எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, December 31, 2006

176, மறுபடியும் ஹூஸ்டன்

சுருங்கிப் போய் முறுக்கிக் கொண்டிருக்கும் என்னுடைய நுரையீரல் போன்ற புடவையைக் கையில் வைத்துக் கொண்டு திகைத்துப் போன நான் செய்வதறியாது முழிக்கையிலே சமையல் அறையில் இருந்து வந்த தீய்ந்த வாசனையும், புகையும் மேலும் திகைக்க வைத்தது. எனக்குப் புகை அலர்ஜி வேறே உண்டு. உடனேயே exhaust fan முழு வேகத்தில் சுழல வைக்கப் பட்டது. என் கணவர் சமையல் அறையின் ஜன்னல் கதவுகளையும், பால்கனிக் கதவுகள், மற்ற ஜன்னல் கதவுகள் எல்லாத்தையும் திறந்து வைத்தார். ஒரு வழியாகப் பதினைந்து நிமிஷங்கள் போராட்டத்திற்குப் பின் புகை வெளியேறியதும், நான் சமையல் அறைக்கு வந்து குக்கரைத் திறந்தால் கன்னங்கரேல் என்று சாந்து மாதிரி ஏதோ ஒன்று. நான் வைத்தது என்னவோ சாதம் தான். இது எங்கிருந்து வந்தது? வியந்தபடியே மூக்கைச் சுற்றித் துணி கட்டிக் கொண்டு (பின்னே தீஞ்ச வாசத்தை என்ன செய்யறது?) எல்லாவற்றையும் எடுத்து அங்கே தொட்டி முற்றத்தில் போட்டு விட்டு, disposer-ஐத் திறந்து விட்டு விட்டு, வெந்நீர்க் குழாயையும் திறந்து விட்டேன். அமெரிக்காவில் இது ஒரு வசதி. எல்லாத்தையும், தொட்டி முற்றத்திலேயே டிஸ்போஸ் செய்து விடலாம். குக்கரை என் கணவர் தான் தேய்ப்பதாய்ச் சொல்லவே நான் நேரடியாக மறுபடி சாதம் வைத்தேன். அதற்குள் ரொம்பக் கஷ்டப் பட்டுத் தேய்த்து வைத்த குக்கரை எடுத்துப் பார்த்தேன். பளீரென இருந்த குக்கர் உள்ளே கொஞ்சம்கொஞ்சம் கறுப்புப் பொட்டுக்கள் இருந்தது. பையன் ரொம்பவே உஷாரான பேர்வழி. ஹிஹிஹி, என் பையன் ஆச்சே? கட்டாயம் கண்டு பிடிப்பான். என்ன பதில் சொல்றது? மணி 12-ம் ஆச்சு. ஒருவழியாய்ச் சமைத்து விட்டு, என் கணவருக்குச் சாப்பாடு போட்டு விட்டு, நானும் சாப்பிட ஆரம்பிக்கும் போது பையன் வந்தான். வரும்போதே கேட்டுக் கொண்டு வந்தான். "என்ன ஏதோ தீஞ்ச வாசனை வருது? இங்கேயெ? வேறே எங்கேயுமா?" என்று. நான் வேறே எங்கேயும் இருக்கும் என்று சொல்வதற்குள் அவன் கண் குக்கரின் மேல் போனது.

ஏன் குக்கரில் சாதம் வைக்கலியா? என்று கேட்டான். நான் அது ரொம்ப வெயிட்டாக இருக்கு, என்னால் தூக்க முடியலை என்று சொல்லி முடிப்பதற்குள் அதைக் கையில் எடுத்து மேலே வைக்கப் போனவன் கண்களில் கறுப்புப் பொட்டுக்கள் பட்டிருக்கிறது. உடனே "என்ன இது?" என்று கேட்டுக் கொண்டு பார்த்தான். நான் அ.வ.சி. பேசாமல் ஜெட்லாக் இன்னும் தெளியலை (நிஜமும் அது தான், இல்லாட்டி இந்தியாவில் கையால் துவைக்கக் கூட வேலைக்கார அம்மா கிட்டே போடமாட்டேன் புடவையை, இங்கே வந்து மெஷினில் போடுவேனா?) ன்னு சொல்லிட்டுப் போய்ப் படுத்தேன். பையன் சாப்பிட்டு விட்டு வேலைக்குப் போய் விட்டான். இன்னொரு புடவை தூய கைத்தறிப் புடவை, கலாக்ஷேத்திரா காட்டன் புடவை, சற்று விலையும் அதிகம் தான், அதைக் கையால் துவைத்துக் காயப் போடலாம் என்று போனேன். துவைத்துப் பிழிந்து அதை உதறிக் குளிக்கும் தொட்டியைச் சுற்றித் திரை போட்டிருந்த குழாயில் திரையை விலக்கி விட்டுப் போட்டேன். அவ்வளவு தான். மறுபடி தொப்! குழாயோடு சேர்ந்து புடவையும் விழுந்து விட்டது. குழாய் சுவரில் பதித்திருக்க வில்லை. Vaccuam Fitting. இது தெரியாமல் போட்டிருக்கிறேன். இது என்ன பிரமாதம்? நம்மளே மாட்டலாம் என்று நினைத்துக் கிட்டத் தட்ட 1/2 மணி நேரம் முயன்றாலும் வரவே இல்லை. அங்கே அபார்ட்மெண்டில் வெளியே பால்கனி இருந்தாலும் துணி எல்லாம் காய வைக்க முடியாது. இந்தப் புடவையை மெஷினில் போடவும் முடியாது. குஞ்சம் எல்லாம் வைத்த முந்தி உள்ளது. குஞ்சம் வீணாகி விடுமே?

அதற்குள் உள்ளே போன என்னைக் காணோமே என்று என் கணவர் சற்றுப் பயத்துடனேயே வந்தார். அவரிடம் விஷயத்தைச் சொன்னதும் அவரும் கவலையுடனும், சந்தேகத்துடனும் முயற்சி செய்தார். அவராலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் முயன்றும் முடியவில்லை. அமெரிக்காவின் அபார்மெண்ட் ரூல்ஸ் எல்லாம் அங்கே இருப்பவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். ஆகவே ரொம்பவே பயமாய் இருந்தது. நம்ம ஊரில் என்றால் பக்கத்து வீட்டுக் காரர்களுக்கு எவ்வளவு தொந்திரவு என்றாலும் கவலையே படாமல் அவங்க வீட்டுப் பக்கம் துணியைப் போட்டுவிட்டுப் போவாங்க. எனக்குத் தெரிஞ்சு "Archie Comics"ல் தான் Archie and Juggie இரண்டு பேரும் துணிகளைக் கொடி கட்டி க்ளிப் போட்டுத் தோட்டத்தில் உலர்த்திப் பார்த்தேன். அமெரிக்காவில் தனிவீட்டுக் காரங்க கூட யாரும் உலர்த்துவது இல்லை. புடவையை உள்ளே படுக்கை அறையிலேயே கதவில் கட்டி உலர்த்தினோம். மின் விசிறியைச் சுழல வைத்தால் கூட இங்கே மாதிரி அங்கே வேகமாய்ச் சுற்றாத மின் விசிறிகள் அங்கே. அநேகமாய் வீடு முழுக்க குளிர்வசதி இருப்பதால் மின் விசிறியின் தேவை கம்மி. என் பையன் பயந்தது ஸ்விட்சுகள் எல்லாம் இந்தியா மாதிரி இருக்காமல் மாறி இருக்கும்.எனக்கு உபயோகிப்பதில் குழப்பம் வரும் என்று பயந்தான். மிக்ஸி, லைட், ஃபான், ஏ.சி., மின் அடுப்பு என்று எல்லாமே. அதில் எல்லாம் குழப்பம் வரவே இல்லை. இந்த மாதிரி வந்துடுச்சே என்று கவலையாக இருந்தது. சாயந்திரமும் வந்தது. பையனும் வந்தான். எங்கள் முகத்தைப் பார்த்து விட்டே ஏதோ நடந்திருக்கிறது என்று ஊகித்துக் கொண்டு,"என்னம்மா? இப்போ என்ன விஷமம் பண்ணினே?" என்று கேட்கவே நாங்கள் விஷயத்தைச் சொன்னோம். அவன் என்னைப் பார்த்த பார்வையில் உடனேயே சென்னைக்கு விமானம் இருக்குமா? என்று யோசிப்பது போல் இருந்தது எனக்கு. அப்புறம் ரொம்ப நேரம் அப்பாவும், பிள்ளையும் முயன்று குழாயை மாட்டினார்கள். எனக்கு உயிரும் வந்தது. (இதோட போச்சா? மெம்பிஸில் பெண்ணோட வீட்டில் smoke detector வாயை அடைக்க முடியாமல் நான் பட்ட பாடு, அப்புறம் அங்கே இருந்த ஒரு தமிழ்க்காரர் யோசனைப் படி அதை எடுத்துக் கழட்டி வைத்ததும் தான் அது வாயை மூடிக் கொண்டது. இல்லாட்டி தாளித்தால் கூட அலற ஆரம்பிக்கும்.) கடவுளே எல்லாம் என் HEAD LETTER தான் வேறே என்ன? அப்புறம் முதல் வேலையாக வால் மார்ட், அதோட தம்பி வால் க்ரீன், அதோட அண்ணா சாம்ஸ் க்ளப் என்று அலைந்து திரிந்து ஒரு ரைஸ் குக்கரை வாங்கி விட்டுத் தான் மறு வேலை.

Thursday, December 28, 2006

175. நடராஜரா? ரங்கராஜரா?

நடராஜனும், ரங்க ராஜனும் என்றால் யாருன்னு நினைச்சீங்க? நம்ம ஸ்ரீரங்கத்தில்
கோவில் கொண்டிருக்கும் ரங்கநாதரையும், சிதம்பரத்தில் கோவில் கொண்டிருக்கும்

நடராஜரையும்தான் சொல்கிறேன். சைவர்களின் கோயில் சிதம்பரம் என்றால்,

வைணவர்களின் கோயில் ஸ்ரீரங்கம் என்று எல்லாருக்கும் தெரியும். நமக்கெல்லாம்

பிறப்பு, இறப்பு என்று இருக்கிற மாதிரி இவங்களுக்குக் கிடையாது. சிவன் காலத்துக்கு எல்லாம் காலன் என்று சொல்லப் படும் காலகாலன் என்றால் விஷ்ணுவோ என்றால் எங்கும் பரவி, வியாபித்து, எல்லாரையும் படைத்துக் காத்து அருளுபவர். "ஷ்ரவண" என்று

சொல்லப் படும் திருவோண நட்சத்திரத்தின் அதி தேவதையான விஷ்ணுவை நாம்

ஆராதித்தோமானால் அந்த நட்சத்திரத்தையும் ஆராதித்த மாதிரி ஆகும். அது போல் சிவனை

ஆராதித்தோமானால் அவர் அதிதேவதையாக இருக்கும் "திருவாதிரை" நட்சத்திரத்தை ஆராதித்த மாதிரி ஆகும். இதில் சிவன் சற்றுச் சூடாகவும், விஷ்ணு சற்றுக் குளிராகவும் இருக்கிறார். எப்படின்னு பார்த்தால் இந்த உலகிலேயே குளிர்ச்சியும் இருக்கிறது. சூடும் இருக்கிறது. ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. ஒன்றை வைத்துத் தான் மற்றது. வேறுபாடு கிடையாது. நம்ம உடம்பிலேயே இரண்டும் இருக்கிறது. சூடு மட்டும் அதிகம் ஆனால் "காய்ச்சல்" என்கிறோம். குளிர்ச்சி அதிகம் ஆனாலோ நாமே இருக்க மாட்டோமே!

ஆகவே இரண்டும் இருக்க வேண்டும்.குளிரின் சூட்சும ஆற்றல் விஷ்ணு என்றால், சூடின் சூட்சும ஆற்றல் சிவன் ஆவார். பனி படர்ந்த கைலையில் இருக்கும் சிவன் சூடாகத் தானே இருக்க வேண்டும்? பாற்கடலில் இருக்கும் மஹாவிஷ்ணுவோ அதற்கேற்பக் குளிர்ச்சியாக இருக்கிறார் அல்லவா? ஒரே பொருளின் இரண்டு பகுதிகளான இவர்கள் இருவரும் ஒருவரே! அவர்தான் சங்கரநாராயணன் என்று சொல்கிறோம். "உமையொரு பாகன்" என்றும், "அர்த்த

நாரீஸ்வரர்" என்றும் சொல்கிறோம். என்னடா வென்று பார்க்கிறீர்களா? ச்யாமளனும் அவனே! ச்யாமளையும் அவளே! நாராயணனும் அவளே! நாராயணியும் அவனே! மாயனும் அவனே! மாயையும் அவளே! வைஷ்ணவனும் அவளே! வைஷ்ணவியும் அவனே!

சிவசக்தி பேதத்தில் புருஷ சக்திதான் திருமாலாக வணங்கப் படுகிறது. பொதுவாகப் பெண்களை வலப்பக்கமாய்ப் படுக்கச் சொல்வதுண்டு. பள்ளி கொண்டிருக்கும் எம் பெருமாளைப் பாருங்கள். வலப்பக்கமாய்த்தான் ஒருக்களித்துப் படுத்திருப்பார். இவர் நன்கு

தூங்க, ஆடவல்லானோ ஆடிக் கொண்டிருக்கிறான். எப்படிப் பட்ட ஆட்டம்? ஆனந்தக் கூத்து ஒரு சமயம்,ஆக்ரோஷக் கூத்து ஒரு சமயம், அமைதியான நடனம் ஒரு சமயம்,

பக்தர்களுக்கு அருள ஒரு சமயம். நாமே பாருங்க, நமக்கு மனதுக்குப் பிடித்த ஒரு

காரியம் நடந்தாலோ., அதிக மகிழ்ச்சியான மன நிலையிலோ ஆடலாம், பாடலாம்,.

குதிக்கலாம் போல் இருக்குன்னு சொல்வோம். சிலபேர் ஆடிப்பாடிக் குதிக்கவும் செய்வோம். தூக்கமும் மன நிம்மதியில் தான் நல்லாத் தூங்கினேன்னு சொல்வோம்.

இந்த இடையறா ஆட்டமும் சரி, அந்த இடையறாத் தூக்கமும் சரி எதுக்கு? நம்மை

உய்வித்து வாழ்வாங்கு வாழ வைக்கத்தான். காலை எப்போ வருது? மாலை எப்போ

வருது? இரண்டும் எப்போ சேருது? எப்போ பிரியுது? யாராலும் சொல்ல முடியுமா? முதலில் மாலை வந்ததா? இரவு வந்ததா? அல்லது காலை வந்ததா? பகல் வந்ததா? பதில் சொல்ல முடியுமா? இரண்டும் ஒரே சமயம் வருகிறது, வந்தது போல் போகிறது. இருள் நீங்கினால்

கவலை இல்லை. ஒளி வந்தால் களிப்பு, சந்தோஷம், மகிழ்ச்சி. ஆகவே கவலையற்ற நிலையை ஸ்ரீரங்கநாதனின் திருப்பள்ளியும், களிப்புற்ற நிலையை நடராஜரின் திரு நடனமும் நமக்கு உணர்த்துகின்றது. இரண்டுமே பொன்னரங்கம், பொன் சபை ஆகும்.

எங்கும் வியாபகமாய் இருக்கும் திருமால் ரங்கராஜனாய்த் திருவரங்கத்தில் கவலையற்ற நிலையில் திருப்பள்ளி கொண்டிருக்கிறார். "பூலோக வைகுண்டம்" எனப்படும் ஸ்ரீரங்கத்தில் டிசம்பர் மாதம் 30-ம் தேதி சனிக்கிழமை அன்று "வைகுண்ட ஏகாதசி"ப் பெருநாள்

கொண்டாடப் படுகிறது. நடராஜரோ என்றால் சிதம்பரத்தில் நம் எல்லாருடைய

நலனுக்காகவும் களிப்புற்ற நிலையில் இடைவிடாது ஆடிக் கொண்டிருக்கிறார். ஜனவரி 3-ம் தேதி புதன் அன்று "பூலோகக் கைலாயம்" என்று அழைக்கப் படும் சிதம்பரத்தில் "ஆருத்ரா தரிசனம்" நடைபெறுகிறது. அனைவரும் சிவ, விஷ்ணு பேதங்களை மறந்து, சிவசக்தி ஐக்கியத்தை நினைத்து ஒன்றில்லாமல் மற்றது இல்லை என்றப் பேருண்மையைப் புரிந்து கொண்டு இருவரையும் வணங்கி இறை அருள் பெறுவோமாக.

Wednesday, December 27, 2006

174. சில, பல, எண்ணங்கள்.

ஒரு தாமதமான வரவேற்பு:

ஐ.நா. சபை இந்தியாவிற்காக அனுப்பிய நல்லெண்ணத் தூதுவர், சூடான் புலி, திரு நாகை சிவா அவர்கள், தன்னுடைய களப்பணிகளை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு தாயகம் திரும்பி உள்ளார். அவருடைய செய்தியைத் தலைவி தாமதமாகப் பார்க்க நேர்ந்த காரணத்தால் வரவேற்பு விழாவிற்கும் தாமதமாகி விட்டது. என்றாலும் இதைப் பொருட்படுத்தாமல் ரத்தத்தின் ரத்தங்களும், கண்மணிகளும், பிள்ளைகளும், தொண்டர்களும், குண்டர்களும் பெருமளவில் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்கும்படித் தலைவியின் ஆணை.அது சரி, புலி இப்போ எங்கே இருக்கு?

ஒரு அறிவிப்பு:

தலைவியின் கணினி வெற்றிகரமாய் வந்து விட்டாலும், நேற்றுத் தொண்டர் "கார்த்திக்"அவர்களின் பெரு விருப்பத்தினை ஒட்டித் தலைவி "வரலாறு" திரைப்படம் பார்த்ததால் இணையத்திலும் இருக்க முடியவில்லை, களப்பணியும் ஆற்ற முடியவில்லை. "வரலாறு" படத்தில் அசின் பாத்திரப்படைப்பு ஒரு தண்டம் என்று தலைவி பெருமகிழ்ச்சியுடன் (:D) தெரிவித்துக் கொள்கிறார். மேலும் கணினியின் ரிப்பேருக்காகத் தலைவியின் உதவிக்கு வந்த கார்த்திக், கைப்புள்ள இவர்களுக்குத் தலைவி தன்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, அதுக்கு அப்புறம் தலைவியின் தலையைக் கண்டாலே ஒளிந்து கொள்ள முயற்சி செய்யும் இருவரையும், மற்றும் மதுரையின் மைந்தர், "ராம்" அவர்களையும் சேர்த்துத் தலைவி கடுமையாகக் கண்டிக்கிறார். அதுவும் கார்த்திக் தூங்கும்போது கூடக் கணினியில் "sleeping" என்று போட்டு விட்டுத் தூங்குவதையும் வன்மையாகக் கண்டிக்கிறார்.

தலைவியின் தொழில் நுட்பக் கேள்விகளாலும், பதில்களாலும் திகைப்படைந்த கைப்புள்ள தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்ததையும், தலைவியால் அவரைச் சமாதானப் படுத்த முடியாமல் தோல்வி அடைய நேரிட்டதையும் பெருந்தன்மையுடன் ஒப்புக் கொள்ளும் தலைவி பின் கைப்புள்ள என்பதால் அவர் தானே அழுது ஓய்ந்து சமாதானம் அடைந்ததையும் பாராட்டுகிறார். தான் ஒரு கைப்புள்ள தான் என்பதை நிரூபித்த அவர் தனக்குப் பதிலாக மண்ணின் மைந்தர் "ராமை" மாட்டிவிடப் பார்த்ததையும், "ராம்" மாட்டிக் கொள்ளாமல் நாளது வரை தப்பித்ததையும் மன்னிக்கவே முடியாது என்கிறார். ஏற்கெனவே கணினியின் "RAM"-ஆல் வெறுப்புற்றிருந்த தலைவி மேலும் மன வேதனை அடைந்தார். "ராமா, ராமா, என்று நாம ஜபம் செய்ய ஆரம்பித்ததும் எல்லாம் சரியாகி விட்டதாயும் தெரிவித்துக் கொள்கிறார். ஆகவே தொண்டர்களே, உங்கள் கணினி நல்லா வேலை செய்யணும்னா நீங்களும் "ராமா, ராமா" என்று சொல்லவும். (ஆன்மீகத்துக்கு ஆன்மீகமும் ஆச்சு, அறுவைக்கு அறுவையும் ஆச்சு, அம்பியோட கண்ணோட்டத்திலே ஒரு மொக்கையும் ஆச்சு.)ஹூஸ்டன் பயணம் தொடரும். அதுக்குள்ளே, டாடா இண்டிகாம் காரங்களுக்கு என்னவோ வந்துடுச்சு. எல்லாம் இந்த அம்பியோட கண்ணுதான். வேறே என்ன? :D

Sunday, December 24, 2006

173. சோதனை மேல் சோதனை

வேறே யாருக்கு? எனக்குத் தான். உண்மையிலே திருஷ்டி முதலில் எனக்குத்தான் ஏற்பட்டிருக்கிறது. அதுக்கு அப்புறம் தான் வேதா(ள்)வுக்கு. அதுவும் என்னோட இலக்கிய நயம் மிகுந்த(ஹிஹிஹி, நான் சொல்லிக்கலைன்னா வேறே யார் சொல்வாங்க?) கட்டுரைகளைத் தினம் ஒண்ணாகவும் சிலசமயம் இரண்டிரண்டாகவும் போட்டு வந்ததை யாரோ பார்த்துட்டு பயங்கர திருஷ்டி போட்டதினாலேயோ அல்லது எதிர்க்கட்சியினரின் சதியினாலோ என்னோட கணினி இன்னும் வரவே இல்லை. நேத்து வரும்னு சொன்னாங்க, தொலைபேசினால் இன்னும் நேரம் ஆகும்னு சொல்றாங்க. அதிர்ஷ்டம் இருந்தால் நாளை வரும். அதுவரை அடாது தொந்திரவு கொடுத்தாலும் விடாமல் பதிவு போடும் எண்ணம் இருப்பதால் என் அண்ணா வீட்டிலேயே வந்து எழுதுகிறேன். இதிலே என்ன கஷ்டம்னால் நம்ம கைவண்ணம் அவங்களுக்கும் தெரியும். அண்ணா பெண்ணுக்கோ கல்லூரியில் ப்ராஜெக்ட் வேலைக்குக் கணினி தேவை. இந்த லட்சணத்திலே நாம் வேறே வந்து கை வண்ணத்தைக் காட்டறோமேன்னால் என்ன செய்யறது? எல்லாம் அவங்க Head Letter இப்படி இருக்கே? என்னோட பெண்ணும், பையனும் என்னை accident prone என்று சொல்வதுண்டு. எல்லாம் ARCHIE COMICS அதிகம் படிச்சதாலேன்னு நினைக்கிறேன். ஹிஹிஹி, நானும் போட்டி போட்டுக்கிட்டு படிக்கிறதுண்டு. இப்போக் கூட பழைய ARCHIE அதுவும் teen age ARCHIE தான் எனக்குப் பிடிக்கும். ஏன் என்றால் என்னோட வயசு இல்லையா? அதான்.

சில நாள் முந்தி மிஸ்டர் பீன் பார்த்துக்கிட்டு இருக்கும்போது ஒரு நாள் வந்தது பாருங்க மிஸ்டர் பீன் துணி துவைக்கும் விஷயம் பத்தி. Common Laundryயில் அவர் துணி துவைப்பதைக் காட்டினார்கள். அதிலே சிலசமயம் தவறுவது சகஜம் தான். ஆனால் நான் ஹூஸ்டன் போனப்போ துணி துவைச்சேன் பாருங்க, அதுக்கு ஈடு ஏதும் கிடையாது. 2004-ம் வருஷம் அக்டோபரில் 25-ம் தேதி ஹூஸ்டன் போய்ச் சேர்ந்தோம். 3 வருஷம் கழிச்சுப் பையன் எங்களைப் பார்க்கிறான். அபார்ட்மெண்ட் டைப் வீடுகள். ஹூஸ்டனின் இருதயப் பகுதியில் அமைந்திருந்தது. எல்லாம் நல்லாத்தான் இருந்தது. பெரிய பாத்ரூம், நம்ம ஊரிலே இரண்டாய்ப் பிரித்து வாடகைக்கு விட்டிருப்பாங்க. போனதும் பையன் நான் சமைக்கிறேன், நீ ரெஸ்ட் எடுத்துக்கோன்னு சொல்லிட்டான். எனக்கும் jetlog ரொம்பவே இருந்தது. சாயங்காலம் போனோம் ஹூஸ்டனுக்கு. இந்தியாவில் அப்போ காலை என்பதால் எனக்குத் தூக்கமே வரலை. என்னத்தை ரெஸ்ட் எடுக்கிறது? சாப்பிட்டுப் படுத்தோம். விடிகாலையிலே தூக்கம் சொக்கியது. கொஞ்ச நேரம் தூங்கி விட்டுப் பையன் அலுவலுக்குச் செல்லும் சமயம் எழுந்தேன். அவன் சமையல் அறையில் மின் அடுப்பை எப்படி உபயோகிப்பது என்று சொல்லிவிட்டு, ஓரளவு தெரியும் என்றாலும், கொஞ்சம் பயம்தான். "மற்றப் படி நீ பார்த்துக்கோ, மத்தியானம் சாப்பிட வருவேன்"னு சொல்லிப் போனான். நான் தூக்கக் கலக்கத்தோடேயே குளிக்கப் போனேன்.பாத்ரூமிலேயே வாஷிங் மெஷின் இருந்தது. முதல்நாள் சாயங்காலம் குளித்துவிட்டுப் பட்டுப் புடவை கட்டி இருந்தேன். அதைத் துவைக்க எடுத்து வைத்து விட்டுக் குளித்து விட்டு வாஷிங் மெஷினில் துணிகளைப் போட்டேன்.அங்கே வாஷிங் முடிந்து, துணிகள் எல்லாம் spin ஆகி அரை ஈரத்துடன் வந்ததும் drier-ல் போட்டால் துணி நன்கு காய்ந்து சூடாக வெளியே எடுக்கலாம். Washer, drier தனித் தனியாக இருக்கும்.

துணிகளைப் போட்டு விட்டு வந்து குக்கரை வைத்தேன். நல்ல சேலம் ஸ்டீல் குக்கர். இங்கே எல்லாம் இந்த மாதிரி அழுத்தமான தரமான குக்கர் வருவது இல்லை. சாதம் அதிலே வைத்து விட்டுப் பருப்பை ஒரு நான் -ஸ்டிக் பாத்திரத்தில் நேரடியாகப் போட்டு விட்டு மற்றவேலைகளைக் கவனிப்பதற்குள் வாஷிங் மெஷின் கூப்பிட்டது. சரினு உள்ளே போய்த் துணிகளை எடுத்தால் என்னோட பட்டுப் புடவையைக் காணோம். அதுக்குப் பதிலாய்ச் சின்னதாய் ஒரு ஜரிகை போட்ட சிவப்புக் கைக்குட்டை வடிவத்தில் ஒரு துணி இருந்தது. இது என்னன்னு யோசித்துக் கொண்டே எல்லாத்தையும் டிரையரில் போட்டேன். சற்றுப் பொறுத்து வந்து ட்ரையரில் இருந்து துணிகளை எடுத்தால் சிவப்புக் கலரில் நீளமாய் ஒரு ரிப்பன் வருகிறது. நான் போட்ட சத்தத்தில் பயந்து போன என் கணவர் ஓடி வந்தார். "ஏன், என்ன ஆச்சு?" "என்னோட புடவையைக் காணோம்." இது நான். "என்ன புடவை? நேத்துக் கட்டினாயே, அந்தப் பட்டுப் புடவையா?" அவர். "ஆமாம், இங்கே யார் ரிப்பன் வச்சுக்கறாங்க? இதோ பாருங்க, சிவப்புக் கலரில் ஒரு ரிப்பன் வந்திருக்கு"ன்னு சொன்னேன். அவர் வாங்கிப் பார்த்து விட்டுச் சிரிக்க ஆரம்பித்தார். நான் முறைத்தேன். "நேத்தே உன்னைப் பட்டுப் புடவை வேண்டாம்னு சொன்னேனே?" என்றார். இந்தக் கலாட்டாவில் சாதம் வைத்ததே மறந்து போச்சா? ஏதோ தீயற வாசனை வந்தது. வந்து பார்த்தால் குக்கர் புகை விடுது. கடவுளே!ன்னு தலையில் கை வைத்து உட்கார்ந்தேன். இப்போவே மணி 11-00 ஆகி விட்டது. 12 மணிக்குப் பையன் சாப்பிட வருவானே?

Thursday, December 21, 2006

மன்னிப்பு, வேண்டுகிறேன்.

போன பதிவில் "ஓம் நமச்சிவாயா" தவறுதலாய்க் காப்பி, பேஸ்ட் பண்ணும்போது இங்கே வந்து விட்டது. அதனாலோ என்னவோ சில பின்னூட்டங்களும் இருந்தன. ஆனால் அது தெரியாமல் நான் எடுத்து விட்டேன். பின்னூட்டம் கொடுத்தவர்கள் யாராக இருந்தாலும் மன்னிக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன். அன்று இணைய இணைப்புச் சரியாகக் கிடைக்காத காரணத்தால் நேர்ந்த தவறு. மீண்டும் மன்னிக்க வேண்டுகிறேன்.

Sunday, December 17, 2006

கனவு நனவானது.

வேறே யாருக்குன்னு நினைக்கறீங்க? எல்லாம் நம்ம அம்பியோட கனவுதான். நனவாயிட்டது. என்னோட கணினி வர இன்னும் குறைஞ்சது 10 நாளாவது ஆகும். அவர் எந்தப் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைச்சாரோ தெரியலை. ஆனால் என்னோட ரசிகர்கள்தான் ரொம்பக் கஷ்டப் படறாங்கன்னு நினைக்கிறேன். ஹிஹிஹி, எனக்கும் ரசிகர்கள் எல்லாம் இருக்காங்கன்னு ஆச்சரியப் படறீங்களா? முதல் ரசிகர்கள் நம்ம கைப்புள்ளையும், கார்த்திக்கும். 2 பேரும் என்னவோ நான் எழுதறது தமிழ்னும் நான் தமிழில் ரொம்பத் தேர்ச்சி பெற்றவள்னும் நினைக்கிறாங்களே? அதான் சொன்னேன். அதிலும் நம்ம கைப்புள்ள அதியமான் என்றால் நான் ஒளவை. அவர் பாரி வள்ளல் என்றால் நான் கபிலர். அவர் கோப்பெருஞ்சோழன் என்றால் நான் பிசிராந்தையார். (இந்த அம்பியோட மாத்தையார் வேலை எல்லாம் பலிக்காது.) கார்த்திக்கைப் பத்திச் சொல்லவே வேணாம். பதிவுக்குப் பதிவு ஏதாவது ஒரு விஷயத்தில் எனக்கு இலவச விளம்பரம் தரத் தவறுவது இல்லை. அதான் ரொம்பப் பெருந்தன்மையோட அவரோட முதல் அமைச்சர் பதவியை ஏத்துக்கிட்டேன். எல்லாம் அவரோட பக்தி உணர்வைப் பாராட்டறதுக்குத் தான். அப்புறம் நம்ம SKM, உமாகோபு, சமீபத்தில்தான் சிநேகம் ஆனாலும் இரண்டு பேரும் ஏதோ சொந்தம் போல ஆயிட்டாங்க. ரொம்பவே என்னோட பதிவைக் கொண்டாடறாங்க. (இல்லைனு சொல்லி மானத்தை வாங்கிடாதீங்க).

அப்புறம் நம்ம வேதா(ள்) கேட்கவே வேணாம், 2 நாள் எழுதலைன்னாக் கூட உடனே தொலைபேசுவாங்க. அவ்வளவு பாசம். உடம்பு முடியாதப்போக் கூடத் தொலைபேசிக் கேட்டாங்கன்னா பாருங்களேன். இந்தப் பாசமழை மட்டும் இல்லைன்னா என்னால் எழுதவே முடியாது. இதைத் தவிர, என்னோட அண்ணா பையன் ஒருத்தன் துபாயிலே இருக்கான். அவன் என்னடாவென்றால் தீக்குளிக்கிற ரேஞ்சுக்கு ஒரு தொண்டர் படையே திரட்டி வச்சிருக்கான். நான் அனானி பின்னூட்டம் ஏத்துக்கறதில்லை. இல்லாட்டி அனானி பேரிலே பின்னூட்டம் கொடுப்பான், பாவம் என்னைக் கேட்டுப் பார்த்தான். அதெல்லாம் அனானிக்குக் கொடுக்கப் போறதில்லைனு சொல்லிட்டேன். விட்டால் துபாயிலே இருந்து வரதுக்குள்ளே எனக்குச் சிலை எடுப்பான்னு நினைக்கிறேன். நான், " சிலை எல்லாம் வேண்டாம்பா, சும்மா குஷ்பூ கோவிலை விடப் பெரிசாவோ அல்லது எம்.ஜி.ஆர். கோவிலை விடக் கொஞ்சம் சின்னதாவோ ஒரு கோவில் கட்டிடு. நானே வந்து மூலஸ்தானத்திலே உட்கார்ந்து அருள் பாலிக்கிறேன்"னு சொல்லலாம்னு இருக்கேன்.

ஆகையால் அம்பி, ச்யாம் போன்றவர்கள் அதிகம் சந்தோஷப்படவேண்டாம். எனக்குத் தொண்டர் படையில் இருந்து குண்டர் படை வரை இருக்கு. சீக்கிரம் வந்து உங்களை எல்லாம் ஒரு கை இல்லை இரண்டு கை பார்க்கிறேன். அது வரை enjoooooooooyyyyyyyy!

Monday, December 11, 2006

ஊர்மிளையின் விரகம்-லாவண்யாவுக்காக

ராமாயணத்தில் பேசப்படும் கதாபாத்திரங்களில் ராமர், சீதை, ராவணன் தவிர, கைகேயி, கெளசல்யா, சுமித்திரா போன்றவர் இருந்தாலும் அதிகம் பேசப்படாத கதாபாத்திரங்களில் ஒன்று லட்சுமணனின் மனைவியான ஊர்மிளை ஆவாள். சீதையுடன் ஜனகரின் மற்ற புத்திரிகளான மாண்டவி, பரதனையும், ஊர்மிளை லட்சுமணனையும், சுருதகீர்த்தி, சத்ருக்கனனையும் மணந்தார்கள். இதில் மாண்டவியும், சுருதகீர்த்தியும் தத்தம் கணவன்மார்களோடு இருக்க, சீதையோ ராமனுடன் வனவாசம் போனாள். இதில் தனித்து விடப்பட்டது லட்சுமணனின் மனைவியான ஊர்மிளை ஆவாள். அவள் லட்சுமணனைப் பிரிந்து எவ்வாறு துன்பப்பட்டாள் என்பதைக் குறிப்பதே "சாகேத்" எனப்படும் ஹிந்தி மொழியிலான கவிதைத் தொகுப்பு. ஸ்ரீமைதிலிசரண்குப்தாவினால் எழுதப்பட்ட இந்தக் கவிதைத் தொகுப்பு 12 அத்தியாயங்களால் ஆனது. இதை எழுத அவருக்குக் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் பிடித்தது. 1914-ல் எழுத ஆரம்பித்தவர் 1931-ல்தான் முடித்திருக்கிறார். கிட்டத்தட்ட ராமாயணக் கதைகளின் அடிப்படையிலேயே ஒரு புது நோக்கோடு செல்லும் இந்தக் கவிதைத் தொகுப்பின் நோக்கம் "ஊர்மிளையின் விரகம்" என்னும் உள்நோக்கத்தைக் குறித்தே செல்லுகிறது.
இதில் 9-வது அத்தியாயத்தில் ஆரம்பித்துப் பத்தாம் அத்தியாயமும் ஊர்மிளை தன் விரகத்தை நினைப்பதைக் குறிப்பதோடு பின் 11, 12-ல் ஸ்ரீராமர் திரும்புவதையும், லட்சுமணன் ஊர்மிளையுடன் சேருவதையும் குறிக்கிறது.

இது வரை யாரும் தொடாத இந்தப் பாகத்தை எழுதிய கவிஞர் ஊர்மிளை எப்படி தைரியமாகத் தன் கணவனின் பிரிவை ஏற்றுக் கொண்டாள் என்பதை இவ்வாறு குறிப்பிடுகிறார். ஊர்மிளை தன் கணவனுடன் சந்தோஷமாய் இருப்பதைக் குறிப்பிடும் கவிஞர் அடுத்த நாளே கைகேயியின் வேண்டுகோளை நிறைவேற்ற ராமர் வனவாசம் செல்வதையும், கூடவே லட்சுமணனுன் தயாராவதையும் குறிப்பிடுகிறார். அந்தச் சமயம் தசரதன் தன் சத்தியம் நிறைவேறுவதிலும், கெளசல்யா தன்னுடைய பிரேமையைக் காட்டுவதிலும், சுமித்திரை ஒரு க்ஷத்திரியப் பெண்ணாகத் தன் வைராக்கியத்தைக் காட்டுவதிலும், சீதை தன் கணவனுடன் சென்று தன் பதிவ்ரதைத் தனத்தை நிரூபிப்பதிலும் கவனமாய் இருக்க ஊர்மிளையைப் பற்றி நினைத்தவர் யார்? லட்சுமணன் ஒருவனைத் தவிர? ஊர்மிளையின் நிலையைப் பார்த்த லட்சுமணன் அவளைப் புரிந்து கொண்டு தன் மனத்தில் இவ்வாறு நினைக்கிறானாம். கவியின் வார்த்தைகளில் பார்ப்போமா?
"ரஹோ, ரஹோ, ஹே ப்ரியே, ரஹோ!
யஹ பி மேரே லியே ரஹோ!"
என்று தன் மனத்தினால் ஊர்மிளைக்குக் கட்டளையிட, அல்லது வேண்டுகோள் விடுக்க அதைப் புரிந்து கொள்கிறாளாம் ஊர்மிளை, தன் கணவன் எண்ணம் என்னவென்று.
வஹ பி சப் குச் ஜான் கயி!
விவஷ் பாவ் ஸே மான் கயி! அடுத்த கணமே தன் மனத்தைத் திடப் படுத்திக் கொண்டு மனதுக்குக் கட்டளை இடுகிறாள்,
"ஹே மன்! தூ ப்ரிய-பத் கா விக்ன ந பன்!" மனதில் எவ்வளவு வைராக்கியம் இருந்தால் இம்மாதிரி ஒரு எண்ணம் ஏற்படும்?

என்றாலும் லட்சுமணன் காட்டிற்குச் சென்றதும் ஊர்மிளைக்கு அவன் பிரிவைத் தாங்க முடியவில்லை. சீதையோ என்றால் தன் கணவனுடன் இருந்தாள். அதனால் அவளுக்கு வனமும் நந்தவனம் ஆகி விட்டது. ஊர்மிளையோ நந்தவனத்தில் இருந்தாலும் வனத்தில் இருப்பது போல் உணர்வதோடு அல்லாமல் தன் கவனிப்பு இல்லாமல் நந்தவனச் செடிகள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதையும் உணர்கிறாள். தன் தோழியரைக் கூப்பிட்டு வாடும் நந்தவனச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றச் சொல்கிறாள். லட்சுமணன் பிரிவால் வாடும் அவள் மனமாகிய நந்தவனச் செடி மலர்வது எப்போது? இந்த இடத்தில் கவி சொல்கிறார். ரகுகுலத்திற்கே ஒரு திலகம் போன்றவள் ஊர்மிளை என்றும், அவளால் ரகுகுலத்திற்கு ஏற்பட்ட களங்கம் துடைக்கப் பட்டது என்றும் சொல்கிறார். கைகேயி தான் வாழ்க்கைப் பட்ட ரகுகுலத்தின் நல்வாழ்வைப் பற்றி நினையாமல் சுயநலத்துடன் இருந்தது போல் அல்லாமல் தன் சுகத்தைப் பற்றி நினைக்காத ஊர்மிளை மிகவும் உயர்ந்து விட்டாள். பிரிவாற்றாமை என்னும் நெருப்பில் வெந்து கொண்டிருந்த ஊர்மிளை தன் தியாகத்தால் புடம் போட்ட பொன்னைப் போல் ஒளிர்ந்தாள் என்கிறார் கவிஞர். அவள் கண்களில் லட்சுமணன் தான் எப்போதும் தெரிகின்றான். தனக்கு வேண்டிய சுகதுக்கங்களை மறந்த அவள் தன்னையே மறந்தாள். யோகசாதனை செய்பவர்கள் தன்னை மறந்து தன் யோக சாதனையின் உச்சகட்டத்திலேயே நினவு வைத்திருப்பதைப் போல் அவள் தன் பெயரையும் மறந்தாள், தன்னையும் மறந்தாள்.
"தன்னை மறந்தாள், தன் நாமம் கெட்டாள்!
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!" என்று நாவுக்கரசர் சொன்னதைப் போல் ஊர்மிளை தன்னை மறந்து தன் பெயரையும் மறந்து இருந்தாள். "ருதந்தி" என்னும் வேர் பண்டைய நாட்களில் ரசவாதத்துக்கு உபயோகப்பட்டது என்றும், அதன் ரசத்தைப் பிழிந்துத் தாமிரப் பாத்திரத்தில் இட்டு அக்னியில் காய்ச்சினால் தங்கம் கிடைக்கும் என்றும் சொல்வார்கள். அது போல ஊர்மிளையின் கண்ணீரான ரசத்தில் அவள் கற்பாகிய நெருப்பில் பொசுங்கித் தங்கம் போல் ஒளிர்ந்தாள் என்கிறார் கவிஞர். அவள் உள்ளமாகிய சமுத்திரத்தில் மூழ்கிய லட்சுமணனின் நினைவுகளால் அவள் கண்களில் இருந்து மழைபோல் கண்ணீர் பெருகுவதாய்க் குறிப்பிடுகிறார்.

அவள் நினைவில் தன் சிறுபிராய நினைவுகள் மோதுகின்றன. தானும், சீதையும், மாண்டவியும், சுருதகீர்த்தியும் விளையாடியதும், தாங்கள் நால்வரும் சகோதரர் நால்வரைத் திருமணம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டதையும் தன் திருமணம் பற்றிய நினைவுகளும் தோன்றுகின்றன அவள் உள்ளத்தில். பின் ராம, ராவண யுத்தத்தைப் பற்றி வசிஷ்டர் தான் அறிந்ததைக் கூறுகிறார். ராமர் திரும்புவதைப்பற்றியும் கூறுகிறார்.

பின் ராமர் அயோத்தி திரும்பும்போது கூடவே திரும்பும் லட்சுமணனைப் பார்த்து அப்படியே நிற்கிறாள் ஊர்மிளை. சீதை தன் தங்கையின் நிலையைப் பார்த்து அவளைப் புதுத் துணிகள் அணிந்து வருமாறு கூற அதற்கு அவள் இவ்வாறு கூறுவதாய்க் கவிஞர் கூறுகிறார்:
"நஹி, நஹி, ப்ராணேஷ் முஜி ஸே சலி ந ஜாவே!
மை ஜைஸா ஹூம் நாத் முஜே வைஸா ஹி பாவே!"
என்கிறாள். அதற்கு லட்சுமணன் சொல்வது என்னவென்றால்,
வஹ வர்ஷா கி பாட் கயி, உஸ்கோ ஜானே தோ!
ஷுச்சி-கம்பீரதா பிரியே! ஷரத் கீ யஹ ஆனே தோ!"
ஊர்மிளை சொல்வது" நான் எப்படி இருக்கின்றேனோ அப்படியே என் ஸ்வாமி என்னை ஏற்றுக் கொள்ளட்டும்" என்று. லட்சுமணன் அவளைச் சமாதானப் படுத்துகிறான், "போனது போகட்டும், இனி நம் வாழ்வில் வசந்தம் தான்!" என்று. ஒரு பெரிய நீண்ட பிரிவுக்குப் பின் இருவரும் கூடுவதோடு முடிகிறது.

லாவண்யா கேட்டுக் கொண்டதுக்கிணங்க எனக்குத் தெரிந்த வரை எழுதி இருக்கிறேன். கவிதை முழுதும் கிடைக்கவில்லை. கிடைத்ததில் எனக்குப் பிடித்த வரிகளை மட்டும் எழுதி இருக்கிறேன். இதைப் படிக்கும்போது நம்மால் கண்ணீரை அடக்க முடியாது, இம்மாதிரி வெளியில் சொல்ல முடியாத அளவு தியாகங்களைப் புரிந்தவர்கள் நம்மிடையே இன்றும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட" UNSUNG HEROES" எல்லாருக்கும் நம்முடைய உள்ளார்ந்த வணக்கங்களைச் சமர்ப்பிப்போம்.

Thursday, December 07, 2006

கலைந்த சுருதி

சுருதி கலைந்ததா? என்றால் என்னைப் பொறுத்தவரை ஆம் என்றுதான் சொல்வேன். என்ன செய்யறது? பழைய மாதிரி எதுவுமே இல்லை. இப்போ எல்லாமே மாறி இருக்கு. என்னைப் பொறுத்த வரை எப்பவும் போல் தான் இருக்கேன். ஆனாலும் என்னால் உணர முடிகிறது மாற்றங்களை. இது எதனால்? எப்போ நேர்ந்தது? எப்படி நேர்ந்தது? தெரியாது. எங்கோ எதிலோ ஒரு இழை மாறி இருக்கிறது. அல்லது ஒரு சின்னத் தவறு நம்மை அறியாமல் நேர்ந்திருக்க வேண்டும். புரியாமல் இருக்கலாம் அல்லது புரிந்து கொண்டு இனிமேல் தொடரவேண்டாம் என்றும் இருக்கலாம். எல்லாம் நேரத்தைப் பொறுத்துத் தான் அமையும்.

நான் பதிவுகள் எழுத ஆரம்பித்தது தற்செயல்னு எல்லாம் சொல்ல மாட்டேன். சுமார் 2 வருடங்களாகவே இதைப் பத்தி ஓரளவு தெரியும். விகடனில் "கற்றதும் பெற்றதும்" எழுதி வந்த திரு சுஜாதா இங்கே நடக்கும் விவாதங்களைப் பற்றியும் அவ்வப்போது எழுதுவார். "பொன்னியின் செல்வன்" குழுவைப் பற்றிய அறிமுகம் "கல்கி" பத்திரிகை வாயிலாகக் கிடைத்தது. கல்கியிலேயே திரு இரா.முருகன் எழுதி வந்த வலை உலக விமரிசனங்களையும் படித்து வந்திருக்கிறேன். இப்போவும் வந்து கொண்டிருந்தது. சில வாரங்களாய் வருவது இல்லை. அப்போவெல்லாம் கணினி வாங்குவதைப் பற்றி நினைத்துக் கூடப் பார்த்தது இல்லை. அப்புறம் கணினி வாங்கி கிட்டத் தட்ட ஒரு வருஷம் ஆகப் போகும் சமயம் தான் திடீரென என் பெயரில் ப்ளாக் ஆரம்பித்து வைத்தேன். ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் தான் எழுத முடிந்தது. அப்புறம் தமிழில் எழுத டோண்டு சாரில் இருந்து, வெ.வ.வா. ஜீவா, சூப்பர் சுப்ரா , மஞ்சூர் ராஜா வரை உதவ தமிழ் வர ஆரம்பித்தது.

இதெல்லாம் ஒரு பதிவா? மொக்கை என்று அம்பி சொன்னாலும் அவை எனக்கு எரிச்சல் மூட்டுவதற்கு வேண்டுமென்று சொல்வது என்று புரிந்து கொள்வேன். அம்பி இப்போ தங்கமணி பற்றிய கனவுகளில் மூழ்கி இருப்பதால்தான் எதுவும் எழுத முடியவில்லை. ஆஃபீஸ் வேலை என்பதெல்லாம் சும்மா, உள உளாக்கட்டிக்கு. அப்புறமும் அவர் தங்கமணியைக் கேட்டுக் கொள்ள வேண்டும், எழுத அனுமதி வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். தங்கமணியும் எழுத ஆரம்பித்தால் பிரச்னை இல்லை. என்னைப் பொறுத்த வரை நான் எழுதுவது எல்லாமே கிட்டத் தட்ட என் கணவருக்குத் தெரியும். இன்னும் சொல்லப் போனால் பின்னூட்டங்களில் இருந்து எல்லாமே அவரிடம் சொல்லுவேன். சில விஷயங்களை எப்படி எழுதினால் சரியாக இருக்கும் என்று பேசித் தெரிந்து கொள்வேன். இந்த வலை உலகில் நடக்கும் எல்லா விஷயங்களும், அவற்றுக்கு நான் அளிக்கும் பின்னூட்டங்களும், எனக்கு வரும் பின்னூட்டங்களும், இ-மற்றும் எறும்பு மெயில்களும் காட்டுவேன். ரொம்பவே அபூர்வமாய்ச் சிலசமயம் நான் யாரிடமாவது "சாட்"டிக் கொண்டிருக்கும்போதோ அல்லது ஏதாவது எழுதும்போதோ கிட்டே உட்கார்ந்து பார்ப்பார். அதன் மூலம் என்னோட வலை உலக நண்பர்கள் பற்றிய அறிமுகமும் கொடுத்திருக்கிறேன். என்ன, பேர் சொன்னால் புரிந்து கொள்ள மாட்டார். மற்றபடி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி அறிமுகம் கொடுத்திருப்பதால் அதை வைத்துப் புரிந்து கொள்வார். இப்போ லேட்டஸ்டா வந்திருக்கிற "உமாகோபு" மற்றும் SKMல் இருந்து எல்லாரையும் பற்றிச் சொல்லி இருக்கிறேன். உமாகோபுவிற்கு அறிமுகம் "மைலாப்பூர் மாமி" என்றும் SKMற்கு அறிமுகம் யு.எஸ். மாமி என்றும் (ஹிஹிஹி), சொன்னால் புரிந்து கொள்வார். கூடவே எஸ்கேஎம் பெண் இந்தியாவில் படிப்பதையும் நினைவு படுத்த வேண்டும். இதனால் என்ன பிரயோஜனம் என்றால் என்னைத் தேடி வரும் நண்பர்களுடன் அவரும் தடங்கல் இல்லாமல் பழக முடியும் இல்லையா? இல்லாவிட்டால் அவர் ஏதோ உலகிலும், நான் ஏதோ உலகிலும் தனித்து இருக்க வேண்டி இருக்கும்.

சுருதியைக் கூட்ட முயன்றிருக்கிறேன்.சரியா இருக்கா இல்லையா? நீங்க எல்லாம் தான் சொல்லணும், அப்புறம் இன்னொரு விஷயம் அம்பி இனிமேல் அடிக்கடி சென்னை வர நேரலாம். ஒவ்வொரு முறையும் என்னோடு பேச இனிமேல் யோசிப்பார் என்று நினைக்கிறேன். எல்லாம் ஒரு பாதுகாப்புக்குத் தான் இல்லையா அம்பி? இது கொஞ்சம் திடீர்னு தான் முடிக்கிறேன். திரும்ப வந்தாலும் வரும். பார்க்கலாம், வர்ட்டா?

Wednesday, December 06, 2006

கார்த்திக் கேட்டது இதுவா?

முதலில் ஒரு சின்னக் கவிதை. எனக்குப் பிடிச்சது. இதை முன்னேயே எழுதிட்டு இருந்தப்போ திடீர்னு மின்சாரம் போயிட்டது. சேமிப்பில் போட்டேன். ஆனால் சரியாக சேமிப்பு ஆகவில்லை.முதலில் நிறைய எழுதி இருந்தேன். இப்போ திரும்ப எல்லாம் எழுதும்படி ஆயிடுச்சு. எல்லாம் HEAD LETTERதான் வேறே என்ன? அப்புறம் இணைய இணைப்பு வராமல் போய் ஒரே தொந்திரவுதான். இப்போ கூட அடிக்கிறச்சே ரொம்பத் தகராறு தான். தப்பு வராமல் அடிக்கிறவள் இப்போ சரியா எழுத்து விழாமல் ரொம்பவே திரும்பத் திரும்ப அடிக்க வேண்டி இருக்கு.இப்போ கவிதையைப் பார்ப்போம். இருக்கவே இருக்கு என்னோட புலம்பல்.இதோட மூணாவது முறையாப் போயிடுச்சு. எல்லாம் சேமிப்புக்கே போக மாட்டேங்குது. என்னன்னே தெரியலை.

"சிரிப்பினால் என் உதடுகள் அகன்றிருப்பதால்,
பாட்டினால் என் குரல் ஆழ்ந்து ஒலிப்பதால்,
இவ்வளவு நீண்ட காலம் என் வேதனையைப்
பொறுத்திருப்பதால் நான் துன்புறுகிறேன் என்று
நீ நினைக்காமல் போனாயா?

சிரிப்பினால் என் உதடுகள் அகன்றிருப்பதால்
என்னுள்ளிருந்து வருகின்ற அழுகை உனக்குக்
கேட்காமல் போயிற்றா?
நடனத்தில் என் பாதங்கள் திளைத்திருப்பதால்
நான் செத்துக் கொண்டிருக்கிறேன் என்று
உனக்குத் தெரியாமல் போயிற்றா?" இந்தக் கவிதையை எழுதியது நீக்ரோக் கவிஞர் லாங்ஸ்டன் ஹ்யூஸ் என்பவர். நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் 'UNCLE TOM'S CABIN" என்ற ஆங்கிலத் துணைப்பாட நூல் படிக்கும் சமயம் எங்கள் ஆங்கில ஆசிரியை எங்களுக்குக் கற்பித்த பாடல் இது. இதன் ஆங்கில மூலம் தொலைந்து விட்டது. இப்போ கார்த்திக் கேட்டது மூன்றாவது முறையாக எழுதுகிறேன். எல்லாருக்கும் சுலபமாக இருப்பது எனக்கு என்னவோ ரொம்பவே கஷ்டப் பட வேண்டி இருக்கிறது. எல்லாம் பாதி எழுதும்போதே மின்சாரத் தடை வந்து விடுகிறது. சிலசமயம் உடனேயே வருகிறது. சிலசமயம் வோல்டேஜ் சரியில்லை. அதனாலே எங்க வீட்டு டி.வி. கூட இப்போ ரிப்பேருக்குக் காத்திருக்கிறது. சுதந்திரம் வந்து இவ்வளவு நாள் ஆகியும் ஒரு மின்சாரம் தடை இல்லாமல் ஒரே சீராக விநியோகம் செய்ய முடியவில்லை நம்ம அரசுகளால்.
**********************************************8
பிடிச்ச வாசனை: சின்னப் பூப்போன்ற குழந்தைகளிடம் இருந்து வரும் வாசனை. இப்போ உள்ள ஜான்ஸன்ஸ் பேபி சோப், பவுடர் இல்லை. ஒரிஜினல் ஸ்ரீவில்லிபுத்தூர் வாசனைச்சக்கைப் போட்டுத் தேய்த்துக் குளிப்பாட்டி விட்டச் சின்னக் குழந்தையின் வாசனை.
2.எங்க வீட்டுத் தோட்டத்தில் பவளமல்லிச் செடி இருக்கும்போது அதன் பூ இரவில் மலரும்போது அதோடு சேர்ந்து வரும் மல்லிகைப் பூவின் வாசனையும் சேர்ந்து.
3. பாக்குப் பழம் பழுக்கும்போது வரும் சுகந்தமான வாசனை.

பிடிக்காத வாசனை: சிகரெட்டின் துர்நாற்றம். பொதுவாய்த் தமிழில் நாற்றம் என்றால் நல்ல மணம், நறுமணம் என்று தான் அர்த்தம்.
பூண்டின் வாசனை.
சர்க்கரை ஆலைகளில் இருந்து வரும் கழிவுகளின் துர்நாற்றம்.

பிடித்த வேலை: எல்லா வேலையும் பிடிக்கும். பிடிக்காதுன்னு ஒண்ணும் கிடையாது. என்ன, என்னால் செய்ய முடிந்த வேலையாக இருக்கணும். அதான், பொதுவாய் நான் ஒரு workaholicனு தான் என்னோட பொண்ணு சொல்லுவா.
பிடிக்காத வேலை: சும்மா உட்கார்ந்திருப்பது தான் பிடிக்காத வேலை.ஏதாவது படிக்கவாவது படிக்கணும்.

பிடிச்ச படம்: பப்படம் தான். ஹிஹிஹி, பிடிச்ச படம் எல்லாம் முன்னாடியே எழுதி இருக்கேன். இருந்தாலும் நீங்க கேட்கிறதாலே சில விளம்பரப் படங்கள்.
1.ப்ரூ விளம்பரத்தில் வரும் பெண்ணின் "ஸ ஸ ஸ ஷுகர் போதுமாப்பா?" என்ற கேள்வியும், அவளோட அப்பாவின் பதிலும்.
2.அதே ப்ரூ விளம்பரப் பெண் தனக்குக் குழந்தை பிறக்கப் போவதைச் சின்னக் கப்பை வைத்துக் கொண்டு கணவனுக்குத் தெரியப் படுத்தும் இடம். அந்தப் பெண்ணின் இயல்பான நாணமும், மகிழ்ச்சியும் சற்றும் செயற்கையாக இருக்காத ஒன்று. ரொம்பவே இயல்பான ஒன்று.கவிதை!
3.ரேமாண்ட்ஸ் விளம்பரத்தில் வரும் இளம் தந்தை. குழந்தையைக் கொஞ்சும்போது, "feeling heavens. Isn"t it?" என்ற கேள்வி வருவது. இன்னும் ஹட்ச் நாய்க்குட்டியும், தாரா பையனின், "ஜிலேபி?" என்ற ஆச்ச்சரியமான கேள்வியும் கவிதைகள்.
ம்ம்ம்ம்ம்ம், படம்னு கேட்டிருக்கிறதாலே சில கார்ட்டுன் படங்கள் சொல்றேன். நான் சின்னப் பொண்ணுதானே. அதனாலே கார்ட்டூன் படங்கள் ரொம்ப விரும்பிப் பார்ப்பேன்.
1.Tom and Jerry இதை அடிச்சுக்க ஆள் கிடையாது இன்னி வரைக்கும்.
2.Finding Nemo அப்பா மீனின் தவிப்பும், அழுகையும் திரும்பத் திரும்பப் பார்க்கும். உணர்ச்சி வசப்படும் மீன்களின் கவிதை இது. எத்தனை முறை வேணுமானாலும் பார்க்கலாம்.
3.MR.Bean: இவர் செய்யும் எது நமக்குப் பிடிக்காது? எல்லாமே பிடிக்கும். இருந்தாலும் சமீபத்தில் பார்த்தது ஒன்று. ஒரு குழந்தையைத் தவறுதலாகப் பிராம்புலேட்டருடன் தள்ளிக் கொண்டு வரும் திரு பீன் அந்தக் குழந்தையின் அழுகையைச் சமாதானப் படுத்தும் அழகு இருக்கிறதே! குழந்தையைச் சமாதானப் படுத்த நிறையப் பலூன்கள் வாங்கிப் பிராமில் கட்டுவதும் பலூன்கள் கட்டப் பட்ட பிராம் மேலே எழும்புவதும், திகைத்துப் போன திரு பீன், உடனேயே வில்லும் அம்பும் வாங்கி ஒவ்வொரு பலூனாக உடைப்பதும் பலூன்கள் உடைபட்ட பிராம் கீழே இறங்குவதைப் பார்த்துப் பயப்பட்டுக் கண்ணை மூடிக் கொள்ளும் பீன் கண் திறக்கும்போது பிராம் குழந்தையின் அம்மா போலீஸ் புகார் கொடுக்கும் சமயம் சரியாகப் போய் இறங்கி விட்டதையும்,. தாயைப் பார்த்தக் குழந்தை சிரிப்பதைப் பார்த்து அவர் சிரிப்பதும் ரொம்பவே நல்லா இருக்கும்.

மறக்க முடியாத நினைவுகள்: மதுரையில் வாழ்ந்த ஒவ்வொரு நாளும் மறக்க முடிந்ததில்லை. தினம் காலை கோயிலில் இருந்து வரும் கோடி அர்ச்சனைப் போற்றி மந்திர வழிபாடும், (எனக்குத் தெரிந்து மதுரையில் தமிழில்தான் வழிபாடு நடந்து வருகிறது.) ஆடி வீதி திருப்புகழ் மண்டபத்தில் நடக்கும் திருப்புகழ் பஜனைகளும், மார்கழி மாதம் திருமதி ராஜம்மாள் சுந்தரராஜன் நடத்தும் திருப்பாவை வகுப்பில் சேர்ந்து, விடிகாலை மூன்று மணிக்கே எழுந்து மதன கோபால ஸ்வாமி கோவிலில் இருந்து கிளம்பும் பஜனையில் கலந்து கொள்ளும் சுகமும், பஜனை முடிந்து திரும்பும் போது கொடுக்கும் வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், சுண்டல் போன்றவற்றின் சுவையும், ஹரிதாஸ் ஸ்வாமிகளின் பஜனையும், வாரியார் ஸ்வாமிகளின் கந்தபுராணச் சொற்பொழிவும், சந்தான கோபாலாச்சாரியாரின் வீணையில் வாசிக்கும் சாம கானமும், சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதரின் நாராயணீயமும், சிவானந்த விஜயலட்சுமியின் ஹரிகதா காலட்சேபமும், கொத்தமங்கலம் சுப்புவின் வில்லுப்பாட்டில் காந்தி மஹான் கதையும் இன்னும் எத்தனையோ இருக்கிறது. எதை விட, எதைச் சொல்ல? கல்யாணம் ஆகி வந்த புதிசில் தண்ணீரில் இருந்து எடுத்து விட்ட மீனைப் போல இது எல்லாம் இல்லாமல் ரொம்பவே தவித்திருக்கிறேன். இப்போவும் அந்த நாட்களை ரொம்பவே இழந்திருக்கிறேன் என்று தோன்றும்.
அப்புறம் எங்க கல்யாணம் ஆனதும் நாங்க நசீராபாத்தில் கழித்த் 7, 8 வருடங்கள். பொற்காலம்னு சொல்லலாம்.

செயல்: மறக்கமுடியாத செயல்னு ஒண்ணும் செய்யலை. வேணும்னா இப்போ கைலை போயிட்டு வந்ததைக் குறிப்பிடலாம். யாருக்காவது ஏதாவது செய்யணும்னாலோ, கொடுக்கணும்னாலோ உடனே கொடுத்துடுவேன், செய்துடுவேன், தள்ளிப் போட மாட்டேன்.

மறக்க முடியாத உணவு: நிறைய இடங்களில் நிறைய விதமான உணவுகள் சாப்பிட்டிருக்கிறேன். அநேகமாய்க் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை எல்லாவிதமான சாப்பாடும் சாப்பிட்டிருக்கிறேன். கிழக்குப் பகுதிக்கு மட்டும் இன்னும் போகலை. இருந்தாலும் சாப்பாடுன்னு வரும்போது, நாங்க கல்யாணம் ஆன புதிசிலே ஒரு முறை டவுனுக்கு வந்துட்டுத் திரும்ப நேரம் ஆகவே, அங்கேயே ஆர்மெனியன் வீதியில் உள்ள "பாலிமார்" ஹோட்டலை ஒருத்தர் சொல்ல அங்கே போய்ச் சாப்பிட்டோம். அது மாதிரிச் சாப்பாடு இதுவரை சாப்பிட்டதில்லை. மறுபடி எத்தனையோ முறை டவுன் பக்கம் போனாலும் அங்கே போக முடிந்ததில்லை. அப்புறம் ஹைகோர்ட் எதிரே உள்ள என் அண்ணாவின் பாங்கிற்குச் சென்றால் பக்கத்தில் உள்ள ஈரானியன் கடையில் தேநீரும்,. சமோசாவும் வாங்கிக் கொடுப்பார். சில சமயம் அங்கே பக்கத்தில் உள்ள "ராமகிருஷ்ணா லஞ்ச் ஹோம்"ல் சாப்பிடுவோம். அதுக்கும் பக்கத்தில் உள்ள"காதி கிராப்டில்" சாயங்கால நேரத்தில் சுண்டலும், சுக்குக் காபியும் கிடைக்கும். இப்போ காதி அதே இடத்தில்தான் இருக்கு. சுண்டலும், சுக்குக் காபியும் இருக்கா தெரியலை.

விரும்பும் இடம்: எங்கே போனாலும் திரும்ப இங்கே தான் வரவேண்டி இருக்கிறது. அதனாலே விரும்பும் இடம்னு எல்லாம் வச்சுக்க முடியலை. இருந்தாலும் மதுரையின் அருகே உள்ள எங்க ஊர் வராக நதிக்கரை ஓரம் உள்ள மேல்மங்கலம் பிடிக்கும். சின்ன வயசிலே சின்னமனூரில் சித்தி வீட்டில் இருந்தப்போ அங்கே உள்ள ஆற்றங்கரையும், சிவன் கோவிலும், பிள்ளையாரும் ரொம்பவே பிடிக்கும்.

அழ வைத்த விஷயங்கள்: நிறையவே இருக்கிறது. நிறையப் பேர் அழ வைத்திருக்கிறார்கள். காரணம் தெரியாமலும் அழுதிருக்கிறேன். ஏமாத்தறது தெரிஞ்சும் ஏமாந்து அழுதிருக்கிறேன். நட்புன்னு சொல்லி முதுகில் குத்தி இருக்காங்க, சொந்தங்களிலும் ஒரு பலி ஆடு ஆக்கப் பட்டிருக்கிறேன். அதெல்லாம் எல்லார் வாழ்விலும் உண்டு. அதனாலே அது வேண்டாம்.

சீர்காழி கோவிந்த ராஜன் பாடும் "சின்னஞ்சிறு பெண்போலே" பாட்டு. அழ வைக்கும் பாட்டு அது. அதுவும் ஒரு முறை ஆடி வீதியில் பாடும்போது, "சிவகங்கைக் குளத்தருகே" என்பதைப் "பொற்றாமரைக் குளத்தருகே" என்றும் "அன்னை சிவகாமி"யை "அன்னை மீனாட்சி" என்றும் பாடினார். அப்போது கிடைத்த standing ovationஐ சமீபத்தில் அருணா சாயிராமிற்குக் கிடைத்ததோடு ஒப்பிடலாம்.

அருணா சாயிராமின் "அபங்க்" கேட்டவர்களுக்குத் தான் அதன் அருமை தெரியும். அந்த husky voiceல் அவர் தன்னை மறந்து இரண்டு கைகளையும் தூக்கிக்கொண்டு கண்ணை மூடிக் கொண்டு பாடும்போது, அதுவும் மராட்டி நன்கு தெரியுமாதலால், நன்கு பாவத்தோடு பாடுவார். அப்போது வரும் உணர்ச்சிப் பிரவாகத்தை வடிக்க வார்த்தைகள் கிடையாது.

அப்புறம் இருக்கவே இருக்கு நம்ம பங்கஜ் உதாஸின் "சிட்டி ஆயி ஹை, வதன் கி சிட்டி ஆயி ஹை" எப்போ கேளுங்க, எத்தனை முறை கேளுங்க, எங்கே கேளுங்க, பெருகி வரும் கண்ணீருக்கு அணை போட முடியாது. சீக்கிரம் பப்ளிஷ் செய்யறேன். இதுவும் போயிடப் போகுது. திரும்பிக் கூடப் பார்க்கலை. அப்படியே போடறேன். தப்பு இருந்தா நான் பொறுப்பு இல்லை.

Monday, December 04, 2006

167. அதனால் என்ன, பரவாயில்லை!

திரும்ப வந்துட்டேன். கொஞ்சம் போர் அடிக்கப் போறேன் வழக்கம்போலே. பொறுத்துக்குங்க. திடீர்னு 23-ம் தேதி காய்ச்சல்னு வந்ததும், சரி, வழக்கமான bronchitis fever தான். இனிமேல் ஒரு 2 மாசத்துக்கு "லொக், லொக்" தான்னு நினைச்சேன். ஆனால் டாக்டர் கிட்டேப் போனால் அவர் இல்லை வைரல் ஜுரம்தான்னு சொல்லிட்டார். 3 நாளிலே சரியாப் போயிடும்னு நினைச்சுத் திங்கள் அன்று கொஞ்சம் உட்காரமுடிஞ்சதுன்னு நினைச்சு வழக்கம்போல் வீட்டு வேலைகளைப் பார்த்தால் முடியவே இல்லை. செவ்வாய் அன்றும் சரியாக இல்லை. அப்புறம் ஆரம்பிச்சது பாருங்க ஒரு தொந்திரவு என் ஆயுளில் அனுபவிக்கலை இது மாதிரி. Severe food poisonஎன்று டாக்டர் சொல்லி விட்டார். புதன், வியாழன் என்ன நடந்ததுன்னே தெரியலை. அவ்வளவு மோசமா இருந்தது. டாக்டர் பார்த்துட்டு நாளைக்குள் சரியாகலைன்னா in-patientஆ வச்சுத் தான் பார்க்கணும்னு சொல்லி இருக்கிறார். வியாழன் அன்று இரவு கொஞ்சம் சுமாராக இருந்தது, வெள்ளி அன்று மறுபடி மோசமாக மருந்துகள் மாற்றப்பட்டன. ஊசிகள் குத்தப்பட்டன. எத்தனைன்னு கணக்கு எல்லாம் கேட்கமுடியாது. அப்புறம் சனி அன்று கண் விழித்துத் தமிழ் சினிமா மாதிரி, "நான் எங்கே இருக்கேன்னு கேட்கலாம்"னு பார்த்தால், என் கணவரும் படுக்கையிலே.

கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டும்னு படுத்திருக்கார்னு நினைச்சு, "என்ன ஆச்சு? ஏன் படுத்திருக்கீங்க?"னு கேட்டா எனக்கும் 2 நாளாகக் காய்ச்சல் இருந்ததுன்னு சொல்றார். சரி, மெல்ல எழுந்து சமையல் அறைப்பக்கம் போகலாம்னு பார்த்தாக் கை, கால் எல்லாம் ஒரே நடுக்கம், நடக்கவே முடியலை. அவர் நீ படுத்துக்கோனு சொல்லிட்டு அவரே எழுந்து எல்லா வேலையும் செய்தார். காய்ச்சல் இருக்கேன்னு கேட்டதுக்கு, 2 நாளா இருந்தது. நேத்திலே இருந்து பரவாயில்லைனு சொல்றார்.என்னத்தைச் சொல்றது? அது கூடத் தெரியாமல் இருந்திருக்கேன். அதுக்குள்ளே தொலைபேசி அழைப்பு. அவர் எடுத்துக் கேட்டுவிட்டு, ஸ்ரீராம், பேசறதுன்னு சொல்லிக் கொடுக்கவும், இப்போதானே வந்துட்டுப் போனான், பங்களூரில் இருந்து நம்மைக் கூப்பிட்டுப் பேசும்படி என்ன விஷயம்?னு ஆச்சரியமா தொலபேசியை வாங்கினேன். கடைசியில் பார்த்தால், இல்லை, இல்லை, முதலில் இருந்தே அது அம்பி தான். அவர் ரொம்ப ஸ்டைலாக, "நான் ஸ்ரீராம் பேசறேன்" னு சொன்னதும் என் கணவர் பங்களூரில் உள்ள எங்க சொந்தக் காரப் பையன்னு நினைச்சிருக்கார். 2 நாளாக தி.ரா.ச. சார் வீட்டில் டேரா என்று சொன்ன அம்பி, குண்டர் படைத் தலைவர், தி.ரா.ச. சார் எல்லாரும் என்னிடம் ஏதேதோ பேச நான் வேறே ஏதோ உலகத்தில் இருந்து அவர்கள் பேசற மாதிரி நினைச்சேன். ஒருமாதிரி, ஒரு மாதிரித் தான் சமாளிச்சுப் பேசி முடிச்சேன்.

இப்போ வானம் நல்லாத் தெளிஞ்சிருக்கிறதாலேயும், வந்து இரண்டு நாள் தான் ஆனதாலேயும்,என்னை வந்து பார்க்க முடியலைன்னு அம்பி சொன்னார். அதனால் என்ன பரவாயில்லை, நல்ல மழை பெய்து கொண்டிருக்கும் சமயம் எங்க தெருவிலே தண்ணீர் மேடு, பள்ளம் தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தால் அப்போ நீங்களே என்னை அம்பத்தூரில் இருந்து கிளம்பி தி.ரா.ச. சார் வீட்டில் உங்களை வந்து பார்க்கும்படிச் சொல்லி இருப்பீங்களேனு சொன்னேன்.(:D) பாவம், எனக்கு மெயில் கொடுத்து விசாரிச்சிருக்கார். நான் அப்புறம் தான் பார்த்தேன். அதிலே தன்னோட சென்னைப் பயணத்தையும் குறிப்பிட்டுவிட்டு என்னை அவசரப்பட்டு எழுத ஆரம்பிக்க வேண்டாம், நாங்க எல்லாம் ரொம்பவே சந்தோஷமா இருந்துக்கிட்டிருக்கோம்னு வேறே குறிப்பிட்டிருந்தார். அதான் கொண்டாட வந்திருக்கார் போல் இருக்குன்னு நினைச்சுக்கிட்டேன். கொண்டாட்டம் எல்லாம் முடிஞ்சு பங்களூர் போயிருப்பார்னு நினைக்கிறேன். அன்னிக்குத் தற்செயலா மெயில் பார்த்தது, அப்புறம் இன்னிக்குத் தான் வரேன்.இந்த வேதா தான் நான் ஒரு 2 நாள் எழுதலைன்னா கூட தொலைபேசுவாங்க. அவங்க என்னமோ இந்த முறை மூச்சு விடவில்லை. ஏதோ ஊருக்குப் போகப் போறதா அவங்க பதிவிலே பார்த்தேன். போயிருப்பாங்கன்னு நினைக்கிறேன். என்னைப் பதிவில் விசாரித்த அனைவருக்கும் என் நன்றி. மற்றபடி தனிப்பட்ட முறையில் விசாரித்த அம்பி, அவரோட தம்பி, தி.ரா.ச. சார், கைப்புள்ள, பாசிட்டிவ் ராமா, காழியூரார், உமாநாத் மற்ற முத்தமிழ்க் குழும நண்பர்கள் எல்லாருக்கும் ரொம்பவே நன்றி. இப்போ கொஞ்சம் பரவாயில்லை, இன்னும் normal diet ஆரம்பிக்கவில்லை. அதனால் என்ன, பரவாயில்லை! இப்படியே இருக்கட்டும். இதுவும் கடந்து போகும்.

166. உள்ளொளி பரவட்டும்!

நேற்றுக் கார்த்திகைத் தீபத் திருநாள். நேற்றே எழுதி இருக்க வேண்டியது. முடியலை. எல்லார் வீட்டிலும் கார்த்திகைத் தீபம் ஏற்றிக் கொண்டாடி இருப்பீங்க, சிலர் இன்னிக்குக் கொண்டாடுவாங்க, எல்லார் வீட்டிலும் தீபங்கள் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிற மாதிரி எல்லார் மனதிலும் அந்த ஒளி சுடர் விட்டுப் பிரகாசிக்கட்டும். "ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி"யான அந்த இறைவனின் உடலில் ஒருபாதி கேட்ட உமையவளின் சக்திச் சுடர் எல்லார் இல்லங்களையும், மனதையும் நிறைக்கட்டும். சிவசக்தி ஐக்கியமே இந்த உலகில் மாறாத உண்மை, தத்துவம். அந்தப் பெரும் உண்மையைப் புரிந்து கொள்ளும் திறனை இந்தக் கார்த்திகைத்திருநாள் நம் எல்லாருக்கும் அளிக்கட்டும்.

"வானமெங்கும் பரிதியின் சோதி,
மலைகள் மீதும் பரிதியின் சோதி,
தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே
தரையின்மீதும் தருக்களின் மீதும்
கானகத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள் மீதும் பரிதியின் சோதி,
மானவன் தன் உள்ளத்தினில் மட்டும்
வந்து நிற்கும் இருளிது வென்னே!" என்று தன் உள்ளத்து இருளைச் சுட்டிக் காட்டுகிற அதே பாரதிதான் பின்னொரு நாளில்,

"அக்கினிக்குஞ்சொன்று கண்டேன் - அதை
ஆங்கோர் காட்டிடைப் பொந்தினில் வைத்தேன்!
வெந்து தணிந்தது காடு- தழல்
மூப்பினில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?" என்று கேட்டுக் கொண்டு மேற்கொண்டு "தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்" என்றும் ஆடிப் பாடுகிறார். நம் மனமாகிய இருண்ட காட்டிற்கும் அது போல் ஒரு ஞான ஒளி தோன்ற வேண்டும். காட்டில் ஏற்படும் தீயானது எப்படிக் காட்டை அழித்துப் பொசுக்குகிறதோ, அது போல் நம் மனத்தில் தோன்றும் இந்த ஒளியானது நம் மனமாகிய காட்டில் உள்ள இருண்ட பாகங்க்ளில் ஒளியைத் தோற்றுவிப்பதோடு நில்லாமல், காட்டில் உள்ள வேண்டாத செடி, கொடி, மரங்களான ஆசை, பொறாமை, தீயவை நினைத்தல், தீயவை செய்தல், தீயவை பார்த்தல் போன்றவற்றையும் அழித்துப் பொசுக்க வேண்டும். பாரதியின் உள்ளத்தில் சக்தியானவள் அந்தப் பொறியை ஏற்படுத்தினாள். அவர் உள்ளத்தில் உள்ள கெட்ட எண்ணங்களால் ஆன காடு அழிந்து ஒழிந்ததை அவர் கூறி ஆனந்தக் கூத்தாடுகிறார். ஆகவே நம் உள்ளத்திலும் சிறு பொறி போல பக்திச் சுடரை ஏற்றினோமானால் அந்த ஒளியானது நம் உள்ளமெங்கும் பரவிப் பிரகாசிக்கும்.

தீயிலே எங்காவது சின்னது, பெரிசு என்று உண்டா? தீ, தீதானே? ஆனால் அதையும் முறையாகப் பயன்படுத்த வேண்டும். நமக்கு உள்ளே ஒளி தருவதோடு இல்லாமல் வேண்டாதவற்றையும் அழித்து ஒழிக்க வேண்டும். அதற்கு நம்முள் இருக்கும் உள்ளுணர்வை, உள்ளொளியை நாம் பக்தி என்னும் பொறியால் ஏற்றினோமானால் நமக்குள்ளும் ஞானம் என்னும் உள்ளொளி பரவும்.நம்மைச் சுற்றியே நாம் பிரகாசத்தை உணர்வோம். அப்புறம் என்ன? நமக்கும் தத்தரிகிட, தத்தரிகிட, தித்தோம்னு குதிக்கத் தோணும். மதுரை ஜில்லாக்காரப் பெண்கள் இந்தக் கார்த்திகைத் திருநாளைத் தங்கள் இல்லம் ஒளிருவது போல் தங்கள் சகோதரர்கள் வாழ்விலும் ஒளி ஏற்றும்படி பிரார்த்தித்துக் கொண்டு கொண்டாடுவார்கள். இன்றளவும் என் சகோதரர்கள் எனக்குக் கார்த்திகைச் சீர் செய்யத் தவறியதில்லை. அது போல எல்லாரும் பிரார்த்தித்துக் கொள்வோம், இவ்வுலகில் உள்ள எல்லாச் சகோதரர்கள் வாழ்விலும் ஒளி வீசும்படிப் பிரார்த்திப்போம்.

"ஜயமுண்டு பயமில்லை மனமே!-இந்த
ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு
பயனுண்டு பக்தியினாலே-நெஞ்சிற்
பதிவுற்ற குலசக்தி சரணுண்டு பகையில்லை."

Sunday, November 26, 2006

165. உடம்பு சரியில்லை

மூன்று நாளா நல்ல காய்ச்சல். சிக்குன் -குனியாவோன்னு பயமா இருந்தது. இத்தனைக்கும் எங்கேயும் போகாமல் வீட்டிலேயே தான் இருக்கேன். எப்படி வந்ததுன்னு தெரியலை. இன்னிக்குத் தான் கொஞ்சம் பரவாயில்லை. அதோட இந்தக் கணினி செட்டிங் வேறே இன்னும் எனக்கு செட் ஆகலை. எல்லாம் மாத்தி இருக்காங்க. என்னோட பழக்கத்துக்குக் கொண்டு வரணும், அதுவரை கொஞ்சம் கஷ்டம்தான். எல்லாரும் ஜாலியா இருக்கலாம். பின்னூட்டம் எல்லாம் எதிர்பார்க்கலை இதுக்கு. கார்த்திக், உங்க டாகை அப்புறமாத் தான் போடணும். கொஞ்சம் பொறுங்க அவசரப் படாதீங்க.

Thursday, November 23, 2006

158. புதுமைப் பெண்?

ஒரு வாரம் நல்லா விடுமுறை கிடைச்சதிலே சில பல தொலைக்காட்சிப் படங்கள், தொடர்கள், நிகழ்ச்சிகள்னு பார்க்க முடிஞ்சது. தினமும் மத்தியானம் சீரியல்னு வரதை எல்லாம் பார்த்து மனசைக் கெடுத்துக்கிற வழக்கம் எல்லாம் இல்லை. ஆனால் நகைச்சுவைத் தொடர்னால் எப்போ வேணால் பார்க்கலாம். சாயந்திரம் பார்க்கிறதும் சும்மா இப்படிப் போயிட்டுப் போயிட்டு வந்து பார்க்கிறது தான். உட்கார்ந்து பார்த்தது என்பது 8-30 தொடர்கள்தான். அதிலேயும் எது நல்லா இருக்குமோ அது மட்டும் தான் பார்ப்பேன். இல்லாட்டி பொண்ணோட சாட்டிங் செய்ய வந்துடுவேன். இப்போ யு.எஸ்ஸில் நேரம் மாத்தி இருக்கிறதாலே கொஞ்சம் நேரம் கழித்துக் கூப்பிட வேண்டி இருக்கு. என்னோட நேரப்படிக் கூப்பிட்டாக் காலை அவசரம் அவங்களுக்கு. அது முடியணுமே. அப்படி ஒரு நாள் உட்கார்ந்திருந்தப்போ பார்த்த "கோலங்கள்" தொடரில் சற்றும் ஏற்கவே முடியாத காட்சிகள் எல்லாம் வந்தது. சிறையில் இருக்கும் பெண்ணான கதா நாயகி தியாகத்தின் மொத்த உருவமாய் இருக்கிறாள். அவளைச் சேர்ந்தவர்கள் எல்லாம் கூட இப்படி இருக்கக் கூடாது என்று சொல்ல அவள் மட்டும் ரொம்பவே நல்லவளாய் இருக்கிறாள். அவளைக் கொல்லவும் சிறையிலேயே முயற்சி செய்கிறார்கள். எல்லாம் சிறைக் கண்காணிப்பாளர் முன்னாலேயே நடக்கிறது. கொதிக்கும் எண்ணெய்? தண்ணீர்? எதுன்னு புரியலை. அதிலே கையை விட்டு முழங்கை வரை வெந்து போகிறது. ஆனாலும் அவள் பொறுமை காக்கிறாள். அதற்கு மட்டும் சிகிச்சை எப்படிக் கொடுத்தார்கள்னு புரியலை. தொடர்ச்சியாய்ப் பார்த்தால் தானே புரியும். நமக்குத் தான் அந்த வழக்கமே இல்லையே! :D

அப்புறம் பாருங்க, இந்த "ஆனந்தம்" தொடர் அதுக்கு மேலே இருக்கு.ஏற்கெனவே 2 மனைவி உள்ள் ஒரு தொடர். அதிலே முதல் மனைவி தான் வில்லி. 2வது மனைவி ரொம்பவே நல்லவள். ஆனால் இப்போது கணவன் பேச்சை மீறிக்கொண்டு தன்னோட கணவனின் முதல் மனைவியை சிறையில் போய்ப்பார்க்கிறாள். அவ்வளவு நல்ல பெண் அவள். கதா நாயகியோ கேட்கவே வேண்டாம். ஆயத்த ஆடை மாதிரி அந்த நாயகிக்கு என்றே ஏற்பட்ட கதாபாத்திரம் அது. அதுக்கு முன்னாலே 6-30க்கு ஒரு தொடர் வருது. அது கிட்டத் தட்ட "கோபுரங்கள் சாய்வதில்லை" படக் கதைன்னு சொல்கிறார்கள். முதல் மனைவி, 2-ம் மனைவி எல்லாருடனும் ஒரே வீட்டில் குடித்தனம். இதிலே முதல் மனைவி இருப்பது 2-ம் மனைவிக்கோ அல்லது அவள் பெற்றோருக்கோ தெரியாதாம். நல்ல வேளை, நான் அப்போவெல்லாம் பார்ப்பது இல்லை. (பொதிகையில் அப்போதான் நல்ல நிகழ்ச்சிகள் வரும். அதனால் அதைப்பார்ப்போம்.) இதுக்கடுத்து ஒரு தொடர் வருது பாருங்க. ரொம்பவே பிரமாதம். பெண்களுக்கு என்றே ஏற்பட்ட இந்த சீரியலை எந்தப் பெண் விடுதலைக் காரர்களோ, பெண்களின் ஜனநாயகத்திற்கான முன்னேற்றத்திற்குப் பாடுபடுபவர்களோ பார்ப்பதில்லையானு தெரியலை.

இப்போவெல்லாம் பெண்களைக் கொடுமைப் படுத்துவதைத் தடுப்பதற்குச் சட்டம் இயற்றி இருக்கிறார்கள் என்று எல்லாப் பெண் வக்கீல்களும், பெண்களுக்கென்றே ஏற்பட்ட ஜனநாயக முன்னணித் தலைவிகளும் பத்திரிகை, பத்திரிகையாகப் பேட்டி கொடுத்து சந்தோஷத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இனி பெண்கள் மேல் கையை வைத்தால் தெரியும், ஜாக்கிரதை! என்றெல்லாம் மிரட்டுகிறார்கள். அவங்க எல்லாம் எங்கே போனாங்கனு எனக்குப் புரியலை. இந்த "மலர்கள்" தொடரிலே ஒரு குடும்பத்தின் மூத்த பெண்ணிற்குத் திருமணத்திற்குப் பின் குழந்தை பிறக்கவில்லை என்பதால் தன் கணவனுக்கு அவளே பெண்பார்த்து 2-ம் கல்யாணம் செய்து வைக்கப் போகிறாள். அதைத் தடுக்கப் பார்க்கும் கணவனையோ, தன் பெற்றோரையோ, தன் சகோதரர்களையோ அவள் லட்சியம் செய்வது இல்லை. ஏன் என்றால் அவளுக்குத் தன் கணவனின் குடும்பம் சந்தோஷமாக இருப்பது தான் முக்கியம். தன்னால்தான் தன் கணவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் சந்தோஷத்தை வழங்க முடியும் என்பது அவள் தரப்பு நியாயம்.அதுக்காக அவள் எது வேணாலும் செய்வாள். இத்தனைக்கும் அவள் இப்போது குழந்தை உண்டாகி இருக்கிறாள். அவள் சோதனைக்குப் போன நகரிலேயே பெரிய ஆஸ்பத்திரியிலும் சரி, நகரிலேயே பெரிய மருத்துவரும் சரி, அவள் சோதனை ரிப்போர்ட் மாறி இருப்பதைத் தான் தெரிந்து கொள்ளவில்லை. அத்தனை பெரிய மருத்துவருக்கு ஒரு பெண் கருவுற்றிருப்பது கூட எப்படித் தெரியாமல் போகும்? குழப்பமா இருக்கே? யாராவது கொஞ்சம் உதவுங்க. ப்ளீஸ்!
அவங்க அம்மாவுக்குக் கூடத் தன் பெண் கருவுற்றிருப்பது தெரியவில்லையே? இத்தனைக்கும் அவங்க கதைப்படி 5,6 குழந்தைகள் பெற்றவர்கள். அந்தப் பெண்ணின் கணவன் அதுக்கு மேலே. ஆரம்பத்தில் எல்லாம் 2-ம் கல்யாணத்துக்கு ஆசை இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் அந்த 2-ம் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் பெண் அவனைப் பார்த்து பேசினதும் அவள் துயரத்தைப் பார்த்து மனம் மாறி விட்டானாம். அப்படி மனம் மாறினவன் தன்னுடைய கல்யாணம் ஆகாத நண்பர்களில் ஒருத்தரையோ, உறவினரில் ஒருத்தரையோ அல்லது வேறு வழியாக முயற்சி செய்தோ தன் செலவில் அந்தப் பெண்ணைத் தங்கையாக ஏற்றுக் கொண்டு கல்யாணம் செய்து வைக்கக் கூடாதா? அப்படி இருந்தால் கதை ஓட்டம், விறுவிறுப்புப் போய்விடுமே? அப்புறம் முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது அல்லவா? என்னவோ தெரியலீங்க, எல்லாத் தொலைக்காட்சித் தொடர்களிலும் "ஒரு மனைவி, கல்யாணம் செய்து கொண்டால் ஒரு மனைவி இலவசம்" அப்படினு ஒரு கொள்கை வச்சிருக்காங்களோனு நினைக்கிறேன்.

அவள் தங்கையோ என்றால் அதுக்கு மேலே. அவளும் கருவுற்றிருக்கிறாள். ஆனால் அவள் மேல் சந்தேகப்பட்டு அவள் கணவன் கர்ப்பிணி என்று கூடப் பார்க்காமல் அவளைக் கொடுமைப் படுத்துகிறான். சுவற்றில் தலையை வைத்து மோதுகிறான். வார்த்தைகளாலும், வன்முறைகளாலும் கொடுமைப் படுத்துகிறான். இத்தனைக்கும் அவள் என்னை விவாகரத்துப் பண்ணி அனுப்புங்க என்று கேட்கிறாள். அதுக்கும் மறுக்கிறான். அவளைக் கொலை செய்யக் கூட ஏற்பாடு செய்கிறான்.எல்லாப் பெண்களும் இப்படித் தொலைக்காட்சித் தொடர்களில் கஷ்டப்படுவதைத் தடுக்கச் சட்டம் தனியாய்ப் போடணுமோ ன்னு நினைக்கிறேன். இவங்களை எல்லாம் வன்முறைத் தடுப்புச் சட்டம் ஒன்றும் செய்யாதா? யார் மேல் போடுவது என்று குழப்பமோ ஒரு வேளை? அந்தத் தொடர் தயாரிப்பாளர் மேலா? இயக்குநர் மேலா? கதை வசனகர்த்தா மேலா? அந்த நடிக நடிகையர் மேலா? தொடரை வெளியிடும் தொலைக்காட்சி மேலா? புரியவே இல்லையே? அப்புறம் இந்த "ரோஜா" தொடரில் கதை எங்கேயோ போகிறது. திடீர்னு தீபா வெங்கட்டை இரண்டு வேடத்தில் கொண்டு வந்து இருக்கிறார்கள். அதிலே ஒரு தீபா வெங்கட், இன்னொரு தீபா வெங்கட்டிற்குச் சித்தி. அவள் அம்மாவின் தங்கை. அப்படின்னா இந்தச் சித்தி தீபா வெங்கட்டிற்கும், இன்னொரு தீபா வெங்கட்டின் அம்மாவிற்கும் ஒரே அப்பாவா? இல்லாட்டி இவர் சித்தப்பாவா? சித்தப்பா என்றால் எப்படி ஒண்ணுமே புரியலியே? அம்மாவழிச் சித்தியும், அக்கா பெண்ணும் ஒரே மாதிரி இருப்பாங்களா? அப்பா வழிச் சித்தி பெண்ணும், அவங்க அக்கா பெண்ணும் ஒரே மாதிரி இருப்பாங்களா? சித்தப்பாவா? அப்பாவா? குழப்பமோ குழப்பம்? அதை விடக் குழப்பம் இந்தத் தொடர் முடியவே முடியாதா என்பது தான்? இதை எல்லாம் என் கணவரிடம் கேட்டேனோ இல்லையோ, "நீ போய்ப் புஸ்தகத்தை வைத்துக் கொண்டு உட்காரு, அல்லது கம்ப்யூட்டரில் போய் ஏதாவது படி, எழுது." னு சொல்றார்.இவரோட இந்த வன்கொடுமையைத் தடுக்க ஏதாவது சட்டம் உண்டா? சொல்லுங்களேன், ப்ளீஸ்! ரொம்பவே குழம்பிப் போயிருக்கேன். ROTFL:

Tuesday, November 21, 2006

157. அது ஒரு கணினி காலம்

நான் முதல் முதல் 99-ம் வருஷம் கணினி கற்றுக் கொள்ள ஆரம்பித்தது ஒரு விஜயதசமி நன்னாளில். அப்போதான் எங்களோட "செல்லம்" "மோதி" எங்களை விட்டுப் பிரிஞ்சிருந்தது. அந்தத் துக்கத்தை மறக்கவும் என்னோட கனவான medical transcription கற்கவும் தான் நான் கணினி கற்க ஆரம்பித்தேன்.எத்தனை கனவுன்னு கேக்காதீங்க. அப்துல் கலாம் இப்போ தான் சொல்றார் கனவு காணும்படி. நான் முன்னேயே காண ஆரம்பிச்சுட்டேன். அதைப் பாருங்க. இங்கே நாங்க இருக்கும் இடத்தில் கணினி கற்க இருந்த 2 நல்ல பள்ளிகளான "நிட்" என்று எல்லாராலும் சொல்லப்படும் "என்.ஐ.ஐ.டி."யும் "ஆப்டெக்" ம் இருந்தது, இதில் ஆப்டெக் வீட்டுக்க்குக் கொஞ்சம் கிட்டே. என்.ஐ.ஐ.டி யில் அப்போ மாணவர்களைத் தான் சேர்த்தார்கள். இல்லாட்டி நான் அண்ணா நகர் போகணும். நான் போகத் தயாரா இருந்தாலும் வரப் போகும் மழைக்காலத்தில் அங்கேயே இரவுக் குடி இருப்பு செய்யணும்னு என் கணவர் நினைச்சதால் (ஹிஹிஹி, அப்போ எல்லாம் மழையில் எனக்கு மூச்சு விடத் தொந்திரவு வந்தால் உடனேயே "சுந்தரம் மெடிக்கலில்'தான் அவசர சிகிச்சைப் பிரிவில் சேரும்படி இருக்கும். அதான் அவர் தவிர்த்து விட்டார்.) இங்கே நாங்க இருக்கும் இடத்திலேயே சேரலாம் என்றால் ஆப்டெகை நான் சேரப் போறேன்னு தெரிஞ்சதுமே மூடிட்டு இடம் மாத்திட்டுப் போயிட்டாங்க. என்.ஐ.ஐ.டியில் ஏகப் பட்ட கேள்விகள், பதில்கள்னு விக்கிரமாதித்தன் பதுமைகள் மாதிரிக் கேப்பாங்க. அதனாலே வேறு வழி இல்லாமல் நான் போனது ஒரு browsing centre தான். அதிலேயும் நான் வீட்டு வேலை எல்லாம் முடிச்சுட்டு எனக்கு நினைச்ச நேரம் போக முடியும்கிறது என்னைப் பொறுத்த மட்டில் ஒரு + பாயிண்ட். நான் போற நேரம் மிஷின் காலியா இருக்கணும். அப்போ எல்லாம் எல்லா வீடுகளிலேயும் கணினி இல்லையே. அதனால் எப்போவும் ப்ரவுசிங் செண்டர் எல்லாம் கூட்டமா இருக்கும்.

நான் மத்தியானத்தில் தான் போவேன். தூங்கிப் பொழுதைக் கழிக்கவேண்டாம் என்பதோடு வீட்டுக்குத் தேவையான பாங்கிங், மின்சார பில் கட்டுதல், காய்,கனி வாங்குதல், டெலிபோன் பில் கட்டுதல் எல்லாத்துக்கும் போறதுக்கும் வசதியான நேரம் அது. அப்போ ஆஸ்த்மா தொந்திரவு இருந்தாலும் கால் பிரச்னை இல்லாததால் நடராஜா சர்வீஸ்தான். என் கணவர் ஆஃபீஸ் போறப்போ கொண்டு விடறேன்னு சொன்னாலும் வேண்டாம்னு சொல்லிடுவேன். நடந்து தான் போவேன். வீட்டுக்கு வந்து மற்ற வேலை பார்க்க வசதியாக அதற்குத் தகுந்தாற்போல் நேரம் சரி செய்து கொண்டு போவேன். இது ரொம்ப நாள் நடக்காமல் திடீர்னு எனக்கு ஆஸ்த்மா அட்டாக் ஆக நான் ஆஸ்பத்திரியில் வாசம் செய்ய ஆரம்பிக்க அதுவும் நின்று போனது. ஆனால் அதுக்குள்ளே ஒரு மாதிரியா நான் மெயில் கொடுக்க ஆரம்பித்து இருந்தேன். என்னைப்பொறுத்த வரை அதே பெரிய விஷயம். அதுக்கு அப்புறம் அந்தக் கடையையும் மூடிட்டாங்க. அந்தப் பையனுக்கு, அதாவது கணினியில் என்னோட குரு "ப்ரகாஷுக்கு" "டைடல் பார்க்கில்" நல்ல வேலை கிடைத்து விட்டது. பிறகு வேறு இடத்தில் முயன்றாலும் எனக்கு செட் ஆகவில்லை. இது எனக்கு ஒரு தொந்திரவு. எல்லார் கிட்டேயும் சரியா வராது. எனக்கு மனம் பதிய வேண்டும். மனம் பதியவில்லை. ஆனால் அவசரத்துக்கு மெயில் கொடுக்க வேண்டுமென்றால் போய்க் கொடுப்பேன். அதுக்குள்ளே எங்க பையன் "எம்.எஸ்" படிக்க அமெரிக்கா போக முயல அவனுக்கு வேண்டிய கன்சல்டன்ஸியைத் தேடிப் பிடித்து, வேண்டிய முன்னேற்பாடுகள், பின்னேற்பாடுகள் எல்லாம் செய்ய வேண்டிய பொறுப்பு என்னைத் தேடி வந்தது.

ஆகவே அதுக்கான ஏற்பாடுகள் செய்யறதிலே என்னோட நேரம் போனதிலே எனக்கு என்னோட மெடிக்கல் ட்ரான்ஸ்க்ரிப்ஷன் என்பது ஒரு கனவாவே போச்சு. அதுக்குள்ளே இங்கே நாங்க இருக்கும் இடத்திலேயே மத்திய அரசு உதவியினாலே குடும்பப் பெண்கள் உள்பட பெண்கள் கணினி அறிவு பெறவேண்டும் என்று ஐ.சி.டி. என்னும் நிறுவனம் "மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன்" இணைந்து கணினி வகுப்புக்கள் ஆரம்பிக்க அதன் ஃபீஸ் கிடையாது. பரிட்சைக்கான பணம் மட்டும் கட்டினால் போதும் என்று சொல்லி பேப்பருடன் நோட்டீஸ் வர, நான் என் கணவரிடம் கேட்டுக் கொண்டு அதற்குப் போகலாம் என ஆரம்பித்தேன். அப்போ அவர் ஊட்டியில் இருந்தார். நான் சென்னையிலும்,, ஊட்டியிலுமாக இருப்பேன். சில சமயம் அவர் வருவார். சிலசமயம் நான் போவேன். பையன் பரோடாவில். பெண் யு.எஸ்ஸில். ஆகவே என்னோட கணினி அறிவு அப்போ ரொம்பத் தேவைப்பட்டது. பையனுக்கும், பெண்ணுக்கும் உடனுக்குடன் மெயில் கொடுத்துத் தகவல்கள் பரிமாற ரொம்பவே உதவியாக இருந்தது. நான் சேர்ந்த ஐ.சி.டி படிப்பும் உதவியாக இருக்குமாறு கோர்ஸில் சேர்ந்திருந்தேன். ஒரு பத்து நாள் கூட இருக்காது. குடும்பத்தில் சில நிகழ்வுகள். அதனால் ஏற்பட்ட சில மாற்றங்கள். அப்புறம் ஊட்டியில் இருந்த என் கணவருக்குத் திடீரென ரத்த அழுத்தம் அதிகமாய்ப் போகவே நான் உடனேயே ஊட்டி போகும்படி ஆகி விட்டது. கடைசியில் இந்த ரத்த அழுத்தம் திடீரென வந்ததால் மனதில் இறுக்கம் என்பதால் தான் வந்திருக்கு, வேறு ஒண்ணும் இல்லைனு டாக்டர் சொன்னாலும், ரொம்ப நாளைக்கு அது ஒரு அதிர்ச்சியாவே இருந்தது. வாயைத் திறந்து ஏதும் சொல்லிட்டால் பரவாயில்லை. சொல்லலைன்னா இப்படித்தான்ன்னு நான் எவ்வளவோ நினைச்சுப்பேன். ஆனால் அவர் வாயில் இருந்து எதுவும் வராது. என்ன செய்யறது? எல்லாம் புத்தர், ஏசு, காந்திக்கு அடுத்து இவர்தான்னு நினைச்சுப்பேன். இப்படியாகத் தானே என்னோட கணினி கற்றுக் கொள்ளும் முயற்சிக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப் பட்டது. மொத்தம் 10 நாள் போயிருந்தால் ஜாஸ்தி. அதில் என் போன்றவர்கள் என்ன கற்றுக் கொள்ள முடியும். அதிகம் போனால் மெயில் கொடுக்கவும், ப்ரவுசிங் செய்யவும்தான் முடியும். அதோட நின்னும் போச்சு. அதுக்கு அப்புறம் என்னோட காலில் பெரிய தொந்திரவாய் வர, நான் நடக்க முடியாமல் போய்க் கொஞ்ச நாள் வீட்டிலேயே "படி தாண்டாப் பத்தினி"யாக இருந்து வந்தேன். இப்போ கூட நடக்கும்போது கொஞ்சம் சிரமம்தான். எப்போ என் காலே என்னை வாரும்னு தெரியாது. இந்த அறிவை வைத்துக் கொண்டு நான் பதிவு எழுதறதே ஒரு பெரிய விஷயம் தான். ஏதோ நீங்க எல்லாம் நான் தலைவியாப் போயிட்டேனேன்னு பொறுத்துக்கிறீங்க. இப்போ கூட ஒரு ப்ராப்ளம் வந்துடுச்சு. அதைக் கேட்கத் தான் முத்தமிழுக்குப் போனேன். அங்கே போனால் நம்ம "கைப்புள்ள' சிரிக்கிறார். சிவா சொன்ன மாதிரி உங்க கணினிக்குக் கூட உங்களைக் கண்டு பயம் இல்லாமப் போச்சான்னு கேட்கிறார். ஹிஹிஹி, நான் தான் சிவா சொன்னதை அவருக்கு நினைவு படுத்தினேன்.. கொஞ்ச நாளா யாரையும் வம்புக்கு இழுக்கலியா, சாப்பாடே ஜீரணம் ஆகலை அதான். மொத்தத்திலே தலை சுத்திட்டு இருக்கு. நாளைக்குப் பார்க்கலாம். வர்ட்டா?

Monday, November 20, 2006

156. கதவு திறந்தால் இணையம் வரும்!

எல்லோரும் ரொம்பவே சந்தோஷமா இருந்திருப்பீங்க. அதுவும் ஒரு வாரமா நான் இல்லைன்னதும் ரொம்பவே சந்தோஷமா இருந்திருக்கும்.முக்கியமா அம்பிக்கு ரொம்பவே சந்தோஷமா இருந்திருக்கும். எனக்குத் தான் சண்டை போட ஆள் இல்லாமல் ரொம்பவே போர் அடிச்சது. எல்லாம் இந்த ஜன்னல் கதவை இறுக்கிச் சாத்திக் கொண்டு விட்டதா? அதனால்தான். போன வாரம் திங்கள் கிழமை அன்னிக்கு ஜன்னல் திடீர்னு இறுக்கிச் சாத்திக் கொண்டு விட்டது. எல்லாம் மழைக்காலம் இல்லையா அதனாலோ என்னமோ தெரியலை. திறக்கவே வரலை. நானும் என்ன என்னமோ குட்டிக் கரணம் எல்லாம் போட்டுப் பார்த்தேன். திறக்கவே வரலை. நல்லா இறுக்கி மூடிக் கொண்டு விட்டது. உடனேயே safe modeற்குப் போய்த் திறக்கப் பார்த்தால் அது என்னடாவென்றால் adminisiter pass word கொண்டா என்று கேட்கிறது? யாருக்குத் தெரியும்? சரினு உடனேயே யு.எஸ்ஸில் பையனுக்குத் தொலைபேசிக் கேட்டால் அவன் நான் அதெல்லாம் கொடுக்கவே இல்லைங்கறான். உடனேயே ஒகே கொடுத்துட்டுத் திறந்துக்கோன்னு சொன்னான். அப்படியே செய்தால் ஜன்னல் திறந்த உடனேயே மூடிக் கொள்கிறது.

என்னடா இது, "மதுரைக்கு வந்த சோதனை?"ன்னு ரொம்பவே பயமாப் போச்சு. உடனேயே மெக்கானிக்குக்குத் தொலைபேசிட்டுக் காத்திருந்தால் செவ்வாய்க்கிழமை பூரா அவர் வரவே இல்லை. நான் ரொம்பவே சோர்வா உட்கார்ந்திருந்ததைப் பார்த்த என் கணவர் உடனேயே காரணத்தைக் கண்டுபிடித்தார். என்ன இருந்தாலும் என் மறு பாதி இல்லையா? "என்ன, அம்பியோட சண்டை போட முடியலையா? கடைசியா எப்போ போட்டே? அம்பி பங்களூர் மீட்டிங் பத்தி எழுதினதுக்கு நீ பதில் எழுதினதும்?" அப்படின்னு கேட்டார். "நேத்திக்குக் கூட பின்னூட்டம் கொடுத்துட்டுத் தான் வந்தேன். என்ன பதில் வந்திருக்கு தெரியலை,"ன்னு சொன்னேன். அப்புறம் என்ன செய்யறதுன்னு புரியாமல் இடைப்பட்ட காலத்தில் ஒரு முழு சினிமா பார்த்தேன். "சில்லுனு ஒரு காதல்" ஹிஹிஹி, விகடன் ஜோக்கிலே வந்த மாதிரி அதெல்லாம் சி/டியை ஃபிரிஜ்ஜில் எல்லாம் வைக்கலை. அப்புறம் சில பல பாதி சினிமாக்கள், காமெடி தொகுப்புக்கள். சீரியல்கள், புத்தகம் படித்தல்னு பொழுதைப் போக்கினேன்.எனக்கு என்னமோ சரியாத் தான் இருந்தது. ஏன் என்றால் மத்தியானம் ஒரு 2 அல்லது 21/2 மணி நேரம்தானே உட்காருவேன். அதனாலே ஒண்ணும் தெரியலை. ஆனால் என்னோட கணவருக்குத் தான் ரொம்பவே கஷ்டமா இருந்திருக்குன்னு நினைக்கிறேன்.பின்னே இஷ்டத்துக்கு சீரியலோ, சினிமாவோ பார்த்துட்டு ஜாலியா இருந்தவர்கிட்டே போய், "இது என்ன சீரியல்/சினிமா? இவள் யாரு? ஏன் அழறா? இந்தப் பொண்ணு ஏன் தன்னோட கணவனுக்கு இன்னோர் கல்யாணம் செய்யப் போறா? இவன் ஏன் இன்னொரு பொண்ணைக் கல்யாணம் செய்துகிட்டான்?" அப்படின்னு இடைவிடாமல் கேள்விமழை பொழிந்தால் அவர் சீரியலோ, சினிமாவோ பார்ப்பாரா? அல்லது எனக்குப் பதில் சொல்லுவாரா?

அதோடு இல்லாமல் ராத்திரி நான் போய்ப்படுத்தால் ஒரு 2 மணி வரைக்கும் நல்லாத் தூங்கிடுவேன். அப்புறம் அவ்வளவாத் தூக்கம் வராது. பல வருஷங்களா இப்படித்தான் என்பதால் பழக்கமா ஆயிடுச்சு. அதுவே என் கணவர் படுத்தார்னா உடனேயே குறட்டைதான். காலையில் நாம் எழுப்பினாத் தான் எழுந்துப்பார். ராத்திரி நான் முழிச்சிட்டு இருக்கிறது வீட்டுக்கு ரொம்பவே பாதுகாப்புன்னு வேறே அபிப்பிராயம் அவருக்கு. பின்னே? சின்னச் சத்தம் வந்தாக்கூட உடனேயே பார்த்துடலாமே?சும்மாவே கோழித் தூக்கம்தான். "யானை படுத்தா வியாதி"ன்னு சொல்வாங்க. ஹிஹிஹி, அதெல்லாம் யானை மாதிரி இருக்க மாட்டேன். குட்டி யானை மாதிரித் தான் இருப்பேன். சும்மா ஒரு உள உளாக்கட்டிக்குச் சொன்னேன். யானை மாதிரி நான் ஏதாவது உடம்பு சரியில்லைன்னாத் தான் படுப்பேன். இல்லாட்டிப்படுக்க மாட்டேன். இப்படிப் பட்டவள் இப்போ நல்லாத் தூங்க ஆரம்பிச்சுக் காலையிலே 4, 41/2 வரை தூங்க ஆரம்பிக்கவே என்னோட மறுபாதிக்குப் பயம் பிடிச்சுக் கொண்டது. ஏன்னா அவருக்குத் தூக்கம் போயிடுச்சே? ஹிஹிஹி, இதிலேயும் நாங்க 2 பேரும் கிழக்கும் மேற்கும்தான் பாருங்க. இந்த மாதிரித் தூங்கினால் சரிப்பட்டு வராது, உடனேயே இதுக்கு ஒரு வழி பண்ணணும்னு யோசிச்சார். என்ன செய்யறதுன்னு தெரியாமல் காய் வாங்கப் போன இடத்திலே தன்னோட கஷ்டத்தை நினைச்சுப் புலம்ப அங்கே ஒருத்தர் இதைக் கேட்டுட்டு (தெரிஞ்சவர்தான்) நான் வந்து பார்க்கிறேன்னு சொல்லிட்டு வந்து பார்த்தார். சாம, தான, பேத, தண்ட முறைகளை உபயோகித்தும் ம்ஹும், அசைந்து கொடுக்கவே இல்லையே! கல்லுளி மங்கனுக்கு நான் அண்ணனாக்கும்னு சொல்லிட்டுது. அவரும் "சரி,ஜன்னல் புதுசாப் போட்டுடுங்க" னு சொல்லவே புது ஜன்னலும் போட்டாச்சு. ஆனால் கதவு (இணையம்) திறக்கவே இல்லை. கதவு திறக்க எல்லா ஏற்பாடும் செய்துட்டு மூணு நாளாக் காத்துட்டு இருந்தேன். கடைசிலே இன்னிக்குத் தான் அதுவும், "உங்க தெருவிலே ஒரே தண்ணியா இருக்கு. எப்படி வருவோம்?"னு ஒரெ மிரட்டல். "நாங்க இல்லையா? நீங்க வந்தால் என்ன?"ன்னு சொல்லி வரச் சொன்னோம். பாவம்,வண்டியைத் தூர நிறுத்திவிட்டு நடந்தே வந்தும் கூட ரொம்பவே கஷ்டப்பட்டாங்க. பின்னே? எங்களுக்கே எங்கே மேடு? எங்கே பள்ளம்னு கண்டு பிடிக்க முடியாது. இன்னிக்குப் பள்ளமா இருந்ததேன்னு நினைச்சா நாளைக்கு மேடாகி இருக்கும். மேடு பள்ளமா ஆயிருக்கும். இத்தனை கஷ்டங்களுக்கு நடுவே வந்து பார்த்துத் திறப்பு விழா நடக்கும்போது 5-00P.M. ஆயிடுச்சு. அதுக்கு அப்புறம் எழுதிச் சேமித்து வைத்ததைப் போட்டால், ஹிஹ்ஹி அடிக்க வருவீங்க, சைனீஸ் பாஷையிலே வந்துடுச்சு. அதனாலே இப்போ வேறே மாதிரி எழுதி இருக்கேன். முன்னால் எழுதினதிலே இன்னும் இணையம் வரலைன்னு சொல்லி இருந்தேன். இப்போ இணையம் வந்துடுச்சுன்னு சொல்றேன் அவ்வளவு தான்.

"அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே,
உச்சி மீது வானிடிந்து வீழ்ந்த போதிலும் அச்சமென்பதில்லையே!"

இதுக்கு மேலே இன்னும் என்ன வரப்போகுது? எது வந்தாலும் அதுவும் கடந்து போயிடும். நாளைக்கு என்ன பண்ணப் போகுதோன்னு இப்போவே சொல்லி வைக்கிறேன். வந்தா என்னோட அதிர்ஷ்டம் வழக்கம்போல். இல்லாட்டி உங்களுக்கு. இனிமேல்தான் எல்லாருடைய வீட்டுக்கும் போகணும். வேதா வீடு திறக்கவேஇல்லை. தி.ரா.ச. வீடு விலாசம் சரியில்லைன்னு சொல்லுது. கார்த்திக் வீடும், அம்பி வீடும் தான் திறந்தது. பார்க்கலாம், வர்ட்டா?

Monday, November 13, 2006

155. இல்லம், இனிய இல்லம்!

கொஞ்சம் சீரியஸான விஷயம் எழுதப் போறதாலே முதலில் சிரிச்சுட்டு அப்புறமாப் பதிவைப்

படிக்கலாம். கல்கியிலே இருந்து சுட்டது:

"தொண்டர்கள் பட்டாசு வெடிச்சுக் கொண்டாடறாங்களே....என்னவாம்?

தலைவர் "நூறாவது" முறையாக் கட்சித் தாவி இருக்காராம்!"

&&&&&&&&&&&&&

"நீங்க ஒரு பல் டாக்டரா?

இல்லையே, நான் 32 பல்லுக்கும்தான் டாக்டர்!"

&&&&&&&&&&&&&&

"என்னோட ரெண்டாவது பையன் அப்படியே என்னை உரிச்சு வெச்ச மாதிரி இருப்பான்!

அடப்பாவமே! முதல் பையனாவது அழகா இருப்பானா?"

&&&&&&&&&&&&&&&

சனிக்கிழமை ராத்திரி வீட்டோட படத்தைப் போட்டப்போ நேத்திக்கு உடனே பதிவு போடலாம்னு தான் நினைச்சேன். ஆனால் நேத்து முடியலை. ஒரு முக்கியமானவர்

வருவதாய்த் தகவல் சொல்லி இருந்ததால் அதற்கான எதிர்பார்ப்பில் இருந்தேன்.

அப்புறம் எல்லாரும் இது தான் கோட்டையா, தலைமையகமான்னு கேட்கிறாங்க. எல்லாம் இதுதான். நிஜமாவே வீட்டுக்கு அருகில் ஒரு சின்ன அகழி முனிசிபாலிட்டியால் 2 வருஷத்துக்கு முன்னே வெட்டப் பட்டு அதற்கு, 'Rain Water Harvesting Scheme" என்று பெயர்

சூட்டப் பட்டு முடிவடையாமல் எங்க தெருவிலே எங்க வீட்டுக்கு 4 வீடு தள்ளிப் பாதியில் முடிவடைந்து வருஷா வருஷம் சிக்குன் - குனியாவில் இருந்து சிக்காத குனியா வரை உற்பத்தி செய்து கொண்டு இருக்கிறது. மழையில் நாங்க கேட்கும்போது வெயில் காலத்தில் செய்வோம் என்பார்கள். வெயில் காலத்தில் கேட்கும்போது இப்போ தண்ணீர் தான் முக்கிய பிரச்னை, ஆதலால் அதில் பிசி என்பார்கள். இப்படியே ஒவ்வொரு வருஷமாப் போகிறது. தெருவில்

எல்லாரும் சேர்ந்து அதை அடைத்து விடலாம் என்றாலும் யாரும் முன்வருவதில்லை. கிட்டத்

தட்ட 3 அடி ஆழம், 2 அடி அகலம் உள்ள பள்ளத்தில் எந்த நேரம் விழப் போகிறேனோ என்ற பயத்துடனேயே வாசலில் தினசரி கோலம் போட வேண்டும். சின்னக் குழந்தைகள் விழறதும் உண்டு. இப்போ தண்ணீர் அதுவும் ஓடாமல் தேங்கி இருக்கிறதால் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே வந்து விளையாடாமல் பாரத்துக் கொள்ள வேண்டும். இதை எல்லாம் பார்த்தால் இங்கே இருந்து ஓடிடலாம் போல் இருக்கு. இதேதான் நம்ம அறிந்த அந்நியரும் சொல்கிறார். பதிவே அவருக்குப் பதில் சொல்வதற்குத் தான்.

"காணி நிலம் வேண்டும்-பராசக்தி
காணி நிலம் வேண்டும்-அங்கு
தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்-அந்தக்
காணி நிலத்திடையே ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும்-அங்கு
கேணியருகினிலெ-தென்னை மரக்
கீற்றும் இளநீரும்"

இப்படி எல்லாம் நான் எதிர்பார்த்தது இல்லை. ஆனால் நான் போகும், போன இடம்

எல்லாம் எனக்குத் தனி வீடாகத் தோட்டம், துரவுடன்தான் அமைந்தது. மற்றதெல்லாமாவது

ராணுவக் குடியிருப்பு. அதனால் வீடுகள் பெரிதாகவும், தனியாகவும்கிடைத்தது என்று சொல்லலாம். ஆனால் சென்னையிலும் சரி, சிகந்திராபாத்திலும் சரி, வாடகைக்குக் குடி இருந்ததும் தனி வீடுகள் தான். சிகந்திராபாத்தில் மாடியில் வீட்டுக்காரர்கள் இருந்தார்கள்

என்பதைத் தவிர கீழே நான் தான் முழுக்க ஆட்சி செய்தேன். என்னைப் பொறுத்த வரை வீடு

என்பது விவரிக்க முடியாத ஒரு உணர்வு. அதை உயிருள்ள ஒரு ஆத்மாவாகத் தான் என்னால்

பார்க்க முடிகிறது. அதனால் தான் நாங்கள் மதுரையில் குடி இருந்த வீடுகளில் இருந்து என்னால்

நினைவில் வைத்துக் கொண்டு நிகழ்ச்சிகளை எழுத முடிகிறது என்று தோன்றுகிறது. ஒருவேளை

அதிகம் பற்று வைக்கிறோனோ என்னவோ? வாடகைக்கு இருந்த வீடுகளே அப்படி என்றால் சொந்த வீடு, அதுவும் கஷ்டப் பட்டுக் கட்டிய வீடு என்றால் எத்தனை, எத்தனை நினைவுகள், கனவுகள், நிகழ்வுகள். இத்தனைக்கும் நாங்கள் வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு ராஜஸ்தான், குஜராத் என்று போய் இருந்திருக்கிறோம்.ஆனாலும் இந்த வீட்டைக் கட்ட நாங்கள் பட்ட பாடு எல்லாம் இன்னொரு "ராஜத்தின் மனோரதம்" தான். அதில் "தேவன்" எழுதின நிகழ்ச்சிகளுக்குச் சற்றும் குறைவில்லை நாங்கள் பட்ட அனுபவங்கள் எல்லாம். அத்தகைய வீட்டை விட்டு விட்டு எங்கே போவது? வீட்டைக் கூடப் பெயர்த்து எடுத்துச் செல்ல முடியாது. விற்கவும் மனசு இல்லை. எங்கள் தெருவிலேயெ நெருங்கிய நண்பர்கள் சிலர் இந்த மழைக்குப் பின் வீட்டை விற்கும் எண்ணத்தோடு இருக்கிறார்கள். எங்களுக்கு இன்னும் அந்த எண்ணம் வரவில்லை.


முக்கியமாக எங்க வீட்டு மரங்கள், செடிகள், கொடிகள் ஒண்ணொண்ணுக்கும் ஒவ்வொரு

கதை உண்டு. உயிர் உண்டு. எல்லாம் என்னோடு பேசும். நானும் பேசுவேன். வேப்பமரத்தடி

தெருவில் போகிறவர், வருகிறவருக்கெல்லாம் சொர்க்கமாய் இருக்கிறது. அதை வெட்டுவது என்ற நினைப்பே அந்த வேம்பை விட அதிகமாய்க் கசக்கிறது. மின் வாரியக் காரர்கள் கூட எங்களைக் கேட்டுக் கொண்டு சில கிளைகளை மட்டும் கழித்து விட்டுப் போவார்கள் அவ்வப்போது.அந்தப் பறவைகள் எல்லாம் எங்கே போகும்? கடவுள் எல்லாவற்றுக்கும் இடம் வைத்திருப்பார். இருந்தாலும் நான் இடம் பெயர்வது என்பது எனக்கு எவ்வளவு கஷ்டமோ அவ்வளவு

அதுகளுக்கும் இருக்குமே? ஒரு ஒரு குச்சியாக எடுத்துப் போய் ஒவ்வொரு பறவையும் கூடுகள்

கட்டும் அழகும், அதில் குஞ்சுகளுக்குப் படுக்கவோ என்னமோ போட எங்கிருந்தோ புல்லை வாயில் கெளவிக் கொண்டு வைப்பதும் அப்புறம் பார்க்கவே முடியாதே! வீட்டு வாசலில் வந்து படுக்கும் பசுமாடுகளும், சாப்பிட ஏதாவது கொடுத்தால் ஒழியப் போக மாட்டேன் என்று வாசல் கேட்டைக் கொம்பால் முட்டிக் கத்துவதும் நடக்குமா? வெளியே போவது என்றால் இவங்களோட அன்புத் தொல்லை தாங்க முடியாது. ஏதாவது கொண்டு போவது என்றால் மூடி மறைத்துத் தான் எடுத்துப் போகணும். இல்லாட்டிப் பின்னாடி வந்து முட்டும். நாய்கள் எல்லாம் கால்களுக்கு இடையே புகுந்து புறப்பட்டு மிதிபட்டுக் கத்தினாலும் திரும்ப வரும்.


அதற்காகவே நாய்களைக் கூப்பிட்டுச் சாப்பாடு போடாமல் தெரியாமல் வைத்து விட்டு

வரவேண்டி இருக்கிறது. எங்கானாலும் ஊர்களுக்குப் போவது என்றால்கூட ஆள் வைத்துத் தோட்டத்தைப் பராமரிக்கச் சொல்ல வேண்டி இருக்கிறது. திரும்ப ஊர் வரும்போது முதலில் வரும் நினைவு செடி, கொடிகள் எப்படி இருக்கிறதோ என்பது தான்.இப்போ எல்லாம் நான் ஜாஸ்தி தோட்டத்தில் வேலை செய்யறது இல்லை என்றாலும் கூட ஒரு முறை மரங்களையும் செடிகளையும் அதில் புதுசா வந்திருக்கிற பறவைகளையும் பார்க்காமல் இருக்க முடியாது. தவிர இந்த வீட்டில் தான் என்னோட எத்தனை கஷ்டங்கள், சந்தோஷங்கள், கொண்டாட்டங்கள் என்று

இருக்கிறது. ஒவ்வொரு செங்கல்லும் கிட்டத் தட்ட நாங்கள் எடுத்து வைத்துக் கட்டினமாதிரிதான். ஒவ்வொரு செங்கல்லும் ஒரு கதை சொல்லும். க்யூரிங் தண்ணீர் ஊற்றி நாங்களே
செய்வோம். கிணற்றில் தண்ணீர் இறைத்துத் தான் அப்போதெல்லாம். ரொம்பவருஷம்

மோட்டாரே போட வில்லை. கையால்தான் இழுத்தோம். அப்படி எல்லாம் கஷ்டப்பட்டு வீடு

கட்டிட்டு உள்ளே வரும்போது உண்மையாகவே கொல்லை, வாசல் இரண்டு பக்கத்துக்கு மட்டும் தான் கதவு போட்டுக் கொண்டு வந்தோம். மற்ற கதவுகள், ஜன்னல்கள் எல்லாம் வீட்டுக்கு வந்து

கொஞ்சம், கொஞ்சமாகச் செய்தோம். சிமெண்ட் பெர்மிட்டில் தான் அப்போதெல்லாம் வாங்க

வேண்டும். அதற்கு சென்னைத் துறைமுகத்தில் போய்ப் படுத்து இருந்து, கொரியாவில் இருந்து

சிமெண்ட் மூட்டைகள் கப்பலில் வந்து இறங்கியதும் பெர்மிட் கடிதத்தைக் காட்டி சிமெண்ட்

வாங்கி வரவேண்டும். அப்படி ஒரு நிலைமை. அதுவும் நடந்தது. இப்படி எல்லாம் கஷ்டப்பட்டுக் கட்டிய இந்த வீட்டில் உயிர் கட்டாயம் இருக்குமே. அதான் ஆங்கிலத்தில் "Home, Sweet Home" என்று சொல்கிறார்களோ என்னமோ? புராணம் முடியலை. தொடர்ந்தாலும் தொடரும். உங்க அதிர்ஷ்டம் எப்படியோ தெரியலை.

Friday, November 10, 2006

154. ஹையா, ஹையா, ஹையா!!!!!!!!!!

மூணு ஹையாக்கள். எல்லாம் நம்ம வலை உலகிலே நடந்ததைப் பத்தித் தான். அதுக்கு முன்னாலே உங்களை எல்லாம் ஒரு சின்ன ரம்பம் போட்டுட்டுப் போறேன்.

கார்த்திக்குக்காக ஒரு ஜோக்: விகடனில் இருந்து சுட்டது:

"வரலாறு படத்திலே நம்ம அஜீத் அட்டகாசமா நடிச்சு........

சரித்திரம் படைச்சுட்டார்னு சொல்லு!"

இப்போ அம்பியைச் சமாதானப் படுத்தறதுக்காக சில ஜோக்ஸ்:

"வீட்டுக்காரியை அடிச்சா ஒரு வருஷம் ஜெயிலாச்சே, அவருக்கு மட்டும் ஏன் ஆறு மாசம் கொடுத்திருக்காங்க?

அவர் அடிச்சது சின்ன வீட்டை!"

"நேத்து உன் புருஷன் உன்னை அடிச்சாரே போய்ப் போலீஸ்லே சொல்றது தானே?

அப்புறம் ஒரு வருஷத்துக்கு எனக்கு யார் சமைச்சுப் போடுவா?"

இப்போ மனைவிக்குக் கணவன் எழுதிய ஒரு லெட்டர். இதுவும் விகடனில் இருந்து சுட்டது. முருகேஷ் பாபு என்பவர் எழுதிப் பரிசு பெற்றிருக்கிறது. நான் பெற்ற இன்பம் நீங்களும் பெற வேண்டாமா? அதான்.

மரியாதைக்குரிய மனைவி அவர்களுக்கு,
வணக்கம். நேற்று நீங்கள் செய்த குழம்பில் உப்பு சற்றே தூக்கல் என்பதைப் பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். பரவாயில்லை, கரிக்கக் கரிக்கக் கஷ்டப் பட்டுச் சாப்பிட்டு விட்டேன். தவிர, சட்டையில் பிய்ந்து போயிருந்த பட்டனைத் தைத்துத் தரும்படி தங்களிடம் தாழ்மையுடன் விண்ணப்பித்திருந்தேன். ஏதோ மறதியில், அதைச் செய்யாமல் விட்டு விட்டீர்கள். ஊக்கு மாட்டி அட்ஜஸ்ட் செய்து கொண்டேன். அப்புறம், நேற்று மழையாக இருந்ததால், உங்கள் உடைகளைத் துவைத்து உலர்த்த முடியவில்லை. ஆனால், அதற்காக நீங்கள் என் மீது எறிந்த சுடுசொற்கள் என் நெஞ்சை மிகவும் ரணப்படுத்தி விட்டன என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை எல்லாம் உங்களுக்குச் சுட்டிக் காட்ட வேண்டும் என்ற கடமை எனக்கு இருக்கிறது என்று கருதியே எழுதினேன். மற்றபடி, தங்கள் மனதைப் புண்படுத்தும் நோக்கம் எதுவும் எனக்கு இல்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
இப்படிக்கு,
அபலைக்கணவன்."
"மனைவியை அடித்தால் ஒரு வருஷம் சிறை" சட்டம் வெளியானதற்குப் பிறகு எழுதப்பட்ட ஒரு கடிதம்."
அம்பி, இப்போ கொஞ்சம் சிரிங்க.அதுக்கு ஒரு ஹையா!

அடுத்த "ஹையா" பெனாத்தல் நான் எழுதற பதிவே புரிஞ்சுட்டதுன்னு சொல்லிட்டாரே! அதுக்குத் தான். அவர் வளராத சிறுவனா இருந்தப்போ நான் எழுதற பின்னூட்டம் எல்லாம் புரியலைன்னு சொல்வார். இப்போ வளர்சிதை மாற்றத்துக்கு அப்புறமோ அல்லது விக்கி, விக்கி அழுததாலேயோ நான் எழுதற பதிவே புரிஞ்சிருக்குன்னு சொல்றார். அதுக்கு ஒரு பெரிய "ஹை ஹை ஹையா!"

அடுத்த "ஹையா" என்னோட மண்ணில் பிறந்த உ.பி.ச. பட்டத்துக்குத் தயாராகிட்டிருக்கும் SKM என்று செல்லமாக அழைக்கப்படும் "சண்டைக்கோழி அம்மா" என்னைத் "தலைவி"ன்னு அவங்க வாயாலே சொல்லிட்டாங்களே! இப்படிப் புதுசா வந்தவங்களே என்னைத் தலைவின்னு ஒத்துக்கிட்டதாலே நான் "நிரந்தரத் தலை(வலி)வினு உறுதி ஆகிடுச்சே! அதுக்கு ஒரு பெரிய "ஹை ஹை ஹை ஹை ஹை ஹை ஹையா!"
**********************
நேத்திக்கு இந்த விஷயத்தை எடுத்துக்கும்போதே இம்மாதிரியான பதில்களை எல்லாம் எதிர்பார்த்தேன். பிறகு கைப்புள்ள சொன்னதன் பேரில் கவிதாவின் பதிவையும் போய்ப் பார்த்தேன். கவிதாவின் கருத்துகளில் எனக்கு உடன்பாடு இருந்தாலும், புத்தகம் படிக்கக் கூடக் கணவன் அனுமதி வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இது தான் பெண்கள் சுதந்திரத்தை அவமதிப்பது. ஒரு புத்தகம் படிப்பதால் மனைவி மனம் மாறிக் கணவனை மதிக்க மாட்டாள் என்று நினைத்தால் இன்றைய தொலைக்காட்சித் தொடர்களைப் பற்றி அந்தக் கணவனின் அபிப்பிராயம் என்னவாய் இருக்கும்? தொலைக்காட்சிப் பெட்டியைப் பூட்டி விட்டு வருவாரா அலுவலகத்துக்கு? உண்மையில் புத்தகங்கள் செய்வதை விட அதிகமாய்த் தொலைக்காட்சித் தொடர்கள் செய்கின்றன. இது தான் உண்மையான தாக்கம். மற்றபடி இந்தப் பதிவில் நான் சொன்ன கருத்துக்களில் எனக்கு எந்த மாற்றமும் இல்லை. ஆனால் நான் பதில் சொன்ன விதத்தில் அம்பியோ அல்லது தி.ரா.ச. அவர்களோ அல்லது கைப்புள்ளயோ அல்லது உமாகோபுவோ பாதிக்கப் பட்டிருந்தால் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். கருத்து வேறுபாடு சகஜம். ஆனால் ஒருவேளை நான் என் கருத்தைச் சொன்ன விதமோ அல்லது எழுதின விதமோ சரியாக வெளிப்படுத்த வில்லையோ என நினைக்கிறேன். தவறும் முழுப் பொறுப்பும் என்மேல் தான். மன்னிக்கவும்.

Thursday, November 09, 2006

153. எதிர்க் கட்சியின் சதி?

இருங்க, இருங்க, முதலிலே நான் ரசித்த சில ஜோக்ஸ்: அப்புறம் தான் விஷயம் என்னன்னு சொல்வேன்.
நயன் தாரா ரசிகர்கள்(முக்கியமா "மனசு" இப்போல்லாம் கண்ணிலேயே படறதில்லை.) கவனிக்கவும்.

"சிம்புவாலே என் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோன்னு பயமா இருக்கு டாக்டர்!

ஏன்?

அடிக்கடி என் கனவிலே நயன் தாரா வர்றாங்களே!"
***************
"உனக்கும் உன் மனைவிக்கும் பிரச்னையா?

ஆமாம், எப்படித் தெரியும் உனக்கு?

பூரிக்கட்டை இரும்புலே கிடைக்குமானு உன் மனைவி என் கிட்டே கேட்டாங்களே!"
***************

"என் கணவர் மஸ்கட்டுலே இருக்காரு, உன் கணவர் எங்கே இருக்காரு?

சமையல்கட்டுலே!"
**************

"பார் வேந்தே! என்னைப் பார் வேந்தே!

சும்மா பார் பார் என்று என்னை பயமுறுத்த வேண்டாம் புலவரே! நேற்றிரவு டாஸ்மாக் பாரில் சைடு டிஷ்ஷுக்காக உம்மிடம் கடனாக வாங்கிய சில்லறையைத் தந்து விடுகிறேன்!"
***************

ஒரு நாலு நாளா என்னை "ஆளே இல்லை, எங்கேயோ காணோம்"னு சந்தோஷப் பட முடியாமல் அப்போ அப்போ உங்க பதிவுகளில் மட்டும் தலைகாட்டிட்டு இருந்தேன். என்ன வழக்கமான நம்மோட பிரச்னைகள்தான். அதை விவரிச்சா கார்த்திக் புலம்பல்னு சொல்லுவார். சரி, மழையைப் பத்தியும் ரோட்டிலே மோட்டார் வைத்துத் தண்ணீர் இறைத்ததையும். அக்கம்பக்கம் வீட்டுக்காரர்களில் வீடுகளில் கீழே இருந்து ஊற்றுப் போல் பெருக்கெடுக்கும் தண்ணீரை இறைத்து மாளாமல் அவங்க அவங்க சொந்தக் காரங்க வீடுகளுக்குப் போகிறதையும் எழுதினா மணிப்ரகாஷ் வந்து "என்ன மேடம்?"னு கேட்பார். ரெயில் பயணத்திலே இன்னும் மிச்சம், மீதி இருக்கிறதை எழுதலாமான்னு பார்த்தால் நம்ம அறிந்த அந்நியர் வந்து, "போரடிக்குது, ஸ்டைலை மாத்துங்க, இல்லாட்டிப் பின்னூட்டக் குத்தகை கிடையாது"னு வந்து பயமுறுத்துகிறார். எல்லாத்துக்கும் மேலே இந்த அம்பிக்கு ஏதோ அவர் தம்பி எழுதிக் கொடுத்து அவர் எழுதற மாதிரி நான் யாரோ எழுதிக் கொடுக்கிறதை எழுதற மாதிரி ஒரு எண்ணம். என்னத்தைச் சொல்றது.? எல்லாம் எதிர்க்கட்சிகளோட சதி. நான் வலை உலகில் பேரும், புகழும் பெற்றுத் தன்னிகரில்லாத, (!) ஒப்பற்ற தனிப் பெரும் (?!) தலைவியாய்த் திகழுவது கண்டு எதிரிக்கட்சியினர் (யாரு அவங்க?) செய்த சதியால் நான் நாலு நாளாய் ஒண்ணுமே எழுத முடியவில்லை. இதோ வந்துவிட்டேன், வீறு கொண்டு எழுந்து விட்டேன்., விட மாட்டேன் உங்களை. என் எழுத்தால், என்னோட அனுபவங்களை நீங்க வேண்டாம், வேண்டாம்னு சொல்ற வரைக்கும் சொல்லியே தீருவேன் என்ற திடமான முடிவுடன் வந்துள்ளேன். வணக்கம். சீச்சீ, இப்போதானே ஆரம்பிச்சேன். அதுக்குள்ளே வணக்கம்லாம் சொல்லி விடை பெற ஆரம்பிச்சுட்டேனே, ஒரே குழப்பம். எனக்கில்லை, உங்களுக்கு. நான் எழுத ஆரம்பிச்ச புதுசுலே யார் வந்து படிக்கப் போறாங்கன்னு நினக்கறது உண்டு, ஆனால் இப்படி ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது இப்போதான் தெரிஞ்சுக்கிட்டேன். ஆகவே இப்போதைக்கு உங்களை எல்லாம் விடறதா எண்ணம் இல்லை.
**********************

மேலே குறிப்பிட்ட ஜோக்ஸ் எல்லாம் இந்த வாரக் குமுதத்தில் வந்தது. அதிலே 2-வது ஜோக் வெளிப்படையா சிரிப்பு மாதிரி இருந்தாலும் நிறையப் பெண்கள் கணவனை அடிக்கிறவங்க இருக்கிறாங்க.மனைவிகள் கிட்டே அடி வாங்கற கணவன்மாரைக் காப்பாத்த என்ன சட்டம் கொண்டு வரப் போறாங்க? சமம்னா இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி நீதி தானே இருக்கணும்? இப்போ பேப்பர், பத்திரிகை எல்லாத்திலேயும் பெண்கள் பாதுகாப்புச் சட்டம் வந்ததையும், அதுக்கு அப்புறம் சில பெரிய மனுஷங்களோட மனைவிகள் கூட தங்கள் கணவன்மார்களைப் பத்திக் குறை சொல்ல ஆரம்பிச்சிருக்கிறதும் தான் பேச்சு, இந்தச் சட்டத்தால் பெண்களுக்குப் பாதுகாப்புன்னு ஒரே புகழ்மாலை. என்னைப் பொறுத்தவரை இது தேவையில்லாத சட்டம். அப்படின்னா ஆண்கள் என்ன செய்தாலும் பெண்கள் பொறுத்துக்கணுமான்னு கேட்கிறவங்களுக்கு. இப்போ பெண்கள் ஒண்ணும் அப்படி தைரியம் இல்லாமல் இல்லை. இப்போ இருக்கிற சட்டமே போதும் ஆண்களைத் தண்டிக்கிறதுக்கு. புதுசா என்ன சட்டம் வந்தாலும் அது இன்னும் பிளவைப் பெரிசு படுத்தத் தான் பயன்படும். ஒரு சின்ன குற்றத்துக்குக் கூடப் பெண்கள் கணவனைத் தண்டிக்க ஆரம்பிப்பார்கள் என்று தோன்றுகிறது. மேலும் இப்போதைய பெண்கள் கணவனை "வாடா, போடா!" என்று (பெயர் மட்டுமில்லாமல்) கூப்பிடுகிறார்கள். குழந்தைகளும் அப்பா, அம்மாவைப் பேர் சொல்லிக் கூப்பிடுகிறது. கேட்டால்," மரியாதை மனசில் இருந்தால் போதும். நாங்க நண்பர்கள் மாதிரிக் குழந்தைகளை வளர்க்கிறோம்" என்று பதில் வருகிறது. இது நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை, பல இடங்களில் பார்த்தும், கேட்டும் தெரிந்து கொண்டது தான். அப்பா, அம்மாவைப் பேர் சொல்லிக் கூப்பிடும் குழந்தை தன் ஆசிரியரையோ அல்லது மற்றப் பெரியவர்களையோ மதிக்குமா என்பது சந்தேகமாய்த் தான் இருக்கிறது. இப்போது ஒரு பிரசித்தி பெற்ற தொலைக்காட்சித் தொடரில் பேத்தி தன் தாத்தாவைப் பேர் சொல்லிக் கூப்பிடும்படியாகவும், "டா" போட்டுப் பேசும்படியாகவும் அமைத்திருக்கிறார்கள். எந்தக் குழந்தைகள் அமைப்போ அல்லது, பெண்கள் அமைப்போ அல்லது யாரிடமிருந்தாவது மறுப்புக் கடிதமோ இன்று வரை யாரிடம் இருந்தும் வரவில்லை.

வடநாட்டில் நான் செப்டம்பர் மாதம் போனபோது கூடப்பார்த்தது, சின்னக் குழந்தைகளைக் கூடப் பெற்றோரும் சரி, தாத்தா, பாட்டியும் சரி, நீங்க என்னும் பொருளில் வரும் "ஆப்" போட்டுத் தான் அழைப்பார்கள். அந்தக் குழந்தைக்கும் அது பழக்கம் ஆகிவிடும். எனக்குத் தெரிந்து அதிகம் கூட்டுக் குடும்பம் இன்றளவில் இருந்து வருவதும் வட மாநிலங்களில் தான். (கார்த்திக், கொஞ்சம் பொறுத்துக்கோங்க!). நாம் அப்படிக் கூப்பிடாவிட்டாலும் குறைந்தபட்சம் ஒரு மரியாதை தெரியுமாறு பழகலாமே! கணவன், மனைவி நெருக்கமோ அல்லது சமம் என்பதோ இதன்மூலம் தான் வெளிப்படுகிறது என்று நினைத்தீர்களானால் அது நிச்சயம் தவறு. மேலும் இப்போதைய பெண்களின் பெற்றோரும் இதற்கு ஆதரவு தெரிவிக்காமல் பெண்களை அப்படிக் கூப்பிடாதே என்று சொல்ல வேண்டும். தன்னோட பெண், மாப்பிள்ளையைப் பேர் சொல்லிக்கூப்பிடுவதையும், "வாடா' என்று சொல்லுவதையும் ஏற்றுக் கொள்ளும் தாயால் அதே தன் மருமகள் தன் மகனை அம்மாதிரிக் கூப்பிட்டால் நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. டாக்டர் ரங்கபாஷ்யம் (Gastro Enterologist) கூட ஒரு பேட்டியில் இதைக் குறித்து வருந்தி இருக்கிறார். இதை ஆரம்பித்து வைத்த கைங்கர்யம் நம்ம தொலைக்காட்சித் தொடர்கள்தான். அதுவும் சில வருடங்களுக்கு முன்னால் வந்த "ரமணி வெர்சஸ் ரமணி" தொடரின் முதல் பாகத்தில் (வாசுகியும், "பப்ளி" என்ற ப்ருத்வி ராஜும் நடித்தது) ஆரம்பித்து வைத்தார்கள். இன்று பட்டி, தொட்டி எல்லாம் பிரபலம் ஆகி விட்டது. படங்களில் கலாச்சாரச் சீர்கேட்டைக் கொண்டு வந்தது போதாதுன்னு தொலைக்காட்சியிலும் கூட ஆரம்பிச்சிருக்காங்க. என்னத்தைச் சொல்றது? அதுதான் எகோபித்த பாராட்டைப் பெற்று வெற்றிகரமா ஓடுது. இதைச் சொல்ற எனக்கு எதிராத் தான் பின்னூட்டம் வரும்னு நினைக்கிறேன். எது வந்தாலும் வரட்டும், சொல்றதைச் சொல்லிடலாம்னு ஒரு எண்ணம். சொல்லிட்டேன், அப்புறம், உங்க இஷ்டம்.

"பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா!
பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா!"

பாரதி சொன்னதுக்கு இதா அர்த்தம் எனக்குப் புரியலை! உங்களுக்குப் புரிஞ்சா சொல்லுங்களேன்!

Sunday, November 05, 2006

152. ரத்தத்தின் ரத்தமே-2

"குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்."

யாருக்குத் தான் ஆசை இருக்காது? எல்லாருக்கும் குழந்தை தானே வேணும்? திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் எல்லாரும் பார்க்கிறார்கள். சில இடங்களில் காதல் கல்யாணம் என்றால் கூட ஜாதகம் பார்க்கப் படுகிறது. முன்னேயோ அல்லது பின்னேயோ. பொதுவாகப் பத்துப்

பொருத்தங்களும், அதில் 7 வரை இருந்தால் போதும் என்றும் சொல்வதுண்டு. இப்போது புதிதாக ரத்தப் பொருத்தம் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இது புதிது போல் தோன்றினாலும் காலம் காலமாக இருந்து வருவதுதான். இந்த ரத்தப் பொருத்தத்தைப்

பற்றித் திருமூலர் கூடத் தன் திருமந்திரத்தில் எழுதி இருப்பதாய் "டாக்டர் ஜெயம்

கண்ணன்" (கர்ப்ப ரட்சாம்பிகா மருத்துவமனை நடத்தி வருகிறார்.) என்ற பிரசித்தி பெற்ற மகப்பேறு மருத்துவர் கூறுகிறார். அநேகமாய் எல்லாருடைய ரத்த வகையும், A, B, O என்ற வகையைச் சேர்ந்திருந்தாலும் அதில் + அல்லது - உண்டு. இந்த + குறிப்பது Rh Positive. - குறிப்பது Rh Negative. இந்த நெகட்டிவ் வகை ரத்தம் பெரும்பாலும் பெண்களுக்குத் தான் அதிக அளவில் இருக்கிறது. திருமணம் செய்து கொள்ளும் கணவன், மனைவி இருவருக்குமே

பாசிட்டிவ் வகை ரத்தமாகவோ அல்லது நெகட்டிவ் வகை ரத்தமாகவோ இருந்தால் எந்த

விதப் பிரச்னையும் இல்லை. பிரச்னை ஆரம்பிப்பது பெண்ணின் நெகட்டிவ் வகை ரத்தத்தினால்

தான். ஆணுக்குப் பாசிட்டிவ் ரத்தவகையாகவும் பெண்ணுக்கு நெகட்டிவ் ரத்தவகையாகவும்

இருந்தால் தான் பிரச்னையே ஆரம்பிக்கிறது. இதிலும் குழந்தைக்கு நெகட்டிவ் என்றாலும்

பிரச்னை கிடையாது. அப்படி இல்லாமல் குழந்தை பாசிட்டிவ் வகை ரத்தமாக இருந்து விட்டால்

கொஞ்சம் பிரச்னை தான். அதிலும் முதல் குழந்தைக்கு அதிகம் கஷ்டம் இருக்காது. ஓரளவு

காப்பாற்றலாம். இரண்டாவது குழந்தைக்குப் பிரச்னை தான்.சிலருக்கு முதல் குழந்தைக்கே

பிரச்னை வருவதும் உண்டு. பெண் முதல் முறை கருவுற்றுக் குழந்தை உண்டானதும் முதல்

மூன்று மாதங்களுக்குள் சோதனை செய்தால் பாசிட்டிவ் வகை ரத்தமா அல்லது நெகட்டிவ் வகை ரத்தமா என்று கண்டு பிடிக்கலாம். ஆனால் இந்த அளவு முன்னேற்றம் சமீப காலத்தில் தான் அதிக அளவு இருக்கிறது. இது மாதிரி கண்டுபிடிக்காமல் முதல் குழந்தை பெறும் அல்லது பெற்ற பெண்கள் இரண்டாவது குழந்தைப் பிறப்பின் போது குழந்தையைக் காப்பாற்றப்பிரத்தனப் படவேண்டும். ஏன் என்றால் முதல் பிரசவத்தின்போது கருவில் உள்ள குழந்தையின் பாசிட்டிவ் வகை ரத்த அணுக்கள் தாயின் உடலில் சேருகிறது. அப்போது தாயின் உடல் அந்தப் புதுவகை

விருந்தாளியை ஏற்க முடியாமல் ஒரு விதமான அணுக்களை உற்பத்தி செய்யும். இதை anti

rhesus antibodies என்கிறார்கள். இந்த நிகழ்வுக்கு (Rh Negative ) sensitization என்று

சொல்கிறார்கள். ஒரு முறை இந்த நிகழ்வு ஏற்பட ஆரம்பித்தபின்னால் தாயின் உடலில் வாழ்நாள் பூரா இந்த நிகழ்வு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இரண்டாவது குழந்தை பிறப்பின்போது இந்தக் குழந்தையும் பாசிட்டிவ் வகை ரத்த குரூப் என்றால் தாயின் உடலில் ஏற்கெனவே உள்ள ரத்த அணுக்கள் குழந்தையின் உடலில் புகுந்து அதனுடைய fetel blood cells -ஐ அழிக்கிறது. இதன் தாக்கத்தினால் குழந்தைக்கு Rh

disease வருகிறது. இந்த நோய் குழந்தைக்கு எப்படி வேண்டுமானாலும் வரலாம், ரத்தச்

சோகை எனப்படும் அனீமியா, மஞ்சள் காமாலை, உடலில் நீர் சேர்ந்து உடல் வீங்கிக் காட்சி

அளிப்பது, சிலசமயம் நோயின் வீரியம் தாங்காமல் குழந்தையே இறந்து போவது என்று எது

வேண்டுமானாலும் நடக்கும். தாயைப் பார்த்தால் ஆரோக்கியமாய் இருப்பது போல்தான் தோன்றும். முதல் பிரசவம் தாக்குப் பிடிக்கும்.

ஏனெனில் அநேகமாய் அம்மாவிற்கு இந்த sensitizationஆவதற்கு முன்னாலேயே குழந்தை

பிறந்திருக்கும். இது எல்லாம் sensitization ஆவதற்கு முன்னால் உள்ளது. அதற்குப் பிறகு தாய்க்கு ஊசி போட்டு அடுத்த பிரசவத்திற்கு முன் ஜாக்கிரதையாய் இருக்கலாம்.

அபூர்வமாய்ச் சில கேஸ்களில் முதல் பிரசவத்திலேயே கர்ப்ப காலத்தில் இந்த sensitization

ஏற்படும். இந்த நிகழ்வு ஏற்படுகிறதா என்று எப்படி அறிவது? தற்சமயம் அதை முன்னாலேயே கண்டறிந்து trimester என்று சொல்லப் படும் நேரத்திலேயே சிகிச்சை தொடங்குகிறார்கள். இதற்கான சிகிச்சை என்ன என்றால் தாய்க்கு trimester period-லேயே ஒரு ஊசி போடுவதுதான். மிகவும் விலை உயர்ந்த இந்த ஊசி Rh immune globulin (RhIG) என்று அழைக்கப் படுகிறது. முதல் பிரசவத்தின் போது கண்டுபிடிக்கப் படாமல் குழந்தை பெற்ற பின் கண்டு பிடிக்கப் படும் பெண்களுக்கு அவர்கள் முதல் பிரசவம் முடிந்த 72 மணி நேரத்துக்குள் இந்த ஊசி போடப் பட வேண்டும். அதற்கு அப்புறம் என்றால் பயன் இருக்காது. முதல் பிரசவத்தில் ஊசி போட்டு விட்டால் இரண்டாவது பிரசவத்தில் கஷ்டம் இருக்காது.

முதல் பிரசவத்தில் இது எதுவும் செய்யாமல் இரண்டாவது பிரசவம் ஆகும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அதிகம் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுச் சில சமயம் ரத்தத்தையே மாற்ற வேண்டி இருக்கும். அநேகமாய் photo therapy என்னும் blue light-ல் குழந்தையை வைப்பது போன்றவை நடக்கும். இரண்டு பிரசவத்திற்கு அப்புறம் அம்மாவிற்கு இந்த ஊசி போட்டு எந்தவிதமான நன்மையும் இல்லை.
முதல் பிரசவத்தில் இருந்தே அம்மாவின் உடல் நிலைமை sensitization ஆகி இருக்கும்.

அப்படி இல்லாமல் முதல் குழந்தையிலேயே கண்டறிந்து விட்டால் மேலே சொன்னமாதிரி

முதல் 5 மாதங்களுக்குள் ஒரு ஊசி போட வேண்டும். இதற்குத் தாயின் ரத்தத்தையும், கருவில் இருக்கும் குழந்தையின் ரத்தத்தையும் சோதனை செய்வார்கள். குழந்தைRh + தாய்Rh - என்றால்

உடனேயே ஒரு ஊசி போட்டு விட்டு 28 வாரங்களுக்குப் பின் மறு முறை சோதனை செய்து

சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் பிரசவத்தை சுகப்பிரசவம் அல்லாது சிசேரியன் வைத்துக்

கொண்டு முன்னாலேயே குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுவார்கள்.

இப்போதும் தாயின் உடல் நிலைக்கும், குழந்தையின் உடல் நிலைக்கும் தகுந்தவாறு மருத்துவம்

செய்யப் படும். தாய்க்கு இப்போதும் ஒரு முறை ஊசி போடப் படும். இது எல்லாம் முதல்

குழந்தையிலேயே கண்டறிந்தால் செய்யவேண்டியது. இது அந்தப் பெண்ணிற்குக் குறைப்பிரசவம் நடந்தாலோ, ectopic pregnancy என்றாலோ, Rh+ Blood transfusion நடந்திருந்தாலோ கூடப் போட வேண்டியது கட்டாயம். இந்த ஊசி போட்டதும் இது அம்மாவின் உடலில் Rh+ fetal cells ஐ அழிப்பதில் இருந்து தடுக்கிறது. இந்த பாசிட்டிவ் ரத்தவகைக்கு எதிரான ஆண்டிபாடீஸ் வேலை செய்யும் முன்னேயே அழிக்கத் தொடங்கி விடும். சில பெண்களுக்கு முன்னாலேயே இந்த sensitization பல்வேறு காரணங்களால் ஏற்பட்டிருக்கும். ரத்தம் ஏற்றப்பட்டதால் கூட

ஏற்படும். அப்போது இவர்களுக்கு முதல் பிரசவம் என்றால் கூட மிக எச்சரிக்கையாக இருக்க

வேண்டும். கருவுற்றதுமே குழந்தை, அம்மாவின் ரத்தப் பரிசோதனை செய்து பார்த்துத் தேவைப்பட்டால் குழந்தைக்குக் கருவிலேயே 18-வது வாரம் ரத்தத்தை மாற்றிச் சுத்தி செய்து குழந்தையை வெளி உலகிற்கு நல்லபடி கொண்டு வரத் தயார் செய்யப்படுகிறது. இதற்கு

அப்புறம் 28-வது வாரம் மறுமுறை சோதனை செய்து அதற்குத் தகுந்தாற்போல் சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுத்துக் காப்பாற்றுவார்கள். இப்போதும் தாய்க்கு மறுபடி இந்த ஊசி குழந்தை பெற்ற 72 மணி நேரத்துக்குள் போட வேண்டும். இது அடுத்த பிரசவம்

குழந்தையைப் பாதிக்காமல் பெற்று எடுக்க உதவுகிறது. இது எல்லாம் மருத்துவ உலகின்
முன்னேற்றங்கள்.

DISCLAIMER; நான் எழுதி இருப்பது எல்லாம் கூகிள் ஆண்டவர் தயவிலும், திருமதி

சந்திரவதனா அவர்கள் தன்னுடைய வலைப்பதிவில் எழுதி இருப்பதையும் வைத்துத் தான்.

திருமதி ஜெயம் கண்ணன் சொல்லி இருப்பது புத்தகங்களில் படித்தும்,தொலைக்காட்சியில் கேட்டும் இருக்கிறேன். தகுந்த ஆதாரம் தற்சமயம் தேடியும் கிடைக்கவில்லை. ஆதாரம்

கிடைத்ததும் வெளி இடுகிறேன். பொதுவாக Rh Negative Group-காரர்கள் மற்றவர்களில் இருந்து

வேறுபட்டு இருப்பார்கள் என்பதையும் கூகிளில் தேடல் போது படித்தேன். அது பற்றி

நிச்சயமாய் எதுவும் தெரியவில்லை. ஆனால் இன்றைய இளைஞர்களும், இளைஞிகளும்

ஒருவருக்கொருவர் மனதுக்குப் பிடித்து விட்டால் இந்தச் சின்னக் குறைக்காகப் பெண்ணை

வேண்டாம் என்று சொல்ல வேண்டாம். முன்னாலேயே ரத்தவகையைத் தெரிந்து

கொள்ளுங்கள். ஆனால் அதற்குத் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளைக் குறித்த காலத்தில் எடுத்துக் கொண்டு நல்ல ஆரோக்கியமான புத்திசாலிக் குழந்தைகளைப் பெற்று இந்தியாவை

வளப்படுத்துங்கள். இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த இலவசக் கொத்தனாருக்கு என் நன்றி.

ஒருவேளை அவர் எதிர்பார்த்த மாதிரி விரிவான தகவல் நான் தர முடியாமல் போய் இருக்கலாம். அது எல்லாம் ஒரு டாக்டர் சொல்வது தான் முறை என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

விக்கின பசங்களுக்காக விக்காமல் கீதா சாம்பசிவம்.

Saturday, November 04, 2006

151. ரத்தத்தின் ரத்தமே!

மஹேசனுக்கே தெரியாத விஷயம்!

மக்கட் பிறப்புத் தான். வேறே

என்ன? அது மட்டும் மஹேசனுக்கே

தெரியாதாமே! ஆச்சரியமா

இல்லை? ஆனால் அப்படித்தான்

ஒரு பழமொழி எங்க அம்மா

சொல்லுவார்கள். "மழை வரவும்,

மக்கட்பிறப்பும் மஹேசனுக்கே

தெரியாது" அப்படின்னு. இப்போ

மழை நல்லா வெளுத்துக் கட்டுது.

ஒவ்வொரு வருஷமும் ஓரளவு மழை

வெளுத்துக் கட்டுது. எது

தப்பினாலும் இது மட்டும் தப்பாது.

காலா காலத்தில் வந்துடும். ஆனால்

குழந்தை பிறப்பு. அது மட்டும் நம்ம

பூர்வ ஜென்ம புண்ணியம்.

கல்யாணம் ஆனா உடனேயே

எல்லாரும் கேட்கும் கேள்வி

விசேஷம் ஏதும் உண்டாங்கறது

தான்.
"சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா,

செல்வக்களஞ்சியமே"ன்னு

கொஞ்சவோ அல்லது "சின்னச்

சின்னக் கண்ணனுக்கு என்னதான்

புன்னகையோ?"னு கேட்டுக்

கொஞ்சவும் எல்லாருக்கும்

ஆசைதான். ஆனால் எல்லாருக்கும்

அது நிறைவேறுதா? இல்லை.

சிலருக்கு நிறைவேறாமல்

போகிறது. உடலில் குறைபாடுகள்

இல்லாதவர்களுக்குக் கூடக்

குழந்தை பிறப்பில் தாமதம்

ஏற்படுகிறது. "டெஸ்ட் ட்யூப் பேபி"

கூட முயன்றாலும் எல்லாருக்கும்

சாத்தியம் ஆவது இல்லை. அதே

மாதிரி வாடகைத் தாயும் இப்போ

பிரபலம் ஆகி வருகிறது.

அதிலேயும் எல்லாருக்கும் பலன்

கிடைப்பது இல்லை. உண்மையில்

பார்த்தால் இறைவன்

விதித்தவருக்குத் தான்

கொடுக்கிறான். அதில் மாற்றம்

இல்லை இது வரை.

கிடைக்கிறவங்களுக்கும் சரியான

விதத்தில் குழந்தை பிறக்குதா?

அதுக்கும் சிலபிரச்னைகள்

இருக்கே? அதிலே ஒண்ணுதான்

ரத்தப் பொருத்தம். அதைப் பத்தி

மட்டும் ஓரளவுக்கு நாம் இப்போ

பார்க்கப் போறோம்.

எனக்குப் படிக்கிற நாளிலேயே

என்னோடது "ஓ" குரூப் ரத்தம்னு

தெரியும். ஆனால் அப்போ அது

Rh+ அல்லது - என்பது பற்றி

எதுவும் தெரியாது. பின்னால் சில

நிகழ்வுகள் மூலம் Rh- என்றால்

குழந்தை பிறப்பில் பிரச்னை என்று

தெரிய வந்தாலும் அது எல்லாம்

சொந்தம் மூலம் கல்யாணம் ஆகிக்

குழந்தை பெற்றுக்

கொண்டவர்களாய்ப் போய்

விட்டார்கள். ஆகவே இதில் பெரிய

விஷயம் ஏதுவும் இல்லைனு

யோசிச்சுப் பார்க்கவே இல்லை.

பின்னால் எனக்குக் கல்யாணம்

ஆகி உடனே குழந்தை

உண்டாகாதபோதும் இது பற்றிக்

கவனம் செலுத்தவில்லை. அதுக்கு

அப்புறம் குழந்தை உண்டாகிக்

குழந்தை பிறந்து 3-ம் நாள்

குழந்தை மஞ்சள் என்றால் அப்படி

ஒரு மஞ்சளாக இருக்கவே

எல்லாருக்கும் சந்தேகம் ஏன்

இப்படி? என்று. ஆனால் என்

கணவருக்கு அந்தச் சமயம் மஞ்சள்

காமாலை நோய் இருந்த

காரணத்தால் வீட்டில் இருந்த

பெரியவர்கள் அதன் காரணமாய்

இருக்கலாம் என்று சொல்லி

விட்டார்கள். ஆனாலும் டாக்டர்

வந்து பார்த்து விட்டு இது Rh-

குரூப், அதன் குறைபாடுதான் என்று

உறுதிப் படுத்தினார். ஆனால் அவர்

வந்து பார்த்து உறுதிப்

படுத்துவதற்குள் குழந்தை பிறந்து

4 நாளுக்கு மேல் ஆகி

விட்டிருந்தது. ஆகவே எனக்கு

அப்போது உடனே போட

வேண்டிய ஊசி போடமுடியாத

நிலை. குழந்தைக்கு மட்டும்

மருத்துவம் செய்தார்கள். தினமும்

காலை வெயிலில் குழந்தையைப்

போட்டுக் கொண்டு என் அம்மா

உட்காருவார்கள். நான் எங்கேயோ

ரூமில் இருப்பேன். குழந்தையின்

ஆகாரத்தில் இருந்து அது

குளிப்பது வரை எல்லாம் கட்டுப்

பாடு. கிட்டத் தட்ட 45 நாள்

இம்மாதிரிக் குழந்தையை வளர்த்து

விட்டு ஒரு மாதிரியாக நானும்

புக்ககம் வந்து விட்டேன். அப்புறம்

எல்லாம் மறந்தும் போச்சு.

அதுக்கு அப்புறம் சில வருடங்கள்

கழித்து இரண்டாவது குழந்தை

உண்டான சமயம் நாங்கள்

ராஜஸ்தானில் இருந்த

காரணத்தால் என் கணவர்

முன்கூட்டியே என் பெற்றோரை

வரவழைத்து என்னை அனுப்பி

விட்டார். இஷ்டம் இல்லாமல்தான்

போனேன் அப்போது, அதுவும்

மதுரைக்கு. ஆனால் குழந்தை

பிறந்த சமயம் விடிகாலை ஆதலால்

அப்போது ஒண்ணும்

தெரியவில்லை. அப்புறம் நல்ல

சூரிய வெளிச்சம் வந்ததும்

குழந்தையைப் பார்த்தால் ஒரே

மஞ்சள் நிறம். துணி எல்லாம்

மஞ்சள். உடனேயே எனக்குள்

ட்யூப் லைட் எரிய நான் முதல்

குழந்தைக்கும் வந்திருந்தது என்று

சொன்னேன். நல்லவேளையாகக்

குடும்ப டாக்டர் என்பதால் முதல்

பிரசவமும் அதே ஆஸ்பத்திரி,

அவங்களுக்கும் நினைவு இருந்தது.

உடனேயே ரிஜிஸ்டரைப் பார்த்து

விட்டு முன்னால் வந்த அதே

குழந்தை நல சிறப்பு மருத்துவரை

வரவழைத்தனர். அவர் பார்த்து

விட்டு உடனேயே பழைய கதையும்

தெரிந்ததும் இது Rh-

குறைபாட்டினால் வந்ததுதான்

என்று சொன்னார். உடனேயே

முதல் பிரசவத்தில் ஊசி ஏன்

போடவில்லை என்று கேட்டதற்குக்

குழந்தை பிறந்து 72 மணி

நேரத்துக்கு மேல் ஆனதால்

போட்டாலும் பயன் இல்லை என்று

போடவில்லை என்று

சொன்னார்கள். மஞ்சள்

காமாலையுடன் enlargement

liver-டன் பிறந்த என் குழந்தை

அந்த ஆஸ்பத்திரியிலேயே ஒரு

காட்சிப் பொருள் ஆனான். இதன்

காரணம் என்னோட 'O' Rh

Negative வகை ரத்தம் தான். இது

ஏன் ஏற்படுகிறது என்று

புரியவில்லை என்றாலும் இதைத்

தடுக்க நிறையத் தற்காப்பு

நடவடிக்கைகள் இருக்கின்றன.

அவை நாளை தொடரும்.

DISCLAIMER; மருத்துவம் பற்றிய

பதிவு என்பதால் முதலில் என்

கணவர் யோசித்தார். மருத்துவம்

தெரியாமல் எழுதுவது சரியாய்

வருமான்னு. ஆனால் நான்

பொதுவாய் எழுதுவதாயும், மற்றபடி

வேறு மருத்துவ சம்மந்தமான

குறிப்புக்கள் எல்லாம் வராது

என்றும் சொல்லி இருக்கிறேன்.

ஆகவே இந்த ரத்தக் குறைபாடு

உள்ளவர்கள் கவனிக்க வேண்டிய

முக்கியத் தகவல்கள் மட்டுமே

நாளை கொடுக்கப் படும்.

டாக்டர்கள் என்ன மாதிரி

ட்ரீட்மெண்ட் சிபாரிசு

செய்வார்கள், நாம் என்ன மாதிரி

நடவடிக்கை எடுக்க வேண்டும்

என்பது போன்ற பொதுவான

விஷயங்கள் மட்டும் இடம் பெறும்.

150. வாங்க, வாங்க, படம் பார்க்க வாங்க!

நேத்திக்குச் சாயந்திரம் மறுபடி மழை ஆரம்பிச்சதிலே வேறே வேலை வெட்டி இல்லாமல் வலையிலே உலாத்திக் கொண்டிருந்த போது "இலவசம்'ங்கிற தலைப்பைப் பார்த்தேன். நமக்குத் தான் இலவசம்னா நாக்கைத் தொங்கப் போட்டுட்டுப் போவோமே, அதான் உடனேயே போனேன். போனால் ஆவி ஒரு ப்ளாக் திறந்து வச்சுக்கிட்டு எல்லாருக்கும் , leg piece, hand pieceனு இலவசமாக் கொடுத்திட்டு இருக்கு. கைப்புள்ள கேட்டாரேன்னு மின்னலை கைப்புள்ள வீட்டுக்கு அனுப்பி இருக்கேன்னு நினைச்சா கடைசிலே அவர் ஆவி கூட மின்னிட்டிருக்காரு. சூடான் புலி ஏதோ மின்னலைப் பிடிச்சிருக்கிறதா சொன்னாங்களேன்னு கூடப் போய்ப் பார்த்துட்டு வந்தேன், அது ஏதோ பெண் மின்னலாம். சரியாப் போச்சு, மழை வந்ததிலே மின்னலுக்கு வேலை ஜாஸ்தின்னு நினைச்சா கதையே வேறயா இருக்குன்னு நினைச்சு, என்னோட வலைவீட்டுக்குத் திரும்பிட்டேன். பார்த்தா பின்னாலேயே ஆவி, சரினு பயந்து அடிச்சு வெளியே போனால் ஆவிக்குப் பயப்படாத அம்பி வந்து சிரிச்சுட்டுப் போனதும், விவசாயி வந்து ஆவி சொன்ன அதே வார்த்தைகளைச் சொல்லிட்டுப் போறார். என்ன ஆச்சு? அவருக்கு? ஆவியைப் பார்த்த பயமா? ச்யாம் தான் தைரியமா வந்து எல்லாத்தையும் படிச்சுட்டுப் போயிருக்காரு. இது போகட்டும்னு வேறே யாராவது வருவாங்களான்னு இந்த மழையிலே கடைத் திறந்து வச்சு உட்கார்ந்திருந்தா யாருமே வரலை. நம்ம வீட்டுக்கு இந்த மழையிலே யாரு வரப் போறாங்கன்னு மெயிலைப் பார்க்கலாம்னு போனேன்.

அப்போதான் ஒரு புதுச் செய்தி அனுப்பிச்சிருந்தாங்க, i51.photobucket.லே இருந்து.. உங்க ஆல்பத்தில் உள்ள படங்களை நீங்க தேர்வு செய்து நீங்க விரும்பும் நபருக்கு மெயிலிலோ, அல்லது உங்க வலைப்பக்கத்திலோ கொடுக்க நாங்க புதுசா உதவி செய்யறோம், வந்து அதன் பலனை அனுபவிங்கன்னு கூவிக் கூவிக் கூப்பிட்டிருந்தாங்க. ஏற்கெனவே படம் போட்டு அது பப்படமா வந்து தலைகீழா இருக்கேன்னு வேதா, சிவசங்கர், கைப்புள்ள எல்லாரும் கேட்டாங்க.அவங்க கிட்டே இதுவே திரு மலைநாடன் அட்ரஸ் கொடுத்துப் போய் விசாரிங்கனு சொன்னதாலே போய்ப் பார்த்தேன். இதுக்கு மேலே நம்மளுக்கு வராதுன்னா அவங்க எல்லாம் க்ளாஸ் எடுக்கறோம்னு சொல்றாங்க. இதிலே பாருங்க நம்ம வேதா தான் 'இது தேறாதது"னு முன்னேயே முடிவு பண்ணி ஃபோட்டோவை அவங்களே சரி செய்து திருப்பி எனக்கு அனுப்பி இதை உங்க ஆல்பத்திலே போட்டுக்கோங்கன்னு சொல்லவே அது தாங்க கீழே இருக்கிற படங்கள். அதிலே முன்னால் இருக்கிற 2 படங்களும் தலைகீழா இருக்கிற மாதிரி தெரியுதேன்னு கார்த்திக்கும், SKM-ம் சொல்றாங்க. இல்லை.இது தான் சரியானது. ஏரித்தண்ணீரில் சூரிய ஒளி பிரதிபலிப்பையும் சேர்த்துப் படம் எடுத்ததால் இப்படி இருக்குன்னு நினைக்கிறேன். தவிரக் கம்பி வேலி தெரியுது பாருங்க, அது தான் சாகாவில் இருந்து போகும் போது கொஞ்ச தூரம் வரும். அது நேராத் தான் இருக்கு.

முதலிலே என்னோட ஆன்மீகப் பக்கத்திலே தான் போட நினைத்தேன். ஆனால் அதிலே பாருங்க, அப்படி ஒரு பக்கமே இல்லைனு ப்ளாக்கர் ஒரே சத்தியம் பண்ணுது. சரி, இதிலேயே போடலாம், மேலும் இதுக்குத் தான் யாராவது வராங்க, அங்கே தான் ஈ, கொசு எல்லாம் அடிச்சுட்டு இருக்கோமேன்னு இதிலேயே போட்டேன். ஹி,ஹி,ஹி, இது சொந்த முயற்சிதான். அப்படி ஒண்ணும் கஷ்டமா இல்லை. இருந்தாலும் இந்த போட்டோவைத் திருப்புன்னு சொல்றாங்க பாருங்க அதிலே ஒரு முறை தனித் தனியாத் திருப்பிட்டேனோ என்னமோ தெரியலை, 2 படமா வந்துடுச்சு. அதனாலே மத்த படம் எல்லாம் அப்புறமா மெதுவாப் போடறேன். இப்போதைக்கு ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டையா இதைப் போட்டுக் கொஞ்ச நாள் வித்தை காட்டலாம் பாருங்க. நாம ப்ளாக் எழுதறதே ஒரு வித்தைதான்னு சொல்றீங்களா? அது என்னமோ வாஸ்தவம் தான். நேத்திக்குப் பாருங்க, இன்னிக்கு வரமாட்டேனு சொல்லிட்டுப் போனேன். ஆனால் இன்னிக்கு வரும்படியாப் போச்சு. சீச்சீ, அந்த வரும்படி இல்லைங்க, வந்து எழுதற மாதிரி ஆகிப் போச்சு, அதான் சொன்னேன். தவிர இது என்னோட 150-வது பதிவு, அதைக் கொண்டாடலாம்னு ஒரு தன்னடக்கத்தோட:D முடிவு பண்ணினேன். அதனாலேயும் தான் இன்னிக்கு எழுதி இருக்கேன். என்னோட முதல் முயற்சியைப் பாராட்டிட்டுப் போக வருமாறு அனைவரையும் அழைக்கிறேன்.

Friday, November 03, 2006

Route to Paryang from Saga camp

An aerial Survey of Katmandu & Buda Neelkand Mandh


Photobucket - Video and Image Hosting

Bhuda Neelkand Mandhir &Guheswari Mandhir outside


Photobucket - Video and Image Hosting

Manasarovar from two views

Kailash View from Ashta Path


Photobucket - Video and Image Hosting

149. இன்றைய ஹி,ஹி,ஹி,க்கள்.

விகடன் நெட்டிலே இருந்து சுட்டு, நான் அதிலே இருந்து சுட்டது.
சூடு ஜாஸ்தியா இருந்தா நான் பொறுப்பு இல்லை.

1. "யோவ், டிக்கெட்டைக் காமி!"
"இந்தாங்க" நம்ம ஆள் டிக்கெட்டைக் காட்டுகிறார்.
"என்ன, விளையாடுறியா, இது பழைய டிக்கெட்."
"அடப் போங்க, இந்த ரெயில் மட்டும் புதுசாக்கும்?"

2."என்னடா இது, பரீட்சையிலே 0 வாங்கிட்டு வந்திருக்கே? ஒழுங்காப் படிக்கலியா?"
"ஐயோ, அது ஜீரோ இல்லைப்பா! நான் சூப்பரா படிக்கிறேன்னு டீச்சரே எனக்காகப் பெரிசா ஒரு "ஓ" போட்டிருக்காங்க!"

3."தினமும் புலம்புவீங்களே, இன்னிக்கு எப்படி, காஃபி ஸ்ட்ராங்கா இருக்கா?"
"சூப்பர்டி செல்லம்! எப்படி இவ்ளோ ஸ்ட்ராங்க்?"
"அதுவா, ஒரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்!"

4."ஹலோ, உமா மேடமா? (பெப்ஸி உமாவிடம்) சிவகாசியிலே இருந்து ஒரு பாட்டு போடுங்க!"
"ஸாரிங்க, நான் இப்போ சென்னையிலே இருக்கேன்!"

இன்னும் விகடன் முழுசாப் படிக்கலை. படிச்சதும் பிடிச்ச விஷயங்களை நேரத்தைப் பொறுத்து எழுதறேன். இப்போ எல்லாரும் வெகுநாட்களாய்க் காத்துக் கொண்டிருந்த என்னுடைய் பம்பாய் விஜயம் பற்றி மேற்கொண்டு. இதன் முதல் பகுதி பதிவு எண் 145, 146-ல் இருக்கிறது. படிக்காதவங்க படிச்சுக் கொள்ளுங்க.
**********************


எங்க ஆட்டோவை நிறுத்தின போலீஸ்காரர் ஆட்டோ டிரைவரிடம் லைசென்ஸ் கேட்டார். லைசென்ஸ் குஜராத் மாநிலத்துக்குள் மட்டுமே ஓட்டக் கூடியதாய் இருந்திருக்கிறது. ஆகவே எங்களை போரிவிலிக்குள் கூட்டிப் போக முடியாது எனத் தெரிவிக்க, நாங்கள் ஸ்டேஷன் பக்கம் இறங்கிக் கொண்டு அனுப்புவதாய்க் கேட்டுக் கொண்டு லெவெல் க்ராஸிங் தாண்டியதும் ஸ்டேஷன் வாசலில் இறங்கிக் கொண்டோம். சாமான்களை இறக்கி நாங்களும் இறங்கி ஆகி விட்டது. ஒரே ஆட்டோக்களும், டாக்ஸிகளுமாய் நின்று கொண்டிருந்தது. ஆனால் விலாசம் தெரியாமல் இனி என்ன செய்வது? பையன் போய் ஸ்டேஷனில் உள்ளே பார்த்து விட்டு வந்தான். ஸ்டேஷன் வெறிச்சோடிக் கிடந்தது. யாரைக் கூப்பிடுவது எனத் தெரியாமல் நாங்கள் தவித்துக் கொண்டு பொது தொலைபேசியில் போய் விலாசங்களைப் பார்த்தால் உறவினர் யாருடைய விலாசமாவது கிடைக்கும். அவங்க யார் கிட்டேயாவது சொல்லலாமான்னு யோசித்தோம். அதைச் செயல்படுத்தலாமா வேண்டாமான்னு எங்களுக்குள் தீவிர விவாதம். அதுக்குள் என் பெண் பக்கத்தில் ஒரு வண்டி கிளம்புவதற்கு யாரோ வருவதைப் பார்த்து விட்டுக்கொஞ்சம் நகர்ந்து இடம் விட்டவள், "சித்தப்பா, அம்மா, சித்தப்பா, அங்கே பாரு சித்தப்பா" என்று கத்தினாள். நான் திடுக்கிட்டுப் போய்ப் பார்த்தால் சற்றுத் தூரத்தில் ஒரு வாடகை வண்டி பால்கருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தது. நாங்கள் வந்த வண்டி அங்கே நின்றிருக்கும் விஷயம் இவர்களுக்குத் தெரிந்த படியால், நாங்கள் வண்டியிலேயே இருப்போம் என்று நினைத்துப் பால்கர் போய் வண்டியில் அழைத்து வர ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கூடவே இன்னொருத்தரும் அவர் குடும்பத்தை அழைத்து வர அவர்களுடன் கிளம்பி இருக்கிறார். எங்க சத்தம் கேட்டதும், அல்லது உடனே எங்க பையன் ஓடிப் போய்ச் சித்தப்பாவைக் கட்டிப் பிடித்ததும் அவர்களுக்கு அதிர்ச்சி. நிஜமாவே அவங்க யாரும் எதிர்பார்க்கவே இல்லை, நாங்க தனியா இவ்வளவு தூரம் வந்திருக்கோம்னு. கொஞ்ச நேரம் யாருக்கும் பேச்சே வரவில்லை. அப்புறம் ஒரு ஆட்டோ வைத்துக் கொண்டு,நல்ல வேளை நாங்க இறங்கின கிழக்குப் பகுதி (இறங்கும்போது கிழக்கா, மேற்கா தெரியாத், மேற்கே இறங்கி இருந்தால் பார்த்திருக்க முடியாது.)யிலேயே மச்சினன் வீடும் இருந்தது. வீட்டிற்குப் போய்க் குழந்தையைப் பார்த்த போது நாங்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. குழந்தையும் எங்களைப் பார்த்ததும் தெரிந்த மாதிரி சிரித்தான்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இந்த மாதிரி நடக்குமா, கதை போல் இருக்கிறதே, நம்ப முடியவில்லையே என்பவர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. ஏன் என்றால் இப்படித்தான் நடந்தது. இதுதான் நிஜம். என்ன தைரியத்தில் கிளம்பி வந்தோம், அங்கே என் மச்சினனை அந்த நேரம் பார்த்து யார் கொண்டு விட்டது? இந்தக் கேள்விக்கு என்னிடம் பதில்? எல்லாம் வல்ல அந்த ஈசன் தான் காரணம். நான் என்றும் என் நண்பராய்க் கருதும் அந்த விநாயகரும்,அவர் தம் அருமைத் தம்பியும் தான் எங்களுக்குத் துணை இருந்து கொண்டு சேர்த்தார். "காக்க, காக்க, கனகவேல் காக்க' என்று எத்தனை முறை சொல்லி இருப்பேனோ தெரியாது. அந்த வெற்றி வடிவேலன் தான் துணை இருந்தான்.

"வெற்றி வடிவேலன் -அவனுடை
வீரத்தினைப் புகழ்வோம்:
சுற்றி நில்லாதே போ!-பகையே
துள்ளி வருகுது வேல்!"
**********************
இ.கொ. கேட்டுக் கொண்டதற்காக, ரத்தப் பொருத்தம் பத்தி எழுதக் கொஞ்சம் உழைப்புத் தேவைப் படுது. தகவல்கள் சேகரிக்கிறேன். அதனாலே இரண்டு நாளைக்குப் பதிவு எதுவும் இல்லை. எல்லாரும் சந்தோஷமா இருக்கலாம். முதல் முறையா "ஹோம்வொர்க்" கொடுத்திருக்கார். கண்டபடி எழுதற விஷயம் இல்லை. என்னால் எந்த அளவு முடியும்னு தெரியலை, முயற்சி செய்யறேன். கடவுள் விட்ட வழி. கார்த்திக், குஜராத் பத்தி எழுத இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு, வரேன் சீக்கிரம் உங்களை வெறுப்பேத்த. :D

Wednesday, November 01, 2006

148. ஒரு வாய்க் காஃபி

ஹிஹிஹி, இந்த மாதிரித் தலைப்பு வச்சாத் தான் பார்க்க வருவாங்கன்னு வச்சிருக்கேன். ஆனால் காஃபி சம்மந்தமாவும் எழுதப் போறேன். ஆகவே தலைப்புக்கும் அதுக்கும் சம்மந்தம் வந்துடும், சரியா? முதலில் நான் ரசித்த ஒரு ஜோக்:

மனைவி கணவனிடம்: ஏங்க, எங்க அம்மா போட்டுத் தர காஃபியைக் குடிக்கவே மாட்டேங்கறீங்க?

கணவன்: எனக்குத் தண்ணியிலே கண்டம்னு ஜோசியர் எச்சரிக்கை பண்ணி இருக்கார், அதான்.

ஹிஹிஹி, கல்கியிலே இந்த வாரம் வந்தது. கொஞ்சம் மாறி இருக்கலாம். கல்கியை அதுக்குள்ளே தேடும்படியா எங்கோ வச்சுட்டேன். ஆனால் அர்த்தம் இது தான். ரொம்ப நல்லா சிரிக்க முடியுது. போனமுறை ஜோக் போட்டதைக் கைப்புள்ள தவிர யாருமே ரசிக்கல்லை. யாருக்கும் ஜோக் பிடிக்கலியா அல்லது வட இந்தியர்கள் சொல்றாப்பலே (கார்த்திக் மன்னிக்கவும்) தென்னிந்தியர்களுக்கு நகைச்சுவை குறைவான்னு தெரியலை. ஆனால் எங்க வீட்டிலே நகைச்சுவை மட்டும் இல்லை எல்லாச் சுவைக்கும் பஞ்சம் இல்லை. எங்க பிறந்த வீட்டிலே காஃபி எல்லாம் ரொம்பக் கட்டுப்பாட்டோட குடிப்பாங்க. காலை ஒரு தரம், மாலை ஒரு தரம். அதுவும் தம்ளர் எல்லாம் சின்னதாத் தான் இருக்கும். நான் கல்யாணம் ஆகி வந்த புதுசுலே (அப்போ நான் காஃபியே குடிக்க மாட்டேன், என் கணவராலே பழக்கம் ஆனது, இப்போவும் மனசிலே நிறுத்தணும்னு தோணினா நிறுத்திடுவேன்.) புகுந்த வீட்டுக்கு வந்தா முதலிலே அவங்க காஃபி குடிக்கிற தம்ளரைப் பார்த்தாலே பயமா இருந்தது. எனக்கும் அதுலே தான் போர்ன்விடா கொடுத்தாங்க. என்னாலே முடியலை. ஏதோ மாட்டுக்குக் கழனித் தண்ணி ஊத்தறாப்பலே அவங்க அவங்க நினைச்சப்போ காஃபி குடிச்சாங்களா? எனக்கு மயக்கமே வந்துடுச்சு. ஒரு சமயம் என் மாமியார் என் கிட்டே தனக்கு ஒரு வாய்க் காஃபி கலந்து எடுத்து வரும்படிச் சொல்ல நான் literally took it ஒரு சின்னத் தம்ளரிலே எடுத்துப் போய்க் கொடுக்க அவங்க விசித்திரமா என்னைப் பார்த்தாங்க. அப்புறம் பாருங்க, ஒரு வாய்ன்னா என்னன்னு நினைச்சே, ஒரு தம்ளராவது இருக்க வேண்டாமான்னு கேட்டாங்களா நான் அசந்து போயிட்டேன்.

என் கணவரோ அதுக்கு மேலே என்னைக் கூப்பிட்டு வகுப்பே எடுத்தார். ஒரு வாய்க்காஃபின்னா ஒரு தம்ளர். இது பெரிய வாய். கொஞ்சமாப் போதும்னா அது 1/2 தம்ளருக்குக்கொஞ்சம் கூட, அது சின்ன வாய்னு எல்லாம் சொல்லிக் கொடுத்தார். அதுக்கு அப்புறம் ஒரு வாய்க் காஃபின்னா நான் பெரிய வாயா? சின்ன வாயான்னு கேட்டு சந்தேக நிவர்த்தி பண்ணிக்கிட்டே கொடுக்கிறது வழக்கமாப் போச்சு. ஆனால் இன்னிக்குப் பாருங்க காலையிலே அவருக்குக் காஃபி கொடுத்துட்டு நான் யோகா பண்ணிட்டுக் குளிக்க ஏற்பாடு செய்யும்போது திடீர்னு எனக்கு ஒரு வாய்க் காஃபி கொடு, னு என் கணவர் கேட்க,யோகாவிலேயே கவனமாக இருந்த நான் மூச்சுப் பயிற்சியிலே இன்னும் என்ன பண்ணறது? மூச்சை நிறுத்தணும்னா எத்தனை நேரம் நிறுத்தறோம்னு தெரிய எண்ணிக்கை வேணும், எண்ணிக்கையிலே கவனம் இருந்தா மூச்சை நிறுத்தறது இயல்பா இருக்காது,னு யோசிச்சிட்டே காஃபி கொடுத்துட்டுக் குளிக்கப் போயிட்டேன். வந்து டிஃபன் கொடுத்துட்டு, காஃபி தான் இன்னிக்கு 2 தரம் குடிச்சாச்சே, மோர் கொடுக்கலாமானு யோசிச்சப்போ அவர் நீ 2-ம் தரம் காஃபி எங்கே கொடுத்தே, சும்மா காட்டிட்டுப் போயிட்டே? ஒரு வாய்னா அர்த்தம் சொல்லி இருக்கேன், இன்னும் புரியலியேங்கறார், என்னத்தைச் சொல்றது, ஒரு பெரிய வாயாக் காஃபியைக் கலந்து கொடுத்தேன், ஏற்கெனவே படிக்கிற நாளில் அவரோட சொந்தக்காரங்க வந்து என் கணவர் கிட்டே படிப்பு முடிச்சதும் மேலே என்ன செய்யப் போறேன்னு கேட்டதுக்கு, மேலே இப்போ ஒண்ணும் கூரை எல்லாம் மாத்த வேணாம் எல்லாம் நல்லாத் தானே இருக்குன்னு பதில் சொன்னவர் ஆச்சே, அதனாலே ஜாஸ்தி பேச்சுக் கொடுத்தா மாட்டிப்போம்னு தெரிஞ்சா விடு, ஜூட், வெற்றிகரமா வாபஸ்.
**********************

இன்னிக்கு அவள் விகடனிலே ஒரு கல்லூரி மாணவி தன்னோட ரத்த குரூப் நெகட்டிவ் வகையைச் சேர்ந்ததுன்னும், அதனாலே பெண் பார்த்தவங்க வேண்டாம்னு சொல்லிட்டதாயும் வருத்தப்பட்டிருக்காங்க. இதைப் படிச்சதும் ரொம்பவே வருத்தமா இருக்கு. மருத்துவம் நிறையவே முன்னேற்றங்களைக் கண்டிருக்கு. எனக்கு முதல் பிரசவம் அப்போ என் பெண்ணிற்கு வந்த மஞ்சள் காமாலை மூலம் தான் எனக்கு "O" Rh Negative வகை ரத்த குரூப் எனத் தெரிய வந்தது. இத்தனைக்கும் எங்க வீட்டிலே எங்க சித்தப்பா ஒரு டாக்டர் தான். மதுரைக்கு அருகே சின்னமனூரில் டாக்டராக இருந்தார். எங்க அம்மாவோட தங்கை கணவர். (அந்த ஏரியாவிலே அவருக்குத் தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆருக்கு உள்ள செல்வாக்கு உண்டு.) இருந்தாலும் யாருக்கும் இது பத்தி அப்போ யோசிக்கத் தெரியலை. என் பெண்ணைத் தினமும் வெயிலில் போட்டு எடுத்ததும், அதுக்கு அப்புறம் 2-வது பிரசவத்தில் பையனுக்கு வயிற்றிலேயே 7-ம் மாசத்திலேயே மஞ்சள் காமாலை தாக்கி இருந்ததும், பிறக்கும்போதே மஞ்சள் காமாலையுடனும், enlargement liverஉடனும் பிறந்த அவனைக் காப்பாற்ற நாங்கள் பட்ட பாடு ஒரு வரலாறு. (ஹிஹிஹி, கார்த்திக், வரலாறு பத்தி எழுதிட்டேன், போதுமா?) அதுக்கு அப்புறம் எங்க வீட்டிலே எல்லாருக்கும் கல்யாணத்துக்கு முன்னாலே ரத்த குரூப் பார்க்க ஆரம்பிச்சாங்க, அல்லது குழந்தை உண்டானதும், ரத்த குரூப் பார்த்து வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஆரம்பிச்சாங்க. சொந்தம் என்றால் தான் இப்படி இருக்கும்னு முன்னாலே சொல்லிட்டிருந்தது என்னோட விஷயத்திலே பொய்யாப் போச்சு. நானும் என் கணவரும் முன்னைப் பின்னே தெரியாதவங்கதான். எங்களுக்கு இப்படி நடக்கலியா? ஆகவே ரத்த குரூப் பாருங்க, ஆனால் இளைஞர்களே, இந்தச் சின்னக் காரணத்துக்காகப் பார்த்த பெண்ணை வேண்டாம்னு சொல்லாதீங்க, இப்போவெல்லாம் கருவில் குழந்தை உருவானதுமே அதுக்கான தற்காப்பு நடவடிக்கைகள் ஏராளமா இருக்கு, கவலை வேண்டாம்.
அவள் விகடனிலே ரசிச்ச ஒரு சிறு கவிதை:

ஒரு பெண்குழந்தை கேட்கிறது:
நான் பிறந்தப்போ
நெல்மணி கொடுக்க
முயற்சித்தாயாமே!
இப்போ கொடும்மா.,
பசிக்கிறது!"

இதுவும் ஒரு கல்லூரி மாணவி எழுதியது தான். ரொம்பப் பெரிசா எழுதறேன்னு எல்லாரும் சொல்றதாலே பம்பாய் பயணம் முடிஞ்சா நாளை தொடர்கிறேன்.