளேயோ அல்லது நகரத்தையொட்டியோ அமைவது தான் சிறந்தது. அப்போது தான் மக்களும், மாணவர்களும், ஆய்வாளர்களும் எளிதில் சென்று பார்க்க இயலும்.

இப்போதைக்கு கீழடியில் அமைய வேண்டும் என்று பரிந்துரைப்பவர்கள், எதிர்காலத்தில் அதை யாரும் சென்று காணமாட்டார்கள் என்பதை அறிய வேண்டும். அருங்காட்சியக அலுவலர்கள் மட்டுமே அதனை காவல்காக்க நேரிடும். தற்போது தமிழகத்தில் உள்ள பல அருங்காட்சியகங்களின் நிலை இதுதான். எனவே கீழடி போன்ற தொன்மையான வாழ்விடங்களை அறிவதிலும், அகழாய்வு செய்வதிலும், அவற்றை ஆவணப்படுத்தி பாதுகாப்பதிலும் நம்மக்கள் உணர்வுவயப்படாது, அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்பட வேண்டும்.

-- சொ.சாந்தலிங்கம்
தொல்லியல் அறிஞர், மதுரை.
98946 87358

Wednesday, October 04, 2017

இந்த நாள் இனிய நாள்! :)

கடப்பாவுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் போல! ஏகக் கூட்டம். பார்வையாளர்கள் அதிகம். அவ்வளவுக்குக் கருத்துகள் வரலை! எப்போதுமே இப்படித் தான் என்பதால் ஒண்ணும் சொல்றாப்போல் இல்லை. நவராத்திரிப் பதிவுகளிலும் அப்படித் தான்! பார்வையாளர்கள் அளவுக்குக் கருத்துகள் இல்லை. போனால் போகட்டும்!

இப்போதைய தலையாய பிரச்னையாகத் தெரிவது தாஜ்மஹல் சுற்றுலாப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக நடக்கும் பிரசாரம் தான். உண்மையில் என்ன நடந்தது என்பது ஒரு சில குறிப்பிட்ட தினசரிகளில் மட்டுமே காண முடிகிறது! அப்படி ஏதும் இருந்தால் உ.பி.யில் இத்தனை நாட்களாக மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்திருப்பார்களா என்ன? அங்கே எல்லாம் எதுவும் இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் தான் அரசியல்வாதிகளும் தொலைக்காட்சி சானல்களும் இந்த விஷயத்தைச் சொல்லி ஊதி ஊதிப் பெரிதாக்கிக் கொண்டிருக்கின்றன.

தாஜ்மஹலை யாரும் படுத்தலை. எந்த அரசியல்வாதியும் அதன் பராமரிப்புக்களில் தலையிடவும் இல்லை. உத்திரப் பிரதேச அரசு புதிதாகப் பதினைந்து சுற்றுலாத் தலங்களை அறிமுகம் செய்து அவற்றை மேம்படுத்தப் பணம் ஒதுக்கி உள்ளது. அந்தப் பட்டியலில் தாஜ்மஹல் இல்லை. ஆகவே தாஜ்மஹலைச் சுற்றுலாப் பட்டியலில் சேர்க்கவில்லை  என ஊடகங்களும் தினசரிகளும் வழக்கம் போல் ஊதி ஊதிப் பெரிதாக்கத் தாஜ்மஹலை உ.பி.அரசு மதவாதத்துடன் ஒதுக்கிவிட்டதாக எல்லோரும் கூவுகின்றனர். உண்மையில் பழைய பட்டியலில் தாஜ்மஹல் உள்ளது. அதன் பராமரிப்புச் செலவுக்கு என 156 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டும் உள்ளது. இது அதிகாரபூர்வமான அறிவிப்பாகவும் சொல்லப்பட்டு உள்ளது! அப்படி எடுத்திருந்தால் ஆங்கில, ஹிந்தி சானல்கள் சும்மாவா விடும். ஒரு மாசத்துக்காவது இதையே பேச மாட்டாங்களா என்ன? இங்கே தமிழ்நாட்டுத் தமிழ்ச் சானல்கள் மட்டுமே இதைப் பற்றிக் கூறுகின்றன. :)

அதே போல மும்பையில் நடைமேடையில் நடந்த விபத்துக்குறித்தும் குற்றம் சொல்லுவது மத்திய அரசைத் தான்! நடைமேடை இடிந்து விழுவதாக வதந்தியைக் கிளப்பி விட்டது யார்னு கண்டுபிடிப்பதை விட்டுட்டு மோதியும் அவங்க அரசும் வேலை மெனக்கெட்டு வந்து நடைமேடையில் இருந்தவங்களைப் பிடிச்சுக் கீழே தள்ளிட்டாப்போல் கூச்சல், கூப்பாடு!

பெருமை மிக்க "தி இந்து" ஆங்கில நாளிதழ் அந்த நிகழ்வின் போது பிணமாக இருந்த ஓர் பெண்ணை யாரோ பாலியல் வன்கொடுமை செய்ததாகச் செய்தி வெளியிட்டு விட்டுப் பின்னர் அது தவறான செய்தி என மன்னிப்பும் கேட்டிருக்கிறது. செய்தி வெளியிடும் முன்னரே சரி பார்க்க வேண்டாமா? இவங்க கேட்டிருக்கும் மன்னிப்பை யார் பார்க்கப் போறாங்க? இதே போல் பல விஷயங்களிலும் ஹிந்து தவறான செய்தியைப் போட்டிருக்கிறது. பின்னர் மன்னிப்பும் கேட்டிருக்கிறது. இது ஹிந்து தினசரியின் நம்பகத் தன்மையையே பாதிப்பதாக உள்ளதே! அவங்களுக்கு அது புரியலையா?

இப்போக் கீழடி அகழ்வாராய்ச்சியில் மத்திய அரசு தமிழர் பெருமையை மறைப்பதாகப் பிரசாரம் நடைபெற்று வருகிறது. தொல்லியல் துறை ஆய்வாளர் ஒருவரே இது குறித்து ஒரு கட்டுரை விபரமாக எழுதி இருக்கிறார். அதில் எந்த ஆய்வையும் மத்திய அரசு மறுக்கவோ தடுக்கவோ இல்லை என்றும் எல்லா ஆய்வுகளுக்கும் கொஞ்சம் இடைவெளி கொடுப்பது போலத் தான் இதற்கும் கொடுத்திருப்பதாகவும், இடையில் நடைபெற்ற தொல்லியல் துறை இயக்குநரின் மாற்றல் தற்செயலானது என்றும் தெளிவாகக் கூறி உள்ளார். அதோடு கீழடியில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெறும் இடங்கள் தனியாருக்குச் சொந்தமானது. ஆகவே அகழ்வாராய்ச்சி முடிந்த பின்னர் சேகரித்த பொருட்களைத் தனியாக சேமித்துவிட்டுத் தோண்டப்பட்ட இடங்களை மூடிக் கொடுக்க வேண்டும் என்பது பொதுவான விதி! அதன்படி அந்த அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடங்கள் மூடப்பட்டன. பின்னர் மீண்டும் உரியவருக்கு ஒப்படைக்கப் பட்டிருக்கின்றன. அதைப் புரிந்து கொள்ளாமல் தமிழனின் நாகரிகத்தை மறைத்து விட்டார்கள், அழித்து விட்டார்கள் என்றெல்லாம் கூப்பாடு போடுகின்றனர்.

தொல்லியல் துறை அறிஞரின் விளக்கமான கட்டுரையை நாளைக்குப் பகிர்கிறேன். தில்லைநகரில்  இன்னிக்குக் கைத்தறிக் கண்காட்சினு பேப்பரிலே எல்லாம் அமர்க்களப்பட்டதேனு போயிருந்தேனா! ஒரே ஏமாற்றம்! 110 ஸ்டால்கள் இருப்பதாகச் செய்திகள் கூறின. போனால் 10 ஸ்டால் கூட இல்லை! :(  அதுவும் சின்னாளப்பட்டி, திருபுவனம் மற்ற ஊர்ப்பெயர்கள் எல்லாம் புதுசா இருந்தன. ஜமுக்காளம், துண்டு, சில்க் காட்டன் புடைவைகள், பட்டுப் புடைவைகள் என்று அடுக்கி இருந்தாங்க! அங்கே போனால் சின்னாளப்பட்டி ஸ்டாலில் மட்டும் குறிப்பிடத்தக்க அளவில் புடைவைகள் இருந்தன. அதிலும் நான் தேடிய வாழை நார்ப்புடைவை இல்லை! :( சென்னையில் எழும்பூரில் நடக்கும் கைத்தறிக் கண்காட்சியை ஒப்பிட்டால் இது ஒண்ணுமே இல்லை. போன வருஷம் இங்கே ஶ்ரீரங்கத்திலும் கைத்தறிக் கண்காட்சி போட்டிருந்தாங்க. எல்லா ஊர்களில் இருந்தும் துணிகள் வந்திருந்தன. கோவைப் புடைவை நெகமம் பருத்திப் புடைவை எடுத்தேன். இன்றளவும் நன்றாக இருக்கிறது. நல்ல அகலம், நல்ல நீளம். அப்படி இங்கே கிடைக்கலை! வீட்டிலிருந்து கண்காட்சிக்குப் போக  ஓலா ஆட்டோ புக் செய்து கொண்டு போனோம். எங்களுக்கு ஆட்டோ சார்ஜ் 56 ரூபாயிலிருந்து 59 ரூபாய்க்குள்ளாக வரும் என்றும் அதிகமானால் 5 அல்லது 10 ரூபாய் தான் அதிகம் இருக்கும் என்றும் தகவல் வந்தது.

ஆனால் போகையிலேயே ஆட்டோ ஓட்டுநர் எரிவாயு நிரப்ப வேண்டி 50 ரூபாய் வாங்கிக் கொண்டார். அப்போவே என்னடா இதுனு யோசிச்சேன். போனால் 92 ரூபாய் ஆயிற்று. எனக்கு இவ்வளவு தான் வந்தது என்று சொன்னேன். காட்ட முடியவில்லை.  wi-fi connection only! No data! :( ஆகவே அவரிடம் காட்ட முடியலை! அவர் நீங்க கான்சல் பண்ணிட்டு மறுபடி கூப்பிட்டிருப்பீங்க. அப்படிச் செய்தால் 20 ரூபாய் அபராதம். அதனால் 92 வந்திருக்கும் என்று சொன்னார். நாங்க கான்சலே பண்ணலை! திரும்பி வருகையில் ஓலா இல்லாத சாதாரண ஆட்டோக்காரர் 100ரூபாய்க்கு வந்தார். 200 ரூபாய் செலவு ஆனது தான் மிச்சம்! Today is not my day! 

Monday, October 02, 2017

கும்பகோணம் கடப்பா செய்முறை!

முதல்லேயே சொல்லிடறேன். எனக்கு, ஹிஹிஹி, ரெண்டு பேருக்குமே கடப்பா பிடிக்காது. கடப்பானா என்னனு அப்பாதுரை கேட்டதுக்காகவும், ஶ்ரீராம் கடப்பா பத்தித் தெரியாமலே இருப்பதற்காகவும் போடறேன்.  அப்பாதுரை சாப்பிட்டிருப்பார். ஶ்ரீராமும் தெரிஞ்சிருக்கும். பெயர் தான் கடப்பானு தெரிஞ்சிருக்காது. இப்போ சுமார் நான்கு பேருக்காகக் கடப்பா செய்யத் தேவையான பொருட்கள்! (படமெல்லாம் எங்கேனு கேட்கக் கூடாதாக்கும்! வீட்டிலே செய்யலை! ஆகவே கற்பனையிலே பார்த்துக்க வேண்டியது தான்! இணையத்திலே தேடிப் பார்த்துக் கிடைச்சாப் போடறேன். இதை "திங்க"ற கிழமைக்குக் கொடுக்கலாமானு தான் யோசிச்சேன். அங்கே வரிசை கட்டி நிக்கறாங்க! அதனால் இங்கேயே போடறேன்.

பூண்டு சுமார் 50 கிராம் உரித்தது. (எல்லோரும் 100 கிராம் போடுவாங்க. நான் குறைச்சிருக்கேன்.)

பெரிய வெங்காயம் (நல்ல பெரிசாவே இருக்கட்டும்) 4 பொடிப் பொடியாக நறுக்கித் தனியாக வைச்சுக்கவும்.

உருளைக்கிழங்கு  நல்ல பெரிய கிழங்காக 4 எடுத்து வேகவைத்துத் தனியாக வைக்கவும்.

பாசிப்பருப்பு ஒரு கிண்ணம் நன்கு குழைய வேக வைக்கவும்.

இப்போத் தேவையான மசாலா சாமான்கள்

இலவங்கப்பட்டை ஒரு துண்டு ஒரு அங்குல நீளம் இருக்கலாம்.

கிராம்பு (அதிகம் சேர்த்தால் காரம் ஜாஸ்தியாயிடும்) என்பதால் 3, 4 போதும்.

பச்சை மிளகாய் (இப்போச் சந்தையில் காரமான மிளகாயே கிடைக்கிறது. அது எனில்) 4 அல்லது 5 போதும். இல்லை எனில் சுமார் 10மிளகாய் நடுத்தர அளவில்

பொட்டுக்கடலை  ஒரு சின்னக் கிண்ணம் அல்லது இரண்டு டேபிள் ஸ்பூன்

பச்சைக் கொத்துமல்லி ஒரு சின்னக் கட்டு. ஆய்ந்து நறுக்கிக் கொள்ளவும்

தேங்காய் ஒரு சின்ன மூடி, துருவிக் கொள்ளவும்.

கசகசா (சரியாக அரைபடாது என்பதால் இரண்டு டீஸ்பூன் கசகசாவைப் பாலில் அல்லது நீரில் ஊற வைத்துக் கொள்ளவும். சாயந்திரம் வேண்டும் எனில் காலையிலேயே ஊற வைக்கலாம்.)

இப்போப் பச்சைமிளகாய், பச்சைக் கொத்துமல்லி நறுக்கியதில் பாதி (மீதிப் பாதி மேலே தூவ) பூண்டு உரிச்சதில் பாதி அளவு, தேவையானால் நறுக்கிய வெங்காயம் இரண்டு டேபிள் ஸ்பூன், கசகசா, இஞ்சி ஒரு துண்டு இவற்றோடு துருவிய தேங்காயையும்,  பொட்டுக்கடலையையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.

அடுப்பில் கடாய் அல்லது அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு முதலில் லவங்கப்பட்டை, கிராம்பு போட்டுச் சிவந்ததும் மீதம் இருக்கும் பூண்டையும் போட்டு நன்கு வதக்கவும். பூண்டு வதங்கியதும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.  குழைய வேக வைத்த பாசிப்பருப்போடு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து இதில் விடவும். தேவையான அளவு மஞ்சள் பொடி சேர்க்கவும். வேக வைத்த உருளைக்கிழங்கை நன்கு உதிர்த்து இதில் சேர்த்துத் தேவையான அளவுக்கு உப்புச் சேர்க்கவும். இவற்றில் அரைத்த விழுதைச் சேர்க்கவும். ரொம்பக் கெட்டியாக இருந்தால் கொஞ்சம் நீர் சேர்க்கலாம்.  நன்கு கொதித்ததும் கீழே இறக்கி எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம். (தேவையானால்) மேலே பச்சைக் கொத்துமல்லி தூவிப் பரிமாறவும்.

கும்பகோணம் கடப்பா க்கான பட முடிவு

மஞ்சள் பொடி சேர்க்காத கடப்பா! படத்துக்கு நன்றி கூகிளார்!



கும்பகோணம் கடப்பா க்கான பட முடிவு

மஞ்சள் பொடி சேர்த்த கடப்பா!படத்துக்கு நன்றி மாலை மலர் கூகிளார் வாயிலாக!